நாம் சாலையோரங்களிலோ அல்லது ஆலய வாசல்களிலோ பசியோடு அமர்ந்திருக்கும் ஒருவரைப் பார்க்கும்போது, மிக இயல்பாகவே நம் இதயத்தில் கனிவு பிறக்கிறது. நம் கைகள் நம் பைக்குள் சென்று சில நாணயங்களையோ, பணத்தையோ தேடியெடுத்து அவர்களிடம் மகிழ்வோடு கொடுக்கின்றன. இப்படி நாம் செய்யும் தானமும் தர்மமும் மிகவும் போற்றத்தக்க உன்னதமான நற்செயல்களாகும். ஏனெனில், நாம் கொடுக்கும் அந்தச் சிறு உதவிதான் பிறர்மீது நாம் காட்டும் அன்பின் முதல் புள்ளி; அன்பு செய்யத் தொடங்குவதற்கான ஓர் அழகான நுழைவாயில்! அங்கிருந்து ஒருபடி மேலே சென்று, பசி என்று நம்மை நோக்கி வரும் ஒருவரை, இறைவனின் பிரதிநிதியாக நம் இல்லத்தில் ஏற்று, இன்முகத்தோடு இன்சொல் பேசி, அவரின் பசியாற்றுவதே கிறிஸ்து நமக்குக் கற்றுத்தரும் உண்மையான விருந்தோம்பல்.
இன்று
நாம் ஆண்டின் பொதுக்காலம் 13-ஆம் ஞாயிறைக் கொண்டாடுகின்றோம். இந்த நாளில், நம்மைத் தேடிவரும் இறையடியாரையும், எளியவரையும் கனிவோடு வரவேற்று, அவர்களின் பசியாற்றும் உன்னதமான விருந்தோம்பல் வாழ்விற்கு நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.
பண்டைய
தமிழ்ச் சமூகத்தில் ‘சோறும் நீரும்’ ஒருபோதும் விற்பனைப் பொருளாகப் பார்க்கப்படவில்லை. ஆனால், இன்று எல்லா ஊர்களிலும் உணவகங்கள் பெருகிவிட்டன. உயிர் காக்கும் குடிநீரும் கூட விற்பனைப் பொருளாக மாறிவிட்டது. தமிழர் பண்பாட்டில் ‘வறியாருக்குச் சோறிடுதல்’
என்பது வெறும் கடமையாக அல்லாமல், அறத்தின் ஆகச் சிறந்த கோட்பாடாகவே வலியுறுத்தப்பட்டது. அது தூய அன்பின் அடையாளமாகவே திகழ்ந்தது. கிராமப்புறங்களில் வழிப்போக்கர் யாராவது உண்ணாமல் இரவில் படுத்திருந்தால், ஊரார் தேடிச் சென்று ‘இரவுச்சோறு’ கொடுக்கும்
உன்னத வழக்கம் ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்புவரை நம் நடைமுறையில் இருந்திருக்கிறது. தம் மண்ணில், தம் கண்முன்னே ஒருவர் இரவில் பசியோடு உறங்கச் செல்வது தமக்கு நேர்ந்த மானக்கேடு என்று நம் முன்னோர் கருதியுள்ளனர்.
அதனால்தான்
சோற்றினை ‘உயிர் மருந்து’ என வர்ணிக்கும் மணிமேகலை
காப்பியம் வறியவர், மாற்றுத்திறனாளர், கைவிடப்பட்டோர், நோயுற்றோர் எனச் சமூகத்தின் விளிம்புநிலை மக்களுக்குத் தடையின்றி உணவளிக்கவேண்டும் என ஆணித்தரமாக வலியுறுத்துகிறது.
தமிழ் இலக்கியங்கள் பசியை ஒரு கொடிய நோயாகப் பார்த்ததன் காரணமாக, அந்தப் பசியைத் தீர்ப்பவரை மருத்துவராகக் கண்டன. ‘பசிப்பிணி மருத்துவர்’ என்றுதான்
உணவளிப்பவர்களை நம் இலக்கியங்கள் நெஞ்சம் உருகப் போற்றுகின்றன. தமிழ்நாட்டில் கால்பதித்த சமண சமயமும்கூட, தாம் வலியுறுத்திய நால்வகைக் கொடைகளுள் (உணவு, மருந்து, கல்வி, அடைக்கலம்), ‘உணவுக் கொடையையே’
முதலாவதாக வைத்துப் பேசுகிறது.
அன்னசத்திரங்கள்
வைப்பதும், வழிப்போக்கரின் தாகம் தீர்க்கத் தண்ணீர் பந்தல்கள் அமைப்பதும் பெரும் புண்ணியச் செயல்களாகப் போற்றப்பட்டன. தமிழ் இலக்கிய மற்றும் இலக்கண மரபில், உலகப் பற்றுகளைத் துறந்து வாழும் துறவியருக்கு- இறையடியாருக்கு உணவிடுவதும், அவர்களை இன்முகத்தோடு உபசரிப்பதும் இல்லற வாழ்வின் ஆகச் சிறந்த அறமாகக் கருதப்பட்டது. இதற்கு மிகச்சிறந்த சான்று புறநானூற்றுப் பாடல் ஆகும். சாகா வரம் தரும் தேவர்களின் ‘அமிழ்தமே’
கிடைப்பதாக இருந்தாலும், பசியோடு வருபவர்களைத் தவிக்கவிட்டு, அதைத் தனித்து உண்ணும் சுயநல வழக்கம் நம் முன்னோரிடம் இருந்ததில்லை என்கிறது சங்க இலக்கியம்:
“இந்திரர் அமிழ்தம் இயைவது ஆயினும், இனிதுஎனத்
தமியர்
உண்டலும் இலரே!” - புறநானூறு (182)
எனவே,
பசியோடு வரும் துறவியரின் பசிப்பிணியைப் போக்குவது, இறைவனுக்கே செய்யும் உன்னத வழிபாடாகப் போற்றப்பட்டது. ‘உணவளிப்பதே உயிர் அளிப்பது’
என்ற இந்த உன்னத வாழ்வியல் நெறியைத்தான் இன்றைய இறைவார்த்தைகளும் நமக்கு மிக அழகாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன.
முதல்
வாசகத்தில், சூனேம் ஊரைச் சேர்ந்த ஒரு செல்வாக்குமிக்கப் பெண், தன் வழியே கடந்து செல்லும் இறைவாக்கினர் எலிசாவை மிகவும் போற்றி வந்தார். அவரை வெறும் வழிப்போக்கராகப் பார்க்காமல், அவர் ஓர் இறையடியார் என்பதை அறிந்து, அவரைத் தன் இல்லத்திற்கு அழைத்து அன்போடு உணவளிக்கிறார். அத்தோடு அவரது கனிவு நின்றுவிடாமல், இன்னும் ஒருபடி மேலே சென்று, அவர் தங்கி ஓய்வெடுப்பதற்கெனத் தன் மாடியிலேயே ஒரு சிறிய அறையையும் அமைத்துக் கொடுக்கிறார். இறைவனின் அடியாருக்குச் செய்யும் பணிவிடை, அந்த இறைவனுக்கே செய்யும் பேரறம் என்பதை ஆழமாக உணர்ந்திருந்த அந்தப் பெண், பிரதிபலன் பாராமல் காட்டிய அந்தத் தூய விருந்தோம்பல்தான் மகப்பேறின்றி இருந்த அவருக்குப் பேரின்பத்தையும், ஒரு மகப்பேற்றின் ஆசிரையும் கொண்டுவந்தது.
இன்றைய
நற்செய்தியில் இயேசு, தம் திருத்தூதர்களைத் தேர்ந்தெடுத்து நற்செய்திப் பணியாற்ற அனுப்பியபோது, அவர்களுக்கு நோய்களைக் குணமாக்கவும், இறந்தோரை உயிர்பெற்றெழச் செய்யவும், பேய்களை ஓட்டவும் அதிகாரங்களை வழங்கும் அதேவேளையில், தம் சீடர்கள் உலக வாழ்வில் சந்திக்கப்போகும் சவால்களையும் ஆபத்துகளையும் குறித்த எச்சரிக்கையையும் வெளிப்படையாகவே எடுத்துரைக்கிறார். குறிப்பாக, “தம் சிலுவையைச் சுமக்காமல் என்னைப் பின்பற்றி வருவோர் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர்” என்ற
கடினமான ஆன்மிகச் சவாலை விடுக்கிறார். மேலும் அதன் தொடர்ச்சியாக, ‘ஏற்றுக்கொள்ளுதல்’, அதாவது,
‘வரவேற்று உபசரித்தல், ‘ஒரு கிண்ணம் குளிர்ந்த நீர் கொடுத்தல்’
என்ற விருந்தோம்பலின் உன்னதப் பண்புகளையும், அப்படி உபசரிப்பவர் தகுந்த பலனைப் பெறுவார் என்பதையும் ஓர் உறுதிமொழியாகவே வழங்குகிறார். விருந்தோம்பல் நிகழும்போது, அதனைத் தருவோரும் பெறுவோரும் இறை ஆசிரால் நிறைவர் என்பதை நாம் இதிலிருந்து புரிந்துகொள்கிறோம்.
இயேசு
கற்றுத்தந்த இந்த வரவேற்பும் உபசரிப்பும் தொடக்கக் கிறித்தவர் நடுவே நிலவிய அடித்தளமான அனுபவம் என்றால் அது மிகையல்ல. கிறித்தவ மறையை இத்தனை நூற்றாண்டுகளாக வாழவைத்ததன் ஒரு முக்கியக் காரணம் தொடக்கக் கிறித்தவர் மற்றும் ஏனைய நல்ல உள்ளங்கள், சீடர்கள், மறைப்பணியாளர்களுக்குத் தந்த வரவேற்பும் விருந்தோம்பலும்தான். கிறிஸ்துவின் சீடர்கள் ஊர் ஊராக அல்லது நாடுவிட்டு நாடு சென்றபோது, அவர்களை வரவேற்பதற்கும் ஒருசில இல்லங்கள் திறந்திருந்தன. இந்த இல்லங்களில் நற்செய்தியும் இயேசுவின் இறுதி உணவும் பகிர்ந்துகொள்ளப்பட்டன. ஆழமாகச் சிந்தித்தால், சீடர்களை வரவேற்ற இந்த இல்லங்களே முதல் ஆலயங்களாக விளங்கின.
ஆனால்,
இன்று நம் சமுதாயத்தில் கிறித்தவ விருந்தோம்பலின் நிலை என்ன? பொதுவாக, இவ்வுலகில் மனிதநேயம் குறைந்து வருவது போலவே, நம் குடும்பங்களிலும் விருந்தோம்பல் என்ற பண்பு மறைந்து வருகின்றது. அயலவர்மீது கொண்ட அச்சமும், தேவையற்ற சந்தேகங்களும் அதிகரித்துவிட்டதால், வரவேற்பும் கனிவும் காற்றில் கரைந்துவிட்டன. நமது சுயநல நெருப்பு கொளுந்து விட்டு எரிவதால், ‘தவித்த வாய்க்குத் தண்ணீர் தரும்’ அடிப்படை ஈரமும் நமக்குள் வறண்டு வருவதைக் காண்கிறோம். இந்தத் தடையை உடைத்து, நம் இதயங்களை அகலப்படுத்தவே இன்றைய இறைவார்த்தைகள் நமக்குச் சில வாழ்வியல் பாடங்களை வழங்குகின்றன.
முதலாவதாக,
இறையடியவரையும் துறவியரையும் போற்றுதல்வேண்டும். உலக ஆசைகளைத் துறந்து, இறைப்பணியைச் சுமந்து வரும் அவர்களை, நம் இல்லம் தேடி வரும் ஆசிராகப் பார்க்க வேண்டும். அவர்களுக்கு உணவிட்டு உபசரிப்பது நம் கடமை மட்டுமல்ல; அது நம் குடும்பத்திற்கு இறைவனின் அருளைக் கொண்டுவரும் உன்னத வழியும்கூட.
இரண்டாவதாக,
யாரையும் வேறுபடுத்திப் பார்க்காத இளகியமனம் வேண்டும். பசி என்று நம் வாசல் தேடி வருபவர் யாராக இருந்தாலும் சாதி, மத, இன வேறுபாடின்றி, அவர்களின்
பசியை முதலாவதாகப் போக்கவேண்டும். நம்மிடம் இருக்கும் உணவில் ஒரு பகுதியை வறியவருக்குப் பகிர்ந்து கொடுக்கும்போது, நம் இல்லத்து உணவு ஒருபோதும் குறையாத அமுதசுரபியாக மாறும்.
மூன்றாவதாக,
கைம்மாறு கருதாத கனிவு வேண்டும். மாரி எனப்படும் மழை, இந்த உலகிற்கு எவ்விதப் பிரதிபலனும் எதிர்பாராமல் பொழிவதைப் போல, நாமும் பிரதிபலன் கருதாமல் உதவ வேண்டும். மனிதர் நமக்குக் கைம்மாறு செய்யாவிட்டாலும், விண்ணகத் தந்தை நமக்குரிய கைம்மாறைக் கண்டிப்பாக அளிப்பார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை நமக்குவேண்டும்.
எனவே,
பசியோடு நம்மை நோக்கி வரும் ஒவ்வோர் எளியவரிலும், இறையடியாரிலும் உறைந்திருப்பது இறைவனே என்பதை ஆழமாக உணர்வோம். சோறும் நீரும் மனிதகுலம் பகிர்வதற்கானவை; அவை விற்பதற்கோ அல்லது சுயநலத்தோடு சேமித்து வீணாக்குவதற்கோ அல்ல என்பதை இச்சமூகம் உணரட்டும். இனி நம் இல்லக் கதவுகளும், இதயக் கதவுகளும் பசியோடு வருபவர்களுக்காக எப்போதும் திறந்திருக்கட்டும். ஒரு கிண்ணம் குளிர்ந்த நீரிலாவது நம் அன்பைத் தொடங்குவோம். கைம்மாறு கருதா இறைவனின் பேரன்பு நம் இல்லங்களையும் நம் வாழ்வையும் என்றென்றும் நிரப்பட்டும்.
நம் அன்றாட வாழ்வில் ஏதோ ஒரு கட்டத்தில் நாம் அனைவரும் சந்திக்கும், நம் செயல்பாடுகளை முடக்கிப்போடும் ஒரு பொதுவான உணர்வு ‘அச்சம்.’ ‘நாளை என்ன நடக்குமோ?’ என்ற எதிர்காலத்தைப் பற்றிய பயம்; ‘நம் பலவீனங்களைக் கண்டு பிறர் என்ன சொல்வார்களோ?’ என்ற அச்சம்; ‘உண்மையைப் பேசினால் தனிமைப்படுத்தப்பட்டு விடுவோமோ?’ என்ற கவலை; புறக்கணிப்பால் ஏற்படும் மன உளைச்சல் என அச்சத்தின் நிழல் நம்மை எப்போதும் துரத்திக்கொண்டே இருக்கிறது. இன்றைய நவீன உலகில், சுயநலமும் அநீதியும் மலிந்துவிட்ட சூழலில் ஓர் உண்மையான கிறித்தவ வாழ்வை வாழ முற்படும்போது, நாம் ஏளனத்திற்கும் எதிர்ப்புகளுக்கும் ஆளாக நேரிடுகிறது. அச்சம் என்பது நம் ஆன்மிக வாழ்வை நரகமாக்கி, நம்மைச் செயலிழக்கச் செய்துவிடுகிறது. இத்தகைய எதார்த்தச் சூழலில், அச்சுறுத்தும் சக்திகள் நமக்கு எதிராக அணிவகுத்தாலும், எதிர்கொள்ள முடியாத பிரச்சினைகள் நம்மைத் துரத்தினாலும், யாருமில்லாத் தனிமையில் நாம் தவித்தாலும் அஞ்சிடத் தேவையில்லை. ஏனெனில், நம்மோடு இருப்பவர் சாதாரண மனிதர் அல்லர்; மாறாக, நமக்காகப் போரிடும் ‘வலிமை வாய்ந்த ஒரு போர்வீரர்’ என்று இன்று ஆண்டவர் வாக்குத் தருகிறார்.
ஆண்டின்
பொதுக்காலம் 12-ஆம் ஞாயிறைச் சிறப்பிக்கும் இன்றைய நாளில், திருவழிபாட்டு வாசகங்கள் நமக்கு ஒரு மாபெரும் நம்பிக்கை அழைப்பை விடுக்கின்றன. இறைவனின் அழைப்பை ஏற்று நாம் மக்கள் பணிபுரியும் வேளையில், தீயவர்களால் வரும் துயரங்களையும், அதன் விளைவாக ஏற்படும் இலட்சிய மரணத்தையும் கூட கிறிஸ்துவுக்காக வீரமுடன் எதிர்கொள்ள இன்றைய இறைவார்த்தை நமக்கு அஞ்சா நெஞ்சத்தைத் தருகிறது.
இன்றைய
முதல் வாசகமான இறைவாக்கினர் எரேமியாவின் ‘இறுதி அறிக்கை’ பகுதியில் காணப்படும் அவரது புலம்பல்கள், அவர் அனுபவித்த துன்பங்கள் எவ்வளவு கொடூரமானவை என்பதை நமக்கு வெளிப்படுத்துகின்றன. ஏனெனில், எரேமியா இறைவாக்கு உரைத்த போது ஆண்டவரின் இல்லத்துத் தலைமை அதிகாரியான பஸ்கூர் (எரே 20:1) உள்ளிட்ட சில குருக்களாலும், பல தரப்பினராலும் கடுமையான
இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்டார். தன்னைச் சுற்றியுள்ளவர்கள் எப்படியெல்லாம் துன்புறுத்துகிறார்கள் என்பதை மிக வேதனையோடு விவரிக்கும் அவர், தான் அறிவித்த இறைவாக்கைக் கேட்ட மக்கள் தன்னைச் சுற்றிலும் ஒரே திகில் எனக் கருதி ஏளனம் செய்ததையும், தன் மீது வெளிப்படையாகவே பழி சுமத்திப் பொய் இறைவாக்கினராகக் காட்டத் தீவிரமாக முயற்சித்ததையும், தன் நண்பர்கள்கூட தன் வீழ்ச்சிக்காகக் காத்திருந்ததையும் சுட்டிக்காட்டுகிறார்.
இருப்பினும்,
இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட மனிதர்கள் தாங்கள் பெற்ற இறைச்செய்தியையும் தெய்வீக அனுபவத்தையும் தங்களுக்குள்ளேயே அடக்கிவைக்க முடியாது. எத்தனை துன்பங்கள் வந்தாலும், அவர்கள் துணிவுடன் இறைவார்த்தையைத் தொடர்ந்து அறிவிப்பார்கள். மனிதர்கள் எதிர்த்தாலும், தங்களைக் கைவிட்டாலும், தங்களை அழைத்துப் பணிக்கு அனுப்பிய ஆண்டவர் எப்போதும் உடனிருந்து திடப்படுத்துகிறார் என்ற உறுதியான நம்பிக்கை எரேமியாவுக்குள் என்றும் சுடர்விடுகிறது. அதனால்தான் எரேமியா கடவுள் தன்னோடு ‘வலிமை வாய்ந்த வீரரைப் போல’
(எரே 20:11) இருப்பதாக முழங்குகிறார்.
எரேமியாவுக்கு
வலிமை வாய்ந்த வீரராக வெளிப்பட்ட அதே இறைவன், இன்றைய நற்செய்தியில் மனித உருவெடுத்து நமக்கு நேரடியாக ஊக்கம் ஊட்டுகிறார். இயேசு, தம் திருத்தூதர்கள் பன்னிருவரைத் தேர்ந்தெடுத்து (மத் 10:1-4) அவர்களை இறைப்பணிக்காக அனுப்பும் வேளையில் வழங்கிய அறிவுரைகள் அனைத்தும் இன்றைய நற்செய்தியில் ஆழமாகத் தொகுக்கப்பட்டுள்ளன. பணியாற்றச் செல்லும் சீடர்கள் எத்தகையதொரு சவாலான உலகைச் சந்திக்கப் போகிறார்கள் என்பதை இயேசு எவ்வித ஒளிவுமறைவுமின்றி மிக வெளிப்படையாகக் கூறுகின்றார்.
“இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன்” (மத்
10:16) என்று எதார்த்த உண்மையை உரைக்கும் இயேசு, சீடர்கள் செல்லுமிடங்களிலெல்லாம் வெறுப்பும் துன்பமும் அவர்களைத் துரத்தும் (மத் 10:23) என்பதை முன்கூட்டியே அறிவிப்பதோடு, அவற்றைக் கண்டு ‘எதற்கும் அஞ்சவேண்டாம்’ என்றும்
ஊக்கப்படுத்துகிறார்.
சீடர்கள்
எதிர்காலத்தில் சந்திக்கப்போகும் வன்முறைகளுக்கும் சவால்களுக்கும் எதிராக இயேசு அவர்களுக்கு வழங்கும் ஒரே கேடயமும் பாதுகாப்பும், இறைவன் மீது அவர்கள் கொள்ள வேண்டிய அசைக்க முடியாத நம்பிக்கை மட்டுமே ஆகும். ‘சந்தையில் மிக மலிவான காசுக்கு இரண்டு என்ற கணக்கில் விற்கப்படும் சிட்டுக்குருவிகள் கூட தந்தையின் அனுமதியின்றி தரையில் வீழ்வதில்லை; அப்படியிருக்க, உங்களைப் பராமரிக்கும் இறைவன் உங்களையும் தீமையிலிருந்து பாதுகாப்பார் என்ற நம்பிக்கையே தம் சீடர்களை வழிநடத்தவேண்டும்’ என்று
இயேசு கூறுகிறார்.
இறை
நிழலில் வாழும் சீடர்களுக்கு இயேசு வழங்கிய இந்தப் பேராற்றலே கடந்த இருபது நூற்றாண்டுகளாகக் கோடான கோடி உன்னத உள்ளங்களை உறுதிப்படுத்தியுள்ளது. “ஆன்மாவைக் கொல்ல இயலாமல், உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்சவேண்டாம். ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள்” (மத்
10:28) என்று இயேசு தம் சீடர்களுக்குக் கூறிய சொற்கள், வரலாற்றில் எண்ணற்ற கிறித்தவர்களை மரணம் வரை துணிவுகொள்ளச் செய்துள்ளன.
இன்றைய
சூழலில் சத்தீஸ்கர், ஒடிசா, மத்தியப் பிரதேசம், உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் உள்ள
தலித் மற்றும் பழங்குடியினக் கிறித்தவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதற்காகவும், நற்செய்தியை அறிவிப்பதற்காகவும் அவர்களின் வீடுகள் இடிக்கப்படுவதையும், வழிபாட்டுத் தலங்கள் சிதைக்கப்படுவதையும், இறந்தவர்களைப் பொதுக் கல்லறைகளில் அடக்கம் செய்ய உரிமைகள் மறுக்கப்படுவதையும் ஏன், நம்பிக்கையின் பொருட்டுக் கிறித்தவர்கள் படுகொலை செய்யப்படுவதையும் கூட அண்மைக்காலங்களில் நாம் அதிகமாகக் காண்கிறோம். இத்தகைய அச்சுறுத்தல் நிறைந்த இக்கட்டான சூழலில்தான், ‘உடலைக் கொல்பவர்களுக்கு அஞ்ச வேண்டாம்’
என்ற இயேசுவின் வார்த்தைகள் கிறிஸ்துவை நம்பி அவரை அறிக்கையிடுபவர்களுக்கும் நமக்கும் ஒரு மாபெரும் அரணாக விளங்குகின்றன.
இயேசு
கிறிஸ்துவின் வழியாக ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் இந்த அஞ்சா நெஞ்சத்தை இறைவன் அருளாகப் பொழிந்துள்ளார் என்பதைப் புனித பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்தில் மிக அழகாக விளக்குகிறார். ஆதாம் வழியாய் உலகிற்குள் நுழைந்த பாவமும் மரணமும் மனிதனை அடிமைத்தனமான பயத்திற்குள் தள்ளியது என்றால், இயேசு கிறிஸ்துவின் வழியாய் வந்த மீட்பின் அருளானது நமக்கு முழுமையான விடுதலையையும் வீரத்தையும் தருகிறது. சவால்களும் துன்பங்களும் நம்மைச் சூழ்ந்தாலும், கிறிஸ்து நமக்குத் தந்த அந்த அருள்கொடை எத்தகைய சவால்களையும் அச்சத்தையும் வெல்லும் பேராற்றல் கொண்டது என்பதை பவுலடியார் ஆழமாகப் பதிவு செய்கிறார்.
இவ்வாறு
மூன்று வாசகங்களும் நமக்குத் தரும் ஒட்டுமொத்த இறைச்செய்தி: ‘சவால்கள் நிறைந்த இந்த உலகினில் இயேசு கிறிஸ்துவை நம் வாழ்வின் முன்மாதிரியாகக் கொண்டு நாம் எதற்கும் அஞ்சாமல் வாழவேண்டும்.’ இந்த இறைவார்த்தைகளின் ஒளியில், நம் எதார்த்த வாழ்வை மாற்றி அமைக்கக்கூடிய மூன்று முக்கிய வாழ்வியல் சிந்தனைகள்:
முதலாவது,
அச்சத்தை எதிர்கொள்ளும் ஆன்மிகத் துணிவை நாம் நமக்குள் வளர்த்துக்கொள்ள வேண்டும். இறைப்பணியிலும், நம் அன்றாடக் குடும்ப வாழ்விலும் அச்சங்கள் வருவது இயல்பான ஒன்றுதான்; ஆனால், அந்த அச்சத்தைக் கண்டு நாம் பின்வாங்காமல், நம்மைத் தாங்கி நடத்தும் கரம் சாதாரண மனிதனுடையது அல்ல; அது அகில உலகையும் படைத்துக் காக்கும் வல்லமை வாய்ந்த வீரரின் கரம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை நம் உள்ளத்தில் எழவேண்டும்.
இரண்டாவது,
நாம் கடவுளின் பார்வையில் எவ்வளவு விலைமதிப்பற்றவர்கள் என்பதை ஆழமாக உணர்ந்துகொள்ளவேண்டும். நம்முடைய ஒவ்வொரு தேவையையும் பலவீனத்தையும் ஏன், நம் தலைமுடியின் எண்ணிக்கையைக் கூட அவர் அறிந்துள்ளார். இத்தகைய ஆழமான இறைப்பராமரிப்பின் மீதான நம்பிக்கை, நம் இதயத்திலிருந்து அனைத்து அச்சங்களையும் வேரோடு விரட்டியடிக்கவேண்டும்.
மூன்றாவது,
இந்த உலகிற்கு முன்பாகக் கிறிஸ்துவைத் துணிவுடன் அறிக்கையிடும் உண்மையான சாட்சிகளாக நாம் மாறவேண்டும். நற்செய்தி விழுமியங்களின்படி நேர்மையாக வாழும் போது நாம் தனிமைப்படுத்தப்படலாம். ஆனால், “மனிதர் முன்னிலையில் என்னை ஏற்றுக்கொள்ளும் எவரையும், விண்ணகத்திலுள்ள என் தந்தையின் முன்னிலையில் நானும் ஏற்றுக்கொள்வேன்” என்ற
இயேசுவின் வாக்குறுதி, நமக்கு மாபெரும் சாட்சிய வாழ்விற்கான ஆன்மிக வலிமையைத் தருகிறது.
நிறைவாக,
கடலில் புயல் வீசும்போது படகில் இயேசு தூங்கிக் கொண்டிருந்தாலும், அவர் அதே படகில்தான் இருக்கிறார் என்ற உண்மை சீடர்களுக்குப் பாதுகாப்பைத் தந்ததுபோல, நம் வாழ்வின் புயல்களின் நடுவே, சவால்களின் மத்தியில் இறைநம்பிக்கையோடு நாம் அச்சத்தை எதிர்கொள்வோம். இறைப்பணி செய்யவோ, நற்செய்தி விழுமியங்களின்படி வாழவோ நாம் இனி எதற்கும் அஞ்சத் தேவையில்லை. வலிமை வாய்ந்த வீரராக நம் பக்கத்தில் நிற்கும் ஆண்டவரைத் துணையாகக் கொண்டு, அஞ்சாமல் புறப்படுவோம், கிறிஸ்துவின் உண்மையான சாட்சிகளாய் வாழ்வோம்!
வாழ்வு என்பது கடவுள் நமக்குக் கொடுத்த உன்னதமான கொடை! ஒவ்வொரு நாளும் புதிய விடியலையும், புதிய நம்பிக்கையையும் நோக்கி நாம் மகிழ்ச்சியோடுதான் நம் பயணத்தைத் தொடங்குகிறோம்.
இன்றைய
நவீன உலகம் நமக்கு அடுக்கடுக்கான வசதிகளையும், கண்ணிமைக்கும் நேரத்தில் உலகையே நம் கைகளில் காட்டும் வியத்தகு தொழில்நுட்பங்களையும் அள்ளித் தந்துள்ளது. மனித ஆற்றலும் அறிவியலும் உச்சம் தொட்டிருக்கும் ஒரு பொற்காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது மறுக்க முடியாத உண்மை. இருப்பினும், இன்றைய எதார்த்த சூழலில் இந்த அதிவேக ஓட்டத்திற்குப் பின்னால், மனித இதயம் ஏதோ ஒரு திசையறியாத் தவிப்பை எதிர்கொண்டுதான் இருக்கிறது. வழிகாட்டும் தொழில்நுட்பங்கள் பெருகிவிட்ட போதிலும், ‘அடுத்த நொடி என் வாழ்வு எங்குச் செல்லப் போகிறது?’ என்ற ஆழமான தேடல் மனித மனங்களில் கூடிக்கொண்டே போகிறது. ‘வழிகாட்டிகள்’ என்று
தங்களை அறிவித்துக் கொள்ளும் முகமூடிகள் நம்மைச் சுற்றி ஏராளமாக இருந்தாலும், காயம்பட்ட நெஞ்சங்களைத் தேற்றி, தாங்கிப் பிடிக்கும் உண்மை மனிதரைக் காண்பது இன்று அரிதாகிவிட்டது. பல நூறு மனிதர்
கூடி வாழும் கூட்ட நெரிசலிலும், தனிமையின் ஏகாந்தக் கொடுமையையும், அலைக்கழிப்பையும் பலரும் அனுபவித்து வருகிறார்கள்.
‘நான்கு திசையும் பாதைகள்... நன்மை என்ன தீமை என்ன அறியாத கோலங்கள்’
என்ற பாடல் வரிகளுக்கேற்ப நாம் அலைக்கழிக்கப்பட்டு, சோர்ந்து போயிருக்கும் இந்த எதார்த்தமான தவிப்பின் பின்னணியில்தான் இன்றைய இறைவார்த்தை நம்மை நோக்கி ஒளிர்கிறது. அரவணைக்கும் நல்ல ஆயரின் பேரன்பை நோக்கி நம்மை வழி நடத்துகிறது.
இன்று
நாம் பொதுக்காலத்தின் 11-ஆம் ஞாயிறு வழிபாட்டைச் சிறப்பிக்கின்றோம். இன்றைய வாசகங்கள், தகுந்த தலைவர் அல்லது
வழிகாட்டி இல்லாத இறை மக்கள்மேல் இறைவன் கொண்டுள்ள பரிவுள்ளத்தையும், அதை வெளிப்படுத்த நமக்கு விடுக்கும் அழைப்பினையும் எடுத்துக்காட்டுகின்றன.
வாழ்வில்
திசையறியாமல், பாரங்களால் அலைக்கழிக்கப்பட்டுச் சோர்ந்து போயிருக்கும் ஒவ்வொரு மனிதரையும் தேடி ஓடிவரும் ஒரு நல்ல ஆயராகக் கடவுள் வெளிப்படுகிறார். நற்செய்தி வாசகத்தின் தொடக்க வரியான ‘திரண்டிருந்த மக்களை அவர் கண்டபோது அவர்கள் மேல் பரிவுகொண்டார். அவர்கள் ஆயர் இல்லா ஆடுகளைப்போல அலைக்கழிக்கப்பட்டுச் சோர்ந்து காணப்பட்டார்கள்’ (மத்
9:36) என்பது, பழைய ஏற்பாட்டில் பாபிலோனிய நாடு கடத்தலின்போது இஸ்ரயேலர் நிலமற்று, தலைவனற்றுத் தவித்த நிலையை நினைவூட்டுகிறது.
இறைவாக்கினர்
மீக்கா அன்றைய மக்களின் பரிதாப நிலையை விவரிக்கும்போது, “இஸ்ரயேலர் அனைவரும் ஆயனில்லா ஆடுகளைப்போல் மலைகளில் சிதறுண்டு கிடக்கக் கண்டேன்”
(1அர 22:17) என்கிறார். இவர்களின் அவலநிலையை இறைவாக்கினர் எசேக்கியேல் உருவகப்படுத்தும்போது, “ஆயன் இல்லாமையால் அவை அலைந்து திரிந்து, காட்டு விலங்குகளுக்கெல்லாம் இரையாயின. சிதறுண்டுபோன என் மந்தையைத் தேடவோ கூட்டிச் சேர்க்கவோ எவரும் இலர்”
(எசே 34:5-6) என்று இறைவனிடம் தன் வேதனையைப் பதிவு செய்கிறார்.
இந்தத்
தவிப்புகளுக்கெல்லாம்
உன்னத விடையாக அமைவதுதான் இன்றைய முதல் வாசகம். இறைவன் இஸ்ரயேல் மக்களை நோக்கி, “கழுகுகளின் இறக்கைகளின்மேல் உங்களை ஏந்தி என்னிடம் வரச்செய்தேன்” (விப
19:4) என்று தமக்கே உரிய பேரன்பின் செயல்பாட்டை வெளிப்படுத்துகிறார். இஸ்ரயேல் மக்கள் பிற இனத்தாரின் தவறான மதிப்பீடுகளைப் பின்பற்றாமலும், சிலை வழிபாட்டிலும் தீயவழிகளில் வீழ்ந்துவிடாமலும், நீதியை நிலைநாட்டும் உண்மை மனிதராய் வாழவேண்டும் என்பதற்காகவே மோசே வழியாக அவர்களைத் தமது ‘தூய மக்களினமாக’ கடவுள்
அணைத்துக் கொள்கிறார். இதனால்தான் மோசே தன் ஆயுள் முடியும் தருவாயிலும், ஆண்டவரின் மக்கள் மேய்ப்பனில்லா ஆடுகளாய் அலைந்து திரியக்கூடாது என்ற பெருங் கவலையோடு கடவுளிடம் ஒரு நல்ல தலைவனுக்காக மன்றாடினார் (எண் 27:17).
பழைய ஏற்பாட்டில்
கழுகின் இறக்கைகளில் தாங்கி, மக்களைத் தூய குலமாக மாற்றிய அதே கடவுளின் கனிவான இதயம், புதிய ஏற்பாட்டில் நம் ஆண்டவர் இயேசுவின் வழியாக மனித உருவெடுத்ததை நாம் காண்கிறோம்.
“இயேசு நகர்கள், சிற்றூர்கள் எல்லாம் சுற்றி வந்தார்... நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார்” (மத்
9:35). இவ்வாறு இயேசு மக்களைத் தேடிச்சென்று நேரடியாகச் சந்தித்தபோதுதான் அவர்களின் துயரங்கள், வேதனைகள், ஆன்மிகப் போராட்டங்கள் மற்றும் அன்றாடத் தேவைகளை நேரில் காண்கிறார். அந்த எளிய, கதியற்ற மக்களின் வாழ்விற்குள் இயேசுவின் இதயத்தால் எளிதில் புகமுடிகிறது. அவர்கள் ஆயனற்ற ஆடுகள்போல் அலைக்கழிக்கப்படுவதை அவரால் கண்டுகொள்ள முடிகிறது.
அடுத்தவரின்
துன்பத்தை அறிவது என்பது, அவர்களின் துன்பநிலைக்குள் நாமும் புகாமல் சாத்தியமில்லை. பிறரது இயலாமையை அங்கீகரிப்பதன் மறுபக்கமே அவர்களுக்காகக் களத்தில் இறங்கிச் செயலாற்றுவதுதான். இயேசுவின் பரிவுள்ளம் வெறும் பரிதாபத்தோடு நின்றுவிடாமல் உடனடியாகச் செயலாற்றுகிறது. ஆயர் இல்லா ஆடுகளைப்போல அலைக்கழிக்கப்பட்டுச் சோர்ந்து காணப்பட்ட மக்களுக்குப் பணியாற்ற ஆள்கள் தேவை என்பதை வெளிப்படையாக எடுத்துக்கூறி, பன்னிரு திருத்தூதர்களைத் தேர்ந்தெடுக்கிறார். அவர்களுக்குப் பேய்களை ஓட்டவும், நோய்களைக் குணமாக்கவும் அதிகாரமளித்து, “கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள்” (மத்
10:8) என்ற கட்டளையோடு அலைக்கழிக்கப்படும் மக்களின் புதிய ஆயர்களாக அவர்களை உலகிற்குள் அனுப்புகிறார்.
புனித
பவுல் இன்றைய இரண்டாம் வாசகத்தில், இந்த ஆயரின் பரிவை மனித அறிவுக்கு எட்டாத ஒரு மாபெரும் ஆன்மிக ஆழத்திற்கு எடுத்துச் செல்கிறார். நாம் தகுதியுள்ளவர்களாகவோ, தூய்மையானவர்களாகவோ இருந்தபோது கிறிஸ்து நமக்காக உயிர் கொடுக்கவில்லை; மாறாக, நாம் பாவிகளாய் திக்கற்று, கடவுளுக்கு எதிராக இருந்தபோதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்துத் தம் பேரன்பை எண்பித்தார். புனித பவுல் கூறுவது போல, “நாம் கடவுளுக்குப் பகைவர்களாயிருந்தும், அவருடைய மகன் நமக்காக உயிரைக் கொடுத்ததால் கடவுளோடு ஒப்புரவாக்கப்பட்டுள்ளோம்” (உரோ
5:10). தடம் மாறி, திசைதெரியாமல் ஓடிய மனிதகுலத்தோடு கடவுள்தாமே முன்வந்து ஒப்புரவாவது என்பது, அவரது அளவிட முடியாத பரிவிரக்கத்தின் உச்சக்கட்ட அடையாளமாகும். இந்த மீட்பின் நற்செய்தியை அலைக்கழிக்கப்படும் அகில உலகிற்கும் அறிவிக்கவே தாம் திருத்தூதராக அழைப்புப் பெற்றுள்ளதாகவும் புனித பவுல் பெருமிதத்தோடு பறைசாற்றுகிறார்.
இன்று
நாம் வாழும் இந்தச் சமூகத்தில் ஆயரில்லா ஆடுகளைப்போல் தவிக்கும் ஆயிரமாயிரம் மக்கள்மீது பரிவிரக்கம் கொள்ளவும், அவர்களுக்காகப் பணியாற்றவும் உயிர்த்த இயேசு நம் ஒவ்வொருவரையும் அழைக்கின்றார். நம் இல்லங்களில் வாழும் குழந்தையரும் இளைஞரும் அலைக்கழிக்கப்படும் ஆடுகளாய் நம் முன்னே நிற்பதை நாம் காணவில்லையா? சமூக ஊடகங்களின் மாய உலகிற்குள் நம் சிறார் தஞ்சமடையும்போது, அங்கு அவர்களை நல்வழிப்படுத்த நல்மேய்ப்பர்கள் இல்லாததால், போலி வழிகாட்டிகளாலும், ஆபத்தான நீரோட்டங்களாலும் அலைக்கழிக்கப்பட்டு, மன அழுத்தத்திற்கும், தவறான பழக்கவழக்கங்களுக்கும்
அடிமையாகி, உள்ளத்தாலும் உடலாலும் சோர்ந்து காணப்படுகின்றனர். எனவே, அலைக்கழிக்கப்படும் இந்தச் சமகால உலகிற்கு நாம் ஆற்ற வேண்டிய பணிகள்:
முதலாவதாக,
நல்ல ஆயனின் முதற்பணி திசையறியாது தவிக்கும் ஆடுகளுக்குக் கனிவான வழிகாட்டுவதே ஆகும். தடம்மாறி ஓடும் நம் குழந்தையருக்கு உண்மை நெறியைக் காட்டும் நல்வழிகாட்டிகளாக நாம் மாறவேண்டும். நம்முடைய முன்மாதிரியான வாழ்வாலும், கனிவான உடனிருப்பாலும் அவர்களுக்குள் நம்பிக்கையை விதைப்பதே இன்றைய அவசரத் தேவையாக இருக்கிறது.
இரண்டாவதாக,
இயேசு தம் சீடர்களுக்குத் தந்த முதல் அதிகாரம் ‘நோய்களைக் குணமாக்குவது’ என்பதாகும்.
இன்று நம்மைச் சுற்றியுள்ள உலகம் ஏமாற்றங்களாலும் புறக்கணிப்புகளாலும் உள்ளத்தில் காயப்பட்டு நிற்கும் வேளையில், அலைக்கழிக்கப்படும் பிற மனிதரைக் குற்றவாளிகளாகத் தீர்ப்பிடாமல், அவர்களின் மனக்காயங்களுக்கு அன்பெனும் அருமருந்திடும் ‘நலமாக்கும் கருவிகளாக’
நாம் மாற அழைக்கப்படுகிறோம்.
மூன்றாவதாக,
புனித பவுல் சுட்டிக்காட்டுவது போல, உண்மை அருள்பணி என்பது சுயநலமற்றத் தியாகத்தில் அடங்கியுள்ளது. நம் குடும்பத்தின் அமைதிக்காகவும், குழந்தையரின் உன்னதமான எதிர்காலத்திற்காகவும் நமது தேவையற்ற அகந்தை, கோபம் மற்றும் சுயநல விருப்பங்களைத் தியாகம் செய்யவேண்டும். பிறரின் வாழ்வு சிறந்து ஒளிரும் பொருட்டு, நம்முடைய நேரத்தையும் உழைப்பையும் கையளிக்க முன்வரவேண்டும்.
நிறைவாக,
இன்றைய இறைவார்த்தை நமக்குத் தரும் மாபெரும் ஆறுதல்: நம்மை உற்றுநோக்கும் ஓர் ஆயர் நமக்கிருக்கிறார்; அவர் நம் தவிப்பைக் காண்கிறார்; நம்மீது பரிவு கொள்கிறார்; நம்மைத் தேடி வருகிறார். அதேவேளையில், நம்மைச் சுற்றிலும் அலைக்கழிக்கப்படும் எண்ணற்ற மனிதருக்கு நாம் ‘உதவும் ஆயர்களாக’
மாறவும் அவர் நம்மைப் பணிக்கிறார். நமது பார்வைகள் பரிவிரக்கச் செயல்களாக மாறவேண்டுமெனில், நாமும் இயேசுவைப் போல நம் சமூகத்தை உற்றுநோக்கக் கற்றுக்கொள்வோம். ஆயரின் பரிவு நம் வழியாய் இந்த உலகிற்குச் சென்றடைய இறையருள் வேண்டுவோம்.
17-ஆம் நூற்றாண்டில் பிரான்சில் பிறந்து, கனடாவில் பூர்வகுடிகளிடையே நற்செய்திப் பணியாற்றியவர் இயேசு சபைக்குரு புனித ஐசக் ஜோக்ஸ். 1642-ஆம் ஆண்டில் எதிரிப் பழங்குடியினரால் சிறைப்பிடிக்கப்பட்டு, 13 மாதங்கள் அடிமையாக நடத்தப்பட்ட இவர் சொல்லொண்ணாச் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டார். அந்தக் கொடூரத்தின்போது இவரது கைகளின் விரல்கள் துண்டிக்கப்பட்டன. பின்னர் டச்சு வணிகர்களால் மீட்கப்பட்டு, சிதைக்கப்பட்ட உடலோடு பிரான்சுக்குத் திரும்பியபோதும், கிறிஸ்துவின் பலியை ஒப்புக்கொடுக்கவேண்டும் என்ற இவரது ஆன்மிக ஆர்வம் மட்டும் குறையவே இல்லை.
கத்தோலிக்கத்
திரு அவையின் சட்டப்படி திருப்பலி நிறைவேற்றுவதற்குக் கைகளில் விரல்கள் அவசியமாக இருந்ததால்,
இவர் திருத்தந்தை எட்டாம் அர்பனிடம் சிறப்பு அனுமதி கோரினார். இவரது தியாகத்தைக் கண்டு
உருகிய திருத்தந்தை, “இயேசுவின் சிறந்ததொரு சாட்சியாக விளங்கும் இந்த உன்னதக் குரு
திருப்பலி நிகழ்த்துவதை யாரால் தடைசெய்ய முடியும்?” என்று கூறி அனுமதியளித்தார். தன்
விரல்களற்ற கைகளில் நற்கருணையை ஏந்தி இவர் பலிபீடத்தில் நின்ற காட்சி, இறைப்பிரசன்னத்தின்
வலிமையையும் தன்னலமற்ற தியாகத்தின் ஆழத்தையும் உலகிற்கு உணர்த்தியது.
இன்று
நாம் கிறிஸ்துவின் திரு உடல், திரு இரத்தப் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். மனிதகுலத்தின்
மீட்புக்காகத் தம் உடலையும் இரத்தத்தையும் தியாகமாக்கிய இறைவனின் எல்லையற்ற அன்பை ஆராதிக்கும்
உன்னத நாள் இது.
தியாகம்
என்றால் என்ன? தியாகத்தைப் பற்றி நாம் பொதுவாக என்ன புரிந்து வைத்துள்ளோம்? தியாகம்
என்பது ஏதோ ஒன்றை மற்றவர்களுக்காக விட்டுக்கொடுப்பது அல்லது நமக்குப் பிடித்தமான எதையாவது
இழப்பது என்றுதான் நாம் சாதாரணமாகப் புரிந்து வைத்துள்ளோம். ஏதோ ஓர் இழப்பை மட்டுமே
தியாகம் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில், அதன் உண்மையான ஆன்மிகப் பொருள்
இன்னும் உன்னதமானது என்பதை இந்த விழா நமக்கு உணர்த்துகிறது.
உண்மையில்,
தியாகம் என்ற வார்த்தைக்கு ஆங்கிலத்தில் ‘Sacrifice’ என்று பெயர். இது
‘Sacrum’, ‘Facere’ ஆகிய இரண்டு இலத்தீன் வார்த்தைகளின் தொகுப்பாகும். ‘Sacrum’ என்றால் ‘புனிதமான’ (Holy) என்றும், ‘Facere’ என்றால் ‘உருவாக்குவது’ (To make) என்றும் பொருள். அப்படியெனில், தியாகம்
என்ற வார்த்தையின் உண்மையான பொருள் ‘ஒன்றைப் புனிதப்படுத்துவது’ என்பதாகும். தங்கள் பிள்ளைகளுக்காகத் தங்கள் நலனைத் தியாகம்
செய்யும் பெற்றோர், சமுதாயம் நலமோடும் வளமோடும் வாழத் தம் பங்களிப்பை வழங்குவோர், பிறரின்
உயர்வுக்காகத் தங்களின் சொந்த நலன்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு உழைப்போர் அனைவரும்
தங்களின் செயல்களால் இவ்வுலகைப் புனிதப்படுத்தும் தியாகமிக்க வாழ்வை வாழ்கின்றனர் என்று
அர்த்தம்.
இதனைத்தான்
திருத்தந்தை பிரான்சிஸ், புனித பேதுரு பெருங்கோவிலில், 2020-ஆம் ஆண்டு புனித வியாழன்
திருப்பலியை மக்களின் பங்கேற்பின்றிச் சிறப்பித்த வேளையில், கொரோனா தொற்றுள்ளவர்களுக்குப்
பணியாற்றித் தங்கள் உயிரை வழங்கிய அருள்பணியாளர்கள், துறவியர், மருத்துவப் பணியாளர்கள்,
தூய்மைப் பணியாளர்களைச் சிறப்பான முறையில் குறிப்பிட்டு, “அவர்கள் நம்மிடையே உலவிவந்த
அடுத்த வீட்டுப் புனிதர்கள்” என்று தன் மறையுரையில் போற்றினார்.
எத்தனை துன்பங்கள் நேர்ந்தாலும், எத்தனை தடைகள் வந்தாலும், கிறிஸ்துவின் பிரசன்னத்தை
இவ்வுலகில் நிலைநாட்டிய, இன்றும் நிலைநாட்டும் இத்தகைய தியாக உள்ளங்கள் இவ்விழாவின்
உண்மைப் பொருளை தொடர்ந்து உணர்த்தி வருகின்றனர்.
இந்தத்
தியாகத்தின் முழுமையான வடிவமாக விளங்குபவர் இயேசு. இயேசு நற்கருணையை ஏற்படுத்தியதே
அவரது எல்லையற்றத் தியாகத்தின் உன்னத வெளிப்பாடு ஆகும். ஏதோ ஒன்றை இழப்பதற்காக அல்ல;
மாறாக, ஒட்டுமொத்த மானுடக் குலத்தையும் பாவக் கறைகளிலிருந்து கழுவி, அவர்களைப் புனிதப்படுத்துவதற்காகவும்,
இறை வாழ்வில் முழுமைப்படுத்துவதற்காகவும் இயேசு தம் திரு உடலையும் திரு இரத்தத்தையுமே
கல்வாரியில் தியாகமாக்கினார். உலகம் அனைத்தும் தமக்குச் சொந்தம் என்றாலும், எதுவுமே
இல்லாதவராகத் தம்மை ஆக்கிக் கொண்டார்.
தன்னலமற்ற
இந்தத் தியாகத்தின் ஆழத்தை இன்றைய திருவழிபாட்டு வாசகங்கள் நமக்கு விளக்குகின்றன. இன்றைய
முதல் வாசகத்தில், பாலைவனப் பயணத்தின் கடுமையான சூழலில் இஸ்ரயேல் மக்கள் பசியால் வாடியபோது,
இறைவன் வானத்திலிருந்து ‘மன்னா’ பொழிந்து அவர்களைக் காத்தார் என்பதை
மோசே நினைவுபடுத்துகிறார். அந்த மன்னா மனித உழைப்பால் விளைந்தது அல்ல; மாறாக, மக்களின்
பசியைப் போக்க இறைவன் தம் பேரன்பினால் பொழிந்த தியாகக் கொடை என்பதை நமக்கு உணர்த்துகிறது.
புனித
பவுல் கொரிந்தியருக்கு எழுதிய கடிதத்தில், நாம் திருவிருந்தில் பங்குகொள்ளும் போது,
இயேசுவின் உடலை உண்டு அவரது இரத்தத்தைப் பருகுகிறோம் என்பதை நினைவுபடுத்துகிறார். இதன்
வழியாகக் கிறிஸ்துவின் உண்மையான தெய்வீகப் பிரசன்னம் நம் அனைவருக்கும் கொடையாகக் கொடுக்கப்படுகிறது.
இந்த உன்னதப் பிரசன்னமே நம்மை, “என்னில் வாழ்வது நானல்ல, கிறிஸ்துவே என்னில் வாழ்கிறார்” (கலா 2:20) என்று திருத்தூதரைப் போலச் சான்றுபகர வைக்கிறது.
கிறிஸ்துவின் இந்த ஒரே பிரசன்னம் நம் எல்லாரிலும் செயல்படுவதால், நாம் அனைவரும் ஒரே
உடலாக, ஒரே குடும்பமாக மாறுகிறோம் என பவுல் மிக ஆழமாக எடுத்துரைக்கிறார்.
இன்றைய
நற்செய்திப் பகுதி, இயேசுவின் கல்வாரித் தியாகத்தின் உன்னத அன்பையும், நற்கருணையின்
தெய்வீக ஆழத்தையும் நம் கண்முன்னே நிறுத்துகிறது.
“விண்ணகத்திலிருந்து
இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே! இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார்” (யோவா 51) என்று இயேசு உருக்கமாகக் கூறுவது, வெறும் வார்த்தையல்ல;
அது அளப்பரிய தியாகத்தின் வெளிப்பாடு. இங்கே ‘விண்ணக உணவு’ என்பது
நாம் உள்வாங்கி வாழ்வாக்கவேண்டிய இறைவார்த்தையையும், நமக்காகப் பகிரப்படும் நற்கருணையையும்
குறிக்கிறது. இயேசு தம் உடலையே நமக்காகப் பிட்டு, இரத்தத்தைச் சிந்தி, நமக்கு நிலையான
வாழ்வை வாக்களிக்கிறார். ஆனால், “நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க
இயலும்?” என்று யூதர்கள் தங்களுக்குள் வாக்குவாதம் செய்தபோது, அவர்கள் இயேசுவின் தியாக
அன்பின் மறைபொருளை உணர்ந்திருக்கவில்லை. “திரு அவையின் உண்மையான பெருமை, கிறிஸ்துவின்
சிலுவைப் பாடுகளை நினைவூட்டும் நற்கருணையில் அடங்கியுள்ளது” என்ற திருத்தந்தை பிரான்சிசின் வார்த்தைக்கேற்ப, இயேசு
தம்மைக் கையளிப்பதன் வழியாக நமக்குத் தரும் நிலையான வாழ்வின் ஆழத்தை இவ்வார்த்தைகள்
தெளிவுபடுத்துகின்றன.
இந்தத்
தியாகத்தின் தொடர்ச்சியை இயேசு தமது இறுதி இரவு உணவின்போது முழுமையாக அடையாளப்படுத்துகிறார்.
அவர் அப்பத்தை எடுத்து கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப் பிட்டு சீடர்களுக்குக் கொடுத்து,
“இது உங்களுக்காகக் கொடுக்கப்படும் எனது உடல், இதை என் நினைவாகச் செய்யுங்கள்” (லூக் 22:19) என்று கூறி நற்கருணையை ஏற்படுத்தினார். இதனைத்தான்
நாம் அனுதினமும் கல்வாரித் தியாகத்தின் முடிவில்லாத் தொடர்ச்சியாக, புனித திருப்பலியாகக்
கொண்டாடி வருகின்றோம். நாம் ஒவ்வொரு முறையும் திருப்பலியில் பங்கேற்று, அப்பத்தை உண்டு
இரசத்தைப் பருகும்போதெல்லாம், கிறிஸ்து நமக்காகச் செய்த தியாகம் நிறைந்த வீர மரணத்தையும்,
அவரது மாட்சிமை பொருந்திய உயிர்ப்பையும் உலகிற்கு அறிவிக்கின்றோம். நற்கருணை நாதரை
நம் வாழ்வில் உள்வாங்கும் நாமும், அவரைப் போலப் பிறர் வாழ்வு பெற நம்மையே தியாகத்தோடு
கையளிக்க அழைக்கப்படுகிறோம்.
கிறிஸ்துவின்
தூய்மைமிகு திருவுடல், திரு இரத்தப் பெருவிழா நம் ஆன்மிக வாழ்வை அர்த்த முள்ளதாக்கச்
சில முக்கிய வாழ்வியல் சிந்தனைகளை நமக்கு வழங்குகிறது.
முதலாவதாக,
இயேசுவின் சதையை உண்டு, இரத்தத்தைப் பருகுவது என்பது, அழியாத இறை வார்த்தையாகிய கிறிஸ்துவை
நம் வாழ்வில் முழுமையாக உட்கொள்வதைக் குறிக்கிறது. இது இயேசுவுடன் இணைந்திருப்பதையும்
கிறிஸ்துவின் உடலோடும் கிறிஸ்துவின் மறையுடலான திரு அவையோடும் எல்லா மக்களோடும் நமது
இணைப்பை அதிகமாக்குகிறது. இரண்டாவதாக, நாம் எதை உட்கொள்கிறோமோ, அதுவாகவே மாறுகிறோம்
என்பது நற்கருணை இயல். சதையும் இரத்தமுமான இயேசுவை நாம் உட்கொள்ளும் போது இயேசுவின்
கொள்கைகள், இலட்சியங்கள் மற்றும் அவரது இரக்கமுள்ள அணுகுமுறைகள் யாவும் நமதாகின்றன.
மூன்றாவதாக, இயேசுவின் கல்வாரித் தியாகத்தை நமக்கு நினைவுபடுத்தும் நற்கருணை, அவர்
விட்டுச்சென்ற அன்பு, அமைதி, பரிவு, தோழமை போன்ற உன்னத விழுமியங்களை நம் உள்ளத்தில்
தாங்கி வாழ நமக்கு அழைப்பு விடுக்கிறது.
நிறைவாக,
“ஆர்வமும் சுய தியாகமும் இல்லாமல் இந்த உலகில் மதிப்பும் மாண்புமிக்க எதையும் நம்மால்
சாதிக்க முடியாது” என்ற ஆல்பர்ட் ஸ்வைட்சரின் கூற்றுக்கேற்ப,
தம் உடலின் ஒவ்வோர் அணுவையும் மக்களுக்கென அர்ப்பணித்த இயேசுவைப் போல், நாமும் பிறரின்
நல்வாழ்வுக்காக ஏதோ ஒரு வகையில் நம்மையே வழங்கும் வழிகளை இறை மகன் நமக்குச் சொல்லித்தர
வேண்டுமென்று மன்றாடுவோம்.
அன்பு என்பது தனித்துவமானது; எல்லைகள் அனைத்தையும் கடந்து நிற்பது; தனக்கென வாழாமல் பிறருக்கென வாழ்வதில் பெரும் மகிழ்ச்சி காண்பது; தான் நேசிப்பவர்கள் விரும்புவதை முன்னின்று செய்வதில் உள்ளம் பூரிப்பது. தன்னை வருத்தித் தியாகம் செய்வதும், பிறர் நலனில் தன் நலம் காண்பதுமே அன்பின் இலக்கு. தூய அன்போ எல்லாவற்றையும் விஞ்சியது; தன் குழந்தைக்காகத் தன்னையே இழக்கும் ஆற்றல்மிக்கது; தன் பிள்ளைகளுக்காகத் தன்னையே உருக்கித் தரும் தன்மையது. மானிடரின் அன்பே இத்தனை உன்னதமானது என்றால், அதற்கெல்லாம் ஊற்றாக விளங்கும் இறைவனின் பேரன்பு எத்துணை மேலானது!
இன்று
நாம் தூய்மைமிகு மூவொரு கடவுளின் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றோம். இப்பெருவிழா தந்தை, மகன், தூய ஆவியார் எனும் மூவொரு கடவுளின் பேரன்பின் முழுமையை நமக்கு உணர்த்துகிறது.
இன்று
‘சுயநலம்’ எனும்
தீராத நோயில் சமூகம் சிக்கித் தவிக்கும் வேளையில், இந்த மூவொரு கடவுள் பெருவிழா இன்னும் பொருத்தமானதாகவும், கூடுதல் பொருளுள்ளதாகவும் மாறுகிறது. திரு அவையின் வரலாற்றில் பத்தாம் நூற்றாண்டிலிருந்தே இவ்விழா கொண்டாடப்பட்டதற்கான சான்றுகள் இருந்தாலும், 1334-ஆம் ஆண்டு திருத்தந்தை 22-ஆம் யோவான் அவர்களே இவ்விழாவைத் திரு அவை முழுவதும் அதிகாரப்பூர்வமாகக் கொண்டாடப் பணித்தார். இருப்பினும், இவ்விழாவின் வேர்கள் நான்காம் நூற்றாண்டிலேயே ஆழமாக ஊன்றப்பட்டிருந்தன. அக்காலத்தில் ஆரியுஸ் என்ற ஆயர், “இயேசு கடவுள் அல்லர்; அவர் கடவுளின் முதல் படைப்பு மட்டுமே” என்று போதித்து, இயேசுவின் இறைத்தன்மையையும், தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான சமநிலையையும் மறுத்தார். மூவொரு கடவுள் எனும் பேருண்மையைச் சிதைக்க முயன்ற இந்தத் தவறான போதனையைத் திரு அவை துணிச்சலுடன் எதிர்கொண்டது. கி.பி. 325-இல்
புனித அத்தனாசியுஸ் தலைமையில் கூடிய நைசியா பொதுச்சங்கம், மூவொரு கடவுள் பற்றிய தெளிவான படிப்பினையை வரையறுத்தது.
அன்று
உருவான ‘நைசியா நம்பிக்கை அறிக்கை’,
“இயேசு எல்லாக் காலங்களுக்கும் முன்பே தந்தையிடமிருந்து பிறந்தார்; அவர் உதித்தவர், உண்டாக்கப்பட்டவர் அல்லர்” என்றும், “தூய ஆவியார் தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும் புறப்படுபவர், உயிரளிப்பவர்” என்றும்
முழங்கியது. இந்த நம்பிக்கைப் போராட்டத்தின் வெற்றிக் கொண்டாட்டமே இப்பெருவிழாவின் தொடக்கம். மாறிவரும் இந்த அதிநவீன காலத்தில், அறிவியல் முன்னேற்றங்களுக்கு மத்தியிலும் இறைவனின் மாறாத பேரன்பை நாம் சிந்திப்பது காலத்தின் கட்டாயமாகிறது.
நாம்
ஒவ்வொருவரும் மழலையாய் இருந்தபோது, ‘அம்மா, அப்பா’ என்ற உறவுகளுக்கு அடுத்தபடியாக நமக்கு அறிமுகமான மிக நெருக்கமான உறவு - மூவொரு கடவுளே. நாம் பூவுலகில் கால்பதித்த தருணத்தில், நம்மைக் காண வந்த ஒவ்வொருவரும் நமது பிஞ்சு நெற்றியில் சிலுவை அடையாளம் வரைந்து, இறை ஆசியை நமக்குப் பெற்றுத்தந்தனர். ‘தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே, ஆமென்’ என்ற எளிமையான செபமே நம் நாவுகள் முதன்முதலில் உச்சரிக்கக் கற்றுக்கொண்ட மூவொரு கடவுளின் திருமந்திரம். அந்தப் பேரன்பின் பெயராலேயே நாம் திருமுழுக்குப் பெற்று இறைமக்களாகப் பிறந்தோம்.
நம்மீது
தூய நீர் தெளிக்கப்படும்போதெல்லாம், அந்தப் பெயரைக் கூறி சிலுவை அடையாளம் வரைந்து, நம்மைப் புனிதப்படுத்திக்கொள்கிறோம்.
பாவச்சுமையிலிருந்து நாம் விடுதலை பெற்று மன்னிக்கப்படுவதும், இல்லறம்-துறவறம் என நாம் ஏற்கும்
அனைத்து அருளடையாளங்களும் அதே மூவொரு கடவுளின் பெயராலேயே உறுதிப்படுத்தப்படுகின்றன. நம்முடைய ஒவ்வொரு விடியலும், ஒவ்வொரு செயலும் அந்தத் திருப்பெய ரால் தொடங்கி, அந்தப் பேரன்பிலேயே நிறைவுபெறுகின்றன.
இன்றைய
திருவழிபாட்டு வாசகங்கள் அனைத்தும் மூவோர் இறைவனின் அளப்பரிய பேரன்பை மையப்படுத்துகின்றன. முதல் வாசகத்தில், இஸ்ரயேல் மக்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்டு, பாலைநிலப் பயணத்தில் உடனிருந்து வழிநடத்திய ஆண்டவர், மோசேவுக்குத் தம் திருப்பெயரை வெளிப்படுத்துகிறார். மோசே சீனாய் மலையில் இறைப்பிரசன்னத்தில் நின்ற போது, இறைவன் கடந்து சென்று தம்மையே “இரக்கமும் பரிவும் உள்ள இறைவன் சினம் கொள்ளத் தயங்குபவர்; பேரன்புமிக்கவர்” (விப
34:6) என்று அறிமுகப்படுத்துகிறார். இஸ்ரயேல் மக்கள் பலமுறை இறைவனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து ‘வணங்காக் கழுத்துள்ள மக்களாக’
(34:8) இருந்த போதிலும், இறைவன் அவர்களைக் கைவிடவில்லை; மாறாக, மோசேயின் பரிந்துரையால் அவர்களின் கொடுமைகளையும் பாவங்களையும் மன்னித்து, அவர்களைத் தமது உரிமைச் சொத்தாக மீண்டும் ஏற்றுக்கொள்கிறார். இது மனித வலுவின்மையைத் தாண்டி நிற்கும் இறைவனின் எல்லையற்ற பேரன்பை நமக்கு உணர்த்துகிறது.
பழைய
ஏற்பாட்டில் தம்மை இரக்கமும் பேரன்பும் மிக்கவராக வெளிப்படுத்திய அதே மூவொரு கடவுள், பாவத்தினால் தம்மை விட்டுப் பிரிந்து போன உலகை மீட்கத் தம் ஒரே மகனையே கையளித்ததில் அந்த அன்பின் ஆழம் முழுமைபெறுகிறது. புனித யோவான் குறிப்பிடுவது போல, “உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல; தம் மகன் வழியாக அதனை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்” (யோவா
3:17). கண்ணுக்குத் தெரியாத இறைத்தந்தையின் பேரன்பு, மானிடருக்குப் புலப்படும் வகையில் அவரது அன்பு மகன் வழியாகவே வரலாற்றில் வெளிப்பட்டது (1யோவா 4:9-10).
கடவுள்
அனைத்து மக்களையும் எவ்விதப் பாரபட்சமுமின்றி நேசிக்கும் ஓர் உன்னதத் தந்தை என்றும், நாம் அனைவரும் அவரது பிள்ளைகள் என்றும் இயேசு நமக்குக் கற்றுத் தந்தார். அந்த அன்பை வெறும் வார்த்தைகளால் மட்டும் சொல்லாமல், “சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்கு”
(பிலி 2:8) தம்மையே உருக்கித் தந்து நிரூபித்தார். இயேசுவின் இந்தத் தன்னலமற்ற, எல்லைகளற்ற தியாக அன்பினால்தான் நாம் மீண்டும் இறைத்தந்தையின் உரிமைச் சொத்தாகவும், அவரது சொந்த மக்களாகவும் மாறினோம்.
இன்றைய
இரண்டாம் வாசகத்தில் புனித பவுல், “ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருளும், கடவுளின் அன்பும், தூய ஆவியின் உறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக”
(2கொரி 13:13) என்று வழங்குகின்ற வாழ்த்து வெறும் சடங்கு வார்த்தைகள் அல்ல; அது மூவோர் இறைவனின் இயல்பை விளக்கும் உன்னதமான நம்பிக்கை அறிக்கையாகும். மீட்பராகிய திருமகனிடமிருந்து வழியும் ‘அருள்’,
படைப்பின் மூலமான தந்தையிடமிருந்து பொழியும் ‘அன்பு’ மற்றும் நம்மை இறைவனோடும் பிறரோடும் பிணைக்கும் தூய ஆவியின் ‘உறவு’ ஆகியவற்றை இது குறிக்கிறது. இதன் மூலம், நாம் ஒவ்வொருவரும் மூவொரு இறைவனின் தெய்வீக அன்பின் வட்டத்தில் ஒன்றிணைந்து வாழ அழைக்கப்படுகிறோம் என்பதைப் புனித பவுல் தெளிவுபடுத்துகிறார்.
மூவொரு
கடவுளின் இந்தப் பேரன்பு நம் அன்றாட வாழ்விற்கு மூன்று முக்கியப் பாடங்களைக் கற்றுத்தருகிறது. முதலாவதாக, விலகி நிற்காத ஈடுபாடு. இன்றைய ‘தனிநபர்வாதம்’ எனும்
நோய்க்கு மூவொரு கடவுளின் உறவே மருந்து. ‘எனக்குத் தெரிந்தால் போதும், நான் நலமாக இருந்தால் போதும்’ என்ற சுயநலத்தை விடுத்து, ஒருவருக்காக ஒருவர் அர்ப்பணிப்புடன் வாழவேண்டும். விட்டுக் கொடுப்பதில் தாழ்வு இல்லை, அங்கேயே தெய்வீகம் பிறக்கிறது. மற்றவர்களோடு இணைந்து வாழ்வதே உண்மையான வாழ்வு.
இரண்டாவதாக,
பன்மைத்துவத்தில் ஒருமைப்பாடு. தந்தை, மகன், தூய ஆவி என மூவரும் வெவ்வேறு
பணிகளைச் செய்தாலும், நோக்கத்தில் ஒன்றாக இருக்கிறார்கள். நம்மிடம் உள்ள வெவ்வேறு திறமைகளும் பண்புகளும் பிளவுகளை உண்டாக்காமல், சமூகத்தின் நன்மைக்காக ஒன்றிணைய வேண்டும். “அன்பு இருக்கும் இடத்தில் ஒற்றுமை இருக்கும்”
என்ற அன்னை தெரசாவின் வாக்குப்படி, வேற்றுமையில் ஒற்றுமை காண்போம்.
மூன்றாவதாக
‘தியாகம் கலந்த பகிர்தல்.’ தந்தை தம் மகனை உலகிற்குத் தந்தது என்பது ஒரு சாதாரண கரம் கொடுக்கும் செயல் அல்ல; அது தம் இதயத்தையே கொடுத்த உன்னதச் செயல். கடவுள் நம்மிடம் எதிர்பார்ப்பது நம்மிடம் மிஞ்சியிருப்பதை அல்ல; மாறாக, நமக்கு மிக நெருக்கமானவற்றைப் பிறரோடு பகிர்ந்துகொள்வதையே. மூவொரு கடவுளின் பேரன்பு என்பது தேங்கி நிற்கும் குளமல்ல; அது பொங்கி வழியும் நீரூற்று. அது பிறரைச் சென்றடையவேண்டும்.
நிறைவாக,
மூவொரு கடவுள் பெருவிழா என்பது மறைபொருளை ஆராயும் நாள் அல்ல; மாறாக, ஒரு வாழ்வுமுறையைத் தழுவும் திருநாள். மூவொரு கடவுளின் இந்தப் பேரன்பை நாம் உய்த்துணர ‘நம்பிக்கையே’ ஆணிவேராகிறது.
அந்த நம்பிக்கையே பரிவும் இரக்கமும் நிறைந்த இறைவனை நம் தந்தையாகக் காணச்செய்கிறது. நாமும் அவரைப் போலவே கருணை உள்ளம் கொண்டவர்களாக வாழத் தூண்டுகிறது. “அன்பின்றிச் செய்யப்படும் எதுவும் பயனற்றது”
என்ற புனித பிரான்சிஸ் டி சேல்சின் வாக்கிற்கு
இணங்க நம் வாழ்வு ஒரு பகிர்தலாக, தியாகமாக, உறவின் சங்கமமாக மலரட்டும். தந்தையின் அருளும், மகனின் அன்பும், தூய ஆவியாரின் வழிநடத்துதலும் எப்போதும் நம்மோடு தங்கி, நம்மை அன்பின் சாட்சிகளாக மாற்றட்டும்.
இன்று நாம் மீட்பு வரலாற்றின் மிக முக்கியமான தூய ஆவியாரின் வருகைப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். உயிர்ப்புப் பெருவிழாவிற்குப்பின் வரும் ஐம்பதாம் நாளில் இவ்விழா கொண்டாடப்படுவதால், இது ‘பெந்தகோஸ்து விழா’ என்று அழைக்கப்படுகிறது. ‘பெந்தகோஸ்து’ என்னும் சொல்லுக்கு ‘ஐம்பதாம் நாள்’ என்பது பொருள். இது கோதுமை அறுவடைக்காக நன்றி செலுத்தும் யூதத் திருவிழா. ஏழு வாரங்கள் கழித்துக் கொண்டாடியதால் இது ‘வாரங்களின் விழா’ எனவும் அழைக்கப்பட்டது. கி.மு. 2-ஆம் நூற்றாண்டிலிருந்து சீனாய் மலை உடன்படிக்கையை நினைவுகூரும் நாளாகவும் இது கொண்டாடப்பட்டது.
“என் தந்தை வாக்களித்த வல்லமையை நான் உங்களுக்கு அனுப்புகிறேன்...” (லூக் 24:49) என்ற உயிர்த்த இயேசுவின் வாக்குறுதிப்படி, பெந்தகோஸ்து விழாவே திரு அவையின் தொடக்கமாயிற்று. “தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார்” (லூக்
3:16) என்ற இயேசுவைப் பற்றிய திருமுழுக்கு யோவானின் கூற்று நிறைவேறிய இந்நாளே சீடர்களும் தொடக்ககாலக் கிறித்தவர்களும் திருமுழுக்குப் பெற்ற நாள் என்றும் கூறலாம்.
இந்த
உன்னத நாள், அச்சம் தோற்கடிக்கப்பட்டு வீரம் வெற்றிகொண்ட ஒரு மாபெரும் மாற்றத்தின் நாள்! சீடர்களைச் சிறைபிடித்திருந்த மூடிய கதவுகள் நற்செய்தி அறிவிப்பிற்காகத் திறக்கப்பட்டு, அவர்களின் சந்தேகங்கள் அன்பு நிறைந்த நம்பிக்கையினால் விரட்டியடிக்கப்பட்ட நாள்! நற்செய்தி அறிவிப்பின் வழியாக மக்களை இறையாட்சிக்குள் அறுவடை செய்யும் பணியைத் தொடங்கி வைத்த நாள்! நம் திரு அவையின் பிறந்த நாள்! இன்று திரு அவை உலகம் முழுவதும் ஆல்போல் பரவியிருக்கிறது என்றால், உறுதியாக அது ஆவியாரின் செயல்தான். சுருக்கமாக, திரு அவையின் தொடக்கமும் ஓட்டமும் அதன் அனைத்தும் தூய ஆவியாரின் செயலே.
திருவிவிலியச்
சிந்தனைகளிலும் இறையியல் ஆய்வுகளிலும் தூய ஆவியாரைப் பற்றிய தேடல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கத்தோலிக்கத் திரு அவை இவரை மூவொரு கடவுளின் மூன்றாம் ஆளாக நம்பி ஏற்றுக்கொள்கிறது. “தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும் புறப்படும் ஆண்டவரும் உயிரளிப்பவருமான தூய ஆவி, தந்தையோடும் மகனோடும் ஒன்றாக ஆராதனையும் மாட்சியும் பெறுகிறார்” என்கிறது
நீசான் நம்பிக்கை அறிக்கை.
‘ஆவி’ என்ற சொல் எபிரேயத்தில் ‘ரூஆ’ என்றும், கிரேக்கத்தில் ‘நீயூமா’ என்றும், இலத்தீனில் ‘ஸ்பிரித்துஸ்’ என்றும்
அழைக்கப்படுகிறது. இதற்கு மூச்சு, காற்று, ஆன்மா எனப் பல பொருள்கள் உள்ளன.
குறிப்பாக, ‘ரூஆ எலோயிம்’ என்பது கடவுளின் ஆவி, வல்லமை மற்றும் வாழ்வைக் குறிக்கிறது.
திருவிவிலிய
வரலாற்றில் மிக முக்கியமான நான்கு பிறப்புகளை நாம் காண்கிறோம்: உலகின் பிறப்பு (தொநூ 1:2); இஸ்ரயேல் என்னும் தேர்ந்தெடுக்கப்பட்ட இனத்தின் பிறப்பு (விப 19:3); இறைமகன் இயேசுவின் பிறப்பு (மத் 1:18-25) மற்றும் இன்றைய நாளில் நாம் கொண்டாடும் திரு அவையின் பிறப்பு (திப 2:1-11). இந்த நான்கு வரலாற்றுத் திருப்புமுனைகளுக்கும் மூலக் காரணமாய், இயக்கு சக்தியாய் இருந்தவர் தூய ஆவியார். மீட்பின் வரலாற்றில் இவருடைய இன்றியமையாத செயல்பாட்டைத் திருவிவிலியம் சூட்டும் பெயர்கள் நமக்குப் பறைசாற்றுகின்றன. அவர் நம்மை வழிநடத்தும் துணையாளர், வாழ்வு தரும் உயிர் அளிப்பவர், உண்மையை வெளிப்படுத்துபவர் மற்றும் நம்மை இறைப்பிள்ளைகளாக்கும் ஆவியாக இருக்கிறார். மேலும், வல்லமை, விடுதலை, மாட்சி மற்றும் அருங்கொடைகளின் ஊற்றாகத் திகழும் இவரைத் தண்ணீர், எண்ணெய், நெருப்பு, புறா, காற்று மற்றும் ஞானம் போன்ற பல்வேறு அடையாளங்கள் வழியாக நாம் உணர்ந்துகொள்ள முடிகிறது.
தூய
ஆவியார் அடிப்படையில் மாற்றங்களைக் கொண்டுவருபவர் என்பதைத் திருவிவிலியத்தின் தொடக்கம் முதல் முடிவுவரை நாம் காணமுடிகிறது. தொடக்கத்திலேயே, பாழ்வெளிக்கும் இருளுக்கும் நடுவே “கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்ததால்...” (தொநூ 1:2) அங்கே படைப்பு என்னும் மாபெரும் மாற்றம் நிகழ்ந்தது. கடவுள் மண்ணால் மனிதனை உருவாக்கி, அவன் நாசியில் தம் ‘உயிர் மூச்சை’ ஊதியபோதுதான், வெறும் மண் உயிருள்ள மனிதனாக உருமாறியது (தொநூ 2:7). “நான் உங்களில் உயிர்மூச்சைப் புகச் செய்வேன்; நீங்களும் உயிர் பெறுவீர்கள்” (எசே
37:5) என்ற இறைவாக்கினரின் வரிகள், தூய ஆவியார் உலர்ந்த எலும்புகளையும் உயிர்ப்பிக்கும் வல்லமை கொண்டவர் என்பதை உறுதிப்படுத்துகின்றன. இவ்வாறு, ஆண்டவரின் ஆவி எங்கே அனுப்பப்படுகிறதோ, அங்கெல்லாம் படைப்புகளிலும் மனிதர்களிலும் புதுவாழ்விற்கான மாற்றங்கள் மலர்கின்றன. அந்த வகையில், இன்றைய திருவழிபாட்டின் வாசகங்கள் தூய ஆவியார் நம் வாழ்வில் எத்தகைய வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்துகிறார் என்பதைத் தெளிவாக நமக்கு எடுத்துரைக்கின்றன.
திருத்தூதர்
பணிகள் நூலிலிருந்து எடுக்கப்பட்ட முதல் வாசகம், சீடர்களிடம் ஏற்பட்ட வியத்தகு மாற்றத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது. இயேசு உயிர்த்துவிட்டார் என்பதை அறிந்திருந்தும், அதைப் புற உலகிற்கு அறிவிக்கத் துணிவின்றி, யூதர்களுக்கு அஞ்சி “தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தார்கள்” (யோவா
20:19). ஆனால், ஆண்டவர் இயேசு அவர்கள் நடுவே தோன்றி, தம் ‘உயிர்மூச்சை’ அவர்கள்மீது
ஊதி, தூய ஆவியாரை வழங்கிய பின்னரே அவர்களின் அச்சம் விலகியது. தூய ஆவியாரால் ஆட்கொள்ளப்பட்ட அந்த நொடியே, பாவங்களை மன்னிக்கும் தெய்வீகத் திடத்தையும் அவர்கள் பெற்றார்கள் (யோவா 20:22). அதுவரை தங்களுக்குத் தெரிந்த மொழிகளில் மட்டும் பேசிக்கொண்டிருந்த சாதாரண மனிதர்கள், ஆவியாரின் தூண்டுதலால் உலகெங்கும் நற்செய்தி பரவத் தடையாக இருந்த மொழி எல்லைகளைத் தகர்த்து, பல்வேறு மொழிகளில் பேசத் தொடங்கினார்கள். எந்த இயேசுவைப் பாடுகளின் போதும் இறப்பின் போதும் அச்சத்தினால் கைவிட்டு ஓடினார்களோ, அதே இயேசுவை எவருக்கும் அஞ்சாமல் உரக்க அறிவித்ததே தூய ஆவியின் வல்லமையால் சீடர்கள் பெற்ற மாற்றம்.
இரண்டாம்
வாசகத்தில், தூய ஆவியார் அருளும் வாழ்வு குறித்து புனித பவுல் மிகத் தெளிவாக விளக்குகிறார். திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொருவர் மீதும் தூய ஆவியாரின் அழியாத முத்திரை பதிக்கப்படுவதால், அவர்கள் அனைவரும் பல்வேறு அருள்கொடைகளால் நிரப்பப்படுகிறார்கள். இந்த அருள்கொடைகள் தனிமனிதப் பெருமைக்காக வழங்கப்பட்டவை அல்ல; மாறாக, அவை அனைத்தும் பொது நன்மைக்காகவும், கிறிஸ்துவின் உடலாகிய திரு அவைக் கட்டியெழுப்பப்படுவதற்காகவுமே
பொழியப்படுகின்றன என்கிறார். மேலும், அவர் “தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவரன்றி, வேறு எவரும் ‘இயேசுவே ஆண்டவர்’ எனச் சொல்ல முடியாது”
(1கொரி 12:3) என்று வலியுறுத்துகிறார். நம் உதடுகள் இயேசுவை அறிக்கையிடுவதே நமக்குள் ஆவியார் செயல்படுகிறார் என்பதற்கான சான்றாகும்.
தூய
ஆவியாரின் ஆட்கொள்தலால் நம் வாழ்வில் நிகழவேண்டிய மாற்றங்களை மூன்று முக்கியப் பாடங்களாகக் காணலாம். முதலாவதாக, தூய ஆவியானவர் மாற்றத்தைக் கொண்டுவரும் முதன்மையான இடம் நமது உள்ளம். நம்மிடம் காணப்படும் கடினமான மனநிலை, பிடிவாதம் மற்றும் குறுகிய சுயநலம் போன்ற தடைகளை அவர் அகற்றி நம்மைப் புதுப்பிக்கிறார். இன்றைய நவீன உலகில் தொழில்நுட்பத்தால் நாம் உலகெங்கும் இணைக்கப்பட்டிருந்தாலும், இதயப்பூர்வமான பிணைப்பின்றித் தனிமைப் பயணிகளாகவே வாழ்கிறோம். எனவே, போலித்தனமான முகமூடிகளைக் களைந்து, ‘சுயநலம்’ என்னும் சிறையை உடைத்து, நம் இதயத்தை இறைவனின் மகிழ்ச்சிக்கும் பிறரின் தேவைகளுக்கும் இடமளிக்கும் ஒரு வரவேற்கத்தக்க இல்லமாக மாற்றவேண்டும்.
இரண்டாவதாக,
தூய ஆவியார் நமது உறவுகளின் எல்லைகளைத் திறந்து, பிளவுகளைக் கடக்கத் துணைபுரிகிறார். இறைவனின் அன்பு நமக்குள் குடிகொள்ளும்போதுதான், கடினத்தன்மையை வென்று பிறருக்கு இதயத்தைத் திறக்கும் ஆற்றலைப் பெறுகிறோம். இதன் மூலமே திரு அவை அனைவரையும் உள்ளடக்கிய இடமாக மாறுகிறது. எனவே, உறவுகளில் நிலவும் கசப்புகளை ஆவியாரின் உதவியால் வெல்லவேண்டும். வேறுபாடுகளை ஒருங்கிணைத்து, அனைவரையும் அன்புடன் வரவேற்கும் விருந்தோம்பும் மனப்பான்மையால் நம் உறவுகளைப் புனிதப்படுத்த முன்வர வேண்டும்.
மூன்றாவதாக,
தூய ஆவியார் வெறுப்பின் சுவர்களைத் தகர்த்து, நம்மை அமைதியின் மொழியைப் பேச அழைக்கிறார். பெந்தகோஸ்து நாளில் சீடர்கள் பேசியவை மனிதர்களை இதயத்தால் இணைக்கும் ‘சந்திப்பின் மொழிகள்’ ஆகும். இது திரு அவையின் உலகளாவிய பணியைச் சுட்டிக்காட்டுகிறது. ஆவியார் அலட்சியம் மற்றும் வெறுப்பு என்னும் சுவர் களைத் தகர்த்து, அமைதி ஆட்சி செய்யும் உலகைக் கட்டியெழுப்ப நமக்கு ஆற்றல் தருகிறார். எனவே, பிரிவினையைத் தூண்டும் சொற்களைத் தவிர்த்து, நல்லிணக்கத்தின் மொழியைப் பேசவேண்டும்; பிறர் மீதான அலட்சியத்தைக் களைந்து, துன்பப்படுபவர்களுக்குக் கரம் கொடுக்கும் தூய ஆவியின் கருவிகளாக நாம் மாறவேண்டும்.
நிறைவாக,
நம் எல்லைகளைத் தகர்த்து மாற்றங்களைக் கொண்டுவரும் தெய்வீக ஆற்றலோடு நம் தன்னலத்தைத் தகர்த்து, உறவுகளை மேம்படுத்தி, உலகிற்கு அமைதியின் தூதுவர்களாகச் செயல்படுவோம். நம் அன்றாட வாழ்வு ஆவியாரால் புதுப்பிக்கப்பட்ட வாழும் நற்செய்தியாக மாறட்டும். அனைவருக்கும் தூய ஆவியார் பெருவிழா வாழ்த்துகள்!