ஒருநாள் பேருந்தில் மாலை ஏழு மணியளவில் பயணம் செய்யும்போது, என் அருகிலிருந்த நபர் தன் மனைவியுடன் சத்தமாகச் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அந்த உரையாடலில் அவர் தன் மனைவியுடன், “நான் உன் மகளைக் காலையில் பள்ளியில் விட்டேன். மதியம் என் வேலையாளை அனுப்பி உணவு வாங்கிக் கொடுக்கச் சொன்னேன். மாலையில் அவளைப் பள்ளியிலிருந்து வீட்டில் சேர்த்தேன்” என்று தன்னுடைய வேலையை மட்டும் கணக்குப் போட்டுத் தன் மனைவியைத் திட்டினார்.
இந்த
நிகழ்வு சற்று என் காதுக்குள் சென்று விட்டுச் செல்லவில்லை. இந்த நவீன உலகத்திலும்
பெண்கள் இன்னும் தரக்குறைவாக நடத்தப்படுவது எனக்குக் கவலை அளித்தது, சிந்தனைகளைத் தூண்டியது.
பொதுவாகவே ஆண்கள்தான் வேலைகள் செய்வார்கள், பெண்கள் தகுதியற்றவர்கள், எளிதில் ஏமாந்து
போகக் கூடியவர்கள் போன்ற தவறான கருத்துகளைச் சில புதினங்கள், இலக்கியங்கள் மற்றும்
கதைகள் வழியாக மானுடச் சிந்தனையில் புகுத்திவிட்டார்கள். இதனால் பெண்கள்மீது ஏராளமான
சுமைகள் மறைக்கப்பட்டதாகவே உள்ளன.
தீமைக்குக் காரணமானவர்கள்
யார்?
திருவிவிலியத்தில்
அலகை எளிதில் ஏவாள் என்ற பெண்ணை ஏமாற்றிவிட்டது. அந்தப் பெண்ணால்தான் பாவம் உலகிற்கு
வந்தது. அதிலிருந்து பெண்ணைக் குறைவாகப் பார்க்கக்கூடிய சிந்தனைகள் உருவாயின.
இலக்கியத்தில்
ஈசீயோத் எழுதிய ‘உழைப்பும் ஊழிகளும்’ (work and days)
என்ற நெடும்பாட்டில் பண்டோரா என்ற பெண்மாந்தரைக் கொண்டு வருகிறார். இதில் பண்டோராதான்
முதலில் படைக்கப்பட்ட பெண் என்று கிரேக்கத்தில் நம்பப்படுகிறது. உலகிற்குத் துன்பமெல்லாம்
பண்டோராவினால்தான் வந்தது என்று சாடியைத் திறந்த கதையை ஈசீயோத் எழுகிறார். இதில் தன்
தம்பி பெர்சிஸ் தன்னை ஏமாற்றியதற்குக் காரணமாக இந்தப் பகுதி சொல்லப்படுகிறது. அண்ணனைப்
பழிவாங்குவதற்காகத் தம்பிக்கு மணம் செய்விக்கப்பட்டவள் பண்டோரா. எந்தக் காரணத்தோடும்
திறக்கக்கூடாது என்ற முன்குறிப்போடு, ஓர் அழகான சாடியைப் பரிசாகக் கொடுத்தார் கடவுள்.
ஆசை தாங்காமல் சாடியைத் திறந்து விட்டார் பண்டோரா. அந்தச் சாடியிலிருந்து தீமைகள் புறப்பட்டு
உலகத்தை நிரப்பின. பதறிப்போன பண்டோரா சாடியை அடைத்தபோது அதில் மீதி இருந்தது நம்பிக்கை
மட்டும்தான். அதுவும் அடைபட்டுவிட்டது. இவ்வாறாக, பெண்ணால்தான் தீமை உருவானது என்று
எழுதுகிறார்.
மேற்கூறிய
திருவிவிலியப் பகுதியையும் ‘உழைப்பும் ஊழிகளும்’ என்ற
பாடலையும் பெண்கள் மீது சொல்லப்படுவதை மாற்றுச்சிந்தனையில் பார்க்கவேண்டும். அதை அப்படியே
பொருள் கொண்டால் நாமும் ‘பெண் புத்தி பின் புத்தி’ என்ற
தவறுதலான அடைமொழிக்குள் பெண்களை அடக்கிவிடுவோம். தொடக்கத்தில் சொல்லப்படும் பேருந்து
நிகழ்வில் வரும் நபரும் பெண்களைப் பற்றிய தவறுதலான எண்ணங்களைக் கொண்டிருக்கிறார். அதனால்தான்
அவர் தன்னுடைய வேலையை மட்டும் எண்ணிப் பேசுகிறார். பெண்கள் செய்யும் வேலைகளை அவர் புரிந்துகொள்ளவே
இல்லை. அவர்கள் செய்யும் வேலைகள் மற்றவருக்குத் தெரியாமலே மறைக்கப்பட்ட சுமைகளாவே இருக்கிறது.
பேசுபவர்கள் மட்டும்தான் வேலை செய்யக்கூடியவர்கள் என்ற போலியான சிந்தனைகள் உள்ளத்தில்
தோன்றத் தொடங்குகின்றன. ஆனால், பெண்களின் வாழ்வில் அவர்கள் மறைமுகமாகச் செய்யும் பணிகளை
எண்ணிப் பார்த்தால் அளப்பரியவை! அவர்கள் ஒருபோதும் தங்கள் வேலைகளை வெளியில் சொல்லிக்
காட்டியதும் இல்லை, பேசியதும் இல்லை.
வெளிப்படையாகச் சுமத்தப்பட்ட
சுமைகள்
ஒவ்வொரு
நாளும் என்ன உணவு சமைப்பது, பால் எப்படி வாங்குவது, மளிகைப் பொருள்களின் செலவு, வீட்டு
வாடகை கட்டுவது, மின் கட்டணம் எவ்வளவு வரும், குழந்தைகளின் பள்ளிச் செலவு, மருத்துவச்
செலவு, தண்ணீர் வாங்குவது, இந்த ஆண்டு பண்டிகைக்கு எப்படிச் செலவு செய்வது... என்று
முடிவில்லாமல் நீண்டுகொண்டே செல்லும் பட்டியலை ஒவ்வொரு குடும்பப் பெண்ணும் தன் உள்ளத்தில்
எண்ணிக்கொண்டேயிருப்பார். இந்த நவீன உலகத்தில் குடும்பப் பெண்ணின் நினைவில் வைக்கும்
குடும்பப்பட்டியல் நீண்டுகொண்டேதான் செல்கிறது. ஆனால், அவர்கள் ‘நிறைகுடம் தளும்பாது’ என்ற சொல்லுக்கு இணங்க, வெளியில் தாங்கள் செய்யும் வேலைகளைச்
சொல்லால் அல்ல; உள்ளத்தால் அன்னை மரியாவைப் போன்று சிந்தித்துச் செயல்படுகிறார்கள்.
மனத்திற்குள் மறைக்கப்பட்ட
சுமைகள்
குடும்பத்தில்
ஒரு குழந்தை பிறந்தது முதல் அந்தக் குழந்தையின் அனைத்துப் பொறுப்புகளும் பெண்களின்
மனத்திற்குள் ஓடிக்கொண்டே இருக்கும். குழந்தையின் உடல் நலம் பேணல், தடுப்பூசி மருந்துகள்
சரியாகப் போடுதல், குழந்தையின் உணவு பேணுதல், சரியான பள்ளியைத் தேர்ந்தெடுத்துச் சேர்ப்பது,
குழந்தையின் ஒழுக்கம், செயல்கள், யாருடன் குழந்தை சேருகிறது போன்ற சிந்தனைகள் பெண்ணின்
உள்ளத்தில் ஓடிக்கொண்டேயிருக்கும். குழந்தையின் பள்ளிக் கட்டணத்தின் கடைசி நாள், தேர்வு
நாள், குடும்பத்தில் வயது முதிர்ந்தவர்கள் இருந்தால் அவர்களைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு
ஏற்றபடிச் செயல்படுவது, பெண் பிள்ளை இருந்தால் அவர்களின் மாதவிடாய் நாள்களை நினைவில்
வைத்துக்கொள்வது, கணவரின் எதிர்பார்ப்புகளை அவர் கேட்பதற்கு முன்பே நிறைவேற்றுவது என்று
தங்களின் மனத்திற்குள் பெண்கள் சிந்தித்து, வேலைகளைச் செய்து கொண்டிருப்பார்கள்.
பணிச்சுமையின்
காரணமாக, கணவர்கள் திருமண நாளை மறந்தாலும் பெண்கள் மறக்கக் கூடாது. பெண்கள் வீட்டிலுள்ள
அனைவரின் பிறந்த நாளையும், திருமண நாளையும் நினைவில் வைத்துக்கொண்டு மறவாமல் வாழ்த்துகள்
தெரிவிப்பது, பரிசுப்பொருள்கள் வழங்க இருப்பின் சென்ற ஆண்டு வாங்கிய பரிசுப் பொருள்களை
நினைவில் வைப்பது; அது மட்டுமன்றி, மற்றவர்கள் நமக்கு வாங்கிக் கொடுத்த பொருள்கள்,
பணத் தொகையை நினைவில் வைத்து அதற்கு ஏற்றார் போல் அடுத்தமுறை செயல்படுவது, திருமணம்
மற்றும் மற்றக் காரியங்களுக்கான செய்முறைகளை நினைவில் வைத்துச் செயல்படுவது போன்ற செயல்கள்
பெண்களுக்குத்தான் என்று சமுதாயத்தால் மறைமுகமாகச் சூட்டப்பட்டுள்ளன. பெண்களும் தங்களின்
உள்ளத்தால் இச்செயல்பாடுகளை மறைமுகமாகச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
புரிந்து கொள்ளமுடியாத
சுமைகள்
பெண்கள்
தங்கள் குடும்பத்தைப் பற்றி, பல சுமைகளை எண்ணிக்கொண்டிருக்கும்போதே அவற்றில் உடனடியாகச்
செய்யக்கூடியவை எவை என்றும், அவற்றில் முக்கியமானவை மற்றும் முதன்மையானவை எவை என்றும்
எண்ணிச் செயல்படுவது. வீட்டில் கணவர் செய்ய வேண்டியவை, குழந்தைகள் செய்ய வேண்டியவை,
மாமியார், மாமனார் செய்ய வேண்டியவை, தன் பெற்றோர்களுக்குச் செய்ய வேண்டியவை என்று பெண்கள்,
ஒவ்வொரு நாளும் அறிவுசார் மற்றும் உணர்வுசார் சுமைகளைச் சுமந்து செயல்படுவது. இந்தப்
புரிந்து கொள்ளமுடியாத சுமைகள் எளிதான ஒன்று அல்ல; மனித ஆற்றலை மறைமுகமாக அதிகம் உறிஞ்சும்
தன்மை கொண்டவை. மற்றவர்கள் இந்தச் சுமையைப் பகிர்ந்துகொண்டாலும், திட்டமிடல் சுமையைப்
பொதுவாகப் பகிர்ந்து கொள்வதில்லை.
சுமைகளால் ஏற்படும் தியாகம்
மேற்கண்ட
எல்லாச் செயல்களிலும் ஏதாவது ஒரு குறை ஏற்பட்டால் பெண்களுக்கு மன அழுத்தத்தைத் தருகிறது.
இதனால் மனச்சோர்வு, தூக்கமின்மை, உடல்சோர்வு எனப் பல்வேறு பாதிப்புகளுக்குள்ளாக நேர்கிறது.
வேலைக்குச் செல்லும் பெண்கள் வீட்டு வேலைகள் மற்றும் பணி வேலைகள் என்று இரண்டு சுமைகள்
இருப்பதால் வேலையில் உயர்வு ஏற்பட்டாலும், ஏற்றுக்கொள்ள முடியாமல் தியாகம் செய்யும்
நிலை ஏற்படுகிறது.
பெண்ணுக்குள் மறைந்திருக்கும்
சக்தி
ஒவ்வொரு
பெண்ணிடமும் தாய்மை என்ற வல்லமையுள்ள சக்தி பொதிந்துள்ளது. அதனால் மேற்கண்ட நான்கு
வகையான சுமைகளை ஒவ்வோர் ஆணும் அறிந்து, அதை அவர்களுடன் உணர்வு சார்ந்த முறையிலும்,
அறிவுசார்ந்த முறையிலும் பகிர்ந்துகொள்வது கடமையாகும். அப்படிச் செயல்படும்போது பெண்களுக்குள்
மறைந்திருக்கும் தெய்வீகத்தன்மை வெளிப்படும். இதனால் குடும்பமும் மகிழ்ச்சியில் நிலைத்திருக்கும்.
ஒவ்வொரு
சொல்லுக்கும் எடையும் நிறையும் உண்டு. எல்லாச் சொல்லுக்கும் பொருள்கள் உள்ளன. தொல்காப்பியத்தில்
‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ என்று எழுதுகிறார். எனவே, குடும்பத்தில்
நல்ல சொற்களையும் செயல்களையும் பயன்படுத்தி பெண்களிடம் மறைந்துள்ள சுமைகளை அகற்றுவோம்.
தெய்வீகத்தைக் கொண்டு வருவோம்.
“பெண்களின் மனித மாண்பும் உரிமைகளும் உலகளாவிய மனித உரிமைகளின் ஒரு பிரிக்க முடியாத பகுதியாகும்” எனப் பெண்களின் மாண்பு குறித்து ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது. படைப்புகளிலேயே பெண்ணும் ஆணும் மிக உயரிய படைப்பாகக் கருதப்படுகிறார்கள். மனிதர்கள் உன்னதமானவர்கள் என்பது சமூகத்தின் உன்னதச் சிந்தனை. அவர்கள் மனித மாண்புடன் நடத்தப்படவேண்டும் என்பது ஒவ்வொரு மதத்தின் அடிப்படை நோக்கமாகவும், மனித உரிமைகளின் முக்கிய அம்சமாகவும் உள்ளது. மனித மாண்பு என்பது இறைவன் உருவிலும், சாயலிலும் படைத்ததில் வேரூன்றியுள்ளது எனக் கத்தோலிக்கத் திரு அவையின் மறைக்கல்வி சுட்டிக்காட்டுகின்றது. “மனித மாண்பு காக்கப்படும் இடத்தில்தான் உண்மையான சுதந்திரம் வாழ்கிறது” என்கிறார் மகாத்மா காந்தி. மனித மாண்பு என்பது, ஒவ்வொரு மனிதரும் இயல்பாகவே மதிப்பும் மரியாதையும் பெறவேண்டியவர் என்பதைக் குறிக்கும் ஓர் அடிப்படைக் கருத்தாகும். ஒருவரின் இனம், மதம், பாலினம், சமூக நிலை, பொருளாதார நிலை போன்ற எந்த வேறுபாடுகளும் இல்லாமல், எல்லா மனிதர்களும் சமமாக மதிக்கப்படவேண்டும் என்பதே மனித மாண்பின் மையம்.
ஆண்களை
மனித இனத்தின் அடிப்படையாக (இயல்பாக) கருதுவது, மனித சமூகக் கட்டமைப்பின் வெளிப்பாடு
எனப் புகழ்பெற்ற பெண் எழுத்தாளரான கரோலைன் கிரியாதோ பெரேஸ், ‘invisible women’ என்னும் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பெண்களைச் சமமாக நடத்தாமையே இந்த வேறுபாட்டிற்குக் காரணம்!
பெண்ணிய
மாண்பும் மதிப்பும் “பெண்களை மதிப்பதும் அவர்களைக் கண்ணியத்துடன் நடத்துவதும் அல்லது அவர்களுடன் ‘மரியாதையாக
நடப்பது’ அல்லது அவர்களுக்கு ‘வழிவிடுவது’ போன்றது மட்டுமல்ல; அது பெண்களைச் சமமான, சுதந்திரமான மனிதர்களாக
நாம் பார்க்கும் விதத்திலும் பழகும் விதத்திலும் ஏற்படும் ஓர் அடிப்படை மாற்றமாகும்.
பெண்களை வெறும் ‘தாய்’ அல்லது ‘சகோதரி’ போன்ற உறவுமுறைப் பிம்பங்களுக்குள் மட்டும் அடைத்துப் பார்க்காமல்,
அவர்களுக்கென்று தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளும், முடிவெடுக்கும் அதிகாரமும் கொண்ட
தனிமனிதர்களாகப் பார்ப்பதே உண்மையான கண்ணியமாகும்.”
மனித மாண்பு ஆண்களைக்
குறிக்கும் அடைமொழியா?
இன்றைய
காலச்சூழலில் மனித மாண்பு ஆண்களின் மதிப்பையும் சுதந்திரத்தையும் குறிக்கும் கருத்தாகச்
செயல்படுவதைக் காண முடிகிறது. மாறாக, அது பெண்களையும் உள்ளடக்கியது என்ற புரிதல் காலத்தின்
அவசியமாகிறது. “பெண்களின் சுயமரியாதைதான் சமூக விடுதலையின் அடித்தளம்” என அன்னை சாவித்ரிபாய் பூலே கூறுகிறார். ஓர் ஆணுக்கு இந்தச்
சமூகம் வழங்கும் மதிப்பும் மாண்பும் பெண்களுக்கும் சமமாக வழங்கப்படவேண்டும் என்பதே
மனித மாண்பும் நீதியும் சமத்துவமுமாகும். பெண்களின் மாண்பும் மதிப்பும் குறித்து ஆராய
வேண்டுமானால் அவர்களின் வீடுகளில் தொடங்கி அவர்களின் தலைமைத்துவம் குறித்து ஆராய்வது
நிறைவுள்ளதாக இருக்கும். சில கசப்பான உண்மைகளை அழகான மொழியில் தொகுத்தால் புரிதலுக்கு
உதவும்.
பெண்கள்
இச்சமூகத்தில் அடக்கமாக, தாழ்ச்சியுடன் ஒழுக்கமாக இருக்கவேண்டும் என வரையறை அளித்த
சமூகம், அதில் ஆண்களும் பின்பற்ற வேண்டும் என்பதைச் சொல்லித் தரவில்லையோ என்ற நிலைப்பாடு
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைப் பார்க்கும்போது ஏற்படுகிறது. ஒரு பெண்ணின் உடையும் நடையும் செயல்பாடுகளும் அவளுடைய
மாண்பைத் தீர்மானிக்கும் அளவுகோலாக ஒருபோதும் இருக்கக்கூடாது. மாறாக, ஒழுக்கம், கற்பு
என்பது இருபாலாருக்குமானது என்று முழங்கிய பகுத்தறிவு பகலவன் என்றழைக்கப்படும் தந்தை
பெரியாரின் கருத்துகளைப்போல இருக்க வேண்டும்.
தேவையற்ற சரிபாதியா பெண்கள்?
“ஆணும்
பெண்ணும் ஒருவருக்கொருவர் துணையாக இருப்பவர்கள்” சமுதாயம்
சிறப்பாக இயங்குவது அவ்விருவரின் பங்களிப்பைப் பொறுத்தே அமைகிறது. இருப்பினும், இந்தியாவின்
பல பகுதிகளில் பெண்கள் இன்னும் இரண்டாம் நிலைக் குடிமக்களாக, வேண்டாதவர்களாகவே நடத்தப்படுகிறார்கள்.
இந்தியச் சமூகத்தின் மிகவும் வேதனைக்குரிய, மிகக் குறைவாக ஆராயப்பட்ட அம்சங்களில் ஒன்றாக
இந்த முரண்பாடு நீடிக்கிறது. சில நேரங்களில் ஆண் வாரிசு இல்லாத குறையைத் தீர்க்க பெண்
குழந்தைகள் வரவேற்கப்பட்டாலும், அவர்கள் சமமாக நடத்தப்படுவதோ அல்லது கொண்டாடப்படுவதோ
அரிது.
21-ஆம்
நூற்றாண்டிலும் இந்தியாவில் கருவிலேயே பாலினம் கண்டறிவதைத் தடை செய்யும் சட்டம் (PCPNDT Act, 1994) நடைமுறையில் உள்ளது ஓர் ஆகச்சிறந்த
எடுத்துக்காட்டு. உசிலம்பட்டியில் கொடுமைகள் குறைந்தாலும் “பெண்களைத் தெய்வங்களாகப்
போற்றிப் பெருமைப்படும் இந்திய நாட்டில், ஒரு பெண் குழந்தையின் பிறப்பு இன்றும் குடும்பங்களுக்குள்
ஒரு விலக்கப்பட்ட விசயமாகவே இருந்து வருகிறது.
இந்தியாவின்
ஒரு குடிமகளாகவும், பாலினச் சமத்துவத்தை ஆழமாக மதிக்கின்ற பெண்களுக்கு, இந்த முரண்பாடு
மிகுந்த மனவேதனையையும் அலைக்கழிப்பையும் தரும் ஒன்றாகும். இது நேர்மையாக எதிர்கொள்ளப்பட
வேண்டிய ஒரு சமூக அநீதி. பெண்களின் உள்ளார்ந்த
கண்ணியத்தையும் ஆற்றலையும் முழுமையாக உள்வாங்கிய சமூகமாக இல்லாமல் தொடர்வது சமூகத்தின்
வளர்ச்சிக்குத் தடை எனலாம். பெண்கள் விடுதலை பெறவேண்டும், சுய சார்பு பெறவேண்டும் என்பதற்காகத்
தன் வாழ்நாளை அர்ப்பணித்து, அதற்காக அவர்பட்ட சவால்களைப் பொருட்படுத்தாமல் பெண் கல்வியை
மேம்படுத்த பெண்களுக்கான முதல் கல்விக்கூடத்தை நிறுவியவர் சாவித்ரிபாய் பூலே.
ஆண்களுக்கும்
பெண்களுக்கும் சம ஊதியம், அரசியல் மற்றும் நிர்வாகத் துறைகளில் பெண்களின் அதிகப் பங்கு,
கல்வி மற்றும் சுகாதாரத்தில் சமவாய்ப்பு, பெண்களுக்கு வலுவான சட்டப் பாதுகாப்பு போன்ற
காரணங்களால் பல ஆண்டுகளாக, World
Economic Forum வெளியிடும்
Global Gender Gap Report-இன் ஐஸ்லாந்து பாலினச் சமத்துவத்தில்
முதலிடத்தைப் பெற்று வருகிறது என்பது மகிழ்வு தரும் ஒன்றே!
கலாச்சார முரண்பாடும்
உள்வாங்கப்பட்ட அடிமைத்தனமும்
இந்தியாவில்
சாதியப் பாகுபாட்டைப் போலவே பாலினச் சமத்துவமின்மையும் ஆழமாக வேரூன்றியுள்ளது. பெண்கள்
இன்றும் சுயசார்பு கொண்ட மனிதர்களாகக் கருதப்படாமல், ஒருவரைச் சார்ந்திருப்பவர்களாகவே
பார்க்கப்படுகிறார்கள். இந்த அடிமைத்தனம் வெளியிலிருந்து திணிக்கப்படுவது மட்டுமல்லாமல்,
பெண்கள் மற்றும் ஆண்களாலேயே தங்களுக்குள் உள்வாங்கப்படுகிறது. இதன் விளைவாக, பல பெண்கள்
அறியாமலேயே ஆண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் ஓர் அமைப்பைத் தாங்கிப் பிடிக்கிறார்கள்.
பெரிய பொறுப்புகளில் அமர்ந்திருக்கும் பெண்கள் கூட மன ரீதியாக, பொருளாதார ரீதியாகச்
சார்ந்திருக்கும் கட்டாயத்திலும் உள்ளனர்.
பெண் சகிப்புத்தன்மை
குடும்பங்களில்
இன்றும் ஆண் பிள்ளைகளுக்கான ஏக்கமே எதிரொலிக்கிறது. ஓர் ஆண்பிள்ளை ‘இளவரசனாக’ கொண்டாடப்படும் அதேவேளையில், பெண் குழந்தையின் பிறப்பு மௌனமாகச் சகித்துக் கொள்ளப்படுகிறது. பிறப்பால்,
கல்வியால் மற்றும் சமூக அந்தஸ்தால் சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற எளிய விருப்பம் கூட
இன்றும் பெண்களுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது.
அண்மையில்
ஒரு குடும்ப நிகழ்வில், பையன் பிறந்ததை உறவினர்கள் கொண்டாடிய விதம் என்னை வியப்பில்
ஆழ்த்தியது. இரண்டு பெண் குழந்தைகளுக்குத் தாயான ஓர் உறவினர், “கடவுள் என் வேண்டுதலுக்குச்
செவிசாய்த்துவிட்டார், இனி இக்குடும்பத்தில் பல ஆண் பிள்ளைகள் பிறப்பார்கள்” என்று கூச்சலிட்டபோது, அவரது 11 வயது மகள் “அம்மா, உங்களுக்குப்
பெண் குழந்தைகளைப் பிடிக்காதா?” என்று கேட்டது நம் சமூகத்தின் முற்போக்குத்தனத்தை வெளிப்படுத்தியது.
ஆண்களுக்கு இணையாகப் பெண்கள் எல்லாத் துறைகளிலும் நிலைகளிலும் முன்னேறி வந்து விட்டாலும்
ஆண் குழந்தை மேல் உள்ள மோகம் இன்னும் குறையாதது வியப்பே.
2016-தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க. 136 தொகுதிகளைத் தனித்தே வென்றது. அ.தி.மு.க.வை விட ஒரு விழுக்காட்டிற்கும் குறைவான வாக்குகளைத் தி.மு.க. கூட்டணி பெற்றது. தி.மு.க. கூட்டணி 98 தொகுதிகளைப் பெற்று எதிர்க்கட்சியானது. 2021 - தேர்தலில் தி.மு.க. கூட்டணி 159 இடங்களைப் பிடித்து, ஆட்சிப் பீடம் ஏறியது. அ.தி.மு.க. 75 தொகுதிகளை எடுத்தது. நான்கு விழுக்காடு வாக்கு வித்தியாசமே ஆட்சி மாற்றம் ஏற்பட அடிப்படைக் காரணமானது. வாக்கு அரசியலில் ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது. வாக்குகளைக் கோர்க்க ஒவ்வொரு சிறிய கட்சியின் வாக்கும் முக்கியமானது. அதற்குத் தேர்தல் காலக் கூட்டணிகள் காலத்தே அவசியமானது.
1967 முதலே கூட்டணி
அமைப்பது, வெற்றி காண்பது தி.மு.க.வின் தேர்தல் யுக்தி. தமிழ்நாடு முதல்வர் கூட்டணிக் கலையில் வித்தகம் பெற்றவர் என அரசியல் விமர்சகர்கள்
சொல்கிறார்கள். தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவருக்கு, கூட்டணிக் கட்சிகளுக்கு ‘சீட்’ இறுக்கிப் பிடிப்பதில் வல்லவர் என்ற பெயரும் உண்டு. வெவ்வேறு கட்சிகள், வெவ்வேறு கொள்கைகள் என்றாலும், அதிக இடங்கள், அதிக வெற்றி மட்டுமே கட்சிகளின் இலக்கு.
2026 - தமிழ்நாடு தேர்தல்
கூட்டணியில் வலதுசாரி, இடதுசாரி, மையம் என்று பிரிந்து இருக்கிறது. தி.மு.க.
தலைமையில் உள்ள இடதுசாரிக் கூட்டணி சுதந்திரம், சகோதரத்துவம், சமத்துவம், மனித உரிமைகள், வளர்ச்சி, முன்னேற்றம் அனைத்தும் அனைவருக்கும் எனக் களம் காண்கிறது. ‘இந்தியா’ கூட்டணி என்பதைவிட ‘மதச்சார்பற்ற கூட்டணி’ எனத் தன்னைத்தானே பிரகடனம் செய்கிறது. மாநில மற்றும் மனித உரிமைகளை நசுக்குகிற, ஒன்றிய பா.ச.க.
அரசைக் கண்டிக்கிறது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை
என்.டி.ஏ. கூட்டணி எதிர்
தமிழ்நாடு எனத் தி.மு.க.
கட்டமைக்கிறது. தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற கூட்டணி மாநிலச் சுயாட்சி, மாநில உரிமைகள், தேசிய இனங்களின் சுய நிர்ணயம், அவர்களுக்கான சம உரிமை, சம
வாய்ப்பு, அவர்களின் மொழி, கலாச்சார, பண்பாடு காப்பு என உரத்தக் குரல்
கொடுக்கிறது. இனவாரி, மொழிவாரி, மதவாரி சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு, அடிப்படை உரிமை, வாழ்வுரிமை என்பதில் சமூகநீதி பேசுகிறது; சமத்துவம் போதிக்கிறது.
தமிழ்நாட்டில்
என்.டி.ஏ. கூட்டணி
அ.தி.மு.க.
தலைமையில் அமைந்ததாக வெளித்தோற்றம் உள்ளது. என்.டி.ஏ. கூட்டணியை
இயக்குவது அமித்ஷா. அவரை இயக்குவது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு என்பதில் இரு வேறு கருத்துகள் இல்லை. இவர்கள் வலதுசாரிச் சித்தாந்தம் கொண்டவர்கள். அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் எந்த இழிநிலைக்கும் இறங்குபவர்கள். மனுவாதிகள். மனுதர்மப்படி சமூக நிலைகளைத் தூக்கிப் பிடிப்பவர்கள். தேசியவாதம் பேசுபவர்கள். பழமை, பாரம்பரியம் என்பதில் தங்கள் உயர் நிலையை விட்டு இறங்காதவர்கள். முதலாளித்துவச் சிந்தனையில் தம் பாசிசக் கொள்கைகளை வடிவு
செய்பவர்கள். தம் அனைத்துச் செயல் திட்டங்களையும் பணிகளையும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடம் இருந்து பெறுபவர்கள். அம்பேத்கர் உருவாக்கிய இந்திய அரசமைப்புச் சட்டத்தை நீர்த்துப் போக என்றும் துடிப்பவர்கள். இவர்களோடு இந்த இந்துத்துவா என்.டி.ஏ.வோடு
தமிழ்நாட்டு மக்கள் எதிர் நிற்பதே 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களமாகும். இதை தமிழ்நாடு முதல்வர் என். டி.ஏ. எதிர்
தமிழ்நாடு என உருவாக்கம் தருகிறார்.
பா.ச.க.வோடு
தமிழ்நாட்டில் கூட்டணி சேரும் எந்த அரசியல் கட்சியும் தோற்றுப் போகும் என்பது தமிழ்நாடு அரசியலின் பாலபாடம். தமிழ்நாடு தேர்தல் களம் வித்தியாசமானது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்குப் புரியாத புதிரானது.
தமிழகத்
தேர்தல் களத்தில் பரபரப்பாகப் பேசப்படும் மூன்றாவது அணி மூன்று ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாடு தேர்தல் கூட்டணி குறித்து ஒரு கவர்ச்சி சலுகை கொடுத்தது. அது ‘ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு’ என்பதே. அடிப்படையில் அது ஆட்சி அதிகாரம் என்பதைப் பொதுமக்களுக்கு, விளிம்புநிலை மக்களுக்குச் சேவை என்பதைப் புறந்தள்ளும் அறமற்ற சொல்லாடல் ஆகும். இந்த மாய வலையில் எந்த அரசியல் கட்சியும் சிக்காமல், மாற்று வழியிலேயே சிந்தனை செய்தன.
தமிழ்நாட்டின்
இரு துருவ அரசியலில், இரு திராவிடக் கட்சிகளிடம் தங்கள் அதிகத் தொகுதி வேண்டும்
பேர வலிமையை இதைக் கொண்டே அதிகமாக்கினர். இது இரு கூட்டணிகளிலும் கூட்டணி வாக்குப் பரிமாற்றத்தில், அடிமட்டத் தொண்டர்கள் இணைந்து செய்யும் தேர்தல் சூழலைச் சுணக்கமாக்கும் என்பதை உணர மறுக்கிறார்கள். எந்த அரசியல் கட்சியும் தன் கட்டமைப்பை உருவாக்காமல், அடிமட்டத்தில் எந்தவொரு மக்கள் சேவையும் செய்யாமல் பெரிய கட்சிகளின் முதுகில் ஏறிச் சவாரி செய்கிற நிலை தமிழ்நாட்டு அரசியலின் அசிங்கம்.
தி.மு.க. தலைமையில்
உள்ள மதச்சார்பற்றக் கூட்டணி தலித் மக்கள் மற்றும் சிறுபான்மை மக்களின் ஆதரவைப் பெற்றுள்ளது. கடந்த இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களிலும், இரண்டாவது முறையாகச் சட்டமன்றத் தேர்தல்களிலும், சிறுபான்மையினர் வாக்குகளை நம்பியே களம் காண்கிறது. 2024-நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. சிறுபான்மையினர் நலன் என்பதில்
பா.ச.க.வோடு
கூட்டணி இல்லை என்றது. ‘எப்பொழுதும் கூட்டணி இல்லை’ எனவும் வீராப்புப் பேசியது. அழுத்தங்கள் காரணமாக மீண்டும் பா.ச.க.வோடு ஒட்டிக் கொண்டது.
செல்வி.
ஜெயலலிதா காலந்தொட்டு அ.தி.மு.க. மென்மையான போக்கு
கொண்ட இந்துத்துவா கட்சி என்பதால் அவர்கள் சிறுபான்மை மக்கள் குறித்து கவலை கொள்வதில்லை. சிறுபான்மை வாக்குகள் குறித்த அ.தி.மு.க.வின் அக்கறையின்மை
அவர்களின் தொடர்
தோல்விகளுக்குக் காரணம் என்ற உண்மையை என்றும் உணர மறுக்கிறார்கள். திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்பை மதிக்கச் சொல்லும் மாண்பு கொண்டவர்கள். 2026 - ஒன்றிய வரவு-செலவு திட்டத்தில் தமிழ்நாட்டில் தேர்தல் காலக் கட்டாய நிலையிலும் நிதி ஒதுக்காத பா.ச.க.வுக்கு அ.தி.மு.க. பாராட்டுப் பத்திரம்
வாசிக்கிறது. அ.தி.மு.க. தன் கூட்டணியால்
வென்று விடுவோம் எனத் தப்புக் கணக்குப் போடுகிறது.
தமிழ்நாட்டுத்
தேர்தல் களத்தில் அரசியல் கட்சிகளின் கூட்டணி எனும் ஆடுபுலி ஆட்டத்தால் மக்கள் வியப்பு அடைகிறார்கள். மனத்தில் ஆச்சரியங்களை மட்டுமல்ல, ‘இவர்கள் ஏன் இவ்வளவு அசிங்கமாக இருக்கிறார்கள்?’ எனவும் ஒருசில
அரசியல் கட்சிகளை வெறுக்கவும் செய்கிறார்கள். தமிழ்நாட்டில் லொடுக்குப் பாண்டி உள்பட 65 சிறு
உதிரி, சாதி லெட்டர் பேடு கட்சிகளும்
எதையாவது செய்து, எப்படியாவது சட்டமன்றத்தில் நுழைந்து விடவேண்டும் என்ற ஆசை அருவருப்பான கூட்டணி அமைப்பு அரசியலாக அமைகிறது. வருங்காலங்களில், கூட்டணித் தொகுதி பங்கீடுகள், தொகுதிகளை அடையாளம் காணுதல் போன்ற பரபரப்புச் செய்திகளுக்குப் பஞ்சம் இல்லாமல் போகலாம். தொலைக்காட்சிகள் நொடிக்கு நொடி பரபரப்பு ஊட்டுவதும் நடக்கும். கூட்டணிப் பேச்சு வார்த்தைகளில் கட்சிகளின் வாக்கு விழுக்காடுகள், கட்சிகளின் வெகுசன ஆதரவு, கட்சித் தலைவர்களின் புகழ் முகங்கள், ஊடக வெளிச்சம் என்பது கருத்தில் கொள்ளப்படும். அடாவடி அரசியல்வாதிகள் அடையாளம் காணப்படுவார்கள். மக்கள் நலனே முக்கியம் எனக் கருதாத அரசியல் கட்சிகள் கூட்டணிக்கு மட்டுமல்ல, அரசியலில் இருந்தே புறந்தள்ளப்பட வேண்டியவர்கள்.
அவர்களைப்
பொதுமக்கள் அடையாளம் காண்பர் என்பதே முற்றிலும் தெளிவான அரசியல் அறமாகும்.
1985-ஆம் ஆண்டு சூலை மாதத்தின் ஒரு நாள்! பிஜாய், பின்னுமோள், பிண்டு எம்மானுவேல் எனும் பெயர் கொண்ட பள்ளி மாணவியர் மூவர் கேரளத்தின் பள்ளியொன்றில் படித்து வந்த நிலையில், ஒருநாள் இம்மூவரும் பள்ளியிலிருந்து வெளியேற்றப்படுகின்றனர். ஏன் தெரியுமா? இம்மாணவியர் ‘யெகோவா’ சபையைச் சார்ந்தவர்கள்! பள்ளியில் நாள்தோறும் நடைபெறும் காலை கூடுகையின்போது (assembly) பாடப்பெறும் தேசிய கீதம் நிகழ்வில், அனைத்து மாணவியரும் தேசிய கீதத்தினை இணைந்து பாடவேண்டும். மேலே குறிப்பிடப்பட்ட மூன்று மாணவியரும் கூடுகையில் கலந்து கொண்டனர். ஆனால், தேசிய கீதத்தை வாய்திறந்து பாடவில்லை. காரணம்? அவர்களின் சமய நம்பிக்கை அவர்களை அனுமதிக்கவில்லை என்பதால் இம்மாணவிகள் பாடவில்லை. வாய் திறந்து பாடவில்லையே தவிர, வேறு எந்தவித அவமரியாதையும் செய்யவில்லை. அமைதியான கூடுகைக்கு வேறு எவ்வித இடர்ப்பாடும் காட்டவில்லை.
கேரள
மாநில அரசின் அமைச்சர் ஒருவர் எழுப்பிய பிரச்சினை காரணமாக, தாக்குப்பிடிக்க இயலாத பள்ளி நிர்வாகம் இம்மூவரையும்
வெளியேற்றியது. கேரள உயர் நீதிமன்றம் பள்ளி மாணவியர்மீது எடுக்கப்பெற்ற நடவடிக்கையைச் ‘சரி’ என்று தீர்ப்புரைக்க, வழக்கு உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றது. உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றத் தீர்ப்பைத் தள்ளுபடி செய்தது.
உச்ச
நீதிமன்றத்தின் அன்றைய நீதியரசர் சின்னப்ப ரெட்டியார் அவர்கள் அளித்த தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புடையது: “இம்மாணவியர் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டமை, இந்திய அரசமைப்பு உரிமைச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளான பேச்சுரிமைக்கும் மதச் சுதந்திரத்திற்கும் எதிரானது; பள்ளியில் தேசிய கீதம் பாடப்பட்டபோது, இம்மாணவியர் எழுந்து நின்று உரிய மரியாதை செய்தனர். அனைத்து மாணவியரும் பாடிய நிலையில், இம்மூன்று மாணவியரும் பாடவில்லை என்பதாலேயே, தேசிய கீதத்தை அவமதித்தனர் என்று குற்றம் சாட்டுவது தவறு. மரியாதையோடு எழுந்து நிற்பது; ஆனால், இசைந்து பாட மறுத்தல் என்பது எவ்வகைச் சட்டத்தையும் மீறுதல் அல்ல”
(‘தி இந்து’,
பிப்ரவரி 13, 2026).
இந்து
தேசியத்தை வேதமயமாக்க முயன்று வரும் இந்து தேசியர்கள், ‘வந்தே மாதரம்’ எனும் மந்திர கீதம் தோன்றிய 150 ஆண்டு நிறைவை நாடாளுமன்றத்தில் நெடிய விவாதப்பொருளாய் மாற்றியமையை அறிவோம்.
‘வந்தே மாதரம்’ என்ற முழக்கத்தை எவரும் எதிர்க்கவில்லை. ‘வந்தே மாதரம்’ என்ற பாடல் வங்காளத்தில் பக்கிம் சந்திர சட்டர்ஜி அவர்களால் எழுதப்பட்ட ஒன்று. இவ்வாசிரியர் பின்னாளில் எழுதிய ‘ஆனந்த மடம்’ என்ற புதினத்தில் இதன் நீட்சியாகச் சேர்க்கப்பட்ட பகுதிகளில் இந்தியா எனும் நிலப்பரப்பை, துர்க்கையாகவும் இலட்சுமியாகவும் சரஸ்வதியாகவும் பார்க்கச் செய்கிறார். தாய் நாடாம் (Mother Land) இந்தியாவைத்
துர்க்கையாகவும், பத்து வகை ஆயுதங்களைத் தரித்தவளாகவும் காட்டுகிறார்.
இந்தியா
எனும் தாய்நாட்டை வணங்குவது வேறு; இந்தியா எனும் தாய்நாட்டைத் துர்க்கையாகவும் சரஸ்வதியாகவும் கருதி வணங்குதல் வேறு. ஆனால், வணங்க வேண்டுமென்பது குடிமக்களின் மதச்சுதந்திரத்தின் மீது நடத்தப்பெறும் வன்முறை இல்லையா? இந்து மதவாதிகள் ஏற்றுக்கொண்ட இந்து இராஷ்டிரத்தில் இது சாத்தியமாகலாம். சமயச் சார்பற்ற நாட்டில் பல்வேறு நம்பிக்கைகளைக் காப்பாற்றி வரும் ஒரு நாட்டில் இது எப்படிச் சாத்தியம்?
‘வந்தே மாதரம்’ எனும் பாடலின் முதல் இரண்டு வரிகளைப் பாடுவதில் எவருக்கும் தயக்கமில்லை. 1937-இல் கொல்கத்தாவில் கூடிய காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் இவ்விரு வரிகளையும் பாடவேண்டும் என்ற தீர்மானத்தை டாக்டர் இராஜேந்திர பிரசாத் அவர்கள் முன்மொழிய, வல்லபாய் படேல் வழிமொழிய, அத்தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவ்விரு வரிகளைத் தாண்டி, ஏனைய வரிகளை எல்லாரையும் ஏற்றுக்கொள்ள வற்புறுத்துவது மதம் சார்ந்தோரின் உணர்வுகளைச் சிறுமைப்படுத்தவே செய்யும் என்று நம்பிய அரசமைப்பு அவை முழுப்பாடலைப் பாட வேண்டும் என்பதை நிராகரித்தது.
இந்தியச்
சனநாயகம் காக்க உருவான இந்திய அரசமைப்புச் சட்டம், இரு நாட்டுக் கோரிக்கைகள் வலுவாக உருப்பெற்றிருந்த காலத்தும்கூட இசுலாமியர்களின் நம்பிக்கையை அங்கீகரிக்கும் வகையில் இம்முடிவை எடுத்தது. பல்சமய நம்பிக்கைகளைக் காப்பது சமயச் சார்பின்மையின் உயிராக இருக்கையில், தேசியத் தலைவர்களின் இம்முடிவை இசுலாமியர்களைத் திருப்தி செய்யும் (Appeasement) போக்கு
எனக் குற்றம் சுமத்தினர். இன்றும் ‘வந்தே மாதரம்’ எனும் பாடலின் முழு ஆறு வரிகள், அனைத்து அரசு நிகழ்வுகளிலும் குடியரசுத் தலைவர் கலந்துகொள்ளும் நிகழ்வுகளிலும் முழுமையாகப் பாடப்பெற வேண்டுமாம்! இப்பாடல் பாடப்பெறுகையில் அனைவரும் எழுந்து நிற்க வேண்டுமாம்! பள்ளிகளில் காலை கூடுகை இக்கீதத்தில்தான் தொடங்க வேண்டுமாம்! இந்திய அரசமைப்பு ஒதுக்கிய இந்த நான்கு வரிகள், இக்கீதத்தில் கட்டாயம்
இடம்பெற வேண்டுமாம்! துர்க்கை ‘ஆயுதம் தாங்கிய துர்’கையின் ஆசியைப் போற்றலும், இலட்சுமியின் ஆசிர்வாதத்தையும், சரஸ்வதி தரும் அறிவையும் போற்றும்’
இவ்வரிகளை அனைவரும் அனைத்து நிகழ்வுகளிலும் பாடவேண்டுமாம்!
ஒரு
சனநாயகக் குடியரசு, அதன் குடிமக்களை ஒரு சமயம் சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்க கட்டாயப்படுத்த முடியுமா? ஒரு சமயம் சார்ந்த பாடல் ஒன்றினை ‘தேசியக் கீதம்’ என அறிவித்து, அப்பாடலைக்
குடிமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து, மறுக்காமல் பாடவேண்டும் என்று வற்புறுத்துவதும், பாட மறுப்பது தேசத்துரோகம் என்று பழிப்பதும் அல்லது பாடுவதும்தான் தேசப்பற்று என்று முத்திரை குத்துவதும் என்ன நியாயம்?
‘வந்தே மாதரம்’ என்ற பாடல் தோன்றிய சூழமைவு மதிக்கப்பெறவேண்டும்
என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இப்பாடலின் முதல் இரண்டு வரிகள் (Stanzas) காலனி
ஆதிக்கத்தை எதிர்க்கும் உணர்ச்சியைத் தூண்ட எழுதப்பெற்றவை. விடுதலைப் போராட்டக் களத்தில், அரசியல் கூட்டங்களில், சிறைச்சாலைகளில் இந்துகளும் இசுலாமியரும் இணைந்து பாடியதுண்டு. விரும்பி ஏற்றுப் பாடிய காலம்
இருந்தது. இந்திய நாட்டின் தேசியத் தலைவர்கள் பேசிய தேசியத்துள் அனைவரையும் உள்ளிழுக்கும் போக்கு மலிந்திருந்தது. இந்திய அரசமைப்பின் முன்னோடிகள் அனைவரும் இந்திய தேசியத்தின் ஆதரவாளர்களே.
இந்திய
தேசிய எழுச்சியில், ‘வலதுசாரித்தனத்தை’ உள்வாங்கியவர்கள்
இருந்தனர். அரசியல் நிர்ணய சபையின் தலைவராக இருந்த டாக்டர் இராஜேந்திர பிரசாத், ‘இரும்பு மனிதர்’ என்று அழைக்கப்பட்ட வல்லபாய் பட்டேல் போன்றோரும், ஏன் காந்தியடிகளும்கூட இந்து மதநெறிகளை மறந்தவர்களில்லை. அரசியல் நிர்ணய சபையில் ‘வந்தே மாதரம்’ பற்றிய விவாதம் நிகழ்ந்தபோது, இவர்களில் எவருமே இப்பாடலின் அனைத்து வரிகளும் பாடப்பெறவேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கவில்லை என்பதுதான் உண்மை.
நாட்டுப்பற்றின்
வெளிப்பாடு என்பது தேசியக் கீதத்தில்தான் இருக்கிறது என்று ஏற்றுக்கொள்வது அறிவீனம். தேசம், தேசியம், தேசப்பற்று என்ற பதங்கள் மூலம் வளர்க்கப்பெறும் நாட்டுப்பற்று உண்மையுள் அடங்கிய ஒன்றல்ல. இந்நாட்டில் அந்நியருக்கு எதிராக நடத்தப்பட்ட விடுதலைப் போராட்டத்தில் எந்தப் பங்கும் பெறாத இன்றைய ஆளும் கட்சி, அன்றைய காங்கிரசின் ஒப்பற்றத் தலைவர்களை இன்றும் அவமதித்துவரும் இன்றைய ஆளும் கட்சி, இந்தியாவின் தேசியக் கொடியின் உள்ளடக்கத்தை மதரீதியானது என்று கொச்சைப்படுத்திய இன்றைய ஆளும் கட்சி, ‘வந்தே மாதரம்’ என்ற பாடலின் முழு வரிகளையும் பாடுவதால் பாரத மாதா சிறப்பிக்கப்படுகிறாள் என்று கூறுவதில் தேசப்பற்று கொஞ்சமும் இல்லை. மாற்றுச் சமயங்கள் மீதான பகையும் பாகுபாடுமே இங்கு எஞ்சி நிற்கிறது. மாற்றுக்
கருத்தியல் மீதான தாக்குதலே ‘வந்தே மாதரம்’ என்ற நிகழ்வு எடுத்துரைக்கிறது என்பதை எப்போது உணரப் போகிறோம்?
கிறித்தவத்தின்
மௌனம்
இந்துத்துவ
அரசின் ‘வந்தே மாதரம்’ தொடர்பான நடவடிக்கை கிறித்தவர்களிடையே எத்தகைய அதிர்வுகளையும் உருவாக்கியதாகத் தெரியவில்லை. இந்நிகழ்வு அல்லது இந்துத்துவ அரசு முன்னெடுத்த இப்பாடல் பற்றிய முன்னெடுப்பு, இந்துத்துவம் எப்போதும் பேசும் நாட்டுப்பற்று சிறுபான்மையினர் மீதான வெறுப்புணர்வு என்று எடுத்துக்கொண்டனரோ என்றுதான் தோன்றுகிறது. ஆனால், கிறித்தவம்- கிறித்தவ அடையாளம் பற்றிக் கவலைப்படும் எவரும் இப்போக்கை எளிமையாக எடுத்துக்கொள்ள முடியாது.
கொசு
நுழைய முடியாத இடங்களில் கூட கல்விப் பணித்தளத்தை விரித்து, நற்பணி ஆற்றி வரும் கிறித்தவ நிறுவனங்கள் தம் நிறுவனங்கள் மூலம் விரும்பியோ விரும்பாமலோ கிறித்தவ அடையாளத்தை மக்களிடம் காட்டிக் கொண்டுதான் இருக்கின்றன என்ற உண்மையை உலகம் மறந்திடாது. நம் எளிய அருள்சகோதரிகள், அருள்தந்தையர்கள் தம் பள்ளிக்கூடுகையின்போது துர்க்கை, சரஸ்வதி, இலட்சுமியைத் துதிபாடியே பணியைத் தொடங்க வேண்டிய காலகட்டாயம் சட்டத்தால் உருவாக்கப்பட்டிருக்கிறது என்றால், கொள்கை வீச்சில் வாழவேண்டிய கிறித்தவ நிறுவனங்கள் இச்சவாலை எப்படி எதிர்கொள்ளப்போகின்றன?
ஒன்றிய
அரசு ஆளும் மாநிலங்கள் அனைத்திலும், மனித உரிமைகளையும், கருத்துச் சுதந்திரத்தையும் மதச்சுதந்திரத்தையும் அப்பட்டமாக மீறும் மதமாற்றத் தடைச்சட்டத்தை இயற்றி, மதப்போதகர்களை மிரட்டிவரும் போக்கு இன்று கண்டுகொள்ளாமையால் அதிதீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
கிறிஸ்துவை
அறிவிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட மாபெரும் கல்வி நிறுவனங்கள், வெறும்
போட்டி நிறுவனமாக மாறிவிட்ட நிலையில் ஒரு மதவாத அரசு இப்படித்தான் செயல்படும் என்ற தெளிவும் இன்றி, அப்படியே செயல்பட்டாலும் நாம் பெற்ற கல்வி மூலம் அத்தீயத் திட்டத்தை எதிர்கொள்ளும் சட்ட அறிவுமின்றி மௌனித்து வருதல் பெரும் பாவமில்லையா?
‘வந்தே மாதரம்’ என்ற பாடலின் முதல் பகுதியை நாம் ஏற்றுக்கொள்ளலாம், பாடலாம்! அப்பாடலின் ஏனைய பகுதிகளைக் கேள்வியின்றி நாம் பாடத்துணிந்தால் நம் அடையாளம் கேள்விக்குள்ளாகும் என்பதோடு நம் நம்பிக்கையும் பொய்யாகும் என்பதே உண்மை. என்ன செய்யப் போகிறோம்?
இயற்கை
உலகை
நகர்த்தும் இயற்கைக் கடிகாரம் பெண்கள். மானுட வரலாற்றின் முதல் துடிப்பு பெண்ணிலிருந்தே தொடங்குகிறது. மனிதகுலத்தின் வேராகவும், அதன் பயணத்தை ஒளிரச்செய்யும் தீபமாகவும் பெண் திகழ்கிறாள். பெண் என்பவர் ஒரு தனி மனிதர் அல்லர்; அவள் மரபின் வேர். அந்த வேரிலிருந்துதான் குடும்பம் பிறக்கிறது, பண்பாடு வளர்கிறது, மனிதம் நிலைக்கிறது.
உலகின்
எந்தச் சமூகமாக இருந்தாலும், அதன் அடித்தளத்தில் பெண் நிற்கிறாள்; அவள் கருவில் மனிதன் உருவாகிறான்; அவள் கைகளில் மனிதம் வடிவெடுக்கிறது. பெண் மரபு என்பது வெறும் பழக்கவழக்கங்களின் தொடர்ச்சி அல்ல; அது அன்பு, பொறுமை, தியாகம், நம்பிக்கை ஆகியவற்றின் நிலையான பாரம்பரியம்.
உலகப்
பெண்கள் தினத்தைக் கொண்டாடும் இந்தப் புனிதமான தருணத்தில், பெண் என்பவள் உயிரின் பிறப்பிடம் என்பதை உணர்வோம். அவளது கருவறையில் மனிதன் உருவாகிறான்; அவளது மடியில் மனிதம் வளர்கிறது. தாய் என்ற பெயரில் அவள் வேராகி, மனிதத்தை நிலைநாட்டுகிறாள். அந்த வேர் இல்லையெனில், மரம் இல்லை; மரமில்லையெனில், நிழலும் கனியும் இல்லை. அதுபோலவே பெண் இல்லையெனில், மனிதச் சமூகம் உயிரோட்டமற்றதாக மாறி விடும்.
குழந்தை
கருவில் உருவாகும் போதே பெண்ணுள் உருப்பெறும் உணர்வுகள், உள்ளன்பு, உதிரத்தோடு செய்கிற தியாகம், சொல்லாமல் சுமக்கின்ற பாரங்கள் அனைத்தும் மனித வரலாற்றில் மறைக்கப்பட்டதாகவே உள்ளன. இன்னும் எத்தனை சுமைகளைத் தந்தாலும் எங்கள் சிறகுகள் விழுவதில்லை. நல்லது-தீயது எதுவென்று எண்ணங்கள் வழியாகச் செயலோடு அறிவித்து வாழ்ந்து காட்டுகின்றாள். அந்த வாழ்வே மனிதத்தின் முதல் பாடமாகிறது.
மனித
வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் ஒவ்வொரு மாற்றத்திற்கும் பின்னால் ஒரு பெண் இருப்பதைக் காணலாம். தாயாக, சகோதரியாக, துணைவியாக, வழிகாட்டியாக வெளிப்படும் பெண்ணின் பொறுமை, பரிவு, ஒழுக்கம், நம்பிக்கை ஆகியவற்றின்மீது குடும்பமும் சமூகமும் கட்டப்படுகிறது. குழந்தைகளின் முதல் பள்ளி தாயின் மடிதான். அவள் கற்றுத் தருவது சொற்கள் மட்டுமல்ல; மனிதம், அன்பு, இரக்கம், நம்பிக்கை, பகிர்வு போன்ற வாழ்க்கையின் அடிப்படை நெறிகளே. அவளின் சொல்லும் செயல்களும் வருங்காலச் சமூகத்தின் விதைகளை விதைக்கின்றன. அதேசமயத்தில், இருளில் வழிகாட்டும் தீபம்போலப் பெண்கள் சமுதாயத்தைத் திறன்பட ஒளிரச்செய்கிறார்கள். அறிவு, உழைப்பு, நீதி, நம்பிக்கை இவற்றின் ஒளியாக அவள் பிரகாசிக்கிறாள்.
வரலாற்றைப்
பார்க்கும்போது பெண்கள் அமைதியாக ஆனால், உறுதியாக மாற்றங்களை உருவாக்கி ஆன்மிகம், கல்வி, மருத்துவம், அறிவியல், அரசியல் என அனைத்துத் துறைகளிலும்
ஒளிர்வதை இன்றும் நாம் காணலாம். மனித மரபு பாதுகாக்கப்பட பெண்மை போற்றப்பட வேண்டும்.
இன்றைய
பெண் பல முகங்களைக் கொண்டு
வாழ்கிறாள். தாய், சகோதரி, மகள் என்பதோடு மட்டுமல்லாமல், தலைவி, தொழிலாளி, சிந்தனையாளர், திறன்மிகு நிர்வாகி, இறைவாக்கினர் எனப் பல நிலைகளில் வாழ்கிறாள்.
வாழ்க்கைப் பயணத்தின் பாதை எளிதானதல்ல; சமத்துவத்திற்கான போராட்டங்கள், உரிமைகளுக்கான குரல்கள், அடையாளத்தை மீட்டெடுக்கும் முயற்சிகள் அனைத்தையும் கடந்துதான் அவள் முன்னேறி வருகிறாள். அவள் தன் வேரை மறக்கவில்லை. ‘இருளாக வாழ்க்கை என்றுமே இருந்துவிடுமோ?’ என்று கவலை கொள்ளாத கனவுகள் முளைப்பது இருளில்தான். அதேசமயம், பிறருக்கு ஒளியாக வழிகாட்டுகிறாள்.
நம்பிக்கையின்
பார்வையில் பெண் கடவுளின் தனித்துவமான வரம். திருவிவிலியத்தில் நாம் காணும் பெண்கள் - சாராள், மிரியம், ரூத், எஸ்தர், மரியா போன்றோர் மனித வரலாற்றில் கடவுளின் திட்டத்தை முன்னெடுத்த வலிமையான வேர்களும், ஒளிமிக்க சாட்சிகளும் ஆவர். சிறப்பாக, மரியா - கடவுளின் வார்த்தையைத் தன் உள்ளத்தில் ஏற்றுக்கொண்டு, உலகிற்கு ஒளியைக் கொடுத்த தாய். பெண்களின் அழகிய மகுடமான அவர் கீழ்ப்படிதலின் வேர், நம்பிக்கையின் ஒளி, உலக மாந்தர் அனைவருக்கும் தாய்.
ஐக்கிய
நாடுகள் சபையானது இந்த ஆண்டை அகில உலகப் பெண் விவசாயிகள் ஆண்டாக அறிவித்திருக்கும் இச்சூழலில், உலகளவில் வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்துப் பெண்களையும் நாம் நன்றியோடு நினைப்போம். கிராமப்புறங்களிலிருந்து நகர்ப்புறங்களுக்கு வெளியேறுகின்ற ஆண்களைக் காட்டிலும் பெண்கள் குறைவுதான். நிலத்தை உழுது, விதை விதைத்து, நாற்று நட்டு, களை பறித்து, அறுவடை செய்து, தானியங்களை மண்டிகளில் சேகரிப்பது வரை பெண்களாகத்தான் இருக்கின்றனர். ஆனால், அவர்கள் நமது நினைவுகளிலிருந்து மறக்கப்படுகிறார்கள்.
குடும்பப்
பொறுப்புகளுடன் ஆண்களின் பொருளாதாரச் சுமையையும் பகிர்ந்துகொள்ளும் நவீன வீரமங்கைகள், சரித்திரம் படைக்க உருவாக்கப்பட்டவர்கள் பெண்கள். காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் பருவநிலை மாற்றம் ஏற்பட்டு, அடிக்கடி விவசாயத்தில் இழப்பு ஏற்படுவதால் பெண் விவசாயிகள் குறிப்பாக, நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் கடுமையான துயரத்தில் இருப்பதாக அண்மைக் கால ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.
2026-ஆம் ஆண்டு
‘அகில உலகப் பெண்கள் தினம்’ பெண்களைப் புகழ்ந்து பேசுவதற்கான ஒரு நாளாக மட்டுமல்ல; அவர்களின் வேர்களை மதித்து, அவர்களின் ஒளியைப் பாதுகாத்து, மேலும் பிரகாசிக்கச் செய்யும் நாளாக மாறவேண்டும். பெண்கள் வளர்ந்தால் குடும்பம் வளரும்; குடும்பம் வளர்ந்தால் சமூகம் மாறும்; சமூகம் மாறினால் மனிதகுலம் ஒளிரும்.
பெண்ணை
மனிதகுலத்தின் அடித்தளமாகவும், எதிர்காலத்தின் வெளிச்சமாகவும் ஏற்றுக்கொள்வோம். பெண்களும் தங்களின் கடமைகளையும் பொறுப்புகளையும் உணர்ந்து வாழவும், ஆண்கள் அவர்களது கனவுகளை மதிக்கவும் அவர்களை ஆதரிப்போம!
வாழட்டும்
பெண்மை! ஒளிரட்டும் சமூகம்!!
‘சூரியன் இன்றி
பூமி
சுழலாது;
பெண்கள் இன்றி
இப்பூவுலகம்
இயங்காது.’
இயந்திரப் பொருளாதாரம்
21-ஆம்
நூற்றாண்டின் சூழலுக்கு மேலும் வலிமை சேர்க்கும் சக்தியாக ஏ.ஐ. உருவெடுத்து,
உலகளாவியப் பொருளாதாரத்தில் முத்திரை பதிக்கும் இடத்தைப் பெற்றிருப்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளோம். இன்று நாம் வாழ்வது ஏ.ஐ. ஆதிக்கம்
செலுத்தும் நான்காம் தொழிற்புரட்சியின் காலம். முன்பிருந்த உழைப்பின் பொருளாதாரம் முடிந்து, இயந்திர ஆதிக்கப் பொருளாதாரத்தில் வாழ்கிறோம். மனிதன் இயந்திரத்துடனான போட்டியில் தோல்வியடைந்துவிட்டதைக் கடந்த நாற்பது ஆண்டுகளாகவே உழைப்பின் பங்கு (wage share) இழப்பும், முதலீட்டு
(capital share) பங்கின் வளர்ச்சி
விகிதமே சான்றாகப் பார்க்கலாம்.
உலக
அளவில் பின்தங்கிய அல்லது முன்னேறிய எந்த நாடாகயிருந்தாலும், ஏ.ஐ. இல்லாத
பொருளாதாரத்தை இன்று கற்பனை செய்ய முடியாது. இது ஏ.ஐ.யினால்
ஈர்க்கப்பட்ட ஒருவகை ஏற்றத்தாழ்வு (inequality) அல்லது அநீதி (injustice) என்று சொல்லும் உலகமாகக் கூட இருக்கலாம். புதிய கண்டுபிடிப்புகள், வேலைப்பளுவைக் குறைத்தல் என்ற குறிகோள்களோடு செயல்படும் இத்தொழிலில் ஒருசில உலக நிறுவனங்களான கூகுள்,
மைக்ரோ சாஃப்ட், ஓபன் ஏ.ஐ. மற்றும்
ஏ.ஐ. டூல்ஸ் என்பவைகளே
ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்நிலையில், டிஜிட்டல் கட்டமைப்பு உள்ள நாடுகளுக்கும், இல்லாத நாடுகளுக்குமான இடைவெளி பெருகிக்கொண்டே போவது ஏ.ஐ.யின்
நன்மைகளை உலகம் சமநிலையில் பகிர்ந்துகொள்ள இயலாமை கவலையளிப்பதாக உலகளாவிய நாணய நிதியம் (IMF) கூறுகிறது.
பொருளாதாரத்தில்
உழைக்கும்
வர்க்கத்தினரின்
இறங்கு
முகம்
ஐம்பது
ஆண்டுகளுக்கு முன்பிருந்து மிகவும் குறைந்த விலை கணினியின் நாள்கள் முதல், உழைப்பின் வர்க்கம் ஆட்டம் கண்டுவிட்டதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இணையதளத்தின் வருகை, ஸ்மார்ட்ஃபோன், இப்போது ஏ.ஐ., அடுத்து
ரோபோடிக்ஸ் என்பவை இன்னும் வரும் சில பத்து ஆண்டுகளில் எஞ்சியுள்ள வேலைச் சந்தையைப் பெரும்பாலும் அழிவின் எல்லைக்குக் கூட்டிச்செல்லும் என்று அஞ்சப்படுகிறது.
பொருளாதாரத்தில்
செல்வந்தரின்
ஏறுமுகம்
பலர்
நினைப்பது இலஞ்சம், ஏமாற்று, அரசாங்கத்திடம் பணம், வேண்டியவர்களுக்குப் பதவியும் பணமும் (cronyism) என்பவையே பணக்காரரின் எழுச்சிக்கு மூலகாரணம் என்று. ஆனால், தொழில்நுட்பம்தான் உழைப்பு-முதலீடு (labour and capital balance) சமன்பாட்டு
விகிதத்தை நகர்த்தும் மூலகர்த்தா என்பது வெளியில் தெரிவதில்லை.
மூலதன
மூட்டை (POT - பெரும்
பணக்காரரின் எண்ணிக்கை) நாளுக்குநாள் அதிகரித்து வருவதும் பொருளாதார வளர்ச்சியின் ஓட்டத்தைவிட உழைக்கும் வர்க்கத்தினரின் பங்கு (POT) வேகமாகச்
சுருங்கி வருவதும், இவ்விடைவெளி அதிகரித்து வருவதைக் காட்டுகிறது.
பொருளாதாரத்தில்
ஏ.ஐ.-யின்
பங்கு
ஏ.ஐ. என்பது கோட்பாடுகளை
ஆய்ந்து, மேம்படுத்தி, வழிமுறைகள் மூலம் தொழில்நுட்பங்களை உருவாக்கி நடைமுறைபடுத்தும் ஒரு புதிய தொழில்நுட்ப விஞ்ஞானம். ஏ.ஐ. உதவியினால்
உருவாக்கப்படும் பொருள்கள் மற்றும் சேவைகள் (products and services) இதுவரை மனிதரால் செய்ததை மாற்றும் நிலையில், உழைக்கும் பிரிவினரில் சிலர் தேவையற்றவர்களாகலாம். இயந்திரங்கள், ரோபோக்கள் மற்றும் ஏ.ஐ.யின்
மறு உருவங்கள் மனிதரின் வேலைகளைப் பல நிலைகளில் செய்யும்
எதிர்பார்ப்பும் இதில் அடங்கும்.
ஏ.ஐ.யின் பயன்பாட்டினால்
புதிய வேலைகள் உருவானாலும், ‘எவ்விதத்தில் இழந்த வேலைகள் சரிகட்டப்படும்?’ என்ற கேள்வியும் உள்ளது.
குறைந்த
கைத்திறன் (low skilled) கொண்ட வேலைகளைத்
தொழில்நுட்ப ஊடுருவலால் இப்பிரிவினர் வேலை இழப்பதும், மறுபுறம் பொறியியல், மருத்துவம், நீதித்துறை சார்ந்தோர் தொழில்நுட்பப் பயன்பாட்டினால் அதிக ஊதியம் பெறுவதும் தவிர்க்க முடியாமலிருப்பது ஏ.ஐ.யினால்
உருவாகும் இடைவெளியாகப் பார்க்கப்படுகிறது. முன்பு கண்ட தொழிற்புரட்சி ஒரு வேலைக்கு மற்றொரு வேலையைக் கொடுத்தது. இன்று பணித்தளங்களில் நாம் காணும் ஏ.ஐ. தொழில்புரட்சியின்
வளர்ச்சி வேலையைப் பறித்துவிடுமோ என்ற நிலையில், நிறுவனங்களுக்கு அதிக இலாபம் ஈட்டும் கருவியாகவும், செல்வம் சேர்க்கும் சக்தியாகவும் பார்க்கப்படுகிறது.
சமுதாயமும் ஏ.ஐ.யும்
ஏ.ஐ.-யினால் தனிமனிதனுக்கும்
நிறுவனத்திற்கும் சமுதாயத்திற்கும் நன்மைகள் கிடைப்பது என்றிருக்க, பணக்காரர்-ஏழை இரு வர்க்கத்தினரிடையே உள்ள இடைவெளி அதிகமாகிறதென்ற பார்வையும் உள்ளது. சிலர் வேலைப்பறிப்பு குறிப்பாக, குறைந்த கைத்திறன் உடையோர் வேலையிழப்பு, இதனால் உருவாகும் வறுமையை எதிர்கொள்வது ஒருபுறம்; அதே நேரத்தில், ஏ.ஐ. புதிய
உயர்தர வேலைகளை உருவாக்குவது, திறன் படைத்தோருக்குத் திணறடிக்கும் சம்பளம், பெரிய நிறுவனங்கள் ஏ.ஐ. தொழில்
மூலம் உயர்தர, குறைந்த விலையில் சேவைகளைப் பயனர்களுக்கு அளித்தல் மற்றொரு புறம்.
இத்தொழில்நுட்பத்தை
எட்டிப்பிடிக்க இயலாத சிறு நிறுவனங்கள் பாரம்பரிய தயாரிப்பின் மூலம் தரத்திலும் விலையிலும் நடைமுறை போட்டியில் தாக்குப்பிடிக்க முடியாமல் சிறிது சிறிதாகத் தொழிலில் தோற்கும் நிலை என்பவைகளெல்லாம் ஏ.ஐ. நேரடியாகவோ
மறைமுகமாகவோ இன்றைய பொருளாதாரத்தில், ஏழை-பணக்காரர் இடைவெளியில் முக்கியப் பங்கு வகிப்பதைக் காட்டுகிறது.