news
சிறப்புக்கட்டுரை
பேச்சுரிமை (வலையும் வாழ்வும் – 46)

மல்லிகா பேகம் சாலையோர இட்லிக்கடை ஒன்றை நடத்தி வந்தாள். இளம் வயதிலேயே காதல் திருமணம் செய்துகொண்டதால், அவளை அவளுடைய குடும்பத்தில் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரே ஊரில் இருந்தபோதும் இன்றுவரை அக்குடும்பத்திலிருந்த யாரும் அவளோடு பேசுவதில்லை.

பள்ளத்தில் உருண்டோடும் சக்கரத்தைப்போல ஆண்டுகள் பல வேகமாகத் தலைதெறிக்க ஓடிவிட்டன. ஆனாலும், இரு குடும்பத்தாருக்கும் இடையே இருந்த கோபம் மட்டும் தீரவில்லை.

மல்லிகாவிற்கு இப்போது நாற்பது வயதிருக்கும். பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைத்திருந்தாள். ஆனாலும், தனக்கும் தன் குடும்பத்திற்கும் சோறுபோட்ட இந்தச் சாலையோர இட்லிக்கடையை மட்டும் விட்டுச்செல்ல அவளுக்கு மனம் வரவில்லை.

காலையிலும் மாலையிலும் மட்டும் இட்லிக் கடை திறந்திருக்கும். மாவாட்டுவது, இட்லி சுடுவது, சந்தைக்குச் சென்று பொருள்கள் வாங்குவது என்று அவளுடைய வாழ்க்கை எப்போதும் ஆவியாய் பறந்து கொண்டிருந்தது. அவளுடைய கணவரும் பிள்ளைகளும் மாமியாரும் அவ்வப்போது உதவி செய்வதுமுண்டு.

மல்லிகா பேகத்தின் அண்ணன், அவர் மகள் பாத்திமாவைத் தேர்வு நாள்களில் பள்ளிக்குத் தன் பைக்கில் வைத்து அழைத்துச்செல்வார். சீக்கிரம் செல்லவேண்டும் என்பதால் வேறு வழியில்லாமல் மல்லிகாவின் கடையில்தான் இட்லி வாங்கிச்செல்வார்கள். ஆனால், அவர்களுக்குள் ஒட்டுமில்லை, உறவுமில்லை என்பதுபோல இருப்பார்கள். அந்த ஊரில் வேறுகடை இல்லையென்பதால், மல்லிகாவிடமே இட்லி வாங்கவேண்டிய கட்டாயமும் அவர்களுக்கு இருந்தது. ஆனாலும், மல்லிகா தன் அண்ணன் மகளுக்கு இட்லி பொட்டலத்தில் கூடுதலாக இட்லி ஒன்றையோ அல்லது வடை ஒன்றையோ வைக்காமல் இருந்ததே இல்லை.

ஒருநாள் தன் போனில் கியூ.ஆர். கோடு வழியாகப் பணம் செலுத்திக்கொண்டிருந்த பாத்திமாகியூ.ஆர். கோடுல காசு போகல, அப்பா! உங்ககிட்ட இருபது ரூபாய் சில்லறை இருக்குமா?’ என்று பக்கத்துப் பெட்டிக்கடையில் நின்றுகொண்டு பீடி பிடித்துக்கொண்டிருந்த தன் அப்பா மன்சூரிடம் கேட்டாள் பாத்திமா.

தன் சட்டைப் பாக்கெட்டைப் பார்த்துக்கொண்டேஇல்லையேமாஎன்றார் மன்சூர். தான் விரோதம் பாராட்டும் தன் தங்கையிடமிருந்து எப்படி ஓசிக்கு இட்லி வாங்குவது? மன்சூருக்கு ஏதோபோல் இருந்தது.

காசில்லனா பிரச்சினையில்ல, நாளைக்கு வரும்போது கொடுமாஎன்று இட்லிப் பொட்டலத்தை எடுத்து பாத்திமாவின் கைகளில் திணித்தாள் மல்லிகா பேகம்.

பாத்திமாவிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. இட்லிப் பொட்டலத்தை வாங்கவா? அல்லது வேண்டாமா? என்று எண்ணிக் கொண்டிருந்தபோதே, ‘ஓடிப்போனவ கையிலிருந்து பிச்சையெடுக்கவா உன்ன பெத்தேன்?’ என்று சொல்லிக்கொண்டே பாத்திமாவின் கையிலிருந்த இட்லிப் பொட்டலத்தை வாங்கி கீழே வீசியெறிந்தார் மன்சூர்.

தரையில் விழுந்து கட்டவிழ்ந்து சிதறிக்கிடந்த இட்லிப் பொட்டலத்தைப்போல எத்தனையோ ஆண்டுகளாகக் கட்டிவைக்கப்பட்டிருந்த அவர்களின் கோபம் பெரும் சண்டையாக வெடித்தது.

சண்டையைப் பலரும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். வார்த்தைப் போர் எப்போது முடியும் என்பது யாருக்கும் தெரியவில்லை. பாத்திமாவிற்குக் கடைசித் தேர்வு எழுதச் செல்ல நேரமாகிறது. என்ன செய்வதென்று அறியாமல் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டே பசியில் நின்றுகொண்டிருந்தாள் பாத்திமா.

பேசாமலிருப்பது எவ்வளவிற்குப் பிரச்சினையை வருவிக்குமோ, அதேபோல அதிகமாகத் தேவையற்றதைப் பேசுவதும் பல்வேறு இக்கட்டுகளையும் பிளவுகளையும் கொண்டுவரும். பேச்சுரிமை என்பது இந்திய நாட்டினுடைய அரசமைப்புச் சட்டம் அதன் குடிமக்களுக்குத் தரும் சட்டப் பாதுகாப்பு எனலாம். இந்திய அரசமைப்பின் 19(1)(a) பிரிவானது, அனைத்துக் குடிமக்களுக்கும் பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமையை உறுதி செய்கிறது. இதன் மூலம் அவர்கள் பேச்சு, எழுத்து, அச்சு அல்லது ஊடகங்கள் மூலம் தங்கள் கருத்துகளைச் சுதந்திரமாக வெளிப்படுத்த அனுமதிக்கப்படுகிறார்கள். இந்திய அரசமைப்பின் பிரிவு 19(2)-இன் அடிப்படையில் சில வரம்புகளும் உள்ளன. இதன் அடிப்படையில் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு (Sovereignty and integrity of India), மாநிலத்தின் பாதுகாப்பு (Security of the State), வெளிநாடுகளுடனான நட்புறவு (Friendly Relations with Foreign Nations), பொது ஒழுங்கு (Public Order), கண்ணியம் அல்லது ஒழுக்கம் (Decency or Morality), நீதிமன்ற அவமதிப்பு (Contempt of Court), அவதூறு (Defamation), ஒரு குற்றத்திற்குத் தூண்டுதல் (Incitement to an offense) போன்றவைகளுக்குக் குந்தகம் அல்லது விதிமீறல் ஏற்படாதவாறு பேச்சுரிமை மற்றும் கருத்துச்சுதந்திரம் இருக்க வேண்டும் என்பதை இச்சட்ட வரம்பு எடுத்துரைக்கிறது. எனினும், ‘தி பியூச்சர் ஆப் ப்ரீ ஸ்பீச் (The Future of Free Speech) அமைப்பின் 2025-ஆம் ஆண்டுக்கான பேச்சுரிமைக் குறியீட்டில் இந்தியா 62.6 புள்ளிகளைப் பெற்று 33 நாடுகளில் 24-வது இடத்தைப் பிடித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு வலுசேர்க்கும் விதத்தில் மார்ச் 23, 2026 அன்றுதி இந்துபத்திரிகை வெளியிட்டுள்ள கட்டுரையில், 2014 முதல் 2021 வரை முடக்கப்பட்ட URL மற்றும் இணையதளக் கணக்குகளின் எண்ணிக்கை 470-லிருந்து 9,800-ஆக உயர்ந் துள்ளது என்கிறது. அதிலும் குறிப்பாக, மத்திய அரசுக்கு எதிராகக் கருத்து கூறுபவர்களின் இணையதளக் கணக்குகள் முடக்கப்படுவதாக அக்கட்டுரை செய்தி வெளியிட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000-இன் பிரிவு 69A-படி, அரசு ஒரு கணக்கை முடக்க வேண்டுமெனில், அதற்கான சரியான காரணங்களை வழங்கவேண்டும்; ஆனால், 2009-ஆம் ஆண்டின் விதி 16-ஐப் பயன்படுத்தி இணைய தளத்தை முடக்கும் நடவடிக்கைகளை அரசு இரகசியமாக வைக்கிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தங்கள் கணக்கு ஏன் முடக்கப்பட்டது என்ற காரணம் தெரியாததால், அவர்களால் நீதிமன்றத்தை நாட முடிவதில்லை.

ஒரு நபரின் முழு சமூக ஊடகக் கணக்கை அல்லது இணைய தளத்தை முடக்குவது என்பது அவரை டிஜிட்டல் முறையில் அந்நியப்படுத்துவதற்குச் (Digital Exile) சமம். இது கருத்துச் சுதந்திரத்தைப் பறிப்பதோடு, ஒரு நல்ல சனநாயகத்திற்குப் பதிலாக அதிகாரத்துவ ஆட்சிக்கே வழிவகுக்கும் என்று இக்கட்டுரை எச்சரிக்கிறது.

news
சிறப்புக்கட்டுரை
‘ரீல்சில்’ வாழும் வாழ்க்கை!

திரையில் ஆயிரம் கதைகள் ஓடுகின்றன; ஆனால், சொல்லப்படாத ஒரு கதை மட்டும் இதயத்தின் உள்ளே அமைதியாக வாழ்கிறது.

இன்று உலகம் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால், அந்த வேகத்தில் அதிகமாக ஓடிக்கொண்டிருப்பது மனிதன் அல்ல; அவனது விரல்கள்.

ஒரு திரையைஸ்க்ரோல்செய்யும் அந்தச் சில விநாடிகளில் நாம் சிரிக்கிறோம், ஆச்சரியப்படுகிறோம், பொழுதைக் கழிக்கிறோம். ஆனால், ஒரு நிமிடம் அமைதியாகச் சிந்தித்துப் பார்த்தால், நாம் உண்மையில் வாழ்கிறோமா? அல்லது திரையில் காட்டப்படும் வாழ்க்கையை மட்டும் பார்த்துக்கொண்டிருக்கிறோமா?

இன்றைய இளையோரின் வாழ்க்கையில்ரீல்ஸ்என்பது ஒரு பொழுதுபோக்கு மட்டுமல்ல; அது ஒரு பழக்கமாகவும், சிலருக்கு அது ஒரு தப்பிக்கும் உலகமாகவும் மாறிவிட்டது. ஒரு நிமிட வீடியோ நமக்குச் சிரிப்பைக் கொடுக்கலாம். ஆனால், அந்த வீடியோ முடிந்தபின் நம் இதயத்தில் இருக்கும் வெறுமையை அது நிரப்புகிறதா? நேரத்தைச் செலவிடுகிறோம் என்று நினைக்கிறோம்; ஆனால், பல நேரங்களில் நேரம்தான் நம்மை மெதுவாக எடுத்துச் செல்கிறது.

இன்று உண்மை முகத்தைவிடபில்டர்போட்ட முகமே அதிகமாகப் பார்க்கப்படுகிறது. சமூக வலைதளங்களில் எல்லாரும் அழகாகவும் மகிழ்ச்சியாகவும் நம்பிக்கையுடனும் இருப்பது போலத் தெரிகிறார்கள். ஆனால், உண்மை வாழ்க்கை அப்படி இருக்கிறதா?

சில இளையோர் மன அழுத்தத்துடன் போராடுகிறார்கள். சிலர் தனிமையில் வாழ்கிறார்கள். சிலருக்குப் பேசவதற்குக்கூட யாரும் இல்லை. ஆனால், சமூக வலைதளத்தில் ஒருஸ்மைல்போதும் - எல்லாமே சரியாக இருப்பதுபோலத் தெரிகிறது.

ஒரு புகைப்படத்திற்குப் பலமுறை போஸ் கொடுக்கிறோம். ஆனால், நம்முடைய உண்மையான உணர்ச்சிகளுக்கு ஒருபோதும் நேரம் கொடுக்கிறோமா? திரையில் புன்னகை இருக்கலாம்; ஆனால், இதயத்தில் அமைதி இருக்கவேண்டும். சமூக வலைதளம் நம்மை இணைக்கிறது. ஆனால், சில நேரங்களில் அது நம்மை நம்மிடமிருந்து பிரித்துவிடுகிறது.

இன்று ஓர் உணவகத்திற்குச் சென்றால், உணவைச் சாப்பிடுவதற்கு முன் அதைப் படம் எடுப்பது வழக்கமாகிவிட்டது. உணவை இரசிப்பதற்கு முன், அதுஸ்டோரிஆகப் போகிறதா? என்று பார்க்கிறோம்ஒரு காலத்தில் உணவு என்பது குடும்பத்தோடு பகிர்ந்த தருணம். இன்று அது புகைப்படமாக மாறிவிட்டது. நாம் உணவை உண்பதைவிட, வாழ்க்கையைக் காட்டிக்கொள்வதில் அதிக நேரம் செலவிடுகிறோம்.

இது இணைப்பைப்போலத் தோன்றலாம். ஆனால், உண்மையில் இது ஒரு தனிமையின் ஆரம்பமாக இருக்கலாம். நம்மைச் சுற்றி மக்கள் அதிகமாக இருக்கலாம்; ஆனால், நம்மைப் புரிந்துகொள்ளும் ஒருவர் இல்லாதபோதுதான் தனிமை உணரப்படுகிறது. இன்றைய இளையோரின் மிகப்பெரிய போராட்டங்களில் ஒன்று ஒப்பீடு. மற்றொருவரின் வாழ்க்கையைப் பார்த்து, நம்முடைய வாழ்க்கையைக் குறைவாக நினைப்பது மிகவும் சாதாரணமாகிவிட்டது. யாரோ ஒருவர் வெளிநாடு செல்கிறார். யாரோ ஒருவர் புதிய சாதனையை அடைகிறார். யாரோ ஒருவர் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது போலத் தெரிகிறார். அதைப் பார்த்து நம்முள் எழும் கேள்வி: ‘என் வாழ்க்கை மட்டும் ஏன் இப்படி?’

ஆனால், நாம் மறந்துவிடுவது ஒன்று: சமூக வலைதளங்களில் யாரும் தங்களது கண்ணீரைப் பகிர்வதில்லை. அவர்கள் காட்டுவது அவர்களின் சிறந்த தருணங்கள் மட்டுமே. நம்முடைய உண்மையான வாழ்க்கையைப் பிறரின்ஹைலைட்வீடியோவுடன் ஒப்பிட ஆரம்பித்தால், நம் மன அமைதி மெதுவாக மறைந்துவிடும். பிறரின் வாழ்க்கையைப் பார்த்து உங்கள் மதிப்பைத் தீர்மானிக்காதீர்கள்; கடவுள் உங்களுக்காகத் தனித்த பாதையை உருவாக்கியிருக்கிறார்.

இன்றைய தலைமுறை மிகவும் திறமையானது. அவர்கள் கனவுகள் கொண்டவர்கள், மிக வேகமாகக் கற்றுக்கொள்கிறார்கள். ஆனால், அவர்களுக்குள் ஓர் அமைதியான தேடலும் இருக்கிறது. அது அன்புக்கான தேடல். அது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய தேடல்.

அது யாராவதுநீ முக்கியமானவன்என்று சொல்லவேண்டும் என்ற தேடல். சில நேரங்களில்லைக்எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், மனத்தில் வெறுமை இருக்கலாம். ஏனெனில், மனித இதயம் தொழில்நுட்பத்தால் நிரம்பாது. அது உறவுகளாலும் அன்பாலும் இறைநம்பிக்கையாலும்தான் நிரம்பும்.

இளையோருக்கு இன்று தேவைப்படுவது வெறும் பொழுதுபோக்கு அல்ல; ஒரு திசை, ஒரு நம்பிக்கை, ஓர் உள்ளார்ந்த அமைதி. மனிதன் வெளியில் வெற்றியைத் தேடுகிறான்; ஆனால், அமைதி உள்ளத்தில் மட்டுமே கிடைக்கும்.

எவ்வளவு டிஜிட்டல் உலகத்தில் வாழ்ந்தாலும், மனித இதயம் தேடுவது உண்மையான உறவுகளையும், நேர்மையான உரையாடல்களையும்தான். ஒரு முறை போனை விட்டு விலகி அமர்ந்து பாருங்கள். மழை பெய்யும் சத்தத்தைக் கேளுங்கள். அம்மாவுடன் பேசுங்கள். நண்பரிடம் உண்மையாகநீ எப்படி இருக்கிறாய்?’ என்று கேளுங்கள். அந்தத் தருணங்களில்தான் வாழ்க்கை நம்மைத் தொடுகிறது.

சில நேரங்களில் நாம் தேடும் அமைதி, இணையத்தில் கிடைக்காது; அது அமைதியான வேண்டுதலில் கிடைக்கும். இன்றைய இளையோருக்கு ஒரு நிமிட அமைதியும், ஒரு சிறிய இறைநேரமும் மிகவும் அவசியம். திரையை அணைக்கும்போதுதான், இதயம் பேசத் தொடங்குகிறது.

இறைவன் மனிதனை உருவாக்கியது ஒரு திரைக்காக அல்ல; ஓர் உறவுக்காக! நாம் உலகத்தோடு இணைந்திருக்கலாம்; ஆனால், இறைவனோடு இணைந்திருக்கிறோமா? திருவிவிலியம் கூறுகிறது: “அமைதியை உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் தருவது போல அல்ல (யோவா 14:27). இந்த வசனம் இன்று இளையோருக்கான ஒரு பதில். உலகம் பொழுதுபோக்கைத் தரலாம், புகழைத் தரலாம், கவனத்தைத் தரலாம். ஆனால், உண்மையான அமைதியை இறைவன் மட்டுமே தர முடியும்.

ரீல்ஸ்வாழ்க்கையை அலங்கரிக்கலாம்; ஆனால், அவை வாழ்க்கையை முழுமையாக மாற்றி விடக்கூடாது. நாம் பார்க்கும் ஒவ்வொரு திரைக்கும் அப்பால், ஓர் உண்மையான உலகம் இருக்கிறது. அங்கு உறவுகள் இருக்கின்றன, அங்கு உணர்ச்சிகள் இருக்கின்றன, அங்கு இறைவனின் அமைதி இருக்கிறது. நம் வாழ்க்கையின் மதிப்பு எத்தனைலைக்குகள்கிடைத்தது என்பதில் இல்லை; மனத்தில் எவ்வளவு அமைதி இருக்கிறது என்பதில்தான் இருக்கிறது. திரையை அணைத்துவிட்டு, இதயத்தைத் திறந்து பாருங்கள்;… உலகம் இன்னும் அழகாகத் தெரியும்.

news
சிறப்புக்கட்டுரை
எல்லாமே சினிமாதான்!

நாஜி ஹிட்லரின் அமைச்சர்  கோயபல்ஸ், “ஒரு பொய்யைத் மீண்டும் மீண்டும் சொல்; அதை உண்மை என நம்ப வை; கேட்பவரின் மூளையைச் சலவை செய்; மனிதரின் ஆழ்மனதைப் பாழ்படுத்தி, அவர்களின் எண்ணங்கள், நம்பிக்கைகள் மற்றும் நடத்தைகளை மாற்றும் புதிய  மனித உளவியலை  உருவாக்குஎன்றார். அப்படி மாறுபவர்கள் திரைப்படங்களில் காட்டப்படும் பிணவுரு (ஜோம்பி) போன்றவர்கள். சிந்திக்கும் திறனற்ற இவர்கள் எக்காரணமுமின்றி மனிதர்களைத் தாக்கிக்கொல்லும் இறக்காத, அழிக்க முடியாத அரக்கர்களாக இருப்பார்கள்.

1978 - அமெரிக்காவின் கயானா பகுதியில், ஜிம் ஜோன்ஸ் என்பவர்மக்கள் ஆலயம்எனும் பெயரில் புரட்சிகர சபை ஒன்றை நடத்தி வந்தார். பின் சித்தப்பிரமை பிடித்து, சர்வாதிகாரத் தலைவராக மாறினார். தன் சபை மக்களை ஒரு தொலைதூரக் காட்டுச் சமூகத்திற்குள் உட்படுத்தி, முழுமையான நம்பிக்கை வேண்டினார். உச்சகட்டமாகஅனைவரும் சயனைடு அருந்தி மரிக்கலாம்என்றார். மறுத்தவர்களை, தப்பிக்க முயன்றவர்களை அவரது ஆதரவாளர்கள் கட்டாயப்படுத்தி சயனைடு கொடுத்தனர். 300 குழந்தைகள் உள்பட 918 பேர் மரித்துப் போயினர். இது உலகிலேயே தனிமனித வழிபாட்டுக் குழுக்களின் அவர்களின் நடத்தையில் உள்ள ஆபத்தைப் பேசும் வரலாற்று நிகழ்வாகப் பதிந்துள்ளது.

இதுபோன்றே 1997 - கலிபோர்னியாவில் ரென்சோ சாண்டோஃபேவில், ‘சொர்க்கத்தைக் காட்டுகிறேன், சொர்க்க வாசல்என்ற பெயரில் ஒரு நிகழ்வும் நடந்தது. இதன் தலைவர் மார்சல் ஆப்பிள் வைட் உள்பட 39 பேரும் ஹேல்-பாப்  வால்மீனைப் பின்தொடர்வதாக, தாங்கள் நம்பிய விண்கலத் தில் பயணம் செய்ய விஷம் அருந்தியும், பிளாஸ்டிக் பைகளில் மூச்சுமுட்ட வைத்தும் தற்கொலை செய்தனர். குழுத் தலைவன் என்ற பெயரில் குழு உளவியலை உருவாக்குவதில் இவர்கள் வெற்றி பெறுகிறார்கள். ஒரு தலைவரைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுதலில் உள்ள அபாயம் புவிப்பந்தின் எல்லாத் திசைகளிலும் வியாபித்திருக்கிறது.

நம் சமூக அமைப்பிலும் இதுபோன்ற மனிதர்களைக் காண்கிறோம். அவர்கள் சிந்திக்கும் திறனின்றி இருக்கிறார்கள். குறைந்த கல்வி அறிவே அடையாளமாக உள்ளது. அவர்கள் உலகில் அவர்கள் மட்டுமே இயந்திரத்தனமாக வாழ்கிறார்கள். மிரட்டி காரியம் சாதிப்பதில் வல்லவர்களாக வலம் வருகின்றார்கள். சமூகம் குறித்து, சட்டதிட்டங்கள் குறித்துக் கவலை கொள்வதில்லை. கூட்டுப் புழுக்களாக அடைந்துகொள்கிறார்கள். எடுப்பார் கை பிள்ளைகளாக நடுங்குகிறார்கள். ஆனால், ‘தான்என்ற அகந்தையில் தலைவனாக அடம் பிடிக்கிறார்கள். ஒவ்வொரு  மனிதர்களாக இருந்த அவர்கள் குழுவாகி, தலைவன் என்ற அடையாளமும் கொண்டு, பொது அமைதியைக் கெடுக்கிறார்கள். சமூக ஊடகங்களில் அடாவடி, குழாயடி யுத்தத்தில் அட்டைக்கத்தி வீசுகிறார்கள். அதற்குத் தேவையானரீல்ஸ்திட்டமிட்டு எடுக்கப்படுகிறது.

ஒரு பொதுக் கூட்டம் கூட்டப்படுகிறது. ஆயிரம் துணை நடிகர்கள் நிற்கிறார்கள். சிலருக்கு மட்டும் கேமிரா ஆங்கிளில் நிற்க, நடிக்க வழிவகை கூறப்பட்டுள்ளது. ஓர் இரசிகை என்ற போர்வையில் அவர் தன் பிம்ப நாயகனைப் பார்த்துக் கதறுகிறார்.

நடிப்பு பிரமாதமாக அமைகிறது. இயக்குநருக்கு அவரைவிட மனமில்லை. உடை, சிகை அலங்காரம், கண்ணாடி, நிறம், முக அமைப்பு மாற்றப்படுகிறது. அடுத்தக் கூட்ட காட்சியிலும் அவர் அற்புதமாக நடிக்கிறார். ஆனால், அவர் விரலில் அணிந்திருந்த மோதிரத்தை மாற்ற மறந்துவிட்டார். அனைத்தும் நாடகம் என, பின் அடையாளம் காணப்பட்டார்.

தேர்தல் விளம்பரம் ஒன்று இவர்களிடமிருந்து வருகிறது. அதில் அய்யங்காராக நடித்தவரின்வந்துக்கின்னு, போய்க்கின்னுசென்னை தமிழ் இவர் யாரென அடையாளம் காட்டியது. இவர்களது திட்டக் குழு, சில மாதிரி விடியோக்களை வெளியிடும். இரசிக, இரசிகைகள்கப்பெனப் பிடித்து, பின்தொடர வேண்டியதுதான். சில சின்னக்  குழந்தைகளின் வீடியோக்களும் இதே இரகம்தான். மறு வடிவாக இவர்களது  தலைவரின் ஓடாத படத்தைப்பில்டப்செய்து ஓடவைத்ததும், பிற போட்டி நடிகர்களைத் தாக்குவதும் காலங்காலமாக இவர்கள் செய்யும் வெறிச்செயலாகும்.

குறிப்பாக, ‘சனநாயகனுக்குபோட்டியாகபராசக்திபடம் எனப் பொங்கிய பொங்கல், அப்படக் கதாநாயகன் சிவகார்த்திகேயன்மீது நடந்த இரசிக, இரசிகைகளின் ஆபாசத் தாக்குதல்கள் இவர்களின் கேவலத்தின் உச்சம்.

தமிழ்நாட்டுத் தலைவர்களான பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., கலைஞர் கருணாநிதி போன்றோர் பல வேளைகளில் கல்லூரி மாணவர்களைச் சந்திக்கும் போது கூறுவார்கள்: “நீங்கள் முதலில் நன்றாகப் படியுங்கள்; நல்ல வேலைக்குச் செல்லுங்கள்; உங்கள் பெற்றோர், குடும்பத்தைக் கவனியுங்கள்; நல்ல நிலைக்கு வந்தபின்பு அரசியலுக்கு வாருங்கள்.”

இந்தப் புதிய தலைவர் பொறுப்பற்றுக் கூறுகிறார்: “குழந்தைகளே, நீங்கள் சாக்லேட், கிண்டர் ஜாய்க்கு அடம்பிடிப்பதுபோல அடம்பிடித்து, எனக்கு  வாக்களிக்கச் சொல்லவேண்டும்.” இது தேர்தல்களில் சிறுவர்-சிறுமிகளைப் பயன்படுத்தக் கூடாது  என்பதற்கான அப்பட்டமான விதிமுறை மீறல் என்பதாம். எத்தனை சின்னக் குழந்தைகள் அடம்பிடிக்கும் ரீல்ஸ் பெற்றோரை வாக்களிக்கத் தூண்டும் மிரட்டல்கள், எந்த விதியும் கடைப்பிடிக்காத ஜோம்பிகளின் அலப்பறைகளாகவும் அட்ராசிட்டியாகவும் அமைந்தது.

உலகிலே எந்தக் கட்சிக்கும் சிறு குழந்தைகளுக்கான அணி இல்லை. ஏனெனில், குழந்தைகள் பகுத்தறியும் பண்பு குறைந்தவர்கள். அவர்களை அரசியலுக்கு இழுத்துகுட்டி நண்பா, நண்பிகளுக்கு நன்றிஎனும் சினிமா நாடகம் அருவருப்பானது. இதனால் தன் குழந்தையிடம் பொய் பேசி, மன உளைச்சலுக்கான தந்தை ஒருவர் கோவை மாநகர ஆணையாளரிடம் புகார் கொடுத்துள்ளார். புகார்மீது நடவடிக்கை எடுக்காவிடில் நீதிமன்றம் செல்லவும் முன்வந்துள்ளார்.

நாம் சிறு வயதில் இருந்தபோது, நாம் சாப்பிட மறுத்தால் நிலா, ஆடு, மாடு, கோழி, சைக்கிள் என வேடிக்கை காட்டுவார்கள். இன்று ஒரே மாற்று அலைப்பேசிதான். மூன்று வயதில் குழந்தை அலைப்பேசிக்கு அடிமையாகி விடுகிறது. அதில்  உள்ளஅல்காரிதம்தொழில்நுட்பம் ஸ்வைப், ஸ்கோரல், ரிப்பிட் எனக் குழந்தைகளைக் கூடரீல்பைத்தியமாக்கி விடுகிறது. அதன் அடிப்படையில் நடிகரின் பிம்ப அரசியல் திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்டது.

12 முதல் 16-வது வயது வரையிலான மற்றும் 16 முதல் 18 வயது வரை குழந்தைகளின் சமூக ஊடகப்  பயன்பாடு குறித்தும், ஆஸ்திரேலியா, மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகள் கடுமையாகச் சட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. இந்தியாவில் விரைவில் கர்நாடகா அரசு இது போன்ற சட்டத்தைக் கொண்டுவர முடிவு செய்துள்ளது. இணையவழிக் குற்றங்களில், பொறுப்பற்ற பதிவுகளும் சேர்க்கவேண்டும். வேற்றுக் கிரகவாசிகள்போல் செயல்படும் சமூகப் பொறுப்பற்றவர்களின் இரசிக மனப்பான்மைக்கு  முற்றுப்புள்ளி  வைக்கவேண்டும்.

இணையம் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் நான்கு செய்தி தொலைக்காட்சிகள் பொய் செய்தி, வீண் புரளி கிளப்பி, பொது அமைதியைக் கெடுத்தன. இவர்களது பிம்ப அரசியல் நனவானால் நாடு இரசிகக் கூட்டத்தால் கம்போடியாபோல் மாறிவிடும் என மலேசியாவைச் சார்ந்த ஒருவர் எச்சரிக்கிறார். அங்கு நடைபெற்ற இது போன்ற சுயசிந்தனையற்ற பிம்ப வெறியர்களால் ஒரு மில்லியன் (10 இலட்சம்) பேர் கொல்லப்பட்டார்கள்  என்பது வரலாறு. காரணம், கொல்லப்பட்டவர்கள் அனைவரும் படித்தவர்கள், அறிவாளிகள் என்பதே. இங்கு சினிமா என்பது சினிமாதான். அது சினிமா அரசியல் அல்ல; மேலும், அது பிம்ப அரசியலும் அல்ல!

news
சிறப்புக்கட்டுரை
குறளும் வாழ்வும் – 01 (புதிய தொடர்)

கோவை புனித பிரான்சிஸ்கன் காணிக்கை அன்னை சபையைச் (FSPM) சார்ந்த அருள்சகோதரி ஜெசிந்தா ஜான்சன் அவர்கள், குன்னூர் புனித மரியன்னை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் முதுகலைத் தாவரவியல் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். புனித பிரான்சிஸ்குவின் ஆன்மிகத்தில் உரோமையில் பட்டயப் படிப்பு முடித்தவர். விவிலியம் மற்றும் இறையியலில் சிறப்புப் பயிற்சிகள் பெற்றவர். அறிவியல் ஆசிரியராகப் பணிபுரிந்தாலும், எழுத்துப் பணியில் பேரார்வம் கொண்ட இவர் இதுவரை நான்கு பயனுள்ள நூல்களைப் படைத்துள்ளார். திருக்குறள் காட்டும் வாழ்வியல் விழுமியங்களை இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப விளக்கும் வகையில், நமதுநம் வாழ்வுஇதழில்குறளும் வாழ்வும்எனும் தலைப்பில் புதிய தொடரை எழுத முன் வந்துள்ளார். பன்முகத் திறனும் ஆன்மிகப் பின்புலமும் கொண்ட அருள்சகோதரியை  வாழ்த்தி வரவேற்கிறோம்.

முதன்மை ஆசிரியர்

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு (குறள் 1)

குறள் விளக்கம்: எழுத்துகள் எல்லாம் அகரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.

சிந்தனை: கடவுள் நம்பிக்கை உடையவர் ஆத்திகர்! கடவுள் நம்பிக்கை அற்றவர் நாத்திகர்! இந்த இரு குழுவினருக்கும் இடைப்பட்ட நிலையில் இருப்பவரை எப்படி அழைப்பது? சிலர் கடவுள் நம்பிக்கை அற்றவர் எனச் கூறிக்கொண்டாலும் வேதங்கள் சொல்லும் நற்செயல்கள் அனைத்தையும் வாழ்வில் கடைப்பிடிக்கின்றனர். ஆனால், கடவுள் நம்பிக்கை உடையவர்கள் பலர் சமயக் கொள்கைகளுக்கு மாறான வாழ்க்கை நடத்துகின்றனர். அதிலும் உச்சமாகநானே கடவுள்என்ற நிலைக்குத் தன்னை உயர்த்துவோரும் உண்டு. குறள் ஒன்றில் திருவள்ளுவர்இந்த உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறதுஎன்கிறார். இக்கருத்து, இந்தப் பூமியில் கடவுள் நம்பிக்கை உடையோர் பெரும்பான்மையாக இருப்பதால் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

நம் நம்பிக்கைக்கு ஏற்றவாறு நம் நடத்தை அமையாவிடில் நமது நடத்தைக்கு ஏற்றவாறு நம் நம்பிக்கை மாறிவிடும்என்றார் பேராயர் ஃபுல்டன் ஜான் ஃஷீன். ஆயரின் கூற்றுப்படி, கடவுள் நம்பிக்கை கொண்டவர் கடவுளின் வார்த்தைப்படி வாழாமல், தனது விருப்பப்படி  வாழ்வாரெனில் அவர் கடவுளை அடிப்படையாகக் கொண்டவரல்லர்; அவர் தன்னை முன்னிலைப்படுத்தி வாழ்பவராகிறார். கடவுளை அடிப்படையாகக் கொண்டவர் எச்சூழலிலும் கடவுளை முன்னிலைப்படுத்துவார்.

அண்மையில்The chariots of fireஎன்ற திரைப்படத்தைக் குறித்துக் கேள்விப்பட்டேன். பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வாங்கிய எரிக் லிட்டல் என்ற விளையாட்டு வீரரைப் பற்றியதுதான் அந்தத் திரைப்படம். அவர் எந்த அளவுக்குக் கடவுளைத் தன் வாழ்வில் அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்தார் என்பதைத்தான் அப்படத்தின் இயக்குநர் உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளார்இவர் ஓர் ஓட்டப்பந்தய வீரர். இரசிகர்களுக்காக அல்ல; நாட்டுக்காக அல்ல; புகழுக்காக அல்ல; சொந்த மகிமைக்காகவும் அல்ல;… கடவுளுக்காக ஓடினார். ஏனெனில், கடவுளை இவர் அடிப்படையாகக் கொண்டிருந்தார். 1924-ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இவர் ஓடுவதாக இருந்தது. ஆனால், எதிர்பாராத விதமாக அந்த நாள் ஞாயிற்றுக்கிழமையாக இருந்தது. கிறித்தவ மிஷனரியான வீரர் எரிக் லிட்டலுக்கு இது பெரும் சோதனையாக அமைந்தது. ஓய்வுநாளில் கடவுளை மகிமைப்படுத்துவதா? அல்லது போட்டியில் கலந்துகொள்வதா? எனக் குழம்பினார். பின்னர் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்திலிருந்து விலகினார். இதனைக் கேள்விப்பட்டவர்கள் அவரை 100 மீட்டர் போட்டியில் கலந்துகொள்ள வைக்க வெகுவாக முயன்றனர். வீரரோ தனது முடிவில் தெளிவாக இருந்தார். ‘கடவுள்தான் முக்கியம், அவரே என் அடிப்படைஎன உறுதியாக இறுதிவரை நின்றார்பின் வேறொரு நாளில் நடைபெற இருந்த 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்வதாக அறிவித்தார். 100 மீட்டர் ஓடப் பயிற்சி பெற்ற இவர் 400 மீட்டர் ஓட்டத்தில் வெல்வாரா? என்ற ஐயம் கொண்டிருந்தவர்கள் முன், இறையாசிரோடு ஓடி வெற்றிக் கனியைப் பறித்தார். எனவே, இறைவனை அடிப்படையாகக் கொள்வோம், அடி சறுக்காமல் வாழ்வோம்.

news
சிறப்புக்கட்டுரை
அ - சி - ங் - க - ம்

அசிங்கம் - ‘இது என்ன புதியதும் புதிருமான தலைப்பு?’ என்ற வினா வாசகர்களுக்கு எழுந்தால் அவ்வினாவில் வியப்பு எதுவும் இல்லை.

அண்மையில் ஊடகம் ஒன்றிற்குப் பேட்டி அளித்த பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுநர் மருத்துவர் இராமதாஸ் அவர்கள், அவர் மகன் மருத்துவர் அன்புமணியின் அரசியல் நடவடிக்கை பற்றிய கேள்விக்கு அளித்த பதிலில், ‘அசிங்கம் என்று ஒரே வார்த்தையில் பதில் கூறாமல்-சி-ங்--ம்என்று பிரித்துப் பிரித்துக் கூறிய பதிலே இது.

மருத்துவர் அய்யா, தான் பெற்ற மகனின் அரசியலுக்குஅசிங்கம்என்ற அடைமொழியைத் தந்தார். நமக்கு எழும் கேள்வியெல்லாம் அன்புமணியின் அரசியல் மட்டுமேஅசிங்கம்என்ற அடைமொழிக்குள் அடங்குமா?

கடந்த பல மாதங்களாக, அதுவும் கடந்த ஒரு மாதமாக நாம் அனுபவித்து வரும் தேர்தல் சூட்டில் குடிமக்கள் எத்தனை வகை அசிங்கங்களைக் கண்டு வருகின்றனர்கண்டும் காணாதிருக்கின்றனரா? அல்லது அரசியல் என்பது இப்படித்தான் இருக்க வேண்டுமோ? இதுதான் நியாயமான அரசியலோ? இதைத் தாண்டிய ஒரு நிலையை எதிர்பார்ப்பது அறியாமையின் விளைவோ? என்று கூட எண்ணத் தோன்றினாலும் வியப்பில்லை.

உலகில் தோன்றிய அரசமைப்புள் (Political System) குறைந்த அளவு குறைபாடுகளை உடையதாகச் சனநாயக அரசியலைக் குறிப்பிடுவர். குடிகளைக் குடிமக்களாக்கிய சனநாயகம், குடிகள் மீது வைக்கப்பட்ட நம்பிக்கையில் (Fact) உருவானது. குடிமக்களை ஆற்றல்படுத்தும் கருவியுள் ஒன்றான தேர்தல், மிகப்பெரிய மதிப்பீட்டை உள்ளடக்கமாகக் கொண்டது. ஆனால், என்ன நடக்கிறது? சனநாயகத்தைக் கிஞ்சித்தும் நம்பாத அரசியல் கட்சிகள், சனநாயகத்தை உறுதி செய்யத் தரப்பட்ட தேர்தல் சனநாயகத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்வதன் காரணம் என்ன?

பன்மையைப் போற்றும் சனநாயகத்தை, பன்மைச் சமூகங்களின் சமப்பங்கேற்பை உத்தரவாதப்படுத்தும் தேர்தல் சனநாயகத்தின் உள்ளார்ந்த மகோன்னத்துவத்தைப் புரியாமலே பெறும் வாக்குகளைக் குறிவைத்து நடத்தப்பெறும் தேர்தல் முறை அசிங்கமில்லையா?

மதம், இனம், மொழி என்ற அடையாள வழி மக்களை ஒருங்கிணைத்து, ஆட்சியதிகாரத்தைத் தக்கவைக்க முயலும் போக்கைஅசிங்கம்என்று தானே அழைக்க முடியும்!?

மதரீதியாக மக்களை அணிதிரட்டி, மதப்பெரும்பான்மையில் உருவாகும் அரசு மதவாத அரசாகும் போது, அது மதப்பெரும்பான்மைவாத அரசாகத்தான் இருக்கமுடியுமென்றால், இப்போக்குச் சனநாயகத்திற்கே அசிங்கமில்லையா? இலங்கையில் சிங்களப் பேரினவாதமும் - இப்படிக் கட்டமைக்கப்பட்ட நாசியின் செர்மனி சொல்லும் கதையும் இதுதானே!

மதச்சிறுபான்மையினரைத் தேசிய நீரோட்டத்திலிருந்து ஒதுக்கி, ஒடுக்கி வரும் நிலையைச் சமயசார்பற்ற சனநாயகச் சக்திகள் ஓயாது எதிர்த்துக் குரல் கொடுத்து வந்தபின்பும், கேளாக் காதினராய், தமிழ்நாட்டுக் கட்சிகள் பல கூடா வகையில் ஒன்றியத்தை ஆளும் கட்சியோடு கூட்டணி வைப்பது அழகா? அசிங்கமா? ஆதிக்கம், ஆட்சி அதிகாரம் எனும் இவற்றை மட்டுமே நோக்கமாகக் கொண்டொழுகுதல் அரசியல் அறமா? அசிங்கமா?

நடைமுறை வாழ்வில் சாதாரண மக்கள் வாழ்க்கையில் கட்டாயமாக, எவ்விதச் சமரசமுமின்றிக் கடைப்பிடிக்கும் ஒழுக்கநெறிகள் பல உள்ளன. தீமை கண்டு அஞ்சும் மக்கள் வாழ்கின்ற சமூகத்தில், இச்சமூகத்தை ஆளும் உரிமையைப் படைத்தவனே அருளியதாக எண்ணிக் கொண்டு ஆட்சிக் கட்டிலில் வீற்றிருக்கும் அரசியல் தலைவர்கள், மக்களின் பார்வையில் எப்போதும் ஏதோ ஒரு வெளியில் மக்கள் கண்களுக்குத் தெரிபவர்கள். சமூக ஊடக வழி உலகோர் கண்களில் எப்போதும் காட்சியளிப்பவர்கள். இவர்கள் ஒருவகை ஒளிவட்டத்தில் இருந்தபோதும், உண்மை எனும் உயர் பண்பு இவர்களில் வெளிப்படவே இல்லையே!

அண்மை நிகழ்வொன்றை இந்த அசிங்கப் பண்பிற்கு எடுத்துக்காட்டாய் காட்ட முடியும். அண்மையில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தொகுதி வரைவுக்கான அரசியல் சாசனத் திருத்தச் சட்ட அறிமுகத்திற்குப் பின் எத்தனையோ தந்திரங்கள் இருந்தன என்று பார்க்கையில், ஆளுங் கட்சியினரின் அசிங்க, அறமற்றப் போக்கினை நாம் அறியமுடியும்.

முதிர்ந்த அரசியலாளருக்குரிய எச்சாயலுமின்றி, எவ்வளவு கீழ்த்தரமாக நடந்துகொள்ள முடியுமோ அவ்வளவு கேவலமாக ஆள்வோர் நடந்துகொண்ட போக்கைக் காணமுடிந்தது. ஏற்கெனவே 2023-இல் நிறைவேறிய பெண்கள் இடஒதுக்கீட்டு மசோதாவைக் கிடப்பில் போட்டுவிட்டு, தொகுதி வரையறைக்கான அரசியல் சாசனத் திருத்தச் சட்டத்தைப் பெண்கள் இடஒதுக்கீட்டோடு இணைத்து ஒன்றிய அரசு நடத்திய நாடகத்தைச் சரியாகக் கணித்த எதிர்க்கட்சியினர் ஒன்றிணைந்து முறியடித்தனர்.

தொகுதி வரையறையின் மூலம் தென்னகம் பாதிக்கப்படும் என்பதால் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்ப்பைக் காட்ட, ஒன்றிய அரசின் காவலர்களாம் பிரதமரும் உள்துறை அமைச்சரும் கிடைத்தத் துருப்புச் சீட்டை எடுத்து, நன்றாகவே விளையாடினர். பா... அரசின் நரித்தனம் அம்பலமாகவே, ‘எதிர்க்கட்சிகள் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்தனர்; பெண்களின் சனநாயகப் பங்கேற்பின் எதிரிகள் இவர்கள்என்றெல்லாம் பொய்யாகப் பேசி, அவதூறு செய்து வருகின்றனர்.

தொகுதி வரையறை மூலம் வட மாநிலங்களில் குறிப்பாக, உத்திரப்பிரதேசம் போன்ற பெரிய மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை கடுமையாக உயரும் என்பதைத் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் சுட்டிக்காட்டியதால், இரண்டு நாள்களுக்கு முன், உத்திரப்பிரதேசத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை அதிகமாதலை எதிர்ப்பதாகப் பேசுகிறார்கள். இது என்ன அரசியல்?

தமிழ்நாட்டின் உதயநிதி சில வருடங்களுக்கு முன் சனாதனத்தை எதிர்த்துக் குரல் கொடுத்த போது, ‘தமிழ்நாட்டு ஆளும் கட்சி, இந்துகளுக்கு எதிரானதுஎன்று திட்டமிட்டு பரப்புரை செய்தனர்.

நமது ஊரகங்களில், அண்டை வீடுகளில்கூட இவ்வளவு தூரம் திட்டமிட்டுப் பரப்பப்படும் பொய்மைகளை நாம் காண்பதில்லை. அன்றாட வாழ்வில் இரு நபர்களுக்கிடையே அல்லது இரு சமூகங்களுக்கிடையே பகை எழுவதும், பகை முரண்களால் சச்சரவு எழுவதும் உண்டு. இம்முரண்களில் உருவாகும் சஞ்சலங்கள் எளிதில் தீர்ந்து போவதையும், தீர்க்கப்பட்டு விடுவதையும் நாளும் நாம் காணும் நடைமுறைகளே. ஆனால், ஒரு நாட்டை ஆளும் பொறுப்பை ஏற்றிருக்கும் தலைவர்கள் குடிமக்களிடையே சண்டை மூட்டுவதும், அந்தச் சண்டை எனும் தீயை அணையாமல் காத்து, அதில் அரசியல் இலாபம் காண முயல்வதும் அசிங்கமில்லையா?

இவ்வகையான அரசியல் அசிங்கங்களை நாம் நாளும் சந்தித்து வருகின்றோம். அண்மை வரவான விஜய் அவர்களைஜோசப்விஜய் என்று அடையாளப்படுத்திய மதவாதிக்கு அன்று ஒரு நோக்கம் இருந்தது. விஜய்க்கும்ஜோசப்ஆதாயமானதால் தன் பெயரைஜோசப்என்று அழுத்திக் கூறினார். ஜோசப் ஒரு கிறித்தவப் பெயராக இருந்தமையால் கிறித்தவர் வாழும்கிழக்கைதெரிவு செய்கிறார். கிழக்கில் கிறித்தவத் தேவாலயத்தில் இட்ட முழந்தாளின் ஈரம் காயும்முன்னே திருச்செந்தூருக்குத் தனி விமானப் பயணம், அப்படியே மகாராஷ்டிரத்தின் சீரடி பாபா தரிசனம்... ஜோசப் இப்போது கிறித்தவர் மட்டுமல்லர்; சர்வ சமய யோகி! இது என்ன அரசியலோ?

நமது நாட்டில் நம் தலைவர்கள் நடத்தும் கூத்துகளை வெறும்அசிங்கம்என்று கேலிசெய்து, அதன் பின்னுள்ள அரசியலைக் கண்டும் காணாதிருப்பது மாபெரும் தவறு. இதைச் சாதாரணமாக எண்ணி விட்டுவிடமுடியாது; விட்டுவிடவும் கூடாது.

news
சிறப்புக்கட்டுரை
‘இறை ஊழியர்’ அன்னை ஸ்கொலாஸ்டிக்கா

இயேசுவின் திரு இருதய சபையின் நிறுவுநர் அன்னை ஸ்கொலாஸ்டிக்கா ஒரு மாபெரும் சகாப்தம். ஒரு புதிய வரலாறு. எண்ணற்றவரின் வாழ்வை, பயணத்தை, பாதைகளை இன்றும் மிக நெருக்கமாகப் பாதித்து வழிநடத்தும் உன்னதக் கொடை!

ஒரு குறுகிய காலத்தில் ஆண்டவன் மீதுள்ள அணையாத தாகத்தால் ஒரு மாபெரும் சபையை ஆரம்பித்துப் பணிசெய்தவர். இன்று தென்னகம் போற்றும் தேவதையாக எல்லார் முன்பும் உயர்ந்து, எண்ணற்றவர்களின் உள்ளத்தைக் கவர்ந்து நிற்கிறார். இவரது வாழ்வும் நற்பண்புகளும் அசாதாரணமானவை என்பது பலரும் பாராட்டும் நிதர்சனமான உண்மையும், மிகையேதும் இல்லாத தரவுமாகும்.

இந்தியத் துணைக் கண்டத்தின் தென்முனை குமரி மாவட்டம் எழிலானது; கடலும் குன்றுகளும் வயலும் குளங்களும் நிரம்பியது. இந்த அழகிய நிலத்தின் மையம் நாஞ்சில் நாடு. இயற்கை வளம் கொழிக்கும் இந்த நிலத்தில் உள்ளது அன்னை பிறந்த ஊரான பட்டரிவிளை. 1917-ஆம் ஆண்டு அக்டோபர் 15-ஆம் நாள் திருவாளர் சவரிமுத்து-சவரியாயி தம்பதியரின் நான்காவது கனியாக அன்னை பிறந்தார்.

அன்னையின் குடும்பம் பெரியது. ஏழு குழந்தைகள். பங்கு ஆலயத்தை அடுத்த, இதய ஆண்டவர் ஆட்சி செய்யும் அழகான இல்லம் இவர்களுடையது. இளமையிலிருந்தே கல்வி, ஆலயம், வழிபாடு, பிறருக்கு உதவுதல் போன்றவை அன்னையின் வாழ்வை அழகு செய்தன.

உயர் கல்வி முடிந்ததும் இறைவன் இவரை அழைத்தார். 1939-ஆம் ஆண்டு ஆசிரியர் பயிற்சி பெற்ற அன்னையைப் புனித அகுஸ்தினார் சபை அன்போடு அரவணைத்தது. 1941-ஆம் ஆண்டு முதல் வார்த்தைப்பாடு முடிந்தது. தொடர்ந்தது ஆசிரியர் பணி, நற்செய்தி அறிவிப்புப் பணி, ஆலயப் பணி, அன்புப்பணி. ஏழையர் பணியில் இறைவனைக் கண்டு இன்புற்று மகிழ்ந்தது அன்னையின் துறவு வாழ்வு.

தூய அகுஸ்தினார் சபைத் துறவியாக வாழ்ந்த காலத்திலேயே அன்னையிடம் மிளிர்ந்தது அசாதாரண தலைமைப் பண்பு. பள்ளியாடி தொடக்கப்பள்ளி இதற்கு ஒரு சிறந்த சான்று. திடீரென அங்குத் தொடங்கியது ஒரு பெரிய மாணவர் பிரச்சினை. ‘கிறித்தவப் பள்ளிகளில் மற்ற மதத்தினரைச் சேர்க்கக்கூடாதுஎன்று ஒரு புதிய சட்டம். பல பிள்ளைகளின் பெற்றோர் தங்கள் பிள்ளைகளைச் சேர்ப்பதைத் தவிர்த்தார்கள். ஏற்கெனவே சேர்ந்தவர்கள் பள்ளியில் இருந்து விலகினார்கள். திணறியது பள்ளியின் தலைமை நிர்வாகம். உடனே அன்னையின் உதவியை அணுகினார்கள். விரைவில் மீண்டும் பள்ளியாடியில் பணியமர்த்தப்பட்டார் அன்னை. அன்னையின் பேச்சும் கனிவும் அனைவரையும் கவர்ந்திழுத்தன. சில வாரங்களிலேயே பிரச்சினைக்குத் தீர்வு கண்டார் அன்னை. அனைவரும் மீண்டும் பள்ளிக்குத் திரும்பினர். இது ஒரு சாதாரண நிகழ்வு அல்ல; அன்னையின் உதவியால் பள்ளி மீண்டும் வேகமான வளர்ச்சியில் வெற்றி நடைபயின்றது.

புதிதாக வந்தது ஒரு பெரும் புயல். அதன் வேகம் கட்டுக்கடங்காதது. இந்திய விடுதலையும் ஐரோப்பியர் வெளியேற்றமும் இதற்குக் காரணங்கள். ஐரோப்பியர் அதிகமாக ஆக்கிரமித்திருந்த புனித அகுஸ்தினார் சபையில், இந்தியச் சகோதரிகளின் நிலை இரண்டாம் நிலை. வெளியேறலாம், வேறு சபையில் சேரலாம், இல்லை இருக்கும் நிலையில் தொடரலாம் என்ற ஒரு பரிதாப நிலை.

இறைவனை நாளும் நெஞ்சில் சுமந்து பணி வாழ்வு பற்றிப் பல கனவுகள் கண்ட இந்தியச் சகோதரிகளின் துறவு வாழ்வு பெரும் பாதிப்பை எதிர்கொண்டது. இந்தப் பேரிடி அன்னையின் உள்ளத்தில் ஏற்படுத்திய மீளாத் துயரம் பெரிதானது. புயலடித்தபோது தோன்றிய புதிய கனல்தான் புதிய சபை. அது அணையாத தீபமாக இன்று அவனியையே ஆட்கொண்டு இதய சபையாக, இதய ஆண்டவரின் அன்பு ஆட்சி, அரசு வளர உலகின் பல பாகங்களில் பணியாற்றி வருகிறது.  

(தொடரும்)