மத்தியக் கிழக்கில் போரும் பதற்றமும் நீடித்து வரும் நிலையில், “ஆயுதங்கள் ஒருபோதும் தீர்வை ஏற்படுத்தாது” என்று தெற்கு அரேபியாவின் திருத்தூது நிர்வாகி ஆயர் பாவ்லோ மார்ட்டினெல்லி வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய இப்பகுதியில் வாழும் 10 இலட்சத்திற்கும் அதிகமான கத்தோலிக்கக் கிறித்தவர்கள், தற்போதைய அமெரிக்க-ஈரான் போர்ச் சூழலிலும் திரு அவைக்குத் தங்களின் ஆதரவையும் செபத்தையும் வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டார். சவால்கள் நிறைந்த இக்காலத்தில் மக்கள் ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டு, இறைவேண்டலில் இணைந்து சிறப்பான சாட்சியமளித்து வருகின்றனர் என்றார். ரிமினி மாநாட்டில் திருத்தந்தை லியோவின் உரையின்படி ‘ஆயுதங்களற்ற அமைதி’ என்பது மிகவும் அவசியமானது என்று தெரிவித்தார். சொற்களையும், மனங்களையும், நாடுகளையும் ஆயுதங்களற்றதாக மாற்றுவதும், பொறுமையுடன் கூடிய உரையாடலை முன்னெடுப்பதுமே அமைதியான சகவாழ்விற்கான ஒரே வழி என்றும் ஆயர் மார்ட்டினெல்லி உறுதியாகத் தெரிவித்துள்ளார்.