கிறிஸ்து எனும் அருளடையாளம்
(தந்தை அன்பு செல்வன், தாய் மார்த்தா, மகன் அகஸ்டின், மகள் கிறிஸ்டினா இவர்களோடு அருள்பணியாளர் தாமஸின் உரையாடல் தொடர்கிறது)
மார்த்தா:
“பாதர், கடவுளின் அருளைப் பெறுவதற்கு அருளடையாளங்கள் தேவை என்று சொன்னீர்கள். அது குறித்து மேலும் சில கருத்துகளைச் சொல்லுங்களேன்.”
அருள்பணி:
“தத்துவார்ந்த ரீதியில் பார்க்கும்போது, திருவருள்சாதனங்கள் ‘குறியீடு’
(sign) என்கின்ற
வகையைச் சார்ந்தவை. ஒன்றைச் சுட்டிக்காட்ட மற்றொன்றைப் பயன்படுத்துவதே ‘குறியீடு’
என்பது! உதாரணமாக, ஒரு சாலையில் ‘மதுரை’ என்று எழுதப்பட்ட பலகை இருந்தது என்றால், அது மதுரையைச் சுட்டிக்காட்டும் குறியீடு ஆகும். அதாவது, பார்க்கக்கூடிய ஒன்றை வைத்து, பார்க்கக்கூடிய மற்றொன்றைச் சுட்டிக்காட்டுவதே குறியீடு என்பது. குறியீடோடு தொடர்புடைய மற்றொரு வார்த்தை ‘அடையாளம்’
(symbol) என்பது!
அடையாளம் என்பது குறியீட்டையும் தாண்டி இன்னும் ஒருபடி மேலானது. இரண்டு வகைகளில் அது மேலானது. முதலாவதாக, அடையாளம் என்பது பார்க்கக்கூடிய ஒன்றை வைத்து, பார்க்க இயலாத ஒன்றைச் சுட்டிக்காட்டுவது. இரண்டாவதாக, அடையாளம் மற்றொன்றைச் சுட்டிக்காட்டுவது மட்டுமல்லாமல், சுட்டிக்காட்டப்படும் பொருளின் தன்மையை ஓரளவுக்குத் தன்னிலே தாங்கியிருப்பதாகும்.”
கிறிஸ்டினா:
“தந்தையே! நீங்கள் சொல்வது புரிந்தது மாதிரியும் இருக்கிறது, புரியாத மாதிரியும் இருக்கிறது. ஓர் உதாரணம் தாருங்களேன்!”
மார்த்தா:
“நான் சொல்கிறேன் பாதர்! ரோஜா அன்பிற்கான சிறந்த அடையாளம். முதலாவதாக, ரோஜா பார்க்கப்படக்கூடியது. அது சுட்டிக்காட்டும் அன்போ பார்க்கப்பட முடியாதது. இரண்டாவதாக, அன்பின் மென்மைத்தன்மையை ரோஜா மலர் தன்னிலே தாங்கியிருக்கிறது. எனவேதான் அது அன்பிற்கான சிறந்த அடையாளமாகக் கருதப்படுகிறது என்று நினைக்கின்றேன்.”
அருள்பணி:
“மிகவும் சரி! காண இயலாத கடவுளையும், அவரது பிரசன்னத்தையும், பண்புநலன்களையும் சுட்டிக்காட்டி, அவற்றில் மனிதர்கள் பங்கெடுப்பதற்கான மிகச்சிறந்த அடையாளங்களாக இருப்பவையே அருளடையாளங்கள். ‘கண்களால் காண முடியாத இறைவனுக்குக் காணக்கூடிய ஓர் அடையாளமாக விளங்குவதே அருளடையாளம்’ என்கிறார்
புனித பெர்னார்டு. காணக்கூடிய பொருள்கள் வழியாகக் காண இயலாத அம்சங்களை வெளிப்படுத்துவதே திருவருள்சாதனச் செயல்பாட்டின் அடிப்படைத் தன்மை. எல்லாத் திருவருள்சாதனங்களுமே கடவுளைச் சுட்டிக்காட்டுபவையாக இருப்பதோடு, கடவுளின் தன்மையைத் தங்களிலே பிரதிபலிக்கின்றன. உதாரணமாக, அப்பமும் இரசமும் பார்க்கக்கூடியவை. இந்த அப்பமும் இரசமும் காண இயலாத இறைவனின் பிரசன்னத்தைத் தாங்கக்கூடியவையாக மாறுவது திருவருள்சாதனச் செயல்பாட்டாலேயே! திரு அவை வரலாற்றை உற்றுநோக்கும்போது, ஒரு சாதாரண அழிந்துபோகக்கூடிய பருப்பொருள், அழியாத ஒன்றைச் சுட்டிக்காட்ட முடியும் என்ற செய்தியை ஆணித்தரமாக எடுத்துரைத்தவர் புனித அகுஸ்தினார். புனித அகுஸ்தினாரின் கருத்துபடி, இவ்வுலகின் புனிதத்தின் அடையாளமாகத் திருவருள் சாதனம் இருக்கிறது.”
அகஸ்டின்:
“பாதர்! ஏழு அருளடையாளங்களும் எவ்வாறு கடவுளின் செயல்பாட்டைச் சுட்டிக்காட்டுகின்றன எனச் சொல்லுங்களேன்...”
அருள்பணி:
“அதற்கு முன்பாக ஒரு கருத்தைப் பற்றி நாம் பேசவேண்டும். கிறிஸ்தவர்களாகிய நம்மைப் பொறுத்த அளவில், திருவருள்சாதனங்கள் அனைத்தும் இறைமகன் கிறிஸ்துவிலிருந்தும், அவரது வாழ்விலிருந்தும்தான் ஊற்றெடுக்கின்றன. கிறிஸ்துவின் வாழ்வே ஒரு திருவருள்சாதன வாழ்வுதானே! அதாவது, கிறிஸ்து காண இயலாத இறைவனை வெளிப்படுத்துகின்ற அருளின் கருவியாக விளங்கினார். எனவேதான் இறையியலில் கிறிஸ்து, ‘அடிப்படைத் திருவருள்சாதனம்’ (basic
sacrament) என்று அழைக்கப்படுகின்றார்.”
அன்புசெல்வன்:
“பாதர், நீங்கள் இதைச் சொல்லும்போது ‘என்னைக்
காண்கிறவன் தந்தையையே காண்கின்றான்’ (யோவா
14:9) என்ற இயேசுவின் வார்த்தைகள் என் ஞாபகத்திற்கு வருகின்றன. இயேசுவின் வாழ்வே ஓர் அடிப்படைத் திருவருள்சாதனமாக (basic sacrament) இருந்தது
என்பதை இவ்வார்த்தைகள் எடுத்துரைக்கின்றன என்று நினைக்கின்றேன்.”
அருள்பணி:
“மிகச் சரியாகச் சொன்னீர்கள். மேலும், இவ்வார்த்தைகள் அவர் ஒரு தனித்துவமிக்க, வேறு எதற்கும் இணையாக முடியாத திருவருள்சாதனமாக விளங்குகின்றார் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றன. உங்கள் வீட்டில் கத்தோலிக்க மறைக்கல்வி ஏடு (Catechism of the Catholic Church) உள்ளதா?”
அன்புசெல்வன்:
“இருக்கிறது தந்தையே! உங்களுக்கு முன்பாக இருந்த அருள்தந்தை ஒரு முறை மறையுரையில் அது குறித்துப் பேசியபோது, அதை வாங்கி அவ்வப்போது
வாசித்து வருகிறேன். திரு அவையின் மறைப்போதனைகளைத் தெளிவாகவும் ஆழமாகவும் நான் புரிந்துகொள்ள அது எனக்கு உதவுகிறது.”
அருள்பணி:
“மிகவும் நல்லது. கிறிஸ்டினா, அப்புத்தகத்தைத் திறந்து, எண் 1151-ஐ வாசிக்க முடியுமா?”
கிறிஸ்டினா:
“இறையரசின் மறைபொருளை விளக்குவதற்காக இயேசு தமது போதனைகளில் அடிக்கடி படைப்புப் பொருள்களை அடையாளமாகப் பயன்படுத்துகின்றார். அவர் தமது குணமளிப்புச் செயல்பாடுகளிலும், போதனைகளிலும் சில பொருள் சார்ந்த குறியீடுகளையும், அடையாளச் செயல்பாடுகளையும் பயன்படுத்துகிறார்; பழைய உடன்படிக்கைக்கு, முக்கியமாக விடுதலைப் பயண நிகழ்விற்கும், பாஸ்குவிழா நிகழ்விற்கும் புதிய அர்த்தத்தை வழங்குகின்றார். இதற்கான காரணம் இச்செயல்பாடுகள் அனைத்திற்கும் பின்னே உள்ள குறியீடாக அவரே விளங்குவதுதான்.”
அருள்பணி:
“உனக்கு இதிலிருந்து என்ன புரிகிறது கிறிஸ்டினா?”
மார்த்தா:
“பாதர், அது எனக்கே புரியவில்லை. அவளுக்கு எங்கே புரியப்போகிறது?”
அருள்பணி:
“அதன் பொருள் இதுதான்: ‘இயேசு தமது புதுமைகளிலும், போதனைகளிலும் காணக்கூடிய பொருள்கள் மற்றும் நிகழ்வுகள் வழியாகக் காண இயலாத கடவுளைச் சுட்டிக்காட்டினார். இதற்கான காரணம், அவரது வாழ்வே காண இயலாத கடவுளைச் சுட்டிக்காட்டும் காணக்கூடிய அடையாளமாக இருந்ததே! வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில், நாம் கொண்டாடும் அருளடையாள நிகழ்வுகளுக்கான ஆழமான அர்த்தத்தையும், அளப்பரிய ஆற்றலையும் தருவது கிறிஸ்துவின் வாழ்வும், இறப்பும், உயிர்ப்புமேயன்றி வேறெதுவும் இல்லை.”
அகஸ்டின்:
“தந்தையே! இப்பொழுது எனக்கு ஒரு தெளிவு கிடைக்கிறது. கடவுளைச் சுட்டிக்காட்டும் மாபெரும் அடையாளமாக விளங்குபவர் கிறிஸ்து. அவரது மீட்புச்செயலை உலகமனைத்தும் எடுத்துச் செல்வதற்கான கருவிகளாக ஏற்படுத்தப்பட்டவையே திருவருள்சாதனங்கள்.”
அருள்பணி:
“ஆம்! திருவருள்சாதன நிகழ்வுகள் வழியாக இறைமகன் இயேசுவின் மீட்புப் பணியானது உலகத்தின் மூலைமுடுக்கெல்லாம் சென்றடைவதற்கான வாய்ப்பை, திரு அவை இறைவனின் துணையோடு மேற்கொள்கிறது. இவ்வாறு 2000 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட நற்செயல் இன்றும் தொடர்ந்து ஆற்றப்படுகிறது.”
(தொடரும்)
உண்ணாநோன்பு வேண்டல்
இறைவேண்டலோடு உண்ணாநோன்பும் இணைய வேண்டும் என்பது திருவிவிலியம் காட்டும் பாடம். இறைவேண்டல் வலிமைபெற வேண்டுமென்றால், நோன்பிருக்க வேண்டும் என்னும் பாடத்தை இயேசுவே நமக்குக் கற்றுத் தந்திருக்கிறார்.
‘எங்களால் ஏன் ஒரு பேயை ஓட்ட முடியவில்லை?’ என்று சீடர்கள் இயேசுவிடம் வினவியபோது, “இவ்வகைப் பேய் இறைவேண்டலினாலும்,
நோன்பினாலுமேயன்றி, வேறு எதனாலும் வெளியேறாது” (மத்
17:21) என்று பதிலளித்தார் இயேசு. இதன் வழியாகச் சில வேளைகளில் நோன்பின்றி இறைவேண்டல் வலிமை பெறாது என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
திருவிவிலியம்
முழுவதும் நோன்பின் காட்சிகள் பலவற்றைக் காண்கிறோம். நோன்பிருக்க வேண்டும் என்பது கடவுளே தந்த கட்டளை என்பதை லேவியர் நூல் நமக்கு எடுத்துரைக்கிறது. “ஏழாம் மாதம் பத்தாம் நாள் குடிமக்களும், உங்களோடு வாழும் அந்நியரும் வேலை ஒன்றும் செய்யாமல் நோன்பிருக்க வேண்டும். இது உங்களுக்கு என்றுமுள நியமம் ஆகும்”
(லேவி 16:29,31) என்கிறது லேவியர் நூல்.
பழைய
ஏற்பாட்டில் பல காரணங்களுக்காக நோன்பு
கடைப்பிடிக்கப்பட்டது.
பாவ மன்னிப்புக்காக (1சாமு 7:6, யோனா 3:5) மக்கள் நோன்பிருந்தனர். துயரத்தின் காரணமாக நோன்பு கடைப்பிடிக்கப்பட்டது. சவுல் இறந்தபோது மக்கள் நோன்பிருந்தனர் (2சாமு 1:12). இருப்பினும், இறைவேண்டல் செய்யும்போது, அதனை வலிமைப்படுத்த நோன்பிருந்து மன்றாட வேண்டும் என்பதே பழைய ஏற்பாட்டின் முதன்மை வலியுறுத்தல்.
தனது
குழந்தை சாகக்கிடந்தபோது தாவீது உண்ணாநோன்பிருந்து மன்றாடினார் (2சாமு 12:16). இஸ்ரயேல் மக்களின் பாதுகாப்புக்காக மன்றாட எஸ்ரா உண்ணாநோன்பு ஒன்றை அறிவித்தார். “நாங்கள் நோன்பிருந்து இதற்காக எங்கள் கடவுளிடம் வேண்டிக்கொண்டோம். அவரும் எங்கள் மன்றாட்டைக் கேட்டருளினார்” (எஸ்
8:23) என்று சான்றுபகர்கிறார் எஸ்ரா.
இஸ்ரயேலரின்
மற்றொரு தலைவரான நெகேமியாவும் இறைவேண்டலோடு நோன்பையும் இணைத்துக்கொள்ள மக்களை ஊக்குவித்தார். அவரே நோன்பிருந்து விண்ணகக் கடவுளின் முன்பு மன்றாடினார் (நெகே 1:4). எஸ்தர் (4:3,16), யூதித்து (8:6), தானியேல் (9:3) போன்ற இறையடியார்கள் நோன்பிருந்து மன்றாடுவதை ஒரு பழக்கமாகக் கொண்டிருந்தனர்.
இறைவாக்கினர்களான
எசாயா (58:6), எரேமியா (14:12), யோவேல் (2:12) ஆகியோரும் நோன்பின் அவசியத்தைப் பற்றிப் போதித்தனர். ஆனால், உண்மையான நோன்பு வெளிவேடமற்றதாகவும், அன்பு, அறம், பகிர்வு, நீதி, உண்மையான மனமாற்றம் ஆகிய மதிப்பீடுகளை உள்ளடக்கியதாகவும் அமைய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
புதிய
ஏற்பாடும் நோன்பின் அவசியத்தை வலியுறுத்திப் பேசுகிறது. ஆண்டவர் இயேசுவே தமது பணிவாழ்வின் தொடக்கத்தில் “நாற்பது நாள் இரவும் பகலும் நோன்பிருந்தார்” (மத்
4:2) என்பது கிறிஸ்தவர் அனைவருக்கும் ஊக்கமூட்டும் எடுத்துக்காட்டு. இயேசுவின் மாதிரியைப் பின்பற்றி தொடக்க காலக் கிறிஸ்தவர் நோன்பிருந்து இறைவேண்டல் செய்தனர் என்பதைத் திருத்தூதர் பணிகள் நூல் பதிவு செய்துள்ளது.
பர்னபாவும்,
சவுலும் நற்செய்திப் பணிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது நோன்பு இறைவேண்டலால்தான் (திப 13:2). அவர்கள் திருப்பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டபோது இதர கிறிஸ்தவர்கள் அவர்களுக்காக “நோன்பிருந்து இறைவனிடம் வேண்டினார்கள்” (திப
13:3). மூப்பர்களைத் தேர்ந்தெடுத்து, திருப்பணிக்காக ஆண்டவரிடம் ஒப்படைக்கும்போது நோன்பிருந்து இறைவனிடம் வேண்டினார்கள் (திப 14:23).
இந்த
மரபைப் பின்பற்றி திரு அவையின் வரலாறு முழுவதும் புனிதர்களும், இறையடியார்களும், இறைமக்களும் நோன்பிருந்தனர். புனித பெனடிக்ட், கத்தரீன், சார்லஸ் பொரோமியோ, வின்சென்ட் தே பவுல், பவுஸ்தினா
போன்ற எண்ணற்றப் புனிதர்கள் நோன்பிருந்து இறைவேண்டல் செய்ததை அவர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
திருமுழுக்குப்
பெற்ற கத்தோலிக்கர்கள் தவக் காலத்திலும், வெள்ளிக்கிழமைகளிலும் ஒறுத்தல்களைக் கடைப்பிடிக்க அழைக்கிறது கத்தோலிக்கத் திரு அவையின் மறைக்கல்வி (எண்: 1438). சாம்பல் புதன், பெரிய வெள்ளி ஆகிய இரு நாள்களில் கண்டிப்பாகவும், முடிந்தால் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் உண்ணாநோன்பு கடைப்பிடிக்க வலியுறுத்துகிறது திரு அவைச் சட்டம் (எண்கள்: 1250-53).
எனவே,
நம் இறைவேண்டல் வாழ்வில் உண்ணாநோன்பைத் தவறாது இணைத்துக் கொள்வோமாக. உணவில் நாம் செய்யும் தியாகமே உண்ணாநோன்பு. எனவே, ஒருமுறை மட்டுமே உணவு உண்பது அல்லது உணவின் அளவைக் குறைத்துக்கொள்வது, அல்லது பிடித்த உணவுகளைத் தவிர்ப்பது அல்லது பிடிக்காத உணவையும் தியாகத்தோடு உட்கொள்வது என ஏதாவது ஒரு
வடிவத்தில் குழந்தைகள் உள்பட அனைவரும் உண்ணாநோன்பைக் கடைப்பிடிப்பது சிறந்தது.
உண்ணாநோன்பிருக்கும்போது
வெளிவேடம் தவிர்த்து, மறைவாயிருக்கும் தந்தைக்கு மட்டும் தெரியுமாறு நோன்பிருக்கக் கூறினார் இயேசு (மத் 6: 16-18). வாரத்தில் இருமுறை நோன்பிருந்தாலும், இறுமாப்பு, தற்பெருமை போன்றவை அதன் பலன்களை நீக்கிவிடும் என்று ‘பரிசேயரும், வரி தண்டுபவரும்’ (லூக்
18:9-14) உவமையின் வழியாகக் கற்பித்தார். “தங்கள் பாவங்களுக்காக நோன்பிருப்போர் வெளியில் சென்று மீண்டும் அதே பாவங்களைச் செய்தால் யார் அவர்களது வேண்டுதலைக் கேட்பார்? அவர்கள் தங்களைத் தாழ்த்திக் கொள்வதால் பயன் என்ன?” (சீஞா 34:26) என்று எச்சரிக்கிறது இறைவார்த்தை. எனவே, விழிப்புணர்வோடு நோன்பிருப்போம். இறைவேண்டல் வாழ்வை வளப்படுத்துவோம்.
(தொடரும்)
கண்கள் கொண்ட சக்கரங்கள்!
‘இறை ஊழியர்’ லூயிஸ் சவீனியன் துப்புயீ என்ற மனிதர் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்காவிட்டாலும், அவர் நிறுவிய தூய இதய மரியன்னையின் பிரான்சிஸ்கன் சகோதரிகள் சபை (FIHM) பற்றி நிச்சயம் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்தியப் பெண்களை உறுப்பினர்களாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட முதல் துறவியர் சபை இது. இதன் சகோதரிகள் தமிழ்நாட்டில் ஏறக்குறைய 120 இடங்களில் பணி செய்கிறார்கள். கல்வி, மருத்துவம், சமூகச் சேவை, நற்செய்தி அறிவிப்பு எனப் பரந்துபட்ட அக்கறை கொண்டவர்கள். பாண்டிச்சேரியில் உருவானதாலும், அவர்கள் அணியும் தனித்துவமான் நீல முக்காடு காரணமாகவும், ‘Pondy Blue Sisters’ என்று பொதுவாக அறியப்படுகிறார்கள். அண்மை காலத்தில் அருள்சகோதரிகளின் சீருடைகள் மாற்றம் பெற்றதன் விளைவாக, உடையின் நீலம் ஏறக்குறைய வணங்கி விடை பெற்றுவிட்டது; பெயர் அப்படியே நிலைத்துவிட்டது.
நிறுவுநர்
துப்புயீ பிரான்சு நாட்டவர். பாரிசு அயல்நாட்டு மறைபரப்புச் சபையைச் சார்ந்த அருள்பணியாளர். 1832-ஆம் ஆண்டு மறைபரப்புப் பணியாளராக இந்தியாவிற்கு வந்தார். 1874-இல் இறக்கும் வரை ஒருமுறை கூட தன் தாய் நாட்டிற்குத் திரும்பச் செல்லவில்லையாம் (நான் சென்ற இரண்டு மாதங்களில் மட்டும் மூன்று முறை வீட்டுக்குப் போய் வந்தேன்). இடைப்பட்ட 40 சொச்சம் ஆண்டுகளில் இந்த வெள்ளை மனிதர் இந்தியத் திரு அவைக்காக ஆற்றிய பணிகள் மலைப்பூட்டுபவை. மறைபரப்புப்
பணியின் அத்தனை சாத்தியங்களையும் துப்புயீ தொட்டுப் பார்த்திருக்கிறார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக பாண்டிச்சேரி Mission Printing Press-உடைய
மேலாளராகப் பணியாற்றினார். மறைபரப்புப் பணிக்கு அச்சு ஊடகத்தை மிக வலிமையான முறையில் பயன்படுத்திய முன்னோடி கிறிஸ்தவ ஊடகவியலாளர்களில் தந்தை துப்புயீ ஒருவர்.
இவர்
ஓர் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், பதிப்பாளர். தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று திராவிட மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவர். ஆன்மிகம் தவிர, பொதுப்பயன்பாட்டிற்காகவும் நிறைய புத்தகங்கள் எழுதியுள்ளார். பிரெஞ்சு இலக்கண நூல், தமிழ் இலக்கண நூல், தமிழ்-பிரெஞ்சு அகராதி... இன்னும்
பல. தமிழின் மகத்தான இலக்கியப் படைப்புகளைச் சாதாரண மாணவர்களும் அறிந்துகொள்ளும் வகையில் திருக்குறள், தேம்பாவணி போன்ற நூல்களுக்கு விளக்கவுரைகள் எழுதியுள்ளார். உங்களுக்குத் தெரியுமா? முதல் நற்கருணை விருந்துக்கு குழந்தைளைத் தயார் செய்ய இன்றைக்கும் தமிழ்நாடு திரு அவையில் பயன்படுத்தப்படும் ‘சின்னக் குறிப்பிடம்’ தந்தை
துப்புயீ அவர்கள் தொகுத்ததே (‘எத்தனை சர்வேசுரன்? ஒரே சர்வேசுரன்!’ - யார் மறக்க முடியும்?).
‘இறை ஊழியர்’ துப்புயீ அவர்கள் ‘புனிதர்’ நிலைக்கு உயர்த்தப்பட தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், தந்தை அவர்கள் எழுதி வெளியிட்ட பல
ஆன்மிக நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, அவற்றை நவீன கிறித்தவ வாசகர்களுக்கும் அறிமுகப்படுத்தும் பணியில் சபைத் தலைமை ஈடுபட்டுள்ளது. இது
தன் வேர்களைத் தேடும் ஒரு துறவற அமைப்பின் புதுப்பித்தல் முன்னெடுப்பும் கூட. இந்தப் பெரும் திட்டத்தின் ஓர் அங்கமாக தந்தை துப்புயீ எழுதிய ‘நன்றாய் நினை’ என்ற ஆன்மிக நூலை ‘Olmette Media Works’ என்ற சென்னை நிறுவனம் தொழில்முறை ரீதியாக மொழிபெயர்க்க, அதை மேற்பார்வையிடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது, என் வாழ்வின் பேறு என்று சொல்வேன். பல மாதங்கள் எடுத்துக்கொண்டு,
ஒவ்வொரு பக்கமாகச் சகோதரிகளின் பொறுமையைச் சோதிக்கும் வேகத்தில் பெயர்த்து முடித்துக் கொடுத்த இந்தப் பணியின் நிதான முன்னேற்றத்திற்குக் காரணமாக நிர்வாகச் சிக்கல்கள், பணிச்சுமை, கிறித்தவக் கருத்துகளை உள்வாங்குவதில் பிறமத மொழிபெயர்ப்பாளர்களுக்கு உள்ள கடினம்... போன்ற பல இருந்தாலும், நூலின்
மொழியை முக்கியமாகக் குறிப்பட வேண்டும்.
‘நன்றாய் நினை’-19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுதப்பட்டு, கையெழுத்து வடிவத்தில் மட்டுமே கிடைத்துள்ள ஒரு தமிழ் நூல். ஒரு வெளிநாட்டவர் எழுதியது. அந்தக் காலக்கட்டத்தில் தமிழ் எவ்வாறு எழுதப்பட்டது, பேசப்பட்டது என்பதை அறிந்துகொள்ள இந்த நூல் ஒரு சாட்சி. தமிழும், வட மொழியும் கலந்துகட்டி
வரும் மணிப்பிரவாள நடையில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு நவீன தமிழ் வாசகர் அதைப் புரிந்துகொள்வது கடினம்.
13-ஆம்
நூற்றாண்டில் துவங்கி, கடந்த நூற்றாண்டின் பிற்பகுதி வரை கோலோச்சிய இந்த எழுத்து முறைக்கு ஓர் எளிய உதாரணம் சொல்கிறேன். பின்வரும் சொற்றொடரைக் கவனியுங்கள்: “அக்கிராஸனாதிபதி அவர்களே! உப அத்யகூஷகர் அவர்களே!
எதிரே பிரஸன்னமாயிருக்கும் மஹா ஜனங்களே! உங்களுக்கு முதலில் என் நமஸ்காரம்.” இதில் ‘அவர்களே’,
‘எதிரே’, ‘உங்களுக்கு’, ‘முதலில்’, ‘என்’ ஆகியவை
மட்டுமே தமிழ்ச்சொற்கள். மற்றவை எல்லாம் வடமொழி. ‘அக்கிராஸனாதிபதி’ என்றால்
அவைத்தலைவர் என்று அர்த்தம். ‘உப
அத்யகூஷகர்’ என்றால்
துணைத் தலைவர் என்று அர்த்தம். ஜனங்கள் - மக்கள். பிரஸன்னமாயிருக்கும்
- வீற்றிருக்கும். நமஸ்காரம் - வணக்கம். இப்படி ஒரு முழு நூலும் போனால் எப்படி இருக்கும்? யூகித்துக் கொள்ளுங்கள்.
ஏற்கெனவே
ஒரு குழுவினர் ‘நன்றாய் நினை’யின் கையெழுத்துப்
பிரதியை நவீன தமிழுக்கு மாற்ற எடுத்திருந்த ஒரு முயற்சி வடிவத்தைச் செப்பனிட்டு மீண்டும் தமிழ்ப்படுத்தி காலம், நடை, களச்சூழல் போன்ற கூறுகள் ஒரு பழமையான பிரதியில் இயல்பாக ஏற்படுத்தும் தடைகளை ஒவ்வொன்றாகத் திறந்து... திறந்து உள்ளே சென்று பார்த்தால், ஆஹா என்ன ஒரு சுவையான உள்ளடக்கம்! அங்கே நாம் காண்பது ஓர் அசலான ஆன்மிகவாதியின் ஆழமான ஆன்மிகக் கருத்துகள்!
‘நன்றாய் நினை’ என்ற நூலை நான் மிகுந்த விருப்பத்துடன் வாசித்தேன். லொயோலா இஞ்ஞாசியாரின் ‘ஆன்மிகப் பயிற்சிகள்’ போல
ஒரு மாதத்திற்குத் தியானிக்க வேண்டிய 31 கட்டுரைகள் கொண்ட இந்நூலில், விண்ணகம், இறப்பு, கடவுளன்பு, பிறரன்பு, அறம், மன்னிப்பு, திருப்பலி, மரியா... எனக் கிறிஸ்தவ ஆன்மிகத்தின் எல்லா ஆதாரத் தலைப்புகளையும் துப்புயீ தொட்டிருக்கிறார்.
‘நன்றாய் நினை’ என்ற நூலில் துப்புயீ ஒன்பது
வானதூதர் குழுக்கள் பற்றிக் குறிப்பிடுவது நான் இதுவரை கேள்விப்படாதது அல்லது குருமடத்தில், பேராசிரியர்கள் அதைச் சொல்லிக் கொடுத்தபோது, நான் அசந்து தூங்கியிருக்க வேண்டும். புனித பிரான்சிஸ் சவேரியார் நவநாளுக்காக துப்புயீ ஒன்பது மன்றாட்டுகள் எழுதியுள்ளர். அது ஒவ்வொன்றிலும் ஒரு வானதூதர் குழுவைக் குறிப்பிட்டு, அவர்களின் சிறப்பு இயல்புகளும், அணிகளும், பணிகளும் எப்படிச்
சவேரியார் என்கிற மாமனிதரோடு ஒத்துப் போகின்றன என்று ஒப்பிட்டு, “அவரின் பேறுபலன்களை முன்னிட்டு, நீர் எங்களுக்கு இதைச் செய்ய வேண்டும்”
என்று அவர்
கடவுளிடம் முன்வைக்கும் வேண்டல்கள் மன உருக்கமானவை.
நீங்கள்
‘ஒன்பது வானதூதர்கள் குழுக்கள்’
பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா?
என்னைப் போலவே உங்களுக்கும் இது புதிதென்றால், அவர்களைப்
பற்றிய சில அடிப்படையான தகவல்கள், சுருக்கமான வடிவில் இங்கே:
1) காவல் தூதர்கள் (Guardian Angels):
இவர்கள் நாம் பலமுறை கேள்விப்பட்ட குழுவினர். வானதூதர்கள் படிநிலையில் மிகவும் கீழே உள்ள வேரடிப் பணியாளர்கள். இவர்களின் முக்கியப் பணி மனிதர்களைப் பாதுகாப்பது. திருப்பாடல் 99:11: “நீர் செல்லும் இடமெல்லாம் உம்மைக் காக்கும்படி தம் தூதருக்கு அவர் கட்டளையிடுவார்” எனக்
குறிக்கப்படுவது இவர்களைக் குறித்தே.
2) முதன்மை வானதூதர்கள்
(Archangels):
இவர்களும் நமக்கு மிக பரிச்சயமான குழுவினர். இதில் மூவர் மிகவும் பிரபலம். மிக்கேல்,
இரபேல், கபிரியேல். இவர்கள் வழியாகவே கடவுள் மனுக்குலத்திற்கு அனுப்ப வேண்டிய செய்திகளை அனுப்புகிறார். மரியாவுக்குத் தூதுரை வழங்குபவராக கபிரியேலும் (லூக்1:26-38), தோபியாவின் வழித்துணையாக இரபேலும் (தோபித்து 5-12), அரக்கப் பாம்போடு போர் புரிபவராக மிக்கேலும் (திவெ 12:7) திருவிவிலியத்தில் குறிப்பிடப்படுகிறார்கள்.
3) ஆட்சி செலுத்துவோர்
(Principalities):
இந்தக் குழுவினர் நாடுகளையும், நகரங்களையும், ஆட்சியாளர்களையும் வழிநடத்துகின்றனர். கடவுளின் திட்டம் உலகில் நிறைவேறுவதை உறுதி செய்பவர்கள் இவர்களே. நிறுவனங்களுக்கும், பெரும் அமைப்புகளுக்கும் பாதுகாவலர்கள். ஓவியங்களில் ஆட்சி செலுத்தும் வானதூதர்கள் மகுடங்கள் அணிந்தவர்களாகவும், பதாகைகள் ஏந்தியவர்களாகவும் சித்தரிக்கப்படுகின்றனர். பவுலடியார் இவர்களைப் பற்றி, “அதன் மூலம் பலவகைகளில் விளங்கும் கடவுளின் ஞானத்தை ஆட்சிபுரிவோர், வான்வெளியில் அதிகாரம் செலுத்துவோர் ஆகியோருக்கு இப்போது திருச்சபை வழியாக வெளிப்படுத்த முடிகிறது”
என்று குறிப்பிடுகின்றார் (எபே 3:10).
4) ஆற்றல்கள் (Powers): இவர்கள்
போர் வீரர்கள். பிரபஞ்சத்தையும், மனித ஆன்மாக்களையும் சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து போராடி மீட்பதே இவர்களின் பணி. உலகின் ஒழுங்கை இவர்கள் உறுதி செய்கிறார்கள். ஓவியங்களில் படைக்கலன்கள் ஏந்திய வீரர்களாக ‘ஆற்றல்கள்’
குழுவினர் சித்தரிக்கப்படுகின்றனர். பவுலடியார்
இவர்களை, ‘வான்வெளியில் அதிகாரம் செலுத்துவோர்’ எனக்
குறிப்பிடுகிறார் (எபேசியர் 3: 10).
5) வல்லமை உடையோர் (Virtues): இயற்கை உலகின் ஒழுங்குக்கு இவர்களே பொறுப்பு. மேலும், உலகில் கடவுளின் வல்லமையை வெளிப்படுத்தி, புதுமைகள் நிகழக் காரணமாக இருக்கின்றார்கள். எபேசியர் திருமுகம் 1:21 இவர்களை ‘வல்லமை உடையோர்’ என அழைக்கிறது. கடவுளின்
ஆற்றலை வெளிப்படுத்தும் கருவிகளாக இருப்பதால் இவர்கள், ‘ஒளிரும் தூதர்கள்’
(The Shining Ones) என்றும்
வர்ணிக்கப்படுகிறார்கள்.
அறிவியல் விதிகளின்படி சீராக இயங்கும் உலகில் கடவுள் குறுக்கிட்டால் என்ன புதுமைகள் நிகழும் என்பதற்கு இவர்கள் சாட்சி.
6) அதிகாரம் கொண்டோர் (Dominions): இவர்கள் கீழ்ப்படிகளில் இருக்கும் வானதூதர்கள் மீது அதிகாரம் செலுத்தி, விண்ணகத்தில் கடவுளின் விருப்பத்தை நிலைநாட்டும் வானதூதர் குழுவினர். ஓவியங்களில் இவர்கள் கையில் செங்கோலை ஏந்தியவர்களாகச் சித்தரிக்கப்படுகிறார்கள். செங்கோலில் அதிகாரத்தைக் குறிக்கும் ஓர் ஒளி வட்டம் காணப்படுகிறது. வானதூதர்களின் மேல்மட்டக் குழுவினருக்கும், கீழ்மட்டக் குழுவினருக்கும் இடையே ஒருங்கிணைப்பாளர்களாக இவர்கள் செயல்படுகிறார்கள். கொலோசையர் திருமுகம் 1:16-இல் பவுலடியார் குறிப்பிடும்
‘அதிகாரம் கொண்டோர்’ இந்தக் குழுவினரே.
7) அரியணையில் அமர்வோர் (Thrones): இவர்கள் கடவுளின் அரியணையாக இருக்கிறார்கள். கடவுளின் அதிகாரத்தையும், நீதியையும் நிலைநாட்டுபவர்களாகச் செயல்படுகிறார்கள். ஓவியங்களில் கண்கள் கொண்ட பெரிய சக்கரங்களாக
இவர்கள் சித்தரிக்கப்படுகிறார்கள்.
“இதோ! கெருபுகளின் அருகில் நான்கு சக்கரங்களைக் கண்டேன். ஒவ்வொரு கெருபின் அருகிலும் ஒரு சக்கரம் இருந்தது. அவை நான்கும் ஒரேவிதத் தோற்றம் கொண்டிருந்தன; சக்கரத்துக்குள் சக்கரம் இருப்பதுபோல் தோன்றின”
(எசே 10:9-10) என்ற பகுதியில் எசேக்கியேல் குறிப்பிடும் கண்கள் கொண்ட சக்கரங்கள் இந்த வானதூதர் குழுவினரே.
8) கெருபுகள் (Cherubim): இவர்களின்
முக்கியப் பணி புனித இடங்களையும், மறை பொருள்களையும் பாதுகாப்பது. இவர்கள்தாம் விண்ணகத்தின் பாதுகாவலர்கள். மனிதன், எருமை, கழுகு, சிங்கம் போன்ற பல முகங்கள் கொண்டவர்களாகவும்,
பல கண்கள் கொண்டவர்களாகவும் கெருபுகள் சித்தரிக்கப்படுகிறார்கள். பாவம் செய்த மனிதனை ஏதேன் தோட்டத்திலிருந்து விரட்டும் கடவுள், “மரத்திற்குச் செல்லும் வழியைக் காப்பதற்குக் கெருபுகளையும், சுற்றிச் சுழலும் சுடரொளி வாளையும் வைத்தார்”
என்று தொடக்க நூல் 3:24 சொல்கிறது.
9) சேராபீன்கள் (Seraphim): சேராபீன்கள்
வானதூதர்கள் குழுவில் மிக உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள். கடவுளுக்கு மிக நெருக்கமானவர்கள். இவர்களின் பணி, கடவுளை வழிபடுவதும், அவரை இடைவிடாமல் அன்பு செய்வதுமே. இவர்களுக்கு ஆறு இறக்கைகள் உள்ளன. இரண்டு முகத்தை மூட, இரண்டு பாதங்களை மறைக்க, இரண்டு பறக்க. எசாயா 6:1-7, சேராபீன்கள்
கடவுளின் அரியணையைச் சூழ்ந்து கொண்டு, “படைகளின் ஆண்டவர் தூயவர், தூயவர், தூயவர்; மண்ணுலகம் முழுவதும் அவரது மாட்சியால் நிறைந்துள்ளது” என்று
பாடுவதாகச் சொல்கிறது.
எத்தனை எத்தனை
வானதூதர்கள்!!
‘இறை ஊழியர்’ லூயிஸ் சவீனியன் துப்புயீ உடைய வாழ்க்கையையும், பணியையும் குறித்து
வாசிக்கும்போது எனக்குத் தோன்றுவது, ‘இவர் கூட கடவுள் அனுப்பிய ஒரு வானதூதர்தான்!’
நீங்கள்
என்ன நினைக்கிறீர்கள்?
(இந்த
வாரக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை +91 9342389212 என்ற எண்ணிற்கு வாட்ஸ்ப் மூலம், எழுத்து வடிவிலோ அல்லது வாய்ஸ் மெஸேஜ் வடிவிலோ அனுப்புங்கள்)
16-ஆம் ஆயர் மாமன்றம் வெற்றிகரமாக நிறைவுக்கு வந்திருக்கிறது. மக்கள் திரு அவையாக, உலகியல் அமைப்புக்குள் ஊடுருவி மாற்றங்களை ஏற்படுத்தும் திரு அவையாக உருமாற வழிகாட்டுதல்களைத் தந்திருக்கிறது இம்மாமன்றம்.
இம்மாமன்றத்தின்
இறுதி ஏடு (Final Document) தற்போது
இத்தாலி மொழியில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. ஆங்கில மொழிபெயர்ப்புக்காகக் காத்திருக்கிறோம். இணைந்து
பயணிக்கும் திரு அவையில் ஆங்கிலம் மற்றும் முக்கிய மொழிகளில் இறுதி ஏடு உடனடியாக வெளியிடப்பட்டிருக்க வேண்டும்.
திருத்தந்தை
வழக்கம் போல ஆயர் மாமன்ற முடிவுகள் அடிப்படையில் திருத்தூது மடல் வெளியிடப்போவது இல்லை என்று கூறி இருப்பதோடு, மாமன்ற இறுதி ஏட்டுக்குத் திருத்தூது உரைக்கான ஒப்புதலும் அங்கீகாரமும் அளித்துவிட்டார். திருச்சபையின் அதிகாரப்பூர்வ மடலாக இதுவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாமன்ற
இறுதி ஏட்டில் எதிர்பார்த்த புரட்சிகரக் கருத்துகள் இல்லை என்று சிலர் கூறினாலும், இரண்டாம் வத்திக்கான் சங்கப் பாதையில் உறுதியோடு பயணிக்க உறுதி கொண்டிருப்பது, காலத்தின் அறிகுறிகளை ஆய்ந்து அறிந்து பயணம் செய்யும் திரு அவையாக மலர வழிகாட்டி இருப்பது பாராட்டத்தக்கது மட்டுமல்ல, நம்பிக்கை தருவதாகவும் இருக்கிறது.
அனைத்து
நிலைகளிலும் குறிப்பாக, தீர்மானம் எடுக்கும் அமைப்புகளில் பொதுநிலையினர் தலைமை, பங்கேற்பு மற்றும் ஈடுபாட்டிற்குச் சட்ட அங்கீகாரம் (Canonical) அளிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பெண்களின் பங்கேற்பு மற்றும் ஈடுபாட்டிற்கான வாய்ப்புகள் உருவாக்கம் பற்றியும் பேசப்பட்டிருக்கிறது.
திரு
அவையைப் பற்றி மிக முக்கியமான பார்வை முன்வைக்கப்படுகிறது. அதாவது, திரு அவை உலகெங்கும் கிளைகளைப் பரப்பிச் செயல்படும் ஒரு கார்ப்பரேட் (Corporate) நிறுவனமல்ல
என்பது தெளிவுபடுத்தப்படுகிறது. மாறாக, திரு அவை, உலகெங்கும் உள்ள தலத் திரு அவைகளின் ஒருங்கிணையம் (Communion) அல்லது
கூட்டமைப்பு என்கிற கருத்து முன்வைக்கப்படுகிறது. தலத் திரு அவைகள் இங்கு முக்கியத்துவம் பெறுகின்றன. உலகத் திரு அவை, ‘வேற்றுமையில் ஒற்றுமை’ காணும் திரு அவை என்பது முன்னிலைப்படுத்தப்படுகிறது.
“திரு அவை உலகின் கூக்குரலை (Cry of the World) செவிமடுத்துக்
கேட்கும் திரு அவையாக மாற வேண்டும். உலகின் அவசர மற்றும் முக்கியப் பிரச்சினைகளுக்கு, குறிப்பாக மக்களின் அழுகுரல்களுக்குப் பாராமுகத்தினராய் (Not Blind) இருக்கக்கூடாது.
முடங்கிக் கிடக்கும் (Static) திருச்சபையாக
அல்ல; இயேசுவைப் போல பயணம் செய்யும் (On Feet), பணி
செய்யும் (Always At Service), மக்களைத்
தேடிச் செல்லும் திரு அவையாக மலர வேண்டும்”
எனத் திருத்தந்தை நிறைவுத் திருப்பலியில் கூறியவை மிக முக்கியத்துவம் வாய்ந்தவை.
சுருங்கக்
கூறினால், வரலாற்றில் வாழ்ந்த இயேசுவைப் பின்பற்றும் திரு அவையாக நம் திரு அவை உருமாற வேண்டும். ஆயர் மாமன்றம் புதிய நம்பிக்கையைத் தருகிறது. நம்பிக்கையோடு பயணிப்போம்; உலகுக்குள் ஊடுருவி மக்கள் பணி செய்யத் தயார் ஆவோம்.
1. திரு அவையினுடைய புனிதத்தின் முன் மாதிரி அன்னை மரியா (நாள்: 6 செப்டம்பர் 1995)
1) திரு
அவையின் அடையாளம் மற்றும் பணியை இன்னும் ஆழமாகச் சிந்திப்பதற்காக முந்தைய மறைக்கல்வியில் அதைச் சார்ந்த சிந்தனைகளை வழங்கிய பிறகு, திரு அவையின் புனிதத்தன்மையையும், அதன் மாதிரியையும் முழுமையாக உணர
கன்னி மரியாவை நோக்கி நம் பார்வையைத் திருப்ப வேண்டியதன் அவசியத்தை நான் இப்போது உணர்கின்றேன்.
இதைத்தான்
இரண்டாம் வத்திக்கான் சங்கத்தில் பங்கெடுத்த தந்தையர்களும் செய்தார்கள். அதாவது, மீட்பின் வரலாற்றில் இறைமக்களுடைய நிலையைப் பற்றி விவரிக்கின்ற கோட்பாட்டிற்குப் பிறகு, இம்மீட்பின்
வரலாற்றில் மரியாவின் பங்கு பற்றிய விளக்கத்துடன் அதை நிறைவு செய்யவும் திருச்சங்கத் தந்தையர்கள் விரும்பினார்கள். உண்மையில், இரண்டாம் வத்திக்கான் சங்க ஏடான ‘Lumen Gentium’அதாவது இறைத் திட்டத்தில் திருச்சபையினுடைய எட்டாவது இயலின் நோக்கமும் திரு அவையியலில் மரியா கோட்பாட்டினுடைய முக்கியத்துவத்தை (ecclesiological significance of Marian doctrine) முன்னிலைப்படுத்துவதிலும் மற்றும் திரு அவையினுடைய மறைபொருளைப் புரிந்துகொள்வதிலும் மரியா எத்தகைய பங்களிப்பைக் கொடுத்திருக்கின்றார் என்பதை வெளிச்சமிட்டுக் காட்டுவதிலும்தான் இருக்கின்றது.
2) மரியா
பற்றிய திருச்சங்கத்தினுடைய வழிகாட்டுதலை விளக்குவதற்கு முன், நான் திருத்தூதர் பணிகள் நூலில் கூறப்பட்டிருப்பதைப் போன்று திரு அவையினுடைய தொடக்கத்தில் வாழ்ந்த மரியாவை நோக்கி என்னுடைய சிந்தனையைச் சீர்தூக்கிப் பதிக்க விரும்புகின்றேன். தொடக்க கால கிறித்தவச் சமூகத்தினுடைய வாழ்க்கையை விவரிக்கின்ற இந்தப் புதிய ஏற்பாட்டு நூலின் தொடக்கத்தில், திருத்தூதர்களுடைய
பெயர்களை ஒவ்வொன்றாகப் பதிவு செய்தபின் (திப 1:13), அதன் ஆசிரியராகிய நற்செய்தியாளர் லூக்கா இவ்வாறு கூறுகின்றார்: “அவர்கள் அனைவரும் சில பெண்களோடும், இயேசுவின் சகோதரர்களோடும், அவருடைய தாய் மரியாவோடும் இணைந்து ஒரே மனத்தோடு இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார்கள்”(திப
1:14).
இந்த
இடத்தில் மரியா ஒரு சிறப்புமிக்க இடத்தைப் பெறுகின்றார்; அதாவது, திருத்தூதர்களோடு மரியா மட்டுமே பெயரோடு குறிப்பிடப்படுகின்றார். இவ்வாறு அவர் படிநிலை பண்புக்கூறு (hierarchical aspect) மற்றும்
பணிமுறை பண்புக்கூறு (ministerial aspect) இவற்றிலிருந்து வேறுபட்ட மற்றும்
ஈடு செய்யக்கூடிய திரு அவையினுடைய ஒரு முகத்தை நமக்குப் பிரதிபலித்துக் காட்டுகின்றார்.
3) உண்மையில்
நற்செய்தியாளர் லூக்காவின் வார்த்தைகள் எருசலேம் நகரில் ஒரு வீட்டின் மேல் மாடி அறையில் சில பெண்கள் இருந்ததாகக் கூறுகின்றன. இவ்வாறு தொடக்க காலத்திலிருந்தே திரு அவையினுடைய வாழ்வில் பெண்களுடைய பங்களிப்பின் முக்கியத்துவத்தை நற்செய்தியாளர் குறிப்பிட்டுக் காட்டுகின்றார். இந்த உடனிருப்பானது மரியா, குழுமத்தினுடைய ஒற்றுமை மற்றும் செபத்தில் கொண்டிருந்த ஆர்வம் இவற்றோடு மிக நெருக்கமாக இணைக்கப்பட்டது. இந்தப் பண்புகள் திரு அவையினுடைய வாழ்விற்குப் பெண்களுடைய சிறப்புமிக்கப் பங்களிப்பினுடைய இரண்டு நிலைகளை மிகத் தெளிவாக வெளிப்படுத்துகின்றது. அதாவது, வெளி உலகக் காரியங்களுக்கு மிகவும் பொருந்துகின்ற ஆண்கள், தங்கள் உள்ளங்களின் ஒன்றிப்பை விண்ணகம் நோக்கி முன்னேறிச் செல்வதற்கும், தனிமனித உறவுகளுக்குள் அவனை மீண்டும் கொண்டு செல்வதற்கும் பெண்களுடைய உதவி மிகவும் அவசியமாகத் தேவைப்படுகிறது.
மரியாவின் பங்கு
குறிப்பிடத்தக்க
முக்கியத்துவம்
பெற்றது!
‘பெண்களுக்குள் பேறு பெற்றவள்’(லூக் 1:42). மரியா பெண்களுக்கே உரிய முறையில் அனைவரையும் ஒன்றிணைத்துச் செபத்தில் நிலைத்திருக்கச் செய்யும் பணியை மிகச் சிறப்பாக நிறைவேற்றுகின்றார். மரியாவைவிட வேறு யாரால் கிறித்துவில் நம்பிக்கைகொண்ட அனைவரையும் செபத்தில் நிலைத்திருக்க உற்சாகமூட்ட முடியும்? அவரைவிட வேறு யாரால் அன்பையும் ஒற்றுமையையும் பரப்ப முடியும்?
பதினொரு
திருத்தூதர்களிடமும் கிறித்துவால் ஒப்படைக்கப்பட்ட மறைப்பணியைக் கருத்தில் கொண்டு, அவர்கள் மத்தியிலிருந்த மரியாவோடு மேல் மாடியில் இருந்த பெண்களும், திருத்தூதர்களும் இணைந்து செபத்தில் ஒன்றித்திருந்தார்கள். அதேநேரத்தில் மறைப்பணிக்கான அழைத்தலை பெண்கள் பெறாவிட்டாலும், மக்கள்முன் திரு அவையின் சாட்சிகளாகி, கிறித்துவில் நம்பிக்கைக் கொண்டவர்களின் குழுமத்தினுடைய முழு உறுப்பினர் ஆனார்கள்.
4. தொடக்க
காலத் திரு அவையில் தூய ஆவியாரின் வருகைக்காகச் செபத்தில் காத்துக்கொண்டிருந்தபோது மரியாவினுடைய உடனிருப்பானது
(திப 1:14), தூய ஆவியாரின் வல்லமையால் இறைவார்த்தை மனுவுருவாதலில் அவருடைய பங்கை நமக்கு நினைவுப்படுத்துகின்றது (லூக் 1:35). அந்தத் தொடக்க நிலையில் மரியாவினுடைய பங்கினைப் பெந்தகோஸ்து
விழாவில் திரு அவையினுடைய வெளிப்படுத்துதலில் இருந்த அவருடைய பங்களிப்போடு நெருக்கமாக இணைத்துப் பார்க்கப்படுகின்றது.
தொடக்க
காலங்களில் திரு அவையினுடைய வாழ்வில் மரியாவினுடைய உடனிருப்பானது,
அதற்கு முந்தைய கிறித்துவினுடைய பொதுப் பணியின் பொழுது அவர் செய்த மிகவும் விவேகமுள்ள பங்களிப்போடு ஒப்பிடப்படுவதனால், குறிப்பிடத்தக்க வகையில் கவனத்திற்குக் கொண்டு வரப்படுகிறது. அவருடைய மகன் தமது பணியைத் தொடங்கிய பொழுது மரியா நாசரேத்தில் தங்கியிருந்தார். ஆனாலும் இந்தப் பிரிவானது கானாவூர் திருமண நிகழ்வு போன்ற முக்கியமான நிகழ்வுகளிலிருந்து அவரைப் பிரித்துவிடவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, இது மரியாவைக் கல்வாரி பலியில் பங்கெடுப்பதிலிருந்தும் தடுக்கவில்லை.
ஆயினும்,
முதல் கிறித்தவக் குழுமத்தில், மரியாவினுடைய பங்கானது
குறிப்பிடத்தக்கதொரு முக்கியத்துவத்தைப் பெறுகின்றது. இயேசுவினுடைய விண்ணேற்புக்குப் பின்னும் மற்றும் பெந்தகோஸ்து நாளை எதிர்பார்த்தலிலும் இயேசுவினுடைய தாய் அவருடைய மகனால் தொடங்கப்பட்ட பணியினுடைய முதல் நிலையிலேயே தனிப்பட்ட முறையில் உடன் இருக்கின்றார்.
5) திருத்தூதர்
பணிகள் நூலானது மரியா அவருடைய சகோதரர்களோடு(திப 1:14) மேல் மாடத்தில் இருந்ததை, அதாவது திரு அவையினுடைய விளக்கம் எப்பொழுதும் இருந்து வந்துள்ளதைப் போன்று, இயேசுவினுடைய உறவினர்களோடு இருந்ததை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது. மரியாவின் வழிகாட்டுதலின்
கீழ், இயேசுவின் சொந்தக் குடும்பமானது கிறித்துவின் ஆன்மிகக் குடும்பத்தின் ஒரு பகுதியாக மாறியது என்பது ஒரு குடும்பக் கூட்டம் அல்ல. “கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும், சகோதரியும், தாயும் ஆவார்”
(மாற் 3:35) என்று
இயேசுவே குறிப்பிடுகின்றார்.
அதே
நிகழ்வில், நற்செய்தியாளர் லூக்கா வெளிப்படையாகவே மரியாவை இயேசுவின் தாயாக(திப 1:14) விவரிக்கின்றார். கிட்டத்தட்ட விண்ணகம் சென்ற மகனது உடனிருத்தலின் (presence) அடையாளமாக ஏதோ ஒன்று தாயினுடைய உடனிருத்தலில் தங்கியிருக்க அவர் விரும்பியதாகவே நற்செய்தியாளர் காட்டுகின்றார். மரியா இயேசுவினுடைய முகத்தை அவருடைய சீடர்களுக்கு நினைவூட்டுகின்றார். மற்றும் குழுமத்தில் அவருடைய உடனிருத்தலின் வழியாக ஆண்டவர் இயேசு கிறித்துவுக்குத் திரு அவையினுடைய நம்பகத்தன்மையின்
அடையாளமாகவும் அவர் இருக்கின்றார்.
இந்த
இடத்தில் ‘தாய்’ என்ற அடைமொழியானது திரு அவையினுடைய வாழ்வை மரியா எந்தவொரு நெருக்கமான நினைவின் மனநிலையோடு பின்பற்றுகின்றார் என்பதை அறிவிக்கின்றது. மரியா அனைத்து வல்லமையும் பொருந்திய, இரக்கமுள்ள கடவுள் தன் வாழ்வில் செய்த அதிசயங்களைப் பிறருக்கு எடுத்துரைக்க திரு அவைக்குத் தன் இதயத்தைத் திறக்க வேண்டியிருந்தது.
திரு அவையின்
செபத்தின்
ஆசிரியை
அன்னை
மரியா!
தொடக்கத்திலிருந்தே
மரியா திரு அவையின் தாய் என்ற பங்கை முன்னெடுத்துச் சென்றார். அவருடைய செயல்கள் திருத்தூதர்களிடையே புரிதலை ஊக்குவித்தன. இவர்களைப் பற்றித்தான் நற்செய்தியாளர் அவர்களுக்கிடையே அவ்வப்பொழுது பிரச்சினைகள் எழுந்தாலும்,ஒத்த மனநிலை(one accord) கொண்டிருந்ததாக விவரிக்கின்றார்.
இறுதியாக,
மரியா நம்பிக்கைக் கொண்டோருடைய குழுமத்திடம் அவருடைய தாய்மையைத் திரு அவையினுடைய உருவாக்கம் மற்றும் அதனுடைய எதிர்காலத்திற்குத் தேவையான தூய ஆவியாரின் அருங்கொடைகளை, திரு அவைக்குப் பெற்றுத் தருவதற்காகச் செபிப்பதோடு மட்டுமல்லாமல், இடைவிடாது இறைவனோடு உள்ள உறவைப் பற்றி இயேசுவினுடைய சீடர்களுக்குக் கற்பிப்பதன் வழியாகவும் அறிவிக்கின்றார்.
இவ்வாறு
மறைப்பணியாளர்களுடைய மற்றும் நம்பிக்கைக் கொண்டோருடைய செயலானது, அச்செயலினுடைய தொடக்கம் மற்றும் அதனுடைய உள்நோக்கத்தை ஆண்டவரில் எப்பொழுதும் கொண்ட முக்கியமான மற்றும் பிரிக்க முடியாத ஒன்றாக அமைய, அவர் கிறித்தவ மக்களுடைய செபத்தின் மற்றும் இறைவனை எதிர்கொண்டு சந்திப்பதற்கும் முன்மாதிரியாகவும் ஆசிரியையாகவும் ஆனார்.
6) இந்தச்
சிறிய குறிப்புகளிலிருந்து மரியாவுக்கும் திரு அவைக்கும் இடையேயான உறவானது இரு தாய்மார்களுக்கு இடையேயான நெருங்கிய உறவோடு எவ்வாறு ஒப்புமைப்படுத்தப்பட்டுள்ளது
என்பதைத் தெளிவாகக் காண முடியும். இது மரியாவினுடைய தாய்மைப்
பணியை மற்றும் இறைவனின் தாயினுடைய (Theotokos) முகத்தைத்
தியானிப்பதில் அவருடைய உண்மையான அடையாளத்தை எப்பொழுதும் தேடுகின்ற திரு அவையினுடைய அர்ப்பணிப்பை மிகத் தெளிவாக வெளிப்படுத்துகிறது.
மூலம்:
Pope John Paul II, Mary is pattern of Church\'s holiness, in
kL\'Osservatore Romano, Weekly Edition in English, 13
September 1995, p.7.
1673-ஆம் ஆண்டு 26 வயது பிரான்ஸ் நாட்டு அருள்சகோதரி புனித மார்கரெட் மேரி அலகோக் (Saint Margaret Mary Alacoque) அவர்களுக்கு இயேசுவின் திரு இதயம் காட்சியளித்து 17 ஆண்டுகள் அக்காட்சி தொடர்ந்ததன் 350-ஆம் ஆண்டு நிறைவு கொண்டாடப்பட்டு வரும் இவ்வேளையில், திருத்தந்தை அக்டோபர் 24 அன்று இயேசுவின் திரு இதயம் குறித்த ‘அவர் நம்மை அன்புகூர்ந்தார்’ (‘Dilexit nos’) என்ற தனது நான்காவது சுற்றுமடலை வெளியிட்டுள்ளார். முன்னுரை, முடிவுரையுடன் ஐந்து சிறப்புப் பகுதிகளாக இம்மடல் வரையப்பட்டுள்ளது. மொத்தம் 220 எண்கள் கொண்ட இம்மடல், இயேசுவின் உண்மை அன்பின் ஆழம், அகலம் மற்றும் அவரது எல்லையில்லாத்தன்மை பற்றிப் பேசுகிறது. “கடவுள் நம்மேல் அன்பு கூர்ந்தார்” (உரோ 8:37) என்ற பவுலின் வார்த்தையோடு இந்த மடலை திருத்தந்தை வரைந்துள்ளார். “நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவின் வழியாய் அருளப்பட்ட கடவுளின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கவே முடியாது” (உரோ 8:39) என்கிற தூய பவுலின் அடிதொட்டு இம்மடல் ஆரம்பமாகிறது. இந்தச் சுற்றுமடலில் இயேசுவின் இதயத்தில் குடிகொண்டிருக்கும் இறையன்பு மற்றும் மனிதநேய அன்பு பற்றித் திருத்தந்தை விரிவாக எடுத்துரைக்கிறார். “இயேசு கிறிஸ்துவின் திரு இதயமானது மனித மற்றும் இறையன்பின் பாரம்பரியத்தையும், நிகழ்காலச் சிந்தனைகளையும் மீட்டெடுக்க அழைப்பு விடுக்கின்றது. நம்பிக்கையில் மென்மை மற்றும் மகிழ்ச்சியை மறந்துவிடாதபடி திரு இதயத்தின் உண்மையான பக்தியைப் புதுப்பிக்க அது அழைப்பு விடுக்கின்றது” என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நற்செய்திப்
பகுதிகளைத் தியானிப்பதன் வழியாகவும், கிறிஸ்துவின் உரையாடல்களை ஆய்ந்துணர்வதன் வழியாகவும், அவரின் அன்பை நாம் புரிந்துகொள்ள முடியும் என்று திருத்தந்தை வலியுறுத்தியுள்ளார். மேலும், ஆண்டவர் இயேசு பிறருடன் கொண்டிருந்த உறவுகளை ஆராய்ந்து பார்ப்பதன் வழியாக, அவர் நம் ஒவ்வொருவரையும் எவ்வாறு நடத்துகிறார் என்பதை நாம் உணர முடியும் என்றும் இச்சுற்றுமடல் வழியாகத் திருத்தந்தை தெரிவித்துள்ளார்.
இயேசுவின்
திரு இதய அன்பே நம்மை அன்பு செய்ய உந்தித் தள்ளுகின்றது என்றும், அனைவரையும் உடன்பிறந்த சகோதரர்களாக எண்ணி, அவர்களை நோக்கிச் செல்ல நம்மை அனுப்புகின்றது என்றும் குறிப்பிடும் திருத்தந்தை, இயேசுவின் திறந்த இதயம் நம்மை அன்பு செய்ய நிபந்தனையின்றிக் காத்திருக்கிறது என்றும், நம்மை அன்பு செய்வதற்கும், அவருடைய அன்பைப் பெறுவதற்கும், அவரே நம்மை முதலில் அன்பு செய்தார் என்றும் எடுத்துரைத்துள்ளார். மேலும், விளிம்புநிலை மக்கள் சார்பான உடன்பிறந்த உணர்வுடன் கூடிய உலகத்தை நோக்கி ஒன்றிணைந்து நடக்கவும், கற்றுக் கொள்ளவும் அழைப்பு விடுக்கிறார்.
போர்கள்,
சமூக - பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், நுகர்வுக் கலாச்சாரம், தொழில்நுட்பத்தின் மனிதாபிமான மற்ற பயன்பாடு ஆகியவற்றின் பிடியில் உலகம் தன் இதயத்தை இழந்து விட்டது என்று கூறும் திருத்தந்தை, மீண்டும் இயேசுவின் இதயத்திற்குத் திரும்ப வேண்டியதன் முக்கியத்துவம் பற்றியும் பேசுகிறார். கிறிஸ்துவின் அன்பால் நிரப்பப்பட்ட புனிதர்கள்,
புனித மார்கரெட் மேரி அலகோக் பெற்ற திரு இதய காட்சிகள், கிறிஸ்துவின் திரு இதயத்தின் மீதான பக்தி, உலகை அன்பு செய்யவைக்கும் மேய்ப்புப்பணி போன்ற பல்வேறு தலைப்புகளுடன் இடம்பெற்றுள்ள இச்சுற்றுமடலானது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செபத்துடன் நிறைவுபெறுகின்றது.
திருத்தந்தை
பிரான்சிஸ், திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட் அவர்களுடன் இணைந்து, ‘Lumen fidei’
(2013) என்ற சுற்றுமடலையும், சுற்றுச்சூழல் அக்கறை குறித்த Laudato si’ (2015) என்ற
சுற்றுமடலையும், மனித உடன்பிறந்த நிலை குறித்த ‘Fratelli tutti
(2020) என்ற சுற்றுமடலையும் வெளியிட்டுள்ளார். இயேசுவின் திரு இதயம் குறித்த ‘Dilexit nos’
திருத்தந்தையின்
நான்காவது புதிய சுற்றுமடல் ஆகும்.
- முதன்மை ஆசிரியர்