வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும்
இடும்பை இல (குறள் 4)
குறள் விளக்கம்
விருப்பு
- வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவருக்கு எப்போதும் எவ்விடத்திலும்
துன்பம் இல்லை.
சிந்தனை
‘விருப்பு
- வெறுப்பு இல்லாத மனிதர் உண்டோ?’ எனக் கூறும் அளவிற்கு சில விருப்பு - வெறுப்புகள்
மனித வாழ்வைக் கட்டுப்படுத்துகின்றன. விருப்பு வெறுப்பின்றி வாழ்பவர்கள் கட்டுகளை உடைத்துச்
சுதந்திர வாழ்வு வாழ்பவர்கள். இதுவே இறைவனின் குணம். அதனைப் பொருந்தி வாழவேண்டும் என்றே
வள்ளுவர் கூறுகின்றார்.
அச்சுதன்
மிகவும் நல்லவர். அதுவே அவருக்கு ‘ஏமாளி’, ‘வாழத் தெரியாதவன்’ என்ற பெயரைப் பெற்றுக் கொடுத்தது. இந்தக் குறையை ஒரு ஞானியிடம்
போய் கூறினார். ஞானி அவருக்குத் தீர்வுகூறும் விதமாக அவரை ஓர் அன்னச்சாவடிக்கு அழைத்துச்
சென்றார். அங்குச் சாப்பிட்டு விட்டு வெளியில் வருபவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று
கேட்கச் சொன்னார்.
அவ்வாறு
கேட்கும்போது பலர் சத்திரத்தை நடத்துபவரைப் பாராட்டினர். சிலர் ‘முன்புபோல் தரமுள்ள
உணவு இப்போது இல்லை’ என்றனர். இன்னும் சிலர் ‘அப்பா சொத்தைச்
செலவு செய்யத் தெரியாமல் இந்தப் பையன் இவ்வாறு செலவு செய்கிறான்’ என்றனர். இதையெல்லாம் கேட்ட அச்சுதன், “இந்தச் சத்திர முதலாளியும்
என்னைப் போல் ஓர் ஏமாளிதான்” என்றான். பின் சத்திர முதலாளியை நேரில்
சந்தித்து, “இந்த விமர்சனங்களை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்? என்னால் கேட்க முடியவில்லையே!”
என்றார்.
அதற்குச்
சத்திரக்காரர், “என் சூழ்நிலை மற்றும் பின்புலத்தை அறியாமல் பேசுபவர்களை நான் கருத்தில்
கொள்வதில்லை. நல்ல காரியம் செய்ய நான் முடிவெடுத்தேன்; அதன்படி செய்கிறேன். அதனால்
பிறர் விமர்சனங்களைக் கண்டு எனக்கு விருப்பு, வெறுப்பு ஏற்படவில்லை. அவர்களை நான் கருத்தில்
கொள்வதில்லை” என்றார்.
“விருப்பு
வெறுப்பின்றித் தீர்ப்பிடுங்கள். உயர்ந்தோனுக்கும் தாழ்ந்தோனுக்கும் ஒன்று போல் செவிகொடுங்கள்” என்று இணைச்சட்டம் 1:17 கூறுகின்றது. ஒரு மனிதன் தனிப்பட்ட
வாழ்வில் எப்படி வாழ்ந்தாலும், பொதுவாழ்வில் பலருக்கும் பயன்பட்டு வாழவேண்டுமென்றால்,
விருப்பு வெறுப்புகளைக் களைந்துதான் வாழவேண்டும். உதாரணமாக, ஒரு நீதிபதி என்றால் மக்கள்
பணியில் இருக்கும் அவர் விருப்பு வெறுப்புகளைக் களைந்து, சரியான முடிவெடுத்து, மக்களுக்கு நல்ல தீர்ப்புகளை வழங்கவேண்டும்.
இன்னும்
கூறவேண்டுமென்றால் ஒரு திருக்குறளையே இக்குறளுக்கு மேற்கோளாகக் காட்ட முடியும்.
‘இன்பம்
விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்ப
முறுதல் இலன்’ என்கிறது குறள் 628.
அதாவது,
உடம்பிற்கு இன்பம் விரும்பாதவனாய், அதற்கு வரும் துன்பத்தை ‘இயல்புதானே’ என்பவன், மனம் தளர்ந்து துன்பப்பட மாட்டான்.
எனவே,
விருப்பு வெறுப்புகளைக் கடந்து உண்மையை அறிவோம்.
‘நல்லாசிரியர் யார்?’ நல்ல பண்புகளையும் குணங்களையும் பெற்றவரா? சிறந்த கற்பிக்கும் ஆற்றலைப் பெற்றவரா? இந்தக் குழப்பம் நிறையப் பேருக்கு உண்டு. என்னைக் கேட்டால், அறிவூட்டுதலாக இருந்தாலும் சரி, நல்ல பண்புகளை வளர்ப்பதாக இருந்தாலும் சரி, மாணவர்களின் மனநிலைக்கேற்ப, வகுப்பறைச் சூழலுக்கேற்ப, எப்போது, எது மாணவர்களுக்குத் தேவையோ, அப்போதெல்லாம் அதை அவர்களுக்குத் தயங்காமல் கொடுக்க முயற்சிப்பவரே ‘நல்லாசிரியர்’ என்பேன்.
வேர்கள்
செய்யும் சேவை வெளியில் தெரிவதில்லை. ஆனால், அவைதான் தாவரங்கள் உயிர்வாழ சத்துநீரை உறிஞ்சிக் கிளைகளுக்கும் இலைகளுக்கும் மேலே அனுப்புகின்றன. புயல் காற்றின் தாக்குதல்களிலிருந்து தாவரங்கள் சாய்ந்து விடாமல் பாதுகாக்கின்றன. பல தாவரங்களின் வேர்கள்
சத்துகளைச் சேமித்து மனிதர்களுக்கு உணவாக்குகின்றன. சில வேர்கள் மருந்தாகின்றன. வேர்கள் தாவரங்களுக்கு எப்படியோ, அப்படியே பள்ளிக்கூடங்களும் ஆசிரியர்களும் பெற்றோரும் இச்சமூகமும், மாணவர்களின் உயர்வுக்கு நான்கு உறுதியான தூண்களாக நின்று அவர்களின் வளர்ச்சியைக் கட்டமைக்கவேண்டியது அவசியமாகிறது.
ஆசிரியரின் ஆற்றல்மிகு
செயல்திறன்
மாணவர்கள்
கற்றலில் ஆர்வமுள்ளவர்களாயிருப்பின் எதையும் மிகவும் எளிதில் கற்றுக்கொள்வர். ஆனால், கற்க வரும் எல்லாரும் ஆர்வமுள்ளவர்களாயிருப்பார்கள்
என்பதை எதிர்பார்க்க முடியாது. அச்சூழ்நிலையில் ஆசிரியர்கள்தான் வலியச்சென்று மாணவர்களை ஊக்குவித்தல்வேண்டும். இதைத்தான் ‘கற்பித்தலின் பயன்பாடுகள் ஆசிரியரின் செயல்பாடுகளை ஒட்டியே அமைதல் வேண்டும்’
என்று இலெவின், விதால் போன்ற ஆராய்ச்சியாளர்கள் கூறினார்கள்.
ஆசிரியர்கள்
நன்கு கற்பிக்கத் திட்டமிடுதல் அவசியம். திட்டமிடுதலை நீண்டகால அடிப்படையில் அல்லது ஒவ்வொரு பாட வேளைக்கும் திட்டமிடுதல் அல்லது பாடப்பொருளைச் சிறு சிறு பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு திட்டமிடுதல் என்பதாக அமைத்துக்கொள்ளலாம். ஆசிரியர்கள் வகுப்பறைகளில் ஒழுங்கு கட்டுப்பாட்டைச் சீரிய முறையில் பராமரிக்கவேண்டும். அதேவேளை, ஆசிரியர்கள் மாணவருடன் தமக்குள்ள உறவு இனிமையாக அமைவதைத் தொடர்ந்து அனுமதிக்கவேண்டும். அப்போதுதான் கற்றல், கற்பித்தல், செயல் எந்தத் தடங்கலும் இல்லாமல் நடக்கும். மாணவர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை உடனுக்குடன் கேட்டு நிவர்த்தி செய்துகொள்ள ஆசிரியர்கள் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவேண்டும்.
மதிப்பீடு
செய்தல் ஆசிரியர் தொழிலுக்கு மிகவும் அவசியம். பாடம் நடத்திக்கொண்டிருக்கும் போதே வாய்வழியாகக் கேள்விகள் கேட்டு மதிப்பிடலாம். அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் தேர்வுகள் நடத்தி மதிப்பிடலாம். இம்மதிப்பீடுகளில் மாணவரின் பன்முகத் திறன்களைக் கணிக்கும் வகையில் கேள்விகளின் வடிவத்தை மாற்றி மாற்றி வடிவமைத்துக்கொள்ளலாம். ஆசிரியர்கள் கற்பிக்கும் நேரத்தில் படச்சுருள்கள், காட்சிவில்லைகள்
(Slide), விளக்கப்படங்கள்,
மாணவர்களே உருவாக்கிக் கொண்டு வரும் கற்பித்தல் உபகரணங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது, மாணவர்கள் ஈடுபாட்டுடன் வகுப்பறைச் செயல்பாடுகளில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதை ஆசிரியர்கள் நினைவில் கொள்ளவேண்டும். இன்னும் சில பள்ளிகளில் கரும்பலகையே இல்லை. இச்சூழலில், கம்ப்யூட்டர் வகுப்பெல்லாம் சாத்தியமா? என்கிற கேள்வியும் எழாமல் இல்லை.
வகுப்பறைகளில்
ஓர் ஆசிரியரே ஒரு பாடத்தைக் கற்பிப்பதைக் காட்டிலும், பல ஆசிரியர்கள் இணைந்து
குழுவாக நடத்தலாம். நமது பள்ளிகளுக்கு இன்றுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் இது சாத்தியமில்லை என்றாலும், ஓர் ஆசிரியர் சொல்ல மறந்த கருத்தை மற்றோர் ஆசிரியர் மாணவர்களுக்குச் சொல்ல குழு கற்பித்தலில் வாய்ப்பிருக்கிறது. ‘லெக்சர் மெத்தட்’ என்று சொல்லக்கூடிய விரிவுரையாற்றல் முறை என்பதெல்லாம் பழைய பஞ்சாங்கம். கருத்தரங்கு, உரைக்கோவை (Symposium), கருத்துப்பட்டறை
(Work Shop) போன்ற
நவீன கற்பித்தல் முறைகளைக் கையாளும் போது மாணவர்கள் நன்கு பயன்பெறுவர். ஆசிரியர்களின் முழுமையான கரும்பலகைப் பயன்பாடு மாணவர்கள் அறிவு வெளிச்சத்தைப் பிரகாசமாகப் பெற விடியலாக அமையும்.
கல்வித்துறை
அவ்வப்போது ஆய்வு செய்து வெளியிடும் நூல்கள், கருவிகள் போன்றவற்றை ஆசிரியர்கள் பயன்படுத்திக்கொள்வது நலம். வகுப்பறைகளில் மாணவர்கள் சோர்வடையும்போது ஆசிரியர்கள் கலைவழி கற்பித்தல் முறையைக் கையாளலாம். ஆசிரியர்கள் தங்களிடமுள்ள குரல்வளம், நடிப்புத்திறன், நகைச்சுவை உணர்வைப் பயன்படுத்தும்போது மாணவர்கள் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெறுகின்றனர்.
ஆசிரியர்-பெற்றோர்
உறவு
பெரும்பாலான
பெற்றோர் தங்கள் பிள்ளைகளைப் பள்ளிகளில் சேர்க்கும் காலத்திலும், பள்ளிக் கல்வி முடித்து விடுப்புச் சான்றிதழ் பெறும் நேரத்திலும், கையெழுத்துகள் இடவேண்டிய கட்டாயச் சூழ்நிலைகளிலும் மட்டுமே பள்ளிக்கு வருகின்றனர். பள்ளிகளில் கேட்கப்படும் பொருள்களை வாங்கிக் கொடுப்பதும், சீருடைகள் தைத்துக் கொடுப்பதும், தேர்ச்சி அறிக்கைகளில் கையெழுத்து இடுவதும், மதிப்பெண்கள் குறைத்துப் பெற்றால் கட்டாயப்படுத்தி டியூசன் சென்டருக்குக் பிள்ளைகளை விரட்டி விடுவதும்தான் கல்வி எனப் பெற்றோர் நினைத்துக்கொள்கின்றனர். அதுவும் நகரங்களில் வாழும் பெற்றோரைச் சொல்லவேண்டியதில்லை. அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கெனச் சிறிது நேரம் கூட ஒதுக்காமல் மனமகிழ்மன்றம், பற்பல களியாட்டங்கள், பொழுதுபோக்குகள், வெட்டிப்பேச்சுகள், சமூகத்தொண்டு என்கிற பெயரில் குடும்பத்தைக் கவனியாமை போன்றவற்றில் நேரத்தைச் செலவிடுகின்றனர்.
பள்ளி-வீடு ஆகியவற்றின் சுமூக உறவிற்கும் மாணவர்களின் தேர்ச்சித் திறனுக்கும் நெருங்கிய உறவு இருப்பதாக பிளொடன் என்கிற கல்வியாளரின் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. அதையெல்லாம் பெற்றோர் வசதியாக மறந்துவிடுகிறார்கள். பள்ளிக்கல்வி அனுபவங்கள் வெறும் ஏட்டுச் சுரைக்காயாக இருந்துவிடாமல், வெளியுலகில் மெய்யானதாக அமைய பெற்றோர் துணைபுரிய வேண்டும். இதைத்தான் பீட்டர் உட்சு என்ற அறிஞர், ‘நாம் நம் குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களைக் கற்றுத்தருகிறோம்; ஆனால், அவை அனைத்துமே வெளியுலகில் மெய்யற்றனவையாக ஆக்கப்படுகின்றன. அவற்றைப் பயனுள்ளவையாக்குவதில் பெற்றோரின் பொறுப்பு மிகப்பெரியது” என்கிறார்.
தங்கள்
பிள்ளைகளின் ஆசிரியர்கள் யார்? பிள்ளைகளின் கல்வி இடர்ப்பாடுகள் என்ன? அவர்கள் எவ்வாறு கற்கின்றனர்? கற்றல் சூழ்நிலை பள்ளிகளிலும், வீடுகளிலும் எவ்வாறு உள்ளது? நற்பழக்கங்கள் வேரூன்றி உள்ளனவா? தீயப் பழக்கங்கள் சூழ்கின்றனவா? பள்ளி மற்றும் ஆசிரியர்களின் எதிர்பார்ப்பினைத் தங்கள் பிள்ளைகளால் பூர்த்தி செய்ய முடிகிறதா? இல்லையெனில், அவ்வாறாக ஏன் இல்லை? போன்றவற்றைப் பெரும்பாலான பெற்றோர் எண்ணிப் பார்ப்பதேயில்லை. இத்தகைய சூழ்நிலையில் பெற்றோர்-ஆசிரியர் உறவு சிறந்திருக்குமேயானால் இச்சிக்கல்களுக்குத் தீர்வு காண முடியும். பெற்றோர்-ஆசிரியருக்கிடையே நிலவவேண்டிய உறவின் முக்கியத்துவத்தை உணர்ந்தே தமிழ்நாட்டுக் கல்வி இயக்குநரகம் பெற்றோர்-ஆசிரியர் கழகங்களை அமைத்து, அதற்கு நெறிமுறைகளை வகுத்து, பல்வேறு தருணங்களில் வழிகாட்டுகிறது. ஆனால், பல பள்ளிகளில் பெற்றோர்-ஆசிரியர் கழகங்கள் பெயரளவிற்கு மட்டுமே செயல்பட்டு வருகின்றன என்பதுதான் வேதனைக்குரியதாகிறது.
ஆசிரியர்-மாணவர்
உறவு
பண்டைக்காலத்தில்
கல்வி கற்றல் ஆசிரியர் இல்லத்திலேயே நடந்தது. இன்று கல்வி கற்பிக்கப்படும் இடம் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் என்றும், கற்பதற்கும் கற்பிப்பதற்கும் உரிய தகுதிகள் இவை என்றும் வரையறுக்கப்பட்டுள்ளன. இம்மாறுபட்ட கல்விச்சூழலில் ஆசிரியர் - மாணவர் உறவு என்பது இன்றியமையாதது. கல்வித்திட்டத்தின் குறிக்கோள்கள் மாணவர் மனத்தில் நிறைவை ஏற்படுத்தி வருகின்றனவா? இல்லையெனில், அதைச் சீர்படுத்த எந்த மாதிரியான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்? என்று இன்று பல ஆசிரியர்கள் எண்ணிப்
பார்க்காததால் ஆசிரியர்- மாணவர் உறவு சீர்குலைகிறது.
அறிவைத்
தேடிவரும் மாணவர்கள் மத்தியில் அன்பைத் தேடிவரும் மாணவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களை ஆதரித்து அரவணைக்கவேண்டும். இக்கருத்தைத்தான் கல்விச் சிந்தனையாளர் ஆபிரகாம் மாஸ்லோ என்பவர், “மாணவரின் அடிப்படைத் தேவைகளின்படி முறைக்கட்டமைப்புகளின் எத்தேவை மாணவருக்கு உள்ளது என்பதும் முக்கியம்; அதைத் தெரிந்துகொள்ளாமல் மாணவருக்குக் கற்றுக் கொடுப்பதால் மாணவரின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகாது” என்கிறார்.
அறிவுத்திறன்
குறைந்த மாணவர்கள் ஆர்வமுடன் கற்க முயலும்போது அவர்களை உற்சாகப்படுத்துகிறோமா? மாணவர்கள் தோல்வியுறும் பொழுது அவர்களுடன் சேர்ந்து வருத்தமடைகிறோமா? மாணவர்கள் வெற்றி பெறும்பொழுது அவர்கள் வெற்றியில் பங்கு கொண்டு மகிழ்கிறோமா? மாணவர்கள் திறன்கள் வெளிப்படுமாறு அவர்களை ஊக்கப்படுத்துகிறோமா? மாணவர்கள் தவறுகள் புரியும்பொழுது அதைப் பெரிதுபடுத்தாமல் பக்குவமாகத் திருத்த முயல்கிறோமா? மாணவர்கள் தங்களுடைய கல்வி மேம்பாட்டைத் தாங்களே தேர்வு செய்யக்கூடிய சூழ்நிலைகளை உருவாக்கித் தருகிறோமா? போன்ற கேள்விகளை ஆசிரியர்கள் தங்களுக்குத் தாங்களே கேட்டுக்கொண்டே செயல்பட முயற்சிக்கும்போது, மாணவர்களிடம் நல்லுறவு தழைத்தோங்க வழி கிடைக்கிறது.
எல்லாராலும்
விரும்பப்படும் ஆசிரியர்களால் (Popular Teachers) மட்டுமே மாணவர்களிடம் நல்லுறவை
ஏற்படுத்த முடிகிறது. ஆசிரியர்-மாணவர் விகிதம் குறைந்துள்ள பள்ளிகளில், மாணவர்கள் மீது தனிக்கவனம் செலுத்த முடிவதால் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் உறவு சிறந்து விளங்குகிறது. ஆசிரியரின் மேம்பட்ட கற்பித்தல் திறம் (Effective Teaching) மாணவர்
நல்லுறவுக்கு அடிப்படையாக அமைகிறது என்று பல்வேறு ஆய்வுகளின் முடிவுகள் தெரிவிப்பதையும் ஆசிரியர்கள் கருத்தில்கொள்ளவேண்டும்.
மாணவர்-சமூக
உறவுகள்
“நூறு இளைஞர்களை என்னிடம் கொடுங்கள்; நாட்டையே முன்னேற்றிக் காட்டுகிறேன்” என்றார்
சுவாமி விவேகானந்தர். இளையோரின் சக்தி மகத்தானது என்று அவர் முழுமையாக நம்பினார். ஆனால், இன்றுள்ள சமூக அமைப்பு மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் மிகப்பெரிய தடைக்கல்லாக உருவெடுத்திருக்கிறது. குற்றச்செயலில் ஈடுபடுபவர்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், பெரும்பாலோர் நன்கு படித்தவர்களாகத்தான் இருக்கின்றார்கள். காரணம் என்ன? அதிக மதிப்பெண்கள் எடுக்கவேண்டும் என்ற ஒரே குறிக்கோளுக்காகவே மாணவரைச் சுற்றியுள்ள அனைத்துச் சக்திகளும் அவர் தலையில் பொறுக்க முடியாத அளவிற்குச் சுமைகளை ஏற்றி வைக்கிறோம். ‘பூவின் தலையில் பூமியையே சுமக்க வைக்கிறோம்’ என்றுதான்
சொல்லவேண்டும். மதிப்பெண்களுக்காகத் தனது மகிழ்ச்சியான தருணங்களை மாணவர் கொண்டாடக்கூட அனுமதிக்காமல் கொள்ளையடித்து விடுகிறோம்.
சிறுவயதில்
ஏற்படும் மன அழுத்தத்தால் மனம்
மரத்துப்போய், மனிதநேயம் அற்றுப்போகிறான். தன்னை அழுத்தும் சமூகத்தின் மீது கோபம் கொண்டு ஒருவித பழிவாங்கும் எண்ணத்தோடு வளரும் அவன் பெரியவனானதும் குற்றம் புரிவதைத் தவறாகவே நினைப்பதில்லை. இதுதான் உண்மை. பள்ளியில் இயங்கும் என்.எஸ்.எஸ்., என்.சி.சி. போன்ற
இயக்கங்கள் மாணவர்கள் நல்ல பண்புகளைக் கற்றுக்கொள்ள உதவி புரிகின்றன. ஆனால், ஏதோ ஒரு கட்டாயத்திற்காகப் பெயரளவிற்குத்தான் மாணவர்கள் அவற்றில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இயக்கங்களில் மாணவர்கள் முழு ஈடுபாட்டுடன் பங்குகொள்ளச் செய்யும் ஒரு தூண்டுகோலாக, தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேர்வதற்கு விளையாட்டு வீரர்களுக்கு ‘கட் ஆப்’ மதிப்பெண்களில் சலுகை வழங்குவதைப்போல், இயக்கங்களில் சிறப்பாகச் செயல்படும் மாணவர்களுக்கும் அரசு கருணை காட்டலாமே!
குடிகாரத்
தந்தை, குடும்பச்சண்டை,
ஒழுக்கக்கேடான பெற்றோர் மாணவரின் வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கிறார்கள். வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற காரணிகள் ‘படிப்பதால் என்ன பயன்?’ என்கிற அவநம்பிக்கையை மாணவர்களுக்குள் ஏற்படுத்துகிறது. புரட்சிகரமான தொலைநோக்குத் திட்டங்களால் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்க அரசாங்கங்கள் முன்னுரிமை கொடுக்க வேண்டாமா? திரைப்படங்கள் வலிந்து புகுத்தும் பாலியல் வக்கிரங்கள், வன்முறைக் காட்சிகள், இரட்டைப் பொருள் தரும் வசனங்கள், ஹீரோயிசம் போன்றவை மாணவனின் மனத்தைத் திசைத்திருப்பித் தவறான பாதைக்குக் கொண்டு செல்கின்றன.
நாட்டின்
இரத்தநாளங்கள் இளைஞர்கள். அவர்களின் குருதியில் மதுவையும் பெத்தட்டினையும் அபினையும் ஹோகெய்னையும் கலக்கும் போதைத்தரகர்கள் தேசத்துரோகிகள் அல்லாமல் வேறென்ன! சாதி சங்கங்களும், மத அமைப்புகளும் தங்கள்
சுயநலத்துக்காக, தீவிரவாதச் சிந்தனைக்கு இட்டுச்செல்வதை நிறுத்திக்கொள்ளாத வரையில், மாணவர் சக்தி என்கிற மகத்தான சக்தி மண்ணோடு மண்ணாக மடிந்துபோவதை யாராலும் தடுக்க முடியாது.
கல்வி
நிறுவனங்கள், ஆசிரியர்கள், பெற்றோர், சமூக அமைப்புகள் போன்றவை மாணவர்களின் உயர்வுக்கு உதவிபுரியும் எஃகுத் தூண்களாக உருமாறவேண்டும். நாட்டில் அப்படியொரு நிலை வந்தால் அறிவர் அப்துல்கலாம் கண்ட கனவைப்போல ‘இந்தியா வல்லரசாகும்’ நாள்
வெகு தூரத்தில் இல்லை.
அரசு மருத்துவமனையின் அந்தப் பெரிய இரும்பு லிப்ட் எப்போதும்போல நோயாளிகளின் முனகல்களாலும், மருந்து நெடியாலும் நிறைந்திருந்தது. அதன் ஆபரேட்டர் ரவிக்கு அதில் எந்தச் சலனமும் இல்லை. அவனுக்கு அது பழகிப்போன வேலை. அவ்வளவுதான். காய்ந்த சருகைப் போல அவன் இதயம் மரத்துப்போயிருந்தது.
“யோவ், கொஞ்சம் தள்ளி நில்லுய்யா,… மூச்சு முட்டுதுல்ல” என்று
ஸ்ட்ரெச்சரில் தன் தாயை வைத்துக்கொண்டு பதறிப்போய் நின்று கொண்டிருந்த ஓர் இளைஞனைப் பார்த்து, பட்டுத்தெறிக்கும் பட்டறை நெருப்புப்போல எரிந்து விழுந்தான் ரவி.
“அண்ணே, அவங்களுக்கு நெஞ்சு வலிண்ணே, கொஞ்சம் சீக்கிரம் ஆறாவது மாடிக்குப் போகணும்ணே. எங்கேயும் நிக்காம போயிடுலாம்ணே” என்று
அந்த இளைஞன் கெஞ்சினான்.
“எல்லாருக்கும் இங்க அவசரம்தான். லிப்ட் அது பாட்டுக்குத்தான் போகும். நான் என்ன கையிலயா தூக்கிட்டுப் போறேன்? சும்மா பதறாம இரு” என்று அலட்சியமாகச் சொல்லிவிட்டு, பேஸ்புக் ரீல்ஸ்களில் மூழ்கிப் போனான்.
அன்று
சனிக்கிழமை மதியம். மருத்துவமனையில் கூட்டம் கொஞ்சம் குறைவாக இருந்தது. ரவி லிப்ட்டின் உள்ளே இருக்கும் அவனது பிரத்யேக இருக்கையில் அமர்ந்திருந்தான். அவனது லிப்ட் உலகில் அவன்தான் ராஜா. அவன் கூறினால்தான் அந்த இரும்புப் பெட்டி மேலேயும் கீழேயும் செல்லும். லிப்ட் மேலே மட்டும் போகாது, கீழேயும் வந்தாகவேண்டும் என்பது ரவிக்குத் தெரியும். ஆனால், அவனுடைய வாழ்க்கையில் அது நடக்கும் என்பது அவனுக்கு அன்று தெரியாதிருந்தது.
அன்று
திடீரென அவனது இடது கையில் ஒரு மிரள வைக்கும் வலி பரவியது. நெஞ்சுப் பகுதி பாறை ஒன்றைத் தூக்கி வைத்ததுபோலக் கனமாக இருந்தது. நெற்றியில் வியர்வை படர்ந்தன. அவனுக்குப் புரிந்தது, இது மாரடைப்பு என்று.
“அ...… அம்மா” என்று கத்த முயன்றான். ஆனால், தொண்டையிலிருந்து காற்று மட்டுமே வந்தது, சத்தம் வரவில்லை. கையை நீட்டி லிப்ட்டின் ‘அலாரம்’ பொத்தானை அழுத்த முயன்றான். விரல்கள் காற்றில் ஆடும் இலைபோல நடுங்கி, பொத்தானைத் தொடுவதற்குள் அவனது கை சரிந்தது. கண்கள்
செருக, தலை ஒரு பக்கமாகச் சாய்ந்தது. ரவியின் உயிர் அங்கேயே பிரிந்தது.
அவனது
உடல் அந்த இருக்கையிலேயே, அவன் சிம்மாசனத்திலேயே செதுக்கி வைத்த சிலையைப்போல அசையாமல் அமர்ந்திருந்தது. வெளியே வெவ்வேறு மாடிகளில் நின்ற மக்கள் லிப்டுக்காகப் பொத்தான்களை அழுத்திக்கொண்டே இருந்தார்கள். தரைதளத்தில் இருந்தவர்கள் அழுத்தும் போது லிப்ட் கீழே வந்தது. மேல்தளத்தில் நிற்பவர்கள் பொத்தானை அழுத்தும்போது லிப்ட் மேல்தளத்திற்குச் சென்றது. இப்படி அது பனை மரத்தில் கீழேயும் மேலேயும் ஏறி விளையாடும் அணிலைப்போலப் பாசாங்கு காட்டிக்கொண்டிருந்தது.
அவனுடைய
உணர்வற்ற நிலை இப்போது ஒரு சுவராக மாறி அவனுக்கும் உலகிற்கும் நடுவே நின்றது. லிப்டின் கதவு திறக்கவில்லை என்பதற்காக யாரும் அதிக நேரம் காத்திருக்கவில்லை. பக்கத்திலிருந்த அடுத்த லிப்ட்டைத் தேடிச் சென்றனர். வேறுசிலர் படிக்கட்டுகளைப் பயன்படுத்தினர். ரவியை யாரும் தேடவில்லை. ரவியும் யாரையும் தேடும் நிலையில் இல்லை. அடுத்த சிப்டில் அடுத்த லிப்ட் ஆப்பரேட்டர் வரும் வரை ரவி யாருக்கும் தேவைப்படாதவனாகவே இருந்தான்.
அதிகப்படியான
சமூக ஊடகப் பயன்பாட்டினால் ஏற்படும் எமோஷனல் நம்பிங் (Emotional numing)
என்பது, ஒரு நபர் தனது உணர்ச்சிகளை உணர முடியாமல் போகும் அல்லது உணர்ச்சிகளில் இருந்து முற்றிலும் துண்டிக்கப்படும் ஓர் உளவியல் நிலை என்று கூறலாம். இணையத்தில் தொடர்ந்து வேலை, பொழுதுபோக்கு மற்றும் சமூகத் தொடர்புகள் என அனைத்தையும் ஒரே
தளத்தில் கையாள்வது ஒருவரை உணர்வுரீதியாக வடிகட்டி விடுகிறது. இதனால் உண்மை வாழ்க்கையில் உள்ள உறவுகள் மற்றும் நிகழ்வுகள் மீது ஆர்வம் குறையத் தொடங்குகிறது.
சமூக
ஊடகங்களின் ‘ஹைலைட் ரீல்’ கலாச்சாரம் இளைஞர்களிடையே 50% வரை உணர்ச்சிக்
குறைபாட்டை ஏற்படுத்துகிறது. சமூக ஊடகங்கள் நம்மை அதன் சூழ்ச்சி வலையில் சிக்க வைக்கின்றது. இது நமது மூளை உண்மையான உலக உணர்ச்சிகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறது. இதைத் தவிர்க்கத் திரைப் பயன்பாட்டைக் குறைத்து, மனிதர்களுடனான தொடர்பை அதிகரிப்பது மிக மிக அவசியமாகும்.
தினமும் 7 முதல் 9 மணிநேரம்
வரை சீரான தூக்கம் மற்றும் வழக்கமான உடற்பயிற்சி ஆகியவை எண்டோர்பின் (Endorphins) சுரப்பை
அதிகரித்து மனநிலையைச் சீராக்க உதவும். சரிவிகித உணவு உண்பது மூளையின் செயல்பாட்டிற்கும், உணர்ச்சி மேலாண்மைக்கும் துணைபுரிகிறது.
சமூக
ஊடகங்களில் வரும் அதிகப்படியான தகவல்களிலிருந்து விடுபட ‘டிஜிட்டல் டிடாக்ஸ்’
செய்வது மூளைக்கு அமைதியைத் தரும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடுவது தனிமை உணர்வை உடைத்து, உணர்ச்சிகளைப் பகிர்ந்துகொள்ள வாய்ப்பளிக்கிறது. ஓவியம் வரைதல், இசை அல்லது டைரி எழுதுதல் போன்ற செயல்கள் மூலம் அடக்கப்பட்ட உணர்ச்சிகளை மெதுவாக வெளிப்படுத்தலாம்.
பிறரின்
இன்பத்திலும் துன்பத்திலும் பங்கேற்றல் அல்லது ஈடுபடுதல் என்பதே மனிதனின் தனி அடையாளம் ஆகும். அந்த அடையாளத்தை இழக்கும்போது மனிதன் சமூகப் பிராணி என்ற தன் அடையாளத்தை இழப்பவனாகிறான்.
தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாட்டு ஆட்சிக் கட்டிலில் வலுவான பலத்துடன் அமர்ந்துள்ளதாக நம்பப்படுகிறது.
தமிழக
வெற்றிக் கழகத்தின் தலைமையிலான ஆட்சியை நாம் விரும்பினோம் அல்லது எதிர்த்தோம் என்பது இப்போதைய அரசியல் ஆய்வுக்குத் தேவையற்ற ஒன்று என்றே கருதவேண்டியுள்ளது. நாடாளுமன்றச் சனநாயக முறைமை தந்த வெளியைப் பயன்படுத்தி ஆட்சியேற்றிருக்கும் இவ்வரசை வாழ்த்தி அமைவதைத் தவிர்த்து, குடிமக்களுக்கு வேறு என்ன மாற்று இருக்க முடியும்?
எண்பதுகளுக்குப்
பின் மண்டைக்காடு மதக் கலவரத்தைத் தொடர்ந்து தமிழ் மண்ணில் வேகமாகக் காலூன்றத் தொடங்கிய காலம். ‘புரட்சித் தலைவர்’ என்று பாராட்டப்பட்ட எம்.ஜி.ஆரும், அவரைத்
தொடர்ந்து அவரால் வளர்த்தெடுக்கப்பட்ட செல்வி செயலலிதாவும் தமிழ்நாட்டை ஆளும் பொறுப்பேற்ற காலம். இவ்விருவரும் ஆட்சி செய்த காலத்தை இன்றைய கட்சியினர் பலரும் ‘தமிழ்நாட்டின் பொற்காலம்’
என்று போற்றிப் புகழ்ந்தாலும், மற்றுமோர் உண்மையை நாம் ஏற்றாகவேண்டும். இவ்விருவரின் ஆட்சியினூடே இந்து வகுப்புவாதம் மெல்ல மெல்ல தமிழ்நாட்டிற்குள் ஊடுருவுவதற்கான வெளியும்
உருவாயிற்று என்பதனையும் நாம் ஏற்றுக்கொள்ளத்தான்வேண்டும்.
இவர்களின்
மென்மைப் போக்கினால் தமிழ்நாட்டில் ஊடுருவிய வகுப்புவாதிகளுக்குப் பெரிய நியாயத்தை (Legitimacy) வழங்கிய
பெருமையைச் சேர்த்தவர் கலைஞர். இந்நிகழ்வை எடுத்துக்கூறக் காரணம் ஒன்றுண்டு. ‘வகுப்புவாதம் தமிழ்நாட்டில் வலுவாகக் கால்பதித்து, தமிழ்நாட்டு ஆட்சிக் கட்டிலைக் கைப்பற்றுமானால் என்ன செய்வீர்கள்?’ என்ற கேள்வியை அன்றைய மதுரைப் பேராயரிடம் ஊடக நண்பர்கள் எழுப்பியபோது, அவர் கூறிய பதில் என்ன தெரியுமா? “சனநாயக
முறைமையில் தேர்வு செய்யப்பட்ட அரசு எதுவாயினும் ஏற்றுக்கொள்வோம்” என்றார்.
ஒரு
சமயத்தின் தலைவர் தன் இறுதிக்காலம் வரை வகுப்புவாத நச்சு தமிழ்நாட்டில் புகுந்து விடக்கூடாது என்று துடிப்போடு போராடி வந்தவர் - அப்போராளியின்
பதிலே இன்று சனநாயக முறைமையில் தெரிவு செய்யப்பட்டு ஆட்சிக் கட்டிலில் ஏறியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் பொருந்துமல்லவா!
என்ன தயக்கம்?
தமிழக
வெற்றிக் கழகம் எனும் கட்சியின் வெற்றி சனநாயக முறைமையில் அமைந்ததென்றாலும், இது சனநாயகத்தின் வெற்றியாகக் கருதிட முடியுமா? சனநாயகப் பண்புகள் அல்லது அதன் நுண்மையான விழுமியங்கள் இச்சனநாயக வழி தேர்தலில் முன்னெடுக்கப்பட்டனவா? என்ற கேள்வியும் எழுந்தால் அதனை எப்படி மறுக்க முடியும்?
முடிந்த
தேர்தலைவிட்டு விடுவோம். தேர்தல் முடிந்து, நாம் எதிர்பார்த்த கட்சி வெற்றி பெறாதபோது, வெற்றி பெற்ற கட்சிக்குரிய பெரும்பான்மை கிடைக்காதபோது, மதச்சார்பற்ற கூட்டணி என்று நாளும்
உச்சரித்து, தோழமை கொண்டு அணி சேர்ந்திருந்த கூட்டணியின் தலைமைக் கட்சியை ‘அம்போ’ என்று கைவிட்டு, த.வெ.க.வைத் தழுவிக் கொண்டதில் என்ன தர்மம் இருக்கிறது?
மதவாதச்
சக்திகள் ஆதாயம் பெற்றுவிடக் கூடாது; பெரும்பான்மையைப் பயன்படுத்தி ஆளுநர் ஆட்சி மூலம் பாரதிய சனதா ஆட்சியின் ஆளுமை நுழையக்கூடும் என்ற அச்சத்தில் நியாயம் இருக்கலாம். திரு. ஜோசப் விஜய் என்ற மனிதருக்கு, இவர்களெல்லாம் கவலைப்படுவதுபோல் பாரதிய சனதாவைப் பற்றிய கவலை இருந்ததுபோல் தெரியவில்லையே! திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஸ்டாலின் அவர்களை ‘அங்கிள் ஸ்டாலின்’
என்றும், இன்னும் பல அடைமொழிகளாலும் ஏளனம்
செய்த ஜோசப் விஜய், தன் வாயினின்று ‘மோடி’ என்று ஒரு பெயரை ஒருமுறைகூட உச்சரித்திருப்பாரா? தன் கொள்கை எதிரியாக அறிவித்த விஜய், பாரதிய சனதாவின் எந்தக் கொள்கையை விமர்சித்தார்?
நாட்டின்
இடதுசாரி இயக்கங்களும், பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் அறிவுசீவிகளும் இந்நாட் டின் ஒருமைக்கும் ஒற்றுமைக்கும் எதிராக வளர்ந்து வரும் மதவாத அரசியலை, அவ்வரசியல் முன்வைக்கும் சவால்களைக் கண்டு கவலைப்பட்டுவரும் வேளையில், தமிழ்நாட்டை ஆளும் அரசை,
அவ்வரசை ஆளும் கட்சியை ‘தீய சக்தி’ என்று வர்ணித்துத் தேர்தலில் வீழ்த்திய த.வெ.க.வின் ஜோசப் விஜய் அவர்களின் ஆட்சியைக் கவிழவிடாது காக்கப் போவதாகப் பறைசாற்றி, காவலர் பணி மேற்கொண்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணிக் கட்சியினரின் நிலைப்பாட்டைக் கேள்வியெழுப்பாமல் ஏற்றுக்கொள்ள முடியுமா?
இக்கட்சியினர்
ஆதரவு இல்லையெனில் ஆளுநர் ஆட்சியாம்! ஆளுநர் ஆட்சியெனில் பா.ச.க.
ஆட்சியாம்! ஆட்சி கவிழ்ந்தால் கவிழட்டுமே!
கவிழ்ந்தால் மறுதேர்தல் நடக்கட்டுமே! பா.ச.க.
என்ற பூச்சாண்டி, ஆளுநர் ஆட்சி என்ற பூச்சாண்டி, மறு தேர்தல் என்ற பூச்சாண்டி!
கொள்கையெனும்
முதலீடு எதுவுமற்ற ஒரு கட்சி; எவ்வித இலக்கும் நோக்குமற்ற ஒரு கூட்டம்; வெறும் ‘மாற்றம்’ என்ற வெற்று முழக்கத்தை மட்டுமே முன்வைத்து அரசியல் செய்கின்ற ஒரு கூட்டம்; இச்சதி வலையில் ‘தாமே’ ஏதோ ஒரு காரணத்தைக் கற்பித்து, ‘சுயநல நோக்கோடு’
வீழ்ந்து கிடக்கின்ற அவலத்தைச் சந்தித்து வருகிறோம். இக்கட்சியின் தோற்றம் சந்தேகத்திற்குரியது. இக்கட்சியின் ஆட்சி, தமிழ்நாட்டின் மிகப் பெரிய சோகமாகத்தான் இருக்கும். இக்கட்சி அமைக்கும் ஆட்சி நிலைக்க இக்கூட்டணிக் கட்சிகள் ஆதரவு அளித்ததாகச் சொல்லப்பெறும் காரணங்களுள் உண்மை கொஞ்சம்கூட இல்லை என்பதை வரலாறு சொல்லும்.
கொள்கைத்
தெளிவுள்ளவராகக் கருதப்பெறும் திருமாவளவனின் பேச்சில் சறுக்கல் தெரிகிறது என்பதை அண்மை நிகழ்வுகள் எடுத்துரைக்கின்றன. திராவிட முன்னேற்றக் கழகத்தின் நீண்ட நெடிய அரவணைப்பில் நடைபோடுவதாகச் சொல்லப்பெறும் இந்திய யூனியன் முசுலிம் லீக், மேற்கண்ட முழக்கங்களை முன்வைத்து அமைச்சரவையிலும் இடம்பெறுகிறது. தம் ஆதரவை உறுதிப்படுத்தும் இடதுகள், அ.தி.மு.க. கூட்டணிக்குள் இடம்பெற்றால்
ஆதரவு இல்லை என்ற ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறது. இந்நிலைப்பாடும் விந்தையானதே! தாமே ஓடோடிச் சென்று ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் கட்சி மௌனித்திருந்தால், த.வெ.க.
என்ன செய்திருக்கும் என்பதை அரசியல் அறிவே இல்லாதோர்கூட அறிவர். இவர்களின் ஆதரவு நிலையிலும் கூட அ.தி.மு.க.வைப் பிளவுபடச்
செய்து, அவர்களின் ஒரு பிரிவின் ஆதரவை நாடியதும், விஜய்
விரைந்தோடி சண்முகம் மற்றும் வேலுமணியை வாழ்த்தச் சென்றதையும் பார்த்தோமே!
பாரதிய
சனதாவின் ஆதரவை ஏற்பதும், அ.தி.மு.க.வை ஏற்பதும்
வேறு வேறல்லவே! பாரதிய சனதா கட்சியினர் ஆதரவை விஜய் ஏன் ஏற்கவில்லை? அக்கட்சியினரிடம் எண்ணிக்கை இல்லை, எண்ணிக்கை பலம் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?
சட்டமன்றத்தில்
பாரதிய சனதா இல்லை என்பது மகிழ்வைத் தரும் செய்தியே! குறிப்பிட்ட எண்ணிக்கை இருந்திருப்பின் விஜய் அவர்களின் உண்மை முகம் வெளிப்பட்டிருக்கும். ஏற்கெனவே கூறியது போன்று அ.தி.மு.க.வின் ஆதரவைப்
பெறுவதற்கும் எவ்வித வேறுபாடும் இல்லை. பாரதிய சனதாவின் ‘நட்புக் கட்சி’ என்று தி.மு.க.
கூட்டணியால் ஏற்கெனவே பட்டம் கட்டப்பட்ட எடப்பாடியாரின் அ.தி.மு.க.வை இரண்டாக்கி
ஆட்சியைத் தக்கவைக்கும் முயற்சியென்பது ஏற்கெனவே நாடு முழுவதும் பாரதிய சனதாவின் நடவடிக்கைகளுள்
ஒன்றுதானே! தனக்கு முழுப் பெரும்பான்மை இல்லாத நிலையில், கொள்கையற்ற அ.தி.மு.க.வை ஆசைகாட்டி,
இரண்டாகப் பிளக்கச் செய்து, ஆட்சியைத் தக்கவைக்கும் செயல் கீழ்த்தரமானது.
தோல்வியடைந்த
தி.மு.க. கூட்டணி,
வலுவான கூட்டணி என்று சொல்லப்பட்ட கூட்டணி. இது ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி அல்ல; தேசிய அளவில் கூட்டப்பட்ட ‘இந்தியா’ கூட்டணியின் ஒரு பெரிய அங்கம். தி.மு.க.
கூட்டணிக் கட்சிகள் கொள்கைக் கூட்டணிகள் என்று மக்களால் நம்பப்பட்டு வந்த நிலையில், ஒரு புதிய மாற்றுக் கட்சியொன்று அறுதிப் பெரும்பான்மை பெறவில்லை என்பதற்காக இதுவரை காத்து வந்த அரசியல் நிலைப்பாட்டை ஏதோ ஒரு காரணம் கண்டுபிடித்து நகர்ந்து
செல்வது அரசியல் நாகரிகம் அல்ல. தேசிய அளவில் மதவாத எதிர்ப்பு சக்திகளின் பலத்தை வலுவிழக்கச் செய்யும் செயலாகும்.
புதிய
தோற்றமாம் த.வெ.க.வின் ஆதரவு நிலைக்கு எத்தனையோ காரணங்களைத் தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகள் கூறலாம். ஆனால், இக்கட்சிகளின் நகர்வு திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தனிமைப்படுத்திவிடும். கூட்டணிக் கட்சிகளின் அரவணைப்பில் கொள்கை பலத்தோடு உறுதியாக நின்ற திராவிட முன்னேற்றக் கழகம் தனிமைப்படுவது தமிழ்நாட்டில் திராவிட அரசியலுக்கு உகந்ததல்ல.
தமிழ்நாட்டின்
திராவிட மாடல் அரசு விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதும் அல்ல; எனினும், வடவாரியத்தின் எதேச்சதிகாரப் போக்கை, மொழித் திணிப்பை, கூட்டாட்சியை மறுப்பதை, மாநிலங்களைப் பாகுபடுத்துவதை, மதத் தீவிரவாதத்தை எதிர்த்தல் எனும் கொள்கைகளைத் தீவிரமாக எதிர்ப்பதில் ஸ்டாலின் காட்டிய தீவிரம் பாராட்டிற்குரியது. தேர்தலில் தானெடுக்கும் போராட்டத்தை டெல்லிக்கு எதிரானது என்று சுட்டிக்காட்டி இவர் நடத்திய போர் முழக்கம் புதுமையானது. எனவேதான் தமிழ்நாட்டுத் தேர்தலில் போட்டியிட்ட பாரதிய சனதாவின் அனைத்துப் பெருமுகங்களும் தோற்றுப் போயின. ‘தேசிய சனநாயகக் கூட்டணி’ என்று பெருமையோடு அழைத்துக்கொண்ட இக்கூட்டணி அடையாளம் தெரியாமல் காணாமற்போயிற்று.
தமிழ்நாட்டுத்
தேர்தல் இப்படியொரு நம்பிக்கையை அளித்தாலும், தேர்தல் முடிந்த நிலையில் த.வெ.க.
எனும் கட்சியின் ஆட்சி நீடிக்க, தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகள் ஏதோதோ காரணம் கூறி ஆதரவளித்த செயல் வெறும் வரலாற்றுப் பிழையே. கூட்டணிக்
கட்சிகளின் ஒருமித்த ஆதரவு கொள்கை வழிப்பட்டதல்ல; இவர்கள் ஆதரவு இல்லையெனில் த.வெ.க.
எனும் கட்சியின் எக்கொள்கை மரித்துப் போகும் என்று இவர்கள் அஞ்சினர்?
அரசியல் என்பது, அதிகாரத்தை நோக்கிய பயணம். தேர்தல் என்பது, ஆட்சி அதிகாரமேற்றும் படிக்கட்டுகள். வாக்குகள் என்பது எண்ணிக்கை சேர்ந்த விளையாட்டு. சில நேரங்களில் வேகமாகப் படி ஏறியவர்கள் உண்டு. பல நேரங்களில் சறுக்கி விழுவோரையும் கொண்டதே தேர்தல் அரசியல். அரிதினும் அரிதாக நினையாதவை நடக்கும் அதிசயங்களும் நிகழ்வதுண்டு. தேர்தல்களில் ஒன்றும் ஒன்றும் இரண்டல்ல; மூன்று!
2026-ஆம் ஆண்டின்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்காளர் பட்டியல், சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) மேற்கொண்டபின்
நடைபெற்ற தேர்தலாகும். 2025, அக்டோபர் 27 அன்று தமிழ்நாடு வாக்காளர் பட்டியலில் 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தார்கள். 2026, பிப்ரவரி 23-இல் சிறப்புத் திருத்தத்தில் 97.37 இலட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டார்கள். இது விழுக்காட்டு
அடிப்படையில் 11.55% இது இந்திய
அளவில் அதிகபட்ச நீக்கம் எனத் தெரிகிறது. இதில் 27.53 இலட்சம் பேர் உரிமைகோரி மனு கொடுத்தனர். அதில் 4.23 இலட்சம் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. புதிய வாக்காளர் சேர்க்கையில் 18, 19 வயதினர் 12.51 இலட்சம்
பேர் சேர்க்கப்பட்டனர். பிப்ரவரி 2023 இறுதிப் பட்டியல்படி தமிழ்நாட்டில் 5.67 கோடி வாக்காளர்கள் இருந்தார்கள்.
தேர்தல்
திருவிழா நடந்தது. 35 விழுக்காடு வாக்குகள் பெற்று த.வெ.க.
வெற்றி பெற்றது. தமிழ் நாட்டில் 108 தொகுதிகளில் முதலிடம். இரண்டாமிட வாக்கு வித்தியாசம் ஐந்து ஆயிரத்திற்குள் இருந்தது. ஐந்து ஆயிரத்திற்குள் 61 தொகுதிகளும், இரண்டு ஆயிரத்திற்குள் 27 தொகுதிகளும், ஆயிரத்திற்குகீழ் 15 தொகுதிகளும், 500-க்கு கீழ் ஒரு தொகுதியும் அமைந்தது. ஓர் ஓட்டு வித்தியாசத்தில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி முடிவு மாறியது.
சிவகங்கை
மாவட்டம் திருப்பத்தூர் தொகுதிக்கான (தொகுதி எண் 185) தபால் வாக்கு, திருப்பத்தூர் தொகுதி (தொகுதி எண் 50) திருப்பத்தூருக்குத் தவறுதலாக அனுப்பப்பட்டது. தேர்தல் நடத்தும் அதிகாரி தொகுதி எண் பார்த்துத் தவறுதலாக வந்த வாக்கை நிராகரித்தார். தேர்தல் நடைமுறைகள் முடிந்தவுடன், தேர்தல் நடத்தும் அதிகாரியின் பணியும் முடிவுபெறும். ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்ற தி.மு.க.வின் மேனாள் அமைச்சர் பெரிய கருப்பன், சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார். வெற்றி பெற்ற வேட்பாளர் சட்டமன்றத் தீர்மானங்களில் வாக்கு அளிக்க இடைக்காலத் தடையுடன் தீர்ப்பு வந்தது.
வழக்கு
உச்ச நீதிமன்றம் சென்றது. உயர் நீதிமன்றத் தீர்ப்புக்குத் தடை விதித்ததுடன், தேர்தல் முறையீட்டு மனு மட்டுமே செய்ய இயலும்; இடையிட்டு ஆணை கோரும் மனு செய்ய முடியாது எனத் தீர்ப்பு எழுதப்பட்டது. மேலுமாக, அரசு ஊழியர்கள் த.வெ.க.வுக்கு மொத்தமாக வாக்களித்து விட்டார்கள் என்ற தகவலும் வழக்கம் போல் ‘ரூட் மாபியாவால்’ பரப்பப்பட்டன.
தற்போது தபால் வாக்குகள் தேர்தல் பணிக்குச் செல்லும் அரசு ஊழியர்களது வாக்குகள் மட்டுமல்ல, 85 வயதிற்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பித்து, வீட்டிலேயே வாக்கு அளிக்கும் வாக்குகளும் தபால் வாக்குகளில் உள்ளடக்கம். இவ்வாக்குகளில் தமிழ்நாடு அளவில் தி.மு.க.
163 தொகுதிகளில் 47%
பெற்றது. அ.தி.மு.க. 46 தொகுதிகளில் 30%, த.வெ.க.
25 தொகுதிகளில் 12% பெற்றது என்பதை
அரசியல் விமர்சகர்கள் அறிவர். இது குறித்த முழு விவரங்களைத் தேர்தல் ஆணையம் வெளியிட மறுக்கிறது. ‘உள்ளாட்சி’
என்ற பத்திரிகை தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு தொகுதியாக ஆராய்ந்து இவ்முடிவுகளை வழங்கியுள்ளது.
தபால்
வாக்குகளைப் போலவே கட்டுத்தொகை (Deposit) குறித்த
முடிவுகள் அ.தி.மு.க.வை அதிர்ச்சிக்குத்
தள்ளியுள்ளது. 19 தொகுதிகளில் அ.தி.மு.க.வும், பா.ம.க. 2 தொகுதிகளிலும்,
பா.ச.க. 5 தொகுதிகளிலும்,
அ.ம.மு.க.
6 தொகுதிகளிலும், ‘நாம் தமிழர்’ போட்டியிட்ட 234 தொகுதிகளிலும் ஆறில் ஒரு பங்கு வாக்குகளைப் பெற இயலவில்லை. அனைத்து வேட்பாளர்களும் கட்டுத்தொகைகளை இழந்தார்கள். தி.மு.க.
கூட்டணி மற்றும் த.வெ.க.
எல்லாத் தொகுதிகளிலும் கட்டுத்தொகை பெற்று சாதனை புரிந்தன.
2026 - தமிழ்நாடு சட்டமன்றத்
தேர்தல் புள்ளி விவரங்கள் பல அதிசயங்களையும் ஆச்சரியங்களையும்
முன்னிறுத்துகின்றன. தமிழ்நாட்டில் அதிகமான 79 வேட்பாளர்கள் போட்டியிட்ட கரூர் தொகுதியில் த.வெ.க.வுக்கும் தி.மு.க.வுக்கும் பெருந்துயரச் சம்பவத்திற்கான நீதி கிடைக்கவில்லை. கரூர் மக்கள் அ.தி.மு.க.-விற்கு
வாக்களித்து விட்டார்கள்.
தமிழ்நாட்டில்
தாமரை 33 தொகுதிகளில் மலர முயற்சித்து, தனிநபர் செல்வாக்கால் ஒற்றைத் தாமரையாகப் பூத்தது. மோடியின் ஏழுமுறை வருகையும், ஆறு மாநில பா.ச.க.
முதல்வர்களின் பிரச்சாரமும் வீணாயிற்று. புதிதாகத்
தொடங்கப்பட்ட த.வெ.க.விடம் 2001 சட்டமன்றத் தேர்தல் ஒப்பீட்டின்படி தி.மு.க.
14% வாக்குகளை இழந்துள்ளது. அ.தி.மு.க. வாக்குகளில்
12.5%, ‘நாம் தமிழர்’
3% வாக்குகளும் இழந்து, அவை த.வெ.க.வுக்குத் திசைமாறியது. த.வெ.க.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பெரும்
வெற்றிக் கொடி நாட்டியது.
தமிழ்ச்
சமூகத்தில் பின்தங்கிய எஸ்.சி. மற்றும் எஸ்.டி. மக்களுக்காக 46 தொகுதிகள் தனித் தொகுதிகளாக உள்ளன. இவை தவிர நான்கு பொதுத் தொகுதிகளில் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். ஆக, மொத்தம் 50 தொகுதிகளில் கட்சி வாரியாக த.வெ.க.
28 தொகுதிகளிலும், அ.தி.மு.க. 11 தொகுதிகளிலும், தி.மு.க.
7 தொகுதிகளிலும், விடுதலைச் சிறுத்தைகள் 2 இடங்களிலும், காங்கிரஸ் ஓர் இடத்திலும், மார்க்சிய பொதுவுடைமைக்
கட்சி ஒரு தொகுதியிலும் வாகை சூடினார்கள்.
2026, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சிறுபான்மை மக்களின் வாக்கு மதச்சார்பற்றக் கூட்டணிக்கு என்ற போக்கு மாறியுள்ள உண்மையை ஏற்றுக்கொள்ளவேண்டும். இருப்பினும், 2021-2026 பேரவையில் இருந்த சிறுபான்மையோர் 15 என்ற எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. கிறித்தவர்கள்
15 பேர் சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கட்சிவாரியாக த.வெ.க.வில் பத்து பேரும், தி.மு.க.
வில் 3 பேரும், அ.தி.மு.க.வில் ஒருவரும், காங்கிரஸ் கட்சியில் மூவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
இசுலாமியர்
9 பேர்
சட்டப் பேரவை உறுப்பினர்களாக வெற்றி பெற்றுள்ளனர். கட்சிவாரியாக த.வெ.க.வில் மூன்று
பேரும், தி.மு.க.வில் மூன்று பேரும், இந்திய யூனியன் முசுலிம் லீக்கில் இருவரும், காங்கிரஸ் கட்சியில் ஒருவரும் என்பதும் சிறுபான்மையோர் பங்கேற்பாகும்.
தேர்தல்
வாக்கு எண்ணிக்கை பரபரப்பு, மந்திரி சபை அமைப்பு
என்ற காலத்தில்
வெளிநாட்டு வாக்காளர்கள் என்ற பிரச்சினை பூதாகரமாய் கிளம்பியது. அவர்கள் போட்ட ரீல்ஸ், அதிரடி வெறுப்பு பேச்சுகள், சென்னை மற்றும் திருச்சி விமான நிலையக் குடியேற்றப் பிரிவு அதிகாரிகளால் முடித்து வைக்கப்பட்டது. கனடா, ஆஸ்திரேலியா, இலங்கை, இங்கிலாந்து, இந்தோனேசியா நாட்டை சார்ந்த 30 வெளிநாட்டுக் குடிமக்கள் இந்தியாவில், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்த
குற்றத்திற்காக வழக்கில் மாட்டினார். அவர்கள்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பயணங்கள் முடிவு பெற்றன. வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றபின் வாக்களிக்கக் கூடாது, இந்திய அரசின் அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தக்கூடாது என்ற விதிமுறை மீறல் தண்டனைக்குரிய குற்றமாகப் பதிவானது. அவர்களின் விரல்களில் தேர்தலின் போது வைக்கப்பட்டமையே அடிப்படை முதல் ஆதாரமானது.
2026, தேர்தல் புள்ளி
விவரங்களை ஆராயும் போது தேர்தல் ஆணையம் தபால் வாக்குகள், வேட்பாளரின் மதம் சார்ந்த விவரங்கள், கல்வித்தகுதிகள், சொத்து விவரங்கள், குற்றப் பின்னணிகள் என்பதில் தேர்தல் ஆணைய விவரங்கள்,
தரவுகள் வெளிப்படையாக இல்லை. வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த ஐயப்பாடுகளுக்கும் உரிய பதில்கள் இல்லை. முடிவில்
நம் நாட்டில் தேர்தல்கள் நியாயமாக நடக்கின்றனவா? என்ற அச்சமே எழுகிறது.
புத்தகங்கள் மற்றும் வாசிப்பின் முக்கியத்துவம் பற்றி திருத்தந்தை லியோ அவர்கள் மிக அருமையான கருத்துகளை முன்வைத்துள்ளார்.
“புத்தகங்கள் சிந்திப்பதற்கான வாய்ப்பை வழங்குகின்றன; டிஜிட்டல் யுகத்தில் நல்ல வாசிப்பே ஆழ்ந்த சிந்தனை, ஆய்வு மனப்பான்மை, விமர்சனப் பார்வை ஆகியவற்றை மேம்படுத்தும். நல்ல புத்தக வாசிப்பு அறிவை வளர்ப்பதோடு, ஒருதலைப்பட்சக் கருத்துகள் மற்றும் எதிர்மறை எண்ணங்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது. குறுகிய மனநிலையிலிருந்து விடுபட வாசிப்பு ஒரு மாமருந்து.
புத்தகங்கள்
மற்றவர்களை, சமூகத்தைச் சந்திப்பதற்கான களமாக அமைகின்றன. எண்ணங்களும் கருத்துகளும் அனுபவங்களும் பகிரப்படுவதன்
மூலம் வாசகர்கள் நூல் ஆசிரியருடனும், நூலாசிரியர் வாசகர்களுடனும் கருத்துப் பரிமாற்றம் செய்கிறார்கள்.
திருத்தந்தை
பிரான்சிஸ் கூறியது போல, புத்தக வாசிப்பால் சந்திப்பு கலாச்சாரம் மேம்படும். புத்தகங்கள் மக்களிடையே பாலங்களை உருவாக்கவும், உரையாடலை ஊக்குவிக்கவும், புரிந்துணர்வை விரிவுபடுத்தவும் உதவும்.
புத்தகங்கள்
நற்செய்தி அறிவிப்பதற்கான ஒரு வழியாகவும் இருக்கிறது. ஆன்மிக எழுத்துகள், நம்பிக்கை தரும் சிந்தனைகள், புனிதர்களின் வரலாறுகள் மனித இதயத்தை ஆழமாகத் தொடக்கூடியவை.
எனவே,
நற்செய்திப் பணியில் ஈடுபட்டிருப்போர் சிறந்த புத்தக வாசிப்பாளர்களாக இருக்கவேண்டும்.
புத்தகம்,
நூலகம், வாசிப்புக் கலாச்சாரம் போன்றவற்றிற்கு நம் குடும்பங்களில், பங்கில், கல்வி நிறுவனங்களில் எத்தகைய முக்கியத்துவம் கொடுக்கிறோம்?
ஆகவே,
வாசிப்பை நேசிப்போம்,
வாசிப்பால் உயர்வோம்.”