2025-ஆம் ஆண்டு நன்றியோடு விடைபெறுகிறது. 2026-ஆம் ஆண்டு கனவுகளோடும் மிகுந்த எதிர்பார்ப்புகளோடும் புதிதாய்ப் பிறக்கின்றது. இறைவனுக்கு நன்றிகூறி இப்புதிய ஆண்டை வரவேற்போம்.
ஆண்டின்
முதல் நாள் நமக்கு மூன்று முக்கிய விழாக்களை நினைவூட்டுகின்றன. முதலில், அன்னையின்
மகிமையை எண்ணிப்பார்த்து, அன்னை மரியாவை ‘ஆண்டவரின் தாய்’ என்று
அறிக்கையிட்டுக் கொண்டாடுகிறோம். இரண்டாவதாக, இன்று ஆண்டவருடைய பிறப்பின் எட்டாம் நாளையும்;
மூன்றாவதாக, உலக அமைதி நாளையும் நினைவு கூர்கிறோம்.
ஆண்டின்
முதல் நாளான இன்று பெற்றோரிடம் பிள்ளைகள் ஆசிபெறுவதுபோல, நாம் நம் விண்ணக அன்னையிடம்
ஆசிபெறுவோம். அன்னை மரியா மீட்பு வரலாற்றில் தவிர்க்க முடியாத ஓர் உன்னதமான உயிர்.
மனித மீட்பில் அவரது பங்களிப்பு தலைமுறைதோறும் (லூக் 1:48) நினைவுகூரப்படுகிறது. அன்னை
மரியா இறைமகன் இயேசுவின் தாயாக இருப்பதால் அவர் நமக்கும் தாயாகிறார். அவரே நம்பிக்கையின்
தாய்! அவர் பராமரிப்பின் தாய். மென்மையின் தாய். உதவிபுரிய எப்போதும் தயார் நிலையில்
இருக்கும் தாய். அத்தகைய தாய் இப்புதிய ஆண்டில் நமக்கு இறைவனின் ஆசிரையும் அருளையும்
பெற்றுத்தருவார் என்ற நம்பிக்கையோடு இவ்வாண்டை அன்னையின் கரம்பற்றித் தொடங்குவோம்.
அன்னை
மரியாவுக்குத் திரு அவை வழங்கியுள்ள மதிப்பிற்குரிய தலைப்பு அல்லது பட்டம் ‘மரியா-கடவுளின்
தாய்.’ அன்னை மரியாவுக்குத் திரு அவை வழங்கியுள்ள ‘மரியா கடவுளின் தாய்’, ‘மரியா என்றும் கன்னி’,
‘மரியா அமல உற்பவி’, ‘மரியாவின் விண்ணேற்பு’ ஆகிய நான்கு மறைக்கோட்பாடுகளிலும் (Dogma) மிகவும்
தொன்மையானது ‘மரியா கடவுளின் தாய்’ என்ற உயரிய பட்டம்தான். அன்னை மரியாவைக்
‘கடவுளின் தாய்’ என்று அழைப்பது பொருத்தமாக இருக்குமா?
அன்னை மரியாவில் மனு உருவெடுத்த இறைமகன், நம்மைப்போல் மனித நிலைகளை எடுத்துக்கொண்டார்.
அன்னை மரியாவை ‘இறைவனின் தாய்’ என நாம் அழைக்கும்போது, கடவுள் மனிதகுலத்திற்கு
அருகில் உள்ளார் என்பது நமக்கு நினைவூட்டப்படுகிறது. காலங்களைக் கணித்து, யுகங்களை
நொடித்து அவரவர் வினையின் விளைவை அறுக்கச்செய்யும் இறைவன் நம்மோடு இருப்பதற்கென, நம்மைப்போல்
உருவெடுத்தார். ‘கடவுள் மனிதரானார்’ (யோவா 1:14), ‘கடவுள் நம்மோடு’ (மத் 1:22-23), ‘கடவுள் வடிவில் விளங்கிய அவர் அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார்’ (பிலி 2:6,7) என்பதில்தான் அவரது பேரன்பு வெளிப்பட்டது.
எனவே, ‘மரியா கடவுளின் தாய்’ என்னும் கோட்பாடு ‘இயேசு கிறிஸ்துதாம்
உண்மையான கடவுள்’ என்பதையே வெளிப்படுத்துகிறது.
கி.பி.
4-ஆம் நூற்றாண்டிலேயே ‘மரியா கடவுளின் தாய்’ என
ஏற்றுக்கொள்வதில் திரு அவைக்குள் கருத்துமோதல்களும் பிரிவினைகளும் ஏற்பட்டன. இயேசு
கடவுளா? மனிதனா? அவரில் மனித- இறைத்தன்மைகள் இருந்தனவா? போன்ற மோதல்கள் தொடர்ந்தன.
குறிப்பாக, கான்ஸ்டாண்டி நோபிளின் பேராயராக இருந்த நெஸ்டோரியஸ் என்பவர் ‘மரியா கடவுளின்
தாய்’ என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள மறுத்தார்.
‘மனித உயிர் கடவுளை எப்படிப் பெற்றெடுக்க முடியும்? மரியா, இயேசு என்ற மனிதனின் தாய்
மட்டுமே. கடவுளின் தாய் அல்லர்’ என்றார். இவரது இந்தக் கருத்தியல்தான்
‘நெஸ்டோரியனிசம்’ (Nestorianism) என்று அழைக்கப்பட்டது. இந்தச் சிக்கலைத்
தீர்க்க கி.பி. 431-இல் எபேசு நகரில் அலெக்சாண்டிரியாவின் ஆயர் சிரில் தலைமையில் ஒன்றுகூடிய
பொதுச்சங்கம், ‘மரியா, கடவுளின் தாய்’
என உறுதிபட அறிவித்தது. ஆகவே, நாமும் அன்னை மரியாவை ‘நம் தாய்’ எனப் புகழ்ந்து பாடி இப்புதிய ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம்.
இன்றைய
வழிபாட்டில் மிக முக்கியமாக, நாம் ஆண்டவருடைய பிறப்பின் எட்டாம் நாளைக் கொண்டாடுகிறோம்.
இந்த நாள் இறைவனின் தாய் இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்த நாளாக, அதாவது, மோசேவின் சட்டப்படி
கோவிலுக்கு எடுத்துச் சென்று விருத்தசேதனம் செய்த நாளாக, குழந்தைக்கு வானதூதர் அறிவித்தபடியே
‘இயேசு’ என்று பெயரிட்டு மகிழ்ந்த நாளாக இருக்கிறது.
இயேசு என்ற பெயருக்கு ‘கடவுள் நம்மை மீட்கின்றார், நமக்கு உதவுகின்றார், நம்மை வாழ்விக்கின்றார்,
நம்மோடு உடனிருக்கின்றார்’ என்று பொருள். இயேசு எனும் பெயர் வல்லமையுள்ள
பெயர். மண்ணகமும் விண்ணகமும் மண்டியிடும் பெயர். இப்பெயர் இயேசுவே இறைச்சாயல், ஒவ்வொருவருக்கும்
அனைவருக்குமான ஆசிர் மற்றும் உலகின் அமைதி என்ற இறைவெளிப்பாட்டின் நிறைவாகும். எனவே,
இயேசு என்ற பெயர், அவர் வாக்களித்த அமைதி (யோவா 14:27) நமக்கு உறுதியாகக் கிடைக்கும்
என்ற நம்பிக்கையை இன்று நம் உள்ளங்களில் விதைக்கிறது.
மூன்றாவதாக,
இந்த நாளை உலக அமைதி நாளாகக் கொண்டாட திரு அவை நம்மைப் பணிக்கின்றது. 1968-ஆம் ஆண்டில்
புனித திருத்தந்தை 6-ஆம் பவுல் சனவரி முதல் நாளில் உலக அமைதி நாள் சிறப்பிக்கப்பட வேண்டுமென
அழைப்புவிடுத்தார் (எண் 5). இறைவன் வழங்கிய
இந்தப் புதிய ஆண்டின் முதல் நாளான இன்று நமக்குத் தரப்பட்டுள்ள முதல் வாசகம், இறைவன்
மோசேவுக்கு வழங்கிய ஆசி, ஆரோன், அவரது புதல்வர்கள் வழியாகத் தலைமுறை, தலைமுறையாகத்
தொடர்ந்து நமக்கும் வருகிறது என்பதை எடுத்துக்கூறுகிறது. “ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி
உன்னைக் காப்பாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச் செய்து உன்மீது அருள் பொழிவாராக!
ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக!\" (எண்
6:25,26). இன்று ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் இறைவன் நிறைவான ஆசியையும் அருளையும்
பொழிகிறார். இறையமைதியே இறைவன் நமக்கு வழங்கும் ஆசி. இந்த ஆசியை முழுமையாக மனிதர்களுக்குப்
பகிர்ந்தளிப்பதே நமது முக்கியப் பணியாகும்.
இவ்வாண்டு,
திருத்தந்தை லியோ “உங்கள் அனைவருக்கும் அமைதி உரித்தாகுக; ஆயுதங்களற்ற அமைதியை நோக்கி...”
(யோவா 20:19) என்பதை உலக அமைதி தினத்திற்கான கருப்பொருளாகத் தந்துள்ளார். அவர் தன்னுடைய
செய்தியில், வன்முறை மற்றும் போரினை நிராகரித்து, அன்பு மற்றும் நீதியை அடிப்படையாகக்
கொண்ட உண்மையான அமைதியைத் தழுவ உலக அமைதி நாளானது மனிதகுலத்தை அழைக்கிறது என்றும்,
இந்த அமைதியானது ஆயுதங்களற்ற அமைதியாக இருக்கவேண்டும் எனக் கூறியுள்ளார். நல்லிணக்கம்,
நம்பிக்கை, அக்கறை, பரிவு மற்றும் பற்றுறுதியை உருவாக்கும் திறன் கொண்டதாக அமைதி இருக்க
வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைதி
என்பது இறைவனின் கொடை. இயேசு நமக்கு வழங்கிய பிறரன்பின் முதற்கனி அமைதி. அதுவே இறைவனுடனான
நம் ஒப்புரவு அமைதி. வன்முறை மற்றும் தீமைகளின் விதையைவிட வலிமை நிறைந்தவை. உலக அமைதித்
திருநாளான இன்று அன்னை மரியின் திரு உருவின் முன்னால், அமைதியின் கொடைக்கான பரிந்துரையை
வேண்டுவோம். அன்னை மரியாவின் கைகளில் இருக்கும் இயேசு பாலனைப்போல், நாமும் இந்த அன்னையின்
கைகளில் குழந்தையாக உள்ளோம். இந்த அன்னையிடம் நமது தேவைகள், உலகின் தேவைகள் அனைத்தையும்
ஒப்படைப்போம். குறிப்பாக, உலகில் நீதியையும் அமைதியையும் தேடுவோர் அனைவரின் தேவைகளையும்
அவரிடம் ஒப்படைப்போம். நேர்மறை எண்ணங்களுடன் நன்மைகளை நினைத்து, நன்மைகளையே ஆற்றுவோம்.
இந்த
ஆண்டில் நமது எண்ணங்கள், நமது சொற்கள், நமது செயல்கள், நமது வாழ்வுமுறை இறைவனுக்குத்
தகுதியானவைகளாக மாறிட... இறைவனுடைய ஆசியும் அருளும், நம் ஒவ்வொருவருக்கும் நல்ல உடல்
ஆரோக்கியம், நிறைவான மகிழ்ச்சி, உழைப்புக்கேற்ற ஊதியம், மன அமைதி, நிபந்தனையற்ற அன்பு,
உண்மையான உறவுகள், எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைத்திட நாம் ஒருவர் மற்றவருக்காக
வேண்டிக்கொள்வோம். இனிமையும் பராமரிக்கும் தன்மையும் கொண்ட இத்தாய், இறைவனிடமிருந்து
மனிதகுலம் முழுமைக்கும் ஆசிரைப் பெற்றுத்தருவாராக!
இறுதியாக,
நம் இறைவன் இரக்கமும் கனிவும் உடையவர். வாக்கு மாறாதவர். முக்காலமும் கடந்து நம்மை
அன்பு செய்பவர். அவர் நமக்கு வழங்கியுள்ள அனைத்துக் கொடைகளுக்காக நன்றிகூறுவோம். இயேசுவின்
ஆதரவும், அவரது அன்பும் நமக்கு நிறைவாக உண்டு என்ற நம்பிக்கையோடு இந்தப் புதிய ஆண்டை
எதிர்கொள்வோம். இறைவனின் தாயும், நம் தாயுமான அன்னை மரியா நம் ஒவ்வொருவரின் உள்ளத்திலும்
இல்லத்திலும் நாடுகளுக்கிடையிலும், அமைதி என்ற கொடையை இறைவனிடமிருந்து பெற்றுத்தருவாராக!
அனைவருக்கும் இனிய புத்தாண்டு
நல்வாழ்த்துகள்!
நமக்கு முகமாய், முகவரியாய், அடையாளமாய் அமைவது குடும்பம். குடும்பம் பாசத்தின் உறைவிடம்; அன்பின் இல்லிடம்; நெருக்கத்தின் இருப்பிடம். இங்குதான் உரையாடல் மற்றும் தனிப்பட்டவர்களுக்கு இடையேயான கருத்துப் பரிமாற்றம் ஆகிய கலைநுணுக்கங்கள் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. குடும்பத்தில்தான் ஒவ்வொருவரும் தங்கள் மேன்மையையும் பெருமையையும் அறிந்துகொள்கின்றனர். அன்பு செய்கின்ற, ஒருவரையொருவர் முழுமையாக நேசிக்கின்ற, ஒருவருக்கொருவர் உரையாடிக்கொள்கின்ற, மற்றவர்களுக்காகத் தன்னையே அர்ப்பணிக்கக்கூடிய குறிப்பாக, மிகவும் நலிந்தோரையும் நோயுற்றோரையும் கனிவாய்ப் பாதுகாக்கக்கூடிய தளமாகப் பல தன்மைகளைக் கொண்டதே குடும்பம். எனவேதான், குடும்பம் சமுதாயத்தின் அடித்தளம் எனவும், அடிப்படை உயிரணு என்றும் அழைக்கிறோம்.
குடும்பம்
என்பது மனித உறவின் நிறைவு. இங்கேதான் ஒருவரையொருவர் மதிக்கவும் அன்பு கூரவும் வேண்டும் என்ற பண்பும் ஒற்றுமையும் மேலோங்கி இருக்கும். குடும்பம் என்பது நம்பிக்கையின் தொடக்க வித்து. குடும்பத்தில் நம்பிக்கை என்பது தாய்ப்பாலுடன் சேர்ந்தே ஊட்டப்படுகிறது. குடும்பத்தில்தான் பெற்றோரும், தாத்தா-பாட்டிகளும் தங்கள் நம்பிக்கையை அடுத்த தலைமுறைக்கு வழங்குகின்றனர். எனவேதான் ‘குடும்பம் என்பது நற்செய்தி அறிவிப்பதற்குச் சிறந்த தளம்’ என்றார் திருத்தந்தை பிரான்சிஸ். மனிதகுலத்திற்கு நற்செய்தியை அறிவிக்க முதன்முதலில் அழைக்கப்பட்ட சமூகம் கிறித்தவக் குடும்பங்களே.
திருத்தந்தை
புனித இரண்டாம் ஜான்பால், “திரு அவையின் இதயமே குடும்பங்கள்தாம்; இந்த இதயம் பழுதடைந்தால் மனிதன் வாழமுடியாது; குடும்பங்கள் சிதைவுற்றால் திரு அவையும் சிதைவுறும்” என்கிறார்.
ஒரு நல்ல குடும்பம் சமுதாயத்திற்கு மட்டுமல்ல, திரு அவைக்கும் அடித்தளமாக இருக்கிறது. ஒரு நல்ல குடும்பம் கத்தோலிக்க நம்பிக்கையை, அன்பை, கிறித்தவ ஆன்மிகத்தைத் தன்னுடைய பிள்ளைகளின் மனத்தில் ஆழமாகப் பதிய வைக்கிறது. அதனால்தான், கிறித்தவக் குடும்பம் ‘ஒரு குட்டித் திரு அவை’ என்ற கருத்துருவாக்கத்தைத் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் தன்னுடைய ‘குடும்ப வாழ்வு’
(Familiaris Consorti) என்ற
சுற்றுமடலில் முன்மொழிந்தார். குடும்பம் என்பது குட்டித் திரு அவை என்பதற்கு முதல் மாதிரியாக வாழ்ந்த குடும்பம் நாசரேத்தூர் திருக்குடும்பம்.
கிறிஸ்து
பிறப்புப் பெருவிழாவைத் தொடர்ந்து வரும் ஞாயிறன்று திருக்குடும்பத் திருவிழாவைக் கொண்டாட திரு அவை நம்மை அழைக்கின்றது. இயேசுவின் குடும்பத்தைப்போலவே உலகில் உள்ள எல்லாக் குடும்பங்களும் இருக்கவேண்டும் என்பதே இவ்விழா இன்று விடுக்கும் அழைப்பு. திருக்குடும்பத் திருவிழாவைக் கொண்டாட திரு அவை அழைப்பு விடுத்ததன் காரணம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
திருக்குடும்பத்
திருநாள் தனிப்பட்ட ஒரு பக்தி முயற்சியாகத்தான் தொடக்கத் திரு அவையில் வளர்க்கப்பட்டு வந்தது. முதன்முதலில் 1893-ஆம் ஆண்டு திருத்தந்தை 13-ஆம் லியோ இவ்விழாவை அறிமுகம் செய்தார். 1921-ஆம் ஆண்டு திருத்தந்தை 15-ஆம் பெனடிக்ட் இத்திருவிழாவைத் திருவழிபாட்டுக் கால அட்டவணையில் இணைத்தார். இதற்கு முக்கியக் காரணம், அப்போது நடந்து முடிந்திருந்த முதல் உலகப் போர். 1918-இல் நடைபெற்ற இப்போரில் பல்லாயிரம் குடும்பங்கள் சிதைக்கப்பட்டன. தந்தையையும் மகனையும் இழந்த பல குடும்பங்கள் ஆழ்ந்த
துயரத்தில், அவ நம்பிக்கையில் மூழ்கியிருந்தன.
இக்குடும்பங்களுக்கு ஆறுதலும் நம்பிக்கையும் தரும் வகையில் திருக்குடும்பத் திருநாளை மீண்டும் அறிமுகப்படுத்தி, குடும்பங்களைக் கட்டியெழுப்ப திரு அவை முயன்றது.
1962-ஆம் ஆண்டு
தொடங்கிய இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கமும் திருக்குடும்பம் குறித்த சிந்தனைகளைப் புதுப்பித்தது. நடைபெற்ற உலகப் போர்களுக்குப் பின்னர் குடும்பங்கள் சந்தித்த துயரங்கள், சிதைவுகள், அவநம்பிக்கைகள், போராட்டங்கள் மற்றும் போதைப்பொருள்களின் பரவலான பயன்பாடுகள், கலாச்சாரச் சீரழிவுகள் போன்ற காரணிகளால் நிலைகுலைந்த குடும்பங்களைக் காப்பது என்பது திரு அவையின் முக்கியக் கடமையாக இருந்தது. இந்தச் சூழ்நிலையில்தான் உண்மையான அன்பையும் அமைதியையும் திருக்குடும்பம் வழங்கமுடியும் எனத் திரு அவை உணர்ந்தது.
எகிப்தில்
அடைக்கலம் தேடி, நாடு கடந்து செல்லும் துயரமான சூழலை யோசேப்பு, மரியா, குழந்தை இயேசு அனுபவித்தனர். பச்சிளம் குழந்தை இயேசுவோடு மரியாவும் யோசேப்பும் எகிப்துக்கு ஓடிப்போன நேரத்தில், அக்குழந்தையை அழித்துவிடும் வெறியில், ஏரோது பல நூறு குழந்தைகளின்
உயிர்களைப் பலிவாங்கினான். திருக்குடும்பம் சந்தித்த அதேபோன்ற மோசமான சூழ்நிலையை இன்று குடும்பங்கள் சந்திக்கின்றபோது, கடவுளின் அன்பிலிருந்தும் நெருக்கத்திலிருந்தும் புறக்கணிக்கப்படுவதாக எவரும் நினைக்கக்கூடாது. இதுபோன்ற கடினமான பிரச்சினைகளைச் சந்திக்கின்ற குடும்பத்தில் ஓர் உறுப்பினராக இயேசு இருக்க விரும்புகிறார் என்ற ஆழமான நம்பிக்கையைத் திரு அவை குடும்பங்களுக்கு ஊட்டியது. அனைத்துக் குடும்பங்களுக்கும் முன்மாதிரியாகத் திருக்குடும்பத்தை முன்னிறுத்தியது. கிறிஸ்துமஸ் விழாவைத் தொடர்ந்து வரும் ஞாயிறைத் திருக்குடும்பத் திருவிழாவாகக் கொண்டாடவேண்டும் என்று 1960-இல் திரு அவை அறிவித்தது.
திருக்குடும்பம்
நம் மத்தியில் எப்படி வாழ்ந்தது? அந்தக் குடும்பம் கடைப்பிடித்து வாழ்ந்த விழுமியங்கள் என்னென்ன? என்பதை இன்று நாம் எண்ணிப் பார்க்கவேண்டும். இயேசு, மரியா, யோசேப்பு என்ற திருக்குடும்பம் பச்சிளம் குழந்தை இயேசு பிறந்ததும், இரவோடு இரவாக வேறொரு நாட்டிற்கு அகதிகளாய் ஓட வேண்டியிருந்தது. நாட்டிற்குள்ளும்
அடுத்த நாடுகளுக்கும், இரவோடு இரவாக ஓடும் இன்றைய புலம்பெயர்ந்தோரின் நிலையை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே திருக்குடும்பம் அனுபவித்தது. வானவரின் செய்தியைக் கலக்கத்தோடு ஏற்றுக்கொண்ட மரியா, இச்செய்தியை அறியும்போது மனக்கலக்கமும் குழப்பமும் அடைந்த யோசேப்பு, குழந்தை இயேசுவைக் குறித்த சிமியோனின் இறைவாக்கு (லூக் 2:35), தாயும்-தந்தையும் இயேசுவைக் காணவில்லையே என்ற ஏக்கமிகு தேடல் (லூக் 2:44) எனத் திருக்குடும்பம் எந்நேரமும் பிரச்சினைகளோடே வாழ்ந்து வந்தது. இருப்பினும், அவர்கள் அந்தப் பிரச்சினைகளைச் சந்தித்த விதமும், அவற்றிற்குத் தீர்வு கண்டவிதமும் நமக்கு நல்லதொரு பாடம்.
திருக்குடும்பம்
துன்பங்கள், சோதனைகள் வேளையிலும் செபத்தில் இணைந்திருந்ததைச் சிறந்த மாதிரியாக நாம் பார்க்கிறோம். அன்னை மரியாவும் யோசேப்பும் கடவுளுக்குக் கீழ்ப்படிந்திருப்பதிலும், அவரின் திட்டத்தை நிறைவேற்றுவதிலும் எப்போதும் கவனமாய் இருந்தனர். எப்போதும் கடவுளுக்காக வாழக்கூடியவர்களாவும், தங்களையே முழுவதும் அர்ப்பணிக்கக்கூடியவர்களாவும்
இருந்தனர். கடினமான சூழலிலும், கலக்கமடைந்த வேளையிலும் கடவுளுக்கு ‘ஆம்’ என்றே பதிலளித்தனர். குறிப்பாக, அன்னை மரியாவின் ‘ஆம்’ கல்வாரி மலையின் உச்சம்வரை தொடர்ந்தது. இறை நம்பிக்கை என்பது தங்களையே முழுமையாக இறைவனிடம் அர்ப்பணிப்பதைவிட வேறு எது இருக்கமுடியும்? இறுதிவரை பரிவு, இரக்கம், மனத்தாழ்மை, கனிவு, பொறுமை ஆகிய நற்பண்புகளால் தங்கள் உள்ளங்களை அணிசெய்தனர் இயேசு-மரி-யோசேப்பு குடும்பம்.
திருக்குடும்ப
விழாவைக் கொண்டாடும் இன்றைய நாளில் நம்பிக்கையின் நாற்றங்காலாய் விளங்கும் நமது குடும்பங்களை எண்ணிப்பார்ப்போம். இன்றைய வணிகப் பொருளாதார வாழ்க்கை அமைப்பில் குடும்ப உறவுகள் சீர்குலைந்து வருகின்றன. திருமணத்தின் புனிதமும், அதன் முறிவுபடாத் தன்மையும் இன்று உலகுசார்ந்த நவீன கலாச்சார அழுத்தத்தால் சிதைவுற்றுப்போகின்றன. தாயின் கருவறையில் உள்ள குழந்தைகளுக்கு எதிராக எழும் தாக்குதல்கள் அதிகரித்துவிட்டன. தாயின் மடியில் தலைவைத்துப் பாசத்தைப் பகிர்ந்துகொள்ள குழந்தைக்கும், குழந்தையின் மழலையில் குதூகலிக்க பெற்றோருக்கும் இன்று நேரமில்லை.
‘ஒரு குழந்தை வளர ஒரு கிராமமே தேவைப்படுகிறது’ என்ற
ஆப்பிரிக்க முதுமொழி நினைவுகூரத்தக்கதே. மனிதர்கள் இன்று நுகர்வுக் கலாச்சாரத்தில் சந்தைப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு புறந்தள்ளப்படுகின்றனர். ‘பயன்படுத்தித் தூக்கியெறி’ எனும்
கலாச்சாரத்தை நாம் உருவாக்கிவிட்டோம். முதியோர் குறிப்பாக, நோயுற்றோர் இன்று சுமையாகி விட்டனர். மனித உறவுகள் எப்போதும் ஒருவரையொருவர் சார்ந்த உறவுகள் என்பதைப் பல வேளைகளில் நாம்
மறந்துவிடுகிறோம்.
“உலகமனைத்துக்கும் மகிழ்ச்சியைக் கொணர விரும்பினால் வீட்டுக்குச் சென்று உங்கள் குடும்பத்தை அன்பு செய்யுங்கள்” என்றார்
அன்னை தெரேசா. எனவே, தங்களைச் சுற்றி நடந்த அத்தனை அவலங்களையும் மீறி அன்பை, அக்கறையை, ஆதரவைத் தங்கள் குடும்பத்திலும், தாங்கள் வாழ்ந்த சூழல்களிலும் நிலைநாட்டிய திருக்குடும்பத்தைப்போல மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த குடும்ப வாழ்வு வாழ திருக்குடும்பத்திடம் வேண்டுவோம்.
அனைவருக்கும்
திருக்குடும்ப
விழா
வாழ்த்துகள்!
கடவுள் மனிதரானார், நம்மிடையே குடிகொண்டார். அவர்தாம் இம்மானுவேல்! கடவுள் நம்மோடு! அவர் அந்நியர் அல்லர்; அவருக்கு முகம் உண்டு; அதுவே இயேசுவின் முகம். மீட்பின் இந்நாளில் நாம் பெருமகிழ்ச்சிகொள்கிறோம். இந்நாள் இரக்கத்தின் நாள்! இதில் நம் தந்தையாம் இறைவன் தம் உன்னத பாசத்தை உலகம் முழுமைக்கும் வெளிப்படுத்தியுள்ளார். இது ஒளியின் நாள்! இது அச்சம், ஏக்கம் எனும் இருளை விரட்டியடிக்கிறது. இது அமைதியின் நாள்! இது சந்திப்பிற்கும் உரையாடலுக்கும் ஒப்புரவிற்கும் வழியமைக்கிறது. இது மகிழ்வின் நாள்! இது ஏழைகளுக்கும் தாழ் நிலையில் உள்ளோருக்கும் அனைத்து மக்களுக்கும் உன்னத மகிழ்வைத் தருகிறது.
கடவுள்
குழந்தையாகப் பிறந்துள்ளார் என்ற வியப்புக்குரிய செய்தி முதலில் இடையர்களுக்கு வழங்கப்படுகிறது. ஏழ்மையான நிலையில் அவர் பிறந்திருக்கிறார் என்பது இடையர்களுக்குக் கொடுக்கப்படுகின்ற ஓர் அடையாளம். அதாவது, தீவனத்தொட்டியில் குழந்தை கிடத்தப்பட்டிருக்கும் என்பதுதான் அந்த அடையாளம். அங்கு ஆடம்பர அலங்கார விளக்குகளோ அல்லது வானதூதர்களின் பாடல்களோ இல்லை. ‘ஒரு குழந்தை பிறந்துள்ளது’ என்பது
மட்டுமே அடையாளம்.
“பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத்தொட்டியில் கிடத்தினார்” (லூக்
2:7), “குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத்தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம்”
(2:12), “விரைந்து சென்று மரியாவையும் யோசேப்பையும் தீவனத்தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் கண்டார்கள்” (2:16) என்ற
இறைவார்த்தைகளில் மூன்றுமுறை ‘தீவனத்தொட்டி’ என்ற
வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளதை நாம் காண்கின்றோம். கிறிஸ்து பிறப்பு விழாவின் உண்மையான அர்த்தத்தைக் காண நாம் தீவனத்தொட்டியை உற்றுநோக்குவோம். ஏனெனில், கிறிஸ்து ஏன் இந்த உலகிற்கு வந்தார் என்பதை அது நமக்கு விளக்கிக் கூறுகிறது. இதன் அடிப்படையில் தீவனத்தொட்டி நமக்கு உணர்த்தும் 1. நெருக்கம், 2. ஏழ்மை, 3. தாழ்ச்சி ஆகிய மூன்று இறைப்பண்புகளைச் சிந்திப்போம்.
முதலாவதாக,
தீவனத்தொட்டி என்பது ‘கடவுளின் நெருக்கத்தை’ நமக்கு
உணர்த்துகிறது. தீவனத்தொட்டியில் கிடத்தியிருக்கும் குழந்தையைக் காண்பிப்பது, ஆடம்பரம் இல்லாத எளிமையான ஓரிடத்தையும் காட்டுகிறது. கடவுளை எப்போதும் எளிமையான ஒரு சிறிய இடத்தில் மட்டுமே காணமுடியும். நம்மிடம் நெருக்கமாக வரவும், நம் இதயங்களைத் தொடவும், நம்மை மீட்கவும் கடவுள் இந்தச் சிறிய வழியைத்தான் தேர்ந்துகொள்கிறார். எனவே, தீவனத்தொட்டியில் பிறந்துள்ள கிறிஸ்து நம்முடன் நெருக்கமாக இருப்பதை நம்மால் உணர முடிகிறது. அவர் நமது உணவாகவேண்டும் என்பதற்காக அதில் தம்மை வெளிப்படுத்துகிறார். அவர் நம்முடன் எப்போதும் மிகவும் நெருக்கமாக இருக்கவும், விண்ணக அரியணையை விடுத்து ஏழ்மை நிலையில் தம்மை ஒரு தீவனத்தொட்டியில் வெளிப்படுத்தவும் திருவுளம்கொண்டார்.
பொதுவாக,
நாம் யாரை அன்பு செய்கின்றோமோ அவர்களையே தேடிச்செல்கின்றோம். நாம் அன்பு செய்யும் ஒருவருக்காக எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கின்றோம். நாம் அன்பு செய்பவர்களைத் தேடிச்சென்று சந்திப்பதிலும், அவர்களோடு உரையாடுவதிலும் உறவாடுவதிலும் நம் உள்ளம் பெருமகிழ்ச்சிகொள்கின்றது. அதேபோன்று, இறைவன் நம்மைத் தேடி வருகின்றார். ஆம், விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடிவருகின்றது. தமது அளவுகடந்த அன்பினால் நம்மை அரவணைக்க வருகின்றார். தீவனத்தொட்டியைத் தேர்ந்தெடுத்த கடவுள், தாம் எவரிடமும் தூரமாக இல்லை என்பதைக் காட்டுகிறார். எந்த நிலை, எந்தச் சூழல், எந்த வறுமை இருந்தாலும், கடவுள் மனிதருடன் நெருக்கமாக இருக்க விரும்புகிறார் என்பதை இது காட்டுகிறது. ‘கடவுளின் நெருக்கம்’
கடவுள் உயர்ந்த அரண்மனைகளில் அல்லது பிரமிப்பூட்டும் இடங்களில் அல்ல; சாதாரண மக்கள் வாழும் எளிய இடங்களிலும்கூட வருகிறார்.
இரண்டாவதாக,
தீவனத்தொட்டி வெளிப்படுத்தும் முக்கியமான செய்தி ‘கடவுளின் ஏழ்மை.’ இயேசு ஏழையாகப் பிறந்தார்; ஏழையாக வாழ்ந்தார்; ஏழையாகவே இறந்தார். தீவனத்தொட்டி- எளிமையின் உச்சமிது. தீவனத்தொட்டியைச் சுற்றி நின்றவர்களும் ஏழைகளே. அன்னை மரியா, யோசேப்பு, இடையர்கள் மற்றும் அனைத்து ஏழையரும்! இவர்கள் செல்வம் மற்றும் பெரும் எதிர்பார்ப்புகளால் அல்ல; மாறாக, அன்பால் மட்டுமே அங்கு ஒன்றுபட்டிருந்தனர். பணத்திலும் பதவியிலும் அல்ல; ஆனால், உறவுகளிலும் நபர்களிலும்தான் வாழ்க்கையின் உண்மையான செல்வங்கள் காணப்படுகின்றன என்பதைத் தீவனத்தொட்டியின் ஏழ்மை எடுத்துக்காட்டுகிறது. கிறிஸ்து பிறப்பு விழாவை உண்மையிலேயே நாம் கொண்டாட விரும்பினால், புதிதாகப் பிறந்திருக்கும் குழந்தையின் வலுவற்ற எளிமையின் திருவுருவைக் காணவேண்டும்; அங்கே தான் இறைவன் இருக்கின்றார்.
எல்
சால்வதோர் நாட்டின் பேராயராகப் பணிபுரிந்த புனித ஆஸ்கர் ரொமேரோ தன் மக்களுக்கு வழங்கிய கிறிஸ்துமஸ் செய்தியில் கூறிய வார்த்தைகள் இவை: “உண்மையில் ஏழையாக மாறாதவர்கள் கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடமுடியாது. தன்னிடம் எல்லாமே உள்ளன, தனக்கு மட்டும் போதும் என்ற மனநிலையில் வாழ்பவர்களுக்கு இறைவன் தேவைப்படுவதில்லை; அவர்களுக்குக் கிறிஸ்து பிறப்பும் தேவைப்படுவதில்லை. ஏழைகள், பசியுற்றோர், தேவையில் இருப்போர்... இவர்களாலேயே கிறிஸ்து பிறப்பு விழாவில் பொருள் காண முடியும். அவர்களைத் தேடியே இம்மானுவேல் அதாவது ‘கடவுள் நம்மோடு’ என்ற பெயர் தாங்கிய இறைவன் வருவார்.”
எனவே,
இயேசுவின் பிறப்பைக் கொண்டாடும் நாம், நம்மைக் கடந்துசெல்வோரில் குறிப்பாக, எளியோர் மற்றும் உதவி தேவைப்படுவோரில் அவரைக் கண்டுகொள்ள அழைப்புப் பெற்றுள்ளோம். நம் மீட்பரின் நிச்சயமான வருகை குறித்து மகிழ்வதற்கு அழைப்புப்பெற்றுள்ள நாம், அந்த மகிழ்வைப் பிறருடன் பகிர்ந்து, ஏழைகளுக்கும் நோயாளிகளுக்கும் தனிமையில் இருப்போருக்கும் மகிழ்வின்றி வாழ்வோருக்கும் ஆறுதலையும் நம்பிக்கையையும் வழங்கக் கடமைப்பட்டுள்ளோம்.
மூன்றாவதாக,
தீவனத்தொட்டி வெளிப்படுத்தும் செய்தி ‘கடவுளின் தாழ்ச்சி.’ பெண்களுக்குள் பேறு பெற்ற, கடவுளின் அருளை அடைந்த அன்னை மரியா, ‘இதோ அடிமை’ என்று தன்னைத் தாழ்த்திக் கொள்கிறார். தான் கடவுளின் தாய் என்ற ஆணவத்திற்கு ஒருபோதும் இடம் கொடுத்ததேயில்லை. இத்தகைய ஒரு புண்ணியம் நிறைந்த தாழ்ச்சியைத் தீவனத்தொட்டி நமக்கு உணர்த்துகிறது. உலகினர் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த கடவுளின் மேன்மையான குணம் இவ்வகையில் வெளிப்பட்டது. எனவே, தீவனத்தொட்டியில் இருக்கும் இந்தக் குழந்தையைக் காணவேண்டுமெனில் அவர் இருக்கும் இடத்திற்குச் சென்று, நம்மையே அவருக்கு முன் தாழ்த்தவேண்டும்.
தாழ்ச்சி
என்பது தன்னைப் பற்றிக் குறைவாக நினைப்பது அல்ல; மாறாக, ‘தான்’ என்ற எண்ணத்தைக் குறைப்பது. தாழ்ச்சி என்பது, தன் கருத்துகளை அடக்கி வைப்பது அல்ல; மாறாக, பிறரது கருத்துகளுக்கு மதிப்பு தருவது. தாழ்ச்சி என்பது, தன் திறமைகளை மறைப்பது அல்ல; மாறாக, பிறர் திறமைகளையும் பாராட்டுவது. தாழ்ச்சி என்பது, தன்னைப்பற்றிக் குறை கூறுவது அல்ல; மாறாக, பிறரின் குறையை மிகைப்படுத்தாமல் இருப்பது. தாழ்ச்சி என்பது, தன்னை விலக்கிக்கொள்வது அல்ல; மாறாக, பிறருக்கு முக்கியத்துவம் தருவது. தாழ்ச்சி என்பது, தனது உரிமைகளை விட்டுக் கொடுப்பது அல்ல; மாறாக, பிறரின் உரிமைகளைப் பறிக்காமல் இருப்பது. தாழ்ச்சியாய் இருப்பது என்பது, அடக்கமாக இருப்பது அல்லது கண்களை மூடிச்செபிப்பது அல்ல; மாறாக, அவமானங்களை ஏற்கும் திறனைக் கொண்டிருப்பது. தாழ்ச்சியுள்ளவர் இயேசுவைப் போன்று அவமதிப்புகளை ஏற்றுக் கொள்வார்.
நிறைவாக,
தீவனத்தொட்டியில் படுத்திருக்கும் குழந்தையின் வடிவில் இறைவன் நமக்கு விடுக்கும் செய்தி: எங்கெல்லாம், அமைதியும் பாதுகாப்பும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதோ, அங்குள்ள குழந்தைகளின் முகங்களில், இயேசுவைக் காண வேண்டும். பாலன் இயேசுவைக் கைகளில் தாங்கி, தூக்கி, அரவணைக்கும் நாம் தாகமுற்றிருப்போரை, அந்நியரை, உடையின்றி இருப்போரை, நோயாளிகளை, கைதிகளை... அவரில் ஏற்று அரவணைக்கத் தயங்கக்கூடாது. இயேசுவின் பிறப்பு கொணர்ந்துள்ள பெரும் மகிழ்ச்சியை விளிம்புநிலை மனிதர் ஒவ்வொருவருக்கும் வழங்குவோம். பெத்லகேமின் சின்னக் குழந்தையின் அழுகை நம்மை உலுக்கி, நம் பாராமுகம் எனும் போக்கிலிருந்து நம்மை அகற்றி, துன்புறுவோர் குறித்து நம் கண்களைத் திறக்கட்டும். தீவனத்தொட்டியிலும் சிலுவையிலும் தமது ஒன்றுமில்லாத் தன்மையில் ஏழ்மையை வெளிப்படுத்திய இயேசுவைப்போல ஏழ்மை நிலையிலும் ஆதரவற்ற நிலையிலும் இருக்கும் அனைவரையும் அரவணைத்துக்கொள்வோம். தீவனத்தொட்டியில் இயேசு நமக்காகப் பிறந்துள்ளார். நாம் பிறருக்காகப் பிறப்போம்.
அனைவருக்கும்
கிறிஸ்து
பிறப்பு
வாழ்த்துகள்!
ஒவ்வொருவரும் இறைவனின் அழைப்புக்கு இயைந்தவகையில் வாழ்வதற்கு, ‘செவிமடுத்தல், ஆய்ந்துணர்தல் மற்றும் அவற்றை வாழ்வாக்குதல்’ என்ற மூன்று கூறுகள் உதவுகின்றன. நம் ஒவ்வொருவரின் அழைப்பும் வேறுபட்டதாக இருப்பினும், இறைவனிடமிருந்து வரும் அழைப்பின் குரலுக்குச் செவிமடுத்து, ஆய்ந்துணர்ந்து, அவ்வார்த்தைகளை வாழ்வாக்குவதன் வழியாக, நாம் மீட்பின் கருவிகளாக மாறவும் முழு மகிழ்வை நோக்கி நடக்கவும் உதவி பெறுகிறோம்.
இன்று
திருவருகைக் காலம் நான்காம் ஞாயிறு. இறைவனின் மீட்புத் திட்டத்தில் திரைக்குப் பின்னால் இருந்து செயல்பட்டவராக, தன்னை எவ்விதத்திலும் முன்னிலைப்படுத்திக்கொள்ளாத
நேர்மையாளரான புனித யோசேப்பு இன்றைய நாளின் கதாநாயகராகிறார். இன்றைய மூன்று வாசகங்களுமே இறைவனின் திருச்சொற்களுக்குச் செவிமடுத்து வாழ நம்மை அழைக்கின்றன.
சிரியாவும்
இஸ்ரயேலும் யூதாவிற்கு எதிராகப் போர் செய்ய முயன்ற காலத்தில் நடந்த நிகழ்வை இன்றைய முதல் வாசகம் விவரிக்கின்றது. சிரியாவும் இஸ்ரயேலும் அசீரியாவிற்கு எதிராகப் போர் தொடுக்க முயன்றபோது, யூதாவையும் தங்களுடன் சேருமாறு கேட்டனர். ஆனால், அதற்கு யூதாவின் அரசன் ஆகாசு மறுக்கவே, இஸ்ரயேல் நாட்டு அரசர் பெக்காவும் சிரியா நாட்டு அரசர் இரட்சினும் (2அர 16:5; எசா 7:1) யூதாவின்மீது போர் தொடுத்து அதை வீழ்த்த முயன்றனர். இதனால் அரசர் ஆகாசும் நாட்டு மக்களும் பதற்றமடையவே (7:2), ஆண்டவர் எசாயா வழியாக, “நீ அமைதியாய் இரு;
அஞ்சாதே” (7:4) என்றும்,
“அவர்களது திட்டம் நிலைத்து நிற்காது; அது ஒருபோதும் நிறைவேறாது” (7:7) என்று
ஆகாசிடம் உரைக்கிறார். எசாயாவின் இவ்வார்த்தைகள் ஆகாசுக்கு ஆறுதல் அளித்திருக்கவேண்டும். ஆனால், அவர் ஆண்டவருடைய வார்த்தைகளை நம்ப மறுத்து, அசீரிய அரசர் மூன்றாம் திக்லத் பிலேசரின் உதவியை நாடுகின்றார் (2அர 16:7-9).
பிற
அரசர்களைப்போலவே ஆண்டவர் முன்னிலையில் தீயவராகக் கருதப்பட்ட ஆகாசு, அதிகாரத்தில் நிலைத்திருக்கத் தன் சொந்த மகனையே வேற்றுத் தெய்வங்களுக்குப் பலியாக்கினான் (2அர 16:3). வேற்றுத் தெய்வங்களின் வழிபாடுகளை ஆதரித்தான் (16:4). இது ஆண்டவரின்மேல் அவனுக்கு நம்பிக்கை இல்லை என்பதைக் காட்டுகிறது. எனவே, ஆண்டவருடைய வார்த்தையை மதிக்காமல் அசீரிய அரசரிடம் தஞ்சம் புகுவது இறுதியில் அவனுக்கே எதிராக அமைகிறது (2குறி 28:20-21). ஆண்டவரால் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அவருடைய உதவி எப்போதும் உண்டு. ஆனால், ஆண்டவரின் செயல்களில் நம்பிக்கை வைக்காமல் வேற்று மனிதரில் நம்பிக்கை வைத்தால் அல்லல்கள் அதிகமாகுமே தவிர குறையாது. அரசர் ஆகாசுவின் செயல் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு.
இறைவாக்கினர்
எசாயா ஆகாசிடம் இறைவனிடம் தஞ்சமடையக் கேட்டும், ஆண்டவரே அவனிடம் ஓர் அடையாளத்தைக் கேட்கச் சொல்லியும் அவன் அதைக் கேட்க மறுத்தான் (எசா 7:12). ஆகாசின் இச்செயல் சரியானதுபோலத் தோன்றினாலும் (கடவுளைச் சோதிப்பது ஒரு பாவம் - இச 6:16; மத் 4:7), ஆகாசு ஏற்கெனவே கடவுளின் வாக்கை மறுத்து, அசீரியரின் சொல்லைக் கேட்டதாலோ கடவுளிடம் அடையாளம் கேட்கத் தயங்கினான் என்று புரிந்துகொள்ள முடிகிறது. ஆயினும், உலகிற்கு வரவிருந்த இயேசுவையே ஆண்டவர் அவனுக்கு அடையாளமாய்க் கொடுத்தார் (7:14). ‘இம்மானுவேல்’ எனும்
குழந்தையைப் பற்றிய இறைவாக்கு பலவழிகளில் புரிந்துகொள்ளப்பட்டாலும் மத்தேயு மற்றும் நம்மைப் பொறுத்தவரையில் ‘இம்மானுவேல்’ என்றால்
‘இயேசு ஆண்டவரே’
(மத் 1:25).
கடவுளின்
திருவாக்கிற்குச் செவிகொடாமல் தனது நம்பிக்கையின்மையால் அசீரியாவின் கையாலே மடிந்த ஆகாசுக்கு (எசா 7,17: 8,1-10) மாற்றாக, ஆண்டவருடைய வார்த்தையை ஆழ்ந்து கேட்பவராகவும், அதைத் தியானிப்பவராகவும், நம்பிக்கையின் மாதிரியாகவும் வாழ்ந்த புனித யோசேப்பு நமக்கான இன்றைய மாதிரி.
இறைவனின்
மீட்புத்திட்டம் நிறைவேற தனது தூக்கத்தைத் தொலைத்தவர் யோசேப்பு. “யோசேப்பே, தாவீதின் மகனே, உம் மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்சவேண்டாம். ஏனெனில், அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான்” (மத்
1:20) என்று தனது கனவுகளில் வெளிப்படுத்தப்பட்ட கடவுளின் வார்த்தைகளைத் தீர்க்கமனம் கொண்டு தீவிரமாய்ச் செயல்படுத்தினார். மரியாவோடு திருமண ஒப்பந்தம் நடந்து ஒருசில நாள்களில், மரியா ‘கருவுற்றிருந்தது’ தெரியவரவே,
ஒரு சாதாரண மனிதர் எதிர்கொள்ளும் அத்தனை கேள்விகள் மற்றும் ஐயங்களுக்கு மத்தியில் இறைவனின் மீட்புத்திட்டத்திற்காகத் தன்னையும் கறைபடுத்திக் கொள்ளாமல், கருவில் இயேசுவைச் சுமந்தவராய், கலக்கமுற்ற நிலையில் இருந்த அன்னை மரியாவையும் கறைபடுத்திவிடாமல், திருக்குடும்பத்தின் தூணானார்.
மத்தேயு
நற்செய்தியில் யோசேப்பு மூன்று முறை கனவுகள் வழியாகச் செய்தியைப் பெறுகிறார். முதலில், மரியாவை ஏற்றுக்கொள்ளும்படியாகவும்
(மத் 1:18-24), இரண்டாவதாக, இரவோடு இரவாக மரியாவையும், பச்சிளங்குழந்தை இயேசுவையும் அழைத்துக்கொண்டு எகிப்துக்குச் செல்லும்படியாகவும் (மத் 2:13-14), மூன்றாவதாக, ஏரோது இறந்து விடுகிறான்; எனவே, மீண்டும் இஸ்ரயேல் நாட்டுக்குத் திரும்பும்படியாகவும் (மத் 2:19-21) ஆண்டவரின் தூதரிடமிருந்து செய்தி வருகிறது. முதலில் அவருக்குக் கனவில் கிடைத்த செய்தி நம்பமுடியாத, அதிர்ச்சி தரக்கூடியதாக இருந்தபோதிலும், அது ‘நல்ல செய்தி’ என்று நம்பினார். இரண்டாவதாக, கடினமான சூழல்களிலும் தன்னை வந்தடைந்த கனவுகளை இறைவன் விடுத்த அழைப்பு என்று ஏற்றுக்கொண்ட யோசேப்பு அதை உடனே செயல்படுத்தினார். கனவில் ஆண்டவரின் தூதர் அவருக்குப் பணித்தவாறே ‘தன் மனைவியை ஏற்றுக்கொண்டார்’ (மத்
1:24) என்ற இறைவார்த்தைகள் அவர் ஒரு நேர்மையாளர் என்பதற்குச் சான்றுபகர்கின்றன. ஆகவே, புனித யோசேப்பை மரியாவின் கணவர், இயேசுவின் தந்தை, திரு அவையின் காவலர், கன்னியர்களின் காவலர், குடும்பங்களுக்குக் காவலர், தொழிலாளர்களுக்குக் காவலர், கனவுகளின் காவலர்... எனப் பல வழிகளில் வாழ்த்திப்
பெருமைப்படுத்துகிறோம்.
கடவுள்
இறைவாக்கினரின் வாயிலாகப் பல முறை எச்சரித்தும்
அவற்றிற்குச் செவிமடுக்காத ஆகாசைப் போலல்லாமல் (எசா 7:10-14), தன் கனவில் கூறப்பட்டவற்றை மனதார நம்பிச் செயல்பட்டார் யோசேப்பு. கடவுளை நம்மோடு இம்மானுவேலாகத் தங்கவைத்தார். கிறித்தவ வாழ்வு என்பது கடவுளின் குரலுக்குச் செவிமடுத்து, அதை ஆய்ந்துணர்ந்து, வாழ்வாக்கும் வாழ்வுமுறை என்பதையே புனித யோசேப்பு தந்தையிடமிருந்து நாம் கற்றுக்கொள்கின்றோம். ‘தூங்கும் புனித யோசேப்பு’
எனும் பக்திமிகு வாழ்வுமுறையை உள்வாங்கிய திருத்தந்தை பிரான்சிஸ், “கிறித்தவ வாழ்வு உண்மையிலேயே மிகவும் எளிதானது. இயேசுவே நம் வாயில்; அவர் நம் பாதையை வழிநடத்துகிறார்; அவரின் குரலுக்கு நாம் செவிசாய்க்கவேண்டும்” எனும்
கூற்று உள்ளபடியே எண்ணிப்பார்க்கத்தக்கதே (மறையுரை, 18.04.2026).
திருவிவிலியத்தில்
ஆண்டவரின் திருவார்த்தைகளுக்கு ‘ஆம்’ என்ற பதிலிறுப்பைக் கூறுவோரின் தொடர் ஆபிரகாமில் தொடங்கியது. அவரைத் தொடர்ந்து தலைமைப் பணிக்கு அழைக்கப்பட்ட மோசேவும் இறைவன் மீது கொண்ட நம்பிக்கையால், ‘ஆம்’ என்ற பதிலை அளித்தார். வானதூதரின் செய்திக்கு இளம்பெண் மரியா கூறிய ‘ஆம்’ என்ற பதில், தொடர்ந்து யோசேப்பு, கெத்சமனி தோட்டத்தில் துன்பக் கிண்ணத்தை ஏற்பதற்கு இயேசு கூறிய ‘ஆம்’ என்ற பதில்வரை தொடர்ந்தது. கிறிஸ்து பிறப்பு நெருங்கி வரும் இவ்வேளையில், நாம் ஒவ்வொரு நாளும் இறைவன் நமக்கு விடுக்கும் அழைப்புக்கு ‘ஆம்’ என்று பதிலிறுக்க விரும்புறோமா? அல்லது ஆதாம், ஏவாளைப் போல் நம்மையே மறைத்துக் கொண்டு ‘முடியாது’
என்று கூறப்போகிறோமா? என்ற கேள்வியை இன்று நம்மில் எழுப்புவோம். கடவுளுடைய வார்த்தைகள் நம் வாழ்வைத் தொடுகின்றன, வடிவமைக்கின்றன, தீமையிலிருந்து விடுவிக்கின்றன மற்றும் அவை நம்மில் மகிழ்வை ஏற்படுத்துகின்றன. எனவே, இறைவனின் திருச்சொற்களுக்குச் செவிமடுக்கவேண்டும்
என்பதை மரியா, யோசேப்பின் வாழ்விலிருந்து கற்றுக்கொள்வோம்.
“இந்த உலகம் ஒவ்வொரு நாளும், உனது பிரச்சினைகளுக்குப் பதில்களைத் தந்துகொண்டே இருக்கின்றது. செவிமடுக்கக் கற்றுக்கொள்” என்று
கூறுகிறார் ஓர் அறிஞர். இன்றைக்கு நம்மில் பலர் புரிந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணத்தோடு கேட்பதில்லை; மாறாக, பதில் கூறவேண்டுமென்ற சிந்தனையோடே கேட்கின்றோம். நாம் வாழ்வில் முன்னேறவும், நம் குடும்பங்களிலும் சமூகத்திலும் வாழ்வோர் மகிழ்வான மாண்புடைய வாழ்வு வாழ செவிமடுத்தல், உன்னிப்பாக உற்றுக்கேட்டல் மிகவும் அவசியம். எனவே, ஏழைகளின் குரலுக்கு, இயற்கையின் குரலுக்கு, பிறக்கின்ற பாலன் இயேசுவின் குரலுக்குச் செவிமடுக்கக் கற்றுக்கொள்வோம்.
உண்மையிலே,
நாம் இறைவார்த்தைக்கு மனதார செவிமடுத்து வாழ்ந்தால், அவை நம் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்தாமல் இருக்காது (எசா 55:10-11). ஆம், இறைவனின் வார்த்தைக்குச் செவிமடுத்து, ஆய்ந்துணர்ந்து அதன்படி வாழும் போது நம் வாழ்வும், நம்முடன் வாழ்வோர் வாழ்வும் மகிழ்வாய் அமையும். கிறிஸ்துமஸ் காலத்திலும் புலரும் புத்தாண்டிலும் கடவுளின் வார்த்தையைச் செயல்படுத்தி, அவரை நம்மோடு தங்கவைப்போம்.
ஒவ்வொரு மனிதச் செயலின் அடிப்படை இலக்காக இருப்பது மகிழ்ச்சியே! “மகிழ்ச்சிக்குப் பாதை இல்லை, மகிழ்ச்சியே பாதை” என்பார் புத்தர். “நம் வாழ்வின் நோக்கம் மகிழ்ச்சியாக இருப்பதுதான்” என்கிறார் தலாய் லாமா. மகிழ்ச்சி என்பது ஒருவரின் வெற்றியையும் தோல்வியையும்- நன்மையையும் தீமையையும் சார்ந்ததல்ல; அது மனம் சார்ந்த உணர்வுநிலை. அனைத்தையும் கடந்து வாழும் இறைவனில் ஒருவர் இணைந்துள்ளதால் ஏற்படும் சலனமற்ற உணர்வுநிலை. கிறிஸ்துமஸ் விழாவிற்கு இன்னும் பத்து நாள்கள் இருக்கும் இவ்வேளையில், நாம் மகிழ்ச்சியில் திளைக்கவும், அதில் ஆழப்படவும் திரு அவை இன்று நம்மை அழைக்கின்றது.
இன்று
திருவருகைக் காலத்தின் மூன்றாம் ஞாயிறு. இந்த ஞாயிறை ‘Gaudete Sunday’ அதாவது, ‘மகிழும் ஞாயிறு’ என்று கொண்டாடுகிறோம். மனித சமுதாயம் என்ற குடும்பத்தில் இறைவன் ஒரு குழந்தையாய்ப் பிறக்கவிருப்பதை மகிழ்வுடன் நாம் எதிர்பார்க்க இன்றைய ஞாயிறு நம்மை அழைக்கிறது.
இன்றைய
வழிபாட்டின் தொடக்க வருகைப் பல்லவியில் இடம் பெறும் புனித பவுலின் வார்த்தைகள்: “ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள்; மீண்டும் கூறுகிறேன், மகிழுங்கள்.... ஆண்டவர் அண்மையில் உள்ளார்”
(பிலி 4:4-5). ‘மகிழ்வு என்றால் என்ன?’ கிறிஸ்து பிறப்புப் பெருவிழா நெருங்கிவரும் இவ்வேளையில், மகிழ்வு கண்ணைக் கவரும் வெளிப்புற அலங்காரங்களிலும் ஆடம்பரங்களிலும் இருப்பதாக வர்த்தக உலகம் நம்மீது திணிக்க முயலும் தவறான எண்ணங்களில் விழாமல், இயேசு காட்டும் வழியில் பயணிக்கும்போது அகமகிழ்ச்சி ஏற்படும் என்பதை இன்றைய மூன்று வாசகங்களும் கற்றுத்தருகின்றன.
இரண்டாம்
எசாயா பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், மெசியா காலத்தில் நிகழ இருப்பவை எவை என்பன குறித்து முன்னறிவிக்கின்றன. அசீரியப் படை யூதாமீது படையெடுத்து வந்த பொழுது, இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரிடம் நம்பிக்கை வைப்பதற்குப் பதிலாக, வேற்று நாட்டினரான எகிப்தியரின் உதவியை நாடினார்கள். யாவே ஆண்டவரின் வார்த்தைகளுக்குச் செவிகொடுக்காதது அவர்கள் செய்த குற்றம். மேலும், தாங்கள் ஆண்டவரோடு நெருக்கமாக இருப்பதாகக் காட்டிக்கொண்டார்கள். ஆனால், உண்மையில் அவ்வாறு இல்லை. அவர்களுடைய வழிபாடுகள் வெறும் வெளிவேடங்கள்தாம். எனவேதான் ஆண்டவர் அவர்களைக் கண்டிக்கிறார் (எசா 29:13-14). ஆண்டவருடைய கண்டிப்பு என்பது அவர்களை அழிப்பதற்காக அல்ல; மாறாக, அவர்கள் இறைவன் பக்கம் திரும்பி வருவதற்காகவே.
நம்பிக்கையில்லாத
தன்மை, கடவுளால் கைவிடப்பட்ட உணர்வு, அரசரின் துரோகம், அரசின் பலவீனம், அசீரியரின் அச்சுறுத்தல் மற்றும் வட அரசான இஸ்ரயேலின்
அழிவு, இவற்றிற்கு மத்தியில் சீயோனின் மேன்மைமிகு வருங்காலத்தைப்பற்றி எசாயா எடுத்துரைக்கிறார். வருங்காலத்தில் எருசலேமுக்கு ஆண்டவருடைய மீட்பு உண்டு என்ற நம்பிக்கையைக் கொடுக்கிறார். பாலைநிலம் போல் ஆகிவிட்ட ஏதோமில் மறுபடியும் வாழ்வு துளிர்க்கும்; அமைதி திரும்பும்; மனிதர்களின் மனம் மகிழ்ச்சியால் நிரம்பும் (எசா 35:1-2) என்ற நம்பிக்கை அவர்களுக்குக் கொடுக்கப்படுகிறது.
‘பார்வையற்றோர் பார்வை பெறுவர், காது கேளாதோர் கேட்பர், கால் ஊனமுற்றோர் மான்போல் துள்ளிக் குதிப்பர்; வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்’ என எசாயா முன்னறிவித்துள்ள
வாக்குகள் (35:5-6), மெசியாவின் காலத்து அடையாளங்கள். எசாயாவின் இந்தக் கனவு இயேசு கிறிஸ்துவில் நிறைவேறுகிறது. மேலும், ‘ஒடுக்கப்பட்டோரின் நிலை மாறும். மக்கள் ஆண்டவரிடம் திரும்பி வருவர்; அவரில் அகமகிழ்வர். அன்பும் அமைதியும் நீதியும் நேர்மையும் கொண்ட ஒரு புதிய சமுதாயம் உருவாகும்’
(29:17-19) எனும் எசாயாவின் வாக்குகள் இயேசுவில் நனவாகின்றன. இதை நற்செய்தியில் நாம் வாசிக்கிறோம்.
திருமுழுக்கு
யோவான் தனது இறைவாக்குப் பணியின் விளைவாகச் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தன் சீடரை இயேசுவிடம் அனுப்பி இயேசுவின் பணியைப் பற்றி உறுதி செய்துகொள்கிறார். “வரவிருப்பவர் நீர்தாமா? அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்கவேண்டுமா?” (மத் 11:3) எனும் திருமுழுக்கு யோவானுடைய சீடர்களின் கேள்வி, திருமுழுக்கு யோவான் இயேசுவை அறியாததாலோ அல்லது நம்பாததாலோ எழுந்ததல்ல; மாறாக, தன்னுடைய சீடர்களே இயேசுவின் உண்மை நிலையைக் கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டும் எனப் புரிந்துகொள்ளலாம். இயேசு சீடர்களின் கேள்விக்கு வெளிப்படையாகப் பதில் கூறாமல், மெசியாவின் பணிகளைப் பற்றி ஏற்கெனவே கூறப்பட்ட இறைவாக்கின் நிறைவே தமது பணி என்று பேசுகிறார் (எசா 35:5-6). அதாவது, தம் வல்ல செயல்களால் நோயுற்றோர் நலம்பெறுவதே தமது நற்செய்திப் பணி என்று கூறுகிறார்.
யோவானின்
சீடர்கள் சென்றபின் இயேசு யோவானைப் பாராட்டிப் பேசுகிறார். நாணலும் மெல்லிய ஆடைகளும் திருமுழுக்கு யோவான் வாழ்ந்த யோர்தான் பாலைநிலத்தையொட்டிய அரச மாளிகைச் சொகுசுகளின் அடையாளங்கள். ஆனால், யோவானுக்கு இவற்றில் ஈடுபாடு இல்லை (மத் 11:8). அவர் அரச மாளிகையைக் கண்டித்து இறைவாக்கு உரைத்தவர் (11:9). மெசியாவின் வருகைக்காக மக்களைத் தயாரித்தவர் (11:10). அவர் இயேசுவின் முன்னோடி என்ற காரணத்தால் இறைவாக்கினருக்கும் மேலானவர். இதனால் அவர் மனிதருள் சிறந்தவர் (11:11) என இயேசு திருமுழுக்கு
யோவானைக் குறித்துச் சான்று பகர்கிறார்.
திருமுழுக்கு
யோவான்தான் வரவேண்டிய எலியா என மக்கள் கருதி,
அவரை அவர்கள் தேடி வந்தபோது, அத்தருணத்தைத் தனக்கு ஏற்றதாக்கிக் கொண்டு, பெயரும் புகழும் பெறுவதற்குப் பதில், தான் உலக மீட்பர் அல்லர்; அந்த மீட்பர் வரும் வழியைக் காட்டும் கைகாட்டி மட்டுமே என்பதைத் திருமுழுக்கு யோவான் வெளிப்படையாகக் கூறினார். நெருக்கடி, அடக்குமுறை, கைது, கொலை இவற்றிற்கு மத்தியிலும் ஆண்டவருக்குள் இணைந்து வாழ்பவரால் மகிழ்ந்திருக்க முடியும் என்பதற்குத் திருமுழுக்கு யோவான் சிறந்த எடுத்துக்காட்டு.
இன்றைய
இரண்டாம் வாசகத்தில் யாக்கோபு கூற விளையும் செய்தியும் இதுதான். ஆங்கிலத்தில் ‘பர்ன் அவுட்’
(burn Out) என்ற ஒரு சொல் உண்டு. ஒரு நபர் நிறைய வேலைகள் செய்ய முயன்று மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் மிகவும் சோர்ந்து வீழ்வதை அல்லது உடலும் மனமும் பாதிக்கப்படுவதைக் குறிக்கும் சொல் இது. எப்போதுமே பரபரப்பாக வாழும் நம்மை, சற்று நிதானமாகச் செயல்பட்டு, பொறுமை, அன்பு, நம்பிக்கை ஆகிய பண்புகள் நம்மை மகிழ்விற்கு இட்டுச்செல்கின்றன என்கிறார் யாக்கோபு.
தொடக்கத்
திரு அவை வேதகலாபனை மற்றும் நெருக்கடியை அனுபவித்த வேளையில் எழுதப்பட்ட இந்நூல் பொறுமையோடு இருந்து இயேசுவை ஏற்றுக்கொள்வதா? அல்லது உலகத்தோடு சேர்ந்து இயேசுவை மறுதலிப்பதா? என்ற முக்கியக் கேள்விக்கு விடையளிக்கிறது. “பொறுமையோடிருங்கள்; உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துங்கள்; ஏனெனில், ஆண்டவரின் வருகை நெருங்கி வந்துவிட்டது” (யாக்
5:8) என யூதக் கிறித்தவர்களைத் திடப்படுத்துகிறார் யாக்கோபு. அவரின் போதனை நமக்கும் பொருந்திச்செல்லும்.
ஒருவர்
துன்புறுத்தப்படும்போது
முதலில் இழப்பது பொறுமையே. தொடக்கக் காலத் திரு அவை தனது வேதகலாபனைக் காலங்களிலும் முதலில் இழந்தது பொறுமையே. அதனுடைய நீட்சிதான் ‘ஒருவர் மற்றவருக்கு எதிராக முறையிடுதல்’ (5:9). எனவேதான்
‘துன்பத்தைத் தாங்குவதில் பொறுமையைக் கடைப்பிடிக்க... (5:7,8,10)
என்று மூன்று முறை அழைப்புவிடுக்கும் யாக்கோபு, பழைய ஏற்பாட்டு இறைவாக்கினர்களான எசாயா, எரேமியா, ஆமோஸ், ஓசேயா, யோனா போன்று ஆண்டவருக்குள் மகிழ்ந்து வாழ அழைக்கிறார்.
இன்றைக்கு
மன அழுத்தம் நிறைந்த பரபரப்பான உலகில் வாழும் நாம் சந்திக்கும் பிரச்சினைகளுடன் எப்படி மகிழ்ந்திருக்க இயலும்? பெரும்பாலும் நமக்கு நம்மிடம் இல்லாதவை குறித்த வருத்தம் அதிகமாக இருக்கிறதே தவிர, இருப்பதைக் குறித்த மகிழ்ச்சி இல்லை. ‘உள்ளதை அனுபவித்து மகிழ்பவரே உண்மையான செல்வந்தர்’ என்பது
யூதப் பழமொழி. முதலில், இல்லாதவருடன் இருப்பதைப் பகிர்வது, நமது நன்மைகளைப் பிறருடன் பகிர்ந்து அவர்கள் வாழ்வில் மாற்றம் காண்பதே உண்மையான மகிழ்ச்சியின் காரணிகள்.
இரண்டாவதாக,
போர்களாலும் வன்முறைகளாலும் மதவாத அடக்குமுறைகளாலும் அறமற்ற வாழ்வுமுறையாலும் இயற்கை அழிப்புகளாலும் இந்த உலகம் கெட்டுவிட்டது என்ற நம்முடைய எதிர்மறை எண்ணங்கள், மகிழ்வை நம்மிடமிருந்து பறித்துவிடுகின்றன. துன்பங்கள், இழப்புகள், சோதனைகளுக்கு மத்தியிலும் நம்மைச் சுற்றி வாழும் நல்லவர்கள், சுற்றி நிகழும் நல்ல நிகழ்வுகளைக் கணக்கில் கொண்டு மகிழ்வோம்.
நிறைவாக,
இறைவேண்டல் செய்வதற்கும், நன்றியுணர்வோடு வாழ்வதற்கும், இறைவனின் வழித்தடத்தில் அவரோடு பயணிக்கவும் நேரம் ஒதுக்குவோம். நம்மீது கொண்ட அன்பினால் மனிதனாகப் பிறந்து, நம்மோடு இணைந்த இறைவனோடு நாமும் இணையும்போது, மகிழ்ச்சி இயல்பாகவே நம் வாழ்வில் வெள்ளமெனப் பாய்ந்தோடும்.
திருவருகைக் காலம் என்பது நம் உள்ளங்களில் பிறக்கவிருக்கும் பாலன் இயேசுவுக்காக நம்மையே தயார் செய்யும் காலம். இது கிறிஸ்து பிறப்பின் உண்மைப்பொருளை உணர்வதற்கு நமக்குத் தரப்பட்டுள்ள ஒரு நல்ல காலம். “பாவங்களை அறிக்கையிட்டு, கடவுளின் மன்னிப்பை வரவேற்று, மனம் புண்படச் செய்தவர்களிடம் மன்னிப்புக் கேட்டு அக விடுதலையை அனுபவிக்க அருள்தரும் காலமே திருவருகைக் காலம்” என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ் (டிச. 4, 2022). திருவருகைக் காலத்தின் இரண்டாவது ஞாயிறான இன்று நமக்கு வழங்கப்பட்டுள்ள வாசகங்கள், இறை-மனித உறவில் உள்ள பிணக்குகளை மனமாற்றத்தின் வழியாகச் சரிசெய்து சமத்துவத்தைப் பேணவேண்டும் என்று அழைப்புவிடுக்கின்றன.
இன்றைய
வாசகங்களில் இறைவாக்கினர் எசாயாவும் திருமுழுக்கு யோவானும் மனமாற்றத்தின் வழியாகப் பெறப்போகின்ற புதிய வாழ்வைக் குறித்து உரையாடுகின்றனர். தம்மை மீட்க வரவிருக்கும் மெசியாவின் வருகைக்குக் கரடுமுரடுமானதும் கோணலுமாணலுமான, குண்டும்குழியுமான பாதையைச் செம்மைப்படுத்த மனம்வருந்தி மனமாற்றம் பெற இறைவாக்கினர் எசாயா அழைப்புவிடுக்கிறார். இயேசுவின் பணிவாழ்வுக்கு முன் மக்களைத் தயாரித்த திருமுழுக்கு யோவான் இயேசுவின் பிறப்பிற்கு நம்மையும் தயாரிக்கிறார்.
முதல்
வாசகம் இரண்டு பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. முதல் பகுதி, ஒரு நீதியுள்ள அரசரின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதையும், இரண்டாவது பகுதி, மெசியாவின் வருகையில் வெளிப்படும் உண்மையான சமத்துவம் எது என்பதையும் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.
ஒரு
நீதியுள்ள அரசரின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பது பற்றி எசாயாவின் முதல் பகுதி (11:1-5) நமக்கு விவரிக்கின்றது. ஈசாய் என்பவர் தாவீதின் தந்தை. எசாயாவின் வார்த்தைகள் (11:1) ஈசாயின் மகன் தாவீதையும், அவரது வழிமரபில் தோன்றிய இயேசு கிறிஸ்துவையும் குறிப்பதாக உள்ளன. இவர் உண்மையில் கடவுளின் மனிதரே. அடிமரத்திலிருந்து தளிர் வருதல் மற்றும் வேரிலிருந்து கிளை வருதல் என்பது அழிவிலிருந்தும் வாழ்வைத் தரக்கூடியவர் கடவுள் என்னும் பொருளைக் காட்டுகிறது. தாவீதின் வழி மரபில் வந்தவர்கள் எல்லாரும், தாவீதுக்குக் கடவுள் கொடுத்த வாக்குறுதிகளைப் பெறாமலே போயினர். ஆனால், இனி வருபவர் புதிய தாவீதாக அவர் தந்தையிலிருந்து வருவார். வெட்டி வீழ்த்தப்பட்ட யூதாவிலிருந்து நீதியுள்ள அரசர் வருவார். ஆண்டவர் தாவீதுக்குக் கொடுத்த வாக்குறுதி நிலைநிறுத்தப்படும் என எசாயா முன்னறிவிக்கிறார்.
அரசர்
தாவீதின் காலத்திற்குப் பிறகு தாவீதைப்போல ஓர் அரசரை மக்கள் எதிர்பார்த்தார்கள். இந்த எதிர்பார்ப்பே பின்னாளில் மெசியாவைப் பற்றிய எதிர்பார்ப்பிற்கு அடிப்படையாக அமைந்தது. இப்பகுதியில் எசாயா, ஆண்டவரின் ஆவியின் பலன்களாக, ஆறு நற்பண்புகளைக் குறிப்பிடுகின்றார். அவை, ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத்திறன், ஆற்றல், நுண்மதி மற்றும் ஆண்டவரைப் பற்றிய அச்ச உணர்வு. இப்படியான பண்புகள் கொண்ட அரசன் இப்போது இல்லை எனவும், நேர்மையையும் உண்மையையும் இடைக்கச்சையாக அணிந்துள்ள அரசர் தோன்றுவார் எனவும் எசாயா முன்பே உணர்ந்திருந்தார் போலும்.
இன்றைய
முதல் வாசகத்தின் இரண்டாம் பகுதி, நீதியுள்ள அரசரின் வருகையின்போது நிலவும் சமத்துவத்தைப்பற்றி எடுத்துரைக்கிறது. மெசியாவின் வருகையில் ஒரு புதிய ஆட்சி மலரும்; அது ஒரு பொற்காலமாக இருக்கும்; அன்பும் அமைதியும் சமத்துவமும் மக்களிடையே நிலவும். இது நிறைவேறும் என ஒரு மாற்றுச்
சமுதாயக் கனவு காண்கிறார் எசாயா (11:6-8)
ஓநாய்-செம்மறி ஆடு, சிறுத்தைப் புலி-இளம் ஆடு, சிங்கக்குட்டி-கன்று, பசு-கரடி என எசாயா வரிசைப்படுத்தும்
விலங்குகள் சேர்ந்து வாழமுடியாதவை. தொடர்ந்து கரடி,
பசு மாட்டோடு மேயும்; சிங்கம் மந்தையைப்போல் வைக்கோல் புசிக்கும்; பால்குடி மறவாத குழந்தை விரியன் பாம்பின் வளைக்குள் கையைவிடும் என மெசியாவின் ஆட்சியின்
சிறப்பை அடையாள ரீதியாகக் குறிப்பிடுகின்றார் எசாயா. எதிரும் புதிருமான தன்மைகொண்ட விலங்கினங்கள் தங்கள் கொடிய இயல்பை விடுத்து, படைப்பின் தொடக்கத்தில் கடவுள் ஏற்படுத்திய இறை-மனித-உயிரின சுமூக உறவிற்குத் திரும்புவர் என்ற ஆழமான அர்த்தத்தை எசாயா இங்கே கொடுக்கிறார். மனித மனங்களில் புதைந்துகிடக்கும் சமத்துவம், சகோதரத்துவம், கருணை, அன்பு என்ற இறைத்தன்மை மேலோங்கி வரவேண்டும் என்பதே எசாயாவின் கனவு. எசாயா குறிப்பிடும் இந்த இயல்புநிலை மாற்றம், மனமாற்றம் நீதியுள்ள அரசரின் வருகையின்போது மீண்டும் உருவாகும் என நம்புகிறார்.
எசாயா
கண்ட கனவை இன்றைய நற்செய்தி வாசகத்தில் திருமுழுக்கு யோவான் வெளிப்படுத்துகிறார். திருமுழுக்கு யோவான் எளிமையான வாழ்வு வாழ்ந்தவர்; “எனக்குப் பின்வருபவரின் மிதியடி வாரை அவிழ்க்கக்கூட தகுதியற்றவராய்...” (யோவா 1:27) தாழ்மையின் நிலையை ஏற்றவர்; மெசியாவின் வருகைக்காக மக்களைத் தயாரித்தவர். ஒட்டக மயிராடை, தோள்கச்சை, வெட்டுக்கிளி, காட்டுத் தேன் போன்றவற்றைக் குறிப்பிட்டு, அவரை இரண்டாவது எலியாவாகச் சித்தரிக்கின்றார் மத்தேயு.
இன்றைய
நற்செய்தியில் யோவான், “மனம் மாறுங்கள்; ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது” (மத்
3:2) எனப் போதிக்கிறார். வெளி வேடத்திற்குப் பெயர்போன பரிசேயர்களும் சதுசேயர்களும் தாங்கள் மனம்மாறத் தேவையில்லை என்ற மனநிலையோடு அவரை அணுகியபோது அவர் அவர்களுக்குச் சவால் விடுத்தார். இத்தகைய மனநிலையும் இரட்டைவேடமும் ஒரு புதிய வாழ்வைத் தொடங்குவதற்கும், கடவுளின் அருளைப் பெற்றுக் கொள்வதற்குமான வாய்ப்பை வழங்காது. எனவே, கடவுளை வரவேற்பதற்கு ‘மனம் வருந்துதல்’ மிக
முக்கியம். ஆகவேதான் திருமுழுக்கு யோவான் ‘மன மாற்றத்தை அதற்கேற்ற
செயல்களால் காட்டுங்கள்’ என்கிறார்
(மத் 3:8).
‘மனமாற்றம்’
(Conversion) என்ற வார்த்தையின் பொருள் வாழ்க்கைமுறை மாற்றம் என்பதாகும். தீமைகள் நிறைந்த உலகில் தீமைகளைத் தவிர்த்தல் மட்டுமல்லாது, தீமைகளை
எதிர்த்து வாழும் புதிய வாழ்க்கை முறையே மனமாற்றம் ஆகும். அதாவது, தீய பிரிவினை நாட்டங்கள் மறைவதும் நீதி, உண்மை, அன்பு, அமைதி, சமத்துவம், சகோதரத்துவம், பகிர்தல் எனும் இறையாட்சித் தன்மையில் ஒளிர்வதுமே உண்மையான மனமாற்றம். மனமாற்றத்திற்கான கிரேக்க வார்த்தையான ‘Metanoia’ எனும் சொல்
பாவங்களையும் பாவ வாழ்வையும் விட்டு விலகுவது மட்டுமல்ல, தீய வழிகளை விட்டு விட்டு ஆண்டவரை நோக்கி நெருங்கி வருவதைக் குறிக்கிறது.
அடிப்படையில்
மனமாற்றம் என்பது இரு பொருள் கொண்டது. ஒன்று, தீமைகளைத் தவிர்த்து நன்மை செய்வது; மற்றொன்று, பாவ வாழ்விலிருந்து விடுபட்டு வாழும் உயிருள்ள கடவுளை நோக்கித் திரும்பி வருவது. எனவே, இயேசுவின் வருகையை எதிர்நோக்கித் தயாரிப்புடன் காத்திருக்கும் இத்திருவருகைக் காலத்தில் நாம் மனமாற்றத்தின் வழியே இயேசுவை நோக்கித் திரும்புவதே இறையாட்சியில் பங்குபெற, இயேசுவைச் சந்திக்கத் தகுந்த, சரியான வழியாகும்.
ஆகவே,
எசாயா மற்றும் திருமுழுக்கு யோவான் கண்ட ‘மாற்றுச் சமுதாயம்’
என்பது நீதியும் நேர்மையும் அன்பும் அறனும் அமைதியும் எளியவரை ஏற்றலும் இயற்கையோடு இணைந்து வாழும் வாழ்க்கை முறையாகும். அத்தகைய ஒரு சமுதாயத்தை உருவாக்க நாம் தொடர்ந்து உழைக்க வேண்டியுள்ளது. நாமும் நமது அன்றாட வாழ்வில் வேறுபாடுகளைக் களைந்து, அனைவரும் ஒன்றிணைந்து வாழும் இறையாட்சிக்கான இயேசுவின் கனவை நனவாக்க முற்படவேண்டும்.
இன்றைய
இரண்டாம் வாசகத்தில் ஒற்றுமையின் தேவையையும் நீதியையும் பற்றி விளக்கும் பவுல், இயேசுவிற்கு ‘யூதரன்றோ யூதரல்லாதவரென்றோ இல்லை; அவர் அனைவரையும் ஏற்றுக்கொண்டிருக்கிறார். எவ்விதத்திலும் தகுதி இல்லாத பாவிகளாகிய நம்மை அவர் ஏற்றுக்கொண்டது போல, நாமும் நமது வாழ்வின் எல்லா நிலைகளிலும் பிறரை ஏற்றுக்கொள்வது மட்டுமே கடவுளைப் பெருமைப்படுத்தும்’ என
எடுத்துரைக்கிறார்.
ஆகவே,
பழைய ஏற்பாட்டு மக்கள் எசாயாவின் வார்த்தைகளை நம்பி மெசியாவின் வருகைக்குத் தங்களையே தயாரித்ததுபோல, ஆண்டவரின் இரண்டாம் வருகைக்காகக் காத்திருக்கும் நாம் பழைய பாவ வாழ்க்கை முறையை விலக்கி, புதிய வாழ்க்கை முறையைத் தழுவிக்கொள்வோம். நல்லவை நடக்கும் என்ற எதிர்பார்ப்புடன் நாம் தொடங்கியுள்ள திருவருகைக் காலத்தில் மீட்பரின் வருகையை, அர்த்தமற்ற வழிகளில் எதிர்பார்க்காமல், தனக்குள் தொடங்கும் மாற்றங்களை ஏற்றுக்கொண்ட அன்னை மரியாவைப்போல மாசற்ற வழியில் பயணிப்போம். அமல அன்னையின் பரிந்துரையாலும் வழிநடத்துதலாலும் நாம் திருவருகைக் காலத்தில் இறைவனின் வருகையையும், கிறிஸ்துமஸ் பெருவிழாவின் முழுப்பொருளையும் உணர்ந்து வாழும் வரம் வேண்டுவோம்.
“மனம் மாறுங்கள்; ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது!” என்ற தொனியில் ஒலிக்கும் திருமுழுக்கு யோவானின் குரல் இன்று நம் செவிகளுக்கு எட்டட்டும்!