ஒவ்வொருவரும் இறைவனின் அழைப்புக்கு இயைந்தவகையில் வாழ்வதற்கு, ‘செவிமடுத்தல், ஆய்ந்துணர்தல் மற்றும் அவற்றை வாழ்வாக்குதல்’ என்ற மூன்று கூறுகள் உதவுகின்றன. நம் ஒவ்வொருவரின் அழைப்பும் வேறுபட்டதாக இருப்பினும், இறைவனிடமிருந்து வரும் அழைப்பின் குரலுக்குச் செவிமடுத்து, ஆய்ந்துணர்ந்து, அவ்வார்த்தைகளை வாழ்வாக்குவதன் வழியாக, நாம் மீட்பின் கருவிகளாக மாறவும் முழு மகிழ்வை நோக்கி நடக்கவும் உதவி பெறுகிறோம்.
இன்று
திருவருகைக் காலம் நான்காம் ஞாயிறு. இறைவனின் மீட்புத் திட்டத்தில் திரைக்குப் பின்னால் இருந்து செயல்பட்டவராக, தன்னை எவ்விதத்திலும் முன்னிலைப்படுத்திக்கொள்ளாத
நேர்மையாளரான புனித யோசேப்பு இன்றைய நாளின் கதாநாயகராகிறார். இன்றைய மூன்று வாசகங்களுமே இறைவனின் திருச்சொற்களுக்குச் செவிமடுத்து வாழ நம்மை அழைக்கின்றன.
சிரியாவும்
இஸ்ரயேலும் யூதாவிற்கு எதிராகப் போர் செய்ய முயன்ற காலத்தில் நடந்த நிகழ்வை இன்றைய முதல் வாசகம் விவரிக்கின்றது. சிரியாவும் இஸ்ரயேலும் அசீரியாவிற்கு எதிராகப் போர் தொடுக்க முயன்றபோது, யூதாவையும் தங்களுடன் சேருமாறு கேட்டனர். ஆனால், அதற்கு யூதாவின் அரசன் ஆகாசு மறுக்கவே, இஸ்ரயேல் நாட்டு அரசர் பெக்காவும் சிரியா நாட்டு அரசர் இரட்சினும் (2அர 16:5; எசா 7:1) யூதாவின்மீது போர் தொடுத்து அதை வீழ்த்த முயன்றனர். இதனால் அரசர் ஆகாசும் நாட்டு மக்களும் பதற்றமடையவே (7:2), ஆண்டவர் எசாயா வழியாக, “நீ அமைதியாய் இரு;
அஞ்சாதே” (7:4) என்றும்,
“அவர்களது திட்டம் நிலைத்து நிற்காது; அது ஒருபோதும் நிறைவேறாது” (7:7) என்று
ஆகாசிடம் உரைக்கிறார். எசாயாவின் இவ்வார்த்தைகள் ஆகாசுக்கு ஆறுதல் அளித்திருக்கவேண்டும். ஆனால், அவர் ஆண்டவருடைய வார்த்தைகளை நம்ப மறுத்து, அசீரிய அரசர் மூன்றாம் திக்லத் பிலேசரின் உதவியை நாடுகின்றார் (2அர 16:7-9).
பிற
அரசர்களைப்போலவே ஆண்டவர் முன்னிலையில் தீயவராகக் கருதப்பட்ட ஆகாசு, அதிகாரத்தில் நிலைத்திருக்கத் தன் சொந்த மகனையே வேற்றுத் தெய்வங்களுக்குப் பலியாக்கினான் (2அர 16:3). வேற்றுத் தெய்வங்களின் வழிபாடுகளை ஆதரித்தான் (16:4). இது ஆண்டவரின்மேல் அவனுக்கு நம்பிக்கை இல்லை என்பதைக் காட்டுகிறது. எனவே, ஆண்டவருடைய வார்த்தையை மதிக்காமல் அசீரிய அரசரிடம் தஞ்சம் புகுவது இறுதியில் அவனுக்கே எதிராக அமைகிறது (2குறி 28:20-21). ஆண்டவரால் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அவருடைய உதவி எப்போதும் உண்டு. ஆனால், ஆண்டவரின் செயல்களில் நம்பிக்கை வைக்காமல் வேற்று மனிதரில் நம்பிக்கை வைத்தால் அல்லல்கள் அதிகமாகுமே தவிர குறையாது. அரசர் ஆகாசுவின் செயல் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு.
இறைவாக்கினர்
எசாயா ஆகாசிடம் இறைவனிடம் தஞ்சமடையக் கேட்டும், ஆண்டவரே அவனிடம் ஓர் அடையாளத்தைக் கேட்கச் சொல்லியும் அவன் அதைக் கேட்க மறுத்தான் (எசா 7:12). ஆகாசின் இச்செயல் சரியானதுபோலத் தோன்றினாலும் (கடவுளைச் சோதிப்பது ஒரு பாவம் - இச 6:16; மத் 4:7), ஆகாசு ஏற்கெனவே கடவுளின் வாக்கை மறுத்து, அசீரியரின் சொல்லைக் கேட்டதாலோ கடவுளிடம் அடையாளம் கேட்கத் தயங்கினான் என்று புரிந்துகொள்ள முடிகிறது. ஆயினும், உலகிற்கு வரவிருந்த இயேசுவையே ஆண்டவர் அவனுக்கு அடையாளமாய்க் கொடுத்தார் (7:14). ‘இம்மானுவேல்’ எனும்
குழந்தையைப் பற்றிய இறைவாக்கு பலவழிகளில் புரிந்துகொள்ளப்பட்டாலும் மத்தேயு மற்றும் நம்மைப் பொறுத்தவரையில் ‘இம்மானுவேல்’ என்றால்
‘இயேசு ஆண்டவரே’
(மத் 1:25).
கடவுளின்
திருவாக்கிற்குச் செவிகொடாமல் தனது நம்பிக்கையின்மையால் அசீரியாவின் கையாலே மடிந்த ஆகாசுக்கு (எசா 7,17: 8,1-10) மாற்றாக, ஆண்டவருடைய வார்த்தையை ஆழ்ந்து கேட்பவராகவும், அதைத் தியானிப்பவராகவும், நம்பிக்கையின் மாதிரியாகவும் வாழ்ந்த புனித யோசேப்பு நமக்கான இன்றைய மாதிரி.
இறைவனின்
மீட்புத்திட்டம் நிறைவேற தனது தூக்கத்தைத் தொலைத்தவர் யோசேப்பு. “யோசேப்பே, தாவீதின் மகனே, உம் மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்சவேண்டாம். ஏனெனில், அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான்” (மத்
1:20) என்று தனது கனவுகளில் வெளிப்படுத்தப்பட்ட கடவுளின் வார்த்தைகளைத் தீர்க்கமனம் கொண்டு தீவிரமாய்ச் செயல்படுத்தினார். மரியாவோடு திருமண ஒப்பந்தம் நடந்து ஒருசில நாள்களில், மரியா ‘கருவுற்றிருந்தது’ தெரியவரவே,
ஒரு சாதாரண மனிதர் எதிர்கொள்ளும் அத்தனை கேள்விகள் மற்றும் ஐயங்களுக்கு மத்தியில் இறைவனின் மீட்புத்திட்டத்திற்காகத் தன்னையும் கறைபடுத்திக் கொள்ளாமல், கருவில் இயேசுவைச் சுமந்தவராய், கலக்கமுற்ற நிலையில் இருந்த அன்னை மரியாவையும் கறைபடுத்திவிடாமல், திருக்குடும்பத்தின் தூணானார்.
மத்தேயு
நற்செய்தியில் யோசேப்பு மூன்று முறை கனவுகள் வழியாகச் செய்தியைப் பெறுகிறார். முதலில், மரியாவை ஏற்றுக்கொள்ளும்படியாகவும்
(மத் 1:18-24), இரண்டாவதாக, இரவோடு இரவாக மரியாவையும், பச்சிளங்குழந்தை இயேசுவையும் அழைத்துக்கொண்டு எகிப்துக்குச் செல்லும்படியாகவும் (மத் 2:13-14), மூன்றாவதாக, ஏரோது இறந்து விடுகிறான்; எனவே, மீண்டும் இஸ்ரயேல் நாட்டுக்குத் திரும்பும்படியாகவும் (மத் 2:19-21) ஆண்டவரின் தூதரிடமிருந்து செய்தி வருகிறது. முதலில் அவருக்குக் கனவில் கிடைத்த செய்தி நம்பமுடியாத, அதிர்ச்சி தரக்கூடியதாக இருந்தபோதிலும், அது ‘நல்ல செய்தி’ என்று நம்பினார். இரண்டாவதாக, கடினமான சூழல்களிலும் தன்னை வந்தடைந்த கனவுகளை இறைவன் விடுத்த அழைப்பு என்று ஏற்றுக்கொண்ட யோசேப்பு அதை உடனே செயல்படுத்தினார். கனவில் ஆண்டவரின் தூதர் அவருக்குப் பணித்தவாறே ‘தன் மனைவியை ஏற்றுக்கொண்டார்’ (மத்
1:24) என்ற இறைவார்த்தைகள் அவர் ஒரு நேர்மையாளர் என்பதற்குச் சான்றுபகர்கின்றன. ஆகவே, புனித யோசேப்பை மரியாவின் கணவர், இயேசுவின் தந்தை, திரு அவையின் காவலர், கன்னியர்களின் காவலர், குடும்பங்களுக்குக் காவலர், தொழிலாளர்களுக்குக் காவலர், கனவுகளின் காவலர்... எனப் பல வழிகளில் வாழ்த்திப்
பெருமைப்படுத்துகிறோம்.
கடவுள்
இறைவாக்கினரின் வாயிலாகப் பல முறை எச்சரித்தும்
அவற்றிற்குச் செவிமடுக்காத ஆகாசைப் போலல்லாமல் (எசா 7:10-14), தன் கனவில் கூறப்பட்டவற்றை மனதார நம்பிச் செயல்பட்டார் யோசேப்பு. கடவுளை நம்மோடு இம்மானுவேலாகத் தங்கவைத்தார். கிறித்தவ வாழ்வு என்பது கடவுளின் குரலுக்குச் செவிமடுத்து, அதை ஆய்ந்துணர்ந்து, வாழ்வாக்கும் வாழ்வுமுறை என்பதையே புனித யோசேப்பு தந்தையிடமிருந்து நாம் கற்றுக்கொள்கின்றோம். ‘தூங்கும் புனித யோசேப்பு’
எனும் பக்திமிகு வாழ்வுமுறையை உள்வாங்கிய திருத்தந்தை பிரான்சிஸ், “கிறித்தவ வாழ்வு உண்மையிலேயே மிகவும் எளிதானது. இயேசுவே நம் வாயில்; அவர் நம் பாதையை வழிநடத்துகிறார்; அவரின் குரலுக்கு நாம் செவிசாய்க்கவேண்டும்” எனும்
கூற்று உள்ளபடியே எண்ணிப்பார்க்கத்தக்கதே (மறையுரை, 18.04.2026).
திருவிவிலியத்தில்
ஆண்டவரின் திருவார்த்தைகளுக்கு ‘ஆம்’ என்ற பதிலிறுப்பைக் கூறுவோரின் தொடர் ஆபிரகாமில் தொடங்கியது. அவரைத் தொடர்ந்து தலைமைப் பணிக்கு அழைக்கப்பட்ட மோசேவும் இறைவன் மீது கொண்ட நம்பிக்கையால், ‘ஆம்’ என்ற பதிலை அளித்தார். வானதூதரின் செய்திக்கு இளம்பெண் மரியா கூறிய ‘ஆம்’ என்ற பதில், தொடர்ந்து யோசேப்பு, கெத்சமனி தோட்டத்தில் துன்பக் கிண்ணத்தை ஏற்பதற்கு இயேசு கூறிய ‘ஆம்’ என்ற பதில்வரை தொடர்ந்தது. கிறிஸ்து பிறப்பு நெருங்கி வரும் இவ்வேளையில், நாம் ஒவ்வொரு நாளும் இறைவன் நமக்கு விடுக்கும் அழைப்புக்கு ‘ஆம்’ என்று பதிலிறுக்க விரும்புறோமா? அல்லது ஆதாம், ஏவாளைப் போல் நம்மையே மறைத்துக் கொண்டு ‘முடியாது’
என்று கூறப்போகிறோமா? என்ற கேள்வியை இன்று நம்மில் எழுப்புவோம். கடவுளுடைய வார்த்தைகள் நம் வாழ்வைத் தொடுகின்றன, வடிவமைக்கின்றன, தீமையிலிருந்து விடுவிக்கின்றன மற்றும் அவை நம்மில் மகிழ்வை ஏற்படுத்துகின்றன. எனவே, இறைவனின் திருச்சொற்களுக்குச் செவிமடுக்கவேண்டும்
என்பதை மரியா, யோசேப்பின் வாழ்விலிருந்து கற்றுக்கொள்வோம்.
“இந்த உலகம் ஒவ்வொரு நாளும், உனது பிரச்சினைகளுக்குப் பதில்களைத் தந்துகொண்டே இருக்கின்றது. செவிமடுக்கக் கற்றுக்கொள்” என்று
கூறுகிறார் ஓர் அறிஞர். இன்றைக்கு நம்மில் பலர் புரிந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணத்தோடு கேட்பதில்லை; மாறாக, பதில் கூறவேண்டுமென்ற சிந்தனையோடே கேட்கின்றோம். நாம் வாழ்வில் முன்னேறவும், நம் குடும்பங்களிலும் சமூகத்திலும் வாழ்வோர் மகிழ்வான மாண்புடைய வாழ்வு வாழ செவிமடுத்தல், உன்னிப்பாக உற்றுக்கேட்டல் மிகவும் அவசியம். எனவே, ஏழைகளின் குரலுக்கு, இயற்கையின் குரலுக்கு, பிறக்கின்ற பாலன் இயேசுவின் குரலுக்குச் செவிமடுக்கக் கற்றுக்கொள்வோம்.
உண்மையிலே,
நாம் இறைவார்த்தைக்கு மனதார செவிமடுத்து வாழ்ந்தால், அவை நம் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்தாமல் இருக்காது (எசா 55:10-11). ஆம், இறைவனின் வார்த்தைக்குச் செவிமடுத்து, ஆய்ந்துணர்ந்து அதன்படி வாழும் போது நம் வாழ்வும், நம்முடன் வாழ்வோர் வாழ்வும் மகிழ்வாய் அமையும். கிறிஸ்துமஸ் காலத்திலும் புலரும் புத்தாண்டிலும் கடவுளின் வார்த்தையைச் செயல்படுத்தி, அவரை நம்மோடு தங்கவைப்போம்.
ஒவ்வொரு மனிதச் செயலின் அடிப்படை இலக்காக இருப்பது மகிழ்ச்சியே! “மகிழ்ச்சிக்குப் பாதை இல்லை, மகிழ்ச்சியே பாதை” என்பார் புத்தர். “நம் வாழ்வின் நோக்கம் மகிழ்ச்சியாக இருப்பதுதான்” என்கிறார் தலாய் லாமா. மகிழ்ச்சி என்பது ஒருவரின் வெற்றியையும் தோல்வியையும்- நன்மையையும் தீமையையும் சார்ந்ததல்ல; அது மனம் சார்ந்த உணர்வுநிலை. அனைத்தையும் கடந்து வாழும் இறைவனில் ஒருவர் இணைந்துள்ளதால் ஏற்படும் சலனமற்ற உணர்வுநிலை. கிறிஸ்துமஸ் விழாவிற்கு இன்னும் பத்து நாள்கள் இருக்கும் இவ்வேளையில், நாம் மகிழ்ச்சியில் திளைக்கவும், அதில் ஆழப்படவும் திரு அவை இன்று நம்மை அழைக்கின்றது.
இன்று
திருவருகைக் காலத்தின் மூன்றாம் ஞாயிறு. இந்த ஞாயிறை ‘Gaudete Sunday’ அதாவது, ‘மகிழும் ஞாயிறு’ என்று கொண்டாடுகிறோம். மனித சமுதாயம் என்ற குடும்பத்தில் இறைவன் ஒரு குழந்தையாய்ப் பிறக்கவிருப்பதை மகிழ்வுடன் நாம் எதிர்பார்க்க இன்றைய ஞாயிறு நம்மை அழைக்கிறது.
இன்றைய
வழிபாட்டின் தொடக்க வருகைப் பல்லவியில் இடம் பெறும் புனித பவுலின் வார்த்தைகள்: “ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள்; மீண்டும் கூறுகிறேன், மகிழுங்கள்.... ஆண்டவர் அண்மையில் உள்ளார்”
(பிலி 4:4-5). ‘மகிழ்வு என்றால் என்ன?’ கிறிஸ்து பிறப்புப் பெருவிழா நெருங்கிவரும் இவ்வேளையில், மகிழ்வு கண்ணைக் கவரும் வெளிப்புற அலங்காரங்களிலும் ஆடம்பரங்களிலும் இருப்பதாக வர்த்தக உலகம் நம்மீது திணிக்க முயலும் தவறான எண்ணங்களில் விழாமல், இயேசு காட்டும் வழியில் பயணிக்கும்போது அகமகிழ்ச்சி ஏற்படும் என்பதை இன்றைய மூன்று வாசகங்களும் கற்றுத்தருகின்றன.
இரண்டாம்
எசாயா பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், மெசியா காலத்தில் நிகழ இருப்பவை எவை என்பன குறித்து முன்னறிவிக்கின்றன. அசீரியப் படை யூதாமீது படையெடுத்து வந்த பொழுது, இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரிடம் நம்பிக்கை வைப்பதற்குப் பதிலாக, வேற்று நாட்டினரான எகிப்தியரின் உதவியை நாடினார்கள். யாவே ஆண்டவரின் வார்த்தைகளுக்குச் செவிகொடுக்காதது அவர்கள் செய்த குற்றம். மேலும், தாங்கள் ஆண்டவரோடு நெருக்கமாக இருப்பதாகக் காட்டிக்கொண்டார்கள். ஆனால், உண்மையில் அவ்வாறு இல்லை. அவர்களுடைய வழிபாடுகள் வெறும் வெளிவேடங்கள்தாம். எனவேதான் ஆண்டவர் அவர்களைக் கண்டிக்கிறார் (எசா 29:13-14). ஆண்டவருடைய கண்டிப்பு என்பது அவர்களை அழிப்பதற்காக அல்ல; மாறாக, அவர்கள் இறைவன் பக்கம் திரும்பி வருவதற்காகவே.
நம்பிக்கையில்லாத
தன்மை, கடவுளால் கைவிடப்பட்ட உணர்வு, அரசரின் துரோகம், அரசின் பலவீனம், அசீரியரின் அச்சுறுத்தல் மற்றும் வட அரசான இஸ்ரயேலின்
அழிவு, இவற்றிற்கு மத்தியில் சீயோனின் மேன்மைமிகு வருங்காலத்தைப்பற்றி எசாயா எடுத்துரைக்கிறார். வருங்காலத்தில் எருசலேமுக்கு ஆண்டவருடைய மீட்பு உண்டு என்ற நம்பிக்கையைக் கொடுக்கிறார். பாலைநிலம் போல் ஆகிவிட்ட ஏதோமில் மறுபடியும் வாழ்வு துளிர்க்கும்; அமைதி திரும்பும்; மனிதர்களின் மனம் மகிழ்ச்சியால் நிரம்பும் (எசா 35:1-2) என்ற நம்பிக்கை அவர்களுக்குக் கொடுக்கப்படுகிறது.
‘பார்வையற்றோர் பார்வை பெறுவர், காது கேளாதோர் கேட்பர், கால் ஊனமுற்றோர் மான்போல் துள்ளிக் குதிப்பர்; வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்’ என எசாயா முன்னறிவித்துள்ள
வாக்குகள் (35:5-6), மெசியாவின் காலத்து அடையாளங்கள். எசாயாவின் இந்தக் கனவு இயேசு கிறிஸ்துவில் நிறைவேறுகிறது. மேலும், ‘ஒடுக்கப்பட்டோரின் நிலை மாறும். மக்கள் ஆண்டவரிடம் திரும்பி வருவர்; அவரில் அகமகிழ்வர். அன்பும் அமைதியும் நீதியும் நேர்மையும் கொண்ட ஒரு புதிய சமுதாயம் உருவாகும்’
(29:17-19) எனும் எசாயாவின் வாக்குகள் இயேசுவில் நனவாகின்றன. இதை நற்செய்தியில் நாம் வாசிக்கிறோம்.
திருமுழுக்கு
யோவான் தனது இறைவாக்குப் பணியின் விளைவாகச் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தன் சீடரை இயேசுவிடம் அனுப்பி இயேசுவின் பணியைப் பற்றி உறுதி செய்துகொள்கிறார். “வரவிருப்பவர் நீர்தாமா? அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்கவேண்டுமா?” (மத் 11:3) எனும் திருமுழுக்கு யோவானுடைய சீடர்களின் கேள்வி, திருமுழுக்கு யோவான் இயேசுவை அறியாததாலோ அல்லது நம்பாததாலோ எழுந்ததல்ல; மாறாக, தன்னுடைய சீடர்களே இயேசுவின் உண்மை நிலையைக் கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டும் எனப் புரிந்துகொள்ளலாம். இயேசு சீடர்களின் கேள்விக்கு வெளிப்படையாகப் பதில் கூறாமல், மெசியாவின் பணிகளைப் பற்றி ஏற்கெனவே கூறப்பட்ட இறைவாக்கின் நிறைவே தமது பணி என்று பேசுகிறார் (எசா 35:5-6). அதாவது, தம் வல்ல செயல்களால் நோயுற்றோர் நலம்பெறுவதே தமது நற்செய்திப் பணி என்று கூறுகிறார்.
யோவானின்
சீடர்கள் சென்றபின் இயேசு யோவானைப் பாராட்டிப் பேசுகிறார். நாணலும் மெல்லிய ஆடைகளும் திருமுழுக்கு யோவான் வாழ்ந்த யோர்தான் பாலைநிலத்தையொட்டிய அரச மாளிகைச் சொகுசுகளின் அடையாளங்கள். ஆனால், யோவானுக்கு இவற்றில் ஈடுபாடு இல்லை (மத் 11:8). அவர் அரச மாளிகையைக் கண்டித்து இறைவாக்கு உரைத்தவர் (11:9). மெசியாவின் வருகைக்காக மக்களைத் தயாரித்தவர் (11:10). அவர் இயேசுவின் முன்னோடி என்ற காரணத்தால் இறைவாக்கினருக்கும் மேலானவர். இதனால் அவர் மனிதருள் சிறந்தவர் (11:11) என இயேசு திருமுழுக்கு
யோவானைக் குறித்துச் சான்று பகர்கிறார்.
திருமுழுக்கு
யோவான்தான் வரவேண்டிய எலியா என மக்கள் கருதி,
அவரை அவர்கள் தேடி வந்தபோது, அத்தருணத்தைத் தனக்கு ஏற்றதாக்கிக் கொண்டு, பெயரும் புகழும் பெறுவதற்குப் பதில், தான் உலக மீட்பர் அல்லர்; அந்த மீட்பர் வரும் வழியைக் காட்டும் கைகாட்டி மட்டுமே என்பதைத் திருமுழுக்கு யோவான் வெளிப்படையாகக் கூறினார். நெருக்கடி, அடக்குமுறை, கைது, கொலை இவற்றிற்கு மத்தியிலும் ஆண்டவருக்குள் இணைந்து வாழ்பவரால் மகிழ்ந்திருக்க முடியும் என்பதற்குத் திருமுழுக்கு யோவான் சிறந்த எடுத்துக்காட்டு.
இன்றைய
இரண்டாம் வாசகத்தில் யாக்கோபு கூற விளையும் செய்தியும் இதுதான். ஆங்கிலத்தில் ‘பர்ன் அவுட்’
(burn Out) என்ற ஒரு சொல் உண்டு. ஒரு நபர் நிறைய வேலைகள் செய்ய முயன்று மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் மிகவும் சோர்ந்து வீழ்வதை அல்லது உடலும் மனமும் பாதிக்கப்படுவதைக் குறிக்கும் சொல் இது. எப்போதுமே பரபரப்பாக வாழும் நம்மை, சற்று நிதானமாகச் செயல்பட்டு, பொறுமை, அன்பு, நம்பிக்கை ஆகிய பண்புகள் நம்மை மகிழ்விற்கு இட்டுச்செல்கின்றன என்கிறார் யாக்கோபு.
தொடக்கத்
திரு அவை வேதகலாபனை மற்றும் நெருக்கடியை அனுபவித்த வேளையில் எழுதப்பட்ட இந்நூல் பொறுமையோடு இருந்து இயேசுவை ஏற்றுக்கொள்வதா? அல்லது உலகத்தோடு சேர்ந்து இயேசுவை மறுதலிப்பதா? என்ற முக்கியக் கேள்விக்கு விடையளிக்கிறது. “பொறுமையோடிருங்கள்; உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துங்கள்; ஏனெனில், ஆண்டவரின் வருகை நெருங்கி வந்துவிட்டது” (யாக்
5:8) என யூதக் கிறித்தவர்களைத் திடப்படுத்துகிறார் யாக்கோபு. அவரின் போதனை நமக்கும் பொருந்திச்செல்லும்.
ஒருவர்
துன்புறுத்தப்படும்போது
முதலில் இழப்பது பொறுமையே. தொடக்கக் காலத் திரு அவை தனது வேதகலாபனைக் காலங்களிலும் முதலில் இழந்தது பொறுமையே. அதனுடைய நீட்சிதான் ‘ஒருவர் மற்றவருக்கு எதிராக முறையிடுதல்’ (5:9). எனவேதான்
‘துன்பத்தைத் தாங்குவதில் பொறுமையைக் கடைப்பிடிக்க... (5:7,8,10)
என்று மூன்று முறை அழைப்புவிடுக்கும் யாக்கோபு, பழைய ஏற்பாட்டு இறைவாக்கினர்களான எசாயா, எரேமியா, ஆமோஸ், ஓசேயா, யோனா போன்று ஆண்டவருக்குள் மகிழ்ந்து வாழ அழைக்கிறார்.
இன்றைக்கு
மன அழுத்தம் நிறைந்த பரபரப்பான உலகில் வாழும் நாம் சந்திக்கும் பிரச்சினைகளுடன் எப்படி மகிழ்ந்திருக்க இயலும்? பெரும்பாலும் நமக்கு நம்மிடம் இல்லாதவை குறித்த வருத்தம் அதிகமாக இருக்கிறதே தவிர, இருப்பதைக் குறித்த மகிழ்ச்சி இல்லை. ‘உள்ளதை அனுபவித்து மகிழ்பவரே உண்மையான செல்வந்தர்’ என்பது
யூதப் பழமொழி. முதலில், இல்லாதவருடன் இருப்பதைப் பகிர்வது, நமது நன்மைகளைப் பிறருடன் பகிர்ந்து அவர்கள் வாழ்வில் மாற்றம் காண்பதே உண்மையான மகிழ்ச்சியின் காரணிகள்.
இரண்டாவதாக,
போர்களாலும் வன்முறைகளாலும் மதவாத அடக்குமுறைகளாலும் அறமற்ற வாழ்வுமுறையாலும் இயற்கை அழிப்புகளாலும் இந்த உலகம் கெட்டுவிட்டது என்ற நம்முடைய எதிர்மறை எண்ணங்கள், மகிழ்வை நம்மிடமிருந்து பறித்துவிடுகின்றன. துன்பங்கள், இழப்புகள், சோதனைகளுக்கு மத்தியிலும் நம்மைச் சுற்றி வாழும் நல்லவர்கள், சுற்றி நிகழும் நல்ல நிகழ்வுகளைக் கணக்கில் கொண்டு மகிழ்வோம்.
நிறைவாக,
இறைவேண்டல் செய்வதற்கும், நன்றியுணர்வோடு வாழ்வதற்கும், இறைவனின் வழித்தடத்தில் அவரோடு பயணிக்கவும் நேரம் ஒதுக்குவோம். நம்மீது கொண்ட அன்பினால் மனிதனாகப் பிறந்து, நம்மோடு இணைந்த இறைவனோடு நாமும் இணையும்போது, மகிழ்ச்சி இயல்பாகவே நம் வாழ்வில் வெள்ளமெனப் பாய்ந்தோடும்.
திருவருகைக் காலம் என்பது நம் உள்ளங்களில் பிறக்கவிருக்கும் பாலன் இயேசுவுக்காக நம்மையே தயார் செய்யும் காலம். இது கிறிஸ்து பிறப்பின் உண்மைப்பொருளை உணர்வதற்கு நமக்குத் தரப்பட்டுள்ள ஒரு நல்ல காலம். “பாவங்களை அறிக்கையிட்டு, கடவுளின் மன்னிப்பை வரவேற்று, மனம் புண்படச் செய்தவர்களிடம் மன்னிப்புக் கேட்டு அக விடுதலையை அனுபவிக்க அருள்தரும் காலமே திருவருகைக் காலம்” என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ் (டிச. 4, 2022). திருவருகைக் காலத்தின் இரண்டாவது ஞாயிறான இன்று நமக்கு வழங்கப்பட்டுள்ள வாசகங்கள், இறை-மனித உறவில் உள்ள பிணக்குகளை மனமாற்றத்தின் வழியாகச் சரிசெய்து சமத்துவத்தைப் பேணவேண்டும் என்று அழைப்புவிடுக்கின்றன.
இன்றைய
வாசகங்களில் இறைவாக்கினர் எசாயாவும் திருமுழுக்கு யோவானும் மனமாற்றத்தின் வழியாகப் பெறப்போகின்ற புதிய வாழ்வைக் குறித்து உரையாடுகின்றனர். தம்மை மீட்க வரவிருக்கும் மெசியாவின் வருகைக்குக் கரடுமுரடுமானதும் கோணலுமாணலுமான, குண்டும்குழியுமான பாதையைச் செம்மைப்படுத்த மனம்வருந்தி மனமாற்றம் பெற இறைவாக்கினர் எசாயா அழைப்புவிடுக்கிறார். இயேசுவின் பணிவாழ்வுக்கு முன் மக்களைத் தயாரித்த திருமுழுக்கு யோவான் இயேசுவின் பிறப்பிற்கு நம்மையும் தயாரிக்கிறார்.
முதல்
வாசகம் இரண்டு பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. முதல் பகுதி, ஒரு நீதியுள்ள அரசரின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதையும், இரண்டாவது பகுதி, மெசியாவின் வருகையில் வெளிப்படும் உண்மையான சமத்துவம் எது என்பதையும் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.
ஒரு
நீதியுள்ள அரசரின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பது பற்றி எசாயாவின் முதல் பகுதி (11:1-5) நமக்கு விவரிக்கின்றது. ஈசாய் என்பவர் தாவீதின் தந்தை. எசாயாவின் வார்த்தைகள் (11:1) ஈசாயின் மகன் தாவீதையும், அவரது வழிமரபில் தோன்றிய இயேசு கிறிஸ்துவையும் குறிப்பதாக உள்ளன. இவர் உண்மையில் கடவுளின் மனிதரே. அடிமரத்திலிருந்து தளிர் வருதல் மற்றும் வேரிலிருந்து கிளை வருதல் என்பது அழிவிலிருந்தும் வாழ்வைத் தரக்கூடியவர் கடவுள் என்னும் பொருளைக் காட்டுகிறது. தாவீதின் வழி மரபில் வந்தவர்கள் எல்லாரும், தாவீதுக்குக் கடவுள் கொடுத்த வாக்குறுதிகளைப் பெறாமலே போயினர். ஆனால், இனி வருபவர் புதிய தாவீதாக அவர் தந்தையிலிருந்து வருவார். வெட்டி வீழ்த்தப்பட்ட யூதாவிலிருந்து நீதியுள்ள அரசர் வருவார். ஆண்டவர் தாவீதுக்குக் கொடுத்த வாக்குறுதி நிலைநிறுத்தப்படும் என எசாயா முன்னறிவிக்கிறார்.
அரசர்
தாவீதின் காலத்திற்குப் பிறகு தாவீதைப்போல ஓர் அரசரை மக்கள் எதிர்பார்த்தார்கள். இந்த எதிர்பார்ப்பே பின்னாளில் மெசியாவைப் பற்றிய எதிர்பார்ப்பிற்கு அடிப்படையாக அமைந்தது. இப்பகுதியில் எசாயா, ஆண்டவரின் ஆவியின் பலன்களாக, ஆறு நற்பண்புகளைக் குறிப்பிடுகின்றார். அவை, ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத்திறன், ஆற்றல், நுண்மதி மற்றும் ஆண்டவரைப் பற்றிய அச்ச உணர்வு. இப்படியான பண்புகள் கொண்ட அரசன் இப்போது இல்லை எனவும், நேர்மையையும் உண்மையையும் இடைக்கச்சையாக அணிந்துள்ள அரசர் தோன்றுவார் எனவும் எசாயா முன்பே உணர்ந்திருந்தார் போலும்.
இன்றைய
முதல் வாசகத்தின் இரண்டாம் பகுதி, நீதியுள்ள அரசரின் வருகையின்போது நிலவும் சமத்துவத்தைப்பற்றி எடுத்துரைக்கிறது. மெசியாவின் வருகையில் ஒரு புதிய ஆட்சி மலரும்; அது ஒரு பொற்காலமாக இருக்கும்; அன்பும் அமைதியும் சமத்துவமும் மக்களிடையே நிலவும். இது நிறைவேறும் என ஒரு மாற்றுச்
சமுதாயக் கனவு காண்கிறார் எசாயா (11:6-8)
ஓநாய்-செம்மறி ஆடு, சிறுத்தைப் புலி-இளம் ஆடு, சிங்கக்குட்டி-கன்று, பசு-கரடி என எசாயா வரிசைப்படுத்தும்
விலங்குகள் சேர்ந்து வாழமுடியாதவை. தொடர்ந்து கரடி,
பசு மாட்டோடு மேயும்; சிங்கம் மந்தையைப்போல் வைக்கோல் புசிக்கும்; பால்குடி மறவாத குழந்தை விரியன் பாம்பின் வளைக்குள் கையைவிடும் என மெசியாவின் ஆட்சியின்
சிறப்பை அடையாள ரீதியாகக் குறிப்பிடுகின்றார் எசாயா. எதிரும் புதிருமான தன்மைகொண்ட விலங்கினங்கள் தங்கள் கொடிய இயல்பை விடுத்து, படைப்பின் தொடக்கத்தில் கடவுள் ஏற்படுத்திய இறை-மனித-உயிரின சுமூக உறவிற்குத் திரும்புவர் என்ற ஆழமான அர்த்தத்தை எசாயா இங்கே கொடுக்கிறார். மனித மனங்களில் புதைந்துகிடக்கும் சமத்துவம், சகோதரத்துவம், கருணை, அன்பு என்ற இறைத்தன்மை மேலோங்கி வரவேண்டும் என்பதே எசாயாவின் கனவு. எசாயா குறிப்பிடும் இந்த இயல்புநிலை மாற்றம், மனமாற்றம் நீதியுள்ள அரசரின் வருகையின்போது மீண்டும் உருவாகும் என நம்புகிறார்.
எசாயா
கண்ட கனவை இன்றைய நற்செய்தி வாசகத்தில் திருமுழுக்கு யோவான் வெளிப்படுத்துகிறார். திருமுழுக்கு யோவான் எளிமையான வாழ்வு வாழ்ந்தவர்; “எனக்குப் பின்வருபவரின் மிதியடி வாரை அவிழ்க்கக்கூட தகுதியற்றவராய்...” (யோவா 1:27) தாழ்மையின் நிலையை ஏற்றவர்; மெசியாவின் வருகைக்காக மக்களைத் தயாரித்தவர். ஒட்டக மயிராடை, தோள்கச்சை, வெட்டுக்கிளி, காட்டுத் தேன் போன்றவற்றைக் குறிப்பிட்டு, அவரை இரண்டாவது எலியாவாகச் சித்தரிக்கின்றார் மத்தேயு.
இன்றைய
நற்செய்தியில் யோவான், “மனம் மாறுங்கள்; ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது” (மத்
3:2) எனப் போதிக்கிறார். வெளி வேடத்திற்குப் பெயர்போன பரிசேயர்களும் சதுசேயர்களும் தாங்கள் மனம்மாறத் தேவையில்லை என்ற மனநிலையோடு அவரை அணுகியபோது அவர் அவர்களுக்குச் சவால் விடுத்தார். இத்தகைய மனநிலையும் இரட்டைவேடமும் ஒரு புதிய வாழ்வைத் தொடங்குவதற்கும், கடவுளின் அருளைப் பெற்றுக் கொள்வதற்குமான வாய்ப்பை வழங்காது. எனவே, கடவுளை வரவேற்பதற்கு ‘மனம் வருந்துதல்’ மிக
முக்கியம். ஆகவேதான் திருமுழுக்கு யோவான் ‘மன மாற்றத்தை அதற்கேற்ற
செயல்களால் காட்டுங்கள்’ என்கிறார்
(மத் 3:8).
‘மனமாற்றம்’
(Conversion) என்ற வார்த்தையின் பொருள் வாழ்க்கைமுறை மாற்றம் என்பதாகும். தீமைகள் நிறைந்த உலகில் தீமைகளைத் தவிர்த்தல் மட்டுமல்லாது, தீமைகளை
எதிர்த்து வாழும் புதிய வாழ்க்கை முறையே மனமாற்றம் ஆகும். அதாவது, தீய பிரிவினை நாட்டங்கள் மறைவதும் நீதி, உண்மை, அன்பு, அமைதி, சமத்துவம், சகோதரத்துவம், பகிர்தல் எனும் இறையாட்சித் தன்மையில் ஒளிர்வதுமே உண்மையான மனமாற்றம். மனமாற்றத்திற்கான கிரேக்க வார்த்தையான ‘Metanoia’ எனும் சொல்
பாவங்களையும் பாவ வாழ்வையும் விட்டு விலகுவது மட்டுமல்ல, தீய வழிகளை விட்டு விட்டு ஆண்டவரை நோக்கி நெருங்கி வருவதைக் குறிக்கிறது.
அடிப்படையில்
மனமாற்றம் என்பது இரு பொருள் கொண்டது. ஒன்று, தீமைகளைத் தவிர்த்து நன்மை செய்வது; மற்றொன்று, பாவ வாழ்விலிருந்து விடுபட்டு வாழும் உயிருள்ள கடவுளை நோக்கித் திரும்பி வருவது. எனவே, இயேசுவின் வருகையை எதிர்நோக்கித் தயாரிப்புடன் காத்திருக்கும் இத்திருவருகைக் காலத்தில் நாம் மனமாற்றத்தின் வழியே இயேசுவை நோக்கித் திரும்புவதே இறையாட்சியில் பங்குபெற, இயேசுவைச் சந்திக்கத் தகுந்த, சரியான வழியாகும்.
ஆகவே,
எசாயா மற்றும் திருமுழுக்கு யோவான் கண்ட ‘மாற்றுச் சமுதாயம்’
என்பது நீதியும் நேர்மையும் அன்பும் அறனும் அமைதியும் எளியவரை ஏற்றலும் இயற்கையோடு இணைந்து வாழும் வாழ்க்கை முறையாகும். அத்தகைய ஒரு சமுதாயத்தை உருவாக்க நாம் தொடர்ந்து உழைக்க வேண்டியுள்ளது. நாமும் நமது அன்றாட வாழ்வில் வேறுபாடுகளைக் களைந்து, அனைவரும் ஒன்றிணைந்து வாழும் இறையாட்சிக்கான இயேசுவின் கனவை நனவாக்க முற்படவேண்டும்.
இன்றைய
இரண்டாம் வாசகத்தில் ஒற்றுமையின் தேவையையும் நீதியையும் பற்றி விளக்கும் பவுல், இயேசுவிற்கு ‘யூதரன்றோ யூதரல்லாதவரென்றோ இல்லை; அவர் அனைவரையும் ஏற்றுக்கொண்டிருக்கிறார். எவ்விதத்திலும் தகுதி இல்லாத பாவிகளாகிய நம்மை அவர் ஏற்றுக்கொண்டது போல, நாமும் நமது வாழ்வின் எல்லா நிலைகளிலும் பிறரை ஏற்றுக்கொள்வது மட்டுமே கடவுளைப் பெருமைப்படுத்தும்’ என
எடுத்துரைக்கிறார்.
ஆகவே,
பழைய ஏற்பாட்டு மக்கள் எசாயாவின் வார்த்தைகளை நம்பி மெசியாவின் வருகைக்குத் தங்களையே தயாரித்ததுபோல, ஆண்டவரின் இரண்டாம் வருகைக்காகக் காத்திருக்கும் நாம் பழைய பாவ வாழ்க்கை முறையை விலக்கி, புதிய வாழ்க்கை முறையைத் தழுவிக்கொள்வோம். நல்லவை நடக்கும் என்ற எதிர்பார்ப்புடன் நாம் தொடங்கியுள்ள திருவருகைக் காலத்தில் மீட்பரின் வருகையை, அர்த்தமற்ற வழிகளில் எதிர்பார்க்காமல், தனக்குள் தொடங்கும் மாற்றங்களை ஏற்றுக்கொண்ட அன்னை மரியாவைப்போல மாசற்ற வழியில் பயணிப்போம். அமல அன்னையின் பரிந்துரையாலும் வழிநடத்துதலாலும் நாம் திருவருகைக் காலத்தில் இறைவனின் வருகையையும், கிறிஸ்துமஸ் பெருவிழாவின் முழுப்பொருளையும் உணர்ந்து வாழும் வரம் வேண்டுவோம்.
“மனம் மாறுங்கள்; ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது!” என்ற தொனியில் ஒலிக்கும் திருமுழுக்கு யோவானின் குரல் இன்று நம் செவிகளுக்கு எட்டட்டும்!
இன்று திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறு. ஒவ்வோர் ஆண்டும் திருவருகைக் காலத்துடன் ஒரு புதிய வழிபாட்டு ஆண்டைத் துவக்குகிறோம். வருகிற நான்கு வாரங்களிலும், இயேசுவின் பிறப்பைக் கொண்டாடுமாறு நம்மை அழைக்கின்ற திருவழிபாடு, அவர் நம் வாழ்வில் அன்றாடம் வருகிறார் என்றும், இறுதி நாள்களில் மாட்சியுடன் மீண்டும் வருவார் என்றும் நினைவூட்டுகிறது.
திருவருகைக்
காலம் என்பது எதிர்பார்ப்பின் காலம். நம்பிக்கையை நம் உள்ளங்களில் விதைக்கும் காலம். இது அருளின் காலம்! கடவுள் நமக்குச் செய்துள்ள, செய்கின்ற, செய்யவுள்ள வாக்குறுதிகளை நமக்கு நினைவுபடுத்தும் காலம்! திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிடுவதுபோல, “நம்மிடையே குடிகொள்ளும் நோக்கத்தில் வானிலிருந்து இறங்கி வந்த இறைவனின் நெருக்கத்தை அதிகமதிகமாக உணரும் காலம்”
(ஞாயிறு மறையுரை, 30.11.2020).
திருவருகைக்
காலம் என்பது இரண்டு முக்கிய நோக்கங்களை வலியுறுத்துகிறது: முதலாவதாக, கிறிஸ்துவின் முதல் வருகையின் நினைவாய் ஆண்டுதோறும் கிறிஸ்து பிறப்பு விழாவிற்கு நம்மைத் தயாரிக்கும் காலமாகவும் இரண்டாவதாக, கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை நம்பிக்கையோடு எதிர்நோக்கி நம் வாழ்வை மாற்றி அமைத்துக்கொள்ள அருளப்படும் காலமாகவும் திருவருகைக் காலம் அமைகிறது. எனவே, இவ்விரு காரணங்களால் திருவருகைக் காலம் இறைப்பற்றும் மகிழ்ச்சியும் நிறைந்த எதிர்பார்ப்பின் காலமாக விளங்குகின்றது. திருவருகைக் கால முதல் ஞாயிறிலிருந்து டிசம்பர் 16-ஆம் நாள் வரை உள்ள நாள்கள் இயேசுவின் இரண்டாம் வருகைக்கான தயாரிப்பு நாளாகவும், டிசம்பர் 17 முதல் 24 உள்பட வரும் வாரநாள்கள் கிறிஸ்து பிறப்புக்கு நேரடி முன்னேற்பாடாகவும் அமைகின்றன.
கிறிஸ்துவின்
முதல் வருகையை ஆவலாய் எதிர்பார்த்துக் காத்திருந்த இஸ்ரயேல் மக்களைப்போல், அவரின் இரண்டாம் வருகையைப் புதிய இஸ்ரயேல் மக்களாகிய நாம் ‘எச்சரிக்கையாகவும்-விழிப்பாகவும்’ இருந்து
எதிர்நோக்கவேண்டும் என்பதே இந்தத் திருவருகைக் காலத்தின் மையக் கருத்து. இக்கருத்தை மையப்படுத்தியே இன்றைய வாசகங்களும் இறுதிக்காலத்தைப் பற்றி எடுத்துரைத்து, நாம் மிகவும் விழிப்பாகவும் எச்சரிக்கையாகவும் இருக்கவேண்டும் என்பதை நமக்கு வலியுறுத்துகின்றன.
இன்றைய
முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா, மெசியாவின் காலத்தில் நிகழவிருப்பன பற்றி எடுத்துரைக்கின்றார். இவ்வாசகத்தில் கடவுள் தரும் முடிவில்லா அமைதியைப் பற்றி எசாயா இறைவாக்குரைக்கிறார். ‘இறுதி நாள்களில் மக்களினங்கள் யாவே இறைவனை நோக்கிச் சாரை சாரையாய் வருவார்கள்’ என்கிறார்
எசாயா. அவர்கள் இங்கு வருவதன் நோக்கம் ‘ஆண்டவரின் வழிகளைக் கற்றுக்கொள்வதே.’ எல்லா மக்களும் யாவே இறைவனைத் தேடி வருவதால், ‘யாவே அனைவருக்கும் ஆண்டவர்’ என்ற கருத்து இங்கே வலியுறுத்தப்படுகிறது. எனவே, யாவே ஆண்டவரின் வழியில் அவருடைய கட்டளைகளைக் கேட்டு மக்கள் நடக்கும்போது அமைதியில் அவர்கள் வாழ்வார்கள் என எசாயா எடுத்துரைக்கிறார்.
இன்றைய
முதல் வாசகத்தில் நமக்கான அழைப்பு என்பது, ஆண்டவரின் மலைக்குச் செல்லவேண்டுமெனில், அழிவுக்கு இட்டுச் செல்லும் செருக்கையும் ஆணவத்தையும் விட்டுவிடவேண்டும் என்பதுதான். மனிதரில் வெளிப்படும் செருக்கும் ஆணவமும் அழிவுக்கானவை. இவை பல வழிகளில் மனிதரைச்
சிறுமைப்படுத்துகின்றன
(5:11); கடவுளை அறியவோ, அவருக்குப் பணிவிடை புரியவோ விடாமல் மனிதரைத் தடுத்துவிடுகின்றன. ஆகவே, இன்று இவற்றிலிருந்து விடுபட்டு, கிறிஸ்துவை நோக்கிப் பயணம் செய்யும் உளப்பாங்கை நாம் பெறவேண்டும். இயேசு நம் நடுவில் அமைதியை விதைக்க வருகிறார். அவரை நோக்கிப் பயணம் செய்யும் நாம் அமைதியை நம்மில் ஏந்தவேண்டும். வாள்கள் கலப்பைக் கொளுக்களாகவும், ஈட்டிகள் கருக்கரிவாள்களாகவும் மாறவேண்டும் (2:4).
இன்றைய
நற்செய்தியில் இயேசு இறுதித் தீர்ப்புப் பற்றிப் போதிக்கையில் (மத் 24:37-44) மூன்று கருத்துகளை நமக்கு முன்வைக்கின்றார். அவை: அ) எச்சரிக்கையாக இருத்தல்,
ஆ) தயார்நிலையில் இருத்தல், இ) விழிப்பாய் இருத்தல்.
முதலாவதாக,
‘எச்சரிக்கையாக இருத்தல்’
குறித்து இயேசு பழைய ஏற்பாட்டில் நிகழ்ந்த நோவா காலத்து வெள்ளப்பெருக்கு நிகழ்வை மேற்கோள்காட்டுகிறார். எல்லாரும் மனம்போன போக்கில் வாழ்ந்தாலும், நோவா மட்டும் கடவுளின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடந்தார். நேர்மையாளராக வாழ்ந்த நோவாவும் அவரது குடும்பத்தாரும் கடவுளின் அருளால் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள பெட்டகம் செய்வதைக் கண்டும்கூட, மக்கள் விழிப்பாக இல்லை. மனமாற்றம் பெறாததால் அவர்கள் சந்தித்தது அழிவையே. இந்நிகழ்வைக் குறிப்பிடும் இயேசுவும், ‘மானிட மகனின் வருகையின்போதும் இவ்வாறே இருக்கும்’
என எச்சரித்து, அவரின் குரலுக்குச் செவிமடுக்க அழைப்பு விடுக்கிறார்.
இரண்டாவதாக,
எதிர்பாராத நேரத்தில் ஆண்டவரின் திடீர் வருகைக் குறித்து எப்போதும் தயார் நிலையில் இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்த, “இருவர் வயலில் இருப்பர். ஒருவர் எடுத்துக்கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டு விடப்படுவார்...” (மத் 24:40,41) என்னும் உருவகம் வழியாகத் தீயவர்கள் கைவிடப்பட்டு நல்லவர்கள் கடவுளால் என்றுமுள்ள வாழ்விற்கு எடுத்துக்கொள்ளப்படுவர் என்று பொருள்பொதிந்த விதத்தில் எடுத்துரைக்கின்றார். ஆண்டருடைய வருகை வந்தே தீரும் என வலியுறுத்தும் இயேசு,
தம் வாழ்வால் அவருக்கு உகந்தவராய் இருந்து அவரை வரவேற்க எப்போதுமே தயாராக இருக்கவேண்டும் என அறிவுரை தருகிறார்.
ஆகவே, கடவுளுக்காக நமது கடமைகளைப் பொறுப்புடன் ஆற்றுவதில் பிரமாணிக்கமாக இருப்பதுகூட நமது மீட்புக்குப் பெரிய அளவில் உதவும்.
மூன்றாவதாக,
இயேசு திருடர் குறித்த ஒரு கருத்தைக் கூறி, ‘விழிப்பாய் இருங்கள்’
என்று நம்மை எச்சரிக்கின்றார். நமது வீட்டிற்குள் திருடர் எப்போது வருவார் என்பதை நாம் அறிந்திருந்தால், நமது உடைமைகளைக் காப்பாற்றிக்கொள்ளலாம். ஆனால், திருடர்கள் எப்போது வருவார்கள் என்பது எவருக்கும் தெரிய வாய்ப்பில்லை. அதுபோலவே, மானிடமகனின் இரண்டாவது வருகை எப்போது நிகழும் என்பது எவருக்கும் தெரியாது (மத் 24:36). எனவே, எந்நேரத்திலும் நாம் விழிப்பாக இருக்க வேண்டும் என்பது ஓர் அழுத்தமான அழைப்பாகும்.
திருவள்ளுவர்
தனது குறளில்,
‘வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு
போலக் கெடும்’
(435)
என்கிறார்.
அதாவது, முன்கூட்டியே எச்சரிக்கையாக இருந்து ஒரு தவறான செயலைத் தவிர்த்துக்கொள்ளாதவருடைய வாழ்க்கையானது, நெருப்பின் முன்னால் உள்ள வைக்கோல்போர் போலக் கருகிவிடும் என்று எச்சரிக்கின்றார்.
ஆகவே,
‘விழிப்பாக இருத்தல்’
என்பது இன்று மிக முக்கியக் கிறித்தவக் கடமையாகப் பார்க்கப்படுகிறது. ‘நகைச்சுவைப் புனிதர்’ என்று அழைக்கப்படும் புனித பிலிப்நேரி நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, நண்பர் ஒருவர் அவரிடம், “பிலிப், இதோ அடுத்த நிமிடமே நீ இறக்கப் போகிறாய்
என்று தெரிந்தால், என்ன செய்வாய்?” என்று கேட்டார். அதற்கு அவர் புன்னகையுடன், “தொடர்ந்து விளையாடிக் கொண்டிருப்பேன்” என்றாராம்.
அதுபோலவே, 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அறிஞரான ஜான் வெஸ்லியிடம், “இன்று உங்கள் வாழ்வின் கடைசி நாள் என்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்று கேட்க, வெஸ்லியோ “மாலை நான்கு மணிக்கு நான் வழக்கம்போல் தேநீர் அருந்துவேன்; ஆறு மணிக்கு நோயுற்றிருக்கும் திருமதி. பிரவுனை மருத்துவமனையில் பார்க்கச் செல்வேன்; எட்டு மணிக்கு மாலை செபங்களைக் கூறிவிட்டு, உணவிற்குப் பின் வழக்கம்போல் தூங்கச் செல்வேன்; விழித்தெழும்போது இறைவன் முகத்தில் விழிப்பேன்” என்று
கூறினாராம்.
“நீர் என்னிடம் ஒப்படைத்திருந்த வேலையைச் செய்து முடித்து நான் உம்மை உலகில் மாட்சிப்படுத்துவேன்” (யோவா
17:4) எனும் இயேசுவின் கூற்றுக்குப் புனித பிலிப் நேரி மற்றும் ஜான் வெஸ்லி ஆகியோர் நல்லதோர் எடுத்துக்காட்டு.
நிறைவாக,
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய கடிதத்தில், ‘இறுதிக் காலம் இதுவே’ என்று கூறி, உறக்கத்திலிருந்து விழித்தெழ நமக்கு எச்சரிக்கை விடுக்கின்றார். இங்கே ‘உறக்கம்’ என்பது ஊனியல்பின் நாட்டத்தைக் குறிப்பதாக அமைகிறது. பவுல் “இருளின் ஆட்சிக்குரிய செயல்களைக் களைந்துவிட்டு, ஒளியின் ஆட்சிக்குரிய படைக்கலங்களை அணிந்து கொள்வோமாக!’ என்கிறார். அதாவது, தீய இச்சைகளைத் தூண்டும் ஊனியல்புக்குரிய செயல்களை விட்டுவிட்டு, ஆவிக்குரிய செயல்களை அணிந்துகொள்வோம்.
நாம்
ஒவ்வொருவரும் இறையாட்சியின் மதிப்பீடுகளின்படி செயல்பட்டு, தம் கடமைகளை முழுமையாக நிறைவேற்றி, அவர் மீண்டும் வரும்போது அவரை மகிழ்ச்சியோடு சந்திக்கத் தயாராவோம். ஆக, மகிழ்வோடு ஆண்டவரின் இல்லத்திற்குப் போக (திபா 122:1) இன்றே அன்பையும் அமைதியையும் நம் வாழ்வில் வெளிப்படுத்துவோம். நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்; எனவே, விழிப்பாக இருப்போம்!
உலகளாவிய வரலாற்றில் மிகப்பெரும் அழிவுகளை ஏற்படுத்திய போர்களில் ஒன்று முதல் உலகப்போர் (1914-1918). இப்போரில் 90 இலட்சம் இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் 50 இலட்சம் குடிமக்கள் போர். பட்டினி, மற்றும் நோய் ஆகியவற்றின் விளைவாக இறந்ததாகவும் கூறப்படுகிறது. இப்போர் நிகழ்ந்த வேளையில், திரு அவையின் தலைவராகப் பணியாற்றியவர் திருத்தந்தை 15-ஆம் பெனடிக்ட். அவர் இந்தப் போரை, “பயனற்றப் படுகொலை” என்றும், “கலாச்சாரம் மிக்க ஐரோப்பாவின் தற்கொலை” என்றும் குறிப்பிட்டார். முதல் உலகப்போர் முடிவுற்று, நான்கு ஆண்டுகள் சென்று, 1922-ஆம் ஆண்டு, திரு அவையின் தலைமைப் பணியை ஏற்ற திருத்தந்தை 11-ஆம் பயஸ் அரசர்கள், மற்றும் அரசுத் தலைவர்களின் அகந்தையும் பேராசையும் முதல் உலகப்போருக்கு முக்கியக் காரணங்களாய் இருந்தன என்பதை உணர்ந்து, இந்த அரசர்களுக்கு ஒரு மாற்று அடையாளமாக, 1925-ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 11 - ஆம் நாள், ‘Quas Primas’ என்ற சுற்று மடல் வழியாகக் கிறிஸ்து அரசர் திருநாளை நிறுவினார்.
1969-ஆம்
ஆண்டு திருத்தந்தை 6-ஆம் பால் வெளியிட்ட ‘திருத்தந்தையின் தம் விருப்ப அறிக்கை’ (Motu
Proprio) என்ற மடலின்
வழியாக இந்த விழாவின் பெயரை ‘கிறிஸ்து அனைத்துலகின் அரசர்’ என
மாற்றினார். மேலும், இவ்விழாவை வழிபாட்டு ஆண்டின் கடைசி ஞாயிறு அன்று கொண்டாட பணித்தார்.
‘கிறிஸ்து அனைத்துலகின் அரசர்’ என விழா கொண்டாடுவதற்கான காரணம், கிறிஸ்துவின்
அரசத்தன்மையையும், அவர் நிறுவ வந்த அரசையும் கண்டு, மக்கள் குறிப்பாக, அரசுத் தலைவர்கள்,
பாடங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே. இவ்விழா அறிவிக்கப்பட்டு, நூற்றாண்டைக் கண்டபோதிலும், உண்மையில் உலகத் தலைவர்கள்
கிறிஸ்து அரசருக்குரிய பண்புநலன்களைக் கொண்டு முன்மாதிரியான வாழ்வு வாழ்ந்துள்ளார்களா?
என்பது கேள்விக்குறியே.
இப்போது
உலகில் எங்கு நோக்கினும் தீவிரவாதமும் பயங்கரவாதமும், போர்களும், பிரிவினைகளும் தாம்.
பதவிக்காகவும், பணத்திற்காகவுமே இங்கே தினம் தினம் போட்டியும் பொறாமையும் ஆட்சிப் பொறுப்பாளரிடம்
நிலவுவதைக் கண்கூடாகக் காண்கின்றோம். உலகத் தலைவர்களிடையே நிலவும் “யார் பெரியவர்” என்ற போட்டியால், உலகெங்கும் அரசியல் நிலையற்ற தன்மையும்,
போர்களும், வன்முறைகளுமே பெருகியுள்ளன. எப்படிப் பதவிக்கு வரலாம், யாரை ஏமாற்றலாம்
பதவிக்கு வரலாம் என்று அரசியல் தலைவர்கள் போடும் தவறான கணக்குகளால் அன்பும் அமைதியும்
உண்மையும் உலகில் காணாமல் போய்விட்டன.
போரினால்
ஆயிரமாயிரம் மக்கள் அமைதியை இழந்து உள்நாட்டிலும் பல்வேறு அந்நிய நாடுகளிலும் புலம்பெயர்ந்தோராகி
வருகின்றனர். இரு உலகப்போர்களைச் சந்தித்த இவ்வுலகம் தற்போது, மூன்றாவது உலகப்போரை
உலகின் பல பகுதிகளில், சிறு, சிறு துண்டுகளாகச் சந்தித்து வருகிறது. இதனையே திருத்தந்தை
பிரான்சிஸ், “அமைதிக்குப் பஞ்சம்” ஏற்பட்டுள்ள காலத்தில் வாழ்ந்துவருகிறோம்
என்று குறிப்பிட்டார். இத்தகைய சூழலில், கிறிஸ்துவை ஓர் அரசராகக் கொண்டாட, இந்த ஞாயிறன்று,
தாய் திரு அவை நம்மை அழைக்கின்றது. இயேசு கிறிஸ்து உண்மையில் அரசர்தானா? அரசர் என்றால் அவர் எப்படிப்பட்ட அரசர்? அனைத்துலகின்
அரசராம் கிறிஸ்துவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பண்புகள் என்ன? என்பது குறித்துச்
சிந்திப்போம்.
புதிய
ஏற்பாட்டில் ‘இயேசுவே அரசர்’ என்ற உணர்வு ஞானிகளிடமும் அரசர்களிடமும்
மக்களிடமும் வெளிப்பட்டன. இயேசுவை, அரசர் என்று முதலில் கூறியவர்கள், கீழ்த்திசை ஞானிகளே.
“யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே?
‘அவரது விண்மீன் எழக் கண்டோம்’. “அவரை வணங்க வந்திருக்கிறோம்” என்று சொல்லி இயேசுவை அரண்மனையில் தேடினர் (மத் 2:2).
இரண்டாவது,
இயேசு அப்பத்தைப் பகிர்ந் தளித்த நிகழ்வில் மக்கள் தம்மைப் பிடித்துக் கொண்டுபோய் அரசராக்கப்போகிறார்கள்
என்பதை உணர்ந்த இயேசு மீண்டும் தனியாய் மலைக்குச் சென்றார். (யோவா 6:14-15). மூன்றாவது
ஒரு நிகழ்வில், எருசலேமுக்கு பெருந்திரளாய் வந்திருந்த மக்கள் “இஸ்ரயேலின் அரசர் போற்றப்
பெறுக!” என்று சொல்லி ஆர்ப்பரித்தனர் (யோவா 12:12-13).
நான்காவது
ஒரு நிகழ்வில், பிலாத்துவே இயேசுவிடம், “நீர் அரசரா?” என்று கேட்டு அச்சமுற்றான் (யோவா
18:37). மேற்குறிப்பிட்ட நான்கு நிகழ்வுகளிலுமே இயேசு தவறான முறையில் “அரசன்” என்று கருதப்பட்டார். அவர்களில் யாருக்கும் இயேசு சரியான
பதில் கூட சொல்லவில்லை. அவ்வாறெனில் இயேசுவே அரசர் என்று நாம் எவ்வாறு புரிந்துகொள்ள
முடியும்? இயேசுவை மூன்று நிலைகளில் அரசர் என்று புரிந்துகொள்ளலாம்.
1.
படைப்பின் அடிப்படையில், 2. பிறப்பின் அடிப்படையில்,
3. பாடுகளின் அடிப்படையில்.
தொடக்கத்தில்
கடவுள் படைத்த பொழுது (தொநூ 1:1) வாக்கு இருந்தது (யோவா 1:1). “அவ்வாக்கு கடவுளாயும்
இருந்தது” (1:1). இயேசுவே அந்த வாக்கு. அவரே
இறைவனை முழுமையாக வெளிப்படுத்தக்கூடியவர் (1:18). இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும்
எல்லாம் வல்லவரான ஆண்டவரே இயேசு கிறிஸ்து (விப 3:14; திவெ 1:8). கடவுள் கடவுளது அரியணையில்
வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார் (எபி 12:2).
இரண்டாவதாக,
இஸ்ரயேலரின் பன்னிரு குலத்தில் ஒன்றான யூதா குலம்தான் அரச குலம். இந்தக் குலத்தில்
பிறந்தவர்தான் தாவீது. இந்த தாவீதின் குலத்தில் பிறந்தவர் இயேசு கிறிஸ்து (எரே
33:15, திவெ 22:16). இயேசுவின் பிறப்பு முன்னறிவிப்பில், “அவருடைய ஆட்சிக்கு முடிவே
இராது” (லூக் 1:32-33) என்றே வானதூதர் மரியாவிடம்
கூறினர். எனவே, இயேசு பிறப்பின் அடிப்படையில் அரசர்தான்.
மூன்றாவதாக,
இயேசுவை அரசராகப் பார்க்க முடியாத உரோமைய வீரர்களின் ஏளனக் குரலுக்கு மத்தியில் “இயேசுவே
நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்” (லூக் 23:42) என்ற கள்வனின் குரல் இயேசுவை அரசராக ஏற்றுக்கொள்கிறது.
மனிதன் என்று கணிக்க முடியாத அளவு காயப்பட்டு, ஒரு கந்தல் துணிபோல் சிலுவையில் மாட்டப்பட்டிருந்த
அந்த உருவத்தில், ஓர் அரசரைக் கண்டார், அந்தக் குற்றவாளி.
ஆகவே,
இயேசுவின் அரசத் தன்மையை மூன்று கோணங்களில் நாம் சிந்திக்கலாம்.
அவை,
அ) துயருறும் அரசர், ஆ) துயர் துடைக்கும் அரசர், இ) தரணியோர் அனைவருக்குமான அரசர்.
இயேசுவின்
தலைமை என்பது உலகத் தலைமையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. முதலில் அவர் ஒரு துயருறும்
அரசர். சிலுவையில் ஆணிகளால் அறையப்பட்டபோது, தம் கரங்களை உயர்த்தவில்லை, யாரையும் விரலால்
சுட்டிக்காட்டவில்லை, வார்த்தைகளால் வசைமொழி கூறவில்லை. மாறாக, தமது சிலுவை மரணம் வழியாக,
எல்லா மக்களையும், அவர்களின் மரணம், துயரம், ஏழ்மை, பலவீனங்கள் என அவர்கள் பற்றிய அனைத்தையும்,
அரவணைத்துக்கொள்ள தம் கரங்களைத் திறந்தார். திறந்த கரங்களோடு அவர் தம்மை நம் அரசராகக்
காட்டுகிறார்.
இரண்டாவதாக,
இயேசு துயர்துடைக்கும் அரசர். “மெய்யாகவே அவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார்; நம்
துன்பங்களைச் சுமந்துகொண்டார்;” (எசா 53:4). ஏழைகளையும் வறியோரையும் வாழ்விழந்தோரையும்
புறந்தள்ளப்பட்டோரையும் இயேசு தேடிச்சென்று அவர்களை அன்பொழுக அரவணைத்துக்கொண்டார்.
“பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு
இளைப்பாறுதல் தருவேன்” (மத் 11:28) என்ற இயேசுவின் வார்த்தைகள்
அதற்குச் சான்றாக அமைகின்றன.
மூன்றாவதாக,
இயேசு தரணியோர் அனைவருக்குமான அரசர். அவரது அரசு அனைவருக்குமானது என்பதை உணர்த்தும்படி,
இறையாட்சியின்போது கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமிருந்து மக்கள் வந்து
பந்தியில் அமர்வார்கள் (லூக் 13:29) என்று கூறினார். அதாவது, இயேசுவின் இறையாட்சியில்
எந்த வேற்றுமையும் பிளவுகளும் காணாது, அவரில் நம்பிக்கைகொள்ளும் அனைவருக்கும் அவரது
இறையாட்சியில் இடம் உண்டு.
ஆகவே,
கிறிஸ்து அரசரின் பெருவிழாவைக் கொண்டாடும் நாம் தனது ஆடுகளுக்காக இன்னுயிரையே தியாகம்
செய்த பேரரசராம் கிறிஸ்து அரசரைப்போல, நாமும் மனிதநேயம் கொண்டு துயருறும் மானிடர் அனைவருக்கும்
உதவிட முன் வருவோம். அதிகாரபலம், படைபலம், பணபலம் ஆகியவற்றை நம்பி வாழ்வை இழந்துவிடாமல்,
இவ்வுலகை மீட்கும் பயணத்தில் துன்புறும் ஊழியனாகத் திகழ்ந்த கிறிஸ்து அரசரின் வழியில் நாம்
பயணித்துப் பிறருடைய நல்வாழ்வுக்காய் உழைக்கும் நன்மக்களாக வாழ்வோம். நாம் படித்தறிய
வேண்டிய வாழும் புத்தகம் கிறிஸ்து அரசர்!
திருவழிபாட்டு ஆண்டின் இறுதி ஞாயிறை நாம் நெருங்கி வந்துள்ளோம். அடுத்த ஞாயிறு கிறிஸ்து அரசர் பெருவிழா. அதற்கடுத்த ஞாயிறு, திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறுடன் அடுத்த திருவழிபாட்டு ஆண்டை ஆரம்பிக்க இருக்கின்றோம். சென்ற ஆண்டு இந்தத் திருவழிபாட்டு ஆண்டை நாம் தொடங்கியபோது, நமக்குத் தரப்பட்ட திருவிவிலிய வாசகம் லூக்கா நற்செய்தி 21-ஆம் பிரிவிலிருந்து எடுக்கப்பட்டது. திருவழிபாட்டு ஆண்டின் இறுதி ஞாயிறான இன்று மீண்டும் லூக்கா நற்செய்தி 21-ஆம் பிரிவிலிருந்து வாசகம் தரப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முழுவதும் ஞாயிறு திருப்பலிகளில் லூக்கா நற்செய்தியின் பகுதிகள் வழியாக இறைவன் நமக்களித்த மேலான எண்ணங்களுக்காக அவருக்கு நன்றி கூறுவோம்.
ஆண்டின்
33-ஆம் ஞாயிறான இன்றைய நாளின் சிறப்பு என்னவெனில், இன்று நாம் ‘நீரே என் நம்பிக்கை’
என்ற திபா 71:5 வரிகளைக் கருப்பொருளாகக் கொண்டு, ஒன்பதாவது உலக வறியோர் தினத்தைக் கொண்டாடுகின்றோம். இந்நாளில், நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள வாசகங்கள் இறுதி நாள்களைப் பற்றிச் சிந்திக்க நம்மை அழைக்கின்றன.
‘வாழ்வின் இறுதிநாள் எப்போது நிகழும்? எப்படி நிகழும்? இப்போதே நிகழுமா?’ எனும் கேள்விகளுக்குத் தந்தையைத் தவிர வேறு எவருக்கும் விடை தெரியாது. ஆனால், அந்த இறுதிக் காலத்தைச் சந்திக்க நாம் தயாராக இருக்கவேண்டும் என்பதே இன்றைய வழிபாடு நமக்கு விடுக்கும் அழைப்பு.
இன்றைய
முதல் வாசகம் ஆண்டவரின் நாளைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. ஆண்டவரின் நாள் என்பது கடவுளின் வருகையைப் பற்றிய இஸ்ரயேல் மக்களின் நம்பிக்கையாகும். இறைவாக்கினர் எசாயாவும் ‘ஆண்டவரின் நாளை’
(13:9) பற்றிக் குறிப்பிடும்போது, அது பாவிகளை முற்றிலும் அழித்துவிடும் நாளாக இருக்கும் என்று கூறுகிறார். ஆண்டவர் வரும் அந்த நாளில் நீதி, நேர்மை, உண்மை, நன்மையைக் கடைப்பிடித்து ஒழுகுகின்றவர்கள் கடவுளிடம் நல்ல கைம்மாறு பெறுகின்றனர். எவரெல்லாம் இம் மதிப்பீடுகளைக் கைவிட்டுத் தீயநெறியில் வாழ்கின்றார்களோ, அவர்கள் தண்டனைத் தீர்ப்பிற்கு உள்ளாவர் என மலாக்கி கடுமையாகச்
சாடுகிறார் (4:1).
இன்றைய
நற்செய்தியிலும் ஆண்டவரின் நாளான அவரது இரண்டாவது வருகையைப் பற்றியும், உலகத்தின் இறுதி நாளைப் பற்றியும் லூக்கா விவரிக்கின்றார். இந்தப் பகுதி ஆண்டவரின் நாள், எருசலேம் அழிவு, இயேசுவின் இரண்டாம் வருகை, வரவிருக்கும் மறைத்துன்பங்கள், உறுதியான இறைநம்பிக்கை, மறுவாழ்வு என, பல கருத்துகள் பின்னிப்பிணைந்து
இருக்கின்றன. எனினும், உலக முடிவையும், இயேசுவின் இரண்டாம் வருகையையும் அச்சத்துடன் நோக்காமல் நமது கடமைகளை நிறைவேற்றி, கிறிஸ்துமீது கொண்டுள்ள நம்பிக்கையில் நிலைத்திருந்ததால் ஆண்டவர் வருகையின்போது, நாம் நமது வாழ்வைக் காத்துக்கொள்வோம் என்பதே இன்றைய ஞாயிறு நமக்கு வழங்கும் செய்தி.
இன்றைய
நற்செய்தியின் துவக்க வரிகளில் கவின்மிகு கற்களாலும் நேர்ச்சைப் பொருள்களாலும் அழகுபடுத்தப்பட்டிருக்கும் கோவில் ‘கல்லின்மேல் கல் இராதபடி இடிந்து தரைமட்டமாகும்’ என
இயேசு எடுத்துரைக்கிறார். இயேசு கூறிய இந்தக் கோவிலின் பின்னணித் தகவல்களை அறிந்துகொள்ளலாம்.
முதலில்,
கடவுளுக்கென்று ஓர் ஆலயம் எழுப்ப பேரரசரான தாவீது விரும்பினார். ஆனால், அது அவரால் இயலாமற்போயிற்று. அவரது மகனான சாலமோன் மன்னரால் கி.மு. 950-களில்
ஆண்டவருக்கென்று அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த ஓர் ஆலயம் கட்டியெழுப்பப்பட்டது. சாலமோன் கட்டிய ஆலயத்தைக் கி.மு. 587-இல்
பாபிலோனிய மன்னன் நெபுகத் நேசர் இடித்துத் தரைமட்டமாக்கினார் (2அர 25). ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு பாபிலோனிய அரசு வீழ்ச்சி கண்டது. பாரசீக மன்னர் சைரஸ் (கி.மு. 538) இஸ்ரயேலருக்கு
விடுதலை அளித்தார். யூதர்களுக்கு விடுதலை அளித்த பாரசீகர்கள், எருசலேம் தேவாலயத்தைக் கட்டவும் உதவிசெய்தனர். எஸ்ரா, நெகேமியா தலைமையில் ஏறக்குறைய 20 ஆண்டுகள் கழித்து அதே இடத்தில் ஆலயம் கட்டியெழுப்பப்பட்டது (எஸ்ரா 3:3; சீஞா 49:13).
செருபாபேல்
கட்டிய இரண்டாம் ஆலயம் (எஸ்ரா 4:3) அதன் அழகிலும் மேன்மையிலும் முதலாவது ஆலயத்திற்குக் குறைவாகவே இருந்தது (ஆகா 2:1-3). எனவே, 500 ஆண்டுகளுக்குப் பிறகு, கி.பி. 2020-இல்
பெரிய ஏரோது இந்தக் கோவிலைப் புனரமைப்பு செய்து எழில்மிகு கற்களைக் கொண்டும், பொன்-வெள்ளிப் பொருள்களாலும் பேரரசன் சாலமோன் கட்டிய முதல் ஆலயத்திற்கு இணையான ஆலயத்தைக் கட்டினான். இந்த ஆலயத்தின் அழிவைப்பற்றிதான் இயேசு முன்கூட்டியே அறிவிக்கிறார். இயேசு கூறியதுபோலவே, கி.பி.70-இல்
எருசலேம் ஆலயம் உரோமைப் படைகளால் தாக்கி அழிக்கப்பட்டது. அந்த ஆலயத்தின் ஒரு தடுப்புச்சுவர் மட்டும்தான் இன்று எஞ்சியிருக்கிறது. அதனைத்தான் யூதர்கள் ‘கண்ணீர் சுவர்’ என்றழைக்கிறார்கள். அழிக்கப்பட்ட ஆலயத்தை மறுபடியும் கட்டியெழுப்ப முடியாததை நினைத்து, இந்தச் சுவர்களில் யூதர்கள் மோதி கண்ணீர் வடித்துச் செபிக்கின்றனர்.
யூதர்கள்
பொறுத்தவரை எருசலேம் ஆலயத்தைத் தங்கள் இதயமாகக் கருதினர். இக்கோவில் அவர்களின் இறையுணர்வுகளின் மகத்தான அடையாளம். ஆண்டுதோறும் ஒருமுறையேனும் இவ்வாலயம் சென்று பலி ஒப்புக்கொடுப்பதும், காணிக்கை செலுத்துவதும் பெரும் சட்டமாக யூதர்கள் கருதினர். இவ்வளவு சிறப்புமிக்க ஆலயத்தில் பல்வேறு முறை கேடுகளும் நேர்மையற்ற செயல்களும் நடைபெற்றதைக்கண்டு சாட்டைப் பின்னி அவர் ஆலயத்தைத் தூய்மைப்படுத்தினார் (லூக் 19:45-46). கடவுளின் ஆலயமே கள்வர் குகையாக, சந்தைக்கூடமாக மாறிப்போனது. எனவேதான், யூதர்களின் நம்பிக்கையின் அடையாளமாக விளங்கிய எருசலேம் ஆலயம் இடிபடும் என அவ்வாலயத்தின் அழிவு
பற்றி முன்னறிவிக்கிறார் இயேசு.
இயேசுவின்
முன்னறிவிப்பு இன்று நமக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. உள்ளக் கோவில்தான் இறைவன் இல்லம். இறைவன் தந்த ஆலயமே நம் உள்ளம் (1கொரி 3:16-17). யூதர்கள் ஆலயத்தைத் தாண்டிக் கடவுளின் பிரசன்னத்தை எவரிலும் எதிலும் காணத் தயாராக இல்லை. இம் மனநிலையில்தான் நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? உள்ளம் எனும் ஆலயத்தில் புனிதம் காக்கத் தவறிவிட்டால் அங்கு இறைப்பிரசன்னத்திற்கு ஏது வழி? எனவே, நமது நம்பிக்கை ஆலயத்தையும், ஆண்டவரின் சாயலாகப் படைக்கப்பட்ட மனிதரையும் கடவுள் வாழும் கோவிலாகப் பார்க்க அழைக்கிறது இன்றைய நற்செய்தி.
திருத்தந்தை
பிரான்சிசும் அவர் வழிவந்த திருத்தந்தை லியோவும் ஏழைகளில் கிறிஸ்துவின் முகத்தைக் காணவேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். திருத்தந்தை இந்த ஆண்டு வழங்கிய ஒன்பதாவது வறியோர் தினச் செய்தியில், வறுமையை ஏற்றுக்கொண்ட கடவுள் வறியோரின் குரல்கள், கதைகள் மற்றும் முகங்கள் வழியாக நம்மை வளப்படுத்துகின்றார் என்கிறார். மேலும் அவர், ஏழைகள் நற்செய்தியின் மையமாக இருக்கின்றார்கள், நற்செய்தி அறிவிப்பைப் பெற்றுக்கொள்ளும் முதன்மையானவர்களாக, நமது மேய்ப்புப்பணியின் இதயமாக இருக்கின்றார்கள் என்றும், அத்தகைய ஏழைகளிடமிருந்து நமது பார்வையை விலக்கிவிட வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளார். வறியோர் இறைவனின் கண்களில் விலைமதிப்பற்றவர்கள்; அவர்கள் நற்செய்தியின் வழியில் நாம் எவ்விதம் நடக்க வேண்டும் என்பதை நினைவூட்டுபவர்கள் என்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இன்றைய
உலகில் நடைபெறும் போர்கள் எண்ணற்ற மக்களைப் புலம்பெயரச் செய்துள்ளது; அவர்களை இல்லமற்ற வறியோராக்கியுள்ளது. இன்று உலகில் 120 கோடி மக்கள் இல்லமற்றவர்களாக இருக்கின்றனர். உலகிலுள்ள பெரும்பாலான சொத்துகள் சில நூறுபேரின் கரங்களில் இருக்கின்றன என்பதே நிதர்சன உண்மை. அநீதியே இவ்வுலகின் வறுமைக்கு அடிப்படைக் காரணம். மனித சமூகத்தில் மிகப்பெரும் ஏற்றத்தாழ்வுகளுக்குக் காரணம் தன்னலமே. அக்கறையற்று, கைகளைக் கட்டிக்கொண்டு நிற்பதோ, ‘ஒன்றும் செய்ய இயலாது’ என்று கைகளை விரித்தபடி தன் இயலாமையை வெளிப்படுத்துவதோ ஒரு கிறித்தவரின் செயலாக இருக்கமுடியாது. தேவையில் இருப்போருடன் நாம் கொள்ளும் தொடர்பின் வழியே நமது நம்பிக்கையை வலுப்படுத்துவோம். இயேசு கிறிஸ்துவைப்போல் அயலவரை அணைக்க நாம் கரங்களை விரித்துக் காத்திருப்போம்.
இறுதிக்காலத்தின்
கொடிய முடிவை உணர்ந்து ஒவ்வொருவரும் பொருளுள்ளதாக்கிக்கொள்வோம்.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல் குறிப்பிடுவதுபோல, கடின உழைப்பு, நேரிய உள்ளம், நன்மை செய்வதில் தளராமனம் கொண்டவர்களாக வாழ முற்படுவோம். பணம், புகழ் என்று அழியும் சக்திகளோடு உறவு கொள்வதற்குப் பதில், மனித உறவுகள் என்ற சக்தியைத் தேடிச் செல்வோம். உறவுகளுக்கெல்லாம் சிகரமாக, இறைவனின் உறவும் நம்முடன் உள்ளதெனும் நம்பிக்கையோடு உலகப் பயணத்தை, வாழ்வின் முடிவை, உலகத்தின் முடிவை எதிர்கொள்வோம்.