news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

எழுத்தாளருக்கும் சாதாரண மனிதனுக்கும் வேறுபாடு இருக்கிறது. சாதாரண மனிதர்கள் எல்லாச் செய்திகளையும் உற்றுநோக்குவது கிடையாது. ஆனால், எழுத்தாளர் அனைத்துச் செய்திகளையும் உற்றுநோக்குகிறார். பார்க்கும் பார்வைதான் வித்தியாசப்படுகிறது. சாதாரண மனிதர்கள் சாதாரணமாக வாழ்ந்து இறக்கிறார்கள். ஆனால் படைப்பாளர்கள் இறந்த பிறகும், தங்களது படைப்புகளின் வாயிலாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள். எழுத்திற்கு மிகப்பெரிய வலிமை இருக்கிறது. நல்ல புத்தகங்களை நேசிக்கவேண்டும்; அது மனமகிழ்ச்சியைக் கொடுக்கும். தற்போதைய தலைமுறையினருக்குப் படிப்பு, பணம், சமூக நிலை இருக்கிறது. ஆனால், மன அமைதி இல்லை. அதிக நபர்கள் மன அழுத்தத்தில் இருக்கின்றனர். இதனால் தெளிவும் தன்னம்பிக்கையும் கொண்ட தலைமுறைகளைப் படைப்பாளர்களால்தான் உருவாக்க முடியும்.” 

நீதிபதி வெ. இராமசுப்பிரமணியன்

பா...வின் அரசியல் முகவராகத் தேர்தல் ஆணையம் மாறியிருக்கிறது. பீகாரில் 65 இலட்சம் வாக்காளர்களின் பெயர்கள் அகற்றப்பட்டிருக்கின்றன. இவர்களில் பெரும்பாலானோர் பொருளாதாரத்தில் பின்தங்கிய, பட்டியலின, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், இளைஞர்கள், இது பா...வின் வெற்றிக்காகத் தேர்தல் ஆணையத்தால் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறது. வாக்குப்பதிவு மையங்களின் சி.சி.டி.வி. தகவல் சேகரிப்பு நீக்கம் பா...வின் தேர்தல் மோசடியை உறுதி செய்கிறது!”

திரு. எம்.. பேபி, இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச்செயலர்

தமிழ்நாடு அரசு எந்தவொரு வழக்கையும் விசாரிக்கவில்லை எனக் கூறி அனைத்து வழக்குகளையும் மத்திய அரசு எடுத்துக்கொள்ளுமா? தமிழ்நாடு அரசு விசாரணை மேற்கொள்ளும் எந்த வழக்கிலும் அமலாக்கத் துறை தலையிடுவதும் விசாரிப்பதும் மாநில அரசின் அதிகாரத்தைப் பறிப்பதாக அமையாதா?”

உச்ச நீதிமன்றம்

சமூகத்தில் சாதியக் கொலைகள், அத்துமீறல்களைச் சட்டரீதியாக எதிர்கொள்ள வேண்டிய பொறுப்பும் கடமையும் அனைவருக்கும் உள்ளது. அதற்குச் சமூக உணர்வுடன் பணியாற்றும் வழக்கறிஞர்களின் பங்களிப்பு அளப்பரியது.”

திருமதி. பி.எஸ். அஜிதா, உயர் நீதிமன்ற வழக்கறிஞர்

news
இந்திய செய்திகள்
முழு திருவிவிலியத்தையும் கைகளால் எழுதிய கல்லூரி மாணவி!

இன்றைய இளைஞர்கள் இறைப்பக்தியில் பின்தங்கியவர்கள் அவர்கள் திருவிவிலியத்தை வாசிப்பதில்லை என்று குறை கூறுவதற்குப் பதிலாக, அவர்களிடம் அவர்களுக்குப் புரியும் விதத்தில் இறைச்செய்தியை எடுத்துச் சென்றால், அவர்கள்கூட சாட்சிய வாழ்வு வாழமுடியும் என்பதற்குச் சிறந்த உதாரணமாக நிற்கிறார் சிவகங்கை மறைமாவட்டம், வேம்பத்தூர் மிக்கேல்பட்டினம் பங்கைச் சேர்ந்த செல்வி ஜோவிட்டா. 2024 டிசம்பரில் பங்குத்தந்தை அருள்பணி. C.A. ஜேம்ஸ் அவர்களின் ஊக்கத்தின்படி திருவிவிலியத்தைத் தனது கையால் எழுதத் தொடங்கி, 2025 செப்டம்பரில் முழுமையாக எழுதி முடித்துள்ளார். மொத்தம் 2400 பக்கங்கள் எழுதியுள்ளார். ஜோவிட்டாவின் இந்த ஆன்மிக முயற்சியைப் பாராட்டும் வகையில், பங்கின் திருவிழா நாளில் ஊர் மக்கள் சார்பாக ரூ.10,000/- வழங்கப்பட்டது. மேலும், அண்மையில் ஓரியூரில் நடைபெற்ற சிவகங்கை மறைமாவட்டத்தின் திருப்பயணத்தின்போது, மறைமாவட்ட ஆயர் மேதகு லூர்து ஆனந்தம் அவர்கள் ஜோவிட்டாவைப் பாராட்டி ஊக்குவித்தார்.

news
இந்திய செய்திகள்
சிறந்த ஆசிரியருக்கான விருது!

புதுதில்லி மாநகராட்சி ஆணையம் (NDNC), நடப்பு கல்வி ஆண்டின் (2025-26) சிறந்த ஆசிரியருக்கான விருதை, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியை குளோரி மேரி (வயது 53) என்பவருக்கு வழங்கிப் பெருமைப்படுத்தியுள்ளது.  ஆசிரியர் குளோரி தனது பள்ளிப் படிப்பை விருதுநகரில் PKN பெண்கள் பள்ளியிலும், இளங்கலைப் பட்டத்தை (B.Sc.,) V.V.V. கல்லூரியிலும், ஆசிரியர் பயிற்சியை (B.Ed.,) மதுரை, காமராசர் பல்கலைக் கழகத்திலும் படித்து முடித்தவர். 1995-இல் தில்லியில் உள்ள IIT-இல் பணியாற்றிய இவர், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்றார். 1999 முதல் தில்லி மாநகராட்சிப் பள்ளிகளில் பணியாற்றினார். ஆசிரியர் பணியில் அர்ப்பணமும் ஆர்வமும் நிறைந்தவராக விளங்கிய  இவர், தொடர்ந்து மாணவர்களின் பல்வகைக் கல்வித் திறனை வளர்த்து வந்தார். மாநகராட்சிப் பள்ளிகளில் அதிகமான மாணவர்களைச் சேர்க்க முயற்சி எடுத்து வெற்றியும் பெற்றார். மாணவர்களுக்குச் சிறப்புப் பயிற்சி கொடுத்து NMMS தேர்வு எழுதச் சொல்லி பலருக்கு அரசு உதவித் தொகை பெறத் துணைநின்றவர்.

விருது பெற்றது குறித்து இவர் கூறும்போது, “நான் நேர்மையாகவும் கடவுள் பக்தி உள்ளவராகவும் எனது ஆசிரியப் பணியைச் செய்தேன். உடல்நலம் குன்றிய நிலையிலும் கடமையில் தவறியதில்லை. நான் இன்னும் உயிருடனும் நிறைவுடனும் வாழ்கிறேன் என்றால், அதற்கு என் பள்ளிக் குழந்தைகளின் அன்பும் பாசமும் பரிவும்தான் காரணம். இந்த விருதைக்  கேட்டு நான் விண்ணப்பிக்கவில்லை. மாறாக, என் தலைமையாசிரியரும் சக ஆசிரியர்களும் விண்ணப்பித்து இதை எனக்கு வழங்கியுள்ளார்கள்என்றார். புதுதில்லி தமிழ்க் கிறித்தவக் கத்தோலிக்க அமைப்பின் சார்பாக அருள்முனைவர் சிரில் சே.. அவர்கள் நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டினார்.

news
இந்திய செய்திகள்
மதமாற்றத் தடைச்சட்டம் நிறைவேற்றப்படாமலே கிறித்தவர்களுக்கு எதிராகத் தாக்குதல்! - ஜான் புடைட் விமர்சனம்!

இராஜஸ்தான் மாநிலத்தில் மதமாற்றத் தடைச்சட்டம் ஆளுநரின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் நிலையில், இதுவரை 9-க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் கிறித்தவர்களுக்கு எதிராக நடத்தப்பட்டுள்ளது என அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும்பைபிள்ஸ் ஃபார் தி வேர்ல்டுஅமைப்பின் தலைவர் ஜான் புடைட் கூறியுள்ளார். இது தொடர்பாகத் தனது கருத்தைத் தெரிவித்துள்ள அவர், “இந்தியாவின் 12 மாநிலங்களில் மதமாற்றத் தடைச்சட்டம் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதில் பலவற்றை ஆளுநரின் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், மசோதா இதுவரை சட்டமாகச் சட்டப்பேரவையில் கொண்டு வரப்படவில்லை. இந்நிலையில், இந்த வழக்கில் கிறித்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையின மக்களின் மத உரிமை காக்கப்படுமா? என எதிர்பார்த்திருக்கிறோம்என்றார்.

news
இந்திய செய்திகள்
“கூர்மையான பேனாவும் சமரசமற்றக் குரலும் என்றும் நினைவுகூரப்படும்!”

‘நம் வாழ்வின்இரங்கற்பா

என்றும் நினைவுகூரப்படும்!

ஆக்கவும் வல்லது, அழிக்கவும் வல்லது

எழுத்தும் எழுத்தன் கை ஆணியும்!

ஆயிரம்பேர் ஆயுதம் ஏந்திவரும் போர்

ஆணையால் நிறுத்தவும்

ஆனையாய் உறுத்தவும்

அதிகாரம் எடுக்கும்ஆயுதம்பேனா!

அரசும் ஆட்சியரும் அறம் காத்திடவே!

ஆயிரம் கருத்துகள் ஆங்காங்கே கருக்குகள்

ஆதரிப்போ விமர்சனமோ

அறிவுரையோ ஆதங்கமோ

ஆக்கவும் வல்லது, அழிக்கவும் வல்லது

உறைவெளி வந்தகூர்முனைப்பேனா!

பஞ்சம் (பஞ்சபூதம்) ஆளுது; பஞ்சம் வாழுது

நெஞ்சம் நிமிர்ந்து உண்மை சொல்லுது

பத்திரிகையாளன் கையில் முளைத்த

ஆறாம் விரலாம்பேனா எனும் வாள்!

இவ்வரிகளைச் சமரசமின்றி வாழ்வாக்கியவர் காலஞ்சென்ற மூத்த பத்திரிகையாளர் டி.ஜே.எஸ். ஜார்ஜ். சுதந்திரக் காற்று எங்கும் உலாவந்தபோதிலும் 1965-ஆம் ஆண்டில் பீகார் முதல்வர் கே.பி. சஹாயை விமர்சனம் செய்ததற்காக, சிறையில் அடைக்கப்பட்ட முதல் பத்திரிகையாளர் எனும் பெருமைக்குரியவர். மக்களாட்சித் தத்துவத்தின் மாண்பினைக் காக்கும் காவல் தூண்களில் கடைசியாய்ச் சேர்ந்தது ஊடகம் அன்றோ!

கருத்தியல் என்பது கடைச்சரக்காகி, ஊடக அறம் ஊதாரியான போதும் அறநெறி வழுவாது, ஆதிக்கம் பக்கம் சாயாது உண்மையை உரக்கக் கூறியவர்களில் முன்னோடி டி.ஜே.எஸ். ஜார்ஜ் அவர்கள்.

மே 7, 1928 அன்று தாமஸ் ஜேக்கப் - சாச்சியம்மா ஜேக்கப் எனும் தம்பதிக்குப் பிறந்த இவர், நீதிபதியான தன் தந்தையின் மதிப்பீடுகளை வாழ்வாக்கி, தனது 97-ஆம் வயதில் தன் கடைசி மூச்சுவரை நீதியின் பக்கமே வாழ்ந்து மறைந்திருக்கிறார்.

சென்னை கிறித்தவக் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்று The Church light, Eastern Economic Review,  Asia Week, The New Indian Express எனப் பல முன்னணி நாளிதழ்களில் உயர் பொறுப்புகளை வகித்துள்ளார்.

இந்தியாவில் மிகவும் மதிக்கப்படும் பத்திரிகையாளர்களில் ஒருவரான டி.ஜே.எஸ்., ஊழல், சமூக நீதி, மத சகிப்புத்தன்மை மற்றும் சனநாயக அமைப்புகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களின் போது அதைத் துணிவுடன் எதிர்ப்பவராகவும் விமர்சிப்பவராகவும் இருந்தது ஒரு பத்திரிகையாளரின் நேர்மையையும் துணிவையும் எடுத்துக்காட்டியது.

உலக அரசியலை உன்னிப்பாக அறிந்த இவர், தன் வாசகர்களைச் சிந்திக்கவும் கேள்வி கேட்கவும் செயல்பாடுகளில் ஈடுபடவும் தூண்டியவர்என கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் கூற்றில் பேருண்மை பொதிந்திருக்கிறது. “அவரது படைப்புகளும் புத்தகங்களும் இந்திய மண்ணின் மறக்கமுடியாத கருவூலம்எனக் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் புகழ்ந்துள்ளார். கேரள முதல்வர் பினராயி விஜயன், “இந்திய மற்றும் உலகளாவிய ஊடக நிலப்பரப்பில் டி.ஜே.எஸ். தந்துள்ள பங்களிப்பு கேரள மாநிலத்தின் பெருமைமிகு அடையாளம்எனப் புகழ்ந்திருக்கிறார். இத்தகைய சிறப்புக்குரியவருக்கு இந்திய அரசு 2011-இல்பத்ம பூஷன்விருது வழங்கிப் பாராட்டியது தகுமே.

ஆட்சியாளர்களும் அரசியல் தலைவர்களும் தங்களை எவரும் விமர்சிக்கக்கூடாது என்று எண்ணும்போது, நாடு இருளுக்குள் செல்வதைத் தவிர்க்க முடியாதுஎனும் சமரசமற்ற சமூகக் குரலுக்குச் சொந்தக்காரரான டி.ஜே.எஸ்ஜார்ஜ் எனும் கூர்மையான பேனாவின்மைதீர்ந்துவிட்டதே தவிர, இதுவரை இப்பேனா எழுதிய வார்த்தைகளின் வீரியம் குறையவே குறையாது! டி.ஜே.எஸ். ஜார்ஜின் ஆன்மா இறைவனில் அமைதிபெறநம் வாழ்வுவார இதழ் தன் அஞ்சலியைச் சமர்ப்பிக்கிறது.

முதன்மை ஆசிரியர்

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

என் போன்றோரின் இளமைக் காலங்களில் பதற்றம், மனஅழுத்தம், மனச்சோர்வு போன்ற வார்த்தைகளை நாங்கள் கேள்விப்பட்டதில்லை. பெற்றோரிடம்கூட இதைக் கூற முடியாது. ஆனால், தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. மூன்று வயது பெண் குழந்தைக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு குழந்தையை மருத்துவரிடம் கொண்டு சென்றபோது, ‘குழந்தைக்கு உடல்ரீதியான காரணங்கள் எதுவும் இல்லை; அது மனஅழுத்தத்தால் ஏற்படுகிறதுஎன்றார். மாணவர்கள், எத்தனை மணிநேரம் கைப்பேசியை ஒதுக்கி வைக்கிறீர்களோ அதைப் பொருத்து மன ஆரோக்கியமும் மேம்படும்.”

நீதிபதி வெ. இராமசுப்பிரமணியன், மனித உரிமைகள் ஆணையத் தலைவர்

இந்திய அரசமைப்புச் சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பும் பின்பும் நீதி மன்றங்கள் ஆதிக்க சாதியைச் சார்ந்த கருத்துகளை முன்வைத்து, ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு எதிரான நிலையையே பெரும்பாலும் எடுத்து வந்துள்ளன. தமிழ்நாட்டில் சாதிய ஆதிக்கத்திற்கு எதிராகப் பல்வேறு சட்டங்கள், அரசாணைகள் இயற்றப்பட்டாலும் கூட, ‘அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்என்ற அரசாணை இன்னும் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை. அர்ச்சகர்களுக்கான தகுதிகளைப் படித்து, முறையாகப் பயிற்சி பெற்ற பிறகும் அனைத்துச் சாதியினரும் இன்னும் அர்ச்சகராக முடியவில்லை. சாதிய ஒழிப்புக்கு எதிரான இந்தச் சட்டப் போராட்டத்தில் பி.வி.பி. போன்ற அறக்கட்டளைகள் மக்கள் மன்றங்களிலும் தங்களது பணியைச் சிறப்பாகச் செய்யவேண்டும்.”

உயர்திரு. அரிபரந்தாமன், சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி

குரு, சீடர் உறவு உண்மையாக இருத்தல் வேண்டும். பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் வாழும் காலங்களில் சாதனை படைக்க வேண்டும். வாழும் காலங்கள் அர்த்தமுள்ளதாகவும், மற்றவர்களுக்குப் பயனுள்ளதாகவும் வழிகாட்டியாகவும் இருக்க வேண்டும். இதற்குச் சான்றாகப் பல்வேறு நூல்கள் வெளியாகியுள்ளன. இதுபோன்ற நூல்களை வாசிப்பதன் மூலம் சாதனை படைக்கலாம்.”

பேராசிரியர் அரங்க.இராமலிங்கம்