news
சிறப்புக்கட்டுரை
எழுதும் பழக்கம் குறைவதால் ஏ.ஐ. மீது பழி போடலாமா? (உலகம் உன் கையில் – 29)

எழுத்தும் மொழியும்: முன்பொரு காலத்தில் பாறையில் கீறப்பட்ட ஒரு சிறு கோடுதான் இன்று உலகை ஆளும் பேராற்றலாக, ‘எழுத்துஎன்ற வடிவில் நம் கைகளில் தவழ்கிறதென்பது கேட்பதற்கு வியப்பாக இருக்கும்.

நாம் கண்டெடுக்கும் பழங்காலக் கற்பாறைச் சித்திரங்கள், தோல் சுருள் மடல்கள், மண்பானை ஓடுகள், பனை ஓலை இலக்கியங்கள் போன்ற நம் முன்னோர் விட்டுச்சென்ற புதையல்கள் அனைத்துமே கைகளால் உருவானவையே. இவை நம் கண்களுக்குத் தெரியும் வெறும் பொருள்களல்ல.

சித்திரங்களும் எழுத்துகளும் ஒருவகை கீறலாயிருந்தாலும், ஏதோ ஒன்றைச் சொல்கின்றன. எழுத்தை வரைவின் (drawing) முதிர்ச்சி என்றும் கூறலாம். தேவைக்கேற்ப உருவான எழுத்தின் வளர்ச்சி ஒரு கட்டத்தில் கணிதம் (arithmetic), வடிவியல் கணிதம் (geometry), வானியல் (astronomy), விவசாயம் (agriculture) என்று பல துறைகளில் கால் பதித்திருக்கிறது.

எழுத்தைப் பற்றி ஆராய, மொழியை அறிந்திருக்கவேண்டும். மனிதன் எதிர்வினையாற்றவும், மற்றொருவரை தூண்டச்  செய்யும் கருவியாக மொழி உள்ளது. நிரந்தரமான பதிவுகளும் செய்திகளும் இடம்பெயர்ந்து செல்லக்கூடியவை என்பதால் எழுத்து ஒரு மொழியோடு மட்டும் நின்றுவிடாமல், மனிதத் தொடர்புக்குப் பாலமாகவும், நாகரிகத்தின் பகுதியாகவும், கலாச்சார அடையாளமாகவும் போற்றப்படுவதைப் பார்க்கிறோம்.

எழுத்துலகில் இயந்திர ஊடுருவல்

அலுவலகங்களின் தோற்றமும் இயக்கமும் கடந்த 70-80 ஆண்டுகளில் வெகுவாக மாறிவிட்டதை, இன்று வாழும் மில்லினியல் தலைமுறையினர் நன்கு அறிவர். முன்பொரு காலத்தில் தட்டச்சு இயந்திரங்களின் (type writers)  சத்தமும், மை - பேனாக்களை அலங்கரித்த மேஜைகளும் மறைந்துவிட்டன. கையினால் எழுதி ஆவணங்களாக்கப்பட்ட காலம் சென்று, அடுத்து வந்த தட்டச்சு இடத்தைக் கணினி ஆக்கிரமித்து, தானியக்கமாகி வருவதெல்லாம் நம் கண்முன்னே நடந்து வருகிறது.

அடுக்கடுக்கான காகிதக் கோப்புகள் (files), லெட்ஜர் பதிவேடுகள், பிரம்மாண்ட மர அலமாரிகள் இன்று காணாமல் போய்விட்டன. கணினிகளின் வருகை ஆவணங்கள் அனைத்தையும் டிஜிட்டல் மயமாக்கிவிட்டன. ஆவணங்கள் தொலைந்து போகாமல் மேகக்கணிமை (cloud storage) அமைப்பில் பாதுகாப்பாகச் சேமிக்கப்படுகின்றன. தனித்தனிப் பிரிவுகள், அதற்குப் பல பணியாளர்கள் என்பது பழங்கதையாகி, ஒட்டுமொத்த அலுவலகத்தையும் இயக்கும் தானியங்கி முறைகள் (automation) வந்துவிட்டன.

மனித உழைப்பு தேவைப்படும் இடங்கள் குறைந்து, மேற்பார்வை செய்யும் பணிகளே இன்று பிரதானமாக உள்ளன. வங்கி, மருத்துவம், போக்குவரத்து, கல்வி என்று கடந்த ஐம்பது ஆண்டுகால இயந்திரமயத்தில், எழுத்தர் பணி முதல் பலிகடாவானதைத் தவிர்க்க முடியவில்லை. என்றாலும், பல எதிர்ப்பலைகளைச் சந்தித்து, கடந்த 500 ஆண்டுகளில் அச்சு இயந்திரம், தட்டச்சு, டிஜிட்டல் போன்ற தொழில்நுட்பங்களைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டிருக்கும்எழுத்தைமனிதனிடமிருந்து எந்நிலைமையிலும் பிரிக்க முடியாதென்கிறது வரலாறு.

எழுத்து - அச்சு - டிஜிட்டல் - வெறும் தொடர்புக் கருவிகளா?

கையினால் எழுதுவதென்பது மனித தொடர்புகளுக்கான கருவியென்று முடித்துவிட முடியாது; இது நம் நாகரிகத்தின் அங்கமாகவும், கலாச்சாரத்தின் அடையாளமாகவும் விளங்குகிறது. எழுதுவதற்குப் பார்வை, கைவிரல்களின் அசைவு, தொடு உணர்வு மற்றும் எழுத்துகளின் வடிவத்தை மனத்தில் உருவாக்குதல் போன்ற பல நகர்வுகளை மூளை ஒரே நேரத்தில் ஒருங்கிணைக்கிறது. தட்டச்சு செய்வதைவிட மெதுவாக எழுதுவது, ஒரு கருத்தை ஆழமாகச் சிந்திக்கவும் உள்வாங்கவும் மூளைக்கு அவகாசம் அளிக்கிறது. இதனால் கற்றல் மேம்படுகிறது; நினைவாற்றல் பெருகுகிறது.

காகிதத்தில் எழுதும்போது வரைபடங்கள், குறியீடுகள் மற்றும் யோசனைகளை எளிதாக இணைக்க முடிவதால் புதுமை படைக்கும் திறன் தூண்டப்படுகிறது. மறுபுறம், யோசனைகளையும் தகவல்களையும் மிக வேகமாகக் கடத்தவும், அதிக தரவுகளை உருவாக்கவும் தட்டச்சு, டிஜிட்டல் முறை உதவுகிறது; ஆன்லைன் மூலம் உலகெங்கிலும் உள்ள மாணவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் நொடியில் தகவல்களைப் பகிரவும் முடிகிறது. எனவே, இச்சிறப்பு வாய்ந்த தட்டச்சு அல்லது டிஜிட்டல் வழி எழுத்து  முறைக்குச் சளைத்தது என்று கூறமுடியாது; இரண்டும் வெவ்வேறு தேவைகளுக்குப் பயன்படுவதை நடைமுறையில் காண்கிறோம்.

.. எழுதத் தொடங்கிவிட்டது!

.. கருவிகள் (chat GPT, Gemini,Claude) நாம் கேட்பதைச் சில நொடிகளில் எழுதிக்கொடுக்கின்றன. இதனால் மனிதர்கள் சிந்தித்து எழுதும் உழைப்பும் குறைகிறது. .. ஒரு சிறந்த உதவியாளரைப்  போன்று (co - writer) ஒரு கட்டுரையின் ஆரம்பக்கட்ட கருத்துகளைப் பெறவும், தரவுகளைத் திரட்டவும், அரிய தருணங்கள், தலைப்புகள், தயாரிப்புகளை விளக்குதல், வாடிக்கையாளர் உதவி போன்ற பிரிவுகளில் நம் நேரத்தையும் சேமிக்கிறது; என்றாலும், சில குறைகளும் உள்ளன.

.. கருவிகள் ஏற்கெனவே இணையத்தில் உள்ள தரவுகளை வைத்தே எழுதுவதால், மனிதர்களின் தனித்துவ நடை, கற்பனை மற்றும் ஆழமான உணர்வுகள் குறைந்து, ஒரே வழியில் (generic) மாறும் வாய்ப்பும் உள்ளது. இருப்பினும், இன்றைய வாழ்க்கை முறைக்கு .. ஒரு துணையாக உருவெடுத்திருப்பதை  மறுக்க முடியாது.

கையினால் எழுதுவதற்கு .. மாற்றாகுமா?

சில நேரங்களில் நம் மூளைக்கு வேலை கொடுத்து, பேனாவை எடுத்து காகிதத்தில் எழுதுவதில் உயிர் இருக்கும்; ஏனென்றால் நாமே தேடி எடுக்கும் ஒரு வார்த்தையில் இருக்கும் உயிர் .. நொடியில் தரும் ஆயிரம் வார்த்தைகளில் இருக்காது. கையினால் எழுதுவது என்பது வெறும் வார்த்தைகளைக் கோர்ப்பது மட்டுமல்ல; அது ஒரு சிந்தனைச் செயல்முறை. இன்றைய டிஜிட்டல் உலகில் கீபோர்டு, தொடுதிரைகள் (touch screen) மற்றும் வாய்ஸ் மெசேஜ் (voice to text) ஆகியவற்றின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், கைகளில் எழுதும் வழக்கம் குறைந்து வருகிறது. இம்மாற்றம் .. தொழில்நுட்பம் வருவதற்கு முன்பே டிஜிட்டல் மயமாக்கலால் (digitalisation) தொடங்கிவிட்டது. தற்போது பேனா பிடித்து எழுதும் பழக்கம் பெரும்பாலும் பள்ளி, கல்லூரிகளோடு சுருங்கிவிட்டது.

ஆனால், .. ஒருபோதும் பேனாவைப் பிடிக்கும் எழுத்தாளனாக மாறமுடியாது; அந்த எழுத்தாளனின் கையில் இருக்கும்மேஜிக் பேனாவாகநிச்சயம் செயல்பட முடியும். எழுதுவது என்பது, வெறும் கருத்துகளைச் சொல்வது மட்டுமல்ல; மாறாகஇவைகளை ஒலிக்கச் செய்வதில்தான் உள்ளது. ஓர் எழுத்தாளரைப் பிழிந்து எடுக்கும் முன்வரைவுகளே  (Draft)  அவரின் எழுத்திற்கு வளம் சேர்க்கின்றன. முன்வரைவுகளைத் திரும்பத் திரும்ப மாற்றியமைத்தல், மீண்டும் சிந்தனைக்கு உள்ளாக்குதல் என்பவை எழுத்திற்கு மெருகேற்றி சிறப்பாய் அமைவதற்குப் பின்னால் இருப்பவை எழுத்துகளே. இலக்கிய நடைக்கு மனித குரலைக் கொடுப்பதும் எழுத்துகளே! எழுதுவதில் போராடி தோண்டி எடுக்கும் அரிய புதையல்களான கண்டெடுப்புகள், மாற்றியமைத்தல், நுணுக்கங்கள் என்பவை எல்லாம் நாம் பேசும் இயந்திரங்களிடம் விலைக்கோ அல்லது வாடகைக்கோ பெறமுடியாது. இப்பொழுது சொல்லுங்கள், எழுத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று?

news
சிறப்புக்கட்டுரை
மனம் எனும் மாமருந்து (ஏற்றம் தரும் எண்ணங்கள் – 11)

உடம்பு எப்படி இருக்கு?’ எனக் கேட்கும்போது, நம் உடல் சரியாக இருந்தாலும், மனம் சரியாக இல்லையென்றால், ஒரு சலிப்பான பதிலைத்தான் எதிர்பார்க்க முடியும். அதுவே உடல்நிலை சரியாக இல்லாதபோது, திட மன திருந்தால், ‘நமக்கென்ன குறை? வாழ்க்கைய வாழ்ந்து பாத்துட்டா போச்சுஎனும் வீரியமான பதிலை எதிர்பார்க்கலாம்.

உடம்பை விட மனது வலிமையானதா? ‘ஆம்என்ற பதில்தான் அனைவரிடமிருந்தும் வரும். இரண்டும் வலிமையாக இருந்தால் அசைக்க முடியாத ஆற்றல் ஊற்றெடுக்கும். அந்த அசைக்க முடியாத ஆற்றல் எங்கிருந்து வருகிறது? மனத்தின் பங்களிப்பு என்ன? என்பதைப் பற்றிய ஓர் அலசலில் இறங்குவோம்.

எனக்கென்ன குறை? இதைப் பற்றித் தெரிய வேண்டிய தேவையும் இல்லை, அவசியமும் இல்லைஎன்று நகர்ந்துவிட வேண்டாம். நாம் சரியாக இருந்தாலும், நம்மைச் சுற்றியுள்ள சமூகத்தை உணர, இதைப்பற்றித் தெரிந்துகொள்வது அவசியம். இதைப் புரிந்துகொள்ள கொஞ்சம் மனது வைப்போம். மனது வைத்தால்தான் எதுவும் நடக்கும்.

எனக்கு மூளை சரியில்லைஎன்று யாரும் கூறுவதில்லை. ‘எனக்கு மனசு சரியில்லைஎன்றுதான் நாம் அனைவரும் பொதுவான சொல்லாடலைப் பயன்படுத்துகிறோம். ஆனால், அந்த மனநலன் பற்றிய புரிதல் என்பதைவிட, இகழ்தல்தான் அதிகமாக இருக்கிறது. ஏன்? மூளை சரியில்லை என்றால், மருத்துவரை அணுகி அதன் குறைபாடுகளைக் கண்டறிந்து சரிசெய்யும் முறை எளிதானது. மனது சரியில்லை என்றால் அவ்வளவு எளிதாக அல்லது விரைவாகக் கண்டறிந்து சரிசெய்வது முடியாத செயல் என்று சொல்லவில்லை; மாறாக, அதனைச் சரிசெய்ய சற்று காலம் எடுக்கும். ஏனென்றால், மனது என்பது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் சிந்தனை, சொல், செயலைப் பொறுத்தது. அதனை அவர் வழியில் சென்று புரிந்து, அவரையும் புரியவைத்து வெளிக்கொண்டு வருவது சற்று சவாலான ஒன்று. அதேநேரத்தில், இது ஓர் அலாதியான பயணம் என்பதைப் புரிந்துகொண்டால் அதனை அணுகுவது சற்று எளிது.

மனம் (Mind) என்பது மனிதனின் சிந்தனை, உணர்வு, விருப்பம், கற்பனை, முடிவெடுத்தல் மற்றும் நடத்தை ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் மிகச் சிக்கலான உளவியல் அமைப்பாகும். ‘மனம்என்பது மூளையுடன் தொடர்புடையது என்றாலும், மூளை (brain) என்பது உடலியல் உறுப்பு. மூளை எனும் வன்பொருள் (hardware) செயல்பாட்டிற்கு, மனம் (Mind) எனும் மென்பொருளே (Software) காரணமாக அமைகிறது. எளிதாகக் கூறவேண்டும் என்றால், கணினி (Computer) இயக்கத்தை வரையறுக்கும் வன்பொருள், மென்பொருள் போல இதனை நீங்கள் உருவகப்படுத்திக்கொள்ளவேண்டும்.

மூளை இயங்கவேண்டிய மென்பொருளைக் கட்டமைப்பது மனதுதான். இப்போது நமக்குப் புரிந்திருக்கும், நம்மைக் கட்டமைப்பதில் மனம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று.

நாம் முதலில் மனிதர்கள்; அதன் பிறகுதான் நமது பிற அடையாளங்கள். மனிதன் என்ற வடிவத்தைத் தாண்டி, சிறந்த மனிதன் என்ற அடையாளத்தை அடைய இந்த மனத்தினைப் (சிந்திக்கும் திறன் நிறைந்த பகுதி) பற்றிய புரிதல் நமக்குக் கட்டாயம் வேண்டும்தானே!

மூளை எல்லாருக்கும் ஒரே அளவில்தானே இருக்கிறது! பிறகு ஏன் மனிதனுக்கு மனிதன் வேறுபாடு உள்ளது?’ எனும் ஐயம் எழுவது இயல்பு. ஆம், மனிதனுக்கு மனிதன் ஏற்படும் வேறுபாடு மென்பொருள் எனும் மனதால்தான். இதுதான் நம்மைத் தனித்துவமிக்க மனிதனாக மாற்றி, நம்மை அடையாளப்படுத்தி, நல்லதோர் அங்கீகாரத்தை ஏற்படுத்துவது மனம்தான்... மனம் மட்டும்தான். ஆச்சரியம்தானே!

மனம் எங்கிருக்கிறது? அது ஒரு மென்பொருள்; உருவம் கிடையாது. அதை மூன்று அளவீட்டுக் குறியீடுகளாகப் பிரிக்கலாம்

1. எண்ணங்கள் (Thoughts)

2. உணர்வுகள் (Emotions)

3. அறிவாற்றல் (Intelligence)

இந்த மூன்றும் இணைந்ததே மனம். இது ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து செயல்படும். மூளை எப்படிச் சிந்திக்கவேண்டும்? எப்படி உணர்ச்சிவயப்படவேண்டும்? எதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்? என்று முடிவு செய்வது மனம்தான்.

நம் மனநலன் மேம்பட்டால் வாழ்க்கைத் தரமும் மேம்படும். பழையது என்பதற்காக மட்டுமே அது சரியானது என்று ஏற்றுக்கொள்வது ஒரு மனநிலை; இல்லை, அதில் உள்ள குறைகளைக் களைந்து புது வழியில் பயணிக்க வேண்டும் என்பது பரந்த மனநிலை. இதற்கு அடித்தளமாக இருப்பது தெளிவான சிந்தனை (எண்ணங்கள்), முறையான உணர்வுகள் மற்றும் நல்ல அறிவாற்றல். இவைதான் பரந்துபட்ட சமுதாயத்தை உருவாக்கும்.

மனத்தின் இந்த மூன்று நிலைகளும் எந்த அளவிற்கு நம்மைத் தனித்துவமாக வடிவமைப்பதில் பங்கெடுக்கின்றன என்பதைப் பற்றி அடுத்த வாரம் காண்போம்.

நிகழ்வுகள் அல்ல; அவற்றை நாம் புரிந்துகொள்ளும் விதமே நமது உணர்வையும் செயலையும் தீர்மானிக்கிறது.

(தொடர்ந்து பயணிப்போம்)

news
சிறப்புக்கட்டுரை
எச்சரிக்கை: நெருங்குகிறது எல் நினோ!

சிபிக் பெருங்கடலின் கிழக்குப்பகுதி மற்றும் மத்தியப் பகுதியில் அதாவது, பூமத்திய ரேகைப் பகுதியில், கடலின் மேற்பரப்பில் ஏற்படும் வெப்பநிலை கூடுதல் மற்றும் குறைதலால் உண்டாகும் சூழ்நிலைக் காரணங்களால் எல் நினோ மற்றும் லா நினா நிகழ்வுகள் உருவாகின்றன. வெப்பநிலை அதிகரித்தால் அந்நிகழ்வுஎல் நினோஎன்றும், குளிர்ச்சி அதிகரித்தால்லா நினாஎன்றும் அழைக்கப்படுகிறது.

பொதுவாக, டிசம்பர் மாதங்களில் பசிபிக் பெருங்கடலில் இம்மாற்றங்கள் ஏற்படுவதால், அப்பகுதி மக்கள் அம்மாதத்தில் பிறந்த இயேசுவைக் கருத்தில் கொண்டுசிறுவன் இயேசுஎன்று பொருள்படும்படிஎல் நினோஎனப் பெயரிட்டு அழைத்தார்கள்.

பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை 1 டிகிரி சென்டிகிரேட் அளவு அதிகரித்து, 2 டிகிரி சென்டிகிரேடுக்கு மேலும் அதிகரித்தால்சூப்பர் எல் நினோஎன்றும் அழைக்கப்படுகிறது.

அண்மைக்காலங்களில் 1982, 1997, 2015 -ஆம் ஆண்டுகளில்எல் நினோக்கள்  ஏற்பட்டிருக்கின்றன. ஆனால், தற்போது 2026-27-இல் வரவிருக்கின்றசூப்பர் எல் நினோவால் 3 டிகிரிக்கு மேல் வெப்பநிலை அதிகரிக்கும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுவதால், 1876-ஆம் ஆண்டு, அதாவது 150 வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்டசூப்பர் எல் நினோவை இது நினைவுபடுத்தி நம்மைப் பயமுறுத்துகிறது.

பொதுவான பாதிப்புகள்

பூமியின் நிலப்பரப்பைவிட பசிபிக் பெருங்கடலின் அளவு பெரிது என்பதால், அங்கு ஏற்படக்கூடிய சூழலியல் மாற்றங்கள் உலகின் எல்லாக் கடல்களிலும் மற்றும் நிலப்பரப்பின் பெரும்பாலான பகுதிகளிலும் எதிரொலிக்கத்தான் செய்கின்றன. வெப்பநிலை அதிகரித்தல் அல்லது குறைதல்  மாறுபாடுகளால் காற்றின் சுழற்சியில் சிக்கல் ஏற்பட்டு, உலகின் பல்வேறு பகுதிகளிலும் கொடூரமான வறட்சி, அதீதப் பெருமழை, அதிவேகப் புயல்கள், கடல்களில் சூப்பர் சூறாவளிகள் போன்ற இயற்கைப் பேரழிவுகள் ஏற்பட்டு, பெரும் பாதிப்பை உண்டாக்கிவிட்டன. இதன் காரணமாக, இவ்வாண்டு ஆகஸ்டின் இந்த நாள்வரை பசிபிக் பெருங்கடலில் மூன்று பெரும் சூறாவளிகள் ஏற்பட்டு, பெரும் பாதிப்பை உண்டாக்கிவிட்டன.

தமிழ்நாட்டின் பாதிப்புகள்

2026-இல் வரவிருக்கின்றசூப்பர் எல் நினோவின் தாக்கத்தால், தென்மேற்குப் பருவக்காற்றின் மூலமாகத் தமிழ்நாட்டிற்குக் கிடைக்கும் மழையின் அளவு மிகவும் குறைவாகவே கிடைக்கும் என்கின்றனர் துறை வல்லுநர்கள். இதன் காரணமாக, தமிழ்நாட்டின் மிக முக்கிய நீர்ப்பிடிப்புப் பகுதிகளான மேட்டூர் அணை, முல்லைப் பெரியாறு அணை போன்றவற்றில் தேவைக்கேற்ப தண்ணீரைப் போதுமான அளவு சேமித்து, விவசாயத்திற்கும் குடிநீருக்கும் உபயோகப்படுத்துவதில் பெரும் பின்னடைவு ஏற்படும் எனக் கணிக்கின்றனர்.

அதேசமயம், வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து கன்னியாகுமரி மாவட்டம் வரையிலான கடலோரப் பகுதிகளிலும், தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களிலும் அதீதக் கனமழை, குறுகியகால இடைவெளியில் பெருமழை கொட்டும் மேக வெடிப்புகள் ஆகியவை ஏற்பட்டு, அதன் காரணமாக வெள்ளப்பெருக்கு உண்டாக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறுகின்றனர். 2027, சனவரி மாதத்திலிருந்து அதன் பின்னர் வரவிருக்கின்ற கோடைக்காலங்களில் கொடூரமான வெப்ப அலையும், மோசமான வறட்சியும் ஏற்பட்டு, மக்களைச் சின்னாப்பின்னப்படுத்தும் என்று எச்சரிக் கின்றனர்.

அரசு செய்ய வேண்டியவை

காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்என்ற பழமொழிக்கு ஏற்ப, நீர்வரத்து உள்ளபோதே அரசாங்கம் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்யவேண்டியது அவசியத்திலும் அவசியமாகிறது. ‘சூப்பர் எல் நினோகாலகட்டத்தில் தென்மேற்குப் பருவக்காற்றால் குறைவான மழையைப் பெறும் என்று கணிக்கப்படுகின்ற நீர்ப்பிடிப்புப் பகுதிகளான மேட்டூர் அணை, முல்லைப் பெரியாறு அணைப்பகுதிகளில் முடிந்திருக்கின்ற மணல் மேடுகளைத் தூர்வாரி, கூடுதலான நீர் சேமிப்பை உறுதிசெய்து கொள்ளவேண்டும். மாநிலம் எங்கிலும் உள்ள கண்மாய்கள், ஏரிகள், குளங்கள், மழைநீர் வடிகால்கள் ஆகியவற்றைப் புனரமைப்புச் செய்து, நீர் சேமிப்பின் கொள்ளளவைப் பலப்படுத்த வேண்டும். சேமித்த நீர் வெளியேறிவிடாதபடி நீர்நிலைகளின் கரைகளில் மரங்களை நட்டு, கரை உடைப்புகளைச் சரிசெய்யவேண்டும். ‘சூப்பர் எல் நினோவின் பாதிப்பை உணர்ந்து, அரசு இத்திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தே ஆகவேண்டும்.

பொதுமக்களின் பங்கு

சூப்பர் எல் நினோவால் கோடைக்காலங்களில் கொடூரமான வெப்ப அலை வீசும் என்பதால், பொதுமக்கள் அனைவரும் வீடுகள் மற்றும் பணி புரியும் அலுவலகங்களைச் சுற்றிலும் அதிகமான மரங்களை நட்டு, ஏற்படும் பாதிப்பிலிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள முன்வரவேண்டும். கோடைக்காலங்களில் நிலவும் வறட்சியையும் தண்ணீர்ப் பஞ்சத்தையும் கருத்தில்கொண்டு, நீர் மேலாண்மையை மேம்படுத்தும் விதமாகப் பொதுமக்கள் மழைநீர் சேகரிப்பில் இப்போதிருந்தே முனைப்பு காட்டவேண்டும்.

குளோபல் வாமி(னி)ங்

சாதாரணஎல் நினோமூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறையும், ‘சூப்பர் எல் நினோபத்து அல்லது பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையும் உலகில் வந்துபோவது வழக்கமானதுதான். சுற்றுச்சூழல் பாதிப்புக் காரணிகளால் ஏற்படும் உலக வெப்பமயமாதலுக்கும் (Global Warming), ‘சூப்பர் எல் நினோவிற்கும் தொடர்பு இல்லை என்றாலும், குளோபல் வார்மிங்கால் பாதிப்புகள் இரண்டு மடங்கு கூடுதலாக ஏற்படும் என்பதையும் மக்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்; சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் தரவேண்டும்.

news
சிறப்புக்கட்டுரை
தேர்வு எனும் வன்முறையின் ஊற்றுக்கண்

இந்தியக் கல்வி அமைப்பின் உள்ளடக்கம் பாகுபாடு என்பதாக இருக்க, இக்கல்வி முறையின் தேர்வு முறையும் பாகுபாட்டைத்தானே உயிர்ப்பிக்கும்!

வன்முறை வன்முறையை உற்பவிக்கும் என்பது உலகோர் உணர்ந்த உண்மையாயினும், வன்முறையைப் பேராயுதமாகக் கொண்டு திட்டமிட்டு உருவாக்கிய எதிரிகள், வன்முறையைக் கையிலெடுக்கின்றபோதுஅய்யகோ! வன்முறை! வன்முறை!’ என்று கூச்சலிடுவோரைச் சமூகத்தின் பல பகுதிகளிலும் நாம் சந்திக்கின்றோம்.

தம் இளமையைத் தொலைத்துவிட்டு, ஆயுதமேந்தி ஒடுக்கப்பட்ட மக்களுக்காய்ப் போராடி வரும் நக்சல்பாரித் தோழர்களைபயங்கரவாதிகள்என்று அழைக்கின்றோம். ஆயுதம் தாங்கிப் போராடும் இவ்விளைஞர் படை அழிக்கப்பட்டுவிட்டதாகச் சுதந்திர தினப் பேருரையில் பிரதமர் முழங்குகிறார். இவ்விளைஞர் கூட்டம் ஏந்தி நிற்கும் ஆயுதங்கள் இவர்களின் பிறப்பிலேயே உருவானவையா? அல்லது இக்கொடிய ஆயுதங்களை ஏந்துமளவிற்கு அவர்கள் தள்ளப்பட்டார்களா?

இளமையின் சுகம் அத்தனையும் உதறிவிட்டு, வாழும் நாள்களின் ஒவ்வொரு நொடியும் நிச்சயம் இல்லாத நிலையில், காடுகளைத் தஞ்சமடைந்து வாழும் இவர்களின் ஆயுதம் தாங்கிய வன்முறை வாழ்விற்குப் பதில் கூறவேண்டியவர்கள் தம்மைஅகிம்சாமூர்த்திகள்என்று காட்டிக்கொள்கிற அவலத்தை நாம் நாளும் சந்தித்து வருகிறோம். வன்முறையை அமைப்பு ரீதியாகக் (Systematic) கட்டமைத்துக் கொண்ட ஓர் அமைப்பு, அதன் பிரிவு நாட்டை ஆளும் அரசு என்ற பெயரில் நம்மைப் பொய்யாக நம்பவைத்து, ஏமாற்றுவது நாம் காணும் அவலம். இப்பொய்மையை உடைத்தெறிவது எப்போது? எப்படி? ஆயுதம் ஏந்தி, விடுதலை நோக்கில் போராடும் முறைக்குவக்காலத்துவாங்கும் நோக்கில் இக்கட்டுரை எழுதப்பெறவில்லை. நோக்கம் வேறு!

இன்று நடப்பது என்ன?

நீட்தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்து நடைபெற்ற இளைஞர்தம் எழுச்சிமிகு போராட்டம் தீர்வு நோக்கி நடத்தப்பட்ட ஓர் அரிய போராட்டம். இளைஞர்கள் முன்னெடுத்த தன்னெழுச்சிப் போராட்டம். இலட்சக்கணக்கான இளம் மாணாக்கர்களின் இலட்சியக் கனவு. ஒன்றிய அரசின் இயலாத தன்மையால் போராட்டம் குலைக்கப்பட்டபோது, இளைஞர் பலர் கத்தியின்றி இரத்தமின்றி முன்னெடுத்த அகிம்சாவழிப் போராட்டம். சனநாயக அரசு ஒன்றின் பதில் கூறும் கடமையை (Accountability) உறுதிசெய்ய நடத்தப்பட்ட போராட்டம். ‘நீட்என்றழைக்கப்பட்ட ஒரு தேர்வுமுறை மாணாக்கர்களின் வாழ்க்கை கனவுகளைச் சிதைக்கும் கருவியானால், ‘நீட்எனும் தேர்வுமுறையும் வன்முறையை (Violence) உள்ளடக்கமாகக் கொண்ட ஒரு பயங்கரவாதம்தானே!

கல்வி அமைப்பின் ஒரு பகுதியாம் தேர்வு முறை (Exam) ஒரு பயங்கரத்தைக் கட்டமைக்கலாம் என்று கருதினால், அதை எத்தனை பேர் ஏற்றுக்கொள்வர்? இந்தியக் கல்வி அமைப்பின் உள்ளடக்கம் என்பதுபாகுபாடுஎன்பதைப் புரிந்துகொண்டுள்ள திராணியற்றக் கல்வியாளர்கள், ‘நீட்எனும் தேர்வுமுறை பற்றி மட்டும் கேள்வி எழுப்புவது வேடிக்கையல்லவா!

நம் சமூகம் விரும்பியோ, விரும்பாமலோநீட்எனும் தேர்வு முறையில் நடந்த குழறுபடிகள் பற்றி விவாதிக்க நேர்ந்த சூழலில், இந்தியக் கல்வி அமைப்பின் சீர்கேடுகள் பற்றியும், அதன் பாகுபாட்டுப் பண்பு பற்றியும் விவாதிக்க வேண்டிய சூழலை உருவாக்கியுள்ளது என்பதும் வரவேற்கத்தக்கது.

நீட்தேர்வில் நடந்த முறைகேடுகளை முன்வைத்து நடத்தப்பெற்ற போராட்ட வடிவங்களை நாம் பாராட்டுகிறோம்; இம்முறைகேடுகள் இலட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலக் கனவுகளைச் சிதைத்தது என்பதையும் ஏற்றுக்கொள்வோம். ‘நீட்எனும் பயங்கர வடிவிலான தேர்வுமுறை அராஜகமானது என்பதையும் ஏற்றுக்கொள்வோம். ‘நீட்தேர்வில் நடந்த முறைகேடுகளைக் கேள்விக்குள்ளாக்கிய இளைஞர் போராட்டம், ‘நீட்தேர்வின் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டிய கல்வி அமைச்சரின் பதவி விலகலை வற்புறுத்திய இளைஞர் போராட்டம், ‘நீட் தேர்வு வேண்டாம்என்ற முழக்கத்தை ஏன் முன்வைக்கவில்லை?

இளைஞர்களின் இப்போராட்டத்தை நாம் மதித்தோமெனினும், ‘நீட்எனும் தேர்வுமுறையை மறுப்போம் என்றோ, இனியும் இத்தேர்வுமுறை வேண்டாம் என்றோ எந்த முழக்கமும் எங்குமே எழாதது கண்டு ஏமாந்துதான் போனோம். தமிழ்நாட்டின்திராவிட மாடல்அரசின் முதலமைச்சர்நீட்தேர்வை மறுத்த முறை, தமிழ்நாடு சட்டமன்றத்தில்நீட்தேர்விற்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்பனவெல்லாம் நம் நினைவில் எழ மறக்கவில்லை.

மீண்டும் வன்முறை பற்றிப் பேசுவோம்...

அண்மையில் நடந்த நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்தில் நடந்த விவாதத்தில், சூலை 20-ஆம் நாள் நடந்த இளைஞர் போராட்டத்தில், வன்முறை மிகுதியாகப் பிரயோகிக்கப்பட்ட பாதுகாப்புப் படையினர் பெல்லட் குண்டுகளைப் பயன்படுத்தினர்; தடுப்புச் சுவர்களில் (Barricade) மின்அதிர்வுகள் பயன்படுத்தப்பட்டன. போராளிகள் மீது தடியடி நடத்தப்பட்டன. போராட்டம் நடைபெற்ற ஜந்தர் மந்தர் திடல் அருகில் எறிகற்கள் நிரம்பிய வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. ஜந்தர் மந்தர் போராட்டக் களத்தில் பணிசெய்த பல காவல்துறையினர் அடையாள அட்டைகள் இல்லாமலிருந்தனர் (‘தி இந்து, 24.08.2026).

நீட்தேர்வு அளித்த அழுத்தத்தால் 23 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். போராட்டக்காரர்கள் மீது ஏவப்பட்ட பெல்லட் குண்டுவீச்சினால், ஒருவர் கண்ணை இழந்துள்ளார். போராட்டக்காரர்கள்மீது ஏவப்பட்ட வன்முறைகளை முதல் தகவலறிக்கையாகக் காவல்துறை பதிவு செய்யவில்லையென்று இராகுல்காந்தி செய்த தர்ணாவாக முதல் தகவலறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டது. ‘நீட்எனும் தேர்வுமுறை நிகழ்த்திய வன்முறைகளின் அடையாளங்களே இவை.

வன்முறையின் ஊற்றுக்கண்

நீட்எனும் தேர்வுமுறை ஆட்சியாளரின் ஆளும் திறனில் உருவானதாக இருக்கலாம். ஆனால், ‘நீட்எனும் தேர்வுமுறை மட்டுமல்ல; இந்தியக் கல்வி அமைப்பு நடத்தும் அனைத்துத் தேர்வுமுறைகளுமே வன்முறை வடிவங்களைக் கொண்டவைதாம். தேர்வுமுறை (Examination System) வன்முறை என்பது மட்டுமல்லாமல், இத்தேர்வை நடத்தும் இந்தியக் கல்வி அமைப்பு வன்முறையின் மொத்த உருவமே!

இந்தியக் கல்வி அமைப்பு இந்தியாவில் 100 வகையான தேர்வுகளை நடத்துகின்றது. இத்தேர்வு முறைகளில் அவ்வப்போது பெரிய தவறுகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. நடக்கும் அனைத்துத் தேர்வுகளும் போட்டித்தேர்வுகளே. இப்போட்டியில் கலந்துகொள்ளும் மாணவர்களை உருவாக்கும் கல்வி அமைப்பின் உருவம் (Form), உள்ளடக்கம் (Content) என்ன என்பது பற்றிய ஆய்வு ஏதுமின்றி, ‘நீட்தேர்வில் நடந்த முறைகேடுகளைப் போக்குவதற்கான போராட்டமும், இப்போராட்டம் தரும் இடைக்காலத் தீர்வுகளும் நிரந்தரத் தீர்வைத் தராது.

நீட்தேர்வில் நடந்த முறைகேடுகளைத் தற்காலிகமாகப் போக்க உச்ச நீதிமன்றம் சில தீர்வுகளைத் தரலாம். சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி மிகப்பெரிய கரிசனையோடு, சில தீர்வுகளைப் பரிந்துரைத்திருக்கலாம். போராட்டத்தை முன்னெடுத்த இளைஞர்களின் குரலில் கொஞ்சம் நியாயம் இருப்பதாகக்கூட மோகன் பாகவத் நாடகமாடலாம். போராட்டக்காரர்கள் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் தனக்கு எதிராக உதிர்ந்த வார்த்தைகளை இந்தியப் பிரதமர்பெருந்தன்மையோடுமன்னித்துவிட்டிருக்கலாம். இவை அனைத்தும்நீட்எனும் பயங்கரத்தின் (Terror) ஊற்றுக்கண்ணைக் கேள்விக்குள்ளாக்கவில்லை, அடையாளப்படுத்தவும் இல்லை.

இந்தியக் கல்வி அமைப்பின் உள்ளடக்கமே பாகுபாடுதான். மனித உரிமை மொழியில் பாகுபாடு என்பது மிகப்பெரிய வன்முறை. இந்தியச் சமூக அமைப்பு, மனிதர்களைப் பிறப்பின் அடிப்படையில் பாகுபடுத்தும் சமூகம். இப்பாகுபாட்டு வடிவத்தை நியாயப்படுத்தும் வர்ண பேதத்தைத் தர்மமாக நியாயப்படுத்திய ஒரு சமூக அமைப்பின் மிகப்பெரிய கெட்ட சொல்தான் இவர்கள் கூறும்சமத்துவம்.’ இச்சமனற்றச் சமூகப்போக்கை கவனத்தில் கொண்ட இந்திய அரசியல் சாசனம், பாகுபாட்டைப் போக்க, சமூக நீதியைக் காக்க அரசியல் ரீதியாக இடஒதுக்கீடு போன்ற நடைமுறைகளை முன்னெடுத்தது. அதில் ஒன்றானஎல்லாருக்கும் கல்விஎன்ற முழக்கம் இப்போதுவரை வெறும் முழக்கமாகவே இருந்து வருகிறது.

ஒரு பாகுபடுத்தும் சமூகம், பாகுபாட்டைப் போக்க எவ்விதத் தீவிர முயற்சியும் எடுக்காத நிலையில், கடைசிவரை பாகுபடுத்தும் சமூகம்  அளிக்கும் கல்வி பாகுபடுத்தும் கல்வியாகவே இருக்கும்.

நம் கல்வி அமைப்பு போட்டியையும், அது தரும் இலாபத்தையும் நோக்காகக் கொண்டிருக்கும் நிலையில், இக்கல்வி முறை நடத்தும் தேர்வு போட்டித்தேர்வு (Competitive) முறையாக இருக்கையில், இப்போட்டித் தேர்வில் பங்கேற்கும் தகுதி பெறுவோர் யார்? சமனற்றக் கல்வி வாய்ப்பை நியாயப்படுத்திவிட்டு தேர்வை நடத்துகையில், அப்போட்டியில் கலந்துகொள்ளும் அனிதா போன்றவர்கள் எப்படி உயிர் வாழ்வர்?

இந்தியக் கல்வி அமைப்பின் உள்ளடக்கம் பாகுபாடு என்பதாக இருக்க, இக்கல்வி முறையின் தேர்வு முறையும் பாகுபாட்டைத்தானே உயிர்ப்பிக்கும்!

ஒற்றைக் கூரையின் கீழ் ஓராசிரியர் பள்ளிகள் இன்னும் இருப்பது உண்மை. ஓராசிரியப் பள்ளியில் படித்த மாணவனுக்கும், மேல் வர்க்கத்திற்கான கல்வி நிறுவனங்களில் படித்த மாணவனுக்கும் இடையே வேறுபாடுகள் நிறையவே இருக்கின்றன. ‘நீட்எனும் தேர்வுமுறை மட்டுமல்ல, இந்தியச் சமூக அமைப்புகளால் செயல்படுத்தப்பட்டு வரும் கல்வி அமைப்பும், இக்கல்வி முன்னெடுக்கும் அனைத்துத் தேர்வுமுறைகளும் வன்முறை வடிவங்களே.

மதச்சார்பற்ற இந்திய சனநாயகக் குடியரசு, சமத்துவக் கல்வியைத் தர மறுத்த நிலையில், இன்றைய மதவாத அரசிடம் ஒரு பாகுபாடற்ற பொதுக்கல்வியை எப்படி நாம் எதிர்பார்க்க முடியும்? அனைத்து உயர் கல்வி நிறுவனங்களின் தனித்துவமும் பறிக்கப்பட்ட நிலையில், இந்நிறுவனங்கள் மூலம் தயாரிக்கப்படும் பாடங்கள் காவிமயப்பட்ட நிலையில், இவை அனைத்துமே கேள்விக்குள்ளாகாத நிலையில், இக்கல்வி முறையின் தேர்வுமுறையினுள் ஒன்றானநீட்மட்டும் எப்படி வன்முறையற்றதாகும்? சமனற்றச் சமூகத்தின் சமூக உறுப்பினர்கள் பங்கெடுக்கும் போட்டித் தேர்வொன்றில்சம பங்கேற்பாளர்கள்என்பது எப்படி நியாயமாகும்?

இம்முறைகேடுகள் இலட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலக் கனவுகளைச் சிதைத்தது என்பதையும் ஏற்றுக்கொள்வோம். ‘நீட்எனும் பயங்கரவாத வடிவிலான தேர்வுமுறை அராஜகமானது என்பதையும் ஏற்றுக்கொள்வோம். ‘நீட்தேர்வில் நடந்த முறைகேடுகளைக் கேள்விக்குள்ளாக்கிய இளைஞர் போராட்டம், ‘நீட்தேர்வின் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டிய கல்வி அமைச்சரின் பதவி விலகலை மட்டும் வற்புறுத்தி அதில் வெற்றியும் கண்ட இளைஞர்கள், இனி தங்களது கோட்பாட்டை மறுபரிசீலனைக்கு உட்படுத்துவது அவசியம். அதுநீட்தேர்வு வேண்டாம் என்ற முழக்கத்தை முன்வைக்கவேண்டும்.

news
சிறப்புக்கட்டுரை
ஆனால்... அது அன்பு அல்ல; அடிமைத்தனம்! – வாழ்வின் மறுபக்கம் (புதிய தொடர்)

மானுட சமுதாயம் முழுமைக்கும் இன்றியமையாத ஆகப் பெரிய தேவையாக இருப்பது அன்பு மட்டுமே. மனித மனம் இயல்பாகவே அன்பிற்காக ஏங்குகிறது; அன்பை நாடியே ஓடுகிறது. குடும்பத்திலும் சமூகத்திலும் இணக்கத்தையும் அமைதியையும் பேரின்பத்தையும் உருவாக்கும் ஒரே உன்னதமான சக்தி அன்புதான் என்பதை எவரும் மறுக்க இயலாது. ஆனால், நாம் அனைவரும் பேராவலோடு எதிர்பார்க்கும் அந்தப் புனிதமான அன்பு, நடைமுறையில் எப்படி வெளிப்படுகிறது? அது நேர்மறையான அரவணைப்பாக, பாதுகாப்பாக, அர்ப்பணிப்பாக வெளிப்படுவதற்குப் பதிலாக, கட்டுப்பாடு, சுயசிந்தனையற்ற கீழ்ப்படிதல், அதிகார மேலாதிக்கம் போன்ற வடிவங்களிலேயே பெரும்பாலான குடும்பங்களிலும் சமூகக் கட்டமைப்புகளிலும் அரங்கேறுகிறது.

சங்க இலக்கியத்தில் எட்டுத் தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகையில் இடம்பெறும் ஒரு பாடல் தலைவன்-தலைவியின் மனப் பொருத்தத்தையும் பிரிக்க முடியாத காதலையும் மிக அழகாக எடுத்துக்கூறும். ‘கண்டதும் காதல் ஏற்பட்டுவிட்டதுஎன்று கூறுவதுபோல, ஒரு தலைவனுக்கும் தலைவிக்குமிடையே எதிர்பாராத சந்திப்பின்பால் காதல் மலர்ந்தது. இப்படி முன்பின் தெரியாத இளைஞனுடன் கண்டதும் காதல் ஏற்பட்டதால் தலைவிக்குத் தலைவன் மேல் ஐயம் ஏற்படுகிறது. ‘எங்கே இவன் நம்மை விட்டுச் சென்றுவிடுவானோ?’ என்ற பயம்தான் அது. தலைவியின் முகத்தில்சட்டெனத் தோன்றிய கவலையை உணர்ந்த தலைவன், தங்கள் கண்ணெதிரே தோன்றிய செம்மண் நிலத்தோடு சேர்ந்த நீரை எப்படிப் பிரிக்கமுடியாதோ, அதுபோலவே நம்மிருவரையும் பிரிக்கமுடியாது என்று காதல் மிகுதியால் தலைவியை நோக்கிப் பாடுகிறான்.

யாயும் ஞாயும் யாராகியரோ

எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்

யானும் நீயும் எவ்வழி அறிதும்

செம்புலப் பெயல்நீர் போல

அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே!’

(குறுந்தொகை - 40).

இப்படியாகக் காதலை உன்னதப்படுத்தியது நம் சமூகம். ஆனால், இன்றைய வாழ்க்கைப் பயணத்தில் பல தம்பதியரின் மனங்களுக்குள் ஒரு கேள்வி நிழலாடிக்கொண்டே இருக்கிறது. ‘தொடக்கத்தில் தேவதையாகக் கொண்டாடிய மனைவியை இன்று கண்டாலே ஏன் ஓடத் தோன்றுகிறது?’ அல்லதுஉயிருக்கு உயிராக நேசித்த கணவன்மீது இன்று ஏன் வெறுப்பு மேலிடுகிறது?’ என்ற சுய அலசல்கள் மனித இயல்புதான். சில அசாதாரண மனிதர்களைத் தவிர்த்துப் பார்த்தால், யாரும் வேண்டுமென்றே பிறரை நிராகரிப்பதில்லை.

அன்பு என்பது தாய்மையின் பாலைப் போலத் தானாகவே கசியவேண்டிய ஓர் இயற்கை உணர்வு. வறண்டுபோன பசுவின் மடியில் வலுக்கட்டாயமாகக் கறந்து பாலை எடுக்க முடியாதல்லவா! அதேபோலத்தான் வற்றிப்போன மனங்களில் வற்புறுத்தி அன்பைப் பிழிந்தெடுக்க முடியாது. அதுவாகவே சுரந்து பொங்கும் உணர்வே நிலையானது. ‘ஒரு தாய் தன் குழந்தையின் குறைகளையும் ஏற்றுக்கொண்டு நேசிப்பதைப் போலத்தானே நானும் நேசிக்கிறேன்! பின் ஏன் என் துணைக்கு என்மீதான அன்பு வற்றுகிறது?’ என்று மனங்களுக்குள் ஆயிரமாயிரம் சந்தேகங்கள் எழலாம்.

ஆண்-பெண் உறவுக்குள் விரிசல்கள் ஏற்படுவதற்கு எண்ணற்ற காரணங்கள் இருக்கின்றன. நேரமின்மை, சந்தேகப் புயல், அளவுக்கு அதிகமான தலையீடு, தன்னுடைய இலட்சியப் பயணத்தில் மூழ்கித் துணையை மறப்பது, ஈர்ப்பும் மோகமும் காலப்போக்கில் குறைவது, மூன்றாம் நபரின் தூண்டுதல் எனப் பட்டியல் நீண்டுகொண்டே போகும். ஆனால், இவை அனைத்தையும்விட உறவை மெல்ல மெல்லக் கொல்லும் மிக முக்கியக் காரணி எது தெரியுமா? அதுதான் எல்லை மீறியஉடைமை உணர்வும் (Possessiveness) பொறாமையும்.

நுட்பமாக ஆராய்ந்து பார்த்தால், இந்தஉடைமை உணர்வுஎன்பது துணைவன் அல்லது துணைவியின் மீதுள்ள அதீத அன்பினால் ஏற்படுவது அல்ல; மாறாக, நம் துணையோடு பழகும் மற்றுமொரு நபர்மீது நமக்குள்ளேயே அறியாமல் பிறக்கும் பொறாமை உணர்ச்சியே இதன் முதன்மை மூலக்காரணம். ‘நீ எனக்கு மட்டுமே சொந்தம்என்ற வரியைக் கவிதைகளில் அழகாகப் படித்திருப்போம்; ஆனால், நடைமுறை வாழ்க்கையில் இந்த உடைமைப்போக்கு ஒரு கொடூரமான நஞ்சாக மாறுகிறது.

துணையின் ஒவ்வொரு தொலைப்பேசி அழைப்பையும் கண்காணிப்பது, அவர்களின் தனிப்பட்ட நட்புகளைத் துண்டிப்பது, அவர்களின் வளர்ச்சியைக்கூட ஓர் அச்சுறுத்தலாகப் பார்ப்பது என இது பல முகங்களை எடுக்கிறது. ‘நான் உன்னை அதிகமாக நேசிப்பதால்தான் இப்படிச் செய்கிறேன்என்று பாசத்தின் பெயரால் நியாயப்படுத்தப்படும் இந்த உடைமை உணர்வு, உண்மையில் எதிராளியின் சுயமரியாதையை ஒடுக்கும் ஓர் உளவியல் வன்முறை.

இந்த எல்லை மீறிய ஆதிக்க உணர்வால் உறவுக்குள் என்ன நிகழ்கிறது? முதலில் நம்பிக்கை உடைந்து, பயமும் சந்தேகமும் குடியேறுகின்றன. தொடர்ந்து கண்காணிக்கப்படும் துணை, தன் சுதந்திரம் பறிக்கப்படுவதை உணர்ந்து மனஅழுத்தத்திற்கும் மூச்சுத்திணறலுக்கும் ஆளாகிறார். வெளிப்படையான உரையாடல்கள் மறைந்து, பொய்களும் விலகல்களுமே மிஞ்சுகின்றன. அன்பு இருக்கவேண்டிய இடத்தில் அதிகாரமும், பாதுகாப்பு இருக்கவேண்டிய இடத்தில் சிறைவாசமும் உருவாகும்போது, அந்த உறவு தன் உயிரை இழந்துவிடுகிறது.

உளவியலாளர் எரிக் ஃப்ரொம் (Erich Fromm) தனதுதி ஆர்ட் ஆஃப் லவ்விங் (The Art of Loving) நூலில் ஒரு சுவாரசியமான கருத்தைக் குறிப்பிடுவார்: “பெரும்பாலான மனிதர்கள் அன்பை எப்படிப் பெறுவது என்பதில் மட்டுமே கவனமாக இருக்கிறார்களே தவிர, அன்பு செலுத்தும் தகுதியை எவ்வாறு வளர்த்துக்கொள்வது என்பதை யோசிப்பதே இல்லை.” நாம் அன்பாகக் கருதும் பெரும்பாலான உணர்வுகள், உண்மையில் எதிராளியைக் கட்டுப்படுத்தித் தனதாக்கிக் கொள்ளத் துடிக்கும் ஒருவகை சுயநலமே.

ப்ரோக்ரஸ்டியன் படுக்கை (Procrustean bed) என்றொரு கிரேக்கத்தொன்மம் உண்டு. ஃப்ரோக்ரஸ் டீஸ் என்பவன் தன் வீட்டிற்கு வரும் விருந்தினர்களை ஓர் இரும்புப் படுக்கையில் படுக்க வைப்பான். அந்தப் படுக்கையைவிட மனிதன் நீளமாக இருந்தால் அவனது கால்களை வெட்டிச் சிறிதாக்குவான்; படுக்கையைவிடக் குட்டையாக இருந்தால் அவனது உடலை இழுத்து நீட்டுவான். இன்றைக்கு அன்பு என்ற பெயரில் குடும்பங்களும் சமூகமும் நமக்கும் இதைத்தானே செய்கின்றன!அவர்களின் அளவுகோலுக்குள் நாம் அடங்கவேண்டும் என்பதற்காக நம் விருப்பங்களையும் அடையாளங்களையும் வெட்டிச் சுருக்குகிறார்கள்.

அப்படியென்றால், உண்மையான அன்பு என்பது என்ன? அன்பு என்பது பிணைப்பதல்ல; விடுவிப்பது. அது ஒரு பறவையைத் தன் கைகளில் இறுக்கமாகப் பிடித்து வைப்பதில் இல்லை; மாறாக, அதற்குப் பரந்த வானத்தைக் காட்டிப் பறக்கவிட்டு, அது தன் சுயவிருப்பத்தோடு உங்களிடம் திரும்பி வரும் சுதந்திரத்தைக் கொடுப்பதில் இருக்கிறது. உண்மையான அன்பு என்பது எந்த நிபந்தனையுமற்றது. ‘நீ என் விருப்பப்படி நடந்தால் உன்னை நேசிப்பேன்என்பது வியாபாரமே தவிர, அன்பல்ல!

உண்மையான அன்பு என்பது எதிரிலிருக்கும் மனிதரை அவர் எப்படி இருக்கிறாரோ அப்படியே அவரது பலங்கள் மற்றும் பலவீனங்களோடு ஏற்றுக்கொள்வது. அவரின் தனித்துவத்தைக் கொண்டாடுவது. ஒருவரின் வளர்ச்சிக்கோ அல்லது சுயசிந்தனைக்கோ தடையாய் இருக்காமல், அவர் தன் முழுத்திறனையும் அடைய ஊக்கமளிக்கும் ஒரு வளமான நிலமாக மாறுவதே உண்மையான அன்பு. எங்கே பயமும் சந்தேகமும் ஆதிக்கமும் இல்லையோ, அங்கேதான் அன்பு முளைவிடும்.

நாம் இதுவரை அன்பைப் பற்றி வளர்த்துக்கொண்ட பிம்பங்கள் அனைத்தும் ஒரு மாயையே. மற்றவர்களை நம் விருப்பப்படி ஆட்டுவிப்பது பாசம் என்றும், அவர்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவது பாதுகாப்பு என்றும் எண்ணி நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம். ஆனால், உண்மையான அன்பு என்பது அதிகாரத்தைச் செலுத்துவது அல்ல; அடுத்தவரின் சுதந்திரத்தைக் கொண்டாடுவது! ஆனால், கட்டுப்பாடுகளால் சிறைப்பிடிப்பதல்ல; நிபந்தனைகளன்றிப் பிறரை முழுமையாகத் தழுவிக்கொள்வது! ஆனால், சுயநலத்தால் ஆட்கொள்வதல்ல; எதிரிலிருப்பவரின் சுயத்தை உயர்த்திப்பிடித்து அழகுபார்ப்பது!

(பயணம் தொடரும்...)

news
சிறப்புக்கட்டுரை
மானுடமே! அரும்புகளை அழிக்காதே... மலரவிடு! (பெண் குழந்தைகள் தினம் செப்டம்பர் 8, 2026)

இறை இயேசுவின் அன்புக்குரியவர்களே,

உங்கள் அனைவருக்கும் புனித மரியன்னையின் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தமிழ்நாடு ஆயர் பேரவையின் பெண்கள் பணிக்குழு சார்பாகப் பெரு மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கின்றோம். ஒவ்வோர் ஆண்டும் அன்னை மரியாவின் பிறந்த நாளை பெண் குழந்தைகள் தினமாகச் சிறப்பிக்கின்றோம்.

மானுடமே, அரும்புகளை அழிக்காதே; மலரவிடுஎன்ற இந்த ஆண்டின் மையக்கருத்து, ஒவ்வொரு பெண் குழந்தையின் மாண்பிற்கான, பாதுகாப்பிற்கான, உரிமைக்கான முழுமையான வளர்ச்சிக்கான ஆழமான அழைப்பாகும். அரும்பு என்பது எதிர்கால மலரின் வாக்குறுதி. அதை அழித்துவிட்டால் ஒரு மலர் மட்டுமல்லஓர் எதிர்காலமே அழிகிறதுஅதுபோல, ஒரு பெண் குழந்தை கல்வியிலிருந்து, பாதுகாப்பிலிருந்து, சமத்துவத்திலிருந்து, அன்பிலிருந்து விலகுவது இறைவன் அவளுக்குள் வைத்துள்ள கனவுகளை அழிப்பதாகும்.

ஒரு பெண் குடும்பத்தில் குழந்தையாகப் பிறந்து மகளாக, சகோதரியாக, மனைவியாக, தாயாக, மாமியாராக சமுதாயத்தில் பல சாதனைகளைப் படைக்கிறாள். இன்னும் ஒரு படி மேலே சென்று படிப்பிலும் கணினியிலும் தொழிலிலும் ஆணுக்கு நிகராகச் சாதனை படைக்கிறாள். அதேவேளையில், பாலினப்  பாகுபாடு, கல்வி மறுப்பு, குழந்தைத் திருமணம், பாலியல் வன்முறை, இணையவழிச் சுரண்டல், மனிதக் கடத்தல்குழந்தைத் தொழிலாளர் முறை, மனநலப் பிரச்சினைகள் என்று இன்று பெண் குழந்தைகள் பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றனர். இந்நிலையில், இந்த மையக்கருத்து சமுதாயத்தின் மனச்சான்றை விழித்தெழச் செய்யும் இறைவாக்காக ஒலிக்கிறது.

திருவிவிலியம் ஒவ்வொரு மனித உயிரின் மாண்பையும் படைப்பிலிருந்தே அறிவிக்கிறது: “கடவுள் தம் சாயலில் மனிதனைப் படைத்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார் (தொநூ 1:27). இது ஆணும்-பெண்ணும் சமமான மாண்புடையவர்கள் என்பதைத் தெளிவாக அறிவிக்கின்றது.

இயேசுவின் பணியில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் தனித்துவமான இடம் உண்டு. அக்காலத்தில் பெண்கள் ஒதுக்கப்பட்டிருந்தபோதும், இயேசு அவர்களுடன் உரையாடினார்; அவர்களின் நம்பிக்கையைப் பாராட்டினார்; சமூகத்தின் மையத்திற்குள் அவர்களை மீண்டும் அழைத்து வந்தார்.  “சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்; அவர்களைத் தடுக்காதீர்கள் (மாற் 10:14). இந்த அழைப்பு இன்று ஒவ்வொரு பெண் குழந்தையையும் கல்வி, பாதுகாப்பு, அன்பு, நம்பிக்கை நிறைந்த பாதையில் வழிநடத்தும் பொறுப்பை நமக்கு நினைவூட்டுகிறது.

மேலும், “இச்சிறியோரில்  ஒருவரை இடறச் செய்பவனுக்கு....” (மத் 18:6) என்ற இயேசுவின் வார்த்தைகள், குழந்தைகள் பாதுகாப்பு என்பது ஒரு சட்டக் கடமை மட்டுமல்ல; அது இறைநம்பிக்கையின் அடிப்படை வெளிப்பாடும்கூட என்பதை எடுத்துக்காட்டுகின்றன.

கத்தோலிக்கத் திரு அவையின் சமூகப் போதனையின் முதல் தத்துவமும் அடிப்படைத்  தத்துவமும் மனித மாண்பு (Human Dignity) ஆகும்ஒவ்வொரு மனிதரும் இறைவனின் சாயலில் படைக்கப்பட்டவர் என்பதால், யாருடைய மாண்பையும் பறிக்க யாருக்கும் உரிமை இல்லை.

திரு அவையின் சமூகப் போதனை வலியுறுத்தும் சில முக்கியக் கொள்கைகள்

மனித உயிரின் புனிதம் மனித மாண்பின் பாதுகாப்பும்பொது நலன் (Common Good) ஏழைகளுக்கும் பாதுகாப்பற்றோருக்கும் முன்னுரிமை (Preferential option for the Poor), ஒற்றுமை (Solidarity), பங்கேற்பு (Participation), குடும்பத்தின் அடிப்படைப் பங்கு... இந்தக் கொள்கைகள் அனைத்தும் பெண் குழந்தைகளைப் பாதுகாத்து, அவர்களின் திறமைகள் முழுமையாக மலரவேண்டிய அவசியத்தை வலியுறுத்துகின்றன.

compendium of the social doctrine after Church கூறுகிறது: “ஒவ்வொரு மனிதரும் தன்னிலே ஒரு மதிப்புடையவர்; ஒருபோதும் ஒரு கருவியாக நடத்தப்படக்கூடாது.” பெண் குழந்தைகள் பொருளாகவோ, சுமையாகவோ, இரண்டாந்தரக் குடிமக்களாகவோ பார்க்கப்படாமல்இறைவனின் அரிய கொடையாக மதிப்பிடப்படவேண்டும்.

புனித திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் தனதுletter to women-1995’ என்ற மடலில் கூறுகிறார்: “நீ பெண்ணாக இருப்பதற்காக நன்றி.” இந்தச் சிறிய வாக்கியம் பெண்ணின் தத்துவமான மாண்பையும்சமூகத்தில் அவளின் இன்றியமையாத  பங்கையும் போற்றுகிறது. அதேபோல் மேலும் அவர் கூறுகிறார்: “the future of humanity passes by way of the family.எனவே, பெண் குழந்தைகளை அன்போடும் பாதுகாப்போடும் வளர்க்கும் குடும்பங்களே மனிதகுலத்தின் எதிர்காலத்தை உருவாக்குகின்றன.

திருத்தந்தை பிரான்சிஸ்fratelli tutti’ (அனைவரும் சகோதரர்கள்) என்ற திருமடலில் கூறுகிறார்: “ஒவ்வொரு மனிதரும் என் சகோதரர், என் சகோதரி. பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை, பாகுபாடு, சுரண்டல் ஆகியவை சகோதரத்துவ உணர்விற்கு நேர்மாறானவை என்கிறார். மேலும், ‘amoris laetitia (அன்பின் மகிழ்ச்சி) என்ற திருமடலில் குடும்பத்தைஅன்பின் முதல் புள்ளிஎன்று அழைக்கிறார். குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை தனது சுயமரியாதை, நம்பிக்கைஇறைநம்பிக்கை, மனித உறவுகளின் மதிப்பு ஆகியவற்றைக் கற்றுக்கொள்கிறாள்.  ‘laudato si’ (உமக்கே புகழ்) திருமடலில் அவர் கூறும்எல்லாமே ஒன்றோடொன்று தொடர்புடையதுஎன்ற சிந்தனை பெண்கள், குழந்தைகள், ஏழைகள் ஆகிய வலுகுறைந்த மனிதர்களின் பாதுகாப்பு மட்டுமின்றி, இயற்கையின் பாதுகாப்பும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை என்பதை நினைவூட்டுகிறது.

நமது நாட்டில் பல பெண் குழந்தைகள் இன்னும் பாதுகாப்பற்ற சூழலில் வளர்கின்றனர். கல்வி இடைநிறுத்தம், ஊட்டச்சத்துக் குறைபாடுபாலினப் பாகுபாடு, இணையவழி துன்புறுத்தல், குழந்தைத் திருமணம், பாலியல் வன்முறை போன்றவை எண்ணற்ற அரும்புகளை மலர்வதற்கு முன்பே வாடச்செய்கின்றன. இந்தச் சூழலில் குடும்பம்திரு அவை, பள்ளி, அரசு, சமூக அமைப்புகள் அனைத்தும் இணைந்து பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும். திரு அவையின் பாதுகாப்புக் கொள்கைகள் (safeguarding), ஒவ்வொரு குழந்தையும் அச்சமின்றி வளரக்கூடிய சூழலை உருவாக்குவது நமது நற்செய்திப் பணியின் பிரிக்க முடியாத பகுதியாகும் என்று வலியுறுத்துகின்றன.

பெண் குழந்தைகள் தினத்தில் நாம் உறுதியேற்போம்: ஒவ்வொரு பெண் குழந்தையின் மாண்பையும் மதிப்போம்; அவர்களின் கல்வியை ஊக்குவிப்போம்; பாதுகாப்பான குடும்பங்களையும் பங்குகளையும் உருவாக்குவோம்; பாலினப் பாகுபாட்டை நிராகரிப்போம்; குழந்தைகளுக்கு எதிரான அனைத்து வன்முறைகளையும் எதிர்ப்போம்அவர்களின் கனவுகளுக்குச் சிறகுகளாக இருப்போம். ஒரு பெண் குழந்தை மலரும்போது ஒரு குடும்பமே மலர்கிறது. ஒரு குடும்பம் மலரும்போது சமூகமே மலர்கிறதுசமூகம் மலரும்போது இறையாட்சி வெளிப்படுகிறது.

மானுடமே! அரும்புகளை அழிக்காதேமலர விடு- இது ஒரு முழக்கம் மட்டுமல்ல; இது இறைவனின் கட்டளை! திரு அவையின் சமூகப் போதனையின் இதயம்; மனிதகுலத்தின் நம்பிக்கை. ஒவ்வொரு பெண் குழந்தையும் இறைவனின் சாயலில் படைக்கப்பட்ட அரும்பு. முழுமையாக மலரும்போது, அதன் மணம் குடும்பத்தை மட்டுமல்ல, திரு அவையையும் சமூகத்தையும் நாட்டையும் வளப்படுத்தும். எனவே, அரும்புகளை மலரவிடுவோம். பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம்அவர்களின் கனவுகளுக்கு இறக்கைகள் கொடுப்போம். அதுவே நற்செய்தியை வாழ்வாக்கும் வழி. அதுவே நீதியின் பாதை. அதுவே இறையாட்சியின் அடையாளம்.