நண்பரின் அமைதியான, அழகான குடும்பம். ஒரு பையன், ஒரு பெண். எப்போதும் புன்சிரிப்பு மாறாத அந்தப் பெண் குழந்தையின் முகத்தை இன்றளவும் மறக்க முடியவில்லை. கல்லூரிப் படிப்பு முடிந்த கையோடு திருமணம் நடந்தது. மாப்பிள்ளை ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்த்தார். மளமளவென்று பதவி உயர்வும் பெற்றிருந்தார். லக்னோவுக்கு மாற்றல் வந்தது.
வாரம்
முழுமையும் கடும் வேலை. சனி, ஞாயிறு வந்தவுடன் ஊர்சுற்றல். புது மனைவியும் அவருடைய
சுறுசுறுப்புக்கு ஈடு கொடுத்து வாழப் பழகிக்கொண்டார். எல்லாம் ஒரே ஒரு வருடம்தான்.
ஒரு வார விடுமுறைக்கு டேராடூன் போனார்கள். விடுமுறை முடிந்து இரவோடு இரவாக மலையிலிருந்து
காரில் கீழே இறங்கினார்கள். கார் விபத்துக்கு உள்ளானது. பக்கத்திலிருந்த மனைவியை -
அந்தப் புன்னகைப் பூவைப் பறிகொடுத்தார். காரை ஓட்டி வந்த அவர் பலத்த காயங்களோடு உயிர்
தப்பினார். ஓர் இனிய குடும்பம் இடையிலேயே சிதைந்துபோனது.
இந்த
இளைஞர் மட்டுமல்ல, இன்று பல பெற்றோர், பிள்ளைகளும் இன்று மிகவேகக் குணத்தோடு (Hyper active) வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். பிறக்குமுன்
பள்ளியில் இடம், வேகமாக வளர்வதற்காக உணவுத் திணிப்பு, படித்து முடிக்குமுன் செல்போன்,
ஸ்கூட்டர், பைக், சம்பாதிக்கும் முன் செலவு. கடன் தொல்லை. பொறுமையில்லாத, நிதானமில்லாத,
விட்டுக்கொடுக்க மனமில்லாத நிலையில் காதல், குடும்ப வாழ்க்கை. நினைத்துப் பார்க்கும்
முன் விவாகரத்து. பள்ளிப்பருவத்திலேயே இனக் கவர்ச்சிக்கும் காதலுக்கும் வித்தியாசம்
தெரியாதபோதே காதல், கல்யாணமாகாத தாய், தனிமையில் குழந்தையோடு தவிக்கும் மனைவி. வேகம்
வேகமாகப் பணம் தேடும் அவசரம். கடன், ஊழல், ஏமாற்று வேலைகள், பின்னால் வம்புகள்!
நாம்
மேலே பார்த்ததைப் போல அவசரக்காரர்கள் தங்களை மட்டும் கெடுத்துக்கொள்வதில்லை; தங்களைச்
சுற்றி தங்களைச் சார்ந்திருக்கும் பெற்றோர், மனைவி, மக்கள், பிள்ளை, நண்பர்கள் என்று
எல்லாரையும் அவதிக்கு ஆளாக்கிவிடுகிறார்கள். ஒரு வெற்றிகரமான வாழ்க்கைக்கு அடிப்படை
நல்ல சிந்தனையும் ஆக்கப்பூர்வமான செயல்களும்தான். சிந்தித்துச் செயல்படவேண்டும்; செயல்பாட்டின்
விளைவை மதிப்பிடவேண்டும்.
இன்று
நம்மிடையே சிந்திக்கவும் மறுத்து, செயல்படவும் மறுத்து, அரைத் தூக்கத்தில் வாழ்பவர்கள்
ஏராளமாக உருவாகிக்கொண்டு இருக்கிறார்கள். இனிப்பும் கொழுப்பும் நிறைந்த உணவு; தொலைக்காட்சிப்பெட்டிக்கு
முன்னால் நிரந்தரத் தவம்; அப்போதும் அரைத் தூக்கம். இல்லாவிட்டால் செல்போன் உரையாடல்.
விடியலை ஒரு நாளும் பார்த்திராத காலை தூக்கம். இதன் விளைவு? தொடரும் பசி, மிகை எடை,
இளமையில் சர்க்கரை நோய், இதய நோய், கால் வலி, கை வலி... அமெரிக்காவில் தலையான சுகாதாரச்
சிக்கலே மிகை எடை சார்ந்த சிக்கல்தான் என்கிறார்கள். நம்மைச் சுற்றியும் மிகை எடை இளைஞர்களுக்கும்
இளம் பெண்களுக்கும் பஞ்சம் ஒன்றுமில்லை. நம்மிடம் செயல் வேகம் இருக்கிறது. இளமை வேகம்
சக்தி வாய்ந்தது. எதையும் சாதிக்க வல்லதுதான். ஆனால், இந்தச் செயல்வேகம் காட்டாறாக
மாறிப்போனால் பயனில்லை. அது சிந்தனை அணைக்கட்டில் அடங்கி நின்று நிதானித்துச் செயல்படவேண்டும்.
இளையோரின்
அதிவேகச் செயல்பாடுகள் பற்றி ஏராளமான உளவியல், நரம்பியல், மூளையியல் சார்ந்த ஆய்வுகள்
நடைபெற்று வருகின்றன. பிறவியிலேயே இந்தக் குறைபாட்டுடன் சிலர் வந்து சேரக்கூடும். அவர்களைச்
சிறு வயதிலேயே சுலபமாக அடையாளம் கண்டுகொள்ள முடியும். இவர்களுக்கு உளவியல், நரம்பியல்
சார்ந்த மருத்துவ வசதிகள் நிறையவே கிடைக்கின்றன. ஆனால், நம்மில் பெரும்பாலோர் சமூகச்
சூழலில் இருந்துதான் இந்த அவசரப் பயணத்தைக் கற்றுக்கொள்கிறோம். நிதானச் சிந்தனை, நிதானச்
செயல், நிதான மதிப்பீடு, செலவு, சேமிப்பு, நல்லுறவு. நம்மால் இந்தப் பழக்கத்தை நிச்சயம்
வளர்த்துக்கொள்ள முடியும். சவால்தான்... சந்திப்போம், வெற்றி பெறுவோம்! இன்றைய உலகம்
அவசர கதியில் அவதிப்படுகிறது. அதன் அசுர வேகத்தில் சிக்கிக்கொள்ளாமல் நாம் ஒவ்வொரு
நாளும் நிதானமாகச் சிந்தித்துச் செயல்படுவோம்.
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை
நீடுவாழ் வார் (குறள் 3)
குறள் விளக்கம்
அன்பரின்
அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்,
இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.
சிந்தனை
ஒரு
சிறு மெழுகுதிரியை இரவில் எடுத்துக்கொண்டு ஒருவர் படிக்கட்டில் ஏறிச் செல்லும்போது,
“எங்கே என்னை எடுத்துச் செல்கிறாய்?” என்று மெழுகுதிரி கேட்டது. பதிலாக “வீட்டின் மேற்தளத்திற்கு
என்னோடு வா; கப்பல்கள் துறைமுகத்தை அடைய வழி காண்பிக்கப் போகிறேன்” என்றார் அவர்.
“என் ஒளி மிகச்சிறியது. கப்பல்களைப் பார்க்க முடியாதே” என்றது திரி.
“அதனை
நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று ஆறுதல் கூறி, ஒளி பிரதிபலிக்கும்
கண்ணாடி முன் மெழுகுதிரியை வைத்தார். அதன் ஒளியோ கடலில் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு
ஒளிவிட்டுக் கொண்டிருந்தது.
நாம்
இறைவனின் மெழுகுதிரிகள். இறைவனோடு இணைந்து அவர் விரும்பும் வகையில் பிரகாசிப்பதே நமது
பணி.
இறைவன்
எப்பொழுதும் நம் உள்ளமாகிய மலரில் பிரசன்னமாக இருக்கிறார். அவரின் அடி பணிந்து வாழ்பவர்கள்
எந்தக் குறைவுமின்றி நிறைமகிழ்வுடன் இவ்வுலகில் பிரகாசித்து வாழ்வர்.
“நான்
திராட்சைக் கொடி; நீங்கள் அதன் கிளைகள்; ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால்
அவர் மிகுந்த கனி தருவார்; என்னை விட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது” (யோவா 15:5).
இறைவனை
நம் உள்ளத்தில் இருத்தி, அவரோடு இணைந்த வாழ்வு வாழவேண்டும். இறைவனைப் பிரிந்து வாழ்ந்தால்
நாம் வேரற்ற கிளையாகத் துண்டிக்கப்படுவோம்.
எப்படி
இறைவனாகிய கண்ணாடியில் பட்டு ஒளி பிரகாசிக்கிறதோ அல்லது செடியோடு இணைந்த திராட்சைக்
கொடி செழித்து வளர்கிறதோ அதுபோல் இறையுறவில் வளமான மகிழ்ச்சியான வாழ்வு அமையும்.
இதனையே
நமது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், “ஒன்றோடொன்று தொடர்புடைய அயலார், ஆண்டவர்,
இயற்கை என அடிப்படையான மூன்று உறவுகளில் வேரூன்றி நெருக்கமாகப் பின்னிப் பிணைந்துள்ளது
மனித வாழ்வு” என்று ‘புகழனைத்தும் உமதே’ என்னும் சுற்று மடலில் எண்-66-இல் குறிப்பிட்டுள்ளார்.
இறைவனை
இதயத்தில் வைத்து, அருகில் இருப்போருடன் அன்பைப் பொழிந்து, இயற்கையோடு ஒன்றிணைந்து
வாழவேண்டும் என்று கூறுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆகவே,
இறைவனோடு இணைந்திருப்போம்; இன்பமாக வாழ்வோம்.
ஏ.ஐ. நாம் செய்யும் வேலைகளுக்குப் பதிலாக அமையுமா? அல்லது மனிதர் எதிர்கொள்ளும் சிக்கலைத் தீர்க்குமா? என்பது தொடரும் வாதப் பொருளாகவே இருப்பதைப் பார்க்கிறோம்.
கி.மு. 5-ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற கிரேக்க தத்துவஞானி சாக்ரடீஸ், “எழுத்துமுறை மனித நினைவாற்றலைப் பாதிக்கும்” என்றார்.
அதாவது, எழுத்துமுறை முன்னேற்றத்தின் அடையாளம் என்ற கருத்தை முன்னிறுத்தவில்லை.
ஈராயிரம்
ஆண்டுகளுக்குப்பின் தாமஸ் ஆல்வா எடிசன் என்ற விஞ்ஞானி மின்விளக்கு, திரைப்படக் கருவிகளை உருவாக்கினார் என்பதை அறிவோம். இவர் திரைப்படங்கள் பாடப்புத்தகங்களுக்கு மாற்றாக அமையுமென்றும், மனித அறிவைப் புகட்ட சினிமா உதவும் என்றார். இவ்வாறான கருத்துகள் இவர்களின் படைப்புகள் பழையவற்றை மாற்றியமைக்குமா? அல்லது புதிய திறன், தகவல்-செய்தி பரவலுக்கு உதவுமா? என்பதைத் தெளிவுபடுத்தவில்லை. அதே நிலைதான் இன்று ஏ.ஐ. தொழில்நுட்ப
உலகிலும் நிலவுகிறது.
இன்றைய உலகம்
21-ஆம்
நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏ.ஐ.-யின்
பிரிவான கற்கும் இயந்திரத் (Machine learning)
தொழில்நுட்பம், நிரலாற்றல் (programming) இல்லாமலே தரவுகள் அடிப்படையில் கற்று மேம்படுத்திக்கொள்ளும் திறனைத் தந்தது. ஜியாஃப்ரே ஹிண்டன் என்பவரின் நரம்புவலை இயந்திரச் சிந்தனை (Deep learning)
தொழில்நுட்பம் இயந்திரத் திறனை மேலும் உயர்த்தியது. இதன்மூலம் பிம்பங்களை (images
recognition) அறிதல், பேச்சைப் புரிந்துகொள்ளுதல் (speech
recognition) போன்ற திறனுடன் ஏ.ஐ. துரிதமாக
மக்களிடம் சென்றடைந்தது.
இத்தகைய
ஏ.ஐ. சார்ந்த தொழில்நுட்ப
முன்னேற்றங்கள்மேல் கட்டப்படும் இன்றைய பொருளாதாரம் சமநிலையில் இல்லை என்ற பார்வையும் உள்ளது. ஏற்றத்தாழ்வு நிறைந்த சூழலில்
உலகம் இன்று ஏ.ஐ.யோடு
பயணிக்கத் தொடங்கிவிட்ட நிலையில், சமுதாயம் தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறதா? என்பது ஒருபுறமிருக்க, ஏ.ஐ.-யின்
வளர்ச்சி நாடுகளுக்கிடையே நிலவும் வேறுபாடுகளின் இடைவெளியை மேலும் அதிகரிப்பதாகவும் உணரப்படுகிறது. குறிப்பாக, ஆசியா, கிழக்குத் தீவு நாடுகளின் பொருளாதாரச் சமநிலையின்மை, அண்டை மற்றும் மேற்கத்திய நாடுகளுடன் ஈடு கொடுக்க இயலாமை என்பவை எவ்விதத்தில் ஏ.ஐ. தொழில்நுட்பம்
அனைவருக்குமானதாக (inclusive) இருக்கும் என்றும் சிந்திக்க வைக்கிறது.
இன்றைய
ஏ.ஐ.யின் வளர்ச்சி
முற்றிலும் இயந்திரத்தைச் சார்ந்தே இருப்பதை அறிவோம். ஏ.ஐ.-க்குத்
தேவையான வன்பொருள் முதல் அதன் இயக்கம்வரை அனைத்தும் மின்சாரத்தையே நம்பி உள்ளது. ஏ.ஐ. எவ்வளவு
வரவேற்கப்படுகிறதோ அல்லது வளர்கிறதோ அதே விகிதத்தில் மின்சாரத் தேவையும் உயர்ந்துகொண்டே போகும் என்பதில் எவ்விதச் சந்தேகமுமில்லை. இந்நிலையில் 2030 ஆண்டுக்குள் ஏ.ஐ. சார்ந்த
தரவு மையங்களின் மின் தேவை மூன்று மடங்கு அதிகரிக்குமென்றும், இதற்கேற்ப தயார்படுத்த இயலாத நிலத்தடி எரிபொருளையே நம்பியிருக்கும் நாடுகள் ஏ.ஐ.யின்
பயனைப் பெறுவதில் திண்டாடும் நிலை ஏற்படலாம் என்றும் கருதப்படுகிறது. நாளுக்கு நாள் மின்சார உற்பத்திக்கும் - தேவைக்கும் உள்ள இடைவெளியை நம் அன்றாட மின் பயன்பாட்டின் கட்டண உயர்விலிருந்தே அறிந்துகொள்கிறோம்.
ஏறக்குறைய
25% ஆசிய-பசிபிக் கடல் நாடுகள் இன்று இணையதளத் தொழில்நுட்பத்தை அடையாமலிருப்பதும், ஸ்மார்ட் ஃபோன்களைப் பயன்படுத்துவதில் பெண் வர்க்கத்தினர் குறைந்த விகிதத்திலிருப்பதும், டிஜிட்டல் தொழில்நுட்பம் கணிசமான அளவில் சமுதாயத்தில் அனைவரையும் சென்றடையவில்லை என்பதாகக் கருதப்படுகிறது.
இது
ஒருபுறமிருக்க, சில நாடுகள்
மின் உற்பத்தியை அதிகரிக்க தங்கள் உள்நாட்டுக் கட்டமைப்பை வேகமாக உருவாக்குவதும்,
சில நாடுகள் இதில் முற்றிலும் பின்தங்கியிருப்பதும், ஏ.ஐ. சார்ந்த
பொருளாதாரப் பயன்கள் பின்தங்கிய பிரிவினரிடம் சென்றடையாமல் போகும் என்றும் கூறப்படுகிறது.
ஏ.ஐ.யின்
எதிர்காலம்
ஏ.ஐ.யின் எதிர்காலம்
மிகவும் ஆர்வமும் நம்பிக்கையூட்டுவதாவும் உள்ளது என்றாலும், ஒவ்வொரு நாளும் ஏ.ஐ. புதிய
வடிவமெடுப்பதும், ஏ.ஜி.ஐ.
(Artificial General Intelligence) என்ற அடுத்தகட்ட
நிலையை நோக்கி நகர்வதும் விஞ்ஞானிகள் மற்றும் தத்துவ ஞானிகளிடையே கவலையையும் விவாதத்தையும் எழுப்பியுள்ளது. ஏனென்றால், இயந்திரம் மனிதத்திறனை மிஞ்சிய நிலையில் (ஏ.ஜி.ஐ.)
அதற்கான கட்டுப்பாடு, பாதுகாப்பு நெறிமுறை பற்றியும், இதனால் ஏற்படும் விளைவுகளைக் குறித்தும் கேள்விகள் எழுகின்றன.
எந்த
ஒரு தொழில்நுட்பமும் மனிதக் கட்டுப்பாட்டிலிருப்பதும், மனித இனத்திற்குப் பயனுள்ளதாய் இருப்பதுமே சமுதாயத்தின் எதிர்பார்ப்பு. இதற்கான பதிலை அடுத்து வரும் ஆண்டுகளின் ஏ.ஐ.யின்
நகர்வுகளே தீர்மானிக்கும் என்றே கருதப்படுகிறது.
21 -ஆம் நூற்றாண்டின் கட்டமைப்பு
18 -ஆம் நூற்றாண்டின்
தொழில்புரட்சி, நீராவி எஞ்சினையும், இயந்திர உற்பத்தியையும் உலகிற்கு அளித்தது. இதனைப் பயன்படுத்தி 19 -ஆம் நூற்றாண்டில் முன்னேறிய நாடுகளின் தனிமனித வருமானமும், மனித ஆயுள்காலமும் வெகுவாக அதிகரித்தன. இந்த ஓட்டத்தில் பங்குபெற இயலாத நாடுகள் இதன் பயன்களைப் பெறமுடியாமல் போனநிலையை இன்று ஏ.ஐ. உருவாக்கலாமென்று
ஐ.நா. சபையின் யு.என்.டி.பி. (UNDP) அறிக்கை
எச்சரித்துள்ளது.
எவ்வாறு
நம் அன்றாடத் தேவைக்கு மின்சாரம், சாலைவசதி போன்றவை அடிப்படையாக அமைந்துவிட்டனவோ, அதேபோன்று 21-ஆம் நூற்றாண்டின் கட்டமைப்புகளில் ஒன்றாக உருவெடுக்கும் ஏ.ஐ.-யின்
பயன் மக்கள் அனைவருக்கும் பரவலாகக் கிடைப்பது அவசியமும் சமூக நீதியுமாய் இருக்கும் என்று கருதப்படுகிறது.
இந்நூற்றாண்டு
புதியதொரு தொழில் எழுச்சி யுகத்தைப் படைக்கவேண்டுமென்றால், அதற்கு ஏ.ஐ. மட்டும்
காரணமாய் அமையாது; அதை நாம் எவ்வாறு சமுதாயத்தில் செயல்படுத்துகிறோம் என்பதில்தான் இருக்கும்.
மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவில் தினமும் ஒரு விசித்திரமான காட்சியை நாம் காண்கிறோம். கையில் பழைய மருத்துவக் கோப்புகள், முகத்தில் கவலை, கண்களில் நம்பிக்கை, இதயத்தில் ஒரு மௌனமான வேண்டுதல்.
“டாக்டர், நான் நன்றாக ஆகிவிடுவேனா?” இந்த ஒரு கேள்விக்குள் எத்தனை அச்சங்கள் அடங்கியிருக்கின்றன! எத்தனை கனவுகள், எத்தனை பொறுப்புகள்! எத்தனை சொல்லப்படாத வேண்டுதல்கள்!
மருத்துவர்
நோயைக் கண்டறிகிறார். சில பரிசோதனைகள், சில அறிவுரைகள். இறுதியில் ஒரு மருத்துவர் சீட்டு. அந்தச் சிறிய வெள்ளைத்தாளில் எழுதப்பட்டிருப்பது வெறும் மருந்துகளின் பெயர்கள் அல்ல; வாழவேண்டும் என்ற மனிதனின் ஆழ்ந்த ஆசைக்கு அளிக்கப்படும் நம்பிக்கையின் பதிலாகும்.
ஆனால்,
இன்று நம் வாழ்க்கையை நோக்கிப் பார்த்தால், உடலுக்கு மட்டுமல்ல; மனத்திற்கும், உறவுகளுக்கும் ஆன்மாவிற்கும் சிகிச்சை தேவைப்படுவதை உணர்கிறோம். உடல் சோர்வடைவதற்கு முன் மனம் சோர்வடைகிறது. நோய் வருவதற்கு முன் நம்பிக்கை குன்றுகிறது. தூக்கம் வருவதற்கு முன் எண்ணங்கள் துரத்துகின்றன. நண்பர்கள் அதிகரிக்கின்றனர்; ஆனால், நெருக்கம் குறைகிறது. வீடுகள் பெரிதாகின்றன; ஆனால், உரையாடல்கள் சிறிதாகின்றன.
அமைதியைத்
தேடும் மனங்களுக்கு, அர்த்தத்தைத் தேடும் இளைய தலைமுறைக்கு, அன்பைத் தேடும் உறவுகளுக்கு, நம்பிக்கையைத் தேடும் மனித இதயங்களுக்கு எழுதப்பட்ட ஒரு வாழ்க்கை மருத்துவர் சீட்டு.
நோயறிதல்
நோயாளியின்
பெயர்: மனிதகுலம்
வயது:
நவீன நாகரிகம்
முக்கியக்
குறைகள்: மன அழுத்தம், ஒப்பீடு,
தனிமை, அவசரம், அன்பு குறைவு
மருத்துவர் சீட்டு
• நன்றி உணர்வு:
தினமும் காலை ஒரு மாத்திரை. கண் திறந்தவுடன் குறைகளை எண்ணாதீர்கள். கிடைத்தவற்றை எண்ணுங்கள். நன்றியுணர்வு என்பது மனத்தின் எதிர்ப்புச்சக்தியை உயர்த்தும் இயற்கை மருந்து.
• அன்பு: அளவில்லாமல் எடுத்துக்கொள்ளலாம். இந்த
மருந்திற்குப் பக்கவிளைவுகள் இல்லை. கொடுப்பவரும் குணமடைவார்; பெறுபவரும் மகிழ்வார்.
• மன்னிப்பு: காயம் ஏற்பட்ட உடனே மன்னிக்காமல் வைத்திருக்கும் கோபம், மற்றவரைக் காட்டிலும் நம்மையே மெதுவாகக் காயப்படுத்துகிறது.
• அமைதி: இரவு உறங்குவதற்கு முன் 15 நிமிடம். சில நேரங்களில் மனத்திற்குத் தேவைப்படும் சிறந்த சிகிச்சை பதில்கள் அல்ல; அமைதியே!
• குடும்ப உரையாடல்:
தினமும் ஒரு முறை. ஒரே வீட்டில் வாழ்வது உறவல்ல; ஒருவரை ஒருவர் உண்மையாகக் கேட்பதே உறவு.
• நடைப்பயிற்சி: தினமும் 30 நிமிடம்: உடல் நகரும்போது சிந்தனைகளும் தெளிவடைகின்றன. சில நேரங்களில் நாம் நடப்பது பாதையில் அல்ல; நம்மை நோக்கியே.
• சிரிப்பு: தேவைக்கேற்ப மனிதன் கண்டுபிடித்த மிகச்சிறந்த இயற்கை மருந்துகளில் ஒன்று.
• செபம்: ஆயுள் முழுவதும் தொடரவும். மருத்துவம் உடலைத் தொடும்; செபம் உள்ளத்தைத் தொடும். சில காயங்களை மருந்துகள் ஆற்றாது; இறைவனின் உடனிருப்பு ஆற்றும்.
பின்பற்ற வேண்டிய
ஆலோசனைகள்
• பிறரை ஒப்பிட்டு உங்கள் மதிப்பை அளக்காதீர்கள்.
• அலைப்பேசித் திரையைக் காட்டிலும் மனித முகங்களை அதிகம் பாருங்கள்.
•
வெற்றியை மட்டுமல்ல, மன அமைதியையும் தேடுங்கள்.
• உடல்நலத்தைப் போலவே மனநலத்தையும் கவனியுங்கள்.
• அன்பைச் சேமிக்காமல் பகிருங்கள்.
மீள் பரிசோதனை
ஒவ்வோர்
இரவும் உங்களையே கேளுங்கள்:
• இன்று யாரையாவது மகிழ்ச்சிப்படுத்தினேனா?
• யாருடைய வேதனையையாவது கேட்டேனா?
•
என் மனத்திற்கு ஓய்வு கொடுத்தேனா?
•
இறைவனுக்கு நன்றி கூறினேனா?
இறுதிக் குறிப்பு
இந்த
மருத்துவர் சீட்டில் எழுதப்பட்ட மருந்துகள் எந்த மருந்தகத்திலும் கிடைக்காது. ஆனால், அவை ஒவ்வொரு மனித இதயத்திலும் ஏற்கெனவே வைக்கப்பட்டுள்ளன. நன்றி உணர்வைத் திறந்து பயன்படுத்துங்கள். அன்பை அளவின்றிப் பகிருங்கள். மன்னிப்பைத் தாமதிக்காதீர்கள். அமைதியைத் தேடுங்கள்.
இறைவனை
நம்புங்கள்; அப்போதுதான் வாழ்க்கை வெறும் நாள்களைத் தள்ளிச்செல்லும் பயணமாக அல்லாமல், குணமடைந்து மலர்ந்து அர்த்தம் பெறும் ஒரு புனிதப் பயணமாக மாறும்.
உடலுக்கு
மருந்து தேவைப்படுவதுபோல, வாழ்க்கைக்கும் சில நல்ல பழக்கங்கள் தேவைப்படுகின்றன. அவற்றை முறையாக எடுத்துக்கொண்டால், வாழ்க்கையே ஆரோக்கியமாகிவிடும்.
“எனக்கு அந்த வீட்டில் இருக்கப் பிடிக்கவே யில்லை. யாரும் இல்லாத இடத்தில் நான் ஏன் தனியா இருக்கணும்? அதான் பெட்டியைத் தூக்கிட்டு வீட்ட விட்டு வந்துட்டேன்.”
திருச்சி இரயில்வே ஸ்டேசனில் தன் அருகில் உட்கார்ந்து கொண்டிருந்த யாரோ ஓர் இளம் பெண்ணிடம் தன் துயரக் கதையைக் கூறிக்கொண்டிருந்தாள் அறுபத்தைந்து வயதான பார்வதி பாட்டி.
ஏதோ புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்த அந்த இளம்பெண் படிப்பதை விட்டுவிட்டு, பாட்டி கூறிக்கொண்டிருந்த கதையில் மூழ்கிப் போனாள்.
“புள்ளைங்க எல்லாம் சென்னையில செட்டிலாயிட்டானுங்க. என்னையும் வீட்ட வித்துட்டு அங்க வந்திடுங்கன்னு சொல்லுறானுங்க. நான் இத்தனை வருசம் வாழ்ந்த வீட்ட விட்டுப்புட்டு ஊரு பெயரு தெரியாத அந்த இடத்துக்கு எப்படிப் போவேன்? என் பெயருல இருக்கிறதே அந்த வீடு மட்டும்தான்; அதை எப்படி விப்பேன்?” என்று தன் வேதனைக் கதையைப் பச்சரிசியில் புள்ளிக்கோலம் போடுவதுபோலத் தெளிவாகத் தொடர்புபடுத்தி சொல்லி முடித்தாள்.
பாட்டி கூறிய கதையைக் கேட்டுக்கொண்டிருந்த அந்த இளம்பெண்ணுக்குப் பாட்டியை அவள் பிள்ளைகள் யாருக்கும் பிடிக்கவில்லையென்றும், பாட்டியின் சொத்தை அபகரிக்கவே பிள்ளைகள் திட்டம் போடுகிறார்கள் என்பதும் புரிந்தது.
“சரி பாட்டி, வீட்ட விட்டு வந்திட்டீங்க. இப்போ எங்கே போகப் போறீங்க?” என்று கேட்டவுடனேயே ‘ஓ’வென்று கதறி அழுதாள் பார்வதி பாட்டி.
“ஏன் பாட்டி அழுவுறீங்க? நான் ஏதாவது தப்பா கேட்டுட்டேனா?” என்று பதற்றத்தில் கேட்டாள் அந்த இளம்பெண்.
கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு அப்படியே முகத்தில் கொஞ்சம் சிரிப்பைக் கொண்டுவர முயற்சித்தாள் பார்வதி பாட்டி. தன் முகத்தை முந்தானையால் துடைக்கும் போது அவள் கண்ணீர்த் துளிகளோடு கொஞ்சம் சோகமும் முந்தானையோடு ஒட்டிக்கொண்டது என்றே தோன்றியது.
என்ன நினைத்தாள் என்று தெரியவில்லை; திடீரென்று இருக்கையிலிருந்து எழுந்த பார்வதி பாட்டி, “நான் வீட்டுக்கு உடனே போகணும், என் பூனை இலட்சுமணனைத் தெரியாம என் ரூம்லேயே பூட்டிக்கிட்டு வந்திட்டேனு நினைக்கிறேன். அவன் என்ன சாப்பிட்டானோ தெரியலை. புள்ள என்ன பாடுபட்டிட்டிருக்கோ தெரியலை...” எனத் தன் மூட்டை முடிச்சுகளை எடுத்துக்கொண்டு வீட்டை நோக்கிப் புறப்பட்டாள் பார்வதி பாட்டி.
பாட்டியின் கதையைக் கேட்டுக்கொண்டிருந்த அந்த இளம்பெண்ணுக்குப் பாட்டி சென்ற பிறகும் பாட்டியின் கதை, நாரை பறந்துபோன பிறகும் மரக் கிளைகள் ஆடிக்கொண்டிருப்பதுபோல, உள்ளத்தில் அதிர்வுகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.
‘பூனையைக் கூட பிரிந்து செல்ல மனமில்லாத பார்வதி பாட்டி வாழ்கின்ற காலத்தில் என் கணவனையும் பிள்ளைகளையும் பிரிந்து வந்திருக்கிறேனே?’ என்று ஒரு நிமிடம் எண்ணிப்பார்த்தாள் அந்த இளம்பெண்.
அவள் பயணம் செய்ய வேண்டிய கொல்கத்தா செல்லும் ஹவுரா எக்ஸ்பிரஸ் மெதுவாக நடைபாதையை விட்டு சென்று கொண்டிருந்தது. ஆனால், அந்த இளம்பெண் அங்கேயே உட்கார்ந்து கொண்டிருந்தாள்.
மனித உறவுகளும், அறிவியல் தொழிற்நுட்பப் படிப்புகளும் ஒன்றுபோல்தான். அவை மாறிக்கொண்டே இருப்பவை. அந்த மாறுதல்களுக்கு ஏற்ப நம்மை நாம் மாற்றிக்கொள்ளவில்லையென்றால், நாம் இருக்கின்ற இடத்திலிருந்தே மாற்றப்படுவோம்.
தொழில்நுட்பம் நம் வேலையை எடுக்கப் போவதில்லை; மாறாக, தொழில்நுட்பம் தெரிந்தவர்கள், தொழில்நுட்பம் தெரியாதவர்களின் வேலையை எடுக்கப்போகின்றார்கள் என்பதுதான் உண்மை.
எனவே, வளர்ந்துவரும் செயற்கை நுண்ணறிவு உலகில் நாம் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கேற்ப நம்மைத் தகவமைத்துக் கொள்ளவேண்டும்.
உலகில் மருத்துவம், தொழில்நுட்பம், கணிதம், இராணுவம், பாதுகாப்பு, ஊடகம், கல்வி, வேளாண்மை, மேலாண்மை என்று எல்லாத் துறைகளிலும் ஏ.ஐ.யினுடைய பயன்பாடு அதிகரித்திருக்கின்றது. ஏ.ஐ.யின் பயன்பாடு அதிகரித்திருப்பதால் அதற்கான வேலைவாய்ப்பும் பெருகியிருக்கிறது எனலாம்.
ஏ.ஐ. துறையில் என்ன படிக்கலாம்? எங்குப் படிக்கலாம்? என்பதை இங்குக் காண்போம்.
1. MBA / PG Diploma in AI & Business Analytics (ஏ.ஐ. பிசினஸ் அனலிட்டிக்ஸில் எம்.பி.ஏ. / பி.ஜி. பட்டயப் படிப்பு)
பிசினஸ் மேனேஜ்மென்ட் மற்றும் காமர்ஸ் பின்னணியில் வருகிறவர்கள் இப்படிப்பைத் தேர்ந்தெடுக்கலாம். ஐஐடி (IIT), ஐஐஎம் (IIM) போன்ற கல்வி நிறுவனங்களில் இதைப் பயிலலாம்.
2.
MCA / M.Tech in AI and Machine Learning (ஏ.ஐ. மற்றும் மெஷின் லேர்னிங்கில் எம்.சி.ஏ. / எம்.டெக்.):
ஐஐடி, என்ஐடி, ஐஐஐடி மற்றும் முன்னணிப் பல்கலைக்கழகங்களில் இதைப் பயிலலாம்.
3. B.Sc / B.Tech in AI and Data Science (ஏ.ஐ. மற்றும் டேட்டா சயின்ஸில் பி.எஸ்.சி. / பி.டெக்.):
டெல்லி தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், வேலூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், அமெட் பல்கலைக்கழகம், புனித சேவியர் கல்லூரி மற்றும் என்ஐடி போன்ற இடங்களில் இதைப் பயிலலாம்.
4. A.I. Bootcamps (ஏ.ஐ. பூட்கேம்ப்கள்):
ஐஐடி மெட்ராஸ், ஐஐடி பாம்பே போன்றவற்றில் குறுகியகாலப் படிப்பாக இவை உள்ளன. ஏற்கெனவே பணியில் இருப்பவர்கள் தங்கள் திறனை மேம்படுத்த இது உதவும்.
5.
Online AI Certification Programs (ஏ.ஐ. சான்றிதழ் படிப்புகள்):
உடாசிட்டி (Udacity), சுயம் பிளஸ் (Swayam Plus), கோர்ஸ்செரா (Coursera) போன்ற தளங்களில் இத்தகைய குறுகிய காலச் சான்றிதழ் படிப்புகள் உள்ளன. தொடக்க நிலையில் இருப்பவர்கள் ஏ.ஐ. பற்றிய அடிப்படை அறிவைப் பெற இத்தகைய இணையதளப் படிப்புகளைப் படிக்கலாம்.
‘ஏ.ஐ. தெரியாதவர்கள், ஏ.ஐ. தெரிந்தவர்களிடம் தங்கள் வேலையை இழப்பார்கள்’ என்று கூறப்படுகிறது. எனவே, பெருகிவரும் ஏ.ஐ. தொடர்பான வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கு இளையோர் தங்களையே தகுதியானவர்களாக மாற்றிக்கொள்ளவேண்டும்.
சிறுவயதில் திருவிழாக் கதைகளை பெற்றோர், உற்றார் கூற உற்றுக் கேட்போம். அதில் பிள்ளை பிடிப்பவர்கள் பற்றிய சுவையான தகவல்கள் உள்ளடக்கமாக இருக்கும். பிள்ளை பிடிப்பவர்கள் நம்மைப் போலவே இருப்பார்கள்; தனியே குழந்தைகளைக் கண்டால் சிரித்துப் பேசி தின்பண்டம் தருவார்கள். தின்பண்டமான அந்த மிட்டாய் அல்லது பிஸ்கெட்டில் மயக்க மருந்து தடவி இருக்குமாம். அதை உட்கொண்ட சிறுவர் அல்லது சிறுமியர் மயங்கி அவர்கள் பின் நடப்பர்களாம். மயக்கம் தெளியும் போது பிள்ளை பிடிப்பவன் அவர்களை நீண்ட தொலைவு அழைத்துச் சென்று விடுவானாம். சில புத்திசாலிக் குழந்தைகள் தப்பி வந்த கதைகளும் உள்ளன.
2026 தமிழ்நாடு சட்டமன்றத்
தேர்தல் திருவிழாவிலும் பிள்ளை பிடிப்பவன் வந்தான். முதலில் பிள்ளைகளை மயக்கிப் பிடித்தான். பிள்ளைகள் வழி பெற்றோரைப் பிடித்தான். அப்பாவிப் பெற்றோரை வைத்து நாட்டையே பிடித்தான்.
ஒரு
கிராமத்தில் சிலை அபிசேகம் செய்ய பால் தேவைப்பட்டது. கோவில் நிர்வாகம் அறிவிப்புச் செய்தது. ஒரு தனி அறையில் பால் சேகரிக்கும் அண்டா வைக்கப்பட்டிருக்கும். அது மூடியுள்ள அண்டா. அதிலுள்ள ஒரு சிறு துவாரம் வழி மக்கள் பால் ஊற்றவேண்டும். மக்கள் வரிசையாக அறைக்குள் சென்று பால் ஊற்றினர். கோவில் நிர்வாகத்தினர் அண்டாவைத் திறந்து பார்த்தனர். அதில் பால் இல்லை. முழுவதும் தண்ணீர் இருந்தது. ‘எல்லாரும் பால் ஊற்றுவார்கள், நாம் அதில் தண்ணீர் ஊற்றினால் யாருக்குத் தெரியப்போகிறது?’ எனக் கிராம மக்கள் அனைவருமே தண்ணீரையே ஊற்றி விட்டார்கள்.
தேர்தல்
களம் 15% வாக்கு, மூன்றாமிடம்
என்ற கணிப்புகளால் நகர்ந்தது. களத்தை மாற்ற வேண்டும். இணைய வழி மறைமுகமாகப் பத்து ஆண்டுகளாகச் செய்த பிரச்சாரத்தை நேரடியாகவே செய்தனர். தேர்தல் களத்தில் சிறுவர்களைத் தேர்தல் பிரச்சாரங்களுக்கு எந்த வகையிலும் பயன்படுத்தக்கூடாது. அது வேட்பாளரின் தகுதி இழப்பிற்கு உள்ளாக்குகிற குற்றம் என்கிறது சட்டம். வேட்பாளரின் தேர்தல் பிரச்சாரக் கடைசி நேரத்தில் ‘அழுது, அடம்பிடித்து எனக்கு வாக்களிக்கச் சொல்லுங்கள்’ என்ற
மூளைச்சலவை வெளியானது.
வெற்றிக்குப் பின்னும் நன்றி என்பதும் தேர்தல் விதிகளை மீறிய செயல்.
பாசக்காரத்
தாத்தா-பாட்டிகள், பெற்றோர் ‘தோற்கப் போகிறதே... நம் ஓர் ஓட்டு என்ன செய்து விடப் போகிறது?’ எனப் பாசம் காட்டினர். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அண்டாவில் பால் ஊற்றிய கதையாக மாறிவிட்டது.
ஒரு
கட்சிக் கொள்கை, கட்சிக் கட்டமைப்பு, மக்கள் சந்திப்பு, மக்களுக்கான போராட்டங்கள், அடிப்படைக் கோட்பாடு,
பிரச்சாரம், வேட்பாளர் தகுதி, அறிமுகம் இல்லாமல் ஸ்மார்ட் போன் வழியே வெற்றிபெற முடியுமா? முடியும் என்பதாக, தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் வழி அறியலாம்.
வாருங்கள்...
தமிழ்நாடு தேர்தல் வெற்றி யின் பத்து ஆண்டுகால திரைமறைவு இணையப் பணிகளைக் காண்போம்; இந்தக் குற்றக் குழுக்களின் இரகசிய வழித்தடம் (Route mofia) குறித்து ஆய்வோம். இணையக் குற்றவாளிகள் முதலில் தங்களது குறி எந்த வயதினர் என முடிவு செய்கிறார்கள்.
முதலில் அவர்களின் விருப்பம் அறிந்துகொள்கிறார்கள்.
அதற்கேற்பப் பதிவுகளை உருவாக்குகிறார்கள். அவர்களை அடிமைப்படுத்துகிறார்கள்.
முதலில்
இவர்களைப் பழக்க ரஜினி, அஜித், சூர்யா என்ற நடிகர்களை எதிரிகளாக்கி இணையத்தில் யுத்தம் பழக்கினர். 30,000 வாட்ஸ்அப் குழுக்கள் இப்பணியைச் செவ்வனே செய்தனர். தினம் 150 பதிவுகள் வழி திசை நடத்தப்பட்டார்கள். இவர்களுக்குச் செய்தித்தாள் வாசிக்கும் பழக்கமோ, தொலைக்காட்சி செய்திகள் பார்க்கும் பழக்கமோ இல்லை என்பதும் கண்கூடு. இக்கட்சியின் நிர்வாகி ஒருவர் எங்கள் பகுதியில் எமக்குத் தெரிந்தவராக உள்ளார். அவருக்கு அவரது வாட்ஸ்அப் குழுவில் வந்த ஒரு செய்தியைக் காட்டினார். அது எடப்பாடி தொகுதியில் நீண்ட விவாதத்திற்குப் பிறகு திருத்தம் செய்யப்பட்டு, நடிகர் கட்சி மற்றும் மாற்று வேட்பாளரின் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது என்ற படப்பதிவு இருந்தது. இவர்களது முழுப்
பிரச்சாரமே இதே இரகமாக, உண்மைக்குப் புறம்பாகக் கட்டமைக்கப்பட்டது என்பது உண்மையானதே.
இவர்கள்
அமைச்சர்கள் முதல் பத்து பேரில் மூவர் ஆர்.எஸ்.எஸ். பயிற்சிப் பட்டறையில் பொய்ப் பிரச்சாரத்தில் மூழ்கிக் கிடந்தவர்கள் என்பதை நாடறியும். 2020, செப்டம்பர் 14-இல் உ.பி.யில்
ஹத்ரஸ் கிராமத்தில் தலித் பெண் ஒருவர் மீது கூட்டுப் பாலியல் வன்கொடுமை நடந்தது. அப்பெண்ணின் நாக்கு அறுபட்டு, முழுமையாகப் பேச முடியாமல் பாதி நாக்கு அறுந்த நிலையில் ஒருவர் பேட்டி எடுத்து வெளியிட்டார்.
பேட்டியில்
அவரது முகம் முழுவதுமாகக் காட்டப்பட்டது. அந்த வீடியோவைத் தங்களுக்குச் சாதகமாக வெட்டி ஒட்டி இருந்தார்கள். “அந்தப் பெண் நன்றாகப் பேசுகிறார். நாக்கு அறுபடவில்லை, வன்புணர்வும் நடக்கவில்லை” என்று
டுவிட்டரில் பேசியவர் இன்றைய தமிழ்நாடு அமைச்சர். 20 ஆண்டுகளாக பா.ச.க.
பொய்ப்பிரச்சாரக் குழுத் தலைவர். மற்றோர் அமைச்சர் தேர்தல் பிரச்சாரத்தில் ஆர்.எஸ். எஸ். கொள்கைப் பற்றை
வெளிப்படுத்திப் பேசுகிறார். அவரும் அமைச்சர். மூன்றாவது அமைச்சர். அவர் பா.ச.க.வின்
தேர்தல் வியூக உண்மைக்குப் புறம்பான புள்ளி விவரக் குழு பொறுப்பாளர்.
அரசியலை
அரசியலாக அணுகாத மாபியா கூட்டம் 6 மையங்கள் வழி 4000-க்கும் மேற்பட்ட இணைய பொய்க்கணக்குகளை உருவாக்கியது. ஆயிரக்கணக்கான இன்ப்ளூயன்சர்கள் எனக் கூலிக்கு மாரடிக்கும் கும்பலைக் களத்தில்
இறக்கிவிட்டார்கள். ஐந்து மாத காலம் ஏழு கோடித் தமிழர்களைக் குறிவைத்த சார்ட் வீடியோக்களை உருவாக்கினார்கள். பத்து இலட்சம் பார்வையாளர்கள் (மில்லியன்) எனக் குறிவைக்கப்பட்டு, உண்மைக்குப் புறம்பான
தகவல்கள் பதியப்பட்டன.
நமது
குழந்தைகள் கையிலிருந்து ஆண்ட்ராய்டு அலைப்பேசி வழி அவர்களது உணர்வுகள், விருப்பம், பயம், பரிதாபம் சென்டினல் டூல் (Sentinel Tool)
வழி படம் பிடிக்கப்பட்டது. அவர்களை ஒருதலைச்சார்பு பிணைப்பால் (Parasocial attachment) கதாநாயகப் பிம்பத்தை மோசடியாகக் குழந்தைகள் மனத்தில் விதைத்தனர். மூளைச்சலவை செய்தனர். ஒவ்வொரு குழந்தைகளின் மனத்திலும் பயத்தைத் திட்டமிட்டு உருவாக்கினர்.
அந்தப் பயத்தின் வழி வீடுகளில் பதற்றமான சூழ்நிலை உருவானது.
உலகில்
எல்லாமே தங்கள் கதாநாயகப் பிம்பத்திற்கு எதிராக நடக்கிறது. அப்படி ஏதாவது நடந்தால், நாம் நம் உயிரைக் கொடுத்து நம் அண்ணனைக் காப்போம் என்று குழந்தைகளின் மனநிலையை மாற்றிவிட்டனர்.
இந்த மாபியா கூட்டத்தின் இணைய ஏமாற்று வேலை (Psychological operation)
உண்மையான தேர்தல் முடிவுகளை மாற்றியுள்ளது. கதாநாயகப் பிம்பம் கொண்டு அமைக்கப்பட்ட தூண்டில் முள் காட்சிகள் தேர்தல் களத்தை மாற்றியுள்ளது. பிள்ளை பிடிப்பவனின் படக்காட்சிகளைக் கட்டமைத்த
புராணக் கதைகளில் வரும் மாயக் குதிரை (Trojan horse) இணைய மென்பொருள் குழந்தைகளைப் போதை ஏற்றியது, தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் மாறியது. தமிழ்நாடு அரசியல் மரபார்ந்த தன் அடிப்படை அருகதையை இழந்துவிட்டது.
எமது
நீலகிரி மாவட்ட நண்பர்
ஒருவர் கூறுகிறார்: “என் குழந்தைகள் இன்ஸ்டா பார்க்கிற அளவிற்கு எங்கள் செல்போன்
டவர்கள் வேலை செய்வதில்லை. ஆகவே, எங்கள் மாவட்டத்தில் எங்கும் ஆளும் கட்சி வெற்றிபெறவில்லை.” ஆம்,
நாமும் தேடிப் பார்த்தோம்... ஏற்காடு, வால்பாறை மற்றும் கொடைக்கானலிலும் ஆளும் கட்சி வெற்றி பெறவில்லை. நம் குழந்தைகளின் மனநிலை மாறி இருக்கிறது. அவர்கள் அலைப்பேசிக்கு அடிமையாக வாழ்கிறார்கள். அவர்கள் எதைப் பார்க்கிறார்கள்? என்பதைக் கண்காணிக்க வேண்டிய
கடமை நம்மைச் சார்ந்ததே. அதைக்
கட்டுப்படுத்த வேண்டிய தார்மிகப் பொறுப்பும் நமக்கு உள்ளது.