காமராசர் சுருக்கமாகவே பேசுவார். ஆனால், அவர் செயலில் தீரமுண்டு. எடுத்த காரியத்தை முடித்துவிடுவார். படிக்காத மேதையாக விளங்கிய இவர், மிகவும் புத்திக்கூர்மையுடன் எந்தக் காரியத்தையும் தொடங்குவார். செயலில் கெட்டிக்காரர். பேச்சுத்திறமை இல்லை என்று சொல்லிவிட முடியாது. பேச்சிலும் வல்லவர்தான். ஆனால், மக்கள் மொழியில் அளந்தேதான் பேசுவார்.
திருவள்ளுவர்
கூறுவது போல,
‘ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல்
சொல்லின்கட் சோர்வு’
(குறள் 642)
என்பதை
அறிந்து திறம்பட காமராசர் நடந்தார். இனி இவர் பேசிய முறை, மக்களின்பால் கடமை செய்யத் தூண்டிய வகை பற்றி அவர் சொற்பொழிவுகளிலிருந்தே ஆராய்வோம்:
“நாடு ஒற்றுமை அடையவேண்டும். இதற்காக முதலில் வேண்டுவது சாதி, மத பேதம் ஒழிவது;
உயர்வு-தாழ்வு என்பது கூடாது; சுதந்திரம் பெற்றது ஒற்றுமையினால்; இனி புதிய சமுதாயத்தை உருவாக்குவதும் ஒற்றுமையினாலேயே!
சுதந்திரம்
அடைந்த பாரதம், இனி முன்னேறும் பாணியில்தான் இருக்கவேண்டும். புதியதொரு சமுதாயம் உருவாகவேண்டும். இதற்குச் சட்டம் போட்டு ஆவது ஒன்றுமில்லை. பொருளாதார வளர்ச்சித் திட்டங்கள் மட்டும் புதுமை செய்துவிட முடியாது. மக்களிடத்தில் ஒரு மனப்புரட்சி, மன எழுச்சி, மனவேகம்
ஏற்பட்டாகவேண்டும். அப்போதுதான் பொருளாதாரம் பெருகும்.
இன்றைய
சிறுவர்கள் மூலமே வருங்காலப் பாரதம் உருவாகவேண்டும். மாணவர்களிடையே தன்னம்பிக்கை நிலவவேண்டும். தமது தேவைகளைத் தாமே பூர்த்தி செய்துகொள்ளவேண்டும். இவ்வாறு இருந்தால்தான் அவர்கள் மகத்தான சாதனைகள் பல புரியமுடியும்.
புத்திக்
கூர்மையுடையவர்கள் சிலர், அவர்கள் தமது மிகுந்த அறிவுக்கூர்மையைப் பயன்படுத்தி முன்னேறுகிறார்கள். அதை நாம் தடுக்க முடியாது. சொல்லப்போனால், உடல் வலிமை மாத்திரம் அதிகாரத்தைக் கவர அடிப்படை அல்ல; அறிவும் அதே அளவு முக்கியத்துவம் வாய்ந்தது.
அறிவு
பரம்பரைச் சொத்தல்ல; அது ஆள்களைப் பொறுத்துள்ளது. ஆனால், அது பலவீனமானவர்களுக்குச் சரியான வசதிகள் அமைத்துத் தருவதால், அவர்களையும் சமுதாயத் தலைவர்களாக, அறிவாளிகளாக ஆக்கிவிடலாம். பெரிய பணக்காரர்களை அவர்களிலும் புதுப் பணக்காரர்களை நாட்டில் அவர்களது விருப்பம் போல் விட்டுவிடக்கூடாது. அவ்வாறு செய்தால், அவர்கள் ஏழைகளை உறிஞ்சும் அட்டைகளாக மாறிவிடுகிறார்கள். அப்போது பணக்காரன் பணக்காரனாகத்தான் இருப்பான்; ஏழை இன்னும் கூட தாழ்ந்த நிலையில்தான் இருப்பான். இதனால்தான் பணக்காரர்களின் வசதிகளை ஓரளவு குறைக்க வேண்டியுள்ளது.
நம்
நாடு பின்தங்கிய நிலையில்தான் இருக்கிறது. நாம் சுதந்திரம் பெற்றது அண்மையில்தான். நம் நாடு முன்னேற வேண்டுமாயின் வறுமையும் அறியாமையும் போகவேண்டும். அதற்கான திட்டங்கள் போட்டு நாம் அவற்றைச் செயலாற்ற வேண்டும்.
இவையெல்லாம்
வேண்டியவைதான். ஆனால், சூழ்நிலை அவ்வளவு சாதாரணமாக அமைந்து விடவில்லையே! சமுதாயத்தினிடையே விழிப்புணர்வு இருக்கவேண்டும். இவை அற்றுப்போய் விட்டால் காரியங்கள் நடக்கமுடியாது. மக்களுக்குப் பேச்சுரிமைதான் இருக்கிறதே! ஆகவே, எதையும் துணிந்து சொல்லவேண்டும். இவை நல்லமுறையில், ஒழுங்குடன் இருந்தால், எவ்வளவோ சாதிக்க முடியும்.
இப்போதுள்ள
சூழ்நிலைகளில் அவ்வப்போது சமூக, பொருளாதாரக் கொள்கைகளை உருவாக்க வேண்டியுள்ளது. இதற்குத் தேசிய அடிப்படையில் பாடுபடவேண்டும். எல்லாரும் ஒரே தொழிலில் கவனம் செலுத்தக்கூடாது. பல்வேறு துறைகளில், பல்வேறு தொழில்களில் கவனம் செலுத்த வேண்டும். அதையும் பகிர்ந்து கொள்ளவேண்டும். வாழ வழி வகுத்துக்கொள்ள வேண்டுமே ஒழிய, வேதாந்தம் பேசுவதில் பயனில்லை.
ஒற்றுமை
பல காரியங்களைச் சாதிக்கும். ஊருக்கு நல்லது செய்வதில் எல்லாரும் ஒருமைப்படவேண்டும். அவரவர் தேவைகளை அவரவர் பூர்த்திசெய்து கொள்ளவேண்டும். முக்கியமாக இது கிராமங்களில் நிலவ வேண்டியது அவசியம். மக்கள் தத்தம் பொறுப்புகளை உணர்ந்து பணியாற்ற வேண்டும். சுயநலமில்லாமல் ஒற்றுமையுணர்ச்சியோடு மக்களுக்குச் சேவை செய்ய முன்வருபவர்களுடைய வாழ்வு சிறக்கும், செழிக்கும்.
மக்கள்
ஒரு காரியத்தை நன்கு உணர வேண்டும். இப்போது மிகுந்த தேவை ஏற்பட்டுவிட்டது. அதனால் ஆட்சி சரியில்லை என்று சொல்லிவிட முடியாது. வாழ்வில் வசதி ஏற்பட்டால், தேவை வரத்தான் செய்யும். தேவை இல்லாவிட்டால் வாழ்வு செயலற்றுப் போய்விடும். தேவைகள் ஒரு நாட்டில் இல்லையென்றால், அங்கு எப்படி வளர்ச்சி இருக்கமுடியும்? இல்லையென்றே பொருள்.
எத்தனை
கோட்பாடுகள், கொள்கைகள் ஒரு நாட்டில் இருந்தாலும், நாட்டில் அமைதிவேண்டும். கொள்கைகள், வேறுபாடுகள் காரணமாக அமைதி குலையக்கூடாது. இந்தச் சூழ்நிலை குலைந்தால் மக்கள் வாழ்வே குலையும். நம் சக்திகள், தேசச் செல்வங்கள் பாழாய்ப் போகும். அமைதியைக் காக்க இந்தியக் குடிமகன் ஒவ்வொருவருக்கும் பொறுப்புண்டு. இதற்கெல்லாம் சனநாயக அடிப்படையில்தான் தீர்வு காண வேண்டியிருக்கிறது.
நாட்டில்
மொத்தத்தில் எல்லாரும் நல்லவர்களாக இருந்துவிட முடியாது. அவ்வாறு இருந்தால் சட்டம் கூட வேண்டாமே! இது நடக்கக்கூடிய காரியமா? ஆளும் உணர்ச்சியே கொண்ட பணக்காரர் சிலர் ஏழையரைக் கசக்கிப் பிழிகிறார்களே? அப்படியானால் உழைப்பவன் காலமெல்லாம் பிறர் செய்யும் தர்மத்தை எதிர்பார்த்து ஏங்கிச் சீரழிவதா? இதுதான் தர்மமா?
நமது
நாடு பரந்துபட்டது. இங்குப் பலர், பல இனத்தவர், பல
மொழியினர் இருக்கிறார்கள். நாம் இந்த வேறுபாடுகளைப் பாராட்டக்கூடாது. வேறுபாடு வளர்ந்தால் நாட்டில் பல தகராறுகள் ஏற்படும்.
நாடு முன்னேற வழி இராது. நம்மில் ஒற்றுமையில்லையேல் அனைவருக்கும் தாழ்வுதான். நாடு உயர்ந்தால் நாம் உயர்வோம்.”
காமராசர்
கவர்ச்சியாகப் பேசத் தெரியாதவர்தான். ஆனால், அவரது கருத்துகள், பேச்சுகள் நமது சிந்தனையைத் தூண்டுவதென்னவோ உண்மைதானே?
காரைக்குடிக்கு அருகில் உள்ள திருப்பத்தூரில் நமக்கு ஒரு நண்பர். அவர் மகள் மருத்துவப் படிப்புத்தான்வேண்டும் என்று அடம்பிடித்தார். நடுத்தரக் குடும்பம். மதிப்பெண் வாங்கியாக வேண்டும்.
மேல்நிலைப்பள்ளிப்
படிப்பிற்காக காரைக்குடியில் தனியாக வீடு எடுத்தார்கள். தினமும் காலை, மாலை டியூஷன் வகுப்புகள். அம்மா பகலில் திருப்பத்தூருக்கு வேலைக்குப் போய்த் திரும்பினார். இரண்டு வருடங்கள் குடும்பமே அலையாய் அலைந்தது.
மேல்நிலைத்
தேர்வில் 1200-க்கு 900 மதிப்பெண்கள். அப்போதும் விடாமல் “நீட் (NEET) போட்டித்
தேர்வை எழுதுகிறேன்” என்றாள்.
மீண்டும்
இரண்டு மாத அலைச்சல். அதிலும் தேறவில்லை. கடைசியாகப் போனதால் கலைக் கல்லூரியிலும் விரும்பிய பாடம் கிடைக்கவில்லை. கடைசியில் என்ன
மிச்சம்? அலைந்ததைத் தவிர!
இதே
கதை இன்று கிட்டத்தட்ட தமிழ்நாட்டில் எல்லாக் குடும்பங்களிலும் நடக்கிறது. எட்டு இலட்சம் மாணவர்களும் மருத்துவராகி, கோடி கோடியாகக் குவிக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள்.
நம்மைச்
சுற்றி இருக்கின்ற ஏராளமான நல்ல நல்ல வாய்ப்புகளை ஏன் கைநழுவ விடவேண்டும்? நம்முடைய இன்றைய கல்வித் திறமைக்கும் ஆர்வத்திற்கும் பெற்றோரின் வசதிக்கும் தகுந்த படிப்பைத் தேர்ந்தெடுக்கக்கூடாதா? குறிப்பாக, நம் பெற்றோரின் பொருளாதார நிலை, உடல் நலம் பற்றியும் இளைஞர்களாகிய நாம் அக்கறை எடுத்துக்கொள்ளக்கூடாதா? அவர்களின் அறிவுரைகளையும் கொஞ்சம் காது கொடுத்துக் கேட்கக்கூடாதா?
நம்மைச்
சுற்றி நம் ஒவ்வொருவருக்கும் பிடித்தமாகக் கல்விப் பயணத்தை மேற்கொள்ள மிக அதிக அளவில் வாய்ப்புகள், ஏராளமான கல்வி நிலையங்கள், கல்வி வாய்ப்புகள் உள்ளன.
மேல்நிலைப்பள்ளியிலேயே
தொழில்சார் கல்வி, பாலிடெக்னிக் நிறுவனங்கள்... இவற்றில் சேர்ந்து சிறப்பாகப் படித்துத் தேறினால் 17, 18 வயதிலேயே தனியார் நிறுவனங்களில் வேலைக்குப் போய்விடலாம். குடும்பத்தைப் பார்த்துக்கொண்டே மேலே படித்து முன்னேறலாம்.
இன்று
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் ஏராளமான கல்வி வாய்ப்புகள் உள்ளன. வணிகவியல், ஆங்கிலம் போன்ற பாடங்கள் மட்டுமல்ல, இதழியல், தொலைக்காட்சி, உணவுக்கலை போன்ற பல்வேறு படிப்புகளும் இன்று கிடைக்கின்றன. பொறியியல் கல்லூரிகள் இன்று ஏராளம். பாடங்களும் ஏராளம். நன்கொடை வசூலும் பெருமளவு குறைந்துவருகிறது.
மருத்துவம்
மட்டுமல்ல, மருத்துவம் சார்ந்த பல் மருத்துவம், உடலியக்கப் பயிற்சியாளர் (Physio therapist),
செவிலியர் போன்ற வாய்ப்புகளும் இருக்கின்றன.
எதைப்
படிக்கப்போகிறோம் என்பது முக்கியமில்லை; எதைப் படித்தாலும், அதை நன்றாகப் படிக்கிறோமா? அதில் முதல் 20 விழுக்காடு தேர்வுப்
பட்டியலில் இடம்பிடிக்கிறோமோ என்பதுதான் முக்கியம். நாம் விரும்பும் வேலைக்கான தகுதிகளையும், திறமைகளையும் நாம் படித்துக் கொண்டிருக்கும்போதே வளர்த்துக்கொள்கிறோமா என்பதுதான் முக்கியம். வேலைவாய்ப்பிற்கான போட்டித் தேர்வுகளைச் சந்திக்க உரிய நேரத்தில் தயாராகிறோமா என்பதுதான் முக்கியம்.
உயரப்
போகவேண்டும் என்று ஆசைப்படுவோம், கனவு காண்போம். அது அவசியம், தேவைதான். ஆனால், நமது உயர்வுப் பயணத்தை நாம்தான் மேற்கொள்ளவேண்டும். அதற்கான பொறுப்பை நாம்தான் ஏற்றுக்கொள்ளவேண்டும். நம்முடைய பெற்றோர் துணை நிற்பார்கள். பணத்தை வைத்து நம்மை அலுங்காமல் குலுங்காமல் வாழ்க்கைக் கோபுரத்தில் நம் பெற்றோர் தூக்கி வைக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது ஏமாற்றத்தில்தான் போய்முடியும். எல்லா நிலைகளிலும் தகுதித் தேர்வுகளும், போட்டித் தேர்வுகளும் பெருகிக் கொண்டிருக்கும் காலமிது.
படிப்பு,
வேலைவாய்ப்பு, சம்பளம்... இந்த வட்டத்திற்குள் மட்டும்தான் நாம் சுற்றிச் சுற்றி வரவேண்டும் என்பதில்லை. இசை, நடனம், நடிப்பு, பேச்சாற்றல், எழுத்தாற்றல், ஊடகம் சார்ந்த திறமைகள், சமூகப் பணிகள், ஏராளமான விளையாட்டுகள்... படிப்பை விட்டுவிடாமல், நமக்கு விருப்பமான ஒரு கலைத்துறையில் கால்பதிக்கலாம். சுயதொழில் அதிகம் அதிகமான வாய்ப்புகளை அள்ளி வழங்கும் தங்கச் சுரங்கம்.
நாங்கள்
கல்லூரியில் படித்தபோது பரமக்குடி நண்பர் ஒருவர் வணிகம் படித்தார். நாங்கள் எல்லாம் வேலைக்குப் போனபோது அவர் மிளகாய் வியாபாரத்தில் இறங்கினார். மிகப்பெரிய வெற்றி பெற்றார். இன்று அவர் மகன் மேலாண்மைத் துறையில் படித்துத் தேறி, மிளகாய் சார்ந்த உயர் தொழில்நுட்பத்துறையில் மிகப்பெரிய ஏற்றுமதியாளர்!
குண்டுச்
சட்டிக்குள் குதிரை ஓட்டுவதைத் தவிர்ப்போம். விரிந்த பார்வையால் உலகை அளப்போம்; நமக்கேற்ற துறையில் ஆழக்கால் பதிப்போம், வெல்வோம்!
இன்றைய
உலகில் ஏராளமான கல்வி வாய்ப்புகள், தொழில் வாய்ப்புகள், வேலை வாய்ப்புகள்! என்னை ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடக்கிக் கொள்ளமாட்டேன். அகலப் பார்வையோடு என் வாய்ப்புகளை அலசுவேன். எதைப் படித்தாலும் அதை விரும்பிப் படிப்பேன்; அதன்மூலம் வெற்றி பெறுவேன்.
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் ‘மகத்தான மானுடம்’ என்ற முதல் சமூகச் சுற்றுமடலை அறிந்து கொள்வதற்கு ஏதுவான சில செய்திகள், கருத்துகள், புரிதல்கள் இங்கே இடம் பெறுகின்றன.
• ‘Magnifica Humanitas’ என்பது இம்மடலின் தலைப்பு. இத்தலைப்பைத் தமிழில் எப்படி மொழிபெயர்ப்பது? ‘மாண்புமிகு மனிதம்’ என்றா? ‘மிக மதிப்புக்குரிய மனிதம்’ என்றா? ‘மாட்சிமிகு மனிதம்’ என்றா? ‘மகத்தான மானுடம்’ என்று மொழிபெயர்ப்பது பொருத்தமாக இருக்கலாம்.
• பொதுவாக, திருத்தந்தையரின் சுற்றுமடல்கள் தலைப்பை வைத்தே தொடங்கும். உதாரணத்திற்குத் திருத்தந்தை 13 -ஆம் லியோ அவர்களின் சுற்றுமடல் Rerum Novarum (புதிய
உலகு - ஆலைத் தொழிலாளர் பிரச்சினை குறித்து) எனத் தொடங்குகிறது. ஆனால், இம்மடல் Magnifica Humanitas என்று
தொடங்கவில்லை. இதன் உபதலைப்பு ‘செயற்கை நுண்ணறிவு’
(AI) யுகத்தில்
மானிடரைப் பாதுகாத்தல் என அமைந்திருக்கிறது. ‘மகத்தான மானுடம்’ என்ற
தலைப்பில் உள்ள மானுடம் அருவமான ஒரு கருத்து; நம் பார்வைக்கு அப்பாற்பட்டது. மானிடரைப் பாதுகாத்தல் என்ற உபதலைப்பில் ‘மானிடர்’ என்பது பொருண்மையானது; நம் பார்வைக்கும் அனுபவத்திற்கும் உட்பட்டது.
• ‘செயற்கை நுண்ணறிவு’ என்பது
என்ன? என்ற விளக்கம் இம்மடலில் இல்லை. மனிதர்களுக்கு இது பற்றிய புரிதல் உண்டு எனத் திருத்தந்தை எண்ணியிருக்கலாம். காதுகள், வாய் இவைகளின் நீட்சி அலைப்பேசி அல்லது கைப்பேசி எனலாம். இதுபோல மனித மூளையின் நீட்சி செயற்கை நுண்ணறிவு எனக் கொள்ளலாம்.
• செயற்கை நுண்ணறிவு எப்படிச் செயல்படுகிறது? எப்படி உபயோகப்படுத்தப்படுகிறது? என்பதைக் காட்டிலும், இதன் நேர்மறைப் பயன்பாடு என்ன? அபாயங்கள் என்ன? என்கிறது இம்மடல்.
• மனிதர் பற்றிய பல புரிதல்கள் உள்ளன.
மனிதர் விலங்கினத்தைச் சார்ந்தவர் என விலங்கியலும் உயிரியலும்
கூறுகின்றன. விலங்குகளிலிருந்து மனிதரை வேறுபடுத்துவது அவரது சிந்திக்கும் ஆற்றல். எனவே, அரிஸ்டாட்டில் ‘மனிதர் சிந்திக்கும் ஆற்றல் வாய்ந்த விலங்கு’ என்றார். நவீன தத்துவத்தின் தந்தை என அழைக்கப்படும் பிரான்ஸ்
நாட்டு ரெனேடெகார்ட் ‘சிந்திக்கிறேன், எனவே நான் இருக்கிறேன்’ என்றார்.
• சமூகவியல், சமூக உளவியல் ஆய்வாளர்கள் ‘மனிதர்கள் உறவு சார்ந்தவர்கள், உறவுகளால் உறவுகளுக்காக வாழ்வதே மனித வாழ்வு’ என்கின்றனர்.
• ‘மனிதர் அடிப்படையில்
உழைக்கும் உயிரினம். இயற்கையை மாற்றி, உழைப்பின் மூலம் தன்னையும் சமூகத்தையும் உருவாக்குபவர் மனிதர்’ என்கிறார் கார்ல் மார்க்ஸ்.
• ‘மனிதரை மனிதராக
அடையாளப்படுத்துவது பண்பாடு (culture); எனவே, மனிதர் பண்பாட்டு விலங்கு’ என்கிறது மானுடவியல்.
• கடவுளால் படைக்கப்பட்ட அனைத்திலும் மகத்தானது மானுடம்; ஏனெனில், ‘கடவுளுடைய சாயலாகப் படைக்கப்பட்டவர் மனிதர்’
(தொநூ 1: 26-27) என்கிறது இச்சுற்றுமடல்.
முன்னுரை
மனிதத்தின்
உண்மையான தான்மை சிதைக்கப்படும்போது கிறித்தவர்களாகிய நாம் மனுவுருவான இறைவனை நோக்கி கண்களை உயர்த்துகிறோம். ஏனெனில் வார்த்தை மனுவுருவான மறைபொருளில்தான், மானுடம் என்ற மறைபொருள் தெளிவாகிறது. ஒவ்வொரு தலைமுறையும் மனிதருடைய மாண்பைப் பாதுகாக்கவும், நீதியை வளர்த்தெடுக்கவும், சகோதரத்துவத்தைச் செயல்படுத்தவும் கடமைப்பட்டிருக்கிறது.
இரண்டாம்
வத்திக்கான் பொதுச்சங்கம் திறந்த மனத்தோடு கூடிய உரையாடலை மானிட வாழ்வின் இன்றியமையாத கூறாகக் கருதுகிறது. அனைத்துச் சகோதர, சகோதரிகளோடு திறந்த மனத்தோடு உரையாடி உண்மையான மானுடத்தைக் கண்டறிய திரு அவை அழைப்பு விடுகிறது என்கிறது இம்மடல்.
திரு
அவை உலகக் காரியங்களில் தலையிட்டு நேரத்தை விரயமாக்க வேண்டாமெனச் சிலர் கூறுகின்றனர். இதற்குத் திருத்தந்தை 13-ஆம் லியோ, ‘நற்செய்தி அறிவிப்பு என்பது மக்களின் அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளைப் புறந்தள்ள முடியாது’
என்று பதிலுரைத்தார். இப்பாரம்பரியத்தைத் தொடர்ந்து நானும் தொடக்கம் முதல் இவ்வுலகில் செயல்பட்டு வரும் ஆவியாரின் துணை வேண்டி (நீமொ 8:22-31). இன்றைய எண்ணியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு உலகில் இச்சுற்றுமடலை எழுதுகிறேன் என்கிறார் திருத்தந்தை லியோ.
‘மானிடராகிய நாம் எத்தகைய இலக்கை நோக்கி நகர விழைகிறோம்?’ என்ற கேள்வியை எழுப்பி, திருவிவிலியத்திலிருந்து இரண்டு காட்சிகளை நம்முன் வைக்கிறது இம்மடல். ஒன்று, பாபேல் கோபுர உருவாக்கம் (தொநூ 11:1-9); மற்றொன்று, நெகேமியா எருசலேம் சுவர்களைத் திரும்பக் கட்டுவது (நெகே 2- 6).
பாபேல்
கோபுரம் கடவுள் இல்லாத உலகைக் கட்டமைக்கிறது. பன்மையை ஒதுக்கி, ஒற்றை மையத்தை உருவாக்குகிறது. மனித முகத்தை அழித்து, தோழமை உறவைக் கெடுக்கிறது. தன் மையப்போக்கில் தானும் தன் கணினியும் போதும் என்று மானிட உறவுகளைத் தவிர்க்கிறது. மாறாக, பாபிலோன் நாடு கடத்தலிலிருந்து திரும்பி வந்த நெகேமியா நோன்பிலிருந்து இறைவேண்டல் செய்து, மக்களுக்காகப் பரிந்து பேசுகிறார். அழிக்கப்பட்ட சுவர் பகுதிகளை அமைதியில் ஆய்வு செய்கிறார். அனைவரோடும் இணைந்து சிதிலமடைந்த சுவர்களைத் திரும்பக் கட்டி எழுப்புகிறார். இங்கு மனிதர்களின் பன்மைத் தன்மையும் கூட்டு முயற்சியும் சகோரத்துவமும் வெளிப்படுகின்றன.
பாபேல்
கோபுரம், எருசலேம் சுவர்கள் இரு காட்சிகளின் ஒளியில் தூய ஆவியார் இன்றைய நவீன தொழில் நுட்பத்தோடும் தொடரும் எண்ணியல் புரட்சியோடும் நமக்குள்ள உறவை எண்ணிப் பார்க்க அழைக்கிறார். மானிடப் பிரச்சினைகளுக்குத் தொழில்நுட்பம் தீர்வு அல்ல. மானிடர் நவீன தொழில்நுட்பத்தைவிட உயர்ந்தவர்கள். மேலும், தொழில்நுட்பம் நடுநிலையான ஒன்று அல்ல; அதை உருவாக்குவோர், அதற்கு நிதி முதலீடு செய்வோர், அதைப் பயன்படுத்துவோர் ஆகியோரின் நோக்கங்களையும் எதிர்பார்ப்புகளையும் அது பிரதிபலிக்கிறது. எனவே அதற்கு அறநெறி வழிகாட்டுதலும் பொதுப்பொறுப்பும் தேவைப்படுகிறது.
பாபேல்
கோபுர நோய், இலாபத்தையே சிலை வழிபாடாகக் கொண்டது. இதற்காக ஏழைகளைப் பலியாக்குகிறது, பன்மையை மறைக்கிறது. எண்ணியல் மொழியையே பேசுகிறது. மானுடத்தின் மறைபொருளைத் தரவுகளாக மொழிபெயர்க்கிறது. இவ்வாறு மகத்தான மானுடத்தைச் சிதைக்கிறது. கடவுளற்றத் தொழில்நுட்ப எதிர்காலத்தைக் கட்டமைக்கிறது.
நெகேமியாவின்
வழியோ, கூட்டுத் தோழமையில் கடவுளின் நகரைக் கட்டி எழுப்ப அழைக்கிறது. இக்கூட்டு முயற்சி ஒருவருக்கொருவர் செவிமடுத்து, உரையாடி, பொதுநன்மையின் மேல் நீதிப் பண்பாட்டையும் சகோதரத்துவத்தையும் உருவாக்குவதைச் சாத்தியப்படுத்துகிறது. அப்போது திருவெளிப்பாடு சொல்வதுபோல, ‘புதிய எருசலேம் என்னும் திருநகர் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கி வரும்’
(திவெ 21:2) என்பதைக் காண முடியும்.
பொதுநன்மையைக்
கட்டி எழுப்பும் 4 தூண்கள்
1. கடவுளோடு
கொண்டுள்ள மிக உறுதியான அடித்தளம் அமைத்தல். செயற்கை நுண்ணறிவு, கடவுள் தேவையில்லை என்கிறது.
2. மனித
வரையறைகளையும் பலவீனங்களையும் ஏற்றுக்கொள்வது. செயற்கை நுண்ணறிவு, மனித வரையறைகளையும் பலவீனங்களையும் திருத்தப்படவேண்டிய தவறு என்று கருதி, இவைகளைக் கடந்துவிட அழைக்கிறது.
3. ஒவ்வொருவரும்
வளமாக வாழக் கூட்டுப் பொறுப்புணர்வும் துணிச்சலும் தேவை. செயற்கை நுண்ணறிவு, நானும் என் கணினியும் போதும் என்கிறது.
4. அனைவரையும்
ஒருங்கிணைக்கும் நற்செய்தி மொழியைப் பேசுதல். செயற்கை நுண்ணறிவு, மூளை மொழியைப் பயன்படுத்துகிறது. கைகளையும் உடலையும் பயன்படுத்தி உழைப்பவர் மொழிக்கும் மூளையைப் பயன்படுத்துபவர் மொழிக்கும் இடையே ஒருங்கிணைக்கும் பொதுமொழி சாத்தியமில்லை என்றாகிறது.
புறக்கணிப்பட்ட
கற்களான ஏழைகள், நோயாளிகள், புலம்பெயர்ந்தோர், சமுதாயத்தின் கடை நிலையினர் சமுதாயத்தின் மூலைக்கல்லாகும் போது, ‘பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும், நீதியும் நிலைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும்’ (திபா
85:10) உலகு உருவாகும்.
கேளாத செவிகள் கேட்கட்டும்; காது என்ற ஒன்று கேட்கத்தானே! அதைவிடுத்து வேறென்ன இதில் புதுவிதம் இருக்கு? இருக்கு! ‘கற்றலைவிடக் கேட்டல் மிக நன்று’ என்று நம் வள்ளுவப் பெருந்தகை கூறியுள்ளார். இதைக் கொஞ்சம் அசைபோட்டால் இதன் முக்கியத்துவம் தெரியவரும். ‘கொஞ்சம் காது கொடுத்துக் கேட்கமாட்டியா?’ எனக் கேட்பதும், ‘கொஞ்சம் உன் காதக் கொடு, இரகசியம் சொல்லணும்’ என ஒருவரை இழுப்பதும் இதனால்தான்.
ஜூலியஸ்
சீசர் கொலையுண்ட நேரத்தில் மார்க் ஆண்டனி ஆவேச உரை நிகழ்த்தி அனைவரையும் தன் பக்கம் இழுக்க அவர் ஆரம்பித்த முதல் வார்த்தை: “Friends, Romans, countrymen, lend me your ears.” இங்கு அவர் ‘உங்கள் காதுகளை எனக்குக் கடன் கொடுங்கள்’
எனும் பொருளில் சொல்லவில்லை; மாறாக, ‘உங்கள் கவனம் எனக்கு வேண்டும்; என் எண்ணத்தை நீங்கள் கேட்க வேண்டும்’
எனும் பொருளில் தொடங்கியுள்ளார். அதேபொருளில்தான் நானும் சொல்கிறேன்... Please lend
me your ears.
உறுப்புகளை
மையப்படுத்தி ஒரு சில முக்கியத்துவத்தை உணர்த்துவது தமிழில் தொன்றுதொட்டு இருக்கும் பழக்கம். ‘என் கண்ணுல்ல’
எனப் பிள்ளைகளைக் கொஞ்சுவதும், ‘என் இதயமே நீதானடி!’ எனக் காதலியிடம் கெஞ்சுவதும், ‘ரொம்பப் பேசுனா உதட்டப் பேத்துருவேன்’ எனப்
பிடிக்காதவர்களிடம் சொல்வதும், ‘நான் இங்க நாய் மாதிரி கத்திக்கிட்டு இருக்கேன்; கொஞ்சம் காது கொடுத்துக் கேட்டா கொறஞ்சா போயிருவீங்க?’ என மனைவி கணவனை
வசைபாடுவதும், ‘மூக்குமேல விரல் வைக்கிற அளவுக்கு ஒரு யோசனையைச் சொல்லிட்டாப்ல’ எனப்
பிடித்தவர்களைப் பாராட்டுவதும்... என இதுபோன்ற உறுப்புகளை
மையப்படுத்திப் பேசுவது என்பது நாம் சொல்ல வருவதற்கு மேலும் பொருள் சேர்க்க இம்முறை பயன்படுத்தப்படுகிறது.
வெளி
உறுப்புகள் பெரும்பாலும் பாராட்டுவதற்கும், உள் உறுப்புகள் ஒருவரைக் கொச்சையாகத் திட்டுவதற்கும் ஆண்டாண்டு காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நமக்கு இருக்கக்கூடிய எல்லா உறுப்புகளும் மிக அவசியமானவை. அதில் காது மிக அவசியமானது, அறிவைப் பெருக்குவதில் இதன் பங்கு பெரியது. காது என்பது கேட்கும் அமைப்பின் ஒரு பகுதியாகும். இது சுற்றுப்புறத்தில் உள்ள ஒலி அலைகளைப் பெற்று, அவற்றை வெளிக்காது, நடுக்காது மற்றும் உள்காது வழியாக மூளைக்கு அனுப்புகிறது. இந்த ஒலி அலைகள் மின்சாரச் சிக்னல்களாக மாற்றப்பட்டு மூளையால் செயலாக்கப்படுகின்றன. காதின் முக்கியப் பணி, கேட்கும் திறன் மூலம் தகவல்களைப் பெறுவதும், மனிதர்களுக்குத் தொடர்பு, கற்றல் மற்றும் சூழலுக்கு ஏற்ப பதிலளிக்கும் திறனை வழங்குவதும் ஆகும்.
மனித
உடலில் காது மற்றும் சிந்தனை (எண்ண) செயல்முறை ஆகியவை மிகவும் அற்புதமான இரண்டு அம்சங்களாகும். காது என்பது ஒலிகளைக் கேட்க உதவும் ஓர் உடல் உறுப்பு. அதே நேரத்தில், சிந்தனை செயல்முறை என்பது புரிந்துகொள்வது, பகுத்தறிவது மற்றும் முடிவெடுப்பது போன்ற மனச் செயல்பாடுகளைக் குறிக்கிறது. இவை வெவ்வேறு பணிகளைச் செய்தாலும், மனிதன் தன்னைச் சுற்றியுள்ள உலகத்துடன் திறம்படத் தொடர்புகொள்ள இரண்டும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவையாக உள்ளன.
காதின்
மூலம் பெறப்பட்ட எண்ண ஓட்டம் சிந்தனை வடிவம் பெற்று, அதன் செயல்முறை அமைப்பு மூளையில் நிகழ்கிறது. இது தகவல்களைப் புரிந்துகொள்வது, சூழ்நிலைகளைப் பகுப்பாய்வு செய்வது, பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது, கருத்துகளை உருவாக்குவது மற்றும் முடிவுகளை எடுப்பது போன்ற செயல்களை உள்ளடக்கியது. சிந்தனைகள் ஒருவரின் அறிவு, அனுபவம், உணர்வுகள் மற்றும் பார்வைகளால் வேறுபடுகின்றன. காது வழியாகப் பெறப்பட்ட சிந்தனை, மூளை மூலம் செயல்முறை பெறுவது, நாம் கண்டு மகிழும் ஓர் அறிவார்ந்த செயல்பாடாகும்.
அறிவுப்
பெருக்கத்திற்கு அளப்பரிய பணியாற்றும் அமைப்பாக நம் காது செயல்படுவது ஆச்சரியம் தரும் ஒன்றுதானே! காது நமக்குக் கிடைக்கப்பெற்ற எண்ண அலைகளை ஒலித் தகவலாக மூளைக்கு வழங்குகிறது; சிந்தனை செயல்முறை அந்தத் தகவல்களுக்கு அர்த்தம் அளிக்கிறது.
உதாரணமாக,
ஓர் உரையைக் கேட்கும்போது, காது அந்த ஒலிகளைப் பெறுகிறது. பின்னர், மூளை அந்த வார்த்தைகளைப் புரிந்துகொண்டு, அதன் பொருளை ஆராய்ந்து, அதற்கான கருத்துகளையும் பதில்களையும் உருவாக்குகிறது. காது இல்லையெனில் ஒலித் தகவல்கள் கிடைக்காது; சிந்தனை செயல்முறை இல்லையெனில் அந்த ஒலிகளுக்கு அர்த்தமே இருக்காது.
காது
தகவல்களைப் பெறுகிறது, சிந்தனைச் செயல்முறை அந்தத் தகவல்களை மதிப்பீடு செய்து, அவற்றை அறிவு மற்றும் செயலாக மாற்றுகிறது. ஆதலால்தான் செவிச்செல்வம் எத்துணை மேன்மை மிக்கது என்பதை நம் திருவள்ளுவர் கூட மிகச் சிறப்பாகக் குறளில் கூறியுள்ளார்.
செல்வத்துட்
செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந்
தலை (குறள் 411)
காது
மற்றும் மூளை மனித வாழ்க்கையில் தனித்துவமானது. ஒன்றுக்கொன்று துணைபுரிந்து நம் முன்னேற்றத்திற்கு உதவுகிறது. இவை இரண்டும் அறிதல் மற்றும் புரிதல் எனும் இரு வளர்ச்சிகளுக்கு உறுதுணையாக உள்ளது. இவை இரண்டும் இணைந்து செயல்படுவதன் மூலம் மனிதனுக்குக் கற்றல் மற்றும் சிறந்த முடிவெடுக்கும் திறன் கிடைக்கிறது. இதன் மூலம் மனித உடலின் உணர்வு அமைப்புகளுக்கும் மனத்தின் அறிவாற்றலுக்கும் இடையேயான அற்புதமான ஒத்துழைப்பு வெளிப்படுகிறது.
காது
என்பது மனித உடலின் மிக முக்கியமான உணர்வு உறுப்புகளில் ஒன்றாகும். இது கேட்கும் திறனை மட்டுமல்லாமல், உடலின் சமநிலையையும் பராமரிக்க உதவுகிறது.
காதின்
முதன்மைப் பணி ஒலிகளை உணர்வதாகும். மனிதர்களின் பேச்சு, இசை, இயற்கை ஒலிகள் மற்றும் எச்சரிக்கைச் சத்தங்கள் போன்றவற்றைக் கேட்டுப் புரிந்துகொள்ள காது உதவுகிறது. கேட்கும் திறன் இல்லாமல் பயனுள்ள தொடர்பாடல் சாத்தியமில்லை. மற்றவர்களின் கருத்துகளையும் உணர்வுகளையும் புரிந்துகொள்ள காது முக்கியப் பங்கு வகிக்கிறது.
குழந்தைகள்
மொழியைக் கற்றுக்கொள்வதிலும், மாணவர்கள் பாடங்களைக் கேட்டு அறிவைப் பெறுவதிலும் பெருக்குவதிலும் காது முக்கியப் பங்காற்றுகிறது. கேட்பதன் மூலம் மனிதர்கள் புதிய தகவல்களை அறிந்துகொள்கிறார்கள். உள்காதில் உள்ள சமநிலை அமைப்பு (Vestibular System) உடலின்
நிலைத்தன்மையையும் சமநிலையையும் கட்டுப்படுத்துகிறது. இதன் மூலம் நிமிர்ந்து நிற்பது, நடப்பது மற்றும் ஓடுவது போன்ற செயல்கள் சீராக நடைபெறுகின்றன.
காது
என்பது வெறும் கேட்கும் உறுப்பாக மட்டுமல்ல; அது கற்றல், தொடர்பாடல், பாதுகாப்பு மற்றும் உடல் சமநிலை ஆகியவற்றிற்கும் அத்தியாவசியமான ஓர் உறுப்பு ஆகும். எனவே, காதின் அவசியத்தைக் காதோரமாய் கூறியுள்ளேன். எண்ணங்களை மேம்படுத்த, நம் வாழ்வை உயர்த்திப் பிடிக்க நம் காது நமக்கு அவசியமானது, இதைப் பாதுகாப்பது
ஒவ்வொரு மனிதனின் பொறுப்பாகும். இத்தனை பயன்களைத் தரும் காதுகளை நாம் அலட்சியம் செய்யாது இருப்போம். காதைத் திருகி நம்மை யாராவது வம்பிழுக்கும்போது அவரின் காதருகே கூறுங்கள், ‘கேட்கச் செவி உள்ளவன் கேட்கட்டும், கேட்க இயலாதவன் வலிகளை உணரட்டும்’
என்று.
நல்ல
நல்ல எண்ணங்களுக்குச் செவி கொடுப்போம். வாழ்க்கைக்கான வழிகளை நாமே கண்டெடுப்போம்.
(தொடரும்)
“சட்டமன்றம் என்பது வெறும் சட்டங்களை இயற்றும் அமைப்பு மட்டுமல்ல; மக்களின் விருப்பமும் குரலும் வெளிப்படும் சனநாயகக் கருவி” - டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்.
ஒரு
மாநிலத்தின் சனநாயகத் தரத்தை அளவிட வேண்டுமென்றால், அந்த மாநிலச் சட்டமன்றத்தின் செயல்பாடுகளைப் பார்க்கவேண்டும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுவார்கள். காரணம், சட்டமன்றம் என்பது வெறும் அரசியல் மேடை அல்ல; அது மக்களின் பிரச்சினைகள் பேசப்படும் இடம்; அரசின் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்படும் இடம்; எதிர்க்கட்சிகள் தங்களது விமர்சனங்களை முன்வைக்கும் இடம்; மக்கள் நலத்திட்டங்கள் உருவாகும் இடம்.
தமிழ்நாடு
சட்டமன்றம் இந்தியாவின் மிகவும் பழமையான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டமன்றங்களில் ஒன்றாகும். 1921-ஆம் ஆண்டு சென்னை மாகாண சட்டமன்றமாகத் தொடங்கிய இந்த அமைப்பு, நூற்றாண்டைக் கடந்த சனநாயக மரபைக் கொண்டுள்ளது. பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராசர், முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்
தலைவி ஜெயலலிதா உள்ளிட்ட பல தலைவர்கள் தங்களது
அரசியல் சிந்தனைகளையும், மக்கள் நலக் கொள்கைகளையும் இந்த அவையின் வாயிலாக மக்களிடம் கொண்டு சென்றுள்ளனர்.
‘தமிழ்நாடு’
என்ற பெயர் மாற்றம், சமூகநீதி சார்ந்த சட்டங்கள், இடஒதுக்கீட்டுக் கொள்கைகள், சத்துணவுத் திட்டம், பெண்கள் முன்னேற்றம், கல்வி விரிவாக்கம் உள்ளிட்ட பல வரலாற்று முக்கியத்துவம்
வாய்ந்த முடிவுகள் இந்தச் சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளன.
தமிழ்நாடு
சட்டமன்றம் அதன் நீண்ட வரலாற்றில் பல உயர்ந்த விவாதங்களையும்,
சில விரும்பத் தகாத நிகழ்வுகளையும் கண்டுள்ளது. காமராசர், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா
போன்ற தலைவர்கள் சட்டமன்றத்தில் ஆற்றிய உரைகள் இன்றும்கூட அரசியல் மாணவர்களால் படிக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அமளி, வெளி நடப்பு, உறுப்பினர்கள் இடைநீக்கம், கடுமையான அரசியல் மோதல்கள் போன்ற நிகழ்வுகளும் சில காலங்களில் நடந்துள்ளன. இருந்தபோதிலும், சட்டமன்றத்தின் அடிப்படை நோக்கம் மக்கள் நலனே என்பதை தமிழ்நாட்டு அரசியல் வரலாறு தொடர்ந்து நிரூபித்துள்ளது.
தற்போதைய
சட்டமன்ற அமர்வின் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்றாக ஆளுநர் உரையைக் கூறலாம். கடந்த சில ஆண்டுகளாக, தமிழ்நாட்டு அரசிற்கும், ஆளுநர் அலுவலகத்திற்கும் இடையே தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் மற்றும் ஆளுநர் உரை தொடர்பாகக் கருத்து வேறுபாடுகள் நிலவி வந்த நிலையில், இந்த ஆண்டு ஆளுநர் உரை சுமூகமாக நடைபெற்றது நல்ல சனநாயக முன்னேற்றம். அரசியல் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்; ஆனால், அரசமைப்பு அமைப்புகளுக்கிடையேயான மரியாதை நிலைத்திருக்கவேண்டும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு நல்ல எடுத்துக்காட்டு.
இந்த
அமர்வின் மற்றொரு சிறப்பம்சம், சட்டமன்ற நடவடிக்கைகள் நேரடியாக ஒளிபரப்பப்பட்டதாகும். இதன்மூலம் மக்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள் எவ்வாறு செயல்படுகின்றனர் என்பதை நேரடியாகப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. குறிப்பாக, சமூக ஊடகங்களில் பொழுதுபோக்குக் காணொளிகள், குறும்படங்கள் மற்றும் பிற உள்ளடக்கங்களில் அதிக நேரம் செலவழித்து வந்த இளையோர், தற்போது சட்டமன்ற விவாதங்களை ஆர்வத்துடன் கவனிக்கத் தொடங்கியிருப்பது மிகவும் நேர்மறையான மாற்றமாகும். எந்த உறுப்பினர் மக்கள் பிரச்சினைகளை முன்வைக்கிறார்? யார் தரமான விவாதத்தில் ஈடுபடுகிறார்? யார் வெறும் அரசியல் குற்றச்சாட்டுகளில் நேரத்தைச் செலவிடுகிறார்? என்பதை இளையோர் நேரடியாக மதிப்பிடத் தொடங்கியுள்ளனர்.
கல்லூரிகள்,
சமூக ஊடகங்கள் மற்றும் நண்பர் வட்டாரங்களில் சட்டமன்ற விவாதங்கள் குறித்து ஆரோக்கியமான அரசியல் விவாதங்கள் நடைபெறுவது சனநாயகத்திற்கு நல்ல அறிகுறியாகும். நாளைய வாக்காளர்களும் தலைவர்களும் இன்றைய இளையோரே என்பதால், அவர்களின் இந்த அரசியல் விழிப்புணர்வு தமிழ்நாட்டு சனநாயகத்தின் எதிர்காலத்திற்கு நம்பிக்கை அளிக்கிறது.
இந்த
அமர்வில் சபாநாயகர் ஜே.சி.டி.
பிரபாகர் அவர்களின் செயல்பாடுகள் கவனிக்கத்தக்கன. சட்டமன்ற நடவடிக்கைகளை ஒழுங்காக நடத்துவதில் அவர் எடுத்த முயற்சிகள் பாராட்டத்தக்கவை. ஆளும் கட்சி உறுப்பினர்களாக இருந்தாலும், எதிர்க்கட்சி உறுப்பினர்களாக இருந்தாலும் அவையின் விதிமுறைகளை மீறியபோது எச்சரிக்கை வழங்கினார். சில நேரங்களில் ஆளும் கட்சியினரின் கருத்துகளையும் திருத்தினார்; அதேபோல் எதிர்க்கட்சியினருக்கும் அறிவுறுத்தல் வழங்கினார். விரும்பத்தகாத வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டபோது அவற்றைப் பதிவிலிருந்து நீக்க உத்தரவிட்டதும், உறுப்பினர்களை விவாதப் பொருளுக்குத் திருப்பியதும் அவரது நடுநிலையான அணுகுமுறையை வெளிப்படுத்தியது. சனநாயக அமைப்பில் சபாநாயகர்மீது அனைத்துத் தரப்பினருக்கும் நம்பிக்கை இருக்க வேண்டும். அந்த வகையில் பெரும்பாலான நேரங்களில் அவர் நடுநிலையைக் கடைப்பிடிக்க முயற்சித்ததாகக் கூறலாம்.
அதேநேரத்தில்,
ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் திருத்திக்கொள்ளவேண்டிய சில அம்சங்களும் உள்ளன. முதலமைச்சர் தனது உரையில் நிர்வாகச் சாதனைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்களை அதிகம் பேசுவது மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். மேனாள் தலைவர்கள் அல்லது முந்தைய அரசுகளை விமர்சிக்கும் நோக்கில் தேவையற்ற சிறுகதைகள், அரசியல் உவமைகள் அல்லது சைகைகள் போன்றவை தவிர்க்கப்படலாம். சட்டமன்றம் என்பது அரசியல் மேடையாக இருந்தாலும், அதன் முதன்மை நோக்கம் மக்கள் நலனுக்கான விவாதங்களே!
அதேபோல்
எதிர்க்கட்சியும் அதிகப் பொறுமையுடன் செயல்படவேண்டியது அவசியமாகும். முதலமைச்சர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, உரை முடிந்த பிறகு போதுமான நேரம் வழங்கப்படும் என்றும், அனைத்துக் கேள்விகளையும் எழுப்ப வாய்ப்பு இருக்கும் என்றும் உறுதியளித்திருந்தார் சபாநாயகர். அந்தச் சூழ்நிலையில் அவையிலேயே இருந்து கேள்விகளை எழுப்பிப் பதில்களைப் பெற்றிருக்கலாம். வெளிநடப்பு என்பது சனநாயக உரிமை என்றாலும், அவையில் இருந்து விவாதத்தின் மூலம் பதில்களைப் பெறுவது மக்களுக்கு அதிகப் பயன் அளிக்கும். பின்னர் அவைக்கு வெளியே சென்று முதலமைச்சரின் குடும்ப வாழ்க்கை குறித்துத் தனிப்பட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதும் தேவையற்ற சர்ச்சையை உருவாக்கியது. கொள்கைகள், நிர்வாகம் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து விமர்சிப்பதே சனநாயக அரசியலின் ஆரோக்கியமான வழிமுறையாகும்.
தமிழ்நாடு
சட்டமன்றத்தின் மிகப்பெரிய பலம் அதன் வரலாற்று மரபும் சபாநாயகர் சனநாயக கலாச்சாரமுமாகும். ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி மக்கள் நலனை மையமாகக் கொண்டு செயல்பட்டால் மட்டுமே சட்டமன்றத்தின் உண்மையான நோக்கம் நிறைவேறும். குறைவாகப் பேசி அதிகமாகச் செயல்படுவது எவ்வாறு சிறந்த தலைமைத்துவத்தின் அடையாளமோ, அதேபோல் கூச்சல், வெளிநடப்பு மற்றும் தனிப்பட்ட விமர்சனங்களைவிட ஆக்கப்பூர்வமான விவாதங்களே ஒரு சிறந்த சட்டமன்றத்தின் அடையாளமாக அமையும்.
வரலாற்றுப்
பெருமைமிக்க தமிழ்நாடு சட்டமன்றம், சனநாயகத்தின் உயரிய மரபுகளைக் காக்கும் முன்னுதாரணமாகத் தொடர்ந்து திகழவேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாகும்.
2026-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ‘இந்தியா’ கூட்டணியை அசைத்தது. மே 4-ஆம் தேதி அன்று தமிழ்நாட்டில் ‘தொங்கு சட்டசபை’ என முடிவானது. அன்று வழக்கத்திற்கு மாறாக ‘மாநிலக் காங்கிரஸ், த.வெ.க. ஆட்சிக்கு ஆதரவு தருவதா? வேண்டாமா? என முடிவெடுக்கும்’ என டெல்லி காங்கிரஸ் தலைமை அறிவித்தது.
மே
5-ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டம் கூடியது. த.வெ.க.
ஆட்சிக்கு ஆதரவு நிலை எடுக்கப்பட்டது. முக்கியமாக, வரவுள்ள உள்ளாட்சித் தேர்தல்கள், 2029 நாடாளுமன்றத் தேர்தல் வரை கூட்டணி, தொகுதி பங்கீடு அமைச்சரவையில் பங்குவரை முடிவானது.
மே
6-இல் நிபந்தனையுடன் காங்கிரஸ் த.வெ.க.வை ஆதரித்தது. ‘த.வெ.க. எந்தச்
சூழ்நிலையிலும் பா.ச.க.வின் என்.டி.ஏ.வுடன்
உறவு கூடாது’ என்றது. ஆனால், அ.தி.மு.வின் 25 சட்டமன்ற உறுப்பினர்களை சி.வி. சண்முகம்
அலுவலகம் சென்று வேலுமணி உள்பட பல அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கு
முதலமைச்சர் விஜய் சால்வைப் போர்த்தி ஆதரவு திரட்டினார். தினகரனின் அ.ம.மு.க.வின் மன்னார்குடி
சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் அவர்களைத் த.வெ.க.
தன் கட்சியில் சேர்த்தது. இவர்கள் அனைவரும் என்.டி.ஏ. கூட்டணி
வாக்குப் பெற்று வெற்றி பெற்றவர்கள்.
இன்றும்
என்.டி.ஏ. கூட்டணியில்
தொடர்பவர்கள். காங்கிரஸ் தன் ஆட்சி ஆதரவிற்கான நிபந்தனை மீறப்பட்டது குறித்து மௌனம் காக்கிறது. காங்கிரஸ் 2004 முதல் 2026 வரை (2014 பாராளுமன்றத் தேர்தல் தவிர) கூட்டணியிலிருந்து வெற்றிக்குக் காரணமாக இருந்த தி.மு.க.வை மறந்தது. பொதுவுடைமைக்
கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முசுலிம் லீக் ஆகிய கட்சித் தலைவர்கள் தி.மு.க.
தலைமையிடம் பேசி த.வெ.க.
அரசில் சேர்ந்தன.
இது
குறித்துப் பேசிய காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம், “நாங்கள் த.வெ.க.
கூட்டணியில் இணைவது குறித்து தி.மு.க.விடம் பேசி, எங்கள் முடிவைச் சிறப்பாகக் கையாண்டு இருக்கவேண்டும்; தவறு செய்துவிட்டோம்” எனத்
தங்கள் பிழையைப்
பொதுவெளியில் ஏற்றுக்கொண்டார்.
மே
8-இல் சமாஜ்வாடி கட்சித் தலைவரும், உத்திரப்பிரதேச மேனாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், மு.க. ஸ்டாலின்
அவர்களுடனான தன் சந்திப்புப் படங்களையும், மேற்குவங்க மம்தா பானர்ஜியின் படங்களையும் போட்டு ஒரு பற்றிக்கொள்ளும் ‘ட்வீட்’ இந்தியில் போட்டார். ‘துன்ப காலங்களில் ஒருவரை ஒருவர் கைவிடுபவர்கள் நாங்கள் அல்லர்.’ இது காங்கிரஸ் கட்சியின் முதுகில் குத்திய அரசியலை இந்தியா முழுவதும் பேச வைத்தது. காங்கிரஸ் பாராளுமன்றத் தேர்தலுக்காக மாநிலக் கட்சிகளிடம் தஞ்சம் அடைகிறது. தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரம் தவிர இந்தியாவில் எங்கும் மாநிலத் தேர்தல்களில் ‘இந் தியா’ கூட்டணி கிடையாது.
அண்மைக்கால
உதாரணமாக, பீகாரில் இராகுல் காந்தியும், தேஜஸ்வி யாதவ்வும் இணைந்த பாதயாத்திரைகளில், பொதுக்கூட்டங்களில் அதிகபட்சம் பத்து இலட்சம் பேர் திரண்ட அதிசயம் நடந்தது. தேஜஸ்வி யாதவ் பீகார் முதல்வராகிவிடுவார் என்ற நிலை ஏற்பட்டது. காங்கிரஸ் பீகார் தேர்தலில் அதிக சீட் கேட்டு, கடைசி நேரம் வரை அழுத்தம் கொடுத்தது. ‘பிரண்ட்லி மேட்ச்’ என்பதாக காங்கிரஸ் பல தொகுதிகளில் கூட்டணி
மாண்பிற்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தியது. இந்த ‘நட்புப் போட்டியால்’ 15 தொகுதி
முடிவுகள் மாறின. பீகாரில் செல்வாக்கு மிக்க லாலு பிரசாத்தின் இராஷ்ட்ரிய ஜனதா தளம் தோற்றது.
பாண்டிச்சேரியில்
2026 மார்ச் 23-ஆம் தேதி மாலை
மூன்று மணிக்கு வேட்புமனு திரும்பப் பெறும் காலம். பிற்பகல் ஒரு மணி வரை கூட்டணி பேசி தி.மு.க., விடுதலைச்
சிறுத்தைகளைக் காங்கிரஸ் நட்புப் போட்டிக்குத் தள்ளியது.
புதுதில்லி
மேனாள் முதல்வர் கெஜ்ரிவால் ஊழல் வழக்கில் விடுதலை பெற்றதைக் காங்கிரஸ் கண்டித்தது. ஒரு படி மேலாக, கேரள சட்டமன்றத் தேர்தல்களில் இராகுல் மற்றும் கார்கே, பினராயி விஜயனுக்கும், பா.ச.க.வுக்கும் இரகசிய உறவு எனப் பிரச்சாரம் செய்தார்கள். இது குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி அவர்கள்
விளக்கம் கேட்டு காங்கிரஸ் தலைமைக்குக் கடிதம் எழுதி உள்ளார்.
இக்குழப்பங்களுக்கு
இடையே ‘இந்தியா’ கூட்டணியின் கூட்டம் 2026 ஜூன்
8-ஆம் தேதி நடந்தது. ‘இந்தியா’ கூட்டணிப் பிணக்குகள் பிளக்ஸ் பேனர்களாக டெல்லி முழுவதும் வெளிப்பட்டன. அவை அன்று புதுதில்லி பத்திரிகைகளில் தலைப்புச் செய்திகளாக இருந்தன. அன்று வைக்கப்பட்ட பேனர்களில் பல்வேறு நேரங்களில் ‘இந்தியா’ கூட்டணித் தலைவர்கள் காங்கிரஸ்மீது வைத்த விமர்சனங்கள் இந்தியில் வெளியாகின.
‘இந்தியா’ கூட்டணியைக் கட்டமைத்த தி.மு.க.,
ஜூன் 8 அன்று ‘இந்தியா’ கூட்டணிக் கூட்டத்தைப் புறக்கணித்தது. ஆம் ஆத்மி கட்சியும் இதே புறக்கணிப்பு நிலையை எடுத்தது.
‘இந்தியா’ கூட்டணிக் கூட்டத்தில் தேசியவாதக் கட்சியின் சரத்பவாரின் மகள் சுப்ரியாசுலே, அகிலேஷ் யாதவ்,
தேஜஸ்வி யாதவ், தொல். திருமாவளவன் ஆகியோர்,
‘தி.மு,க-வைக்
குறிவைத்து, காங்கிரஸ் தோல்வி அடையச் செய்தது. காங்கிரஸ் கட்சி மாநிலக் கட்சிகளை இறுக்கிப் பிடித்து தொகுதிகளை வாங்குவது, கூட்டணிக்குள் விமர்சனங்கள் செய்வது ஏன்?’ என ஏகத்திற்கும் குற்றம்
சாட்டினர். காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா மற்றும் மம்தா பானர்ஜி ஆகியோர் மட்டும் ‘இந்தியா’ கூட்டணி
ஒற்றுமை குறித்துப் பேசியுள்ளனர்.
கெஜ்ரிவால்,
அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், ஸ்டாலின் ஆகியோர் தங்கள் கடந்தகாலக் கசப்பான காங்கிரஸ் அனுபவங்களை எண்ணுகிறார்கள். மாநிலத் தேர்தல்கள் குறித்த காங்கிரஸ் நெருக்குதலால் ‘மூன்றாம் அணி’ என்ற முன்னெடுப்பு குறித்துச் சிந்திக்கிறார்கள், வெளிப்படையாகவும் பேசுகிறார்கள். ‘இந்தியா’ கூட்டணிக் கூட்டத்திலும்
அதிருப்திகளை வெளிப்படுத்தி உள்ளனர்.
மூன்றாம்
அணி என்பது பா.ச.க.வுக்கு வெற்றி வாய்ப்பைத் தட்டில் வைத்துத் தருவதாகும் என்ற விமர்சனங்கள் உள்ளன. ஆனால், மாநிலங்களின் அரசியல் மாநிலக் கட்சிகளைப் பா.ச.க.வைப் போலவே அழிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு மூன்றாவது அணியே மாற்று
என்ற வாதமும் உண்டு.
தமிழ்நாட்டில்
மேனாள் காங்கிரஸ் தலைவர் அழகிரி, திருச்சி வேலுச்சாமி, கார்த்திக் சிதம்பரம் ஆகியோரைக் கொண்ட தி.மு,க.
வெறுப்பின் பழைய அணி இருந்தது. 2026 - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சமூக ஊடகங்கள் வழியும், செய்தியாளர் சந்திப்பு வழியும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால்,
தமிழ்நாடு காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கீரிஸ் சோடாங்கர், பிரவீன் சக்கரவர்த்தி, மக்களவை உறுப்பினர்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் இராஜேஷ் குமார் ஆகியோர் பேசிய பேச்சுகள், தமிழ்நாட்டு ‘இந்தியா’ கூட்டணியின் நம்பகத்தன்மையைப் பொதுமக்களிடம் சிதைத்தன. ‘இந்தியா’ கூட்டணி தமிழ்நாட்டில் தோல்வி அடைந்தது.
தமிழ்நாட்டில்
திராவிடத்திற்கு மாற்றாக த.வெ.க.
வந்தபின், காங்கிரஸ் அதிரடி அரசியல் நடத்துகிறது. அதன் உடைப்புச் சத்தம் ‘இந்தியா’ கூட்டணியில் பிரதிபலிக்கிறது. இந்நாள்வரை த.வெ.க.
‘இந்தியா’ கூட்டணி
குறித்து ஒருவார்த்தை கூடப் பேசவில்லை.
தி.மு.க.வின்
மக்களவைக் குழுத் தலைவர் கனிமொழி, “நாங்கள் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர்களோடு அமர விருப்பமில்லை; வேறு இடம் தாருங்கள்”
என மக்களவைத் தலைவருக்குக் கடிதம் எழுதிவிட்டார். தி.மு.க.வின் அதிகாரப்பூர்வக் கட்சி நாளேடான ‘முரசொலி’ தலையங்கம் உள்பட அனைத்துச் செய்தி வடிவிலும் காங்கிரஸ் கட்சியைக் கட்டம் கட்டுகிறது.
மூன்றாவது
அணி என்பது காலத்தின் கையில் உள்ளது. அதற்கான அடிப்படைக் காரணிகளை மாநிலத் தேர்தல் வெற்றிகளுக்காக காங்கிரஸ் உருவாக்கியது என்பதில் ஐயமில்லை.
மாநிலக்
கட்சிகளின் ஒருங்கிணைந்த கூட்டாட்சியே அரசமைப்புச் சட்டநெறிக்கு உள்பட்ட அடிப்படையாகும். அது மூன்றாவது அணியால் மட்டுமே
சாத்தியமாகும்.