‘ஏழையரில் ஏழையர், எளியவரில் எளியவர், இழப்பவரில் இழந்தவர் இருந்திடும் அந்த இடமே இறைவா உமக்குச் சொந்த இடம்!’
என்று
ஏழைகளில் இறைவனைக் கண்டு, வலுவற்றவர் வாழ்வுபெற, சமயங்களைக் கடந்து, சமூகத்தின் உயிர் வளர்க்கும் கருவியாய், 250 ஆண்டுகாலப் பயணத்தில் ‘எளியோர்க்கு நற்செய்தியாய்’ விளங்கும்
எம் தாயாம் கொன்சாகா சபையை எண்ணிப் பெருமிதம் கொள்கிறேன். ‘கொன்சாகா சகோதரிகள் என்றாலே ஏழைகளின் சகோதரிகள்’ என்ற
வழக்கு உண்டு. ஆம், சகோதரிகளின் வாழ்வு எளிமைக்கும் தன்னலமற்ற சேவைக்கும் சான்றாகத் திகழ்கிறது. ‘ஏழைகளுக்கு நற்செய்தி’
என்ற சபையின் நோக்கத்தை உள்வாங்கி ஒடுக்கப்பட்ட, ஓரங்கட்டப்பட்ட மக்களின் வாழ்வு புத்துணர்ச்சி பெற கொன்சாகா சகோதரிகள் ஆற்றி வரும் பணிகள் அளப்பரியது.
ஆடம்பரமும்
ஆரவாரமும் இன்றி எளிய பின்புலத்தில் யாம் செய்து வரும் பணிகள் ஏராளம். இவை அனைத்துத் தரப்பு மக்களோடும் கொன்சாகா சகோதரிகளை எளிதில் ஒன்றிணையச் செய்கின்றன. புனித பிரான்சிஸ் அசிசியாரின் சட்டம்-ஒழுங்கும், புனித அலோசியஸ் கொன்சாகாவின் ஆன்மிக வழிகாட்டுதலும் கொன்சாகா சபையின் பெரும் சொத்து!
சின்னஞ்சிறியோரில்
இறைவனைக் கண்டு, விளிம்பில் விழிபிதுங்கி நின்ற மனிதர்களை அள்ளி அரவணைத்துக் கொண்டதுதான் எம் சபையின் ஊற்று.
பாமரருக்காகத்
துடித்தது இதயம் எம் முன்னவரின் இதயம். எளிய வாழ்வும் கனிவான முகமும் பரிவுள்ளமும் இரக்கச் செயல்களுமே கொன்சாகா சகோதரிகளின் அடையாளம். குடும்ப உணர்வும், சகோதரப் பாசமும் அம்மா,
அக்கா, தங்கை என உடன் வாழும்
சகோதரிகளை உறவு முறை சொல்லி அழைத்து அன்பு காட்டுவதே எங்களின் பெரும்பலம்.
வறியோர்
வளர்ச்சி பெறவும், நலிந்தோர் நல்வாழ்வு பெறவும் உழைத்த சகோதரிகளின் தன்னலமற்ற சேவை, எம் கொன்சாகா சபையின் 250 ஆண்டு வரலாற்றை அழகுற நிறைத்திருக்கின்றது.
250 ஆண்டுகாலமாய் யாம்
கடந்து வந்த பயணத்தில் கரம்பிடித்து வழிநடத்திய இறைவனுக்கு நன்றிப்பண் இசைக்கிறோம். தன்னலம் துறந்து, பிறர்நலம் போற்றும் எம் கொன்சாகா சகோதரிகளின் பிறரன்புப் பணி மென்மேலும் சிறக்கட்டும்! எங்கும் புதுவாழ்வு மலரட்டும்!
உயிர் கிடைத்தது வாழ்வதற்கு அல்ல; வாழ வைப்பதற்கே!
மனிதனானது
பெறுவதற்கல்ல; பகிர்வதற்கே!
இத்தகைய
அர்த்தமுள்ள பிறவியின் சின்னமாக இம்மண்ணில் மலர்ந்தவர்தான் தந்தை அன்சால்தோ. கி.பி. 1771-இல்
புதுவை மண்ணில் மறைப்பணியாற்ற அடியெடுத்து வைத்த இவர்...
சமூகத்தின்
சாயலில் மறைந்த துயரம் எங்கும் பார்த்தார்.
கருணையின்
குரலில் இறைவனின் அழைப்பைக் கேட்டார்.
சீரான
வாழ்க்கையைத் தேடிய அநேகர் நடுவே இவர்
சிதைந்த
இதயங்களை இணைக்க விரைந்தார்.
‘சேவைதான் தியாகம், அன்புதான் வழி’ என்று
கருணையின்
விதை விதைத்து, நம்பிக்கையை வளர்த்தார்.
அந்த
நம்பிக்கையின் மலராக அன்று
எம்
தாயாம் கொன்சாகா சபை மலர்ந்தது.
காலத்தின்
சோதனைகள் எங்கள் பாதையைத் தொட்டன.
ஆனால்,
நம்பிக்கையின் தீ எம்முள் எரிந்தது.
விதிகளும்
சோதனைகளும் வந்தபோதும் தளரவில்லை,
இறை
நம்பிக்கையில் இச்சபை தழைக்கத் தவறவில்லை.
அர்ப்பணிப்பின்
வழியில் நடந்த சகோதரிகள் பலர்
இருளில்
ஒளி பாய்ச்சும் கருணையின் விளக்குகள் ஆயினர்.
அறிவூட்டும்
கல்வி எங்கள் கரத்தின் விழிப்பு.
சமூகச்
சேவையே எங்கள் சாட்சியம் என
அன்பால்
உலகை மாற்றும் புனிதப் பாதையில்,
எம்
கொன்சாகா அருள்சகோதரிகள் இன்று
ஒளியாய்
நிற்கின்றனர். இவ்வாறு...
• அறியாமையின் இருளை உடைக்கும் ஒளியாக நாங்கள் ஒவ்வொரு குழந்தையின் கனவில் நம்பிக்கையை எழுதுகிறோம்.
• வலி கொண்ட உடலில் நிம்மதியை விதைக்கும் நாங்கள், கண்ணீரின் விழியில் ஆறுதலை ஊற்றுகிறோம்.
• தள்ளப்படுபவரைத் தழுவி, அமைதியின் மொழி பேசுகிறோம்.
• அன்பும் சமத்துவமும் எம் கொடிகளாகப் பறக்க, இறை உலகை இங்கேயே கட்டுகிறோம்.
இன்று
250 ஆண்டுகள் நிறைவு கண்ட சபை, எத்தனை இதயங்களில் நம்பிக்கையின் சுடர் ஏற்றிய சபை, அர்ப்பணமாய் பணியாற்றும் எம் சகோதரிகள், அன்பை வாழ்வாக மாற்றும் இறை முகங்கள்!
எங்கள்
தந்தை மைக்கேல் அன்சால்தோ...
அவரின்
இதயம் கருணையின் கடல்!
அவரின்
கைகள் தியாகத்தின் துறைமுகம்!
அவரின்
பார்வை எம் பாதையை ஒளிர்வித்தது. அவரின் கனவு
எம்
சபையின் உயிராகியது!
இன்று
அந்தத் தந்தையின் கனவு...
எம்
கையில் மலர்கிறது!
அவரின்
சிந்தனை எம் பணியில் வாழ்கிறது!
ஆக,
இன்று உலகின் பல மூலைகளில் எங்கள்
பாதம் பதிந்தது. அன்பும் சேவையும் இணைந்த புனிதப் பாட்டொன்று எழுந்தது. இங்ஙனம் நம்பிக்கை விதைக்கும் எம் ஒவ்வொரு கையிலும், அந்த தந்தையின் ஆன்மா இன்னும் வாழ்கிறது. மனிதனின் கண்ணீரைக் கருணையால் துடைத்து, மறக்கப்பட்டவர்களின் வாழ்வை நம்பிக்கையால் நனைத்து,
அன்பும்
அர்ப்பணிப்பும்
சங்கமித்த
தாயகம் - அதுவே
கொன்சாகா
சபையின் தெய்வப் புனிதம்!
தமிழ் இலக்கியத்தில் ஓர் அட்சயப்பாத்திரம் உண்டு. ஐம்பெரும் காப்பியமாகிய மணிமேகலை என்னும் பௌத்தத் துறவிக்கு ஓர் அட்சயப்பாத்திரம் கிடைத்தது. அள்ளஅள்ளக் குறையாத அமுத சுரபியை அது வழங்கியது. மக்களின் வறுமையை நீக்கி வளமையைத் தந்தது. அதுபோல் சமூகத்தில் தேவை ஏற்படும்போது ஒருசிலரை, ஒருசிலவற்றை அட்சயப்பாத்திரமாக இறைவன் பயன்படுத்துகின்றார். இதற்குக் கொன்சாகா துறவறக் குழுமமே சான்று.
எரியும்
திரி தன்னைக் கரைத்து ஒளியேற்றுவதுபோல
மணக்கும்
மலர் தன் வாசனையைத் தருவது போல
மும்மாரி
மழை மண்ணைக் குளிர்விப்பது போல
கதிர்பரப்பும்
சூரியன் பூமிக்கு உயிரளிப்பது போல...
நலிந்த
சமூகத்திற்காகத் தன்னைக் கரைக்க 250 ஆண்டுகளுக்கு முன்பே அட்சயப்பாத்திரமாக ஓர் அன்சால்தோவை இறைவன் அனுப்பி வைத்தார். அவரால் ஊன்றப்பட்ட விதை இன்று பல விருட்சங்களாகி, பல நூறு
சகோதரிகள் என்னும் அட்சயப்பாத்திரங்களாகப் பெருகி, தம் உடல், பொருள், ஆவி வழியாகச் சமூகத்திற்கு மகிழ்வுடன் கொடுத்து வருகின்றனர் கொன்சாகா துறவியர்.
இந்தக்
கொன்சாகா துறவறக் குழுமத்தின் உறுப்பினராகிய சகோ. டயானா என்னும் பெயர் கொண்ட நான் திருச்சி மறைமாவட்டத்தில் முல்லைக்கொடி என்னும் கிராமத்தில் பிறந்தவள். நற்செய்திப்பணி, கல்விப்பணி, சமூகப்பணி என்று பல நிலைகளில் இறையாட்சிப்
பணியைச் செய்து மகிழ்ந்தேன். தற்போது முனைவர் பட்டம் பெற சபை என்னை அனுமதித்து அதனைத் தொடர எல்லா வளங்களையும் தந்து உற்சாகம் ஊட்டி வழிநடத்துகின்றது. தொடர்ந்து நானும் ஓர் அட்சயப்பாத்திரமாக, சபை வழியாகச் சமூகத்திற்கு என்னை வழங்க விரும்புகிறேன். இறைவன் தாமே என்னைத் தொடர்ந்து எடுத்துப் பயன்படுத்துவாராக!
எம்
கொன்சாகா துறவியர் செய்யும் ஆன்மிகப்பணி, சமூகப்பணியைப் பட்டியலிட்டால் ஒன்றா... இரண்டா? எண்ணற்றப்
பணிகளைத் தலைவன் இயேசுவின் அடிச்சுவட்டில் பின்பற்றி, தம்மையே தாரைவார்த்துச் சமூகத்தின் தேவையை நிறைவு செய்து வருகின்றனர்.
இவர்களின்
தொண்டுள்ளத்தால் பிஞ்சுக் குழந்தையர் முதல் இளையோர்வரை கல்வி என்னும் ஞானப்
பாலைப் பெற்று அறிவுஜீவிகளாகி உள்ளனர். ‘எழுத்தறிவித்தவன் இறைவன்’ என்பதற்கேற்ப, இறைவனையே இனம்காட்டுகின்றனர். ‘மக்கள் தொண்டே மகேசன் தொண்டு’ என்று முதியோர் பராமரிப்பு, படிக்க இயலாத ஏழை உள்ளங்களுக்கு நிதியுதவி, முகவரி இழந்த மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தல், மனத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனைப் பணி, பெற்றோர் இல்லாத பிள்ளைகளை எடுத்துப் படிக்க வைத்து, திருமணம் செய்து வைத்து, அவர்களது வாழ்வில் ஒளியேற்றுதல் என்று பல கோணங்களில் - பல
பரிமாணங்களில் அன்சால்தோ விரும்பிய அன்புப் பணியை அயராது செய்து மகிழ்கின்றனர். கொன்சாகா துறவியர் ஒவ்வொருவரும் ஓர் அட்சயப்பாத்திரமாக இருந்து தொண்டாற்றி மகிழ்கின்றனர்.
இந்த
இனிய வேளையில் இன்னும் பல மைல் தூரம்
சமூகத்தில் தடம் பதிக்க இறைவன் கொன்சாகா துறவறத்தைத் தம் அருளால் நிரப்புவாராக!
இன்றைய இந்தப் புனித நாளில், புனித அலோசியஸ் கொன்சாகா சபையின் 250-ஆம் ஆண்டு யூபிலி விழாவை நாம் ஆனந்தத்துடனும் நன்றியுடனும் கொண்டாடுகிறோம். இது வெறும் ஒரு விழா அல்ல; இது நம் சபையின் இறையருளின் சாட்சி. நம் வாழ்வில் இறைவன் நிகழ்த்திய அற்புதங்களின் வரலாறு.
இந்தச்
சபை எனக்கு ஒரு தாயாக இருந்தது. என் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் என்னை வழிநடத்தி வளர்த்தது. இறைவனுக்காக அர்ப்பணிக்கச் செய்தது இந்தச் சபையே. இங்குப் பெற்ற செபவாழ்க்கை, தியானத்தின் ஒழுக்கம், பணிவான சேவை மனப்பாங்கு இவை அனைத்தும் என்னை இன்று எளிமையான அருள்சகோதரியாக உருவாக்கியுள்ளது.
என்
வாழ்வின் பாதையில் “கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்” (லூக்
1:49) என்ற வசனத்தை நான் தினமும் அனுபவிக்கிறேன். இந்தச் சபை அளித்த ஊக்கம், அன்பு, ஒத்துழைப்பு இவையனைத்தும் என்னைச் செபம், தியானம், தவம் நிறைந்த வாழ்க்கைக்குள் அழைத்துச் சென்றது.
இது
என் வாழ்வைப் பற்றி நான் கூறும் சாட்சிய வாழ்வு அல்ல; எம் முன்னோர், மூத்த அன்னையர் கூட இறைப்பராமரிப்பை உணர்ந்து
நன்றிநிறை நெஞ்சுடன் வாழ்ந்துள்ளனர். இஸ்ரயேல் மக்களைப் பார்வோன் மன்னனிடமிருந்து காப்பற்றியது போலவும், 40 ஆண்டுகாலம் ஒன்றுமில்லாமையில் கூட உணவும் நீரும் தந்து வழிநடத்தியது போலவும் எம் சபையை இறைக்கரம் வழிநடத்திய பாங்கையும் நன்றிநிறை உள்ளத்துடன் பகிர்ந்துள்ளனர். இப்படி இறைப்பராமரிப்பில் வளர்ந்துவரும் நான் இன்றைய நிலையில் நற்செய்திப்பணி, மருத்துவப் பணியில் ஈடுபட்டு வருகிறேன்.
மருத்துவப்பணி
என்பது உடல் குணமளிப்பதற்கானதல்ல; மாறாக, அது இறைவனின் கருணையை மனிதனின் கண்ணீரில் பிரதிபலிப்பது. ஒவ்வொரு நோயாளியின் முகத்திலும் நான் கிறிஸ்துவின் முகத்தைக் காண்கிறேன். அந்தக் காயங்களின் வழியே இறைவனின் அருளின் ஒளி மின்னுகிறது. அது எனக்கு ஒரு தியானம், ஒரு நற்செய்திப் பணியாக மாறியுள்ளது.
புனித
அலோசியஸ் கொன்சாகா வாழ்வு போலவே ‘இறைவனுக்காக உயிரை அர்ப்பணிக்கிறவன் புனிதம் அன்பில் வெளிப்படும்.’ அந்த அன்பு நம்மை ஒன்றிணைக்கட்டும், புதுப்பிக்கட்டும், செபத்தில் உறுதியாக்கட்டும். 250 ஆண்டுகள்
கடந்து வந்த எம் சபை, என் வாழ்வை மட்டுமல்ல, எண்ணற்ற ஆன்மாக்களை இறைவனின் வழியில் வழிநடத்தி வந்துள்ளது. இந்த
யூபிலி விழாவில் நாம்
கூறவேண்டியது ஒன்றே...
இறைவா, நீர்
என்
வழிகாட்டி!
என் கடந்தகாலம்
உமது
கரம்!
என் எதிர்காலம்
உமது
திட்டம்!
இந்தப்
புனித யூபிலி ஆண்டில் எம் சபை மேலும் பல ஆன்மாக்களை இறையருளின்
பாதையில் அழைக்கட்டும். இறைவன் நம் அனைவரையும் ஆசிர்வதித்து நம்பிக்கை, நன்றி, அன்பு ஆகிய மூன்றிலும் நம்மை நிலைநிறுத்தட்டும்!
திரு அவையின் அழிக்க முடியாத வரலாற்றைப் போன்று புனித அலோசியஸ் கொன்சாகா சபையின் நீண்ட நெடிய 250 ஆண்டு கால வரலாறு மறக்க இயலாத சாதனை வரலாறு என்றுதான் கூறவேண்டும்.
சபையினுடைய
வரலாற்றைப் பார்க்கின்றபொழுது காலச்சுவடுகள் இல்லை. பாதச்சுவடுகளின் அச்சு, அழுத்தம், சபை நிறுவுநர் தந்தை மைக்கேல் அன்சால்தோவின் இறைவனில் கலந்த வாழ்வு, சபையின் இலக்கு, மக்களுக்கான தெளிவு மற்றும் செயலாக்கம் இயேசுவின் இறையாட்சிப் பணிக்கான பன்முக நற்செய்திப் பணிகளில் மிளிர்ந்து ஒளிர்வதைப் பார்க்க முடிகிறது. தமிழ்நாட்டில், இந்தியாவில் இன்னும் வெளி நாடுகளில் இவற்றைச் சிறப்பாகப் பார்க்க முடிகிறது.
வரலாற்றில்
சபை சகோதரிகளின் தனிவரத்தில் பிறழாத துறவு வாழ்வும், அர்ப்பணத்தில் தோய்ந்த சாட்சிய வாழ்வும்தான் என்றால் மிகையாகாது. தன் வேர்களைத் தேடி தன்னைப் பெரிதாக்கிக்கொள்ள ஆழப்படுத்தும் விருட்சம்போலத் தன்னையே புடம்போட்டுப் பொலிவு கொள்வதற்காக, சுட்டெரிக்கப்படும் தங்கம்போல இந்த 250-ஆம் ஆண்டு வரலாற்று யூபிலியை, புனித அலோசியஸ் கொன்சாகா சபை இன்று கொண்டாடி, தன் வரலாற்றைத் திரும்பிப் பார்த்து, இலக்கின் இலட்சியப் பயணத்தை உரசிப் பார்ப்பது காலத்தின் கட்டாயம்.
எனவே,
இந்த யூபிலி விழா அருமையிலும் அருமைதான். ஒரு மனிதர் வாழ்வில் உயர்வதும் தாழ்வதும் அவரவரின் தனிப்பட்ட கடின உழைப்பாலும் முயற்சியாலும் மட்டும்தான் என்பது மறுக்க இயலாது. ஆனால், ஒரு துறவற சபை இத்தனை ஆண்டுகள் உயர்விலும் தாழ்விலும் வெற்றியிலும் தோல்வியிலும் மேடு பள்ளங்களைக் கடந்து இறைவனின் இறையாட்சிப் பணிக்கான பயணத்தில் சிகரம் தொடும் அளவிற்கு வளர்ந்திருக்கிறது, உயர்ந்திருக்கிறது என்றால், அது கடவுளின் கடைக்கண் பார்வைதான் என்றால் அது மிகையாகாது. கடவுளின்
கடைக்கண் சகோதரிகளுக்கும், சிறப்பாக அன்றிலிருந்து இன்றுவரை சபையைத் தலைமையேற்று வழிநடத்துகின்ற மேனாள், இந்நாள் சகோதரிகள் மனநிலையோடு தங்களையே கரைத்துக்கொண்டு அவர்கள் வாழ்ந்ததால்தான் இத்தனை ஆண்டுகள் இது உயர்ந்திருக்கிறது.
இந்த
அருமையான நேரத்திலே உங்களை வாழ்த்துவதிலே பெருமை கொள்கிறேன். இந்தச் சபையின் வரலாற்றுப் புத்தகத்திலே பதிவு செய்யப்படும் நாள். இந்த தருணம் கடவுள் தந்த தருணம். கொண்டாடி மகிழ்ந்து நிறைவாழ்வை நோக்கிய எதிர்நோக்குப் பயணத்தில் இந்தச் சபை வாழ்வை வாழ்த்தி நேற்று, இன்று, நாளை என முக்காலமும் திரு
அவையினுடைய மனித நேயச் சமத்துவச் சமுதாயப் பணிகளை முதன்மைப் பணிகளாக முன்னெடுத்து, இயேசுவின் இறையாட்சிக் கனவை நனவாக்கும் இறையருள் பெற்ற சபையாக வாழ்ந்திட, வளர்ந்திட 500 ஆண்டுகள், ஆயிரம் ஆண்டுகள்... அதற்கு மேலும் பணியாற்றிட, இறையாட்சியை நனவாக்கிட வாழ்த்தி செபிக்கிறேன்.
இது விடியலைத் தேடிய பயணம்!
இது
காலாற நடந்த பயணமல்ல;
கால்கடுக்க
கால்தேய நடந்த பயணம்!
யாருமே
பயணிக்க முன்வராத பகுதியில்
துணிச்சலோடு
புதிய பாதையை உருவாக்கிப்
பயணித்த
புரட்சிப் பயணம்! சாமானிய
மனிதர்களைச்
சாதிக்கும் மனிதர்களாகச்
சமூக
விடுதலையை, சமத்துவத்தை
உருவாக்கும்
தலைவர்களாகப்
பயணிக்க
வைப்போரின் வீரப்பயணம்!
இப்பயணம்
ஒரு சகாப்தமாக, சரித்திரமாகி சாதனை படைத்துள்ளது. ஆம், மாமனிதர் இறை ஊழியர் மைக்கேல் அன்சால்தோ ஒரு சிறு பொறியென ஏற்றிவைத்த விளக்கு இன்று உலகெங்கும் சுடர்விட்டுப் பிரகாசிக்கின்றது. இருளில், இடையூறுகளில், இன்னல்களில், மனிதர் என்ற அடையாளமே இழந்து தவிக்கும் மக்களின் அடையாளமாகத் திகழ்பவர்களின் வரலாறு. ஆம், மனித மாண்பிழந்து அனைத்து நிலைகளிலும் நிர்க்கதியாகிப்போன விளிம்புவாழ் மக்களின் வாழ்விற்காக முழுவதுமாய், சமூகத்திற்காக மூச்சு விட்டு வாழ்ந்த சபை கொன்சாகா சபை. மனித முகவரியற்ற சமூகத்தின் முகவரியானது கொன்சாகா சபை. பெண்ணாய் பிறப்பதை இழிவாகக் கருதிய அன்றைய சமூகத்தில் பெண்களின் மாண்புக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட சபை கொன்சாகா சபை.
சபை நிறுவுநர்
இறை
ஊழியர்
மைக்கேல்
அன்சால்தோ
பிரான்சிஸ்குவின்
புனித அலோசியஸ் கொன்சாகா சபையின் நிறுவுநரான இறை ஊழியர் மைக்கேல் அன்சால்தோ, இத்தாலி நாட்டின் சிசிலி தீவிலுள்ள மெசினா நகரில் 1739, செப்டம்பர் 29-ஆம் நாளில் பிறந்தார். இவர் 1754, ஜனவரி 15-ஆம் நாள் இயேசு சபையின் சிசிலியா மறைமாநிலத்தில் நவதுறவியாகத் தன்னை இணைத்துக்கொண்டார். 1767, டிசம்பர் 19-ஆம் நாள் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.
இயேசு சபை மறைபரப்புப் பணியாளர்களின் வாழ்வாலும் பணியாலும் ஈர்க்கப்பட்ட மைக்கேல் அன்சால்தோ, தானும் அவர்களைப் போல மறைபரப்புப் பணியாளராகக் கடல் கடந்து சென்று, இயேசுவுக்காக உழைக்க வேண்டும் என்று பெரிதும் விரும்பினார். எனவே, அருள்தந்தை 1771, ஆகஸ்டு 15-ஆம் நாள் ஓர்தே என்னும் நகரில் இயேசு சபையில் தனது இறுதி அர்ப்பணத்தை, தந்தை வின்சென்சோ இப்போலூயித்தோ அவர்களின் கரங்கள் வழியாக இறைவனுக்கு அர்ப்பணித்தார்.
மறைபரப்புப்
பணியாளராக வேண்டும் என்ற தனது தணியாத தாகத்தை நிறைவேற்ற இயேசு சபைத் தலைவர் தந்தை லொரென்சோ ரிச்சி அவர்களிடம் அனுமதி பெற்று இந்தியா நோக்கிய பயணத்திற்குத் தயாரானார். தந்தை அன்சால்தோ அவர்களோடு மேலும் ஐந்து பிரெஞ்சு இயேசு சபையினர் (ஆமேர், பஸ்ஸான், பாப்ரி, சின்சாரே, ஜான் பேப்டிஸ்ட் கோய்செல்) மறைபரப்புப் பணிக்காக இந்தியாவிற்குப்
புறப்பட்டு ஒரு பிரெஞ்சு கப்பலில் ஏறி நீண்ட பயணம் மேற்கொண்டனர். ஏறக்குறைய 5 மாதகாலப் பயணத்திற்குப்பின் 1771-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத் தொடக்கத்தில், அப்போதைய கர்நாடகப் பணித்தளத்தின் தலைமையகமாக இருந்த பாண்டிச்சேரி மண்ணில் அரிக்கமேடு கடற்கரையில் தங்கள் காலடித்தடங்களைப் பதித்தனர். பாண்டிச்சேரி வந்திறங்கிய தந்தை அன்சால்தோவையும், அவரோடு பயணித்த ஐந்து இயேசு சபைத் தோழர்களையும் பாண்டிச்சேரியிலிருந்த இயேசு சபை இல்லத்தின் தலைவர் தந்தை மோசாக் இருகரம் நீட்டி இன்முகத்தோடு வரவேற்றார்.
தந்தை
அன்சால்தோ அவர்கள் நாள்தோறும் காலை 5 மணியிலிருந்து 10 மணி வரை ஒப்புரவு அருள்சாதனம் அளிப்பார். திறமைமிக்க ஆசியர்களைக் கொண்டு பல இளம் மகளிருக்கு
நெசவுத் தொழிலில் தக்க பயிற்சியளித்து அவர்கள் வாழ வழி செய்தார். அதோடு அவர்களுக்கு மறைக்கல்வி போதனை அளித்து அங்கு அமைதியும் ஒழுங்கும் நிலைபெறச் செய்ததுடன், அவர்கள் தேவைகள் நிறைவேற ஆவன செய்தார். இவர் சிறந்த பாடலாசிரியர்; மறையுரை ஆற்றுவதிலும் வல்லவர். புதுவை நகரின் பெரும் பகுதியின் அப்போஸ்தலிக்க ஆட்சி பொறுப்பையும் இவர் ஏற்று நடத்திவந்தார். எஞ்சிய சிறிது காலத்தையும் வீணாகக் கழிக்காது நூல் எழுதுவதிலும், தன் கல்வியறிவை வளர்ப்பதிலும், புதிய மொழிகள் பயில்வதிலும், இன்னும் பக்தியை வளர்க்கப் புதிய திட்டங்கள் தீட்டுவதிலும் செலவழித்தார்.
புதுவையின் சூழலமைவு
மனிதர்கள்
பிறப்பின் அடிப்படையிலே ஒதுக்கப்பட்டனர். மானுடத்தின் சரிபாதியான பெண்ணினம் பல்வேறு நிலைகளில் ஒதுக்கப்பட்டது. சாதிய ஆணாதிக்கச் சுரண்டல்களுக்கு உள்ளாக்கப்பட்டனர் மகளிர். சிறு வயது திருமணங்களால் இளமையிலேயே கைம்பெண்களாக்கப்பட்டு முடக்கப்பட்டனர். சிறுமியர் மற்றும் மகளிருக்குக் கல்வி முற்றிலுமாக மறுக்கப்பட்டது. அனாதைக் குழந்தைகள் அவல நிலைக்கு உள்ளாக்கப்பட்டனர். தினந்தோறும் மக்கள் வறுமையோடு போராடுதல், அரசியல் போர், பகை உணர்ச்சியால் மக்கள் படும் மனச்சுமை போன்ற புதுவையின் சமூகச் சூழலமைவு, தந்தை அன்சால்தோ மனத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. இவர்களுக்காகவே பணியாற்ற வேண்டும் என்ற இலட்சியம் அஞ்சா நெஞ்ச வீரரான அன்சால்தோவின் மனத்தில் கிளர்ந்தெழுந்தது.
1775-ஆம் ஆண்டு
தந்தை மைக்கேல் அன்சால்தோ இடைத்தெருவிலுள்ள ஒரு வீட்டை வாடகைக்கு வாங்கினார். அடைக்கலம் தேடிவந்த பெண்களையும் ஆதரவற்ற குழந்தைகளையும் கண்காணிக்க புனித லூயிஸ் தே கொன்சாகா மடம்
(ஆதரவற்றோர் இல்லம்) ஒன்றைத் தொடங்கி அவ்வில்லத்தை, தூய அலோசியஸ் கொன்சாகாவின் பாதுகாவலில் ஒப்படைத்தார். இது ‘சின்ன மடம்’ என்று அழைக்கப்பட்டது. 1779-ஆம் ஆண்டு ஜூன் 16-ஆம் நாள் தந்தை கேர்து அடிகளாரின் மறைவிற்குப்பின், தந்தை கேர்து அடிகளாரால் தொடங்கப்பட்ட பெரிய மடத்தை (கார்மேல் மடம்) நிர்வகிக்கும் பொறுப்பையும் தந்தை அன்சால்தோ ஏற்றுத் திறம்படச் செய்தார். மகளிரையும் குழந்தையரையும் கண்காணிக்கும் பொறுப்பை அன்னை அன்னம்மாளிடம் ஒப்படைத்தார்.
அன்னம்மாள்
பாண்டி மண்ணிலே பிறந்தவர். தந்தை அன்சால்தோவின் அறப்பணிகளாலும் வாழ்வாலும் கவரப்பட்டவர். பாதிக்கப்பட்ட மக்களின் விடியலைக் காண தந்தை அன்சால்தோவிடம் கனன்று கொண்டிருந்த நெருப்புக் கனலின் தகிப்பைத் தன்னுள் பெற்று, தன்னை ஆதரவற்றோருக்காகத் தொடங்கப்பட்ட புனித லூயிஸ் தே கொன்சாகா மடத்தில்
வாழும் மகளிருடனும் குழந்தையருடனும் இணைத்துக்கொண்டார். இவர்களில், ‘அழைத்தல்’
என்னும் கொடையைப் பெற்றவர்கள் யார் என்பதை உய்த்துணர்ந்த தந்தை, அன்னை அன்னம்மாளுக்கும், அவருடன் இருந்த மகளிருக்கும் வெண்ணுடை அளித்தார். அன்றே கொன்சாகா சபைக்கு வித்திட்டார். அன்னை அன்னம்மாள் சிறிய வித்தானார். அன்னை அன்னம்மாள் ஆதரவற்றோர் இல்லத்தின் முதல் கனியாவார்.
பல
மகளிர் இக்குழுவில் சேர்ந்ததால் அவர்களுக்குச் சில ஒழுங்குகள் கொடுக்கப்பட்டன. திருப்பலியில் பக்தியுடன் பங்கேற்றனர். செபமாலை செபித்தனர். தகுதியுள்ளவர்கள் திருப்பலியில் தங்கள் அர்ப்பணத்தை நிறைவேற்றினர். தேவ அழைத்தல் பெற்ற கன்னியர், அவர்களால் கண்காணிக்கப்படும் குழந்தையர், மகளிர் என்றும் இரண்டு குழுவாகப் பிரிக்கப்பட்டனர். இவர்களில் அன்னை அன்னம்மாள் முதல்வராகவும், அன்னை எலிசா கண்காணிப்பாளராகவும் தந்தையால் நியமிக்கப்பட்டனர்.
அன்றைய
புதுச்சேரியின் சமூகச் சூழலால், தந்தை அன்சால்தோ அவர்களால் உருவாக்கப்பட்ட சிறிய மடம் இரண்டாகப் பிரிந்து செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. இவற்றுள் ஒன்றுதான் சமூகத்தால் தாழ்த்தப்பட்டோர் என ஒதுக்கப்பட்ட மகளிர்,
குழந்தையருக்கு ஆதரவும் வாழ்வும் வழங்கிய புனித லூயிஸ் தே கொன்சாகா மடம்
(இல்லம்), இன்றைய நமது பிரான்சிஸ்குவின் புனித அலோசியஸ் கொன்சாகா சபை. மற்றொன்று, இன்று சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு பணியாற்றி வரும் அடைக்கல அன்னை சபை.
‘பெரிய மடம்’ என்று அழைக்கப்பட்ட கார்மேல் சபையினர், சின்ன மடங்களாகிய கொன்சாகா, அடைக்கல அன்னை உருவாக்கத்தில் பெரும் பங்கு வகித்தனர். மடங்களை நிர்வகிக்கும் பொறுப்புகளை ஏற்றதோடு, மடங்களிலுள்ளோரை நல்வழியில் நடத்தும் சீரிய பணியையும் செய்தனர்.
அன்னை
அன்னம்மாள் மற்றும் அன்னை எலிசா இருவரும் புனித லூயிஸ் தே கொன்சாகா மடத்தின்
உள் நிர்வாகப் பொறுப்புகள் அனைத்தையும் சிரமேற்கொண்டு திறம்பட ஆற்றி வந்தனர். நிர்வாகப் பணிகளுடன் ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்ந்த குழந்தையர், மகளிருக்கு இறைவனது மேலான அன்பை எடுத்துக்கூறி, இறைவனோடு உறவுகொள்ள, செபிக்கக் கற்றுத் தந்தனர். அனாதைக் குழந்தைகளை அரவணைப்பது, இளம் விதவையரையும் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளான மகளிரையும் சமூகத் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பது போன்ற
பணிகளில் ஈடுபட்டனர்.
‘அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு?’ என்று பெண்குலத்தை அடுக்களையில் முடங்கச் செய்த நிலையை மாற்றி, கல்வியறிவு ஒன்றே இம்மகளிரைச் சமூகத்தில் உயர்த்தும் எனக் கருதி, பல எதிர்ப்புகளுக்கு இடையில் நான்கு
அல்லது ஐந்து மாணவியரைக் கொண்டே ஒரு பள்ளியைத் தொடங்கினார் தந்தை அன்சால்தோ. பல்வேறு எதிர்ப்புகள், பொருளாதார நெருக்கடிகளுக்கு இடையே தொடங்கப்பட்ட இப்பள்ளி மாணவியரின் அறிவாற்றலின் வளர்ச்சியைக் கண்ட பிற ஆதரவற்ற மாணவியரும் இப்பள்ளியில் சேர முன்வந்தனர். 30-க்கும் மேற்பட்ட மாணவியரைக் கொண்டு, 1789-இல் தொடங்கப்பட்ட அன்சால்தோ பள்ளியே மகளிருக்கென பாண்டிச்சேரியில் தொடங்கப்பட்ட முதல் கல்விக்கூடமாகத் திகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
வாழ்விழந்து
நின்ற பெண்கள் தங்கள் சொந்தக் காலில் நின்று வாழ்வு பெறவேண்டும் என்ற உயரிய எண்ணத்தோடு இம்மகளிருக்கு தொழிற்கல்வி கற்றுத்தந்தனர். குறிப்பாக, கைத்தறி நெசவு வேலைகளில் ஈடுபடுத்தினர். இதனால் நிராதரவாய் நின்ற மகளிரும் குழந்தையரும் மேன்மையுற்றனர், தன்னம்பிக்கை பெற்றனர்.
சென்னையிலுள்ள
கப்புச்சின் சபையினரை மேற்பார்வையிடும் பணி, உரோமையிலிருந்த பேராயர் சம்பனுவா அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. நிர்வாகத்திறமையில் சிறப்புற்றிருந்த அருள்தந்தை அன்சால்தோ அவர்களை இக்கட்டான இப்பணியைச் செய்யும்படி பேராயர் நியமித்தார். கீழ்ப்படிதலில் நிகரற்றவரான தந்தை 1805, அக்டோபர் 15-ஆம் நாள் புதுவையிலிருந்து சென்னையை நோக்கிப் புறப்பட்டார். அக்டோபர் 20-ஆம் தேதி சென்னையைச் சென்றடைந்தார். பயணத்தின்போது ஏற்பட்ட உடல்நலக்குறைவால் 1805, நவம்பர் 2 அன்று - அனைத்து ஆன்மாக்கள் திருவிழாவன்று இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்டு விண்ணக வாழ்வில் நுழைந்தார்.
1805, நவம்பர் 2-ஆம்
நாள் தந்தை அன்சால்தோ இறக்கும்வரை பல்வேறு சவால்களுக்கும், பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இறைபராமரிப்பில் நம்பிக்கை கொண்டு தந்தைக்குரிய பொறுப்போடு சபையை நடத்தி வந்தார்.
தந்தைக்குப் பின்...
தந்தையின்
இறப்பிற்குப் பிறகு போரின் விளைவுகளாலும் கடும் பஞ்சத்தாலும் பெரும் பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்து வறுமையில் உழன்ற ஆதரவற்றோர் இல்லங்களைப் பேணிப் பராமரிக்கும் பொறுப்பினை, புதுவை மிஷன் ஏற்றுச் சிறப்பாகக் காத்து வந்தது. இப்பராமரிப்புப் பணியில் புதுவை மிஷனுக்குப் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்ட போதிலும், தங்களாலான மட்டும் பொருளுதவி அளித்து வந்தது.
புதுவை
மிஷன், கீழச்சேரி மிஷனை நிறுவிய மறைத்திரு. மனெந்தி அடிகளிடம், அன்சால்தோ அடிகளுக்குப்பின் ஆதரவற்றோர் இல்லங்களைப் பராமரித்து வரும் பொறுப்பினை ஒப்படைத்தது. மீண்டும் மீண்டும் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டாலும், இறைவன் தமது கருணையைப் பலர் மூலம் வெளிப்படுத்திக்கொண்டே இருந்தார்.
பேரருள்திரு
பொனான் ஆண்டகை புதுவையின் ஆயராக இருந்தபோது, பாரிசு வேதபோதக சபையில் ஒளி விளக்காய்த் துலங்கிய அருள்தந்தை லெகோதே, கி.பி. 1839-ஆம்
ஆண்டு இறுதியில் கொன்சாகா ஆதரவற்றக் குழந்தைகள் இல்லப் பராமரிப்புப் பணியை ஏற்றார். புனித லூயிஸ் தே கொன்சாகா ஆதரவற்றோர்
இல்லமாகத் தொடங்கி வளர்ச்சி பெற்று, ஒரு துறவற சபையாக உயர்வு பெற்றதற்கு தந்தை லெகோதே அவர்களே முக்கியப் பொறுப்பாளர் ஆவார்.
பேரருள்பெருந்தகை
போனான் பேராயரின் ஒப்புதலின்படி 1855-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் துறவற நிலைக்கான சிறப்புப் பயிற்சிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. தியானம்
வழங்கப்பட்டது. இதற்குப்பின் வெள்ளை நிறத்தில் ஒரு விரல் அகல இரட்டை கரைபோட்ட கறுப்புப் புடவை சபையினரின் ஆடையாகக் கொடுக்கப்பட்டது. உலகிற்கும் அதன் இறுமாப்பிற்கும் அப்பாற்பட்டவர்கள் துறவிகள் என்பதைக் கறுப்பு நிறம் எடுத்துக்காட்டியது. இறையருளுக்கும் ஒவ்வொரு மனிதரிடமும் செலுத்த வேண்டிய அன்பிற்கும் அடையாளமாக இரட்டை வெள்ளைக் கோடுகள் போடப்பட்டன.
பேராயர்
ஆலன் ஆண்டகையின் அழைப்பின் பேரில் அன்னை காணிக்கை மேரி, மூன்று சகோதரிகளுடன் 1882-ஆம் ஆண்டு சென்னை சென்றார். மகளிருக்கான கல்வி நிலையத்தையும், ஒரு கன்னியர் இல்லத்தையும் 1886-ஆம் ஆண்டு அன்னை உருவாக்கினார். அதுவே சென்னை-வேப்பேரியைத் தலைமையிடமாகக் கொண்டு உலகெங்கும் பணியாற்றிவரும் புனித வளனாரின் பிரான்சிஸ்கன் துறவற சபை (FSJ)ஆகும்.
சபையின் பரிணாம
வளர்ச்சி
மறைமாநிலச்
சபையாக, புதுவை உயர் மறைமாநிலத்தை மையமாகக் கொண்டு, புதுவை பேராயர் மற்றும் சபையின் இயக்குநர்களின் வழிகாட்டுதலில் ‘எளியோர்க்கு நற்செய்தி’
எனும் நமது விருதுவாக்கினைச் செயல்படுத்தி வந்தனர் கொன்சாகா சகோதரிகள். தந்தை லெகோதே அவர்களின் அரிய முயற்சியால், 1858-ஆம் ஆண்டு அக்டோபர் 4-ஆம் நாளிலிருந்து புனித பிரான்சிஸ்கன் மூன்றாம் சபை ஒழுங்குகளைப் பின்பற்றப் பயிற்றுவிக்கப்பட்டனர்.
மூன்றாம்
சபையினரின் தவக்கோல ஆடையாக இரண்டு வெள்ளை நிற பட்டை கரை போட்ட நீல ஆடையைத் தேர்ந்தெடுத்து வழங்கினார். செபப் புத்தகத்திற்குப் பதிலாக பிரான்சிஸ்கன் செபமாலையும் இடைக்கயிறும் கொடுக்கப்பட்டன. அன்று முதல் புனித பிரான்சிஸ்குவின் மூன்றாம் சபை ஒழுங்கு முழுவதும் சகோதரிகளால் பின்பற்றப்பட்டது. தந்தை லிஜியோன் அடிகளாரின் அயரா முயற்சியால், 1886-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18-ஆம் நாள், திரு அவையின் ஒப்புதல் பெற்ற பிரான்சிஸ்கன் முறையான மூன்றாம் சபைகளைப் பின்பற்றும் துறவற சபையாகத் திரு அவையால் அங்கீகரிக்கப்பட்டது. இந்நிகழ்வு நமது வரலாற்று நிகழ்வுகளுள் மிக முக்கியமான ஒன்று. பேராயர் பேரருள்திரு. லவுனான் ஆண்டகையும் இதற்காக நமக்குப் பெருமளவு உதவிபுரிந்துள்ளார். திருத்தந்தை 13-ஆம் லியோ அவர்களால் இந்த அங்கீகாரம் நமக்கு வழங்கப்பட்டது.
ஏறக்குறைய
150 ஆண்டுகால நீண்ட நெடிய பயணத்தில் சபையின் தலைமைப் பொறுப்பை ஏற்ற அன்னையர் அவரவர் ஆளுமைக்கேற்பவும், அந்தந்தக் காலகட்டங்களின் தேவைகளுக்கும், திரு அவையின் வழிகாட்டுதலுக்கும் ஏற்ப சபையை வழிநடத்தி வந்தனர். குறிப்பாக, அன்னை நம்பிக்கை மேரி சபைத் தலைவியாக இருந்தபொழுது, சபையில் புதுப்பித்தல் பேரவைகள் நடத்தப்பட்டன. அத்துடன் திருத்தந்தையின் நேரடி ஆட்சிக்குட்பட்ட சபையாக உயர்த்தப்பட முயற்சிகள் எடுக்கப்பட்டன. தொடர்ந்து அன்னை L.C. மரியா
சபைத் தலைவியாகப் பொறுப்பேற்று செயல்பட்ட வேளை 1996, அக்டோபர் 4-ஆம் நாள் திருத்தந்தையின் நேரடி ஆட்சிக்குட்பட்ட சபையாக உயர்த்தப்பட்டது. கொன்சாகா குழுமத்தினர் அனைவரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்திய நிகழ்வு இது. அத்துடன் எல்லைகளைக் கடந்து உத்வேகத்துடன் பணிகளை எடுத்துச்செல்ல துணையாக நின்றது.
பணித்தளங்களின்
விரிவாக்கம்
புதுவை
மிஷனில் எப்பொழுதும் நம் சகோதரிகள் சமூகத்தின் விளிம்பிற்குத் தள்ளப்பட்ட மக்களுக்கே கல்வி நிறுவனம், அனாதை இல்லம் மூலம் பணியாற்றியுள்ளனர். இதனை புதுவை மிஷன் வரலாறு, ‘புனித ஞானப்பிரகாசியார் சபை கன்னியர்கள் தாழ்த்தப்பட்ட அரிசனப் பிள்ளைகளுக்கு மட்டுமே சிறப்பான பணிபுரிந்தமையால், இவர்கள் எங்கு வேண்டுமானாலும் சேவை செய்ய அனுமதிக்கப்பட்டனர்’ எனக்
குறிப்பிட்டுள்ளது.
ஓரளவு
வளர்ச்சி பெற்ற பின்னர் புதுவையைக் கடந்து மற்ற இடங்களுக்கும் கொன்சாகா சபை சகோதரிகள் பணியாற்ற அனுமதிக்கப்பட்டனர். பணியினை முன்னிட்டு வெளியிடங்களுக்கு அனுப்பப்பட்ட சகோதரிகள் தற்காலிக மற்றும் நிரந்தர உறுதிமொழிகள் எடுத்தனர். நம் முன்னோர் சென்று பணி செய்த இடங்கள் அனைத்தும் குக்கிராமங்களாகவும், தங்கிய இடங்கள் குடிசைகளாகவுமே இருந்தன. நற்செய்தி அறிவிப்பதையே முக்கியப் பணியாகச் செய்து வந்தனர்.
கல்விப்பணி
எனும் பொழுது, வெறும் உலகக் கல்வியோடு மூத்த அன்னையர் நின்றுவிடவில்லை; மாறாக, திருமறையைப் பற்றிய போதனை அவர்களது பணியில் மைய இடம்பெற்றது. “நற்செய்திக்காகக் குரல் கொடுக்கவே நான் நியமிக்கப்பட்டிருக்கிறேன்” என்ற
தூய பவுலின் மேலான வார்த்தைகளை மனத்தில் ஏற்றிருந்தனர்.
அன்னையரின்
திருமறைப் பணியை முடமாக்கும் வகையில் அரசாணை ஒன்றை 16.09.1898 அன்று புதுவை அரசு வெளியிட்டது. ‘புதுவை அரசு பள்ளிகளில் மறைக்கல்வியைப் போதிக்கக்கூடாது’ என்பதே
அந்த ஆணை. அரசாணையைக் கண்ட அன்னையர் அரசின் அதிகாரப் பலத்தைக் கண்டு பயந்து போகவுமில்லை, தாங்கள் கொண்ட கொள்கையில் பின்வாங்கிடவும் இல்லை. தங்களுடைய எதிர்ப்பை மிகத் துணிவுடன் செயல்வடிவில் வெளிப்படுத்தினர். மறைக்கல்வி போதிக்க அனுமதிக்காத இடத்தில் வேறு பணி செய்யமாட்டோம் எனப் பள்ளிப் பணிகளிலிருந்து விலகினர். பள்ளிகளில் பணி செய்வதன் மூலம் கிடைத்த வருவாயைக் கொண்டே வாழ்க்கை நடத்தி வந்தவர்கள், அதைக் குப்பையென எண்ணித் தூக்கி எறிந்தனர். அத்துடன் நின்றுவிடவில்லை; வீடுகளுக்குச் சென்று நற்செய்திப் பணி, சமூகப் பணி முதலியவற்றைச் செய்துவந்தனர்.
சபையின்
ஆரம்ப காலத்திலிருந்து கல்வி கற்பிப்பதும் நமது பணிகளில் ஒன்றாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
01.03.1903-ஆம் நாளன்று கொன்சாகா பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. இதுவே நமது சபை நிறுவுநர் தந்தை அன்சால்தோவின் மறைவிற்குப்பின் தொடங்கப்பட்ட முதல் பள்ளி. அன்னை ஆரோக்கியம்மாள் சபைத்தலைவியாகவும், அருள்திரு. எஸ்காந்த் சபையின் இயக்குநராகவும் இருந்தனர்.
மியான்மரில் நமது
சபையினர்
1929-ஆம் ஆண்டு
அன்னை பெயாத்திரிஸ் மேரி அவர்கள் சபைத்தலைவியாக இருந்தபோது அருள்தந்தை ஆபேல் மேரி கோம் அவர்கள் சபை நிர்வாகியாக இருந்தார். தந்தை லேரோ அவர்கள் மியான்மரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மேண்டலே நகரில் துவங்கியுள்ள பள்ளியில் பணியாற்ற பேராயர் புல்கியேர் அவர்களின் அனுமதியுடன் நம் சகோதரிகளுக்கு அழைப்பு விடுத்தார். பள்ளியை நடத்தவும், அருள்பணி ஆற்றவும் ஜெர்த்ரூத் மேரி, ரெஜினா, லூயில் மரி ஆகத்தா ஆகியோர் அனுப்பி வைக்கப்பட்டனர். கொன்சாகா சகோதரிகளின் வழிநடத்துதலில் 1929, மே 15-இல் இருந்து பள்ளி செயல்படத் தொடங்கியது.
அறிவிலும்,
பல கலைகளிலும் சிறந்து விளங்கிய சகோதரிகளின் புகழ் மியான்மர் எங்கும் பரவத் தொடங்கியது. 1936-இல் மீண்டும் இந்தியாவிலிருந்து சகோதரிகள் ஐவர் மேமியோ நகருக்குச் சென்றனர். சகோதரிகளின் பணி மட்டுமல்ல, வாழ்வும் அப்பகுதிவாழ் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பல்சமூகச் சூழல் நிலவிய அப்பகுதிகளில் இருந்து, பர்மிய இளம் மகளிர் எழுவர் தங்கள் வாழ்வை இறைவனுக்கு அர்ப்பணிக்க முன்வந்தனர். அம்மண்ணினின்று பணி செய்ய இளம் உள்ளங்கள் வந்ததால், பணி சிறப்புடன் நடைபெற்றது. 1956-இல் முறைப்படி நவதுறவியர் இல்லம் நிறுவப்பட்டு இளம் மகளிர் உருவாக்கப்பட்டு வருகின்றனர்.
இரண்டாம்
உலகப்போரின்போது பெரிய வெள்ளிக்கிழமை இரவு அன்று பெரிய சனிக்கிழமை நிகழ்வுகளுக்காகத் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்
சகோதரிகள் இருவர். இரவு 11.30 மணியளவில் சரமாரியாக வீசப்பட்ட குண்டுகளால் தாக்கப்பட்டு இறைப்பணி செய்யும் பொழுதே உயிர் துறந்தனர்.
இரண்டாம்
உலகப்போருக்குப் பின் மியான்மருக்கும் இந்தியாவுக்குமிடையே தகவல் தொடர்புக்கான வாய்ப்புகள் குறைந்தன. அதன் விளைவாக மியான்மரிலுள்ள நம் சகோதரிகளுடன் தொடர்புகொள்ளவே இயலாத நிலை இருந்தது.
ஏறக்குறைய
20 ஆண்டுகளுக்குப் பின் தனித்து விடப்பட்ட மியான்மரில் பணியாற்றிய சகோதரிகள் தாய்ச்சபையுடன் இணைக்கப்பட்டனர். அன்னை பார்பரா மேரி சபைத் தலைவியாக இருந்தபோது இதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டன. இன்று முறையான சட்டத்திட்டங்களுடன் மியான்மர் தனி மாநிலமாக இயங்கி வருகிறது.
பர்மிய
சகோதரிகள் மிக எளிய வாழ்க்கை வாழ்கிறார்கள். பள்ளிகள் எல்லாம் அரசின் நேரடி நிர்வாகத்திற்குச் சென்றுவிட்டன. அரசின் கெடுபிடி அதிகம். மறைமாவட்டம் கொடுக்கும்
சிறிதளவு பணத்தில்தான் சகோதரிகள் வாழ்க்கை நடத்துகிறார்கள். நற்செய்திப்பணி, ஆலயப்பணி, கைவினைப் பொருள்கள் தயாரிப்பு, தோட்டப் பராமரிப்பு, குழந்தைகள் காப்பகம், மழலையர் பள்ளி நடத்துதல் இவை மியான்மரில் நம் சகோதரிகள் செய்யும் பணிகள். குறைந்த வருவாயில் நிறைந்த மனத்துடன் முழுமையான பணியாற்றி வருகின்றனர்.
மேலை நாடுகளில்
நம்
சகோதரிகள்
1968-ஆம் ஆண்டு
கொன்சாகா சகோதரிகள், அன்னை டெனிஸ் மேரி சபைத் தலைவியாக இருந்தபோது முதன் முதலில் மேலை நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர். வெளிநாடு நோக்கிய சகோதரிகளின் முதல் பயணம், 1969-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ஆம் தேதி தொடங்கியது. நாம் வெளி நாடு செல்வதற்கு உதவியாகவும் காரணமாகவும் இருந்தவர் அருள்திரு. இராபர்ட் கௌசினா ஆவார். முதன் முதல் ஐரோப்பா செல்வதற்கென சகோ. சபினா, சகோ. கயத்தான், சகோ. எட்வட் மேரி, சகோ. பிளாரன்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டு மொழிப்பயிற்சி அளிக்கப்பட்டு ஆஸ்திரியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது ஐரோப்பாவில் ஜெர்மனி, ஆஸ்திரியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் நம் சகோதரிகள் பணியாற்றி வருகின்றனர். நலவாழ்வுப் பணிகளிலும் பங்குப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆந்திராவில் நம்
சகோதரிகள்
முதன்
முதலாக, தமிழ் மாநிலம் கடந்து, கிளை இல்லம் ஆந்திர மாநிலம் இராப்பூரில், 1978-ஆம் ஆண்டு மே மாதம் முதல்
நாள் நிறுவப்பட்டது. அன்னை பார்பரா மேரி சபைத் தலைவியாக இருந்தபோது நெல்லூர் ஆயர் பேரருள்திரு. பாலசாமியின் அழைப்பின் பேரில் சகோதரிகள் அங்குச் சென்றனர். தற்போது நெல்லூர், நல்கொண்டா, வாரங்கல், கம்மம், கடப்பா, விஜயவாடா ஆகிய இடங்களில் சகோதரிகள் பணியாற்றி வருகின்றனர். 23-வது பொதுப்பேரவையின் தீர்மானத்தின்படி சபையின்
வளர்ச்சியை முன்னிட்டு வட்டாரங்களாகப் பிரிந்து செயல்பட்டனர். மேலும், 26-வது புதுப்பித்தல் பேரவையின் வழிகாட்டுதலில் வட்டாரம் மாநிலமாக்கப்பட்டு, வளர்ச்சியின் பாதையில் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.
வட மாநிலங்களில்
நம்
சகோதரிகள்
நமது
பணி வட மாநிலங்களில் பரவ
வேண்டும் என்ற எண்ணத்தில், அன்னை நம்பிக்கை மேரி அவர்களின் பணிக்காலத்தில் சில சகோதரிகளும், தொடர்ந்து அன்னை L.C. மரியா
அவர்களின் பணிக் காலத்தில் சகோதரிகள் எழுவரும் படிப்பதற்கென வட மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டனர்.
சபை அன்னை A. மேரி
ஸ்டெல்லா அவர்களின் தொலைநோக்குப் பார்வையுடன் கொன்சாகா சபை சகோதரிகளின் திருத்தூதுப் பணிகள் வட மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் விரிவுபடுத்தப்பட்டன. இவர்களைத் தொடர்ந்து வந்த சபை அன்னையர் கல்விப்பணியிலும், சமூகத்தின் கடைநிலையிலுள்ள மலைவாழ் மக்களுக்கான சமூகப் பணியிலும் நம் சகோதரிகளை ஆர்வமுடன் ஈடுபடுத்தி வட்டாரமாக வளர்ந்து நிற்க வழிவகுத்தனர்.
சரித்திரம் படைத்த
சாதனையாளர்கள்
முதன்முறையாக
கொன்சாகா சபையின் தலைவி, திரு அவையின் முறைப்படி சபையின் உறுப்பினர்களால் 1905, மார்ச் மாதம் 19-ஆம் தேதி அருள்திரு. போஷர் அடிகளார் முன்னிலையில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சபைத்தலைவி அன்னை கிளாரம்மாள் ஆவார். தொடர்ந்து நடந்த பேரவைகள் சபையின் புதுப்பித்தலுக்கும், முறையான வளர்ச்சிக்கும், இலக்கினைக் கூர்மைப்படுத்துவதற்கும் சட்டம்-ஒழுங்குகளைச் சீர்திருத்தம் செய்வதற்கும், பணிகளைச் சிறப்பாகச் செய்வதற்கும் ஒளி விளக்குகளாக அமைந்தன.
சபையின்
வளர்ச்சியில் வலுமிக்க கரமாய் இருந்த சபைத்தலைவியர் அன்னை டெனிஸ் மேரி, அன்னை பார்பரா மேரி, அன்னை நம்பிக்கை மேரி, அன்னை L.C. மரியா, உயர்கல்வி நிலையங்களை உருவாக்கி கல்விப்பணிக்கும், சபைக்கும் புதுத் திசையை வகுத்த அன்னை C. நோயல்
ராணி, வட மாநிலங்களில் பணித்தளங்களை
விரிவுப்படுத்தி, சமூகப் பணிக்குப் புது வீச்சு கொடுத்த அன்னை A. மேரி
ஸ்டெல்லா, நமது
நிறுவுநரின் உள்ளுயிரை உலகறியச் செய்ய அவரைப் புனிதராக உயர்த்தும் பணியை முன்னெடுத்து ஆன்மிக அழுத்தம் கொடுத்த அன்னை G. ராஜாமணி
மற்றும் இவர்களின் பாதையில் தற்போதைய அன்னை M. திரேசா
ஞானமணி அவர்கள்.
இறுதியாக...
காலம்
நகர்ந்து தகவல் தொழில்நுட்ப யுகமானாலும், அறிவியல் வளர்ந்து ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜன்ஸ் ஆனாலும் தனது தனித்துவத்தை என்றும் இழக்காமல், காலத்தின் அறிகுறிகளுக்கேற்ப இலக்கினைக் கூர்மைப்படுத்தி தனிவரத் திற்குப் புதுப்பொருள் கொடுத்து, பணிகளில் புதுமையைப் புகுத்தி சமூகத்தின் விளிம்பிலுள்ளவர்களுக்கே எம் பணி என்பதில் சிறிதும் சமரசம் செய்துகொள்ளாமல் நற்செய்தி அறிவிப்புப்பணி, கல்விப்பணி, சமூகப்பணி, நலவாழ்வுப்பணி, சமூக மாற்றப்பணி ஆகிய அருள்பணிகளின் வழியாகத் துடிப்போடு திரு அவையின் பணிகளை மேற்கொண்டு, இறையாட்சியை அமைப்பதில் தீவிரமாகச் செயல்படுபவர்கள் கொன்சாகா சகோதரிகள்.
சமூகத்தின்
விளிம்பிற்குத் தள்ளப்பட்ட மக்களுக்கே கொன்சாகா சகோதரிகள் என்றும் பணியில் முதலிடம் அளித்து வந்துள்ளனர். இதனால் பல முறை பலரால்
புறந்தள்ளப்பட்டுள்ளனர்.
ஆயினும், இப்பணியையே தாம் என்றும் அயராது ஆற்றி வருகின்றோம் என்ற உணர்வு அவர்களுக்கு உத்வேகத்தைக் கொடுக்கிறது.
கொன்சாகா
சபையானது தலைமையகத்தின் கீழ் எட்டு இல்லங்களையும், மேலைநாடுகளில் 14 பணித்தளங்களையும், சலோம் மாநிலத்தின் கீழ் 40 இல்லங்களையும், அலோசியஸ் மாநிலத்தின் கீழ் 34 இல்லங்களையும், அன்சால்தோ மாநிலத்தின் கீழ் 18 இல்லங்களையும், மியான்மர் அலோசியஸ் மாநிலத்தின் கீழ் 20 இல்லங்களையும், அலோசியஸ் கொன்சாகா வட்டாரத்தில் வட மாநிலத்தைச் சார்ந்த
14 இல்லங்களையும் கொண்டு, சமூக மாற்றத்திற்கான பல்வேறு மக்கள் பணிகளில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றது.
சிறு
விதையாக ஊன்றப்பட்ட கொன்சாகா, கிளர்ந்து முளைத்தெழுந்து கிளைப்பரப்பி ஆலமரமாக விழுதுவிட்டு நிமிர்ந்து நிற்கின்றது இன்று! கொன்சாகா சகோதரிகள் எல்லையைக் கடந்து பணியாற்றுபவர்கள். தொல்லைகளைத் துச்சமெனக் கருதுபவர்கள். இறையாட்சிப் பணிக்காய் சமுதாயத்தில் புரையோடிக் கிடக்கும் சாதிய வேற்றுமையை வேரறுக்க, பெண் விடுதலைக்காகப் புரட்சிக் குரல் கொடுக்க, கல்வி கற்பிப்பதைச் சமூக மாற்றத்திற்கான கருவியாகக் கையிலெடுத்துக் கொண்டு, ‘இறைவன் நம் தந்தை; நாம் அனைவரும் சகோதர-சகோதரிகள்’
என்ற இயேசுவின் நற்செய்தியை நெஞ்சுரத்துடன் எத்திக்கும் எடுத்தியம்பும் கொன்சாகா சபை சகோதரிகளின் அறப்போர் தொடரும்.
இயற்கையை
வளப்படுத்தும் முன்னெடுப்புகளோடும், சமத்துவம், நீதி நிறைந்த சமூகத்தைப் படைக்கும் வேட்கை நிறைந்த செயல் வேகம் கொண்ட நல்மனிதர்களின் தோழமையோடும் தொடரும் எம் கொன்சாகா சகோதரிகளின் புனித புரட்சியாத்திரை என்றும் இம்மண்ணில்...!