“நீதிநெறிமிக்க சமுதாயம் ஒவ்வொரு மனித உயிரையும் அமைதியையும் அதன் சுதந்திரத்தையும் பாதுகாக்கிறது!”
உலக
அரசியல் அரங்கிலும், ஆன்மிகத் தளத்திலும் 2026-ஆம் ஆண்டு ஜூன் திங்கள் எட்டாம் நாள்
ஒரு பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய நாளாக விடிந்தது. ஸ்பெயின் நாட்டின் தலைநகரான
மாட்ரிட்டில் உள்ள பிரதிநிதிகள் சபையின் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், கத்தோலிக்கத்
திரு அவையின் உச்சத்தலைவர் திருத்தந்தை 14-ஆம் லியோ ஆற்றிய உரை, உலகளாவிய மனிதநேயத்தின்
பிரகடனமாக ஒலித்துள்ளது. மதச்சார்பின்மை தழைத்தோங்கியுள்ள ஓர் ஐரோப்பிய நாட்டின் நாடாளுமன்றத்தில்,
திருத்தந்தை ஒருவர் உரையாற்றுவது இதுவே முதன்முறை என்பதால், இது வரலாற்றின் பக்கங்களில்
அழியாத்தடம் பதித்துள்ளது.
சுமார்
பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்பெயின் நாட்டிற்கு மேற்கொண்ட இந்த ஆறு நாள் பயணத்தின்
மூன்றாம் நாளில், அரசியல் அதிகாரத்தின் மையப்புள்ளியான நாடாளுமன்றத்தில் திருத்தந்தை
லியோ நுழைந்தது, ஆன்மிகமும் அரசியலும் அறத்தின் அடிப்படையில் எவ்வாறு இணையவேண்டும்
என்பதற்கான இலக்கணமாக அமைந்தது.
அவரது
இந்த உரை இன்றைய உலகிற்கு ‘காலத்தின் கட்டாயம்’ என்பதையும் உணர்த்தியிருக்கிறது.
அழைப்பில் மலர்ந்த வரலாற்று
மாற்றம்
பதினாறாம்
நூற்றாண்டில் உலக வல்லரசாகத் திகழ்ந்த ஸ்பெயின், கத்தோலிக்கத் திரு அவையோடு பல நூற்றாண்டுகால
ஆழமான பிணைப்பைக் கொண்டது. இருப்பினும், இருபதாம் நூற்றாண்டின் ஜெனரல் பிரான்சிஸ்கோ
ஃபிராங்கோவின் சர்வாதிகார ஆட்சிக் காலத்தில் திரு அவையின் செல்வாக்கு அரசியலில் அதிகமாகப்
பரவியிருந்ததன் விளைவாக, 1970-களில் சனநாயகம் மலர்ந்த போது, திரு அவையின் மீதான பொதுமக்களின்
அணுகுமுறை மதச்சார்பின்மையை நோக்கி வேகமாக நகர்ந்தது. இத்தகையதொரு சூழலில், கத்தோலிக்கத்
திரு அவையை ஒரு மாபெரும் ஆன்மிகத் தூணாக அங்கீகரித்து, ஸ்பெயின் நாடாளுமன்றம் அவருக்கு
அழைப்பு விடுத்ததே ஒரு பெரும் வரலாற்று மாற்றமாகும்.
கொமிலாஸ்
போண்டிஃபிகல் பல்கலைக்கழகத்தின் உலகளாவிய உறவுகள் துறை பேராசிரியரும், வரலாற்று ஆய்வாளருமான
எமிலியோ சயன்ஸ் ஃபிரான்சிஸ் (Prof. Emilio Sáenz
Francés) குறிப்பிடுவதுபோல:
“இந்த நிகழ்வு அரங்கேறாவிட்டாலும் திருத்தந்தை லியோவின் ஸ்பெயின் பயணம் வரலாற்றுச்
சிறப்புமிக்கதுதான். ஆனால், ஜூன் 8, 2026 திங்கள்கிழமை காலையை அவர் நாடாளுமன்ற வளாகத்தில்
தொடங்கியதன் மூலம், திரு அவையின் சிந்தனைகளுக்கும் தற்போதைய ஸ்பானிய அரசியல் விவாதங்களுக்கும்
இடையே ஒரு துடிப்பான, நீடித்த உறவு இன்னும் சாகாமல் உயிர்ப்போடு இருக்கிறது என்பது
நிரூபிக்கப்பட்டுள்ளது.”
திருத்தந்தையின்
வருகையைக் கண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று, ஏழு நிமிடங்களுக்கும்
மேலாக “விவா எல் பாப்பா!” (Viva el Papa!) என முழக்கமிட்டு நெகிழ்ந்தது, திரு
அவையின் மீதான தற்காலச் சமூகத்தின் தார்மீக மரியாதையைக் காட்டுகிறது.
இறையாண்மையும் திரு அவையின்
உரிமையும்
அரசியல்
அமைப்புகளின் சட்டப்பூர்வமான இறையாண்மையைக் கேள்விக்குள்ளாக்குவது திரு அவையின் நோக்கமன்று
என்பதைத் திருத்தந்தை லியோ மிகத் தெளிவாகவும் தீர்க்கமாகவும் எடுத்துரைத்துள்ளார்.
அண்மைக்கால சனநாயகம் கடுமையான அரசியல் துருவமுனைப்பைச் (Polarization)
சந்தித்து வரும் வேளையில், உலகளாவிய சமூக, பொருளாதார மற்றும் அரசியல் எதார்த்தங்கள்
குறித்துத் தனது கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளும் முழுத் தார்மீக உரிமை திரு அவைக்கு
உண்டு என்பதை அவர் நிலைநாட்டியுள்ளார். அதிகார வர்க்கத்தின் மொழியைக் கடந்து, எளிய
மனிதனின் இதயங்களைத் தொடும் வகையில் அவரது உரை அமைந்திருந்தது.
சலமன்கா சிந்தனைப் பள்ளியும்
தற்கால சனநாயகச் சிதைவும்
திருத்தந்தை
லியோவின் உரையில் மிக முக்கியமான தத்துவார்த்தப் பகுதி, அவர் ஸ்பெயினின் புகழ்பெற்ற
‘சலமன்கா சிந்தனைப் பள்ளி’யைக் (School of Salamanca)
குறிப்பிட்டதாகும். பதினாறாம் நூற்றாண்டில் ஸ்பெயின் ஏகாதிபத்தியம் உலகை வென்றுகொண்டிருந்த
காலத்தில், மனித உரிமைகள் மற்றும் முதலாளித்துவம் குறித்த கோட்பாடுகளை முதன்முதலில்
வகுத்த அறிவுஜீவிகள் இப்பள்ளியைச் சேர்ந்தவர்களாவர்.
கிறித்தவ
விழுமியங்களின் அடிப்படையில் உருவான இச்சிந்தனைப் பள்ளி, உலகியல் அதிகாரங்களுக்கு ஒரு
தார்மீக எல்லை இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்தியது. இன்றைய காலகட்டத்தில், உலக வல்லரசுகள்
எந்தவித தார்மீகக் கட்டுப்பாடுகளும் இன்றி, சனநாயகத்தின் இன்றியமையாத அங்கங்களான ‘அதிகாரப்
பகிர்வு மற்றும் சமநிலை’ அமைப்புகளைச் சிதைத்து வரும் வேளையில்,
சலமன்கா பள்ளியின் கோட்பாடுகள் மிக முக்கியமான எச்சரிக்கையாகும். மேற்கத்திய பண்பாட்டின்
தொட்டிலாகக் கருதப்படும் ஸ்பெயின், நாடாளுமன்றத்திற்கும் சனநாயத்திற்குமான சமநிலையைப்
பேண வேண்டியதன் அவசியத்தைத் திருத்தந்தை நினைவுகூர்ந்துள்ளார்.
மனித கண்ணியத்திற்கு
எழும் சவால்களும் திருத்தந்தை வழிகாட்டுதலும்
ஒரு
சமுதாயம் உண்மையான நீதிநெறிமிக்க சமுதாயமாக மாறவேண்டுமெனில், அது ஒவ்வொரு மனிதனின்
உள்ளார்ந்த கண்ணியத்தையும் அங்கீகரித்துச் சட்டங்களை இயற்றவேண்டும். அத்தகைய சட்டமே
அடித்தட்டு மக்களின் அரணாகத் திகழ முடியும்.
“கருவிலிருக்கும்
குழந்தை முதல் இயற்கை மரணம்வரை அனைத்து உயிர்களும் போற்றப்பட வேண்டும்; பலவீனமானவர்களைப்
புறந்தள்ளும் ‘நுகர்வுக் கலாச்சாரம்’ (Throwaway
culture) ஒழிய வேண்டும்” எனும் ‘உயிர்ப் பாதுகாப்பு’ பற்றியும், “சமூகத்தின் முதலாவது இயற்கை அடித்தளம் குடும்பமே;
தலைமுறைகளை இணைக்கும் ஆன்மிக மற்றும் சமூக நிலைத்தன்மை இங்குதான் பிறக்கிறது. ஆகவே,
குடும்பக் கட்டமைப்பு சிறப்புற அமையவேண்டும்” என்றும்,
“புதிய தலைமுறையினர் உண்மையை நேசிக்கவும், மனித கண்ணியத்தை மதிக்கவும் கற்றுத்தரும்
பள்ளிக்கூடங்களாக நமது கல்வி நிறுவனங்கள் மாறவேண்டும்” என்றும்
சமூகத்தின் அடிப்படை விழுமியங்களைத் திருத்தந்தை
வலியுறுத்தியுள்ளார்.
புலம்பெயர்ந்தோரின் அவலமும்
சமூக நீதியும்
இன்று
உலகையே அச்சுறுத்தும் மிக மோசமான மனிதநேய நெருக்கடி, புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளின்
துயரமாகும். ஸ்பெயினின் தற்போதைய சோசலிச அரசு, புலம்பெயர்ந்தோருக்குச் சாதகமான பொருளாதார
மற்றும் மனிதாபிமானக் கொள்கைகளைக் கொண்டிருந்தாலும், ஒட்டுமொத்த ஐரோப்பாவும் உலகமும்
இதில் இன்னும் தீவிர கவனம் செலுத்தவேண்டும் என்று தெரிவித்துள்ளார் திருத்தந்தை.
இது
குறித்து அவர் இருமுனைச் சமூக நீதியை (Twofold demand of social justice) முன்வைத்தி ருக்கிறார். ஒன்று, பாதுகாப்பான
சட்டப்பூர்வ வழிகள். அதாவது, வறுமை, போர் மற்றும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டு
வருவோருக்கு மரியாதையான வரவேற்பும், அவர்கள் புதிய சமூகத்தோடு ஒருங்கிணைவதற்கான சமவாய்ப்புகளும்
வழங்கப்படவேண்டும். மனிதக் கடத்தல்காரர்களின் பிடியில் அவர்கள் சிக்குவதைத் தடுக்க
பன்னாட்டுக் கூட்டுறவு அவசியம் என்று குறிப்பிட்டிருக்கிறார். இரண்டு, தாய்நாட்டிலேயே
வாழும் உரிமை. அதாவது, வறுமை, பாதுகாப்பின்மை மற்றும் பொருளாதார சமத்துவமின்மை காரணமாக
எவரும் தங்கள் சொந்த வீட்டை விட்டு வெளியேறக் கூடாத சூழ்நிலையை அந்தந்த நாடுகளிலேயே
உருவாக்க உலக நாடுகள் பாடுபடவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த காலத் தவறுகளுக்குத்
திரு அவையின் மன்னிப்பு
திருத்தந்தையின்
உரையில் குறிப்பிடத்தக்க மற்றுமொரு குறிப்பு, திரு அவை தன் கடந்த காலத் தவறுகளை வெளிப்படையாக
ஒப்புக்கொண்டதாகும். அட்லாண்டிக் கடந்த அடிமை வணிகத்திலும், காலனித்துவ ஆதிக்கத்திலும்
திரு அவையின் சில பிரிவுகள் ஆற்றிய பங்கை மறைக்காமல், “கிறித்தவ விழுமியங்களின் உன்னதத்தைத்
திரு அவையே சில காலங்களில் கடைப்பிடிக்கத் தவறியுள்ளது” என்று
கூறி, வத்திக்கானின் சார்பில் அண்மையில் அவர் கோரிய மன்னிப்பை மீண்டும் நினைவுபடுத்தினார்.
இது அவரது வெளிப்படையான நேர்மையைக் காட்டுகிறது.
ஆயுதப் பெருக்கத்திற்கு
எதிரான அறைகூவல்
இன்று
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே மூண்டுள்ள போர் பதற்றமும், உக்ரைன் மீதான இரஷ்யாவின்
படையெடுப்பும் உலகை இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய மிக ஆபத்தான புவிசார் அரசியல்
சூழலுக்குள் தள்ளியுள்ளது. ஐரோப்பிய நாடுகள் தங்கள் பாதுகாப்பு வரவு-செலவுத் திட்டங்களை
(Defense Budgets)
உயர்த்தி, ஆயுதப் பெருக்கத்தில் ஈடுபட்டு வருவதைக்
கடுமையாகச் சாடிய திருத்தந்தை, “ஆயுதங்கள் தற்காலிக அமைதியைக் கொண்டுவரலாமே தவிர, ஒருபோதும்
நிரந்தரமான நீதியான அமைதியைக் கட்டியெழுப்ப முடியாது; ஒவ்வொரு போரும் இறுதியில் மனிதகுலத்தின்
பேச்சுவார்த்தை திறனுக்குக் கிடைத்த மாபெரும் தோல்வி” என்று
தெரிவித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவும்,
போர்க்கள அறமும்
நவீனத்
தொழில்நுட்பங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) இராணுவத் துறையில் புகுத்தப்படுவதைக்
குறித்துத் திருத்தந்தை விடுத்த எச்சரிக்கை மிகக் கூர்மையானது. உயிர் மற்றும் இறப்பு
குறித்த இறுதி முடிவுகளை ஒருபோதும் தானியங்கி அமைப்புகளிடமோ (Automated Systems)
அல்லது கணினி அல்காரிதம்களிடமோ ஒப்படைக்கக்கூடாது. மனிதனின் தார்மீகப் பொறுப்புகளுக்குப்
பதிலாக, தொழில்நுட்பத்தைப் புகுத்தக்கூடாது என்று உலகச் சமூகத்திற்கு அவர் வேண்டுகோள்
விடுத்துள்ளார்.
அதிகாரத் தொனி கொண்ட
மொழியைக் களைதல்
இன்றைய
சூழலில் திருத்தந்தை லியோவின் இந்த உரை மிக அவசரமான, அவசியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.
குறிப்பாக, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் பல்வேறு ஊழல் புகார்களாலும், அரசியல்
துருவமுனைப்பாலும் சட்டம் இயற்ற முடியாமல் தவித்து வரும் இந்த இக்கட்டான அரசியல் சூழலில்,
திருத்தந்தையின் வார்த்தைகள் ஒரு சிறப்பான திசைகாட்டியாக (Moral Compass)
வந்துள்ளன.
‘அரசியல்
எதிரிகளைத் தொடர்ந்து இழிவுபடுத்துவது சனநாயகம் ஆகாது’ என்று
எச்சரித்த திருத்தந்தை, போர்களும் வன்முறைகளும் கொண்ட இச்சூழலில் நமது மொழியும் அன்றாட
உரையாடலும் அன்பை விதைப்பதாகவும் நல்லுறவை வளர்ப்பதாகவும் அமையவேண்டும்; அதற்கு, ‘அதிகாரத்
தொனி கொண்ட மொழியைக் களைதல்’ (Disarming
Language) என்ற சிறப்பானதொரு கருத்தை முன்வைத்துள்ளார்.
வன்முறையை
ஒழிப்பதற்கு முன்பாக நமது சொற்களில் உள்ள வன்முறையை நீக்கவேண்டும். உறுதிப்பாட்டிற்கு
இகழ்ச்சி தேவையில்லை; கருத்து வேறுபாட்டிற்கு அவமதிப்பு தேவையில்லை. மாற்றுக்கருத்துடையோரையும்
மதித்துப் பேசும் பண்பை மீட்டெடுத்தால் மட்டுமே, பேச்சுவார்த்தைகள் மூலம் உலகளாவிய
அமைதியை எட்ட முடியும். ஸ்பெயின் நாடு உலகிற்கே ஒரு முன்மாதிரியாகத் திகழவேண்டும் என்று
அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இறுதியாக,
நாடாளுமன்ற உறுப்பினர்களை நோக்கி, “சட்டத்திட்டங்களை இயற்றும்போது காகிதங்களைப் பார்க்காமல்,
இரத்தமும் சதையுமான மனிதர்களைப் பாருங்கள்” என்று வேண்டுகோள் விடுத்த திருத்தந்தை லியோவின் செய்தி,
உலகத் தலைவர்கள் அனைவருக்குமான படிப்பினையாகும். புனித யாக்கோபின் (Saint James)
ஆசியும், அன்னை மரியாவின் (Our Lady of the Pillar) பேரருளும் கொண்ட ஸ்பெயின் திருநாடு,
அமைதி மற்றும் மனிதநேயத்தின் புகலிடமாகத் திகழ வேண்டும் என்று வாழ்த்தி, அவர் தனது
உரையை நிறைவு செய்துள்ளார்.
திருத்தந்தை
14-ஆம் லியோவின் இந்த மாட்ரிட் பிரகடனம், வெறுமனே ஒரு மதத் தலைவரின் உரையல்ல; மாறாக,
அது உலகளாவிய அமைதி, மனிதக் கண்ணியம் மற்றும் சுதந்திரத்தை நோக்கி மனிதகுலம் பயணிக்கவேண்டிய
பாதையைக் காட்டும் ஒரு கலங்கரை விளக்கமாகும்!
காலத்தின் ஓட்டத்திற்கு ஏற்பத் தன்னைத் தகவமைத்துக்கொள்ளும் சமூகம் மட்டுமே வரலாற்றின் பக்கங்களில் நிலைத்து நிற்கிறது. அச்சு ஊடகங்களின் நறுமணத்தில் திளைத்துக் கொண்டிருந்த தமிழ்கூறும் நல்லுலகம், இன்று எண்மத் தொழில்நுட்பத்தின் விரல் பிடித்து அதிவேகமாக நடைபோடுகிறது.
இத்தகையதொரு
கணினியுகத்தின் தகவல் தொழில்நுட்பப் புரட்சியில், தமிழ்க் கத்தோலிக்கக் கிறித்தவ மதிப்பீடுகளையும், சமூக விழுமியங்களையும் உலகெங்கும் வாழும் தமிழர்களின் இல்லங்களுக்கும் உள்ளங்களுக்கும் கொண்டு சேர்க்கும் உன்னதப் பணியைச் சிறப்பாக
ஆற்றி வருகிறது ‘நம் வாழ்வு’ மின்னஞ்சல் நாளிதழ்.
விதைக்கப்பட்ட
ஒரு சிறு விதை, ஆழமாய் வேரூன்றி இன்று ஆலவிருட்சமாய் வளர்ந்து நிற்பதைப் போல, தனது அர்ப்பணிப்புமிக்கத் தகவல் சேவையால் இன்று 300-ஆம் நாளில் பெருமிதத்துடன் அடியெடுத்து வைக்கிறது ‘நம் வாழ்வு’ மின்னஞ்சல் நாளிதழ்.
வைகறைப்
பொழுதின் அமைதியில், விடியற் காலையிலேயே மக்களின் மின்னஞ்சல் பெட்டிகளை நற்செய்திகளாலும், ஆக்கப்பூர்வமான சிந்தனைகளாலும் நிரப்பும் இந்த நாளிதழ், குறுகிய காலத்தில் படைத்துள்ள சாதனைகள் தமிழ் ஊடக வரலாற்றில் ஒரு புதிய மைல்கல் என்றால் அது மிகையாகாது.
பரந்து விரிந்த
மக்கள்
மன்றம்
ஒரு
நாளிதழின் உண்மையான பலமும் வெற்றியும் அதன் வாசகர் பரப்பிலும், அவர்கள் கொண்டுள்ள மாறாத நம்பிக்கையிலும்தான் அடங்கியுள்ளன. அந்த வகையில், ‘நம் வாழ்வு’ மின்னஞ்சல் நாளிதழ் இன்று ஐந்து இலட்சம் வாசகர்களைக் கடந்து சாதனைப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. உலகெங்கும் சிதறி வாழ்ந்து வரும் தமிழ் கத்தோலிக்கக் கிறித்தவச் சமூகத்தை இணைக்கும் உன்னதப் பாலமாக இது செயல்படுகிறது.
ஆயினும்,
இதன் உள்ளடக்கம் என்பது ஏதோ ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டும் சுருங்கிவிடவில்லை. தமிழ்கூறும் நல்லுலகில் வாழும் யாவரையும் உள்ளடக்கிய ஒரு பரந்த மக்கள் மன்றமாக இது உருவெடுத்துள்ளது. சாதி, மத, மண்டல எல்லைகளைக் கடந்து, மானுட மாண்பையும், சமூக நீதியையும், அறநெறிகளையும் போற்றும் ஒவ்வொரு தமிழரின் காலைப் பொழுதிலும், இந்த மின்னஞ்சல் நாளிதழ் நீங்காத இடம் பிடித்திருப்பது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது.
செய்தி நடையும்
இருவரிச்
சுவையும்
இன்றைய
வேகமான உலகத்தில், பக்கம் பக்கமாகச் செய்திகளைப் படிப்பதற்கு மக்களுக்கு நேரமில்லாத சூழலை உணர்ந்து, ‘சுருக்கமாகவும் சுவையாகவும்’ செய்திகளைத்
தரும் தனித்துவமான வழியை இந்நாளிதழ் கையாண்டு வருகிறது. செய்திகளின் சாராம்சம் சற்றும் குறையாமல், இரத்தினச் சுருக்க நடையில்
செய்திகளை வழங்குவதில் ‘நம் வாழ்வு’ தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்துள்ளது. குறிப்பாக, இதன் ‘இருவரிச் செய்திகள்’
வாசகர்களைப் பெரிதும் கவர்ந்த ஒன்றாகும். உலக நடப்புகளை வெறும் இரண்டு வரிகளில், துல்லியமாகவும் அதேசமயம் சுவாரசியமாகவும் சுருக்கித் தரும் இந்த உத்தி, வாசகர்களின் நேரத்தைச் சேமிப்பதோடு, செய்திகளின் மையப் புள்ளியை உடனடியாக மனத்தில் பதிய வைக்கிறது. இத்தகைய சுருக்கமான செய்தி வடிவமைப்பு, வாசகர்களின் அன்றாட வாழ்வில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி, அவர்களை ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியும், சுறுசுறுப்பான காலைப் பொழுதை நோக்கியும் வழிநடத்துகிறது.
வைகறையில் வசந்தம்
நம்பகத்தன்மைக்கு
அடுத்தபடியாக ஒரு செய்தி ஊடகத்திற்குத் தேவைப்படுவது காலம் தவறாமை. அந்த வகையில், எந்தவொரு தடையுமின்றி, எவ்விதத் தொய்வுமின்றி தினமும் அதிகாலை 5:00 மணிக்கு வாசகர்களின் டிஜிட்டல் தளங்களுக்கு இந்த நாளிதழ் வந்தடைகிறது. தூக்கத்திலிருந்து விழித்தெழும் வாசகர்களுக்கு, உலக நடப்புகளையும் ஆன்மிகப் பதிவுகளையும் உடனுக்குடன் வழங்கும் ஒரு நம்பிக்கைமிகு தோழனாக இது திகழ்கிறது.
வத்திக்கான் முதல்
நம்
வாசல்
வரை
‘நம் வாழ்வு’ மின்னஞ்சல் நாளிதழின் உள்ளடக்கப் பரப்பு உலகளாவியது. வாசகர்களுக்குத் தேவையான அனைத்துச் செய்திகளையும் பன்முகத்தன்மையுடன் இது அள்ளி வழங்குகிறது. சிறப்பாக, உலகக் கத்தோலிக்கத் திரு அவையின் மையமான வத்திக்கானிலிருந்து வெளியாகும் திருத்தந்தையின் செய்திகள், உலக அமைதிக்கான அவரது முழக்கங்கள் மற்றும் ஆன்மிக வழிகாட்டல்கள் உடனுக்குடன் துல்லியமாகத் தமிழாக்கம் செய்து தரப்படுகின்றன. அவ்வாறே, உலகளாவிய அரசியல் மாற்றங்கள் முதல் இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் அன்றாடச் சமூக-அரசியல் நகர்வுகள் வரை அனைத்துச் செய்திகளும் நடுநிலையோடு அலசப்படுகின்றன. மேலும், விளிம்புநிலை மக்கள் மற்றும் சிறுபான்மையினரின்
உரிமைகளுக்கான குரலாக, அவர்களின் வாழ்வாதாரச் சிக்கல்களைப் பேசும் செய்திகளுக்கு இந்நாளிதழ் முக்கியத்துவமளிப்பதையும் வாசகர்கள் நன்கு அறிவர்.
இலக்கிய வாழ்வியலும்,
சிறப்புக்
கட்டுரைகளும்
செய்திகளைத்
தாண்டி, குறிப்பிட்ட அந்த நாளின் முக்கியத்துவம் குறித்தோ அல்லது அன்றாடச் சமூக-அரசியல் சூழல் குறித்தோ எழுதப்படும் சிறப்புக் கட்டுரைகள் இந்நாளிதழின் மகுடமாகும். வெறும் மேலோட்டமான கருத்துகளைப் பதியாமல், வரலாற்றுப் பின்னணியுடனும், கருத்துச் செறிவுடனும் எழுதப்படும் இப்பகுப்பாய்வுக் கட்டுரைகள், வாசகர்களின் சிந்தனையைத் தூண்டி, சமுதாயப் பார்வையை விசாலமாக்குகிறது.
தமிழ்மொழியின்
செழுமையை எடுத்தியம்பும் இலக்கியக் குறிப்புகள், மனித உறவுகளை மேம்படுத்தும் உளவியல் ஆலோசனைகள் மற்றும் இளையோர் நல்வாழ்விற்கான வழிகாட்டல்கள் என இதன் உள்ளடக்கம்
யாவும், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்குத் தங்களின் வேர்களையும் மொழியையும் பண்பாட்டையும் அடுத்தத் தலைமுறைக்குக் கடத்துவதற்கான உன்னதக் கருவியாக மாற்றியுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பா, அரபு நாடுகள், தென்கிழக்கு ஆசியா என உலகின் எந்த
மூலையில் இருந்தாலும், தாயகத்தோடும் தமிழோடும் விடியலைக் காணும் வாய்ப்பை இது சாத்தியமாக்கியுள்ளது.
தொழில்நுட்பமும்
தமிழ்
ஊடகவியலும்
அச்சு
ஊடகங்களின் செலவீனங்களும் பரவலாக்கச் சிக்கல்களும் அதிகரித்துள்ள இந்நாளில், சூழலியலுக்கு உகந்த ‘காகிதமில்லா’ ஊடகமாக
மின்னஞ்சல் வழியே நேரடியாக வாசகர்களைச் சென்றடைவது ஒரு தனித்துவமான உத்தியாகும். ‘நம் வாழ்வு’ நாளிதழின் வடிவமைப்பும், உள்ளடக்கக் கட்டமைப்பும் அலைப்பேசி மற்றும் கணினிகளில் எளிதாக வாசிக்கும் வண்ணம் நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது.
தினமும்
காலையில் வாசகர்களின் புலனம் முகவரிக்கு நேரடியாகச் செய்திகள் வந்து சேர்வதால், தேட வேண்டிய அவசியமின்றி உடனுக்குடன் உலக நடப்புகளைத் தெரிந்துகொள்ள முடிகிறது. இந்தத் தொழில்நுட்ப நேர்த்தியே, குறுகிய காலத்திற்குள் நான்கு இலட்சம் வாசகர்களைப் பெற்றுத் தனித்துவமான முத்திரை பதிக்க வைத்துள்ளது.
மின்னணு
ஊடகப் பரப்பில் தினமும் நூற்றுக்கணக்கான தளங்கள் தோன்றி மறையும் சூழலில், ஒரு நாளிதழைத் தொடர்ந்து 300 நாள்கள் தங்குதடையின்றி, சிறப்பாகக் கொண்டு வருவது என்பது சாதாரண காரியமன்று. இதற்குப் பின்னால் ஆசிரியக் குழுவின் அயராத உழைப்பும், செய்தியாளர்களின் அர்ப்பணிப்பும், உலகளாவிய தமிழ்க் கத்தோலிக்கச் சமூகத்தின் பேராதரவும் அடங்கியுள்ளன. விமர்சனங்களை எதிர்கொண்டு, வாசகர்களின் தேவைகளை உணர்ந்து, அவ்வப்போது தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும் தன்மையே ‘நம் வாழ்வு’ நாளிதழைத் தொய்வின்றி இயக்கி வருகிறது. உண்மைக்கு அரணாகவும், நலிந்தோர் குரலாகவும் ஒலிக்கும் இதன் கொள்கை முழக்கம் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது.
நெஞ்சம் நிறை
நன்றி!
300-ஆம் நாளில்
அடியெடுத்து வைக்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கத் தருணத்தில், இந்நாளிதழின் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எங்களின் நன்றியைக் காணிக்கையாக்குகிறோம். தொடர்ந்து ஆதரவளித்து வரும் ஆயர் பெருமக்கள், செய்திகளை
உடனுக்குடன் வழங்கி வரும் செய்தியாளர்கள், ஆசிரியர் குழுவினர், நேர்த்தியாக வடிவமைக்கும் தொழில்நுட்பக் குழுவினர், இதற்குப் பேராதரவு நல்கி வரும் வாசகப் பெருமக்கள், உலகளாவிய தமிழ் கத்தோலிக்கச் சமூகம், சிறப்பாக பொருளுதவி தந்து தாங்கிப்பிடிக்கும் நல்மனம் கொண்டோர் என அனைவருக்கும் எமது
நெஞ்சார்ந்த நன்றியைச் சமர்ப்பிக்கிறோம்.
300-ஆம் நாளில்
புதிய பொலிவோடும், பன்மடங்கு வீரியத்தோடும் அடியெடுத்து வைக்கும் ‘நம் வாழ்வு மின்னஞ்சல் நாளிதழ்’ உலகத் தமிழர்களின் உன்னத நாளிதழாகப் பயணித்திட தொடர்ந்து பேராதரவு நல்கிட அன்போடு வேண்டுகிறேன்!
முதன்மை
ஆசிரியர்
‘தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம்’ எனப் போற்றப்படும் தஞ்சைத் தரணியின் நிலை இன்று நெஞ்சைப் பிளப்பதாய் உள்ளது. கர்நாடக அரசு, காவிரி நதியில் நமக்குச் சேரவேண்டிய தண்ணீரை விடாமல் முரண்டு பிடிப்பதால், அந்நீரை நம்பியே விவசாயம் செய்து வரும் தமிழ்நாட்டு விவசாயிகளின் கண்களில் இன்று கண்ணீர் வழிந்து கொண்டிருக்கிறது.
தஞ்சைப்
பகுதிகளின் நிலங்களில் விளையும் விளைபொருள்கள் தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் அனுப்பப்படுவதால் தஞ்சைத் தரணியைத்தான் தமிழ்நாடே தன் வாழ்வாதாரத்திற்கு நம்பியிருக்கிறது. இச்சூழ்நிலையில் ஆரம்ப நிலையிலிருந்தே கர்நாடகம் இப்பிரச்சினையில் நாடகங்களைத்தான் அரங்கேற்றி வருகிறது. ஆனால், அது போடும் நாடகத்தை யாராலும் இரசிக்கத்தான் முடியவில்லை.
காவிரியின் அமைப்பு
காவிரி
நதி கர்நாடக மாநிலத்தின் குடகு மாவட்டத்தில் உற்பத்தியாகி தமிழ்நாட்டில் முடிகிறது. 800 கி.மீ. நீளமுள்ள
காவிரி நதி 320 கி.மீ. தூரம்
கர்நாடக மாநிலத்திலும், 64 கி.மீ. கர்நாடக-தமிழ்நாடு எல்லையிலும், 416 கி.மீ. தமிழ்நாட்டிலும்,
125 கி.மீ. நீளம் காவிரி டெல்டா பகுதியிலும் பாய்ந்து இறுதியில் சிறு ஓடையாக வங்கக் கடலில் கலக்கிறது.
காவிரியின் பழமை
காவிரியின்
பாசனப் பகுதி, சிந்து நதிப் பள்ளத்தாக்கைப் போன்று மிகவும் பழமை வாய்ந்தது. கிருஷ்ணா, கோதாவரி ஆறுகளின் பாசனங்கள் இதற்கு நீண்ட காலத்திற்குப் பின்பே உருவாக்கப்பட்டன என்பதிலிருந்து காவிரியின் பழமையை நாம் அறிந்துகொள்ள முடியும்.
கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் ஒருமுறை காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதன் கரைகள் உடைந்துவிட்டனவாம். உடைந்த கரைகள் வழியே வெளியேறிய தண்ணீர் தற்போது உள்ளாறு என்று அழைக்கக்கூடிய சிறு ஓடை வழியாகக் கொள்ளிடத்தில் கலந்ததாம். இந்த உடைப்பைச் சரிசெய்வதற்காக அப்போது சோழ நாட்டை ஆண்ட மன்னன் கரிகால் சோழன் என்பவன், இன்றும் காவிரியின் குறுக்கே கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் கல்லணையைக் கட்டி முடித்தானாம். இந்த வரலாற்றுச் சான்றிலிருந்து, ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளாகக் காவிரித் தண்ணீரைத் தமிழர்களாகிய நாம் உபயோகப்படுத்தி வந்திருக்கிறோம் என்கிற உண்மை தெரிய வருகிறது. எனவே, தொடர்ந்து அந்நீரைப் பயன்படுத்துவதற்கான உரிமை நமக்கு நிறையவே இருக்கிறது.
பாசனத் திட்டங்கள்
காவிரி
நீர், தமிழ்நாட்டுக்குக் கிடைக்கவேண்டிய அளவைப் பொறுத்து, வெவ்வேறு காலங்களில், பல்வேறு பாசனத்திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன. அத்திட்டங்களின்படி காவிரி டெல்டா பகுதிகள் 12,90,000 ஏக்கர்களும், மேட்டூர் பாசனத்திட்டம் 3,22,600 ஏக்கர்களும், கட்டளைத் திட்டம் 1,22,300 கொள்ளிடம் கீழ் அணைக்கட்டு 1,63,100 சேலம்-திருச்சி கால்வாய் 1,12,000 சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு 60,700 மேட்டூர் கால்வாய் 45,000 புதிய கட்டளை உயர்மட்டக் கால்வாய் 20,600 புள்ளம்பாடி கால்வாய் திட்டத்தின்படி 23,100 ஏக்கர்களும் காவிரி நீர் வரத்தின் மூலம் பயன்பெறவேண்டும். ஆனால், கர்நாடக அரசு செய்துவரும் ஒப்பந்த மீறல் மோசடிகளால் இத்திட்டங்களின் பலன் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு முழுமையாகக் கிடைக்காமல் போய்விட்டது. இதன் காரணமாக, காவிரியை நம்பியிருக்கும் சுமார் 35 இலட்சம் விவசாயத் தொழிலாளர்கள் இன்று வேலை இழந்து நிற்கிறார்கள். 21 இலட்சத்து 59 ஏக்கர் நிலம், காய்ந்து கருகிக் கொண்டிருக்கிறது.
முதல் ஒப்பந்தம்
தமிழ்நாடு,
கர்நாடகம் என்று பெயர் மாற்றம் அடையும் முன்பே, இவ்விரு மாநிலங்களுக்கிடையே காவிரிப் பிரச்சினைகள் ஆரம்பித்துவிட்டன. இப்பிரச்சினையைப் பிள்ளையார்சுழி போட்டுத் தொடங்கிவைத்தது அப்போதைய மைசூர் அரசுதான். அது அன்றைய சென்னை அரசின் அனுமதி பெறாமலேயே தன் விருப்பத்திற்குப் பாசனப் பரப்புகளை அதிகரிக்கத் தொடங்கியது. மைசூர் அரசின் தன்னிச்சையான தான்தோன்றித்தனமான போக்கால், சென்னை அரசின் பாசனப்பரப்புகள் பெரிதும் பாதிப்புக்கு உட்பட்டன. இதன் எதிரொலியாக 1890-1892-ஆம் ஆண்டுகளில் இரு மாநிலங்களுக்கிடையேயும் பேச்சுவார்த்தைகள் நடந்து, முடிவில் 1892-ஆம் ஆண்டு ஓர் ஒப்பந்தமும் ஏற்பட்டது. அவ்வொப்பந்தத்தின்படி, காவிரியிலோ, அதன் துணை நதிகளான ஹேமாவதி, இலட்சுமணத் தீர்த்தம், கபினி, சுவர்ணவதி, யகாச்சி ஆகியவற்றிலோ மைசூர் அரசு அணைகள் கட்ட விரும்பினால், சென்னை அரசின் அனுமதி பெற்ற பின்பே நிறைவேற்றிக்கொள்ளவேண்டும்.
மேலும், மைசூர் அரசு அணைகள் கட்டுவது, தனது பாசன வசதிகளுக்கு இடையூறு ஏற்படுத்துமென்று தெரிந்தால், அதற்கு அனுமதி மறுக்கின்ற அதிகாரத்தையும் சென்னை அரசுக்கு அந்த ஒப்பந்தம் வழங்கியது.
புதிய ஒப்பந்தம்
போகப்போக
கர்நாடக அரசின் சுயரூபம் வெளிப்பட்டது. 1892-ஆம் ஆண்டின் ஒப்பந்த விதிகளை அப்பட்டமாக மீறத் தொடங்கியது கர்நாடக அரசு. சென்னை அரசின் அனுமதி பெற்று 1911-ஆம் ஆண்டு 11 டி.எம்.சி.
தண்ணீரைத் தேக்கி வைக்கும் உயரத்தில் சுண்ணம்பாடி அணையைக் கட்டத் தொடங்கியது மைசூர் அரசு. ஆனால், எதிர்காலத்தில் 41 டி.எம்.சி.
தண்ணீரைத் தேக்கிவைக்கும் உயரத்தில் மாற்றி அமைத்துக் கொள்ளலாம் என்ற சுயநல எண்ணத்தோடு ஆரம்பத்திலேயே அணையினுடைய அடித்தளத்தை அகலமாக அமைத்துக்கொண்டது. இதன் மூலம் ஒப்பந்த விதிகளுக்கு முரணாகச் செயல்பட்டது மைசூர் அரசு.
இரு
மாநிலங்களுக்கிடையேயும்
பிரச்சினைகள் வளர்ந்தன. பிரச்சினை அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு விடப்பட்டது. ஆனால், நீதிபதி ஹென்றி கிரிஃபின் என்பவர் மைசூர் அரசுக்கு ஆதரவாக அப்போது தீர்ப்புச் சொல்லிவிட்டார். எனவே, பிரச்சினையை ஒன்றிய அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றது சென்னை அரசு. ஒன்றிய அரசும் மைசூர் அரசுக்குச் சாதகமாகவே நடந்து கொண்டது.
எங்கும்
நியாயம் கிடைக்காமல் போகவே, இறுதியில் இங்கிலாந்திலுள்ள இந்தியச் செயலரிடம் சென்னை அரசு முறையீடு செய்தது. அவர் எடுத்துக்கொண்ட முயற்சியால் இரு மாநிலங்களுக்கிடையேயும்
1924-ஆம் ஆண்டு ஒரு புதிய ஒப்பந்தமும், 17-06-29-இல் மற்றொரு துணை ஒப்பந்தமும் ஏற்பட்டது.
இந்த
ஒப்பந்தத்தின்படி முதலாவது, 44.827 டி.எம்.சி
கொள்ளளவுள்ள கிருஷ்ணசாகர் அணைக்கட்டை மைசூர் அரசு கட்டிக்கொள்ளலாம். இதன் மூலம் 12.5 இலட்சம் ஏக்கர் புதிய பாசனப் பரப்பை அது அதிகரித்துக்கொள்ள முடியும். இரண்டாவது, 93.5 டி.எம்.சி.
கொள்ளளவுள்ள மேட்டூர் அணையைக் கட்டி, புதிதாக 3.01 இலட்சம் ஏக்கர் நிலத்திற்கு சென்னை அரசு வசதி செய்து கொள்ளலாம். மூன்றாவது, 45 டி.எம்.சி.
கொள்ளளவுள்ள அணையைத் தனது துணை நதிகளில் அமைத்து 1.10 இலட்சம் ஏக்கருக்குப் புதிய பாசன வசதிகளை மைசூர் அரசு ஏற்படுத்திக்கொள்ளலாம். எனினும், சென்னை அரசின் நீர்ப்பாசன வசதிக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாத வகையில் இது அமைய வேண்டும். எனவே, இது தொடர்பான அனைத்து விவரங்களையும் சென்னை அரசுக்கு அறிவிக்க வேண்டும்.
நான்காவது,
சென்னை அரசு தனது துணை நதிகளில் புதிய அணைகள் அமைத்துக் கொள்ளலாம். பவானி, நொய்யல், அமராவதி நதிகளில் அணைகளைக் கட்டினால் அதன் கொள்ளளவுகளில் அறுபது விழுக்காட்டிற்கு மேற்படாதவாறு காவேரியின் துணை நதிகளில் ஒன்றில் மைசூர் அணைகளைக் கட்டிக்கொள்ளலாம். எனினும், இது சென்னை அரசுக்குச் சேர வேண்டிய நீரின் அளவைப் பாதிக்காத வகையில் இருக்கவேண்டும். ஐந்தாவது, இந்த ஒப்பந்தம் உருவாகி ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர், இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளக்கூடிய புதிய மாறுதல்களைச் செய்து கொள்ளலாம்.
கர்நாடகத்தின்
ஒப்பந்த
மீறல்
ஐம்பது
ஆண்டுகளுக்குப் பிறகு தேவைப்பட்டால் ஒப்பந்தத்தின் சில பிரிவுகளைச் சம்பந்தப்பட்ட இரு மாநில அரசுகளும் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் அதை மறுபரிசீலனை செய்து மாற்றியமைத்துக் கொள்ளலாம் என்கிறது மேற்குறிப்பிட்ட விதிகளின் கடைசிப் பகுதி. ஆனால், 1892-ஆம் ஆண்டிலும், 1924-ஆம் ஆண்டிலும் ஏற்பட்ட இரண்டு ஒப்பந்தங்களுமே காலாவதியாகிவிட்டதாக, கர்நாடக அரசு கொக்கரித்துக் கொண்டிருக்கிறது. மேலும், அன்றைய மைசூர் அரசுக்கு விதிக்கப்பட்ட ஒப்பந்த விதிகள், இன்றைய கர்நாடக அரசைக் கட்டுப்படுத்த முடியாது என்றும் அது வாதிடுகிறது.
மற்றொரு
விதியில் தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய தண்ணீரை முழுவதும் அனுப்பிய பின்னரே தனக்கு நிர்ணயிக்கப்பட்ட தண்ணீரைக் கர்நாடக அரசு கிருஷ்ணராஜசாகர் அணைக்கட்டில் சேமித்துக்கொள்ளலாம் என்றும், நிர்ணயிக்கப்பட்ட அளவைச் சேமித்தவுடன் மேலும் உபரியாக வரும் தண்ணீரில் தேவைப்படும் அளவு தமிழ்நாட்டிற்குக் கொடுத்துவிடவேண்டுமென்றும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், கர்நாடக அரசோ தனது கிளை நதிகளில் ஹேமாவதி, ஹேரங்கி, கபினி, சுவர்ணவதி, இலட்சுமணதீர்த்தம் போன்ற அணைகளைக் கட்டி, கிருஷ்ணராஜசாகர் அணைக்கட்டுக்கும், மேட்டூர் நீர்த்தேக்கத்திற்கும் வருகின்ற தண்ணீரைத் தடுப்பதால், இப்போதெல்லாம் காவிரியில் வருகின்ற தண்ணீரின் அளவு குறைந்துவிட்டது. அதனால்தான் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தரமுடியவில்லை என்றும் கர்நாடகம் கதைவிடுகிறது.
நடுவர் மன்றம்
இதுவரைக்கும்
தமிழ்நாட்டை ஆண்ட அனைத்து அரசியல் கட்சிகளும் காவிரி நீர் பங்கீட்டுப் பிரச்சினையைக் குறித்து 27 முறைகளுக்கு மேல் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றன. ஆனால், எல்லாமே தோல்வியில்தான் முடிந்திருக்கின்றன அல்லது நாய்க்கு எலும்புத்துண்டைப் போடுவதைப்போலக் குறைந்த அளவு தண்ணீரே திறந்து விடப்பட்டுள்ளது. எனவே, 1983-இல் ‘தமிழ்நாடு காவிரி நீர்ப்பாசன விளைபொருள் விவசாயிகள் சங்கம்’ எனும் அமைப்பு காவிரிப் பிரச்சினையைக் கையாள நடுவர் மன்றம் ஒன்றை அமைக்க உத்தரவிட வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
மேலும்,
இது குறித்து 4-12-86 அன்று தமிழ்நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு மனு ஒன்றையும் கொடுத்தனர். இதன் பலனாக 4-5-90-ஆம் நாளில் நடுவர் மன்றம் அமைக்குமாறு ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
21-1-90 அன்று நடுவர்
மன்றத்தை ஒன்றிய அரசு அமைத்தது. பம்பாய் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி திரு. சித்தகோஷ் முகர்ஜி, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி திரு. எஸ்.டி. அகர்வால், பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதி திரு. என்.எஸ். ராவ் ஆகியோர் அதற்கு நீதிபதிகளாக நியமிக்கப்பட்டார்கள். நடுவர் மன்றம் அமைத்ததன் பலனாக அதன் நீதிபதிகளிடம் இலட்சக்கணக்கான மக்கள் தங்கள் குறைகளை நேரிடையாகச் சொல்ல வாய்ப்புக் கிடைத்ததே தவிர, மற்றபடி தமிழ் நாட்டிற்கு நேரிடையாகத் தண்ணீர் திறந்துவிடச் சொல்ல அதற்கு அதிகாரமில்லாமல் போனது ஏமாற்றமளிக்கிறது.
இந்நிலையில்,
சுப்ரீம்கோர்ட் உடனடியாகக் காவிரி ஆணையத்தை அமைக்கச்சொல்லி ஒன்றிய அரசுக்கு ஆணையிட்டிருக்கிறது. ஆனால், ஒன்றிய அரசு, செவிடன் காதில் ஊதிய சங்காக இருக்கிறது. இச்சூழ்நிலையில், எரிகிற வீட்டில் பிடுங்கியது இலாபம் என்கிற கதையாக ஒவ்வோர் அரசியல் கட்சிகளும் ஓட்டுவேட்டை நடத்த தன்னாலான பங்களிப்பைச் செலுத்திக்கொண்டிருக்கின்றன.
தற்போது அரங்கேறவிருக்கும் மேடையில் கர்நாடகம் எந்த மாதிரியான வேடம் கட்டவிருக்கிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
இந்தியச் சனநாயகக் குடியரசின் பிரதம அமைச்சராக, பண்டிதர் நேருவைக் காட்டிலும் அதிகக் காலம் பதவிப் பெருமை பெற்றவராக மோடி புகழப் பெறுகின்ற காலம் இது. இம்மோடியின் இரு கரங்களாக உன்னதப் பணியாற்றி வருபவர் நம் உள்துறை அமைச்சர் அமித்ஷா. மேற்கண்ட இருபெரும் அருந்தலைவர்களின் ஆசிபெற்று அல்லது அனுமதி பெற்று, மேற்கண்ட இருவரும் சார்ந்த அல்லது இவ்விருவரையும் ஆட்சியில் அமர்த்திய பாரதிய சனதா கட்சியிலிருந்து தமிழ்நாட்டின் மேனாள் பாரதிய சனதா கட்சித் தலைவர் மேற்படி கட்சியிலிருந்து விலகியுள்ளாராம்! இதுவரை கேள்விக்குட்படுத்தாமல் இவரைத் தாங்கிய கட்சியிலிருந்து ‘தலைவர்களின் அனுமதியோடு’ வெளியே வந்திருக்கிறாராம்!
இப்போக்கு
வரலாற்றில் கேள்விப்படாத ஒன்றில்லையா? இவர் வருகைக்குப்பின்தான் தமிழ்நாட்டில் பாரதிய சனதா பெரிய வளர்ச்சி கண்டதாம்! வெறும் மூன்று விழுக்காட்டில் நின்றிருந்த பாரதிய சனதாவைப் 11 விழுக்காட்டிற்கு உயர்த்திக்காட்டினாராம்! தமிழ்நாட்டு இளைஞர் கூட்டம் பா.ச.க.வைப் பின் தொடர இவரே காரணமாம்! இவர் மேற்கொண்ட ‘என் மண், எம் மக்கள்’ நடைபயணத்தால் தமிழ்நாடே அதிர்ந்ததாம்! பா.ச.க.
புத்துயிர்ப்பு பெற்றிருந்ததாகவும் பாராட்டுகின்றனர். இத்தனை சிறப்பிற்கும் பெருமைக்கும் உரிய இவரைப் பா.ச.க.
உதறவில்லை; பா.ச.க.
இவரைக் கழட்டிவிடவும் இல்லை.
இத்தகைய
அர்ப்பண உணர்வுமிக்க ஓர் இளந் தலைவரைப் பா.ச.க.
வெளியே அனுப்பாதபோது, பா.ச.க.
எனும் கட்சியின் அடிப்படைக் கட்டமைப்பின்மீது, அதன் செயல்பாட்டின்மீது இக்கட்சியின் அடிப்படைக் கொள்கையான இந்துத்துவாமீது, மாறாத காதலும் பக்தியும் கொண்டிருந்த இந்த இளம் காவல்துறை அதிகாரி ஏன் வெளியே வருகிறார்? பாரதிய சனதாவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். கொண்டிருக்கும் எந்தக் கொள்கையையும் எப்போதும் விமர்சிக்கக்கூடத் திராணியற்ற இம்மனிதர், ‘பாரதிய சனதாவிலிருந்து வெளியேறுகிறேன்’ என்று
அறிவிக்கிறார்.
பாரதிய
சனதாவிலிருந்து அண்ணாமலை விலகியது குறித்து நமக்கு வேதனை எதுவுமில்லை. பாரதிய சனதா எனும் ஒரு கட்சி, வலுவான மதவாதச் சித்தாந்தத்தைக் கொண்டது என்பதும், இந்திய வர்ணச் சமூகக் கட்டமைப்பை எப்படியும் காக்கவேண்டிய உறுதியெடுத்த கட்சி என்பதும், இந்தியா விடுதலை பெற்றபோது இந்திய தேசியத் தலைவர்கள் ஒன்றுகூடி ஏற்றுக்கொண்டு அறிவித்த சனநாயகம், சமத்துவம், மதச்சார்பின்மை, இறையாண்மை எனும் மகோன்னதங்களை அண்ணாமலை உதறி வந்ததாகச் சொல்லப்பெறும் பாரதிய சனதா ஏற்காமல்; ஆனால், சனநாயகம் தந்த தேர்தல்வழி மதப் பெரும்பான்மையினரின் வாக்குகளைப் பெற்று, மதப்பெரும்பான்மைவாதம் (Majority) எனும்
தீய கருத்தியல் கொண்டு ஆட்சிக் கட்டிலை அலங்கரித்து வரும் பா.ச.க.வின் உண்மை முகத்தை I.P.S. பட்டம் பெற்ற அண்ணாமலை தெரியாமல் இருந்திருக்கிறார் என்று எவராவது கூறினால் நம்பிடலாமா? இது மிகப்பெரிய பொய்யல்லவா!
இவர் பாரதிய
சனதாவிலிருந்து
விலகினாரா?
அண்ணாமலை
பாரதிய சனதாவிலிருந்து விலகிவிட்டாரா? பா.ச.க.விலிருந்து விலகியதாகக் கூறப்படுவது ஒரு நாடகமே என்பதே உண்மையானால், இந்நாடகத்தின் உள்ளடக்கம்தான் என்ன?
நடந்து
முடிந்த தேர்தல் பரப்புரையின்போது, அ.தி.மு.க. கூட்டணியின் ஒரு
சிறிய கூட்டுக் கட்சியான பா.ச.க.வுக்குப் பரப்புரை மேற்கொண்ட போது, கட்சியின் உயர் பதவி எதுவும் வகிக்காத நிலையிலும், தமிழ்நாடு எங்கும் ஹெலிகாப்டரில் பயணம் செய்து பரப்புரை மேற்கொள்ளும் வாய்ப்பு இவருக்கு மட்டுமே வழங்கப்பட்டிருந்தது என்ற உண்மையையும் நாம் மறந்துவிடக்கூடாது.
தமிழ்நாட்டு
ஊடகங்கள் அதிர்ந்து போயுள்ளதுபோல் பெரிய நாடகங்களை அரங்கேற்றி வருகின்றன. மகாத்மாவின் மரணம், பண்டிதர் நேருவின் மறைவு இந்திய அரசியலில் ஏற்படுத்தி விடாத வெற்றிடம்போல், பெருந்தலைவர் காமராசரும், தந்தை பெரியாரும் மறைந்தபோது தமிழ்நாட்டு அரசியல் வானில் உருவாகாத வெறுமை போலல்லாமல், இன்று ஏதோ காரணம் பற்றி அரசுப் பதவி துறந்து, தமிழ்நாட்டு அரசியல் களம் புகுந்து ‘பிரஸ் மீட்’ செய்துவந்த ஒரு முதிர்ச்சியற்ற இளைஞர், மக்களால் எப்போதுமே நிராகரிக்க வேண்டிய ஒரு கட்சியிலிருந்து, தான் நேசிக்கும் தலைவர்களின் அனுமதியோடு வெளியே வந்த ஒரு புனைச் செய்தியை தமிழ்நாட்டில் புகுத்தி, இச்செய்தியின் மூலம் தமிழ்நாடே அதிர்ந்துபோனதுபோல ஒரு பொய்யானப் பாவனையைக் கட்டமைக்கின்ற கபடத்தையும் பார்த்து வருகிறோம்.
பா.ச.க.வின்
புதிய
நாடகம்
அண்ணாமலை
பா.ச.க.வைத்
துறக்கவில்லை; அண்ணாமலை விலகினார் என்பது போன்ற நாடகத்தைச் சாதுரியமாக அரங்கேற்றி வருகிறது பா.ச.க.
அண்ணாமலை புதிய இயக்கம் ஒன்றை உருவாக்கப்போவதாக அறிவித்த நொடியில் இலட்சக்கணக்கானோர் ஆதரவு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இன்றைய கணக்குப்படி பதினேழு இலட்சமாம்! அண்ணாமலை எனும் இளைய அரசியல் தலைவர், இத்தனை எண்ணிக்கையில் ஈர்க்கப்படுகிறார் என்பது உண்மையாயின் இது போற்றுதற்குரியது என்பதில் மறுப்பில்லை. அண்ணாமலை கட்சியிலிருந்து வெளியேறியதாகக் கூறப்படும் நிலையில், ‘ஏன் வெளியேறினார்?’ என்பதற்கான காரணம் கூறவில்லை; ஏன் என்ற காரணத்தையும் கூறவில்லை என்பது மட்டுமல்லாமல், தான் உருவாக்கவிருக்கும் இயக்கத்தின் நோக்கம் அல்லது இலக்கு என்ன என்பது பற்றியும் எதுவும் கூறவில்லை.
இயக்கத்தின்
பெயரை அறிவித்த அண்ணாமலை, இயக்கத் தோழர்களுக்கு அரசியல் பயிற்சி அளிக்கப்போவதாகவும் அறிவிக்கிறார். மேனாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் கொள்கை வழி இயக்கம் அமைவதாகக் கூறுகிறார்.
அப்துல்
கலாம் நல்ல மனிதர்; சிறந்த அறிவியல் அறிஞர். அண்ணாமலை, தான் தெரிவுசெய்த இளையோருக்கு அளிக்கவிருக்கும் அரசியல் பயற்சியில் கலாம் அவர்களின் கொள்கை இடம்பெற வேண்டுமே?
அப்துல்
கலாமின் அரசியல்
நிலைப்பாடு என்ன? கலாம் என்ன அரசியல் பேசினார்? நல்ல மனிதராகிய கலாம், சமூகத்தில் அரசியல் ரீதியாக ஒதுக்கப்பட்டு வரும் இசுலாமியர் பக்கம் இருந்ததே இல்லை. தனக்குக் கிடைத்த பதவி மூலம், தன்னைப் பழுதுபடாமல் பார்த்துக்கொண்டார். இந்துத்துவ அரசியலாருக்கு எப்போதுமே நியாயப்படுத்தும் சில முகமூடிகள் தேவைப்படும். இம்முகங்களில் தலித் ஒருவர் குடியரசுத் தலைவராக்கப்படுவார்; இவரைப் போல், ஒரு பழங்குடியினர் ஒருவர் அல்லது ஓர் இசுலாமியர் ஒருவர் முகமூடிகளாகக் காட்டப்பெறுவார். கலாம் அவர்களை இரண்டாம் முறையாக முன் மொழிந்தபோது, காங்கிரஸ் மறுத்த நிலையில் இந்துத்துவர்கள் கலாமை ஆதரிக்க மறுத்தமையை அரசியலாக்கியது. ஒரு கலாமை ஆதரித்து இசுலாமிய ஆதரவு நிலை எடுத்தது போலக் காட்டிக் கொண்ட இந்துத்துவர்களின் போலி அரசியலை அனைவரும் அறிவர். கலாமின் கொள்கைகளைத் தூக்கிச் சுமப்பதாகக் காட்டிக் கொள்ளும் நாடகத்தைப் புரிந்துகொள்வோம்.
ஒன்றியத்தை
ஆளும் கட்சிகள் மாநில மொழியைப் புரிந்து கொள்வதில்லையென்ற ஒரு சொற்றொடர் மூலம் இவர் காட்ட விரும்புவது என்ன? தமிழ்நாடு பேசிய திராவிடத்தை, திராவிடம் பேசிய தமிழ்த் தேசியம், மாநிலச் சுயாட்சி, தமிழ்ப் பாரம்பரியம் ஆகியவை இவரின் அரசியல் பேச்சுகளில் (Discourse) என்றுமே
இடம்பெற்றதில்லை. கோவையை
மையமாகக் கொண்டு இவர் ஆற்றிய சிறுபான்மை வெறுப்பரசியலை வரலாறு மறக்குமா? கோவையில் ‘சிலிண்டர் வெடிப்பு’
என்ற பெயரில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பின்போது எவ்வளவு ஆக்ரோஷமாக நடந்துகொண்டார் என்பதை யார் மறக்க இயலும்?
எப்படி மறக்க
முடியும்?
தமிழ்நாட்டுக்
கிறித்தவர் மட்டுமல்லாமல், மனித உரிமைகள்மீது அக்கறை கொண்ட எவராலும் மறக்க இயலாத நிகழ்வொன்றை இங்கு நினைவுபடுத்துதல் இவரை யாரென்று காட்ட துணை போகலாம். கும்பகோணம் மறைமாவட்டத்தின் மிக்கேல்பட்டி கிராமத்து கத்தோலிக்கப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி லாவண்யாவின் மரணத்திற்குக் கட்டாய மதமாற்றமே காரணம் என்று எழுப்பப்பட்ட பிரச்சாரத்திற்குத் தலைமை தாங்கியவர் இந்த அண்ணாமலை. பொய்வழக்குத் தொடுத்து சிறைவைக்கப்பட்ட அருள்சகோதரி அனுபவித்த கொடுமைகள் பல. கபடமாய், மதமாற்ற நெருக்குதலால் ஏற்பட்ட மரணமே என்று பொய்யுரைத்து, இவ்வழக்கை சி.பி.ஐ.
விசாரிக்கவேண்டும் என்று வற்புறுத்தியவர் இவர். மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சாமிநாதன்
தந்த ‘விசனப்படும் விந்தை தீர்ப்பும்’ (நீதியரசர்
சந்துரு) இப்பிரச்சினையுள் அடக்கம்.
வழக்கை
விசாரணைக்கு எடுத்துக்கொண்டு தீவிரமாக விசாரித்து, லாவண்யா மரணத்தில் மதமாற்றம் காரணமில்லை என்ற தீர்ப்பு தரப்பட்டு பல மாதங்களாகியும், அண்ணாமலை வருத்தம்
தெரிவிக்கவில்லை, மன்னிப்பும் கோரவில்லை.
அண்ணாமலை
எனும் காவல்துறை உயர் அதிகாரி பா.ச.க.வின் உறுப்பினராகும் முன்னே அதன் விசுவாசியாகிவிட்டார் என்பதே உண்மை. இன்று புதிதாக உருவெடுத்துள்ள த.வெ.க.
எனும் சக்தியை அண்ணாமலை போன்ற ஒருவரால் எதிர்கொள்வது சாத்தியமாகலாம் என்ற கனவும் இருக்கலாம். பாரதிய சனதாவின் தேர்தல் வலு நொறுங்கிப்போயிருந்தாலும், ஏற்கெனவே விதைக்கப்பட்ட வகுப்புவாதக் கருத்தியல் இன்னும் நீர்த்துப் போகாத நிலையில், புதிய பெயரோடு தமிழ்நாட்டு மக்களைக் கவர்ந்திழுக்க உருவாக்கப்படும் (Manufacture) அணியே
அண்ணாமலையின் தலைமையில் உருவாகும் புதிய அணி.
இம்மாதிரியாகப்
புதுவடிவங்களில் புதுப்பெயரோடு அணிகளைத் திரட்டுவது ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்புக்குப் புதியதல்ல; தமிழ்நாட்டு மண்ணிற்கென உருவாக்கப்பட்ட இந்து முன்னணியும், அதன் பின்பு இந்து மக்கள் கட்சியும் இதற்குச் சில எடுத்துக்காட்டுகள்.
மதவாத
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றுக்கணக்கிலான கிளை அமைப்புகள் நாடு முழுவதும் தம் கருத்தியல் வீச்சு மூலம் இந்திய ஒழுங்கமைவைச் சிதைத்து வருகின்ற நிலையில் மோடி, அமித்ஷா ஆசியோடு அண்ணாமலை தொடங்க இருப்பது மற்றுமொரு சங்கப் பரிவார அமைப்பே! பா.ச.க.வின் மற்றோர் அரசியல் அணியே!
இரவு 2.15 மணி.…
மருத்துவமனை
வழித்தடங்கள் மெதுவான வெளிச்சத்தில் அமைதியாக நின்றுகொண்டிருந்தன. பகலில் மக்கள் கூட்டத்தால் நிரம்பிய அந்த இடம், இப்போது ஓர் ஆலயத்தைப் போல அமைதியாக இருந்தது.
ஆனால்,
அந்த அமைதிக்குள் எத்தனை கதைகள்?… எத்தனை பயங்கள்? எத்தனை கண்ணீர்கள்? ICU வாசலுக்கு வெளியே ஒரு வயதான நபர் அமர்ந்திருந்தார். கையில் பழைய செபமாலை. உதடுகள் மெதுவாக நகர்கின்றன. ‘அன்னை மரியே!… என் மகனை மட்டும் காப்பாத்திடு!’
அவருக்கு
அருகில் இருந்த நாற்காலியில் பாதி குடிக்கப்பட்ட தேநீர் குளிர்ந்துவிட்டது. ஆனால், அவரது கண்கள் மட்டும் ICU கதவிலிருந்தே
நகரவில்லை. அந்த நேரத்தில் அவருக்குப் பணம் நினைவில் இல்லை; பதவி நினைவில் இல்லை; உலகம் நினைவில் இல்லை; ஒரே ஒரு விசயம் மட்டுமே மனத்தில் இருந்தது: ‘என் குழந்தை உயிருடன் திரும்பிவர வேண்டும்.’
மருத்துவமனையின்
இரவுகள் மனிதர்களை மாற்றிவிடுகின்றன. பகலில் தன்னம்பிக்கையோடு பேசும் மனிதர்கள்கூட, இரவில் இறைவனின் முன் உடைந்துபோகிறார்கள். ஏனெனில், அங்கேதான் மனிதனுக்குப் புரிகிறது... உயிர் என்பது நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லையென்று.
ஓர்
அறையில் புதிதாகப் பிறந்த குழந்தையின் அழுகை கேட்கிறது. அதேநேரத்தில் மற்றோர் அறையில், ஒரு குடும்பம் தங்களின் அன்பான ஒருவரின் இறுதிமூச்சை எண்ணிக்கொண்டிருக்கிறது. ஒரே கட்டடத்திற்குள் பிறப்பும்…
மரணமும்,… நம்பிக்கையும்… பயமும்,
கண்ணீரும்… அற்புதமும்!…
அதுதான் மருத்துவமனை! ஒரு செவிலியர் அமைதியாக நோயாளியின் போர்வையைச் சரிசெய்கிறார். பலமணி நேர கடமையால் கண்கள் சிவந்திருந்தாலும், அவர் சிரிக்க முயற்சிக்கிறார். “அம்மா,… கொஞ்சம் தண்ணீர் குடிங்க,… எல்லாம் சரியாகிடும்.”
இந்த
வார்த்தைகள் சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால், சில நேரங்களில் இந்த ஓர் அக்கறைதான் ஒரு நோயாளிக்கு உயிர் வாழும் தைரியமாக மாறிவிடுகிறது.
மருத்துவமனை
என்பது வெறும் சிகிச்சை அளிக்கும் இடமல்ல; அது மனித அகந்தை உடையும் இடம்; அங்கே பணக்காரர் தனியாக அழுகிறார்; ஏழை அமைதியாகச் செபிக்கிறார்; படித்தவர் பதறுகிறார்; படிக்காதவர் ‘இறைவன் இருக்கிறார்’ என்று
நம்பிக்கையுடன் சொல்கிறார்; அங்கே எல்லாரும் ஒரே மாதிரி.
ICU வாசலுக்கு வெளியே சில நேரங்களில் அனைத்து மதங்களும் ஒன்றாக நிற்கின்றன. ஒருவர் செபமாலை உருட்டுகிறார். மற்றொருவர் குர்ஆன் வசனங்களை வாசிக்கிறார். மற்றொருவர் அமைதியாகக் கைகளைக் கூப்பி நிற்கிறார். ஆனால், எல்லாருடைய செபமும் ‘இறைவா… இன்னும் கொஞ்ச நாள் இவர்கள் வாழ அருள்தாரும்’ என்று
ஒரே வானத்தை நோக்கித்தான் செல்கிறது.
மருத்துவமனையின்
இரவு நேரங்களில் பல உண்மைகள் கற்றுக்கொள்ளப்படுகின்றன.
வாழ்க்கை மிகவும் குறுகியது. அன்பை வெளிப்படுத்தத் தாமதிக்கக்கூடாது. மன்னிப்பதை நாளைக்குத் தள்ளிவைக்கக்கூடாது.
‘நான் இருக்கேன்’
என்ற வார்த்தை கூட ஒருவருக்கு உயிர் வாழக் காரணமாக மாறலாம். சில நேரங்களில் மருத்துவமனைப் படுக்கைகளில் படுத்திருப்பவர்கள் மருந்தைவிட அதிகமாக எதிர்பார்ப்பது ஓர் அன்பான குரலைத்தான்: ‘பயப்படாதீங்க,… நான் உங்களோட இருக்கேன்.’
இன்று
மருத்துவமனையின் ஓர் அறையில் யாரோ ஒருவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கலாம். யாரோ ஒருவர் கண்ணீர் மல்கச் செபித்துக் கொண்டிருக்கலாம். யாரோ ஒருவர் அதிசயத்திற்காகக் காத்திருக்கலாம். ஆனால், அந்த இரவின் ஆழ்ந்த அமைதிக்குள் கூட, இறைவன்
அமைதியாக நடந்து கொண்டிருக்கிறார். ஒரு செவிலியரின் கரங்களில்,… ஒரு மருத்துவரின் முயற்சியில்,… ஒரு தாயின் கண்ணீரில்,… ஓர் அருள்சகோதரியின் செபத்தில்... ஆம், மருத்துவமனையின் இரவு என்பது மனித சக்தி முடிவடையும் நேரமல்ல; இறைவனின் கருணை தொடங்கும் நேரம். அதனால்தான் அந்த இரவு அமைதிக்குள் கூட ஒரு
பெரிய செபம் தொடர்ந்து உயர்கிறது: ‘இறைவா,… இந்த உயிரை மட்டும் காப்பாற்றிவிடு.’
மருத்துவமனையின்
இரவு அமைதியாகத் தோன்றலாம்; ஆனால், அந்த அமைதிக்குள் ஆயிரம் செபங்கள் வானத்தைத் தொட்டுக் கொண்டிருக்கின்றன.
மனிதர்களின்
கைகள் சோர்ந்துபோகும் இடத்தில், இறைவனின் கரங்கள் இன்னும் வேலை செய்துகொண்டே இருக்கின்றன. ஏனெனில், சில இரவுகள் மருந்துகளால் அல்ல; கருணையால் விடிகின்றன.
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார்
நீடுவாழ் வார் (குறள் 6)
குறள் விளக்கம்: ஐம்பொறி வாயிலாகப் பிறக்கும் வேட்கைகளை
அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலைபெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்.
சிந்தனை: அறிவியல் வெளிநோக்கியது: ஆன்மிகம் உள்நோக்கியது.
புறப்பார்வையை அகற்றி அகப்பயணம் செய்தால் ஒழுக்க நெறியில் நீண்ட நாள் வாழமுடியும்.
ஐம்பொறிகளும் உலக இன்பங்களை உள்ளத்திற்குள் கொண்டு வருபவை. கண்களை மூடி, தனக்குள் பிரயாணம்
செய்து ஆன்ம வாழ்வை மனிதன் நோக்கவேண்டும்.
கலீல்
கிப்ரானுடைய இந்தக் கதை ஆழமானது: ஒரு நகரத்தில் நாய் ஒன்று இருந்தது. அது திடீரென்று
மெய்ஞானமடைந்தது. மற்ற நாய்களிடம், “குரைப்பதை நிறுத்துங்கள்; தேவையில்லாமல் குரைப்பதாலேயே
நம் ஆற்றலில் பெரும்பகுதி வீணாகிவிடுகிறது” என்று
போதனை செய்தது.
ஆனால்,
குரைப்பதை நிறுத்துவது நாய்களுக்குக் கடினமாக இருந்தது. அவை அந்த அறிவுரை வழங்கிய நாயிடம்
விளக்கமளித்தன: “நீங்கள் ஒரு மாபெரும் நாய். நீங்கள் சொல்வது எல்லாம் மெய்தான். ஆனால்,
நாய்கள் எங்களால் மௌனமாகத் தியானம் செய்ய முடிவதில்லை” என்றன.
தன்னைப்
போல் சாதாரண நாய்களால் செய்ய இயலவில்லை என்பது அறிவுஜீவி நாய்க்கு மகிழ்வைத் தந்தது.
சில நாள்களுக்குப் பின், பிற நாய்கள் முடிவெடுத்தபடி ஒருநாள் குரைக்காமல் இருந்தன.
அறிவு ஜீவி நாய்க்கோ எந்த நாயும் குரைக்காமல் இருப்பது ஆச்சரியம் அளித்தது. பின் ஓர்
இருண்ட மூலைக்குச் சென்று குரைக்க ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து எல்லா நாய்களும் குரைக்க
ஆரம்பித்தன. அறிவுஜீவி நாய் மீண்டும் போதிக்க ஆரம்பித்தது.
இக்கதையில்
தவறான எண்ணத்தோடு அறிவு ஜீவி நாய் மற்ற நாய்களுக்கு வழிகாட்டுகிறது. குரைப்பது என்ற
பொறியை அடக்கி, ஆற்றலைப் பெருக்கு என்ற அறிவுஜீவி நாய் போதித்த போதனை சரியானது. ஆனால்,
அப்போதனையைப் பிற நாய்கள் கடைப்பிடிப்பதை அது விரும்பவில்லை. தங்கள் பலவீனத்தைக் கட்டுப்படுத்தி
அவை முயற்சிகள் மேற்கொள்வதையும் அது விரும்பவில்லை.
மாற்கு
நற்செய்தி இயல் 9 இறைவார்த்தைகள் 42 முதல் 47-இல் இறைமகன் இயேசு, “என்மீது நம்பிக்கை
கொண்டுள்ள இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச் செய்வோருடைய கழுத்தில் ஓர் எந்திரக்
கல்லைக் கட்டி கடலில் தள்ளி விடுவதே அவர்களுக்கு நல்லது. உங்கள் கை உங்களைப் பாவத்தில்
விழச்செய்தால் அதை வெட்டிவிடுங்கள். நீங்கள் இரு கையுடையவராய் அணையாத நெருப்புள்ள நரகத்திற்குள்
தள்ளப்படுவதைவிட, கை ஊனமுற்றவராய் நிலை வாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது. உங்கள்
கால் உங்களைப் பாவத்தில் விழச்செய்தால் அதை வெட்டிவிடுங்கள். நீங்கள் இரு காலுடையவராய்
நரகத்தில் தள்ளப்படுவதைவிட, கால் ஊனமுற்றவராய் வாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது.
உங்கள் கண் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள். நீங்கள்
இரு கண்ணுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதைவிட, ஒற்றைக் கண்ணுடையவராய் இறையாட்சிக்கு
உட்படுவது உங்களுக்கு நல்லது” என்கின்றார். நமது நல்வாழ்வுக்கு இடறலாய்
இருக்கும் பொறிகளை இறைமகன் இங்கு வரிசைப்படுத்துகின்றார். கை, கால், கண் என அங்க அவயங்களை
வரிசைப்படுத்திவிட்டு, அவை இல்லாதிருப்பதே நலம் என்கிறார். அகப் பயணத்தில் ஆர்வம் காட்டி
வாழ்வோம்.