புனித இஞ்ஞாசியார் தனது நண்பர் புனித சவேரியாரை இந்தியாவிற்கு நற்செய்திப் பணிக்கு அனுப்பியபோது அவர் கூறிய வார்த்தைகள்: “சவேரியாரே செல்லுங்கள், உலகம் முழுவதையும் இறைவன்பால் பற்றியெரியச் செய்யுங்கள்.” புனித சவேரியாரின் நற்செய்தி அறிவிப்புப்பணி எவ்வளவு பெரிய மாற்றத்தை உலகமெங்கிலும் கொணர்ந்தது என்பதையும், அவரது நற்செய்தி அறிவிப்பே ஆயிரக்கணக்கான மறைப்பணியாளர்களைப் பெறுவதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது என்பதையும் நாம் மறுக்க இயலுமோ? இயேசு கிறிஸ்துவின்மேல் கொண்ட பேரார்வத்தால் வெறும் பத்து ஆண்டுகளில் தனது நற்செய்தி அறிவிப்புப்பணியால் இந்த உலகையே புரட்டிப்போட்டவர் புனித சவேரியார்.
உலகெங்கும்
சென்று நற்செய்தியை அறிவிப்பது நம் கடமை. திருத்தந்தை பிரான்சிஸ், ‘நற்செய்தி அறிவிப்பு என்பது திரு அவையின் அடிப்படை அழைப்பு’ என்றும், ‘திரு அவையின் தனி அடையாளம்’
என்றும், ‘திரு அவையின் அனைத்துப் பணிகளுக்கும் முன்னோடி’
என்றும் கூறுகிறார். மேலும் அவர், “நற்செய்தி அறிவிப்புப்பணியே நம் திரு அவையின் இதயமாக இயங்குகிறது” என்கிறார்.
நற்செய்தி அறிவிப்புப்பணி என்பது நாம் இயேசுவுடன் கொண்டிருக்கும் உறவிலே மலரக்கூடியது. ஆகவே, இயேசுவோடு உறவில் வாழும் நாம் அனைவருமே நற்செய்தி அறிவிக்க அழைக்கப்பட்டிருக்கின்றோம்.
ஆண்டின்
பொதுக்காலத்தின் 14-ஆம் ஞாயிறை இன்று தொடங்குகின்றோம். இயேசு தரும் அழைப்பை ஏற்று, மேற்கொள்ள வேண்டிய நற்செய்தி அறிவிப்புப் பணியைப் பற்றி இன்று சிந்திப்போம்.
நற்செய்தி
அறிவிப்பு என்பது வற்றாத உயிருள்ள ஒரு நீரூற்றாக நம் உள்ளத்தில் பாய்ந்தோடவேண்டும். அது நம் உள்ளத்தைப் பற்றி எரியச் செய்யவேண்டும் (காண். எரே 20:9). இப்பணி கிணற்று நீராய்த் தேங்கிப்போய்விடாமல் ஆற்றுநீராய்ப் பெருக்கெடுத்துப் பாய்ந்தோட வேண்டும்; அதன் பயன் எல்லா மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதுதான் இயேசுவின் முழுவிருப்பம். எனவேதான், எல்லா ஊர்களுக்கும் குறிப்பாக, பிற இனத்து மக்களுக்கும் நற்செய்தி பறைசாற்றப்பட வேண்டும் என்பதற்காக 72 பேரை நியமிக்கிறார் (லூக் 10:1). 72 சீடர்களை
நற்செய்தி அறிவிக்க அனுப்புவதற்குமுன் மூன்று மிக முக்கிய அறிவுரைகளை நிபந்தனைகளாக இயேசு வழங்குகிறார்.
முதல்
நிபந்தனையாக, ‘ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டிகளை அனுப்புவதுபோல் தம் சீடர்களை அனுப்புகிறார் இயேசு’
(10:3). இயேசுவின் இவ்வாக்கு, நற்செய்தி அறிவிப்புப்பணியில் ஏற்படும் இடரையும் எதிர்ப்பையும் முன்காட்டுகிறது. இயேசுவின் சீடத்துவம் சவால் நிறைந்தது என்பது இங்குத் தெளிவுபடுத்தப்படுகிறது. வலிகளுக்கு மத்தியிலும் நற்செய்தி அறிவிப்புப்பணி என்பது நிறுத்தப்படாமல் தொடர்ந்துகொண்டே இருக்கவேண்டும் என்பதுதான் இயேசு நம்முன் வைக்கும் கனவு, அழைப்பு.
மறவ
நாட்டு மண்ணில் நற்செய்தி அறிவித்து உயிர்த்தியாகம் செய்த புனித அருளானந்தர், நாஞ்சில் மண்ணில் உயிர்த் தியாகம் செய்த புனித தேவசகாயம் போன்றோரின் தியாகமிக்க வாழ்வு நற்செய்தியை எம்முறையில் அறிவிப்பது? அதனை எவ்வழியில் வாழ்ந்து காட்டுவது? எப்படி அதற்குச் சான்று பகர்வது? என்பதற்கு வழிகாட்டி நிற்கிறது. இவர்களின் புனிதமிக்க வாழ்வு ஆயிரக்கணக்கான இறையழைத்தல்களைத் திரு அவைக்குக் கொணர்ந்தது. ஆக, நற்செய்தி அறிவிப்பு என்பது சவாலானது, வலிகள் நிறைந்தது, வாழ்வைத் துறக்கத் தயார் நிலையில் இருப்பது என்ற மூன்று முக்கியக் கூறுகளை இயேசு நமக்கு உணர்த்துகிறார். நற்செய்தி அறிவிப்போரின் துணிவும் வீரமும் தியாக வாழ்வும் கடவுள்மீது கொண்டுள்ள நம்பிக்கையில் விளைகிறது. எனவேதான் இயேசு இரண்டாவது நிபந்தனையாக, “பணப்பையோ வேறு பையோ மிதியடிகளோ எதுவும் நீங்கள் எடுத்துச்செல்ல வேண்டாம்”
(10:4) என அறிவுரை வழங்குகின்றார்.
‘எதுவுமே எடுத்துச்செல்ல வேண்டாம்’
என இயேசு கூறும் கட்டளை நமது நடைமுறைக்கு ஒத்துவராத ஆலோசனையாக இருக்கலாம். இன்றைய நம் காலச்சூழலில் நற்செய்தி அறிவிப்பு என்பதே ஓர் எதிர்பார்ப்புடன்தான் செய்யப்படுகிறது என்பதை யாரும் மறுக்க இயலாது. நற்செய்தி அறிவிப்பு என்பது ஒரு பயன்கருதாப் பணி என்பதைவிட, பயன்கருதும் ஒரு பணியாக மாறிவிட்டது என்பதுதான் உண்மை. இன்று பணத்தை மையமாகக் கொண்டுதான் நற்செய்திப்பணி ஆற்றப்படுகின்றது. நற்செய்தி அறிவிப்புப்பணிகளில் இயேசுவே மையம் என்ற எண்ணம் நம்மில் மேலோங்கும்போதுதான் நாம் நற்செய்தி அறிவிப்புப்பணியின் மேன்மையை உணர முடியும். நம்முடைய நற்செய்தி அறிவிப்புப்பணியில் பொருளாசை மையம்கொள்ளும்போது விளைவது பொறாமையும் போட்டிகளும் பிளவுகளும் பிணக்குகளும்தான். “உலக இன்பங்களும், பொருளாதாரச் செழிப்பும் எவ்வளவு முக்கியமானதாக இருந்தாலும், நம் இதயங்களுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவர முடியாது. செல்வம் ஏமாற்றத்தினை அளிக்கிறது. வறுமையின் துயரமான சூழ்நிலைகளுக்கு வழிவகுக்கின்றது. எல்லாவற்றிற்கும் மேலாக, கடவுள் இல்லாமல் வாழ முயற்சிக்கும்போது வறுமையே பிறக்கின்றது” என்கிறார்
திருத்தந்தை 14-ஆம் லியோ (9-வது உலக வறியோர் நாள், 14.06.2025).
நற்செய்தி
அறிவிப்பில் ‘வெறுங்கையோடு செல்லுங்கள்’ எனக்
கூறும் இயேசு, அமைதியைக் கொடுக்கச் சொல்கிறார். “நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், ‘இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக!’ என முதலில் கூறுங்கள்” (10:5) என்கிறார்.
ஒரு குடும்பத்தைச் சந்தித்து அவர்களோடு உறவாடும்போது முதன்முதலில், தாம் இறைவனுடைய பணியாள் என்ற முறையில் அவர்களுக்கு இறை அமைதியை அளிக்கவேண்டும். பின் அவர்களுடைய நிலைமையையும் தேவைகளையும் அறிந்து, அவர்களுடைய இன்ப துன்பங்களில் தம்மை ஒன்றுபடுத்திக்கொண்டு, இறையாட்சியின் மதிப்பீடுகளான அன்பு, அமைதி, ஒற்றுமை முதலியவற்றை அவர்கள் வாழ்ந்துகாட்ட அவர்களைத் தூண்ட வேண்டும். அவர்கள் தூய ஆவியாரின் வழிகாட்டுதலுடன் தங்கள் வாழ்வை வடிவமைத்துக் கொள்ள உதவிடவேண்டும்.
இயேசு
கூறுகின்ற இந்த மூன்று நிபந்தனைகளையும் நடைமுறை வாழ்வில் கடைப்பிடிப்பது மிகவும் சிரமமே. இவ்வுலகைச் சார்ந்த வழிகளில் மட்டுமே சிந்திப்பதால், உயர்ந்த கனவுகள் சிறகடித்துப் பறக்க முடியாமல், நமக்குள் சிறைப்படுத்தப்படுகின்றன. எதிர்ப்புகளைச் சந்திக்கும்போது, கோபமும் வெறுப்பும் கசப்புணர்வுமே மேலோங்கி நிற்கின்றன. இந்தச் சூழலில் நமது நற்செய்தி அறிவிப்புப்பணி எப்படி அமையலாம்?
முதலில்,
இன்றைய இரண்டாம் வாசகத்தில் தூய பவுல் கலாத்தியத் திரு அவைக்குக் குறிப்பிடுவதுபோல பணம், பதவி, பகட்டு, வீண்பெருமை போன்ற உலக ஆடம்பர வலையில் நாம் சிக்கிக்கொள்ளாமல், ‘சிலுவையே எனது வாழ்வின் ஆதாரம்’,
‘சிலுவையே எனது பெருமை’ என்ற மனநிலையில் வாழவேண்டும். நற்செய்தி அறிவிப்போர் ஆண்டவரைக் குறித்தே பெருமை பாராட்ட வேண்டும் (1கொரி 1:31). புனித பவுல் குறிப்பிடுவதுபோல, நற்செய்தி அறிவிப்போர் தன்னைப்பற்றி எடுத்துரைக்காமல் கிறிஸ்து இயேசுவைப் பற்றி எடுத்துரைப்பவர்களாக இருக்க வேண்டும் (2கொரி 4:5). நமது நற்செய்தி அறிவிப்புப் பணியில் சிலுவையில் அறையுண்ட இயேசுவையே நமது பணியின் இலக்காகவும், பாதையின் விளக்காகவும் கொண்டு பயணிக்க வேண்டும் (கலா 6:14).
இரண்டாவதாக,
நற்செய்தி அறிவிப்பின் மையமாக இருப்பவர்கள் ஏழைகள். அவர்களே நற்செய்தி அறிவிப்பைப் பெற்றுக்கொள்ளும் முதன்மையானவர்களாகவும் இருக்கின்றார்கள். திருத்தந்தை பிரான்சிஸ் ‘நற்செய்தியின் மகிழ்ச்சி’
என்னும் திருத்தூது மடலில் குறிப்பிட்டுள்ளதுபோல, ஏழைகளுக்குக் கடவுளுடனான நட்புறவு, ஆசி, இறைவார்த்தை, வழிபாட்டுக் கொண்டாட்டம் ஆகியவற்றை வழங்க நாம் தவறக் கூடாது. அவர்களிடமிருந்து நமது பார்வையை ஒருபோதும் விலக்கிவிடக்கூடாது. திருத்தந்தை 14-ஆம் லியோ வலியுறுத்துவதுபோல, “ஏழைகளில் கிறிஸ்துவின் முகத்தைக் காணவேண்டும்; மேய்ப்புப் பணியானது எப்பொழுதும் நம்மில் எளியவர்கள், சிறியவர்கள் மற்றும் ஏழைகளுக்கான அக்கறையில் உயிர்ப்பிக்கப்பட வேண்டும்”
(16.06.2025).
நிறைவாக,
நற்செய்தி அறிவிப்பு என்பது இயேசுவைப் பின்பற்றி நடப்பது. எருசலேம் நகரில் புறக்கணிப்பு, துன்பம் மற்றும் மரணத்தை தாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை இயேசு அறிந்தபோதிலும் அந்நகர் நோக்கித் தொடர்ந்து பயணம் மேற்கொண்டார். பாகுபாடின்றி எல்லா இடங்களிலும் நன்மை செய்தார். நற்செய்திக்காகத் தம் இன்னுயிரைக் கையளிப்பதுதான் நற்செய்தி அறிவிப்பின் இறுதிநிலை என்பதை வாழ்ந்து காட்டினார். எனவே, நற்செய்தி அறிவிப்பில் துணிச்சலும் உயிர்த்தியாகமும் அவசியம் தேவை என்பதைப் புரிந்துகொள்ளும் நாம், வெள்ளமெனச் செல்லும் உலகப் போக்கின்படி பயணிக்காமல், கடவுளை அறிந்து, அன்புசெய்து, அவரை இந்த உலகில் அறிவிப்போம்.
நற்செய்தி
அறிவிப்புப் பணி திருமுழுக்குப் பெற்ற நம் அனைவருக்கும் அளிக்கப்பட்டுள்ள கடமை என்பதை உணர்வோம். இவ்வுலகில் பணியாற்றப் போதிய வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் ஆண்டவரை மன்றாடுவோம். தூய பிரான்சிஸ் அசிசி குறிப்பிடுவதுபோல “நற்செய்தியை அறிவிப்போம், நற்செய்தியாவோம்.”
அனைத்திலும் இறைவனைச் சார்ந்து, எளிமையிலும் தாழ்மையிலும் இறையனுபவம் கொண்டு வாழ்தல் மிகவும் கடினமானது. திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிடுவதுபோல, “நம்பிக்கையின் பயணம் என்பது ஒருபோதும் பூங்காவில் நடப்பது அல்ல; மாறாக, சவால் நிறைந்தது. சில வேளைகளில் சிரமமானது.” எத்தகைய சிக்கல் வந்தபோதிலும் இறைநம்பிக்கையில் நிலைத்து நின்று, நற்செய்தியின் அழகை எல்லா இடங்களிலும் கொண்டு சென்றவர்கள் திருத்தூதர்கள். உயிர் வாழ்வதற்கு ஆக்ஸிஜன் எப்படித் தேவைப்படுகிறதோ அதுபோல, திரு அவைக்கும் நற்செய்தி அறிவிப்பு அதிகமாகத் தேவைப்படுகிறது. எனவேதான், “கடவுளின் அன்பையும் நற்செய்தியின் மகிழ்ச்சியையும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளாமல் திரு அவை வாழ முடியாது” என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இன்று
நாம் இயேசுவின் மிகப்பெரும் சீடர்களும், திரு அவையின் இருபெரும் தூண்களுமாகிய புனிதர்கள்
பேதுரு மற்றும் பவுலின் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். இவர்கள் இருவரும் தங்கள் பலவீனத்தில்
இயேசுவின் அழைப்பிற்கு ‘ஆம்’ என்று கூறி, தங்கள் வாழ்வு முழுவதும்
தாழ்மை என்ற பண்பைக் கடைப்பிடித்து, இயேசுவுக்காகத் தங்களையே அர்ப்பணித்தவர்கள். படகுகளுக்கும்
வலைகளுக்கும் இடையே வாழ்ந்த ஒரு மீனவர் பேதுரு. செபக்கூடங்களில் போதித்து வந்த கல்வி
கற்ற பரிசேயர் பவுல். இந்தப் புனிதர்களின் வாழ்வு தவறுகளின்றி அமையவில்லை. ஏனெனில்,
ஒருவர் ‘கிறிஸ்துவைத் தெரியாது’ என மூன்று முறை மறுதலித்தார். மற்றவர்,
கிறித்தவர்களைத் துன்புறுத்தினார். கிறித்தவ வாழ்வின் தொடக்கம் நம் தகுதியைப் பார்த்து
அமைவதில்லை என்பது இவர்களின் அழைப்பு உணர்த்தும் சிறந்த பாடம். நம் கிறித்தவ நம்பிக்கைப்
பயணம் நிறைவற்றதாக இருந்தாலும்கூட, ஆண்டவரில் நம் நம்பிக்கையை எப்போதும் அதிகரிப்பதற்கும்,
அவருக்கு நெருக்கமாக இருப்பதில் வளர்வதற்கும் தேவையான வழிமுறைகளை இவ்விருவரும் நமக்குக்
கற்றுத்தருகின்றனர்.
இயேசுவின்
தலைமைச் சீடரான புனித பேதுரு வலிமையானவராகவும் உண்மையானவராகவும் தாராள மனம் கொண்டவராகவும்
அறியப்படுகிறார். இயேசு இவரை அழைத்தபோது, ‘நான் யோசித்து விட்டுப் பிறகு கூறுகிறேன்’ என்று அவர் கூறவில்லை; எதிர்வரும் நன்மை-தீமைகள் குறித்துக்
கணக்கிடவுமில்லை. மாறாக, எல்லாவற்றையும் விட்டுவிட்டு (மத் 4:20) உடனடியாக இயேசுவைப்
பின்பற்றினார். பேதுரு ஒரு சீடராக, இயேசுவைப் பின்பற்றுபவராக, அவருடைய அடிச்சுவடுகளில்
நடப்பவராக, அனைத்தையும் கற்றுக்கொள்ளக் கூடியவராக இருந்தார்.
இன்றைய
நற்செய்தியில், “நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?” என்ற இயேசுவின் கேள்விக்கு,
“நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்” (மத் 16:16) என்று கூறிய புனித பேதுருவின்
பதில் இயேசுவைப் பின்பற்றுவதில் அடங்கி இருந்தது. இன்றைய முதல் வாசகத்தில், ஏரோது அரசனால்
சிறையில் அடைக்கப்பட்டிருந்த திருத்தூதர் பேதுருவை ஆண்டவரின் தூதர் தட்டியெழுப்பி,
“உடனே எழுந்திடும்” (திப 12:7) என்று கூறுவது ஏரோதின்
சிறையிலிருந்து தப்புவதற்குத் தொடக்கமாகவும், உயிர்ப்பின் பேருண்மையில் நாம் ஒவ்வொருவரும்
நுழைவதற்கு விடுக்கப்படும் அழைப்பாகவும் அமைகிறது.
“நீ
என்னைப் பின்தொடர்ந்து வா” (யோவா 21:22) என்பதுதான் பேதுருவிடம்
இயேசு கூறியதாக நற்செய்திகளில் பதிவுசெய்யப்பட்டுள்ள இறுதியான வார்த்தைகள். உயிர்த்தெழுந்தவரை
நோக்கி விரைவாகச் செல்ல அவர் கடலில் குதிக்கின்றார் (யோவா 21:7). கைது செய்யப்பட்டு,
கசையடிக்கு முன்னும் பின்னும் உயிர்த்த இயேசுவை ஆலயத்தில் துணிவோடு அறிவிக்கின்றார்
(திப 3:12-26; 5:25-42). அவர் ஒரு பாறையாகவே இருந்தார். பேதுரு ஒரு வலிமைவாய்ந்த மனிதராக,
பாறையாக இருந்தபோதிலும், நம்மைப் போன்று அவரும் ஒரு சாதாரண மனிதர்தான். சிறுமை எனும்
பலவீனமும் அடிக்கடி அவரில் வெளிப்பட்டது. சில வேளைகளில் இயேசு என்ன செய்கிறார் என்று
அவருக்குப் புரியாமல் இருந்தது (மாற் 8:32-33; யோவா 13:6-9). கெத்சமனியில் இயேசு இரத்த
வியர்வை வியர்த்தபோது, அவரது துன்பத்தில் துணையாக இல்லாமல் உறங்கினார் (மத்
26:36-46). இயேசு கைது செய்யப்படுவதை எதிர்கொள்ளும்போது, பேதுருவை அச்சம் முந்திக்கொள்ள,
அதனால் அவர் இயேசுவை மறுதலித்தவராய், மனம் வருந்தி அழுதார் (லூக் 22:54-62). சிலுவையின்கீழ்
நிற்கக்கூட அவருக்குத் துணிவு இல்லாமல்போனது. ‘Quo
Vadis’ பாரம்பரியத்தின்படி, பேதுரு மரணத்தை
எதிர்கொள்ளும்போது தப்பியோட முயற்சித்தார்.
பேதுரு,
இயேசுவின் சிலுவைச் சாவுக்குப்பின் அவரது கொள்கைகளுக்குச் சாட்சியாக விளங்குவதை விட்டுவிட்டு,
தன்னுடைய பழைய மீன்பிடித் தொழிலுக்கே திரும்பினார் (யோவா 21:1-3). இருப்பினும், உயிர்த்த
இயேசு அவரைத் தற்கையளிப்பு நிலைக்கு அழைத்துச் சென்று, பேதுரு எனும் பாறைமீது திரு
அவையைக் கட்டியெழுப்ப விரும்பினார். பேதுரு உறுதியானவர், நம்பிக்கைக்குரியவர் என்பதால்
அல்ல; மாறாக, பேதுருமீது, தம் திரு அவையைக் கட்டியெழுப்ப இயேசு விருப்பம் கொண்டதாலேயே.
ஆகவேதான், தன் தவறுகளிலும் ஆண்டவரின் வல்லமைமிகு இரக்கத்தைச் சந்தித்த பேதுரு, இயேசுவே
தன் வாழ்வின் மையம், அவரின்றி ஒன்றுமில்லை என்பதை உணர்ந்து, “நாங்கள் கண்டதையும் கேட்டதையும்
எடுத்துரைக்காமலிருக்க எங்களால் முடியாது”
(திப 4:20) என்று முழங்கினார். இயேசுவின் விருப்பத்தை ஏற்றுச் செயல்படுத்தும் பணியில்
எந்தத் துன்பம் வந்தாலும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்ட அவர், உரோமை திரும்பி மரணத்தைச்
சந்திப்பதற்கான மனவலிமையையும் துணிவையும் பெற்று, மறைச்சாட்சியாகவே சிலுவையில் தன்னுயிரைக்
கையளித்தார்.
பவுல்,
தனது யூதச்சட்டத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டவர். தன் மதப்பாரம்பரியங்கள்மீது
கொண்டிருந்த ஆர்வத்திற்கு அடிமையாக இருந்து, கிறித்தவர்களைத் துன்புறுத்தியவர். தனது
யூத மதம் மட்டும்தான் உண்மையானது என நம்பியவர். புனித ஸ்தேவானின் மறைச்சாட்சியச் சாவும்,
அதனைத் தொடர்ந்து தமஸ்கு நகருக்குச் செல்லும் வழியில் உயிர்த்த ஆண்டவரால் ஆட்கொள்ளப்பட்ட
அனுபவமும் பவுலை உலுக்கின. அவருடைய வாழ்வு மாற்றமடைந்தது. சிலுவையில் தொங்கும் இயேசுவை
ஆழ்நிலை அருள்சிந்தனை செய்ததன் வழியாகத் தனது பலவீனத்தை வெல்லும் இறைஅருளைக் கண்டடைந்தார்.
இறைவனுடனான சந்திப்பே பவுலின் வாழ்க்கையில் நற்செய்தி அறிவித்தலுக்கான பற்றியெரியும்
ஆர்வத்தைத் தூண்டியது. ஆண்டவரால் ஆட்கொள்ளப்பட்டு, அவருடன் சிலுவையில் அறையப்பட்ட புனித
பவுல், “இனி வாழ்பவன் நான் அல்ல; கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார்” (கலா 2:20) என்றார்.
நற்செய்தி
அறிவிப்பிலும் நம்பிக்கையிலும் வளர்ந்த பவுல் தன்னைத் திருத்தூதர்களில் கடையவனாகவும்
(1கொரி 15:9), இறைமக்களில் கடையவனாகவும் சுட்டிக்காட்டுகிறார் (எபே 3:8). தாழ்ச்சியின்
உச்சிக்கே சென்ற பவுல், “பாவிகளிலே மேலான பாவி”
(1திமொ 1:15,16) என்று தன்னைக் குறிப்பிடுகிறார். இயேசுவினால் விடுதலை அடைந்த புனித
பவுல், எத்தனை பெருந்துன்பங்களின் மத்தியிலும் கடவுள் தன் அருகே இருப்பதை எப்போதும்
உணர்கிறார். “நான் இப்போதே என்னைப் பலியாகப் படைக்கிறேன்”
(2திமொ 4:6) என்கிறார். நற்செய்தி அறிவிப்பை ‘நல்லதொரு போராட்டம்’ (4:7) என்று கூறும் புனித பவுல் தனக்காக வாழாமல், கிறிஸ்துவுக்காகவே
வாழ்ந்தார். தன் உடல்நலத்தை இழந்தாலும், கிறிஸ்துவின்மீது கொண்ட நம்பிக்கையை அவர் ஒருபோதும்
இழக்கவில்லை.
திருத்தூதர்கள்
பேதுரு மற்றும் பவுல் இவர்கள் இருவரின் சாட்சிய வாழ்வு நமக்கு உணர்த்தும் படிப்பினைகள்
பல.
முதலில்,
நற்செய்தியின்மீது பேரார்வம் கொண்டு, தாழ்ச்சியோடு திரு அவையின் பணிகளில் நாம் ஈடுபடவேண்டும்.
புனிதத்துவம் என்பது, தன்னை உயர்த்துவதில் அல்ல; மாறாக, தாழ்த்திக்கொள்வதில் அடங்கியுள்ளது
என்பதை உணர்ந்து, வெறும் வார்த்தைகளால் அல்ல; அந்த வார்த்தைகளின் கனிகளான நற்செயல்களால்
சான்றுபகர வேண்டும்.
இரண்டாவது,
நற்செய்திக்கான சான்றுகள், பிறருக்காக நாம் நம்மையே கையளிப்பதாகும். பிற இன மக்களுக்கும்
நற்செய்தியை அறிவித்த பவுலைப்போல, சமூகத்தின் விளிம்புநிலை மக்கள்மீதும் நமது பரிவன்பைக்
காட்டுபவர்களாக இருக்க வேண்டும். குறிப்பாக, வறுமை, சிதைவு, ஓரங்கட்டப்படுதல் போன்றவை
வேரூன்றியுள்ள இடங்களில் மனிதம், நீதி, தோழமை, உடன்பிறந்த உணர்வு ஆகியவை நிறைந்த ஓர்
அழகான சமூகத்தை உருவாக்க திரு அவையாக நாம்
ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
நிறைவாக,
கடவுளின் வியத்தகு செயல்களுக்குத் திறந்த மனம் கொண்டவர்களாகச் செயல்படுபவர்களே இறைவாக்கினர்களாகச்
செயல்பட முடியும். இந்த இரு மாபெரும் புனிதர்களும் தங்கள் தவறுகளை, பலவீனங்களை மறைக்காமல்
செயல்பட்டதுபோல், நாமும் நம் குறைகளுடன் இறைவனிடம் வரும்போது, நம் உண்மையான தேவையே
இறைவன்தாம் என நாம் உணரும்போது, நம் வழியாகவும் இயேசு அரும்பெரும் செயல்களை ஆற்றுவார்.
எனவே, நாம் இயேசுவைப் பின்பற்றுவதில் சீடர்களாகவும் நற்செய்தியை அறிவிப்பதில் திருத்தூதர்
களாகவும் தொடர்ந்து மறைப்பணியாற்றிட இத்திருத்தூதர்களின் பரிந்துரையை நாடுவோம்.
மிகுந்த அறிவும் நிறைந்த ஞானமும் ஆழ்ந்த பக்தியும் கொண்ட அந்தத் தெய்வக் குழந்தை 03-05-1991 அன்று தம்பதியர் ஆன்றோனியோ - ஆண்ட்ரியா குட்டி ஆகியோருக்கு இலண்டனில் பிறந்தது. அக்குழந்தையும் அதன் பெற்றோரும் இத்தாலியின் மிலான் நகருக்குப் புலம்பெயர்ந்தனர். வடக்கு இத்தாலியின் மிலான் நகரில் தனது பள்ளிப்பருவத்தையும் இளமைப் பருவத்தையும் அனுபவித்த அந்தச் சிறுவன் கால்பந்து, வீடியோ விளையாட்டுகள் போன்றவற்றில் ஆர்வம் கொண்டிருந்தான். எப்போதும் புன்னகையுடன் காணப்படும் அந்தச் சிறுவன் தன் சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் நகைச்சுவையாகப் பேசி அனைவரையும் மகிழ்வித்து வாழ்ந்தான். அந்தச் சிறுவனுக்கு 11 வயது நடந்தபோது, வரலாற்றில் நடைபெற்றுள்ள திருநற்கருணை புதுமைகள் பற்றி ஆராயத் தொடங்கினான். தனது இந்த ஆர்வத்தை, பக்தியை எல்லாரும் அறிந்துகொள்ளும் பொருட்டுக் கணினியில் தானே ஒரு புதிய வலைப்பதிவை உருவாக்கி, அதில் உலகின் பல்வேறு இடங்களிலும் நற்கருணை வழியாக நடைபெற்ற அனைத்து அற்புதங்களையும் பதிவிட்டான். உலக அளவில் பத்தாயிரத்திற்கும் அதிகமான பங்குத்தளங்களைப் பார்ப்பதற்கு அச்சிறுவன் உதவினான்.
தன்
வாழ்வில் மூன்று முறைகள் மட்டுமே திருப்பலியில் பங்குகொண்டிருந்த அச்சிறுவனின் தாய், தனது மகன் இயேசுவின்மீது கொண்டிருந்த பேரன்பினால் மனமாற்றம் அடைந்து, தினமும் நற்கருணை பெற ஆரம்பித்தார். நற்கருணைமீது அளவற்ற பக்தி கொண்டிருந்த தனது மகன் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் கூறவேண்டும் என்ற ஆர்வத்தால், இறையியல் படிப்பையும் தொடர்ந்தார். பங்குப் பணிகளிலும் ஆலயப் பணிகளிலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வந்த அந்தச் சிறுவன் 2006-ஆம் ஆண்டு அக்டோபர் 12 அன்று எலும்புமஜ்ஜை இரத்தப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு இறந்தான். அந்தச் சிறுவன்தான் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் 2018, ஜூலை 5-ஆம் நாள் இறைஊழியராகவும், 2020, அக்டோபர் 10 அன்று அசிசி நகரில் அருளாளராகவும் உயர்த்தப்பட்ட அருளாளர் கார்லோ அகுதீஸ். மில்லென்னியத் தலைமுறையைச் சார்ந்த இந்தச் சிறுவன் இந்த நூற்றாண்டின் இளம் புனிதராக விரைவில் உயர்த்தப்பட இருக்கின்றார்.
“நற்கருணையில் உள்ள கிறிஸ்துவின் உடனிருப்புதான் நம் வாழ்வை வளமாக்கும்” என்பார்
புனித பெர்னாந்து. நற்கருணையே கிறிஸ்துவின் உயிரளிக்கும் உடனிருப்பு; அவரது உயரிய அன்பின் வெளிப்பாடு; நம் ஆன்ம உணவு; திரு அவையை ஒன்றிக்கும் வழிபாடு; ஒப்புயர்வற்ற அருளடையாளம். இறை உறவில் நாம் ஆழப்படவும், ஆழமான பொருள்கொண்ட கிறித்தவ வாழ்வியலில் நிலைபெறவும் அன்றாடம் நமக்கு வழிகாட்டுகிறது நற்கருணை. நற்கருணை இயேசுவைச் சந்திக்க அழைக்கிறது; அவரது இறையாற்றலைப் பெற்றுக்கொள்ள அழைப்பு விடுக்கிறது; நாம் திறம்பட மானுட விடுதலைப் பணியாற்ற உறுதி தருகிறது. சலேசு நகர்ப் புனித பிரான்சிஸ் குறிப்பிடுவதுபோல, “நற்கருணை அன்பின் அருளடையாளம்; நற்செயல்களின் உறைவிடம்.” இந்த நற்கருணையே நமது வாழ்வின் அடித்தளம்; மையம்; ஊற்று; உச்சம்... எல்லாம் (திருவழிபாடு, எண். 10).
இன்று
நமது வாழ்வின் அடித்தளமாக விளங்கும் தூய்மைமிகு கிறிஸ்துவின் திரு உடல் திரு இரத்தப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். இப்பெருவிழாவானது 1246-ஆம் ஆண்டு திருத்தந்தை நான்காம் அர்பனால் திரு அவை முழுவதும் கொண்டாடப் பணிக்கப்பட்டது. ‘இயேசுவின் உயிரில் கலந்த உறவாக’ வாழ நம்மை அழைக்கும் நற்கருணை ‘உணவு - உறவு - உயர்வு’ எனும் மூன்று படிநிலைகளில் நம் வாழ்வியல் கூறுகளாகப் பரிணமிக்கின்றன.
மனிதன்
உயிர்வாழ மிகவும் தேவையான அடிப்படைக் கூறுகளில் ஒன்று உணவு. இந்த உணவைத் தாயின் கருவிலிருந்தே நாம் ஒவ்வொருவரும் உண்ணப் பழகிவிட்டோம். ஒரு தாய் உண்ணும் அனைத்து உணவுகளும் தாயின் இரத்தத்தோடு கலந்து கருவில் இருக்கும் குழந்தைக்கும் இரத்தநாளங்கள் வழியாக உணவாக மாறுகின்றன. இத்தகைய அடிப்படைத் தேவையான உணவை அடையாளமாக எடுத்துக்கொண்டார் இயேசு. இந்த எளிய வடிவமான அப்பத்தையும் இரசத்தையும் நாம் தினமும் உணவாக உண்ணும்போது, அவர் நம் உடலாகவே மாறி, நம் உயிருக்குள் ஒன்றாகி, இணைபிரியாமல் நாள்தோறும் நம்முள் வாழ்கிறார். எனவே, கண்ணுக்கெட்டாத கடவுளை நம் கண்ணெதிரில் உணரச்செய்வது இந்த நற்கருணை உணவே. நாம் உட்கொள்ளும் நற்கருணை உணவு உறவின் அடையாளமாக அமைகிறது. எனவேதான், தாமஸ் அக்குவினாஸ் இவ்வாறு கூறுகிறார்: “நற்கருணையின்றிக் கிறித்தவ உறவுகள் இல்லை.”
இன்றைய
இரண்டாம் வாசகத்தில் நற்கருணை எவ்வாறு உறவை வளர்க்கும் தெய்வீக உணவு என்பதை விளக்குகிறார் தூய பவுல். பவுலின் காலத்தில் கிறித்தவர்கள் திருவிருந்துக் கொண்டாட்டத்திற்கு வசதியுடைய கிறித்தவர்களின் பெரிய வீடுகளில் கூடிவந்தனர். ஏனெனில், அப்போது கோவில்கள் எங்கும் கட்டப்படவில்லை. எனவே, வழிபாட்டிற்காக வீடுகளில் கூடிவந்த நம்பிக்கையாளர்கள் எல்லாரும் சேர்ந்து வரும்வரை திருப்பாடல்கள் பாடி, பின்பு உணவுகளைப் பிறரோடு பகிர்ந்து உணவருந்திய பின், அப்பத்தையும் இரசத்தையும் அர்ச்சித்துத் திருவிருந்து கொண்டாடினர்.
இயேசு
அப்பத்தைக் கையில் எடுத்தது அவர் மட்டும் உண்பதற்காக அல்ல; மாறாக, அதைப் பிட்டு எல்லாருக்கும் பகிர்ந்துகொடுப்பதற்காகவே என்பதை அவர்கள் உணர்ந்திருந்தனர். ஆனால், சில நேரங்களில் அடிமைநிலையில் இருந்த கிறித்தவர்கள் சரியான நேரத்திற்கு வந்துசேர இயலாமல் போகவே, காத்திருக்க மனமில்லா வசதி படைத்தோர் உணவை யாரோடும் பகிர்ந்துகொள்ளாது தனித்தனியே உண்ண ஆரம்பித்தனர். இதனால், ஏழையர் பலர் பசியோடு திருவிருந்தில் பங்குகொண்டனர். இந்தப் பின்னணியில்தான் பவுல், இயேசு தாம் துன்புறுத்தப்படுவதற்கு முந்தின நாள் இரவு நற்கருணை ஏற்படுத்திய நிகழ்வை இங்குக் குறிப்பிடுகிறார்.
நாம்
ஒன்றாகக் கூடும்போது நாம் அனைவரும் இயேசுவின் ஒரே உடல் என்ற உணர்வில் பிளவுகளையும் பிரிவுகளையும் அகற்றி, ஒரே மனமும் நோக்கமும் கொண்டிருப்பதும், அர்ச்சிக்கப்பட்ட அப்பத்திலும் இரசத்திலும் ஆண்டவரின் உண்மைப் பிரசன்னத்தை உணர்வதும் அவசியம் என வலியுறுத்துகிறார் (1கொரி 11:17-34). “நீங்கள் கிறிஸ்துவின்
உடல்; ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புகள்” (12:27) எனும்
புனித பவுலின் கூற்றைப் பற்றிப் பேசிய புனித அகுஸ்தின், “ஒற்றுமையின் மறைபொருளான கிறிஸ்துவைப் பெற்றுக்கொள்ளும் யாவரும் அது போதிக்கும் அமைதியையும் ஒருமைப்பாட்டையும் காத்துக்கொள்ளவில்லையெனில் அந்த மறையுடலுக்கு எதிர்ச்சான்று பகர்கிறார்” என்கிறார்.
எனவே, நற்கருணை உட்கொள்ளும் நாம் சகோதர அன்பில் நிலைத்திருந்து உறவை வளர்ப்பது இன்றியமையாததாகிறது. இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கமும் “நற்கருணை அன்புறவை வளர்க்கும் திருவிருந்து” என்ற
உண்மையை ஆழமாக எடுத்துரைக்கின்றது (திருச்சபை எண். 7). “மனிதகுலத்தில்
அனைவரையும் ஒருவரோடு ஒருவர் இணைக்கும் சங்கிலித் தொடர் நற்கருணை”
எனக் கூறும் திருத்தந்தை பிரான்சிஸ், நற்கருணை வழியே, இயேசு நம்மை நெருங்கிவரும் வேளையில், நாம் அடுத்தவரை விட்டு விலகிச் செல்லாமல் வாழவேண்டும் என்கிறார் (மறையுரை, 14.06.2020).
நிறைவாக,
இயேசுவின் திருவுடலை உண்ணும் நாம் திருநற்கருணையாக மாறுவதற்கு அழைக்கப்படுகிறோம். புனித பெரிய லியோ கூறுவதுபோல “கிறிஸ்துவின் திரு உடலிலும் திரு இரத்தத்திலும் பங்குபெறுவது என்பது, நாம் எதை உண்கிறோமோ அதுவாகவே நம்மை மாற்றுவதைத் தவிர வேறொன்றுமில்லை.” ஆகவேதான், தூய பவுல், “இனி வாழ்பவன் நான் அல்ல; கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார்” (கலா
2:20) என்கிறார். எனவே, நாம் சுயநலத்தைக் கடந்து அன்பை நோக்கித் திறந்த மனம் கொள்ளும்போது, உடன்பிறந்த உறவுக்கான பிணைப்பை வளர்க்கும்போது, நம் சகோதரர்-சகோதரிகளின் துன்ப துயரங்களில் பங்குகொள்ளும்போது, நம் உணவையும் வளங்களையும் தேவையில் இருப்போருடன் பகிர்ந்துகொள்ளும்போது, நாமும் இயேசுவைப்போல நம் வாழ்வின் அப்பத்தைப் பிடுகிறோம். இயேசுவை உட்கொள்வதால் நாம் இயேசுவாகவே மாறுகிறோம்; நமது வாழ்வு உன்னதமாகிறது; மேன்மையடைகிறது; உயர்வடைகிறது.
புனித
மாக்சிமிலியன் கோல்பே உரைப்பதுபோல, “தேவதைகள் மனிதரைப் பார்த்துப் பொறாமைப்பட முடிந்தால், அவர்கள் ஒரு காரணத்திற்காக மட்டுமே பொறாமைப்படுவார்கள்; நற்கருணைக்காக.” ஆம், நற்கருணை அத்தகைய மகத்துவம் கொண்ட மறைபொருள். எனவே,
இனி நமக்கென்று வாழாமல், கிறிஸ்துவின் வழியில் நமது வாழ்வைப் பிறருக்கு ஒரு கொடையாக வழங்குவோம் (உரோ 14:7). தம் உடலின் ஒவ்வோர் அணுவையும் மக்களுக்கென வழங்கிய இயேசுவைப்போல், நாமும் மற்றவர்களுக்காகப் பிடப்பட்ட அப்பமாக மாறுவோம்; நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு நம்மையே நாம் காணிக்கையாக அர்ப்பணிப்போம். நம்மிடம் என்ன இருக்கிறதோ மற்றும் நாம் என்னவாக இருக்கிறோமோ அதை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வோம். நாள்தோறும் நம் இதயம் நுழையும் இயேசுவின் திரு உடலும் திரு இரத்தமும் நம் உயிரில் கலந்து, அவரது உயிரிலும் உறவிலும் நம்மை நிலைநிறுத்தட்டும்.
இன்று நாம் தூய்மைமிகு மூவொரு கடவுளின் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றோம். இப்பெருவிழா தந்தை, மகன், தூய ஆவியார் எனும் மூவொரு கடவுளின் தெய்வீக அன்பையும் ஒன்றிப்பையும் உறவையும் உணர்த்துகிறது.
நாம்
ஒவ்வொருவரும் குழந்தையாக இருந்தபோது அம்மா, அப்பா என்ற உறவுகளுக்கு அடுத்தபடியாக அறிமுகமானவர்
மூவொரு கடவுளே! குழந்தையாக நாம் பிறந்ததும், நம்மைக் காண வந்த ஒவ்வொருவரும் நமது நெற்றியில்
சிலுவை அடையாளம் வரைந்து, நமக்கு ஆசியளித்தனர். ‘தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயரால்,
ஆமென்’ என்ற இந்த எளிய செபமும், அதனுடன் இணைந்து
கூறும் ‘அர்ச்சிஸ்ட்ட சிலுவை அடையாளத்தினாலே...’ எனும் அடையாளச் செயலுமே நமது பெற்றோர்
நமக்குக் கற்றுக்கொடுத்த முதல் செபம். நாம் தட்டுத் தடுமாறி நடைபயின்றபோது திருமுழுக்கின்
வழியாகவே மூவொரு கடவுளின் பெயரைச் சொல்லி அருள்பணியாளர் நம்மைத் திரு அவைக்கு வரவேற்றார்.
நமது வாழ்வின் ஊற்றும் உச்சமுமாக இருக்கின்ற திருப்பலியில் அருள்பணியாளர், ‘தந்தை,
மகன், தூய ஆவியாரின் பெயராலே!’ என்று தொடங்கி, அதே மூவொரு கடவுள் பெயரால் வாழ்த்துக்
கூறி இறுதியில், அதே பெயராலே இறைமக்களுக்கு ஆசி வழங்கித் திருப்பலிக் கொண்டாட்டத்தை
நிறைவு செய்கின்றார். இவ்வாறு நமது வாழ்வின் எல்லா நிலைகளிலும் மூவொரு கடவுளின் உறவிலிருந்து
நாம் பிரிக்கப்பட முடியாதவர்களாகவே இருக்கின்றோம்.
தந்தை,
மகன், தூய ஆவியார் ஆகிய மூவரும் ஆள்தன்மையில் வெவ்வேறாக இருந்தாலும், ஒரே கடவுளாகச்
செயல்படுகிறார்கள். படைத்தல், மீட்டல், காத்தல் ஆகிய முப்பெரும் செயல்கள் இவர்களிடத்தில்
காணப்படுகின்றன. இவ்வுலகை மீட்கும் செயலில் மூவொரு கடவுள் ஈடுபட்டதைப் புனித இஞ்ஞாசியார்
தனது ஆன்மிகப் பயிற்சி நூலின் தொடக்கத்திலேயே ‘மூவொரு கடவுள் இவ்வுலகை மீட்க விரும்பும்போது,
தம்மிலிருந்து தமது மகனாக இயேசுவை அனுப்புகிறார். தமது இரத்தத்தால் இவ்வுலகை மீட்ட
இயேசுவைத் தொடர்ந்து தந்தையிடமிருந்து புறப்பட்டு வருபவர்தான் துணையாளராம் தூய ஆவியார்’ என்றே குறிப்பிடுகின்றார்.
‘மூவொரு
கடவுள்’ என்பது இன்றுவரை ஒரு மறைபொருளாகவே இருக்கின்றது.
ஒரே கடவுள் மூன்று ஆள்களாக இருக்கின்றார். மூவருமே ஒரே ஞானம், ஒரே சித்தம், ஒரே வல்லமை,
ஒரே இறையியல்பு இருப்பதால் ஒன்றிப்பு நிலவுகிறது. இந்த மறையுண்மையை நமது அறிவுகொண்டு
புரிந்துகொள்ள முடியாது. புனித அகுஸ்தினாரும்கூட இந்த மறைபொருளைப் புரிந்துகொள்ள முடியாமல்
தடுமாறினார். பல நேரங்களில் இந்த மூவொரு கடவுள் கருத்தியலைப் படிக்காதவர்களைக் காட்டிலும்,
படித்தவர்களே புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறுகின்றனர். காரணம், படித்தவர்களிடம் இருப்பது
‘அறிவுத் தேடல்’; படிக்காதவர்களிடம் இருப்பது ‘நம்பிக்கைத்
தேடல்.’ “கடவுள் தம்மை நூல்கள் வழியாக அவ்வளவாக அறிவிப்பதில்லை; ஆனால், வாழ்வின் சான்று
வழியாக அறிவிக்கிறார்” (மே 26, 2024) என்று திருத்தந்தை பிரான்சிஸ்
கூறியதையும் நாம் உணர்ந்தாக வேண்டும்.
நம்மை
மீட்பதற்காகவே மூன்று ஆள்களும் ஒரே கடவுளாய் இணைந்திருக்கிறார்கள் என்று இறைநம்பிக்கையில்
ஏற்றுக்கொள்வதுதான் நமது ஞானத்தின் வெளிப்பாடாக அமைகிறது. இதைத்தான் இன்றைய முதல் வாசகம்
நமக்கு எடுத்துரைக்கிறது. ஞானத்தின் தொன்மை குறித்து விவரிக்கப்படும் இவ்வாசகத்தில்,
ஞானத்திற்கு ஆளுமை கொடுத்து விவரிக்கிறார் ஆசிரியர். இறைவனே ஞானமாக வெளிப்படுகிறார்.
ஞானமானது கடவுளின் மகனின் சாயல். ஞானம் கிறிஸ்துவிற்கு ஒப்பிடப்படுகிறது. ஞானம் கடவுளின்
சிந்தனையிலிருந்து வருகிறபடியால் அதனை மூவொரு கடவுளின் இரண்டாம் ஆளான மகனாகப் பார்க்கப்படுகிறது.
இந்த ஞானம் தொல் பழங்காலத்திலிருந்தே இருக்கிறது. அதாவது உலகம் தோன்றுவதற்கு முன்னரே
ஞானம் இருக்கிறது (8:23). மலைகள், குன்றுகள், சமவெளிகள், மணல்கள், வானம், கடல், மேகம்,
நீர்த்திரள், நீர் ஊற்றுகள் என அனைத்தையும்விட மிகத் தொன்மையானது ஞானம் (8:25-29).
உண்மைக் கட வுளை உணர்த்த விரும்பும் ஆசிரியர், ‘ஞானம் மனிதர்களோடு இருப்பதில் மகிழ்ச்சி
கொள்கிறது’ என்கிறார். அவரே நம் வாழ்வில் என்றும்
பிரசன்னமாக இருக்கிறார்; அவர் நமது இதயத்தின் ஆழத்திலும் ஆன்மாவிலும் வாழ்கிறார்; அவர்
நம்மைத் தனியாக விட்டுவிடமாட்டார்; அவரை நமது வாழ்விலிருந்து யாரும் எடுத்துவிட முடியாது
எனும் அழகான சில உண்மைகளை நமக்கு கற்றுத்தருகிறார்.
தாமாக
இருப்பவர், தனித்திருப்பவர், கண்டிப்புள்ளவர், காணமுடியாத தூரத்தில் உள்ளவர், ‘கடவுள்’ எனப் பெயரிட்டு அழைக்க முடியாதவர் என்றெல்லாம் இஸ்ரயேல்
மக்களுக்கு அறிமுகமான கடவுளை தந்தை, மகன், தூய ஆவியார் என்ற கூட்டுக்குடும்பமாக நமக்கு
அறிமுகம் செய்தவர் இயேசு. அவர் கடவுளை ‘தந்தையாக’ உணர்ந்தார்;
தந்தை-மகன் உறவை அவர் ஒவ்வொரு நாளும் அனுபவித்தார்; ‘தந்தை’ என்று கடவுளை உளமார அழைத்து, தம் பாசப் பிணைப்பை வெளிப்படுத்தினார்.
ஆகவே, மூவொரு கடவுளே நம் முதல் உறவினர்; நம் உடன் பயணிக்கும் நண்பர் என்பதை இயேசு நமக்கு
உணர்த்தியுள்ளார். இவ்விதம் நமக்கு அறிமுகமான கடவுள் நமக்குக் கற்றுத்தரும் பாடம்
‘கடவுள் - உறவின் ஊற்று’ என்பதே.
இந்த
உலகம் என்பது ஓர் அழகான குடும்பம். உலகம் என்ற குடும்பம் உறுதியாக அமைய வேண்டும் என்றால்,
நமது ஒவ்வொரு குடும்பத்திலும் பாசமும் பரிவும் மன்னிக்கும் தன்மையும் மேலோங்கியிருக்க
வேண்டும். மூவொரு கடவுள் தம்மிலே அன்புற்று வாழ்வது போன்று, நாமும் நம் குடும்பங்களில்
அன்புடன் வாழ வேண்டும். உறவில் வாழ்வது ஒன்றே இயேசு அறிமுகம் செய்துவைத்த மூவொரு கடவுளின்
இலக்கணம். உறவே இறைவனின் உயிர்நாடி! கடவுள் என்னும் அச்சில் உருவாக்கப்பட்ட நாம், நம்முடைய
உறவுகளில் ‘நாமும் - கடவுளும் - பிறரும்’ இணைந்த குடும்பமாக வாழ முயற்சிக்கவேண்டும்.
“கடவுள் ஒருவரே, அவர் தந்தை, மகன், தூய ஆவியார் என ஒரு குடும்பமாக உறவில் ஒன்றிணைந்திருக்கிறார்” (மே 26, 2024) எனும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின்
கூற்று உண்மையானதே. நம் இறைவன் உறவுகளின் ஊற்றாக இருப்பதால், நாமும் உறவுகளுக்கு முதன்மையான
இடம் தரவேண்டும் என்பதே இப்பெருவிழா நமக்குக் கற்றுத்தரும் அழகான பாடம்.
நாம்
வாழும் இன்றைய உலகில், நம் உறவுகள் மிக அதிகமாகவே பழுதடைந்திருப்பதை மறுக்க இயலாது.
முகநூல், வாட்ஸ் ஆப், ஆண்ட்ராய்டு, ஏ.ஐ. காலம் வந்ததும் மனிதரின் உறவுகளும், வாட்ஸ்
ஆப் மயமாக மாறிவிட்டன. முன்கடந்து போவோரின் முகம் தெரியவில்லை. பின்நின்று சிரிப்போரின்
எண்ணம் புரியவில்லை. தலைதாழ்ந்தே எங்கும் பயணம். மனைவியும், கணவரும் வீட்டுக்குள்ளே
கைப்பேசியில் உரையாடல். உண்மையான, ஆழமான, எதார்த்தமான குடும்ப உறவுகளும், நட்பும் மெல்ல
மெல்ல தூரமாகச் செல்வதை உணர முடிகின்றது. பெற்றோர்மீது, அதுவும் வயதான பெற்றோர்மீது,
சுற்றத்தார்மீது நாம் கொண்டுள்ள உறவை மீண்டும் அலசிப்பார்க்க, பழுதடைந்துள்ள அந்த உறவை
மீண்டும் சரிசெய்ய இந்த நாள் நம்மை அழைக்கிறது.
எனவே,
நம் குடும்ப உறவுகளுக்கு மிகச்சிறந்த மாதிரி மூவொரு கடவுளின் உறவு. “எல்லாரும் ஒன்றாய்
இருப்பார்களாக! தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும்
ஒன்றாய் இருப்பார்களாக!” என்றே இயேசு இறைத்தந்தையிடம் வேண்டுதல் செய்கின்றார் (யோவா
17:21). “ஆவியானவர் தமது சொந்த அதிகாரத்தால் பேசுவதில்லை; ஆனால், அவர் தாம் கேட்பதையே
பேசுகிறார். வரப்போகிறவற்றை அவர் உங்களுக்கு அறிவிப்பார்” என
இயேசு அவர் பற்றி விளக்குகிறார் (16:13). எல்லாவற்றிற்கும் தொடக்கமும், எல்லாவற்றையும்
கொண்டிருப்பவருமான இறைத்தந்தை தமக்கென எதையும் கொண்டிராமல், எல்லாவற்றையும் தம் மகனிடம்
கொடுக்கிறார். ஆகவேதான், “தந்தையுடையவை யாவும் என்னுடையவையே” (யோவா 16:15) என்று இயேசுவால் கூறமுடிந்தது. தூய ஆவியாரும்
இயேசுவோடு மிக நெருக்கமாக இருந்து அவரை வழிநடத்தியதை இயேசுவின் வாழ்வு முழுவதிலும்
காண இயலும்.
ஆகவே,
மூவொரு கடவுளின் பெருவிழாவைக் கொண்டாடும் நாம் எப்படி வாழ்கிறோம்? நாம் பேசும்போது
நம்மைப்பற்றியும், நாம் ஆற்றும் செயல்களைப்பற்றியும் மட்டுமே பேசுகிறோம். நாம் முற்றிலும்
தூய ஆவியானவரின் செயலிலிருந்து எவ்வளவு வேறுபட்டிருக்கிறோம்? நம்மிடம் இருப்பனவற்றை
அடிப்படை வசதிகளின்றி இருப்பவர்களோடு பகிர்ந்துகொள்ள இந்த விழா நம்மை அழைக்கிறது. மூவொரு
கடவுள் மற்றவருக்காக வாழ்கின்ற கடவுள். அவர் நம்மையும் மற்றவருக்காக வாழுமாறு தூண்டுகிறார்.
நாம் ஒருவர் மற்றவரின்றி ஒருபோதும் இருக்க முடியாது என்பதையும் அவர் நமக்குக் கற்பிக்கின்றார்.
ஆகவே,
நாம் தீவுகள் அல்ல; இவ்வுலகில் மற்றவரின் தேவைகளுக்குத் திறந்த மனதாய் இருந்து, அவர்களுக்கு
உதவிடவும் நாம் அனைவரும் ஒரே குடும்பமாக மூவொரு கடவுளைப்போல உறவுடன் வாழவும் வேண்டிய
வரத்தை மூவொரு கடவுள் நம் ஒவ்வொருவருக்கும் வழங்க வேண்டும் என்று சிறப்பாக வேண்டிக்கொள்வோம்.
1992-ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டின் பார்சலோனாவில் நிகழ்ந்த ஒலிம்பிக் விளையாட்டுகளில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் உலக அளவில் தங்கப்பதக்கம் பெற்றிருந்த பிரித்தானிய வீரர் டெரெக் ரெட்மண்ட் பங்கெடுத்தார். தன் ஓட்டத்தைத் துவக்கிய சில விநாடிகளிலே அவரது வலதுகால் தசைநாரில் உருவான பிரச்சினையால் அவர் கீழே விழுந்தார். ஒருசில விநாடிகளில் மீண்டும் எழுந்து, வலது காலை நொண்டியபடியே ஓட்டத்தைத் தொடர்ந்தார். அவ்வேளையில், பார்வையாளர்கள் பகுதியிலிருந்து டெரெக்கின் தந்தை ஜிம் ரெட்மண்ட் பாதுகாப்பு வீரர்களைத் தாண்டி ஓடிவந்து, மகனைத் தாங்கியபடியே உடன் ஓடினார். “டெரெக், இதை நீ ஓடவேண்டும் என்று கட்டாயமில்லை” என்று தந்தை கூற, மகனோ கண்ணீர் மல்க, “அப்பா நான் இதை எப்படியாவது ஓடி முடிக்க விரும்புகிறேன்” என்று கூறியதும், “சரி வா, நாம் சேர்ந்து ஓடுவோம்” என்று கூறி மகனைத் தன் தோள்களில் சாய்த்துக்கொண்டு ஓடினார். இறுதி ஒருசில மீட்டர் தூரத்தை டெரெக் தனியே ஓடி முடிக்கும்படி தந்தையும் அனுப்பி வைத்தார்.
வாழ்வெனும்
ஓட்டத்தில் பிரச்சினைகளால் நாம் வீழும்போது, ‘நம்மைத் தூக்கி நிறுத்த யாரும் இல்லையே!’ என்று அங்கலாய்க்கும்போது, அனைத்திலும் நம்பிக்கையை இழந்து நிர்க்கதியாக நிற்கும்போது அவமதிப்பு, வெறுப்பு, புறக்கணிப்பு என எத்தனையோ வலிகளைத்
தாங்கிக்கொண்டு வாழ்க்கையின் மீதான பற்றினை இழக்கும்போது நமக்குத் தோள்கொடுத்து, நமது ஓட்டத்தைத் தொடரவும், அதனை நிறைவு செய்யவும் தந்தையால் அனுப்பப்பட்ட துணையாளர் ஒருவர் இருக்கிறார். அவரே நம் தூய ஆவியார்!
இயேசுவின்
உயிர்ப்பு, அவரின் விண்ணேற்றம், தூய ஆவியாரின் வருகை எனும் இந்த மூன்று விழாக்களும்தான் நமது கிறித்தவ நம்பிக்கையின் அடித்தளமான பேருண்மைகளை வெளிப்படுத்தும் விழாக்கள். இன்று நாம் உலக விழாக்கள் கொண்டாடும்போது, எதற்காக விழாக்களைக் கொண்டாடுகிறோம் என்பதைவிட, விழாக்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதிலேதான் அதிகக் கவனம் செலுத்துகிறோம். ஒரு விழாவுக்கு எவ்வளவு செலவு செய்கிறோம் என்பதைப் பொறுத்தே அந்த விழா முக்கியத்துவம் பெறுகிறது; வெளி உலகிற்குத் தெரியவருகிறது. இன்று பகட்டும் பிரமிப்பும் பிரம்மாண்டமுமே விழாக்களின் உயிர்நாடி. ஆனால், இருபது நூற்றாண்டுகளுக்கு முன்னர் எவ்வித ஆர்ப்பாட்டங்களும் ஆரவாரங்களும் ஆடம்பரமுமின்றி அமைதியாக நிகழ்ந்த விழாக்கள்தான் இயேசுவின் உயிர்ப்பும், அவரின் விண்ணேற்றமும், தூய ஆவியாரின் வருகையும். இந்த விழாக்கள் ஒருநாள் கேளிக்கையாக அல்லது எரிச்சலூட்டும் உலகக் கொண்டாட்டங்களில் வரிசையில் அமையாமல், நமக்குள் மாற்றங்களை உருவாக்கும் விழாக்களாக, வாழ்நாளெல்லாம் நம்முடன் தங்கிப் புதுப்புது படிப்பினைகளைக் கற்றுத்தரும் விழாக்களாக இருக்கின்றன.
இன்று
நாம் கொண்டாடும் தூய ஆவியாரின் பெருவிழா எனும் ‘பெந்தக்கோஸ்து விழா’ சீடர்களின் வாழ்விலே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்த நாள் சீடர்களின் அச்சம் தோற்கடிக்கப்பட்டு வீரம் வெற்றி கொண்ட நாள்; சீடர்களின் மூடிய கதவுகள் நற்செய்தி அறிவிப்புக்கெனத் திறக்கப்பட்ட நாள்; சீடர்களின் சந்தேகங்கள் அன்பு நிரம்பிய நம்பிக்கையினால் விரட்டப்பட்ட நாள். இது அறுவடையின் நாள்! ஆம், நற்செய்தி அறிவிப்பின் வழியாக மக்களைத் திரு அவைக்கு அறுவடை செய்யும் நாள். தமது மீட்புப்பணியை வெற்றிகரமாக முடித்த இயேசு கிறிஸ்து மாட்சிமையுடன் விண்ணோக்கிச் சென்று தாம் ஏற்கெனவே வாக்களித்தபடி இறை ஆற்றலாம் தூய ஆவியாரை நமக்கு அனுப்பிய நாள். இன்றே திரு அவை பிறந்த நாள்!
யோவான்
நற்செய்தியாளர் மட்டுமே தூய ஆவியாரின் வருகை, இயல்பு, பணிகள் பற்றி நான்கு இடங்களில் பேசுகிறார் (14:16-17,
25;15:26; 16:7-15). இன்றைய
நற்செய்திப் பகுதியில், இயேசு விரைவில் தங்களைவிட்டுச் சென்றுவிடுவார் எனப் பெரிதும் கலக்கமுற்ற சீடர்களை இயேசு திக்கற்றவர்களாக விடவில்லை (14:18); மாறாக, இயேசுவின்மீது சீடர்கள் அன்புகொண்டு, அவரது கட்டளைகளைக் கடைப்பிடிப்பதற்குக் கொடையாகத் தூய ஆவியாரை அருளுகிறார் (14:15). அவர் அவர்களோடு தொடர்ந்து இருப்பார், செயல்படுவார், தந்தை அனுப்பும் துணையாளர் மூலம் இயேசு சீடரோடு இருப்பார் (14:16), அவர் அவர்களிடம் திரும்பி வருவார் (14:18), அவரது பணியைத் தொடரச் செய்ய தந்தை மற்றொரு துணையாளரை அனுப்புவார் (14:16), அவரே உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் (14:26) என உறுதியளிக்கிறார்.
துணையாளரும்
தூய ஆவியாரும் ஒருவரா? அல்லது இருவேறு நபர்களா? என்னும் கேள்வி நமக்கு எழலாம். அவர்கள் இருவேறு நபர்கள் அல்லர்; மாறாக ‘துணையாளர்’,
‘தூய ஆவியார்’ என்பவை ஒருவரின் இரு பெயர்களே எனத் துணிந்து கூறமுடியும். இருவருமே புதிய ஏற்பாட்டில் ஆள்தன்மை கொண்டவர்களாகக் காட்டப்படுகின்றனர். துணையாளருக்கும் தூய ஆவியாருக்கும் இடையே மிகுந்த ஒற்றுமை காணப்படுகிறது. துணையாளர் உண்மையை வெளிப்படுத்துபவர் (15:16);
தூய ஆவியாரே உண்மை. இருவருமே சான்று பகர்கின்றனர். துணையாளர் சீடர் வழியாகச் சான்று பகர்கிறார். தூய ஆவி சீடர்கள்மீது இறங்கி வந்து அவர்கள் சான்று பகர ஆற்றல் அளிக்கிறார் (திப 2:1-41). துணையாளரும் தூய ஆவியும் சீடர்களுக்குக் கற்றுக்கொடுக்கின்றனர்
(14:26; 16:13). எனவே,
தூய ஆவியே துணையாளர். இதனையே யோவான் இவ்வாறு கூறுகின்றார்: “தந்தையிடமிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிற துணையாளர் வருவார். அவரே தந்தையிடமிருந்து வந்து உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார்”
(15:26).
இயேசு
கூறிய துணையாளராம் தூய ஆவியாரின் செயல்பாடுகள் மேலானவை. அவருடைய பணிகள் பன்முகத்தன்மை கொண்டவை. ‘பராக்கிலீத்தோஸ்’ என்ற
கிரேக்க மூலச்சொல்லின் பொருளான ‘துணையாளர்’
என்ற சொல் நான்கு வகைகளில் பொருள்படுகின்றன. அவை: 1. வாதிடுபவர், 2. பரிந்துபேசுபவர், 3. ஆறுதல் அளிப்பவர், 4. ஊக்கம் ஊட்டுபவர். சீடர்களின் வாழ்விலே செயல்பட்ட துணையாளராம் தூய ஆவியார் எவ்வாறு நமது வாழ்வில் செயலாற்றுகிறார் என்பதைச் சிந்தித்து, இன்றைய நாள் சிந்தனையை நிறைவு செய்யலாம்.
பல்வேறு
தவறான குற்றச்சாட்டுகளுக்கும் வன்கொடுமைகளுக்கும் ஆளாக்கப்பட்ட சீடர்கள் தங்களது நற்செய்திப் பணியில் தூய ஆவியாரின் துணைகொண்டே பேசினர் (மத் 10:20; திப 6:10). இன்றைய முதல் வாசகத்தில், துணையாளராம் தூய ஆவியார் ‘நெருப்புப்போன்ற பிளவுற்ற நாவுகள்’ அடையாளத்தில்
‘ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்து’
(திப 2:1-3) வெவ்வேறு மொழிகளில் பேசுவதற்கான ஆற்றலை வழங்குவதைப் பார்க்கிறோம். எனவே, நாம் நற்செய்திப் பணியின் பொருட்டு துன்ப துயரங்களைச் சந்திக்கும் வேளைகளில், நமது வலுவின்மையால் நம்பிக்கையை இழக்கும் நிலையில் நமக்காகப் பரிந்துபேசுபவராக, வாதிடுபவராக, நமக்குப் பதிலாகப் பேசுபவராகத் தூய ஆவியார் செயல்படுகிறார் (1யோவா 2:1). எனவே, திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிடுவது போல “நாம் எப்போதும் தனியாக இருப்பதில்லை. தூய ஆவியார் எப்போதும் நம்மில் விழித்திருக்கிறார்; நம்மைப் பாதுகாக்கிறார்.”
உதவியளிப்பவரும்
வழிகாட்டுபவரும் உடன் வருபவருமான தூய ஆவியார் ஆறுதலும் மனத்திடமும் தந்து ஊக்கமூட்டுகிறார் (உரோ 12:8; எபி 31:22; திப 13:15). தூய மரிய மேக்தலின் தே பாசி எனும்
புனிதர் குறிப்பிடுவதுபோல, “தூய ஆவியார் உண்மையின் ஆவியார்; புனிதர்களின் வெகுமதி; ஆன்மாக்களின் தேற்றரவாளர்; இருளில் ஒளிரும் சுடரானவர்; ஏழைகளின் செல்வம்.” தூய ஆவியானவரே திரு அவையின் ஆன்மா. அவரே திரு அவையின் உள்ளிருந்து ஊக்குவிப்பவர். திரு அவையின் ஆன்மாவாய் இருக்கும் அவர் ஒவ்வொரு கிறித்தவரின் உள்ளத்திலும் குடிகொள்கிறார். எனவே, நம்முள் உறையும் தூய ஆவியாரின் வழி நடத்துதலை ஒவ்வொரு நாள் வாழ்விலும் உணரும் வரத்தை நாம் கேட்கவேண்டும். திருத்தந்தை
பிரான்சிஸ் குறிப்பிடுவதுபோல, “நமது இதயங்களைத் திறந்து, தூய ஆவியாரின் செயல்பாடுகளை அனுமதிப்பதன் மூலமே இறைவனின் புதிய கட்டளையை நாம் புரிந்துகொள்ள முடியும்.”
தூய
ஆவியார் நம் வழிகாட்டியாக, துணையாளராகக் கொடுக்கப்பட்டிருக்கிறார். ஆகவே, அவருக்குச் செவிமடுத்தல் அவசியம். அருளடையாளங்கள் வழியாகத் தூய ஆவியாரே நமது
உள்ளத்தைத் தூய்மை செய்பவராக, துணை வருபவராக, உறுதிப்படுத்துபவராக, அன்பில் இணைப்பவராக, பணியில் திடப்படுத்துபவராக, நோயில் நற்சுகம் தருபவராக, உணவூட்டித் திடன் அளிப்பவராக நமது வாழ்வில் செயலாற்றுகிறார்.
இன்று
நாம் கொண்டாடும் தூய ஆவியாரின் வருகைப் பெருவிழா நமக்குக் கற்றுத்தரும் முக்கியப் பாடம் இதுதான்... ‘இறைவன் வானிலிருந்து இறங்கி வந்து சிறிது காலம் நம்மோடு தங்கிவிட்டு, மீண்டும் விண்ணகம் சென்றுவிடுபவர் அல்லர்; மாறாக, அவர் நமக்கும், நம்மைச் சுற்றியுள்ள படைப்பு அனைத்திற்கும் உயிர் வழங்கும் மூச்சாக எப்போதும் நம்முள் உறைந்திருக்கும் (1கொரி 3:16) இறைவன், துணையாளர் என்பது இப்பெருவிழா பறைசாற்றும் பேருண்மை.
அமெரிக்காவைச் சார்ந்த உலகப் புகழ்பெற்ற நற்செய்தியாளர் பில்லி கிரஹாம் அவர்களின் உரைகளைத் தொடர்ந்து கேட்டு வந்த ஓர் இல்லத்தலைவி ஒருநாள் கிரஹாம் அவர்களுக்குக் கடிதம் ஒன்று எழுதினார். அக்கடிதத்தில் “அன்புப் போதகரே, நற்செய்தியைப் போதிக்கும்படி கடவுள் என்னை அழைக்கிறார் என்பதை உணர்கிறேன். ஆனால், எனக்குப் பன்னிரு குழந்தைகள் உள்ளனர். அதுவே, எனக்குத் தடையாக இருக்கிறது” என்று எழுதியிருந்தார். அக்கடிதத்திற்குக் கிரஹாம், “அன்பு அம்மா! நற்செய்தியைப் போதிக்கும்படி கடவுள் விடுக்கும் அழைப்பை நீங்கள் உணர்ந்துள்ளதைக் கேட்டு எனக்கு மிக்க மகிழ்ச்சி. அதைவிட எனக்குக் கூடுதல் மகிழ்ச்சி என்னவென்றால், உங்கள் நற்செய்திப் போதனைகளைத் தொடங்குவதற்குக் கடவுள் ஏற்கெனவே உங்கள் வீட்டிற்குள் ஒரு சபையை உருவாக்கிக் கொடுத்துள்ளார் என்பதே!” என்று பதில் அனுப்பினார்.
இன்று
நாம் ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். இந்த விண்ணேற்றப் பெருவிழாவின் கருப்பொருள் இயேசு தம் சீடர்களுக்கு வழங்கிய இறுதி அன்புக் கட்டளைகளைக் கடைப்பிடித்து, அவருக்குச் சாட்சியாகவும் நீட்சியாகவும் மாறுவதுதான்.
இன்றைய
நாளில் லூக்கா நற்செய்தி ஆண்டவரின் விண்ணேற்றத்தை விவரிக்கிறது. இயேசு விண்ணேற்றம் அடைவதற்கு முன்னர் தம் சீடர்களிடம் “பாவ மன்னிப்புப் பெற மனம் மாறுங்கள்’
என எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்பட வேண்டும்”
(லூக் 24:47) என்ற கட்டளையை வழங்குகிறார். மத்தேயு நற்செய்தியில் “நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் என் சீடராக்குங்கள்” (மத்
28:19) என்றும், மாற்கு நற்செய்தியில் “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்” (மாற்
16:15) என்றும் கட்டளை கொடுக்கிறார். இவை அனைத்தும் இயேசு விண்ணேற்றம் அடைவதற்கு முன்னர் வழங்கிய இறுதிக் கட்டளைகள். இந்தக் கட்டளைகளைக் கடைப்பிடித்து, அவருக்குச் சாட்சியாக வாழ (திப 1:8) அழைக்கும் இயேசு, அப்பணியை நிறைவேற்றுவதற்குத் தேவையான தமது இறையுதவியையும், தமது நீங்கா உடனிருப்பு தூய ஆவியார் வழியாகவும் கிடைப்பதாக (லூக் 24:49) உறுதியளிக்கிறார்.
இயேசுவின்
நற்செய்திப் பணி உலகெங்கும் எடுத்துச் செல்லப்பட வேண்டும்; உலக மக்கள் அனைவரும் நற்செய்தியைப் பெறவேண்டும்; நற்செய்திப்பணி நில வரையறையும் கால வரையறையும் கடந்து ஆற்றப்பட வேண்டும். இதற்காகவே இயேசு சீடர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்குப் பயிற்சி அளித்தார். தமது பணியை முடித்துக் கொண்ட இயேசு, இனி சீடர்களின் வழியாக அப்பணி தொடரவேண்டும் என்று விரும்பி அதை ஒரு கட்டளையாகவே அவர்களுக்கு வழங்கினார். இயேசு பணித்தவாறே சீடர்களும் உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றினர்.
இன்று,
இயேசுவின் நற்செய்தி அறிவித்தலை யார் அறிவிப்பது? எப்படி அறிவிப்பது? எங்கு அறிவிப்பது?
முதலில்,
நற்செய்திப் பணியை யார் அறிவிப்பது? ‘நற்செய்தியைப் பறைசாற்றுதல்’ என்பது
இயேசுவின் பணி தொடர்வதற்கான அடிப்படைக் கூற்று. நற்செய்தி ஒரு வித்து! நற்செய்தியின் மையம் இயேசு! நற்செய்திப் பணியைத் தொடங்கியவரும் இயேசு! அதைத் தொடர்ந்து வழிநடத்துபவரும் இயேசு! இயேசு எனும் நற்செய்தி உலகில் எத்திசையிலும் ஊன்றப்பட வேண்டும். அனைவரையும் இயேசுவின் சீடராக்க வேண்டும். இதற்காகவே திருத்தூதர்கள் அனுப்பப்பட்டனர். ‘சீடராக்குதல்’, ‘நற்செய்தியைப்
பறைசாற்றுதல்’ என்ற
சொற்களைக் கேட்டதும், இவற்றை ஆற்ற வேண்டியவர்கள் ஆயர்கள், அருள்பணியாளர்கள் மற்றும் துறவியர் என்ற குறுகலான எண்ணம் எழக்கூடும். ‘போதிப்பவர்களே போதகர்கள்’
என்பது கூற்று! இயேசுவின் இறுதிக் கட்டளைகளைப் பெற்றவர்கள் அனைவரும் குடும்ப வாழ்வில் ஈடுபட்டிருந்த சாதாரண தொழிலாளிகள். இவர்களும் மக்களுமே முதலில் நற்செய்தியை அறிவித்தவர்கள். எனவே, நற்செய்தி அறிவித்தல் என்பது அருள்பணியாளர்கள், துறவியருக்கான பணி என்பதையும் கடந்து, திருமுழுக்குப் பெற்ற நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை உணர்த்துகிறது இயேசுவின் விண்ணேற்ற விழா.
இரண்டாவது,
நற்செய்தியை எப்படி அறிவிப்பது? நற்செய்தி அனைத்து மக்களுக்கும் அனைத்துச் சூழல்களிலும் வாழ்வால் அறிவிக்கப்பட வேண்டும். புனித ஜான் மரிய வியான்னி “கிறித்தவர்கள் என்பவர்கள் ஆலயத்தில் கைகளைக் குவித்துக் கடவுளை ஆராதிப்பவர்களாகவும் ஆலயத்தை விட்டுச் செல்கையில் கைகளை அகல விரித்து அன்புப்பணி புரிபவர்களாகவும் உள்ளனர்” என்கிறார். திருத்தந்தை பிரான்சிஸ், “கிறித்தவர்கள் தங்கள் வார்த்தைகளைவிட வாழ்வால் கிறிஸ்துவைப் பறைசாற்ற வேண்டும்”
என அடிக்கடிக் கூறுவார். ஆகவே, வார்த்தை வடிவில் பறைசாற்றப்படும் நற்செய்தியைக் காட்டிலும், வாழ்க்கையால் உணர்த்தப்படும் நற்செய்தி அறிவிப்புப் பணி, இன்னும் நீடித்த, ஆழமான தாக்கங்களை உருவாக்கும். நம்பிக்கையைத் தருவது, எல்லாத் தீமைகளிலிருந்தும் விலகி இருப்பது, தீமைக்கு நன்மையுடன் பதிலளிப்பது, துயருறும் மக்களுடன் நெருங்கிப் பழகுவது - இவையே நற்செய்தி அறிவிப்பின் வாழ்வியல் கூறுகள். வாழ்வே கிறிஸ்துவுக்குச் சான்று பகர்வதாக இருந்தால் அதுவே சிறந்த நற்செய்தி அறிவிப்பு. வார்த்தையால் நற்செய்தி அறிவிப்பது என்பது மிக எளிது. ஆனால், வாழ்வால் நற்செய்தியை அறிவிப்பது என்பது கடினமான பணி! நற்செய்தி அறிவிப்பதில் திருத்தூதர் பவுல் கூறுவதுபோல, “இன்னலுற்றாலும் மனம் உடைந்து போவதில்லை; குழப்பமுற்றாலும் நம்பிக்கை இழப்பதில்லை” (2கொரி
4:8) என்பதில்தான் நிறைவான மகிழ்ச்சியும் மன நிறைவும் கிடைக்கும்.
மூன்றாவது,
நற்செய்திப் பணியை எங்கு அறிவிப்பது? நற்செய்தியைப் பறைசாற்றுவதும், சீடர்களை உருவாக்குவதும் உலகெங்கும் நிகழவேண்டிய ஒரு பணி என்றாலும், அதன் தொடக்கம் அவரவர் வாழும் இடங்களில் தொடங்க வேண்டும் என்பதை இன்றைய நற்செய்தி நமக்கு உணர்த்துகிறது. லூக்கா நற்செய்தியாளர் தனது நற்செய்தி மற்றும் திருத்தூதர் பணிகள் நூல்களில் இயேசுவின் விண்ணேற்றம் எருசலேம் அருகில் நிகழ்ந்ததாகக் குறிப்பிடுகிறார். நற்செய்தியாளர் மத்தேயு மற்றும் மாற்கு இந்நிகழ்வு கலிலேயாவில் நிகழ்ந்ததென்று குறிப்பிடுகின்றனர். இயேசு வாழ்ந்த காலத்தில் யூதேயா, சமாரியா, கலிலேயா ஆகிய மூன்று முக்கியப் பகுதிகள் இருந்தன. இவற்றில் எருசலேம் கோவிலை மையமாகக் கொண்டிருந்த நகரம் யூதேயா. இன்றைய நற்செய்தியில் இயேசு எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளுக்கும் நற்செய்தி பறைசாற்றப்பட வேண்டும் என்கிறார். மேலும், இயேசு தம் நற்செய்தியை அறிவிக்க, இறையாட்சியை அறிமுகப்படுத்த சீடர்களைத் தேர்ந்தெடுத்த கலிலேயப் (மத் 4:12-17) பகுதியில் இயேசு சீடர்களை மீண்டும் அழைத்து, அங்கிருந்து அவர்களது நற்செய்திப் பணி தொடங்க வேண்டும் என்று பணிப்பது, முதலில் நற்செய்தியைப் பறைசாற்றுதல் அவரவர் வாழும் சூழல்களில், இல்லங்களில் தொடங்க வேண்டும் என்பதை இயேசு நமக்கு நினைவுறுத்துகிறார்.
இன்று
‘நற்செய்தியைப் பறைசாற்றுதல்’ என்பது
ஒரு கண்காட்சியாக, விளம்பரமாக மாறிப்போனது. இதனால் நன்மைகள் விளைந்ததைவிட, பிரச்சினைகளே அதிகம் விளைந்துள்ளன. 1960-இல் ஜோசப் பெய்லி என்னும் அமெரிக்க எழுத்தாளர், மனிதத் தொடர்பின்றி அறிவிக்கப்படும் நற்செய்தியால் எந்தப் பயனுமில்லை என்பதை ‘The Gospel Blimp’ அதாவது ‘நற்செய்தி வானூர்தி’
என்ற நூலில் ஓர் உவமை வழியாக விளக்கிக் கூறுகிறார். நற்செய்தியைத் தங்கள் ஊரில், பிரம்மாண்டமாக அறிவிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் ஒரு கிறித்தவக் குழுவினர், Blimp எனப்படும்
வானூர்தி ஒன்றை வாடகைக்கு எடுத்து, அதிலிருந்து திருவிவிலிய வாசகங்கள் அடங்கிய சிறு சிறு நூல்களைச் சிவப்பு பிளாஸ்டிக் பைகளில் அடைத்து ஊரெங்கும் போட்டனர். வானிலிருந்து விழுந்த அந்தப் பைகள், ஏறத்தாழ குண்டுகள்போல் ஒவ்வொரு வீட்டின் கூரையிலும் விழுந்தன. மேலும், அதே வானூர்தியிலிருந்து நற்செய்திப் பாடல்கள் மிகச் சத்தமாக ஊரெங்கும் ஒலிக்கப்பட்டதைக் கேட்டு மக்கள் தங்கள் காதுகளை மூடிக்கொண்டனர். அதேவேளையில், அந்த இரைச்சலால் பெரிதும் கலவரமடைந்த நாய்கள் ஊரெங்கும் ஊளையிட ஆரம்பித்தன. திருவிவிலிய ஆர்வலர்கள் விரும்பியதற்கு முற்றிலும் எதிராக, மக்கள் அந்த ‘விவிலியத் தாக்குதலை’
வெறுத்தனர். நேரடியான மனிதத் தொடர்பு இன்றி, தொடர்புக்கருவிகளை மட்டும் நம்பி பறைசாற்றப்படும் நற்செய்தி மக்களை இறைவனிடமிருந்தும் நற்செய்தியிடமிருந்தும் தூரமாக்கும் என்பதை ஜோசப் பெய்லி இந்த உவமை வழியே கூறுகிறார்.
நிறைவாக,
இயேசுவை மையப்படுத்தாமல், அவரது நற்செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், நற்செய்தியைத் தங்கள் அறிவுத்திறன் கொண்டு, வார்த்தைப் புலமைகொண்டு போதிக்கும் போதனையோ அல்லது பயன்படுத்துகின்ற விளம்பர வழிகளோ இச்சமூகத்தில் எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதை உணர்ந்துகொள்வோம். நமது திருத்தந்தை பதினான்காம் லியோ தனது முதல் ‘ஊருக்கும் உலகுக்கும்’ எனும்
உரையில் குறிப்பிட்டதுபோல, “நாம் கிறிஸ்துவின் சீடர்கள்; மனிதகுலம், கடவுளையும் அவரது அன்பையும் அடைய உதவும் பாலமாக நாம் ஒருவருக்கொருவர் கரம் கோர்த்து முன்னேறுவதும் உரையாடல், சந்திப்பு வழியாகப் பாலங்களைக் கட்டுவதும் எப்போதும் அமைதியுடன் ஒரே மக்களாக இருக்க ஒருவருக்கொருவர் உதவுவதுமே நற்செய்தி அறிவிப்பு.”
எனவே,
நற்செய்தியைப் பறைசாற்றலும் சீடர்களின் உருவாக்கமும் முதலில் நம் குடும்பங்களிலிருந்து, நம் தினசரி வாழ்க்கையிலிருந்து தொடங்கட்டும். நமது படிப்பினைகளும் பாதைகளும் நமது எதிர்காலச் சந்ததியினரின் வாழ்வுக்குச் சாட்சியாகவும் நீட்சியாகவும் அமையட்டும்.