news
சிறப்புக்கட்டுரை
கொன்சாகா சபையின் பயணப்பாதை

இது விடியலைத் தேடிய பயணம்!

இது காலாற நடந்த பயணமல்ல;

கால்கடுக்க கால்தேய நடந்த பயணம்!

யாருமே பயணிக்க முன்வராத பகுதியில்

துணிச்சலோடு புதிய பாதையை உருவாக்கிப்

பயணித்த புரட்சிப் பயணம்! சாமானிய

மனிதர்களைச் சாதிக்கும் மனிதர்களாகச்

சமூக விடுதலையை, சமத்துவத்தை

உருவாக்கும் தலைவர்களாகப்

பயணிக்க வைப்போரின் வீரப்பயணம்!

இப்பயணம் ஒரு சகாப்தமாக, சரித்திரமாகி சாதனை படைத்துள்ளது. ஆம், மாமனிதர் இறை ஊழியர் மைக்கேல் அன்சால்தோ ஒரு சிறு பொறியென ஏற்றிவைத்த விளக்கு இன்று உலகெங்கும் சுடர்விட்டுப் பிரகாசிக்கின்றது. இருளில், இடையூறுகளில், இன்னல்களில், மனிதர் என்ற அடையாளமே இழந்து தவிக்கும் மக்களின் அடையாளமாகத் திகழ்பவர்களின் வரலாறு. ஆம், மனித மாண்பிழந்து அனைத்து நிலைகளிலும் நிர்க்கதியாகிப்போன விளிம்புவாழ் மக்களின் வாழ்விற்காக முழுவதுமாய், சமூகத்திற்காக மூச்சு விட்டு வாழ்ந்த சபை கொன்சாகா சபை. மனித முகவரியற்ற சமூகத்தின் முகவரியானது கொன்சாகா சபை. பெண்ணாய் பிறப்பதை இழிவாகக் கருதிய அன்றைய சமூகத்தில் பெண்களின் மாண்புக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட சபை கொன்சாகா சபை.

சபை நிறுவுநர் இறை ஊழியர் மைக்கேல் அன்சால்தோ

பிரான்சிஸ்குவின் புனித அலோசியஸ் கொன்சாகா சபையின் நிறுவுநரான இறை ஊழியர் மைக்கேல் அன்சால்தோ, இத்தாலி நாட்டின் சிசிலி தீவிலுள்ள மெசினா நகரில் 1739, செப்டம்பர் 29-ஆம் நாளில் பிறந்தார். இவர் 1754, ஜனவரி 15-ஆம் நாள் இயேசு சபையின் சிசிலியா மறைமாநிலத்தில் நவதுறவியாகத் தன்னை இணைத்துக்கொண்டார். 1767, டிசம்பர் 19-ஆம் நாள் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். இயேசு சபை மறைபரப்புப் பணியாளர்களின் வாழ்வாலும் பணியாலும் ஈர்க்கப்பட்ட மைக்கேல் அன்சால்தோ, தானும் அவர்களைப் போல மறைபரப்புப் பணியாளராகக் கடல் கடந்து சென்று, இயேசுவுக்காக உழைக்க வேண்டும் என்று பெரிதும் விரும்பினார். எனவே, அருள்தந்தை 1771, ஆகஸ்டு 15-ஆம் நாள் ஓர்தே என்னும் நகரில் இயேசு சபையில் தனது இறுதி அர்ப்பணத்தை, தந்தை வின்சென்சோ இப்போலூயித்தோ அவர்களின் கரங்கள் வழியாக இறைவனுக்கு அர்ப்பணித்தார்.

மறைபரப்புப் பணியாளராக வேண்டும் என்ற தனது தணியாத தாகத்தை நிறைவேற்ற இயேசு சபைத் தலைவர் தந்தை லொரென்சோ ரிச்சி அவர்களிடம் அனுமதி பெற்று இந்தியா நோக்கிய பயணத்திற்குத் தயாரானார். தந்தை அன்சால்தோ அவர்களோடு மேலும் ஐந்து பிரெஞ்சு இயேசு சபையினர் (ஆமேர், பஸ்ஸான், பாப்ரி, சின்சாரே, ஜான் பேப்டிஸ்ட் கோய்செல்) மறைபரப்புப் பணிக்காக  இந்தியாவிற்குப் புறப்பட்டு ஒரு பிரெஞ்சு கப்பலில் ஏறி நீண்ட பயணம் மேற்கொண்டனர். ஏறக்குறைய 5 மாதகாலப் பயணத்திற்குப்பின் 1771-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத் தொடக்கத்தில், அப்போதைய கர்நாடகப் பணித்தளத்தின் தலைமையகமாக இருந்த பாண்டிச்சேரி மண்ணில் அரிக்கமேடு கடற்கரையில் தங்கள் காலடித்தடங்களைப் பதித்தனர். பாண்டிச்சேரி வந்திறங்கிய தந்தை அன்சால்தோவையும், அவரோடு பயணித்த ஐந்து இயேசு சபைத் தோழர்களையும் பாண்டிச்சேரியிலிருந்த இயேசு சபை இல்லத்தின் தலைவர் தந்தை மோசாக் இருகரம் நீட்டி இன்முகத்தோடு வரவேற்றார்.

தந்தை அன்சால்தோ அவர்கள் நாள்தோறும் காலை 5 மணியிலிருந்து 10 மணி வரை ஒப்புரவு அருள்சாதனம் அளிப்பார். திறமைமிக்க ஆசியர்களைக் கொண்டு பல இளம் மகளிருக்கு நெசவுத் தொழிலில் தக்க பயிற்சியளித்து அவர்கள் வாழ வழி செய்தார். அதோடு அவர்களுக்கு மறைக்கல்வி போதனை அளித்து அங்கு அமைதியும் ஒழுங்கும் நிலைபெறச் செய்ததுடன், அவர்கள் தேவைகள் நிறைவேற ஆவன செய்தார். இவர் சிறந்த பாடலாசிரியர்; மறையுரை ஆற்றுவதிலும் வல்லவர். புதுவை நகரின் பெரும் பகுதியின் அப்போஸ்தலிக்க ஆட்சி பொறுப்பையும் இவர் ஏற்று நடத்திவந்தார். எஞ்சிய சிறிது காலத்தையும் வீணாகக் கழிக்காது நூல் எழுதுவதிலும், தன் கல்வியறிவை வளர்ப்பதிலும், புதிய மொழிகள் பயில்வதிலும், இன்னும் பக்தியை வளர்க்கப் புதிய திட்டங்கள் தீட்டுவதிலும் செலவழித்தார்

புதுவையின் சூழலமைவு

மனிதர்கள் பிறப்பின் அடிப்படையிலே ஒதுக்கப்பட்டனர். மானுடத்தின் சரிபாதியான பெண்ணினம் பல்வேறு நிலைகளில் ஒதுக்கப்பட்டது. சாதிய ஆணாதிக்கச் சுரண்டல்களுக்கு உள்ளாக்கப்பட்டனர் மகளிர். சிறு வயது திருமணங்களால் இளமையிலேயே கைம்பெண்களாக்கப்பட்டு முடக்கப்பட்டனர். சிறுமியர் மற்றும் மகளிருக்குக் கல்வி முற்றிலுமாக மறுக்கப்பட்டது. அனாதைக் குழந்தைகள் அவல நிலைக்கு உள்ளாக்கப்பட்டனர். தினந்தோறும் மக்கள் வறுமையோடு போராடுதல், அரசியல் போர், பகை உணர்ச்சியால் மக்கள் படும் மனச்சுமை போன்ற புதுவையின் சமூகச் சூழலமைவு, தந்தை அன்சால்தோ மனத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. இவர்களுக்காகவே பணியாற்ற வேண்டும் என்ற இலட்சியம் அஞ்சா நெஞ்ச வீரரான அன்சால்தோவின் மனத்தில் கிளர்ந்தெழுந்தது.

1775-ஆம் ஆண்டு தந்தை மைக்கேல் அன்சால்தோ இடைத்தெருவிலுள்ள ஒரு வீட்டை வாடகைக்கு வாங்கினார். அடைக்கலம் தேடிவந்த பெண்களையும் ஆதரவற்ற குழந்தைகளையும் கண்காணிக்க புனித லூயிஸ் தே கொன்சாகா மடம் (ஆதரவற்றோர் இல்லம்) ஒன்றைத் தொடங்கி அவ்வில்லத்தை, தூய அலோசியஸ் கொன்சாகாவின் பாதுகாவலில் ஒப்படைத்தார். இதுசின்ன மடம்என்று அழைக்கப்பட்டது. 1779-ஆம் ஆண்டு ஜூன் 16-ஆம் நாள் தந்தை கேர்து அடிகளாரின் மறைவிற்குப்பின், தந்தை கேர்து அடிகளாரால் தொடங்கப்பட்ட பெரிய மடத்தை (கார்மேல் மடம்) நிர்வகிக்கும் பொறுப்பையும் தந்தை அன்சால்தோ ஏற்றுத் திறம்படச் செய்தார். மகளிரையும் குழந்தையரையும் கண்காணிக்கும் பொறுப்பை அன்னை அன்னம்மாளிடம் ஒப்படைத்தார்.

அன்னம்மாள் பாண்டி மண்ணிலே பிறந்தவர். தந்தை அன்சால்தோவின் அறப்பணிகளாலும் வாழ்வாலும் கவரப்பட்டவர். பாதிக்கப்பட்ட மக்களின் விடியலைக் காண தந்தை அன்சால்தோவிடம் கனன்று கொண்டிருந்த நெருப்புக் கனலின் தகிப்பைத் தன்னுள் பெற்று, தன்னை ஆதரவற்றோருக்காகத் தொடங்கப்பட்ட புனித லூயிஸ் தே கொன்சாகா மடத்தில் வாழும் மகளிருடனும் குழந்தையருடனும் இணைத்துக்கொண்டார். இவர்களில், ‘அழைத்தல்என்னும் கொடையைப் பெற்றவர்கள் யார் என்பதை உய்த்துணர்ந்த தந்தை, அன்னை அன்னம்மாளுக்கும், அவருடன் இருந்த மகளிருக்கும் வெண்ணுடை அளித்தார். அன்றே கொன்சாகா சபைக்கு வித்திட்டார். அன்னை அன்னம்மாள் சிறிய வித்தானார். அன்னை அன்னம்மாள் ஆதரவற்றோர் இல்லத்தின் முதல் கனியாவார்.

பல மகளிர் இக்குழுவில் சேர்ந்ததால் அவர்களுக்குச் சில ஒழுங்குகள் கொடுக்கப்பட்டன. திருப்பலியில் பக்தியுடன் பங்கேற்றனர். செபமாலை செபித்தனர். தகுதியுள்ளவர்கள் திருப்பலியில் தங்கள் அர்ப்பணத்தை நிறைவேற்றினர். தேவ அழைத்தல் பெற்ற கன்னியர், அவர்களால் கண்காணிக்கப்படும் குழந்தையர், மகளிர் என்றும் இரண்டு குழுவாகப் பிரிக்கப்பட்டனர். இவர்களில் அன்னை அன்னம்மாள் முதல்வராகவும், அன்னை எலிசா கண்காணிப்பாளராகவும் தந்தையால் நியமிக்கப்பட்டனர்.

அன்றைய புதுச்சேரியின் சமூகச் சூழலால், தந்தை அன்சால்தோ அவர்களால் உருவாக்கப்பட்ட சிறிய மடம் இரண்டாகப் பிரிந்து செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. இவற்றுள் ஒன்றுதான் சமூகத்தால் தாழ்த்தப்பட்டோர் என ஒதுக்கப்பட்ட மகளிர், குழந்தையருக்கு ஆதரவும் வாழ்வும் வழங்கிய புனித லூயிஸ் தே கொன்சாகா மடம் (இல்லம்), இன்றைய நமது பிரான்சிஸ்குவின் புனித அலோசியஸ் கொன்சாகா சபை. மற்றொன்று, இன்று சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு பணியாற்றி வரும் அடைக்கல அன்னை சபை.

பெரிய மடம்என்று அழைக்கப்பட்ட கார்மேல் சபையினர், சின்ன மடங்களாகிய கொன்சாகா, அடைக்கல அன்னை உருவாக்கத்தில் பெரும் பங்கு வகித்தனர். மடங்களை நிர்வகிக்கும் பொறுப்புகளை ஏற்றதோடு, மடங்களிலுள்ளோரை நல்வழியில் நடத்தும் சீரிய பணியையும் செய்தனர்.  

அன்னை அன்னம்மாள் மற்றும் அன்னை எலிசா இருவரும் புனித லூயிஸ் தே கொன்சாகா மடத்தின் உள் நிர்வாகப் பொறுப்புகள் அனைத்தையும் சிரமேற்கொண்டு திறம்பட ஆற்றி வந்தனர். நிர்வாகப் பணிகளுடன் ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்ந்த குழந்தையர், மகளிருக்கு இறைவனது மேலான அன்பை எடுத்துக்கூறி, இறைவனோடு உறவுகொள்ள, செபிக்கக் கற்றுத் தந்தனர். அனாதைக் குழந்தைகளை அரவணைப்பது, இளம் விதவையரையும் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளான மகளிரையும் சமூகத் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பது  போன்ற பணிகளில் ஈடுபட்டனர்.

அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு?’ என்று பெண்குலத்தை அடுக்களையில் முடங்கச் செய்த நிலையை மாற்றி, கல்வியறிவு ஒன்றே இம்மகளிரைச் சமூகத்தில் உயர்த்தும் எனக் கருதி, பல எதிர்ப்புகளுக்கு இடையில் நான்கு அல்லது ஐந்து மாணவியரைக் கொண்டே ஒரு பள்ளியைத் தொடங்கினார் தந்தை அன்சால்தோ. பல்வேறு எதிர்ப்புகள், பொருளாதார நெருக்கடிகளுக்கு இடையே தொடங்கப்பட்ட இப்பள்ளி மாணவியரின் அறிவாற்றலின் வளர்ச்சியைக் கண்ட பிற ஆதரவற்ற மாணவியரும் இப்பள்ளியில் சேர முன்வந்தனர். 30-க்கும் மேற்பட்ட மாணவியரைக் கொண்டு, 1789-இல் தொடங்கப்பட்ட அன்சால்தோ பள்ளியே மகளிருக்கென பாண்டிச்சேரியில் தொடங்கப்பட்ட முதல் கல்விக்கூடமாகத் திகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது

வாழ்விழந்து நின்ற பெண்கள் தங்கள் சொந்தக் காலில் நின்று வாழ்வு பெறவேண்டும் என்ற உயரிய எண்ணத்தோடு இம்மகளிருக்கு தொழிற்கல்வி கற்றுத்தந்தனர். குறிப்பாக, கைத்தறி நெசவு வேலைகளில் ஈடுபடுத்தினர். இதனால் நிராதரவாய் நின்ற மகளிரும் குழந்தையரும் மேன்மையுற்றனர், தன்னம்பிக்கை பெற்றனர்.   

சென்னையிலுள்ள கப்புச்சின் சபையினரை மேற்பார்வையிடும் பணி, உரோமையிலிருந்த பேராயர் சம்பனுவா அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. நிர்வாகத்திறமையில் சிறப்புற்றிருந்த அருள்தந்தை அன்சால்தோ அவர்களை இக்கட்டான இப்பணியைச் செய்யும்படி பேராயர் நியமித்தார். கீழ்ப்படிதலில் நிகரற்றவரான தந்தை 1805, அக்டோபர் 15-ஆம் நாள் புதுவையிலிருந்து சென்னையை நோக்கிப் புறப்பட்டார். அக்டோபர் 20-ஆம் தேதி சென்னையைச் சென்றடைந்தார். பயணத்தின்போது ஏற்பட்ட உடல்நலக்குறைவால் 1805, நவம்பர் 2 அன்று - அனைத்து ஆன்மாக்கள் திருவிழாவன்று இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்டு விண்ணக வாழ்வில் நுழைந்தார்

1805, நவம்பர் 2-ஆம் நாள் தந்தை அன்சால்தோ இறக்கும்வரை பல்வேறு சவால்களுக்கும், பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இறைபராமரிப்பில் நம்பிக்கை கொண்டு தந்தைக்குரிய பொறுப்போடு சபையை நடத்தி வந்தார்.

தந்தைக்குப் பின்...

தந்தையின் இறப்பிற்குப் பிறகு போரின் விளைவுகளாலும் கடும் பஞ்சத்தாலும் பெரும் பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்து வறுமையில் உழன்ற ஆதரவற்றோர் இல்லங்களைப் பேணிப் பராமரிக்கும் பொறுப்பினை, புதுவை மிஷன் ஏற்றுச் சிறப்பாகக் காத்து வந்தது. இப்பராமரிப்புப் பணியில் புதுவை மிஷனுக்குப் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்ட போதிலும், தங்களாலான மட்டும் பொருளுதவி அளித்து வந்தது.

புதுவை மிஷன், கீழச்சேரி மிஷனை நிறுவிய மறைத்திரு. மனெந்தி அடிகளிடம், அன்சால்தோ அடிகளுக்குப்பின் ஆதரவற்றோர் இல்லங்களைப் பராமரித்து வரும் பொறுப்பினை ஒப்படைத்தது. மீண்டும் மீண்டும் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டாலும், இறைவன் தமது கருணையைப் பலர் மூலம் வெளிப்படுத்திக்கொண்டே இருந்தார்

பேரருள்திரு பொனான் ஆண்டகை புதுவையின் ஆயராக இருந்தபோது, பாரிசு வேதபோதக சபையில் ஒளி விளக்காய்த் துலங்கிய அருள்தந்தை லெகோதே, கி.பி. 1839-ஆம் ஆண்டு இறுதியில் கொன்சாகா ஆதரவற்றக் குழந்தைகள் இல்லப் பராமரிப்புப் பணியை ஏற்றார். புனித லூயிஸ் தே கொன்சாகா ஆதரவற்றோர் இல்லமாகத் தொடங்கி வளர்ச்சி பெற்று, ஒரு துறவற சபையாக உயர்வு பெற்றதற்கு தந்தை லெகோதே அவர்களே முக்கியப் பொறுப்பாளர் ஆவார்.

பேரருள்பெருந்தகை போனான் பேராயரின் ஒப்புதலின்படி 1855-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் துறவற நிலைக்கான சிறப்புப் பயிற்சிகள் நடைமுறைப்படுத்தப்பட்டனதியானம் வழங்கப்பட்டது. இதற்குப்பின் வெள்ளை நிறத்தில் ஒரு விரல் அகல இரட்டை கரைபோட்ட கறுப்புப் புடவை சபையினரின் ஆடையாகக் கொடுக்கப்பட்டது. உலகிற்கும் அதன் இறுமாப்பிற்கும் அப்பாற்பட்டவர்கள் துறவிகள் என்பதைக் கறுப்பு நிறம் எடுத்துக்காட்டியது. இறையருளுக்கும் ஒவ்வொரு மனிதரிடமும் செலுத்த வேண்டிய அன்பிற்கும் அடையாளமாக இரட்டை வெள்ளைக் கோடுகள் போடப்பட்டன.

பேராயர் ஆலன் ஆண்டகையின் அழைப்பின் பேரில் அன்னை காணிக்கை மேரி, மூன்று சகோதரிகளுடன் 1882-ஆம் ஆண்டு சென்னை சென்றார். மகளிருக்கான கல்வி நிலையத்தையும், ஒரு கன்னியர் இல்லத்தையும் 1886-ஆம் ஆண்டு அன்னை உருவாக்கினார். அதுவே சென்னை-வேப்பேரியைத் தலைமையிடமாகக் கொண்டு உலகெங்கும் பணியாற்றிவரும் புனித வளனாரின் பிரான்சிஸ்கன் துறவற சபை (FSJ)ஆகும்.

சபையின் பரிணாம வளர்ச்சி

மறைமாநிலச் சபையாக, புதுவை உயர் மறைமாநிலத்தை மையமாகக் கொண்டு, புதுவை பேராயர் மற்றும் சபையின் இயக்குநர்களின் வழிகாட்டுதலில்எளியோர்க்கு நற்செய்திஎனும் நமது விருதுவாக்கினைச் செயல்படுத்தி வந்தனர் கொன்சாகா சகோதரிகள். தந்தை லெகோதே அவர்களின் அரிய முயற்சியால், 1858-ஆம் ஆண்டு அக்டோபர் 4-ஆம் நாளிலிருந்து புனித பிரான்சிஸ்கன் மூன்றாம் சபை ஒழுங்குகளைப் பின்பற்றப் பயிற்றுவிக்கப்பட்டனர்.  

மூன்றாம் சபையினரின் தவக்கோல ஆடையாக இரண்டு வெள்ளை நிற பட்டை கரை போட்ட நீல ஆடையைத் தேர்ந்தெடுத்து வழங்கினார். செபப் புத்தகத்திற்குப் பதிலாக பிரான்சிஸ்கன் செபமாலையும் இடைக்கயிறும் கொடுக்கப்பட்டன. அன்று முதல் புனித பிரான்சிஸ்குவின் மூன்றாம் சபை ஒழுங்கு முழுவதும் சகோதரிகளால் பின்பற்றப்பட்டது. தந்தை லிஜியோன் அடிகளாரின் அயரா முயற்சியால், 1886-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18-ஆம் நாள், திரு அவையின் ஒப்புதல் பெற்ற பிரான்சிஸ்கன் முறையான மூன்றாம் சபைகளைப் பின்பற்றும் துறவற சபையாகத் திரு அவையால் அங்கீகரிக்கப்பட்டது. இந்நிகழ்வு நமது வரலாற்று நிகழ்வுகளுள் மிக முக்கியமான ஒன்று. பேராயர் பேரருள்திரு. லவுனான் ஆண்டகையும் இதற்காக நமக்குப் பெருமளவு உதவிபுரிந்துள்ளார். திருத்தந்தை 13-ஆம் லியோ அவர்களால் இந்த அங்கீகாரம் நமக்கு வழங்கப்பட்டது.  

ஏறக்குறைய 150 ஆண்டுகால நீண்ட நெடிய பயணத்தில் சபையின் தலைமைப் பொறுப்பை ஏற்ற அன்னையர் அவரவர் ஆளுமைக்கேற்பவும், அந்தந்தக் காலகட்டங்களின் தேவைகளுக்கும், திரு அவையின் வழிகாட்டுதலுக்கும் ஏற்ப சபையை வழிநடத்தி வந்தனர். குறிப்பாக, அன்னை நம்பிக்கை மேரி சபைத் தலைவியாக இருந்தபொழுது, சபையில் புதுப்பித்தல் பேரவைகள் நடத்தப்பட்டன. அத்துடன் திருத்தந்தையின் நேரடி ஆட்சிக்குட்பட்ட சபையாக உயர்த்தப்பட முயற்சிகள் எடுக்கப்பட்டன. தொடர்ந்து அன்னை L.C. மரியா சபைத் தலைவியாகப் பொறுப்பேற்று செயல்பட்ட வேளை 1996, அக்டோபர் 4-ஆம் நாள் திருத்தந்தையின் நேரடி ஆட்சிக்குட்பட்ட சபையாக உயர்த்தப்பட்டது. கொன்சாகா குழுமத்தினர் அனைவரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்திய நிகழ்வு இது. அத்துடன் எல்லைகளைக் கடந்து உத்வேகத்துடன் பணிகளை எடுத்துச்செல்ல துணையாக நின்றது

பணித்தளங்களின் விரிவாக்கம்

புதுவை மிஷனில் எப்பொழுதும் நம் சகோதரிகள் சமூகத்தின் விளிம்பிற்குத் தள்ளப்பட்ட மக்களுக்கே கல்வி நிறுவனம், அனாதை இல்லம் மூலம் பணியாற்றியுள்ளனர். இதனை புதுவை மிஷன் வரலாறு, ‘புனித ஞானப்பிரகாசியார் சபை கன்னியர்கள் தாழ்த்தப்பட்ட அரிசனப் பிள்ளைகளுக்கு மட்டுமே சிறப்பான பணிபுரிந்தமையால், இவர்கள் எங்கு வேண்டுமானாலும் சேவை செய்ய அனுமதிக்கப்பட்டனர்எனக் குறிப்பிட்டுள்ளது.

ஓரளவு வளர்ச்சி பெற்ற பின்னர் புதுவையைக் கடந்து மற்ற இடங்களுக்கும் கொன்சாகா சபை சகோதரிகள் பணியாற்ற அனுமதிக்கப்பட்டனர். பணியினை முன்னிட்டு வெளியிடங்களுக்கு அனுப்பப்பட்ட சகோதரிகள் தற்காலிக மற்றும் நிரந்தர உறுதிமொழிகள் எடுத்தனர். நம் முன்னோர் சென்று பணி செய்த இடங்கள் அனைத்தும் குக்கிராமங்களாகவும், தங்கிய இடங்கள் குடிசைகளாகவுமே இருந்தன. நற்செய்தி அறிவிப்பதையே முக்கியப் பணியாகச் செய்து வந்தனர்

கல்விப்பணி எனும் பொழுது, வெறும் உலகக் கல்வியோடு மூத்த அன்னையர் நின்றுவிடவில்லை; மாறாக, திருமறையைப் பற்றிய போதனை அவர்களது பணியில் மைய இடம்பெற்றது. “நற்செய்திக்காகக் குரல் கொடுக்கவே நான் நியமிக்கப்பட்டிருக்கிறேன்என்ற தூய பவுலின் மேலான வார்த்தைகளை மனத்தில் ஏற்றிருந்தனர்.

அன்னையரின் திருமறைப் பணியை முடமாக்கும் வகையில் அரசாணை ஒன்றை 16.09.1898 அன்று புதுவை அரசு வெளியிட்டது. ‘புதுவை அரசு பள்ளிகளில் மறைக்கல்வியைப் போதிக்கக்கூடாதுஎன்பதே அந்த ஆணை. அரசாணையைக் கண்ட அன்னையர் அரசின் அதிகாரப் பலத்தைக் கண்டு பயந்து போகவுமில்லை, தாங்கள் கொண்ட கொள்கையில் பின்வாங்கிடவும் இல்லை. தங்களுடைய எதிர்ப்பை மிகத் துணிவுடன் செயல்வடிவில் வெளிப்படுத்தினர். மறைக்கல்வி போதிக்க அனுமதிக்காத இடத்தில் வேறு பணி செய்யமாட்டோம் எனப் பள்ளிப் பணிகளிலிருந்து விலகினர். பள்ளிகளில் பணி செய்வதன் மூலம் கிடைத்த வருவாயைக் கொண்டே வாழ்க்கை நடத்தி வந்தவர்கள், அதைக் குப்பையென எண்ணித் தூக்கி எறிந்தனர். அத்துடன் நின்றுவிடவில்லை; வீடுகளுக்குச் சென்று நற்செய்திப் பணி, சமூகப் பணி முதலியவற்றைச் செய்துவந்தனர்

சபையின் ஆரம்ப காலத்திலிருந்து கல்வி கற்பிப்பதும் நமது பணிகளில் ஒன்றாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 01.03.1903-ஆம் நாளன்று கொன்சாகா பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. இதுவே நமது சபை நிறுவுநர் தந்தை அன்சால்தோவின் மறைவிற்குப்பின் தொடங்கப்பட்ட முதல் பள்ளி. அன்னை ஆரோக்கியம்மாள் சபைத்தலைவியாகவும், அருள்திரு. எஸ்காந்த் சபையின் இயக்குநராகவும் இருந்தனர்.

மியான்மரில் நமது சபையினர்

1929-ஆம் ஆண்டு அன்னை பெயாத்திரிஸ் மேரி அவர்கள் சபைத்தலைவியாக இருந்தபோது அருள்தந்தை ஆபேல் மேரி கோம் அவர்கள் சபை நிர்வாகியாக இருந்தார். தந்தை லேரோ அவர்கள் மியான்மரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மேண்டலே நகரில் துவங்கியுள்ள பள்ளியில் பணியாற்ற பேராயர் புல்கியேர் அவர்களின் அனுமதியுடன் நம் சகோதரிகளுக்கு அழைப்பு விடுத்தார். பள்ளியை நடத்தவும், அருள்பணி ஆற்றவும் ஜெர்த்ரூத் மேரி, ரெஜினா, லூயில் மரி ஆகத்தா ஆகியோர் அனுப்பி வைக்கப்பட்டனர். கொன்சாகா சகோதரிகளின் வழிநடத்துதலில் 1929, மே 15-இல் இருந்து பள்ளி செயல்படத் தொடங்கியது.

அறிவிலும், பல கலைகளிலும் சிறந்து விளங்கிய சகோதரிகளின் புகழ் மியான்மர் எங்கும் பரவத் தொடங்கியது. 1936-இல் மீண்டும் இந்தியாவிலிருந்து சகோதரிகள் ஐவர் மேமியோ நகருக்குச் சென்றனர். சகோதரிகளின் பணி மட்டுமல்ல, வாழ்வும் அப்பகுதிவாழ் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பல்சமூகச் சூழல் நிலவிய அப்பகுதிகளில் இருந்து, பர்மிய இளம் மகளிர் எழுவர் தங்கள் வாழ்வை இறைவனுக்கு அர்ப்பணிக்க முன்வந்தனர். அம்மண்ணினின்று பணி செய்ய இளம் உள்ளங்கள் வந்ததால், பணி சிறப்புடன் நடைபெற்றது. 1956-இல் முறைப்படி நவதுறவியர் இல்லம் நிறுவப்பட்டு இளம் மகளிர் உருவாக்கப்பட்டு வருகின்றனர்

இரண்டாம் உலகப்போரின்போது பெரிய வெள்ளிக்கிழமை இரவு அன்று பெரிய சனிக்கிழமை நிகழ்வுகளுக்காகத் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுக்  கொண்டிருந்தனர் சகோதரிகள் இருவர். இரவு 11.30 மணியளவில் சரமாரியாக வீசப்பட்ட குண்டுகளால் தாக்கப்பட்டு இறைப்பணி செய்யும் பொழுதே உயிர் துறந்தனர்.

இரண்டாம் உலகப்போருக்குப் பின் மியான்மருக்கும் இந்தியாவுக்குமிடையே தகவல் தொடர்புக்கான வாய்ப்புகள் குறைந்தன. அதன் விளைவாக மியான்மரிலுள்ள நம் சகோதரிகளுடன் தொடர்புகொள்ளவே இயலாத நிலை இருந்தது

ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்குப் பின் தனித்து விடப்பட்ட மியான்மரில் பணியாற்றிய சகோதரிகள் தாய்ச்சபையுடன் இணைக்கப்பட்டனர். அன்னை பார்பரா மேரி சபைத் தலைவியாக இருந்தபோது இதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டன. இன்று முறையான சட்டத்திட்டங்களுடன் மியான்மர் தனி மாநிலமாக இயங்கி வருகிறது.

பர்மிய சகோதரிகள் மிக எளிய வாழ்க்கை வாழ்கிறார்கள். பள்ளிகள் எல்லாம் அரசின் நேரடி நிர்வாகத்திற்குச் சென்றுவிட்டன. அரசின் கெடுபிடி அதிகம். மறைமாவட்டம்  கொடுக்கும் சிறிதளவு பணத்தில்தான் சகோதரிகள் வாழ்க்கை நடத்துகிறார்கள். நற்செய்திப்பணி, ஆலயப்பணி, கைவினைப் பொருள்கள் தயாரிப்பு, தோட்டப் பராமரிப்பு, குழந்தைகள் காப்பகம், மழலையர் பள்ளி நடத்துதல் இவை மியான்மரில் நம் சகோதரிகள் செய்யும் பணிகள். குறைந்த வருவாயில் நிறைந்த மனத்துடன் முழுமையான பணியாற்றி வருகின்றனர்.

மேலை நாடுகளில் நம் சகோதரிகள்

1968-ஆம் ஆண்டு கொன்சாகா சகோதரிகள், அன்னை டெனிஸ் மேரி சபைத் தலைவியாக இருந்தபோது முதன் முதலில் மேலை நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர். வெளிநாடு நோக்கிய சகோதரிகளின் முதல் பயணம், 1969-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ஆம் தேதி தொடங்கியது. நாம் வெளி நாடு செல்வதற்கு உதவியாகவும் காரணமாகவும் இருந்தவர் அருள்திரு. இராபர்ட் கௌசினா ஆவார். முதன் முதல் ஐரோப்பா செல்வதற்கென சகோ. சபினா, சகோ. கயத்தான், சகோ. எட்வட் மேரி, சகோ. பிளாரன்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டு மொழிப்பயிற்சி அளிக்கப்பட்டு ஆஸ்திரியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது ஐரோப்பாவில் ஜெர்மனி, ஆஸ்திரியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் நம் சகோதரிகள் பணியாற்றி வருகின்றனர். நலவாழ்வுப் பணிகளிலும் பங்குப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்

ஆந்திராவில் நம் சகோதரிகள்

முதன் முதலாக, தமிழ் மாநிலம் கடந்து, கிளை இல்லம் ஆந்திர மாநிலம் இராப்பூரில், 1978-ஆம் ஆண்டு மே மாதம் முதல் நாள் நிறுவப்பட்டது. அன்னை பார்பரா மேரி சபைத் தலைவியாக இருந்தபோது நெல்லூர் ஆயர் பேரருள்திரு. பாலசாமியின் அழைப்பின் பேரில் சகோதரிகள் அங்குச் சென்றனர். தற்போது நெல்லூர், நல்கொண்டா, வாரங்கல், கம்மம், கடப்பா, விஜயவாடா ஆகிய இடங்களில் சகோதரிகள் பணியாற்றி வருகின்றனர். 23-வது பொதுப்பேரவையின் தீர்மானத்தின்படி  சபையின் வளர்ச்சியை முன்னிட்டு வட்டாரங்களாகப் பிரிந்து செயல்பட்டனர். மேலும், 26-வது புதுப்பித்தல் பேரவையின் வழிகாட்டுதலில் வட்டாரம் மாநிலமாக்கப்பட்டு, வளர்ச்சியின் பாதையில் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது

வட மாநிலங்களில் நம் சகோதரிகள்

நமது பணி வட மாநிலங்களில் பரவ வேண்டும் என்ற எண்ணத்தில், அன்னை நம்பிக்கை மேரி அவர்களின் பணிக்காலத்தில் சில சகோதரிகளும், தொடர்ந்து அன்னை L.C. மரியா அவர்களின் பணிக் காலத்தில் சகோதரிகள் எழுவரும் படிப்பதற்கென வட மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டனர். சபை அன்னை A. மேரி ஸ்டெல்லா அவர்களின் தொலைநோக்குப் பார்வையுடன் கொன்சாகா சபை சகோதரிகளின் திருத்தூதுப் பணிகள் வட மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் விரிவுபடுத்தப்பட்டன. இவர்களைத் தொடர்ந்து வந்த சபை அன்னையர் கல்விப்பணியிலும், சமூகத்தின் கடைநிலையிலுள்ள மலைவாழ் மக்களுக்கான சமூகப் பணியிலும் நம் சகோதரிகளை ஆர்வமுடன் ஈடுபடுத்தி வட்டாரமாக வளர்ந்து நிற்க வழிவகுத்தனர்.

சரித்திரம் படைத்த சாதனையாளர்கள்

முதன்முறையாக கொன்சாகா சபையின் தலைவி, திரு அவையின் முறைப்படி சபையின் உறுப்பினர்களால் 1905, மார்ச் மாதம் 19-ஆம் தேதி அருள்திரு. போஷர் அடிகளார் முன்னிலையில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சபைத்தலைவி அன்னை கிளாரம்மாள் ஆவார். தொடர்ந்து நடந்த பேரவைகள் சபையின் புதுப்பித்தலுக்கும், முறையான வளர்ச்சிக்கும், இலக்கினைக் கூர்மைப்படுத்துவதற்கும் சட்டம்-ஒழுங்குகளைச் சீர்திருத்தம் செய்வதற்கும், பணிகளைச் சிறப்பாகச் செய்வதற்கும் ஒளி விளக்குகளாக அமைந்தன.

சபையின் வளர்ச்சியில் வலுமிக்க கரமாய் இருந்த சபைத்தலைவியர் அன்னை டெனிஸ் மேரி, அன்னை பார்பரா மேரி, அன்னை நம்பிக்கை மேரி, அன்னை L.C. மரியா, உயர்கல்வி நிலையங்களை உருவாக்கி கல்விப்பணிக்கும், சபைக்கும் புதுத் திசையை வகுத்த அன்னை C. நோயல் ராணி, வட மாநிலங்களில் பணித்தளங்களை விரிவுப்படுத்தி, சமூகப் பணிக்குப் புது வீச்சு கொடுத்த அன்னை A. மேரி ஸ்டெல்லாநமது நிறுவுநரின் உள்ளுயிரை உலகறியச் செய்ய அவரைப் புனிதராக உயர்த்தும் பணியை முன்னெடுத்து ஆன்மிக அழுத்தம் கொடுத்த அன்னை G. ராஜாமணி மற்றும் இவர்களின் பாதையில் தற்போதைய அன்னை M. திரேசா ஞானமணி அவர்கள்.

இறுதியாக...

காலம் நகர்ந்து தகவல் தொழில்நுட்ப யுகமானாலும், அறிவியல் வளர்ந்து ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜன்ஸ் ஆனாலும் தனது தனித்துவத்தை என்றும் இழக்காமல், காலத்தின் அறிகுறிகளுக்கேற்ப இலக்கினைக் கூர்மைப்படுத்தி தனிவரத் திற்குப் புதுப்பொருள் கொடுத்து, பணிகளில் புதுமையைப் புகுத்தி சமூகத்தின் விளிம்பிலுள்ளவர்களுக்கே எம் பணி என்பதில் சிறிதும் சமரசம் செய்துகொள்ளாமல் நற்செய்தி அறிவிப்புப்பணி, கல்விப்பணி, சமூகப்பணி, நலவாழ்வுப்பணி, சமூக மாற்றப்பணி ஆகிய அருள்பணிகளின் வழியாகத் துடிப்போடு திரு அவையின் பணிகளை மேற்கொண்டு, இறையாட்சியை அமைப்பதில் தீவிரமாகச் செயல்படுபவர்கள் கொன்சாகா சகோதரிகள்.

சமூகத்தின் விளிம்பிற்குத் தள்ளப்பட்ட மக்களுக்கே கொன்சாகா சகோதரிகள் என்றும் பணியில் முதலிடம் அளித்து வந்துள்ளனர். இதனால் பல முறை பலரால் புறந்தள்ளப்பட்டுள்ளனர். ஆயினும், இப்பணியையே தாம் என்றும் அயராது ஆற்றி வருகின்றோம் என்ற உணர்வு அவர்களுக்கு உத்வேகத்தைக் கொடுக்கிறது.

கொன்சாகா சபையானது தலைமையகத்தின் கீழ் எட்டு இல்லங்களையும், மேலைநாடுகளில் 14 பணித்தளங்களையும், சலோம் மாநிலத்தின் கீழ் 40 இல்லங்களையும், அலோசியஸ் மாநிலத்தின் கீழ் 34 இல்லங்களையும், அன்சால்தோ மாநிலத்தின் கீழ் 18 இல்லங்களையும், மியான்மர் அலோசியஸ் மாநிலத்தின் கீழ் 20 இல்லங்களையும், அலோசியஸ் கொன்சாகா வட்டாரத்தில் வட மாநிலத்தைச் சார்ந்த 14 இல்லங்களையும் கொண்டு, சமூக மாற்றத்திற்கான பல்வேறு மக்கள் பணிகளில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றது.

சிறு விதையாக ஊன்றப்பட்ட கொன்சாகா, கிளர்ந்து முளைத்தெழுந்து கிளைப்பரப்பி ஆலமரமாக விழுதுவிட்டு நிமிர்ந்து நிற்கின்றது இன்று! கொன்சாகா சகோதரிகள் எல்லையைக் கடந்து பணியாற்றுபவர்கள். தொல்லைகளைத் துச்சமெனக் கருதுபவர்கள். இறையாட்சிப் பணிக்காய் சமுதாயத்தில் புரையோடிக் கிடக்கும் சாதிய வேற்றுமையை வேரறுக்க, பெண் விடுதலைக்காகப் புரட்சிக் குரல் கொடுக்க, கல்வி கற்பிப்பதைச் சமூக மாற்றத்திற்கான கருவியாகக் கையிலெடுத்துக் கொண்டு, ‘இறைவன் நம் தந்தை; நாம் அனைவரும் சகோதர-சகோதரிகள்என்ற இயேசுவின் நற்செய்தியை நெஞ்சுரத்துடன் எத்திக்கும் எடுத்தியம்பும் கொன்சாகா சபை சகோதரிகளின் அறப்போர் தொடரும்.

இயற்கையை வளப்படுத்தும் முன்னெடுப்புகளோடும், சமத்துவம், நீதி நிறைந்த சமூகத்தைப் படைக்கும் வேட்கை நிறைந்த செயல் வேகம் கொண்ட நல்மனிதர்களின் தோழமையோடும் தொடரும் எம் கொன்சாகா சகோதரிகளின் புனித புரட்சியாத்திரை என்றும் இம்மண்ணில்...!

news
சிறப்புக்கட்டுரை
கடந்த பாதையின் சுவடுகள்

யாரை நான் அனுப்புவேன், என் மக்களின் விடுதலைக்காய்?” என்ற இறைவனின் குமுறலைக் கேட்டு, “இதோ நான் இருக்கிறேன்என்ற வேட்கையோடு 250 ஆண்டுகளுக்கு முன்பு விடிவெள்ளியாய், அக்கினிச் சுடராய், விதையின் விருட்சமாய்ப் பல இயற்கைப் பேரிடர்களின் இதயமாய் 1775-இல் பாண்டி மண்ணில் தடம்பதித்தவர்தான் இறை ஊழியர் மைக்கேல் அன்சால்தோ.

கிழிந்த ஆடையும், சீக்கும் சிரங்கும் மனித முகவரியற்ற முகமும் அடிமைத்தனமும் ஆதரவற்ற நிலையும் சாதியத்தாண்டவமும், பெண்களின் அவல நிலையும் ஏழை-பணக்காரர் என்ற ஏற்றத்தாழ்வும், கைவிடப்பட்ட குழந்தைகளின் கதறலும் எம் கொன்சாகா சபை நிறுவுநரைத் தூக்கமில்லாமல் செய்ததன் இறைவெளிப்பாட்டின் உதயமே கொன்சாகா ஆதரவற்றோர் இல்லம் (மடம்).

ஆதரவற்றோர் இல்லமாக புதுவை மண்ணில் ஊன்றப்பட்ட விதை பல முன்னோர், அன்னையர், சகோதரிகளின் வாழ்வால், பணியால், வியர்வையால், செந்நீரால் இன்று தழைத்து, செழித்து, பெரிய ஆலமரமாக வளர்ந்து, உலகின் பல இடங்களில் பணியாற்றி வருவதைக் கண்டு மகிழ்கின்றோம்.

250 ஆண்டுகள் நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட எம் சபையின் 25 ஆண்டுகள் கொன்சாகா சபையின் துறவிகளாக நாங்கள் பயணித்து இருக்கின்றோம் என்பதை நினைத்து அழைத்த இறைவனுக்கும், உருவாக்கிய சபைக்கும் நன்றி கூறுகிறோம். 25 ஆண்டுகளில் அன்பையும் அரவணைப்பையும் அர்ப்பணத்தையும் அறிவாற்றலையும் அறநெறிகளையும் அரசியலையும் ஆன்மிகத்தையும் ஆளுமையையும் கலை இலக்கியத்தையும் கலாச்சாரத்தையும் சரித்திரத்தையும் சமத்துவத்தையும் சபைப் பற்றையும் சகிப்புத்தன்மையையும் மனிதர்களையும் மதநல்லிணக்கத்தையும் மனிதத்தையும் மதிக்கும் பண்பையும் உண்மை உழைப்பையும் உதவி செய்யும் குணத்தையும் தைரியத்தையும் தன்மானத்தையும் விவேகத்தையும் விருந்தோம்பல் பண்பையும் கற்றுக்கொடுத்து, வளர்த்தெடுத்தது மட்டுமல்லாமல், சபையின் பல பொறுப்புகளைக் கொடுத்து, மறையறிவு-இறையறிவோடு உலகறிவை ஊட்டி எங்களைப் பீனிக்ஸ் பறவைகளாய்த் திரு அவைக்கும் உலகிற்கும் அளித்தவர்தான் எம் கொன்சாகா தாய்!

250-வது யூபிலி கொண்டாட்டத்தில் தங்களின் தியாகம் நிறைந்த வாழ்வால் வாழ்ந்து காட்டி, எங்களை அழகாக வளர்த்தெடுத்து, அற்புதமான வேட்கையை உணவாக ஊட்டி, சமுதாயத்தின் விளிம்புநிலை மக்களுக்காக உயிர் உள்ளவரைப் பணியாற்ற வேண்டும் என்ற உணர்வைத் தந்த அத்தனை பேருக்கும் நன்றி கூறுகிறோம். துறவிகள் என்பதைவிட பிரான்சிஸ்குவின் புனித அலோசியஸ் கொன்சாகா துறவிகள் என்பதில் மகிழ்கின்றோம்.

இறையாட்சிப் பாதையில் ஏழை மக்களுக்காகவே பணியாற்றி, ஒளிரும் தீபங்களாய் எம் சபையின் சகோதரிகள் திகழ, தூய ஆவியின் துணையை வேண்டி நன்றியோடு வாழ்த்துகிறோம்.

நன்றியுடன் வாழ்த்திடும்

2025-2026-இல் வெள்ளி விழா காணும்

கொன்சாகா அருள்சகோதரிகள்

news
சிறப்புக்கட்டுரை
அருள்சகோதரிகளின் மகத்தான வளர்ச்சி

புனித அலோசியஸ் கொன்சாகா சபை தொடங்கி 250-வது ஆண்டு யூபிலி விழாவைக் கொண்டாடும் அருள்சகோதரிகளே, உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்! இந்தத் துறவற சபை ஆல்போல் வளர்ந்து, இன்னும் பல நூற்றாண்டுகள் விளிம்பு நிலை மக்களின் வாழ்வை வளப்படுத்த எனது செபங்கள்.

ஆன்மிகத் தெளிவும் பணியின் சான்றும்

இயேசு சபையினரால் தொடங்கப்பட்டாலும், சபை புனித அசிசியாரின் ஆன்மிகத்தை (எளிமை, ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் நோக்கிய பணி) பின்பற்றுவது மிகச் சரியானதொரு முன்னறிவிப்பு. உங்களின் நற்செய்திப் பணி, நலவாழ்வுப் பணி, சமூக மாற்றுப்பணி மற்றும் கல்விப்பணி ஆகியவை பல ஆண்டு காலமாக விளிம்புநிலை மக்களை நோக்கியே அமைந்திருப்பதற்கு இதுவே சான்று. உங்களின் வாழும் வரலாறு எனக்கு நன்றாகத் தெரியும் என்பதால் இதை உறுதியாகக் கூறுகிறேன்.

மகத்தான வளர்ச்சிக்குக் கிடைத்த பதிலடி

ஒரு காலத்தில் விமர்சிக்கப்பட்ட நீங்கள், இன்று உலகில் எட்டுத்திக்கும் சென்று, பல மொழிகளைக் கற்று, கடவுள் பணி  செய்கிறீர்கள். ஆங்கிலம் மட்டுமின்றி, இத்தாலிய மொழி, ஜெர்மனி மொழி, இந்தி எனப் பல மொழிகளில் தேர்ச்சி பெற்று, திரு அவைக்கும் சமூகத்திற்கும் இன்றியமையாத எடுத்துக்காட்டாக உயர்ந்துள்ளீர்கள்.

உயர்கல்வி நிறுவனங்கள், இமயம் தொடும் கல்விச்சாலைகள் என இன்றைய இளைய சகோதரிகள் உருவாக்கி வருவது, உங்களைக் குறைவாக மதிப்பிட்டவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் உரத்த பதிலடி.

இலட்சியப் பயணம் தொடர வேண்டும்

உங்கள் பயணம் இதோடு நின்றுவிடக் கூடாது. விளிம்புநிலை மக்களின் வாழ்வு, குறிப்பாக, மகளிரின் வாழ்வு உச்சங்களைத் தொட வேண்டும். உயர்கல்வி நிறுவனங்களைப் பல்கலைக்கழகங்களாக உயர்த்துங்கள்பன்னாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யுங்கள். மகளிருக்கான சிறப்பான நிறுவனங்கள் பலவற்றை உருவாக்கி, ‘நாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்லர்என்பதை நிரூபிக்க வேண்டும்.

உங்களை உளமார வாழ்த்துகின்றேன்... உங்களுக்காகத் தொடர்ந்து வேண்டுகின்றேன்!

news
சிறப்புக்கட்டுரை
வரலாற்றுச் சிறப்புமிக்க யூபிலி

பிரான்சிஸ்குவின் புனித அலோசியஸ் கொன்சாகா சபையின் (FSAG) 250-வது யூபிலி விழா மிகவும் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகவும் உணர்வுப்பூர்வமானதாகவும் உள்ளது.

இந்த எனது உரையில் சபையின் தோற்றம், நிறுவுநரின் அர்ப்பணிப்பு, இயேசு சபைக்கும் கொன்சாகா சபைக்கும் உள்ள ஆழமான உறவு மற்றும் ஏழை எளியோருக்காகச் சபையினர் ஆற்றும் பணி ஆகியவற்றை எடுத்துரைக்க விரும்புகிறேன். 250-வது யூபிலி விழா வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்!

தலைமை அருள்சகோதரி மோ. தெரேசா ஞானமணி உள்பட அனைத்து அருள்சகோதரிகளுக்கும் மாநிலத் தலைவிகள், நிர்வாகிகள் மற்றும் அவர்களோடு இணைந்து பணியாற்றும் உடன் உழைப்பாளர்கள் அனைவருக்கும் யூபிலி விழா வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இயேசு சபை துறவிகள் மற்றும் கொன்சாகா சபை (FSAG) உறவு இயேசு சபைக்கும் கொன்சாகா சபைக்கும் இடையேயான பிணைப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இயேசு சபைக்கும், கொன்சாகா சபைக்கும் இடையே உள்ள உறவு தொப்புள் கொடி உறவாகும்.

கொன்சாகா சபையை நிறுவியவர் இளம் வயதில் இந்தியாவுக்கு வந்த ஓர் இயேசு சபை அருள்பணியாளரான இறை ஊழியர் மைக்கேல் அன்சால்தோ ஆவார். இறை ஊழியர் மைக்கேல் அன்சால்தோ புனித இஞ்ஞாசியாரின் ஆன்மிகத்தை அடித்தளமாகக் கொண்டு, ‘எதைச் செய்தாலும் இன்னும் சிறப்பாகச் செய்ய வேண்டும்என்ற உந்துதலுடன் சபையின் பணிகளைத் தொடங்கினார். இந்த இயேசு சபையின் வேகமும் துடிப்பும் இன்றும் கொன்சாகா சகோதரிகளிடம் நிலைத்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது. இயேசு சபையினரும் சகோதரிகளும் இணைந்து பணியாற்றும் இந்த உறவு எதிர்காலத்திலும் ஆழமாகத் தொடர வேண்டும் என்று வாழ்த்துகிறேன். அன்சால்தோ அவர்களின் வாழ்க்கைப் பயணம் மற்றும் அர்ப்பணிப்பைக் கொன்சாகா சகோதரிகள் தங்களின் வாழ்வாக மாற்ற வேண்டும்.

1773-ஆம் ஆண்டில் இயேசு சபை தடை செய்யப்பட்ட போதும் தந்தை அவர்கள்  துவண்டு விடாமல் புதுச்சேரியில் ஆழமான ஆய்வு செய்து தனது ஆன்மிக வாழ்வை அடித்தளமாகக் கொண்டு, சமூக அக்கறையுடன் செயல்பட முடிவெடுத்தார். சமூகத்தில் பாதிக்கப்பட்ட ஏழை எளிய தாழ்த்தப்பட்ட பெண் குழந்தைகளுக்காக ஓர் இல்லத்தை அமைத்து அவர்களுக்கான பள்ளிக்கூடத்தையும் தொடங்கினார். சபை மற்றும் பிற ஆதரவுகள் இல்லாத சூழலிலும், கடவுளின் துணையையும் ஓர் இந்து நண்பரின் உதவியையும் மட்டுமே நம்பி கார்மேல் கான்வென்ட் கொன்சாகா இல்லம் மற்றும் போன் செக்கர்ஸ் இல்லம் ஆகியவற்றைத் தொடங்கினார். பெண்களுக்குக் கைத்தறிநெசவு போன்ற தொழில்களைக் கற்றுக்கொடுக்க நிறுவனங்களை ஏற்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தினார்.

36 வயதில் சபையை ஆரம்பித்து, 34 ஆண்டுகள் நம் தாய் மண்ணில் பணியாற்றி, 66 வயதில் காலமானது தந்தை அவர்களின் அயராத உழைப்பையும், இந்தியா மீதான அன்பையும் காட்டுகிறது.

கொன்சாகா சபையினர்ஏழைகளுக்கு நற்செய்திஎன்பது வெறும் வாக்கியத்தில் மட்டுமல்ல, ஏழைகளுக்கு இதயத்தில் இடம் கொடுக்க வேண்டும் என்ற உன்னதக் கொள்கையைத் தங்கள் பணிகளில் செயல்படுத்தி வருகின்றனர்.

மீண்டும் ஒருமுறை இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க 250-வது ஆண்டு யூபிலி விழாவைக் கொண்டாடும் அனைத்துக் கொன்சாகா சகோதரிகளுக்கும், உடன் உழைப்பாளர்கள், அவர்களின் பிள்ளைகள் மற்றும் குடும்பங்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

news
சிறப்புக்கட்டுரை
மக்களைத் தேடிய நற்செய்தியாய்...

1775-இல் புனித லூயிஸ் தே கொன்சாகா மடம் என்று இத்தாலி தேசத்தின் செசிலி தீவிலுள்ள மெசினாவின் அன்பு மகன் இறை ஊழியர் மைக்கேல் அன்சால்தோ அவர்களால் உருவாக்கப்பட்ட எம் சபை,… இன்றுபிரான்சிஸ்குவின் புனித அலோசியஸ் கொன்சாகா சகோதரிகள் சபைஎன்ற பெயரைத் தாங்கி, ‘கொன்சாகாஎன்ற பெருங்குடும்பமாய், இதில் உள்ள எல்லாரும் கொன்சாகாவின் புதல்வியராய் ஒருங்கிணைந்து பணிசெய்து வருகின்றோம்.

250-ஆம் ஆண்டினைத் தொட்டிருக்கும் எம் சபை, நன்றிப்பெருக்குடன் கிறிஸ்துவுக்குச் சாட்சி பகன்று வருகின்றது. இந்த 250-ஆண்டுகளில் எம் சகோதரிகளின் அர்ப்பணிப்பு, தன்னல மறுப்பு, கடின உழைப்பு, இறை-மறை பக்தி, கறைபடியா எளிய உள்ளம், எளிய வாழ்வு, வளர்ச்சி இவற்றை எண்ணும்போது என் உள்ளம் பேருவகை கொள்கின்றது. இறைவனின் அபரிமிதமான பராமரிப்பை நினைக்கையில்நன்றி... நன்றிஎன்று மட்டும் என் நெஞ்சம் இறைவனை நோக்கிப் புகழ்ச்சிக் கீதம் இசைக்கின்றது.

எம் நிறுவுநர் தந்தை இறை ஊழியர் மைக்கேல் அன்சால்தோ எம் சபையை இப்புதுச்சேரி மண்ணில் தோற்றுவிப்பதற்கான அடிப்படைக் காரணமாய் அமைந்தது சமூகத்தின் பல்வேறு விதமான அடக்கு முறைகள், சாதிய வேறுபாடு, உயர்ந்தவன்- தாழ்ந்தவன் என்ற பிரிவினைகள், ‘தாழ்த்தப்பட்டோர்தலித் மக்களைதீண்டத்தகாதோர்என முத்திரையிட்டு ஒதுக்கி வைத்தது. இளம் விதவைகள், பெண் குழந்தைகள் மிகக் கேவலமாக நடத்தப்பட்ட நிலை. பெண்களுக்குக் கல்வி மறுப்பு, பெண்கள் பாலியல்  வன்கொடுமைக்கு ஆளான நிலை, பெற்றோரை இழந்த குழந்தைகள் அனாதைகளாக்கப்பட்டு, தெருவோரங்களில் அபலைகளாய் திரிந்த நிலைஇந்த இழிநிலைகளைக் கண்ணுற்ற இறை ஊழியர் மைக்கேல் அன்சால்தோ, இந்தப் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பணி செய்ய தன் தாயகம் மறந்தார், தன் தாய் மொழி மறந்தார், தன் பண்பாடு மறந்தார்ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை மக்களோடு தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார்.

தன் மனநிலையைக் கொண்டவர்களாய் தனது உள்ளுயிரை புனித அலோசியஸ் கொன்சாகாவைப் பாதுகாவலராக வைத்து புனித லூயிஸ் தே கொன்சாகா மடம் (இல்லம்) என்ற பெயரில் எம் சபையை உருவாக்கினார். அப்போது அவரோடு இணைந்து பணிசெய்ய விரும்பிய இளம்பெண்களைக் கொண்டு முகவரியற்றோரின் முகங்களாய் சுயநலம் விடுத்து வாழ, அதுவும் ஒடுக்கப்பட்ட பெண்களுக்காய் விடுதலைக் குரலாய் குரலெழுப்ப வீரப்பெண்களாக உருவாக்கினார். ஆரம்பம் முதலே இளம்பெண்களை, குழந்தைகளை  உருவாக்கும் உருவாக்குநராகச்  செயல்பட்டார். பாதிக்கப்பட்ட மகளிர், பெற்றோரை இழந்த குழந்தையர், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான மகளிர் என எல்லாருக்கும் வாழ்வு வழங்கும் கற்பக விருட்சமாய் தந்தை திகழ்ந்தார்.

எம் நிறுவுநர் தந்தை இறை ஊழியர் மைக்கேல் அன்சால்தோவால் உருவாக்கப்பட்ட எம் சபை அவர் எமக்கு வகுத்தளித்த தனிவரத்தையோ, உள்ளுயிரையோ நீர்த்துப்போகச் செய்யவில்லை. மாறாக, கொன்சாகா சகோதரிகள் தங்கள் வாழ்வால், பேச்சால், மூச்சால், இருப்பால், பணியால் அதற்கு ஒவ்வொரு நாளும் உயிர் கொடுத்து வருகின்றனர். இது மிகைப்படுத்தப்பட்ட கருத்தல்ல; மாறாக, எம் சகோதரிகள் கல்லும் முள்ளும் நிறைந்திருந்த, வசதியற்ற, வாழ்வாதாரம் சொற்பமாகக் கிடைத்த இடங்களிலேயே பணிசெய்ய முன்வந்தனர். எங்கெல்லாம் போக்குவரத்து வசதியில்லையோ, மின்வசதி இல்லையோ, தண்ணீர் வசதி இல்லையோ, அடிப்படை வசதிகள் இல்லையோ... குறிப்பாக, ஒடுக்கப்பட்ட மக்கள் ஒதுக்குபுறமாய் வாழ்ந்த பகுதிகளில் அவர்களோடு அவர்களுக்காக அவர்களாகவே மாறிப்போய் வாழ்ந்தார்கள். அவர்களுக்காக தம்மைத் துறந்தார்கள், தம் சுகம் மறந்தார்கள், தம்முயிர் இழக்கவும் துணிந்தார்கள். அப்போதே எங்கள் பணி கண்டு, எங்கள் வாழ்வு கண்டு அரசு, கொன்சாகா அருள்சகோதரிகள் எங்கு வேண்டுமானாலும் சென்று பணி செய்யலாம் என்று அழைப்பு விடுத்தது. இதுவே எங்கள் பணிக்குக் கிடைத்த முதல் அங்கீகாரம்.

இன்றைக்கு எங்கள் கொன்சாகா பெருங்குடும்பம் இந்தியாவில் தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரம், கர்நாடகம், வட மாநிலம் எனப் பல்வேறு இடங்களிலும், ஐரோப்பாவில் இத்தாலி, ஜெர்மனி, ஆஸ்திரியா மற்றும் இஸ்ரேல் எனப் பல இடங்களில் தன் கிளைகளைப் பரப்பி எம் நிறுவுநர் தந்தையின் உள்ளுயிருக்கு உயிர்ப்பு அளித்து வருகின்றது.

திருத்தூதுப்பணியை அதன் மதிப்பீடுகளான அன்பு, இரக்கம், சமத்துவம், சகோதரத்துவம் என்பதை உணர்ந்து செயல்படுத்திய நாங்கள் சமூகப்பணி, சமூக மாற்றப்பணி, நலவாழ்வுப்பணி, கல்விப்பணி என எங்கள் பணிகளை விரிவுபடுத்தி ஒடுக்கப்பட்டோர் சார்பாக, எளியோர் சார்பாக ஓரணியில் இணைந்து பணிசெய்து வருகிறோம்.

ஏழையருக்கு நற்செய்தி அறிவிக்கவும், சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும், ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும், ஆண்டவர் அருள் தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்க அனுப்பப்பட்டுள்ளோம்என்பதை எம் சகோதரிகள் தங்களது தாரக மந்திரமாகக் கொண்டு செயலாற்றுகின்றனர் என்பது உலகறிந்த உண்மை.

இனிவரும் காலங்களிலும் முன்பிருந்ததுபோல் எம்மவரின் பணி இம்மண்ணில் தொடரும். வசதியின்மைகளையும் வலிகளையும் இழப்பையும் இகழ்ச்சிகளையும் அவமானத்தையும் அவமதிப்பையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, இயேசு ஆண்டவரின் உண்மைத் தொண்டர்களாய் எம் நிறுவுநர் தந்தையின் அடிச்சுவட்டைப் பின்பற்றி எம் முன்னோர் வாழ்ந்து சென்ற பாதையில் ஆழமாய் எம் தடம் பதிப்போம்.

நாங்கள் செய்யும் எல்லாப் பணிகளிலும் இறை அன்பும் பிறரன்பும் இரு கண்களென ஒளிர்ந்திடச் செய்வோம். தியாகமிக்க அன்னையர் போல் தியாகம் செய்யத் துணிவோம்.

எங்கள் பணி எங்கு தேவையோ சிறப்பாக, பட்டி தொட்டிகளில், குக்கிராமங்களில் பணிசெய்ய வாய்ப்பு வரும்போது அதனைப் புறக்கணிக்காமல் அன்பாய் ஏற்றுச் செயல்படுவோம்.

250-ஆம் ஆண்டின் அற்புதமான கொண்டாட்டத்தில்புனிதத்தில் நிறைவைக் காணஎன்ற யூபிலி விழாத் தயாரிப்பு எங்களுக்குக் கொடுத்த உன்னதமான அழைப்பை ஏற்று, அதனை உணர்ந்து எங்கள் வாழ்வு, சொல், செயல், சிந்தனை எல்லாம் புனிதம் நோக்கியதாய் அமைய உறுதி ஏற்போம். அதனைச் செயல்படுத்துவதில் தீவிரம் காட்டுவோம். மக்கள் எங்களைத் தேடி வரட்டும் என்றில்லாமல், மக்களைத் தேடியதே எங்கள் வாழ்வு என்பதை எங்கள் முன்னோர் போன்று உணர்ந்து, மக்களைத் தேடி நற்செய்தியாய் நாங்கள் இருந்து, மகிழ்வின் செய்தியை வழங்கி எம் கடமைகளைக் கருத்தாய் செய்வோம்.

2025-ஆம் ஆண்டு தாய்த் திரு அவைஎதிர்நோக்கின்  திருப்பயணிகள்என்ற இலக்கை நோக்கிப் பயணிக்க வைக்கிறது. தாய்த் திரு அவையின் யூபிலி ஆண்டின் சிறப்பில் எம் கொன்சாகா சபையும் 250-ஆம் ஆண்டு யூபிலி விழாவைச் சிறப்பிக்கின்றது என்பது இறைவன் எங்களுக்குக் கொடுத்த பெருங்கொடை. எனவே, இலக்கு மக்களோடு உள்ள எங்கள் பயணத்தில் எப்போதும் தடையிராது, தொடர்ந்து பணி செய்வோம். தடை வந்தாலும், இறைவன் துணை செய்வார். இதுவே எம்மவரின் நம்பிக்கை. நம்பிக்கை இழக்க மாட்டோம்; ஏனென்றால் கண்ணீரோடு விதை விதைப்பவர்கள் மகிழ்ச்சியோடு அறுவடை செய்வார்கள்!

news
சிறப்புக்கட்டுரை
250 ஆண்டுகள்: தியாகத்தின் சிகரம்! பணியின் மைல்கள்!

அன்புநிறை சகோதரிகளுக்கும், பிரான்சிஸ்குவின் குடும்பத்தினருக்கும், விழாவில் கலந்துகொண்டிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்! இந்த இனியதொரு நாள், நமது பிரான்சிஸ்கன் சகோதரிகள் 250 ஆண்டுகாலத் தன்னலமற்ற சேவைப் பணியை நிறைவுசெய்து, ஆண்டவருக்கு நன்றி செலுத்தும் யூபிலி நிகழ்வாக அமைவதில் எல்லையற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் நானும் ஒரு பிரான்சிஸ்கனாகக் கலந்துகொள்வது மிகுந்த பெருமையைத் தருகிறது. சபை அன்னை மோ. திரேசா ஞானமணி, மாநிலத் தலைவிகள் உள்பட அனைத்துக் குழுவினரின் அர்ப்பணிப்பும், அரும்பணியும் போற்றுதலுக்குரியவை. உங்களுடைய பணிக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

தியாக வாழ்வின் சுவடுகள் 250 ஆண்டுகள் என்பது வெறும் கால அளவு அல்ல. அது தொடர்ச்சியான தியாகத்தின் சிகரம். இது நமது சபையின் பணியானது ஒருபோதும் தொய்ந்துவிடக்கூடாது என்பதற்கான உத்வேகத்தை அளிக்கும் ஒரு பெரிய மைல்கல் ஆகும். பணியின் தொடக்கம் மட்டுமல்ல, எதிர்காலச் சிந்தனை என்ற இலக்கோடு இந்த விழா அமைந்திருப்பது மிகவும் சிறப்பு.

ஏழைகளுக்கான நற்செய்திமறைவானவை வீட்டின் மேற்கூறையிலிருந்து அறிவிக்கப்படும்என்ற இறைவாக்குக்கு ஏற்ப, நீங்கள் மறைவாகச் செய்த பணி இன்று வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்படுகிறது என்பதைக் காணும் போது மெய்சிலிர்க்கிறது. ‘Gospel To The Poor(ஏழைகளுக்கு நற்செய்தி) என்ற உன்னத நோக்கத்தை, நீங்கள் மிகச் சிறப்பாக நிறைவேற்றி வருகிறீர்கள். 1775 - இல் கொன்சாகா இல்லமாகத் தொடங்கி, 1886-இல்பிரான்சிஸ்கள் சிஸ்டர்ஸ் ஆப் செயின்ட் அலோசியஸ் கொன்சாகாஎன்ற பெயரில் திரு அவையின் வடிவம் பெற்றது, உங்கள் சபையின் வளர்ச்சியைப் பறைசாற்றுகிறது. புனித அசிசியார் தன் போதனைகளால் அல்லாமல், எடுத்துக்காட்டான வாழ்வுமுறையால் பலரைப் பின்பற்றுமாறு செய்தார். அவர் காட்டிய வழியில், மைக்கேல் அன்சால்தோ அவர்களால் உருவாக்கப்பட்ட சகோதரிகளாகிய நீங்கள், திருத்தந்தை லியோ XIV  கூறியதுபோல, “Poor church For The Poorஎன்ற இலக்குக்கேற்பpoor Gonzaga for the poorஆகச் சேவை செய்கிறீர்கள். கல்விப்பணி, சமூகப்பணி, சட்டப்பணிகள் என உங்கள் சேவையின் அனைத்துத் துறைகளிலும் நீங்கள் தொடர்ந்து சிறந்து விளங்க உளமார வாழ்த்துகிறேன். இறைப்பணி மென்மேலும் தொடரட்டும்! நற்செய்தி ஏழைகளைச் சென்றடையட்டும்! உங்கள் பணிக்கு இறைவன் எப்போதும் பரிசளிக்கட்டும்!