news
சிறப்புக்கட்டுரை
சமூக விழுமியங்களும் சினிமாக்களின் தாக்கமும்

அண்மைக்காலமாக, தமிழ்நாட்டு அரசியலில் தனிமனித ஒழுக்கம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வு குறித்த விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன. குறிப்பாக, தமிழ்நாடு முதலமைச்சர்சிங்கப்பெண்என்ற மகளிர் பாதுகாப்பு அமைப்பைத் தொடங்கி வைக்கும்போது, ‘குற்றச்செயல்களுக்கு அரசு மட்டுமே காரணமல்ல; தனிமனித ஒழுக்கமும் அதில் அடங்கியிருக்கிறதுஎன்று குறிப்பிட்டது சிந்திக்கத்தக்கது. இருப்பினும், தனிமனித ஒழுக்கம் சீர்குலைந்து போவதன் பின்னணியில் ஊடகங்கள் குறிப்பாக, திரைப்படம் போன்ற காட்சி ஊடகங்களின் தாக்கம் மறுக்க முடியாததாக உள்ளன. காட்சி ஊடகங்கள் மனித மனத்தை மிகவும் எளிதில் பாதிக்கின்றன. உளவியல் ரீதியாக, நாம் பார்த்துக் கற்றுக்கொள்ளும் இயல்புடையவர்கள்; அதைச் சமூகம் மற்றும் நம்மைச் சுற்றியுள்ளவற்றிலிருந்து கிரகித்துக் கொள்கிறோம்.

திரைப்படங்களிலும் தொடர்களிலும் வரும் கதாபாத்திரங்கள் மற்றும் நிகழ்வுகள் நம் மனத்தில் ஆழமான பதிவுகளை ஏற்படுத்துகின்றன. அந்த உணர்ச்சிகரமான காட்சிகள் நம்முடைய எண்ணங்களையும் பழக்கவழக்கங்களையும் அறியாமலே மாற்றியமைக்கின்றன. இதன் காரணமாகத்தான் அவை நம்முடைய தனிமனிதச் செயல்பாட்டில் பெரும் ஆதிக்கம் செலுத்துகின்றன.

தற்காலத் திரைப்படங்களில் வன்முறை, ஆபாசம், இரட்டை அர்த்த வசனங்கள் பெருகிவருவது சமூகக் கண்ணோட்டத்தை மிகவும் சீர்குலைக்கக்கூடிய அபாயத்தைக் கொண்டுள்ளது. குறிப்பாக, திரையில் ஒருவரைக் கொலை செய்வது என்பது சாதாரண செயல் என்றும், அதிலிருந்து தப்பிக்கவும் முடியும்; அதிலும் குடும்பமாகக்கூட கொன்றாலும் பரவாயில்லை என்பது போலக்  காட்டும் காட்சிகள், வன்முறையை இயல்பாக்கிவிடுகின்றன. இந்தப் போக்கைத் தடுப்பதில் திரைப்படச் சான்றிதழ் வாரியத்தின் (sensor board) பொறுப்பு மிகவும் முக்கியமானது. சிறிய தவறான வார்த்தைகளைக்கூடத் தடுத்து நிறுத்தும்  இவ்வாரியம், சமூகத்தை அச்சுறுத்தும் வன்முறைக் காட்சிகளுக்கும், ஆபாசமான உரையாடல்களுக்கும் அனுமதி அளிப்பது என்பது கேள்விக்குறியாகிறது.

இன்றைய இளைய தலைமுறையினருக்குக் காட்சி ஊடகங்களின் மீதுள்ள ஈர்ப்பிற்குப் பல உளவியல் காரணங்கள் உள்ளன. இன்றைய தொழில்நுட்ப உலகில் அவர்கள் எளிதில் தகவல்களைப் பெறவும், காட்சி வழியான கதைகளை விரும்புவதாலும் இந்த ஈர்ப்பு ஏற்படுகிறது. இது அவர்களுக்கு உடனடிக் கவனச் சிதறலைத் தந்து, சில நேரங்களில் உண்மை உலகத்திலிருந்து தனிமைப்படுத்தவும் செய்யும். அவர்களை மீட்டெடுக்க, பள்ளிகளிலும் வீடுகளிலும் காட்சி ஊடகங்களின் நன்மைகள் மற்றும் தீமைகளைப் பற்றிப் பேசும் சூழ்நிலையை உருவாக்கவேண்டும். ஊடகக் கல்வி வெறும் பேச்சளவில் மட்டுமல்லாமல், அது பள்ளிகளில் கட்டாயமான செயல்திட்டமாகச் செயல்படுத்தப்படவேண்டும். இதற்குப் பள்ளிகளின் நிர்வாகம், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அனைவரும் இதனைத் தங்கள் தலையாய பொறுப்பாக ஏற்றுக்கொண்டு, ஊடகக் கல்வியை மாணவர்களிடம் கொண்டுசேர்க்க முழுமூச்சோடு செயல்பட வேண்டியது கட்டாயத் தேவையாகும்.

எனவேதான், இன்றைய பள்ளிக் கல்வித்துறையும், ஆசிரியரின் பங்களிப்பும் அதற்கான பொறுப்பும் இதில் மிக முக்கியமானது. இன்றைய கல்விச்சூழலில், ஆசிரியர் தங்களது வகுப்பறையில் சினிமாக்கள் குறித்துப் பேசவேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே, இதுசார்ந்த நுட்பமான திரைசார்ந்த அறிவு ஆசிரியருக்குத் தேவைப்படுகிறது; அதைப் புரிந்துகொள்ள வேண்டிய பொறுப்பும் அவர்களுக்கு இருக்கிறது. ஊடகக் கல்வியை ஒரு பாடமாக அறிமுகப்படுத்தி, அவர்கள் திரையில் பார்ப்பதைச் சரியாக விமர்சிக்கவும், உண்மையை உணர்ந்துகொள்ளவும் பயிற்சி அளிக்க வேண்டும்.

news
சிறப்புக்கட்டுரை
நீயா? நானா? (இளமை ஒரு சவால்! – 11)

இன்றைய இளைஞர்களும் இளம்பெண்களும் தங்கள் வாழ்க்கையின் மிக மிக முக்கியமான நாளாகக் கருதுவது அவர்களின் திருமண நாளைத்தான். தங்கள் துணைவர் இப்படி இருக்கவேண்டும்? அப்படி  இருக்கவேண்டும்? என்று வருடக்கணக்கில் கனவுகளை வளர்த்துக்கொள்கிறார்கள். உலகிலேயே  சிறந்த அழகி, அழகான நிறம், அமெரிக்க மாப்பிள்ளை, நான் விரும்புவதை  எல்லாம் வாங்கித்தரும் மாப்பிள்ளை, சமைக்கத் தெரிந்த மாப்பிள்ளை... இப்படி ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வோர் ஆசை. நிச்சயம் நடந்த பிறகு ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டே இருக்கிறார்கள், அன்பைப் பொழிகிறார்கள். திருமணத்தை ஏக தடபுடலாக நடத்தத் திட்டமிடுகிறார்கள். நகை, புடவை, செருப்பு, பூச்செண்டு, மாலை என்று ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து வாங்குகிறார்கள். பெண், மாப்பிள்ளை அலங்காரம் முதல் நாள் தொடங்கி முகூர்த்தம் முடியச் சில நிமிடங்கள் வரை தொடர்கிறது. பெற்றோர் தங்கள் முழுச் சேமிப்பையும் பயன்படுத்தி தடபுடலாகத் திருமணத்தை நடத்தி வைக்கிறார்கள். உற்றார், உறவினர்,  நண்பர்கள் எல்லாரும் படையெடுத்து வந்து வாழ்த்திவிட்டுப் போகிறார்கள். இளைஞர்களின் வாழ்வில் இதைவிட முக்கியத்துவம் கொடுத்து நடத்தி வைக்கப்படும் நிகழ்ச்சி வேறு எதுவும் இல்லை.

எல்லாம் சரிதான். திருமணம் என்பது ஆயிரங்காலம் வளர்ந்து செழிக்கவேண்டிய பயிர்தான். அந்தக் குடும்பப் பயணத்தின் தொடக்கத்தைக் கொண்டாட வேண்டியதுதான். ஆனால், இவ்வளவு சிறப்பாகத் தொடங்கும் புதிய குடும்பங்கள் ஏன் அவசர கதியில் சிதைந்து போகின்றன? சில நாள்கள், சில வாரங்கள், சில மாதங்களிலேயே தாய் வீட்டுக்குத் தனியாகத் திரும்பிவிடும் பெண்கள் எத்தனையோ பேர்! பெற்றக் குழந்தைகளோடு தனிமைப்படுத்தப்படும் பெண்கள் எத்தனையோ பேர்! வருடக்கணக்கில் ஒருவரோடு ஒருவர் பேசாமல் ஒப்புக்காகவோ அல்லது குழந்தைகளுக்காகவோ பல்லைக் கடித்துக்கொண்டு குடும்பம் நடத்துபவர்கள் எத்தனை பேர்?

மாமியார் - மாமனாரை மதிக்கின்ற இளையோர் எத்தனை பேர்? மாமியார்-மாமனாரால் மதிப்போடும் பாசத்தோடும் நடத்தப்படுகின்ற தம்பதியர் எத்தனை பேர்? மாமியார்-மாமனார் உறவாலேயே பிரிந்து போகிற, சிதைந்து பாழாய்ப் போகிற குடும்பங்கள் எத்தனை? எத்தனை? ஆலமரம் போல் தழைத்து வளரவேண்டிய பிஞ்சு நெஞ்சங்கள், அவசர கதியில் தற்கொலைக்குத் தள்ளப்படுவது  ஏன்? ஏன்? ஏன்?

நீயா? நானா? கணவனா? மனைவியா? மாமியாரா? மரு மகளா? அண்ணனா? தம்பியா? பிறந்தவளா? புகுந்தவளா? பெற்றோரா? பிள்ளைகளா? இந்த அகம்பாவம் நம் ஒவ்வொருவரிடமும் ஆழமாக வேரூன்றி இருக்கிறது. இதுதான் நம் உறவுகள் எல்லாவற்றையும் சீரழித்து நம்மைப் பாடாய் படுத்துகிறது. நாட்டில் எல்லாரும் வேற்றுமைகளை எல்லாம் மறந்து, சமத்துவ சமூகமாக வளரவேண்டும் என வாய்கிழியப் பேசுகிறோம்சரிதான்! முதலில் அந்தச் சமத்துவத்தை வீட்டில் கொண்டுவர வேண்டாமா? காலங்காலமாக ஆணாதிக்கச் சமூக அமைப்பு வளர்ந்து வந்திருக்கிறதுஆண் அதிகாரம் செலுத்தவேண்டும், பெண் அடங்கிப்போக வேண்டும்இதுதான் நமது பண்பாடு, சட்டம்! ஆனால், இன்று மற்றோர் ஆதிக்கமும் சேர்ந்துகொண்டு விட்டது... அது பண ஆதிக்கம்! யார் அதிகமாகச் சம்பாதிக்கிறார்களோ அவர்கள் வைத்ததுதான் சட்டம். யாரிடம் அதிக சொத்து இருக்கிறதோ அல்லது யார் அதிக சொத்தைக் கொண்டு வருகிறார்களோ அவர்கள் வைத்ததுதான் சட்டம்! இன்று குடும்ப உறவுகள் எல்லாம் இந்தச் சொத்துச் சக்தியில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கின்றன. எனவே, இன்று பல இளைஞர்கள் திருமணமே வேண்டாம் என்று தப்பித்து ஓடும் நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்தப் போக்கும் அர்த்தமற்றது.

உறவுகள் வலுப்பட சமத்துவம் அடித்தளம்கணவன் மனைவியை மதிப்பதுபோல், மனைவி கணவனை மதிக்க வேண்டும். மனைவி கணவனை நேசிப்பதுபோல் கணவனும் அவளை நேசிக்க வேண்டும். இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கவேண்டும். குடும்ப வேலைகளை இருவரும் பேசிப் பகிர்ந்து கொள்ளவேண்டும். இருவரும் அவ்வப்போதும் தங்கள் பணியில் தவறுவது இயற்கை. அந்த நேரங்களில் ஒருவரையொருவர் மன்னிக்கவேண்டும்.

இது வாழ்க்கையில் மிகப்பெரிய சவால்! ஆனால், பல குடும்பங்கள் இச்சவாலைச் சந்தித்து வாழ்ந்து காட்டிக் கொண்டுதான் இருக்கின்றன. இத்தகைய நீண்டநெடியஇனிய குடும்ப உறவுகள்தான் உலகத்தை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன.

news
சிறப்புக்கட்டுரை
கடைசி நாற்காலி...

யாரும் கவனிக்காத இடத்திலும்...

இறைவனின் பார்வை இருக்கிறது.

ஞாயிற்றுக்கிழமை திருப்பலி முடிந்தது. மக்கள் மெதுவாக வெளியேறிக் கொண்டிருந்தார்கள். சிலர் ஒருவருக்கொருவர் வாழ்த்திக் கொண்டார்கள், சிலர் அடுத்த வார நிகழ்ச்சிகளைப் பற்றிப் பேசினார்கள்.

குழந்தைகள் ஓடிக்கொண்டிருந்தார்கள். ஆலயத்தின் முன்பகுதி கொஞ்சம் கொஞ்சமாகக் காலியாகிக் கொண்டிருந்தது. ஆனால், பின்பக்கத்தில் ஒரு நாற்காலி மட்டும் இன்னும் அப்படியே இருந்தது.

அந்த நாற்காலியில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் ஒரு வயதான அம்மா அமர்ந்திருப்பார். யாருடனும் அதிகமாகப் பேசமாட்டார். திருப்பலி தொடங்குவதற்கு முன்பே வந்து அமைதியாக அமர்ந்திருப்பார். திருப்பலி முடிந்ததும்மற்றவர்கள் எழுந்து செல்லும்வரை காத்திருந்து, கடைசியாக மெதுவாக வெளியேறுவார்.

அன்று அந்த நாற்காலி காலியாக இருந்தது. யாரும் முதலில் கவனிக்கவில்லை. மக்கள் தங்கள் வழியில் சென்று கொண்டிருந்தார்கள்.

சில நிமிடங்களுக்குப் பிறகு ஆலயத்தைச் சுத்தம் செய்து கொண்டிருந்த ஒருவர் மட்டும் அந்த நாற்காலியைப் பார்த்தார். ‘அம்மா இன்று வரவில்லையே...’ என்று மெதுவாகச் சொன்னார். அந்த ஒரு வாக்கியம் அங்கே சிறிது நேரம் அமைதியை ஏற்படுத்தியது.

நாம் தினமும் பார்க்கும் சில மனிதர்களை உண்மையில்பார்க்கிறோமா?’ காலையில் அலுவலகத்திற்குச் செல்லும்போது வாசலில் நிற்கும் காவலாளியைப் பார்க்கிறோம்; ஆனால், அவருடைய பெயர் நமக்குத் தெரியுமா? தினமும் நம் அறையை சுத்தம் செய்யும் பணியாளரைப் பார்க்கிறோம்; ஆனால், அவர் எப்படி இருக்கிறார் என்று ஒரு முறையாவது கேட்டிருக்கிறோமா? வகுப்பறையின் கடைசி வரிசையில் அமைதியாக அமர்ந்திருக்கும் மாணவனைப் பார்க்கிறோம்; ஆனால், அவன் ஏன் அமைதியாக இருக்கிறான் என்று அறிய முயன்றிருக்கிறோமா? வீட்டில் நம்முடன் உணவு உண்ணும் ஒருவரை தினமும் பார்க்கிறோம்; ஆனால், அந்த நாளில் அவருடைய மனதில் என்ன நடந்தது என்று கேட்டிருக்கிறோமா?

சில நேரங்களில் நாம் மனிதர்களைப் பார்க்கவில்லை; அவர்களைக் கடந்து செல்கிறோம்நம்முடைய பார்வை வேகமாகிவிட்டது. முகங்களைப் பார்க்கிறோம்; மனிதர்களைப் பார்க்கவில்லை. செயல்களைப் பார்க்கிறோம்; உணர்வுகளைப் பார்க்கவில்லை. தவறுகளைப் பார்க்கிறோம்; அதன் பின்னால் இருக்கும் வலியைப் பார்க்கவில்லை. வெற்றியைப் பார்க்கிறோம்; அதன் பின்னால் இருந்த போராட்டத்தைப் பார்க்கவில்லை. ஒருவரின் வெளிப்புறத்தைப் பார்த்தவுடன், அவரைப் பற்றிய முடிவை எடுத்துவிடுகிறோம். ஆனால், இயேசு அப்படிப் பார்க்கவில்லை.

ஒருநாள் இயேசு எரிகோ நகருக்குள் சென்று கொண்டிருந்தார்கூட்டம் பெரிதாக இருந்தது. அந்தக் கூட்டத்தில் சக்கேயுவும் இருந்தான். அவனைப் பற்றி மக்கள் ஏற்கெனவே ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்கள். அவன் ஒரு வரிவசூலிப்பவன். அவன் வாழ்க்கையைப் பற்றிய தீர்ப்பு அவர்களிடம் தயாராக இருந்தது. ஆனால், கூட்டத்தின் நடுவில் இயேசு அவனைப் பார்த்தார். மற்றவர்கள் பார்த்தது ஒரு வரிவசூலிப்பவனை; இயேசு பார்த்தது ஒரு மனிதனை! அதனால்தான் அவர் அவனை அழைத்தார்.

அதேபோல், வழியோரத்தில் இருந்த பர்த்திமேயுவின் குரலையும் கூட்டம் அமைதிப்படுத்த முயன்றது. ஆனால், இயேசு அந்தக் குரலைக் கேட்டார். மற்றவர்கள் அவனை ஒரு தொந்தரவாகப் பார்த்தார்கள். இயேசு அவனை ஒரு மனிதனாகப் பார்த்தார். நாம் இயேசுவைப் பின்பற்றுகிறோம் என்று சொல்கிறோம். ஆனால், ஒரு சிறிய கேள்வி: இயேசு பார்த்ததைப் பார்க்க நாம் கற்றுக்கொண்டிருக்கிறோமா?

நம்முடைய வீட்டில் கவனிக்கப்படாமல் இருக்கும் ஒருவரை? நமது பணியிடத்தில் அமைதியாக இருக்கும் ஒருவரை? நமது சமூகத்தில் உதவி தேவைப்படும் ஒருவரைநமக்கு அருகில் இருந்தும் தனிமையில் வாழும் ஒருவரை?

சில நேரங்களில் அவர்களுக்கு நம்மிடம் பெரிய உதவி தேவையில்லை. ‘எப்படி இருக்கிறீர்கள்?’ என்று ஒரு சிறிய புன்னகை. ஒரு நிமிட உரையாடல். ஓர் அன்பான அழைப்பு. சில நேரங்களில் ஒருவரைக் கவனிப்பதே அன்பின் செயலாகி விடுகிறது.

அந்த ஞாயிற்றுக்கிழமை காலியாக இருந்த அந்த நாற்காலியைப் பார்த்துக்கொண்டிருந்த அந்தப் பணியாளருக்கு ஒரு விசயம் புரிந்தது. அந்த நாற்காலியில் அமர்ந்திருந்த அந்த அம்மா, பல ஆண்டுகளாக எல்லாருக்கும் மிகவும் தெரிந்தவராக இருந்திருக்கலாம். ஆனால், அவரைப் பற்றி அவர்களுக்கு எவ்வளவு தெரியும்? அவர் யாருக்காகச் செபித்தார்? அவர் எந்தத் துயரத்தைச் சுமந்தார்? அவருடைய வாழ்க்கையில் யார் இருந்தார்கள்?அவருடைய இதயத்தில் என்ன இருந்தது? அவரை அவர்கள் பார்த்தார்கள்; ஆனால், ஒரு வேளை அவரை உண்மையாகப் பார்த்ததே இல்லை.

நம் வாழ்க்கையிலும் இப்படிப்பட்டகாலியான நாற்காலிகள்ஒருநாள் வரலாம். நாம் தினமும் பார்த்த ஒருவர் இல்லாதபோதுதான் அவருடைய இருப்பின் மதிப்பை உணரலாம். அதனால் அவர்கள் நம்முடன் இருக்கும்போதே அவர்களைப் பார்ப்போம். அவர்களின் முகத்தை மட்டும் அல்ல; அவர்களின் மனத்தையும்! அவர்களின் வார்த்தைகளை மட்டும் அல்ல; அவர்களின் மௌனத்தையும்! அவர்களின் வெற்றியை மட்டும் அல்ல; அவர்களின் போராட்டத்தையும்! ஏனெனில், இயேசுவின் பார்வை வெளிப்புறத்தைத் தாண்டிச் செல்கிறது. நாம் பார்க்க மறந்து போகிறவர்களையும் அவர் பார்க்கிறார். நாம் மதிப்பிடுகிறவர்களையும் அவர் அன்போடு அணைக்கிறார். நாம் கூட்டத்தில் ஒரு முகமாகக் கடந்து செல்கிறவர்களையும் அவர்களது பெயர்களால் அறிந்திருக்கிறார். அதனால் அடுத்த முறை நீங்கள் ஒருவரைக் கடந்து செல்லும்போது, சிறிது நேரம் நின்று பாருங்கள். ஒருவேளை... அவர் உங்கள் கவனத்திற்காக அல்ல; உங்கள் அன்பிற்காகக் காத்திருக்கலாம். இறைவனின் பார்வையில், கூட்டத்தில் யாரோ ஒரு முகம் மட்டுமல்ல!

news
சிறப்புக்கட்டுரை
பெண்ணியப் பார்வையில் காலநிலை மாற்றப் பேரிடர்கள் காலம்

சென்னை பெருவெள்ளத்தில் வீட்டிற்குள் ஏழு அடி உயரத்தில் தண்ணீர் புகுந்துவிட்ட நிலையில், பச்சிளம் குழந்தையுடன் மூன்று நாள்கள் கஞ்சியும் தண்ணீரும் குடித்து சமாளித்த பெண், காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளை மற்ற எல்லாரையும்விட நன்கறிந்தவர். தனது குழந்தைக்குத் தாய்ப்பால் இல்லாத நிலையில் தேவையான மருத்துவ உதவியைப் பெற்றுத் திரும்பும் வழியில் அழுக்கு நீர் சூழ நடந்து சென்ற காரணத்தால், அறுவை சிகிச்சை முடிந்து தையலிடப்பட்டிருந்த புண்ணில் தொற்று ஏற்பட்ட அனுபவம் கொண்ட பெண்களுக்குத் தெரியும் காலநிலை மாற்ற விளைவுகள் எப்படி இருக்கும் என்று.  இன்னும் 20-25 ஆண்டுகளில் நாகப்பட்டினம் மாவட்டமே இருக்காது என்ற கணிப்புகள் இருக்கிறபோது, நாகப்பட்டினம் மாவட்ட மக்களுக்குத் தெரியும் காலநிலை மாற்றம் ஏற்படுத்தப் போகும் கொடூரம் என்னவென்று!

உயரும் கடல்மட்டத்தால் தனது மூதாதையரின் நிலத்தை விட்டுவிட்டு எங்கோ ஓரிடத்தில் குடியேறி வாழும் காலநிலை அகதிகளுக்குத் தெரியும்... காலநிலை மாற்றம் வாழ்வாதாரங்களை அழித்து பேரழிவை ஏற்படுத்தும் என்று.

ஓர் ஊரில் திடீரென்று ஏற்படுகிற பெருவெள்ளத்தால் அந்த ஊரில் விவசாயம் செய்யும் ஒட்டுமொத்தப் பெண்களும் அந்த ஊரைக் காலி செய்யவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறபோது என்ன நடக்கும் அப்பெண்களுக்கு?

காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளைப் பொதுமைப்படுத்திப் பார்க்கும் அணுகுமுறையிலிருந்து பாலினச் சமத்துவ அணுகுமுறை, விளிம்புநிலை மக்கள் அணுகுமுறை, பழங்குடியினர் அணுகுமுறை, நிலமற்ற உழைக்கும் மக்கள் அணுகுமுறை, தலித் மக்கள் அணுகுமுறை எனப் பன்முகக்கோணங்களில் பார்க்கவேண்டியிருக்கிறது. ஏனெனில், காலநிலை மாற்றத்தின் பாதிப்புகள் அனைத்து நாடுகளிலும், அனைத்து மக்களுக்கும், அனைத்துப் பாலினத்தவருக்கும், அனைத்துச் சாதியினருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை என்பதிலிருந்து பன்முகப் பார்வை எவ்வளவு முக்கியம் என்பது நமக்குப் புலப்படும்.

காலநிலை மாற்றத்தால் வரும் பாதிப்புகள் விளிம்புநிலையில் இருப்பவர்கள், வறியவர்கள், ஒடுக்கப்பட்டச் சாதியைச் சார்ந்தவர்கள், சிறுபான்மையினர், பெண்கள், குழந்தைகள் போன்றவர்களையே அதிகம் பாதிக்கும் என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. காலநிலை மாற்றம் ஆண்களைவிட பெண்களுக்கு இரட்டிப்புச் சுமையை ஏற்படுத்துகிறது என்பதே உண்மை. காலநிலை மாற்றத்தால் இயற்கை பேரிடர்கள் அதிகம் நிகழும் கடலோர மாநிலங்களில் ஆண்களே வேலை தேடி அதிகதிகமாக இடம்பெயரும் சூழலில், குடும்பத்தின் முழு பொறுப்பும் பெண்கள் மீதே விழுகிறது. இது அவர்களுக்கு மன அழுத்தத்தையும், குடும்பத்தினரை அவர்களின் ஆரோக்கியத்தை முன்னிலைப்படுத்தும் சூழலையும் ஏற்படுத்துகிறது.

சில ஆய்வுகளின் உண்மைகளும் கணிப்புகளும்

காலநிலை புலம்பெயர்வின்போது இடம்பெயர்பவர்களில் 70% பெண்களே. பாகிஸ்தானின் 2010-இல் நேர்ந்த வெள்ளப்பாதிப்பில் இடமிழந்தோரில் 70%  பெண்களே. 2004-இல் இந்தியா, இந்தோனேஷியா, இலங்கையைத் தாக்கிய ஆழிப்பேரலையில் ஆண்களைவிட மூன்று மடங்கு பெண்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.

2040-இல் கங்கைச் சமவெளியிலிருந்து மட்டும் 40 இலட்சம் வேளாண் மக்கள் பயிர்த்தொழிலை இழந்து புலம்பெயர்வார்கள். காலநிலை மாற்றத்தின் பாதிப்பால் 15 இலட்சம் பெண் குழந்தைகளுக்குக் கட்டாயத் திருமணம் நடக்கும்.

உகாண்டாவில் 2014 முதல் 2018 வரையிலான வறட்சிக்காலத்தில் பெண்ணுறுப்பு சிதைவு, வன்புணர்வு அதிகரித்திருக்கின்றன.

2025, சனவரியில்நேச்சர்இதழில் வெளியான ஆய்வில், 2010 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் ஏழை மற்றும் வளர்ந்து வரும் நாடுகளில் வெள்ளப்  பாதிப்புகள் காரணமாக 1,07,888 பெண்கள் கருக்கலைப்பிற்கு ஆளானதாகக் கூறுகிறது. இந்தியாவில் 2015 முதல் 2021-க்குள் கருவிலேயே குழந்தை உயிரிழக்கும் விகிதம் 28.6% அதிகரித்ததாகக் கூறுகிறது.

யூனிசெப் அறிக்கையின்படி 2035-ஆம் ஆண்டிற்குள் காலநிலை பேரிடர்களால் 15.8 கோடி பெண்கள் தீவிர வறுமையில் தள்ளப்படுவார்கள். 23.6 கோடி பெண்கள் உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்வார்கள்.

காலநிலை மாற்றப் பேரிடர்களின்போது வருமானத்திற்காகப் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடும் போக்கும் அதிகரித்திருக்கிறது. 2021-இல் வெளியிட்ட விரிவான ஆய்வின்படி, விலைவாசியோ, வளங்களுக்கான போட்டியோ நிலவுகிறபோது, வேறு வழியில்லாமலோ அல்லது பிறரின் வற்புறுத்தலினாலோ பெண்கள் தங்கள் உடலை ஒரு பண்டமாக முன்வைக்கிறார்கள். கொல்கொத்தாவில் ஏற்பட்டஐலாபுயலின் (2009) பாதிப்பிற்குப் பிறகு, அங்கிருந்த பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கை 20 முதல் 25 விழுக்காடு அதிகரித்திருக்கிறது என்கிறார் மருத்துவர் ஸ்மரஜித் ஜனா.

பீகாரில் வெள்ளத்திற்குப் பின்னான காலகட்டங்களில், திருமணம் என்கிற பெயரில் பெண்களைப் பாலியல் தொழிலுக்காகக் கடத்துவது, குடும்ப வன்முறை, பெண்கள் மீதான பாலியல் தாக்குதல் அதிகரித்திருக்கின்றன.

காலநிலைப் பேரிடர்களின்போதெல்லாம் பெண்களுக்கெதிரான உடல் ரீதியான அல்லது பாலியல் வன்முறை 20 முதல் 30 விழுக்காடு வரை அதிகரிக்கிறது என்கிறார் ஒரு விஞ்ஞானி.

பெண்களுக்கு ஏற்படும் இரட்டிப்புச் சுமைகள்

இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர் பெருமளவு குறைந்துவிட்டதால் பெண்கள் 5 முதல் 10 கிலோ மீட்டர் வரை தண்ணீர் தேவையைப் பூர்த்திச் செய்ய பயணிக்க வேண்டியுள்ளது என்கிறார் காலநிலை செயல்பாட்டுக் குழுவைச் (CCAG) சார்ந்தவரான விஷ்வஜா சம்பத். வீட்டு வேலைகளிலும், சுத்தம் செய்வதிலும், தண்ணீர் சுமந்து வருவதிலும், அதிக தொலைவு பயணிப்பதிலும், மழைநீரைச் சேகரித்து வருவதிலும், குழந்தைகளைப் பேணுவதிலும், வீட்டு எரிசக்தி வளங்களைச் சேகரிக்கும் உழைப்பிலும், பேரிடர்களின்போது அடிப்படைத் தேவைகளைப் பெறுவதற்கும் பெண்களே மணிக்கணக்கில் ஈடுபடுகிறார்கள்.

உலகளவில் 70 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட தண்ணீர் சேகரிப்புப் பணிகள் மற்றும் நிர்வகிப்பதற்குப் பெண்களே பொறுப்பாக உள்ளனர்.

மத்திய குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, 2024 வரையில் இந்தியாவில் 17 மாநிலங்களில் 40 ஆயிரம் பேர் வெப்ப நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த 40,000 பேரைக் கவனிக்கும் பொறுப்பு சமூக அடுக்கில் பெண்களின் மேல் நீண்டகாலமாகச் சுமத்தப்பட்டுள்ளது. அதனால் பெண்களுக்கு ஏற்படும் உளவியல் சிக்கல்கள், மனஅழுத்தம், குடும்பச் சுமைகள் இன்னும் இரட்டிப்பாகும்.

வளிமண்டல மாசு அதிகரிப்பால் உலக அளவில் 30 கோடி பேர் ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளதாக இருக்கும்போது, இந்த 30 கோடி பேரையும் கவனிக்கும் பொறுப்பு யார்மீது விழும்? நோய்வாய்ப்பட்டவர்களையும், வயதானவர்களையும், சிறுவர்களையும் கவனிக்கும் பொறுப்பு, அவர்களுக்கு வேண்டிய மருத்துவச் சேவைகளைப் பெறச்செய்தல் எனக் குடும்பப் பணிச்சுமைகளைக் காலநிலைப் பேரிடர்கள் சாதியாலும் பாலின வேறுபாட்டினாலும் ஒடுக்கப்படுகின்ற பெண்களுக்கு இரட்டிப்பாக்கும் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது

காலநிலை மாற்றத் தணிப்பு நடவடிக்கைகளில் பாலினச் சமத்துவம்

காலநிலை மாற்றத் தணிப்பு நடவடிக்கைகளில் பாலினச் சமத்துவமின்மை பெரும் சவாலாக இருப்பதாக, ‘பப்ளிக் லைப்ரரி ஆப் சயின்ஸ்இதழில் வெளியான ஓர் ஆய்வுக்கட்டுரை குறிப்பிடுகிறது. கடந்த டிசம்பர் மாதம் நடந்த 29-வது காலநிலை உச்ச மாநாட்டில் காலநிலை செயல்முறையில் பாலினச் சமத்துவத்தை ஊக்குவிப்பதற்கான .நா. திட்டத்தை (Lima Work Programme on Gender) மேலும் பத்து ஆண்டுகளுக்கு நீடிக்கத் திட்டமிட்டுள்ளது.

பேரிடர் நிவாரணக் குழுக்களில் பெண்கள் இல்லை. தேசிய அளவிலும், உலக அளவிலும் காலநிலை குறித்த பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கும் பெண்களின் விகிதம் 30 விழுக்காட்டிற்கும் குறைவாகவே உள்ளது என்கிறார் சூழலியல் அறிஞர் டயானா லிவர்மன். கல்வி மற்றும் நிதி ஆதாரங்களை அணுகுவது விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்த பெண்களுக்குப் பெரும் சவால். காலநிலை பாதிப்புகள் இருபாலாருக்கும் சமமாக இல்லை, காரணம், சமூகக் கட்டமைப்பில் நிலவும் பாலினச் சமத்துவமின்மையே என்கிறார் மினிகோவிந்தன்.

பாலினக் கண்ணோட்டங்களைக் காலநிலை உத்திகளில் புகுத்துவதோடு, முடிவெடுக்கும் செயல்முறைகளில் பெண்களுக்குச் சமமான பிரிதிநிதித்துவம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தொழில்நுட்பத் தீர்வுகளைவிட சமூக அளவிலான பாலின, வர்க்க, சாதி, இனம் சார்ந்த தனித்தனித் தீர்வுகள் முக்கியம்.

சமூகப் பார்வை இல்லாத சூழல் பாதுகாப்பு, பெண்ணியப் பார்வை இல்லாத காலநிலைத் தீர்வுகள், ஒடுக்கப்பட்டவர்களைப் பேசாத மேட்டிமை உரையாடல்கள், சமூக ஏற்றத்தாழ்வுகளைக் களையாத தொழில்நுட்பத் தீர்வுகள், சாதி, வர்க்கம், பாலினம் இவைகளைக் கணக்கில் எடுக்காது மேற்கொள்ளப்படும் பேரிடர் தடுப்பு, மட்டுப்படுத்துதல், மீள்திறன் நடவடிக்கைகள் அனைத்துமே வேண்டிய மாற்றங்களை ஏற்படுத்தாது. காலநிலை மாற்றத்திற்கு எந்தவிதத்திலும் காரணமில்லாத ஒரு பாலின வர்க்கம் காலநிலை மாற்றத்தின் பேரிடர்களால் ஒடுக்கப்படுவது காலநிலை நீதிக்கு எதிரானது. காலநிலைப் பேரிடர்களுக்குக் காரணமானவர்கள் தீர்வுகளை முன்மொழிவதைவிட, பாதிக்கப்பட்டவர்கள் தீர்வுகளை முன்வைப்பதே காலநிலை நீதி.

news
சிறப்புக்கட்டுரை
வாரம் ஒரு குறள் – 10

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்

தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று (குறள் 11)

குறள் விளக்கம்: மழை பெய்வதால், உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்.

சிந்தனை: அமிழ்தம் என்பது, அழியாது அமரத்துவம் தரவல்லது. அழிவின்மைஅமிர்தாஎன்ற வடமொழிச் சொல்லிலிருந்து வந்த அயற்சொல் ஆகும். பஞ்சம் - பட்டினிச் சாவுக்கு மழையின்மையே முக்கியக் காரணம். பூமியைச் செழிப்பாக்கி வாழ்வளிப்பது மழை என்பதால் அதனை அமரத்துவம் வாய்ந்த அமிழ்தத்திற்கு ஒப்பிட்டுப் பேசுகிறார் வள்ளுவர்.

இராஜஸ்தானில் குஜார் என்ற பழங்குடியினரிடம், “உங்கள் ஊரில் மழை எப்படி?” என்று கேட்டபோது, “நல்ல மழை ஐயாஎன்றனர்.

சென்ற வருடம்?”

எல்லா வருடமும் நல்ல மழைதான்...”

அது எப்படி?”

நல்ல மழை பெய்கிற இடத்திற்குக் குடிபெயர்ந்துவிடும் மாடுகளை மேய்க்கும் நாடோடிகள் நாங்கள் ஐயாஎன்றனர்.

மழையை நாடி மனித வாழ்வு உள்ளது. நீருள்ள இடங்களிலேயே நாகரிகம் பிறந்தது. இதிலிருந்து மழையின் முக்கியத்துவத்தை உணரலாம்.

எசாயா இறைவாக்கினரும்மழையும் பனியும் வானத்திலிருந்து இறங்கி வருகின்றன. அவை நிலத்தை நனைத்து, முளை அரும்பி வளரச் செய்து, விதைப்பவனுக்கு விதையையும், உண்பவனுக்கு உணவையும் கொடுக்காமல், அங்கு திருப்பிச் செல்வதில்லை (எசா 55:10) என்று குறிப்பிடுகின்றார்இறைவனின் இருப்பிடமாகிய வானகத்திலிருந்து பொழிவதனால் மழையை இறைவனின் கருணையாகவும் அருளாகவும் எண்ணி வியக்கிறோம்.

வானம் எனக்கு ஒரு போதி மரம்; நாளும் எனக்கு அது சேதி தரும்என்று தனது அனுபவத்தை ஒரு கவிஞன் அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளான். வானம் ஓர் அற்புதம். அதனை இரவும் பகலும் இரசிப்பதும் ஆராய்வதும் அலாதி இன்பம்!

இயற்கை மனத்தைச் செம்மைபடுத்தும் திறந்தவெளிப் பள்ளிகள்என்பார் வில்லியம் வோர்ட்ஸ் வொர்த். அந்த அளவிற்கு ஆச்சரியங்களையும் புதிய சிந்தனைகளையும் தர வல்லதுவான்சிறப்புஎன்ற இந்த அதிகாரம்மேலும், வானகத் தந்தையையும், மாட்சிமிக்க அவரது படைப்புகளையும் வியந்து பார்க்க நம்மைத் தூண்டுகிறது.

இயற்கை மனிதனது தேவைக்கென்று பல நன்மைகளைத் தருகிறது. மனிதர் தன் சுயநலத்திற்காக அதைச் சீரழிக்கக்கூடாதுஎன்கிறார் காந்தியடிகள்.

இலவசமாக இயற்கை வழங்கும் இன்பங்களை அனுபவிக்க அனைவருக்கும் உரிமை உண்டு. சுயநலத்திற்காக அதனை மனிதன் அழிக்கிறான். காடுகளை அழித்து மழையைத் தடுக்கிறான். அதனால் பஞ்சத்தையும் பட்டினியையும் வரவழைக்கின்றான்.

படைப்புப் பொருள்களில் பரமன் இருக்கின்றார். படைப்புப் பொருள்களைப் பார்த்துப் பரம்பொருளை நாம் அறிந்துகொள்ள முடியும் என்கிறது திருமறை.

கொடுத்தல், செழிப்பாக்குதல், வாழ்வளித்தல், வளமாக்குதல் போன்ற பல நல்ல காரியங்களை நாம் இயற்கையிலிருந்து கற்றுக்கொள்வோம்.

news
சிறப்புக்கட்டுரை
எண்ணம் எனும் இயந்திரம் (ஏற்றம் தரும் எண்ணங்கள் – 10)

‘எண்ணங்கள் எங்கிருந்து வருகின்றன?’ எனும் கேள்வி இயல்பான ஒன்று. அதற்குச் சரியான விடை என்பது மலைப்பான ஒன்று. சரி, எங்கிருந்துதான் அது உருவெடுத்து நம்மை ஆட்டிப்படைக்கிறது? எனும் பேராவல் நமக்குள் எழுகிறதுதானே! அதைப் பற்றிய தேடல் அல்ல, புரிதலில் சற்று இறங்குவோம்.

இந்தப் புரிதல் ஒவ்வொருவருக்கும் மாறுபடும் எனக் கூறமுடியாது. இது பொதுவான ஒன்றுதான். அதை எடுத்துக்கொள்ளும் விதம் மனிதருக்கு மனிதர் மாறுபடும். ஓசோ அவர்கள் கூறுவதுபோல, “சொல் எனது, பொருள் உனது எனும் வரிகளைச் சற்று நினைவில்கொள்வோம். ‘அவரு மனசு வச்சாதான் நடக்கும், ‘மனசு சரினு சொல்லாத எதையும் நான் செய்யவே மாட்டேன், ‘அவ என்னதான் சொன்னாலும் என்னோட மனசு ஏத்துக்க மாட்டிக்கிது, ‘மனம் கோணாம இத நீங்க எனக்காகச் செஞ்சு கொடுத்தீங்கனா புண்ணியமா போகும், ‘மனம் போன போக்குல வாழ்ந்துராத எனும் நம்மீது நல்லெண்ணம் கொண்டவர்களின் எச்சரிக்கை என இதுபோன்ற பல சொற்றொடர்கள் அங்குமிங்கும் கேட்ட வண்ணம் இருக்கும்.

இங்கு ஒன்றை நாம் கவனித்தே ஆகவேண்டும். ‘எனக்கு மனசு சரி இல்ல, நாளைக்கு வேணும்னா இத செஞ்சு தறேன் என்றுதான் நாமும் பிறரும் கூறுவது வழக்கம். யாருமே ‘எனக்கு மூளை சரியில்ல, நாளைக்கு வா பாத்துக்கலாம் என ஒருபோதும் கூறுவதில்லை. அப்படி என்றால் எண்ணங்கள் பிறக்கும் இடம் மூளையா? மனதா? மூளையும் மனதும் வெவ்வேறா? வாங்க, இது பற்றி அலசுவோம்.

நான் முதுகலை உளவியல் படித்தபோது இதைப் பற்றிய தேடல் அதிகமானது. எண்ணங்கள் எங்கிருந்து வருகிறது? அது நம்மைக் கட்டுப்படுத்துகிறதா? நாம் அதைக் கட்டுப்படுத்த முடியுமா? எனும் கேள்வி, ஆர்வம் இருந்துகொண்டே இருந்தது. மனிதனும் மற்ற உயிரினங்களும் வேறுபடும் ஒரே ஒரு புள்ளி. அது சிந்தனையின் (எண்ணங்கள்) மூலம் மட்டுமே.

அப்படி என்றால் சாப்பிடவேண்டும் எனும் எண்ணம் பிற உயிரினங்களுக்கு வரவே வராதா? வரும்! அது எண்ணம் அல்ல; உள்ளுணர்வு என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

மனிதன் பல வியக்கத்தக்க வகைகளில் பல இயந்திரங்களை உருவாக்கியிருக்கிறான். ஒரு நொடியில் விடை தரும் கணினிகள், சிக்கலான பணிகளைச் செய்து முடிக்கும் ரோபோக்கள், எங்கிருந்தோ பேசும் குரலை நொடிப்பொழுதில் நாம் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டே கேட்கும் விந்தை, அளவற்றத் தகவல்களை அள்ளித்தரும் செயற்கை நுண்ணறிவு எனத் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே இருக்கிறது. ஆனால், மனிதன் உருவாக்கிய எந்த இயந்திரத்தையும்விட அற்புதமான ஓர் இயந்திரம் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கிறது. அதுதான் மனம்! அங்கிருந்துதான் சிந்தனை (எண்ணங்கள்) உருவாகிறது.

சிந்தனை கண்ணுக்குத் தெரியாது; அதற்கு உருவமில்லை. ஆனால், அது உருவாக்கும் மாற்றங்கள் நம் கண்முழி பிதுங்கி ஆச்சரியம் கொள்ளும் அளவிற்கு நம் முன்னே வந்து உருவெடுத்து நிற்கும்.

ஒரு கட்டடம் முதலில் கட்டடக் கலைஞரின் மனத்தில் ஓர் எண்ணமாகத்தான் உருவாகிறது. ஒவ்வோர் அறிவியல் கண்டுபிடிப்பும் பல நேரங்களில், ‘இப்படிச் செய்தால் என்ன ஆகும்?’ என்ற ஒரு சிறிய சிந்தனையின் மூலமே தொடங்குகிறது. இப்படி எல்லாமே முதலில் ஒரு சிந்தனையாகத்தான் பிறக்கிறது. மனிதன் உருவாக்கும் ஒவ்வோர் இயந்திரத்திற்கும் மாற்றாக மற்றொன்றை அவனே உருவாக்க முடியும். ஏனென்றால், அவனது கூர்தீட்டிய சிந்தனை அவ்வளவு வலிமை வாய்ந்தது!

மனிதனால் இதுவரை இல்லாத ஒன்றையே கற்பனை செய்ய முடியும். கற்பனை செய்தல், கேள்வி எழுப்புதல், தொடர்புபடுத்திப் பார்த்தல் மற்றும் புதியதை உருவாக்குதல் ஆகிய திறன்களே மனிதச் சிந்தனையின் மிகப்பெரிய வலிமை.

நமது சிந்தனை எப்போதும் நல்லதையே உருவாக்குவதில்லை. ஒரு நல்ல செயலுக்கான எண்ணத்தை உருவாக்கும் அதே மனம்தான், பயம், வெறுப்பு மற்றும் அழிவையும் உருவாக்கும். ஒரு நேர்மறையான அல்லது எதிர்மறையான எண்ணத்தை மீண்டும் மீண்டும் நினைத்துக் கொண்டிருந்தால், அது ஒரு நம்பிக்கையாக மாறும். அந்த நம்பிக்கை நமது மனப்பான்மையை மாற்றும்; மனப்பான்மை நமது நடத்தையை மாற்றும். இப்படியாக, நமது எண்ணங்கள் அமைதியாக நமது குணத்தையும் வாழ்க்கையையும் வடிவமைக்கின்றன.

ஒரே பிரச்சினையை இரு மனிதர்கள்  எடுத்துக்கொண்டால், ஒருவர் ‘இது முடியும் என்றும், மற்றொருவர் ‘முடியாது என்றோ ‘கடினம் என்றோ நினைக்கலாம். இருவருக்கும் பிரச்சினை ஒன்றுதான். ஆனால், அவர்களின் முடிவுகள் முற்றிலும் மாறுபடும். இதற்கு அடிப்படை அவர்களின் சிந்தனைதான். மற்றொரு வியப்பூட்டும் செய்தி, சிந்தனைக்குக் காலத்தையும் கடந்து செல்லும் ஓர் அற்புதமான திறன் உண்டு. நினைவுகளின் மூலம் நாம் கடந்த காலத்திற்குச் செல்ல முடியும். கற்பனையின் மூலம் எதிர்காலத்தைப் பார்க்க முடியும். நேற்றிலிருந்து பாடம் கற்று, இன்றைய நாளை வாழ்ந்து, நாளைக்குத் திட்டமிட முடியும். இவை அனைத்தும் ஒரு சிந்தனையின் வழியாகவே நடைபெறுகின்றன. எனவே, மனித மனம் ஒருபுறம் அனுபவங்களின் நூலகமாகவும், மறுபுறம் எதிர்காலத்தை உருவாக்கும் ஆய்வுக்கூடமாகவும் இருக்கிறது.

அதிவேகமாக வளர்ச்சி காணும் இவ்வுலகில் இயந்திரங்கள் மிகப்பெரிய திறனைப் பெற்றுள்ளன. ஆனால், அதற்கெல்லாம் சவால்விடும் மாபெரும் இயந்திரம் எதுவென்றால், அது மனித மனம்தான். எனவே, நாம் செய்ய வேண்டிய மிகப்பெரிய முதலீடு தொழில்நுட்பத்தில் மட்டுமல்ல; நமது சிந்தனையின் தரத்திலும் இருக்கவேண்டும்.

வாசிப்பது சிந்தனையை விரிவுபடுத்தும்; கற்றுக்கொள்வது அறிவை வளர்க்கும்; கேள்வி கேட்பது புரிதலை ஆழப்படுத்தும்; சுயபரிசோதனை சிந்தனையைத் தெளிவுபடுத்தும்; ஒழுக்கம் சிந்தனைக்குக் கட்டுப்பாட்டை வழங்கும்; படைப்பாற்றல் அதற்குப் புதிய பாதைகளைத் திறக்கும்; அன்பும் மனிதநேயமும் அதற்குச் சரியான திசையைக் காட்டும்.

நமது எண்ணங்கள் நமது செயல்களுக்கான விதைகளாகின்றன. நம்மைச் சுற்றி நடக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் நம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால், அந்த நிகழ்வுகளுக்கு நாம் எப்படிப் பதிலளிக்கவேண்டும் என்பதை நமது சிந்தனையின் மூலம் தீர்மானிக்க முடியும்.

எனவே, மனிதன் உருவாக்கிய மிகப்பெரிய இயந்திரம் கணினியோ, ரோபோவோ, வாகனமோ அல்ல; அது இயற்கை நமக்களித்திருக்கும் நம் மனம்தான்... அதுதான் சிந்தனை எனும் இயந்திரம். இதற்குக் கம்பிகளும் இல்லை, தடயங்களும் இல்லை. பயன்படுத்தத் தேவையான தெளிவான கையேடும் இல்லை. ஆனால், அதை அறிவுடனும் தெளிவுடனும் ஒழுக்கத்துடனும் இருக்கப் பழக்கிவிட்டால், அது ஒரு மனிதனின் வாழ்க்கையை மட்டுமல்ல, முழு உலகத்தையே மாற்றக்கூடிய பேராற்றலாக மாறும்.

இவ்வளவு அதிமுக்கியத்துவம் வாய்ந்த மனம் எங்கு உள்ளது? அது எப்படிச் செயல்படுகிறது? எனும் ஆவல் வேகமெடுத்து இருக்கும்; இது பற்றி அடுத்த வாரம் காண்போம்.

மனமும் பணமும் எத்தனை அடி பாயும்?’ என்று எவருக்குமே தெரியாது.  

(தொடர்ந்து பயணிப்போம்...)