மானுடத்தின் மாட்சியைப் போற்றும் உன்னதத் திருநாளான ஆண்டவருடைய விண்ணேற்றப் பெருவிழாவை இன்று மகிழ்வோடு கொண்டாடுகிறோம். விண்ணேற்றம் என்பது ஒரு மனிதரின் பிரிவோ அல்லது ஒரு காலத்தின் முடிவோ அல்ல; மாறாக, அது கடவுளுக்கும் மனிதகுலத்திற்கும் இடையிலான இடைவெளியை உடைத்து, தெய்வீகம் மனித இதயங்களில் குடியேறிய ஒரு மகத்தான பரிமாற்றமாகும். “இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்” (மத் 28:20) என்ற இயேசுவின் அந்த இறுதித் திருவாக்கு, காலங்களைக் கடந்து நம் காதுகளில் இன்றும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இந்த வாக்குறுதிதான் இன்றுவரை திரு அவையை இயக்கும் உயிர்நாடியாகவும் துடித்துக் கொண்டிருக்கிறது.
“இயேசு விண்ணகத்திற்கு ஏறிச்சென்றபோது நம்மிடமிருந்து பிரிந்து விடவில்லை; அதேபோல அவர் பூமிக்கு இறங்கி வந்தபோது விண்ணகத்தை விட்டுப் பிரிந்துவிடவில்லை” என்பார்
புனித அகுஸ்தின். இந்த ஆழமான இறையியல் உண்மைதான் இன்றைய விழாவின் மையம். இயேசு விண்ணேற்றம் அடையும் முன்னர் ஒரு தந்தை தன் பிள்ளையிடம் பொறுப்புகளை ஒப்படைக்கும்போது காட்டும் அதே நம்பிக்கையை, அவர் தம் சீடர்களிடம் காட்டுகிறார். தமக்கெனத் தந்தையாம் இறைவன் தந்த பணியை முழுமையாய் நிறைவேற்றி, அப்பணி உலகில் தொடர்ந்து நடைபெறத் தமது ஆவியைத் தருவதாகச் சீடர்களுக்கு வாக்களித்து, வானகம் திரும்புகிறார்.
இன்றைய
முதல் வாசகத்தில், திருத்தூதர் பணிகளின் ஆசிரியர் புனித லூக்கா, இயேசுவின் உலகளாவிய பணிகளை மீண்டும் ஒருமுறை சிந் தித்துப் பார்க்க நம்மை அழைக்கிறார். இயேசு விண்ணேற்றம் அடைந்த நாள்வரை அவர் செய்தவை, கற்பித்தவை அனைத்தையும் நாம் கூர்ந்து நோக்கவேண்டும் (திப 1:2). இயேசு வெறும் வார்த்தைகளை உதிர்க்கும் பேச்சாளர் அல்லர்; அவர் ஒரு செயல்வீரர். அவர் தம்மை முன்னிலைப்படுத்திக் கொள்ளாமல், இறைத்தந்தையின் ஆட்சி இவ்வுலகில் மலர உழைத்தார். அந்த ஆட்சி அன்பின் அடிப்படையில் அமையவேண்டுமே தவிர, வெறும் சட்டங்களிலோ அல்லது சடங்குமுறைகளிலோ சிறைப்பட்டிருக்கக் கூடாது என்பதில் உறுதியாய் இருந்தார். மானுட நலனைப் பேணுவதே உண்மையான ஆன்மிகம் என்பதை வாழ்ந்து காட்டிய அவர், அதற்கு முரணாக நின்ற அதிகார வர்க்கத்தை எதிர்த்தார். அதன் விளைவாக, அரசியலும் ஆன்மிகமும் கைகோர்த்து, அவரைச் சிலுவையில் அறைந்தன. ஆனால், சாவை வென்று உயிர்த்த ஆண்டவர், விண்ணேற்றம் அடையும்வரை தம் சீடர்களோடு தங்கி, அவர்களைத் தகுதியுள்ள சாட்சிகளாக உருவாக்கினார். இயேசு விண்ணேற்றம் அடையுமுன் சீடர்களுக்கு வழங்கும் இறுதிப்பணி, இன்றைய நற்செய்தியில் ஒரு கட்டளையாக ஒலிக்கிறது: “சீடராக்குங்கள் - திருமுழுக்குக் கொடுங்கள் - கற்பியுங்கள்.”
இயேசு
தரும் கட்டளைகள் ஒரு போர் வீரனுக்குத் தரப்படும் ஆணை போன்றது அல்ல; மாறாக, ஒரு தந்தை தன் பிள்ளையிடம் குடும்பப் பொறுப்புகளை ஒப்படைப்பது போன்றது.
முதலாவதாக,
‘மக்களினத்தாரைச்
சீடராக்குதல்’ என்பது,
தாம் உவமைகள் வழியாக உணர்த்திய உலகளாவிய மீட்பை எல்லைகளின்றி அனைவரும் பெற்றிடச் செய்து, பாரபட்சமற்ற ஒரே இறையாட்சிச் சமூகத்தை உருவாக்குவதைக் குறிக்கிறது. இரண்டாவதாக, ‘மூவொரு கடவுளின் பெயரால் திருமுழுக்குக் கொடுத்தல்’
என்பது, சடங்குகளைக் கடந்து தீமையிலிருந்து நன்மைக்கும், தன்னலத்திலிருந்து பிறர்நலத்திற்கும் கடந்துசெல்லும் ஒரு புது வாழ்வின் அடையாளமாகவும், சமூக முன்னேற்றத்திற்காகத் தம்மை முழுவதுமாகக் கையளிக்கும் அர்ப்பணிப்பாகவும் அமைகிறது. மூன்றாவதாக, ‘கட்டளைகளைக் கற்பித்தல்’ என்பது,
இயேசு சிலுவை வரை வாழ்ந்து காட்டிய அந்தத் தியாகமிக்க, தூய, மன்னிக்கும் அன்பின் புதிய கட்டளையை உலகிற்குப் போதிப்பதாகும்.
சுருக்கமாகக்
கூறினால், அன்பினால் அனைவரையும் ஒருங்கிணைத்து, அருளடையாளத்தால் புனிதப்படுத்தி, கிறிஸ்துவின் வாழ்வுமுறையைப் பிறருக்குக் கற்றுக்கொடுப்பதே இவ்விழா நமக்குத் தரும் வாழ்நாள் பணியாகும்.
வாழ்நாள்
பணியாகிய இறையாட்சியை அறிவிக்கும் இக்கடமையில், நாம் ஒருபோதும் தனித்து விடப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்தும் விதமாக, தாம் உலகம் முடியும்வரை சீடரின் நற்செய்திப் பணிக்கு உறுதுணையாக இருப்பதாகவும் வாக்களிக்கிறார் இயேசு. அதாவது, நற்செய்திப் பணியைத் தொடங்கியவரும் அவரே; அதைத் தொடர்ந்து வழிநடத்துபவரும் அவரே என்ற மகிழ்ச்சியான சிந்தனை இந்த வாக்குறுதியில் வெளிப்படுகிறது.
இந்த
வாக்குறுதி திடீரென வழங்கியதல்ல; மாறாக, அவரது பணிவாழ்வு முழுவதும் பல்வேறு சூழல்களில் இது வெளிப்பட்டதைக் காண்கிறோம். சீடர்கள் புயலில் சிக்கித் தவித்தபோது, “துணிவோடிருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள்” (மத்
14:27) என்று தேற்றியவர் அவரே. “இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரால் கூடும்போது அவர்கள் நடுவே இருப்பேன்”
(18:20) என்று சமூக உறவுகளுக்குள் குடியேறியவரும் அவரே.
இயேசு
மறைநூலை விளக்கும்போதும் (லூக் 24:27), அப்பத்தைப் பிட்டுப் பகிரும்போதும் சீடர்கள் அவரது பிரசன்னத்தை உணரத் தொடங்கினர் (24:30-31). “நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன்” (யோவா
14:1,18); “வேறொரு துணையாளரை உங்களுக்கு அருள்வேன்”
(14:16) என்று
தாம் முன்மொழிந்த அதே பாதுகாப்பை, இன்று விண்ணேற்றத்தின் வாயிலாக உறுதிப்படுத்துகிறார். ஆகவே, எல்லா மக்களையும் உள்ளடக்கிய ஓர் அன்பின் சமுதாயத்தைக் கட்டியெழுப்பும் நமது அன்றாடப் போராட்டங்களில் உயிர்த்த ஆண்டவர் நம் ஒவ்வொரு மூச்சிலும் செயலிலும் உடனிருந்து வழிநடத்துகிறார் என்பதை இத்திருநாள் நமக்கு மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்துகிறது.
ஆண்டவரின்
விண்ணேற்றப் பெருவிழா நமது அன்றாட வாழ்விற்கு வழங்கும் மூன்று முக்கிய வாழ்வியல் பாடங்களை நம் இதயத்தில் ஏந்துவோம்.
முதலாவதாக,
நற்செய்தி அறிவிப்பு என்பது ஆயருக்கோ அல்லது துறவியருக்கோ மட்டுமே உரிய பணி அல்ல; அது ஒவ்வொரு கிறித்தவக் குடும்பத்திற்கும் விடுக்கப்பட்ட பொதுவான அழைப்பு என்பதை உணர்வோம். அன்று இயேசுவிடமிருந்து இந்தக் கட்டளையைப் பெற்றவர்கள் சாதாரண குடும்பத் தலைவர்களும் தொழிலாளிகளுமே. எனவே, இந்தப் பணி நமது இல்லங்களில் ஒரு வாழ்வியல் முறையாக மலரவேண்டும். குறிப்பாக, தம்பதியர் ஒருவருக்கொருவர் மன்னித்து ஏற்றுக்கொண்டு ஒப்புரவாகும்போது, அங்கே நற்செய்தி உயிர் பெறுகிறது. பெற்றோர் நற்செய்தியை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் மறைப்பணியாளர்களாக மாறவேண்டும். மேலும், நமது இல்லங்களின் கதவுகள் விருந்தோம்பலுக்காகவும், ஏழைகளின் நலனுக்காகவும் திறந்திருக்கும்போது, நமது குடும்பம் ஒரு ‘நடமாடும் நற்செய்தியாக’ மாறுகிறது.
இவ்வாறு, அன்றாட உறவுகளில் வெளிப்படும் சுயநலமற்ற அன்பே சமூகத்திற்கு நாம் வழங்கும் மிகப் பெரிய நற்செய்தி அறிவிப்பாகும்.
இரண்டாவதாக,
நற்செய்திப் பயணத்தில் சவால்களும் தடைகளும் இயல்பானவை என்பதை உணர்வோம். இயேசுவின் பணிவாழ்வு எப்படித் துன்பங்களால் நிறைந்திருந்ததோ, அதுபோலவே நமது நற்செய்திப் பயணமும் துயரங்கள் நிறைந்ததாக இருக்கலாம். ஆனால், ‘நாம் ஒருபோதும் தனிமையில் இல்லை’ என்ற ஆழமான நம்பிக்கை அந்தத் தடைகளைத் தகர்க்கும்.
இயேசுவின்
உடனிருப்பு ஒரு நிழலைப் போன்றது. அது வெளிச்சத்தில் நமக்குத் தெரியாமல் இருக்கலாம்; ஆனால், அது எப்போதும் நம்மைத் தொடரும். “மகனே, மகளே... கலங்காதே, உன் கரங்களைப் பிடித்திருப்பது நான்தான்”
என்று விண்ணேற்றம் கண்ட ஆண்டவர் நமக்கு வாக்குறுதி அளிக்கிறார். நாம் சோர்ந்துபோகும் போதெல்லாம் அந்த ‘உடனிருப்பின் வாக்குறுதி’ நம்மை
மீண்டும் எழுந்து நடக்கச்செய்யும் உந்துசக்தியாக மாறும்.
மூன்றாவதாக,
நமது இறுதி இலக்கு விண்ணகம் என்பதை உணர்ந்து, மண்ணக வாழ்வைத் தூய்மையாக வாழ்வோம். நாம் பூமியில் வாழ்ந்தாலும், நமது உண்மையான குடியுரிமை விண்ணகத்தில் இருக்கிறது; விண்ணேற்றம் அடைந்த இயேசு இப்போது எங்கும் நிறைந்திருக்கிறார்; அவர் நோயுற்றவரின் படுக்கையருகிலும், ஏழையின் கண்ணீரிலும், நம்பிக்கையற்றவரின் இதயத்திலும் குடிகொண்டிருக்கிறார்; மண்ணகத்தின் மடியில் நின்றுகொண்டு விண்ணகத்தைப் பார்த்த சீடர்களுக்கு, மண்ணகத்தையே விண்ணகமாக மாற்றும் இரகசியத்தை இயேசு கற்றுக்கொடுத்தார். பசியோடும் நோயோடும் அகதிகளாகவும் வாடும் மாந்தருக்கு நாம் செய்யும் சிறு உதவியும் இயேசுவுக்கே செய்யப்படுகிறது. இந்த உணர்வு நம்மை வெறும் சொற்களின் மனிதராக அல்லாமல், செயல்களின் மனிதராக மாற்றுகிறது.
நிறைவாக,
விண்ணேற்றம் என்பது இயேசு நம்மை விட்டுத் தூரமாகச் சென்ற நிகழ்வு அல்ல; மாறாக, அவர் நம் ஒவ்வொருவருடைய வாழ்விலும் ஆழமாகக் குடியேறிய உன்னத நிகழ்வு. அவர் எங்கோ எட்டாத வானத்தில் இல்லை; மாறாக, துயருறுவோரின் கண்ணீரைத் துடைக்கும் கரங்களிலும், பசித்திருப்போர் அருந்தும் உணவிலும், தனிமை யில் வாடுவோருக்கு ஆறுதல் தரும் அன்புக் குரலிலும் உயிர்ப்போடு இருக்கிறார்.
“எல்லா நேரங்களிலும் நற்செய்தியை அறிவிக்க முயற்சியுங்கள்; தேவைப்பட்டால் மட்டும் வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள்” என்ற
புனித பிரான்சிஸ் அசிசியாரின் கூற்றிற்கேற்ப, நாம் நற்செய்தியின் கருவிகளாக மாறுவோம். மண்ணகத்தின் மடியில் நின்றுகொண்டு, விண்ணகத்தின் வாக்குறுதியைச் சுமந்தபடி, துணிவோடும் நம்பிக்கையோடும் புறப்படுவோம். உயிர்த்த ஆண்டவர் உலகம் முடியும் வரை எந்நாளும் நம்மோடு இருக்கிறார்.
மானிட வாழ்வில் ‘பிரிவு’ என்பது தாங்க முடியாத ஒரு பெருவலி. அது ஆன்மாவை அலைக்கழிக்கும் கலக்கத்தையும், ஆறாத ஏக்கத்தையும் தரக்கூடியது. நாம் உயிராக நேசிப்பவர்கள் நம்மை விட்டுச் செல்கிறார்கள் அல்லது பிரிகிறார்கள் என்றாலே, ஒருவிதத் திக்கற்ற நிலையும், ஆதரவற்ற உணர்வும் நம்மைச் சூழ்ந்து கொள்ளும். மனித உறவுகள் மட்டுமன்றி, சில நேரங்களில் நாம் நேசித்த பொருள்களும், வாழ்ந்த இடங்களும் கூட நம் உணர்வுகளோடு இரண்டறக் கலந்துவிடுகின்றன. அத்தகைய சூழலில் ஏற்படும் இழப்பு, நம்மை மீளாத்துயரின் ஆழத்திற்கு இட்டுச் செல்கிறது.
ஓர்
உயிரையோ அல்லது ஒரு பொருளையோ பிரிவது என்பது இதயத்தில் ஒரு வடுவையும், வாழ்வில் ஈடுசெய்ய முடியாத ஒரு பெரும் வெற்றிடத்தையும் உருவாக்கிவிடுகிறது. குறிப்பாக, நம் வாழ்வில் நிபந்தனையற்ற அன்பையும் ஆழமான தோழமையையும் வெளிப்படுத்திய சொந்தங்களைப் பிரிந்தும் இழந்தும் நிற்கும்போது வழிகின்ற கண்ணீர் அந்த உறவின் உன்னதத்தைச் சொல்லும் அர்த்தமுள்ள சாட்சியம். “அந்த உறவு மீண்டும் எப்போது திரும்பும்?” என்று மனம் ஏங்கித் தவிப்பதும் துடிப்பதும் இயல்பே. நம் வாழ்வின் திசையையே மாற்றிய அல்லது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியவர்களின் பிரிவு, காலத்தால் ஈடுசெய்ய முடியாத ஒன்றாக மாறிவிடுகிறது. ஏனெனில், அத்தகைய இழப்புகளுக்கு உலகியல் சார்ந்த எந்த ஆறுதலும் நிகராகாது!
இன்றைய
நற்செய்தியில் ஆண்டவர் இயேசு நமக்கு ஒரு மாபெரும் வாழ்வியல் ஆறுதலை வழங்குகிறார். அவர் தம் சீடர்களைத் தனிமையில் தவிக்கவிடவில்லை; மாறாக, காலங்கள் கடந்தும் அவர்களோடு நிலைத்திருக்கும் ஒரு தெய்வீக உறவை இன்றைய நற்செய்தியின் வழியாக உறுதிப்படுத்துகிறார். அவர் நமக்காக ஏற்படுத்திய அந்த உறவு, ஒருபோதும் பிரியாதது; நமக்குத் துணையாக வரும் அந்தத் துணையாளர், நம்மை ஒருபோதும் கைவிடாதவர்.
இன்று நாம்
உயிர்ப்புக்காலத்தின்
ஆறாம் ஞாயிறைக் கொண்டாடுகிறோம். இந்த ஞாயிறு நமக்கு விடுக்கும் மையமான அழைப்பு யாதெனில், “உங்களை நான் திக்கற்றவர்களாக விடமாட்டேன்” (யோவா
14:18) என்பதுதான். இறைவனின் உடனிருப்பு எப்போதும் நம்மோடு நிழலாகத் தொடர்கிறது என்பதை ஆழமாக உணர்ந்து, நம்பிக்கையோடு வாழ்வின் சவால்களை எதிர்கொள்ளவே இன்றைய திருவழிபாடு நம்மைத் தூண்டுகிறது.
இயேசு
தம் சீடர்களுடன் அமர்ந்து பகிர்ந்துகொண்ட அந்த இறுதி இராவுணவின் பிரியாவிடை உரையைக் கடந்த வாரத்தின் தொடர்ச்சியாக இன்றும் நாம் நற்செய்தியாக வாசிக்கிறோம். தாம் தந்தையிடம் செல்லப்போவதை இயேசு முன்னறிவித்த அந்தத் தருணம், சீடர்களை ஆழ்ந்த சோகத்திலும் சொல்லொண்ணாத் துயரிலும் ஆழ்த்தியது. “ஆண்டவர் எங்கே போகிறார்? (14:5) அவர் பிரிந்த பின் நமக்கென்று யார் இருப்பார்? அவர் இல்லாத எதிர்காலம் எப்படியிருக்கும்?” என்ற கேள்விகள் அவர்களை வாட்டியிருக்கக் கூடும். ஏனெனில், இயேசுவின் உடனிருப்புதான் அந்தச் சீடர்களை ஒரு குடும்பமாக இணைத்தது; அவர்களின் துன்பங்களில் அரணாக நின்றது; மனமுடைந்து போகாமல் அவர்களுக்குத் தெம்பூட்டியது.
இந்தச்
சூழலில், “நான் தந்தையிடம் போகிறேன்”
(14:12) என்று இயேசு கூறியது பெரும் ஆற்றாமை உணர்வைச் சீடர்களுக்குத் தந்தாலும், சீடர்களின் கலக்கத்தை உணர்ந்த இயேசு, தேனினும் இனிய ஒரு வாக்குறுதியை அவர்களுக்கு அளிக்கிறார்: “உங்களோடு இருக்கும்படி மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார்”
(14:16). இந்த வாக்குறுதி என்பது வெறும் வெற்று வார்த்தையல்ல; அது ஒரு தந்தை தன் பிள்ளைகளுக்குத் தரும் மிக உயரிய பாதுகாப்பு உறுதிமொழி. இயேசு உடலால் மறைந்தாலும், தூய ஆவியின் வழியாக ‘இன்றும்’ நம்மோடு வாழ்கிறார் என்பதே இதன் ஆழமான மையப்பொருள்.
ஆகவே,
தம்மை நம்பி இறையாட்சிப் பணி இயக்கத்தில் தங்களை முழுமையாக இணைத்துக்கொண்ட சீடர்களை ஒருபோதும் திக்கற்றவர்களாகத் தான் விடுவதில்லை என்பதை இயேசு மிக உறுதியாகக் கூறுகிறார். தந்தையிடமிருந்து தாம் அனுப்புகின்ற துணையாளர் அவரின் பிரிவை உணராவண்ணம் சீடர்களைத் தேற்றுவார்; ஒரு தாயைப்போல அருகிலிருந்து ஆறுதலளிப்பார்; கடினமான பாதைகளில் சோர்ந்துவிழாதபடி ஆற்றல் தருவார்; தங்களுக்காகப் பரிந்து பேசுவார்; எந்தவொரு சூழலிலும் முடிவெடுக்கத் திணறித் தடுமாறும்போது, அந்தத் துணையாளரே தெளிவான ஆலோசனைகளை வழங்கி வழிநடத்துவார். தாம் போதித்த உண்மைகளை அவர்களுக்கு மீண்டும் நினைவூட்டி, தமது இறையாட்சிப் பணியைத் தொய்வின்றித் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல அந்தத் தூய ஆவியானவரே உந்துசக்தியாகத் திகழ்வார் என இயேசு மாபெரும்
நம்பிக்கையளிக்கிறார்.
இயேசு
வாக்களித்த இந்தத் துணையாளரின் உடனிருப்பு வெறும் அக உணர்வு மட்டுமல்ல;
அது செயலில் வெளிப்பட வேண்டிய ஒன்று. ஆண்டவருடைய விண்ணேற்றம் (பிரிவு) என்பது மீட்புத் திட்டத்தில் நிகழ்ந்தே தீர வேண்டிய ஒரு கட்டாயம். அந்தப் பிரிவிற்குப் பிறகு இயேசுவின் பணியை இவ்வுலகில் தொடரவேண்டிய பெரும் பொறுப்பு அவரைப் பின்பற்றிய சீடர்களின் கரங்களில் ஒப்படைக்கப்பட்டது. இதனை இன்றைய முதல் வாசகத்தில் பிலிப்பு ஆற்றிய நற்செய்திப் பணி தெள்ளத் தெளிவாக நிரூபிக்கிறது. சமாரியருக்கும் யூதருக்கும் இடையே நீடித்த கடுமையான பகைமையையும் மீறி, இயேசு காட்டிய அதே அன்புப் பாதையில் பிலிப்பு பயணிக்கிறார். தூய ஆவியின் ஆற்றலால் ஈர்க்கப்பட்ட பிலிப்பு, பிணிகள் தீர்த்தும், தீய ஆவிகளை விரட்டியும் சமாரியாவிற்குப் பெரும் மகிழ்ச்சியைக் கொண்டு வருகிறார்.
இவ்வாறு,
இயேசுவின் உடல்சார்ந்த பிரிவு, தூய ஆவியின் வழியாக ஓர் உலகளாவிய நற்செய்திப் பணியாக உருவெடுக்கிறது. அன்னை தெரேசா கூறுவது போல, “ஆண்டவர் நம்மைப் பயன்படுத்துவதற்கு நாம் வெறும் கருவிகளாக மட்டுமே இருக்கிறோம். அந்தத் தூய ஆவியானவரே நம்மை இயக்கும் ஆற்றல்.” பிலிப்புவைப் போல நாமும் அந்தத் துணையாளரின் குரலுக்குச் செவிசாய்க்கும்போது, நம் வாழ்வும் பிறருக்கு மகிழ்ச்சி தரும் நற்செய்தியாக மாறுகிறது.
நிறைவாக,
இன்றைய நாள் நமக்கு வழங்கும் இறைச்செய்தி என்ன? ஆண்டவர் இயேசு, “நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால்...” (14:15)
என்று தொடங்கும்போதே, அன்பு என்பது வெறும் வார்த்தைகளோ அல்லது உணர்ச்சிகளோ அல்ல; அது செயலில் வெளிப்பட வேண்டிய ஒரு மாபெரும் சக்தி என்பதை உணர்த்துகிறார். முதலில், நாம் இறைவனை நேசிக்கிறோம் என்பதற்கு மிகச்சிறந்த அடையாளம், அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து வாழ்வதுதான். புனித அன்னை தெரசா கூறியதுபோல, சிறிய காரியங்களைச் செய்தாலும், அவற்றை மிகுந்த அன்போடு செய்யவேண்டும். இறைக்கட்டளைகளை நம் அன்றாட வாழ்வில் செயல்படுத்துவதன் மூலமே நாம் உண்மையான சீடர்களாகிறோம். தாழ்ச்சியான கீழ்ப்படிதலே நம்மைத் தூய ஆவியின் வழிநடத்துதலுக்குத் தகுதியுள்ளவர்களாக்குகிறது.
இரண்டாவதாக,
ஆண்டவர் இயேசு சீடர்களுக்கு வழங்கிய மிக உன்னதமான வாக்குறுதி, “உங்களுக்குத் துணையாளராம் தூய ஆவியைப் பெற்றுத்தருவேன்” என்பதாகும்.
இந்தத் தூய ஆவியானவர் “உண்மையை வெளிப்படுத்துபவர்” (14:17). உலகம்
பெரும்பாலும் குறுக்கு வழிகளையும், பொய்மையின் கவர்ச்சிகளையும் காட்டி நம்மைத் திசைதிருப்ப முயலும். அத்தகைய சூழல்களில், நாம் உலகப்போக்கின் பின்னால் செல்லாமல், நமக்குள் ஒலிக்கும் துணையாளரின் மெல்லிய குரலுக்குச் செவிசாய்க்கவேண்டும். உலகம் உண்மையை ஏற்க மறுக்கும் போதும், நாம் நேர்மையின் அடையாளமாகத் திகழவேண்டும். உண்மைக்காகத் துயரங்களை ஏற்கும்போது, அந்தத் தூய ஆவியானவரே நமக்குத் துணையாக நின்று ஆற்றல் தருகிறார். இறுதியில், அந்த உண்மையே நமக்கு விடுதலையையும் நிலையான வாழ்வையும் அளிக்கும் (8:32).
மூன்றாவதாக,
இன்று நாம் வாழும் சூழலில், உறவுகளின் பிரிவாலும், எதிர்பாராத உயிரிழப்புகளாலும் நிலைதடுமாறி, ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் பல சகோதர சகோதரிகளைச்
சந்திக்கின்றோம். நாம் ஒவ்வொருவரும் தூய ஆவியானவரைப் பெற்றிருக்கிறோம் எனில், அந்த ஆவியின் கனிகளை நம் வாழ்வில் வெளிப்படுத்த வேண்டும். அதாவது, துயருறுவோருக்கு ஆறுதல் அளிக்கும் ‘துணையாளராகவும்’, திக்கற்றவர்களுக்குப்
‘பாதுகாப்பாளராகவும்’, ஒடுக்கப்பட்டோருக்காக
இறைவனிடம் ‘பரிந்து பேசுபவராகவும்’ நாம்
மாறவேண்டும் என்பதே அதன் பொருள். இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பேதுரு அறிவுறுத்துவது போல, நாம் எப்போதும் கனிவோடும் மரியாதையோடும் நடந்து கொள்ளவேண்டும். தீமைக்குத் தீமை செய்யாமல், அநீதி இழைப்போரையும் கிறிஸ்துவின் மேலான அன்பால் வென்று, நம் செயல்கள் மற்றும் அணுகுமுறைகள் வழியாக உலகிற்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் அறிவிப்பதே நமது வாழ்நாள் கடமையாகும்.
இறுதியாக,
“திக்கற்றவர்களாக” இனி
நாம் கலங்க வேண்டியதில்லை. நமக்குள் குடிகொண்டு நம்மைத் தாங்கிப் பிடிக்கும் அந்தத் துணையாளரின் ஆற்றலோடு, நம்பிக்கையின் மக்களாகவும், கிறிஸ்துவின் அன்பிற்குச் சான்றுகளாகவும் உலகிற்கு முன்செல்வோம். எத்தகைய சோதனைகள் வந்தாலும், ஒருபோதும் பிரியாத நம் தெய்வீகத் துணையாளர், மிகுந்த பிரியமுடன் நம் ஒவ்வொரு காலடியையும் வழிநடத்தட்டும். அவரின் உடனிருப்பு இன்னும் வலுவாக நம்மில் வெளிப்படட்டும்.
நாம் வீட்டை விட்டு வெளியே கிளம்பும்போதோ அல்லது வெளியூர் செல்லும்போதோ வீட்டிலுள்ளவர்களிடம், ‘நான் போயிட்டு வரேன்’ என்று கூறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். ‘போயிட்டு வரேன்’ என்ற சொல்லில் ‘மீண்டும் வருவேன்’ என்ற நம்பிக்கையும், உறவின் தொடர்ச்சியும் ஒளிந்திருக்கிறது. ஆங்கிலத்தில் ‘Goodbye’ என்று கூறும்போது அதற்குள் ‘God be with you’ (இறைவன் உன்னோடு இருப்பாராக!) என்ற ஆசி கலந்திருக்கிறது. ‘Farewell’ என்ற வார்த்தை பிரிந்து செல்பவர் ‘நலமாக இருக்கவேண்டும்’ என்ற வாழ்த்தைச் சுமந்து நிற்கிறது. ஆனால், தமிழ் மொழியில் உள்ள ‘பிரியாவிடை’ என்ற சொல் இன்னும் ஆழமானது. ‘உன்னை விட்டு நான் பிரியமாட்டேன், தற்காலிகமாகத்தான் விடைபெறுகிறேன்’ என்ற உட்பொருளை அது உணர்த்துகிறது. பிரிவு என்பது ஓர் உறவின் முற்றுப்புள்ளி அல்ல; மாறாக, அது ஒரு தொடர்ச்சி.
இன்று
நாம் பாஸ்கா காலத்தின் ஐந்தாம் ஞாயிறைச் சிறப்பிக்கின்றோம். இன்றைய நற்செய்திப் பகுதி இயேசுவின் மிக நீண்ட பிரியாவிடை (யோவா 13:31-) உரையின் தொடக்கப் பகுதியாக அமைகிறது. நம் வாழ்வின் இக்கட்டான நேரங்களில் நாம் ஒருபோதும் தனித்து விடப்படவில்லை என்பதை உணரவும், நமது அச்சங்களைக் களைந்து, இயேசுவிடம் முழுமையான நம்பிக்கைகொண்டு வாழவும் அழைக்கப்படுகிறோம்.
இயேசுவின்
சீடர்கள் ஒருவிதமான இக்கட்டான மனநிலையோடு மேல்மாடியில் அமர்ந்திருக்கிறார்கள். அவர் விரைவில் தங்களை விட்டுச் சென்று விடுவார் என்னும் உணர்வு சீடர்களுக்குப் பெரும் வேதனையையும் கலக்கத்தையும் அளிக்கிறது. 13-ஆம் அதிகாரத்தில் சீடர்களின் கால்களைக் கழுவி, அன்பின் பணிவிடையை ஆழமாகப் பதிவு செய்த இயேசு, பின்னர் தமக்கு நடக்கவிருக்கும் துன்பங்களையும் பிரிவையும் பற்றி விளக்கிக் கூறுகிறார். அது மட்டுமின்றி, “உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான்” (13:21) என்றும்,
பாறையாகத் தெரிந்த பேதுருவே தம்மை ‘மறுதலிப்பார்’ (13:38) என்றும்
அவர் கூறியபோது, சீடர்களின் உள்ளம் நிலைகுலைந்து போகிறது.
“பிள்ளைகளே, இன்னும் சிறிது காலமே உங்களோடு இருப்பேன்...” (13:3) என்று இயேசு கூறுவதன் வழியாக, ‘தங்களை வழிநடத்தியவருக்கே இந்த நிலையா? நம் எதிர்காலம் என்னவாகும்?’ என்ற பல கேள்விகளும் அச்சங்களும்
அவர்களை அலைக்கழிக்கின்றன. இப்படியாக மன உளைச்சலுக்கு உள்ளான
தம் சீடர்களைத் திடப்படுத்தவே இயேசு, “நீங்கள் உள்ளம் கலங்கவேண்டாம்” (14:1) என்ற
நம்பிக்கை சொற்களைக் கூறுகிறார்.
சூழல்கள்
நமக்கு எதிராக மாறும்போதுதான் நமது நம்பிக்கை சோதிக்கப்படுகிறது. இருண்ட அறையில் மெழுகுவர்த்தி எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் சோதனையில் இறைநம்பிக்கை. “கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள்; என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள்” (14:1) என்று
அழைப்பு விடுக்கும் இயேசு, சீடர்களுக்கு (நமக்கும்) மூன்று விதமான தீர்வுகளை முன்வைக்கிறார்:
முதலில்,
‘தந்தையின் இல்லத்தில் பல உறைவிடங்கள் உள்ளன’ (14:2) என்று
இயேசு கூறும்போது, அது வெறும் கட்டடங்களைக் குறிக்கவில்லை; மாறாக, இறைவனின் எல்லையற்ற பராமரிப்பைக் குறிக்கின்றது. தொடக்ககாலத் திரு அவை தந்தை ஒரிஜன் இதனை “கடவுளை நோக்கிய நமது ஆன்மிகப் பயணத்தின் தங்குமிடங்கள்” என்று
விளக்குகிறார். யோவான் நற்செய்தியில் ‘உறைவிடம்’
என்பது இயேசுவிற்கும் அவர் சீடர்களுக்கும் இடையே நம்பிக்கையால் உருவாகும் ஒரு நிரந்தர உறவைக் குறிக்கிறது. இது ஒரு தற்காலிகத் தங்குமிடம் அல்ல; மாறாக (14:2) மாறாத அன்பின் இல்லம். “அப்படி இல்லையெனில், ‘உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்யப் போகிறேன்’
என்று சொல்லியிருப்பேனா?” (14:2) என்று இயேசு வினவுவது, தமது வார்த்தையின் மீதான நம்பகத்தன்மையை ஆணித்தரமாக உறுதிப்படுத்துவதற்காகவே.
இரண்டாவதாக,
அச்சத்திலும் குழப்பத்திலும் மூழ்கியிருந்த சீடர்களுக்கு (13:21,38) “வழியும் உண்மையும் வாழ்வும் நானே”
(14:6) என்ற காலத்தால் அழியாத சொற்களை இயேசு வழங்குகிறார். திகைத்து நின்றவர்களுக்கு நம்பிக்கையூட்டும் ‘வழியாகவும்’, போலித்தனங்களுக்கு
மத்தியில் நிலையான ‘உண்மையாகவும்’, தந்தையோடு
இணைக்கும் உயிரோட்டமான ‘வாழ்வாகவும்’ அவர்
விளங்குகிறார். ஒரு தாயின் கனிவோடு அவர்களின் வருங்காலக் கனவுகளை மீட்டெடுக்கும் இயேசு, தந்தையிடம் அழைத்துச் செல்லும் ஒரே பாலமாகத் தம்மை வெளிப்படுத்துகிறார்
(14:3). நம் நெருக்கடியான சூழலில், அவரே நமக்கு வழியாகவும், உண்மையான வாழ்வாகவும் இருந்து நமது நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறார்.
மூன்றாவதாக,
இயேசு தம் சீடர்களிடம் வெறும் தத்துவங்களைப் பேசவில்லை; மாறாக, அவர்களைத் தம்மோடு இணைந்து செயல்பட அழைக்கிறார். “என் வார்த்தையின் பொருட்டு நீங்கள் என்னை நம்பாவிட்டாலும், நான் செய்த செயல்களின் பொருட்டாவது என்னை நம்புங்கள்” (14:11) என்று
அவர் உருக்கமாகக் கூறுகிறார். ஏனெனில், அந்த நம்பிக்கைதான் சீடர்களை இயேசுவைப் போன்ற செயல்களைச் செய்யத் தூண்டும் வல்லமை கொண்டது. இன்னும் சொல்லப்போனால், இயேசு செய்த அருஞ்செயல்களை விடவும் மேன்மையானவற்றைச் செய்யும் ஆற்றலை அவர் தம் சீடர்களுக்கு வழங்குகிறார்.
இயேசுவின்
“பெரிய செயல்களைச் செய்வீர்கள்” என்ற
வாக்குறுதி, அவர் விண்ணேற்றம் அடைந்த பிறகு சீடர்களின் வாழ்வில் எப்படிச் செயலாற்றியது என்பதற்கு இன்றைய முதல் வாசகம் (திப 6:1-7) ஒரு சிறந்த சான்று. சீடர்களின் எண்ணிக்கை பெருகியபோது, கிரேக்க மற்றும் எபிரேய மொழி பேசுவோரிடையே கைம்பெண்களைப் பராமரிப்பதில் பாரபட்சம் எனும் இக்கட்டான சூழல் எழுகிறது. மீண்டும் ஒரு சவாலைச் சந்தித்த திருத்தூதர்கள், இயேசுவின் ‘உள்ளம் கலங்க வேண்டாம்’
என்ற வார்த்தையை நினைவுகூர்ந்து, தூய ஆவியால் தூண்டப்பட்டு ஏழு திருத்தொண்டர்களைத் தேர்ந்தெடுத்தனர். “யாரும் திக்கற்றவர்களாக விடப்படக் கூடாது” என்ற உயரிய நோக்கத்தில், அவர்கள் சமுதாயப் பணியையும் இறைப்பணியையும் நேர்த்தியாக முன்னெடுத்துச் சாதித்தனர்.
திருத்தூதர்கள்
முன்னெடுத்த அந்தச் செயல்பாடு, நற்செய்தியில் இயேசு காட்டிய ‘வழியும்’,
அவர் வாக்களித்த ‘உறைவிடமும்’ வெறும்
கற்பனையல்ல, அவை ஒரு புதிய சமூகத்தை உருவாக்கும் வல்லமை கொண்டவை என்பதை உறுதிப்படுத்துகின்றன. இதனைத்தான் இரண்டாம் வாசகத்தில் புனித பேதுரு, உலகால் தள்ளப்பட்டாலும் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘மூலைக்கல்லான’ (திபா
118:22) இயேசுவின்மீது
கட்டப்பட்ட ‘உயிருள்ள கற்கள் நாம்’ என்கிறார். அந்த மூலைக்கல்லோடு (இயேசுவோடு) நாம் இணையும்போது, தந்தையின் இல்லத்து வாரிசுகளாக, அதாவது, ‘குருத்துவ அரசராகவும்’, ‘தூய
மக்களினமாகவும்’ (விப
19:6) மாறி, இறைவனுக்கும் மனிதருக்கும் இடையே பாலமாக அமையும் ‘பெரிய செயல்களை’
(1பேது 2:9) செய்யும் ஆற்றலைப் பெறுகிறோம். இந்தப் புதிய அடையாளம், நம்மை இருளிலிருந்து வியப்புக்குரிய ஒளிக்கு அழைத்துச் செல்வதுடன், நாம் ஒருபோதும் திக்கற்றவர்கள் அல்ல; மாறாக, உலகத்தைப் படைத்த தந்தையின் பிள்ளைகள் என்பதையும் பறைசாற்றுகிறது.
இன்றைய
வழிபாடு நமக்கு விடுக்கும் வாழ்வுக்கான சிந்தனைகள்: முதலாவதாக, “உள்ளம் கலங்க வேண்டாம்”
என்னும் உயரிய அறிவுரையை இயேசு நமக்கு வழங்குகிறார். கவலையும் கலக்கமும் மேலிடும் நமது அன்றாட வாழ்வில், பல நேரங்களில் நம்பிக்கை
குறைவினால் கடவுளின் உடனிருப்பை உணரும் ஆற்றலை நாம் இழந்துவிடுகிறோம். ஆயினும், இக்கட்டான எந்தச் சூழலிலும் கடவுள் நம்மைக் கைவிடாமல் கரம்பிடித்துக் காத்து வருகிறார் என்பதே இயேசு இன்று நமக்குத் தரும் மிக வலிமையான உறுதிப்பாடாகும்.
இரண்டாவதாக,
“உன்னோடு இருக்கிறேன்” என்ற
உறுதிமொழி வழியாகப் பிரிவு குறித்த கவலையைத் தாண்டிச் செயல்பட இயேசு அழைக்கிறார். பிரிவு துயரமானதே; எனினும், அது மேலான நன்மையை நோக்கிய இறைத்திட்டமாகும். அவர் நம்மை விட்டு ஒருபோதும் விலகுவதில்லை; மாறாக, ஒரு துணையாளராக, நம் நிழலாய் என்றும் தொடர்கிறார். எனவே, அவரது பணிகளை இம்மண்ணில் தொடர்ந்து ஆற்றுவதன் வழியாக ஒருநாள் அவரோடு நிலையாக இணைந்திருப்போம் என்ற பேரின்ப ஆறுதலைப் பெறுவோம்.
மூன்றாவதாக,
இயேசு செய்த செயல்களை அவரில் நம்பிக்கை கொள்வோரும் செய்யமுடியும்; செய்யவும்வேண்டும் என்பதே இயேசுவின் அழைப்பு. அவரைவிடப் பெரிய செயல்களைச் செய்வோம் என்ற வாக்குறுதி நமக்கு உத்வேகம் தருகிறது. மற்றவர்களின் கண்ணீரைத் துடைப்பதும், திக்கற்றவர்களுக்குத் துணையாய் நிற்பதுமே அந்த ‘பெரிய செயல்கள்.’ அவரே வழியாக இருப்பதால் நாம் பாதையைப் பற்றி அஞ்சத் தேவையில்லை, அவரே இலக்காக இருப்பதால் நமது பயணம் அர்த்தமுள்ளதாகிறது.
நிறைவாக,
“நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன்” என்ற
வார்த்தை இன்று நமக்கான பெரும் ஆறுதல். பிரிவு நம்மை வாட்டலாம், சூழல்கள் நம்மைப் பயமுறுத்தலாம். ஆனால், “உன் நிழலாய் நான் வருவேன்” என்று வாக்களித்த ஆண்டவர் இன்றும் நம்மோடு இருக்கிறார். எனவே, நமது உள்ளம் கலங்க வேண்டிய அவசியமில்லை. நாம் இயேசுவின்மீது கொண்ட நம்பிக்கையை ஆழப்படுத்துவோம். அவரே நமது வழி; அவரே நமது உண்மை; அவரே நமது வாழ்வு!
2013-ஆம் ஆண்டு ஏப்ரல் 11-இல், கொரியப் போரில் வீர மரணமடைந்த அருள்பணியாளர் எமில் கப்பானுக்கு (Emil Kapaun) அமெரிக்காவின் மிக உயரிய இராணுவ விருது வழங்கப்பட்டது. பொதுவாக எதிரிகளை வீழ்த்தும் வீரர்களுக்கே தரப்படும் இவ்விருது, போர்க்களத்தில் ஒருமுறை கூடத் துப்பாக்கியை ஏந்தாத ஓர் அருள்பணியாளருக்கு வழங்கப்பட்டது உலகையே வியக்க வைத்தது. “துப்பாக்கியால் ஒரு முறைகூட சுடாத ஓர் அமெரிக்க வீரரை இன்று நாம் பெருமைப்படுத்துகிறோம். அருள்பணியாளர் எமில் கப்பான் பயன்படுத்திய ஒரே ஆயுதம் அன்பு! தன் நண்பர்களுக்காக உயிரைத் தந்த மேலான அன்பு!” என அதிபர் ஒபாமா இவரைப் போற்றினார்.
அதே போர்க்களத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஒரு வீரர், இறப்பதற்கு முன் ஒப்புரவு அருளடையாளம் பெற விரும்பினார். அங்கு மருத்துவம் பார்த்தவர் அருள்பணியாளருக்கு எங்கே போவது எனத் திகைத்தபோது, அருகே படுகாயமடைந்து கிடந்த மற்றொரு வீரர், “நான் ஓர் அருள்பணியாளர்” எனத் தன்னை அறிமுகப்படுத்தினார். “அசைந்தால் உங்கள் உயிருக்கு ஆபத்து” என மருத்துவர் எச்சரித்தபோதும், “என் வாழ்வைவிட என் நண்பனின் ஆன்மா முக்கியம்” எனக் கூறி தரையோடு தரையாக ஊர்ந்து சென்று அந்த வீரருக்கு அருளடையாளம் வழங்கிவிட்டு, அவரோடே இறைவனில் இணைந்தார். “தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை” (யோவா 15:13) என்ற வரிகளுக்கு இணங்க, ஆயுதம் ஏந்தாத இந்த மேய்ப்பர்கள் அன்பால் வரலாற்றில் இடம்பிடித்தனர்.
இன்று நாம் உயிர்ப்புக்காலத்தின் நான்காம் ஞாயிறைக் கொண்டாடுகிறோம். இது ‘நல்லாயன் ஞாயிறு’ என்றும், ‘உலக இறையழைத்தல் நாள்’ என்றும் சிறப்பிக்கப்படுகிறது. இறைப்பணிக்காகத் தங்களை அர்ப்பணிக்க முன்வருபவர்களுக்காகவும், பணியில் இருப்பவர்களின் உறுதிப்பாட்டிற்காகவும் சிறப்பாகச் செபிக்கும் நாளாக இது அமைகிறது.
‘நல்லாயன்’ என்ற சொல்லைக் கேட்டதுமே, ஓர் ஆட்டுக்குட்டியைத் தம் தோள்மீது சுமந்தபடி கனிவோடு நிற்கும் இயேசுவின் உருவமே நம் கண்களில் நிழலாடுகிறது. வரலாற்று அறிஞர்களின் கூற்றுப்படி, கிறித்தவப் பாரம்பரியத்தில் இயேசுவைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட முதல் உருவம் இதுவேயாகும். கி.பி. 3-ஆம் நூற்றாண்டில், உரோமைப் பேரரசின் அடக்குமுறைக்கு அஞ்சி நிலத்தடிக் கல்லறைகளில் (Catacombs) தஞ்சம் புகுந்த தொடக்க காலக் கிறித்தவர்களுக்கு, அங்கிருந்த சுவர்களில் வரையப்பட்டிருந்த இந்த நல்லாயன் உருவமே அளவற்ற ஆறுதலையும், அசைக்க முடியாத நம்பிக்கையையும் வழங்கியது.
திருவிவிலியப் பார்வையில் ஆடுகளும் ஆயர்களும் பிரிக்க முடியாதவர்களாகவே விளங்குகின்றனர். திருவிவிலியத்தின் முதல் ஆயனாக ஆபேல் (தொநூ 4:2) தொடங்கி, இஸ்ரயேல் மக்களின் மாபெரும் தலைவர்களான ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, மோசே மற்றும் தாவீது ஆகியோர் ஆடுகளைப் பேணிக்காத்த ஆயர்களாகவே தங்கள் வாழ்வைத் தொடங்கினர். குறிப்பாக, மந்தை மேய்த்துக் கொண்டிருந்த தாவீதையே இறைவன் தேர்ந்தெடுத்துத் தம் மக்களின் ஆயராக (தலைவராக) உயர்த்தினார் (2சாமு 7:8). திருவிவிலியச் சூழலில் ‘தலைவர்’ என்பவருக்கு ‘ஆயர்’ என்பதே மிகச்சரியான அடையாளமாக இருந்தது (1அர 22:17).
காலப்போக்கில் இஸ்ரயேல் சமுதாயத்தில் ஆயர்கள் தங்கள் மதிப்பை இழந்தனர். தலைவர்கள் ஆடுகளைப் பற்றிக் கவலைப்படாமல், தங்களையே மேய்த்துக்கொண்ட ‘கறுப்பு ஆயர்களாக’ மாறினர் (எசே 34:3-4). மந்தையை முறையாக மேய்க்காமல் சிதறடித்த அந்தத் தலைவர்களைக் கண்டித்த இறைவன், “நானே என் மந்தையைத் தேடிச் சென்று பேணிக்காப்பேன்” (எசே 34:11) என்று வாக்களித்தார். மேலும், “என் இதயத்திற்கு ஏற்ற மேய்ப்பர்களை உங்களுக்குக் கொடுப்பேன்” (எரே 3:15) என்ற இறைவாக்கின் நிறைவாகவே இயேசு கிறிஸ்து இவ்வுலகிற்கு வந்தார். அந்த ஒப்புயர்வற்ற, தலை சிறந்த ஆயர் இயேசுவே என்பதையும், ஒரு நல்லாயனுக்கு இருக்க வேண்டிய முக்கியமான பண்புகளையும் இன்றைய நற்செய்தியில் யோவான் மிக அழகாகப் படம்பிடித்துக் காட்டுகிறார்.
முதலாவதாக, ஒரு நல்ல ஆயர் தன் மந்தையை நன்கு அறிபவர். “நான் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; அவையும் என்னை அறிந்திருக்கின்றன” (யோவா 10:14). திருவிவிலியச் சூழலில் ‘அறிதல்’ என்பது வெறும் தகவல் சார்ந்த அறிவு அல்ல; அது ஓர் ஆழமான இதயம் சார்ந்த பிணைப்பு. ஒரு நல்ல மேய்ப்பர் தன் ஆடுகளின் பசி, தாகம், வலி மற்றும் பயத்தைத் தன் சொந்த வலியாக உணர்கிறார். “ஆண்டவரே, நீர் என்னை ஆராய்ந்து அறிந்திருக்கிறீர்” (திபா 139:1) என்ற திருப்பாடல் வரிகளுக்கேற்ப, நம்மைப் படைத்தவர் நம் பலவீனங்களை அறிந்தே நம்மை வழிநடத்துகிறார். ஒரு தலைவர் தன் மக்களின் தேவைகளை அவர்கள் சொல்லாமலேயே உணர்ந்திருக்கவேண்டும் என்பதற்கு இதுவே சான்று.
இரண்டாவதாக, ஒரு நல்ல ஆயர் தன் மந்தையோடு ஆழமான நல்லுறவு கொண்டிருப்பவர். “ஆயர் ஆடுகளுக்கு முன்பாகச் செல்வார்; ஆடுகளும் அவரைப் பின்தொடரும்; ஏனெனில், அவரது குரல் அவற்றிற்குத் தெரியும்” (யோவா 10:4). இங்கே ஆயருக்கும் மந்தைக்குமான உறவு அதிகாரத்தால் உருவானது அல்ல; அது அன்பால்-நம்பிக்கையால் பிணைக்கப்பட்டது. அவர் ஆடுகளைப் பின்னால் இருந்து விரட்டுவதில்லை; மாறாக, முன்னே சென்று வழிகாட்டுகிறார். ஒரு சிறந்த தலைவர் முன்மாதிரியான வாழ்வால் மக்களை ஈர்க்கவேண்டுமே தவிர, கட்டளைகளால் அல்ல. அந்த உறவுதான் ஆடுகளுக்குப் பாதுகாப்பை வழங்குகிறது.
மூன்றாவதாக, ஒரு நல்ல ஆயர் தன் மந்தையைக் காப்பாற்றுபவர். “நல்ல ஆயன் ஆடுகளுக்காகத் தன் உயிரைக் கொடுப்பார்” (யோவா 10:11). ஆடுகளை ஓநாய்களிடமிருந்து காக்க ஆயர் தன் உயிரையும் பணயம் வைக்கிறார். கூலிக்கு வேலை செய்பவன் ஓநாயைக் கண்டதும் ஆடுகளைக் கைவிட்டு ஓடிவிடுவான். ஆனால், நல்லாயன் தன் ஆடுகளின் பாதுகாப்பிற்காகத் தன்னுயிரையே அரணாக மாற்றுகிறார். எந்த ஒரு சூழலிலும் தன்னைப் பற்றிச் சிந்திக்காமல், மற்றவர்களையே எண்ணி வாழ்வதைப் போன்ற ஓர் உயர்வான வாழ்வு உலகில் இல்லை. ஆபத்து, துன்பம் என்று வரும்போது தன்னைக் குறித்து ஒருவர் கவலைகொள்வதும், தன்னைக் காத்துக்கொள்ள முயல்வதும் வெகு சாதாரண மனித இயல்பு. அந்த இக்கட்டான சூழல்களிலும் தன்னைப் பற்றிய கவலை இல்லாமல், அடுத்தவரைப் பற்றிக் கவலைப்படும் மனம், மலைபோல் உயர்ந்த மனம்.
இன்றைய உலகத் தலைவர்களைச் சற்று உற்றுநோக்குவோம். மேலாண்மைத் திறமையும் இராணுவப் பலமும் கொண்ட பல தலைவர்கள் மந்தையைப் பேணுவதற்குப் பதிலாக மந்தையை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். உக்ரைன் முதல் ஈரான் வரை நடக்கும் போர்களில் அதிகார வெறிகொண்ட தலைவர்கள் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் உயிர்களைப் பலி கொடுக்கிறார்கள். சொந்த நாட்டு மக்களே அகதிகளாக அலைவதையும், குழந்தையர் பசியால் மடிவதையும் கண்டும் காணாமல் இருக்கும் கூலிக்கு வேலை செய்யும் தலைவர்களே இன்று மலிந்து கிடக்கிறார்கள். வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், சாதி-மத மோதல்கள் என மந்தை சிதறிக் கிடக்கும்போது ‘தங்களையே மேய்த்துக்கொள்ளும்’ (எசே 34:2) சுய நலத் தலைவர்களே அதிகாரப் பீடங்களில் அமர்ந்திருக்கிறார்கள். இந்தச் சூழலில் கிறிஸ்துவின் ‘நல்லாயன்’ உருவம் ஒரு மிகப்பெரிய எச்சரிக்கையாகவும் அழைப்பாகவும் இருக்கிறது.
அதிகாரம் என்பது அடக்கி ஆள்வதற்கல்ல; அரவணைப்பதற்கே! உலகியல் பார்வையில் அதிகாரம் என்பது ஏணியின் உச்சியில் ஏறி நின்று மற்றவர்களைக் கீழே பார்ப்பது. ஆனால், கிறிஸ்து காட்டும் தலைமைத்துவ ஏணி தலைகீழானது. அங்கே அதிகாரம் என்பது மற்றவர்களை அரவணைத்துத் தூக்கி விடத் தகுந்தவாறு குனிந்து தாழ்ந்திறங்குவதாகும். அதிகாரம் செலுத்துவதைவிட, மற்றவர்களின் காயங்களுக்கு மருந்தாகும் கனிவை நாம் கொண்டிருக்கவேண்டும்.
இன்றைய மின்னணு மற்றும் சமூக ஊடக உலகில் ‘போலி மேய்ப்பர்களின்’ இரைச்சல் அதிகமாக உள்ளது. நுகர்வு கலாச்சாரம், வெறுப்பு அரசியல், சுயநலம் போன்ற கவர்ச்சிகரமான குரல்கள் நம்மைத் திசைதிருப்புகின்றன. இவற்றிற்கு மத்தியில், மென்மையான கனிவும் நீதியும் கொண்ட கிறிஸ்துவின் குரலை நாம் கண்டறியும் ஞானத்தைப் பெறவேண்டும். அமைதியான செபத்தில்தான் அந்த மெல்லிய குரலை நாம் தெளிவாகக் கேட்க முடியும்.
இந்த இறையழைத்தல் நாளில் நாம் இறைப்பணிக்காகச் செபிப்பது என்பது ஒரு கடமை மட்டுமல்ல, அது திரு அவையின் உயிர்நாடி. நம் இல்லங்களில் வளரும் இளைஞர்கள் உலகியல் இலாபங்களைத் துறந்து, அருள்பணியின் உன்னதத்தை உணர்ந்து இறைவனின் அழைப்பைத் துணிவுடன் ஏற்க நாம் தூண்டுதலாக இருக்கவேண்டும்.
நல்லாயன் ஞாயிறு நமக்கு வழங்கும் செய்தி எளிமையானது. அன்பே அதிகாரம், தியாகமே தலைமை. அதிகாரத்தை விட அன்பும் பதவியை விடப் பணிவுமே ஒருவரை உண்மையான மேய்ப்பராக மாற்றுகிறது. நாமும் அந்த உன்னதப் பாதையில் பயணிக்கத் தொடங்குவோம்.
நமது வாழ்வில் நாம் எதையோ எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்; ஆனால், ஏமாற்றமே மிஞ்சுகிறது. திட்டமிட்ட செயல்கள் சிதறும் போது, ‘எல்லாம் முடிந்துவிட்டது’ என்ற விரக்தியில் நம்பிக்கையை (எருசலேமை) விட்டு வெகுதூரம் விலகிச் செல்கிறோம். அந்தத் தனிமைப் பயணத்தில் நம் இதயம் கனக்கிறது. ஆனால், நாம் முற்றிலும் கைவிடப்பட்டதாக உணரும் அந்த இருண்ட நேரத்தில்தான் ஒரு ‘தெரியாத வழித்துணை’ நம்மைத் தேடி வருகிறார். நாம் அவரை அடையாளம் காணத் தவறினாலும், அவர் நம் அடியோடு அடியெடுத்து வைக்கிறார். நம்முடைய தயக்கம், தடுமாற்றம் மற்றும் கவலைகளுக்கு நடுவே அவர் அமைதியாகத் துணையாக நடக்கிறார் என்பதுதான் உயிர்ப்பின் உண்மையான செய்தி.
இன்று
பாஸ்கா காலத்தின் மூன்றாம் ஞாயிறைச் சிறப்பிக்கின்றோம். இன்றைய இறைவார்த்தைகள், தோல்வியின் விளிம்பில் நின்று தவிக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு மாபெரும் நம்பிக்கைப் பிரகடனமாக அமைகின்றன. இவ்வுலகிற்குத்
தந்தையாம் இறைவனால் வழங்கப்பட்ட உன்னதக் கொடை இயேசு. ஆனால், அவரது உண்மையான வல்லமையையும், இறையாட்சியின் ஆழத்தையும் சீடர்கள் முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை. ஒரு புதிய அரசியல் மாற்றத்தையோ அல்லது உலகியல் ரீதியான அரசையோ இயேசு நிறுவுவார் என்று அவர்கள் ஆவலோடு காத்திருந்தனர். அந்த உச்சக்கட்ட எதிர்பார்ப்பின் நடுவே, இயேசு பரிதாபமாய் சிலுவையில் அறையப்பட்டு இறந்தபோது, அவர்களின் கனவுகள் சுக்குநூறாக உடைந்தன.
இந்த
ஏமாற்றம் அவர்களை நிலைகுலையச் செய்தது. அவர்கள் ஒருவரை ஒருவர் விட்டுச் சிதறுண்டு போனார்கள். இயேசு அறிவித்த அந்த ‘புதிய சமுதாயம்’
என்ற ஆர்வம் கருகிப்போனது. ஒருபுறம், யூதருக்கு அஞ்சித் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளைச் சிலர் இறுக மூடிக்கொண்டார்கள் (யோவா 20:19); மறுபுறம், இயேசுவில் கொண்டிருந்த நம்பிக்கையை அறவே இழந்து, தங்களின் பழைய வாழ்விடங்களை நோக்கிச் சிலர் நடக்கத் தொடங்கினார்கள் (லூக் 24:13). ஒருவருக்கொருவர் சந்தேகக் கண்களோடு பார்த்தபடி, நம்பிக்கையற்று காலத்தைக் கடத்தினர். சிலரோ சீடர்கள் குழுமத்தோடு இல்லாதிருந்தார்கள் (யோவா 20:24).
இயேசு
தமது இறப்பு மற்றும் உயிர்ப்பைப் பற்றி ஏற்கெனவே முன்னறிவித்திருந்தும், ‘அவரை நேரில் காணவில்லை’
(லூக் 24:24) என்ற அந்த ஒரே காரணத்திற்காக, உயிர்ப்பின் பேருண்மையை நம்ப அவர்கள் மறுத்தார்கள். ஆனால், இந்த இருண்ட சூழலிலும் மகளிர் மட்டும் நம்பிக்கையை இழக்கவில்லை; துணிவோடு கல்லறைக்குச் சென்றார்கள். அந்தத் துணிச்சலின் பரிசாகவே உயிர்ப்பின் நற்செய்தி அவர்களுக்கு முதலில் வழங்கப்பட்டது. “கலிலேயாவுக்குச் செல்லுங்கள், அங்கு மீண்டும் இயேசுவைக் காண்பீர்கள்” என்ற
அந்தப் பேரானந்தச் செய்தி, மகளிர் வழியாகச் சீடருக்கு ஒரு புதிய அழைப்பாக விடுக்கப்பட்டது. ஆனால், உயிர்ப்பின் நற்செய்தியை அந்த மகளிர் வழியாகக் கேட்டும், அதைப் பொருள்படுத்தாமல் ஆறாத்
துயரத்தில் மூழ்கிக் கிடந்த அந்த இரு சீடர்கள் (ஒருவரது பெயர் கிளயோப்பா, மற்றொரு சீடரின் பெயர் குறிப்பிடப்படவில்லை) கலிலேயாவுக்குச் செல்லாமல் எம்மாவு நோக்கிப் பயணப்பட்டனர். “நாங்கள் இவரை எவ்வளவோ நம்பினோம்! இவரிடமிருந்து எவ்வளவோ எதிர்பார்த்தோம்! ஆனால், நமக்கு மீட்பளிக்க வந்த மெசியாவிற்குச் சமாதி கட்டிவிட்டனரே!” என்ற அவர்களின் உள்ளக் குமுறல்கள், வழியெங்கும் புலம்பல்களாகவும், கோபமான வார்த்தைகளாகவும் வெடித்திருக்கும்.
இந்தச்
சீடர்களின் குமுறல்கள் இன்றும் பல தலைமுறைகளாய் நம்
மத்தியில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றன. நாம் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்காதபோது, எதிர்பாராத ஏமாற்றங்கள் வந்து சேரும்போது, நாமும் நமது நம்பிக்கையை (எருசலேமை) விட்டுவிட்டு, நமது பழைய பலவீனங்களை (எம்மாவு) நோக்கிப் பின்வாங்குகிறோம். ஆனால், அங்கேதான் ஒரு வல்ல செயல் நிகழ்கிறது. நம்மைப் போலவே விரக்தியில் நடப்பவர்களுடன் ஒரு ‘தெரியாத வழித்துணையாக’ உயிர்த்த
ஆண்டவர் உடன் பயணிக்கிறார். அவர்களின் புலம்பல்களைப் பொறுமையுடன் கேட்கிறார்.
சீடர்கள்
பயந்துபோய் பின்வாங்கிய அந்தப் பாதையில், ஆண்டவர் அவர்களோடு இணைந்து நடந்து, அவர்களின் பயத்தைத் துணிச்சலாக மாற்றத் தொடங்கினார். ஆனால், அவர்களின் கண்கள் அவரை அடையாளம் காண முடியாதபடி ‘மறைக்கப்பட்டிருந்தன’ (லூக்
24:16). சீடர்கள் தங்களின் ஏமாற்றங்களை விவரிக்கும்போது, இயேசு அவர்களுக்கு மறைநூலை விளக்கிச் சொல்லத் தொடங்குகிறார். அவரின் வார்த்தைகளைக் கேட்கக் கேட்க, சீடர்களின் உள்ளத்தில் ஒரு மாற்றம் நிகழ்கிறது. அவர்கள் அதுவரை ஒரு ‘தோல்வியடைந்த மெசியாவை’
பற்றித் துக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால், இயேசுவோ ‘வெற்றிபெற்ற மீட்பரை’ பற்றிப் பேசுகிறார். இருண்ட பாதையில் அவர்களுக்கு அந்த வார்த்தைகள் ஒரு பேரொளியைத் தந்தன. வார்த்தை வழியாகத்தான் அந்த ‘தெரியாத வழித்துணை’
மெல்ல மெல்ல ‘தெரிந்த கடவுளாக’ மாறத் தொடங்குகிறார்.
பயணம்
எம்மாவு கிராமத்தை நெருங்கியபோது, இயேசு அதற்கு அப்பால் போகிறவர்போலக் காட்டிக் கொண்டார். ஆனால், சீடர்களோ “எங்களோடு தங்கும்; ஏனெனில், மாலை நேரம் ஆயிற்று; பொழுதும் போயிற்று”
(லூக் 24:29) என்று அன்புடனும் உரிமையுடனும் அவரைத் தடுத்து நிறுத்தினர். அவர்கள் காட்டிய அந்த விருந்தோம்பலே, அவர்களுக்கு ஒரு மாபெரும் இயேசு அனுபவத்தைப் பெற்றுத்தந்தது. அவர்களோடு உணவருந்த அமர்ந்தபோது அந்த ‘தெரியாத வழித்துணை’
குடும்பத் தலைவரைப் போல அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி, அதைப் பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார். அந்த ஒரு நொடியில் அவர்கள் ‘கண்கள் திறந்தன!’ (லூக் 24:31). வாரத்தின் முதல் நாளன்று, மேல்மாடியில் இயேசு செய்த அதே செயல்... அதே பிட்கப்படும் அப்பம்... அதே அன்பு! அவர் ‘அப்பம் பிட்கையில்’ அவர்களுக்கு
அடையாளமானார்.
இயேசு
அப்பத்தைப் பிட்டுக் கொடுத்த அந்த ஒரு நொடியில் சீடர்களின் கண்கள் திறந்தன. அதே கணத்தில் அவர் மறைந்து போனார். ஏன்? இப்போது அவர் அவர்களுக்கு வெளியே ஒரு மனிதராக இருக்க வேண்டிய அவசியமில்லை. அவர் பிட்கப்பட்ட அப்பமாக அவர்களுக்குள்ளே கலந்துவிட்டார்! இதுவே நற்கருணைத் திருவிருந்தின் உச்சக்கட்டத் தருணம். நாம் ஒவ்வொருமுறை திருப்பலியில் பங்கேற்று அப்பம் பிட்கப்படுவதைக் காணும்போதும், அந்த ‘தெரிந்த கடவுளை’ நம் ஆன்மாவிற்குள் சந்திக்கிறோம். நம் கவலைகளால் மூடப்பட்டிருந்த கண்கள் நற்கருணையின் ஒளியால் திறக்கப்படும்போது, நம் சோர்வும் பயமும் மறைந்து போகிறது. 11 கி.மீ. தூரத்தை
‘நடைப் பிணங்களாக’
கடந்து வந்த சீடர்கள், இப்போது ‘உயிர்ப்பின் சாட்சிகளாக’ அதே
தூரத்தை ஓடிக் கடந்து எருசலேமுக்குத் திரும்புகிறார்கள். “ஆண்டவர் உண்மையாகவே உயிருடன் எழுப்பப்பட்டார்!” (லூக் 24:34) என்று அவர்கள் முழங்கிய அந்தத் தருணமே, அவர்களின் சாட்சிய வாழ்வின் தொடக்கமாகும்.
ஓர்
உண்மையான ‘கிறிஸ்து அனுபவம்’ ஒருபோதும் நம்மை முடக்கி வைக்காது. அது நம்மைப் பிறரை நோக்கியும், புதிய நம்பிக்கையை நோக்கியும் ஓடச்செய்யும். இந்த மாற்றத்தை இன்றைய முதல் மற்றும் இரண்டாம் வாசகங்களில் நாம் மிகத் தெளிவாகக் காண்கிறோம். ஆண்டவரை மூன்று முறை மறுதலித்த பேதுரு, இப்போது தூய ஆவியின் வல்லமையால் நிரப்பப்பட்டு, தன் உடன் திருத்தூதர் பதினொருவருடன் எழுந்து நின்று அஞ்சாமல் சான்றுபகர்கிறார். தொடர்ந்து இன்றைய இரண்டாம் வாசகத்தில், ‘நாம் மீட்கப்பட்டது அழியக்கூடிய பொன் அல்லது வெள்ளியால் அல்ல; மாறாக, மாசற்ற ஆட்டுக்குட்டியாம் கிறிஸ்துவின் விலை மதிப்பற்ற இரத்தத்தால்’ என்ற
உன்னத உண்மையை அவர் எடுத்துரைக்கிறார். இந்த இறைத் திட்டத்தை முழுமையாகப் புரிந்துகொண்ட அந்த நொடியே, சீடர்கள் முடங்கிப்போய் ‘ஒன்றும் செய்யாமல்’
இருந்துவிடவில்லை;
மாறாக, உலகிற்குச் சாட்சியம் சொல்லத் துணிச்சலோடு தங்கள் எருசலேம் நோக்கிப் புறப்பட்டனர்.
நிறைவாக,
இந்த எம்மாவு பயணம் நமக்குத் தரும் பாடம் என்ன? முதலில், நாம் கவலையில் மூழ்கி, கடவுள் நம்மை விட்டு விலகிவிட்டார் என்று நினைக்கும்போதுதான், அவர் ஒரு ‘தெரியாத வழித் துணையாக’ நமக்கருகில் நடக்கிறார். நம்முடைய இருண்ட நேரங்களில் நாம் ஒருபோதும் தனிமையில் இல்லை என்பதை உணர்வோம். இரண்டாவதாக, அப்பம் பிட்கையில் சீடர்களின் கண்கள் திறந்ததுபோல, நாமும் ஒவ்வொரு திருப்பலியிலும் இறைவார்த்தைக்கும் நற்கருணைக்கும் முக்கியத்துவம் அளிக்கும்போது, உயிர்த்த ஆண்டவரைத் தனிப்பட்ட முறையில் சந்திக்க முடியும்.
இறுதியாக,
நாம் தோல்வி அடையும்போது, நம்பிக்கையை விட்டு ஓடுவது இயல்பு. ஆனால், இயேசுவைத் தொட்டுணர்ந்த பிறகு, நாம் மீண்டும் நம் கடமைகளுக்கும் சமுதாயத்திற்கும் சாட்சிகளாகத் திரும்பவேண்டும். நம் வாழ்வின் பயணங்களில் அந்தத் தெரியாத வழித்துணை எப்போதும் நம்மோடு இருக்கிறார். அவரை ‘தெரிந்த கடவுளாக’ அடையாளம் காண நம் இதயக் கதவுகளைத் திறப்போம்.
ஈரானுக்கும் இஸ்ரயேல்-அமெரிக்காவுக்கும் இடையே மூண்டுள்ள தற்போதைய போர், உலகையே ஒரு மிகப்பெரிய பேரழிவின் விளிம்பிற்குத் தள்ளியிருக்கிறது. பழிவாங்கும் உணர்வோடு வீசப்படும் ஏவுகணைகளுக்குப் பலியானவர்கள் குழந்தையர் என்று நினைக்கும்போது நம் கண்களில் இரத்தம் கசிகிறது. தென் ஈரானின் மினாப் நகரில் இயந்திரங்கள் வரிசையாக நின்று, நூற்றுக்கும் மேற்பட்ட சவக்குழிகளை ஒரே இடத்தில் தோண்டிக் கொண்டிருக்கின்றன. எங்குப் பார்த்தாலும் மரண ஓலம்! தோளில் பையை மாட்டிக்கொண்டு, மழலைச் சிரிப்புடன் பள்ளிக்குச் சென்ற தன் பிஞ்சு மகளின் புகைப் படத்தைக் கையில் ஏந்தி, ஒரு தாய் கதறிக் கொண்டிருக்கிறார். மற்றொரு பக்கம், தன் மகளின் சடலத்தை வெறும் ஒரு பொட்டலம்போலக் கையில் ஏந்தியபடி ஒரு தந்தை நிலைகுலைந்து நிற்கிறார். அமெரிக்கக் குண்டுவீச்சில் நொறுங்கிப்போன அந்த மகளிர் பள்ளியில், பலியான 168 சிறுமியரை மொத்தமாக அடக்கம் செய்யும் அந்தப் பெருந்துயரம் கல் மனத்தையும் கரைக்கக்கூடியது.
இன்று
உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தல் மடிந்து கொண்டிருக்கும் மனிதம்தான். பகைமையும் பழிவாங்கும் உணர்வும் மேலோங்கி நிற்கும் இன்றைய சூழலில், உலகம் இன்று எதைத் தேடுகிறது? ஆயுதங்களையா? அல்லது அதிகப்படியான குண்டுகளையா? பழிவாங்கும் போர் முழக்கங்களுக்கு நடுவில், இந்த உலகம் இன்று ஏங்குவது ‘இறைவனின் (மனிதரின்) இரக்கத்திற்காக’ மட்டுமே.
நாம்
பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமைக்குள் அடியெடுத்து வைக்கிறோம். உயிர்ப்புப் பெருவிழாவின் எட்டாம் நாளான இன்று, மரணத்தை வென்ற இயேசுவின் வெற்றியை நாம் ‘இறை இரக்கத்தின் ஞாயிறாக’
(Divine Mercy Sunday) மிகச்
சிறப்பாகக் கொண்டாடுகிறோம். ‘இரக்கத்தின் வடிவே இறைவன்’ என்பதை உலகிலுள்ள எல்லா மதங்களும் பறைசாற்றுகின்றன. அத்தகைய கருணையின் உருவான இறைவனைக் கொண்டாடவே திரு அவை இன்று நம்மை அன்போடு அழைக்கிறது.
இரக்கத்தைப்
பற்றி இன்றைய உலகின் நிலை என்ன? ‘இரக்கம் என்றால் என்ன? அதன் விலை எவ்வளவு?’ என்று கேட்கக்கூடிய அளவிற்கு மனித மாண்பு சிதைந்து கிடப்பது மிகுந்த கவலைக்குரிய ஒன்றாக இருக்கிறது. அன்பு செய்யப்பட வேண்டிய மனிதர் இன்று பயன்படுத்தப்படுகிறார்கள். பயன்படுத்தப்பட வேண்டிய பொருள்கள் இன்று அன்பு செய்யப்படுகின்றன. ‘பழிக்குப் பழி’ என்னும் வன்முறை, குருதி குடிக்கும் தீவிரவாதம், அச்சுறுத்தும் பயங்கரவாதம், மனிதாபிமானமற்ற பெண்ணடிமைத்தனம் மற்றும் பிஞ்சு உள்ளங்களைக் கூட விட்டுவைக்காத பாலியல் வன்கொடுமைகள்... என இவையனைத்தும் இரக்கத்திற்கு
எதிரான பேராயுதங் களாக உருவெடுத்து உலகை அச்சுறுத்தி வருகின்றன. இவ்வுலகம் என்றுமில்லாத அளவு இரக்கத்தை இழந்து தவிக்கிறது என்பதை நம் உள்ளங்களில் ஆணி கொண்டு அறைந்துள்ளது நாடுகளுக்கிடையே நடக்கும் போர்களும், பெண் குழந்தைகளுக்கு எதிரான அநீதிகளும். மனித இதயம் கல்லாய் மாறிப்போனதன் விளைவே, நாம் இன்று சந்திக்கும் அத்தனை பேரழிவுகளும், மனிதாபிமானமற்ற செயல்களும்.
இரக்கம்
என்பது வெறும் பரிதாபம் காட்டுவதோ அல்லது ஏதோ ஒரு தானத்தைச் செய்வதோ அல்ல; ‘இரக்கம்’
(Mercy) என்ற
சொல்லின் வேர் இலத்தீன் மொழியில் ‘Misericordia’ என்பதாகும். இதன் பொருள் ‘துன்பப்படுபவர்களிடம் தன் இதயத்தைக் கொடுப்பது’
(Miseri-cor-dare). யார்
ஒருவர் மற்றவரின் வலியைத் தன் வலியாக உணர்ந்து, தன் இதயத்தை அவரிடம் ஒப்படைக்கிறாரோ, அவரே இரக்கமுள்ளவர்.
இன்றைய
வழிபாட்டில் இடம்பெற்றுள்ள வாசகங்கள் அனைத்தும் இறைவனின் இரக்கம் எவ்வாறு மனித வரலாற்றிலும், தனிமனித வாழ்விலும் செயல்படுகிறது என்பதை நமக்கு அழகாகப் படம்பிடித்துக் காட்டுகின்றன.
தொடக்க
காலக் கிறித்தவச் சமூகம் (திப 2:42-47) இறை இரக்கத்தின் வாழும் சாட்சியாகத் திகழ்ந்தது. அவர்கள் ஒரே மனத்துடன் விளங்கினர்; திருத்தூதர்களின் போதனைகளைக் கேட்டனர்; செபத்தில் நிலைத்திருந்தனர்; நட்புடன் உறவாடினர்; தங்களுக்கு இருந்த சொத்துகளையும் உடைமைகளையும் விற்று, தேவையிலிருப்போர் அனைவருக்கும் பகிர்ந்துகொடுத்தனர். இதுவே ‘சமூக இரக்கம்.’ ஒரு சகோதரரின் வறுமையைக் கண்டு இதயம் துடிப்பதும், அவரது கண்ணீரைத் துடைக்கத் தன் கைகளை நீட்டுவதுமே உண்மையான நற்செய்தி வாழ்வு. அங்கே வன்முறைக்கு இடமில்லை; பகிர்வுக்கு மட்டுமே இடமுண்டு.
இன்றைய
இரண்டாம் வாசகத்தில் (1பேதுரு 1:3-9), ‘கடவுள் தம் பேரிரக்கத்தினால் நமக்குப் புதுப் பிறப்பு அளித்துள்ளார்’ என்று
புனித பேதுரு முழங்குகிறார். நம்முடைய தகுதியால் நாம் மீட்புப் பெறவில்லை; மாறாக, கடவுளின் எல்லையற்ற இரக்கத்தாலேயே நாம் புதுவாழ்வு பெற்றுள்ளோம். சோதனைகளும் துன்பங்களும் நம்மைச் சூழ்ந்தாலும், அழியாத அந்த இறை இரக்கம் நம்மைத் தாங்கிப் பிடிக்கும் என்ற நம்பிக்கையே நம்மை வழிநடத்துகிறது.
நற்செய்தியில்
(யோவா 20:19-31) இரக்கத்தின் உச்சகட்டக் காட்சியை நாம் காண்கிறோம். உயிர்த்த இயேசு சீடர்களுக்குத் தோன்றியபோது, சந்தேகம் கொண்ட தோமாவை அவர் கடிந்துகொள்ளவில்லை; மாறாக, அன்போடு அழைக்கிறார். “இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள்…” (20:27) என்கிறார்.
இயேசுவின் காயங்கள் வடுக்கள் அல்ல; அவை இறை இரக்கத்தின் திறந்த வாயில்கள். தோமா அந்தக் காயங்களைத் தொட்டபோது, அவர் தொட்டது வெறும் சதையை அல்ல; கடவுளின் எல்லையற்ற கருணையை! அந்த ஒரு நொடி, தோமாவின் அவநம்பிக்கை மறைந்து, “நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!” என்ற அடைக்கலம் பிறந்தது. நமக்காகக் காயம்பட்ட இறைவனே, நம் காயங்களையும் குணமாக்கும் இரக்கத்தின் ஊற்று என்பதை இது நமக்கு உணர்த்துகிறது.
மனித
வரலாற்றின் தொடக்கமே இறைவனின் இரக்கத்தில்தான் வேரூன்றியிருக்கிறது. முதல் பெற்றோரின் வீழ்ச்சியால் மானுடம் பாவத்தில் மூழ்கியபோது, கடவுள் தம் இரக்கத்தைக் குறைத்துக்கொள்ளவில்லை; மாறாக, அன்னை மரியா வழியாக ‘மீட்பு’ என்னும் வாக்குறுதியை வழங்கி, தம் கருணையை உறுதிப்படுத்தினார். சீனாய் மலையில் மோசேக்குத் தம்மை வெளிப்படுத்தியபோது, “ஆண்டவர் இரக்கமும் பரிவும் உள்ள இறைவன்; சினம் கொள்ளத் தயங்குபவர்; பேரன்புமிக்கவர்” (விப
34:6) என்று இறைவன் முழங்கியது வெறும் வார்த்தையல்ல; அது மனிதகுலத்தின் மீதான அவரது தீராத பேரன்பு! இந்தத் தந்தையின் இரக்கமே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவில் ‘மனித உரு’ எடுத்தது. அவரது ஒவ்வொரு சந்திப்பும், ஒவ்வொரு வல்ல செயலும் இறை இரக்கத்தின் அடையாளங்களே.
இறுதியாக,
கல்வாரியில் தம் உயிரையே கையளித்தபோது, அந்த இரக்கம் முழுமை பெற்றுச் சிகரம் தொட்டது. இயேசுவின் இந்தப் பரிவிரக்கப் பணிகளை அவரது சீடர்களே முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதுதான் வேதனையான உண்மை. ஒருவர் மறுதலித்தார்; மற்றொருவர் காட்டிக்கொடுத்தார்; ஒருவர் ஆடையின்றி ஓடினார். இவ்வளவு துரோகங்களுக்கும் கைவிடுதலுக்கும் மத்தியிலும், இயேசுவின் இரக்கம் ஒளிர்ந்தது. தம்மைத் தேடி வந்த படைவீரர்களிடம், “என்னைத் தேடுகிறீர்கள் என்றால், இவர்களைப் (சீடர்களை) போகவிடுங்கள்” (யோவா
18:8) என்று கூறி, மரண வாயிலிலும் தாம் அழைத்த சீடரைக் காத்தாரே... அதுதான் இரக்கத்தின் உச்சம்!
இன்றைய
நாள் நம் அன்றாட வாழ்விற்குக் கற்றுத்தரும் மூன்று முக்கியப் பாடங்கள்: முதலில், நம் காயங்களைக் கடவுளிடம் காட்டுவோம். தோமா இயேசுவின் காயங்களைத் தொட்டபோதுதான் அவரது கடவுள் தன்மையை உணர்ந்தார். அது போல, நம்முடைய தோல்விகளும் பாவங்களும் பலவீனங்களும் நம்மைக் கடவுளிடமிருந்து பிரிக்க வேண்டியவை அல்ல; மாறாக, அவை இறைவனின் இரக்கத்தை நாம் இன்னும் ஆழமாகத் தேடுவதற்கான நுழைவாயில்கள்.
இரண்டாவதாக,
பழிவாங்கலைத் துறந்து மன்னிப்பைப் பகிர்வோம். உலகம் இன்று பழிக்குப் பழி என்னும் போரில் எரிந்து கொண்டிருக்கிறது. ஆனால், தம்மைவிட்டு ஓடிப்போன சீடர்களை உயிர்த்த பின் சந்தித்த இயேசு, “உங்களுக்கு அமைதி உரித் தாகுக” என்று மன்னிப்பைத் தந்தார். நம்மைப் புண்படுத்தியவர்களை மன்னிப்பதன் மூலமே, நாம் இறை இரக்கத்தின் உண்மையான பிள்ளைகளாக மாறமுடியும். மூன்றாவதாக, இரக்கத்தின் கைகளாக மாறுவோம். வறுமையில் வாடுவோருக்கும், சமூகத்தால் ஓரம் கட்டப்பட்ட விளிம்புநிலை மக்களுக்கும், போர்ச்சூழலில் தவிக்கும் அப்பாவி உயிர்களுக்கும் நம் இரக்கத்தின் கரங்களை நீட்டவேண்டும்.
நிறைவாக,
போர்களில் மடியும் மனிதம் தொடங்கி, தோமாவின் விரல் தொட்ட இயேசுவின் காயங்கள் வரை ஒரே ஒரு செய்திதான் உரக்க ஒலிக்கிறது: ‘இறைவனின் இரக்கம் எல்லையற்றது.’ அந்தப் பெருங்கருணையைப் பெற்றுக்கொள்வோம்; மண்ணுலகில் இரக்கத்தின் சாட்சிகளாய் வாழ்வோம்.