news
சிறப்புக்கட்டுரை
ஏமாந்தோரும்... ஏமாற்றப்பட்டோரும்!

இந்தியாவில் இன்னும் மக்களாட்சி உயிரோடு (Survival) இருப்பதற்கான காரணம் என்ன? இந்தியர் சனநாயகவாதிகள் (Democratic) என்பதால் அல்ல; மக்களாட்சி என்பது அதிகாரத்தைப் பெறுவதற்கான மிகப்பெரிய ஆயுதம் என்பதனை அறிந்து கொண்டதாயே!”

மக்களாட்சி இந்தியாவைத் தத்தெடுக்கவில்லை (adopt); மாறாக, இந்தியர்தாம் மக்களாட்சியைக் கபளீகரம் செய்து  கொண்டார்கள். காரணம் என்ன? ஏற்கெனவே கட்டிக்காக்கப் பெற்றுவரும்இந்தியச் சமூக அமைப்பில் சிதைவுவந்துவிடக் கூடாது என்பதாலேயே

இந்தியா ஏற்றுக்கொண்ட மக்களாட்சி முறையில் இப்படி உள்ளடங்கிய ஓர் அரசியல் இருக்கிறது என்பதை நாம் அறிந்திருக்கிறோமா?

மக்களாட்சி முறை நாம் விரும்பி ஏற்றுக்கொண்ட முறை இல்லையாம்! மக்களாட்சியை ஆக்கிரமிப்பு செய்திருக்கிறோம். இந்தியச் சமூகம் மிகக் கவனமாகக் கட்டிக்காத்து வரும் வலுவான படிநிலை அமைப்பிற்கும் (Hierarchy) நாம் ஏற்றுக் கொண்டதாகச் சொல்லப்படும்  மக்களாட்சிக்கும் எங்கேயாவது ஏதாவது பொருத்தப்பாடு உள்ளதா?

சனநாயகம் அல்லது மக்களாட்சி அது உருவாக்கிய குடிமக்களை ஏமாற்றுமா? ஏமாற்றும் வஞ்சனை இதன் உள்ளடக்கமாக இருக்க முடியுமா? மக்களாட்சி முறை அரசமைப்பு முறைகள் கண்ட அமைப்புகளுள் மிகக் குறுகிய தீமைகளைக் கொண்டது. எனவேதான், தீவிர மதவாதிகளும், மக்களாட்சித் தத்துவத்தை நம்பாத பாசிஸ்டுகளும் உலகப் பொருளாதாரத்தைக் கையில் வைத்துள்ள கார்ப்பரேட்டுகளும் மக்களாட்சியைப் போற்றுகின்றனர், ஊக்குவிக்கின்றனர். மக்களாட்சியின் மகத்துவம் சமத்துவத்தில் உள்ளது. குடிமக்களின் தெரிவுசெய்யும் அதிகாரத்தில் உள்ளது. இம்முறைமையால் குடிமக்களே அதிகாரம் (empower) பெறுகின்றனர்.

மக்களாட்சியை ஊக்கவிக்கவே தம் பொருளாதார, கலாச்சார நடவடிக்கைகள் இருப்பதாகக் கூறி வரும் அதிகார சக்திகள், மக்களாட்சித் தத்துவத்தை எப்படி நம்பும்? அடிப்படை நம்பிக்கையே இல்லாத ஒரு பொருளாதார, அரசியல் அமைப்பு மக்கள் அதிகாரத்தைக் கட்டமைக்கும் ஒரு மக்களாட்சி தத்துவத்தை அல்லது கருத்தியலை எப்படி வளர்க்க இயலும்?

எப்படிச் சாத்தியம்?

இந்திய அரசியல் வரலாற்றில் 2014- மிகப்பெரிய மாற்றத்தைக் கொணர்ந்த ஆண்டுஇந்தியக் குடிமக்களாகிய நாம்என்ற முழக்கத்தோடு அறிவிக்கப்பட்ட இந்திய அரசின் முகப்புரை கேள்விக்குள்ளாக்கப்பட்ட நாள். இந்தியத் தேசியத் தலைவர்கள் மிகப்பெரிய கனவுகளோடு இந்திய அரசமைப்புச் சட்டத்தையும், அதற்கான முகப்புரையையும் உருவாக்கிய நாள். இக்கனவு இன்று என்னவாயிற்று? அறிவிக்கப்பட்ட சனநாயகக் குடியரசும், அக்குடியரசின் அடிப்படைவாதமான சமத்துவமும், சமத்துவம் காக்கத் துணை நின்ற இறையாண்மையும் கேவலமாகக் கேள்விக்குள்ளாக்கப்பட்டதோடு, இன்று அறிவிக்கப்பட்ட கொள்கையின் எந்தச் சுவடும் இல்லாமல், மக்களாட்சி சமயச்சார்பின்மை, சமத்துவம் என்ற சொற்களை அகற்றாமலே, இச்சொற்களைத் தாங்கி நிற்கும் மதிப்பீடுகளை உருத்தெரியாமல் அழிக்கக் கங்கணம் கட்டி நிற்கும் ஆற்றலை, ஓர் அழிவு ஆற்றலை, இந்திய மக்கள் ஏற்றுக்கொண்டது எப்படி?

மக்களாட்சியின் மேன்மைமிகு குணங்களை இந்தியா தத்தெடுத்திருந்தால் (adopt) இச்சோகம் நிகழ்ந்திருக்குமா? மக்களாட்சியின் தேர்தல் சனநாயகம் குடிமக்களின் தெரிவுசெய்யும் உரிமையைத் தந்தது என்பதனால், சனநாயகம் மிக உயரிய பண்பின் அடையாளமாக இருக்க, அப்பண்பு எதனையும்  அகவயப்படுத்தாமல், வெறும் வடிவத்தை மட்டும் அதிகாரத்தைத் தக்கவைக்கும் நோக்கில் பயன்படுத்தியமையால் விளைந்த தீமை இது.

இந்தியாவில் சனநாயகக் குடியரசின் வீழ்ச்சியை எழுபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னும் சனநாயகத்தின் வெற்றியை நாம் கொண்டாட முடியவில்லையே... ஏன்? நவீன சனநாயக முறை நம் மக்களுக்குப் புதியதாக இருந்தாலும், இச்சனநாயகம் அதன் முக்கிய மதிப்பீடுகளாக முன்வைக்கும் நீதி, சமத்துவம், சகோதரத்துவம் என்பன நம் நாட்டின் தொன்மையான இலக்கியங்களிலும் இதிகாசங்களிலும் உள்ளடக்கமாக இருந்தன என்பதனை மறுக்க முடியுமா? திருவள்ளுவர் தரும் அறக்கோட்பாடுகள் பல வெறும் பள்ளிப் பாடங்களாகிப் போயின. சாதியம் பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பித்து, ஏற்றத்தாழ்வை நியாயப்படுத்தியிருந்த காலகட்டத்திலும் கூடபிறப்பொக்கும்என்று கூறிய திருவள்ளுவன் குரல் இன்றுவரை அனைவரையும் தீண்டவில்லையே! அறவாழ்விற்கும் சமகாலச் சனநாயக வழிமுறைக்கும் தொடர்பு இல்லாதது போன்று ஒரு சூழல் உருவாக்கப்பட்டது எப்படி?

சனநாயகம் சனநாயக் காப்பாளரின் (Democrats) இருப்பில்தான் உயிர்பெறும். நாம் இன்று பேசும் சனநாயகத்தின் உயிர்ப்பற்றத் தன்மைக்குச் சனநாயகர்கள் (Democrats) இல்லாமையே காரணம். நம் நாட்டின் ஆட்சி முறைக்கு (Governance) சனநாயக முறை பயன்படலாம். சனநாயகத்தை மக்களின் வாழ்வறமாக மாற்றுவதற்கு (Way of life) இது போதாது - கிருஷ்ணகுமார் (NCERT-யின் மேனாள் இயக்குநர் - செமினார். செப். 1999).

ஆட்சி அதிகாரத்தை எப்படியேனும் கைப்பற்றவும், கைப்பற்றப் பெற்ற அதிகாரம் மூலம் ஆட்சியை நடத்தவும் சனநாயகம் பயன்படுத்தப்படுமானால் அது சனநாயகமே இல்லை என்பார் மேற்கண்ட கல்வியாளர்.

இந்திய அரசமைப்பின் காவலராகக் கருதப்பெறும் அம்பேத்கர் அவர்கள் சனநாயகப் பாதுகாப்பிற்கான அரசமைப்புச் சட்டத்தைத் தந்த பின்பும், அவர் இந்தியச் சனநாயகத்தைமேனா மினுக்கி (Top dressing) என்றே வர்ணித்தார். சட்டங்களையும் நுணுக்கமான சட்டவிதிகளையும் மூன்றாண்டுகள் முந்நூறு நபர்களோடு அமர்ந்து உரையாடி உருவாக்கிய அம்பேத்கர் ஜோடனை இல்லாத சனநாயகம் உருவாக்குதலில் வெற்றி பெற்றதாகக் கருதவில்லை. அரசமைப்புச் சட்டம் எவ்வளவு உயர்வானதாக இருந்தாலும், இச்சட்டங்களைச் சட்டத்தின் உள்ளடக்கத்தைக் கையாள்வோரின் நாணயத்திலும் நேர்மையிலும்தான் இதன் வெற்றியிருக்கிறது என்பர்.

இந்தியாவிற்குச் சனநாயகம் என்பது மக்களின் ஏக்கத்தில் விளைந்த ஒன்றல்ல என்பர். முடியரசின் வன்மத்திலிருந்து விடுதலை பெற மக்கள் எழுப்பிய குரலுக்கான விடையாகச் சனநாயகம் உருப்பெறவில்லை. இந்தியச் சமூக அமைப்பு மாறவேண்டும் என்ற முழக்கம் சனநாயகத்திற்கான முழக்கத்துடன் எழவில்லை. பிரெஞ்சு தேசத்தில் எழுந்த மாபெரும் புரட்சியின்போது, அப்புரட்சியில் தம்மைக் கரைத்துக் கொண்ட மக்கள் சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் எனும் ஒப்பரிய விழுமியங்களை வாழ்வாக்கக் குரல் கொடுத்தனர். பிரெஞ்சுப் புரட்சி வெற்றி பெற்றபோது இம்முழக்கங்களும் உயிர்பெற்றன.

இந்தியாவில் அறிமுகமான சனநாயகம் வெறும் வடிவம் (Design). உள்ளடக்கத்தில் எழவேண்டிய மதிப்புகள் எவையும் சுதந்திரத்தின் தேசிய முழக்கத்தில் இடம்பெறவில்லை. இந்தியச் சனநாயகத் தேடலுக்கும், சனநாயக அரசமைப்பிற்கும் இம்மதிப்பீடுகள் அடிப்படைக் கீதமாக இடம் பெறவில்லை, “இந்தியாவின் சனநாயகம் மேலிருந்து நடப்பட்ட (Impranted from above) ஒன்று. இந்திய மண்ணில் இதற்கான இடம் இன்னும் உருவாகவில்லை. இந்தியாவில் சனநாயகத்திற்கான ஒரு மனோநிலை (trauperament) உருவாகாமலேயே நாம் சனநாயகத்தைப் பயின்று (Practice)) வருவது ஓர் அதிசயமே (Miracle) என்பார் ரஜினி கோத்தாரி.

இந்திய விடுதலைக்குப் பின் பெற்ற சுதந்திரம் சனநாயகத்தை, சனநாயகக் குடியரசைத் தந்ததாக ஆனந்தப்பள்ளு பாட முனைந்தோம். விடுதலை பெற்ற இந்தியா இப்படித்தான் இருக்கும் என்று  எண்ணியிருந்த ஒரு குடியரசு, இந்துத்துவக் குடியரசாக மாறும் என்று கனவு கண்டோமா? குடிமக்களாகிய நாம் ஏற்கெனவே வர்க்கம், வர்ணம் என்று பிளவுபட்டிருக்கும் நிலையில், மதவாதக் கருத்தியலின் தீவிர வளர்ச்சியில் மதரீதியாகப் பிளவுபடுத்தப்படுவோம் என்று எப்போதாவது எண்ணியிருக்கிறோமா? இந்தியச் சுதந்திரப் போரின் வெற்றி, சுதந்திரத்திற்குமுன் அல்லது பின் என்று இந்தியாவை அடையாளம் காட்டிய நிலையில், சுதந்திரம் பெற்ற இந்தியாவை அயோத்திக்குமுன் அயோத்திக்குப்பின் (நன்றி: சசித்தரூர் -the battle of belonging) என்று வகைப்படுத்தப்பெறும் ஒரு கேவலமான நிலை உருவாகும் என்ற கனவு கண்டோமா?

ஆம், குடிமக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்? ஆம், குடிமக்கள் ஏமாந்து போயினர். அன்னை இந்திரா, ஓர் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தி, குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்தபோது, சனநாயகம் காக்கக் குரல் கொடுத்தோருள் இன்றைய ஆட்சியாளரும்  உண்டு. சிறை சென்றோரும் இவர்களும் உண்டு. சனநாயகம் காக்கவெனப் போராடிய பலருள் இவர்களும் உண்டெனினும், இன்று நடப்பது என்ன? இந்தியாவின்  அவசர நிலைப் பிரகடனத்தின் ஐம்பதாம் ஆண்டினை நினைவுகூரும் பிரதமர் மோடி, இந்தியச் சனநாயகத்தின் வலுவான உள்ளடக்கமே அவசர நிலை உருவாக்கிய எதேச்சதிகாரம் போக்கை உடைக்க உதவியது என்கிறார் இன்றைய ஆட்சி அமைப்பு அவசர நிலையைக் காட்டிலும் செழுமையானது. இந்தியா 1950-இல் ஏற்றுக்கொண்ட சனநாயகம் சரியானதாக இருந்திருந்தும் சனநாயகத்திற்கு முற்றிலும் முரணான ஆட்சி உருவாகியிருக்குமா?

எத்தனை முறைதான் சனநாயகத்தின் பெயரால்  ஏமாந்து போவோம்? ஏமாற்றப்படுவோம்? தமிழக அரசியலில் மாற்றங்களால் ஏமாந்தோமா? ஏமாற்றப்பட்டோமா?

(தொடர்ச்சி அடுத்த இதழில்....)

news
சிறப்புக்கட்டுரை
‘எல் நினோ’ பிடியில் பொருளாதாரம்! (உலகம் உன் கையில்! – 27)

ஆண்டுதோறும் மே மாதம் வந்துவிட்டாலே, அக்னி நட்சத்திர வெயிலோடு சேர்த்து நம் தொலைக்காட்சிப் பெட்டிகளில் வழக்கமாக ஒரு செய்தி ஒலிக்கத் தொடங்கும். அடுத்து வரும் நாள்களில் தமிழ்நாட்டிற்குப் பருவமழை எப்படி இருக்கும்?

வாடிக்கையாகக் கேட்கும் இந்த வானிலை முன்கணிப்புச் செய்திகளுடன், இன்று புதிய பெயரும் அடிபடுவதைக் கேட்கிறோம். அதுதான் - ‘எல் நினோ (El Niño). தற்போது தென்படும் அறிகுறிகளை வைத்துப் பார்க்கும்போது, இன்றைய ஆண்டின்எல் நினோமிகக் கடுமையாக இருக்கலாம் என்று .. ஆய்வாளர்கள் கணிக்கிறார்கள். ஜூன் முதல் ஆகஸ்டு மாதங்களில் உலகளாவிய வெப்பநிலை வழக்கமான சராசரி அளவைவிட மிக அதிகமாக இருக்குமென்று உலக வானிலை ஆராய்ச்சி கழகமும் (WMO) எச்சரிக்கை விடுத்துள்ளது.

எல் நினோ (El Niño)

எல் நினோஎன்பது பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு நீர் அசாதாரணமாக வெப்பமடைவதைக் குறிக்கும் ஓர் உலகளாவிய வானிலை நிகழ்வு. இது உலகெங்கும் வறட்சி, கடுமையான மழைப் பொழிவு மற்றும் வானிலை மாற்றங்களை ஏற்படுத்தும். முற்றிலும் அறிவியல், தரவுகள் (Data) மற்றும் இயற்பியல் (Physics) விதிகளை அடிப்படையாகக் கொண்டது.

எல் நினோகணிப்பு ..-க்கு முன்

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் வருவதற்கு முன்பு, ‘எல் நினோ (EI Niño) நிகழ்வின் கணிப்பு முற்றிலும் இயற்பியல் விதிகள், கடல்சார் மாற்றங்கள் மற்றும் புள்ளியியல் மாதிரிகளை (Statistical Models) நம்பியே இருந்தது.

பசிபிக் பெருங்கடலில் நூற்றுக்கணக்கான மிதவைகள் (Buoys) மூலமும், பின்னர் செயற்கைக்கோள் வழியாகவும் கடலின் வெப்பநிலை மாற்றங்கள் கண்காணிக்கப்பட்டது.

கடந்த 50-100 ஆண்டுகளாக எல் நினோவிற்குச் சில மாதங்களுக்கு முன்பு கடலிலும் காற்றிலும் நிழ்ந்த வரலாற்றுப் போக்கை (Historical trends), தற்போதைய சூழ்நிலையோடு ஒப்பிட்டு, புள்ளியியல் முறைப்படி சூப்பர் கணினிகள் மூலமும் கணிக்கப்பட்டதுஎல் நினோ கணிப்பு- ..-க்குப் பின் இன்று கடலில் உள்ள மிதவைகள் (Buoys), செயற்கைக்கோள்கள் (Satellites) மற்றும் வானிலை ரேடார்கள் மூலம் சேகரிக்கப்படும் காற்றின் வேகம், கடல் நீர் வெப்பநிலை, வளிமண்டல அழுத்தம் போன்ற கோடிக்கணக்கான தரவுகள் குவிந்து கிடக்கின்றன. மனிதர் இத்தரவுகளைக் கொண்டு எளிதாகக் கணக்கிட முடியாது. இந்நிலையில், சூப்பர் கம்ப்யூட்டர்கள் மற்றும் .. (AI -Machine Learning) தொழில்நுட்பம் அரிய கருவிகளாகக் கிடைத்துள்ளன. நாம் எதிர்கொள்ளும் வானிலை அடுத்து எப்படி மாறும் என்பதை, விஞ்ஞானிகள் ஒன்று முதல் ஒன்றரை ஆண்டுகள் முன்பாகவே துல்லியமாகக் கணிக்க இந்த .. தொழில்நுட்பம் உருவெடுத்துள்ளது. இத்தகைய கணிப்புகள் முற்றிலும் தரவுகள் மற்றும் அறிவியல் விதிகளின் அடிப்படையில் அமைந்தவை; இது வெறும் யூகம் அல்ல; விவசாயம், பேரிடர், பொருளாதாரத் திட்டமிடல் என்ற முக்கியத் துறைகளுக்குப் பெரிதும் உதவுகிறது.

2026-2027

இவ்வாண்டில் உருவாகி 2027 வரை நீடிக்கும் எல்நினோவைசூப்பர் எல் நினோஎன்று அழைக்கின்றனர். ஏற்கெனவே பூமி வெப்பமடைந்த நிலையில், இது பருவமழைக்கு ஆதாரமாய் விளங்கும் கடல்நீரை மேலும் சூடாக்கிவிடலாம் என்று அஞ்சப்படுகிறது.

எல் நினோ ஆண்டுகள், பொதுவாக இந்தியாவின் தென்மேற்கு பருவமழையைப் பலவீனப்படுத்தும். இதனால் உள்நாட்டுப் பகுதிகளில் வெப்பம் அதிகரிக்கும். ஆனால், வெப்பச் சலன மழை வழக்கம் போலிருக்கும். இயல்பாகப் பருவகாலத்தில் கடல் நீர் வெப்ப அதிகரிப்பால் வங்காள விரிகுடா கடலில் புயல்கள் உருவாகுவதும், அவை தீவிரமடைந்து  பலத்த மழையைத் தருவதும் இயல்பு. எனவே, எல் நினோ ஆண்டுகளில் தென்மேற்கு மழை குறைவாக, ஆனால், தமிழ்நாட்டிற்கு வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட அதிகமாகவோ அல்லது சராசரியாகவோ கிடைப்பதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

குறுகிய காலத்தில் அதிகப்படியான மழை கொட்டித் தீர்க்கும் வாய்ப்பு அதிகம் என்பதால், மழை பெய்வதைக் தாங்கும் வகையிலும், சேமித்து வைக்க நீர்நிலைகளையும் வடிகால்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டியுள்ளது. 2015 ஆண்டில் சென்னை நகரைச் சூழ்ந்த அசாதாரண வெள்ளத்திற்குக் காரணம், அவ்வாண்டின் எல் நினோ என்று கூறப்படுகிறது. பருவமழையின் தொடக்கக் காலத்தில் கடுமையான வெயிலும், தாமதமான மழைப்பொழிவும் விவசாயத் திட்டமிடலைப் பாதிப்படையச் செய்யும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன

140 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவின் பொருளாதாரம் வேளாண்மையைச் சார்ந்துள்ளது. இதற்கு ஆதாரமாக விளங்குவது பருவ மழைகள். வருடாந்திரப் பருவமழைப்பொழிவில், தென்மேற்கு பருவமழையின் பங்களிப்பு 75%-85% என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், குறைந்த மற்றும் காலம் கடந்த பருவமழையினால் உணவு உற்பத்தி பாதிப்படையலாம்; எதிர்பாராதச் சேதங்கள் உருவாகலாம். இவற்றிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு .. துணைநிற்பது விஞ்ஞானம் அளித்த அரிய நன்கொடை எனலாம்.

உலகளவில் கோதுமை, அரிசி, சோளம், சோயா, கரும்பு என்ற பயிர்கள் 60% மக்களின் ஆதாரக் கலோரி உணவாக (calorie intake) விளங்குவதை அறிவோம். இதில் கோதுமை, சோளம், அரிசி உற்பத்தி எல் நினோவின் வறட்சி, தாமதமான பருவமழை காரணங்களால் பெருமளவில் பாதிக்கப்படலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இருப்பினும் உலகளாவிய தற்போதைய தானியக் கையிருப்பை வைத்து சமாளித்துவிடலாம் என்கிறது மற்றோர் ஆய்வு. பல அறிக்கைகள் எல் நினோ இவ்வாண்டின் இறுதியில் வேகமெடுக்கலாம் என்கிறது. தற்போது நாம் எதிர்கொண்டு வரும் எல் நினோ நிகழ்வு, 2026-2027 ஆகிய இரண்டு ஆண்டுகளை உள்ளடக்கி, உலகளாவிய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியதாக அறியப்படுகிறது.

இயற்கையின் மாற்றங்களை மனிதனால் முழுமையாகக் கணிக்க முடியாத நிலையில், அடுத்த ஆறு மாதங்களில் இதன் உண்மையான வீரியமும் இயல்பு நிலையும் வெளிப்படத் தொடங்கும். இத்தகைய சூழலில், .. எச்சரிக்கைகளை நாம் தீவிரமாகக் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

news
சிறப்புக்கட்டுரை
அரிசி சோறும் அரசியல் பேசும்! குடும்பப் பின்னணியில் குழந்தைகளுக்கு அரசியல் அறிவை ஊட்டுவது எப்படி?

நாட்டின் குடிமகன் என்பவன் ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை வாக்குச் சீட்டில் விரல் வைப்பவன் மட்டுமல்ல; தன் நாட்டின் ஒவ்வொரு நகர்வையும் விழிப்புணர்வோடு கவனிப்பவன். ‘அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாவதூ உம்என்று சிலப்பதிகாரம் பாடிய தமிழ் மண்ணில் இன்றுஅரசியல்என்ற வார்த்தையே ஒரு சாக்கடையாகவும், தீண்டத்தகாத ஒன்றாகவும் சித்தரிக்கப்படுவதுதான் நம் காலத்தின் ஆகப்பெரும் சாபக்கேடு. ‘நமக்கு ஏன் அரசியல் வம்பு? பிள்ளைகளைப் படிக்க வையுங்கள், நல்ல வேலைக்கு அனுப்பப் பாருங்கள்என்று கைகளைக் கழுவிக்கொள்ளும் நடுத்தர வர்க்கக் குடும்பங்களின் மனநிலை, ஒரு சுயநலச் சமூகத்தையே கட்டமைத்துக் கொண்டிருக்கிறது.

அரசியல் என்பது ஏதோ ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வாக்குச் சாவடிக்குச் சென்று, முத்திரை குத்திவிட்டு வரும் வெறும்சடங்குஅல்ல; அது நாம் சுவாசிக்கும் காற்று. நாம் வாங்கும் தீப்பெட்டி முதல் குழந்தைகளின் கல்விவரை அனைத்தையும் தீர்மானிக்கும் அந்த அரசியலை, ஒரு கத்தோலிக்கக் குடும்பத்தின் ஆன்மிகச் சூழலிலும், குடும்பப் பின்னணியிலும் வளரும் இக்காலக் குழந்தைகளுக்கு எப்படிப் புகுத்துவது? அதற்கு நாம் எங்கும் தேடிப் போக வேண்டியதில்லை; நம் வீட்டுச் சமையலறையும், சாப்பாட்டு மேசையுமே போதுமானது.

அரிசி சோறும் அரசியல் பேசும்என்று நாம் கூறுவது வெறும் அலங்கார வார்த்தை அல்ல; நம் தட்டில் இருக்கும் ஒவ்வொரு பருக்கைச் சோற்றுக்குப் பின்னாலும் ஓர் அரசியல் இருக்கிறது. “சென்ற மாதம் இந்த அரிசி என்ன விலை விற்றது? இந்த மாதம் ஏன் விலை கூடியிருக்கிறது? நெல் விளைவித்த விவசாயிக்குச் சரியான விலை கிடைக்கிறதா? இடைத்தரகர்கள் இலாபம் பார்ப்பது நியாயமா? நாம் ஏன் உணவை வீணாக்கக்கூடாது?” என்று சாப்பாட்டு மேசையில் குழந்தைகளோடு உரையாடலைத் தொடங்குங்கள். அங்கேதான்பொருளாதார அரசியலின்முதல் புள்ளி குழந்தையின் மனத்தில் விதைக்கப்படுகிறது. விலையேற்றமும், விவசாயியின் கண்ணீரும் தற்செயலானது அல்ல; அரசின் கொள்கை முடிவு என்பதைக் குழந்தைகள் அங்கேதான் புரிந்துகொள்ளத் தொடங்குவார்கள்.

இன்றைய குழந்தைகளுக்கு அரசியல் புகட்டுவது எப்படி என்று நாம் யோசிக்கும்போது, நம் சொந்தக் குடும்பங்களின் வரலாற்றையே நாம் திரும்பிப் பார்க்கவேண்டும்.

சில ஆண்டுகளுக்கு முன்னால் நம் கிராமத்துத் திண்ணைகளிலும், பெரிய கூட்டுக்குடும்பங்களின் முற்றங்களிலும் மாலையில் பெரியவர்கள் அமர்ந்துப் பேசும்போது, அங்கே நாட்டின் நிலவரங்களும், சமூகப் பிரச்சினைகளும் இயல்பாக விவாதிக்கப்படும். அப்போது அங்கே விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளும், அந்தப் பேச்சுகளைக் கேட்டு வளர்ந்தார்கள். யார் நல்லவர்? சமூகத்திற்கு யார் என்ன நன்மை செய்தார்கள்? என்பதை தாத்தா, பாட்டிமார் கதைகளாகக் குழந்தைகளுக்குக் கூறினார்கள். இதனால் அன்று குழந்தைகளுக்குத் தனிப்பாடம் எடுக்காமலேயே சமூக அறிவு தானாகவே இரத்தத்தில் ஊறியது.

இன்றைய கால வரலாறு முற்றிலும் மாறிவிட்டது. கூட்டுக்குடும்பங்கள் மறைந்து, தனிக் குடும்பங்கள் பெருகிவிட்டன. சமையலறை, படுக்கையறை என்று சுவர்களுக்குள் சுருங்கிவிட்ட இன்றைய வீடுகளில், குழந்தைகளின் உலகம் மொபைல் திரைகளுக்குள் முடங்கிவிட்டது. பெற்றோரும், ‘குழந்தைகளுக்கு இதெல்லாம் வேண்டாம், மார்க் வாங்கினால் போதும்என்று சமூகத்திலிருந்து அவர்களைத் தனிமைப்படுத்தி வளர்க்கிறார்கள். இந்த வரலாற்று மாற்றம்தான், இன்றைக்குக் குழந்தைகளிடம் சமூகப் பொறுப்பு குறைவதற்குக் காரணியாக அமைந்துவிட்டது.

நம் வீட்டுக் குழந்தையிடம் முறையான சமூக விழிப்புணர்வையும், குடும்பப் பின்னணியில் இந்த வரலாற்றுப் புரிதலையும் நாம் புகுத்தத் தவறுவதன் விளைவை இன்றைய இளம்தலைமுறையினரின் சில பொதுவான போக்குகளைக் கொண்டே உணர்ந்துகொள்ள முடியும். நம் முன்னோர் காட்டிய அந்த இயல்பான சமூகச் சிந்தனைகளைத் தாண்டி, வெறும்திரைப்படக் கவர்ச்சிமற்றும் தற்காலிக உணர்ச்சிப்பெருக்கின் காரணமாக மட்டுமே தங்களின் வழிகாட்டிகளைத் தேர்ந்தெடுக்கும் ஒரு மேலோட்டமான கலாச்சாரம் பெருகி வருகிறது.

சமூகப் பொறுப்போ, தொலைநோக்குப் பார்வையோ, சித்தாந்தத் தெளிவோ இருக்கிறதா என்று ஆராய்ந்து பார்க்கக்கூடியபகுத்தறிவுத் திறன்இன்றைய இளைய சமுதாயத்தில் பலரிடம் ஏன் பின்தங்கிப் போகிறது? காரணம், அவர்களின் சிறுவயதில் குடும்பங்கள் அவர்களுக்குச் சரியான வாழ்வியல் கல்வியையும், சமூகப் புரிதலையும் ஊட்டத் தவறியதே ஆகும். திரையில் தோன்றும் மாயப்பிம்பங்களை அப்படியே உண்மை வாழ்விலும் பொருத்திப் பார்த்து, உணர்ச்சிவசப்பட்டு எடுக்கப்படும் முடிவுகள், எதிர்காலச் சமுதாயத்தின் போக்கையே மாற்றிவிடக் கூடும் என்பதைப் பெற்றோர் குழந்தைகளுக்கு மென்மையாக உணர்த்த வேண்டிய தருணம் இது.

அரசியல் என்பது பொழுதுபோக்குச் சினிமா அல்ல; அது மக்களின் வாழ்வாதாரப் போராட்டம். “ஒருவர் நல்ல நடிகராகவோ அல்லது பிரபலமானவராகவோ இருப்பதால் மட்டுமே அவர் நல்ல தலைவராக மாறிவிட முடியாது; அதற்குச் சமூகக் கூட்டுப் பொறுப்பும், தியாகமும், சித்தாந்தத் தெளிவும்வேண்டும்என்பதை நாம் குழந்தைகளுக்குத் தெளிவுபடுத்தவேண்டும்.

வெறும் தனிநபர் வழிபாட்டு (Hero Worship) அரசியலிலிருந்து, ‘கொள்கை வழிஅரசியலுக்கு நம் குழந்தைகளை மாற்றவேண்டும். ஒரு தலைவரை அவரது திரையுலகக் கவர்ச்சியால் அல்ல; அவரது கொள்கையாலும் செயல்பாட்டாலும் மட்டுமே எடை போடவேண்டும் என்ற அரசியல் முதிர்ச்சியை (Political Maturity) நம் வீட்டுச் சாப்பாட்டு மேசையிலிருந்தே நாம் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கவேண்டும்.

குடும்பம் என்பது ஒரு நாட்டின் மிகச்சிறிய வடிவம். ஒரு நாட்டில் சனநாயகம் மலரவேண்டும் என்றால், அது முதலில் குடும்பத்தில் பழகப்பட வேண்டும். வீட்டில் ஒரு பொருளை வாங்கும் போதோ அல்லது ஒரு நல்ல நிகழ்வைத் திட்டமிடும்போதோ, குழந்தைகளையும் அமர வைத்து அவர்களின் கருத்துகளைக் கேட்கவேண்டும். ‘இது பெரியவர்கள் விசயம், நீ உள்ளே வராதேஎன்று குழந்தைகளின் குரலை நசுக்குவது, எதிர்காலத்தில் சமூகத்தில் நடக்கும் பேரதிகாரத்தைச் சகித்துக் கொள்ளும் ஓர் அடிமைத் தலைமுறையையே உருவாக்கும். குடும்பத்தில் தங்களுக்குக் கிடைக்கும் கருத்துரிமைதான், நாளை நாட்டின்வாக்குரிமையாகமாறும் என்பதைப் பெற்றோர் உணர வேண்டும்.

நமது கத்தோலிக்கத் திரு அவையின் சமூகப் போதனைகள் (Social Teachings of the Church) குடிமைப் பொறுப்பையும், சமூக நீதியையும் மிக முக்கியக் கடமையாக வலியுறுத்துகின்றன. “சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள் (மத்தேயு 22:21) என்ற இயேசுவின் வாக்கு, நாம் வாழும் நாட்டின் சட்டங்களுக்கும், அரசியல் கடமைகளுக்கும் நம்பிக்கையாக இருக்கவேண்டும் என்பதையே சுட்டிக்காட்டுகிறது.

அரசியல் என்பது வெறும் கட்சி சார்ந்தது அல்ல; அது நற்பண்புகள் சார்ந்தது. சுயநல அரசியலுக்கும், பொதுநல அரசியலுக்கும் உள்ள வேறுபாட்டைக் குழந்தைகளுக்குக் கற்றுத்தரவேண்டும். ஏழை எளியவர் மீதான அக்கறை, ஒடுக்கப்பட்டோருக்கான நீதி, பிற மதத்தினரை மதிக்கும் பன்முகத்தன்மை ஆகிய நற்பண்புகளை திருவிவிலியப் பின்னணியோடு ஒப்பிட்டுக் குழந்தைகளுக்குப் புரிய வைக்கலாம்.

இன்று மொபைல் போன்களிலும், சமூக வலைதளங்களிலும் வன்முறையும், அவதூறுகளும் நிறைந்த போலி அரசியல் செய்திகளே அதிகம் வருகின்றன. இதைப் பார்த்துக் குழந்தைகள் அரசியலின்மீது வெறுப்பு கொள்ளக்கூடாது. மாலையில் குடும்பமாக அமர்ந்து செய்திகளைப் பார்க்கும்போது, நடப்பு நிகழ்வுகளைப் பிள்ளைகளுக்கு எளிய முறையில் விளக்கி, இதில் எது சரி, எது தவறு? இந்தச் செய்தியின் பின்னணி என்ன? என்று அவர்களைக் கேள்வி கேட்க வைக்கவேண்டும். ஒரு செய்தியை அப்படியே நம்பாமல், அதன் உண்மைத்தன்மையை ஆராயும் பகுத்தறிவை வீட்டிலிருந்தே பழக்கவேண்டும்.

இந்தியா என்பது பல்வேறு மொழிகளும் பண்பாடுகளும் கொண்ட ஒரு பன்முகத்தன்மை வாய்ந்த அழகான தேசம். இந்தத் தேசத்தின் தூண்களாக மாறப்போகும் இக்காலக் குழந்தைகள், வெறும் மதிப்பெண் எடுக்கும் இயந்திரங்களாக மட்டும் வளர்ந்தால் போதாது; சமூகப் பொறுப்புள்ள, விழிப்புணர்வுள்ள குடிமக்களாக வளரவேண்டும்.

அரசியல் என்பது அழுக்கல்ல; அது நம் சமூகத்தைத் தூய்மைப்படுத்தும் உன்னத ஆயுதம் என்பதை நம் வீட்டுக் குழந்தைகளுக்குப் புரிய வைப்போம். அன்று திண்ணைகளில் பழகிய அதே சமூக விழிப்புணர்வை, இன்று நம் வீடுகளில் குழந்தைகளுக்குக் கதைகளாகக் சொல்வோம். குடும்ப அறைகளில் பேசப்படும் ஆரோக்கியமான, வரலாற்றுத் தெளிவுள்ள, கொள்கை சார்ந்த அரசியலே, நாளை நாட்டின் நல்லாட்சியாக எதிரொலிக்கும்!

news
சிறப்புக்கட்டுரை
குழந்தைகளை நசுக்கும் பாலியல் வன்கொடுமைகள்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. முக்கியமாக இந்தியாவில் அவை மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டிருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.

குழந்தைகள் ஒரு நாட்டின் கல்வி, வளர்ச்சி போன்றவற்றில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். தேசியக் குற்றப்பதிவுப் புலனாய்வு அமைப்பு (NCRB) 2023-ஆம் ஆண்டு வெளியிட்ட தகவலின்படி 1,77,335 குழந்தைகளுக்கு எதிரானக் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2022-ஆம் ஆண்டு 1,62,449 குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்தத் தகவலின்படி 2022- ஒப்பிடும்போது 2023-இல் குழந்தைகளுக்கு எதிரானக் குற்றங்கள் 9.2%  அதிகரித்துள்ளன. இந்தப் புள்ளி விவரங்கள் குழந்தைகளுக்கு எதிராக நடந்த குற்றங்களான வன்கொடுமை, பாலியல் குற்றம், கடத்தல் போன்றவற்றை உள்ளடக்கியதாகும். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் POCSO-வில் மட்டும் பதிவானக் குற்றங்களின் எண்ணிக்கை 2017-இல் 33,210 ஆகும். ஆனால், 2022-இல் இது 94% அதிகரித்து, 64,449 ஆக உயர்ந்துள்ளது.

பெரும்பாலும் குழந்தைகள் அவர்களுக்கு நெருக்கமான உறவின் மூலமாகத்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் எனும் புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியளிக்கின்றன. தனது குடும்பத்தினர் என்று சொல்லப்படும் மாமா, அண்ணன், சித்தப்பா, தாத்தா போன்றோர்களால்தான் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இவர்கள்மீது குழந்தையின் பெற்றோர் அதிக நம்பிக்கை வைத்திருப்பதால், அவர்கள் மிகவும் எளிதாகத் தங்களின் வக்கிரத்தைப் பிஞ்சுக் குழந்தைகள்மீது நடத்துகின்றனர்.

குடும்பத்தினரை ஒப்பிடுகையில், அயலாரிடம் குழந்தைகள் குறைந்த அளவில் பாலியல் குற்றங்களுக்கு ஆளாகின்றனர். அயலாரிடம் எங்கெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்த்தால், வீட்டின் அருகில் வாழும் நபர்கள், பள்ளிகளில் ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் போன்றோர்களால் நடத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி, பொது இடங்களிலும், பேருந்து மற்றும் புகைவண்டி போன்ற நெருக்கம் நிறைந்த இடங்களிலும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் பல நடத்தப்படுகின்றன. இப்படியாக, குழந்தைகள் பாதுகாப்பு இன்று, இந்தியாவில் பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.

குழந்தைகள்மீது நடத்தப்படும் வன்முறைகள் உடல் ரீதியான வெறும் பாலியல் குற்றம் என்று அடக்கிவிட முடியாது. உடல் ரீதியான துன்புறுத்தல், வார்த்தை வழியாகத் தகாத வார்த்தைகளால் அவர்களைத் துன்புறுத்தல், உளவியல் ரீதியான துன்புறுத்தல் போன்றவை பாதிப்புக்குள்ளாகும் குழந்தைகள் மனத்தில் ஆறாக் காயங்களாக மாறி அவர்களது ஆளுமை வளர்ச்சியைப் பாதிக்கிறது.

குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பல நெறிமுறைகள் கூறப்படுகின்றன. குறிப்பாக, ‘Good touch and Bad touchஅதாவது, ‘நல்ல தொடுதல்மற்றும்கெட்ட தொடுதல்என்பவை. இங்குப் பல Good Touch-களுக்குப் பிறகுதான் Bad Touch தொடங்குகிறது. அதுவும் குறிப்பாக, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நம்பிக்கைக்குரியவர்களிடமிருந்து இப்படித்தான் தொடங்குகிறது. இதனால் குழந்தைகள் அவற்றை எவ்வாறு புரிந்துகொள்வது என்று குழம்பிவிடுகின்றனர். இதுபோன்ற சூழலைத் தவிர்க்க குழந்தைகளுக்குDon\'t touchஎன்றும், ‘விருப்பம் இல்லாத குழந்தையைத் தொடுதல் கூடாதுஎன்றும் சொல்லித் தரப்படவேண்டும்.

பெரும்பாலானோர் பெண் குழந்தைகளுக்கு மட்டுமே பாலியல் வன்கொடுமை நடைபெறுகிறது என்று நினைத்துக்கொண்டுள்ளனர். ஆனால், பெண் குழந்தைகளுக்கு நடைபெறும் அளவிற்கு இல்லாவிட்டாலும், ஆண் குழந்தைகளுக்கும் அதிகமாகப் பாலியல் வன்கொடுமை நடைபெறுகிறது. ஆனால், கலாச்சாரம் என்ற பெயரில்ஆண் பிள்ளை அழக்கூடாதுபோன்ற சொல்லாடல்கள் வருவதால், அவர்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் அதிகப்படியாக வெளியே தெரிவதில்லை.

இந்தியப் பெற்றோர் சாதி, மதம், பாகுபாடு போன்றவற்றால் ஈர்க்கப்பட்டுள்ளனர். அதனால் ஒரு குழந்தையிடம் எந்த மாதிரியான உரையாடல்கள் நடத்தவேண்டும் என்று தெரியாமல் கலாச்சாரம் என்ற போதைக்குள் சிக்கிக்கொள்கின்றனர். பாதிக்கப்பட்ட குழந்தை அதனைத் தன் பெற்றோரிடம் கூற வரும்பொழுது, அதனைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் அவர்களை மீண்டும் மன அழுத்தத்திற்கே பெரும்பாலான பெற்றோர் ஆளாக்குகின்றனர். பாதிப்பை ஏற்படுத்தியது தனது குடும்ப உறுப்பினர் என்று தெரிந்தால் அவர் அப்படிச் செய்யமாட்டார் என்றும், அப்படியே தெரிந்தாலும் அதனை மூடி மறைப்பது போன்ற பல வழிகளில் பெற்றோரின் அணுகுமுறை அமைகிறது.

பாலியல் துன்புறுத்தலை அனுபவித்த பிறகு குழந்தைகள் உடல் மற்றும் மனரீதியாகப் பெரும் பாதிப்பை அனுபவிக்கின்றனர். அவர்கள் அச்சிறு வயதில் மனநலப் பாதிப்பு, கவலை, சோர்வு போன்ற உளவியல் பாதிப்பிற்கு உள்ளாக்கப்படுகின்றனர். கல்வி மீதான வெறுப்பு, சுற்றி இருப்பவர்கள் மீது நம்பிக்கை இழப்பு போன்ற சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இது அவர்களின் எதிர்காலத்தை மிகவும் பாதிக்கிறது, கேள்விக்குள்ளாக்குகிறது. நெருங்கிய குடும்ப உறவுகள் மீதான அவநம்பிக்கை மிகுந்த பாதிப்பை அவர்களது உறவு வாழ்வில் ஏற்படுத்துகிறது. தனிமை விரும்பிகளாக, தாழ்வு மனப்பான்மை உடையவர்களாக, அன்பு செலுத்த முடியாதவர்களாக, உணர்வுத் தளங்களில் பெரும் பாதிப்புகளை வாழ்நாள் முழுவதும் சந்திக்கக்கூடிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்

குழந்தைகளுக்கு அவர்களது உரிமையைப் புரியும் வகையில் எடுத்துக் கூறுவது; பள்ளிகளில் அவர்களுக்கு எதிராக நடக்கும் துன்புறுத்தல்களைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது; பள்ளிப் புத்தகங்களில் அதற்கான பாடங்களை வகுப்பது; குழந்தைகள் பாதுகாப்பிற்காக இருக்கின்ற POCSO போன்ற சட்டங்களைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவது குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகளைக் குறைக்கும் என்றாலும், இதில் சமூகத்தின் பங்கு மிகப்பெரியதாகும்.

குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்கொடுமை ஒரு சமூகப் பாவம்; அது மனித மாண்பைச் சிதைக்கிறது. குழந்தைகளின் ஆளுமையை அழிக்கிறது. எனவே, இப்படிப்பட்ட மனிதத் தன்மையற்றச் செயல்களுக்குக் குடும்பம் மட்டும் விழிப்புணர்வு அடைந்து எதிர்த்தால் போதாது; மாறாக, நமது சமூகம் இதன் விளைவுகள் குறித்தான விழிப்புணர்வைப் பெறவேண்டும். அதனை ஏற்படுத்துவது அரசின் கடமையாகும்.

அதிகரிக்கும் இதுபோன்ற பாலியல் வன்கொடுமைகள் வெளியில் தெரிந்தாலும், அதன் வேரானது ஆபாசப் படங்கள், அதீத பாலியல் உணர்வைத் தூண்டும் இணையத்தளங்கள்- செயலிகளில் ஊன்றியிருக்கிறது. ஆகவே, இணைய வழியிலும் அதிகம் பாதிப்புள்ளாகின்றனர். வளரிளம் குழந்தைகள் பாலியல், பாலியல் உணர்வு குறித்தான சரியானப் புரிதலுக்கு வளர்ந்து வரும் முன்னர் இணைய வழி பாலியல் கொடுமைகளும், ஆபாச இணையத்தளங்களும் அவர்களது திரையில் எளிதில் கிடைக்கின்றன. அதன் விளைவாக, முதிர்ச்சியடையாத பாலியல் நம்பிக்கைகளும், பாலியல் உணர்வு போன்றவை பிஞ்சுகளின் நெஞ்சத்தில் நிலைபெறுகின்றன.

ஆபாசப் பேச்சுத் தளங்கள், நேரலை ஆபாசக் காட்சிகள் இன்னும் பல வகையிலான பாலியல் உணர்வைத் தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள தளங்களை இந்தியச் சமூகத்திலிருந்தும் இணையத்திலிருந்தும் ஒழிக்கவேண்டும். பாலியல் உணர்வுகளைத் தூண்டும் ஆபாசப் படங்களை எல்லா வகையான ஊடகங்களிலும் தடை செய்யவேண்டும்.

தனிநபர், அரசு மற்றும் சமூகம் இணைந்து செயல்பட்டால் மட்டுமே அதிகரித்துவரும் குழந்தைகளுக்கு எதிரானக் குற்றங்களைக் குறைக்க முடியும்.

news
சிறப்புக்கட்டுரை
எதிர்மறை எண்ணங்கள் வெற்றிக்குத் தடைக்கல் (ஏற்றம் தரும் எண்ணங்கள் – 05)

நான் முன்பு வேலை செய்த அலுவலகத்தில் எங்களோடு வேலை பார்த்த ஒரு நண்பர், தான் எதிர்பார்த்த ஏதாவது நடைபெறவில்லை என்றால், தன் மீதோ தன் செயல்பாடு மீதோ எவ்விதப் பரிசோதனையும் செய்யமாட்டார். மாறாக, ‘எனக்கு இந்த நிற சட்டை போட்டாலே இப்படித்தான் நடக்கும்; நான் அலுவலகத்திற்கு வரும் வழியில் பாக்கக்கூடாத ஒரு முகத்த பாத்துட்டேன்; என்மேல அவருக்கு இருக்குற பழைய கோபம்... அதான் அவரு இப்படி நடந்துக்கிறாரு; இன்னக்கி எனக்குக் கட்டம் சரியில்ல, செவ்வகம் சரியில்ல, வட்டம் சரியில்ல...’ என வரிசையாகப் பல காரணங்களை அடுக்கிக்கொண்டே போவார். கேட்டுக் கேட்டுச் சலித்துப்போய் விட்டது.

இதெல்லாம் சரியா? அவரவர் மனப்போக்கு. எதில் நாம் தீவிரமாகக் கவனம் செலுத்துகிறோமோ, அது நம்மை ஆட்டிப்படைக்க ஆரம்பிக்கும். இதுதான் உண்மை. யார்மீது நாம் அதீத பாசம் வைக்கிறோமோ அவர்களும் நம்மை ஆட்டிப்படைக்க ஆரம்பித்து விடுவார்கள். உறவு என்பதில் ஒரு கட்டத்தில் சலிப்போ சண்டையோ வந்தால் அது முறிவு காணும் சூழல் வரும். எண்ணங்கள் அப்படியல்ல; தனக்குத்தானே ஏதேதோ நினைத்துக்கொண்டு, தானும் நொந்து தன்னைச் சுற்றி இருப்பவர்களையும் நொந்து நூடுல்ஸாக மாற்றிவிடும் இரகம் உண்டு. இதிலிருந்து விடுதலை உண்டு. நம்மை ஆட்டிப்படைக்கும் எண்ணங்களுக்குத் தீவிர நேர்மறை எண்ணங்கள்தான் மருந்தாக அமையும்.

எப்போதுமே தோன்றும் எதிர்மறை எண்ணங்களால் என்னென்ன நடக்கும்? மனித வாழ்க்கையில் எண்ணங்களுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. நல்ல எண்ணங்கள் நம்மை முன்னேற்றத்தின் பாதையில் நடத்தினால், எதிர்மறை எண்ணங்கள் நம்மைப் பின்னுக்குத் தள்ளுகின்றன. சில நேரங்களில் தோன்றும் எதிர்மறை எண்ணங்கள் சாதாரணமானவை. ஆனால், அவை எப்போதும் மனத்தில் நிலைத்திருக்கும்போது, வாழ்க்கையின் பல பகுதிகளிலும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. மனித வாழ்க்கையில் எண்ணங்கள் மிக முக்கியமானவை. நாம் எப்படிச் சிந்திக்கிறோமோ, அதன்படியே நமது செயல்களும் வாழ்க்கையும் அமைகின்றன. நேர்மறை எண்ணங்கள் முன்னேற்றத்தை நோக்கி அழைத்துச் செல்லும். ஆனால், எப்போதும் எதிர்மறை எண்ணங்களிலேயே மூழ்கி இருந்தால் அது நமது மனநலம், உடல்நலம், உறவுகள் மற்றும் வாழ்க்கை முன்னேற்றம் ஆகிய அனைத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

முதலில், எதிர்மறை எண்ணங்கள் மன அழுத்தத்தை அதிகரிக்கின்றன. ‘என்னால் முடியாது, ‘நான் தோல்வியடைவேன், ‘எல்லாம் தவறாகிவிடும்போன்ற எண்ணங்கள் தொடர்ந்து வந்தால், மனத்தில் பயமும் பதற்றமும் அதிகரிக்கும். இதனால் நிம்மதி குறைந்து தூக்கமின்மை, கவலை, மனச்சோர்வு போன்ற பிரச்சினைகள் உருவாகலாம்.

இரண்டாவது, தன்னம்பிக்கை குறையும். ஒருவர் எப்போதும் தன்னைப் பற்றி எதிர்மறையாக நினைத்தால், தனது திறமைகளை நம்ப முடியாமல் போகிறார். நல்ல வாய்ப்புகள் வந்தாலும் முயற்சி செய்யத் தயங்குவார். இதனால் திறமை இருந்தும் முன்னேற முடியாத நிலை ஏற்படும்.

மூன்றாவது, உறவுகள் பாதிக்கப்படும். எதிர்மறை எண்ணங்கள் கொண்டவர்கள் மற்றவர்களின் செயல்களையும் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடும். சந்தேகம், கோபம், வெறுப்பு போன்ற உணர்வுகள் அதிகரித்து குடும்பம், நண்பர்கள் மற்றும் பணியிட உறவுகளில் பிரச்சினைகள் உருவாகலாம்.

நான்காவது, உடல்நலமும் பாதிக்கப்படும். நீண்டகால மன அழுத்தம் உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது. தலைவலி, சோர்வு, உயர் இரத்த அழுத்தம், செரிமானக் கோளாறுகள் போன்ற பிரச்சினைகள் உருவாக வாய்ப்பு அதிகம்.

ஐந்தாவது, வாழ்க்கை முன்னேற்றம் தடைப்படும். எதிர்மறை எண்ணங்கள் முயற்சியைக் குறைக்கின்றன. ‘இது நடக்காதுஎன்று முன்பே முடிவு செய்துவிட்டால், புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளவும், இலக்குகளை அடையவும் ஆர்வம் குறையும். இதனால் கனவுகள் நிறைவேறாமல் போகலாம். இவை அதிகரிக்கும்போது மிகச் சாதாரண நிகழ்வுக்குக் கூட மனம் நொந்து சிறு சிறு முடிவுகள் எடுக்கக் கூட காலம் தாழ்த்தி மன நிம்மதியை இழக்க நேரிடும்.

இருப்பினும், எதிர்மறை எண்ணங்களை முழுவதும் அகற்ற முடியாவிட்டாலும், அவற்றைக் கட்டுப்படுத்த முடியும். நல்ல நண்பர்களுடன் பழகுதல், உடற்பயிற்சி செய்தல், தியானம், நன்றியுணர்வை வளர்த்தல், சிறிய வெற்றிகளை நினைவுபடுத்திக் கொள்ளுதல் போன்ற பழக்கங்கள் மனத்தை நேர்மறை நோக்கில் மாற்ற உதவும். எப்போதும் தோன்றும் எதிர்மறை எண்ணங்கள் மனநலம், உடல்நலம், உறவுகள் மற்றும் வாழ்க்கை முன்னேற்றம் ஆகிய அனைத்தையும் பாதிக்கக்கூடியவை. எனவே, அவற்றை உணர்ந்து, நேர்மறைச் சிந்தனையை வளர்ப்பதே மகிழ்ச்சியான மற்றும் வெற்றிகரமான வாழ்க்கைக்கான முக்கியமான வழியாகும்.

இதெல்லாம் கேட்பதற்கு நல்லாத்தான் இருக்கு, எப்படி இதிலிருந்து மீண்டு வர்றது என்று நம்முள்ளே ஓர் எண்ணம் ஓடும்? எவ்வகையான எண்ணங்கள் நம் வாழ்வில் அதிகம் இடம் பெறுகிறது? எதனால் அவை வருகிறது, அதை எப்படிக் கையாள்வது என்பது பற்றி அடுத்த வாரம் காண்போம்.

news
சிறப்புக்கட்டுரை
எப்படியும் அரசியல்: தகர்க்கப்பட்ட நம்பிக்கைகள்

நம் வாழ்வுஇதழொன்றில்அசிங்கம்என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதிய நினைவு இருக்கிறது. அக்கட்டுரை எழுதப்பட்ட காலம், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுநரும், அவரது தவப்புதல்வனும் தமிழ்நாடு அரசியல் களத்தைத் துவம்சப்படுத்திக் கொண்டிருந்த அசிங்கமான காலம். யாருடைய அரசியல் போக்கைப் பெரியவர் இராமதாசு அசிங்கமென வர்ணித்தாரோ, ‘அவராகிய குமாரன் தன் உதிரத்தே உதித்தவன் என்பதால் தம்மைத் துறந்து, உடன் வந்தோரையெல்லாம்அய்யோஎன்று அலறவிட்டுவிட்டு, ‘அவராகிய மகனை உச்சிமோந்து, கண்ணீர் சிந்தி அணைத்துக் கொண்ட நிகழ்வில், அசிங்கம் கரைந்து போய் புனிதமாகிவிட்டதோ?

பெற்றெடுத்த மகன் நிகழ்த்திய அரசியல் கூத்தை அசிங்கம் என விமர்சித்த பெரியவருக்கு, இன்றுமாபெரும் தலைவர்கள் என வாழ்த்தப் பெறுவோர் பலர் ஆடிவரும் அரசியல் அநாகரிக அசிங்கங்கள் மகிழ்வையும், ஒருவகை ஆறுதலையும் தந்திருக்கலாம் என்றும் நம்பலாம்!

அசிங்கத்தின் உச்சம்

இன்று தமிழ்நாட்டு அரசியலில் என்ன நடக்கிறது? தமிழ்மண், தமிழ்க் கலாச்சாரம், தமிழ் அறம் என்று பேசப்பட்டவையெல்லாம் வெறும் கற்பனையோ? வெறுங்கனவோ? என்று எண்ணப்பெறுகின்ற அளவுக்கு அனைத்துவகை சீர்குலைவுகளும் அரங்கேறி வருகின்ற ஒரு துர்பாக்கிய நிலையைச் சந்தித்து வருகின்ற காலச்சூழல்! இச்சூழலை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்?

கொள்கை மறந்த கட்சிகள்

இந்தியச் சமூக அமைப்பையும், இவ்வமைப்புள் நிறுவப்பட்ட சனநாயக அரசையும் பிரபல அரசியல் ஆய்வறிஞர் ரஜினி கோத்தாரி அவர்கள்பொருத்தமற்ற ஒன்று (Mismatch) என்று வர்ணிப்பார். இந்தியச் சமூக அமைப்பும், அதன் கலாச்சாரமும் ஏற்காத சனநாயகக் கலாச்சாரத்தை வலிந்து திணித்த இந்தியத் தேசியத் தலைமைக்கு எவ்விதச் சுயநலநோக்கும் இல்லை என்பதே உண்மை. பெரும்பான்மை மக்களின் சமயரீதியான உணர்வைத் தாண்டியும் இந்நாட்டினைச் சமயச்சார்பற்ற நாடாக உருவாக்க வேண்டிய கட்டாயத்தை உணர்ந்த பண்டித நேருவின் தெளிந்த மனப்பான்மையைப் போற்றுகிறோம்.

மதப்பெரும்பான்மையைக் கட்டமைத்து, மதவாத அரசொன்றினை ஏற்கும் மனநிலை நியாயப்படுத்தப்பட்ட பின், இங்குச் சனநாயகத்தின் பொருள் என்ன? சமயச் சார்பின்மையின் ஏற்புடைமை (Relevance) என்ன? இந்தப் பெருங் கேள்விகளுக்கெல்லாம் விடைகாண வேண்டிய இந்திய அரசியல் சமூகச் சூழ்நிலையில், இந்திய மதவாத அரசியலை, மதவாதம் முன்வைக்கும் மதப்பெரும்பான்மைவாதத்தை, மதப்பெரும்பான்மைவாதம் முன்னெடுக்கும் பாசிச அரசியலை எதிர்கொள்ள வேண்டி உருவாக்கப்பட்டஇந்தியா (INDIA) கூட்டணி இந்திய அளவில் என்ன நிலையில் இருந்தாலும், தேசிய அளவில் இராகுல்காந்தி தலைமையிலும், தமிழ்நாட்டில்திராவிட மாடல்அரசின் ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி என்னவானது?

இந்தியாகூட்டணியின் தலைவராகவும், தொடர்ந்து இந்திய ஒன்றியத்தின் தலைமை அமைச்சராகவும், திராவிடத்தின் ஸ்டாலின் அவர்களால் முன்மொழியப்பட்ட இராகுல்காந்தி அவர்கள், தி.மு. கூட்டணியைக் கண்டுகொள்ளாமையின் அரசியல் என்ன?

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவில் 40 இடங்களில் வெற்றியை உறுதி செய்த ஸ்டாலின் செய்த அரசியல் தவறு என்ன? தேசியத் தலைமைக்கு மிகத் தாராள மன நிலையில் ஆதரவு தந்த நிலையில், ஸ்டாலினோடு இணைந்து பரப்புரை கூட செய்ய முடியாத அளவுக்குத் தனித்துப் போய் பரப்புரை செய்து, மக்களுக்குத் தந்த செய்தி என்ன? இன்று தமிழ்நாட்டில்இந்தியாகூட்டணி பற்றிப் பேச இயலாமைக்கு என்னென்ன காரணம் என்று யோசிக்க வேண்டியிருக்குமோ! அதன் தொடக்கப்புள்ளி இதுதான்.

வலுவான கூட்டணிக் கட்சிகளும், தடுமாறும் நிலைப்பாடும்

தமிழ்நாட்டில் மதச்சார்பற்றக் கூட்டணி வலுவான ஒன்று. இது வெறும் கட்சிக் கூட்டணி அல்ல; கொள்கைச் செறிவான கூட்டணி என்றெல்லாம் தமிழ்நாட்டின் முற்போக்குச் சக்திகளாலும், அறிவுசீவிகளாலும் போற்றப்பட்டு வந்த நிலையில், இக்கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளின் இன்றைய போக்கு மக்களிடம் ஏற்படுத்தியுள்ள அவநம்பிக்கை, வருத்தம் தரும் ஒன்றாகும். பொதுவெளியில் மக்களிடம் ஏற்படுத்தி வரும் இந்த நம்பிக்கை, சனநாயகத்திற்கு இழைக்கப்படும் பெரிய அவமானமாகும். சனநாயகத்தின் மிகப்பெரிய உள்ளீடு சுதந்திரமாகும். இச்சுதந்திரத்தின் மிகப்பெரியது கருத்துச் சுதந்திரம்! கருத்துச் சுதந்திரமே இன்று நாம் காணும் கட்சிகள். கட்சிகள் என்பன கொள்கைக் கலன்கள். நாட்டின் சனநாயக இயக்கத்தின் முதன்மைக் கூறாம் தேர்தல், அத்தேர்தல் முன்வைக்கும் தெரிவுச் சுதந்திரம் அனைத்தும் கட்சிகளின் செயல்பாட்டில்தான் உருப்பெறும். இக்கட்சிகள் நபர்களால் உருவாக்கப்பெறும் கும்பலும் அல்ல, கூட்டமும் அல்ல! கொள்கை வேறுபாட்டால், கொள்கை மற்றும் கருத்துச் சுதந்திரத்தால், பேச்சுரிமையால், சங்கமாகக் கூடுதற்கான உரிமையால் உருவாக்கப்பட்ட கட்சிகள் வெறும் பெயர்களால் வேறுபட்டதல்ல. தேர்ந்து கொண்ட கொள்கையால் தனித்த வேறுபட்ட அடையாளங்களைக்  (Identity) கொண்டவை.

கொண்ட கொள்கைகளை வேதமெனப் போற்றாது, சந்தர்ப்பவாத நோக்கில் செயல்படும் கட்சிகள் கட்சிகளே அல்லஇவை வாக்கு தேடி அலைந்து, பதவி சுகம் மட்டும் தேடுதலால், சனநாயக விழுமியங்களை வணிகமயமாக்குதலால், இக்கட்சிகள் வணிகம் செய்யும் வணிக நிறுவனமாகவே செயல்படுகின்றன. வணிகம் இலாபத்தை நோக்காகக் கொண்டது. இலாபம் தீட்ட வணிகர்கள் கையில் எடுக்கும் ஆயுதம்போட்டி.’ இப்போட்டியில் எந்தவித அறக் கோட்பாடும் இல்லை; போட்டியில் எந்த ஒழுக்க விதிகளும் (Morality) இல்லை. இன்றைய அரசியல் கட்சிகள் போட்டி அரசியலுக்குப் (Competitive Politics) பயன்படுத்தப்படுமானால், மேலே கூறப்பட்ட கட்சிகளுக்கான இலக்குகளால் என்ன பயன்?

கொள்கை எனும் நங்கூரமற்ற (anchorless) கட்சிகளே இன்றைய எதார்த்தம்என்பார் அறிஞர் ரஜினி கோத்தாரி. கொள்கை எனும் உள்ளீடற்ற கட்சிகளுக்கு எந்த வலுவும் இல்லை. எந்த வகை நிலைப்பாடும் இல்லை. வெறும் கூடுகளான (Single Shell) இக்கட்சிகளை எவர் வேண்டுமானாலும் ஆக்கிரமிக்கலாம், அபகரிக்கலாம். சமயச் சார்பற்றக் கட்சிகள், மதவாத பாரதிய சனதாவிடம் பலியான காரணம் இதுவே. பாரதிய சனதா தன் கொள்கைகளை என்றும் எப்போதும் சமரசம் செய்ததே இல்லை. மேனாள் துணைப் பிரதமர் எல்.கே. அத்வானி அவர்கள், “இந்துத்துவமே பாரதிய சனதாவின் Mascotஎன்பார். இக்கட்சியின் உயிரார்ந்த கலாச்சாரத் தேசியத்தின் அடிப்படைக் கூறுகள் கடந்த 12 ஆண்டு பாரதிய சனதா ஆட்சியில் நடைமுறைக்கு வருவதைப் பார்க்கிறோம்.

இவ்வளவு வலுவான இக்கட்சியுடன் அணி சேர்ந்து சோரம் போன தமிழ்நாட்டுக் கட்சிகளை நாம் அறிவோம். இக்கட்சிகளுள் திராவிடம் பேசிய கட்சிகளும் அடக்கம். பொதுவுடைமைக் கட்சிகள் மட்டுமே  ஓரளவு சுயமரியாதையைக் காத்துக் கொண்டவை என்று கூறமுடியும்.

தமிழ்நாட்டுக் கட்சிகளின் நம்பகத்தன்மை

தமிழ் மக்கள் இன்று தமிழ்நாட்டில் செயல்படும் ஏதோ ஒரு கட்சியின்மீது நம்பிக்கை கொண்டிருப்பர். இவர்களால் போற்றப்பட்ட கட்சித் தலைமைகள் ஏற்கும் முடிவுகளை எப்படி இவர்களால் ஏற்க முடிகிறது? அல்லது நாளொரு முடிவை ஏற்கும் தலைவர்கள், தம்மை இதுவரைப் பின்தொடரும் தொண்டர்கள் என்ன நினைப்பர்? என்று கூட எண்ணிப் பார்க்கமாட்டார்களா?

அண்மையில் திசை மாறிய வைகோ அவர்கள், தன் மாற்றத்திற்கு என்ன காரணம் கூறினார்? தமிழ், தமிழ் தேசியம், ஈழ விடுதலை என்று நாளும் பேசிவந்த இந்த நெடிய மனிதர் .வெ..விடம் சரணாகதி ஆகின்றார். இந்த நெடிய நீண்ட பாராளுமன்றவாதி எந்த அனுபவத்தை, எதைத் தேடி அங்கு போகிறார்? இவர் போக்கில் நடந்த சமரசம் எது? இவரின் பல பத்தாண்டு அனுபவம் மக்களுக்குத் தரும் செய்தி என்ன? இத்தனை பெரிய மனிதரின் அரசியலுக்கு இவர் முன்வைத்த தர்மம் என்ன?

அண்மையில் தடம் மாறிப்போன இக்கட்சிகள் நியாயப்படுத்தும் மற்றொரு சொல் பங்கேற்பு. பங்கேற்பு என்பது சனநாயக விழுமியம். பங்கேற்பு எனும் விழுமியம்  சனநாயகத்தின் உண்மையான உட்கூறு. இது குடிமக்களின் அடிப்படை உரிமை. இது சலுகையன்று. தமிழ்நாட்டின் புதிய அரசு அளிக்க முன்வந்துள்ள பங்கேற்பைப் பெருங்கருணையென ஏற்றுக்கொண்ட (கொள்கை) கட்சிகள், வலுவாக அணி திரண்டுள்ளன. இவ்வணியில் இடம் பெற்ற வி.சி.. தலித் விடுதலைக்கு இதுவே அச்சாரம் எனப் பூரிப்பு கொள்கிறது. ‘எழுச்சித் தமிழர்இங்குத் தோற்றாரா? வென்றாரா? வரலாறு பதில் கூறும். என்றாலும், இவர் காட்டிய இன்றைய வழி சரியானது அல்ல.

இவர்களுள் பெரிய அதிர்வைத் தந்த இந்திய முசுலிம் லீக் கட்சி மிகப்பெரிய பாதகம் இழைத்தது என்பதே உண்மை. இந்திய அரசியல் வாழ்வில், பண்பாட்டுத்தளத்தில் முசுலிம்களை முழுவதுமாக முடித்துக்கட்டும் பணியைத் திட்டமிட்டு செய்து வரும் இந்திய மதவாதிகளைக் கொள்கை ரீதியாக எதிர்த்து, சிறுபான்மையினருக்குக் காவல் அரணாகத் திகழ்ந்த திராவிடத்தை, ‘பங்கேற்புஎன்ற பெயரில் சமரசம் செய்த போக்கைச் சனநாயகச் சமூகம் மன்னிக்காது.