தமிழ்நாடு அரசியலும் திரைத் துறையும் பின்னிப் பிணைந்தவை. 1950-களுக்கு முன் சேலம், கோவை என்ற ஊர்களில் படப்பிடிப்புத் தளங்கள் இருக்கும். படப்பிடிப்புகள், படப்பிடிப்புத் தளங்களில் மட்டுமே நடக்கும். பாலு மகேந்திரா, மகேந்திரன், பாரதி ராஜா போன்ற இயக்குநர்கள் வந்தபின்பு பொதுவெளிகளில் படப்பிடிப்பு நடக்கிறது.
கோவை
இராமநாதபுரம் சாண்டோ எம்.எம்.ஏ. சின்னப்பா, 16 திரைப்படங்களை
எம்.ஜி.ஆர். அவர்களைக்
கதாநாயகனாகக் கொண்டு தயாரித்தவர். இவர் விலங்குகளை வைத்து திரைப்படம் எடுத்துப் பெரும் பணம் ஈட்டினார். இவர் ஒருமுறை செய்தியாளர்களிடம் “விலங்குகள் கால்ஷீட் சொதப்பாது; ஒரு படம் ஓடிவிட்டால் அதிக சம்பளம் கேட்காது; தயாரிப்பாளரை வீண் தொந்தரவு செய்யாது”
என்றார். சின்னப்பாவை எம்.ஜி.ஆர். ‘முதலாளி’ என
அழைப்பார். இருவரும் நெருங்கிய நண்பர்கள்.
எம்.எம்.ஏ. சின்னப்பா பணத்தை
மூட்டைக் கட்டிக்கொண்டு படம் எடுக்க வந்ததைப் பார்த்த இந்தி திரைப்படத் துறையினர் அதிர்ந்தனர். இவர் தன் வருவாயில் நான்கில் ஒரு பங்கை பழனி, மருதமலை கோவில்களுக்கு வழங்கினார் என்பது கூடுதல் தகவல்.
இந்தச்
சின்னப்பா ‘ஆட்டுக்கார அலமேலு’ என்ற திரைப்படத்தை எடுத்தார். மந்த புத்தியுள்ளது எனக் கூறப்படும் ஆடு, திரைப்படத்தில் அற்புதமாக நடித்து அசத்தி இருந்தது. திரைப்படம் வெள்ளி விழா கண்டது. அன்று வெள்ளி விழா என்பது 175 நாள்கள் ஓடுவது. திரைப்படத்தில் நடித்த ஆட்டை ஊர்கள் தோறும் திரையரங்குகளில் காட்சிக்கு அனுப்பினார். ஆட்டைப் பார்க்க கூட்டம் அலை மோதியது. நெரிசல் அதிகமானது. இதைக் கண்டு வருத்தமுற்ற கவிக்கோ அப்துல் ரகுமான் எழுதினார்: ‘ஆடு கம்பீரமாகத்தான் நிற்கிறது; ஆனால், மனிதர்கள்தான் மந்தையாகிப் போனார்கள்.’ இன்று நாட்டு நடப்பும் அப்படித்தானே இருக்கிறது!
சில
வருடங்களுக்கு முன் அதிகபட்சமாக, பள்ளிக் குழந்தைகள் தங்கள் கதாநாயகனை, கதாநாயகிகளைக் காண வீட்டிலிருந்து காணாமல் போவர். சிலர் அந்தக் கதாநாயகனை, கதாநாயகியைக் கல்யாணம் செய்வேன் என ஊர் முழுவதும்
கூறிக்கொண்டு அலைவர். பெண்கள் சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை காட்டப்பட்டு எல்லாம் இழந்தார்கள். இரசிகர்கள் கட்-அவுட்டுக்குப் பாலாபிஷேகம், பட வெளியீடு அன்று
திரையரங்குகளில் திருவிழாக்கள் நடத்தினர். இதில் ‘எங்க தலைவனுக்குதான் பெரிய கட்-அவுட்’ என உயரப்போட்டி நடத்தினர்.
பரிணாம வளர்ச்சியாக ‘பாக்ஸ் ஆபிஸ்’ புள்ளி விவரங்களைப் போட்டு நொறுக்கினர்.
ஒரு
கதாநாயகி ஒரு முக்கிய நகரத்தில் நகைக்கடையைத் திறக்க வருகிறார். நகரப் போக்குவரத்து மூன்று மணி நேரம் முடங்கிப்போகிறது. சமீபத்தில் கண்ட ஒரு கட்சி அதிர்ச்சி அடைய வைக்கிறது. சுற்றுலாத்தலம் ஒன்றில் ஓடாத ஒரு படத்தில் ஒரேயொரு காட்சியில் நடித்த ஒரு பெண்மணியை அடையாளம் கண்ட கூட்டம் புகைப்படம் எடுக்க, கைகுலுக்க அலைமோதியது. அதிர்ந்து போனோம். அதன் உச்சமாக இரசிகர்கள் என்ற சுயம் இழந்தவர்களால், சுயாதீனம் இல்லாதவர்களால், அவர்களது சிந்தனையற்ற செயல்களால், அக்கறையின்மை காரணமாக, புத்துயிர் பெற்ற இரசிகச் சடலங்களால் ஓர் ஊரே பிணக்காடாகி உள்ளது. வழிநடத்தப்படாத
அரசியல் மோதலின் வழி, சக்தி வாய்ந்த துன்பவியல் அரங்கேறி உள்ளது. இவை நம் வார்த்தைகள் அல்ல; சோம்பிகள் குறித்த அகராதி தரும் விடையிது. இது தமிழ்நாடு அரசியலில் கால் பதித்துள்ள ‘இரசிகர்கள்’ என்ற
புதிய தலைமுறையினருக்குப் பொருந்தும்.
1970-களில் எழுத்தாளர்
ஜெயகாந்தன் ‘சினிமாவுக்குப் போன சித்தாளு’
என்ற கதையில் பாமர மக்களின் சினிமா மோகம் பற்றி எழுதியிருக்கிறார். அன்று கவிஞர் கண்ணதாசனும், நடிகர் சிவாஜி கணேசனும் காங்கிரஸ் சார்பாகத் திரைத்துறையில் எம்.ஜி.ஆருக்கு எதிராகக்
களம் கண்டனர். கண்ணதாசன் தன் பத்திரிகையில், ‘சினிமாவுக்குப் போன சித்தாள்’
என்று சிறுகதையாக எழுத ஆரம்பித்து, அது ஐந்து, ஆறு வாரம் வருகிற குறுநாவலாக முடிந்தது. சினிமா போதையில் ஓர் ஏழைக் குடும்பமும், அடித்தட்டு மக்களும் பாதிப்பதைப் படம்பிடித்தது அந்தக் குறுநாவல். எம்.ஜி.ஆர். அவர்களை
‘ஆயிரத்தில் ஒருவன்’ என்பதிற்குப் பதில், ‘இலட்சத்தில் ஒருவன்’ என்றும் ஜெயகாந்தன் கதையை வடிவமைத்தார். அன்றைய தி.மு.க.வினர் இச்சிறு கதையை எழுதிய எழுத்தாளர் ஜெயகாந்தனைக் கடுமையாக விமர்சனம் செய்தனர். அன்று தி.மு.க.
விதைத்த வினையை இன்று அதே தி.மு.க.வே அறுவடை செய்கிறது.
பின்னாள்களில்
ஆந்திர முதல்வராக என்.டி. ராமராவ் பதவி ஏற்றபோது எழுத்தாளர் ஜெயகாந்தன் கூறினார்: “தமிழ்நாட்டைப் பிடித்த சனி ஆந்திராவையும் பிடித்தது”
என்று. மின்னணு ஊடகங்கள் வளர்ச்சிப்பெற்ற நிலையிலும், கதாநாயகப் பிம்பம் உடைபடவில்லை. ஏழை, எளிய, அடித்தட்டுப் பாமர மக்கள் மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
அதிலும் 75 சதவிகிதம் பேர் இளைஞர்கள் என்பது பெரும் கவலையளித்தது. தங்களைச் சுற்றிய சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களை உணர்வதில்லை. ஏன், அன்றாட நாட்டு நடப்புகள் தெரியாத கூட்டமாக இருக்கிறார்கள். தமிழினத்தின் வளர்ச்சி, முன்னேற்றம் என்ற அடிப்படை அறியாத, சினிமா மோகத்தில் எடுப்பார் கைபிள்ளைகளாக உள்ளார்கள். அடிப்படை நிலைகளைப் புரிந்துகொள்ளாத அறிவிலிகளாக உருமாறி விட்டார்கள். இவர்கள் தங்கள் திரைநாயகனின் திரைக்கதை போன்ற கனவு உலகில் வாழ்கிறார்கள். இவர்களது கதாநாயகனும் அப்படியே வாழ்கிறார்.
எனது
இளம் வயதைத் தன் கதைகளால் பெரிதும் ஆக்கிரமித்தவர் பாலகுமாரன். அவரை இன்றைய இளைய தலைமுறைக்கு ரஜினிகாந்த் அவர்களின் பஞ்ச் டயலாக் வசனகர்த்தா எனக் கூறி அறிமுகம் செய்யலாம். அவர் கதாநாயக நடிகர்கள் பற்றிக் கூறுகிறார்: “நடிகர்களிடம் எங்கோ தவறு இருக்கிறது. நான் சாதாரணமானவன் இல்லை என்கிற எண்ணம் இருக்கிறது. யாரோ கதை சொல்ல, எவரோ வசனம் எழுத, எந்த இயக்குநரோ தவித்துத் தண்ணீராய் உருகிப் படம்பிடிக்க, இரவு-பகல் தெரியாது, அவர் நடிப்பு குறை தெரியாது, யாரோ பிலிம் தொகுத்துக் கொடுக்க, பின்னணி இசை சேர்க்க, நூறு பேர் சேர்ந்து வெளிச்சத்தில் ஓர் ஆளைத் தூக்கிப்பிடிக்க, வெளிச்சத்தில் கண்ட ஆளே அத்தனைக்கும் காரணம் என மக்கள் நம்ப,
அந்த ஆள் உலகமே தன் காலடியில் என்று நடக்க... சினிமா விசித்திரம்தான்.”
எல்லாக்
கதாநாயர்களின் நினைப்புகூட இதுதான். இவர்கள் மனநலக் குறிப்புகளில் உள்ளபடி என்.பி.டி. எனப்படும்
சுயநலச் சிக்கல்களால் பாதிப்பு அடைகிறார்கள். இது இன்று முதல்வர் கனவு, கலவரம் என்று நிறுத்தி இருப்பது கண்கூடு. இவர்களது வெறிபிடித்த இரசிகர்களின் வழிபாட்டுக் கலாச்சாரம் (கல்ட்) உயிர்ப் பலிகளை வாங்கியுள்ளது. துன்பவியல் நிகழ்விற்குப் பின்னான அவர்கள் தங்கள் பதிவுகள் வழியே கதாநாயக நடிகர் பின் நின்றார்கள். நேரில் மட்டுமல்ல, சமூக வலைத்தளப் பதிவுகளில் கூட உயிரிழந்த, காயமடைந்த மக்கள் பின் நிற்கவில்லை. இது பெரும் இனக் கொடுமை அன்றோ! இது நம் தமிழ்ச் சமூகம் முன்னுள்ள பெரும் சவால் என உணர்ந்து, அறிவார்ந்த
பெற்றோர், தம் குழந்தைகளுக்கு ஊடகக் கல்வி புகட்டும் அளவு விழிப்புணர்வு பெறவேண்டும்.
வாக்கிற்கு இலஞ்சம் என்பதைப் போல, பீகாரில் உள்ள 1.27 கோடி பெண்களுக்கு ரூ. 10,000 வழங்கப்பட்டன. விளைவு - பா.ச.க. மற்றும் ஐக்கிய ஜனதாதளக் கூட்டணி 202 இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றிருக்கிறது. இது வெறும் தேர்தல் வெற்றி அல்ல; மக்களின் அடிப்படை வறுமையையும் உடனடித் தேவைகளையும் மூலதனமாக்கி, மதவாதிகள் பெற்ற ‘வியூக’ வெற்றியாகும். சமூக நீதி, உழைக்கும் மக்களின் நலன், மதச்சார்பின்மை ஆகிய கொள்கைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சவால்தான் இந்தத் தேர்தல் முடிவுகள்.
ஆளும்
வர்க்கத்தின் மிக நுட்பமான, அதிகாரத்தை அபகரித்துக்கொள்வதற்கான சூழ்ச்சியை இந்தத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் மக்கள்நலத் திட்டங்களை (இலவசங்களை) ‘சோம்பேறிகளை உருவாக்கும் திட்டம்’ என்று ஏளனம் செய்தனர் பா.ச.க.வினர். ஆனால், அதே மக்கள்நலத் திட்டங்களைத் தனது பிரதான தேர்தல் ஆயுதமாகக் கையாண்டு, பீகாரில் வெற்றியை வசப்படுத்தி இருக்கிறது பா.ச.க.
ஆம்!
பீகாரில் அதிகாரம் வென்றிருக்கிறது. மக்கள் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்தத் தேர்தலில் ஆர்.ஜே.டி. தலைமையிலான
‘இந்தியா’ கூட்டணி
ஏற்கெனவே வைத்திருந்த 70-க்கும் மேற்பட்ட தொகுதிகளை இழந்துள்ளது. ‘இந்தியா’ கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சென்ற இடமெல்லாம் இலட்சோப இலட்சம் மக்கள் கூடினார்கள். வாக்குத் திருட்டுப் பிரச்சாரம் நாடு முழுக்கப் பெரும் பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. 65 இலட்சம் வாக்காளர்கள் நீக்கம் உள்ளிட்ட தேர்தல் ஆணையத்தின் சகல தில்லு முல்லுகள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களிடையே பல கேள்விகளை எழுப்பின.
மாநிலத்தில்
இளையோருக்கு வேலைவாய்ப்பு இல்லை; தொழில் வளர்ச்சி இல்லை; கல்வியில் முன்னேற்றம் இல்லை; பொருளாதாரத்தில் வளர்ச்சி இல்லை... இப்படி பீகாரைக் கடந்த இருபது ஆண்டுகளாக ‘பித்துக்குளித்தனமாக’ வழிநடத்திய
நிதிஷ் குமாரை மீண்டும் ஆட்சி அதிகாரத்தில் அமர வைத்திருக்கிறார்கள் அம்மாநில மக்கள்.
‘இந்தியா’ கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மாநிலத்தின் அவலநிலை குறித்து பீகாரின் ஒவ்வொரு தெருவெங்கும் பிரச்சாரம் செய்தார்கள். மக்களும் ஆரவாரம் செய்து அதை ஒப்புக்கொண்டார்கள். ஆனால், அது வாக்குப்பதிவின்போது பிரதிபலிக்கவில்லை. தேர்தல் பிரச்சாரத்தின்போது இருந்த மக்களின் அமோக வரவேற்பு வாக்குகளாக மாறாமல் போனது.
இந்த ஆரவாரமும் ஆதரவும் ஏன் வாக்குகளாக மாறாமல் போனது? கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே ஒற்றுமை இல்லையா? அல்லது ஒருங்கிணைப்பு இல்லையா? அரசுத் துறைகளின் மீது அகலக் கால் விரித்து அமர்ந்து கொண்டு, அசுர பலம் காட்டிவரும் பா.ச.க.வை வீழ்த்த மதச்சார்பற்ற,
சமூக நீதியை உயர்த்திப் பிடிக்கும் இயக்கங்கள், கட்சிகள் தங்களது அடித்தளத்தை மேலும் உறுதியாக்கவேண்டுமா? என்பன போன்ற பல கேள்விகளுக்கு
விடை காண வேண்டிய கட்டாயத்திற்கு எதிர்க்கட்சிகளைத் தள்ளி இருக்கிறது பீகார் தேர்தல் முடிவு.
‘பீகாரில் நேர்ந்ததுதான் இங்கும் நிகழும். அரியானாவில் நிகழ்ந்ததுதான் இங்கும் அரங்கேறும். மராட்டியத்தில் ஏற்பட்ட அரசியல் முடிவுதான் தமிழ் நாட்டிலும் நிகழும்’ என்று அ.இ.அ.தி. மு.க.வினரும்
பா.ச.க.வினரும்
ஆருடம் கூறி வருகிறார்கள். ஜனநாயகப் படுகொலைக்கு எஸ்.ஐ.ஆர். போன்ற
கூர்தீட்டிய கத்திகளைக் கைகளில் ஏந்தியவாறு அ.தி.மு.க.வும் பா.ச.க.வும்
களத்தில் இருக்கின்றன. சிறுபான்மையின மக்களோ, தங்களுக்கு எதிரானவர்கள்…யாராக
இருந்தாலும் அவர்களைக் கூறுபோட்டு, அவர்கள் வாழ்ந்ததற்கான சுவடே இல்லாமல் செய்துவிட துணிந்துவிட்டன அதிகாரப் போதை ஏறிய அதிகார சக்திகளும், சதிகார அடிமைக் கும்பலும்.
நண்பர்களே,
நாம் ஏமாந்துவிடக்கூடாது. பீகார்
தேர்தல் முடிவு, நமக்கான எச்சரிக்கை மணி! விழித்துக்கொள்வோம்!
ஆர்.எஸ்.எஸ். என்ற இந்துத்துவத்தின் ஏகத் தலைவர் மோகன் பகவத் அவர்கள் அருளிய அருளுரையின் உள்ளடக்கம் கேட்டு இந்திய ஆயர் பேரவை அதிர்ந்து போனதும், எதிர்வினையாற்றியதும் மகிழ்ச்சி தரும் செய்தியே. ஆனால், இவ்வமைப்பு தோன்றி நூறாண்டு கண்ட நிலையில், இவ்வமைப்பின் தோற்றம், தோன்றிய சூழமைவு, இந்திய-தேசிய அளவில் உருவாக்கி வரும் அதிர்வலைகள், இவ்வமைப்பு உயிர்க் கொள்கையென ஏற்றுக்கொண்டிருக்கும் இந்துத்துவம், இந்துத்துவத்தின் பாசிசப் பண்புகள் இவையெல்லாம் இந்திய மண்ணில் தொடர்ந்து விதைக்கப்பட்டு வருவதை, இந்திய வகுப்புவாத அரசியலின் வளர்ச்சியைக் கவனத்தில் கொள்வோர் நன்கறிவர்.
“இந்திய நாட்டில் வாழ்வோர் அனைவரும் இந்துகள்; இந்துகள் அல்லாதோர் இந்தியர்கள் இல்லை” என்ற மோகன் பகவத் அவர்களின் திருவசனங்களில் புதியன எதுவும் இல்லை. எனவே, அகில இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவையின் எதிர்வினை பாராட்டப்பெற வேண்டியதொன்றாலும், பகவத் அவர்களின் செய்தியின் உள்ளடக்கத்துள் புதைந்திருக்கும் அரசியலைக் கிறித்தவர்களுக்காகவாவது தெளிவுபடுத்துவது இன்றைய கட்டாயத் தேவையாகும்.
‘இந்தியா’ என்ற பூகோள அமைப்பை நாம் ஏற்றுக்கொள்கிறோம். இந்தியா, இந்துத்துவர்களின் வரலாற்றுக் கண்ணோட்டத்தின்படி, எப்போதும் இருக்கும் அல்லது இயங்கும் ஒரு நிலப்பரப்பு (Territory) எனும்
பொய்மையை நாங்கள் ஏற்கவில்லை. ஆங்கிலேயர் வருகைக்கு முன் இன்று வழங்கப்பெறும் ‘இந்து’ என்ற கருத்தாக்கம் இல்லை; வெள்ளையன் தயவினால்தான் நாம் ‘இந்து’ என்ற பெயரினைப் பெற்றோம் என்று நன்றியோடு பகர்ந்த மேனாள் காஞ்சிப் பெரியவாளின் கூற்றினை ஏற்கின்றோம். “இந்துவாக இயலாதோர் இந்தியராக இருக்கமுடியாது” என்ற
இந்திய மதவாதிகளுக்கு இந்து மதம் இந்தியா என்ற கட்டமைப்பின் உள்ளடங்கிய பொய்மையை எடுத்துரைக்கவே இவ் விளக்கம்.
‘இந்தியா
ஒரு தேசமல்ல’ என்பதையும், ‘தேசங்களின் நாடு’ என்பதையும் ஏற்கின்றோம். பிரபல அரசியல் அறிஞர் அவர்களின் ஆழமான ஆய்வின்படி, ‘இந்தியா அரசியல் ரீதியாக ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு நாடு’
(Politically integrated).
ஆனால், பன்மைக் கலாச்சாரமுடையது (Culturity plural)
என்பார். இன்றைய இந்தியா ஒரு சுயம்புத்தன்மையுடைய ஒன்றல்ல; வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்டதும் அல்ல; சுருக்கமாக, இது ஒற்றை இந்தியாவும் அல்ல; இதன் அழகே இதில் உள்ளடங்கிய பன்மைக் குணமே! பன்மையை மறுப்பவரே இந்தியப் பண்பை மறுப்போர், ஏன்... இந்தியாவை மறுப்போர்.
இந்துத்துவர்களால்
விழுந்து போற்றப்பெறும் இந்து மதம் ஒற்றைப் பண்புடைய (Homogenous) மதமல்ல; ஒற்றை
என்பது கட்டமைக்கப்பட்ட ஒன்று. இந்து மதத்தின் உயர்வு அதன் பன்மையுள் உள்ளது. ஒற்றைக் குணமுடைய மதமாக இந்து மதம் எப்போதும் இருந்ததில்லை. இந்திய நிலப்பரப்பில் சைவம், வைணவம், சித்தார்த்தம் என்று நிலவிய நம்பிக்கைகள் உண்டு. இவைகளுக்கான பொதுப்பெயர்தான் இந்து. இன்று நாம் காணும் இந்து மதம் ‘Syndicated Hinduism’ என்பார் பிரபல வரலாற்றுப் பேராசிரியர் டாக்டர் ரொமிலா தப்பார். இந்து அல்லாதோரையும் ‘இந்து’ என்ற பெயரில் ஒருங்கிணைத்து அகவயப்படுத்தி, அரசியல்ரீதியான பெரும்பான்மையை உருவாக்கிய இந்துத்துவர்கள், யாரை ‘இந்து’ என்றழைக்கின்றனர்? யாரை
‘அ. இந்து’
(A Hindu) என்று
அழைக்கின்றனர்? இந்துவாக இல்லாதவர்கள் என்று இந்து மதம் சாராதோரை அழைப்பதில் எவருக்கும் கருத்து வேறுபாடில்லை. ஆனால், இந்து மதம் சாராதோர் இந்தியர் என்று கருதப்பெறார் என்ற கருத்தை எவரும் ஏற்கமுடியாது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இரண்டாவது தலைவராக அல்லது குருஜியாக அழைக்கப்பட்ட குரு கோல்வால்க்கரின் ‘Punch of thoughts’ எனும்
நூல் இந்துத்துவக் கருத்தியலின் மூலமாகும். இவரின் கருத்துப்படி, “இந்தியாவில் வாழும் இந்தியர்கள் இந்து மதத்தை ஏற்கவேண்டும்; இந்துமதத் தலைவர்களைப் போற்றவேண்டும்; இந்து கலாச்சாரம் இவர்கள் வாழ்வாகவேண்டும். இவை தவிர்த்து வேறெதுவும் இவர்களின் வாழ்வுக்கு முதன்மை இல்லை. இல்லையெனில், இந்துவல்லாத இவர்களும் இந்தியாவில் வாழலாம். எப்படி? இந்நாட்டின் உரிமைகளுக்குத் தகுதியற்றவராய் (Deserving nothing),
எவ்வுரிமையும் கோர முடியாதவராய் (claiming nothing), ஏன்... குடியுரிமை கூட மறுக்கப்பட்டவராய்தான் (not event citizenship)
வாழ முடியும். இவர்கள் இந்துகளாய் வாழ்ந்தால் இந்தியர்கள்! இல்லையெனில் அந்நியர்கள் (Aliens)!
மதம்
எப்போதும் ஒரு நாட்டின் குடிமகனின் குடியுரிமையைக் காக்கும் அலகாக இருக்க முடியாது என்பதே உண்மையாயிருக்க, யாரை அல்லது எதனை நியாயப்படுத்த பகவத் இம்முழக்கத்தை இப்போது முன்வைக்கிறார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின்போது மோகன் பகவத் விடுத்த இந்து மதம் சாராதோர் குறித்த அறிக்கை இவரின் ‘அ. இந்து’ அறிக்கையை மேலும் ஆழப்படுத்தியது. “கடந்த ஆயிரம் ஆண்டுகளில் இந்நாட்டில் நுழைந்த வெளிநாட்டினர் பலர் திரும்பிச் சென்ற போது சிலரை இந்நாட்டிலேயே விட்டுச் சென்றனர். பாரதியக் கலாச்சாரத்தின் பெருங்குணத்திற்கேற்ப இந்நாட்டில் தங்கியோர் பரிவுடன் கவனிக்கப்பட்டனர். இம்மக்களை இந்நாட்டின் குடிகளாகவே ஏற்றுக்கொண்டனர். ஆனால், இவர்கள் தம் வேறுபட்ட அடையாளங்களால் நாட்டில் வேற்றுமை உணர்வை வளர்த்தனர்” (‘தி
இந்து’, அக்.6).
மோகன்
பகவத் அவர்களின் உரையை மெச்சிய மோடி, நெகிழ்ந்து போனதாக அறிவித்தார். மோகன் பகவத் இந்துகள் அல்லாதோர் சிலர் தம் தனித்த அடையாளங்களைத் தொடர்ந்து கைக்கொள்வதால் இந்நாட்டில் வேற்றுமை வளர்வதையும், நாட்டின் ஒருமை பாதிக்கப்படுவதையும் சுட்டிக்காட்டுகிறார். இன்று ‘அ. இந்தியர்’ பற்றிப் பேசும் மோகன் பகவத், இந்துகள் அல்லாதோரின் தனித்த அடையாளத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறார்.
மதம்
ஒரு தனிமனிதன் சார்ந்த நம்பிக்கை மட்டுமல்ல; ஏற்றுக்கொண்ட நம்பிக்கையால் ஓர் அடையாளத்தையும் பெறுகின்றான். கிறித்தவம் என்பது என் நம்பிக்கை மட்டுமல்ல; அது என் அடையாளமாகவும் உள்ளது. இந்த அடையாளத்தை, அடையாளம் எனும் உரிமையை மறுக்கும் உரிமை எவருக்கும் இல்லை. மோகன் பேசும் கருணை இங்கு ஏற்கத்தக்கது அல்ல!
சவார்க்கரும்
மத
அடையாளமும்
மோகன்
பகவத் அறிக்கையின் உள்ளடக்கம் புதிய செய்தியில்லை; இவ்வறிக்கையின் உள்ளடக்கம் கண்டு ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பின் தோற்றுனராம் ஹெக்டவார், குருஜி கோல்வால்க்கர் தொட்டு இன்றைய மோகன் பகவத் வரை அனைவரும் ஒரே தொனியில்தான் பேசிவருகின்றனர். இந்துத்துவத்தை ஏற்றுக்கொண்ட சங்கப் பரிவாரங்கள் அனைத்தும் இக்கருத்தில் ஒற்றைக் கருத்துடையவையே.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு முந்தைய அமைப்பினரான (1916) வீர் சவார்க்கர் என்பவர்தாம் ‘இந்துத்துவா’ என்ற
சொல்லாடலை முதன் முதலில் கையாள்கிறார். ஆர்.எஸ்.எஸ்.-சின் உறுப்பினராக இருந்த கோட்சே, இந்து மகாசபையின் உறுப்பினராக இருந்தபோதுதான் காந்தியின் கொலைகாரனாக மாறுகிறார். காந்தியின் மீது நிகழ்த்தப்பட்ட வன்மத்திற்கான காரணம் என்ன என்பதை வரலாறு அறியும். காந்தியின் கொள்கைகள் இந்து இராஷ்டிர உருவாக்கத்திற்கு எதிரானது என்பதாலும், இசுலாமிய பகையை காந்தியின் பரிவாரங்கள் முன்னெடுக்காமையே காரணம் என்பதும் வெளிப்படை. ஆர். எஸ்.எஸ். மற்றும் இந்து மகாசபையும் ‘இந்தியர் யார்?’ என்று நிர்ணயம் செய்வதில் ஒத்தக் கருத்துடையவையே.
“அவர்கள் (இசுலாமியர்) இந்நாட்டில் பிறந்தவர் என்பதாலேயே அவர்கள் ஒற்றை இதயம் கொண்டவர்கள் என்ற கருத்தை ஏற்கமுடியாது. இந்து, இசுலாமியர் ஒற்றுமையை ஏற்பதைவிட நான் சாவதே சிறந்தது.”
“நாமனைவரும் இந்துகளே; இந்துகளாகிய நாம் அனைவரும் பொதுவான இரத்த உறவு (common
blood) கொண்டவர்கள். நாம் தட்சணத்தியாஸ், கௌட்ஸ் சராவத்ஸ், கின்னர்ஸ், வாணர் என்ற பிரிவுகளுள் ஒன்றாக இருக்கலாம். ஆனாலும், நாம் அனைவரும் இந்துகளே. நம்முள் ஓடுவது பொதுவான இரத்தமே. நாம் ஒற்றைக் கொள்கையுடையவராய் (Monists) நம்பிக்கையற்ற
நாத்திகராய், பல்வகை இறைக்கொள்கையராய் இருக்கலாம். ஆனாலும் நாம் இந்துகளே.”
“இந்நாட்டைத் தாய்நாடாக ஏற்கும் அனைவரும் இந்நாட்டைத் தம் முன்னோர் வாழ்ந்த நாடாக (பித்ரு பூமி) புண்ணிய பூமியாகக் கருதுவார்களானால், அவர்களே இந்த நாட்டின் இயல்பான குடிமக்கள் (in
habitants) ஆவர். இப்புண்ணிய பூமி (கிறித்தவர்களின் பாலஸ்தீனம் போலவோ முசுலிம்களின் அரேபியா போன்றதோ அல்ல). கிறித்தவர்களும் யூதர்களும் இசுலாமியரும் இயல்பான (Original) தேசிய (Original) குடிகளல்லர்.
இந்தியா அடிப்படையில் ஓர் இந்து நாடு என்பதுதான் உண்மை.”
“இந்தியா எனும் தேசம் இந்துகளை மட்டுமே உள்ளடக்கியது” (Hindu Constitute this nation) – Janki Bakkhle ‘Savakkar
aud the making of Hinduva’ (மேற்கண்ட நூலில் தெரிவு செய்யப்பட்ட சவார்க்கரின் கருத்துகள்).
இன்றைய
மோகன் பகவத்தின் பிரிவினைவாதக் கருத்து புதியது அல்ல. சங்கப் பரிவாரங்களின் தொடக்கக் காலந்தொட்டு தொடர்ந்து கூறிவரும் வெறும் முழக்கமல்ல. இவ்வமைப்பின் அடிநாதமே இந்நாட்டை மதரீதியான, மதம் சார்ந்த நாடாக மாற்றுவது எனும் உண்மையை அறிய வேண்டுவதே இப்போதைய தேவை.
இந்தியா
விடுதலை பெறும் முன்பே இந்தியாவுக்கான அடையாளம் (idea
of India) எதுவாக
இருக்க வேண்டும் என்பதில் அன்றைய இந்தியத் தலைவர்கள் தெளிவாகவே இருந்தனர். உண்மை தேசியம் அல்லது உள்ளடங்கிய தேசியம் பேசியவர்கள், அப்போதே ஒற்றைத் தேசியம் அல்லது ஒதுக்கும் தேசியர்களின் தீவிர மதவாதம் பேசியோரின் எதிர்ப்பினைத் தீரத்தோடு எதிர்கொண்டு, பெரும்பான்மை மதவாதிகளின் எதிர்ப்பைச் சமாளித்து, இந்தியாவிற்கான புதிய அடையாளமாக, சனநாயகச் சமய சார்பற்ற அரசை நிறுவினர்.
இந்தியா
எனும் மண்ணிற்குப் பொருத்தமற்ற ஓர் அரசமைப்பை நிலைநிறுத்துவதில் வெற்றிபெற்ற தேசியத் தலைவர்களைப் போற்றும் நாம், இந்தியாவிற்கென சனநாயகத்தை, சனநாயகம் எனும் விழுமியத்தை மெல்ல மெல்லக் கைநழுவி வருகிறோமோ என்ற அச்சம் குடிமக்களை வாட்டி வருவதையும், இன்று இந்து அல்லாதோருக்கு இந்தியாவில் இடம் இல்லை என்பதும், இந்தியர் என்ற உரிமை வேண்டுவோர் இந்துகளாகவே இருக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தும் போக்கும் ஒரு பாசிசப் பண்பே.
ஹிட்லரின்
நாசிகள் இனப்பகை வளர்த்து, யூதர்களைக் கொன்றொழித்த இனப்படுகொலை நிகழ்வை நியாயப்படுத்திய கோல்வால்க்கரின் கருத்தியல் இன்றும் இந்தியாவில் சிறுபான்மையினரை ஒதுக்கி ஒடுக்கும் அரசியலில் நாளும் சாத்தியமாகி வருதலை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்திய
சனநாயகம், சனநாயகப் பாதுகாப்பிற்கென உருவாக்கப்பட்டுள்ள சனநாயக நிறுவனங்கள் அனைத்தையும் ‘un
Hindu’ (இந்து
பண்பு இல்லாதது) என்று வர்ணிக்கப்பட்ட இந்துத்துவவாதிகள்தாம் இன்று நம்மை ஆட்சி செய்கின்றனர்.
இந்துத்துவ
உள்ளடக்கம் இந்தியர்களுக்கு எதிரானது; ஏன்... இந்துகளுக்கே எதிரானது என்பதையும் புரிந்துகொண்டால் நம் இந்துத்துவ எதிர்ப்பின் அகலம் விரியும்.
தமிழ்நாட்டில் தற்போது நடைமுறைக்கு வந்துள்ள ‘SIR’ (Special Intensive Revision) என்பது சாதாரண வாக்காளர் பட்டியல் திருத்தம் அல்ல; இதன் தாக்கம், விளைவு, நோக்கம் ஆகிய மூன்றும் தீவிரமாகப் புரிந்துகொள்ள வேண்டியவையாகும். வழக்கமாகத் தேர்தல் ஆணையம் வருடந்தோறும் இறந்தவர்களை நீக்குதல், புதிய வாக்காளர்களைச் சேர்த்தல், ஊரை விட்டு நீண்ட காலமாக இல்லாதவர்களின் பெயர்களை நீக்குதல் போன்ற திருத்தங்களைச் செய்கிறது. ஆனால், இந்த முறை ‘SIR’ என்ற பெயரில் நடப்பது, பழைய வாக்காளர் பட்டியலைத் திருத்துவது அல்ல; அதை முற்றிலுமாக ஒழித்துப் புதிய பட்டியல் உருவாக்கும் செயல்முறை.
தமிழ்நாட்டின்
6 கோடி 36 இலட்சம் வாக்காளர்களும் இப்போதைய நிலையில் ‘இருப்பதாக’
இனி ஏற்கப்படவில்லை. தேர்தல் ஆணையம் பழைய பட்டியலைக் களையெடுத்து, குப்பைத்தொட்டியில் போட்ட நிலையிலேயே ஒவ்வொருவரும் புதிய கணக்கெடுப்புப் படிவத்தை (enumeration
form) நிரப்பிச் சமர்ப்பித்தால் மட்டுமே வாக்காளர் அடையாளம் கிடைக்கும். அப்படிவம் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால்,
வாக்குரிமை தானாகவே அழிகிறது. இவ்வளவுதான்! ஆனால், இதன் விளைவுகள் மிகப்பெரியது.
ஒரு
வாக்குச்சாவடிக்குள் உள்ள மக்கள் அனைவரும் அப்படிவத்தை நிரப்பவில்லை என்றால், அந்த முழு வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் இல்லை எனும் அபாயம் உருவாகிறது. அதனால், இது ‘திருத்தம்’
அல்ல; மொத்தமாக ‘நீக்கம்’ எனப் பலரும் உணரத்தொடங்கியுள்ளனர். இதன் நோக்கம் வாக்காளர்களைச் சரிபார்ப்பதா? அல்லது சிலரை விலக்குவதா? என்ற கேள்வி உருவாகிறது.
சந்தேகத்தை ஊட்டும்
விவரங்கள்
புதிய
கணக்கெடுப்புப் படிவத்தில் ஆச்சரியமூட்டும் அளவுக்குப் பெருமளவு விவரங்கள் கேட்கப்படுகின்றன. பிறந்த தேதி, ஆதார் எண், கைப்பேசி எண், தந்தை அல்லது பாதுகாவலரின் பெயர் மட்டுமல்லாமல், தாய் மற்றும் வாக்காளர் அடையாள எண் வரையிலும் கேட்டுள்ளார்கள். மேலும், 2002-இல் நடந்த முந்தைய தீவிரத் திருத்தப் பட்டியலில் இருந்த உறவினர் பெயரும், அவருடன் உள்ள உறவு முறையும் தகவல் அளிக்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. அந்த உறவினர் இறந்தவராக இருந்தால், இறப்புச் சான்றிதழ் சேர்க்க வேண்டிய நிலையும் உருவாகிறது. இப்படிவம் ஒருவருக்கு ஒன்று மட்டுமே வழங்கப்படும். அதிலும் QR குறியீடு
இருக்கும். அதனால் இதனை ஜெராக்ஸ் எடுத்து மாற்றிப் பயன்படுத்துதல் முடியாது. படிவத்தில் சிறிதளவு தவறு ஏற்பட்டால் அதைத் திருத்தும் வாய்ப்பு இருக்குமா? என்பதுகூடத் தெளிவாக அறிவிக்கப்படவில்லை. அதேவேளையில், 2002-க்குப்பின் வாக்காளராகப் பதிவு செய்தவர்கள் தங்கள் வாக்குரிமையை நிரூபிக்க ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டிய தீர்மானமும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
நவம்பர்
4 முதல் டிசம்பர் 4 வரை வெறும் முப்பது நாள்களுக்குள் தமிழ்நாட்டின் 6 கோடி 36 இலட்சம் பேரிடம் புதிய படிவங்களை நிரப்பச் செய்து விடமுடியுமா? செயல் ரீதியாகச் சாத்தியமேயில்லை. இந்தச் சிறுகாலத்தில் குறைந்தது 1.5 கோடி மக்கள் வாக்குரிமையைத் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக இழக்கக்கூடும். பின்னர் மேல்முறையீடு அல்லது விசாரணை மூலம் மீண்டும் உரிமையை உறுதிப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகும்.
இத்தகைய
சூழ்நிலையில், இது ஒரு சாதாரண தேர்தல் தொழில்நுட்பப் பணியாகத் தெரியவில்லை எனப் பலரும் குற்றஞ்சாட்டுகின்றனர். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் (CAA) விளைவாக இருந்த தேசியக் குடிமக்கள் பதிவேடு (NRC) போன்று,
இதுவும் மறைமுகமாகக் குடியுரிமையைச் சரிபார்க் கும் முயற்சியாக இருக்கலாமோ? என்ற சந்தேகம் எழுகிறது.
இன்றைய
தேர்தல் ஆணையம் பா.ச.க.
சார்ந்த அரசியல் அழுத்தத்திற்குள் இயங்குவதாகப் பலரும் பார்க்கின்றனர். அதனால், பா.ச.க.
அல்லாத கட்சிகளுக்கு வாக்களிக்கிற மக்கள்தொகையை நீக்கவே அரசியல் நோக்கம் உள்ளதாகவும் ஒரு பரவலான எண்ணம் உருவாகியுள்ளது. அ.தி.மு.க. உள்ளிட்ட கூட்டணிக்
கட்சிகளின் மௌன ஆதரவு இச்சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகிறது.
வாக்குரிமை
என்பது குடிமகனின் அடிப்படை உரிமை. எந்த மதம், சாதி, மொழி, பொருளாதார நிலை கொண்டவராக இருந்தாலும் வாக்குரிமையின் புனிதம் அனைவருக்கும் சமமானது. அந்த உரிமையைச் சுருக்கும் எந்தச் செயலும் சனநாயகத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும். SIR என்ற முறைமையில் பல கேள்விகள் எழுகின்றன.
வாக்காளர் பட்டியலை நீக்கி புதிய பதிவு செய்யும் பணியில் அவசரம், அச்சம், சந்தேகம் நிறைந்துள்ளன. ஒருவர் வாக்காளராக இருப்பதற்கு மீண்டும் ஆதாரம் அளிக்க வேண்டிய நிலை வந்தால், அது பொதுமக்களின் நம்பிக்கையையும் சனநாயகத்தின் அடித்தளத்தையும் நசுக்கும். வாக்குரிமை என்பது அரசின் கருணையால் வழங்கப்படும் பிரிவு அல்ல; அது ஒவ்வொரு குடிமக்களின் பிறப்புரிமை. அதனைப் பாதுகாப்பது சனநாயகத்தின் உயிர்ச்சுவாசம்.
பாராளுமன்றம்,
நீதித்துறை, மக்கள் - மூன்றும் ஒருமித்த குரலில் இதனைச் சீராய்ந்து கேள்வி எழுப்ப வேண்டிய நேரம் இதோ வந்துவிட்டது.
“நான் ஒரு சாதாரணமான ஆட்டோக்காரன் தான் சார். ஏதோ அன்றாடம் கிடைக்கிறத வைச்சி பிழைப்பு ஓடுது. பணம் சம்பாதிக்கணுமுனு ஆசைதான். அதுக்காக இப்படி திருடிதான் சம்பாதிக்கணுமுணு இல்ல சார். அதான் இந்தப் பணத்தை உங்க கிட்டயே கொடுத்துக்கிட்டு போலாமுணு வந்தேன்!”
தன்
ஆட்டோவில் ஒருவர் மறந்து வைத்துச் சென்ற தோள்பையையும், அதனுள்ளே இருந்த ஒரு கட்டுப் பணத்தையும் போலீசிடம் ஒப்படைக்க வந்திருந்தான் கணேசன். காவல்துறையினர் கணேசனின் நன்னடத்தையை வெகுவாகப் பாராட்டி அவரோடு புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.
ஆட்டோவில்
வீடு திரும்பும்போது கணேசனின் மனம் கம்பளத்தில் பறப்பதுபோல இலகுவாக இருந்தது. ஏதோ பெரிய மனப்பாரம் குறைந்ததாகத் தோன்றியது. ஆட்டோ நேராகச் சென்றாலும், அவனுடைய மனம் காலை நடந்த நிகழ்வையே சுற்றி வந்துகொண்டிருந்தது.
அன்றைய
நாள் காலை ‘ஊபர்’ செயலியில் கணேசனுக்கு முதல் சவாரி வந்தது. பயணியை அழைத்துச்செல்ல சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் வந்திருந்தான். ஐந்து நிமிடங்கள் ஆன பிறகும் பயணியைக்
கண்டுபிடிக்க முடியவில்லை. போன் போட்டுப் பார்க்கிறான். ‘இதோ இங்கு நிற்கிறேன், அங்கு நிற்கிறேன்’ என்று
பதில் வருகிறதே தவிர, சரியான லொக்கேசனை கணேசனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
“சார்! உங்க லொக்கேசனை ‘என்னேபிள்’
பண்ணுங்க. அப்போதான் நீங்க எங்க இருக்கீங்கனு எனக்குத் தெரியும்”
என்று போனில் ஒரு சிறு பிள்ளைக்குக் கூறுவதுபோல விளக்கமாகக் கூறிக்கொண்டிருக்கிறான்.
சில
நிமிடப் போராட்டங்களுக்குப் பிறகுதான் தெரிந்தது, அந்தப் பயணி சென்னை எக்மோருக்குப் பதிலாக, பிக்-அப் லொக்கேசனை சென்னை சென்ட்ரலுக்குப் போட்டிருப்பது. மனத்திற்குள்ளேயே அந்தப் பயணியைத் திட்டிக்கொண்டு சென்னை எக்மோர் இரயில் நிலையத்திற்கு விரைந்தான் கணேசன்.
சர்ட்
இன் செய்துகொண்டு கையில் ஒரு சூட்கேசும், தோளில் ஒரு பையும் மாட்டிக்கொண்டு நின்றுகொண்டிந்தார் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர். முதல் முறையாக சென்னைக்கு வருவது போலிருந்தது அவருடைய செயல்பாடுகள். கணேசன் அவரை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு ஆள்வார்பேட்டை நோக்கிப் புறப்பட்டார்.
பயணத்தின்
தொடக்கநிலையில் யாரும் பேசிக்கொள்ளவில்லை. அவ்வப்போது கணேசன் அவரை முன்பாக இருந்த கண்ணாடியில் பார்த்துக்கொண்டார்.
“சார்! காலையிலேயே என்ன சுத்தவிட்டிட்டீங்களே! ஒரு ஐம்பது ரூபாய் போட்டுக்கொடுங்க” என்று
கணேசன் கேட்டவுடனேயே, புகை கக்கும் ஆட்டோ சைலன்சர் போலக் கோபத்தில் கத்தத் தொடங்கினார் அந்த மனிதர்.
“ஆட்டோவ நிறுத்து. ஸ்டாப் த ஆட்டோ! ஐ
சே. யூ டாமிட்! ரைட்
நவ்.”
கணேசனுக்குத்
தூக்கி வாரிப்போட்டது. பந்தை எறிந்தால் பந்து திரும்பி வரும் என்று எதிர்பார்த்த கணேசன் அணுகுண்டு திரும்பி வந்ததை எதிர்பார்க்கவில்லை. ஆட்டோவைச் சாலையருகிலே நிறுத்தினார். ஆட்டோவை விட்டு இறங்கியவர் ஓய்ந்தபாடில்லை. கூப்பாடு போட்டு ஊரைக் கூட்டினார். “ஐ வில் கால்
த போலீஸ்” என்று ஆங்கிலத்திலேயே பேசிக்கொண்டிருந்தார். சாலையில் நின்று கொண்டிருந்தவர்கள், சென்றுகொண்டிருந்தவர்கள் எனப் பலரும் அங்குக் கூடிவிட்டனர்.
“சார்! கொஞ்சம் பாத்து பேசுங்க. படிச்ச மனுசன் மாதிரி தெரியிறீங்க. ஒழுங்கா லொக்கேசன் கூட உங்களுக்குப் போடத் தெரியல. உங்க மேல தப்ப வைச்சிக்கிட்டு என்ன தப்பு சொல்லாதீங்க” என்று
கொஞ்சம் கடுமையாகப் பேசிவிட்டார் கணேசன்.
என்ன
நினைத்தாரோ தெரியவில்லை, திடீரென்று ஆட்டோவிலிருந்த தன் சூட்கேசை எடுத்துக்கொண்டு அந்த நெடுஞ்சாலையில் ஒன்றும் பேசாமல் வேகமாக நடந்தார் அந்த மனிதர்.
“யோவ்! காசு கொடுத்துக்கிட்டுப் போயா” என்று கூறிப்பார்த்தார் கணேசன். ஆனால், அந்த மனிதருக்கு அந்த நேரத்தில் காது கேட்கவில்லை. கோபத்தில் கொப்பளித்துக்கொண்டே தன் ஆட்டோவை ஓட்டிக்கொண்டு ஸ்டாண்டுக்கு திரும்பினார் கணேசன்.
‘காலையிலேயே பஞ்சாயத்து ஆகிப்போச்சே’ என்று
தன் முகத்தைக் கண்ணாடியில் பார்க்கையில், பின்னிருக்கையில் இருந்த அந்தத் தோள் பையை கணேசன் பார்த்தார். ஆத்திர அவசரத்தில் அந்த மனிதர் தோள் பையை விட்டுவிட்டுப் போயிருக்கக் கூடும். ஆட்டோவை ஓரமாக ஒதுக்கி, பைக்குள் என்னயிருக்கின்றது என்பதைப் பார்க்கின்றபோது, அங்குச் சில கோப்புகளும், ஒரு கட்டுப் பணமும் இருந்தன.
‘அந்த மனுசனைப் பழிவாங்க சரியான வாய்ப்பு. இந்தப் பணத்தை நாமே வைத்துக்கொள்ளலாம்’ என்றது
ஒரு மனம். ‘திருப்பிக் கொடுத்துவிடலாம். அந்த மனுசனுக்கு அப்படி என்ன பிரச்சினையோ?’ என்றது மற்றொரு மனம்.
பல
குழப்பங்கள், போராட்டங்களுக்குப் பிறகு போலிஸ் ஸ்டேசனில் திருப்பிக்கொடுத்து விடலாம் என முடிவுசெய்து போலிஸ்
ஸ்டேசன் நோக்கிப் புறப்பட்டார் கணேசன். அவருடைய ஆட்டோவின் பின்னால் ‘நேர்மைதான் எரிபொருள் - அதுதான் வாழ்க்கையை ஓட்டும்’ என்று எழுதப்பட்டிருந்தது.
பொய்யும்
புரட்டும் போலியும் ஏமாற்றும் மலிந்துகிடக்கும் இணைய உலகில், ஒன்று குறைபடுவதாகப் பார்க்கிறேன். அதுதான் நேர்மை என்ற எரிபொருள். புலனம் (Wats-App) செயலியை
இன்று உலக அளவில் 2.78 பில்லியனுக்கு அதிகமானோர் 180 நாடுகளில் பயன்படுத்துகின்றனர். ஒரு நாளைக்குச் சராசரியாக 140 பில்லியன் குறுஞ்செய்திகளைப் பகிர்ந்துகொள்கின்றனர். பேசுவதற்கு, குறுஞ்செய்தி அனுப்புவதற்கு, உணர்வுகளை எமோஜி வழியாகப் பகிர்ந்துகொள்வதற்கு, குரல் செய்தி அனுப்புவதற்கென்று பல தேவைகளுக்கு நாம்
வாட்ஸ்அப்பைப் பயன்படுத்துகிறோம். ஆனால், சமீபகாலமாக, புலனம் கூட கொந்தர்களால் (Hackers) கொந்தப்படுகிறது
(Hacking) என்பது
அதிர்ச்சி தருகின்றது (கொஞ்சம் கணினித் தொடர்பான தமிழ் வார்த்தைகளையும் அவ்வப்போது தெரிந்துகொள்ளலாமே!).
1. சைபர்
கிரிமினல்கள் லிங் ஒன்றை வாட்ஸ்-அப் குழுக்களில் அல்லது தனிநபருக்கு அனுப்பி அதனைக் ‘கிளிக்’ செய்யச் சொல்கின்றனர். அனுப்பப்படுகின்ற மீத்தொடுப்பு (Hyberlink) பயனர்களால்
சொடுக்கப்படுகிறப்போது
(Click) நமது
கணக்கு கொந்தப்படுகிறது. எனவே இத்தகைய ஏமாற்று மீத்தொடுப்புகளை (phishing) புறக்கணிப்பது நல்லது.
2. சைபர்
கிரிமினல்கள் கால் அல்லது மெசேஜ் செய்து ஒருமுறை கடவுச்சொல் (OTP) அல்லது
உறுதிப்படுத்தல் குறியீட்டை (Verification code)
சூழ்ச்சியால் கேட்டுப் பெற்றுக்கொண்டு நமது கணக்கை ‘ஹேக்’ செய்கின்றனர். எனவே, அத்தகைய ஏமாற்றுதல்களுக்கு இரையாகாமலிருப்பது நல்லது.
3. சில
வேளைகளில் பெகாசஸ் (Pegasus) போன்ற
உளவுச் செயலிகளைப் பயன்படுத்தி நமது கணக்கை ‘கொந்தர்களால்’ ‘ஹேக்’ செய்ய
முடியும்.
4. கியூ.ஆர். குறியீட்டை (QR Code) வருடி
(Scan), பிற
மின்னணு சாதனங்களில் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்துகின்றோம். ஆனால், அந்தக் கியூ.ஆர். குறியீடு நம்பகமானதா என்பதைச் சரிபார்க்கவேண்டும்.
5. வாட்ஸ்அப்பில்
‘இரு-படி சரிபார்ப்பை’ (Two step
verification) இயலுமைப்படுத்துவது (enabling) கொந்தர்களிடமிருந்து நம்மைப் பாதுகாக்க உதவும்.
மக்களை
இத்தகைய புதிய அதிநவீன ஹேக்கர்களிடமிருந்து பாதுகாக்க தொழில்நுட்பத்துறையைச் சார்ந்தவர்களும் இந்திய அரசும் புதிய தொழில்நுட்பத்தையும் செயல்திட்டங்களையும் துரிதமாக முன்வைக்கவேண்டும். செயலிகளையும் இணையத் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தும் மக்கள் மிகக் கவனத்தோடு அவற்றைக் கையாளவேண்டும்.
‘நேர்மைதான் எரிபொருள் - அதுதான் வாழ்க்கையை ஓட்டும்’ என்ற எண்ணம் இல்லாதவரை, இணையத் தாக்குதல்களும் கொந்துதல்களும் தொடர்ந்து நடைபெறும் என்றே நினைக்கிறேன்.
(தொடரும்)
தமிழ்நாட்டின் அரசியல் வரலாறு, இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்து வித்தியாசமான பாதையில் சென்றது என்பது மறுக்க முடியாத உண்மை. இங்கு அரசியல் மையங்கள், கட்சித் தலைமைகள், மக்கள் இயக்கங்கள் எனப் பலவற்றுக்கு உயிர் கொடுத்தது திரை உலகம். அரசியல் தலைவர்கள் திரையில் தோன்றிய கதாபாத்திரங்கள் மூலமே மக்களின் இதயங்களில் நுழைந்தனர்.
இன்றுகூட
‘திரையில் தோன்றுபவர் நாளை தலைவராக வருவார்’ என்ற நம்பிக்கை பொதுமக்களின் மனத்தில் உறுதியான பிம்பமாக நிலைத்துள்ளது. இந்த நிலை உருவாகக் காரணம் என்ன? திரை மற்றும் அரசியல் இணைந்த நம் மாநிலத்தில் இது ஒரு சமூகப் பிம்பமாக மாறிவிட்டதா? இன்றைய இளம் தலைமுறையினர் இதை எவ்வாறு புரிந்துகொள்கிறார்கள்?
இந்திய
விடுதலைக்குப் பின் தொடர்ந்த காலம் அரசியலின் பொற்காலம் என்று கூறலாம். அப்போது அரசியல் என்பது மக்கள் நலனுக்கான ஓர் அர்ப்பணிப்பு மற்றும் மக்கள் வாழ்க்கையை மேம்படுத்துதல் எனும் எண்ணம் கொண்ட தலைவர்கள் மட்டுமே அரசியல் களத்தில் நுழைந்தனர். இந்தக் காலகட்டத்தில் மாணவர்களும் சமூகப் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வுடன் அரசியலில் ஈடுபட்டனர். ஆனால், காலம் மாறியது. இன்று அரசியல் ஓர் அதிகாரப் போட்டி, ஒரு தனிநபர் நலப் பந்தயம், ஒரு புகழ் மேடையென மாறிவிட்டது.
அரசியலின் மையநோக்கம் - மக்கள் சேவை மறைந்து, அதிகார ஆசை முன்னிலை பெற்றுள்ளது. இதுவே அரசியலைச் சீரழிக்கும் முக்கியக் காரணம். இன்றைய அரசியல் சிந்தனைகள் இன, சாதி, மொழி எனப் பிரிக்கப்பட்டு, சமூக ஒற்றுமை சிதைந்த, பொருளாதார, சமூக ரீதியாகப் பின்தங்கிய மக்களுக்காகப் போராட வேண்டிய மாண்பை மறந்து, இன்று வாக்கு வங்கிகளைப் பிடிக்கும் ஒரு விளையாட்டாக மாறிவிட்டது.
தமிழ்நாட்டில்
அரசியலையும் சினிமாவையும் பிரித்துப் பார்க்க முடியாது. திரையுலகம் தலைவர்களை உருவாக்கிய தாயகம். அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா
இவர்கள் அனைவரும் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்த தலைவர்கள். அவர்களின் திரைப்படங்கள் மக்களிடையே ஒருவித நம்பிக்கையையும் வெற்று வீரத்தையும் உருவாக்கின. ‘திரையில் நாயகன்; நிஜ வாழ்விலும் தலைவன்’ என்ற கற்பனை மக்களின் மனத்தில் வேரூன்றிவிட்டது. இன்றுகூட நம் இளம் தலைமுறை திரையுலக நாயகர்களையே தங்கள் அரசியல் மாதிரியாகக் காண்கிறது. சமூக நலனுக்கான சிந்தனைக்குப் பதிலாக, திரைப்படக் கவர்ச்சி மற்றும் புகழை அரசியலின் அடையாளமாகக் காண்கின்றனர். இது ஓர் ஆபத்தான மாற்றமாகும்.
இன்றைய
இளம் தலைமுறை சமூக ஊடகங்களின் காலத்தில் வளர்கின்றவர்கள். அவர்கள் அரசியலை ‘ட்ரெண்ட்’
அல்லது ‘விளையாட்டு’ போல
அணுகுகிறார்கள். தெளிவில்லா அரசியல் ஈடுபாடு ஒரு வெறும் ஆவேசம் மட்டுமே. தெளிவில்லாமல் சினிமா நட்சத்திரங்களை அரசியல் தலைவர்களாக ஏற்றுக்கொள்வது, சனநாயகத்தின் ஆழமான நோக்கத்தைச் சிதைக்கிறது. அரசியல் என்பது மக்களின் வாழ்க்கையை மாற்றும் சக்தி; ஆனால், அதை விளையாட்டாக எடுத்துக்கொள்ளும் நிலை ஆபத்தானது.
சினிமா
என்பது கலை வடிவம்; அது நம் வாழ்க்கையின் கலவையான பிரதிபலிப்பு. ஆனால், அது நம் வாழ்வை நிர்ணயிக்கக்கூடாது. நாயகன் திரையில் தோன்றுவது கற்பனை உலகம்; ஆனால், நிஜ வாழ்வில் ஒரு நாயகன் உருவாக வேண்டுமெனில் கல்வி, நேர்மை, சமூகப் பொறுப்பு ஆகியவை அவசியம். அரசியல் தலைவர்கள் சினிமாவிலிருந்து வருவது தவறில்லை; ஆனால், அவர்கள் திரைப்படக் கவர்ச்சியைவிட, மக்களுக்கான அர்ப்பணிப்பை முன்னிலைப்படுத்தினால் மட்டுமே அது உண்மையான தலைமை எனலாம்.
நம்
சமூகம் அறிவார்ந்தது; ஆனால், தற்போது அது தவறான திசையில் செல்கிறது. ‘திரையில் தோன்றினாலே தலைவனாகத் தகுதி வந்துவிடும்’ என்ற
எண்ணம் வேரூன்றும்போதே, உண்மையான அரசியல் நோக்கம் அழிகிறது. அரசியல் என்பது மக்கள் வாழ்வை உயர்த்தும் தளம்; சினிமா என்பது மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் தளம். இவை இரண்டும் இணையும்போது, ‘பொறுப்புள்ள கலைஞன்’ உருவாகலாம். ஆனால், பொறுப்பில்லாமல் இணையும்போது அது ‘மாயை அரசியல்’ ஆகிவிடும்.
தற்போதைய
இந்த நிலையை மாற்றுவது கல்வி மூலமே சாத்தியம். கல்வி என்பது மனிதனை அறிவார்ந்த குடிமகனாக மாற்றும் கருவி.
ஆசிரியர்கள்,
மாணவர்களுக்கு அரசியல் என்றால் என்ன என்பதைத் தெளிவாக நன்கு புரிய வைக்கவேண்டும்.
•
அரசியல் என்பது மக்கள் நலத்திற்கான பொறுப்பு என்பதை எடுத்துக்கூற வேண்டும்.
• சினிமா என்பது கலைக்கான மேடை; அரசியல் என்பது சேவைக்கான மேடை என்பதை மாணவர்கள் பிரிந்துணர்ந்திட பயிற்சியளித்தல் வேண்டும்.
• சிந்தனையுள்ள தலைமுறையே தூய்மையான அரசியல் களத்தில் நின்று போராடும் என்பதை அவர்களின் மனத்தில் மிக ஆழமாகப் பதிய வைத்தல்வேண்டும்.
ஆசிரியர்கள்.
மாணவர்களில் சமூக பொறுப்புணர்வு, அரசியல் விழிப்புணர்வு, சமூக நீதி பற்றிய புரிதல் ஆகியவற்றை வளர்க்கவேண்டிய நேரம் இது.
ஆகவே,
இன்றைய இளம் தலைமுறை அரசியலை சிந்தனையுடன், விழிப்புணர்வுடன், பொறுப்புடன் அணுக வேண்டும். அதற்கு வழிகாட்டும் வெளிச்சம் கல்வித்துறை, ஆசிரியர்கள் மற்றும் அறிவார்ந்த சமூகம்தான். அதுவே நாளைய அரசியலின் தரத்தை உயர்த்தும் அறிவார்ந்த தலைமுறையின் தொடக்கம் ஆகும்.