(தந்தை அன்பு செல்வன், தாய் மார்த்தா, மகன் அகஸ்டின், மகள் கிறிஸ்டினா இவர்களோடு அருள்பணியாளர் தாமஸின் உரையாடல் தொடர்கிறது)
அகஸ்டின்: “தந்தையே, கிறிஸ்து தனக்குள் இருந்த கடவுளின் ஆற்றலை உச்ச நிலைக்குக் கொண்டு சென்றார் என்றும், அத்தகைய உயர்நிலை ஆற்றலே அவரது பிரசன்னமாக ஆலயத்தில் குடியிருக்கிறது என்றும் நான் அறிந்துகொண்டது இந்த வார ஞாயிறு திருப்பலியில் நான் புதிய கண்ணோட்டத்தோடு பங்கெடுக்க உதவியது. கடவுள் ஆலயத்தில் இருக்கிறார் என்பதை வெறுமனே நம்பிக்கை அளவில் மட்டும் அணுகாமல், அறிவுப்பூர்வமாக அறிந்து கொள்வதற்கான வாய்ப்பாகவும் கடந்த வார உரையாடல் அமைந்திருந்தது.”
கிறிஸ்டினா: “கிறிஸ்துவில் செயல்பட்ட ஆற்றலே அவர் செய்த பல்வேறு நற்செயல்களுக்கான - அதாவது குணமளித்தல், வல்லமையோடு போதித்தல், பாவங்களை மன்னித்தல் போன்றவற்றிற்கான - காரணமாக இருந்திருக்கிறது என்பதை அறிந்து கொண்டேன். அது மட்டுமல்லாமல், அவரது ஆற்றல் இன்றும் செயல்படுவதன் காரணமாக மேற்காணும் நற்செயல்பாடுகளை நாமும் இன்று பெற்றுக்கொள்ள முடியும் என்பதையும் அறிந்து கொண்டேன்.”
மார்த்தா: “பாதர், சென்ற வாரம் அகஸ்டினும் கிறிஸ்டினாவும் நான் எதுவும் சொல்லாமலேயே ஆலயத்திற்குப் புறப்பட்டுச் சென்றார்கள். அது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.”
அன்பு செல்வன்: “தந்தையே! ஜேம்ஸ் ரெட்பீல்டு (James Redfield) என்பவர் எழுதிய ‘The Celestine Prophesy’ என்ற புத்தகம் என் நினைவிற்கு வருகிறது. அப்புத்தகத்தில் உலகின் எல்லா உயிரினங்கள் வழியாகவும் பிரபஞ்சத்தின் ஆற்றல் பாய்ந்துகொண்டே இருக்கிறது. இந்த ஆற்றலை விழிப்புணர்வோடு கையாள்கின்ற தன்மை மனிதர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்ட மாபெரும் கொடை என்று சொல்கிறார்.”
அருள்பணி: “ஆம்! மனிதரைத் தவிர மற்ற அனைத்திலும் பிரசன்னமாயிருக்கின்ற ஆற்றல், ஒரு குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட நிலையில் மட்டுமே செயல்படும் நிலையில் உள்ளது. ஆனால், மனிதர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் சுதந்திரம் எத்தகையது எனில், தங்களது உடல்நிலையையும் மனநிலையையும் சரியாக வைத்துக்கொள்வதன் மூலம், தங்களை ஆற்றலின் உச்சத்திற்கே எடுத்துச் செல்ல முடியும். கிறிஸ்துவைப் பொறுத்த அளவில் அவர் தம் ஆற்றலை அதன் உச்சத்திற்கே எடுத்துச் சென்றவர். அதிலும் சிறப்பாக உயிர்ப்பிற்குப் பின்பு ஆற்றலின் முழுவடிவமாகவே விளங்கினார். எனவேதான் மூடியிருந்த கதவுகளை அவரால் ஊடுருவ முடிந்தது. மேலும், இத்தகைய உயிர்த்த நிலையில் அவரின் ஆற்றலுக்கும் கடவுளின் ஆற்றலுக்கும் இடையே வேறுபாடு இல்லை என்று சொல்கின்ற அளவிற்கு இரண்டும் ஒத்த நிலைக்குச் சென்றன. கிறிஸ்து தமது ஆற்றல் நிலையில் கடவுளோடு ஒத்த நிலையில் இருக்கின்ற வேளையில், தனித்துவம் வாய்ந்தவராகவும் விளங்குகின்றார் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.”
மார்த்தா: “இப்பொழுது நாம் பேசிக் கொண்டிருக்கும் ஆற்றலுக்கும், சில வாரங்களுக்கு முன்பாக நாம் பேசிய அருள்செல்வத்திற்கும் ஏதாவது தொடர்பு உண்டா?”
அருள்பணி: “நல்லதொரு கேள்வி! நிச்சயமாகத் தொடர்பு உண்டு. அருள்செல்வம் என்பது நம் அகவாழ்வை உயர்நிலையில் வைத்திருக்க உதவும் ஒன்று என்று நாம் பார்த்தோம். ஒரு மனிதருக்குள் ஆற்றல் பெருகுகின்ற போது, அவருக்குள் இருக்கின்ற அகச்செல்வங்கள் உயிர்பெற்று எழ ஆரம்பிக்கின்றன. ஓர் உண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மனிதர்களாகிய நாம் பூமியில் படைக்கப்பட்டபோது, வாழ்வை நிறைவாக வாழ்வதற்குத் தேவையான அத்தனை அருள்வளங்களோடுதான் உருவாக்கப்பட்டோம். எனினும், பல வேளைகளில் நமக்குள் கொடுக்கப்பட்டிருக்கும் அருள்வளங்கள் வெளிப்படாமல் புதைக்கப்பட்ட நிலையிலேயே இருந்து விடுகின்றன. கடவுளின் ஆற்றலை நமக்குள் உள்வாங்குகின்றபோது, உறங்கிக் கொண்டிருக்கின்ற அருள்வளங்கள் உயிர்பெற ஆரம்பிக்கின்றன.”
அன்பு செல்வன்: “தந்தையே, என் மனத்திற்கு ஓர் உதாரணம் தென்படுகிறது. ஒரு நிலத்தில் விவசாயி பல்வேறு வகையான விதைகளை விட்டு அங்கிருந்து போய்விட்டார் என்று வைத்துக் கொள்வோம். அந்நிலத்திற்குத் தண்ணீர் கிடைக்கும் வரை, விதைகள் புதைக்கப்பட்ட நிலையிலேயே இருக்கும். தண்ணீர் பாய ஆரம்பிக்கின்றபோது, புதைக்கப்பட்ட விதைகள் புதுவாழ்வு பெற ஆரம்பிக்கின்றன.”
அருள்பணி: “சரியாகச் சொன்னீர்கள். பொருள் செல்வத்தைப் பொறுத்த மட்டிலும், திறமைகளைப் பொறுத்த மட்டிலும் மனிதர்களுக்கிடையே பிறப்பின்போது வேறுபாடுகள் இருக்க வாய்ப்பு உண்டு. ஆனால், ஞானம், தன்னம்பிக்கை, தன்னுணர்வு (self-awareness), அன்பு, மகிழ்ச்சி போன்ற அருள்வளங்கள், அதாவது அருள்செல்வங்கள் கடவுளால் எல்லா மனிதர்களுக்கும் அபரிவிதமாகக் கொடுக்கப்பட்டுள்ளன. எனினும், ஆற்றல் நிலையில் நாம் பலவீனர்களாக இருப்பதன் காரணமாக மேற்காணும் வளங்கள், செடியாகாத விதைபோல, வெளிப்படாமலேயே மறைந்து விடுகின்றன.”
மார்த்தா: “எனவே, அருளடையாளக் கொண்டாட்டங்கள் வழியாக நாம் இறைவனின் அளப்பரிய ஆற்றலை நமதாக்கி, வாழ்வைச் சிறப்பாக வாழ்வதற்கான அருளை நாம் பெற்றுக்கொள்கிறோம். அப்படித்தானே பாதர்?”
அருள்பணி: “ஆம்! இதுவரை நாம் உளவியல் பின்னணியிலும், அறிவியல் பின்னணியிலும் பார்த்த கருத்துகளை இறையியல் பின்னணியில் உங்களுக்கு எடுத்துச்சொல்ல விரும்புகிறேன். அருளடையாளக் கொண்டாட்டங்களின் பய(ல)ன்களாகக் கீழ்கண்டவற்றைத் திரு அவை நமக்குச் சுட்டிக்காட்டுகிறது.”
அ) “திருவருள்சாதனங்கள் கிறிஸ்துவால் ஏற்படுத்தப்பட்டு, திருச்சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவை புலன்களுக்கு எட்டாத ஆற்றல்மிக்க அருளின் அடையாளங்கள் ஆகும். இவற்றின் வழியாக, அருள்வாழ்வு நமக்கு வழங்கப்படுகிறது” (கத்தோலிக்க மறைக்கல்வி ஏடு, எண். 1116).
ஆ) கிறித்தவ மரபில் திருவருள்சாதனங்களைக் கடவுள் உலகினருக்கு தம்மை வெளிப்படுத்தும் தளமாகவும், மனிதர்களோடு தம் உறவை வைத்துக் கொள்ளும் தளமாகவும் பார்க்கின்ற தன்மை இருந்து வருகிறது. இப்படிப்பட்ட வெளிப்பாடு மற்றும் உறவின் வழியாக கடவுள் திரு அவையையும், இந்த உலகையும் புனிதப்படுத்துகின்றார், புதுப்பிக்கின்றார்.
இ) இயேசுவின் மானிட வாழ்க்கை மூலம் ஒட்டுமொத்த உலகமே, முக்கியமாக மானிட வாழ்வு, புதிய அர்த்தம் பெற்றது என்று சொன்னால் அது முற்றிலும் உண்மை. பணமோ, வசதியோ, பதவியோ மனிதத்தன்மைக்கான அளவுகோலாக இருக்க முடியாது; மாறாக, தனக்குள் உறையும் இறைவனைக் கண்டுகொள்வதே முழுமனித வாழ்வு என்ற புதிய நெறிமுறையை அவர் விட்டுச் சென்றார். அந்தப் புதிய நெறிமுறையை வாழ்வாக்குவதற்கான வழியும் வல்லமையும் திருவருள்சாதனங்கள் வழியாக நமக்குத் தரப்படுகின்றன.
ஈ) திருவருள்சாதனக் கொண்டாட்டத்தில் ஒரு நபர் ஈடுபாட்டோடும், அர்ப்பண உணர்வோடும் பங்கெடுக்கும்போது கீழ்க்கண்ட மூன்று மாற்றங்கள் அவரில் நடைபெற ஆரம்பிக்கின்றன: 1. மனமாற்றம், 2. வாழ்க்கையின் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான உள்ள உறுதி அதிகமாதல், 3. சமூகத்தோடு இயைந்து வாழுகின்ற தன்மையில் அதிக ஈடுபாடு.
உ) ஒவ்வொரு திருவருள்சாதனக் கொண்டாட்டத்தின் மூலம் கடவுளோடும் சக மனிதர்களோடும் உள்ள உறவில் நாம் மேலும் மேலும் வலுவடைகின்றோம்.”
கிறிஸ்டினா: “தந்தையே! நீங்கள் சொல்வதைக் கேட்கின்றபோது, ஒரு கத்தோலிக்கக் கிறித்தவராக இருப்பது எவ்வளவு பெரிய கொடை என்கின்ற உணர்வை என்னில் ஏற்படுத்துகிறது. இருப்பினும், எனக்குள் ஒரு கேள்வி எழும்பிக் கொண்டுதான் இருக்கின்றது. கடவுளின் அளப்பரிய ஆற்றல் ஆலயத்தில் இருந்தாலும், ஆலயத்திற்குச் செல்லும் பலர், அதைப் பெற்றுக்கொள்வது போல தெரியவில்லையே!”
அருள்பணி: “கொடைகள் கொடுக்கப்படுகின்றன. ஆனால், துரதிருஷ்டவசமாக அவை பெற்றுக் கொள்ளப்படுவதில்லை. அது குறித்து அடுத்த வாரம் நாம் விவாதிக்கலாம்.
(தொடரும்)
1. பின்னணி
மரியா
காட்சி கொடுத்த இடங்களாக லூர்து, பாத்திமா, இலாசலேத், கார்மேல், குவாதலுப்பே, மெட்ஜிகோர்ஜ்,
வேளாங்கண்ணி போன்ற திருத்தலங்கள் கருதப்படுகின்றன. அங்கு மரியாவின் அற்புதங்களையும்
அதிசயங்களையும் நாடி பலர் செல்கின்றனர். அண்மைக் காலங்களில் புதுப்புது வகையான, புதிய
புதிய பெயர்களில் மரியா காட்சி அனுபவங்கள் கொடுப்பதாகவும், புதுமைகள் புரிவதாகவும்
நவீன ஊடகங்கள் மூலம் பரப்பப்பட்டு அவை மக்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
தமிழ் நாட்டில் கர்ப்பிணி மாதா (சென்னை), குழந்தை மாதா (காங்கேயம்), மணல் மாதா (சொக்கன்
குடியிருப்பு), கடல் மாதா (வெள்ளப்பட்டி), மலை மாதா (கொணலை), மழை மலை மாதா (அச்சரப்பாக்கம்),
மின்னல் மாதா (தண்ணூத்து), திருக்கல்யாண மாதா (பொத்தகாலன் விளை) போன்றவற்றை எடுத்துக்காட்டுகளாகக்
குறிப்பிடலாம்.
சில
திருவுருவங்களில் மரியா கண் சிமிட்டுவதாகவும், கண்ணீர் வடிப்பதாகவும், நெற்றியிலிருந்து
இரத்தம் சொட்டுவதாகவும், உடம்பிலிருந்து எண்ணெய் வடிவதாகவும் பரப்பப்பட்டு, மக்கள்
பரவசமாகி, அந்தக் காட்சிகளைப் பார்ப்பதற்கு ‘பக்திப் படையெடுப்பதும்’ நடக்கிறது. தீராத நோயிலிருந்து குணம், கடன் தொல்லையிலிருந்து
விடுதலை, திருமண வரன், குழந்தைப் பேறு, தேர்வில் வெற்றி, அரசாங்க வேலை... இப்படி நேரடியாகவோ,
தன் மகன் இயேசுவிடம் பரிந்து பேசியோ மரியா செய்ய முடியாத அற்புதங்களும் அதிசயங்களும்
இல்லை என்று பரப்புரை செய்யப்படுகிறது. ஆனால், சாட்டியுரைக்கப்படும் (alleged) மரியாவின் பெரும்பாலான இத்தகைய காட்சி
அனுபவங்களும் புதுமைகளும் திரு அவையின் உரிய அதிகாரத்தினுடைய முறையான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு,
அவை உண்மையானவை, நம்பத்தக்கவை என்று அறிவிக்கப்படுவதாகத் தெரியவில்லை.
மரியா
புதுமைகள் செய்ததாக நற்செய்தி ஏடுகளில் பதிவு எதுவும் இல்லை. கானாவூர் திருமணத்தில்
“அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்”
(யோவா 2:5) என்று மரியா பணியாளர்களிடம் கூறுவதில்
திராட்சை இரசம் இல்லாத குறையைத் தீர்த்துவைக்க இயேசுவால் முடியும் என்ற தனது
நம்பிக்கையை அவர் வெளிப்படுத்துவதாகவே பொருள் விளக்கம் அளிக்கப்படுகிறது.
இரண்டாம்
வத்திக்கான் சங்கத் தந்தையர்கள் மரியா காட்சியனுபவங்களைப் பற்றி ஒரு வார்த்தை கூட கூறவில்லை.
மேலும், மரியாவின் சிறப்புப் பெயர்களில், ‘அருளை வழங்குபவர்’, ‘இணை மீட்பர்’ போன்ற
வார்த்தைகளும் அவர்களுடைய படிப்பினையில் இடம் பெறவில்லை. மரியன்னைக்குச் செலுத்தும்
வணக்கம் தெளிவான கிறிஸ்தியல் சார் பார்வையை உள்ளடக்கியது என்பது சங்கத்தின் போதனை:
“அன்னையைப் பெருமைப்படுத்தும் பொழுது மகன் அறியப்பட்டு, அன்பு செய்யப்பட்டு, மாட்சிமைப்படுத்தப்படுகிறார்” (திரு அவை, எண் 66). மேலும், “கிறிஸ்து ஒருவரே மீட்பர்,
அவருடன் இணை மீட்பர்கள் யாரும் இல்லை” என்றும், “மரியா கிறிஸ்துவிடமிருந்து
எந்தச் சிறப்புப் பெயரையும் எடுத்துக்கொள்ளவில்லை” என்றும்,
“அவருக்கென்று (இயேசுவைப்) போன்ற மீட்பர் (quasi-redeemer), இணை மீட்பராக (co-redeemer) இருக்கக் கேட்டதில்லை” என்ற
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கூற்று கவனத்திற்குரியது.
திருவிவிலியத்தில்
வேரூன்றாத, திரு அவையின் அண்மைக்கால ஆசிரியப் படிப்பினைகளைப் பிரதிபலிக்காத, நற்செய்தியின்
சீடத்துவ வாழ்விற்கு முரணான, மிகைப்படுத்தப்பட்ட மரியா பக்தி வணக்கங்கள், பட்டங்கள்,
திருப்பயணங்கள், திருத்தலங்கள் உருவாவதற்குச் சாட்டியுரைக்கப்படும் மரியா காட்சி அனுபவங்களின்
பங்களிப்பு கணிசமானது. அத்தகைய காட்சி அனுபவங்களைக் கண்டறிந்து அவற்றைப் புறக்கணிப்பதும்,
அதே வேளையில், அருள் வாழ்வு மற்றும் ஆன்மிகக் கனிகளை விளைவிக்கும் காட்சி அனுபவங்களை
ஊக்குவித்து இறைமக்களின் எளிமையான நம்பிக்கையைப் போற்றி வளர்ப்பதும் தனது கடமையெனத்
திரு அவை ஆசிரியம் கருதுகிறது. இக்கடமையைச்
செய்யும் நோக்கில் நம்பிக்கை கோட்பாட்டுப் பேராயம் ‘சாட்டியுரைக்கப்பட்ட இயல் நிலை
கடந்த நிகழ்வுகளை உய்த்துணர்வதற்கான’ (Norms
for Discerning Alleged supernatural Phenomena) என்ற தலைப்பில் 17, மே 2024 தேதியிட்ட முக்கிய ஆவணத்தை
வெளியிட்டுள்ளது. இதன் சிறப்புக் கூறுகளையும், இதை நடைமுறையில் பொருத்தி அண்மையில்
பேராயம் எடுத்துள்ள நடவடிக்கைகளைப் பற்றியும் எதிர்வரும் கட்டுரையில் காண்போம்.
(தொடரும்)
16-வது ஆயர் பேரவையின் இரண்டாவது அமர்வானது கடந்த அக்டோபர் 26, 2024 அன்று நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வழிகாட்டுதலின்படி 155 பகுதிகளைக் கொண்ட இறுதி ஆவணமானது உடனடியாக வெளியிடப்பட்டது. ‘இணைந்து பயணித்தல்’ என்பதைப் பிரதிபலிக்கும் விதமாக, ஆயர் பேரவையின் பங்கேற்பாளர்களால் வரைவு செய்யப்பட்ட ஆவணத்திற்கு ஒப்புதல் அளித்து (திரு அவை சட்ட எண் 343), 16-வது ஆயர் பேரவையின் இறுதி ஆவணமாக (Final Document) ஏற்றுக்கொள்ள திருந்தந்தை பிரான்சிஸ் இசைவு தெரிவித்துள்ளார். எனவே, வழக்கமாக ஒவ்வோர் ஆயர் பேரவைக்குப்பின் வெளியிடப்படுகின்ற பேரவைக்குப் பிந்தையத் திருத்தூது அறிவுரை மடல் (Post-Synodal Apostolic Exhortation) என்று எதுவும் வெளியிடப்படாது. இந்த இறுதி ஆவணம் திரு அவையில் கூட்டொருங்கியக்க வாழ்க்கை முறையை வளர்ப்பதில் திரு அவைச் சட்டத்துடன் தொடர்புடைய பல முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது.
காலத்தின்
அடையாளங்கள் மற்றும் தேவைகளுக்குப் பதிலளிக்கும் வகையில் கோட்பாட்டு ரீதியாகப் பொதுநிலையினருக்கான பணிகள் என்பதன் முக்கியத்துவத்தை ஆழப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஆயர்களின் மாமன்றம் பலமுறை வலியுறுத்தியுள்ளது. இதன் காரணமாகப் பல இறையியல் கோட்பாடுகள்
வளர்ச்சி கண்டிருக்கின்றது. இறைநம்பிக்கையாளர்களாகிய பொதுநிலையினர் ஒவ்வொருவரும் தாம் பெற்ற திருமுழுக்கால் எழுகின்ற பொது பணிக் குருத்துவத்திற்கான அழைப்பால் உந்தப்பட்டவர்களாய் திரு அவையில் பணியாற்ற அழைக்கப்படுகின்றார்கள். இந்த அறைகூவல் இரண்டாம் வத்திக்கான் சங்க ஏடுகளில் மிக அதிகமாகவே விரவிக் கிடக்கின்றது. இந்த இறுதி ஆவணமும், திருமுழுக்கினால் எழுகின்ற நம்பிக்கையாளர்களின் பங்கேற்பைப் பல தளங்களில் மிகச்
சிறப்பாக அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது என்பது இதன் தனிச்சிறப்பு.
நிறுவப்பட்ட அல்லது
நிறுவப்படாத
பொதுநிலையினருக்கான
நிலையான
பணிகள்
மறைப்பணியை
மையப்படுத்தி இயங்கும் கூட்டொருங்கியக்கத் திரு அவை குருத்துவத் திருநிலைப்பாடு தேவைப்படாத பொது நிலையினருக்கான நிலையான பணிகளை (stable ministries) ஊக்குவிக்கின்றது. இந்தப் பொதுநிலையினருக்கான பணிகள் நிறுவப்பட்ட அல்லது நிறுவப்படாத தன்மை கொண்டதாக இருக்கலாம். வாசகர், பீடப்பணியாளர் பணிகள் (Motu Proprio Spiritus Domini) மற்றும் வேதியர்
பணிகள் (Motu Proprio Antiquum ministerium)
ஆகியவை வரையறுக்கப்பட்ட திருச்சடங்குகள் வழியாக வழங்கப்படும் நிறுவப்பட்ட, நிலையான பொது நிலையினருக்கான பணிகள் ஆகும். இந்த நிறுவப்பட்ட பணிகள் ஆயரின் ஆணையின்படி செயல்படுத்தப்படும் நிறுவப்படாத பணிகளால் முழுமை பெறுகின்றது. குறிப்பாக, அன்பியங்களை ஒருங்கிணைக்கும் பணி, குழு இறைவேண்டல்களை வழிநடத்தும் பணி, பிறரன்புச் செயல்களை ஒழுங்குபடுத்தும் பணி, ஆலோசனை வழங்கும் பணி, அடக்கச் சடங்குகளை முன்னின்று நடத்தும் பணி போன்ற உள்ளிட்ட பணிகள் இந்த நிறுவப்படாத பணிகளில் அடங்கும். இத்தகைய நிறுவப்படாத பணிகளுக்கு இறைநம்பிக்கையாளர்களின் பொதுச் சமூகத்தில் உரிய அங்கீகாரம் கிடைக்கும் வண்ணம், இதற்கான ஆணை பொதுவெளியில் வெளிப்படையாக வழங்கப்படுதலின் அவசியத்தையும் இந்த இறுதி ஆவணம் எடுத்தியம்புகின்றது.
நற்கருணை
வழங்குதல், அருள்பணியாளர் இல்லாதபோது ஞாயிறு வழிபாடுகளை வழிநடத்துதல், குறிப்பிட்ட அருள்வேண்டல் குறிகளை (sacramentals) நிறைவேற்றுதல்
உள்ளிட்ட அசாதாரணப் பணிகள் (extraordinary ministries) ஊக்குவிக்கப்படுதல் வேண்டும் என்றும் இந்த இறுதி ஆவணம் எடுத்தியம்புகின்றது. எனவே, பொதுநிலையினருடைய திருமுழுக்கு அடையாளத்தையும், அது விடுக்கும் பொதுப் பணிக்குருத்துவத்துக்கான அறைகூவலையும் இந்த இறுதி ஆவணம் மிக அதிகமாகவே எண்பித்துக்காட்டுவதால், அதற்குத் தேவைப்படும் பயிற்சிகளையும் தளங்களையும் வாய்ப்புகளையும் பொதுநிலையினருக்கு உருவாக்கித் தரவேண்டியது ஒவ்வொரு தலத் திரு அவையின் தலையாயக் கடமையாகும்.
பங்கேற்பு அமைப்புகளும்
பங்களிப்பும்
மறைமாவட்ட
மன்றம் (diocesan synod - தி.அ.ச.எ. 460-466), மறைமாவட்ட
மேய்ப்புப் பணிப் பேரவை (diocesan pastoral council தி.அ.ச.எ.
511), பங்கு மேய்ப்புப்பணி பேரவை (தி.அ.ச.எ. 536), மறைமாவட்ட நிதிக்குழு (diocesan finance committee- தி.அ.ச.எ.492-494),
பங்கு நிதிக்குழு (parish finance committee- தி.அ.ச.எ.
537) ஆகிய பங்கேற்பு அமைப்புகளின் வழியாகப் பொதுநிலையினர் இணைப் பொறுப்பாளர்கள் (co-responsible) என்ற மனநிலையோடு முடிவெடுக்கும் படிநிலைகளில் (decision-making processes) பங்கேற்கப்
போதுமான வாய்ப்புகளைக் கட்டாயம் வழங்க வேண்டும் என்பதை இந்த இறுதி ஆவணம் மிகத் தெளிவாக வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது.
திரு
அவைச் சட்டத்தில், இதுவரை கட்டாயமாக்கப்படாமல் விரும்பினால் அல்லது வேண்டுமென்றால் அமைத்துக்கொள்ளலாம் என்றிருந்த பங்கேற்பு அமைப்புகளான பங்கு மேய்ப்புப்பணி பேரவை, மறைமாவட்ட மேய்ப்புப்பணி பேரவை இனிமேல் கட்டாயமாக்கப்பட்டு, அனைத்துப் பங்குகளிலும் மற்றும் மறைமாவட்டங்களிலும் கட்டாயமாக அமைக்கப்படுவதை உறுதிசெய்ய இந்த இறுதி ஆவணம் அறிவுறுத்துகின்றது. அத்துடன், ஏற்கெனவே திரு அவைச் சட்டம் மறைமாவட்டங்களிலும் பங்குகளிலும் கட்டாயமாக அமைக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்துகின்ற பங்கேற்பு அமைப்புகளான பங்கு நிதிக்குழு மற்றும் மறைமாவட்ட நிதிக்குழு பொதுநிலையினரின் பங்கேற்பை உறுதிப்படுத்தும் விதத்தில் அனைத்துப் பங்குகளிலும் மறைமாவட்டங்களிலும் நிறுவப்பட வேண்டும் என்றும் அறைகூவல் விடுக்கின்றது.
இதன்
வாயிலாக, நிதி விசயங்களில் பங்கு மற்றும் மறைமாவட்ட அளவில் வெளிப்படைத் தன்மையும் பொறுப்புணர்வும் வெகுவாக வளரும் என்பதையும், அத்துடன், நிதி தவறாகப் பயன்படுத்தப்படுவதையும் இந்தப் பங்கேற்பு அமைப்புகளின் சரியான நடைமுறை வரையறைகள் தடை செய்யும் என்பதையும் இந்த இறுதி ஆவணம் எடுத்துக்கூறுகின்றது.
இதை
உறுதி செய்யும் வகையில் மறைமாவட்டத் தனிச்சட்டங்கள் (diocesan particular laws) தேவையான
வரையறைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்க வேண்டும் என்றும் குறித்துக் காட்டுகின்றது இந்த இறுதி ஆவணம்.
(தொடரும்)
எந்த ஒரு பயணத்தையும் தொடங்குவதற்கு முன்பாகவும் அதனை அன்னை மரியாவுக்கு அர்ப்பணிப்பதையும், அது நிறைவுற்றதும் அன்னை மரியாவுக்கு நன்றி கூறுவதையும் வழக்கமாகக் கொண்டவர் நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள். இந்த ஆண்டு நாம் கொண்டாடும் ‘நம்பிக்கையின் யூபிலி-2025’ -ஆம் ஆண்டிற்கான ஆணை மடல் ஒன்றை ‘SPES NON CONFUNDIT- எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது’ (உரோ 5:5) என்ற தலைப்பில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2024 -ஆம் ஆண்டு மே மாதம் 9-ஆம் நாளன்று வெளியிட்டார். திரு அவையின் நம்பிக்கையாளர்களாகிய நாம் அனைவரும் இவ்வாண்டை நம்பிக்கை ஆண்டாகவும், அதனை ‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ எனும் கருப்பொருளில் சிந்தித்துப் பயணிக்கவும் அவர் நமக்கு அழைப்பு விடுக்கின்றார். 25 முத்தான வழிகாட்டுதல்களைக் கொண்ட தனது ஆணை மடலில் 24-வது கருத்தாக இடம்பெற்றிருப்பது ‘எதிர்நோக்கின் திருப்பயணி அன்னை மரியா’ என்பதாகும்.
எதிர்நோக்கின் உச்ச சாட்சியாய்
அன்னை மரியா
திரு
அவையில் ஏறக்குறைய 1600-க்கும் மேற்பட்ட பெயர்களில் அன்னை மரியாவை அழைப்பதும், விழா
கொண்டாடுவதும் மற்றும் ஆலயங்கள் கட்டி அவர் பாதுகாப்பிலும் அரவணைப்பிலும் வாழ்வதும்
கத்தோலிக்கத் திரு அவையில் நடைமுறையில் உள்ளது. ஏன்? கி.பி. 431-இல் எபேசு நகரப் பொது
அவையில் ‘அன்னை மரியா கடவுளின் தாய்’ என்று உறுதி செய்யப்பட்டு மறைக்கோட்பாடாக அறிவிக்கப்பட்டது.
‘மரியா இறைவனின் தாய்’ என்பது நம்பிக்கை கோட்பாடு மட்டுமல்ல,
அதேவேளையில் என்றென்றும் ‘மனிதரில் கடவுள், கடவுளில் மனிதர்’ என்பதன் நம்பிக்கையின் கோட்பாடாகவும் இருக்கிறது என்கிறார்
திருத்தந்தை பிரான்சிஸ். எதிர்நோக்கு என்பது இறையியல் நல்லொழுக்கம், நற்செயல்களில்
தன்னைத் தாரைவார்ப்பது, கண்களால் காண முடியாத ஒன்றைக் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு
வாழ்வதாகும்.
கடவுளின் விருப்பத்தை
ஏற்று செயல்பட்டவர் அன்னை மரியா (லூக் 1:26-38)
கபிரியேல்
வானதூதரின் வார்த்தைகளை இதயத்தில் ஏற்றுக்கொண்ட அன்னை மரியா, “நான் ஆண்டவரின் அடிமை;
உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்” (லூக் 1:38) என்று கூறி, இறைவனின்
மீட்புத் திட்டத்திற்குத் தன்னையே முற்றிலுமாகக் கையளித்தார்; கீழ்ப்படிந்து நடந்தார்.
உடலால் கருத்தரிக்கும் முன்பே உள்ளத்தால் கருத்தரித்தார்; மண்ணுலகிற்கு மீட்பு உண்டாகக்
காரணமாக இருந்தார், இணை மீட்பரானார்.
தேவையில் இருப்பவருக்கு
உதவும் நல்லுள்ளம் கொண்டவர் அன்னை மரியா (லூக் 1:39-45)
உதவி
என்பது பிறர் தேவையை உள்ளுணர்ந்து, தன்னலமின்றி விரைந்து சென்று உதவுவதாகும். உள்ளுணர்தல்
என்பது பிறர் சொல்லித் தெரிந்துகொள்வதல்ல; கேளாமலேயே உணர்ந்துகொள்வது. விரைந்து செல்லுதல் என்பது உதவி தேவைப்படும் அந்த
நொடியிலேயே விரைந்து சென்று உதவுதலாகும். வயதான நிலையில் எலிசபெத்து கருவுற்றிருக்கிறார்
என்ற செய்தியைக் கேள்விப்பட்டதும் 130 கி.மீ. நடைப்பயணம் மேற்கொண்டு, மூன்று மாதங்கள்
தங்கி உதவுகிறார். “பணிவிடை பெற அன்று, பணிவுடை புரியவே வந்தேன்” (மாற் 10:45) எனும் தனது மகனின் வார்த்தைக்கு உயிர் கொடுத்தவர்
அன்னை மரியா.
இறைவார்த்தையைக் கேட்டு
அதன்படி வாழ்ந்தவர் அன்னை மரியா (மத் 12:46-50)
சிமியோன்
இறைவாக்கினரின் (லூக் 2:34-35) வார்த்தைகளைக் கேட்டபோதும், ஏரோதின் வார்த்தைகளைக் கேட்டபோதும்
(மத் 2:14-15) உள்ளத்தில் வருத்தங்களையும் கவலைகளையும் எதிர்கொண்டபொழுதிலும், கடவுளுடைய
அருளால், ஆறுதலால், அவரது இரக்கத்தால், கனிவால் அனைத்தையும் தாங்கினார். எனவேதான் சிலுவையடியில்
அன்னை மரியா தாயிருக்க பிள்ளை சாகும் சங்கடங்கள் கொஞ்சமோ! சாட்டையாலே வேட்டையாடி சாவதென்றால்
தாங்குமோ! அப்படி இருந்தும் அன்னை அமைதி காத்தார். எதிர்நோக்கின் திருப்பயணிகள் துன்பத்தைத்
தாங்கிக்கொள்வர். அன்பு செய்வர். அன்னை மரியா அனைத்தையும் தாங்கினார். கடவுளையே சுமக்கின்ற
பேற்றினைப் பெற்றார்.
புது வாழ்வின் எதிர்நோக்கு
அன்னை மரியா
கானாவூர்
திருமண விழா அன்னை மரியாவின் சமூக அக்கறை மற்றும் ஈடுபாட்டுக்கான ஒரு சிறந்த உதாரணம்.
அன்னை மரியாவின் எதிர்நோக்கு சமூக ஈடுபாட்டை இந்த உலகிற்கு உரக்கச் சொல்கிறது. திருமண
நிகழ்வில் திராட்சை இரசம் நிரப்பப்பட்ட ஆறு கற்சாடிகள் என்பது குறையுள்ள எண். அவற்றில்
விளிம்புவரை நிரப்பப்பட்ட நீர் இரசமாய் மாறியது நிறைவின் வெளிப்பாடு. குறையுள்ளதை நிறைவாக்கியவர்
அன்னை மரியா. இயேசுவின் மாட்சி வெளிப்படக் காரணமாக இருந்தவரும் அவரே. வாழ்க்கையில்
பல்வேறு தருணங்களில் திராட்சை இரசம் தீர்ந்து வாடும் நமக்காகப் பரிந்து பேச அவர் நம்மோடு
இருக்கிறார். மனித மாண்பிழந்து, அடிப்படை உரிமைகளை இழந்து நிற்கும் மக்களின் சார்பாக,
குரல் இழந்தவர்களின் குரலாக வாழ நம்மை அழைக்கிறார். பிளவுகளையும் ஏற்றத் தாழ்வுகளையும்
களைந்து, வாழ்வில் ‘திராட்சை இரசம்’ இன்றி இருப்போருக்காகக் குரல் கொடுக்க
நம்மை அழைக்கிறார். சமூகத்தில் பாதுகாப்பற்ற பெண்கள், சிறார்கள், பாலினப் புதுமையினர்,
புலம்பெயர்ந்தோர், கையறு நிலையிலுள்ளோர் யாவரும் தங்கள் உரிமைகளை நிலைநாட்ட நம்மை அழைக்கிறார்.
சமூக
அரசியல், தீய சக்திகளோடு போராட திறனின்றித் தவிக்கும் ஏழை எளியவர்கள், போதை பொருள்களுக்கும்
சமூக ஊடகங்களுக்கும் அடிமையானவர்கள் - இவர்களுக்கெல்லாம் உற்ற துணையாய் தானிருப்பதாக
மெக்சிகோ நாடு குவாதலூப்பே நகர் காட்சியில் கடவுளின் தாயாக “உன் தாய் நான் அருகில்
இல்லையா?” (Nican Mopohua, No.119) எனத் தன்னை வெளிப்படுத்தியுள்ளார்.
நம்பிக்கையோடு
திருப்பயணத்தில் தளர்வுறாது எதிர்நோக்கிச் செல்வோம். நம் வாழ்வில் தடைகள் இருக்கலாம்;
பக்குவமாய்த் தாண்டிச் செல்வோம். பயம் இருக்கலாம்; பதற்றப்படாமல் முன்னோக்கிப் பயணிப்போம்.
நம் தாய் நம்மோடு இருக்கிறார். திருத்தந்தை குறிப்பிடுவதுபோல, நம் இதயங்களிலும் இல்லங்களிலும்
‘உள்ளே வாருங்கள் அன்னையே’ என்று அவரை வாயார அழைப்போம். நாளை என்பது
நலமாய் விடியும். நம்பிக்கைதானே வாழ்க்கை! நம்பிக்கையோடு பயணிப்போம்.
2013-ஆம் ஆண்டு திருத்தந்தையாகப் பொறுப்பேற்றதிலிருந்து திரு அவையைக் கூட்டியக்கத் திரு அவையாக இயங்கச் செய்ய திருத்தந்தை பிரான்சிஸ் மேற்கொண்டுள்ள செயல்திட்டங்களில் சிறப்பிடம் பெறுவது பெண்களுக்கான தலைமைத்துவமும் பாலின சமத்துவமும் என்றால் அது மிகையாகாது.
2024-ஆம் ஆண்டு
அக்டோபர் மாதம் 27-ஆம் நாள் நிறைவுபெற்ற 16-வது அகில உலக ஆயர் மாமன்றத்தின் நிறைவில், ஆயர் மாமன்ற உயர்மட்டக் குழுவை (General Secretariat of the synod)
திருத்தந்தை அறிவித்தபோது,
ஆயர் அல்லாத இரண்டு நபர்களைத் (பெண்களை) திருத்தந்தை அறிவித்தார். மொத்தம் 17 நபர்கள் கொண்ட இந்த அமைப்பில் 15 ஆயர்களுடன்
ஆயர் அல்லாதவர்களும் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் இருவரும் பெண்கள் என்ற தனிச்சிறப்பில், ஒருவர் அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த மரியா லியா ஜெர்லினோ பொதுநிலைப் பெண்மணியாவார். மற்றொருவர் ஆளுநரின் மறைப்பரப்பு அருள்சகோதரிகள் அவையைச் சார்ந்த முன்னாள் தலைமை அருள்சகோதரி சிமோனா பிரம்பில்லா ஆவார். திருத்தந்தையின்
சமத்துவப் பார்வைக்கும், கூட்டியக்கத் திரு அவையின் பாலினச் சமத்துவத்துக்கும் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. இதுவரை
திரு அவையின் தலைமைத்துவ வரலாற்றில், பணிநிலை பங்களிப்பு சமத்துவத் திரு அவைக்கான முன் முயற்சியில் இச்செயல்பாடு மிகவும் போற்றுதற்குரிய செயல்பாடாக அமைந்திருந்தது.
இந்தச்
சூழலில்தான் 2025-ஆம் ஆண்டு யூபிலி ஆண்டாக மலர்ந்திருக்கும் வேளையில் அருள்சகோதரி சிமோனா பிரம்பில்லா அவர்களை சனவரி 6-ஆம் தேதி திருக்காட்சிப் பெருவிழா அன்று துறவியர் மற்றும் அர்ப் பணிக்கப்பட்டோரின் பேராயத்துக்கான தலைவராகத் திருத்தந்தை நியமித்துள்ளார். திரு அவையின் வரலாற்றில் 2025 ஆண்டு காலப் பயணத்தில் கூட்டியக்கத் திரு அவையைச் செயல்பாட்டு நிலைக்குக் கொணரும் நம் திருத்தந்தையின் செயல்திட்டங்களில் இது ஒரு புரட்சி என்றே கருதப்படுகிறது. இதுவரை கர்தினால்களும் பேராயர்களும் ஆயர்களும் மட்டுமே வத்திக்கான் திருப்பீடப் பேராயங்களுக்குத் (Vatican Dicastries) தலைவர்களாக
நியமிக்கப்பட்டிருந்த
நிலையில், இப்போது ஒரு பெண்ணை, ஓர் அருள்சகோதரியைத் துறவியர் பேராயத்துக்கான தலைமைப் பொறுப்பில் திருத்தந்தை பிரான்சிஸ் நியமனம் செய்திருப்பது, இந்த யூபிலி ஆண்டில் அவர் காட்டும் சமத்துவப் பார்வை, பெண்ணிய மாண்பு போற்றப்பட முன்வைக்கும் வழி காட்டுதல் எனப் பெருமையோடு குறிப்பிட வேண்டும். 2023-ஆம் ஆண்டிலிருந்து இந்தப் பேராயத்தின் செயலராக அருள்சகோதரி சிமோனா பிரம்பில்லா அவர்கள் பணியாற்றி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
திரு
அவைச் சட்டத்தின் வழி காட்டுதல்படி திருப்பீடப் பேராயங்களுக்கான தலைமைப் பொறுப்பில் ஆயர் நிலையில் இருப்பவர்களே நியமனம் செய்யப்பட வேண்டும் என்ற நிலையை மதிக்கும் வண்ணம், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த சலேசியத் துறவியான கர்தினால் ஏஞ்சல் பெர்னாண்டஸ் அந்திரே அவர்களை, துறவியர் மற்றும் அர்ப்பணிக்கப்பட்டோரின் திருப்பீடப் பேராயத்துக்கு இணைத்தலைவராக (pro-perfect) சனவரி
6-ஆம் தேதி அறிவித்துள்ளார் நம் திருத்தந்தை பிரான்சிஸ். அருள்சகோதரி தலைவராகவும் (Prefect), கர்தினால்
அவர்கள் இணைத்தலைவராகவும் (pro-perfect) திரு அவையில்
திருப்பீடப் பேராயங்களில் இதுவரை நிகழ்ந்திராத ஒன்று. இதை விளம்பரத்திற்காகவோ, சுயமதிப்புக்காகவோ, வெற்றுப் புரட்சிக்காகவோ செய்யாமல் திரு அவையின் வடிவத்திலும் இயல்பிலும் பணியிலும் பங்கேற்பிலும்
புதுப்பித்தலையும் சமத்துவத்தையும் கொண்டு வரும் நம் திருத்தந்தையின் சீரிய முயற்சியின் வழிகாட்டுதலின் எதார்த்தமே!
இந்தப்
புதிய நியமனங்கள் போன்று திரு அவை அனைத்து மட்டங்களிலும் நிகழ வேண்டும் என்பதே அவர் விருப்பம். துறவியர் பேராயத்துக்கான உதவிச் செயலர்களாக நியமனம் பெற்றிருப்பவர்களில் ஒருவர் கிளரீசியச் சபையைச் சேர்ந்த அருள்பணியாளர் அயிட்டோர் ஜிமெனெஸ் ஒச்சாவே அவர்களோடு மற்றொரு அருள்சகோதரி கார்மென் ரோஸ் நோர்த்தெஸ் அவர்களும் இடம்பெற்றிருப்பது பாலினச் சமத்துவத்தையும், திரு அவையின் இணைந்த பங்களிப்பையும் அனைத்து நிலையினரின் பங்கேற்பையும் எடுத்துக் காட்டுகிறது.
திருத்தந்தை
பிரான்சிஸ் திரு அவையில் பெண்களுக்கான சமத்துவத்தையும், அவர்களின் தலைமைத்துவப் பங்கேற்பையும் ஈடுபடுத்த வத்திக்கானின் உயர்மட்டப் பொறுப்புகளில் பல்வேறு அருள்சகோதரிகளையும், பொதுநிலை சகோதரிகளையும் ஏற்கெனவே நியமித்திருப்பதையும் இங்கே பெருமையோடு நாம் நினைவுகூர வேண்டும். வத்திக்கான் அரசுப் பணியில் (Government of the Vatican city state) இரண்டாவது உயர் தலைமைப் பொறுப்பில் பிரான்சிஸ்கன் அருள்சகோதரி இரபேலா பெத்ரினி அவர்கள் ஏற்கெனவே பணியாற்றுவது இங்கே நோக்கத்தக்கது. இந்தப் பொறுப்பில் முதல் பெண்ணாக இவர்தான் நம் திருத்தந்தையால் நியமனம் செய்யப்பட்டவர். அது போலவே, ஒருங்கிணைந்த மானிட மாண்பு மற்றும் வளர்ச்சிக்கான ஆணையத்தின் ஆலயங்களில் உயர் பொறுப்பில் அருள்சகோதரி அலெக்சாந்தரா ஸ்மெரில்லி அவர்களும், அகில உலக ஆயர் மாமன்றத்தின் துணைச் செயலராக அருள்சகோதரி நற்காலி பெக்குவார்ட் அவர்களும் பணியாற்றி வருகின்றனர். அருள்சகோதரிகள் மட்டுமல்லாது பொதுநிலைச் சகோதரிகள் (laywomen) கபிரியோ கம்பினோ, லிண்டா கிசோனி இருவரும் பொது நிலையினர், குடும்பம் மற்றும் மானிட வாழ்வுப் பேராயத்துக்கான துணைச் செயலர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.
உடனடியாகத்
திரு அவையின் திரு நிலைகளில் பெண்களை ஈடுபடுத்தி பணிகளில் சமத்துவத்தைக் கொண்டுவர வேண்டும் என்ற அழைப்புக்கு, திருத்தந்தையின் முன்முயற்சியாகவும், அவரின் நேரியச் செயல்பாடாகவும் இது பார்க்கப்படுகிறது. இந்தச் சமத்துவமும் பங்களிப்பும் பங்கேற்பும் தலத் திரு அவைகளிலும் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதே நமது அவா!
இறைவேண்டல் என்றால் சொற்களால் ஆனது என்னும் பார்வையை விரிவுபடுத்தி, மனநிலை, செயல்கள், வாழ்வு எனப் பல தளங்களும் இணைந்ததே முழுமையான இறைவேண்டல் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். மட்டுமல்ல, இறைவேண்டலின் தொடக்கமே நம் மனநிலைதான் (Attitude) என்பதையும் நாம் மனத்தில் பதிக்க வேண்டும். எனவேதான், “நீங்கள் எத்தகைய மனநிலையில் கேட்கிறீர்கள் என்பது பற்றிக் கவனமாயிருங்கள்” (லூக் 8:18) என்றார் இயேசு.
நல்ல
மனநிலையோடு ஏறெடுக்கப்படாத இறைவேண்டல் இறைவனால் புறக்கணிக்கப்படும் என்பதைப் பரிசேயரும் வரிதண்டுபவரும் பற்றிய உவமையில் (லூக் 18:9-14) இயேசு எடுத்துக் கூறினார். “இம்மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்; இவர்கள் உள்ளமோ என்னை விட்டு வெகு தொலைவில் இருக்கிறது” (மத்
15:8) என்ற எசாயாவின் மேற்கோள் வழியாக நல்ல மனநிலையில்லாத புகழ்ச்சியின் பயனற்றத் தன்மையை எடுத்துரைத்து நம்மை எச்சரிக்கின்றார்.
அதுபோல,
உறவின் மனநிலை இல்லாத பலியோ, காணிக்கையோ இறைவனுக்கு ஏற்புடையது அல்ல (மத் 5:23-24) என்பதையும் வலியுறுத்திக் கூறினார் இயேசு. மனிதரைத் தீட்டுப்படுத்துவது உணவல்ல; மாறாக, “தீய எண்ணங்கள் உள்ளத்திலிருந்து வெளிவருகின்றன. இவையே மனிதரைத் தீட்டுப்படுத்துகின்றன” (மத்
15:20) என்றும் தெளிவுபடுத்தினார். இவையெல்லாம் ஒருவரின் மனநிலை அவரது சொற்களைவிட, செயல்களைவிட அதிக வலிமையானது என்பதையும், நல்ல மனநிலையில்லாமல் செய்யும் வேண்டல்கள், செயல்கள் பயன்தரா என்பதையும் எடுத்துரைக்கின்றன. நேர்மறை மனநிலை, எதிர்மறை மனநிலை என்று உளவியலாளர் கூறுவதுபோல, ஊனியல் மனநிலை, ஆவிக்குரிய மனநிலை என்று பகுத்துக் கூறுகிறார் புனித பவுல். “ஊனியல் மனநிலை கொண்டிருப்போருக்கு வருவது சாவே. ஆவிக்குரிய மனநிலை கொண்டிருப்போருக்கு வருவது வாழ்வும் அமைதியும் ஆகும்”
(உரோ 8:6). எனவே, நாம் ஆவிக்குரிய மனநிலை கொள்ள அழைப்பு விடுக்கிறார். மேலும், “கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும்” (பிலி
2:5) என்றும் அறிவுறுத்துகிறார். இயேசுவிடம் இருந்த மனநிலை வேறு ஒன்றுமில்லை, சாவு மட்டும் தந்தைக்குப் பணிந்திருக்க வேண்டும் என்பதே இயேசுவின் மனநிலை (பிலி2:6-11). நம் வாழ்வில் பலவிதமான மனநிலைகள் இருக்கின்றன. திருவிவிலியம் காட்டும் சில நேர்மறை மனநிலைகளைப் பார்ப்போம்.
1. இறைவனைப் பற்றிய மனநிலை:
இறைவனே நம் வாழ்வின் முதல்வர் மற்றும் அனைத்தும் என்பதை ஏற்று, அவரையே முதன்மையாகவும் முழுதாகவும் அன்பு செய்ய வேண்டும். “உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும், முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்புகூர்வாயாக” (மாற்
12:30). “மனிதருக்குக்
கீழ்ப்படிவதைவிட, கடவுளுக்கு அல்லவா கீழ்ப்படிய வேண்டும்?” (திப 5:29)
2. இறைவேண்டல் பற்றிய மனநிலை:
“நீங்கள் செபம் செய்யும்போது பிற இனத்தவரைப் போலப் பிதற்ற வேண்டாம். நீங்கள் கேட்கும் முன்னரே உங்கள் தேவையை உங்கள் தந்தை அறிந்திருக்கிறார்” (மத்
6:8).
3. உலகம் பற்றிய மனநிலை:
‘கடவுள் உலகை நல்லதென்று கண்டார்’
(தொநூ 1:31). ‘தம் ஒரே மகனையே அளிக்கும் அளவுக்கு உலகை அன்பு செய்தார்’
(யோவா 3:16). நாமும் அவ்வாறே உலகத்தைப் பார்ப்போம்.
4. மனிதர்கள் பற்றிய மனநிலை:
“ஒருவருக்கொருவர் நன்மை செய்து பரிவு காட்டுங்கள்” (எபே
4:32). “மனத்தாழ்மையோடு
மற்றவர்களை உங்களிலும் உயர்ந்தவர்களாகக் கருதுங்கள்” (பிலி
2:3).
5. நம்மைப் பற்றிய மனநிலை:
இறைவன் நமது தந்தை. எனவே, நாம் பேறுபெற்றவர்கள். கடவுளின் உள்ளங்கைகளில் நாம் பொறிக்கப்பட்டுள்ளோம் (எசா 49:16). “ஆண்டவர் பார்வையில் நான் மதிப்புப் பெற்றவன்”
(எசா 49:5). “இப்போது நான் இந்த நிலையில் இருப்பது கடவுளின் அருளால்தான்” (1கொரி
15:10).
6. துன்பம் பற்றிய மனநிலை:
துன்பத்தின் வழியாகவே நன்மையும் வெற்றியும் பிறக்கும் என்பதே இயேசுவின் சிலுவைச் சாவு நமக்குக் கற்றுத்தரும் பாடம். எனவே, துன்பத்தை நேர்மறையாகப் பார்க்க அழைக்கிறது இறைமொழி. “கிறிஸ்து தம் ஊனுடலில் துன்புற்றார். அப்பொழுது அவர் கொண்டிருந்த மனநிலையை நீங்களும் படைக்கலமாகப் பூண்டுகொள்ளுங்கள். ஊனுடலில் துன்புறுவோர் பாவத்தை விட்டுவிடுகின்றனர்” (1பேது
4:1)
7. செல்வம் பற்றிய மனநிலை:
“எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது. நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது”
(மத் 6:24). “பொருளாசையை விலக்கி வாழுங்கள். உள்ளதே போதும் என்றிருங்கள்” (எபி
13: 5).
8. பணி பற்றிய மனநிலை:
“நீங்கள் செய்கின்ற அனைத்து வேலைகளையும் மனிதருக்காக அல்ல; ஆண்டவருக்காகவே
செய்கிறீர்கள் என உணர்ந்து உளமாரச்
செய்யுங்கள்” (கொலோ
3:23).
9. நம்பிக்கை மனநிலை:
“நாங்கள் எல்லாச் சூழ்நிலைகளிலும் இன்னலுற்றாலும் மனம் உடைந்து போவதில்லை. குழப்பமுற்றாலும் நம்பிக்கை இழப்பதில்லை” (2கொரி
4:8). “உங்கள் கவலைகளையெல்லாம் அவரிடம் விட்டுவிடுங்கள். ஏனென்றால், அவர் உங்கள்மேல் கவலை கொண் டுள்ளார்”
(1பேது 5:7).
10. வாழ்வு பற்றிய மனநிலை:
“அனைத்தும் உங்கள் நன்மைக்கே நிகழ்கின்றன” (2கொரி
4:15). எனவே, “எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருங்கள். இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள். எல்லாச் சூழ்நிலையிலும் நன்றிகூறுங்கள்” (1தெச
5:16-18).
மேற்காணும்
நேர்மறை மனநிலைகளோடு இறைவேண்டல் செய்தால்தான் நமது இறைவேண்டல் இறைவனுக்கு உகந்ததாக இருக்கும். இல்லாவிடில், நம் இறைவேண்டல் பயனற்றதாகிவிடும். உண்மையில் நல்ல மனநிலையே ஓர் இறைவேண்டல்தான் என்பதை உணர்வோம். “தூய்மையான உள்ளம், நல்ல மனச்சான்று, வெளிவேடமற்ற விசுவாசம் ஆகியவற்றினின்று அன்பைத் தூண்டுவதே நான் கொடுத்த கட்டளையின் நோக்கம்”
(1திமொ 1:5) என்னும் இறைமொழியின்படி வாழ்வோம்.