மனித மனம் எதிலும் நிறைவு கொள்ளாது; குறைவில் தொக்கி நிற்கும் நிறைவையே தேடும். 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களத்தில் எல்லாம் இருக்கிறது; ‘ஏதோ ஒன்று குறைகிறதே?’ எனும் நிலை உள்ளது. வாக்காளர்களில் 15 முதல் 20 விழுக்காட்டினர் இந்த மனநிலையில் இருக்கிறார்கள். எந்தக் கட்சியையும் சாராத அவர்களே தேர்தல் வெற்றி-தோல்விகளை நிர்ணயம் செய்கிறார்கள். மதில்மேல் உள்ள பூனை காரணமின்றி அல்லது காரணங்களோடு இடதோ வலதோ குதிக்கலாம்.
தேர்தல்
களப் படிநிலைகள் என்பது கூட்டணி அமைப்பு, வேட்பாளர் அறிவிப்பு, தேர்தல் அறிக்கை வெளியீடு, பரப்புரை செய்தல் என்பதே. தேர்தல் களத்தில் கூட்டணி என்பதே இணைந்த கட்சிகளின்
செல்வாக்கை உயர்த்தி,
சேர்ந்த கூட்டணியின் வெற்றியை உறுதி செய்கிறது. மேற்கு வங்கத்தில் 1977 முதல் 2011 வரை இடது முன்னணி 34 ஆண்டுகள் கூட்டணியாகத் தேர்தலைச் சந்தித்து பெரும் வெற்றியை ஈட்டியது. மேற்கு வங்க இடதுசாரிக் கட்சிகளை
ஒருங்கிணைத்து 1977 முதல் 2000 ஆண்டு வரை முதலமைச்சராக, அசைக்க முடியாத சக்தியாகத் திகழ்ந்தவர் ஜோதிபாசு. அதே அரசியல்
சூத்திரம் 2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசியலில் நடந்தது. சமூக நீதி, சமத்துவம், சுயமரியாதை, மொழிப்பற்று, இன உரிமை, மாநிலச்
சுயாட்சி என்ற கொள்கை கொண்ட இடதுசாரிக் கட்சிகள் ஓரணியில் இணைந்தனர். அன்றைய ஆளும் அ.தி.மு.க.-வுக்கு எதிராகப்
போராட்டக் களத்தில் தொடங்கிய கூட்டணி, 2026 தேர்தல் களம் வரை சிறு சிறு சலசலப்புகள் இருப்பினும் தொடர்கிறது.
‘தேர்தல் களத்தில் சமபலம், சமவாய்ப்பு, உள்ளதா?’ எனும் கேள்விக்கு விடைகள் ‘இல்லை’ என்பதே பதிலாகும்.
தேர்தல் பெரும் செலவு செய்யும் கோடீஸ்வரர்களின் கையில்
உள்ளது. சாமான்ய மக்கள் பார்வையாளர்களாக இருக்கலாம்; வாக்காளர்களாக இருக்கலாம்; ஆனால், பங்கேற்பாளர்களாக இருக்க வாய்ப்பும் இல்லை, வசதியும் இல்லை. 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களில் சிறுபான்மையோர் மற்றும் பெண்களுக்கான பங்களிப்பு இல்லை. இசுலாமிய சமுதாயம், விடுதலைக்கு முன்னிருந்து களப்பணியாற்றிப் போராடியதால் மதச்சார்பற்ற கூட்டணியில் 11 இடங்களில் போட்டியிடுகிறார்கள். என்.டி.ஏ. கூட்டணியில்
ஒரேயொருவர் மட்டுமே போட்டியிடுகிறார். இசுலாமிய சகோதரர்கள் “எடப்பாடி பழனிச்சாமி தனது
நான்கரை ஆண்டுகால ஆட்சியில் எங்களுக்கு மந்திரி சபையில் இடம் தராதவர்தானே!” எனக் கொதிக்கிறார்கள். அது அவரது கூட்டணிக் கட்சியான பா.ச.க.
கட்சியின் நிலையின் பிரதிபலிப்பாகக்கூட இருக்கலாம்.
கிறித்தவச்
சிறுபான்மையோர் பத்து ஆண்டுகளாக அரசியல் பேசுவதைக் காண்கிறோம். அதில் நமது ‘நம் வாழ்வு’ வார இதழ் கொடுத்த அரசியல் விழிப்புணர்வும் அடிப்படைக் காரணம் என்றால் மிகையில்லை. 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற கட்சிகளின் கிறித்தவ வேட்பாளர் இனிகோ இருதயராஜ் குறிப்பிடத்தக்கவர். அவர், “நான் ஓர் இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெல்வேன்”
என்று கூறுகிற தன்னம்பிக்கை, நமது கிறித்தவ வாக்குகளின் கூட்டுச் சக்தி தவிர,
வேறு எதிலும் இல்லை எனக் கட்டியம் கூறலாம்.
2026 தமிழ்நாடு சட்டமன்றத்
தேர்தலில் பெண்களுக்கான சமவாய்ப்பு எல்லாக் கூட்டணிகளிலும் மறுக்கப்பட்டுள்ளது. ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், நான்காவது அணியான ‘நாம் தமிழர்’ கட்சியில் 50% பெண் வேட்பாளர் என்ற நிலையைப் பாராட்டுவோம், வாழ்த்துவோம்.
இனி
தேர்தலின் அடுத்த நிலையான தேர்தல் வாக்குறுதிகள் குறித்துப் பார்க்கலாம். அனைத்துக் கூட்டணிகளின் வாக்குறுதிகளும், “நீ என்னைப் பார்த்துப்
படி எடுத்தாய்”
எனக் குழந்தைத்தனமான குற்றச்சாட்டில் நிற்கிறது. சங் பரிவார் மற்றும் வலதுசாரிகள் அரசின் இலவசங்களை எதிர்க்கிறார்கள். மாநிலக் கட்சிகள், மாநில அரசுகள் மக்கள் நலத் திட்டம் என்ற பெயரில் தேர்தல் வாக்குறுதிகள், திட்டங்கள், மாநில அரசுகளின் கடன் சுமை உயர்கிறது என வாதம் வைக்கிறார்கள்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கும் இலவசத் திட்டங்களில் உடன்பாடு இல்லை. ஆனாலும், மாநிலத் தேர்தல் வெற்றிகளுக்காக பா.ச.க.வும் இலவசத்
திட்டங்களுக்குக் கட்டாயமாக உட்படுகிறது. அதுவே தேர்தல் எனும் வாக்கு வங்கி அரசியல் எனலாம்.
தமிழ்நாட்டுத்
தேர்தல் களத்தில் அ.தி.மு.க.வின் குளிர்சாதனப்
பெட்டி என்ற வாக்குறுதியும், தி.மு.க.வின் ரூபாய் 8000-க்கான மின்னணுச் சாதன வீட்டு உபயோகப் பொருள் கூப்பனும் மக்கள் மனத்தில் பதிவதைக் களத்தில் கண்கூடாகக் காண்கிறேன். மகளிர் உரிமைத் தொகை உயர்வு 2000, 2500, 3000 என்ற ஏல உயர்வும் எல்லாக் கூட்டணிகளையும்
ஒரே நேர்கோட்டில் நிறுத்துகிறது.
வாருங்கள்...
தேர்தல் பரப்புரைக்குக் காது கொடுப்போம். தமிழ்நாட்டின் எதிர்க்கட்சிகள், தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை, பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்கிறார்கள். தமிழநாடு அரசை நடத்த முடியாமல் நாளொரு மேனி, பொழுதொரு வண்ணம் தலைவலி கொடுத்தவர் மேனாள் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி. அவர் தனது பணிமாற்றத்திற்குச் சில நாள்களுக்கு
முன்பு, “தமிழ்நாட்டுப் பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம்” எனச் சான்று வழங்கி உள்ளார்.
தேசியக்
குற்றப் பிரிவு தரவுகளின் அடிப்படையில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், போதைப் பொருள் நடமாட்டம், போதைப்பொருள் பயன்பாடு என்ற பட்டியலில் தமிழ்நாடு முதல் பத்து இடங்களில் இல்லை என்பதே உண்மை. முதல் பத்து இடங்களில் பா.ச.க.
ஆளும் மாநிலங்களே உள்ளன என்பது மறுக்க முடியாத நிலை. கடந்த காலங்களில் அ.தி.மு.க. ஆட்சியில் குட்கா
வழக்கு, ரெய்டு, சுகாதாரத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், தலைமைச் செயலகம்
வரை நடந்ததை மறந்து, என்.டி.ஏ. கூட்டணியினர்
வெற்றுக் கூச்சலிடுகிறார்கள். இது சம்பந்தமான அமைச்சர் மீதான கோப்பு ஆளுநர் மாளிகையில் தூங்குகிறது.
‘இந்தியா’ கூட்டணியினர் தமிழ்நாடு தேர்தல் களத்தில் மதச்சார்பற்ற கூட்டணி என்ற பெயரில் மறுக்கப்படும் மாநில உரிமைகள், நிதி ஆதாரங்கள், திட்டங்கள் என்பதில் வலுத்த வாதங்களை வைக்கிறார்கள். ஜி.எஸ்.டி.
வரிவிதிப்பு நடைமுறை செய்யப்பட்ட பின்பு மாநில அரசின் வருவாய் 95% குறைந்துவிட்டது. ஒன்றிய அரசு
வரிப்பகிர்வில் மாற்றாந்தாய் மனப்பான்மையில் செயல்படுகிறது. பா.ச.க.
மற்றும் பா.ச.க.
கூட்டணி ஆட்சி நடைபெறும் மாநிலங்களுக்கு வாரி வழங்குகிறது. தமிழ்நாடு செலுத்துகிற ஒரு ரூபாய்க்கு 23 காசுகள் திருப்பிக் கிடைக்கின்றன. பா.ச.க.வின் இரட்டை இஞ்சின் ஓடுகிற பீகாருக்கு, ஒரு ரூபாய் பெற்றால் 7 ரூபாய் திருப்பித் தருகிறது. இருந்தாலும், பீகார் மாநிலத்தோடு தமிழ்நாட்டை ஒப்பீடு செய்தால், ஐம்பது ஆண்டுகள் வளர்ச்சியில் பின்தங்கி இருக்கிறது என்பதே கண்கூடு. பலமுறை வட மாநிலங்களில் பயணம்
செய்தவன் என்ற முறையில் கூறுகிறேன்: ‘தமிழ்நாடு பூலோக சொர்க்கமாக உள்ளது.’ நாம் வளர்ச்சியின், சமூக அமைதியின் பாதையில் தெளிவாகப் பயணிக்கிறோம்.
தமிழ்நாட்டுத்
தேர்தல் களத்தில் மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது அணிகள் உள்ளன. இவர்கள் கட்டுத்தொகையைத் தவறவிடுவோம் எனத் தெளிவாகத் தெரிந்திருந்தும் களம் காண்கிறார்கள், மாயம் காட்டுகிறார்கள், மாயமானாக ஓடுகிறார்கள்.
விலைமதிப்பில்லா
நம் சனநாயக உரிமையான நம் வாக்குகளை நாம் இவர்களுக்கு அளித்து, வீண் விரயம் செய்யக் கூடாது. தமிழர்களின் வலிமைமிகு கூட்டு மனசாட்சி கூறுகிறது: சமூக நீதி, சமதர்மம், சமயச்சார்பின்மை கொண்ட வெற்றிப் பாதையில் நட்சத்திரமாய் உள்ள மதச்சார்பற்ற கூட்டணியை ஆதரிப்போம்.
தமிழ்நாடு ஒரு புவிப்பரப்பு மட்டுமல்ல; புவிப்பரப்பு மட்டுமாயின், அதன் வரையறுக்கப்பட்ட எல்லைகளை எல்லைக்கோடுகளால் நிர்ணயிக்கலாம். காவலர்களால், அவர்கள் தரித்த கவசங்களால் காத்துக்கொள்ளலாம்.
வாழும்
தேசத்திற்கு ஆபத்து என்பது பகை அரசுகளால் வரும் என்பதும், எதிர் அரசின் படைபலத்தால் எதிர்ப்படை வெல்கையில், நாட்டு வளம் சூறையாடப்படும் என்பதுவும், தமக்குத் தமக்கென்றிருந்த நாடு தம் கை நழுவிப் போகையில்
சொந்தம் கொண்டாடி மகிழ்ந்த நாட்டு மக்கள் கையறு நிலைக்குத் தள்ளப்படுவதையும் வரலாற்றில் பார்த்திருக்கிறோம். இப்போதும் பார்த்தும் வருகிறோம்.
இந்தியா
என்ற நிலப்பரப்புள் ஒருங்கிணைப்பட்ட தமிழ்நாட்டின் எல்லைக்கோட்டை நிர்ணயிக்கவும் காக்கவும் இன்று தமிழ்நாடு அரசு தனிக் காவல்படைகளை எல்லையோரத்தில் நிறுத்திட அவசியம் இல்லை; அப்படித் தேவைப்படுமாயின் தமிழ்நாடு ஏற்றிருக்கும் ‘இந்தியா’ எனும் ‘தேசங்களின் நாடு’ அப்பொறுப்பை ஏற்கும்.
இன்றைய சவால்
என்ன?
தமிழ்நாடு
எல்லையோரப் பாதுகாப்புப் பற்றி இன்று எங்கும் கவலைகொள்ள வேண்டுவதில்லை. இந்திய ஒன்றியமே பாதுகாப்புப் பணியை மேற்கொள்ளும். ஆனால், எல்லையோரப் பாதுகாப்பைத் தாண்டி, தமிழ்நாடே பறிபோய்விடுமோ என்ற அச்சம் இன்று எழுந்துள்ளது. தமிழ்நாடு என்பது அதன் நிலப்பரப்பைச் சொல்லவில்லை. தமிழ்நாட்டின் தனித்துவப் பண்புகளான கலாச்சாரம், கலாச்சாரத்தின் பெரும் பகுதியான மொழி, வாழ்வு அறங்கள் என்பனவெல்லாம் கபளீகரம் செய்யப்பட்டுவிடுமோ என்ற பேரச்சம் எழுந்துள்ளது.
‘இந்தியம்’
என்று அழைக்கப்பட்ட இந்த இந்தியத்துள், இந்திய நாட்டின் பன்மைக் கலாச்சாரப் பண்புகள் அபகரிக்கப்பட்டு, சீரணிக்கப்பட்டு, அடையாளமே தெரியாமல், சிதைவுண்ட நிலையில், தமிழும் தமிழ் மண்ணின் கலாச்சாரச் செழுமைகளும் வடவர் ஊடுருவலால் விழுங்கவிருந்த காலத்தில் தமிழ்நாடு ஆடித்தான் போனது. திராவிடக் குடும்பத்து மொழிகள் பல வழக்கிழந்த சமஸ்கிருத
மொழித் தாக்கத்தால் சிதைந்து போயின. தமிழையும் தாக்கியிருந்த நிலையில், தனித்தமிழ் இயக்கம் தோன்றியது. ‘தெய்மொழி’
என்றும் ‘நீச பாஷை’ என்றும் பிரித்துக் கேலி செய்யப்பட்ட நிலையில், வடமொழியே உலகத் தாய் மொழியென்று புனையப் பெற்றிருந்த சூழலில், திராவிட மொழிகளைத் தனியே இனங்கண்டு அடையாளப்படுத்தி, திராவிட மொழிக் குடும்பத்தைக் கட்டமைத்து, திராவிடத்திற்குத் தனி மதிப்பையும் அடையாளத்தையும் தந்தவர் கால்டுவெல் எனும் பேரரசன்.
ஒரு
கிறித்தவ மதப்போதகர் தம் பணியின் எல்லையையும் மீறி செயல்பட்டதால் திராவிடம் அடையாளப்படுத்தப்பட்டது. திராவிடத்துள் இயங்கிய மொழிகளுள் ஒன்றான தமிழ் மேன்மையுறும் வகையில், இந்திய மொழிகளுள் தமிழ் மட்டுமே தனித்தியங்கவல்லது என்ற உண்மையையும் அறிவியல்பூர்வமாக ஆய்ந்தறிந்து வெளியிட்டார் அவர். மறைப்பணியாளர் ஒருவர் மிகவும் பின்தங்கிய பகுதியொன்றில் என்ன வசதிகளோடு வாழ்ந்திருக்க முடியும்? அவர் பணி செய்த பணித்தளங்களில் வாழ்ந்த நாடார் மக்களின் வாழ்நிலையை ஆய்வு செய்து எழுதியுள்ள ‘திருநெல்வேலி சரித்திரம்’, ‘சாணார்கள்
சரித்திரம்’, ‘திராவிட
மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்பனவெல்லாம்
ஒவ்வொரு தமிழனும் நினைவில் கொள்ளவேண்டிய ஒன்று. இன்றைய இந்துத்துவர்கள், திராவிடத்தை அடையாளப்படுத்திய கால்டுவெல் அவர்களை ‘பிரிவினைவாதி’ என்றழைத்தனர்.
இறையியலையும்
மானுடவியலையும் மொழியியலையும் ஒரு தனிமனிதன் கற்றறிந்து, தான் தெரிவு செய்து பணியாற்றிய நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படுத்த முடியும் என்று நிரூபித்த கால்டுவெல் பற்றித் தமிழனுக்குத் தெரியாது. கிறித்தவ மறைப்பணியாளராம் இவர் பெயரை எத்தனை கிறித்தவர் அறிவர்?
இன்று
நாம் பேசும் திராவிட மாடல், கால்டுவெல் கொடுத்த கொடை. தமிழ்நாட்டில் தோன்றிய திராவிடச் சித்தாந்தத்திற்கு உள்ளடக்கம் தந்தவர். நீதிக்கட்சியென்றும், பிராமணரல்லாதோர் இயக்கம் என்றும், பிற்படுத்தப்பட்டோர் இயக்கம் என்றும், தனித்தமிழ் இயக்கம் என்றும், சுயமரியாதை இயக்கம் என்றும் தோன்றிய அனைத்து இயக்கங்களுக்கும் வடிவமும்
உள்ளடக்கமும் தந்தவர் இவர். திராவிடத்தைப் புரிந்து அதற்கு ஏற்றம் தந்த இந்த மனிதரை, திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், தேசிய முற்போக்குத் திராவிட முன்னேற்றக் கழகம் என ‘திராவிட’ எனும் முன்னொட்டைக் (adjustive) கொண்டு இயங்கும் கட்சிகளுக்கு ஓர் ஏற்புடையமையைத் (Legitimacy) தந்தவர்
கால்டுவெல். தமிழ்நாட்டில் தமிழ்த்தேசியம் பேசி வாக்குகளைத் தேடியலையும் ஒருவர், கால்டுவெல் அவர்களை வெறும் மதம் மாற்றுபவராக மட்டுமே சித்தரிக்கிறார்.
திராவிட
மாடல் அரசினைத் தமிழ்நாட்டில் நடத்துவதாகச் சொல்லி வருகிறார் தமிழ்நாடு முதல்வர். திராவிடத்தை முதன்மைப்படுத்தும் முதல்வருக்கும், அவரின் இயக்கம் சார்ந்தோருக்கும் திராவிடம் என்ற சொல்லாக்கம் பற்றிய தெளிவு இல்லாமல் இருக்கலாம்; தெரிந்தோ, புரிதல் இல்லாமலோ உரத்து உச்சரிக்கப்படுகிறது என்பதால் மகிழ்ச்சியே! மட்டுமின்றி, நடைபெறவிருக்கும் தேர்தல் தமிழ்நாட்டிற்கும் புதுடெல்லிக்குமான போர் எனறு அறிவித்துள்ளமை பாராட்டிற்குரியது.
திராவிட
இயக்கமும், சமூக நீதி இயக்கமும் என்ன காரணம் பற்றித் தோற்றம் எடுத்தனவோ, அக்காரணங்கள் அனைத்தும் இன்றும் பெரியார் தோன்றிய தமிழ் மண்ணில் ஆதிக்கம் செலுத்தவே முயன்று வருகின்றன என்பதே உண்மை.
தமிழ்நாடு வெல்லவேண்டும்
விடுதலை
பெற்ற இந்தியா கண்ட சனநாயகம் எனும் கனவு, பல சமயங்களுடைய நாட்டில்
பல்சமய நல்லிணக்கமும் சமத்துவமும் பேண, மதச்சார்பின்மையைப் பேணவேண்டும் என்ற கனவு, பொருளாதார ரீதியாக ஆதிக்க நாடுகளாகப் பிளவுபட்டிருந்த காலத்திலும், சோசலிசத்தை உயர் கொள்கையாகக் கொண்டிருந்த இந்திய அரசும், அவ்வரசுக்குத் தலைமையேற்ற பண்டித நேருவும், ‘அணி சேராமை’ என்ற நிலைப்பாட்டில் உறுதியாக நின்று இந்திய இறையாண்மையைக் காத்த இந்தியாவின் சனநாயக அரசு, இன்று அதன் அழகுக்கு வலுசேர்த்த அனைத்துக் கவசங்களையும் இழந்து நிர்க்கதியாகியுள்ள நிலை.
இன்றைய
ஒன்றிய அரசு தமிழ்நாட்டின் தனித்துவத்தைப் பேணும் அரசல்ல; கார்ப்பரேட்டுகளின் நலன் நாடும் ஓர் அரசு. இந்த அரசு, சமூக நீதி காக்கும் அரசாக இருக்க முடியாது. திராவிடம் பேணிய சமூக நீதியை மறுக்கும் ஒன்றிய அரசு சனநாயகப் பண்பை நாளும் மறுக்கும் நிலையில், இதனை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்கமுடியாது. பன்மையை மறுத்து, ஒற்றையைப் பேணும் ஓர் அரசு, சனநாயகத்திற்கு எதிரான எதேச்சதிகார அரசாகத்தான் இருக்க முடியும்.
தமிழ்நாட்டில்
எண்பதுகளில் மண்டைக்காடு கலவரத்தைத் திட்டமிட்டு உருவாக்கி அரசியல் ஆதாயம் காண முயன்று, இன்று ஆட்சியில் வெற்றியும் கண்டுள்ளது. இன்று குமரி மண் அமைதிப் பூமி அல்ல; ஒடுக்கப்பட்ட மக்களை மத ரீதியாகப் பிளவுபடுத்தி,
திட்டமிட்டு நடத்தப்பட்ட பகை அரசியலால், இந்த மண் குமரி காவிமயமாகியது. இன்று திருப்பரங்குன்றத்தை மையப்படுத்தி மேற்கொள்ளப்பெறும் பொய்ப்பரப்புரைகளால், தமிழர் முகமான முருகப் பெருமானைக் காவியாக்கவும் அதன்மூலம் வாக்கு அரசியலில் வெற்றிபெறவும் முயற்சிகள் திட்டமிட்டே நடத்தப்பெறுகின்றன.
தமிழ்நாட்டை
ஆண்ட ஒரு கட்சியும், அதன் கூட்டணிக் கட்சிகளும் மதவாதக் கட்சிகளல்ல; ஆனால், அரசியல் இலாபம் கருதி, அதுவும் தி.மு.க.
என்ற ஒரே அணியை வீழ்த்துதல் என்ற ஒற்றை நோக்கில் அணிதிரண்டுள்ள கட்சிகள் யாரை நியாயப்படுத்துகின்றன? எந்தக் கோட்பாட்டிற்குத் துணை நிற்கின்றன?
சனநாயகம்
மக்களின் பங்கேற்பை, சமப் பங்கேற்பை உறுதிசெய்யும் என்பர். இந்தச் சமப் பங்கேற்பில் மதச்சிறுபான்மையினர் அரசியல் ரீதியாக ஒதுக்கப்படுவதும் ஒடுக்கப்படுவதும் குறித்து எங்கேயாவது அல்லது எப்போதாவது இவ்வணிகள் கவலைப்பட்டதுண்டா? குரல்
எழுப்பியதுண்டா?
தமிழ்நாட்டில்
கிறித்தவருக்கென்று தனிக்கட்சி இல்லை; அது தேவையும் இல்லை. இன்றைய ஒன்றிய அரசு, மதச்சிறுபான்மையினரை ஏற்கும் அரசியல் என்பதனை அனைவரும் அறிந்த நிலையில், கிறித்தவர்கள் இவ்வணியினரை ஆதரிக்க மாட்டார்கள் என்பதே உண்மை. கிறித்தவர்கள் கொலை செய்யப்பட்ட ஸ்டான் சாமியை மறவார்; மண்டைக்காட்டையும், ஒடிசாவின் காந்தமாலையும், கொலை செய்யப்பட்ட அருள்பணியாளர் அருள்தாசையும், அருள்சகோதரி இராணி மரியாவையும் மறவார்கள்.
கிறித்தவப்
பெயர் வைத்திருப்பதால், கிறித்தவர் வாக்குகளைப் பெற ஓடி ஓடித் திரியும் சந்தர்ப்பவாதிகளையும் நாம் புரிந்துகொள்வோம். ஒன்றிய அரசின் சிறுபான்மைச் சமயங்களின் இருப்பு பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல், ‘கொள்கை எதிர்ப்பு’
என்ற ஒரே சொல்லை மட்டும் மீண்டும் மீண்டும் உச்சரித்து, ஒன்றிய அரசின் எந்தக் கொள்கையையும் விமர்சிக்கத் திராணியற்றவர்களை நாம் கண்டுகொள்ள வேண்டுவது கடமையாகும்.
இசுலாமியர்
எனும் ஒற்றைச் சமய எதிர்ப்பில், அரசியல் நடத்தும் ஒன்றிய அரசின் போக்கைப் புரிந்துகொண்ட இசுலாமியர், அதன் எதிர்ப்பில் தீவிரம் கொண்டுள்ளனர்.
தமிழ்நாட்டில்
பல பிரிவுகளாக, கட்சி ரீதியாக இவர்கள் பிரிந்து நிற்பினும், தமிழ்நாட்டுத் தேர்தலில் பிரிவுகள் அனைத்தும் மதச்சார்பற்ற கூட்டணியுள் அணி சேர்ந்திருப்பதைப் பார்க்க முடிகிறது.
அணிகள் பலவாயினும், நோக்கம் ஒன்று என்பதனால் பிளவுபடாது நிற்கும் போக்கு மகிழ்ச்சி தருகிறது.
தமிழ்நாடு
தனித்து நின்று, தன் அடையாளத்தைக் காக்கவேண்டிய தருணம் இது. எப்போதும் வடவர் ஆதிக்கத்தை, வடவர் மொழியை, வடவரை முக்கியப்படுத்துவோரின் மேலாதிக்கத்தை (Hegemony) எதிர்த்து
வெற்றி கண்டு வரும் தமிழ் மண் வெற்றிபெறும்.
ஆம், வெல்லும்!
தமிழ்நாட்டில் தேர்தல் களத்தைவிட, தேர்தல் கூட்டணி அமைப்பே பெரும் சவால். தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. என இருபெரும் கழகங்களும் சந்தித்த அழுத்தங்கள் பெரும் துன்பவியல். தேசியக் கட்சிகள் எனும் காங்கிரஸ் மற்றும் பா.ச.க. கட்சிகள் மாநிலக் கட்சிகளை நசுக்கிப் பிதுக்கிவிட்டன. தி.மு.க.வின் கனிமொழி கருணாநிதி காங்கிரஸ் கட்சியிடம் தூது போனார். காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர், கே.சி.வேணுகோபால், கீரிஷ் சோடங்கர் எனத் தி.மு.க.விடம் ‘த.வெ.க. பூச்சாண்டி’ காட்டி தி.மு.க.வை நிலைக்குக் கொண்டு வந்தார்கள்.
அ.தி.முக.வின்
எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி பேச ஐந்து முறையும், கூட்டணி முடிவானவுடன் தொகுதி பேரம் பேச நான்கு முறையும் மொத்தம் ஒன்பது முறை டெல்லி சென்றார். பலமுறை இரகசியப் பயணமாக கார் மாறி கார் சென்று, இறுதியில் தனித்துச்
சென்று கூட்டணியை முடிவு செய்தார்.
புது
டெல்லியில் எடப்பாடி பழனிச்சாமி
தமிழ்நாட்டு மக்கள் நலன் குறித்துப் பேசினாரா? தொடர் இந்தித் திணிப்புக் குறித்து வாய் திறந்தாரா? பா.ச.க.வின் மதவாதம் குறித்து அறிவாரா? தமிழ்நாட்டுத் திட்டங்கள் குறித்து அழுத்தம்
கொடுத்தாரா? போதிய நிதி ஆதாரங்களை ஒன்றிய அரசிடம் பெற்றுத் தருவாரா? சனாதனத் திணிப்பு குறித்துக் குரல் கொடுப்பாரா? போன்ற கேள்விகளுக்கு விடையாக எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவைச் சந்தித்தார். என்.டி.ஏ. கூட்டணி
முடிவானது என்கிறார்கள். தமிழ்நாடு என்.டி.ஏ. கூட்டணிப்
பொறுப்பாளர் பியூஸ் கோயலிடம் பிடி கொடுக்காத எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவிடம் வசமாக மாட்டிக்கொண்டார் என்பதே அ.தி.மு.க.வின் அடிமை
அரசியலாகும்.
‘எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்’
என்பதைப் போல, ஒரு காலத்தில் டெல்லி அரசியல் தலைவர்கள் போயஸ் தோட்டத்தில் அம்மாவின் தரிசனம் பெற அழைப்பிற்குக் காத்திருப்பார்கள். இதைப் பலரும் சுட்டிக்காட்டிய பின் அமித்ஷா ஆணைப்படி, இராயப்பேட்டை புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில்
என்.டி.ஏ. கூட்டணி
ஒப்பந்தம் கையொப்பமானது. 2024 - மக்களவைத் தேர்தல் முதல் அ.தி.மு.க.வுடனான பா.ச.க. கூட்டணிக்குப்
பாடுபட்ட ஜி.கே. வாசன்
எம்.ஜி.ஆர். மாளிகை
செல்லவில்லை. அவர் தனியே பியூஸ் கோயலைச் சந்தித்துத் தொகுதிப் பங்கீட்டை உறுதி செய்கிறார்.
தேர்தல்
களத்தைப் பொறுத்தவரைத் தேர்தல் திட்டமிடுதல் தொடங்கி கூட்டணி என்பதிலும், தேர்தல் பணிகளைக் கட்டமைப்பு செய்வதிலும் தி.மு.க.
தொடக்கம் முதலே முதல் பந்திலிருந்து கடைசி பந்துவரை ஆக்ரோச அதிரடி வெறியாட்டம் நடத்தும். பந்து வீச்சு என்றால் பவுன்சர், கட்டர், ஸ்பிளிட்ஸ் என மட்டையாளரை மடக்கும்.
தடுப்பாட்டம் நடத்தத் தூண்டும். தி.மு.க.
ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள எல்லா நிலைகளிலும் பூதாகரமாய் எழுந்து நிற்கிறது. மக்கள்
நலத்திட்டங்கள், கட்சிக் கட்டமைப்பு, பலம் வாய்ந்த கூட்டணி, நுண்ணியல் தேர்தல் பணிகள், பணபலம், ஆட்சி பலம் என வலுவாய் உள்ளது.
அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை தொடர் தோல்விகளிலிருந்து மீளவேண்டும். தி.மு.க.
அரசின் மீதான அதிருப்தி வாக்குகளைப் பெறவேண்டும். என்.டி.ஏ. கூட்டணி
ஆட்சி என்பதிலிருந்து தப்பிக்க தனிப் பெரும்பான்மை பலத்துடன் தனித்து வெற்றி பெறுவது என்பதும் கட்டாயமானது. 2021-ஆம் ஆண்டு தேர்தல் களத்தில் 21 தொகுதிகளில் அ.தி.மு.க.வின் வெற்றியை
அ.ம.மு.க.
தடுத்தது. அதே வழியில், 2026 தேர்தலில் மருத்துவர் இராமதாஸ் அவர்களும், சசிகலா அவர்களும் அ.தி.மு.க. வாக்குகளுக்கு முட்டுக்கட்டை
போடுகிறார்கள். தி.மு.க.
எதிர்ப்பு வாக்குகளை நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் என மேலும் இருவரும்
பிரிக்கிறார்கள்.
நடிகர்
விஜய் அவர்களை அ.தி.மு.க. கரூர் பெருந்துயர
நிகழ்வில் தாங்கியது. அ.தி.மு.க. கூட்டணிக்காகத் த.வெ.க.வை
விமர்சிக்க மறுத்தது. அரசியல் பிழை செய்தது. அ.தி.மு.க.வை அடிமைகள்
மற்றும் பலர் என்று விஜய் பேசிய பின் விழித்தது. கரூர் பெருந்துயர நிகழ்வு சட்டமன்ற விவாதத்தின் போது தமிழக வெற்றிக் கழகத்தின் வழக்கறிஞராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி குரல் உயர்த்தியது பலே இரகம்!
90 சீட்டுகள்.
2.5 ஆண்டுகள் முதல்வர் எனப் பேசப்பட்டதாக, த.வெ.க.வின் ஆதவ் அர்ஜூனா பேசியபோது, எடப்பாடி பழனிச்சாமி மறுத்தார். பா.ச.க.,
த.வெ.க., அ.தி.மு.க.
கூட்டணி எனப் பேசிய
போது எடப்பாடி பழனிச்சாமி அது என்.டி.ஏ. கூட்டணி என்பதற்கான
ஆட்சிக்கான அச்சாரம் என உணர்ந்து விழித்துக்
கொண்டார், மறுத்தார்.
பிரதமர்
மோடி மதுராந்தகம், மதுரை, திருச்சி என
எங்குமே ‘எடப்பாடி பழனிச்சாமி அவர்களே...’ என விளிக்க மறுக்கிறார்.
தேர்தல் களத்தில் என்.டி.ஏ. கூட்டணி
என்பது இரு வழிகளில் பயணிக்கிறது. தமிழ்நாட்டில் என்.டி.ஏ. கூட்டணி
ஆட்சிக்குப் பா.ச.க.
முயற்சிக்கிறது. ஒன்றியத்தில் 21 மாநிலங்களில் பா.ச.க.
ஆட்சி நடந்தாலும், அவர்களுக்குப் பெரும் தலைவலியே தமிழ்நாட்டில் உள்ள தி.மு.க.
என்ற கட்சியும், அவர்களது ஆட்சியும்தான். தி.மு.க.
ஒன்றிய அரசின் அனைத்து மக்கள் விரோதச் சட்டங்களையும் எதிர்க்கிறது. மாநில உரிமை பேசுகிறது. இந்தித் திணிப்பிற்குப் போராடுகிறது. மாநில ஆளுநர்கள் அதிகாரம், முடிவெடுக்கும் காலம், இட ஒதுக்கீடு என
உச்ச நீதிமன்றம் சென்று ஒன்றிய அரசிற்கு எதிரான தீர்ப்புகளைப் பெறுகிறது. எதிர்க்கட்சி முதல்வர்களுக்குக் கடிதங்கள்
எழுதுவது, திரட்டுவது, ஒன்றிய அரசிற்கு எதிரான கூட்டங்களை ஒருங்கிணைப்பது என வலுவாக உள்ளது.
பா.ச.க.வின்
தாய் வீடான ஆர்.எஸ்.எஸ். கொள்கையான தி.மு.க.வின் சனாதன எதிர்ப்பு என்பதும் அடிப்படை எதிர்வீச்சாக அமைகிறது. அ.தி. மு.க.வின் வெற்றியோ,
தோல்வியோ, இரண்டாம் கட்ட
அ.தி.மு.க.
தலைவர்கள் வழி அ.தி.மு.க.வை முற்றிலும்
கைக்கொள்ளும் பா.ச.க.
திட்டமும், என்.டி.ஏ. கூட்டணியின்
உள்ளடக்கமாக உள்ளது. ‘அண்ணா தி.மு.க.’
என்பது ‘அமித்ஷா தி.மு.க.’
வாகி விட்டது. தமிழக என்.டி.ஏ. கூட்டணி
குறித்த அனைத்து முடிவுகளையும் அமித்ஷா அவர்களே எடுக்கிறார் என்பதே நடப்பு தமிழ்நாட்டு அரசியலாகும்.
தமிழ்நாட்டுத்
தேர்தல் களத்தில் டெல்லிக்குப் பணிந்த மாநில அரசால் ஒன்றிய அரசின் நிதி, மாநிலங்களுக்கான திட்டங்கள் என்பதில் இரட்டை இஞ்சின் எனப் புதுப்புரளி கிளப்புகிறார்கள். வட இந்திய மாநிலங்களின்
வளர்ச்சி, கல்வி, சட்டம் ஒழுங்கு, மகளிர் நிலை, சாலை வசதி, போக்குவரத்து இவைகளைக் கண்ணோக்கி ஆய்ந்தால், அத்தனையும் முழுக்க முழுக்க வடிகட்டிய பொய் என அறிய வரும்.
அண்மைக்காலத்தில்,
புது டெல்லி உத்தம் நகரில் நடந்த கலவரக் காணொளி பார்த்தேன். நான்கு மணி நேரமாகத் தொடர்ந்து, மதக்கலவரம் நடக்கிறது. வீடுகள் தாக்கப்படுகிறது. இருமதப் பிரிவினரும் வெறிகொண்டு தாக்கிக்கொள்கிறார்கள். காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு இருக்கிறது. இந்திய தலைநகர், புது டெல்லியில் இரட்டை எஞ்சின் ஆட்சிதான் நடக்கிறது. உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற இரட்டை எஞ்சின் நடக்கும் மாநிலங்களின் வறுமை உலகம் அறிந்ததே. இரட்டை எஞ்சின் சர்க்கார் நடக்கும் மாநிலங்களுக்குப் பெரும் நிதியை ஒன்றிய அரசு ஒதுக்குகிறது. அது கடலில் கரைத்த பெருங்காயமானது என்பதே
நாட்டு நடப்பாகும்.
அ.தி.மு.க.
மூகமூடி அணிந்து வருகிற என்.டி.ஏ. கூட்டணியை
அடையாளம் காண்பது காலகட்டாயமானது. மத நல்லிணக்கம், சமூக
நீதி என்பதில் ஒன்றிணைவோம். சிறுபான்மை மக்களாகிய நாம், மதச்சார்பற்றக் கூட்டணியை ஆதரிப்போம்.
அரசியல் என்பது இன்று அதிகாரத்தைக் கைப்பற்றும் ஒரு சதுரங்க ஆட்டமாக மாறிவிட்டது. ஆனால், 2000 ஆண்டுகளுக்கு முன்பு கல்வாரிக் குன்றின் சிலுவையில் ஒரு புதிய அரசியல் பிறந்தது. அது அடக்குமுறைக்கு எதிரான அரசியல் அல்ல; மாறாக, அன்பினால் உலகை ஆளவந்த ‘பணிவாழ்வு’ அரசியல். இன்றைய சுயநல அரசியலுக்கும், இயேசு காட்டிய சிலுவை அரசியலுக்கும் உள்ள இடைவெளியைத் தியானிப்போம்.
அதிகாரமா? அடிமைப்
பணியா?
இன்றைய
அரசியல் தளம் ‘யார் பெரியவர்?’ என்ற போட்டியிலேயே இயங்குகிறது. ஆனால், இயேசுவின் அரசியல் ‘யார் சிறியவர்?’ என்பதில் தொடங்குகிறது. சீடர்கள் தங்களுக்குள் ‘யார் பெரியவர்?’ என்று வாதிட்டபோது, இயேசு ஒரு சிறு பிள்ளையை அவர்கள் நடுவில் நிறுத்தினார். “உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர், உங்கள் ஊழியராய் இருக்கட்டும்” (மத்
20:26). இயேசுவின் அரசியல் அதிகாரம் என்பது மற்றவர்களை ஆதிக்கம் செலுத்துவது அல்ல; மாறாக, மற்றவர்களின் பாதங்களைக் கழுவும் பணிவிடை. சிலுவையில் அவர் கைகள் விரிக்கப்பட்டிருந்தது, உலகை அணைத்துக்கொள்ளவே அன்றி, அடக்கி ஆள அல்ல!
வாய்மையும் நீதியும்:
பிலாத்துவும்
இயேசுவும்
இயேசுவின்
விசாரணை ஒரு சிறந்த அரசியல் ஒப்பீடு. ஒருபுறம், உலக அதிகாரத்தின் பிரதிநிதியான பிலாத்து; மறுபுறம், விண்ணக அதிகாரத்தின் அரசராக இயேசு. பிலாத்துவின் அரசியல் ‘சந்தர்ப்பவாதம்’ (Opportunism) இயேசுவின் அரசியல் ‘சத்தியம்’
(Truth). “உண்மையைச்
சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவிசாய்க்கின்றனர்” (யோவான்
18:37). இன்றைய அரசியல் பொய்களாலும் வாக்குறுதிகளாலும் கட்டமைக்கப்படும்போது, சிலுவை அரசியல் ‘உண்மையின் சாட்சியாக’
நிற்கிறது. நீதிக்காகத் தம் உயிரையே கையளிப்பதே இயேசுவின் அரசியல் பாணி!
விளிம்புநிலை
மக்களின்
அரசியல்
இன்றைய
அரசியல் பெரும்பாலும் பெரும் முதலாளிகளையும் செல்வாக்கு மிக்கவர்களையும் மையப்படுத்தியே சுழல்கிறது. ஆனால், இயேசுவின் அரசியல் ‘கடைசி வரிசை’ மனிதர்களிடமிருந்து தொடங்கியது. பாவிகள், தொழுநோயாளிகள் மற்றும் சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டவர்களே இயேசுவின் அரசியல் கூட்டாளிகள். “மிகச் சிறியோராகிய என் சகோதரர் இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள்” (மத்
25:40). ஏழைகளின் கண்ணீருக்குப் பதில் சொல்லாத எந்த அரசியலும் கிறித்தவ அரசியலாக முடியாது என்பதைச் சிலுவை உரக்கக் கூறுகிறது.
பழிவாங்கலா? அல்லது
மன்னிப்பா?
அரசியல்
எதிரிகளை ஒழிப்பதுதான் இன்றைய வெற்றியாகக் கருதப்படுகிறது. ஆனால், சிலுவை காட்டும் அரசியல் ‘எதிரிகளையும் நேசிப்பது.’ தம்மை ஆணிகளால் அடித்துத் துன்புறுத்தியவர்களுக்காகவும்
இயேசு சிலுவையில் பரிந்து பேசினார். “தந்தையே, இவர்களை மன்னியும்; ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை” (லூக்
23:34). பழிவாங்கும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, மன்னிப்பின் வழியாகப் புதிய உறவுகளைக் கட்டியெழுப்புவதே சிலுவை காட்டும் வழி.
இன்றைய கிறித்தவரின்
கடமை
என்ன?
நாம்
வாழும் சமூகத்தில் கிறித்தவ அரசியல் என்பது ஒரு தனிப்பட்ட கட்சி சார்ந்தது அல்ல; அது ஒரு ‘மதிப்பீடு’
(Values) சார்ந்தது.
ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுப்பது. சாதி, மத பேதமற்ற சமத்துவத்தைப்
பேணுவது. இயற்கையைப் பாதுகாப்பது. ஒடுக்கப்பட்டோரின் பக்கம் நிற்பது. சிலுவை என்பது ஒரு தோல்வியின் அடையாளம் அல்ல; அது ஒரு புதிய அரசியல் புரட்சியின் தொடக்கம். சுயநலத்தை விடுத்து, பொதுநலத்திற்காகத் தம்மையே பலியாக்கும்போதுதான் ஒரு சிறந்த தலைவன் உருவாகிறான்.
இன்றைய
தலைவர்களும், குடிமக்களாகிய நாமும் இயேசுவின் சிலுவை அரசியலை உள்வாங்கிக் கொண்டால், நம் தேசம் இறைவனின் அரசாக மாறும் என்பதில் ஐயமில்லை.
“உலகிற்குரிய முறையில்
அல்ல;
கிறிஸ்துவின்
சிலுவை
வழியில் வாழ்வோம்!”
இரு வார்த்தைகள் இரு வாக்கியங்களுக்குச் சக்கரமாய், விழிகளின் ஓரமாய், பார்வையின் பாசறையாய் பேருந்தில் பயணம் செய்தபோது, சூரிய ஒளிக்கீற்றால் இதயத்தில் ஊடுருவிய வாக்கியம்: ‘இடைவெளி விட்டுப் பயணம் செய்தால் இன்னலைத் தவிர்க்கலாம்.’ இது பயணத்திற்கு மட்டுமா? இது பயணத்திற்கு மட்டுமா? இல்லை; இது வாழ்க்கைக்கும் அச்சாணியாக அமைகிறது.
வேப்பம்
பூவில் எடுக்கும் தேனும் இனிக்கும். வாழ்க்கை என்பது வேப்ப மரம் அல்ல; மாறாக, அதில் உள்ள தேன். “துன்பம் என்பது உறங்கிக்கொண்டிருக்கும் உலகை எழுப்ப இறைவன் பயன்படுத்தும் மெகாஃபோன்”
(Pain is God’s megaphone
to rouse a deaf world) என்று கூறுவார் சி.எஸ். லூயிஸ்.
அதாவது, நாம் சந்திக்கிற இன்னல்கள் இறைவனின் குரலைக் கேட்க நமக்குக் கொடுக்கப்பட்ட ஓர் ‘ஆன்மிக இடைவெளி’ ஆகும்.
சில
வார்த்தைகள் நம்மை நீண்ட நேரம் சிந்திக்க வைக்கின்றன. ‘இடைவெளி’ என்ற ஒரு சாதாரண சொல் கூட, சில சமயங்களில் வாழ்க்கையைப் பற்றி ஆழமாகக் கேள்வி கேட்க வைக்கிறது. இடைவெளி... அது ஒரு தூரம் மட்டுமா? அல்லது… அது ஓர் உறவின் அமைதியான உடைச்சலா? இந்தச் சிந்தனை எனக்குத் தெளிவாக வந்தது ஒரு சாதாரண நாளில்.
சில
நாள்களுக்கு முன் ஒரு மருத்துவமனை வருகை என் மனத்தில் நீண்ட நேரம் பதிந்துவிட்டது. ஒரு முதியவர் சிகிச்சைக்காக வந்திருந்தார். அவருக்குத் தேவையான மருந்துகளும் பராமரிப்பும் கிடைத்துக் கொண்டிருந்தது. ஆனால், அவர் அடிக்கடி கதவு பக்கம் பார்த்துக்கொண்டே இருந்தார்; ‘யாராவது வருவார்களா?’ என்று. ஒரு கட்டத்தில் நான் அவர் அருகில் சென்று, “யாரை எதிர்பார்த்துக் காத்திருக்கிறீர்கள்?” என்று கேட்டேன். அவர் மெதுவாகச் சிரித்தார். “யாரும் வரமாட்டாங்க;… ஆனா, யாராவது வந்தா நல்லா இருக்கும்”
என்றார். அந்த ஒரு வாக்கியம்,…அந்தத் தருணம் என் உள்ளத்தில் ஒரு கேள்வியை எழுப்பியது. ‘நாம் மனிதர்களுக்கு அருகில் இருக்கிறோமா?’ அல்லது அவர்களைச் சுற்றிலும் மட்டுமே இருக்கிறோமா? என்று.
பேருந்து
பயணம், பொதுமக்கள் கூடும் இடங்கள், காத்திருப்பு அறைகள்... எங்குப் பார்த்தாலும் ஒரே காட்சி. மனிதர்கள் அருகில் இருந்தும், அருகில் இல்லாதவர்கள் போல! ஒருவர் அருகில் அமர்கிறார்; ஆனால், முழுமையாக இல்லை. சிறிது தள்ளி, சிறிது தயக்கம், சிறிது தெரியாத ஓர் எல்லை. ஒரு காலத்தில் அது மரியாதை. பிறகு அது பாதுகாப்பு. ஆனால், இன்று அது நம்முடைய வாழ்வியல் முறையாக மாறிவிட்டது. அப்போது மனத்தில் ஒரு கேள்வி தெளிவாக எழுந்தது. இது உடலுக்கான இடைவெளியா? அல்லது இதயங்களுக்குள் உருவான தூரமா?
ஒரே
வீட்டில் வாழும் மனிதர்கள் கூட இன்று வெவ்வேறு உலகங்களில் வாழ்கிறார்கள். ஒரே மேசையில் அமர்ந்து உணவருந்தும் குடும்பம் கூட, ஒரே மனத்துடன் இணைவதில்லை. ஒரே ஆலயத்தில் மண்டியிட்டுச் செபிக்கும் மனிதர்கள் கூட, அருகில் இருக்கும் ஒருவரின் வலியை உணர முடியாமல் இருக்கிறார்கள். அப்போது மனத்தில் மற்றொரு கேள்வி எழுகிறது, ‘இடைவெளி நம்மைப் பாதுகாக்கிறதா?’ அல்லது ‘மெதுவாக மனிதத்திலிருந்து பிரிக்கிறதா?’
தவக்காலம்
இந்தக் கேள்விகளுக்கான பதிலைத் தேடும் காலம். இது வெறும் தவிர்ப்புகளுக்கான காலமல்ல; இது அணுகுவதற்கான அழைப்பு. பாடுகளோடு நெருக்கம், பாமரனோடு பயணம். இயேசு பாலைவனத்திற்குச் சென்றது மனிதர்களிடமிருந்து தூரமாக இருக்க அல்ல; மாறாக, அவர்களை இன்னும் ஆழமாக அணுகத் தயாராகும் நேரம். அவருடைய வாழ்க்கையை நாம் பார்க்கும்போது, அவர் தூரம் வைக்கும் மனிதராக அல்ல; அருகில் வரும் மனிதராகத் தெரிகிறார். அவர் தொழுநோயாளியைத் தொட்டார், அவர் பாவிகளுடன் உட்கார்ந்தார், அவர் தனிமையில் இருந்தவர்களை அணுகினார். அவருடைய வாழ்க்கை ஓர் அமைதியான செய்தியைக் கூறுகிறது: ‘அன்பு என்பது தூரம் வைப்பது அல்ல; அருகில் வரத் தயங்காதது.’
நமது
மேனாள் திருத்தந்தை பிரான்சிஸ் கூறுகிறார், “நாம் திரைகளைப் பார்க்கும் உலகமாக மாறாமல், மனிதர்களின் கண்களைப் பார்க்கக் கற்றுக் கொள்ளவேண்டும்.” இன்று நாம் மனிதர்களைக் காணவில்லை; அவர்களின் உருவங்களை மட்டுமே பார்க்கிறோம். அவர்களின் குரலைக் கேட்கவில்லை; அவர்களின் செய்திகளை மட்டுமே படிக்கிறோம்.
ஒரு
மருத்துவமனை அறையில் படுத்திருக்கும் ஒரு நோயாளி, அவருக்குச் சிகிச்சை கிடைக்கலாம்; ஆனால், ஒரு மனிதக் குரல், ஓர் அன்பான உரையாடல்; அது மற்றொரு மருந்து. ஒரு முதியவர் - அவருக்கு உணவு இருக்கலாம்; ஆனால், அவரைக் கேட்க யாராவது இருந்தால், அது அவருடைய வாழ்வை நிரப்பும். ஒரு நண்பன் - அவன் சிரிக்கலாம்; ஆனால், அவன் உள்ளே உடைந்து கொண்டிருப்பான். அதைக் கவனிக்கும் ஒருவர் அவனுக்குத் தேவையானவர். அன்னை தெரேசா கூறியதுபோல், “அன்பு இல்லாத தனிமைதான் உலகின் மிகப்பெரிய வறுமை.” திருவிவிலியம் நமக்கு நினைவூட்டுகிறது: “இருவர் ஒருவரைவிட மேலானவர்; ஒருவர் விழுந்தால் மற்றவர் தூக்கிவிடுவார்” (சஉ
4:9-10).
குயில்
எழுப்பும் ஓசையை இசையைவிட, அவற்றின் இடையில் இருக்கும் மௌன சப்தமே பெரும்பாலான நேரங்களில் இனிமையை அளிக்கிறது. மனிதன் உறவுகளுக்காகப் படைக்கப்பட்டவன்; தனிமைக்காக அல்ல! தேசத்தந்தை மகாத்மா காந்தியின் வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன: “The best way to find yourself is to lose yourself in the service
of others.” இடைவெளியைக்
குறைக்கப் பெரிய செயல்கள் தேவையில்லை. சிறிய அன்பு போதும். ஒரு சிரிப்பு,… ஒரு நலம் விசாரிப்பு,… ஒரு நிமிடம் கொடுத்துக் கேட்பது...… இவையெல்லாம் மனிதர்களுக்கிடையிலான தூரத்தைக் குறைக்கும். “மனிதன் தன்னை முழுமையாகக் கண்டுபிடிப்பது, தன்னை அன்பாக மற்றவர்களுக்கு அளிக்கும்போதுதான்” என்று
திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் கூறுவார். இடைவெளி அவசியம்; ஆனால், அது உடலுக்குள் மட்டும் இருக்கவேண்டும். இதயங்களுக்கு இடையில் அல்ல! தவக்காலம் நமக்கு மெதுவாகக் கூறுகிறது, தூரத்தில் நின்று பாதுகாப்பாக இருக்க மட்டுமல்ல; அருகில் வந்து மனிதமாக இருக்க!
உயிர்ப்பின் வாழ்த்தும் அமைதியின் பொருளும்!
இயேசு
உயிர்த்தார்! அல்லேலுயா!! அனைவருக்கும் உயிர்ப்பின் நல்வாழ்த்துகள்!
உயிர்த்த
ஆண்டவர் நமக்கு முதன்முதலில் வழங்கும் ஆசி ‘அமைதி!’ அமைதி என்பதற்கு எபிரேய மொழியில் ‘ஷாலோம்’
(Shalom) என்பது
பொருள். அமைதி என்பது விரிசல்கள், பிளவுகள் மற்றும் உடைத்தல்கள் இல்லாத ஓர் ஒருங்கிணைந்த நிலை. இது ஒரு நிறைவான மனநிலை. ஆகவே, நாம் ஒருவரை அமைதி அல்லது சமாதானம் கூறி வாழ்த்தும்போது, அவர்கள் எல்லா நன்மைகளும் வரங்களும் பெற்று முழுமையான நலனுடன் வாழவேண்டும் என்று வாழ்த்துகின்றோம். முழுமையான மனநிலை, பிளவுபடாத உள்ளம், விரிசல் இல்லாத வாழ்வு நம் ஒவ்வொருவருக்கும் தேவை என்பதை இந்த உயிர்ப்பின் பெருநாள் நமக்கு ஆழமாக அறிவுறுத்துகின்றது.
புதிய உதயத்தின்
அடையாளம்:
காலி
கல்லறை!
மானுட
மதிப்பீடுகளுக்காகவும்
நீதிக்காகவும் போராடிய கிறிஸ்துவின் வாழ்க்கை சிலுவை மரணத்தில் மறைந்துபோனது என்று உலகம் கருதினாலும், அது ஒரு புதிய விடியலுக்கான தொடக்கம் என்பதை இன்றைய விழா பறைசாற்றுகின்றது.
‘இயேசு இங்கே இல்லை’ என்ற அந்தக் காலி கல்லறை அனுபவம் வெறும் வெற்றிடம் அல்ல; அது ஒரு மகத்தான இறை அனுபவம்! கல்லறையின் கட்டுகளிலிருந்தும், மரணத்தின் பிடியிலிருந்தும் விடுதலை பெறுவதே உயிர்ப்பு என்பதற்கான சான்றாக அது அமைகின்றது.
தேடலின் தொடக்கம்:
காணாமல்
போன
கடவுள்!
சில நேரங்களில் கடவுள் நமது வாழ்விலே இல்லாமல் இருக்கின்றார் அல்லது அவர் நம்மை விட்டு எங்கோ மறைந்துவிட்டார் என்கின்ற எண்ணம் நம்மை அழுத்தக்கூடும். இத்தகைய வெறுமை நம்மை ஆட்கொள்ளும்போதுதான், நாம் அவரைத் தீவிரமாகத் தேடத் தொடங்குகின்றோம். அந்தத் தேடலே நம்மை உண்மையான இறை அனுபவத்தை நோக்கிக் கூட்டிச்செல்கின்றது. “நாம் விழித்தெழ அவர் துயில் கொண்டார்; நாம் வாழ்வு பெற அவர் இறந்தார்” என்று புனித அகுஸ்தினார் குறிப்பிடுகின்றார்.
கல் புரட்டப்பட்டதன்
நோக்கம்:
ஓர்
இறையியல்
பார்வை!
கல்லறையின்
கல் புரட்டப்பட்டதைப் பற்றி புனித அகுஸ்தினார் ஓர் ஆழமான இறையியல் விளக்கத்தை அளிக்கின்றார். கல் புரட்டப்பட்டது இயேசுவைக் கல்லறையிலிருந்து வெளியே கொண்டு வருவதற்காக அல்ல; மாறாக, சீடர்கள் உள்ளே சென்று உண்மையைக் காண்பதற்காகவே. நாம் உள்ளே சென்று, ‘எங்கே என் கடவுள்?’ என்று அங்கலாய்ப்பதற்கும், ‘எங்கே நீர் சென்றீர்?’ என்று வினவுவதற்கும், ‘ஏன் எங்களை விட்டுச் சென்றீர்?’ என்ற நம் உள்ளத்தின் ஆதங்கத்தை வெளிப்படுத்துவதற்கும் ஒரு வாய்ப்பாகவே அந்தக் கல் அகற்றப்பட்டது. நாம் இறைவனைத் தேடி உள்ளே செல்வதற்கும், காலி கல்லறையின் வழியாக இறைப் பிரசன்னத்தை உணர்வதற்குமே இந்தச் செயல் அமைந்தது என்று புனித அகுஸ்தினார் மிகத் தெளிவாக விளக்குகின்றார்.
அச்சத்திலிருந்து
துணிவுக்கு:
சீடர்களின்
மனமாற்றம்!
இயேசுவின்
மரணத்திற்குப் பிறகு பயந்து பதுங்கியவர்கள், ஓடி ஒளிந்தவர்கள், அவரை மறுதலித்தவர்கள் என அனைவரும் ‘அன்பு
செய்யும் உள்ளம் அழிவதில்லை’ என்பதை
மூன்று நாள்களுக்குப் பிறகு உணர்ந்தார்கள். இடைவெளி விழுந்த அவர்களின் மனம், காலி கல்லறையைப் பார்த்தவுடன் மாறத்தொடங்கியது. கடவுளுடன் இருந்தபோது அவரது உடனிருப்பின் அருமையையும் அருகாமையையும் உணரத் தவறிய சீடர்கள், அவர் மறைந்த பிறகு பெரும் மாற்றத்திற்கு உள்ளானார்கள். இயேசு உயிர்த்தெழுந்த பிறகு அவர்களின் உள்ளங்களில் ஒரு வியக்கத்தக்க மாற்றம் ஏற்பட்டது. அச்சத்துடன் ஓடி ஒளிந்தவர்களின் முகங்களில் இப்போது துணிவு பிறக்கின்றது. அவநம்பிக்கை இருளில் விழுந்தவர்கள் வாழ்வில் நம்பிக்கையெனும் பேரொளியைக் காண்கின்றார்கள். பொன்னும் பொருளும் அற்ற நிலையிலும் ஒரு தெய்வீக மகிழ்ச்சி அவர்களிடம் மேலோங்குகின்றது.
அன்று
பயந்து நடுங்கிய பேதுரு, இன்று மிகுந்த துணிவுடன் நற்செய்தியை அறிவிக்கத் தொடங்குகின்றார். சுயநலத்துடன் வாழ்ந்த பலர், எல்லாவற்றையும் பொது உடைமையாக்கி, பகிர்ந்து உண்டு, அன்பிலும் செபத்திலும் மனம் ஒன்றித்து வாழ்ந்தனர் என்று தொடக்ககாலத் திரு அவை நமக்குக் கற்றுத் தருகின்றது.
தடுத்தாட்கொள்ளும்
ஆண்டவர்:
உயிர்ப்பின்
சாட்சிகள்!
சீடர்களின்
வாழ்வில் உயிர்ப்பின் இறையனுபவம் என்பது தற்செயலானது அல்ல; அது உயிர்த்த ஆண்டவரால் உறுதிப்படுத்தப்பட்டு வளர்க்கப்படுகின்றது. உயிர்த்த ஆண்டவர் சோர்விலும் தயக்கத்திலும் இருந்த பலரைத் தேடிச் சென்று வழிமறித்துத் தடுத்தாட்கொள்கின்றார். உதாரணமாக, எம்மாவுப் பயணத்திலே கலங்கி நின்ற சீடர்களைத் தடுத்தாட்கொண்டு அவர்களுக்குத் தம்மை வெளிப்படுத்துகின்றார். அதேபோல், ஐயம் கொண்ட தோமாவையும், அழுதுகொண்டிருந்த மகதலா மரியாவையும் நேரில் சந்தித்து அவர்களுக்குப் புதிய நம்பிக்கையை ஊட்டுகின்றார்.
இயேசு
ஒரு வெறும் ஆவி அல்ல; மாறாக, அவர் முழுமையான மனிதர் மற்றும் முழுமையான கடவுள் என்பதைத் தமது காயங்கள் வழியாகவும், உணவருந்தும் செயல்கள் வழியாகவும் அவர்களுக்கு மெய்ப்பிக்கின்றார். ‘அஞ்சாதீர்கள்’ என்ற
ஆற்றல்மிக்க ஆற்றுப்படுத்தும் செய்தியை அவர் வழங்குகின்றார். தமது சீடர்களை ‘சகோதரர்களே!’ என்று உரிமையோடு அழைத்து, அவர்களை மீண்டும் “கலிலேயாவிற்குச் செல்லுங்கள்” என்று
பணிக்கின்றார். மீண்டும் ஒரு முறை கலிலேயாவிற்குச் செல்லுமாறு அவர் விடுக்கும் அந்த அழைப்பு, இன்றைய நமது வாழ்விற்கும் மிக முக்கியமான செய்தியாக நம் கண்முன் நிற்கின்றது.
கல்லறையிலிருந்து
கலிலேயா
நோக்கி:
ஒரு
மீட்புப்
பயணம்!
கல்லறையிலே
தடுத்தாட்கொள்ளப்பட்ட
சீடர்களும் பெண்களும் மீண்டும் கலிலேயா செல்லுமாறு ஏன் பணிக்கப்படுகிறார்கள்? ஏனெனில், கல்லறையிலிருந்து கலிலேயாவை நோக்கி ஒரு புதிய பயணம் இப்போது தொடங்குகின்றது. இயேசுவின் பொதுவாழ்வும் பணிவாழ்வும் தொடங்கிய இடமே கலிலேயா. மீன் பிடிப்பவர்களையும், சுங்கச்சாவடியில் இருந்தவர்களையும் ‘மனிதர்களைப் பிடிப்பவர்களாய் மாற்றுவேன்’ என்று
அவர் முதன்முதலில் அழைத்தது, தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியது, அப்பம் பலுகச் செய்தது மற்றும் வல்ல செயல்கள் பல புரிந்தது என
அனைத்தும் இந்த மண்ணில்தான் நிகழ்ந்தன. பிற இனத்தாரும் சாதாரண மக்களும் வாழும் அந்தப் பகுதியை உயிர்த்த ஆண்டவர் இப்போதும் நேசிக்கின்றார். ஆகவேதான், அந்தத் தொடக்க இடத்திற்கே மீண்டும் செல்லுமாறு அவர்களைப் பணிக்கின்றார்.
உயிர்த்த
ஆண்டவர் தம்மைத் தண்டித்த பிலாத்துவிற்கோ, மறைநூல் அறிஞர்களுக்கோ அல்லது ஏளனம் செய்தவர்களுக்கோ தம்மை வெளிப்படுத்தித் தற்பெருமை கொள்ள விரும்பவில்லை; மாறாக, தாம் நேசித்த மக்களிடமும், தம்மை மறுதலித்த சீடர்களிடமும் மீண்டும் வருகின்றார். “நீங்கள் தவறு செய்தாலும், நான் உங்களை அன்பு செய்கின்றேன்” என்ற
செய்தியைத் தமது வருகையின் மூலம் உறுதிப்படுத்துகின்றார். கலிலேயா என்பது நமது தொடக்க நிலை; நாம் திருமுழுக்கின் போது பெற்றுக்கொண்ட அந்த உன்னத புனித அருளின் நிலை. அந்தத் தொடக்க நிலைக்கு நாம் மீண்டும் திரும்பவேண்டும் என்பதே இன்றைய அழைப்பு. பாவமற்ற நிலைக்கு நாம் மாறும்போதுதான் உயிர்ப்பின் உண்மையான பொருளை உணர்கின்றோம். அதனால்தான் இன்று நாம் திருமுழுக்கு வாக்குறுதிகளைப் புதுப்பிக்கின்றோம்.
உயிர்ப்பின் சக்தி:
சமூக
மாற்றத்திற்கான
கருவி!
உயிர்ப்பு
என்பது ஏதோ ஒரு வரலாற்று நிகழ்வு மட்டுமல்ல; அது இன்றும் நமக்குள் நிகழவேண்டிய ஒரு மாற்றம். தீமையைத் தகர்த்து, குற்றங்களைக் கழுவி, துயருற்றோருக்கு மகிழ்ச்சியைத் தருவதே உயிர்ப்பின் ஒளி. பகைமையை விரட்டி, மன ஒற்றுமையை உருவாக்கும்
இந்த இறையனுபவம் இன்று மனித இனம் அனைத்தோடும் ஒன்றிணைந்துவிட்டது.
புனித
பவுல் கூறுவதுபோல, “கிறித்தவர் உயிர்ப்பை நோக்கியே வாழ்கிறார்; சாவை நோக்கி அல்ல.” இயேசுவை உயிர்ப்பித்த அதே ஆவி நமக்குள் குடிகொண்டிருக்கின்றது. அந்த உயிர்ப்பின் சக்தியை நாம் எப்போது உணர்கிறோம்? எப்போதெல்லாம் பிறருடைய துன்பங்களைத் துடைக்க நாம் முன்வருகின்றோமோ, அப்போதெல்லாம் உயிர்ப்பின் சக்தி வெளிப்படுகின்றது. ஒடுக்கப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், கல்வி மறுக்கப்பட்டோர், இருப்பிடமற்றோர் மற்றும் எளிய மக்களின் வாழ்வில் படிந்துள்ள துன்பக் கறைகளை நீக்கும்போது நாமும் உயிர்ப்பின் சக்திகளாக மாறுகின்றோம்.
கிறிஸ்துவில்
உயிர்ப்போம்!
வாழ்ந்து
கொண்டிருக்கும்போதே கிறிஸ்துவின் உயிர்ப்பில் நாம் பங்குகொள்ளவேண்டும் என்பதே இந்த நாளின் அறைகூவல். கல்லறை முதல் கலிலேயா வரையிலான பயணம் நம் வாழ்வில் தொடங்கட்டும். பாவ நிலையிலிருந்து மீண்டு, தொடக்க அருளின் நிலைக்குச் செல்வோம். இயேசுவை உயிர்ப்பித்த ஆவி நமக்குள் இருக்கின்றது என்கின்ற ஆழமான நம்பிக்கையோடு இந்தப் பயணத்தைத் தொடங்குவோம்.
“நான் உன்னோடு இருக்க விரும்புகின்றேன்; உன் பாவச் சூழலால் நீ என்னை மறைத்தாலும்
உனக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றேன்” என்று
இயேசு நம்மிடம் கூறுகின்றார். நாமும் கிறிஸ்துவில் உயிர்ப்போம்; நம் வாழ்வின் வழியாகப் பிறரையும் கிறிஸ்துவில் உயிர்ப்பிக்கச் செய்வோம்.