நான் ஏற்கெனவே சொன்னதுபோல, நோயிலிருந்து மீடேறி தேறிவந்த காலத்தில் கோயம்புத்தூர் கனகா மருத்துவமனைக்கும், புனித மேரி மருத்துவமனைக்கும் பலர் என்னைப் பார்க்க வந்தார்கள். எனது உறவினர்கள் பலர் மைசூரிலிருந்த என் அண்ணன் வீட்டுக்கும், எனது சொந்த ஊருக்கும் என் உடல் நிலைபற்றி விசாரிக்க வந்தார்கள். பலர் என்மேல் மிகுந்த அக்கறை காட்டினார்கள். சிலர் மாற்று மருத்துவ முறைகள் பற்றிப் பரிந்துரைத்தார்கள். சித்தா, ஓமியோபதி, வீட்டு வைத்தியம், அக்குப்பஞ்சர், ஆயுர் வேதம் முதலிய மாற்று மருத்துவமுறைகளை முயன்று பார்க்கச் சொன்னார்கள்.
பலர் என்னைப் பார்த்தவுடன் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு விடுவார்கள். அவர்களை நான் தேற்ற வேண்டியதிருக்கும். எனது நிலையைப் பார்த்து பலர் துன்பப்படுதலின் எதார்த்தத்தைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கிவிடுவார்கள். எனக்கு நடக்கும் நிகழ்ச்சிகள் குறித்து எரிச்சல்படுவார்கள். நானோ எல்லாருக்கும் இனிமையான சொற்களை வைத்திருப்பேன். உண்மையில் நான் உற்சாகமாகவே இருந்தேன். எப்படியிருப்பினும் வலி என்னுடையது, என்னுடையது மட்டுமே.
இயேசு சபைக் குடும்பத்தில் எனக்கு மூத்த இயேசு சபையினரிடமிருந்து மிகுந்த ஆதரவு கிடைத்தது. சிலர் எனக்காக வருத்தப்பட்டார்கள். சிலர் செபம் செய்தார்கள். சாப்பாட்டு மேசையில் வாழ்த்துச் சொல்லிக் கொண்டபோதும், தாழ்வாரங்களிலும் அறைகளிலும் என்னைக் காண்பது அவர்களுடைய வலிகளையும், நோய்களையும் மறக்கச் செய்தது. என்னுடைய வலிகளோடும், உடல் துன்பங்களோடும் ஒப்பிடும்போது அவர்களுடைய வலிகள் எல்லாம் ஒன்றுமில்லை என்றார்கள்.
வாழ்க்கைப் பாடங்கள் எனக்கு என்ன கற்றுத் தந்திருக்கின்றன? வாழ்க்கையில் நேர்கின்ற முக்கிய இறை அனுபவங்களை வளர்த்துப் பேணுவது இன்றியமையாதது என்று என் வாழ்க்கை எனக்குக் கற்றுத் தந்திருக்கிறது. இந்த அனுபவங்கள் எனது இக்கட்டான நாள்களில் எனக்கு ஆறுதலளித்து என்னை வலுப்படுத்தியிருக்கின்றன. மேலும், இந்த நிகழ்வுகள் ஆண்டவரின் பிரசன்னத்திற்கு என்னை இயல்பாக ஆக்கிக்கொள்ள உதவின. என்னுடைய கண்ணோட்டங்களை, முன்னோக்குகளை, பார்வைகளைப் புதுப்பித்தன. இந்தப் புதிய விழிப்புணர்வு எனது வாழ்வின் வெவ்வேறு பக்கங்களை என்னுள் சேர்க்க முடிந்தது. வாழ்வின் வெவ்வேறு பரிமாணங்களை உள்வாங்கி, என்னுள் இருக்கும் இறைவனின் நன்மைத்தனத்தைச் சுவைத்திருக்கிறேன். இவ்வாறு இந்தக் கணத்தில் எனது பரிமாணங்களின் சிறந்த வடிவமாக ஆவது கடவுளை மகிமைப்படுத்தும் ஒரே வழி.
உடைந்து போன நான் முழுமனிதனாக ஆவதன் மூலம், ஒவ்வொரு நாளும் தரப்படும் வாழ்க்கையை ஏற்க என்னை மாற்றிக்கொள்வதும், நன்றிமிக்க வாழ்வை வாழ்வதும், எனக்குக் கடவுளின் பிரசன்னத்தைப் பறைசாற்றும் சிறந்த வழிகளாக ஆயின.
எனது தன்னல எல்லைகளைத் தாண்டி பகுத்தறிவிற்குட்பட்ட ஆபத்துகளையும், அறைகூவல்களையும் எவ்வளவு அதிகமாக எதிர்கொள்கிறேனோ அந்த அளவு கடவுள் தந்த திறன்களையும், ஆற்றல்களையும், திறமைகளையும் நான் சிறப்பாகப் பயன்படுத்துகிறேன் என்றும் கற்றுக்கொண்டேன். மேலும், அச்சம் ஒரு பெரிய தடைக்கல் என்று புரிந்துகொண்டேன். ஏனென்றால், அது என் மேலேயே எனக்கு ஐயத்தைக் கொடுத்து, என் தன்னம்பிக்கைக்குக் குழி தோண்டுகிறது. எனவே, அச்சம் என்ற மனநிலைக்கு ஆளாகி விடக்கூடாது என்று உறுதியெடுத்தேன்.
கார் ஓட்டுதல், வயல்களில் நடத்தல், தரையைக் கூட்டிப் பெருக்குதல், துணி துவைத்தல் என்று நான் வேலையில் மூழ்கிவிட்ட அடுத்த நிமிடம் என்னில் தன்னம்பிக்கையும், மன உறுதியும், தீர்மானமும் பெருகுவதைக் கண்டேன்.
தெய்வீகத் திருவுளத்திற்கு இயல்பாகி, வலியைக் கட்டுக்குள் வைக்கக்கூடிய ஆற்றலுள்ள அவரிடம் நம்பிக்கை கொள்ளவும் அழைக்கப்படுகிறேன்; ஒவ்வொரு நாளும் தரப்படுகிற வழியில் வாழ்க்கையை ஏற்கவும் அழைக்கப்படுகிறேன் என்பது நான் கற்ற மற்றொரு பாடம். எனக்கு வேண்டுவதெல்லாம் உடனே எப்போதும் கிடைக்காது என்று எனக்கு வாழ்க்கை கற்றுக் கொடுத்திருக்கிறது.
கால மேலாண்மையில் நான் எவ்வளவு திறமையுள்ளவனாக இருந்தாலும், வருங்காலத்தைப் பற்றி முன்னறிவிப்பதில் எவ்வளவு வல்லமை பெற்றிருந்தாலும் காலம் என் கட்டுப்பாட்டில் இல்லை என்று எனக்குக் கற்றுத் தந்தது. எனவே, நான் உள் அமைதி கொள்ளவும், இப்போதில் ஒரு நாள் வாழ்வை ஒரு நேரத்தில் வாழவும் அழைக்கப்பட்டிருக்கிறேன்.
நோய், வலி, துன்பம் ஆகியவை எல்லாம் கடவுளின் சாபம் என்ற உலகக் கண்ணோட்டமுள்ளோர் மத்தியில் விசுவாசிகள் எப்படி நடந்துகொள்வது? எசாயா இறைவாக்கினரோடு சேர்ந்து நாமும் “படைகளின் ஆண்டவரிடமிருந்து இந்த அறிவு வருகின்றது; அவர் திட்டமிடுவதில் வியப்புக்குரியவர், செயல்படுத்தும் அறிவில் சிறப்புக்குரியவர்” (28:29) என்று உறுதி கூறலாமா?
கடவுள் நமது வாழ்க்கையின் முழுமையான ஒரு பகுதியாக இருக்கிறார் என்று நம்ப நமது விசுவாசம் நம்மை அழைக்கிறது; நமக்கு அறைகூவல் விடுக்கிறது. அப்படியானால், அதில் வலியும், துன்பமும், துயரமும் அடங்கும். இந்த நிகழ்வின் மூலம் எனக்குக் கடவுள் ஒரு திட்டம் வைத்திருக்கிறார் என்று நம்பத் தொடங்கினேன். இந்த நம்பிக்கை எனது பதற்றம், எரிச்சல், மன அழுத்த மனநிலைகளைக் குறைத்து, எனது வாழ்க்கைக் கண்ணோட்டத்தை மாற்றியது.
இவ்வாறு இந்த அனுபவங்கள் ஒவ்வொரு நாளும் என்னை வலுப்படுத்தின. “அனைத்திலும் நல்லதே நடக்கும், எல்லாம் நல்லதாகவே இருக்கும், எல்லாச் செயலும் நல்லதாகவே இருக்கும்” (நார் விச்சின் அன்னை ஜூலியனின் நம்பிக்கை) என்ற நம்பிக்கையில் என் வாழ்க்கையைத் தொடர்கிறேன்.
“நீங்கள் முழுமையாக இருக்கிறீர்கள்
அதனிலும் குறைவாக நினைப்பது
ஓர் ஆறு தனக்குப் பல வளைவுகள்
இருக்கின்றன என்பதால்தான்
மிக மெதுவாக ஓடுகிறது என்றும்
தன் அருவிகள் மிக வேகம் என்றும்
எண்ணுவது போலப் பொருளற்றது.
தொடக்கமும் நடுவும் முடிவுமற்ற பயணத்தில்
நீங்கள் இருக்கிறீர்கள்.
தவறான திருப்பங்கள் இல்லை
நீங்கள்தான் இருக்கிறீர்கள்;
உங்கள் வேலை நீங்கள் நீங்களாக இருப்பதுதான்.” - ஜென் சின்செரு.
செபமாலை இறைவேண்டல்!
கத்தோலிக்கர்களின் இறைவேண்டலில் செபமாலைக்கு ஒரு முக்கிய இடமிருக்கிறது. ஆனால், செபமாலை பற்றிய நமது பார்வையைச் சற்று விசாலப்படுத்த வேண்டும். செபமாலை என்பது ஒரு மரியியல் மன்றாட்டு, மரியன்னைமீது அன்பு கொண்ட பிள்ளைகள் தவறாது வெளிப்படுத்தும் அன்பின் வேண்டுதல் என்பதே பலரின் பொதுவான புரிதல். அது உண்மைதான் என்றாலும், முழு உண்மையல்ல.
மேற்கூறியவைகளோடு, செபமாலை ஒரு கிறிஸ்தியல் மன்றாட்டு என்பதும், இயேசுவின் வாழ்க்கை மறையுண்மைகளைச் சிந்திக்கும் ஒரு கிறிஸ்து மைய வேண்டுதலும்கூட என்பதே முழு உண்மை. இது சிலருக்கு வியப்பைத் தரலாம். ஆனால், இதுவே செபமாலை பற்றிய முழுமையான பார்வை. செபமாலையில் நம் உதடுகள் ‘அருள் நிறைந்த மரியே வாழ்க’ என்று உச்சரித்தாலும், நம் உள்ளம் இயேசுவின் வாழ்வு மறையுண்மைகளையே சிந்திக்கிறது. எனவேதான், அது ஒரு ‘கிறிஸ்து மைய மன்றாட்டு’ என அழைக்கப்படுகிறது.
கத்தோலிக்கத் திரு அவையின் மறைக்கல்வி (எண்:971) மரியன்னை வணக்கம் என்பது கிறிஸ்தவ வழிபாட்டின் இன்றியமையாப் பங்கு என்கிறது. முற்காலத்திலிருந்தே திரு அவை அன்னை மரியாவைக் கடவுளின் தாய் என்று வணங்கி வந்துள்ளது என்றும், மரியன்னை வணக்கம் என்பது இறைவழிபாடு, ஆராதனையிலிருந்து வேறுபட்டது என்றும் தெளிவுபடுத்துகிறது. மேலும், மரியன்னை வணக்கம் மரியன்னை விழாக்கள், செபமாலை போன்ற மரியன்னை மன்றாட்டுகள் வழியாக வெளிப்படுகிறது என்கிறது. சிறப்பாக, ‘செபமாலை நற்செய்தி நூலின் மிகச் சிறந்த மாதிரி’ என்றும் செபமாலையைப் புகழ்கிறது கத்தோலிக்கத் திருச்சபையின் மறைக்கல்வி.
செபமாலையைத் தங்கள் அன்றாட இறைவேண்டலில் இணைத்துக் கொண்ட பலரும் அதன் ஆசிகளைப் பற்றி சான்று பகர்ந்துள்ளனர். திருத்தந்தை 12-ஆம் பயஸ் செபமாலை மனிதரிடமிருந்து அல்ல; இறைவனிடமிருந்தே வந்தது என்று சொல்லி செபமாலை வேண்டலை ஊக்குவித்தார். அது வெறுமனே, அன்னை மரியாவிடம் மட்டும் நம்மை இட்டுச் செல்வதில்லை. செபமாலையை உளமார, உணர்ந்து வேண்டுபவர்கள் தந்தை, மகன், தூய ஆவியார் என்னும் மூவோர் இறைவனிடம் நெருங்கி வருகின்றனர் என்பதே செபமாலை அன்பர்களின் அனுபவம்.
இறைவார்த்தைக்கு முதன்மை தருகிற இன்றைய நாள்களில் செபமாலை ஒரு விவிலிய மன்றாட்டு என்பது வலியுறுத்தப்படுகிறது. ‘அருள் நிறைந்த மரியே வாழ்க’ என்னும் மன்றாட்டின் முதல் பகுதி முழுவதும் விவிலியத்திலிருந்தே எடுக்கப்பட்டுள்ளது என்பது முதல் வாதம். செபமாலையின்போது நாம் சிந்திக்கின்ற கிறிஸ்துவின் வாழ்வியல் மறையுண்மைகள் அனைத்தும் விவிலியம் சார்ந்தவையே என்பது இரண்டாவது வாதம்.
செபமாலையின் தனிச்சிறப்பே அதன் எளிமைதான்; அன்னை மரியாவைப்போல! படித்தவர், பாமரர், பெரியோர், சிறியோர் என அனைவரும் மிக எளிதாக இறைவேண்டல் செய்யக்கூடிய பண்பு செபமாலைக்கு இருக்கிறது. மேலும், செபமாலையின்போது அன்னை மரியாவும் நம்மோடு சேர்ந்து மன்றாடுகிறார் என்பது அதன் கூடுதல் சிறப்பு. மரியன்னை ஓவியங்கள் பலவற்றில் அன்னையின் கையில் செபமாலை இருப்பதைக் காணலாம். நாம் செபமாலை செபிக்க நம்மை ஊக்குவிக்கவே அன்னை மரியா செபமாலையோடு காட்சி தருகிறார். லூர்து நகரில் மசபியேல் குகையில் சிறுமி பெர்னதத்துவுக்கு 18 முறை காட்சி தந்த அன்னை தனது கையில் செபமாலை ஒன்றை வைத்திருந்தார். பெர்னதத் செபமாலை செபித்தபோதெல்லாம், மரியன்னையின் கையிலுள்ள செபமாலை மணிகள் அசைந்ததைக் கண்டதாகப் பெர்னதத் சான்று பகர்ந்துள்ளார்.
திரு அவையின் நெடிய வரலாற்றில் எத்தனையோ புனிதர்கள் செபமாலையைத் தங்கள் வாழ்வோடு இணைத்துக் கொண்டுள்ளனர். புனித தோமினிக்கில் தொடங்கி, அருளாளர் ஆலன் டி லா ரோச், புனித லூயி மரிய மாண்ட்ஃபோர்ட், புனித இராபர்ட் பெல்லார்மின், புனித அல்போன்ஸ் மரிய லிகோரியார், புனித அன்னை தெரசா, புனித திருத்தந்தை இரண்டாம் ஜான்பால், இன்றைய திருத்தந்தை பிரான்சிஸ் என திரு அவையின் புனிதர்கள், மாமனிதர்கள் அனைவரின் மனம் கவர்ந்த மன்றாட்டாகச் செபமாலை இருக்கிறது.
செபமாலையின் நிறைவான தனித்துவச் சிறப்பு அது ஓர் ஆழ்நிலைத் தியான வேண்டல் (Contemplative prayer) என்பது. நமது இறைவேண்டல் சொற்களிலும், சிந்தனையிலும் தொடங்குகிறது. அடுத்து அது தியானம் என்னும் நிலைக்கு உயர்கிறது. தியானத்தில் சிந்தனை, கற்பனை ஆகியவற்றைப் பயன்படுத்துகிறோம். இவை அனைத்தையும் கடந்த அமைதியே ஆழ்நிலைத் தியானம் என்பது. இறைவேண்டலின் சிகரமே ஆழ் நிலைத் தியானம் என்றும் சொல்லலாம். செபமாலையை நாம் பொருளுணர்ந்து, முழு ஈடுபாடு மற்றும் அர்ப்பணத்தோடு மன்றாடும்போது, அதுவே ஓர் ஆழ்நிலைத் தியான வேண்டலாக மாறுகிறது.
செபமாலையை மூன்று விதங்களில் பயன்படுத்தலாம். அதனை ஓர் எளிய மரபு வேண்டலாக மன்றாடலாம். இதுவே முதல் படி. கிறிஸ்துவின் வாழ்வு மறையுண்மைகளைத் தியானிக்கும் தியான இறைவேண்டலாகவும் பயன்படுத்தலாம். இது இரண்டாவது படி. இன்னும் சிறப்பாக, செபமாலையைத் தந்தை, மகன், தூய ஆவியார் என்னும் மூவோர் இறைவனோடு அமைதியில் ஒன்றிக்கும் ஆழ்நிலைத் தியான வேண்டலாகவும் உயர்த்தலாம். இதுவே சிறப்பான படி. செபமாலை அன்பர்கள் அனைவரும் முதல் படியிலிருந்து மூன்றாம் படிக்குப் பயணம் செல்வோமாக!
(தொடரும்)
திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்களுடைய மரியன்னை மறைக்கல்வி
அன்புக்குரிய
வாசகப்
பெருமக்களே!
திரு
அவை வரலாற்றில் மரியன்னை பக்தி, மரியியல் ஆன்மிகம் தவிர்க்க இயலாத ஒன்று. திருவிவிலியம், கோட்பாடு, திரு அவைப் போதனை, திரு அவை மரபு எனப் பல தளங்களில் விரவிக்
கிடக்கும் மரியியல் பேருண்மைகளைத் தனது திருத்தூது மடல், மூவேளைச் செப சந்திப்பு, திருத்தூது ஊக்கவுரை வாயிலாக மக்களுக்கு வழங்கிய திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் அவர்களின் சிந்தனைகளைத் தமிழில் மொழியாக்கம் செய்து, ‘நம் வாழ்வு’ வாசகர்களுக்கு
தொடர் கட்டுரைகளாக வழங்க முன்வந்துள்ளார் மரியன்னை ஊழியர் சபையைச் சார்ந்த தந்தை
அமல்ராஜ்
ஆரோக்கியசாமி,
ம.ஊ.ச. அவர்கள்.
உரோமையில் தங்கள் துறவற சபை தலைமையகத்தில் ஆவணக்காப்பக இயக்குநராகவும்,
தங்கள் சபையின் வரலாற்று ஆய்வாளராகவும் பணியாற்றிக் கொண்டிருக்கும் இவர், ‘மரியன்னை மறைக்கல்வி’ எனும்
இத்தொடர் வாயிலாக மரியன்னை பற்றிய முழுமையான தரவுகளைத் திரு அவை வழிநின்று வழங்கவுள்ளார். தந்தை அமல்ராஜ் அவர்களை மனதார வாழ்த்துகிறேன்; வாசகர்
மத்தியில் இத்தொடர் மரியன்னை பக்தியை வளர்க்கும் என நம்புகிறேன்.
- முதன்மை ஆசிரியர்
திருத்தந்தை
இரண்டாம் ஜான்பால் அவர்கள் செப்டம்பர் 7, 1995 முதல் நவம்பர் 13, 1997 வரை
ஒவ்வொரு புதன்கிழமையும் நடைபெறும் தனது மக்கள் சந்திப்பின்பொழுது (Wednesday Papal audience)
அன்னை மரியா குறித்த எழுபது மறைக்கல்விச் சிந்தனையை வழங்கியுள்ளார். அன்னை மரியா பற்றிய திருத்தந்தையினுடைய இந்த எழுபது மறைக்கல்விச் சிந்தனைகளும் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
முதலாவது
பகுதியில், ‘திரு அவையினுடைய வரலாற்றில் கன்னி மரியாவின் பிரசன்னம்’
என்கின்ற தலைப்பில் ஒன்பது சிந்தனைகளை வழங்கியுள்ளார். இதில் அன்னை மரியா தொடக்கக்காலத் திரு அவையால் எவ்வாறு பார்க்கப்பட்டார், வணக்கம் செலுத்தப்பட்டார் மற்றும் திரு அவையின் வரலாற்றில் எத்தகைய இடம் அவருக்குக் கொடுக்கப்பட்டது என்பதைப் பற்றி விவரித்தபின், இரண்டாம் வத்திக்கான் சங்கத்தினுடைய மரியியல் சிந்தனைகளோடு நிறைவு செய்கின்றார்.
இரண்டாவது
பகுதியில், ‘கன்னி மரியா மீதான திரு அவையின் நம்பிக்கை குறித்த தனது சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்கின்றார். அதிகமான தலைப்புகளைக் கொண்ட இப்பகுதியில் (46 தலைப்புகள்) இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் மரியன்னை கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு திரித்துவம், கிறிஸ்து மற்றும் திருச்சபையின் மறையுண்மையில் கன்னி மரியாவின் பிரசன்னம் மற்றும் பங்கு பற்றிய முழுமையான மற்றும் மிக ஆழமானதொரு விளக்கத்தைத் திருவிவிலியம், திரு அவைத் தந்தையர்களுடைய சிந்தனை, திரு அவையின் ஆசிரியம் மற்றும் பாரம்பரியம் இவைகளை அடிப்படையாகக் கொண்டு விளக்குகின்றார்.
மூன்றாம்
பகுதியில், திரு அவையில் கன்னி மரியாவின் பங்கு பற்றி 14 தலைப்புகளில் விளக்குகின்றார். இரண்டாவது வத்திக்கான் திருச்சங்கம் கற்பிப்பதை அடிப்படையாகக் கொண்டு, எவ்வாறு மரியா திரு அவையின் நிறுவுநர் மற்றும் தலைவராகிய கிறித்துவின் தாயாக இருப்பதுடன், அருளின் வரிசையில் விசுவாசிகளின் தாயாக இருக்க அவர் தந்தையாம் கடவுளால் அழைக்கப்பட்டார் என்பதைத் தெளிவாக விளக்குகின்றார். பல சவால்கள் நிறைந்த
இவ்வுலகில் வாழும் இறைமக்கள், அன்னை மரியாவை முன்மாதிரியாகக் கொண்டு வாழ வேண்டும் என்பதையும் அவர் இவ்வுரைகளில் வலியுறுத்துகின்றார்.
இறுதியில்,
திருத்தந்தை அவர்கள் தனது மரியியல் சிந்தனையை அனைத்துக் கிறித்தவப் பிரிவுகளிடையே ஒற்றுமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், இயேசுவின் தாயான மரியா கிறித்தவர்களைப் பிரிக்கும் ஒரு நபர் அல்லர்; மாறாக, அவர் அனைவருக்கும் தாய். எனவே, ஒவ்வொரு கிறித்தவனும் தனது எடுத்துக்காட்டான வாழ்வு மூலம் மரியன்னையிடமிருந்து பெறும் மகிழ்ச்சியைத் தனது சகோதர-சகோதரிகள் அனைவருடனும் பகிர்ந்துகொள்ள முடியும் என்பதையும் வலியுறுத்தி, அத்தகைய சாட்சிய வாழ்வை நாம் ஒவ்வொருவரும் வாழ நம்மை அழைக்கின்றார்.
இத்தகைய
கருத்தாழமிக்க திருத்தந்தையின்
மரியியல் சிந்தனைகளை வாசித்து, நமது தாயான மரியாவைப் பற்றிய திரு அவையின் போதனையிலும், அன்னை மரியா மீதான அன்பிலும் நாளும் வளர்வோம்.
(தொடரும்)