போர், பதற்றம், வறுமை, வேலைவாய்ப்பின்மை, தொற்றுநோய், பொருளாதார நெருக்கடி, காலநிலை மாற்றங்கள், புவி வெப்பமயமாதல், காற்று-நீர் மாசுபாடு உள்ளிட்ட பல காரணங்களால் உலகமெங்கும் வாழக்கூடிய அனைத்து நாடுகளுமே கொஞ்சம் கொஞ்சமாக அமைதியைத் தொலைத்துள்ளன. எல்லா மனிதர்களுமே எந்த நெருக்கடியுமற்ற ‘அமைதியான வாழ்வு’ அமைய வேண்டும் என்றே விரும்புகின்றனர். நமது தேடல் எப்போதுமே நீதி மற்றும் அமைதியை நோக்கியே இருக்கிறது. குடும்பங்கள் அமைதியாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறோம். நம்மைச் சுற்றிய சமூகம் அமைதியாய் இருக்க வேண்டுமென ஆசைப்படுகிறோம். நமது நாடு அமைதியாய் இருக்க வேண்டுமென ஆசைப்படுகிறோம். ‘உலக அமைதி’ என்பது ஒவ்வொரு மனிதருக்கான உன்னதத் தேவையாகிறது.
இன்று
ஆண்டின் பாஸ்கா காலத்தின் ஆறாம் ஞாயிறு. அடுத்த ஞாயிறு ஆண்டவரின் விண்ணேற்ற விழாவைக் கொண்டாடுகிறோம். விரைவில் இயேசு தங்களை விட்டுச் சென்றுவிடுவார் என்ற வேதனையில் இருக்கும் சீடருக்கு இயேசு ஆறுதலும் அமைதியும் கொடுத்து ஊக்கப்படுத்துவதே இன்றைய வாசகங்களின் மையச்செய்தியாக அமைகின்றது.
இன்றைய
நற்செய்தியில் இயேசு தம்மீது அன்பு கொள்பவர் செய்யக்கூடிய செயல்களையும் தூய ஆவியாரின் செயல்பாடுகளையும், தம்முடைய அமைதியைப் பற்றியும் தெளிவூட்டுகிறார். முதலில், இயேசுவை அன்பு செய்யக்கூடியவர்கள் செய்யக்கூடிய செயல்கள் என்பவை தந்தை கடவுளுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதும், அவருடன் கொண்டிருக்கும் ஆழமான உறவும் என்பதாகும். தாம் தொடர்ந்து இவ்வுலகில் இருக்கப்போவதில்லை என்பதை எடுத்துக்கூறி, தமக்குப் பின்வரும் தூய ஆவியார் சீடரோடு தொடர்ந்து இருப்பார்; தம்மைப் போன்று சீடருக்குக் கற்றுக்கொடுப்பார் (யோவா 14:26); நினைவூட்டுவார்; சான்று பகர்வார் (15:26); முழு உண்மையை நோக்கி வழிநடத்துவார் (16:13) என்கிறார். இவ்வாறு துணையாளர் (14:17) வழியாகத் தாம் சீடரோடு இருந்து செயல்படுவதாக உறுதி கூறுகிறார்.
இயேசு
அமைதியையே அளிக்க வந்தவர். அவர் பிறப்பின்போதே “உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக”
என வானவர் பாடினர். அவர் பலரை நலப்படுத்தியபோது “அமைதியோடு போ” என்றுதான் கூறினார். அவர் உயிர்பெற்று எழுந்து சீடரைச் சந்திக்கும்போதெல்லாம் “உங்களுக்கு அமைதி உண்டாகுக”
என வாழ்த்தினார். தமது பிரிவின் நேரத்திலும் தம் சீடருக்கு ‘அமைதி’ எனும் கொடையை வழங்குகிறார்.
இயேசு
தரும் அமைதி உண்மையானது; நீதியானது. எனவேதான் “நான் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல” என்கிறார். அமைதி இருவகைப்படும்: ஒன்று, உலகம் தரும் அமைதி; மற்றொன்று, இயேசு தரும் அமைதி. உலகம் தரும் அமைதி என்பது போரும் வன்முறையும் இல்லாத ஒரு நிலை என நினைக்கிறோம். இராணுவத்திற்கும்
போர்க்கருவிகளுக்கும்
பல இலட்சம் கோடி செலவிடுவதால் கிடைப்பதே அமைதி என உலக நாடுகள்
தங்கள் செயல்களை நியாயப்படுத்துகின்றன. சுருக்கமாகக் கூற வேண்டுமென்றால், உலகம் தரும் அமைதி ஆயுதங்களாலும் அடக்குமுறைகளாலும் கட்டமைக்கப்படுகின்றன. இது ஒரு போலியான, மயான அமைதி! ஆனால், இயேசு தரும் அமைதி உண்மையிலிருந்தும் நீதியிலிருந்தும் பிறப்பது. அது அவரது இதயத்திலிருந்து வெளிப்படுவது.
இயேசு
உணர்த்தும் அமைதி என்பது அரசியல் உறவுகளை வலுப்படுத்துதல், பொருளாதார அறம் காத்தல், சமய-இன-மொழி-நாடு
வேறுபாடுகளைக் களைதல், நேர்மையோடு நடத்தல், ஆதிக்கம் செலுத்தாமை, அன்பைப் போதித்தல், உடன்பிறந்த உறவுடன் வாழ்தல், மாண்பைப் போற்றல், எதிர்மறை உணர்வுகளை நீக்குதல் போன்ற குணநலன்களை வளர்த்துக் கொள்ளல். இவையே அமைதிக்கான அரண்கள். இவை அனைத்தும் நம் உள்ளங்களில் பதிந்து நடைமுறையில் வெளிப்படுமானால் உலகில் அமைதி பூக்கும். அன்பு, உண்மை, நீதி, சகோதரத்துவம் உடைய சமூகம் உருவாகும். வேற்றுமை பாராது அருகில் வாழும் சக மனிதர்களை அன்போடும்
உடன்பிறந்த உணர்வோடும் பழகும்போது அங்கே அமைதி மலரும். இச்சிந்தனைக்கு எடுத்துக்காட்டு இன்றைய முதல் வாசகம்.
முதல்
வாசகம் திரு அவையின் முதலாவது பொதுச்சங்கம் ‘எருசலேம் திருச்சங்கம்’ தோன்றிய
வரலாற்றுத் தேவையைப் பற்றியும் அதில் எடுக்கப்பட்ட முடிவைப் பற்றியும் விவரிக்கிறது (திப 15:1-29). தொடக்க காலத் திரு அவையில் முதலில் இணைந்தவர்களும் அனைத்துத் திருத்தூதர்களும் யூத மதத்திலிருந்து வந்தவர்களாகவோ அல்லது யூதக் கோட்பாடுகளைக் கடைப்பிடிக்கக்கூடியவர்களாகவோ
இருந்தனர். தொடக்கத் திரு அவையில் கிறித்தவ நம்பிக்கையைத் தழுவிய யூதரல்லாத பிற இனக் கிறித்தவர்களும் திரு அவையில் இணைந்து கொள்கின்றனர். திரு அவை எருசலேமை விட்டு வெளியில் சென்றபோது, முக்கியமாக அந்தியோக்கியாவிற்கும், அத்துடன் பவுலுடைய மறைபரப்புப் பணியினால் சின்ன ஆசியாவிற்கும் பரவத் தொடங்கியபோது திரு அவையில் இணைந்து கொண்ட யூதரல்லாதவர்கள் இவர்கள்.
இந்த
வேளையில் யூதக் கிறித்தவர்களுக்கும், யூதரல்லாத கிறித்தவர்களுக்கும் மோசேயின் சட்டங்களை அடிப்படையாகக் கொண்ட பல விவாதங்களும் கருத்து
முரண்பாடுகளும் தோன்றின. யூதக் கிறித்தவர்கள் தங்கள் மோசேயின் சட்டத்தின் அடையாளமாக இருக்கக்கூடிய விருத்தசேதனத்தை அனைவரும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என வாதிடுகின்றனர். பிற இனக்
கிறித்தவர்கள் மோசே சட்டத்தைக் கடைப்பிடிக்காவிடில் ஒழுக்க விழுமியங்கள் பலமற்றுப் போகும்; யூதக் கிறித்தவர்களின் தனித்தன்மை திரு அவையில் குறைகையில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டு அவர்கள் நலிந்து விடுவர் என அஞ்சினர். ஏனெனில்,
உரோமை அரசு தன் எல்லைக்குள் யூத மதத்தை ஏற்றுக் கொண்டிருந்தது.
இந்தப்
பிரச்சினை எருசலேமுக்குக் கொண்டுவரப்பட்டபோது, பேதுரு தான் கொர்னேலியு வீட்டில் பெற்ற அனுபவத்தைக் கொண்டு யூதச் சட்டங்கள் அனைவருக்கும் பொருந்தாது என விளக்குகிறார் (திப
10:44-47). பவுலும் பர்னபாவும் தங்களது மறைபரப்புப் பணி அனுபவத்தில், ‘இயேசுவின்மேல் கொண்ட நம்பிக்கையால்தான் மக்கள் மீட்பு பெறுகிறார்களே அன்றி, அவர்களுடைய செயல்களால் அல்ல’ எனப் பேசுகின்றனர் (கலா 3:24-25). இறுதியாக “நாம் சுமக்க இயலாத சுமையை இச்சீடருடைய கழுத்தில் எப்படி ஏற்ற முடியும்?”(திப 15:10) என்று பேதுருவும், “இன்றியமையாதவற்றைத் தவிர அதிகமான வேறு எந்தச் சுமையையும் சுமத்தக் கூடாது”
(15:28) என்று யாக்கோபுவும் திருவிவிலியச் சான்றுகளைச் சுட்டிக்காட்டி, ‘கடவுளுக்கு நாம் ஏற்புடையவராக நம் நம்பிக்கை போதுமானது’
என்று இரண்டு குழுக்களுக்கும் பொதுவான ஒரு முடிவை எடுத்தனர். எல்லாரும் அதை ஏற்றுக்கொண்டனர். இயேசு இறப்பதற்கு முன்னதாகத் தம் சீடருக்கு வாக்களித்ததுபோல, தூய ஆவியார் திருத்தூதர்களோடு இருந்து வழிநடத்தியதையும் கற்றுக்கொடுத்ததையும் அமைதியை ஏற்படுத்தியதையும் இன்றைய முதல் வாசகத்தில் காண முடிகிறது.
இன்றைய
இரண்டாம் வாசகத்தில், எருசலேம் ஆலயம் உரோமையரால் தரைமட்டமாக்கப்பட்ட பின்னணியில் (கிபி 70) யோவான் கண்ட காட்சியை விவரிக்கும்போது, கடவுளும் ஆட்டுக்குட்டியுமான இயேசுவே கோவில் என்றும், கோவில் இல்லாத குறையை இயேசுவே நிரப்புவார் என்றும், உரோமையரின் படையெடுப்பால் உருவான இருளை அகற்றும் ஒளி இயேசுவே என்றும் தம் மக்களுக்கு நம்பிக்கையைக் கொடுப்பதாக அமைகிறது யோவான் கண்ட காட்சி.
போர்,
வன்முறை, பகைமை, ஆதிக்கம், பேராசை போன்ற குழப்பங்களுக்கும் சிக்கல்களுக்கும் மத்தியில், இயேசு தரும் அமைதி என்னென்ன?
அ)
இயேசு தரும் அமைதி என்பது கடவுள்மீது வைத்துள்ள நம்பிக்கையிலிருந்து விளையும் கனி; அதாவது, ஆயிரம் துன்பங்களுக்கு நடுவிலும் இறைவனை மனதார நினைத்து, நம்பிக்கையை ஆதாரமாகக் கொண்டு வாழ்வோரிடம் தங்கும் அமைதி.
ஆ)
இயேசு தரும் அமைதி என்பது எதிர்நோக்கினால் விளையும் அமைதி. அதாவது, மகிழ்ச்சியோடு எதிர்நோக்கியிருப்பது நிறைவேறும் எனக் காத்திருப்பதில் கிடைக்கும் அமைதி (தீத் 2:13).
இ)
இயேசு தரும் அமைதி என்பது கடவுளிடமே நம்மையே முழுமையாகச் சரணடைதலில் கிடைக்கும் அமைதி. அன்னை மரியா, “நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்” (லூக்
1:38) என்று கூறியதுபோல!
நிறைவாக,
இயேசு தரும் அமைதி என்பது நல்ல உறவில் பிறக்கும் அமைதி. திருத்தந்தை பிரான்சிஸ் கூறியதுபோல, “அனைவரும் உடன்பிறந்த சகோதரர்கள்” என்பதை
உள்ளத்தில் ஏற்று, அனைவரோடும் நல்லுறவை வளர்த்துக்கொள்வதால் மலரும் அமைதி. உயிர்களை நேசிப்பதும், இயற்கையைக் காப்பதும், மனித உரிமைகளை மேம்படுத்தலும், மனித உயிர்களைப் பேணுதலும், ஏழைகளை மதித்தலும், ஏற்றத்தாழ்வுகளைக் களைதலும், சமய சுதந்திரத்தைக் காப்பதும், வன்முறையைத் தவிர்ப்பதுமே இயேசு தரும் அமைதியின் திறவுகோல்கள்!
நியூயார்க் நகரில் கொடூரமான குற்றங்களில் ஈடுபடுவோரைக் கடுமையான காவலில் வைத்திருக்கும் ‘சிங் சிங்’ சிறை ஒன்று உள்ளது. தற்போது இது ‘ஓசினிங் சிறை’ என்று அழைக்கப்படுகிறது. 1921-ஆம் ஆண்டு லூயிஸ் லோவ்ஸ் என்பவர் அச்சிறையின் கண்காணிப்பாளராக நியமனம் பெற்று அங்குப் பணியேற்கச் சென்றபோது, அவர் மனைவி கேத்தரினிடம் பலரும் கூறிய அறிவுரை ‘எக்காரணம் கொண்டும் அந்தச் சிறைக்குள் செல்லக் கூடாது’ என்பதுதான். ஆனால், கேத்தரினோ தன் கணவர் அங்குச் சென்ற ஒரு மாதத்திற்குள், தன் மூன்று குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு அச்சிறையில் நடைபெற்ற ஒரு விளையாட்டுப் போட்டியைக் காணச்சென்றார். உறவினர்கள் தடுக்க முயன்றபோது அனைவரிடமும் அவர் கூறிய பதில்: “என் கணவரும் நானும் இம்மனிதர்களைப் பாதுகாக்க வந்திருக்கிறோம்; பதிலுக்கு அவர்களும் எங்களைப் பாதுகாப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.”
கைதிகளிடம்
கேத்தரின் தனியே பேச ஆரம்பித்தார். அவர்களில் பார்வைத்திறன் அற்ற ஒருவருக்குப் பிரெய்லி மொழியைக் கற்றுக்கொடுத்தார்; பேசவும் கேட்கவும் முடியாத மற்றொரு கைதிக்குக் சைகை மொழியைக் கற்றுக்கொடுத்து, அவருடன் பல மணி நேரம்
உரையாடிக் கொண்டிருந்தார். கணவன்-மனைவி இருவரும் சிறைக்குப் பொறுப்பேற்று 16 ஆண்டுகள் சென்ற நிலையில், 1937-ஆம் ஆண்டு கேத்தரின் ஒரு கார் விபத்தில் மரணமடைந்தார். சிறைக்கு வெளியே ஒரு மைல் தூரத்தில் இருந்த கண்காணிப்பாளர் இல்லத்தில் அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது. இச்செய்தியை அறிந்த கைதிகள் அனைவரும் சிறையின் நுழைவாயிலுக்கருகே சோகத்தோடு நின்றுகொண்டிருந்தனர். இறுகிப்போன அவர்களுக்குள் இத்தகையதொரு மாற்றத்தைக் கண்ட உதவிக் கண்காணிப்பாளர் கதவுகளைத் திறந்தார். அனைவரும் கேத்தரினுக்கு இறுதி மரியாதையைச் செலுத்திவிட்டு ஒருவர் தவறாமல் அனைவரும் மீண்டும் சிறைக்குத் திரும்பினர்.
உயிர்ப்பு
அனுபவம் வார்த்தையால் அறிவிப்பதில் நிறைவு பெறுவதில்லை; மாறாக, ‘இயேசுவைப்போல ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவதில்’ (யோவா
13:34) அடங்கியிருக்கிறது
என்பதைப் பாஸ்கா காலத்தின் ஐந்தாம் ஞாயிறு நமக்கு நினைவூட்டுகிறது. அன்பே எல்லா அமைதிக்கும் மகிழ்ச்சிக்கும் ஊற்று; பாசத்தை வெளிப்படுத்தி உறவை வளர்க்கும் தூய சக்தி அன்பு! அன்பே ஆரோக்கியத்தின் அடையாளம்; அன்பே வலிமையானது; கல்லும் கரையும் கனிந்த அன்பால்! அன்பு பரந்துபட்ட ஒரு சொல்லாடல். அன்பைப் பற்றிப் பேசாத நாவு இல்லை; எழுதப்படாத ஏடுகள் இல்லை.
இயேசு
தம் சீடரை விட்டுப் பிரிந்து தந்தையிடம் செல்லும் முன்பு அவர் ஆற்றிய பிரியா விடையில் ஒரு பகுதியை இன்றைய நற்செய்தியில் வாசிக்கிறோம். தம் பிரியா விடையின் தொடக்கத்திலேயே “ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்” (13:34) என்னும்
அன்புக் கட்டளையை ஒரு புதிய கட்டளையாகக் கொடுக்கிறார். யோவான் நற்செய்தியில் இயேசு கொடுக்கும் வெளிப்படையான ஒரே கட்டளை இதுதான். இயேசு தம் சீடர்களை ‘பிள்ளைகளே’
என அழைத்துத் தம் ஆழ்ந்த அன்பை வெளிப்படுத்தி இந்த அன்பு நிறைவில் தம் அன்புக் கட்டளையைக் கொடுக்கிறார். ‘ஒருவர் காட்டிக்கொடுப்பார்’ (13:21-30), ‘மற்றொருவர்
மறுதலிப்பார்’ (13:36-38) என்று
இயேசுவுக்குத் தெரிந்த போதிலும், உலகில் வாழ்ந்த தமக்குரியோர் மேல் இறுதிவரைக்கும் அன்பு செலுத்தினார் (13:1). இறுதி வரை முழுமையாக அன்பு செய்த இயேசு, அந்த முழுமையிலிருந்தே தம் அன்புப் பிள்ளைகளுக்கு அன்புக் கட்டளையைக் கொடுக்கிறார். தம் சீடர்களின் பாதங்களைக் கழுவி, அன்புக்கு அவரே முன்மாதிரி ஆகிறார்.
அன்புக்
கட்டளை, திருவிவிலியம் முழுவதும் நிரம்பியுள்ள கட்டளை. அதுவும் அன்புக் கட்டளை பழைய ஏற்பாட்டின் மிக முக்கியமான கட்டளையாக இருந்தது (லேவி 19:18). எனவே, வார்த்தை அளவில் இது புதிய கட்டளை அல்ல; எனினும், இயேசு தாம் கொடுக்கும் அன்புக் கட்டளை ஒரு புதிய கட்டளை (13:34) என எந்த அடிப்படையில்
கூறுகிறார்?
கடவுளை
முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு மனத்தோடும் அன்பு செலுத்த வேண்டும் என்பது யூத சமயத்தின் மிக முக்கியமான கட்டளையாக இருந்தது (இச 6:4-9). இதுவே ஒவ்வொரு யூத வழிபாட்டின் தொடக்கத்திலும் கூறப்பட்டது. ஒவ்வொரு யூதக் குழந்தையும் முதன் முதல் மனப்பாடம் செய்த பகுதியும் இதுவே. இதனையே யூத ரபிகள் எழுதி நெற்றியில் அணிந்து கொண்டனர். வீடுகளின் கதவுகளில் பொருத்தி வைத்தனர். யூதர்களின் முதன்மையான ‘கடவுள் அன்பு’ கட்டளையில் பிறர் அன்புக் கட்டளையைப் புகுத்தியவர் இயேசு. இணைச்சட்டம் 6:5 உடன், லேவியர் 19:18 -ஐயும் சேர்த்து முதன்மையான கட்டளையை உருவாக்குகிறார் இயேசு. இயேசுவுக்கு முன்பு எந்த ஒரு மறைநூல் அறிஞரும் கடவுள் அன்பு - பிறர் அன்புக் கட்டளைகளை இணைத்துப் பேசியதில்லை. இயேசு இந்தக் கட்டளையின் புதுமைக்கூறுகளை விளக்குகிறார்.
இயேசுவின்
அன்புக் கட்டளைப்படி, இயேசு நம்மை அன்பு செய்வதுபோல நாமும் அடுத்திருப்போரை அன்பு செய்ய வேண்டும் (13:34). அதாவது, தம் உயிரையே கொடுக்கும் அளவுக்கு அன்பு செய்ய வேண்டும். சிலுவைச் சாவின் வழி இயேசுவின் அன்பின் அளவு வெளிப்பட்டது. தம் நண்பருக்காக உயிரைக் கொடுப்பதைவிடச் சிறந்த அன்பு யாரிடமும் இல்லை (15:13) என்பது இயேசுவே கற்றுத் தந்த இலக்கணம். எனவே, இயேசு போதிக்கும் அன்பு வெறும் சொல்லிலும் உணர்விலும் வெளிப்படும் ஒன்று அல்ல; மாறாக, அது செயலில், தியாகத்தில், தம் உயிரையே கையளிக்கும் நிலையில் வெளிப்படுவது. இவ்வாறு இயேசுவின் அன்பின் பொருள், ஆழம் புதிது! இத்தகைய அன்பையே சீடர்களும் கடைப்பிடிக்கப் போவதாக உறுதி கூறுகின்றனர். பேதுரு அனைத்துச் சீடர்களின் பதிலாளாக இயேசு எதிர்பார்க்கும் அன்பின் தன்மையை, உயிர் கொடுக்கும் தன்மையைத் தாமும் கொடுப்பதாகக் கூறுகிறார் (13:37). சீடர்கள் இயேசுவின் இறப்பிற்குப் பிறகு மறுதலித்தும் அச்சமுற்றும் துவண்டு கிடந்த போதிலும் யாவரும் தம் நண்பர் இயேசுவுக்காக உயிரையே கையளித்தனர் என்பது வரலாறு.
இன்றைய
முதல் வாசகம் பவுல் மற்றும் பர்னபாவின் முதல் தூதுரைப்பயணத்தின் நிறைவுப் பகுதியாக அமைகிறது. சீடர்களும் இயேசுவைப் பின்பற்றுகின்ற மக்களும் தொழுகைக்கூடத் தலைவர்களால் பல்வேறு எதிர்ப்புகளையும் ஆபத்துகளையும் சந்தித்தபொழுதிலும், பவுல் சீடர்களைச் சந்தித்துத் திடப்படுத்துகிறார். துன்பங்கள் வழியாகவே இறையாட்சியை அடைய முடியும் என்னும் உண்மையை நேரிடையாகவே உரைக்கிறார். சீடர்கள் வெறுத்து ஒதுக்கப்பட்டாலும் நிராகரிக்கப்பட்டாலும் ஆபத்துகளை எதிர்கொண்டாலும், அவர்கள் துணிந்து மேற்கொண்ட பணி கிறித்தவத்தின் கதவுகளைப் பிற இனத்தாருக்குத் திறந்துவிட்டது. கிறிஸ்துவைப் பின்தொடர்ந்த சீடர்களும், அவர்கள் காட்டிய வழியைத் தொடர்ந்தவர்களும் துவக்கத்தில் சந்தித்தவை வன்முறையாக, மரண தண்டனையாக இருந்தாலும், இத்தகைய கொடுமைகள் மத்தியிலும் கிறித்தவர்களை வாழவைத்தது அன்பின் அடிப்படையில் பிறந்த நம்பிக்கைதான்.
திருவெளிப்பாடு
நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ள இன்றைய இரண்டாம் வாசகம் நம்பிக்கையில் தோய்த்து எடுக்கப்பட்ட பகுதி. வேதகலாபனை, துன்பங்கள், அச்சுறுத்தல்கள் எனத் துயருற்ற கடவுளின் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாக அமைகிறது யோவான் கண்ட காட்சி. உரோமை அரசர் தொமிசியன் காலத்தில் எருசலேம் கோவில் அழிக்கப்பட்டது. கிறித்தவச் சமயத்தை ஏற்றவர்கள் பெருமளவில் கொல்லப்பட்டனர். புனித யோவான் பத்மோஸ் தீவுக்கு நாடு கடத்தப்பட்டார். இந்தச் சூழ்நிலையில் கிறித்தவர்களுக்கு ஊக்கமும் நம்பிக்கையும் அளிக்கும் வகையில் புனித யோவான் திருவெளிப்பாடு நூலை எழுதினார். கிறித்தவக் குடும்பத்திற்கு நம்பிக்கையை ஊட்டும் வண்ணம் “கடவுளின் உறைவிடம் மனிதர் நடுவே உள்ளது. இனிமேல் சாவு இராது. துயரம் இராது, அழுகை இராது, துன்பம் இராது” என்ற உயரிய எண்ணத்தை வழங்குகிறார் யோவான்.
அதிகாரத்தை
நம்பி வாழ்ந்த உரோமை அரசுகள் இன்று இல்லை. ஆனால், அன்பை மட்டுமே நம்பி வாழ்ந்த கிறித்தவம் இன்று உலகெங்கும் பரவியுள்ளது. கிறித்தவ நம்பிக்கையின் ஆணிவேர் அன்பு ஒன்றே. அந்த அன்புதான் முதல் கிறித்தவர்களை அப்பம் பகிர்வதிலும் தங்கள் உடைமைகளைப் பகிர்வதிலும் ஒன்றிணைத்தது.
எனவே,
கிறிஸ்துவில் கடவுள் வெளிப்படுத்தியுள்ள அளவிட முடியாத அன்பை மக்கள் அனைவரும் சுவைக்கும்படியாக நமது வாழ்வு அமைய வேண்டும். இயேசுவைப்போல அளவின்றி இவ்வுலகை அன்பு செய்ய வேண்டும். புனித பெர்னாந்து கூறுவதுபோல, “அளவின்றி அன்பு செய்வதே அன்பின் அளவுகோல்.” இயேசுவின் அன்பு தன்னலமற்றது; அது மன்னிக்கும் அன்பு. இத்தகைய அன்பை நாம் பிறர்மீது காட்டும்போது, நாம் இயேசுவின் சீடர்கள் என்பதை இந்த உலகம் அடையாளம்
காணும். அன்பு வளரும் இடங்களில் உண்மையான கிறித்தவமும் நம்பிக்கையும் செழித்து வளரும். உண்மையான அன்பு மட்டுமே எப்பொழுதும் நிலைத்து நிற்கும். புதியதொரு விண்ணகத்தையும், புதியதொரு மண்ணகத்தையும், புதியதொரு மனிதக் குடும்பத்தையும் அன்பின் வழியே உருவாக்க, இயேசு நமக்குத் தரும் புதிய கட்டளையை அணிந்துகொள்வோம்.
உயிர்ப்புக் காலத்தின் 4-ஆம் ஞாயிறை ‘நல்லாயன் ஞாயிறு’ என்றும், ‘இறையழைத்தலுக்காகச் செபிக்கும் உலக நாள்’ என்றும் சிறப்பிக்கின்றோம். நல்லாயராம் இயேசுவை நினைவுகூரும் இன்றைய வாசகங்கள் அவரைப் போன்று பொறுப்புடன் ஆயரின் வழியில் நடக்க நம்மை அழைக்கின்றன.
ஆடுகளும்
ஆயனும் திருவிவிலியத்தில் மிக முக்கிய உருவகங்களாகப் பார்க்கப்படுகின்றன. ஆடு மேய்க்கும் தொழிலைச் செய்து வந்த இஸ்ரயேல் மக்கள் அத்தொழில் அடிப்படையிலான உருவகங்களைப் பயன்படுத்தி வந்தனர். ஆயர் பணி இஸ்ரயேல் மக்களிடையே மிக முக்கியமான தொழிலாகவும் கலாச்சாரமாகவும் இருந்துள்ளன. ஆடுகள் எப்போதும் மென்மையானதாகவும் ஆயரின் குரலைக் கேட்பவையாகவும் காணப்பட்டன. மந்தையைச் சுற்றி எப்போதும் ஆபத்துகளும் நிறைந்திருந்தன. எனவே, ஓர் ஆயரின் மிக முக்கியமான பணி தம் மந்தையை ஆபத்துகளிலிருந்து பாதுகாத்தல், மேய்ச்சல் நிலத்திற்குக் கூட்டிச் செல்லுதல், தண்ணீர் இருக்கும் பகுதியை அடையாளம் காணுதல், நேரிய வழியில் நடத்திச் செல்லுதல், சினையாடுகளைப் பாதுகாத்தல், குட்டி ஆடுகளைத் தூக்கிச் சுமத்தல் போன்றவையாகும்.
இஸ்ரயேல்
மக்களின் வரலாற்றைப் பார்த்தால், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, மோசே, தாவீது போன்ற மாபெரும் தலைவர்கள் அனைவரும் ஆயர்களாக இருந்திருக்கிறார்கள். தாவீது மந்தை மேய்ப்பவராக இருந்து பின்னர் இஸ்ரயேலின் ஆயராக மாறினார் (2சாமு 7:8). பின்னாளில் இஸ்ரயேல் மக்கள் தம் அரசர்களையும் (1அர 22:17; எரே 10:21; 23:1-2) தலைவர்களையும் இறைவாக்கினர்களையும் ஆயராகப் பார்த்தனர். ஓர் ஆயருக்கு இருக்க வேண்டிய பண்புகளைத் தம் அரசர்களில், தலைவர்களில் எதிர்பார்த்தனர். இஸ்ரயேல் சமுதாயத்தில் இத்துணை உயர்ந்த மதிப்புப் பெற்றிருந்த ஆயர்கள் படிப்படியாகத் தங்கள் மதிப்பை இழந்தனர்.
ஆயர்கள்-தலைவர்கள் நல்லவர்களாக இல்லை; அவர்கள் ஆடுகள் மீது கவலையற்ற ஆயர்களாக இருந்தனர். எசேக்கியேல் இறைவாக்கினர் நீதி நேர்மையற்றுச் செயல்பட்ட ஆயர்களான அரசர்கள், மேய்ப்பர்கள், தலைவர்கள் போன்றவர்களின் வீழ்ச்சியைக் குறிப்பிடுகின்றார் (எசே 34:1-10). இந்த ஆயர்கள் மக்களுக்காக வாழாமல், தன்னலம் நிறைந்த அதிகாரத்தோடு மக்களைச் சுரண்டி வாழ்ந்தனர் (34:7-8).
தலைவர்களும்
அரசர்களும் தவறியபோது அவர்களைக் கண்டித்த இறைவன், தம்மையே நல்ல ஆயராக இறைவாக்கினர் வழியாக மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார் (எரே 10:21; எசேக் 34:11-31; செக் 10:3; எசா 44:28). தாவீதின் மரபிலிருந்தே நல்ல ஆயர் தோன்றப்போவதாக உறுதி கூறுகிறார் (எசே 34:23-24). அந்த நல்ல ஆயரே வரவிருக்கும் மெசியா (எசா 40:11). இன்றைய நற்செய்தியில் யோவான், ஆண்டவர் இயேசுவை உண்மையான ஆயராகக் காட்டுகிறார்.
நல்லாயன்
என்றதுமே இயேசு ஓர் ஆட்டுக் குட்டியைத் தம் தோள்மீது அல்லது மார்போடு அணைத்துச் சுமந்துசெல்லும் அமைதியான இயேசுவின் உருவம்தான் முதலில் நம் உள்ளங்களில் பதிகின்றது. ‘நல்ல ஆயர்’ என்ற வார்த்தை மிகவும் ஆழமானது. நல்ல ஆயர் தம் ஆடுகளின் பெயர் அறிந்தவராக, அவற்றின்மீது அக்கறை கொண்டவராக, அவற்றை வழிநடத்தப் பாதை தெரிந்தவராக, ஆபத்து காலத்தில் அவர்களைப் பாதுகாக்க வல்லவராக, எதிரிகளை எதிர்த்துப் போராடுபவராக, தக்க வேளையில் உணவளிக்கின்றவராகத் தம்மை அடையாளப்படுத்துகின்றார் (யோவா 10:1-15). நல்ல ஆயர் ஆடுகளுக்காக எந்தத் தியாகத்தையும் செய்வார்; ஆடுகள் வாழ்வு பெறும் பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும் பொருட்டுத் தம் உயிரையே கொடுக்க முன் வருவார். இன்றைய நற்செய்தியில் யோவான் இயேசுவைத் தலைசிறந்த, தன்னிகரற்ற ஒரு நல்ல ஆயராகக் காட்டுகிறார்.
முதலாவதாக,
நல்ல ஆயர் என்பவர் தம் ஆடுகளை நன்கு அறிபவராக இருப்பார். இயேசுவே நல்ல ஆயர். அவர் சமுதாயத்தில் அடையாளமிழந்து, ஒடுக்கப்பட்டு, விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட மக்களுடன் தம்மை அடையாளப்படுத்தி, அவர்களின் பெயர்களை நன்கு அறிந்து தம் மந்தையை அழைத்தார் (யோவா 10:3). நல்ல ஆயர் தம் ஆடுகளின் நிலை அறிந்து செயல்பட்டார். நலிவுற்ற ஆடுகளைத் திடப்படுத்தினார்; தளர்வுற்ற ஆடுகளைத் தம் தோள்மீது சுமந்து சென்றார். வீழ்ந்து கிடக்கும் ஆடுகளுக்கு வலுவூட்டினார். காயப்பட்ட ஆடுகளை நலமாக்கினார். ஆடுகளின் தேவைகளை முதன்மையாக்கிச் செயல்பட்டார். இயேசுவே நல்ல ஆயராக இருந்து செயல்படுவதால், ஆடுகளுக்கு யாதொரு குறையுமில்லை (திபா 23). ஆயரான இயேசுவின் திருமுழுக்குப் பெற்ற நாம் அவர் மந்தையைச் சேர்ந்த ஆடுகள். இன்றைய பதிலுரைப் பாடலும், “நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்” என்கிறது. நமது பலவீனத்தையும் இயலாமையையும் தேவைகளையும் நன்கு அறிந்து, நம்மைக் கரிசனையோடு
காக்கும் நல்லாயனாம் இயேசுவின் குரலைக் கேட்டு அவரைப் பின்தொடர நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்.
இரண்டாவதாக,
நல்ல ஆயர் என்பவர் தம் மக்கள் பாதிக்கப்படும்போது அவர்களைப் பாதுகாக்க வல்லவராக இருப்பார். ஆயர் தனது ஆடுகளைத் திருடரிடமிருந்தும் கொள்ளையரிடமிருந்தும் காப்பாற்றுகிறார். ஆடுகளுக்கு ஓநாயாலும், மற்றப் பிற காட்டு விலங்குகளாலும் ஆபத்துகள் ஏற்படுவது போல, மக்களுக்கும் ஆபத்துகளும் அச்சுறுத்தல்களும் ஏற்படும்போது, அவற்றை இனங்கண்டு, அவற்றால் ஏற்படும் பாதிப்பை உணர்ந்து, அவற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டியது ஓர் ஆயரின் தலையாயக் கடமை. இப்பணி ஆபத்தானதும் கூட. ஆடுகளைக் காப்பாற்றும் பொருட்டு ஆயருக்கு ஓநாய்களாலும், பிற கொடிய விலங்குகளாலும் ஆபத்து ஏற்படுவதுபோல, தீய சக்திகளும் தலைவரைத் தாக்கலாம்; உயிரையே பறிக்கலாம் (இந்தியாவில் அருள்சகோதரி இராணி மரியா, அருள்பணி. ஸ்டேன் சுவாமி, மறைப்பணியாளர் கிரகாம் ஸ்டெயின்ஸ் போன்றோர் கொல்லப்பட்டதுபோல). இருப்பினும், ஆடுகளுக்காகத் தன்னுயிரையும் கையளிக்க முன்வர வேண்டும். இயேசு நல்ல தலைவர், நல்ல ஆயர். அவர் தம் மக்களின் பொருட்டுத் தம் உயிரையும் கொடுக்கும் அளவிற்கு மக்களை அன்பு செய்தார் (10:12). நல்லாயராம் இயேசு தாம் வாழ்ந்த சமுதாயத்தில் வறியோர், நோயாளிகள், ஒடுக்கப்பட்ட பெண்கள், குழந்தைகள், சமுதாய விளிம்பிற்குத் தள்ளப்பட்டோர் யாவரும் மனித மாண்போடு, சமத்துவத்தோடு வாழ்ந்திட தம் உயிரையே கையளித்தார் (10:15).
இயேசு
சீடர்களின் காலடிகளைக் கழுவுவதன் மூலம், பிறருக்காகவே பணியாற்றும் தன்னிகரற்ற புதிய தலைமையை, பிறரின் மாண்புநிறை வாழ்விற்காகப் பணியாற்றும் தலைமைத்துவத்தின் புதிய பண்பாட்டைத் தொடங்கி வைத்தார். இயேசுவைப் போன்ற நல்ல ஆயர்களைக் கடவுள் காலத்தின் தேவை உணர்ந்து திரு அவைக்குத் தந்து கொண்டிருப்பதை நினைத்துப் பெருமிதம் கொள்வோம்.
நல்லாயன்
ஞாயிறைக் கொண்டாடும் இந்நாளில் 12 ஆண்டுகள் திரு அவையின் ஒப்பற்ற பணியாளராக, மக்களின் திருத்தந்தையாக, போர் மற்றும் வன்முறையால் துன்புறுபவர்கள், ஏழைகள், வலுவற்றவர்கள், ஒதுக்கப்பட்ட மக்களுக்காக எப்போதும் குரல் கொடுத்து, நல்ல ஆயராகப் பணியாற்றி இறைபதம் அடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் எடுத்துக்காட்டான வாழ்க்கையோடு நம் சிந்தனைகளை நிறைவு செய்வோம்.
2013, மார்ச் 19-ஆம்
நாள் புனித யோசேப்பு பெருவிழாவன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திரு அவையின் தலைவராகப் பணியேற்ற அவ் வேளையில், பணியேற்புத் திருப்பலிக்கு முன் திறந்த ஒரு வாகனத்தில் அவர் வளாகத்தைச் சுற்றி வந்தபோது, அங்கிருந்த ஒவ்வொருவரையும் கரம் நீட்டி அவரால் தொடமுடியவில்லை. உடனே வாகனத்தை நிறுத்தச் சொல்லி, இறங்கிச் சென்று அங்கிருந்த ஒரு மாற்றுத்திறனாளியை அரவணைத்து, அவர் நெற்றியில் திருத்தந்தை முத்தமிட்டது, அப்போதே மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஓர் இளகிய, மென்மையான மனத்தையும், மக்களோடு தன்னை இணைத்துக்கொள்ள விழையும் ஆவலையும் எப்போதும் வெளிப்படுத்தும் திருத்தந்தை, தலைமைப் பணியேற்றத் திருப்பலியில் வழங்கிய மறையுரையில், “தலைமைத்துவம், ஒரு பணியே அன்றி, பதவியோ, அதிகாரமோ அல்ல” என்றும் “தலைவர் அல்லது காவலர் என்பவர் இளகிய, மென்மையான மனம் கொண்டவராக இருக்கத் தயங்கக்கூடாது” என்றும்
தெளிவாக்கினார்.
“ஏழைகளை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது” என்று அடிக்கடி வலியுறுத்திய திருத்தந்தை போர், சமூக அநீதிகள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மற்றும் உலகளாவிய அலட்சியத்தைக் கடுமையாகக் கண்டித்தும் குரல் எழுப்பியும் நற்செய்தியின் பாதையில் நடந்து, அனைவரும் சகோதரர்-சகோதரிகளாக, ஒருவருக்கொருவர் இணைந்து நடப்பதன் அழகை மீண்டும் கண்டறிய அழைப்பு விடுத்தார். “மக்களைப் போலவே நானும் ஒரு பாவி” என்றும், “மக்களோடு பயணம் செய்யும் ஒரு பயணி” என்றும் கூறி, கடவுளாகிய இயேசுவின் உண்மைச் சீடராக, சிறந்த முன்மாதிரிகையாக, நல்ல ஆயராகத் திகழ்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஆன்மாவை மூவொரு கடவுளின்
எல்லையற்ற இறை இரக்கத்தில் அர்ப்பணித்துச் செபிப்போம்.
‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ என்ற
தலைப்பில் இந்த 2025 யூபிலி ஆண்டினை அர்ப்பணித்த திருத்தந்தை அவர்கள் விதைத்த விதையானது, கிறித்தவர்கள் மற்றும் நல்லெண்ணம் கொண்ட அனைத்து மக்களின் இதயங்களிலும் இன்று மட்டுமல்லாது, என்றென்றும் தொடர்ந்து முளைக்கும் என்பது திண்ணம்.
சுற்றி வாழும் அனைவராலும் கைவிடப்பட்ட சூழலில், அச்சம் மேலிடும்போது, தனிமையில் ஒருவர் நிற்கும்போது, மன அழுத்தத்தால் அழும்போது, வறுமை வாட்டும்போது ஒவ்வொருவரும் தங்களுக்குள் கேட்டுப்பார்க்கும் கேள்விகள்: ‘என்னைக் கைதூக்கி விடுபவர் யார்?’, ‘என் காயங்களுக்குக் கட்டுப் போடுபவர் யார்?’ என்பதுதான். இந்தக் கேள்விகளில் மறைந்திருக்கும் ஏக்கம்: “ஆண்டவரே, எனக்குச் செவிசாயும்; என்மீது இரங்கும்; எனக்குத் துணையாய் இரும்” என்பதுதான் (திபா 30:10). இக்கேள்வியும் மன்றாட்டும் இயேசுவின் பாடுகள் மற்றும் இறப்புக்குப்பின் சீடர்கள் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் மையம் கொண்டன.
கல்வாரிக்
கொடுமைகளுக்குப்பின் சீடர்களின் வாழ்நிலை, அச்சமும் விரக்தியும் நிறைந்ததாகவே இருந்தது. தங்களின் கனவுகளும் எதிர்பார்ப்புகளும் பொய்த்துப்போனதாக எண்ணினர். உரோமையருக்கும் யூதர்களுக்கும் அச்சப்பட்டுக் கதவுகளை மூடி, தங்களையே பூட்டி வைத்துக்கொண்டனர். “ஆண்டவரே, எங்கள்மீது உமது முகத்தின் ஒளி வீசும்படிச் செய்தருளும்” (திபா
4:6) என்பதுபோல வேண்டிக்கொண்டனர். இந்த நிலையில்தான் உயிர்த்த ஆண்டவர் வெவ்வேறு சீடர்களுக்கு, வெவ்வேறு இடங்களில் தோன்றுகின்றார்.
பல
வழிகளில் காயப்பட்டிருந்த தம் சீடர்களை இயேசு தேடிச்சென்று குணமாக்கிய நிகழ்வுகளில் ஒன்றுதான் இன்று நற்செய்தியாக நமக்கு வழங்கப்பட்டுள்ளது. பாடுகளின் நேரத்தில் இயேசுவை விட்டுச் சீடர்கள் விலகிச் சென்றிருந்தாலும், கல்வாரி இயேசு கருணையோடு அவர்களை அண்டிச் சென்று ஒரு தாயைப்போல உணவூட்டுவதைக் காண்கின்றோம்.
சென்ற
வார நற்செய்தியில் சந்தேகத்துடன் போராடிப் புண்பட்டிருந்த தோமாவை உயிர்த்த இயேசு சந்தித்து நலமாக்கிய நிகழ்வைச் சிந்தித்தோம். அதன் தொடர்ச்சியாக ‘இயேசுவை எனக்குத் தெரியாது’
என்று மறுதலித்த பேதுருவின் மனக்காயங்களை உயிர்த்த இயேசு குணமாக்கும் நிகழ்வை இன்று சிந்திக்கின்றோம்.
பல
சீடர்கள் இயேசுவை விட்டு விலகிச் சென்றபொழுது பன்னிரு சீடரின் சார்பாகப் பேதுரு ஒருவரே “ஆண்டவரே, நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன”
(யோவா 6:68) எனத் தம் பற்றுறுதியை முழுமையாக வெளிப்படுத்துவார். ஆனால், அவரே இப்போது மற்றச் சீடர்களைப் பார்த்து, தான் மீன்பிடிக்கப் போவதாக அறிவிக்கிறார். உடனே தோமா, நத்தனியேல், யாக்கோபு, யோவான், மேலும் இரு சீடர்களும் சேர்ந்து ‘நாங்களும் உம்மோடு வருகிறோம்’
என்று கூறிப் படகில் ஏறுகிறார்கள் (21:3).
“இனி நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்”
(மத் 4:19; மாற் 1:17; லூக் 5:10) எனும் இயேசுவின் அழைப்பைத் தங்களால் தொடர முடியவில்லையே என்ற மனக்காயங்களோடும், ‘இயேசுவை எங்களுக்குத் தெரியாது’
என்று மறுதலித்தக் குற்றப்பழியோடும், எந்த மக்களைப் பிடிப்பதற்காக அழைக்கப்பட்டோமோ அவர்களே தற்போது தங்களைப் பிடித்து உரோமையர் கையில் ஒப்படைக்கத் தயாராகிவிட்டார்களே என்ற மனவேதனையோடும் சீடர்கள் தங்கள் பழைய வாழ்வைத் தேடிச்செல்கிறார்கள். ஆனால், அந்தப் பழைய வாழ்வில் அவர்கள் முதலில் சந்தித்தது ஏமாற்றமே! அன்று இரவு முழுவதும் அவர்கள் முயன்றும் மீன் ஒன்றும் கிடைக்கவில்லை (21:3). யோவான் கூறும் ‘இரவு’ அவர்கள் மீண்டும் தங்கள் பழைய வாழ்வுக்குச் சென்ற அந்த நிலையையும் சேர்த்துக் குறிக்கிறது.
தங்கள்
பழைய வாழ்விலும் ஏற்பட்ட ஏமாற்றத்தால் உடைந்துபோன சீடர்களை மீண்டும் ‘மனிதர்களைப் பிடிப்பவர்களாக’ இயேசு
மாற்றுகிறார். அங்கே வியக்கத்தக்க முறையில் ஏராளமான மீன்கள் கிடைத்தது. இயேசுவை அவர்களுக்கு அடையாளப்படுத்தியது. அளவுக்கு அதிகமான இரசம் (2:6), அளவுக்கு அதிகமான தூய ஆவி (3:34), அளவுக்கு அதிகமான வாழ்வு தரும் தண்ணீர் (4:14; 7:37), அளவுக்கு அதிகமான அப்பம் (6:11) அளவுக்கு அதிகமான நிலைவாழ்வு (10:10) ஆகியவற்றின் ஊற்றாகிய இயேசுவே அதிகமான மீன்பாட்டிற்குக் காரணம் என அவர் கண்டுகொள்கிறார்.
இயேசுவின்
ஒற்றை வார்த்தையால் படகுகள் மூழ்கும் அளவுக்கு அதிகமான மீன்கள் கெனசரேத்து ஏரிக்கரையில் கிடைத்தது, பேதுருவின் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக அமைந்திருந்தது. அதுதான்
அவரது முதல் அழைப்பு (லூக் 5:1-11). அனைத்தையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றியவர் அல்லவா அவர்! அந்நிகழ்வை அவரால் எப்படி மறந்திருக்க முடியும்? திபேரியக் கடலில் பேதுரு பெற்ற இந்த இறையனுபவம் ஏற்கெனவே அவர் கெனசரேத்து ஏரிக்கரையிலும் பெற்ற இறையனுபவத்தை நினைவூட்டுவதாக அமைந்திருக்கும்.
கெனசரேத்து
ஏரிக்கரையிலும் திபேரியக் கடலிலும் நடந்த இரு நிகழ்வுகளை இணைத்துச் சிந்திக்கும்போது, இயேசுவுக்கும் பேதுருவுக்கும் இடையே உருவான ஓர் உறவின் ஆழத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. கெனசரேத்து ஏரியில் அளவற்ற மீன்பாட்டைக் கண்டதும் சீமோன் பேதுரு இயேசுவின் கால்களில் விழுந்து, “ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்” என்றார்
(லூக் 5:8). திபேரியக் கடலில் கிடைத்த அளவற்ற மீன்பாட்டைக் கண்டதும், உடனே கடலில் குதித்து, இயேசுவை நோக்கி நீந்திச் செல்கிறார். கெனசரேத்து ஏரியில் தன்னை விட்டுப் போய்விடுமாறு வேண்டிக்கொள்ளும் பேதுரு, திபேரியக் கடலில் இயேசுவை நோக்கி விரைந்து செல்கிறார். கெனசரேத்து ஏரிக் கரையில் பேதுரு பெற்ற தன் அழைப்பை மீண்டும் உணர்கிறார். இந்தமுறை இயேசுவை விட்டு விலகிச் செல்ல மனமில்லாமல் இயேசுவை இறுகப் பற்றிப் பிடிக்கிறார். அதிலும் சிறப்பாக, பழைய நிலைக்குப் போகலாம் என்று நினைத்த பேதுருவை இன்னும் ஆழமாய் உறுதிப்படுத்துகிறார் இயேசு.
மும்முறை
இயேசுவை மறுதலித்த பேதுருவிடம் மும்முறை இயேசு “நீ என்மீது அன்பு
செலுத்துகிறாயா?” எனக் கேட்டு, மும்முறை அன்பு அறிக்கையிட வாய்ப்பளிக்கிறார்; அவரது மனக்காயங்களையும் போக்கிவிடுகின்றார். அதனால்தான் “அவர் தம் காயங்களால் நாங்கள் குணமடைந்துள்ளோம்” (1பேது
2:24) எனப் பேதுருவால் அறிக்கையிட முடிந்தது. இச்சந்திப்பில், மன்னிப்பு என்ற சொல்லோ, எண்ணமோ இடம்பெறவில்லை. ஆனால், அங்கு அன்பு பறைசாற்றப்பட்டது; பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அந்தப் பரிமாற்றத்தில் மன்னிப்பு மடைதிறந்த வெள்ளமெனப் பாய்ந்து, பேதுருவை மூழ்கச் செய்தது. ‘கைகளை விரித்துக் கொடுப்பாய்’ என்பது
தன் தலைவர் இயேசுவைப் போலவே பேதுருவும் நற்செய்தியின் பொருட்டுத் தன் உயிரைக் கையளிப்பார். இயேசுவைப் போலவே பேதுருவும் சிலுவையில் அறையப்படுவார் என்பதைக் குறிப்பதாக அமைகிறது.
சீடர்களின்
வலையில் கிடைத்த மீன்களின் எண்ணிக்கை ‘153’ என்பது சிறப்புக் கவனம் பெறுகிறது. இதற்கு அறிஞர் பலர் பல்வேறு விளக்கங்களைக் கொடுத்தாலும், அவற்றுள் தூய எரோணிமுசு அளிக்கும் விளக்கம் சிறந்ததாகத் தெரிகிறது. அதாவது,
பண்டையக் கால உயிரியல் அறிஞரின் கணக்குப்படி மீன் வகைகள் 153. இந்த 153 மீன்களுள் எல்லா மீன்களும் அடங்கிவிடும். 153 என்பது அனைத்து மீன்களையும் உள்ளடக்கும் ஒரு முழுமைச் சொல். எனவே, 153 மீன்கள் வலையில் பிடிபட்டன என்னும் செய்தியின் வழியாகப் பிற்காலத்தில் எல்லா வகையான மனிதரும் திரு அவை என்னும் படகில் வந்து சேர்வர்; யாரும் விடுபட்டுப் போகமாட்டார்கள் எனப் புரிந்துகொள்ளலாம்.
எனவே,
திரு அவை அனைவருக்குமானது. விளிம்புநிலையினர், மாற்றுத்திறனாளிகள், நோயுற்றோர், குழந்தைகள், பிறக்காத சிசுக்கள், புதுமைப் பாலினத்தவர், இல்லவாசிகள் என எல்லாருமே திரு
அவையின் கரங்களில் உள்ளனர். ஆகவே, உயிர்ப்பின் மக்களாகிய நாம் எவரையும் புறக்கணிக்கக் கூடாது என்பது முதல் செய்தி. மேலும், நமது நற்செய்தி அறிவிப்புப் பணியில் துன்புறுதலும் கடவுளின் ஆசி என்பது நாம் உணர்ந்துகொள்ள வேண்டிய மற்றுமொரு பாடம்.
நிறைவாக,
இரவெல்லாம் உழைத்தும் பயனேதும் காணாத சீடர்களுக்கு உயிர்த்த இயேசு, ஒரு தாயின் கனிவோடு உணவு தயாரித்துப் பரிமாறியது போல, பசியிலும் களைப்பிலும் காயப்பட்டிருக்கும் இந்த மனிதகுலத்திற்கு நாமும் உயிர்த்த இயேசுவின் இரக்கத்தையும் அரவணைப்பையும் வழங்கிடுவோம்.
சந்தேகமும் இரக்கமும் ஒன்றையொன்று சந்திக்கும் ஞாயிறை இன்று கொண்டாடுகிறோம். இந்த ஞாயிறு ‘இறை இரக்கத்தின் ஞாயிறு’ என்றும், ‘தோமாவின் நாள்’ என்றும் அழைக்கப்படுகிறது. சந்தேகத்திலும் குழப்பத்திலும் தவித்த சீடர்களைத் தேடி குறிப்பாக, தோமாவைத் தேடிச் சென்று, அவருக்கு உறுதி வழங்கிய இயேசுவையும், இயேசு உயிர்த்து விட்டார் என்பதை நம்புவதில் ஆதாரம் கேட்பவராக, ஆண்டவரின் கைகளிலும் விலாவிலும் உண்டான காயங்களைத் தொட்டுப்பார்க்க வேண்டும் என்ற நிபந்தனையை முன்வைக்கும் தோமாவையும் இன்றைய நற்செய்தியில் சந்திக்கிறோம்.
உயிர்த்த
ஆண்டவரைப் பிற சீடர்களோடு இணைந்து சந்திக்காத தோமா, திருவிவிலியத்தில் சந்தேகத்துக்கு எடுத்துக்காட்டாகக் கூறப்படும் மனிதராகப் பார்க்கப்படுகிறார். இன்று நேற்றல்ல, காலத்திற்கும் அவர் ‘சந்தேகத் தோமா’ என்றே அழைக்கப்படுகிறார்.
உயிர்த்த
இயேசுவைக் கண்டதும் அனைத்துச் சீடர்களுக்கும் கலக்கம், குழப்பம், சந்தேகம் எழுந்தன என்பதை நற்செய்திகள் கூறுகின்றன. இயேசுவிடம் கேட்க முடியாமல், மனத்துக்குள் மற்றச் சீடர்கள் புதைத்து வைத்திருந்த இதே சந்தேகத்தைத்தான் தோமா வாய்விட்டுக் கேட்டார். எனவே, தோமாவை மட்டும் ‘சந்தேக மனிதர்’ என்று கண்டனம் செய்யாமல், எல்லாச் சீடர்களுமே சந்தேகத்தில், அச்சத்தில் வாழ்ந்து வந்தார்கள் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். சந்தேகப்படுவது நல்லதுதானே! ‘சந்தேகப்படுவது அறிவுக்கான திறவுகோல்.’ எந்தத் தயக்கமுமின்றி ஒன்றைப்பற்றி அறியும் நோக்கில் தனது சந்தேகத்தை வெளிப்படுத்துபவரே அதை விரைவாகக் கற்றுக்கொள்கிறார். அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு திருத்தூதர் தோமா. இன்றைய நாளில் கிறித்தவ வாழ்வின் மூன்று முக்கியமான கூறுகளைத் தோமாவின் அனுபவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்வோம்.
முதலாவதாக,
தோமாவின் துணிவு. பெத்தானியாவில் மார்த்தா-மரியாவின் சகோதரர் இலாசர் இறந்ததைக் குறித்து இயேசு, “நம் நண்பன் இலாசர் தூங்குகிறான்; நான் அவனை எழுப்புவதற்காகப் போகிறேன்”
(யோவா 11:11) என்று கூறும்போது, மற்றச் சீடர்கள் அவரிடம், “ரபி, இப்போதுதானே யூதர்கள் உம்மேல் கல்லெறிய முயன்றார்கள்; மீண்டும் அங்குப் போகிறீரா?” (யோவா 11:8) என்று கேட்பார்கள். சீடர்களின் தயக்கத்திற்கான காரணம், இயேசு எருசலேமில் போதித்துக் கொண்டிருந்தபோது யூதர்கள் அவர்மேல் கல்லெறிய முயன்றார்கள் (10:33); இப்போது பெத்தானியாவுக்குப் போனால் இயேசுவுக்கு மட்டுமல்ல, தங்கள் மேலும் கல்லெறிவார்கள் என்ற அச்சத்தில் சீடர்கள் கொஞ்சம் பின்வாங்க நினைக்கும்போது, தோமா மட்டுமே “நாமும் செல்வோம், அவரோடு இறப்போம்”(11:16)
என்ற நம்பிக்கையைக் கொடுப்பார். தோமா இயேசுவோடு இருக்கும்போதே ‘ஒரு சீடருக்கான அழகு மறைச்சாட்சியாக இறப்பதே’ என்பதைத் தன் வார்த்தைகள் வழியாக அழகுற வெளிப்படுத்துகிறார்.
இரண்டாவது,
தோமாவின் நேர்மை. தோமா எதையும் எளிதில் ஏற்பவர் அல்லர்; தனக்குப் புரியாத ஒன்றை அவர் புரிந்ததுபோல் காட்டிக்கொள்ளவும் மாட்டார் (14:5); நம்புவதாக நடிக்கவும் அவரால் இயலாது. இயேசு மூன்று முறை தம் இறப்பைக் குறித்து முன்னறிவித்தபோது, தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமல் எல்லாச் சீடர்களுமே குழப்பத்தில் இருந்தார்கள். அப்போது இயேசு, “நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்; கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள்; என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள்... நான் இருக்கும் இடத்திலே நீங்களும் இருப்பீர்கள். நான் போகுமிடத்திற்கு வழி உங்களுக்குத் தெரியும்”
(14:1-4) என்பார். இயேசுவின் இந்தக் கூற்று சீடர் எவருக்கும் புரியவில்லை; கேள்வி கேட்டுத் தெளிவு பெறத் துணிவும் இல்லை. எல்லாரும் அமைதியாக இருக்கும் சூழலில் தோமா மட்டுமே “ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்று எங்களுக்குத் தெரியாது. அப்படியிருக்க நீர் போகுமிடத்துக்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்துகொள்ள இயலும்?” (14:5-6) என்ற கேள்வியை எழுப்பினார். தனக்குத் தெரியாததை ‘தெரியாது’
என்று சொல்வதற்கும், புரியாததை ‘புரியவில்லை’ என்று
சொல்வதற்கும் ஓர் ஆரோக்கியமான நேர்மை வேண்டும். அது தோமாவிடம் இருந்தது. ‘எல்லாம் எனக்குத் தெரியும்’
எனக் காட்டிக்கொள்ளும் மனிதர்கள் மத்தியில், நேர்மையோடும் தாழ்ச்சியோடும் நடந்துகொண்டவர் தோமா.
மூன்றாவதாக,
தோமாவின் சாட்சிய வாழ்வு. உயிர்ப்பின் உண்மையான மகிழ்ச்சி என்பது உலகின் கடையெல்லை வரைக்கும் சென்று, உயிர்ப்பின் நற்செய்தியை அறிவிப்பதுதான். “தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்; பாவங்களை மன்னியுங்கள்; உயிர்ப்பின் சாட்சிகளாய் மாறுங்கள்”
(20:22-23) என்பதுதான்
இயேசு சீடர்களுக்கு முன்னுரைத்தது. எனவே, ‘கிறிஸ்து உயிர்த்தார்’ என்ற
உண்மையை அறிந்து, அனுபவித்த தோமா அமைதியாக இருக்கவில்லை. உயிர்ப்பின் பொருள் புரிந்து, உள் மனமாற்றம் பெற்றார்; முற்றிலும் புதிதாய்ப் பிறந்த மனிதராக மாறினார். “இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு...” (20:27) என்று இயேசு தோமாவிடம் கூறியபோது, அவர் இயேசுவைத் தொட்டாரா? என்பதில் தெளிவில்லை. உடலால் தோமா இயேசுவைத் தொட்டிருக்கலாம், தொடாமல் போயிருக்கலாம். ஆனால், சிலுவையில் அறையுண்ட அதே இயேசு அவர்முன் நிற்பதைக் காண்கின்றார். “நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!” (20:28) எனக் கூறித் தன் நம்பிக்கையை வெளியிடுகின்றார். அவர் கூறிய சொற்கள் உண்மையிலேயே அவர் கொண்டிருந்த நம்பிக்கையின் ஆழத்தைக் காட்டுகின்றன.
தோமாவின்
இந்த உயர்ந்த நம்பிக்கை எந்த நற்செய்தியிலும் எவர் வாயிலிருந்தும் வந்ததாகக் குறிப்பிடப்படவில்லை. ‘இயேசு இறைவனும் ஆண்டவரும்’
என்னும் உண்மையை அப்படியே அறிக்கையிடுகிறார் தோமா. நம்பத் தயங்கிய தோமாவின் வாயிலிருந்தே நம்பிக்கையின் ஒப்புயர்வற்ற வாய்ப்பாடு வெளிவருவது வியப்பன்றோ! அன்றைய உரோமைப் பேரரசர்கள் தங்களை மக்கள் அனைவரும் ‘ஆண்டவரே, கடவுளே’ என அழைக்க வேண்டும்
என ஆணை பிறப்பித்த சூழலில், தொடக்க காலக் கிறித்தவர்கள் அரசர்களை ‘கடவுள்’ என்று அழைக்காமல், அத்தகைய அடைமொழிக்கு உரியவர் இறைவனும், அவர் திருமகனுமான இயேசு மட்டுமே என்பதை அறிக்கையிட ஆதாரப் புள்ளியாகத் தோமாவின் நம்பிக்கை முழக்கம் அமைகிறது. ஆகவே, முதலில் நம்ப மறுத்த தோமா, கிறித்தவ நம்பிக்கையின் உச்சக்கட்ட அறிக்கையை வெளிப்படுத்தியவராகிறார்.
இயேசு
தோமாவைத் தொட்டதால், அவர் கண்ட அந்த அற்புத உண்மையை உலகெங்கும் சிறப்பாக அறிவிக்கப் புறப்பட்டார். வேறுபட்டக் காலச்சூழல், புதிய பண்பாடு, கலாச்சாரம், வேற்று மக்கள், புதிய மொழி போன்ற தடைகள் எதுவும் அவரைத் தடுக்க இயலவில்லை. உயிர்ப்பின் உண்மையை அனைவருக்கும் அறிவிக்க வேண்டும் என்பதற்காகக் கடல் கடந்து இந்தியா வந்தார். இயேசுவின் காயத்தின் தழும்புகளைத் தாங்கி நிற்கும் மாந்தர்களுக்குப் பணிசெய்வதன் விலையாகத் தன் உயிரையே கையளித்து, இந்தியாவின் முதல் மறைச்சாட்சியானார். ஆகவே, தோமா வாழ்வில் எது உண்மை என்பதைத் தேடினார்; அந்த உண்மைக்குச் சாட்சியாகத் தன்னையே கையளித்தார்.
இறுதியாக,
இந்த நாள் நமக்கு உணர்த்தும் சில பாடங்களை மனத்தில் ஏற்போம். கிறித்தவ வாழ்வு தொடக்கம் முதல் இறுதிவரை நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. ஆகவேதான் கிறித்தவச் சமூகத்தைத் திருத்தூதர் பவுல் “நம்பிக்கை கொண்டோரின் குடும்பம்”
(கலா 6:10) என்று அழைக்கிறார். மேலும் அவர் கிறித்தவ வாழ்வை “நம்பிக்கை வாழ்வு எனும் போராட்டம்”
(1திமோ 1:1-2) என்றே வரையறை செய்கிறார். நமது இறைநம்பிக்கை வாழ்வில் கடவுள் மீதான சந்தேகங்களும் மனப்போராட்டங் களும் துயரங்களும் தோல்விகளும் ஏமாற்றங்களும் எண்ணிலடங்கா வகையில் ஊற்றெடுக்கும்போது, இறைநம்பிக்கையற்றவர்களாக வாழாமல் இறை நம்பிக்கை கொண்டவர்களாக வாழ தோமாவின் சாட்சிய வாழ்வு நம்மைத் தூண்டுகிறது.
நமது
சமூகம் போர்க்குணங்களாலும் ஏழ்மை நிலையாலும் சமூக வெறுப்புகளாலும் நம்பிக்கையற்றத் தன்மைகளாலும் சிதைந்து கிடக்கும் இச்சூழலில், இன்று நாம் கொண்டாடும் இறை இரக்க ஞாயிறு இறைவனின் இரக்கத்தை, அன்பை, மன்னிப்பை எண்ணிப் பார்க்கப்படும் வெறும் பக்தி முயற்சியாக, வழிபாடு நிகழ்வாக மட்டும் அமைந்துவிடாமல், அது வாழ்வாக மாறவேண்டும். சிறு சிறு செயல்களில் இறைவனின் அன்பைக் கொடுப்போம். நிபந்தனைகள் ஏதுமின்றி நம்மை ஒவ்வொரு நாளும் தேடிவரும் இறைவன், சந்தேகம் என்ற சிறைக்குள் சிக்கித் தவிக்கும் நம் குடும்ப உறவுகளை விடுவிக்க மன்றாடுவோம். இறைவனின் இரக்கத்தை, வாழ்வின் ஒவ்வொரு சூழலிலும் நாம் உணர, திருத்தூதர் தோமாவின் பரிந்துரையை நாடுவோம்.
புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளரும் பேச்சாளருமான டாடு ஹென்றி (Todd Henry) ஒருமுறை தனது பேச்சைக் கேட்பதற்காக அரங்கத்தில் கூடியிருந்தவர்களைப் பார்த்து, “இந்த உலகிலே மிகவும் செல்வச் செழிப்பான இடம் எது?” என்று கேட்டார். கூட்டத்தில் அமர்ந்திருந்த ஒருவர் எழுந்து, “அரபு நாடுகளில் பெட்ரோலியம் இருக்கும் நிலம்தான் மிகவும் செல்வச் செழிப்பான நிலம்” என்றார். மற்றுமொருவர் எழுந்து, “உலகிலேயே அதிக செல்வச் செழிப்பான நிலம் ஆப்பிரிக்கக் காடுகளில் உள்ள வைரச்சுரங்கம்” என்றார். மூன்றாவதாக ஒரு நபர் எழுந்து, “உலகிலேயே மிகவும் செல்வச் செழிப்பான நிலம் கல்லறைதான்” என்றார்.
இந்தப்
பதிலைச் சற்றும் எதிர்பார்க்காத ஹென்றி, “உலகிலேயே செல்வச் செழிப்பான நிலம் கல்லறைதான் என்று எப்படிக் கூறுகிறீர்கள்?” எனக் கேட்டார். அதற்குப் பதில் கூறிய மூன்றாமவர், “ஒவ்வொரு மனிதரும், தான் வாழும்போது உயர்ந்த இலட்சியங்களோடும் தனித்துவமான திறமைகளோடும் வாழ்கின்றனர். ஆனால், அவர்கள் எதிர்பாராத சூழலில் இறக்கும்போது அவர்களது கனவுகளும் சிந்தனைகளும் உயர்ந்த இலட்சியங்களும் திறமைகளும் செயல்வடிவம் பெறாமலேயே அவர்களோடு கல்லறையில் புதைக்கப்பட்டு விடுகின்றன. ஆகவே, கல்லறையில் வெறும் உடல்கள் புதைக்கப்படுவதில்லை; மாறாக, அவர்களின் நிறைவேறாத இலட்சியங்களும் எண்ணங்களும் திறமைகளும்தான்” என்றார்.
இந்த
வியப்பான பதிலின் அடிப்படையில் ஹென்றி எழுதிய புகழ்பெற்ற நூல்தான் ‘வெறுமையாய் இறப்போம்’
(Die Empty) என்பதாகும்.
ஒருவர் இறப்பதற்கு முன்னர் தன்னிடம் உள்ள நன்மைகளையும் திறமைகளையும் முழுமையாகப் பயன்படுத்தி விட்டு, வெறுமையாய் இறக்கவேண்டும் என்பதை உணர்த்துகிறது இந்நூல்.
கிறிஸ்து
உயிர்த்து விட்டார்! இச்செய்தியை அறிவிப்பதில் எத்துணை மகிழ்ச்சி! கிறித்தவம் கொண்டாடுகின்ற திருவிழாக்களிலெல்லாம் முதன்மையான, தலைசிறந்த விழா கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழா! ஏனெனில், அது கிறித்தவ நம்பிக்கையின் திருவிழா! கிறிஸ்துவின் உயிர்ப்பே நமது நம்பிக்கையின் ஆணி வேர், அடித்தளம் மற்றும் நமது வாழ்வின் எதிர்நோக்கு. இறைமகன் மனிதனாகப் பிறந்து, இறுதிவரை தாழ்ச்சி எனும் பாதையைப் பின்பற்றி, நம்மை முற்றிலுமாக அன்பு செய்த இயேசு வெறுமையாய் இறந்தார்; வெற்றியோடு உயிர்த்தார். அவரைப்போல நாமும் வெறுமையாய் இறக்கவும் வெற்றியோடு உயிர்க்கவும் அழைக்கப்படுகின்றோம்.
பழைய
ஏற்பாட்டுக் காலத்திலிருந்தே பெருவாரியான யூத மக்கள் உயிர்த்தெழுதல் உண்டு என்று நம்பி வந்தனர். ஆனால், சதுசேயர் என்ற ஒரு பிரிவினர் மட்டும் இதில் எந்த நம்பிக்கையும் கொள்ளவில்லை (மத் 22:23). இயேசுவின் உயிர்ப்பின் நிகழ்வு அவரை ஆழ்ந்து நம்பினோருக்குப் பெரும் மகிழ்வைக் கொடுத்தது. ஆண்டவரின் உயிர்த்தெழுதல், நம்மை நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் முன்னோக்கிச் செல்லத் தூண்டுகிறது. இயேசுவின் உயிர்த்தெழுதல், நமது நம்பிக்கையை அடிக்கடிச் சிறைபிடிக்கும் கல்லறைகளின் கல்லை அகற்றுவதற்கும், எதிர்காலத்திற்கான முழு நம்பிக்கையுடன் முனைந்து முன்னேறுவதற்கும் உதவுகிறது. அவர் நம்மைக் கைவிடாமல் எப்போதும் நம்முடன் இருக்கிறார். மரணத்தை வென்றவர் நமக்கு ஆற்றலைத் தருகின்றார். இதுவே நம் நம்பிக்கை. இறைவனுக்கு நம் உள்ளத்தைத் திறக்கும்போது, இறைவன் நமக்கு வழங்கும் கொடையே கிறித்தவ நம்பிக்கை. எனவே, கிறிஸ்துவில் நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் உச்ச உண்மையாக உயிர்ப்பு திகழ்கிறது.
இறையியலாளர்
மற்றும் வரலாற்று ஆய்வாளர் மட்டுமன்றி, எந்த ஒரு கிறித்தவரும் இயேசு உயிர்த்துவிட்டார் என்பதை உணரவும் நம்பவும் ஏற்றதாக இருக்கக்கூடிய இருபெரும் அனுபவங்கள்: 1. வெறுமையான கல்லறை (மத் 28:6; மாற் 16:6; லூக் 24:5; யோவா 20:2,6,7), 2. திருத்தூதர்களின் வியப்பூட்டும் உயிர்ப்பு அனுபவங்கள்.
உண்மையைப்
பேசியதற்காக, வாழ்வைக் கொடுத்ததற்காக, வாழும் வழியைக் காட்டியதற்காக இயேசு கொல்லப்பட்டார். தீமையின், அநீதியின், பாவத்தின் சக்திகள் அனைத்தும் சேர்ந்து அவரைக் கொலைக்குட்படுத்தின. ஆனால், இறந்து அடக்கம் செய்யப்பட்ட இயேசு உயிர்த்தெழுந்தார்; இறந்த மூன்றாம் நாள் வெற்றி வீரராய்க் கல்லறையிலிருந்து உயிரோடு வெளியே வந்தார். தம்மோடு நெருங்கிய உறவு கொண்டிருந்த தம் சீடருக்குத் தோன்றி அவர்களோடு அவர் உரையாடினார்; உணவு உட்கொண்டார். இயேசுவின் உயிர்ப்பிற்கான முதன்மையான அடையாளம் வெறுமையான கல்லறையே.
பெண்கள்
நம்பத்தகுந்த சாட்சிகளாக எதற்கும் கருதப்படாத சூழலில், ‘அவர்கள் வெறுமையான கல்லறையைப் பார்த்தார்கள்’ என்று
நான்கு நற்செய்தியாளர்களும் எழுதுகின்றனர். மத்தேயுவும் மாற்குவும் இன்னும் துல்லியமாக, “அவர் இங்கே இல்லை; இதோ அவரை வைத்த இடம்”
(மாற் 16:6; மத் 28:6) என்று எழுதுகின்றனர். வியப்பூட்டும் வகையில், மரபுக்கு மாறாக, பெண்களின் சாட்சியத்தை நற்செய்தியாளர்கள் வரைந்திருப்பது, உண்மையிலேயே உயிர்ப்பு மறுக்க முடியாத ஒரு வரலாற்று நிகழ்வு என்பதை நமக்கு உணர்த்துகிறது. இயேசுவின் உயிர்ப்பின்போது, பெண்கள் வெறுமையான கல்லறை மற்றும் அவரின் உயிர்த்தெழுதலின் அனுபவத்தால் உடனடியாக மனமாற்றமடைந்தனர். “கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்!” என்ற உயிர்ப்புச் செய்தியைச் சீடர்களிடமும் கூறினர். இயேசுவைக் காணச் சென்ற சீடர்களும் மகதலா மரியாவும் இயேசுவைக் கல்லறையில் காணவில்லை; மாறாக, வெறுமையான கல்லறையை மட்டுமே கண்டார்கள். இதுவே இயேசுவின் உயிர்ப்பு பற்றிச் சீடர்களுக்குக் கிடைத்த முதல் அடிப்படை அனுபவம்.
வெறுமையான
கல்லறை இயேசுவின் மண்ணுலக வாழ்வின் உச்சக்கட்டம் எனலாம். வெறுமை என்பது ஒன்றுமில்லாமை என்பதல்ல; மாறாக, இருந்தது அனைத்தையும் முழுமையாகக் கொடுத்ததன் நிறைவே வெறுமை. இயேசுவின் வாழ்வு முழுவதும் இந்த வெறுமை நிரம்பி இருந்தது. பிறப்பில்கூட இயேசு ஒரு வெறுமை நிலையிலேயே பிறந்தார். ஏனெனில், அவர் பிறக்கும்போது அவருக்குச் சொந்தம் என்று சொல்ல உறவோ உறைவிடமோ இல்லை! இருந்தவை வெறும் மாட்டுத்தொழுவமும், ஒரு தீவனத் தொட்டியும், உறவுகளாகச் சில ஆடு மேய்த்தவர்களும்தாம்.
இயேசு
இளைஞரான போதும் அவர் ஓரிடத்திலும் தங்கவில்லை. உண்மையாகவே பல ஊர்கள், கிராமங்கள்
என்று பயணித்தவர். கலிலேயா நாடு முழுவதும் பயணித்தவர். அவரது பயணமே அவரது பணியாகவும் வாழ்வுமுறையாகவும் இருந்தது. தம்மைப் பின்பற்ற விரும்பிய ஒரு மறைநூல் அறிஞரிடம், “நரிகளுக்கு... மானிட மகனுக்கோ தலைசாய்க்கக்கூட இடமில்லை”
(மத் 8:20) என்றார். இயேசு எங்குத் தங்கினார் என்று கூட தெரியாது. இயேசு வளர்ந்தபோதும் வெறுமை நிலையையே தக்கவைத்துக் கொண்டார். அவர் சிலுவை மரணத்திலும் வெறுமையையே அனுபவித்தார். பிறப்பிலும் தம்மைத் தாங்குவதற்கு உடைமைகளைக் கொண்டிருக்கவில்லை; இறப்பிலும் தம்மைத் தாங்குவதற்கு உடைமைகளைக் கொண்டிருக்கவில்லை. ஒன்றுமே இல்லாத வெறுமை நிலையில்தான் இயேசு இருகரம் விரித்துச் சிலுவையிலே தொங்கிக் கொண்டிருந்தார். இயேசுவின் சிலுவை மரணமும் ஓர் அழகான வெறுமைதானே!
எனவே,
இயேசு பிறக்கும்போதும் வெறுமை; வாழும்போதும் வெறுமை; இறக்கும்போதும் வெறுமை; கல்லறையில் அடக்கம் செய்தபோதும் வெறுமை. மற்றொருவருக்காக வெட்டப்பட்ட கல்லறையிலே இயேசு அடக்கம் செய்யப்படுகிறார். இயேசு அடக்கம் செய்யப்பட்ட கல்லறையும் வெறுமையான கல்லறைதான். யோவானும் லூக்காவும் அக்கல்லறையில் யாரையும் வைத்ததில்லை என்று கூறுகின்றனர் (யோவா 19:41; லூக் 24:53). இது ஒரு புதிய கல்லறை; வெறுமையான கல்லறை; இதுவரை யாரும் அடக்கம் செய்யப்படாத தூய்மையான கல்லறை. வெறுமையின் வடிவம் தூய்மை!
இயேசுவின்
வெறுமை என்பது அவர் உடைமைகள் ஏதுமின்றிப் பிறந்தார், வாழ்ந்தார், இறந்தார் என்பதல்ல; மாறாக, அவர் தமது இறையாட்சிக் கனவின் செயல்பாடுகளை முழுமையாக நிறைவேற்றினார் என்பதுதான் பொருள். இயேசு கல்லறைக்குள் செல்லும்போது ‘எல்லாம் நிறைவேறிய’
மனத்தோடு சென்றார். இனி நிறைவேற்றுவதற்கு எதுவுமில்லை என்பது “எல்லாம் நிறைவேறிற்று” (யோவா
19:30) என்பதிலே அடங்கியிருக்கிறது. தம்மையே வெறுமையாக்கிய இயேசு, தாம் வாழ்ந்த கொஞ்ச காலத்திலேயே தமது அனைத்து உயர்ந்த சிந்தனைகளையும் நன்மைகளையும் நீதியையும் அன்பையும் இரக்கத்தையும் மன்னிப்பையும் நாம் வாழ்வுபெற, வளம்பெற முழுமையாகக் கொடுத்து விட்டுச் சென்றார். ஆகவேதான் தமது இலட்சியப் பயணத்தில் அவர் சந்தித்த கொடிய வேதனைகளுக்குப் பரிசாக இறைத்தந்தை உயிர்ப்பு என்னும் உயரியப் பரிசை அவருக்குக் கொடுத்தார். மண்ணுலகில் தோன்றிய மனிதர்களுள் முழுமையாக, வெறுமையாக வாழ்ந்தவர் இயேசுவைத் தவிர வேறு எவருமிலர்.
நிறைவாக,
சில சிந்தனைகள்: இன்று நாம் கல்லறைக்குச் செல்லும்போது, நாம் நிறைவேற்றாத பற்பல கனவுகளோடும் இலட்சியங்களோடும்தான் புதைக்கப்படுகின்றோம். இதனால் நிறைவேற்றப்படாத அழகான இலட்சியங்கள் கல்லறைக்குள்ளே புதைக்கப்படுகின்றன. வாழும்போது நம்மிடம் உள்ள அன்பு, இரக்கம், மன்னிப்பு, நீதி, உண்மை போன்ற கிறித்தவப் பண்புகளையும் இந்தச் சமூகத்திற்கு முழுமையாகக் கொடுத்து விட்டு இறந்தால் ‘வெறுமையாக’
கல்லறைக்குச் செல்லலாம் அன்றோ!
எனவே,
ஆண்டவர் இயேசுவின் சொற்களை, செயல்களை, நன்மைத்தனத்தை எப்போதும் நினைவில் கொள்வோம். நாம் இறை இரக்கத்தால் புதுப்பிக்கப்படவும், இயேசுவால் அன்புகூரப்படவும், அவர் அன்பின் சக்தி கொண்டு நம் வாழ்வை மாற்றியமைக்கவும் உதவுவோம். சாவையே வாழ்வாக மாற்றிய உயிர்த்த கிறிஸ்துவிடம், பகைமையை அன்பாகவும், பழிவாங்குதலை மன்னிப்பாகவும், போரை அமைதியாகவும் மாற்றும்படி வேண்டுவோம். உயிர்த்த ஆண்டவரை அனைவரும் காண்பதற்கு நாம் உதவியாக இருப்போம். அனைத்தையும் கொடுத்துவிட்டு வெறுமையாக இறப்போம். வெற்றியோடு உயிர்ப்போம்!