news
சிறப்புக்கட்டுரை
விறகுகளாய் எரிக்கப்படும் வீணைகள் (ஜூலை 26: உலக தாத்தா-பாட்டியர் தினம்)

பயன்படுத்திவிட்டு வீசி எறிந்திடுஎனும் கோட்பாடு இன்று ஏறக்குறைய உலகத்தின் வாழ்வியல் நடைமுறை என்றாகிவிட்டது. ஒரு பொருளோ, மனிதரோ பயன்படுகிற வரைதான் முக்கியம் என்பதை ஏற்கவேண்டிய கட்டாயத்திற்குக் காலம் நம்மைக் கொண்டு வந்துவிட்டது. எப்போது ஒரு பொருளோ, மனிதரோ நமக்கு இனி பயனில்லை என உணரும்போது தூக்கி எறிந்துவிட எவ்விதத் தயக்கமும் மனிதருக்கு ஏற்படுவதில்லை.

நவீன உலகின் தொழில்நுட்பமும், சமூக ஊடகங்களும் வாழ்க்கை முறைகளும் உறவு, மதிப்பீடு, அறம், ஒழுக்கம், நன்றியுணர்வு, வாழ்வியல் மாண்பு, மனிதநேயம், இயற்கை நேசம் என நீள்கிற மானுடக்கூறுகளை அழித்து, ஒழித்து வருகின்றன. அதன் விளைவாக, மனிதரை அதுவும் குறிப்பாக, வயது மூப்பின் காரணமாக உடல் நலிவுற்ற மூத்த குடிமக்களை முற்றிலும் புறக்கணிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. தன்னைப் பெற்றவர்கள், தனக்கு உயர்நிலையைத் தந்தவர்கள், வசதியான வாழ்வுக்கு வழிவகை செய்தவர்கள், தம் தியாகத்தால் நம்மை ஆளாக்கி வளர்த்தவர்கள் என யாராக இருந்தாலும் அவர்கள் முதுமையை அடையும்போது அவர்களை மூலையிலே முடக்கிப்போடுவது வேதனை நிறைந்த உண்மைகளாய் வீட்டுக்கு வீடு தலை நீட்டுகிறது.

குடும்பம் மனித வாழ்வின் நாற்றங்கால்; அடிப்படை விழுமியங்கள் கட்டமைக்கப்படும் அன்புப் பாசறையே குடும்பம்! சமூகத்தின் முதல் அணுக்கலம் என்றும் மனுக்குலத்தின் மூல மற்றும் அடிப்படைப் பள்ளி என்றும் குடும்பத்தை வரையறுக்கிறார் திருத்தந்தை லியோ. குடும்பத்தைவீட்டுத் திரு அவைஎனக் குறிப்பிடும் திருத்தந்தை லியோ, வீட்டில் மேசையில் உணவு பகிரப்படுவதுபோல நம்பிக்கை தலைமுறை தலைமுறையாகக் கைமாற்றப்படுகிறது எனப் பாரம்பரியக் கத்தோலிக்கக் கோட்பாட்டை நிலைநிறுத்துவதோடு, குடும்பத்தில் தாய்-தந்தையர் ஓரங்கட்டப்படுவதை எடுத்துரைத்து, பெற்றோர் எனும் புனித நிலைக்குக் கண்ணியத்தை மீட்டெடுக்கும் சமூகக் கொள்கைக்கு அழைப்பு விடுக்கிறார்.

திருத்தந்தை லியோ மூத்த குடிமக்கள் மற்றும் முதுமையின் மதிப்பு குறித்த ஆவணங்களையும் ஆண்டு உரைகளையும் வழங்கியுள்ளார். மூத்த குடிமக்களைவாழ்க்கை ஆசிரியர்கள்எனக் குறிப்பிட்டு, அவர்கள் திரு அவையின் சிறப்பு ஆசிர் என வர்ணிக்கிறார். தாத்தா, பாட்டி மற்றும் மூத்த குடிமக்கள் உலக தினத்தில் கண்ணியம், சமூகம் மற்றும் தனிமையை எதிர்த்துப் போராடுதல் ஆகிய கருப்பொருள்களில் கவனம் செலுத்தி, வருடக் கொண்டாட்டங்களில் மூத்த குடிமக்களைப் போற்றி செய்திகள் வெளியிட்டு வருகிறார். திருத்தந்தை பிரான்சிஸ் எழுதியஅமோரிஸ் லேத்தியாஎனும்அன்பின் மகிழ்ச்சிதிருமடல் வழியாகக் குடும்ப வாழ்க்கை குறித்த விரிவான வழிகாட்டுதலை வழங்குகிறார். இறுக்கமான விதிகளை விடுத்து, இரக்கமும் கருணையும் கொண்ட குடும்பங்களைக் கட்டிக்காப்பதே திரு அவையின் முக்கியப் பணி என வலியுறுத்துகிறார்.

திரு அவையின் முதன்மைக் கரிசனையாக மூத்த குடிமக்களைப் போற்றி வந்தாலும், குடும்ப வாழ்வின் நலிவு அத்தனை வாழ்வியல் அறங்களையும் பின்னடைய வைக்கிறது. கூட்டுக் குடும்பங்களின் வீழ்ச்சி ஒட்டுமொத்த மானுட உறவுகளுக்கே உலை வைத்துவிட்டது. திருமணம் எனும் உயரிய அருளடையாளத்தால் இணைக்கப்பட்டு, புனித உடன்படிக்கையாக அமையவேண்டிய இல்லற வாழ்வு, இன்று பல சவால்களைச் சந்திக்கிறது. திருமண உறவை மீறிய சேர்ந்து வாழ்தல் கலாச்சாரம், மாற்று இணையரோடு வாழ்தல், ஒரே பாலினச் சேர்க்கை, திருமணப் பந்தத்தை முறித்தல் போன்ற இல்லறத்திற்கு உலை வைக்கும் காரணிகள் குடும்ப வாழ்வைச் சிதைப்பதோடு, மூத்தோரையும் பெற்றோரையும் மாண்புடன் பேணுதல்வேண்டும் என்கிற மானுட அறத்தைக் குழிதோண்டிப் புதைத்து விடுகிறது.

கூட்டுக் குடும்ப வாழ்வை முடிவுக்குக் கொண்டு வந்த அன்றே, மூத்த குடிமக்களைப் பேண வேண்டும் என்னும் அன்புக் கடமை முடிவுக்கு வந்துவிட்டது. முன்காலத்தில் தாத்தா-பாட்டி, அம்மா-அப்பா, பிள்ளைகள்-பேரப்பிள்ளைகள் என மேன்மைமிக்க உறவு முறைகள் குடும்பத்தை அலங்கரித்தன. கணவன்-மனைவியிடையே குடும்பத்தில் விரிசல்கள் தொடங்கும்போதே குடும்பத்திலிருக்கும் மூத்தவர்கள் தலையிட்டு அதனைக் கச்சிதமாகத் தீர்த்து வைப்பதுண்டு. வக்கீல்கள், வழக்கு, நீதிமன்றம், விவாகரத்து எனும் தளங்களுக்குக் குடும்ப வாழ்க்கை சென்றதில்லை. குடும்பத்தில் மூத்தவர்களின் அறிவுரைகளும் கண்டிப்பும் உறவுகளை வலுப்படுத்தின. பிள்ளைகளைப் பராமரிக்க வாடகை மனிதர்களை அமர்த்தியோ, மழலைப் பள்ளிகளில் குழந்தைகளைச் சிறைவைக்க வேண்டிய அவசியமோ ஏற்படவில்லை. தாத்தா-பாட்டியரின் பாசமிகு பராமரிப்பில் வளர்ந்த குழந்தைகள் ஆரோக்கியமான குடும்பத்தைக் கட்டிக் காத்து வந்தார்கள். தாத்தா-பாட்டி கதைகள், வைத்தியங்கள், பராமரிப்புகள் இன்று காணாமல் போய்விட்டன.

தாத்தா-பாட்டியரின் இடங்களை இன்று தொலைக்காட்சிப் பெட்டியும் கைப்பேசியும் பிடித்துக்கொண்டன. பாட்டி வைத்தியம் இருந்த இடத்தை மாத்திரை, மருந்துப் பெட்டிகள் ஆக்கிரமித்துக்கொண்டன. உறவுகள் உடைந்து விடாமல் சேர்த்துவைக்க இவர்கள் இல்லாததால் தம்பதியரைப் பிரித்து வைக்க வக்கீல்களும் நீதிமன்றங்களும் வந்துவிட்டன.

வீடுகளில் எஞ்சியிருக்கிற மூத்தவர்கள் பேணப்படும் நிலை மிகவும் கவலைக்குரியது. ஓய்வூதியம் பெறும் மூத்த குடிமக்களாவது மாதத்தின் தொடக்கத்தில் பணத்திற்காகச் சிறிதளவு பராமரிக்கப்படுகிறார்கள். எந்த வருமானமும் இன்றி தங்கள் உடைமைகளை எல்லாம் சிந்திக்காமல் பிள்ளைகளுக்குக் கொடுத்துவிட்டுப் பிச்சைக்காரர்களாகத் தன்மானம் இழந்து வீடுகளில் சித்திரவதைகளைத் தினம் தினம் அனுபவிக்கும் அபலைகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வாழவும் முடியாமல், சாகவும் முடியாமல் உயிரோடு வீடுகளில் கல்லறை வாழ்க்கை நடத்தும் பெரியவர்களின் நிலையைக்  கவனத்தில் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.

வயது முதிர்வால் ஏற்பட்ட முதுமை, பார்வை மங்கி, செவி மந்தமாகி நிரந்தர நோயாளராகிவிட்ட நிலையில், மூத்த குடிமக்கள் படும்பாடு பரிதாபமானது. தங்கள் உழைப்பால் நிலம் வாங்கி, பட்டினி கிடந்து கட்டிய வீட்டில் அவர்களுக்கு இடம் தரப்படுவதில்லை. வயதான பெற்றோரை வீட்டுக்கு வெளியே குடிசை அமைத்துக் குடி வைத்திருக்கிற பிள்ளையர் தங்களின் எதிர்காலத்தைத் தெரிந்திருப்பதில்லை. இறந்த காலத்தில் இவர்களை வளர்த்திட இன்றைய முதியவர்கள் செய்த தியாகத்தையும் நிகழ்காலத்தில் நினைப்பதில்லை. பேரப்பிள்ளைகளாக உறவு பாராட்ட வேண்டிய குழந்தையரை முதியோரிடமிருந்து பிரித்து வைப்பதையும், அவர்களைப் பற்றி குழந்தையரிடம் தவறாகச் சொல்லித் தந்து இழிவுபடுத்துவதையும் சில இளம்பெற்றோர் இயல்பாகச் செய்து வருகின்றனர். பழுத்த ஓலையைப் பரிகசிக்கும் இந்தப் பச்சை ஓலையின் நிலை, நாளை பரிதாபம் எனும் எதார்த்தத்தை ஏனோ உணராமல் போகிறார்கள்.

மூத்த குடிமக்களின் நிலைமையைச் சாதகமாக்கிக் கொண்டு அவர்களின் ஓய்வூதியம், அரசு தரும் உதவிகள், அவர்களின் சேமிப்பு ஆகியவற்றைப் பிடுங்கும் ஈனச் செயல்களிலும் சில குடும்பத்தினர் ஈடுபடுவதுண்டு. முதியோரின் உடல் நலிவைப் பயன்படுத்தி, அவர்களை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தாக்கும் நிகழ்வுகளும் சில வீடுகளில் நடப்பதுண்டு. மூத்த குடிமக்களைச் சுமையாகக் கருதிக்கொண்டு அவர்களுக்கு உணவைத் தராமல், உடல்நலம் பராமரிக்காமல், தூய்மையான ஆடைகளைத் தராமல் கொடுமைப்படுத்தும் கூட்டத்திற்குச் சட்டத்தின் மூலம் தண்டனை பெற்றுத் தரவேண்டியது இன்றைய தேவையாகும்.

படுக்கை நோயாளராக இருக்கும் மூத்த குடிமக்களைப் பராமரிப்பதில் சவால்கள் உள்ளன. ஆயினும், அவர்கள் மனிதர்கள், நமக்கு உடல் தந்து வாழ்வு தந்த நமது உதிரத்தின் உதிரம் என்கிற உறவு உந்துதல் இருந்தால் மட்டுமே அவர்களைக் கரிசனையோடு கவனிக்க முடியும். மொத்தத்தில், மூத்த குடிமக்களின் உடைமைகளை மொத்தமாகக் கபளீகரம் செய்துகொள்கிற அவர்களின் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் அவர்களை மனிதராகக் கருத மனமில்லாமல் போவது ஏன்? இவர்கள் வீணைகள்; எரிக்கப்படுகிற விறகுகள் அல்ல என்பதை உணரவேண்டும்.    

வீடுகளில் இருக்கும் மூத்த குடிமக்கள் வீட்டிற்குப் பாரங்கள் அல்ல; வீட்டின் விளக்குகள். அவர்கள் ஒரு காலத்தில் ஆற்றல்மிகு ஆளுமைகளாக இருந்தவர்கள். தங்கள் உழைப்பாலும் முயற்சியாலும் தியாகத்தோடு குடும்பத்தை நிலைநிறுத்தியவர்கள். நாம் இன்று காணும் உயரங்களுக்கு அன்றைக்குத் துயரங்களைச் சுமந்தவர்கள். இவர்கள் எதற்கும் உதவாதவர்கள் என்று ஊரைக் கூட்டி ஊளையிடுகிறவர்கள், அவர்கள் போட்ட உணவுப் பிச்சையாலும், கல்விப் பிச்சையாலும் கரையேறியவர்களே! இன்று இவர்களின் பெயருக்குப் பின்னால் அலங்காரமாய் அமர்ந்திருக்கும் பல்கலைக்கழகத்தின் பட்டங்கள் அவர்களின் வியர்வைத் துளிகளின் மொழிபெயர்ப்பு. குடியிருக்கும் கோபுர வீடுகள் அவர்களின் கண்ணீரும் செந்நீரும் கலந்த கலவை. அவர்களின் முகத்தில் இயற்கை வரைந்திருக்கின்ற நெற்றிச் சுருக்கம் இன்றைய தலைமுறையின் முகவரி.

இன்றைய வசதியான வாழ்க்கை விருட்சத்திற்கு வேர்களாக அமைந்திருப்பது நம்மால்பயனற்றவர்கள்எனத் தூக்கி எறியப்படும் மூத்த குடிமக்களே. வேர்களை வெட்டி எறிந்துவிட்டு மரக்கிளைகளில் மகரந்தச்சேர்க்கை நடத்துகிறோம். நம்மால் புழுதியில் வீசப்படுகிற இந்தப் புல்லாங்குழல்கள் நமக்குத் தாலாட்டு பாடல் இசைத்தவை. அவர்களின் தொங்கிய தோள்களில்தான் இன்றைய இளையோருக்குத் தொட்டில் கட்டப்பட்டிருந்தது. வீடுகளில் மனிதப் பட்டியலிலிருந்து நம்மால் விலக்கி வைக்கப்பட்ட இவர்கள்தான், நாம் தொடக்கப்பள்ளிகளைத் தொடாத காலத்திற்கு முன்பிருந்தே தொடக்கப் புள்ளிகள். இவர்களின் பக்குவம் நிறைந்த பழக்கங்களும், அளப்பரிய அனுபவங்களும் அடுத்ததலைமுறைக்கான அகராதிகள். செயற்கை நுண்ணறிவைத் தாண்டிய இயற்கையின் ஞானங்கள்.

இவர்கள் கண்மூடுகிற காலம் வரை இவர்களைக் கருத்தாய் கவனித்துக்கொள்ள வேண்டியது நமது கடமையாகும். இவர்களின் வயோதிகக் காலத்தில் வயிற்றுக்கு உணவிடாமல், நோய்க்கு மருந்திடாமல், கவலையில் ஆறுதல் தராமல் அவர்களைக் கண்ணீர் சிந்த வைத்துவிட்டு, உயிர் போனபின்பு ஊரைக் கூட்டி இரங்கல் நடத்துவதும், ஆடம்பரமாய் அடக்கச்சடங்கு நடத்துவதும், பெரும்பணம் செலவழித்துப் பத்திரிகை விளம்பரம் தருவதும் போலித்தனத்தின் புதுப் பதிப்பல்லவா?

சாகும்வரை சங்கடப்படுத்திவிட்டு, இறந்த பிறகு சந்தனப் பெட்டியில் அடக்கம் செய்கிறவெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள்ஊருக்கு ஊர் பெருகிவிட்டார்கள். இந்த வாசம் வீசும் இயற்கை மலர்களை வீதியில் வீசி எறிந்துவிட்டு, காகிதப் பூக்களைக் கௌரவிக்கும் போக்கு போலித்தனம் என்பதைப் புரிந்துகொள்வது எப்போது?

news
சிறப்புக்கட்டுரை
படைப்பின் அற்புதம்

இறைவனின் படைப்புகள் அனைத்துமே அற்புதமானவைதாம்! குறிப்பாக, மனிதனை அடுத்து விலங்குகளும் பறவைகளும் தாவரங்களும் அற்புதங்களே! விலங்குகள், உணர்ச்சியும் அறிவும் கொண்டிருப்பதால் தாவரங்களை விடவும் மேலான படிநிலையில் உள்ளன. அதனால் விலங்கினங்கள் மீதான இறைப்பராமரிப்பு காணக்கூடிய சான்றாக உள்ளன. ஆனால், மானிடரான நாம் எல்லா உயிரினங்களுக்கும் மேலாக உயர்த்தப்பட்டுள்ளோம்.

ஞானி தன் ஞானத்தைக் குறித்து பெருமை பாராட்டவேண்டாம்; வலியவர் தன் வலிமை குறித்துப் பெருமை பாராட்டவேண்டாம்; செல்வர் தன் செல்வத்தைக் குறித்துப் பெருமை பாராட்டவேண்டாம். பெருமை பாராட்ட விரும்புபவர், நானே ஆண்டவர் என்பதை அறிந்து கொள்வதிலும், பேரன்போடும் நீதியோடும் நேர்மையோடும் உலகில் செயலாற்றுகிறேன் என்பதிலும் பெருமை பாராட்டுவாராக (எரே 9:23) என்று கூறுகின்றார் இறைவன்.

பகுத்தறிவு அல்ல, உள்ளுணர்வே (INSTINCT) காரணம்

விலங்குகளுக்குப் பகுத்தறிவு இல்லாவிடினும், அவைகளிடம் உள்ளுணர்வும் இயற்கை நாட்டமும் இருக்குமாறு படைக்கப்பட்டுள்ளன. அதனால் விலங்குகள் பல செயல்களில் அறிவுத்திறனுடன் செயல்படுவதாக நமக்குத் தோன்றுகிறது. இறைவன் விலங்கின் தேவைகளை நிறைவு செய்து கொடுப்பது மட்டுமல்ல; தமது மகிமையை விலங்குகள் வாயிலாக வெளிப்படுத்துகிறார். அதன்வழி அவர் செய்த அற்புதங்கள் பெரியவை, எண்ண முடியாதவை.

மனிதன் வீட்டைக் கட்டி வாழ்வதன் மூலம் தனக்குப் பாதுகாப்பைத் தேடிக்கொள்கிறான். அதுபோல விலங்குகளும் பறவைகளும் பாதுகாப்பைத் தேடுகின்றன. எடுத்துக்காட்டாக, தூக்கணாங்குருவியைப் பார்க்கலாம். அது வாழும் கூட்டை ஆராய்ந்து பார்த்தால், நெசவாளரின் நேர்த்தியான கைவண்ணமும், பாய் முடையும் தொழிலாளியின் திறமையும் தோற்றுப் போகக்கூடும். கூட்டைக் கட்ட அது எடுத்த முயற்சிகளைக் கற்பனை செய்து பார்த்தால், நாம் வியப்பின் எல்லைக்கே சென்று விடுவோம்.

இறைவன் மனிதனுக்குப் பகுத்தறிவைத் தந்துள்ளார். அதனால் அவன் தனது பாதுகாப்பிற்காகவும் தேவைகளுக்காகவும் நன்மைக்காகவும் செயல்படுகிறான். இறைவன் தந்த எண்ணற்ற வசதிகளில் எவையெல்லாம் தேவையோ அவற்றை எல்லாம் தனது சக்திக்கேற்ப அமைத்துக்கொள்கிறான். அதேவழியில் பகுத்தறிவற்ற விலங்குகளும் பறவைகளும் பாதுகாப்பை அடைய வழியில்லாதபடியால் இறைவன் அவைகளுக்கு இயற்கையான நாட்டத்தையும் உள்ளுணர்வையும் தந்துள்ளார். அதனால் சில சமயத்தில் அவை மனிதனைவிட சிறப்பாகச் செயல்படுகின்றன.

அவை தங்கள் உள்ளுணர்வின் மூலமாகச் செயல்படுவதால் மனிதனைக் காட்டிலும் உறுதி தவறாமை, ஒழுங்கு ஆகிய பண்புகளால் கட்டி எழுப்பித் தங்களைப் பாதுகாத்துக்கொள்கின்றன. தாவரங்களில் பயன் தருபவை, மருத்துவக் குணமுள்ளவை ஆகியவற்றை அறிவதுடன் வெப்பநிலை உயர்வு, காலநிலை மாற்றம் ஆகியவைகளையும் விலங்குகள் புரிந்து வைத்துக்கொள்கின்றன. பல சமயங்களில் அவைகளின் மூலமாகவே மனிதனும் அவற்றை அறிந்துகொள்ள முடிகிறது. இவ்வுலகில் விலங்கு, பறவை இனங்கள் எண்ணற்றவை. அவற்றில் மிகச் சிறியவையாயினும் பெரியவையாயினும் அவற்றில் இறைவன் தமது பெருமை, ஆற்றல், ஞானம் மற்றும் இறைப்பராமரிப்பையும் மிகவும் சரியாக வெளிப்படுத்துகிறார். அதில் குறைவோ கூடுதலோ கிடையாது. எல்லாருக்கும் எல்லாம் சமம்.

நன்மைத்தனத்தின் மொத்த உருவான இறைவன், மனிதனின் சேவைக்காக விலங்கினங்களைப் படைத்துள்ளார். அதேசமயம் அவற்றின் நன்மைக்காகவும், தேவையான சொந்த பாதுகாப்பிற்காகவும் இறைப்பராமரிப்பையும் வழங்குகிறார். அதனால் விலங்கினங்கள் உணவு கொள்ளவும், நோயினின்று விடுபடவும் இனப்பெருக்கம் செய்யவும் ஆற்றல் பெற்றுள்ளன.

இறை ஆற்றல் விலங்குகளிலும் வெளிப்படுகிறது

இறைவன் பல்வேறுபட்ட விலங்குகளின் பாதுகாப்பு மற்றும் உணவுக்காகப் பலவிதமான உணவுகளை விகிதாச்சார அளவின்படி கொடுத்துள்ளார். சில விலங்குகள் இறைச்சியையும், சில விலங்குகள் தாவரங்களையும் பூச்சிகளையும் உணவாகக் கொள்கின்றன. மிகச்சிறிய விலங்காயினும் அதன் வாழ்வாதாரத்திற்கு ஏற்ப தேவையான சத்துணவுகளை வழங்குகிறார்.

திருப்பாடல் ஆசிரியர் கூறுவது போல், “உடல் கொண்ட அனைத்திற்கும் உணவூட்டுபவருக்கு நன்றி செலுத்துங்கள் (திபா 136:25). இறைவன் எல்லா விலங்குகளுக்கும் உணவைத் தந்துள்ளார்.

விலங்குகளும் மனிதரைப்போல் நோயுறுகின்றன. கடவுள் அவை சுகம்பெற இயற்கையான உள்ளுணர்வை வழங்கியுள்ளார். அதன்வழி பரிகாரங்களையும் தேடிக்கொள்கின்றன. பகை விலங்குகளிடமிருந்து பாதுகாக்கத் தேவையான ஆற்றலையும், புத்திக்கூர்மையையும் கொண்டுள்ளன. ஆடுகள் ஓநாய்க்குப் பயந்து அதனிடம் அகப்படாமல் இருக்க ஓடுகின்றன. ஆனால், கிட்டத்தட்ட அதே தோற்றமுடைய ஆயனின் நாயைக் கண்டு அவை ஓடி ஒளிவதில்லை.

காலநிலையில் ஏற்படக்கூடிய மாற்றங்களை முன்னதாக அறிந்துகொள்ளும் ஆற்றலை விலங்குகளுக்கு வழங்கி உள்ளார் கடவுள். அதனால் அவை வரும்முன் காப்பானாக ஆபத்திலிருந்து பிழைக்க வழிதேடிக் கொள்கின்றன. பறவைகள் இடம் விட்டு இடம் செல்லும்வலசை (MIGRATION) போகும் வழக்கத்தைக் கொண்டுள்ளன. புவியில் குளிர்காலத்தில் அவை தென் பகுதிக்கும், கோடையில் வட பகுதிக்கும் பயணமாகின்றன. குளிர்கால உறக்கம் (HIBERNATION) கொள்ளும் விலங்குகளுடன் மற்ற சில விலங்குகளும் குளிர்காலத்தில் தங்களுக்குத் தேவையான உணவைக் கோடையில் தேடிப் பாதுகாப்பாகச் சேமித்து வைக்கின்றன.

பறவைகள் தங்கள் குஞ்சுகள் மீது கொண்டுள்ள கரிசனையைச் சிந்தித்துப் பார்ப்போம். கடவுள் அவற்றைக் குஞ்சுகளின்பால் மிகுந்த அன்புள்ளவைகளாகப் படைத்துள்ளார். ஏனென்றால், அவை தங்கள் குஞ்சுகளைப் பாதுகாக்கப் பெரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. “கோழி தன் குஞ்சுகளைத் தன் இறக்கைக்குள் கூட்டிச் சேர்ப்பதுபோல், நானும் உன் மக்களை அரவணைத்துக் கொள்ள எத்தனையோ முறை விரும்பினேன். உனக்கு விருப்பமில்லையே!” (மத் 23:37) என்ற  இறைமகன் இயேசு கூறிய வார்த்தைகள் இங்கு நினைவுகூரத்தக்கன.

பறவைகள் பறக்க அவைகளுக்கு எடை குறைவான மெல்லிய உடலமைப்பைக் கடவுள் தந்துள்ளார். மேலும், மற்ற விலங்குகளைப் போல் பாலூட்டும் உறுப்பையும் பறவைகள் படைப்பின் போது தவிர்த்துள்ளார். அவை தாங்கள் சேகரித்த உணவைக் கொண்டு சென்று, குஞ்சுகளுக்கு ஊட்டுவதில் மிகுந்த சிரமங்களை அனுபவிக்கின் றன, துன்புறுகின்றன, தியாகம் செய்கின்றன. நேசிப்பவருக்காகத் தியாகம் செய்வது எளிது. “சகோதரர்களே, நாம் இயேசுவை அன்பு செய்வோம்; ஆகையால் கடினமான அனைத்தும் நமக்கு எளிதாகி உள்ளன - புனித பெர்னார்ட்.

நாம் உற்றுநோக்கிக் கவனித்தால் பல பறவைகள் தங்கள் கூடுகளைக் கூடைபோல் அமைத்திருப்பதைக் காணலாம். ஏனென்றால், அதிக எண்ணிக்கையில் குஞ்சுகள் அதில் வசிக்க முடியும். கூட்டின் தரையில் மெல்லிய புற்களையும் மிருதுவான சிறகுகளையும் வைக்கின்றன. அப்போதுதானே குஞ்சுகள் கரடுமுரடான தளத்தால் காயப்படாமல் இருக்கும்! அவை குஞ்சுகளுக்குத் தேவையான எல்லா வசதிகளையும் செய்கின்றன. குஞ்சுகளைக் கூட்டின் ஓரத்தில் வைக்கின்றன. அதனால் குஞ்சுகள் வெளியிடும் கழிவை உடனுக்குடன் தாய்ப் பறவை தனது அலகாலேயே நீக்கிக் கூட்டைச் சுத்தம் செய்கிறது. “எல்லா உயிரினங்களின் கண்களும் உம்மையே நோக்குகின்றன; தக்க வேளையில் நீரே அவற்றிற்கு உணவளிக்கின்றீர். நீர் உமது கையைத் திறந்து எல்லா உயிரினங்களின் விருப்பத்தையும் நிறைவேற்றுகின்றீர் (திபா 145:15,16).

தங்களைப் பாதுகாக்க இயலாத, வலுவற்ற சில பறவைகளும் விலங்குகளும் அதிகமாக வேட்டையாடப்படுகின்றன. தெய்வீகப் பராமரிப்பு அவ்வினத்தைப் பாதுகாக்க அவைகளுக்கு விரைவான கருத்தரிப்பு வாய்ப்பை வழங்குகிறது. புறாக்களிடமும் முயல்களிடமும் இதனை நாம் காணலாம். முயல் ஒவ்வொரு மாதமும் கருத்தரித்து குட்டிகளை ஈனுகிறது. கௌதாரி போன்ற பறவை இனங்கள் மாதம் 25 முட்டைகள்  வரை இடுகின்றன.

எல்லா விலங்குகளும் தங்களைக் காக்கவும், எதிரிகளைத் தாக்கவும் தேவையான ஆயுதங்களை உடல் உறுப்புகளாகக் கொண்டுள்ளன. எடுத்துக்காட்டாக கொம்பு, நகம், பற்கள் போன்றவற்றைக் கூறலாம். வலுவான உடல் அமைப்பு இல்லாத விலங்குகளுக்கு இறைவன் புத்திக்கூர்மையையும் வேகத்தையும் கொடுத்துள்ளார். எதிரியைக் கண்ட புள்ளிமானும் முயலும் தங்களைக் காத்துக்கொள்ள கடுமையான வேகத்தில் ஓட்டம் பிடிக்கின்றன. தங்களிடம் உள்ள ஆயுதங்களை எப்படிச் சிறப்பாகப் பயன்படுத்த முடியும் என்பதை விலங்குகள் தங்கள் உள்ளுணர்வால் அறிந்துள்ளன. எடுத்துக்காட்டாக, பசுவின் கன்று. அது நம்மைத் தாக்கவும் காயப்படுத்தவும் கொம்பு வளர்ச்சி அடையாத தலைப் பகுதியால் முட்டித் தாக்க முயல்கிறது..

உணவு வகையில் ஆரோக்கியமானது எது? ஆபத்தானது எது? என்பதை விலங்குகள் அறிந்துள்ளன. அதில் ஆரோக்கியமானதை மட்டும் தேர்ந்தெடுத்து உண்ணுகின்றன. அதிகமான பசி வந்தாலும் கூட மற்றவற்றை எடுப்பதில்லை. இறைவன் அதை விலங்குகளுக்குப் போதித்துள்ளார். மனிதன் ஆராய்ந்து பார்த்துச் சோதித்தால் ஒழிய அதைக் கண்டுபிடிக்கமாட்டான்.

விலங்குகள் பகுத்தறிவு இல்லாதிருப்பதால் தங்கள் உடம்பை மூடிப் பாதுகாக்க ஆடைகளை, பாதங்களைப் பாதுகாக்க பாத உறைகளை அணிந்துகொள்ளவில்லை. அதனால் கடவுள் அவைகள் பிறக்கும் முன்னதாகவோ அல்லது பிறந்த பின்னரோ ஆடைகளால் அணிவிக்கிறார். விலங்குகளைப் பொருத்து அவை தோலாக, செதில்களாக, கம்பளி உரோமங்களாக, கால் குளம்புகளாக அமைத்துக் கொடுத்துள்ளார். சில விலங்குகள் ஆண்டுதோறும் அவற்றை மாற்றுகின்றன; மற்றவை ஆயுள் முழுவதும் அவற்றை அப்படியே வைத்துக் கொண்டுள்ளன. அவை கிழிவதுமில்லை, அழிவதுமில்லை.

பறவைகளும் விலங்குகளும் பேசுவதில்லை. ஆனால், தங்கள் குரலால் கோபம், வீரம், பசி, தாழ்வு, வேதனை போன்ற உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன. பறக்க இயலாமல் இருக்கும் குஞ்சுகள் உரத்தச் சத்தத்தால் குரல் எழுப்பி உணவின் தேவையைத் தாய்க்குத் தெரிவிக்கின்றன.

விலங்குகளும் பறவைகளும் தங்களைத் தாங்களே பாதுகாக்கவும், இனத்தை வலுப்பெறச் செய்யவும் வழிவகை செய்துள்ள இறைவன் அத்துடன் திருப்தி கொள்ளவில்லை. அவைகளுக்கு மகிழ்ச்சியும் எல்லா வகையான இன்பங்களை அனுபவிக்கவும் வகை செய்துள்ளார். இறைவன் உரிய காலத்தில் அவைகளுக்கு உணவும் நீரும் அளிக்கின்றார். தமது கைகளை விரித்து ஒவ்வொரு படைப்புக்கும் ஆசிரை வாரி வழங்குகின்றார். ஞானமும் பேரறிவும் கொண்ட படைப்பாளி இல்லாமல் எந்தப் படைப்புயிரும் பிழைக்கவும், வளர்ச்சி அடையவும் இயலாது என்பதுதான் உலகமே அறிந்து வைத்திருக்கும் உண்மை.

news
சிறப்புக்கட்டுரை
பிடித்ததா? கிடைத்ததா? (இளமை ஒரு சவால்! – 08)

கனவு காணுங்கள்என்று நம் இராமேஸ்வரத்து வழிகாட்டி அப்துல்கலாம் கூறினார்; அவர் கூறினாலும், கூறாவிட்டாலும் நாம் எப்போதுமே கனவு காண்பதில் மட்டும்தான் காலத்தைச் செலவிட்டுக் கொண்டிருக்கிறோம். அந்தக் கனவை நிறைவேற்ற அவர் அதிகாலையில் வீடு வீடாகச் செய்தித்தாள் போட்டுவிட்டு படிக்கப் போனாரே! படிப்படியாகக் கிடைத்த வாய்ப்பைப் பற்றிக்கொண்டு தனக்குப் பிடித்த வழியில் முன்னேறிக் காட்டினாரே! அந்தக் கனவை நனவாக்கும் வழித்தடத்தைப் பின்பற்றி நாம் முயல்கிறோமா? அதுதான் கேள்வி!

என் கனவை யார் நனவாக்குவது? என்னைத் தவிர வேறு யார் நிறைவேற்றுவார்கள்? யாரால் நிறைவேற்ற முடியும்? நான் மருத்துவக் கல்லூரியில்தான் படிப்பேன்; நீ இடம் வாங்கிக்கொடு! நான் இந்தப் பொறியியல் பாடம்தான் படிப்பேன்; அதற்குரிய மதிப்பெண்கள் வாங்க மாட்டேன்போட்டித் தேர்வை எழுதமாட்டேன்; ஆனால், அங்கே என்னைச் சேர்த்துவிட வேண்டியது உன் வேலை!’

என் நண்பர்கள் அதை வைத்திருக்கிறார்கள், இதை வைத்திருக்கிறார்கள். ஆடம்பர உடை, மொபைல், பைக், ஸ்கூட்டர்... எனக்கு எல்லாம்வேண்டும், நீங்கள் வாங்கிக் கொடுங்கள்...’

படிப்பைத் தாண்டியும் இந்தஎன் கனவுஅதை நிறைவேற்றுவது உன் பொறுப்பு என்கிற மனப்போக்கு தொடர்கிறது.

நாம் விரும்பிய வேலை, நான் விரும்பிய ஊதியம், நான் விரும்பும் வெளிநாட்டு மாப்பிள்ளை, நான் விரும்பும் சினிமா ஸ்டார் பெண்...  இப்படி நமக்குப் பிடித்த கனவுகள் ஏராளம்! ஆனால், உலகில் நம்மைச் சுற்றி இருக்கும் இளைஞர் எல்லாருமே இதே வகையான கனவுகளைத்தான் தூக்கிச் சுமந்து கொண்டு காலம் கடத்துகிறார்கள். இன்று ஒவ்வொரு வேலைவாய்ப்பிற்கும் போட்டி, மிகக் கடுமையான போட்டி! போகப்போக இந்தப் போட்டி கடுமையாகத்தான் இருக்கும்! பணம் பாதாளம் மட்டும் பாயாது! பெற்றோரின் வசதி வாய்ப்புகள் நமக்குத் துணையாக நிச்சயம் இருக்கும். ஆனால், நம் கடுமையான முயற்சியும் உழைப்பும் இல்லாமல் நம் கனவுகள் கைகூடாது.

எந்த வேலைக்குப் போனாலும் வேலையில் சேர்ந்ததும் கால்மேல் கால்போட்டுக் கொண்டு பணத்தை அள்ளிக்கொட்டும் வாய்ப்புகளும் இன்றில்லை. தனியார் நிறுவனங்களில் மட்டுமல்ல, அரசுப் பணிகளிலும் கூட பணிகள் கூடுகின்றன. கண்காணிப்பும் அதிகரித்து வருகிறது.

எனவே, கனவு காண்போம். நமக்குப் பிடித்த வாழ்க்கை பற்றி நாம்தான் கனவு காணவேண்டும். நமது வாழ்க்கைக்கான குறிக்கோள்களை நாம்தான் தேர்ந்தெடுத்துக்கொள்ளவேண்டும். பார்வையில் தெளிவிருந்தால்தான் பாதைகள் தெளிவாகும். இதைத்தான் கனவு என்கிறோம். ஆனால், பாதையைப் பார்த்துக்கொண்டு நம் வீட்டுப் படிக்கட்டிலேயே உட்கார்ந்திருக்க முடியாது. கிடைத்ததைப் பிடித்துக்கொண்டு நாம்தான் பயணத்தைத் தொடங்கவேண்டும். எந்த முயற்சியிலும் எடுத்தவுடன் வெற்றிபெற்றுவிட முடியாது. சவால்கள் வரும். புதிய பணிகளில் சிரமங்கள் வரும். தடைகள் குறுக்கே வந்து வழிமறிக்கும், தோல்விகள் வரும். ஆனால்இவற்றையெல்லாம் தாண்டித்தான் நாம் வெற்றி பெற்றாகவேண்டும். நமக்குப் பிடித்தமான வாழ்க்கையை நோக்கி முன்னேறியாகவேண்டும்.

நமக்கு முன்னால் அப்துல்கலாம் மட்டுமல்ல; அவரைப் போன்ற ஏராளமான வெற்றி வீரர்கள் இத்தகைய கனவுப் பயணத்திற்கு வழிகாட்டி இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் எப்படி வெற்றி பெற்றார்கள் என்பது பற்றியும் பல ஆய்வுகள் நடந்திருக்கின்றன.

இவர்கள் எல்லாரும் கடைப்பிடித்த சில உத்திகளை நாம் நினைவில் பதித்துக் கொண்டு செயல்பட்டால் போதும், வெற்றி நிச்சயம்.

இந்த வேலை எனக்குப் பிடிக்கவில்லைஎன்று ஒருபோதும் நினைக்கமாட்டேன், சொல்லமாட்டேன். என் செயல்திறனை நானே குறைத்துக் கொள்ளமாட்டேன்.

என் உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கவில்லைஎன்று ஒருநாளும் புலம்பமாட்டேன். பலன் கிடைக்கும்வரை தொடர்ந்து போராடுவேன்.

இது என் வேலையில்லைஎன்று ஒருநாளும் ஒதுங்கமாட்டேன். மற்றவர்கள் பணியிலும் பங்கேற்பேன். கூட்டு முயற்சிகளின் மூலம் வெற்றிபெற முயற்சிப்பேன்.

இது நடக்காது, சரியா வராது, முடியாதுபோன்ற எதிர்மறைச் சொற்களைத் தவிர்ப்பேன். செய்யக்கூடிய பணிகளில் மட்டும் உற்சாகத்துடன் பங்கேற்பேன்.

வேறு வழியில்லாமல் இந்த வேலையைச் செய்துகொண்டிருக்கிறேன்என்று ஒருநாளும் நினைக்கமாட்டேன், கூறமாட்டேன். உழைக்கத் தயாராக இருந்தால் ஆயிரம் வாய்ப்புகள்.

எனக்குப் பிடித்த வாழ்க்கை அமையும் வரை என் முயற்சி தொடரும்.

இந்த நம்பிக்கைச் சிந்தனையை நாள்தோறும் நினைவுபடுத்திக்கொள்வோம். நெஞ்சில் பதிப்போம், செயல்படுவோம், வெற்றிபெறுவோம்.

எனக்குப் பிடித்த சுகமான வேலைக்காகக் காத்திருக்கமாட்டேன். என் முழுத்திறமையையும் பயன்படுத்தி, கிடைத்த வேலையைக் கொண்டு படிப்படியாக முன்னேறுவேன்.

news
சிறப்புக்கட்டுரை
வாரம் ஒரு குறள் – 07

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்

மனக்கவலை மாற்றல் அரிது (குறள் 7)

குறள் விளக்கம்

தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவருக்கு மனக்கவலையை மாற்ற முடியாது.

சிந்தனை

வண்டி ஓட அச்சாணிவேண்டும். வண்டி அச்சாணியைச் சார்ந்தே இயங்குகின்றது. யாராயிருந்தாலும் ஒருவர் மற்றவரைச் சார்ந்துதான் வாழ வேண்டும். உதாரணமாக, குழந்தைகள் பெற்றோரையும், பெற்றோர் குழந்தைகளையும் சார்ந்தே வாழ்கின்றனர். ஒருவருடைய தயவோ, உதவியோ மற்றவருக்கு அவசியம் தேவை.

கடவுளுக்கு ஒப்பாரும் இல்லை; மிக்காரும் இல்லை. அதாவது அவருக்குச் சமமானவரும் அவரைவிட உயர்ந்தவரும் இல்லை. மனிதரைச் சார்ந்து வாழ்வதைவிட உயர்வான கடவுளைச் சார்ந்து வாழ்வது சாலச்சிறந்தது.

மூன்று நாடுகளுக்கு இடையே பெரும் பகை. கடவுள் அந்த மூன்று நாடுகளின் பிரதிநிதிகளையும் அழைத்துப் பேசினார்.

உங்கள் பிரச்சினை என்ன?” என்றார்.

முதல் நாட்டுப் பிரதிநிதி, இரண்டாம் நாட்டுப் பிரதிநிதியைச் சுட்டிக்காட்டி, “இவருடைய நாட்டை முழுமையாக அழித்துவிடுங்கள்; என் பிரச்சினை தீர்ந்துவிடும் என்றார்.

இரண்டாம் நாட்டுப் பிரதிநிதி கடவுளிடம், “முதல் நாட்டின் வரைபடம் உலக வரைபடத்தில் இல்லாமல் செய்துவிடுங்கள் என்றார். மூன்றாம் நாட்டுப் பிரதிநிதியோ, “முதல் இருவரின் வேண்டுதல்களை நிறைவேற்றினால் என் ஆசை தானாக நிறைவேறிவிடும் என்றார்.

இதைக் கேட்ட கடவுள் அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போனார்.

ஒருவர் மற்றவரைச் சார்ந்துதான் வாழ வேண்டும். ஒரு தெருவில் ஒரு குடும்பம் மற்றொரு குடும்பத்துடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ சார்ந்துதான் வாழவேண்டும். ஒரு மாநிலம் பக்கத்து மாநிலத்துடன் தொடர்பில் இருந்துதான் ஆக வேண்டும்.  அதுபோல் ஒரு நாடும் அண்டை நாடுகளுடன் சார்புடன் வாழவேண்டும். ஒருவரை அழித்து மற்றவர் நன்றாக வாழ முடியாது.

மனிதச்சார்பு வாழ்க்கையே இவ்வளவு நன்மைகளை ஏற்படுத்தும்போது, கடவுளைச் சார்ந்து வாழும் வாழ்வு அதிக நற்பயன்களை விளைவிக்க வல்லது. உயர்நெறியாம் இறைவனுடன் இணைந்து வாழும் போது மனக்கவலைகள் அற்று நல்வாழ்வு வாழ முடியும்.

பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் (மத் 11:28) என்று அழைக்கிறார் ‘இருக்கின்றவராய் இருக்கின்றவர் நானே என்ற நம் கடவுள். ‘நானே இருக்கின்றவர் என்று முக்காலத்திற்கும் நம்மோடு வாழ்ந்து வருகின்றார். அவரோடு இணைந்து வாழ்ந்தால் மனக்கவலைகள் நீங்கும். நம் கவலைகளையும் சுமைகளையும் ஆண்டவரிடம் இறக்கி வைப்போம்: நிம்மதியாய் வாழ்வோம்.

news
சிறப்புக்கட்டுரை
தகவல்களின் பெருக்கம் கவனத்தின் வறுமை

நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உலகில் தகவல் என்பது முன்னேற்றத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. அதிகத் தகவல் இருந்தால், அதிக அறிவு; அதிக அறிவு இருந்தால், சிறந்த முடிவுகள் என்ற நம்பிக்கை பொதுவாக நிலவுகிறது. ஆனால், நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் ஹெர்பர்ட் . சைமன் இந்தக் கருத்தை ஆழமாக மறுபரிசீலனை செய்தார். அவர் கூறிய புகழ்பெற்ற வரி: “தகவல்களின் பெருக்கம், மனிதக் கவனத்தின் வறுமையை உருவாக்குகிறது  (A wealth of information creates a poverty of attention). இக்கருத்து இன்று வெறும் கோட்பாடு அல்ல; இது நவீன மனித வாழ்க்கையின் உண்மையான அனுபவமாக மாறியுள்ளது.

இன்றைய உலகம் தகவல் பற்றாக்குறையைக் கொண்டதல்ல; மாறாக, தகவல் மிகை நிலையைக் கொண்டது. இணையம், ஸ்மார்ட் போன்கள், மேகக் கணினி (cloud systems), சமூக ஊடகங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றின் வளர்ச்சி காரணமாகத் தகவல் எப்போது வேண்டுமானாலும், எங்கே வேண்டுமானாலும் கிடைக்கிறது. ஒவ்வொரு நாளும் உலகளவில் மிகப்பெரிய அளவில் தரவு உருவாகிறது என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. தகவல் இன்று விலையுயர்ந்த பொருள் அல்ல; மிகக் குறைந்த செலவில் அல்லது இலவசமாகவே கிடைக்கும் வளமாக மாறியுள்ளது.

இந்தச் சூழலில், செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி மேலும் ஒரு புதிய பரிமாணத்தை உருவாக்கியுள்ளது. இன்று ஆயிரக்கணக்கான AI கருவிகள் - மொழி மாதிரிகள், வடிவமைப்புக் கருவிகள், பகுப்பாய்வு அமைப்புகள், தானியங்கிச் செயலிகள் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகின்றன. இதனுடன் கோடிக்கணக்கான செயலிகள் மற்றும் இணையதளங்கள் மனிதனின் கவனத்தைத் தொடர்ந்து ஈர்க்க முயல்கின்றன. தகவல் இனி நாம் தேடுவதல்ல; அது நம்மைத் தேடிவரும் ஒரு தொடர்ச்சியான ஓட்டமாக மாறியுள்ளது.

ஆனால், இந்தத் தகவல் பெருக்கம் ஓர் ஆழமான நெருக்கடியை உருவாக்கியுள்ளது. அது மனிதக் கவனத்தின் சிதைவு. தகவலைப் போலல்ல; கவனம் என்பது வரையறுக்கப்பட்டதும் நுணுக்கமானதும் ஆகும். அதை முடிவற்ற அளவிற்கு விரிவாக்க முடியாது. இயந்திரங்கள் அளவற்றத் தரவை உருவாக்க முடியும்; ஆனால், மனித மனம் அனைத்தையும் ஒரேநேரத்தில் ஆழமாகப் புரிந்துகொள்ள முடியாது.

கவனம் என்பது அறிவின் அடித்தளம் மட்டுமல்ல; அது சிந்தனையின் உயிராகும். தொடர்ச்சியான கவனம் இல்லாமல் கற்றல் துண்டிக்கப்படுகிறது, சிந்தனை ஆழம் இழக்கிறது, முடிவெடுக்கும் திறன் மேற்பரப்பாக மாறுகிறது. கவனம் சிதறும்போது அறிவு அதிகரித்ததாகத் தோன்றினாலும், உண்மையான புரிதல் குறைகிறது.

இன்றைய டிஜிட்டல் அமைப்புகள் இந்தப் பிரச்சினையை மேலும் தீவிரப்படுத்துகின்றன. சமூக ஊடகங்கள், செய்திச் செயலிகள், பொழுதுபோக்குத் தளங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான பரிந்துரை அமைப்புகள் அனைத்தும் மனிதக் கவனத்தை ஈர்க்கும் போட்டியில் உள்ளன. இவை அனைத்தும்கவனப் பொருளாதாரம் (Attention Economy) என்ற புதிய அமைப்பின் பகுதிகளாகச் செயல்படுகின்றன. இங்கு வெற்றியின் அளவுகோல் உண்மை அல்லது ஆழம் அல்ல; ஈர்ப்பு மற்றும் ஈடுபாடு ஆகும்.

இதன் விளைவாக மனித வாழ்க்கை தொடர்ந்து சிதறி வருகிறது. ஒருவர் ஒரே நேரத்தில் பல செயலிகளை மாற்றிப் பயன்படுத்துகிறார். ஒரு பணியில் முழுமையாக ஈடுபடுவதற்குப் பதிலாக, கவனம் இடையறாது மாறுகிறது. இது செயல்திறனை உயர்த்துவது போலத் தோன்றினாலும், உண்மையில் ஆழமான சிந்தனைத் திறனைக் குறைக்கிறது.

இந்த நிலை செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியால் மேலும் அதிகரிக்கிறது. இன்று AI கருவிகள் உடனடிப் பதில்கள், சுருக்கங்கள் மற்றும் சிந்தனைகளை வழங்குகின்றன. இது வசதியானதாக இருந்தாலும், மனிதன் சிந்தனை செயல்முறையில் ஆழமாக ஈடுபடுவதைக் குறைக்கும் அபாயம் உள்ளது. பதில்கள் எளிதாகக் கிடைக்கும்போது, சிந்தனை கடினமான செயலாகக் கருதப்படத் தொடங்குகிறது.

இதனால் ஒரு முக்கியமான உண்மை தெளிவாகிறது; கிடைக்கும் எல்லாத் தகவல்களும் கவனத்திற்கு உரியவை அல்ல. எதைத் தேர்வு செய்கிறோம் என்பதோடு, எதை விலக்குகிறோம் என்பதும் சம முக்கியத்துவம் பெறுகிறது. இந்தத் திறனே இன்றைய காலத்தின் மிக முக்கியமான அறிவுசார் திறனாகும்.

ஒரு பழமொழி இதைத் தெளிவாக விளக்குகிறது: ‘இரண்டு முயல்களை ஒரே நேரத்தில் துரத்தினால், இரண்டையும் பிடிக்க இயலாது.’ இது மனிதக் கவனத்தின் அடிப்படை உண்மையை வெளிப்படுத்துகிறது. கவனம் சிதறும்போது எந்த முயற்சியும் முழுமையடையாது. ஒருமுகப்படுத்தப்பட்ட முயற்சியே வெற்றியை உருவாக்கும்.

இந்த நிலையில் மாணவர்கள் மற்றும் இளம் தலைமுறையினர் ஒரு முக்கியமான உண்மையை உணரவேண்டும். உயர்வை நோக்கிச் செல்லும் அனைவரும் தங்கள் இலக்குகளைத் தெளிவாக வரையறுக்கவேண்டும். அந்த இலக்குகளுக்கான வழிமுறைகள் மற்றும் செயல்முறைகளும் தெளிவாக இருக்கவேண்டும். இலக்கு தெளிவாக இருந்தால் மட்டுமே கவனம் சரியான திசையில் செல்லும். கவனம் தெளிவாக இருந்தால் மட்டுமே ஒருவர் தன் துறையில் முன்னேறி, வெற்றியடைய முடியும். இல்லையெனில், முயற்சி பல திசைகளில் சிதறி, எதிர்பார்த்த பலனைத் தராது.

கல்வி நிறுவனங்களும் இந்த மாற்றத்திற்கு ஏற்ப மாறவேண்டும். தகவல் அணுகலை மட்டும் கற்பிப்பதற்குப் பதிலாக, கவனத்தை நிர்வகிக்கும் திறனையும் கற்பிக்கவேண்டும். ஆழமான வாசிப்பு, விமர்சனச் சிந்தனை மற்றும் தொடர்ச்சியான கவனம் ஆகியவை இன்றைய கல்வியின் அடிப்படைத் திறன்களாக இருக்கவேண்டும்.

தனிநபர் வாழ்க்கையிலும் கவனம் ஒரு வரையறுக்கப்பட்ட வளம் என்பதை உணரவேண்டும். ஒவ்வொரு கவனச் சிதறலும் சிந்தனையின் ஆழத்தைக் குறைக்கும் ஓர்அறிவுசார் செலவுஆகும். எனவே, கவனத்தைப் பாதுகாப்பது என்பது சுய ஒழுக்கத்தின் முக்கிய வெளிப்பாடாகும்.

முடிவாக, ஹெர்பர்ட் . சைமனின் கருத்து இன்று பொருளாதாரக் கோட்பாட்டைத் தாண்டி ஒரு நாகரிக எச்சரிக்கையாக மாறியுள்ளது. தகவல் பெருகியுள்ளது; தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது; செயற்கை நுண்ணறிவு மனித வாழ்க்கையில் ஆழமாக நுழைந்துள்ளது. ஆனால், மனிதக் கவனம் இன்னும் வரையறுக்கப்பட்டதும் நுணுக்கமானதும் ஆகும்.

இன்றைய காலத்தின் உண்மையான சவால் அதிக தகவலைப் பெறுவது அல்ல; அதிக குழப்பத்துக்குள் ஆழமான சிந்தனையைக் காக்கும் திறனாகும். எதிர்காலம் அதிகத் தகவல்களை உட்கொள்பவர்களுக்கு அல்ல; மாறாக, தெளிவான நோக்கம், கட்டுப்படுத்தப்பட்ட கவனம் மற்றும் ஆழமான சிந்தனையைப் பாதுகாப்பவர்களுக்கே சொந்தமாகும்.

news
சிறப்புக்கட்டுரை
நம்மை வசப்படுத்தும் எண்ண வகைகள் (ஏற்றம் தரும் எண்ணங்கள் – 06)

வகை வகையான உணவுகள் சாப்பிட நமக்கு ஆசை அதிகம். வகை வகையான எண்ணங்களை அதே ஆர்வத்தோடு அணுக முடியுமா? முடியாது. எண்ணங்களின் வகைகள், அவை ஏற்படுத்தும் விளைவுகள் அதிகம். ஒருசில உணவுகள் ஒரு சிலருக்கு எப்படி ஒவ்வாதோ அதேபோல, எனது எண்ணங்கள் பிறருக்கு ஒவ்வாமல் போகும்.

மனிதனின் எண்ணங்களால்தான் அவனது உணர்வுகள், செயல்கள், பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கையின் தரம் நிலைநிறுத்தப்படுகிறது. மனத்தில் தோன்றும் ஒவ்வோர் எண்ணமும் நல்லதோ, கெட்டதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. எண்ணங்களைச் சரியாகப் புரிந்துகொண்டு, நம் வளர்ச்சிக்குத் தேவையான எண்ணங்களை வளர்ப்பது மிகவும் அவசியம்.

ஒரு மனிதனின் வாழ்க்கையை மாற்றக்கூடிய மிகப்பெரிய ஆற்றல் அவனுடைய எண்ணங்கள்தான். நம் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு செயலுக்கும் அடிப்படைக் காரணம் நமது எண்ணங்கள்தான். நாம் இன்று இருப்பதற்குக் காரணம், நேற்று நாம் நினைத்த எண்ணங்களே. இப்படி வரையறை இல்லாமல் வகை வகையாக எண்ணங்களின் அவசியம், அது தரும் தாக்கம் பற்றிக் கூறிக்கொண்டே போகலாம்.

எண்ணங்களை நாம் கவனமுடன் கையாண்டால் அதன் பலன் அதிகம். இல்லையென்றால் பின்விளைவுகள் நம்மைப் புரட்டியெடுக்கும். அறிவியல் தரவுகளின் அடிப்படையில் ஒரு நாளைக்கு நமக்குள் 50,000 முதல் 70,000 எண்ணங்கள் வந்து போகும் எனக் கூறப்படுகிறது. அதை ஒரு மணி நேரத்திற்கு என்று பார்த்தால், சுமார் 300 முதல் 3,000 எண்ணங்கள் வரை இருக்கலாம். தூக்கம், உணவு மற்றும் இன்னும் சிலவற்றைத் தாண்டி, ஒரு நாளைக்கு 16,500 எண்ணங்கள் நம் மனத்தில் தோன்றுகின்றன. இவை நாம் மனத்தில் எப்பவோ பதுக்கித் தேக்கி வைத்ததன் வெளியீடுதாம்

இப்படித் தோன்றும் எண்ணங்கள் பல வகைகளில் அடங்கும். அவற்றை நாம் நான்கு மிகப்பெரிய எண்ண வகைக்குள் அடக்கிவிடலாம்.

அவை:

1. நேர்மறை எண்ணங்கள் (Positive Thoughts)

2. எதிர்மறை எண்ணங்கள் (Negative Thoughts)

3. பகுத்தறிவு எண்ணங்கள் (Critical Thoughts)

4. தேவையற்ற எண்ணங்கள் (Waste and Unwanted Thoughts).

1. நேர்மறை எண்ணங்கள் (Positive Thoughts)

செயல்கள் மீதான ஆர்வம், தன்னம்பிக்கை, மகிழ்ச்சி மற்றும் நல்ல எதிர்பார்ப்புகளை உருவாக்கும் எண்ணங்கள் நேர்மறை எண்ணங்கள் ஆகும். தன்னம்பிக்கையை அதிகரித்து, மன அழுத்தத்தைக் குறைத்து, சவால்களைத் துணிவுடன் எதிர்கொள்ள உதவுகின்றன. நல்ல உறவுகளை உருவாக்கி, வாழ்க்கையில் முன்னேற முழு ஊக்கத்தை இந்த நேர்மறை எண்ணங்கள் தருகின்றன. எல்லா நேரமும் நேர்மறை எண்ணங்களால் மட்டுமே ஒருவர் நிறைந்து இருக்க முடியாது. ஆனால், பெரும்பாலான தருணங்களில் இப்படி இருப்பது நல்லது.

2. எதிர்மறை எண்ணங்கள் (Negative Thoughts)

பயம், தோல்வி, சந்தேகம், விரக்தி, பெருங்கோபம் போன்றவற்றை மையமாகக் கொண்ட எண்ணங்கள் எதிர்மறை எண்ணங்கள். உணர்ச்சி சார்ந்த எண்ணங்கள், பயம் சார்ந்த எண்ணங்கள் (Fear-Based Thoughts) இதில் அதிகம் அடங்கும். இது மன அழுத்தம் மற்றும் கவலையை அதிகரித்து தன்னம்பிக்கையைக் குறைக்கும். முடிவெடுக்கும் திறன் பாதிக்கப்படும்; உறவுகளில் விரிசல் ஏற்படும்; உடல் நலத்திலும் பாதிப்பு ஏற்படும்.

கோபம், துக்கம், கண்டுகொள்ளப்படாத அன்பு, பயம் போன்ற உணர்வுகளால் உருவாகும் எண்ணங்கள் இவை. இதனால் உருவாகும் கட்டுப்பாடற்ற உணர்ச்சிகள் தவறான முடிவுகளுக்கு வழிவகுக்கும். மனநிலையையும் நடத்தையையும் பாதிக்கும். தயக்கம் மற்றும் தள்ளிப்போடும் பழக்கம் உருவாகும். தன்னம்பிக்கை குறையும். நல்ல நல்ல வாய்ப்புகளை இழக்க நேரிடும். மன அமைதி பாதிக்கப்படும். ஆனால், அளவான பயம் எச்சரிக்கையுடனும் பொறுப்புடனும் செயல்பட உதவும்.

3. பகுத்தறிவு எண்ணங்கள் (Critical Thoughts)

நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளுக்கு எளிதில் உணர்ச்சிவசப்படாமல், உண்மைகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் ஆராய்ந்து சிந்திப்பது பகுத்தறிவு எண்ணங்களாகும். இது நமக்கான சரியான முடிவுகளை எடுக்க உதவும். தவறான நம்பிக்கைகளைத் தவிர்த்து, தலைமைத்துவத் திறனை வளர்த்து, பொறுப்பான செயல்பாட்டை உருவாக்கும். புதிய சிந்தனைகள், புதுமையான அணுகுமுறைகள் மற்றும் கற்பனைத் திறனை வெளிப்படுத்தும் எண்ணங்களாக இவை அறியப்படுகிறது. இவை நமக்குள் நன்றாக இருக்கும்போது, புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் புதுமைகள் உருவாகும். பிரச்சினைகளுக்குப் புதிய தீர்வுகள் கிடைக்கும். தனித்துவமான சிந்தனை வளர்ச்சி அடையும்.

4. தேவையற்ற எண்ணங்கள் (Waste and Unwanted Thoughts)

பிரச்சினைகளைப் பற்றி மட்டுமே சிந்தித்து, சிக்கலுக்கான தீர்வுகளைத் தேடும் எண்ணங்களை ஆக்கப்பூர்வமாக அணுகாமல், பழைய நிகழ்வுகளையே மீண்டும் மீண்டும் அசைபோட்டு அசைபோட்டு, நேரத்தையும் மனத்தையும் பாழ்படுத்துவதுதான் இவ்வகை எண்ணங்கள். செயல்திறன் குறைந்து, புதிய வாய்ப்புகள் எதையும் சிந்திக்காமல் வெறுமனே வாழ்க்கையைக் கழிப்பதுதான் இதன் நோக்கமாகும். இந்த எண்ண வகையில் நாம் மிகவும் தீவிர கவனம் செலுத்தவேண்டும். ஏனென்றால், நம்மை நாள் முழுக்க ஏதோ வேலை செய்த உணர்விலேயே இவ்வகை எண்ணங்கள் வைத்திருக்கும். ஆக்கப்பூர்வமான எந்த முடிவும் இதில் இருக்காது. ஒரு கட்டத்தில் நம்மையே முழுவதும் வெறுக்கும் நிலைக்குத் தள்ளி, விரும்பத்தகாத முடிவுகளை எடுக்க வைத்துவிடும்.

நாம் எல்லா எண்ணங்களையும் கட்டுப்படுத்த முடியாது. சூழல் மற்றும் நம் மனநிலை சார்ந்து அது மாறுபடும். ஆனால், எந்த எண்ணத்தை வளர்க்க வேண்டும் என்பதை நாம் முடிவு செய்ய முடியும். அதை வளர்த்தெடுப்பதன் மூலம் நம் வாழ்க்கையையும் வளர்த்தெடுக்க முடியும். ‘எனக்கு ஏன் இது நடந்தது?’ என்று கேட்பதற்குப் பதிலாக, ‘இதை எப்படிச் சரிசெய்வது?’ என்று எண்ணுவதன் மூலம் நமது எண்ணங்கள் சீர்செய்யப்படும்.

எப்படி ஒரு சிற்பி கல்லில் உள்ள தேவையற்ற பகுதிகளை நீக்கியதும் அழகுமிகு சிற்பம் கிடைக்கிறதோ அதுபோல, நம் மனத்தில் குப்பையெனத் தேங்கிக்கிடக்கும் தேவையற்ற எண்ணங்களை முதலில் தூக்கிப்போட்டு, அந்த வெற்றிடத்தை நல்ல எண்ணங்கள் மூலம் நிரப்பி, நல்வாழ்வைத் தேர்ந்தெடுப்போம்.

நல்ல எண்ணங்கள், நல்ல செயல்கள், நல்ல பழக்கங்கள், நல்ல குணநலன்கள், நல்ல வாழ்க்கை... இவ்வரிசையை அடிக்கடி நினைவில் கொள்வோம்.

உலகம் மாறுகிறதோ இல்லையோ,

உங்கள் எண்ணங்களை மாற்றுங்கள்;

உங்கள் உலகமே மாறும்.’

(தொடரும்)