news
ஞாயிறு மறையுரை
மே 03, 2026 பாஸ்கா காலத்தின் 5-ஆம் ஞாயிறு - திப 6:1-7; 1பேது 2:4-9; யோவா 14:1-12 (“உள்ளம் கலங்காதே... உன் நிழலாய் நான் வருகிறேன்”)

நாம் வீட்டை விட்டு வெளியே கிளம்பும்போதோ அல்லது வெளியூர் செல்லும்போதோ வீட்டிலுள்ளவர்களிடம், ‘நான் போயிட்டு வரேன்என்று கூறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். ‘போயிட்டு வரேன்என்ற சொல்லில்மீண்டும் வருவேன்என்ற நம்பிக்கையும், உறவின் தொடர்ச்சியும் ஒளிந்திருக்கிறது. ஆங்கிலத்தில்Goodbyeஎன்று கூறும்போது அதற்குள்God be with you (இறைவன் உன்னோடு இருப்பாராக!) என்ற ஆசி கலந்திருக்கிறது. ‘Farewellஎன்ற வார்த்தை பிரிந்து செல்பவர்நலமாக இருக்கவேண்டும்என்ற வாழ்த்தைச் சுமந்து நிற்கிறது. ஆனால், தமிழ் மொழியில் உள்ளபிரியாவிடைஎன்ற சொல் இன்னும் ஆழமானது. ‘உன்னை விட்டு நான் பிரியமாட்டேன், தற்காலிகமாகத்தான் விடைபெறுகிறேன்என்ற உட்பொருளை அது உணர்த்துகிறது. பிரிவு என்பது ஓர் உறவின் முற்றுப்புள்ளி அல்ல; மாறாக, அது ஒரு தொடர்ச்சி. 

இன்று நாம் பாஸ்கா காலத்தின் ஐந்தாம் ஞாயிறைச் சிறப்பிக்கின்றோம். இன்றைய நற்செய்திப் பகுதி இயேசுவின் மிக நீண்ட பிரியாவிடை (யோவா 13:31-) உரையின் தொடக்கப் பகுதியாக அமைகிறது. நம் வாழ்வின் இக்கட்டான நேரங்களில் நாம் ஒருபோதும் தனித்து விடப்படவில்லை என்பதை உணரவும், நமது அச்சங்களைக் களைந்து, இயேசுவிடம் முழுமையான நம்பிக்கைகொண்டு வாழவும் அழைக்கப்படுகிறோம்.

இயேசுவின் சீடர்கள் ஒருவிதமான இக்கட்டான மனநிலையோடு மேல்மாடியில் அமர்ந்திருக்கிறார்கள். அவர் விரைவில் தங்களை விட்டுச் சென்று விடுவார் என்னும் உணர்வு சீடர்களுக்குப் பெரும் வேதனையையும் கலக்கத்தையும் அளிக்கிறது. 13-ஆம் அதிகாரத்தில் சீடர்களின் கால்களைக் கழுவி, அன்பின் பணிவிடையை ஆழமாகப் பதிவு செய்த இயேசு, பின்னர் தமக்கு நடக்கவிருக்கும் துன்பங்களையும் பிரிவையும் பற்றி விளக்கிக் கூறுகிறார். அது மட்டுமின்றி, “உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் (13:21) என்றும், பாறையாகத் தெரிந்த பேதுருவே தம்மைமறுதலிப்பார் (13:38) என்றும் அவர் கூறியபோது, சீடர்களின் உள்ளம் நிலைகுலைந்து போகிறது.

பிள்ளைகளே, இன்னும் சிறிது காலமே உங்களோடு இருப்பேன்...” (13:3) என்று இயேசு கூறுவதன் வழியாக, ‘தங்களை வழிநடத்தியவருக்கே இந்த நிலையா? நம் எதிர்காலம் என்னவாகும்?’ என்ற பல கேள்விகளும் அச்சங்களும் அவர்களை அலைக்கழிக்கின்றன. இப்படியாக மன உளைச்சலுக்கு உள்ளான தம் சீடர்களைத் திடப்படுத்தவே இயேசு, “நீங்கள் உள்ளம் கலங்கவேண்டாம் (14:1) என்ற நம்பிக்கை சொற்களைக் கூறுகிறார்.

சூழல்கள் நமக்கு எதிராக மாறும்போதுதான் நமது நம்பிக்கை சோதிக்கப்படுகிறது. இருண்ட அறையில் மெழுகுவர்த்தி எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் சோதனையில் இறைநம்பிக்கை. “கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள்; என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள் (14:1) என்று அழைப்பு விடுக்கும் இயேசு, சீடர்களுக்கு (நமக்கும்) மூன்று விதமான தீர்வுகளை முன்வைக்கிறார்:

முதலில், ‘தந்தையின் இல்லத்தில் பல உறைவிடங்கள் உள்ளன (14:2) என்று இயேசு கூறும்போது, அது வெறும் கட்டடங்களைக் குறிக்கவில்லை; மாறாக, இறைவனின் எல்லையற்ற பராமரிப்பைக் குறிக்கின்றது. தொடக்ககாலத் திரு அவை தந்தை ஒரிஜன் இதனைகடவுளை நோக்கிய நமது ஆன்மிகப் பயணத்தின் தங்குமிடங்கள்என்று விளக்குகிறார். யோவான் நற்செய்தியில்உறைவிடம்என்பது இயேசுவிற்கும் அவர் சீடர்களுக்கும் இடையே நம்பிக்கையால் உருவாகும் ஒரு நிரந்தர உறவைக் குறிக்கிறது. இது ஒரு தற்காலிகத் தங்குமிடம் அல்ல; மாறாக (14:2) மாறாத அன்பின் இல்லம். “அப்படி இல்லையெனில், ‘உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்யப் போகிறேன்என்று சொல்லியிருப்பேனா?” (14:2) என்று இயேசு வினவுவது, தமது வார்த்தையின் மீதான நம்பகத்தன்மையை ஆணித்தரமாக உறுதிப்படுத்துவதற்காகவே.

இரண்டாவதாக, அச்சத்திலும் குழப்பத்திலும் மூழ்கியிருந்த சீடர்களுக்கு (13:21,38) “வழியும் உண்மையும் வாழ்வும் நானே (14:6) என்ற காலத்தால் அழியாத சொற்களை இயேசு வழங்குகிறார். திகைத்து நின்றவர்களுக்கு நம்பிக்கையூட்டும்வழியாகவும், போலித்தனங்களுக்கு மத்தியில் நிலையானஉண்மையாகவும், தந்தையோடு இணைக்கும் உயிரோட்டமானவாழ்வாகவும்அவர் விளங்குகிறார். ஒரு தாயின் கனிவோடு அவர்களின் வருங்காலக் கனவுகளை மீட்டெடுக்கும் இயேசு, தந்தையிடம் அழைத்துச் செல்லும் ஒரே பாலமாகத் தம்மை வெளிப்படுத்துகிறார் (14:3). நம் நெருக்கடியான சூழலில், அவரே நமக்கு வழியாகவும், உண்மையான வாழ்வாகவும் இருந்து நமது நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறார்.

மூன்றாவதாக, இயேசு தம் சீடர்களிடம் வெறும் தத்துவங்களைப் பேசவில்லை; மாறாக, அவர்களைத் தம்மோடு இணைந்து செயல்பட அழைக்கிறார். “என் வார்த்தையின் பொருட்டு நீங்கள் என்னை நம்பாவிட்டாலும், நான் செய்த செயல்களின் பொருட்டாவது என்னை நம்புங்கள் (14:11) என்று அவர் உருக்கமாகக் கூறுகிறார். ஏனெனில், அந்த நம்பிக்கைதான் சீடர்களை இயேசுவைப் போன்ற செயல்களைச் செய்யத் தூண்டும் வல்லமை கொண்டது. இன்னும் சொல்லப்போனால், இயேசு செய்த அருஞ்செயல்களை விடவும் மேன்மையானவற்றைச் செய்யும் ஆற்றலை அவர் தம் சீடர்களுக்கு வழங்குகிறார்.

இயேசுவின்பெரிய செயல்களைச் செய்வீர்கள்என்ற வாக்குறுதி, அவர் விண்ணேற்றம் அடைந்த பிறகு சீடர்களின் வாழ்வில் எப்படிச் செயலாற்றியது என்பதற்கு இன்றைய முதல் வாசகம் (திப 6:1-7) ஒரு சிறந்த சான்று. சீடர்களின் எண்ணிக்கை பெருகியபோது, கிரேக்க மற்றும் எபிரேய மொழி பேசுவோரிடையே கைம்பெண்களைப் பராமரிப்பதில் பாரபட்சம் எனும் இக்கட்டான சூழல் எழுகிறது. மீண்டும் ஒரு சவாலைச் சந்தித்த திருத்தூதர்கள், இயேசுவின்உள்ளம் கலங்க வேண்டாம்என்ற வார்த்தையை நினைவுகூர்ந்து, தூய ஆவியால் தூண்டப்பட்டு ஏழு திருத்தொண்டர்களைத் தேர்ந்தெடுத்தனர். “யாரும் திக்கற்றவர்களாக விடப்படக் கூடாதுஎன்ற உயரிய நோக்கத்தில், அவர்கள் சமுதாயப் பணியையும் இறைப்பணியையும் நேர்த்தியாக முன்னெடுத்துச் சாதித்தனர்.

திருத்தூதர்கள் முன்னெடுத்த அந்தச் செயல்பாடு, நற்செய்தியில் இயேசு காட்டியவழியும், அவர் வாக்களித்தஉறைவிடமும்வெறும் கற்பனையல்ல, அவை ஒரு புதிய சமூகத்தை உருவாக்கும் வல்லமை கொண்டவை என்பதை உறுதிப்படுத்துகின்றன. இதனைத்தான் இரண்டாம் வாசகத்தில் புனித பேதுரு, உலகால் தள்ளப்பட்டாலும் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டமூலைக்கல்லான (திபா 118:22) இயேசுவின்மீது கட்டப்பட்டஉயிருள்ள கற்கள் நாம்என்கிறார். அந்த மூலைக்கல்லோடு (இயேசுவோடு) நாம் இணையும்போது, தந்தையின் இல்லத்து வாரிசுகளாக, அதாவது, ‘குருத்துவ அரசராகவும், தூய மக்களினமாகவும் (விப 19:6) மாறி, இறைவனுக்கும் மனிதருக்கும் இடையே பாலமாக அமையும்பெரிய செயல்களை (1பேது 2:9) செய்யும் ஆற்றலைப் பெறுகிறோம். இந்தப் புதிய அடையாளம், நம்மை இருளிலிருந்து வியப்புக்குரிய ஒளிக்கு அழைத்துச் செல்வதுடன், நாம் ஒருபோதும் திக்கற்றவர்கள் அல்ல; மாறாக, உலகத்தைப் படைத்த தந்தையின் பிள்ளைகள் என்பதையும் பறைசாற்றுகிறது.

இன்றைய வழிபாடு நமக்கு விடுக்கும் வாழ்வுக்கான சிந்தனைகள்: முதலாவதாக, “உள்ளம் கலங்க வேண்டாம்என்னும் உயரிய அறிவுரையை இயேசு நமக்கு வழங்குகிறார். கவலையும் கலக்கமும் மேலிடும் நமது அன்றாட வாழ்வில், பல நேரங்களில் நம்பிக்கை குறைவினால் கடவுளின் உடனிருப்பை உணரும் ஆற்றலை நாம் இழந்துவிடுகிறோம். ஆயினும், இக்கட்டான எந்தச் சூழலிலும் கடவுள் நம்மைக் கைவிடாமல் கரம்பிடித்துக் காத்து வருகிறார் என்பதே இயேசு இன்று நமக்குத் தரும் மிக வலிமையான உறுதிப்பாடாகும்.

இரண்டாவதாக, “உன்னோடு இருக்கிறேன்என்ற உறுதிமொழி வழியாகப் பிரிவு குறித்த கவலையைத் தாண்டிச் செயல்பட இயேசு அழைக்கிறார். பிரிவு துயரமானதே; எனினும், அது மேலான நன்மையை நோக்கிய இறைத்திட்டமாகும். அவர் நம்மை விட்டு ஒருபோதும் விலகுவதில்லை; மாறாக, ஒரு துணையாளராக, நம் நிழலாய் என்றும் தொடர்கிறார். எனவே, அவரது பணிகளை இம்மண்ணில் தொடர்ந்து ஆற்றுவதன் வழியாக ஒருநாள் அவரோடு நிலையாக இணைந்திருப்போம் என்ற பேரின்ப ஆறுதலைப் பெறுவோம்.

மூன்றாவதாக, இயேசு செய்த செயல்களை அவரில் நம்பிக்கை கொள்வோரும் செய்யமுடியும்; செய்யவும்வேண்டும் என்பதே இயேசுவின் அழைப்பு. அவரைவிடப் பெரிய செயல்களைச் செய்வோம் என்ற வாக்குறுதி நமக்கு உத்வேகம் தருகிறது. மற்றவர்களின் கண்ணீரைத் துடைப்பதும், திக்கற்றவர்களுக்குத் துணையாய் நிற்பதுமே அந்தபெரிய செயல்கள்.’ அவரே வழியாக இருப்பதால் நாம் பாதையைப் பற்றி அஞ்சத் தேவையில்லை, அவரே இலக்காக இருப்பதால் நமது பயணம் அர்த்தமுள்ளதாகிறது.

நிறைவாக, “நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன்என்ற வார்த்தை இன்று நமக்கான பெரும் ஆறுதல். பிரிவு நம்மை வாட்டலாம், சூழல்கள் நம்மைப் பயமுறுத்தலாம். ஆனால், “உன் நிழலாய் நான் வருவேன்என்று வாக்களித்த ஆண்டவர் இன்றும் நம்மோடு இருக்கிறார். எனவே, நமது உள்ளம் கலங்க வேண்டிய அவசியமில்லை. நாம் இயேசுவின்மீது கொண்ட நம்பிக்கையை ஆழப்படுத்துவோம். அவரே நமது வழி; அவரே நமது உண்மை; அவரே நமது வாழ்வு!

news
ஞாயிறு மறையுரை
ஏப்ரல் 26, 2026 பாஸ்கா காலத்தின் 4-ஆம் ஞாயிறு (நல்லாயன் / இறையழைத்தல் ஞாயிறு) திப 2:14,36-41; 1பேது 2:20-25; யோவா 10:1-10 (அன்பே அதிகாரம்! தியாகமே தலைமை!)

2013-ஆம் ஆண்டு ஏப்ரல் 11-இல், கொரியப் போரில் வீர மரணமடைந்த அருள்பணியாளர் எமில் கப்பானுக்கு (Emil Kapaun) அமெரிக்காவின் மிக உயரிய இராணுவ விருது வழங்கப்பட்டது. பொதுவாக எதிரிகளை வீழ்த்தும் வீரர்களுக்கே தரப்படும் இவ்விருது, போர்க்களத்தில் ஒருமுறை கூடத் துப்பாக்கியை ஏந்தாத ஓர் அருள்பணியாளருக்கு வழங்கப்பட்டது உலகையே வியக்க வைத்தது. “துப்பாக்கியால் ஒரு முறைகூட சுடாத ஓர் அமெரிக்க வீரரை இன்று நாம் பெருமைப்படுத்துகிறோம். அருள்பணியாளர் எமில் கப்பான் பயன்படுத்திய ஒரே ஆயுதம் அன்பு! தன் நண்பர்களுக்காக உயிரைத் தந்த மேலான அன்பு!” என அதிபர் ஒபாமா இவரைப் போற்றினார்.

அதே போர்க்களத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஒரு வீரர், இறப்பதற்கு முன் ஒப்புரவு அருளடையாளம் பெற விரும்பினார். அங்கு மருத்துவம் பார்த்தவர் அருள்பணியாளருக்கு எங்கே போவது எனத் திகைத்தபோது, அருகே படுகாயமடைந்து கிடந்த மற்றொரு வீரர், “நான் ஓர் அருள்பணியாளர் எனத் தன்னை அறிமுகப்படுத்தினார். “அசைந்தால் உங்கள் உயிருக்கு ஆபத்து என மருத்துவர் எச்சரித்தபோதும், “என் வாழ்வைவிட என் நண்பனின் ஆன்மா முக்கியம் எனக் கூறி தரையோடு தரையாக ஊர்ந்து சென்று அந்த வீரருக்கு அருளடையாளம் வழங்கிவிட்டு, அவரோடே இறைவனில் இணைந்தார். “தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை (யோவா 15:13) என்ற வரிகளுக்கு இணங்க, ஆயுதம் ஏந்தாத இந்த மேய்ப்பர்கள் அன்பால் வரலாற்றில் இடம்பிடித்தனர்.

இன்று நாம் உயிர்ப்புக்காலத்தின் நான்காம் ஞாயிறைக் கொண்டாடுகிறோம். இதுநல்லாயன் ஞாயிறு என்றும், ‘உலக இறையழைத்தல் நாள் என்றும் சிறப்பிக்கப்படுகிறது. இறைப்பணிக்காகத் தங்களை அர்ப்பணிக்க முன்வருபவர்களுக்காகவும், பணியில் இருப்பவர்களின் உறுதிப்பாட்டிற்காகவும் சிறப்பாகச் செபிக்கும் நாளாக இது அமைகிறது.

நல்லாயன் என்ற சொல்லைக் கேட்டதுமே, ஓர் ஆட்டுக்குட்டியைத் தம் தோள்மீது சுமந்தபடி கனிவோடு நிற்கும் இயேசுவின் உருவமே நம் கண்களில் நிழலாடுகிறது. வரலாற்று அறிஞர்களின் கூற்றுப்படி, கிறித்தவப் பாரம்பரியத்தில் இயேசுவைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட முதல் உருவம் இதுவேயாகும். கி.பி. 3-ஆம் நூற்றாண்டில், உரோமைப் பேரரசின் அடக்குமுறைக்கு அஞ்சி நிலத்தடிக் கல்லறைகளில் (Catacombs) தஞ்சம் புகுந்த தொடக்க காலக் கிறித்தவர்களுக்கு, அங்கிருந்த சுவர்களில் வரையப்பட்டிருந்த இந்த நல்லாயன் உருவமே அளவற்ற ஆறுதலையும், அசைக்க முடியாத நம்பிக்கையையும் வழங்கியது.

திருவிவிலியப் பார்வையில் ஆடுகளும் ஆயர்களும் பிரிக்க முடியாதவர்களாகவே விளங்குகின்றனர். திருவிவிலியத்தின் முதல் ஆயனாக ஆபேல் (தொநூ 4:2) தொடங்கி, இஸ்ரயேல் மக்களின் மாபெரும் தலைவர்களான ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, மோசே மற்றும் தாவீது ஆகியோர் ஆடுகளைப் பேணிக்காத்த ஆயர்களாகவே தங்கள் வாழ்வைத் தொடங்கினர். குறிப்பாக, மந்தை மேய்த்துக் கொண்டிருந்த தாவீதையே இறைவன் தேர்ந்தெடுத்துத் தம் மக்களின் ஆயராக (தலைவராக) உயர்த்தினார் (2சாமு 7:8). திருவிவிலியச் சூழலில்தலைவர் என்பவருக்குஆயர் என்பதே மிகச்சரியான அடையாளமாக இருந்தது (1அர 22:17).

காலப்போக்கில் இஸ்ரயேல் சமுதாயத்தில் ஆயர்கள் தங்கள் மதிப்பை இழந்தனர். தலைவர்கள் ஆடுகளைப் பற்றிக் கவலைப்படாமல், தங்களையே மேய்த்துக்கொண்டகறுப்பு ஆயர்களாக மாறினர் (எசே 34:3-4). மந்தையை முறையாக மேய்க்காமல் சிதறடித்த அந்தத் தலைவர்களைக் கண்டித்த இறைவன், “நானே என் மந்தையைத் தேடிச் சென்று பேணிக்காப்பேன் (எசே 34:11) என்று வாக்களித்தார். மேலும், “என் இதயத்திற்கு ஏற்ற மேய்ப்பர்களை உங்களுக்குக் கொடுப்பேன் (எரே 3:15) என்ற இறைவாக்கின் நிறைவாகவே இயேசு கிறிஸ்து இவ்வுலகிற்கு வந்தார். அந்த ஒப்புயர்வற்ற, தலை சிறந்த ஆயர் இயேசுவே என்பதையும், ஒரு நல்லாயனுக்கு இருக்க வேண்டிய முக்கியமான பண்புகளையும் இன்றைய நற்செய்தியில் யோவான் மிக அழகாகப் படம்பிடித்துக் காட்டுகிறார்.

முதலாவதாக, ஒரு நல்ல ஆயர் தன் மந்தையை நன்கு அறிபவர். “நான் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; அவையும் என்னை அறிந்திருக்கின்றன (யோவா 10:14). திருவிவிலியச் சூழலில்அறிதல் என்பது வெறும் தகவல் சார்ந்த அறிவு அல்ல; அது ஓர் ஆழமான இதயம் சார்ந்த பிணைப்பு. ஒரு நல்ல மேய்ப்பர் தன் ஆடுகளின் பசி, தாகம், வலி மற்றும் பயத்தைத் தன் சொந்த வலியாக உணர்கிறார். “ஆண்டவரே, நீர் என்னை ஆராய்ந்து அறிந்திருக்கிறீர் (திபா 139:1) என்ற திருப்பாடல் வரிகளுக்கேற்ப, நம்மைப் படைத்தவர் நம் பலவீனங்களை அறிந்தே நம்மை வழிநடத்துகிறார். ஒரு தலைவர் தன் மக்களின் தேவைகளை அவர்கள் சொல்லாமலேயே உணர்ந்திருக்கவேண்டும் என்பதற்கு இதுவே சான்று.

இரண்டாவதாக, ஒரு நல்ல ஆயர் தன் மந்தையோடு ஆழமான நல்லுறவு கொண்டிருப்பவர். “ஆயர் ஆடுகளுக்கு முன்பாகச் செல்வார்; ஆடுகளும் அவரைப் பின்தொடரும்; ஏனெனில், அவரது குரல் அவற்றிற்குத் தெரியும் (யோவா 10:4). இங்கே ஆயருக்கும் மந்தைக்குமான உறவு அதிகாரத்தால் உருவானது அல்ல; அது அன்பால்-நம்பிக்கையால் பிணைக்கப்பட்டது. அவர் ஆடுகளைப் பின்னால் இருந்து விரட்டுவதில்லை; மாறாக, முன்னே சென்று வழிகாட்டுகிறார். ஒரு சிறந்த தலைவர் முன்மாதிரியான வாழ்வால் மக்களை ஈர்க்கவேண்டுமே தவிர, கட்டளைகளால் அல்ல. அந்த உறவுதான் ஆடுகளுக்குப் பாதுகாப்பை வழங்குகிறது.

மூன்றாவதாக, ஒரு நல்ல ஆயர் தன் மந்தையைக் காப்பாற்றுபவர். “நல்ல ஆயன் ஆடுகளுக்காகத் தன் உயிரைக் கொடுப்பார் (யோவா 10:11). ஆடுகளை ஓநாய்களிடமிருந்து காக்க ஆயர் தன் உயிரையும் பணயம் வைக்கிறார். கூலிக்கு வேலை செய்பவன் ஓநாயைக் கண்டதும் ஆடுகளைக் கைவிட்டு ஓடிவிடுவான். ஆனால், நல்லாயன் தன் ஆடுகளின் பாதுகாப்பிற்காகத் தன்னுயிரையே அரணாக மாற்றுகிறார். எந்த ஒரு சூழலிலும் தன்னைப் பற்றிச் சிந்திக்காமல், மற்றவர்களையே எண்ணி வாழ்வதைப் போன்ற ஓர் உயர்வான வாழ்வு உலகில் இல்லை. ஆபத்து, துன்பம் என்று வரும்போது தன்னைக் குறித்து ஒருவர் கவலைகொள்வதும், தன்னைக் காத்துக்கொள்ள முயல்வதும் வெகு சாதாரண மனித இயல்பு. அந்த இக்கட்டான சூழல்களிலும் தன்னைப் பற்றிய கவலை இல்லாமல், அடுத்தவரைப் பற்றிக் கவலைப்படும் மனம், மலைபோல் உயர்ந்த மனம்.

இன்றைய உலகத் தலைவர்களைச் சற்று உற்றுநோக்குவோம். மேலாண்மைத் திறமையும் இராணுவப் பலமும் கொண்ட பல தலைவர்கள் மந்தையைப் பேணுவதற்குப் பதிலாக மந்தையை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். உக்ரைன் முதல் ஈரான் வரை நடக்கும் போர்களில் அதிகார வெறிகொண்ட தலைவர்கள் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் உயிர்களைப் பலி கொடுக்கிறார்கள். சொந்த நாட்டு மக்களே அகதிகளாக அலைவதையும், குழந்தையர் பசியால் மடிவதையும் கண்டும் காணாமல் இருக்கும் கூலிக்கு வேலை செய்யும் தலைவர்களே இன்று மலிந்து கிடக்கிறார்கள். வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், சாதி-மத மோதல்கள் என மந்தை சிதறிக் கிடக்கும்போதுதங்களையே மேய்த்துக்கொள்ளும் (எசே 34:2) சுய நலத் தலைவர்களே அதிகாரப் பீடங்களில் அமர்ந்திருக்கிறார்கள். இந்தச் சூழலில் கிறிஸ்துவின்நல்லாயன் உருவம் ஒரு மிகப்பெரிய எச்சரிக்கையாகவும் அழைப்பாகவும் இருக்கிறது.

அதிகாரம் என்பது அடக்கி ஆள்வதற்கல்ல; அரவணைப்பதற்கே! உலகியல் பார்வையில் அதிகாரம் என்பது ஏணியின் உச்சியில் ஏறி நின்று மற்றவர்களைக் கீழே பார்ப்பது. ஆனால், கிறிஸ்து காட்டும் தலைமைத்துவ ஏணி தலைகீழானது. அங்கே அதிகாரம் என்பது மற்றவர்களை அரவணைத்துத் தூக்கி விடத் தகுந்தவாறு குனிந்து தாழ்ந்திறங்குவதாகும். அதிகாரம் செலுத்துவதைவிட, மற்றவர்களின் காயங்களுக்கு மருந்தாகும் கனிவை நாம் கொண்டிருக்கவேண்டும்.

இன்றைய மின்னணு மற்றும் சமூக ஊடக உலகில்போலி மேய்ப்பர்களின் இரைச்சல் அதிகமாக உள்ளது. நுகர்வு கலாச்சாரம், வெறுப்பு அரசியல், சுயநலம் போன்ற கவர்ச்சிகரமான குரல்கள் நம்மைத் திசைதிருப்புகின்றன. இவற்றிற்கு மத்தியில், மென்மையான கனிவும் நீதியும் கொண்ட கிறிஸ்துவின் குரலை நாம் கண்டறியும் ஞானத்தைப் பெறவேண்டும். அமைதியான செபத்தில்தான் அந்த மெல்லிய குரலை நாம் தெளிவாகக் கேட்க முடியும்.

இந்த இறையழைத்தல் நாளில் நாம் இறைப்பணிக்காகச் செபிப்பது என்பது ஒரு கடமை மட்டுமல்ல, அது திரு அவையின் உயிர்நாடி. நம் இல்லங்களில் வளரும் இளைஞர்கள் உலகியல் இலாபங்களைத் துறந்து, அருள்பணியின் உன்னதத்தை உணர்ந்து இறைவனின் அழைப்பைத் துணிவுடன் ஏற்க நாம் தூண்டுதலாக இருக்கவேண்டும்.

நல்லாயன் ஞாயிறு நமக்கு வழங்கும் செய்தி எளிமையானது. அன்பே அதிகாரம், தியாகமே தலைமை. அதிகாரத்தை விட அன்பும் பதவியை விடப் பணிவுமே ஒருவரை உண்மையான மேய்ப்பராக மாற்றுகிறது. நாமும் அந்த உன்னதப் பாதையில் பயணிக்கத் தொடங்குவோம்.

news
ஞாயிறு மறையுரை
ஏப்ரல் 19, 2026, பாஸ்கா காலத்தின் 3-ஆம் ஞாயிறு - திப 2:14, 22-33; 1பேது 1:17-21; லூக் 24:13-35 (தெரியாத வழித்துணை! தெரிந்த கடவுள்!)

நமது வாழ்வில் நாம் எதையோ எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்; ஆனால், ஏமாற்றமே மிஞ்சுகிறது. திட்டமிட்ட செயல்கள் சிதறும் போது, ‘எல்லாம் முடிந்துவிட்டதுஎன்ற விரக்தியில் நம்பிக்கையை (எருசலேமை) விட்டு வெகுதூரம் விலகிச் செல்கிறோம். அந்தத் தனிமைப் பயணத்தில் நம் இதயம் கனக்கிறது. ஆனால், நாம் முற்றிலும் கைவிடப்பட்டதாக உணரும் அந்த இருண்ட நேரத்தில்தான் ஒருதெரியாத வழித்துணைநம்மைத் தேடி வருகிறார். நாம் அவரை அடையாளம் காணத் தவறினாலும், அவர் நம் அடியோடு அடியெடுத்து வைக்கிறார். நம்முடைய தயக்கம், தடுமாற்றம் மற்றும் கவலைகளுக்கு நடுவே அவர் அமைதியாகத் துணையாக நடக்கிறார் என்பதுதான் உயிர்ப்பின் உண்மையான செய்தி.

இன்று பாஸ்கா காலத்தின் மூன்றாம் ஞாயிறைச் சிறப்பிக்கின்றோம். இன்றைய இறைவார்த்தைகள், தோல்வியின் விளிம்பில் நின்று தவிக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு மாபெரும் நம்பிக்கைப் பிரகடனமாக அமைகின்றனஇவ்வுலகிற்குத் தந்தையாம் இறைவனால் வழங்கப்பட்ட உன்னதக் கொடை இயேசு. ஆனால், அவரது உண்மையான வல்லமையையும், இறையாட்சியின் ஆழத்தையும் சீடர்கள் முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை. ஒரு புதிய அரசியல் மாற்றத்தையோ அல்லது உலகியல் ரீதியான அரசையோ இயேசு நிறுவுவார் என்று அவர்கள் ஆவலோடு காத்திருந்தனர். அந்த உச்சக்கட்ட எதிர்பார்ப்பின் நடுவே, இயேசு பரிதாபமாய் சிலுவையில் அறையப்பட்டு இறந்தபோது, அவர்களின் கனவுகள் சுக்குநூறாக உடைந்தன.

இந்த ஏமாற்றம் அவர்களை நிலைகுலையச் செய்தது. அவர்கள் ஒருவரை ஒருவர் விட்டுச் சிதறுண்டு போனார்கள். இயேசு அறிவித்த அந்தபுதிய சமுதாயம்என்ற ஆர்வம் கருகிப்போனது. ஒருபுறம், யூதருக்கு அஞ்சித் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளைச் சிலர் இறுக மூடிக்கொண்டார்கள் (யோவா 20:19); மறுபுறம், இயேசுவில் கொண்டிருந்த நம்பிக்கையை அறவே இழந்து, தங்களின் பழைய வாழ்விடங்களை நோக்கிச் சிலர் நடக்கத் தொடங்கினார்கள் (லூக் 24:13). ஒருவருக்கொருவர் சந்தேகக் கண்களோடு பார்த்தபடி, நம்பிக்கையற்று காலத்தைக் கடத்தினர். சிலரோ சீடர்கள் குழுமத்தோடு இல்லாதிருந்தார்கள் (யோவா 20:24).

இயேசு தமது இறப்பு மற்றும் உயிர்ப்பைப் பற்றி ஏற்கெனவே முன்னறிவித்திருந்தும், ‘அவரை நேரில் காணவில்லை (லூக் 24:24) என்ற அந்த ஒரே காரணத்திற்காக, உயிர்ப்பின் பேருண்மையை நம்ப அவர்கள் மறுத்தார்கள். ஆனால், இந்த இருண்ட சூழலிலும் மகளிர் மட்டும் நம்பிக்கையை இழக்கவில்லை; துணிவோடு கல்லறைக்குச் சென்றார்கள். அந்தத் துணிச்சலின் பரிசாகவே உயிர்ப்பின் நற்செய்தி அவர்களுக்கு முதலில் வழங்கப்பட்டது. “கலிலேயாவுக்குச் செல்லுங்கள், அங்கு மீண்டும் இயேசுவைக் காண்பீர்கள்என்ற அந்தப் பேரானந்தச் செய்தி, மகளிர் வழியாகச் சீடருக்கு ஒரு புதிய அழைப்பாக விடுக்கப்பட்டது. ஆனால், உயிர்ப்பின் நற்செய்தியை அந்த மகளிர் வழியாகக் கேட்டும், அதைப் பொருள்படுத்தாமல்  ஆறாத் துயரத்தில் மூழ்கிக் கிடந்த அந்த இரு சீடர்கள் (ஒருவரது பெயர் கிளயோப்பா, மற்றொரு சீடரின் பெயர் குறிப்பிடப்படவில்லை) கலிலேயாவுக்குச் செல்லாமல் எம்மாவு நோக்கிப் பயணப்பட்டனர். “நாங்கள் இவரை எவ்வளவோ நம்பினோம்! இவரிடமிருந்து எவ்வளவோ எதிர்பார்த்தோம்! ஆனால், நமக்கு மீட்பளிக்க வந்த மெசியாவிற்குச் சமாதி கட்டிவிட்டனரே!” என்ற அவர்களின் உள்ளக் குமுறல்கள், வழியெங்கும் புலம்பல்களாகவும், கோபமான வார்த்தைகளாகவும் வெடித்திருக்கும்.

இந்தச் சீடர்களின் குமுறல்கள் இன்றும் பல தலைமுறைகளாய் நம் மத்தியில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றன. நாம் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்காதபோது, எதிர்பாராத ஏமாற்றங்கள் வந்து சேரும்போது, நாமும் நமது நம்பிக்கையை (எருசலேமை) விட்டுவிட்டு, நமது பழைய பலவீனங்களை (எம்மாவு) நோக்கிப் பின்வாங்குகிறோம். ஆனால், அங்கேதான் ஒரு வல்ல செயல் நிகழ்கிறது. நம்மைப் போலவே விரக்தியில் நடப்பவர்களுடன் ஒருதெரியாத வழித்துணையாகஉயிர்த்த ஆண்டவர் உடன் பயணிக்கிறார். அவர்களின் புலம்பல்களைப் பொறுமையுடன் கேட்கிறார்.

சீடர்கள் பயந்துபோய் பின்வாங்கிய அந்தப் பாதையில், ஆண்டவர் அவர்களோடு இணைந்து நடந்து, அவர்களின் பயத்தைத் துணிச்சலாக மாற்றத் தொடங்கினார். ஆனால், அவர்களின் கண்கள் அவரை அடையாளம் காண முடியாதபடிமறைக்கப்பட்டிருந்தன (லூக் 24:16). சீடர்கள் தங்களின் ஏமாற்றங்களை விவரிக்கும்போது, இயேசு அவர்களுக்கு மறைநூலை விளக்கிச் சொல்லத் தொடங்குகிறார். அவரின் வார்த்தைகளைக் கேட்கக் கேட்க, சீடர்களின் உள்ளத்தில் ஒரு மாற்றம் நிகழ்கிறது. அவர்கள் அதுவரை ஒருதோல்வியடைந்த மெசியாவைபற்றித் துக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால், இயேசுவோவெற்றிபெற்ற மீட்பரைபற்றிப் பேசுகிறார். இருண்ட பாதையில் அவர்களுக்கு அந்த வார்த்தைகள் ஒரு பேரொளியைத் தந்தன. வார்த்தை வழியாகத்தான் அந்ததெரியாத வழித்துணைமெல்ல மெல்லதெரிந்த கடவுளாகமாறத் தொடங்குகிறார்.

பயணம் எம்மாவு கிராமத்தை நெருங்கியபோது, இயேசு அதற்கு அப்பால் போகிறவர்போலக் காட்டிக் கொண்டார். ஆனால், சீடர்களோஎங்களோடு தங்கும்; ஏனெனில், மாலை நேரம் ஆயிற்று; பொழுதும் போயிற்று (லூக் 24:29) என்று அன்புடனும் உரிமையுடனும் அவரைத் தடுத்து நிறுத்தினர். அவர்கள் காட்டிய அந்த விருந்தோம்பலே, அவர்களுக்கு ஒரு மாபெரும் இயேசு அனுபவத்தைப் பெற்றுத்தந்தது. அவர்களோடு உணவருந்த அமர்ந்தபோது அந்ததெரியாத வழித்துணைகுடும்பத் தலைவரைப் போல அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி, அதைப் பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார். அந்த ஒரு நொடியில் அவர்கள்கண்கள் திறந்தன!’ (லூக் 24:31). வாரத்தின் முதல் நாளன்று, மேல்மாடியில் இயேசு செய்த அதே செயல்... அதே பிட்கப்படும் அப்பம்... அதே அன்பு! அவர்அப்பம் பிட்கையில்அவர்களுக்கு அடையாளமானார்.

இயேசு அப்பத்தைப் பிட்டுக் கொடுத்த அந்த ஒரு நொடியில் சீடர்களின் கண்கள் திறந்தன. அதே கணத்தில் அவர் மறைந்து போனார். ஏன்? இப்போது அவர் அவர்களுக்கு வெளியே ஒரு மனிதராக இருக்க வேண்டிய அவசியமில்லை. அவர் பிட்கப்பட்ட அப்பமாக அவர்களுக்குள்ளே கலந்துவிட்டார்! இதுவே நற்கருணைத் திருவிருந்தின் உச்சக்கட்டத் தருணம். நாம் ஒவ்வொருமுறை திருப்பலியில் பங்கேற்று அப்பம் பிட்கப்படுவதைக் காணும்போதும், அந்ததெரிந்த கடவுளைநம் ஆன்மாவிற்குள் சந்திக்கிறோம். நம் கவலைகளால் மூடப்பட்டிருந்த கண்கள் நற்கருணையின் ஒளியால் திறக்கப்படும்போது, நம் சோர்வும் பயமும் மறைந்து போகிறது. 11 கி.மீ. தூரத்தைநடைப் பிணங்களாககடந்து வந்த சீடர்கள், இப்போதுஉயிர்ப்பின் சாட்சிகளாகஅதே தூரத்தை ஓடிக் கடந்து எருசலேமுக்குத் திரும்புகிறார்கள். “ஆண்டவர் உண்மையாகவே உயிருடன் எழுப்பப்பட்டார்!” (லூக் 24:34) என்று அவர்கள் முழங்கிய அந்தத் தருணமே, அவர்களின் சாட்சிய வாழ்வின் தொடக்கமாகும்.

ஓர் உண்மையானகிறிஸ்து அனுபவம்ஒருபோதும் நம்மை முடக்கி வைக்காது. அது நம்மைப் பிறரை நோக்கியும், புதிய நம்பிக்கையை நோக்கியும் ஓடச்செய்யும். இந்த மாற்றத்தை இன்றைய முதல் மற்றும் இரண்டாம் வாசகங்களில் நாம் மிகத் தெளிவாகக் காண்கிறோம். ஆண்டவரை மூன்று முறை மறுதலித்த பேதுரு, இப்போது தூய ஆவியின் வல்லமையால் நிரப்பப்பட்டு, தன் உடன் திருத்தூதர் பதினொருவருடன் எழுந்து நின்று அஞ்சாமல் சான்றுபகர்கிறார். தொடர்ந்து இன்றைய இரண்டாம் வாசகத்தில், ‘நாம் மீட்கப்பட்டது அழியக்கூடிய பொன் அல்லது வெள்ளியால் அல்ல; மாறாக, மாசற்ற ஆட்டுக்குட்டியாம் கிறிஸ்துவின் விலை மதிப்பற்ற இரத்தத்தால்என்ற உன்னத உண்மையை அவர் எடுத்துரைக்கிறார். இந்த இறைத் திட்டத்தை முழுமையாகப் புரிந்துகொண்ட அந்த நொடியே, சீடர்கள் முடங்கிப்போய்ஒன்றும் செய்யாமல்இருந்துவிடவில்லை; மாறாக, உலகிற்குச் சாட்சியம் சொல்லத் துணிச்சலோடு தங்கள் எருசலேம் நோக்கிப் புறப்பட்டனர்.

நிறைவாக, இந்த எம்மாவு பயணம் நமக்குத் தரும் பாடம் என்ன? முதலில், நாம் கவலையில் மூழ்கி, கடவுள் நம்மை விட்டு விலகிவிட்டார் என்று நினைக்கும்போதுதான், அவர் ஒருதெரியாத வழித் துணையாகநமக்கருகில் நடக்கிறார். நம்முடைய இருண்ட நேரங்களில் நாம் ஒருபோதும் தனிமையில் இல்லை என்பதை உணர்வோம். இரண்டாவதாக, அப்பம் பிட்கையில் சீடர்களின் கண்கள் திறந்ததுபோல, நாமும் ஒவ்வொரு திருப்பலியிலும் இறைவார்த்தைக்கும் நற்கருணைக்கும் முக்கியத்துவம் அளிக்கும்போது, உயிர்த்த ஆண்டவரைத் தனிப்பட்ட முறையில் சந்திக்க முடியும்.

இறுதியாக, நாம் தோல்வி அடையும்போது, நம்பிக்கையை விட்டு ஓடுவது இயல்பு. ஆனால், இயேசுவைத் தொட்டுணர்ந்த பிறகு, நாம் மீண்டும் நம் கடமைகளுக்கும் சமுதாயத்திற்கும் சாட்சிகளாகத் திரும்பவேண்டும். நம் வாழ்வின் பயணங்களில் அந்தத் தெரியாத வழித்துணை எப்போதும் நம்மோடு இருக்கிறார். அவரைதெரிந்த கடவுளாகஅடையாளம் காண நம் இதயக் கதவுகளைத் திறப்போம்.

news
ஞாயிறு மறையுரை
ஏப்ரல் 12, 2026, பாஸ்கா காலத்தின் 2 - ஆம் ஞாயிறு இறை இரக்கத்தின் ஞாயிறு திப 2:42-47; 1பேது 1:3-9; யோவா 20:19-31 (காயங்களில் கனிந்த கடவுளின் எல்லையற்ற கருணை!)

ஈரானுக்கும் இஸ்ரயேல்-அமெரிக்காவுக்கும் இடையே மூண்டுள்ள தற்போதைய போர், உலகையே ஒரு மிகப்பெரிய பேரழிவின் விளிம்பிற்குத் தள்ளியிருக்கிறது. பழிவாங்கும் உணர்வோடு வீசப்படும் ஏவுகணைகளுக்குப் பலியானவர்கள் குழந்தையர் என்று நினைக்கும்போது நம் கண்களில் இரத்தம் கசிகிறது. தென் ஈரானின் மினாப் நகரில் இயந்திரங்கள் வரிசையாக நின்று, நூற்றுக்கும் மேற்பட்ட சவக்குழிகளை ஒரே இடத்தில் தோண்டிக் கொண்டிருக்கின்றன. எங்குப் பார்த்தாலும் மரண ஓலம்! தோளில் பையை மாட்டிக்கொண்டு, மழலைச் சிரிப்புடன் பள்ளிக்குச் சென்ற தன் பிஞ்சு மகளின் புகைப் படத்தைக் கையில் ஏந்தி, ஒரு தாய் கதறிக் கொண்டிருக்கிறார். மற்றொரு பக்கம், தன் மகளின் சடலத்தை வெறும் ஒரு பொட்டலம்போலக் கையில் ஏந்தியபடி ஒரு தந்தை நிலைகுலைந்து நிற்கிறார். அமெரிக்கக் குண்டுவீச்சில் நொறுங்கிப்போன அந்த மகளிர் பள்ளியில், பலியான 168 சிறுமியரை மொத்தமாக அடக்கம் செய்யும் அந்தப் பெருந்துயரம் கல் மனத்தையும் கரைக்கக்கூடியது.

இன்று உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தல் மடிந்து கொண்டிருக்கும் மனிதம்தான். பகைமையும் பழிவாங்கும் உணர்வும் மேலோங்கி நிற்கும் இன்றைய சூழலில், உலகம் இன்று எதைத் தேடுகிறது? ஆயுதங்களையா? அல்லது அதிகப்படியான குண்டுகளையா? பழிவாங்கும் போர் முழக்கங்களுக்கு நடுவில், இந்த உலகம் இன்று ஏங்குவதுஇறைவனின் (மனிதரின்) இரக்கத்திற்காகமட்டுமே.

நாம் பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமைக்குள் அடியெடுத்து வைக்கிறோம். உயிர்ப்புப் பெருவிழாவின் எட்டாம் நாளான இன்று, மரணத்தை வென்ற இயேசுவின் வெற்றியை நாம்இறை இரக்கத்தின் ஞாயிறாக (Divine Mercy Sunday) மிகச் சிறப்பாகக் கொண்டாடுகிறோம். ‘இரக்கத்தின் வடிவே இறைவன்என்பதை உலகிலுள்ள எல்லா மதங்களும் பறைசாற்றுகின்றன. அத்தகைய கருணையின் உருவான இறைவனைக் கொண்டாடவே திரு அவை இன்று நம்மை அன்போடு அழைக்கிறது.

இரக்கத்தைப் பற்றி இன்றைய உலகின் நிலை என்ன? ‘இரக்கம் என்றால் என்ன? அதன் விலை எவ்வளவு?’ என்று கேட்கக்கூடிய அளவிற்கு மனித மாண்பு சிதைந்து கிடப்பது மிகுந்த கவலைக்குரிய ஒன்றாக இருக்கிறது. அன்பு செய்யப்பட வேண்டிய மனிதர் இன்று பயன்படுத்தப்படுகிறார்கள். பயன்படுத்தப்பட வேண்டிய பொருள்கள் இன்று அன்பு செய்யப்படுகின்றன. ‘பழிக்குப் பழிஎன்னும் வன்முறை, குருதி குடிக்கும் தீவிரவாதம், அச்சுறுத்தும் பயங்கரவாதம், மனிதாபிமானமற்ற பெண்ணடிமைத்தனம் மற்றும் பிஞ்சு உள்ளங்களைக் கூட விட்டுவைக்காத பாலியல் வன்கொடுமைகள்... என இவையனைத்தும் இரக்கத்திற்கு எதிரான பேராயுதங் களாக உருவெடுத்து உலகை அச்சுறுத்தி வருகின்றன. இவ்வுலகம் என்றுமில்லாத அளவு இரக்கத்தை இழந்து தவிக்கிறது என்பதை நம் உள்ளங்களில் ஆணி கொண்டு அறைந்துள்ளது நாடுகளுக்கிடையே நடக்கும் போர்களும், பெண் குழந்தைகளுக்கு எதிரான அநீதிகளும். மனித இதயம் கல்லாய் மாறிப்போனதன் விளைவே, நாம் இன்று சந்திக்கும் அத்தனை பேரழிவுகளும், மனிதாபிமானமற்ற செயல்களும்.

இரக்கம் என்பது வெறும் பரிதாபம் காட்டுவதோ அல்லது ஏதோ ஒரு தானத்தைச் செய்வதோ அல்ல; ‘இரக்கம் (Mercy) என்ற சொல்லின் வேர் இலத்தீன் மொழியில்Misericordiaஎன்பதாகும். இதன் பொருள்துன்பப்படுபவர்களிடம் தன் இதயத்தைக் கொடுப்பது (Miseri-cor-dare). யார் ஒருவர் மற்றவரின் வலியைத் தன் வலியாக உணர்ந்து, தன் இதயத்தை அவரிடம் ஒப்படைக்கிறாரோ, அவரே இரக்கமுள்ளவர்.

இன்றைய வழிபாட்டில் இடம்பெற்றுள்ள வாசகங்கள் அனைத்தும் இறைவனின் இரக்கம் எவ்வாறு மனித வரலாற்றிலும், தனிமனித வாழ்விலும் செயல்படுகிறது என்பதை நமக்கு அழகாகப் படம்பிடித்துக் காட்டுகின்றன.

தொடக்க காலக் கிறித்தவச் சமூகம் (திப 2:42-47) இறை இரக்கத்தின் வாழும் சாட்சியாகத் திகழ்ந்தது. அவர்கள் ஒரே மனத்துடன் விளங்கினர்; திருத்தூதர்களின் போதனைகளைக் கேட்டனர்; செபத்தில் நிலைத்திருந்தனர்; நட்புடன் உறவாடினர்; தங்களுக்கு இருந்த சொத்துகளையும் உடைமைகளையும் விற்று, தேவையிலிருப்போர் அனைவருக்கும் பகிர்ந்துகொடுத்தனர். இதுவேசமூக இரக்கம்.’ ஒரு சகோதரரின் வறுமையைக் கண்டு இதயம் துடிப்பதும், அவரது கண்ணீரைத் துடைக்கத் தன் கைகளை நீட்டுவதுமே உண்மையான நற்செய்தி வாழ்வு. அங்கே வன்முறைக்கு இடமில்லை; பகிர்வுக்கு மட்டுமே இடமுண்டு.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (1பேதுரு 1:3-9), ‘கடவுள் தம் பேரிரக்கத்தினால் நமக்குப் புதுப் பிறப்பு அளித்துள்ளார்என்று புனித பேதுரு முழங்குகிறார். நம்முடைய தகுதியால் நாம் மீட்புப் பெறவில்லை; மாறாக, கடவுளின் எல்லையற்ற இரக்கத்தாலேயே நாம் புதுவாழ்வு பெற்றுள்ளோம். சோதனைகளும் துன்பங்களும் நம்மைச் சூழ்ந்தாலும், அழியாத அந்த இறை இரக்கம் நம்மைத் தாங்கிப் பிடிக்கும் என்ற நம்பிக்கையே நம்மை வழிநடத்துகிறது.

நற்செய்தியில் (யோவா 20:19-31) இரக்கத்தின் உச்சகட்டக் காட்சியை நாம் காண்கிறோம். உயிர்த்த இயேசு சீடர்களுக்குத் தோன்றியபோது, சந்தேகம் கொண்ட தோமாவை அவர் கடிந்துகொள்ளவில்லை; மாறாக, அன்போடு அழைக்கிறார். “இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள்…” (20:27) என்கிறார். இயேசுவின் காயங்கள் வடுக்கள் அல்ல; அவை இறை இரக்கத்தின் திறந்த வாயில்கள். தோமா அந்தக் காயங்களைத் தொட்டபோது, அவர் தொட்டது வெறும் சதையை அல்ல; கடவுளின் எல்லையற்ற கருணையை! அந்த ஒரு நொடி, தோமாவின் அவநம்பிக்கை மறைந்து, “நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!” என்ற அடைக்கலம் பிறந்தது. நமக்காகக் காயம்பட்ட இறைவனே, நம் காயங்களையும் குணமாக்கும் இரக்கத்தின் ஊற்று என்பதை இது நமக்கு உணர்த்துகிறது.

மனித வரலாற்றின் தொடக்கமே இறைவனின் இரக்கத்தில்தான் வேரூன்றியிருக்கிறது. முதல் பெற்றோரின் வீழ்ச்சியால் மானுடம் பாவத்தில் மூழ்கியபோது, கடவுள் தம் இரக்கத்தைக் குறைத்துக்கொள்ளவில்லை; மாறாக, அன்னை மரியா வழியாகமீட்புஎன்னும் வாக்குறுதியை வழங்கி, தம் கருணையை உறுதிப்படுத்தினார். சீனாய் மலையில் மோசேக்குத் தம்மை வெளிப்படுத்தியபோது, “ஆண்டவர் இரக்கமும் பரிவும் உள்ள இறைவன்; சினம் கொள்ளத் தயங்குபவர்; பேரன்புமிக்கவர் (விப 34:6) என்று இறைவன் முழங்கியது வெறும் வார்த்தையல்ல; அது மனிதகுலத்தின் மீதான அவரது தீராத பேரன்பு! இந்தத் தந்தையின் இரக்கமே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவில்மனித உருஎடுத்தது. அவரது ஒவ்வொரு சந்திப்பும், ஒவ்வொரு வல்ல செயலும் இறை இரக்கத்தின் அடையாளங்களே.

இறுதியாக, கல்வாரியில் தம் உயிரையே கையளித்தபோது, அந்த இரக்கம் முழுமை பெற்றுச் சிகரம் தொட்டது. இயேசுவின் இந்தப் பரிவிரக்கப் பணிகளை அவரது சீடர்களே முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதுதான் வேதனையான உண்மை. ஒருவர் மறுதலித்தார்; மற்றொருவர் காட்டிக்கொடுத்தார்; ஒருவர் ஆடையின்றி ஓடினார். இவ்வளவு துரோகங்களுக்கும் கைவிடுதலுக்கும் மத்தியிலும், இயேசுவின் இரக்கம் ஒளிர்ந்தது. தம்மைத் தேடி வந்த படைவீரர்களிடம், “என்னைத் தேடுகிறீர்கள் என்றால், இவர்களைப் (சீடர்களை) போகவிடுங்கள் (யோவா 18:8) என்று கூறி, மரண வாயிலிலும் தாம் அழைத்த சீடரைக் காத்தாரே... அதுதான் இரக்கத்தின் உச்சம்!

இன்றைய நாள் நம் அன்றாட வாழ்விற்குக் கற்றுத்தரும் மூன்று முக்கியப் பாடங்கள்: முதலில், நம் காயங்களைக் கடவுளிடம் காட்டுவோம். தோமா இயேசுவின் காயங்களைத் தொட்டபோதுதான் அவரது கடவுள் தன்மையை உணர்ந்தார். அது போல, நம்முடைய தோல்விகளும் பாவங்களும் பலவீனங்களும் நம்மைக் கடவுளிடமிருந்து பிரிக்க வேண்டியவை அல்ல; மாறாக, அவை இறைவனின் இரக்கத்தை நாம் இன்னும் ஆழமாகத் தேடுவதற்கான நுழைவாயில்கள்.

இரண்டாவதாக, பழிவாங்கலைத் துறந்து மன்னிப்பைப் பகிர்வோம். உலகம் இன்று பழிக்குப் பழி என்னும் போரில் எரிந்து கொண்டிருக்கிறது. ஆனால், தம்மைவிட்டு ஓடிப்போன சீடர்களை உயிர்த்த பின் சந்தித்த இயேசு, “உங்களுக்கு அமைதி உரித் தாகுகஎன்று மன்னிப்பைத் தந்தார். நம்மைப் புண்படுத்தியவர்களை மன்னிப்பதன் மூலமே, நாம் இறை இரக்கத்தின் உண்மையான பிள்ளைகளாக மாறமுடியும். மூன்றாவதாக, இரக்கத்தின் கைகளாக மாறுவோம். வறுமையில் வாடுவோருக்கும், சமூகத்தால் ஓரம் கட்டப்பட்ட விளிம்புநிலை மக்களுக்கும், போர்ச்சூழலில் தவிக்கும் அப்பாவி உயிர்களுக்கும் நம் இரக்கத்தின் கரங்களை நீட்டவேண்டும்.

நிறைவாக, போர்களில் மடியும் மனிதம் தொடங்கி, தோமாவின் விரல் தொட்ட இயேசுவின் காயங்கள் வரை ஒரே ஒரு செய்திதான் உரக்க ஒலிக்கிறது: ‘இறைவனின் இரக்கம் எல்லையற்றது.’ அந்தப் பெருங்கருணையைப் பெற்றுக்கொள்வோம்; மண்ணுலகில் இரக்கத்தின் சாட்சிகளாய் வாழ்வோம்.

news
ஞாயிறு மறையுரை
ஏப்ரல் 05, 2026, ஆண்டவருடைய உயிர்ப்பின் பெருவிழா - திப 10:34, 37-43; கொலோ 3:1-4 யோவா 20:1-9 (ஆண்டவர் உயிர்த்து விட்டார்! கலிலேயாவுக்குச் செல்வோம்!)

“கிறிஸ்து உயிர்த்து விட்டார்! அல்லேலூயா!” இச்செய்தியை அறிவிப்பதில் எத்துணை மகிழ்ச்சி! கிறித்தவம் கொண்டாடுகின்ற திருவிழாக்களிலெல்லாம் முதன்மையானதும் தலைசிறந்ததுமான இவ்விழா, நமது நம்பிக்கையின் ஆணிவேர், வாழ்வின் அசைக்க முடியாத அடித்தளம். இறைமகன் மனிதராகப் பிறந்து, தாழ்ச்சியின் உச்சமாகத் தம்மைத் தாமே சிலுவையில் ‘வெறுமையாக்கி இறந்தார். ஆனால், அந்த இறப்பு ஒரு முடிவல்ல; சாவை வென்ற வெற்றியே உயிர்ப்பு! அவரைப்போலவே நாமும் நமது பழைய பாவ இயல்புகளுக்கு இறக்கவும், அருளின் ஒளியில் புதிய மனிதர்களாக வெற்றியோடு உயிர்க்கவும் இன்று அழைக்கப்படுகின்றோம்.

உயிர்ப்பே நற்செய்தியின் உச்சக்கட்ட உண்மை மற்றும் புதிய ஏற்பாட்டின் மையச்செய்தி. கிறிஸ்துவின் உயிர்ப்பு இல்லாவிடில் இன்று கிறித்தவமும் இல்லை, நமது நம்பிக்கையும் இல்லை. எனவேதான், இது சாதாரண ஒருநாள் கொண்டாட்டமாக அன்றி, உயிர்ப்பு முதல் பெந்தகோஸ்து வரை நீளும் 50 நாள்களின் ஈடு இணையற்ற ‘நட்சத்திரக் கொண்டாட்டமாக (க.தி.ம. ஏடு 1169) அமைகிறது. திருத்தந்தை முதலாம் லியோ இவ்விழாவைத் திருவழிபாட்டு ஆண்டின் ‘மிகப்பெரிய விழா (Festum Festorum) என்று போற்றுகிறார். இந்த வெற்றியின் கொண்டாட்டம், நம் வாழ்வை மாற்றியமைக்கும் ஒரு மகா சக்தியாகும்.

இந்த மாபெரும் வெற்றியின் விழாவில் பெண்களே இயேசு உயிர்த்தெழுந்த செய்தியை முதலில் பெற்று, சீடர்களுக்கு அறிவிக்கும் முதற்சாட்சியராக மாறுகின்றனர். இன்றைய நற்செய்தியில் (மத் 28:1-10), பெண்கள் சிலர் இறந்த இயேசுவின் உடலில் நறுமணத் தைலம் பூசச் சென்றபோது அவர்கள் கண்டது ‘காலியான கல்லறை.’ அழுது புலம்பச் சென்ற அவர்களுக்கு, வாழ்வின் மாபெரும் செய்தி அங்கே பறைசாற்றப்பட்டது. “திகிலுற வேண்டாம்; சிலுவையில் அறையப்பட்ட நாசரேத்து இயேசு உயிருடன் எழுப்பப்பட்டார் (மாற் 16:6) என்ற வான தூதரின் அறிவிப்பு, அவர்களின் அச்சத்தை வியப்பாக மாற்றியது. “அவர் உங்களுக்கு முன்பாக கலிலேயாவுக்குப் போய்க்கொண்டிருக்கிறார் (மத் 28:7) என்ற அழைப்பினை ஏற்று, உயிர்ப்பின் சாட்சிகளாக நாமும் இன்று கலிலேயாவுக்குச் செல்வோம்.

இயேசுவின் முப்பதாண்டு கால மறைவாழ்விற்கும், அவரது இறையாட்சிப் பணிக்கும் தொடக்கப்புள்ளியாக அமைந்தது கலிலேயா. நற்செய்தியாளர் யோவான் குறிப்பிடுவதுபோல, தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றிய முதல் அரும் அடையாளமும் (2:11), அரச அலுவலரின் மகனை நலமாக்கிய இரண்டாம் அரும் அடையாளமும் (4:54) நிகழ்ந்த இடம் இதுவே. தமது பொதுப்பணியின் களமாகத் தேர்ந்தெடுத்த இக்கலிலேயாவையே, உயிர்ப்பிற்குப் பின்னும் நற்செய்தியை உலகெங்கும் பரவுவதற்கான மையப்புள்ளியாக இயேசு நிலைநிறுத்துகிறார். அதனால்தான் தாம் உயிருடன் எழுப்பப்பட்ட பிறகு சீடர்களுக்கு முன்பாக கலிலேயாவுக்குச் செல்வேன் என்பதைப் பாஸ்கா விருந்தின் போதே அவர் முன்னறிவித்தார் (மத் 26:32; மாற் 14:28).

யூதேயாவிலிருந்து சமாரியா வழியாக இயேசு மீண்டும் கலிலேயாவில் கால்பதித்தபோது, எருசலேம் திருவிழாவில் அவர் ஆற்றிய வல்ல செயல்களைக் கண்டிருந்த மக்கள் அவரைப் பெருமகிழ்ச்சியுடன் வரவேற்றனர் (யோவா 4:45). ‘பிற இனத்தாரின் கலிலேயா என்று யூதர்களால் இகழ்ந்து ஒதுக்கப்பட்ட, விளிம்புநிலை மக்கள் வாழ்ந்த இப்பகுதியில்தான் இயேசுவின் அருள்பணி தீர், சீதோன் போன்ற எல்லைப் பரப்புகள் வரை விரிந்தது. புறக்கணிக்கப்பட்டவர்களுக்கும், நம்பிக்கையோடு தேடி வந்தவர்களுக்கும் வாழ்வளிக்கும் புகலிடமாக இயேசுவின் வாழ்வில் கலிலேயா ஒரு மைய அடையாளமாகத் திகழ்ந்தது. உயிர்த்த ஆண்டவர் மீண்டும் கலிலேயாவையே தேர்ந்தெடுத்தது, சமூக வரலாற்றில் ஒடுக்கப்பட்ட மற்றும் தள்ளப்பட்ட மக்களைக்கொண்டே தம் மீட்புச் செயலை நிறைவேற்ற விரும்புகிறார் என்பதையே பறைசாற்றுகிறது.

கலிலேயா நோக்கிய பயணம் என்பது வெறும் இடமாற்றம் அல்ல; அது ஒரு மகத்தான வாழ்வியல் மாற்றம். உயிர்த்த ஆண்டவரைச் சந்திக்க நாம் மேற்கொள்ள வேண்டிய இந்த வாழ்வியல் மாற்றத்தைப் பின்வரும் மூன்று நிலைகளில் சிந்திக்கலாம்.

முதலில், கலிலேயாவுக்குச் செல்வது என்பது, வாழ்வை மீண்டும் புதிய உத்வேகத்துடன் தொடங்குவதைக் குறிக்கிறது. சீடர்கள் ஆண்டவரை முதன் முதலில் சந்தித்து உறவைத் தொடங்கிய அதே கலிலேய மண்ணிற்கு அவர்களை மீண்டும் அழைப்பதன் மூலம், அவர்களது தார்மிகத் தோல்விகளைத் தாண்டிய ஒரு புதிய தொடக்கத்தை இயேசு உருவாக்குகிறார்.

இயேசுவின் உயிர்ப்பு என்பது மாட்சிமைப்படுத்தப்பட்ட ஒரு புதிய வாழ்வு என்பதால், கலிலேயாவிற்குத் திரும்பிய சீடர்களும் பழைய பயம் நீங்கி ‘புதிய படைப்பாக உருமாறி, உலகையே மாற்றும் துணிவைப் பெறுகிறார்கள். இது பேதுருவைப்போல மனம் மாறித் தம்மிடம் வர அவர்களுக்கு வழங்கப்பட்ட ஓர் இரண்டாவது வாய்ப்பு ஆகும். இறைவன் எல்லாவற்றையும் புதிதாக்குகின்றார்; நம்மை விடுதலையின் பாதையில் நடக்கச் செய்வார்; நம் தோல்விகளால் சிதைந்துபோன உள்ளங்களையும், புதியதொரு கலைப்படைப்பாக மாற்ற உயிர்த்த இறைவனால் முடியும் என்பதே உயிர்ப்பு நமக்குத் தரும் முதல் மாபெரும் செய்தியாகும்.

இரண்டாவதாக, கலிலேயாவுக்குச் செல்வது என்பது கல்லறையிலிருந்து தூரமாகச் செல்வதைக் குறிக்கிறது. இது இயேசுவைப் பற்றிய இறந்த கால நினைவுகளில் மட்டும் மூழ்கியிருப்பதை விடுத்து, நிகழ்கால நம்பிக்கையின் உயிரோட்டமான நினைவுகளில் வாழ விடுக்கப்படும் அழைப்பாகும். நமது கடவுள் இறந்த காலத்திற்குச் சொந்தமானவர் அல்லர்; அவர் என்றென்றும் நம்மோடு வாழ்கிறார் என்ற அனுபவத்தை உயிர்ப்பு நமக்குத் தெளிவுபடுத்துகிறது. சில நேரங்களில் ஏமாற்றம், கசப்பு அல்லது நிச்சயமற்ற எதிர்காலம் போன்ற காரணங்களால் நமது நம்பிக்கையின் ஊற்று வற்றிப் போகலாம்; எதையும் மாற்ற முடியாது என்ற சோகத்தில் நாம் முடங்கிவிடலாம். ஆனால், உயிர்த்த ஆண்டவர் நம் நம்பிக்கையைச் சிறைப்பிடித்திருக்கும் அந்தப் பாரமான கல்லறைக் கற்களை அகற்றி, எதிர்காலத்தை நோக்கி நம்மைத் துணிவுடன் முன்னேறத் தூண்டுகிறார்.

மூன்றாவதாக, கலிலேயாவுக்குச் செல்வது என்பது விளிம்புநிலை மக்களை நோக்கிப் பயணிப்பதாகும். எருசலேம் என்பது அதிகாரம், செல்வாக்கு மற்றும் சடங்குகளின் மையமாகத் திகழ்ந்தது. ஆனால், கலிலேயாவோ உயர்ந்தவர்கள் என்று கூறிக்கொண்ட யூதர்களால் ஒதுக்கப்பட்ட எளிய மக்கள் வாழ்ந்த பகுதி. இயேசு அங்கேதான் இறையாட்சிப் பணியைத் தொடங்கினார். உயிர்த்த பின்னும் மீண்டும் அங்கேயே செல்கிறார். இதன் மூலம், சமூகத்தின் விளிம்பில் வாழும் சிறியோர் மற்றும் எளியோரின் முகங்களில் உயிர்த்த ஆண்டவரைக் கண்டுகொள்ள நமக்கு அழைப்பு விடுக்கிறார். நமது தினசரி வாழ்வில், வன்முறையாலும் உணவுப் பாதுகாப்பின்மையாலும், காலநிலை மாற்றத்தின் விளைவுகளாலும் துயருறும் மக்களைத் தேடிச்செல்வதே உண்மையான உயிர்ப்பு அனுபவம். புலம்பெயர்ந்தோர் மற்றும் பொருளாதார நெருக்கடிகளால் நலிந்திருப்போர்மீது உயிர்த்த இயேசுவின் ஒளி பிரதிபலிக்கவும், ஏழைக் குடும்பங்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு அவர்களோடு இணைந்து தீர்வுகாணவும் நாம் முன்வர வேண்டும்.

நிறைவாக, இறைமகனின் உயிர்ப்பு நமக்கு வழங்கியுள்ள விலைமதிப்பற்ற வாழ்வைச் சிறப்பிக்கும் இவ்வேளையில், நம் மீதான கடவுளின் முடிவற்ற அன்பை நன்றியுடன் நினைவுகூர்வோம். இந்த அன்பு எல்லாப் பலவீனங்களையும், மரணத்தின் பிடியையும் வெல்லக்கூடிய வல்லமை கொண்டது. இருப்பினும், கடவுள் தந்த இந்த உன்னத வாழ்வு இன்று எத்துணை இகழ்ச்சியாகவும் அவமதிப்பாகவும் நடத்தப்படுகிறது என்பதை நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். தூக்கியெறியும் கலாச்சாரத்திற்குப் பழகிவிட்ட நாம், பலவற்றைத் தூக்கியெறிகிறோம். துன்பமும் கொடுமையும் சூழ்ந்த இவ்வுலகில், சிறு சிறு கற்களாக இருக்கும் நாம் அனைவருமே மதிப்புப் பெற்றவர்கள். யாரையும் தூக்கியெறிய இயலாது. பிறப்பையே காண முடியாத நிலையில் கருவிலேயே அழிக்கப்படும் குழந்தையர், பசியால் மடியும் வறியோர், அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வன்முறைக்கு ஆளாகும் ஏழையர் என வாழ்வின் மாண்பு சிதைக்கப்படுவது உயிர்ப்பின் செய்திக்கு எதிரானது. குறிப்பாக, மனிதரை வெறும் வியாபாரப் பொருள்களாக நடத்தும் நவீன அடிமைத்தனமும், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் அதிகரித்து வருவது வேதனைக்குரியது.

எனவே, இத்தகைய அநீதிகளையும் மனித உரிமை மீறல்களையும் தடுத்து நிறுத்தவும், ஒவ்வொரு மனித உயிரையும் புனிதமாகப் போற்றிப் பாதுகாக்கவும் நாம் எடுக்கும் துணிச்சலான முயற்சிகளே, உயிர்த்த ஆண்டவருக்கு நாம் அளிக்கும் உண்மையான சாட்சியமாகும். வெறும் சடங்குகளோடு நின்றுவிடாமல், வாருங்கள், புதிய நம்பிக்கையுடன் நாம் கலிலேயாவுக்குச் செல்வோம்!

அனைவருக்கும் இனிய உயிர்ப்புப் பெருவிழா வாழ்த்துகள்!

news
ஞாயிறு மறையுரை
மார்ச் 29, 2026, திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு - எசா 50:4-7; பிலி 2:6-11; லூக் 22:14-23:56 (கற்றுக்கொள்ளச் செல்வோம், கல்வாரிக்கு!)

இன்று நாம் புனித வாரத்தின் நுழைவுவாயிலில் நிற்கிறோம். ஆண்டவருடைய பாடுகளின் குருத்து ஞாயிறைக் கொண்டாடி, மீட்பு வரலாற்றின் மிக முக்கியமான வாரத்திற்குள் நாம் அடியெடுத்து வைக்கின்றோம். இவ்வாரம் முழுவதும் நமது ஆண்டவரின் இலட்சியப் பாடுகள், மரணம் மற்றும் உயிர்ப்பைக் கொண்டாட அன்னையாம் திரு அவை நம்மை அழைக்கின்றது.

எருசலேம் நகருக்குள் வெற்றியோடு நுழைந்த இயேசுவை, ‘ஓசன்னாபாடி, ஒலிவக் கிளைகளை அசைத்து வரவேற்ற அதே மக்கள், சில நாள்களிலேயேஅவனைச் சிலுவையில் அறையும்என்று கத்திய முரண்பாடான நிகழ்வை இன்றைய வழிபாடு நம் கண்முன் நிறுத்துகிறது. மனித உள்ளங்களின் நிலையற்ற தன்மையையும், இறைவனின் மாறாத அன்பையும் இந்த நாள் நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறது. இந்த வாரம் முழுவதும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கைப் பாடங்கள் பல உள்ளன. வாருங்கள், கற்றுக்கொள்ளச் செல்வோம், கல்வாரிக்கு!

ஆண்டின் 52 வாரங்களில், இந்த ஒரு வாரத்தை மட்டும் ஏன்புனித வாரம்என்று அழைக்கிறோம்? இயேசுவின் இவ்வுலக வாழ்வின் இறுதி நாள்கள் இவை என்பதாலும், மானிட மீட்பு வரலாற்றின் உச்சகட்ட நிகழ்வுகள் அரங்கேறிய காலம் என்பதாலும் இதனைப் புனித வாரம் என்கிறோம். ஆனால், வரலாற்று ரீதியாகப் பார்த்தால் அந்த இறுதி நாள்களில்புனிதம்என்று சொல்லிக்கொள்ள எதுவுமே வெளியில் தெரியவில்லை, மாறாக மனித பலவீனங்களும், துரோகங்களுமே மலிந்து கிடந்தன.

உடன் இருந்த நண்பனே முத்தமிட்டுக் காட்டிக்கொடுத்தான். உயிருக்கு உயிரான சீடனோஅவரைத் தெரியாதுஎன மறுதலித்தான். ஆபத்து வந்தபோது ஏனைய நண்பர்கள் சிதறி ஓடி ஒளிந்தனர். மனசாட்சிகள் விலைபேசப்பட்டு, பொய் சாட்சிகள் புனையப்பட்டன. “இவரிடம் எக்குற்றமும் காணவில்லைஎன்று தெரிந்தும், அரசியல் ஆதாயத்திற்காக ஒரு மாசற்ற இளைஞனுக்கு மரணத் தீர்ப்பு வழங்கப்பட்டது. இறுதியில், அந்த இளைஞனை அடித்து, சித்திரவதை செய்து, ஒரு கந்தல் துணி போலச் சிலுவையில் தொங்கவிட்டனர். இவற்றில் புனிதம் எங்கே இருக்கிறது?

துரோகமும் அநீதியும் வன்முறையும் நிறைந்த ஒரு வாரத்தைபுனிதம்என்று அழைப்பது முரண்பாடாகத் தோன்றலாம். உண்மையில், புனிதம் என்ற சொல்லுக்கு இயேசு இங்கே ஒரு புதிய இலக்கணத்தை எழுதுகிறார். கடவுள் என்ற மறையுண்மைக்கு மாற்று இலக்கணம் தந்தவர் இயேசு. கடவுள் என்பவர் எட்டாத உயரத்தில் அரியணையில் அமர்ந்திருப்பவர் அல்லர், அவர் அன்புக்காகத் துன்பப்படக் கூடியவர். அதுவும் எத்தகைய துன்பமாயினும், எவ்வளவு கொடுமையான சிலுவையாயினும், மானிடர் மீதான பேரன்பினால் அதனை மனமுவந்து ஏற்பவரே உண்மையான கடவுள் என்பதைச் சிலுவைச் சாவின் வழியாக எண்பித்தவர். துரோகங்களுக்கு நடுவிலும் மாறாத அன்பைக் காட்டியதால்தான் இது புனித வாரம். அதிகாரத்தின் அநீதிக்கு முன்னால் மண்டியிடாமல், மன்னிப்பை ஆயுதமாக்கியதால்தான் இது புனித வாரம்.

இன்றைய நற்செய்தி வாசகம் இயேசுவின் இலட்சிய மரணத்தை நம் கண்முன் நிறுத்துகிறது. அனைத்துத் தியாகச் செயல்களுக்கும் அடிப்படை ஊற்றாக இருப்பது உண்மையான அன்பு மட்டுமே. அந்தத் தூய அன்பிலிருந்து தான் தியாகம் பிறக்கிறது. அந்தத் தியாகத்தின் உச்சக் கட்டத்தில்தான் ஓர் இலட்சிய மரணம் அரங்கேறுகிறது. இயேசு எருசலேமுக்குள் நுழைந்த போது, எவ்விதத் தூண்டுதலுமின்றி மக்கள் தாங்களாகவே திரண்டு வந்து அவரை வரவேற்றனர். அன்று எருசலேமில் உருவான அந்தத் தன்னிச்சையான மக்கள் கூட்டம், யூத மதத் தலைவர்களுக்கும் உரோமை அரசுக்கும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

இயேசு தனது பணிவாழ்வைத் தொடங்கிய காலத்திலிருந்தே, மதத் தலைவர்களின் அதிகாரப் போக்கிற்குச் சவால் விடுத்து வந்தார். அதன் சிகரமாகவே எருசலேம் நகரில் அவருக்குக் கிடைத்த இந்த மாபெரும் வரவேற்பு அமைந்தது. இதனைத் தொடர்ந்து, மதத் தலைவர்களின் கோட்டையாக விளங்கிய எருசலேம் கோவிலுக்குள் நுழைந்த இயேசு, அங்கிருந்த அவலங்களைச் சாட்டையடி கொடுத்துச் சுத்தப்படுத்தினார். இவ்வாறு, அந்த முதல் குருத்தோலை ஞாயிறு, நிலவி வந்த அதிகார அமைப்புகளைப் புரட்டிப் போட்ட ஒரு புரட்சி நாளாக மாறியது.

ஆண்டுதோறும் பாஸ்கா விழாவைக் கொண்டாட இயேசு எருசலேம் வந்திருந்தாலும், இதுவே தனது இறுதிப் பயணம் என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார். அதனால்தான், எருசலேம் நோக்கிய அந்தப் பயணத்தின்போது, தனது பாடுகள் மற்றும் இறப்பைப் பற்றி மூன்று முறை முன்னறிவிக்கிறார் (மாற் 8:31; 9:31; 10:33-34). தான் காட்டிக்கொடுக்கப்பட்டு, கொலை செய்யப்படப்போவதை அறிந்திருந்தும், அவர் தனது இலட்சியத்திலிருந்து சற்றும் பின்வாங்கவில்லை. இயேசுவின் நோக்கத்தை ஓரளவேனும் உணர்ந்திருந்த மக்களும், இறைவாக்கினர் செக்கரியாவின் வாக்குப்படி, “தாழ்ச்சியுடன் கழுதையின் மேலேறி (9:9) வரும் மெசியாவை அடையாளம் கண்டுகொண்டனர். அவர்கள் கையில் குருத்தோலைகளை ஏந்தி, ஒரு மாபெரும் இயக்கமாக இயேசுவோடு இணைந்து எருசலேம் நோக்கி ஆர்ப்பரிப்போடு பயணித்தனர்.

எருசலேம் என்பது உண்மையில் ஒரு முரண்பாடுகளின் நகரம். இயேசுவின் பாடுகள், இறப்பு, மற்றும் உயிர்ப்பு ஆகிய பாஸ்கா மறைபொருளின் நிகழ்வுகளோடு இந்நகரம் பிணைக்கப்பட்டிருப்பதால் இது தனிச்சிறப்பு பெறுகிறது. இது கிறித்தவர்களுக்கும், யூதர்களுக்கும் புனித பூமியாக இருந்தாலும், விவிலிய வரலாற்றில் இது பல முரண்பாடுகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இதுஆண்டவரின் நகர் (எசா 60:14) என்று புகழப்பட்டாலும், ‘இறைவாக்கினரைக் கொல்லும் நகராக (மத் 23:37) மாறியது. இது உண்மையின் நகராக (எசா 1:21; 26, சக் 8:3) இருந்தாலும், மக்களை அடிமைப்படுத்திய நகராகவும் (எரே 5:1-5; மீக் 3:10) இருந்தது. இது மகிழ்ச்சியின் நகர் (திபா 48:2) என்று போற்றப்பட்டாலும், வேதனையின் நகரமாகவும் (புல 2:15) காட்சியளித்தது. சாலமோன் மன்னர் கட்டிய அந்தப் பிரம்மாண்டமான கோவில், இறைவனின் பிரசன்னத்தையும், மன்னிப்பையும், இரக்கத்தையும் பறைசாற்றும் இடமாக விளங்கியது. அது ஒரு பலியின் இடமாகத் தொடங்கி, பிற்காலத்தில் மக்களைச் சுரண்டும் இடமாக மாறியதுதான் வரலாற்றுச் சோகம்.

இன்றைய வழிபாட்டில் சில கேள்வியை நம் இதயங்களில் ஏந்துவோம்: “துன்பங்களைத் தாங்கும் இயேசுவுக்கு முன்னால் நான் யாராக இருக்க விரும்புகிறேன்?” புனித வாரத்தின் இந்தத் தொடக்கத்தில், நாம் வெறும் பார்வையாளர்களாக இருக்கப் போகிறோமா அல்லது பங்கேற்பாளர்களாக மாறப்போகிறோமா? நற்செய்தி காட்டும் மாந்தர்களில் நாம் யாரைப் பிரதிபலிக்கிறோம் என்பதைச் சிந்திப்போம்.

இன்றைய எருசலேம் பவனி பல கேள்விகளால் நிறைந்துள்ளது. இயேசுவின் சிலுவையைச் சுமக்க உதவிய சிரேன் ஊர் சீமோனைப்போல, பிறரின் துன்பங்களில் தோள் கொடுக்கிறோமா? சிலுவையடியில் நின்ற அன்னை மரியாவைப்போல, இக்கட்டான சூழலிலும் உறுதியான நம்பிக்கையோடு நிற்கிறோமா? அடக்கத்திற்கு உதவிய யோசேப்பைப் போல, மறைமுகமாக நற்செயல்கள் செய்கிறோமா? அல்லது... சுயநலத்திற்காக அன்பைக் காட்டிக் கொடுக்கும் யூதாஸாகவா? பொறுப்பிலிருந்து கை கழுவும் பிலாத்துவாகவா? அதிகார போதையில் மற்றவரைக் கண்டனம் செய்யும் மதத் தலைவர்களாகவா? இவ்வாரம் முழுவதும் இக்கேள்விகள் நம் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கட்டும்.

கல்வாரிப் பயணத்தில் இயேசு நமக்குக் கற்பிக்கும் முக்கிய வாழ்வியல் பாடங்கள் இவை: முதலில், இயேசு எருசலேம் கோவிலைச் சுத்தப்படுத்தியதும், அதிகார வர்க்கத்தை எதிர்த்ததும் நமக்கொரு பாடமாகும். இன்று நாம் வாழும் சமூகத்தில் அநீதியான அதிகார அமைப்புகளுக்குப் பணிந்து போகாமல், உண்மையை உரக்கச் சொல்லவேண்டும். அதிகாரம் என்பது அடக்கி ஆள்வதற்கல்ல, அது அடித்தட்டு மக்களின் வாழ்வை உயர்த்துவதற்கான ஒரு கருவி என்பதை இயேசு தன் சிலுவைச் சாவின் மூலம் நிரூபித்தார்.

இரண்டாவதாக, இயேசுவின் இறுதி நாள்கள் துரோகங்களால் சூழப்பட்டிருந்த வேளையிலும் அவர் காட்டிய பதில்மன்னிப்பு. “தாம் செய்வது என்னவென்று தெரியாமல் செய்கிறார்கள், இவர்களை மன்னியும்என்ற அந்தச் சொல், பழிவாங்கும் உணர்வைத் தகர்த்தெறிகிறது. நம் வாழ்வில் நம்மை வீழ்த்த நினைப்பவர்களையும், காட்டிக்கொடுத்தவர்களையும் மன்னிப்பதன் மூலமே நாம்புனிதத்தைஎட்ட முடியும்.

மூன்றாவதாக, இன்றைய போட்டி நிறைந்த உலகில், தாழ்ச்சியே உண்மையான வலிமை என்பதைக் கல்வாரி மலை நமக்குக் கற்றுத்தருகிறது. குதிரையில் ஏறி வரும் போர் வீரனாக அல்லாமல், கழுதையின் மேல் ஏறி வரும் அமைதித் தூதுவராக எருசலேமுக்குள் நுழையும் இயேசு ஆரவாரங்களுக்கு மத்தியில் அகந்தை இல்லாமல் செல்வது எப்படி என்பதை காட்டுகிறார். துன்பம் என்பது ஒருபோதும் வீணாவதில்லை; அது அன்போடு ஏற்றுக்கொள்ளப்படும்போது.