news
ஞாயிறு மறையுரை
ஏப்ரல் 13, 2025, திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) எசா 50:4-7; பிலி 2:6-11; லூக் 22:14-23:56 - கடவுள் ‘தேவையில்’ இருக்கிறார்!

பாரிஸ் நகரில் புகழ்பெற்ற Notre Dame பேராலயத்தின் வாசலில், ஒவ்வொரு ஞாயிறன்றும் ஓர் இளைஞர் நின்றுகொண்டு, ஞாயிறு திருப்பலிக்குச் செல்லும் அனைவரையும்முட்டாள்கள்என்று உரத்தக் குரலில் கேலிசெய்து வந்தார். ஒருமுறை அந்த இளைஞரின் கேலிகளைக் கேள்விப்பட்ட பங்குத்தந்தை அவரிடம் சென்று, “நான் இப்போது உனக்கு விடுக்கும் சவாலை உன்னால் நிறைவேற்ற முடியுமா? உனக்கு அவ்வளவு துணிவு இருக்கிறதா?” என்று கேட்டார். இதைக் கேட்டதும் அந்த இளைஞர் கோபமுற்று, “முட்டாள் சாமியாரே! எனக்கே சவால் விடுகிறாயா? சொல், எதுவாயினும் செய்து காட்டுகிறேன்என்று அனைவரும் கேட்கும்படிக் கத்தினார்.

பங்குத்தந்தை அந்த இளைஞரிடம், “சிலுவையில் இருக்கும் இயேசுவை உற்றுப்பார். உன்னால் முடிந்த அளவு உரத்தக் குரலில், ‘கிறிஸ்து எனக்காகச் சிலுவையில் இறந்தார்; ஆனால், அதைப்பற்றி எனக்குக் கவலையில்லைஎன்று உன்னால் கத்த முடியுமா?” என்று சவால் விடுத்தார். அந்தச் சவாலை ஏற்ற இளைஞர், பீடத்தை நெருங்கி வந்து உரத்தக் குரலில், “கிறிஸ்து எனக்காகச் சிலுவையில் இறந்தார்; ஆனால், அதைப் பற்றி எனக்குக் கவலையில்லைஎனக் கத்தினார். பங்குத்தந்தை அவரிடம், “இன்னொரு முறை கத்துஎன்றார். இரண்டாவது முறையும் இளைஞர் கத்தினார். ஆனால், இம்முறை அவரது குரலில் கொஞ்சம் தடுமாற்றம் தெரிந்தது. பங்குத்தந்தை இளைஞரிடம், “தயவுசெய்து, இறுதியாக ஒருமுறை மட்டும் கோவிலில் உள்ள அனைவரும் கேட்கும்படி கத்திவிட்டு நீ போகலாம்என்றார். இம்முறை இளைஞர் சிலுவையை உற்றுப்பார்த்தார். அவர் கத்த முற்பட்டபோது, வார்த்தைகள் வரவில்லை. சிலுவையில் அறையப்பட்டிருந்த இயேசுவை அவரால் தொடர்ந்து பார்க்க முடியவில்லை; கண்களைத் தாழ்த்தினார்; கண்ணீர் வழிந்தோடியது.

இந்த நிகழ்வை விவரித்துக் கூறிய ஆயர் சிறிது நேரம் அமைதியாக இருந்தபின் தொடர்ந்தார்: “அந்த இளைஞன் நான்தான். கடவுள் எனக்குத் தேவையில்லை என்று வாழ்ந்தவன் நான். ஆனால், கடவுள் எனக்குத் தேவை என்பதைச் சிலுவையில் தொங்கிய இயேசு எனக்கு உணர்த்தினார். அது மட்டுமல்ல, நான் கடவுளுக்குத் தேவை என்பதையும் அவர் எனக்குப் புரியவைத்தார்என்று கூறினார்.

தவக்காலத்தின் 6-ஆம் ஞாயிறைகுருத்து ஞாயிறுஅல்லதுபாடுகளின் ஞாயிறுஎனக் கொண்டாடுகிறோம். இன்று முதல் உயிர்ப்புப் பெருவிழா வரை உள்ள ஏழு நாள்களையும்புனித வாரம்என்று அழைக் கிறோம். புனித வார நாள்கள் கடவுள் நம்மை மீட்டு வெற்றி கொண்ட நாள்கள்! இயேசுவின் பாடுகள், இறப்பு, உயிர்ப்பு என்னும் பாஸ்கா மறைபொருளைப் பொருள் உணர்ந்து கொண்டாடும் நாள்கள். ‘உலகில் வாழ்ந்த தமக்குரியோர் மேல் அன்பு கொண்டிருந்த அவர், அவர்கள் மேல் இறுதிவரையும் அன்பு செலுத்தியதன்...’ (யோவா 13:1) அடையாளமே இயேசு தம் சாவைப்பற்றி அறிந்த பின்னும் துணிவுடனும் வெற்றி ஆர்ப்பரிப்புடனும் எருசலேமுக்குள் நுழையும் இன்றைய நிகழ்வு.

ஆண்டவர் இயேசு எருசலேமில் நுழைந்தது முதல் சிலுவையில் அறையப்பட்டு இறக்கும் வரை இயேசுவின் பல தேவைகள் ஆங்காங்கே வெளிப்பட்டன. அந்தத் தேவையில் சிலர் இணைந்து கொண்டனர்; பலர் பிரிந்து சென்றனர். இயேசுவின் புனித தேவைகளில் நாமும் இணைந்துகொள்ள பாடுகளின் ஞாயிறு நம்மைப் பாசத்தோடு அழைக்கிறது.

கடவுள் அனைத்தையும் அறிந்தவர்; அனைத்தையும் கடந்தவர்; அனைத்தையும் படைத்தவர்; முழு ஆற்றல் கொண்டவர்; எல்லா இடங்களிலும் இருப்பவர்; அனைத்து நன்மைகளாலும் நிறைந்தவர்; தொடக்கமும் முடிவும் இல்லாமல் இருப்பவர்; முழுமையான நல்லவர். சின்னக் குறிப்பிடத்தில் கடவுளைப் பற்றிப் படித்த பாடங்கள் இவை. எல்லாவற்றையும் படைத்து, படைப்பின்மீது அதிகாரம் கொண்ட கடவுளுக்கு என்ன தேவை இருக்கிறது? அவர் எந்தத் தேவையும் அற்றவர். அவர் தருகிறவர், பெறுகிறவர் அல்லர்; எனினும், கடவுள் தேவையில் இருக்கிறார். The Lord is in need!

பல நேரங்களில் கடவுளின் தேவைகளில் நாம் இணைந்துகொள்ளாமல், நம்முடைய தேவைகளைக் குறித்தே நாம் கடவுளைப் பின்தொடர்கிறோம் என்பதுதான் உண்மை. இயேசுவும் ஒருமுறை தங்களுக்கு என்ன கிடைக்கும் என்னும் நோக்கத்தோடுதான் மக்கள் கடவுளைத் தேடுகிறார்கள் என்றே குறிப்பிட்டார் (யோவா 6:26). தம்மைத் தேடி வந்தவர்களை இயேசு ஒருபோதும் கைவிட்டதில்லை. இன்றைய நாளில் இயேசு எரிகோவை விட்டு எருசலேம் நோக்கிச் செல்லும் பயணத்திலும் வழியோரம் அமர்ந்திருந்த திமேயுவின் மகன் பர்த்திமேயுவுக்குப் பார்வை கொடுக்கிறார் (மாற் 10:47). நலம்பெற்ற அவர் உடனே இயேசுவைப் பின்தொடர்கிறார் (மாற் 10:52). இதை வியப்புடன் பார்க்கும் மக்கள் இயேசு தாங்கள் எதிர்பார்த்த ஒரு மெசியாவாக, ஒரு புதிய தாவீது அரசராக இருப்பாரோ என்றெண்ணிஓசான்னா!’ அதாவதுஎங்களை விடுவித்தருளும், ‘எங்களுக்கு உதவ வாரும்  என ஆர்ப்பரித்து முழக்கமிடுகின்றனர்.

எருசலேமில் தமக்கு நிகழவிருப்பவை அனைத்தையும் தெளிவுற தெரிந்த பின்பும் இயேசு துணிவுடன் மக்கள் பேரணியோடு நகரில் நுழைகிறார். இந்தப் பவனியில் இயேசு ஒலிவ மலையிலுள்ள பெத்பகு, பெத்தானியா (லூக் 19:29) எனும் ஊர்களுக்கு அருகில் வர, தம் இரு சீடர்களை அனுப்பி, கழுதைக்குட்டியை அவிழ்த்து வரக் கூறுகிறார். ‘ஏன் அதை அவிழ்க்கிறீர்கள்?’ என்று கேட்டால், “இது ஆண்டவருக்குத் தேவைஎனச் சொல்லுங்கள் (லூக் 19:31) என்கிறார்.

இந்தப் புனித வாரத்தில் தேவையில் இருக்கும் கடவுளுக்கு முதன்முதலில் உதவிட முன்வந்தது ஒரு கழுதைக் குட்டியே. கழுதை ஓர் அமைதியின், எளிமையின் அடையாளம். இயேசு கழுதையின்மேல் அமர்ந்து வரும்போது, மக்கள் தங்கள் மேலுடைகளை வழியில் விரித்துக்கொண்டே செல்கின்றனர். தரையில் விரிக்கப்பட்ட மேலுடைகளும், மரங்களிலிருந்து வெட்டித் தரையிலே பரப்பப்பட்ட மரக்கிளைகளும் இயேசுவுக்கு வாழ்த்தும் மரியாதையும் செலுத்துகின்றன.

இயேசுவின் இந்தப் பயணத்தில், இயேசுவைத் தீர்ப்பிடத் துடிக்கும் சமய மற்றும் அரசியல் தலைவர்கள், காட்டிக்கொடுக்க விரும்பிய யூதாசு, மறுதலிக்கும் பேதுரு, ஒரு மணி நேரம் விழித்திருக்க வலுவில்லாத சீடர்கள், ஆடையின்றித் தப்பி ஓடிய இளைஞர், நிர்வாணப்படுத்தும் படைவீரர்கள், ‘பரபாவையே விடுதலை செய்யும்எனக் கேட்கும் கூட்டத்தினர், ‘அவனைச் சிலுவை அறையும்என்று உரக்கக் கத்துபவர்கள், காறி உமிழ்பவர்கள், கன்னத்தில் அறைபவர்கள், கசையால் அடிப்பவர்கள், பொய்ச்சாட்சி சொல்பவர்கள், ஆணியால் அறைந்து முள்முடி சூட்டியவர்கள், ‘யூதரின் அரசரே வாழ்கஎன ஏளனம் செய்பவர்கள், கசையால் அடித்துச் சிலுவையில் அறையுமாறு ஒப்புவித்த பிலாத்து, கசப்புக் காடியைக் குடிக்கக் கொடுப்பவர்கள், இயேசுவின் ஆடையைக் குலுக்கல் முறையில் பங்கிட்டுக்கொள்பவர்கள், ‘நீ மெசியா தானே! உன்னையும் எங்களையும் காப்பாற்றுஎனப் பழித்துரைத்த குற்றவாளி, இயேசு இறந்த பிறகும் விலாவில் ஊடுருவக் குத்துபவர்கள், ‘நீ இறைமகன் என்றால் சிலுவையிலிருந்து இறங்கி வாஎனப் பழித்துரைத்த வழிப்போக்கர்கள் எனப் பலரும் கடவுளின் தேவையில் இணைந்து கொள்ள மறுக்கின்றனர்.

அதேநேரத்தில், இயேசுவுக்காகப் பேச முடியாமல் மௌனியாய்ப் பயணிக்கும் சிலர், இயேசுவின் சிலுவையைச் சிறிது நேரம் சுமந்து சென்ற சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன், மாரடித்துப் புலம்பும் பெண்கள், ‘என்னை நினைவிற்கொள்ளும்என இயேசுவிடம் வேண்டிக்கொள்ளும் நல்ல கள்ளன், ‘இவர் உண்மையாகவே நேர்மையாளர்என்று கூறிய நூற்றுவர் தலைவர், தனது கல்லறையைத் தானமாய் அளித்த அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு, மறுப்பேதுமின்றிக் கழுதையைக் கொடுத்தவர், வெள்ளைப்போளமும் சந்தனத்தூளும் கொண்டு வந்த நிக்கதேம், மகதலா மரியா, குளோப்பாவின் மனைவி மரியா, சலோமி போன்ற பெண்கள், இறுதிவரை துணைநின்ற அன்னை மரியா மற்றும் அன்புச் சீடர் யோவான் போன்ற பலரும் கடவுளின் தேவையில் தங்களை இணைத்துக்கொள்கின்றனர்.

நிறைவாக, இந்தப் புனித வாரத்தில் இயேசுவின் பாடுகளில் பங்கேற்கும் நாம், அவரின் தேவைகள் என்ன என்பதைச் சிந்தித்துச் செயல்பட அழைப்புப் பெறுகின்றோம். கெத்சமனி தோட்டத்தில் அவரோடு சேர்ந்து செபிக்க மூன்று சீடர்கள் தேவைப்பட்டனர். இரத்த வியர்வை வியர்க்கும்போது ஆறுதல் கூற வானதூதர் தேவைப்பட்டனர். சிலுவையைச் சுமக்கும்போது கூடவே இருந்து இலட்சியப் பயணத்தை நிறைவுசெய்ய அன்னை மரியாவின் உடனிருப்பு தேவைப்பட்டது. சிலுவையைச் சிறிது தூரம் தூக்கிச் சுமக்க சீமோன் தேவைப்பட்டார். பார்ப்பதற்கேற்ற அமைப்பும் விரும்பத்தக்க தோற்றமும் இல்லாத இயேசுவின் முகத்தைத் துடைக்க வெரோணிக்கா தேவைப்பட்டார். கல்லறையில் அடக்கம் செய்ய அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு தேவைப்பட்டார். இறுதியில் தம்முடைய அன்புத் தாயைப் பாதுகாப்பாய் ஒப்படைக்க யோவான் தேவைப்பட்டார்.

ஆம், ஆண்டவர் தேவையிலிருக்கிறார். ‘நான் தேவையில் இருக்கிறேன்என்று கூறியபோதுஇதோ, நான் வருகிறேன் ஆண்டவரேஎன்று கூறி ஒரு கழுதை முன்வந்தது. இயேசு தேவையிலிருப்பது அவரது பலவீனமோ அல்லது இயலாமையோ அல்ல; மாறாக, அவர் மனித இயல்பு (மனித உரு) எடுத்ததன் மகத்துவம் (யோவா 1:14). கடவுள் நிலையிலிருந்து மனுவுரு ஏற்று, நம்மில் ஒருவராய் வாழ்ந்து, நமக்காகவே இறந்த நம் மீட்பர் இயேசுவுக்கு, நீங்களும் நானும் தேவைப்படுகிறோம் என்பது நாம் பெற்ற பெரும்பேறு! இயேசுவின் தேவைகளில் இணைந்துகொள்ள முன்வருவோம். அவர் பாதையில் நம் கண்களைப் பதிப்போம்.

news
ஞாயிறு மறையுரை
ஏப்ரல் 06, 2025, தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) எசா 43:16-21; பிலி 3:8-14; யோவா 8:1-11 - இரக்கமுள்ள இறையன்பு நமக்காகக் காத்திருக்கிறது!

இறந்துபோன என் தாத்தா கத்தோலிக்கர் அல்லர்; அவர் விண்ணகத்திற்குப் போவாரா?” என்ற கேள்வியைச் சீனாவைச் சேர்ந்த எய்டென் என்ற ஒரு சிறுவன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு அனுப்பியிருந்தான். அச்சிறுவனின் கேள்விக்கு, ‘அர்ஸ் நகரின் வழிகாட்டிஎன்று புகழப்பெறும் புனித ஜான் மரிய வியான்னி அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வைச் சுட்டிக் காட்டி திருத்தந்தை பதிலளித்தார்.

ஒருநாள் புனித வியான்னியைத் தேடி வந்த ஒரு பெண், தன் கணவர் பாலத்தின் மேலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டார் என்று கூறினார். அவர் செய்த பாவத்தால் கட்டாயம் நரகத்திற்குத்தான் சென்றிருப்பார் என்றெண்ணிக் கதறி அழுதார். அப்போது, புனித வியான்னி அப்பெண்ணிடம், “மகளே, அந்தப் பாலத்திற்கும் ஓடுகின்ற ஆற்றுக்கும் இடையே இறைவனின் இரக்கம் நிறைந்திருக்கிறது. அதை நீ புரிந்துகொள்ள வேண்டும்என்று கூறி அவரை அமைதிப்படுத்தி அனுப்பினார்.

எங்கும் நிறைந்திருப்பது இறை இரக்கம்; எச்சூழலிலும் எவ்வேளையிலும் எல்லாரையும் காக்கக்கூடியது, இறைவனின் இரக்கம். எங்கே இரக்கம் உள்ளதோ அங்கே இறைவன் இருப்பார். இரக்கம் இல்லாத இடத்தில், இறைவனுக்கும் இடமில்லை. இறைவனின் பெயர் இரக்கம்; அவரது அடையாள அட்டை இரக்கம். இரக்கம் என்பது தன்னிலேயே ஒருவரை முழுமை அடையச் செய்வதில்லை; மாறாக, அடுத்தவரைத் தேடிச்சென்று, அவரை வரவேற்று அரவணைப்பதில்தான் இரக்கம் முழுமைகொள்கிறது.

தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறு வாசகங்கள், ஒரு குழந்தையை அரவணைத்துப் பாதுகாக்கும் பெற்றோரைப்போல, இறைவனின் இரக்கம் நம்மை அரவணைத்துப் பாதுகாக்கிறது எனும் சிந்தனையைச் சுமந்து வருகிறது.

இன்றைய முதல் வாசகம், இஸ்ரயேலின் புதிய விடுதலைப் பயணத்தைப் பற்றி உரைக்கிறது. இஸ்ரயேலைத் தம் மக்களாகத் தேர்ந்தெடுத்தவர் கடவுள். ஆனால், அவர்கள் கடவுளைப் புறக்கணித்ததால் பல நாடுகளுக்குக் கடத்தப்பட்டார்கள். கீழ்ப்படியாத தம் மக்களை ஆண்டவர் தண்டித்தார். “துன்பமெனும் அப்பத்தையும் ஒடுக்குதல் எனும் நீரையும் கொடுத்தார் (எசா 30:20). ஆனாலும், ஆண்டவர் அவர்களை முழுமையாக அழியவிடவில்லை. இக்கட்டான நேரங்களிலும் அவர்களுக்குக் கற்பித்து அவர்களை வழிநடத்தினார். தாம் முன்னின்று நடத்த இருக்கும் இந்தப் புதிய விடுதலைப் பயணம் அருங்குறிகளால் எகிப்திலிருந்து இஸ்ரயேலரை மீட்டுவந்த முதல் விடுதலைப் பயணத்தைப் போலவே (விப 14) சிறப்பானதாக இருக்கும் என்கிறார். கடவுள் இஸ்ரயேலைத் தேர்ந்தெடுத்து அன்பு செய்தபோதும் அவர்கள் கடவுளை மகிமைப்படுத்தவில்லை; மாறாக, அவருக்கெதிராகப் பாவம் செய்தனர். அந்த நிலையிலும் கடவுள் அவர்களைக் கைவிடவில்லை; காரணம், அவர் அவர்கள்மேல் கொண்டிருந்த இரக்கம்!

இன்றைய இரண்டாம் வாசகம், பவுல் வாழ்வில் நடந்த மிகப்பெரிய மாற்றத்தைப் பற்றிக் கூறுகிறது. பவுல் தனக்குள் நிகழ்ந்த மனமாற்றம் என்பது தனது உயர்வான வளர்ப்பு, குடும்பப் பின்னணி, நாடு, மரபுவழி உடைமை, பாரம்பரிய நம்பிக்கை, செயல்பாடு, அறநெறி வாழ்வு ஆகிய சிறப்புப் பண்புகளை அடிப்படையாகக் கொள்ளாமல் இறைவனின் அளப்பரிய இரக்கத்தை முன்வைத்தே நிகழ்ந்தது என்கிறார் (பிலி 3:4-7). எனவேதான், ‘கிறிஸ்துவைப் பற்றிய அறிவே இவ்வுலக அனைத்துச் சிறப்புகளைவிட மேலான ஒன்றுஎன்று அவரால் உறுதிபடக் கூற முடிந்தது.

இன்றைய நற்செய்திப் பகுதியில், தம் அன்புத் திட்டத்தில் யாரையும் ஒதுக்குவதற்கு விரும்பாத இயேசுவின் இரக்கம் மிகுந்த இதயத்தை நம்மால் உணர முடிகிறது. ஒலிவ மலையில் இரவு முழுவதும் தாம் அனுபவித்த இறையனுபவத்தை (8:1) அதிகாலையில் தம் மக்களுக்குக் கொடுக்க கோவிலுக்கு வருகிறார். காலையிலேயே விபசாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணை இயேசுவிடம் கூட்டிக்கொண்டு வந்து ஒரு வழக்கை ஆரம்பிக்கின்றனர் மறைநூல் அறிஞரும் பரிசேயரும். இயேசுவை எப்படிச் சிக்க வைக்கலாம் என இவர்கள் தூங்காமல் இரவெல்லாம் சதித்திட்டம் தீட்டியிருப்பார்கள் போலும். இவர்களுடைய நோக்கம் மோசேயின் சட்டத்தை நிறைவேற்றுவது அல்ல; மாறாக, இயேசுவின்மீது குற்றம் காண்பதே (8:6). இயேசு இரக்கம் கொண்டு அப்பெண்மீது கல் எறிய வேண்டாம் என்று சொன்னால், அவர் மோசேயின் சட்டத்தை மீறுகிறார் எனக் குற்றம் சுமத்தலாம். ஒரு வேளை கல்லால் எறிந்துகொல்ல அனுமதித்தால் அவர் உரோமைச் சட்டத்திற்கு எதிராகச் செயல்படுகிறார் எனப் பழி சுமத்தலாம். காரணம், இயேசுவின் காலத்தில் மரண தண்டனை அளிக்கும் அதிகாரம் உரோமை அரசைத் தவிர வேறு யாருக்கும் இல்லை. எனவே, எப்படியேனும் இயேசுவைச் சிக்கலில் சிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே அந்தப் பெண்ணைப் பகடைக்காயாய் அழைத்து வருகின்றனர்.

இறைமகனின் இரக்கத்திற்கும் பரிசேயரின் வன் முறை நிலைகளுக்கும் இடையே நிறுத்தப்பட்ட அந்த அபலைப் பெண்ணைக் கனிந்த இதயத்தோடு இயேசு பார்க்கிறார். பொதுவெளியில் ஒரு பெண்ணை நிறுத்தி அவரது அறநெறியை விவாதிக்க விரும்பாத இயேசு அமைதியோடுகுனிந்து விரலால் தரையில் எழுதிக் கொண்டிருக்கிறார் (8:6). இது இயேசு, பரிசேயர் தொடுத்த வழக்கில் ஈடுபாடு காட்டவில்லை எனப் புரிந்துகொள்ளலாம் அல்லது மாசுபட்ட ஆண் வர்க்கத்தை உற்றுநோக்க விரும்பவில்லை என்றும் பொருள் கொள்ளலாம். ஆனால், ஆணாதிக்கக் கோர முகம்கையும் மெய்யுமாகப் பிடிபட்ட (8:4) இவளை மோசேயின் சட்டப்படி கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் (லேவி 10:10; இச 22:22); ‘நீர் என்ன சொல்கிறீர்?” (8:5) என்று இயேசுவிடம் தொடர்ந்து கேட்கவே, “உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்என்று இயேசு பதில் கூறுகிறார்.

இயேசுவின் இந்தப் பதில் பரிசேயருக்கும் மறைநூல் அறிஞருக்கும் பேரிடியாக விழுந்தது. இந்த ஒற்றை வாக்கியம் குற்றம் சுமத்த வந்த பரிசேயரையும் மறை நூல் அறிஞரையும் குற்றவாளிக் கூண்டிலே ஏற்றியது. தண்டிக்கத் துடித்தவர்கள் இப்போது தண்டிக்கப்பட வேண்டியவர்களாயினர். குற்றம் சுமத்தியவர்கள் இப்போது குற்றவாளியாகிப் போயினர். “உங்களில் யார் தான் குறையின்றி வாழ்கிறீர்கள்? நீங்கள் அனைவருமே குறையுள்ளவர்கள்தாம். எனவே, குறைகளில் உங்கள் கவனத்தைச் செலுத்தாமல், நல்லது செய்வதில், வீழ்ந்து கிடப்போரைத் தூக்கி எழுப்புவதில் கவனம் செலுத்துங்கள்எனச் சொல்லாமல் சொல்கிறார் இயேசு.

முதியோர் தொடங்கி ஒருவர்பின் ஒருவராக அனைவரும் சென்றுவிடவே, இறுதியில், அங்கு நின்றது இயேசுவும் அப்பெண்ணுமே! அதாவது, இரக்கமும் துன்பமும் மட்டுமே தனியாக நின்றன. இந்நிகழ்வு பற்றி புனித அகுஸ்தின் விளக்கும்போது, இறுதியில்இரக்கத்தின் இயேசுவும் இரங்கத்தக்க அந்தப் பெண்ணும்தனியாக (இலத்தீனில்  Misecordia et misera) இருந்தனர் என்கிறார்.

இன்றைய நற்செய்தியில் இயேசு எந்த ஒரு கடுமையான சொல்லையும் வெளிப்படுத்தவில்லை. மாறாக, இரக்கமும் அன்பும் மட்டுமே அவரிடமிருந்து வெளிப்பட்டன. இயேசு அந்தப் பெண்ணிடம், “அம்மா, நானும் தீர்ப்பு அளிக்கவில்லை; நீர் போகலாம். இனி பாவம் செய்யாதீர் (8:11) என்று கூறி அப்பெண்ணை அனுப்பிவிடுகிறார். ஒரு பாவியின் உள்ளத்தைத் தொடும் பேருண்மை இறைவனின் இரக்கமாகத்தான் இருக்கமுடியும். “கிறித்தவ இறைநம்பிக்கையின் பேருண்மை, இறை இரக்கம்; இறை இரக்கத்தை இறைஞ்சும் எல்லாருக்கும் அது இலவசமாக வழங்கப்படுகிறதுஎன்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ். இறை இரக்கத்தை இறைஞ்சிய விபசாரத்தில் பிடிபட்ட பெண், நம்பிக்கையோடு தனது எதிர்காலத்தை நோக்கவும், புதிய வாழ்வைத் தொடங்கவும் இயேசு உதவுகிறார். இனி இப்பெண்ணிற்குப் பாவம் செய்வதற்கான விருப்பம் ஏற்பட்டாலும்கூட, இவர் ஒருமுறை இரக்கத்தை அணிந்துகொண்ட பின்னர், அந்த விருப்பம் இறையன்பால் வேறு திசையில் மாற்றப்பட்டு, இவர் தனது வாழ்வைப் புதுவிதமாக நோக்கவும் வாழவும் ஆரம்பிப்பார் என்பதில் ஐயமில்லை.

அன்பிற்குரியவர்களே, இறைவனின் இரக்கத்தை நம் வாழ்வில் எத்தனையோ முறை அனுபவித்திருக்கிறோம். அவரின் அன்பிரக்கமின்றி நம்மால் வாழ முடியாது. பிறர் குறைகளையே பெரிதுபடுத்தும் நம் இயல்பை, விரைவாகத் தீர்ப்பு வழங்கும் நம் இயல்பை எண்ணிப் பார்ப்போம். பிறரைத் தீர்ப்பிடுவதற்கு முன், நாம் எவ்வாறு காணப்படுகிறோம் எனக் கண்ணாடியில் முதலில் பார்ப்போம். நாம் தீர்ப்பிடப்பட விரும்பவில்லையெனில், நாம் பிறரையும் தீர்ப்பிடக்கூடாது. நாம் தொடர்ந்து மற்றவரைத் தீர்ப்பிட்டுக் கொண்டே இருந்தால், அதே அளவையுடனே நாமும் தீர்ப்பிடப்படுவோம். எனவே, மற்றவரைத் தீர்ப்பிடுவதற்குப் பதிலாக அவர்களுக்காக மன்றாடுவோம். தீர்ப்பு கடவுளுக்கு மட்டுமே உரியது. நம் தீர்ப்பு ஒருபோதும் ஆண்டவரின் தீர்ப்புபோல உண்மையாக இருக்காது, இருக்கவும் முடியாது; ஏனென்றால், நம் தீர்ப்பில் இரக்கம் குறைவுபடுகின்றது.

நிறைவாக, இரக்கத்தின் தூதுவர்களாக அழைக்கப்பட்டுள்ள நாம் தெளிவான அன்புச் செயல்கள் வழியாக, இறைவனின் இரக்கத்திற்குச் சான்றுகளாக மாறுவோம். நமது நிழல்கூட நன்மை செய்யட்டும்! நாம் செய்யும் இரக்கச் செயல்களால் இரக்கமிக்க கடவுளை முகம் முகமாய், இதயத்துக்கு நெருக்கமாய்ச் சந்தித்து உரையாடுவோம். நிபந்தனையற்ற இறைவனின் இரக்கம் நம் வாழ்வில் ஆற்றக்கூடிய செயல்களை எண்ணிப் பார்ப்போம். எதிர்நோக்கின் யூபிலி ஆண்டில் இறைவனின் இரக்கத்தை நோக்கித் திரும்பி வருவோம் (யோவே 2:12). நம் வாழ்வில் மாபெரும் செயல் புரிய இரக்கமுள்ள இறையன்பு நமக்காகக் காத்திருக்கிறது (திபா 126:2).

news
ஞாயிறு மறையுரை
மார்ச் 30, 2025, தவக்காலத்தின் நான்காம் ஞாயிறு (3-ஆம் ஆண்டு) யோசு 5:9,10-12: 2கொரி 5:17-21; லூக் 15:1-3, 11-32 (மன்னிப்பதில் ஒருபோதும் சோர்வடையாத இறைவன்!)

ஒவ்வோர் ஆண்டும் தவக்காலத்தின் 4-ஆம் ஞாயிறை நாம்மகிழும் ஞாயிறு (Laetare Sunday) என்று கொண்டாடுகிறோம். உயிர்ப்பை நோக்கிச் செல்லும் நம் தவக்காலப் பயணத்தில் மகிழ்வை வளர்க்க, இந்த ஞாயிறு நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. ஒருவர் மகிழ்ச்சி அடைவதற்கான பல நூறு காரணங்களைக் கூற முடியும். அவற்றில், மிக முக்கியமான காரணங்கள் - நாம் மன்னிப்பு பெற்ற, மன்னிப்பு வழங்கிய தருணங்கள்.

2014-ஆம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தவக்காலத்தின் 4-ஆம் ஞாயிறுக்கு முந்தைய வெள்ளி, சனி ஆகிய இரு நாள்களைமன்னிப்பின் விழாவாக (Festival of Forgiveness) கொண்டாடுமாறு அழைப்பு விடுத்தார். இந்த மன்னிப்பு விழாவின்போது, உலகெங்கும் பல கோவில்கள் 24 மணி நேரமும் திறக்கப்பட்டிருப்பதும், அங்கு ஒப்புரவு அருளடையாளம் வழங்க அருள்பணியாளர்கள் காத்திருப்பதும் இவ்விழாவின் முக்கிய நிகழ்வுகளாகும். மன்னிப்பின் விழாவை அறிமுகம் செய்து வைத்தபோது திருத்தந்தைஆண்டவருக்கென 24 மணி நேரத்தை ஒதுக்கி, நாம் மனமாற்றத்திற்கான சிறப்பு நேரமாக அதைச் செலவிடுவோம். காணாமற்போன மகன் திரும்பி வந்தபோது, அதை ஒரு விழாவாகக் கொண்டாடிய தந்தையைப்போல, நாம் இதைக் கொண்டாடுவோம்என்று கூறினார்.

எதிர்நோக்கின் சிறப்பு யூபிலி ஆண்டைக் கொண்டாடி வரும் இவ் வேளையில், ‘மன்னிப்பதில் சோர்வடையாத இறைவன்என்ற மையப் பொருளில் சிந்திக்க நமக்கு அழைப்பு விடுக்கின்றன இன்றைய வாசகங்கள்.

இன்றைய முதல் வாசகத்தில், இஸ்ரயேல் மக்கள் இதுவரை பெற்றிராத இரண்டு மகிழ்ச்சியான அனுபவங்களைப் பெற்றுக் கொள்கின்றனர். முதலில், அவர்கள் எகிப்திலிருந்து வாக்களிக்கப்பட்ட நாட்டை நோக்கிப் புறப்படும்போது, எகிப்தியர் அவர்களைப் பார்த்து, “அறியாத கடவுளை நோக்கி நாடோடிகளாக அலைந்து திரிகிறீர்களே, நீங்கள் நம்பும் கடவுள் பொய்யர்; அவரது வாக்குறுதியும் பொய்என அவர்கள்மீது பழிசுமத்தினர். ஆனால், கடவுளோ எகிப்தியரின் பழிச்சொற்களைப் பொய்யாக்கி, இஸ்ரயேல் மக்களை யோசுவா தலைமையில் யோர்தான் ஆற்றைக் கடக்கச்செய்து, பாலும் தேனும் பொழியும் கானான் நாட்டிற்குள் நுழையச் செய்தார் (யோசு 5:9).

இரண்டாவது, வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குள் நுழைந்த இஸ்ரயேல் மக்கள் அனைவருமே எகிப்தில் அடிமைகளாகப் பிறந்தவர்கள். எகிப்தியர்முன் பல தலைமுறைகளாக அடிமைகளாகக் கைகட்டி வாழ்ந்தவர்கள். அவர்களில் எவருமே சுதந்திரமாகத் தாங்களே பயிரிட்டு, தயாரித்த உணவை உண்ட அனுபவம் இல்லாதவர்கள். இப்போது தாங்கள் உரிமையாகக் கொண்ட கானான் நாட்டில், தங்கள் நிலத்தின் விளைச்சலைத் தங்கள் விருப்பப்படி சுதந்திரமாக உண்ண ஆரம்பிக்கின்றனர். அவர்கள் வாழ்வில் அதுவரைப் பெற்றிராத மகிழ்ச்சியான ஓர் அனுபவத்தை முதல் முறையாகப் பெறுகின்றனர். இவர்களின் இந்த மகிழ்ச்சிக்குக் காரணம், எல்லை தாண்டி மன்னிப்பதில் சோர்வடையாத இறைவனைத் தவிர வேறு எவர் இருக்க முடியும்!

மன்னிப்புக் கேட்கத் தெரிந்தவர் மனம் திருந்தி வாழ்வார்; மன்னிப்புக் கொடுக்கத் தெரிந்தவர் மனம் மகிழ்ந்து வாழ்வார். மன்னிப்புக் கேட்பதற்கும் மன்னிப்புக் கொடுப்பதற்கும் நாம் கற்றுக்கொண்டால் வாழ்க்கை நமக்கு மிகவும் எளிதாகிவிடும் அல்லவா! இந்தச் சிந்தனைகளை விவரிக்கிறதுஇரக்கத்தின் நற்செய்திஎன அழைக்கப்படும் லூக்கா நற்செய்தியில் கூறப்பட்டுள்ளகாணாமல்போன மகன்உவமை.

வரிதண்டுவோர், பாவிகள் யாவரோடும் இயேசு உரையாடி, உண்டு மகிழ்ந்ததை விரும்பாத பரிசேயரும் மறைநூல் அறிஞரும் இயேசுவுக்கு எதிராகமுணுமுணுத்தனர் (லூக் 15:1,2). இவர்களின் முணுமுணுப்புக்கான காரணம் என்ன? வரிதண்டுவோர், பாவிகள் மட்டில் இயேசுவின் நிலைப்பாடு என்ன? என்று ஆராய்ந்தாலே இன்று இயேசு நமக்குக் கூறவிரும்பும் கருத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

பழைய ஏற்பாட்டுப் பார்வையில் யூதர்கள் பாவிகளோடும் பிற இனத்தாரோடும் பழகுவது இல்லை. அவர்களை யூதர்கள்பாவிகள்என்றே கருதினர். பாவிகளை மீட்க வந்த இயேசுவோ அவர்களோடு உண்டு, உரையாடி, வரவேற்று மகிழ்ந்தார்; அவர்களுக்கு வாழ்வளிக்க விரும்பினார்; அவர்களின் பாவநிலையை ஏற்றார் (2கொரி 5:21). இந்தப் பின்னணியில் புறக்கணிக்கப்பட்டு, பாவிகளாகக் கருதப்பட்டவர்கள் தங்களை இளைய மகனுடன் இனம் காணலாம். இயேசுவிடம் திரும்பி வரும் அவர்களின் உணர்வு, மனம்மாறித் திரும்பி வந்த இளைய மகனின் உணர்வைப்போல அமைகிறது. அவர்களின் இந்தச் செயல் மூலமாக இறைவன் பாவிகளை வெறுத்து ஒதுக்குபவர் அல்லர் என்பதை இயேசு நிறுவுகிறார்.

மேலும், மூத்த மகன் நம்பிக்கை மற்றும் கீழ்ப்படிதலின் முன்மாதிரியாகத் தோன்றினாலும், ஆழ்ந்த தவறான புரிதல் கொண்டவராக இருக்கிறார். மனம் மாறித் திரும்பி வந்த தம்பியை மகிழ்ந்து கொண்டாட மனமில்லாமல், தந்தைக்கு எதிராக முணுமுணுக்கிறார். இந்த எதிர்ப்பில் அவரது உண்மை நிலை தெளிவாகவும் ஓர் அன்பற்ற கீழ்ப்படிதல் துல்லியமாகவும் வெளிப்படுகிறது. “உம் கட்டளைகளை ஒருபோதும் மீறியதில்லை (15:29) எனத் தந்தையிடம் முறையிடும் இந்த மகனின் செயல் பரிசேயர், மறைநூல் அறிஞரின் உணர்வைப் போல அமைகிறது. இவ்வுவமையில் மனம்மாறி வருபவர்களை மனமகிழ்வோடு ஏற்றுக்கொள்ளவும் இந்த மனமாற்றம் கொண்டாடப்பட வேண்டும் என்பதும் இயேசு வலியுறுத்தும் செய்தி.

இந்த உவமையில் முக்கியமாகச் சிந்திக்கப்பட வேண்டியவர் தன் மகன்மீது உண்மையான அன்பு கொண்டிருக்கும் இரக்கமிகுந்த தந்தைதான். அவர் தான் இன்றைய நற்செய்தியின் மையம். அவர்தான் உண்மையில் கொண்டாடப்பட வேண்டியவர். தன்னிலை இழந்து, தன் தந்தையை விட்டு விலகிச் சென்ற இளைய மகன் தன் தந்தையின் மன்னிப்பையும் அன்பையும் தேடித் திரும்பி வருகிறான். வயது முதிர்ந்த காலத்தில், தன் பாதுகாப்பிற்கென எதையும் வைத்துக் கொள்ளாமல்தன் சொத்தைப் பகிர்ந்தளித்த (லூக் 15:12) தந்தையின் நற்குணத்தை அறிகிறான். தான் எண்ணியதற்கு மாறாக அவர்எத்துணை இனியவர் (திபா 34:8) என்பதை உணர்கிறான். தான் தொலைவில் இருக்கும்போதே தன்னை நோக்கி நகரும் தன் தந்தையின் இதயத்தைப் பார்க்கிறான். தந்தையும் அவன்மீது பரிவுகொண்டு, ஓடித் தழுவி, அவனை முத்தமிட்டு, எவ்வித நிபந்தனையுமின்றி ஏற்றுக்கொள்கிறார். அது மட்டுமல்லாமல்அவனுக்குப் பெரிய விருந்தொன்று அளிக்கிறார். எனவே, இவ்வுவமையை  ஊதாரி மகனின் உவமை என்பதைவிடஊதாரி தந்தையின் உவமைஎன்பது எவ்வளவு பொருத்தமாய் அமைகிறது அன்றோ!

இந்த உவமையிலிருந்து கடவுள்நல்ல தந்தைஎன்பதை உணர்கிறோம். அவர் நம் செயல்களுக்குப் பலனோ தண்டனையோ அளிக்கும் ஓர் அதிகாரியென்று காணாது, நம்மை அன்பு செய்யும் தந்தையாக அவரைக் காணவேண்டும். நம் பாவங்களைக் கண்டு வியப்போ திகிலோ கொள்பவரல்லர் கடவுள். நம் பலவீனத்தை அவர் அறிவார். அவர் ஒருபோதும் நம்மை விட்டுப் பிரிந்ததில்லை. நம் அனைத்து அனுபவங்களிலும் அவர் நம்மோடு இருக்கிறார். எவ்வளவு தூரம் நாம் சென்றிருந்தாலும், என்ன தவறு செய்திருந்தாலும், நமது வாழ்வையும் நேரத்தையும் வீணடித்திருந்தாலும், இறைவனிடம் திரும்பிவர முடிவு செய்தோமானால் அன்பில் சோர்வடையாத நம் தந்தை நமக்காகத் தமது கரங்களை விரித்துக் காத்திருக்கின்றார்.

இறைத்தந்தையின் மன்னிப்பு அவரது அன்பை மிகத்தெளிவாகக் காணக்கூடிய அடையாளம். இறைமன்னிப்பு ஒரு வரையறைக்கு உட்பட்டதல்ல; இறைவனின் இரக்கத்தில் மன்னிப்புப் பெறாத எந்தப் பாவமும் இல்லை. “கடவுள் நம் மிகக் கொடிய பாவங்களையும்கூட மன்னித்து, நம்மை வரவேற்று, நம்மோடு விருந்து கொண்டாடுபவர்; ஆனால், நாம்தான் அவரிடம் மன்னிப்புக் கேட்பதற்குச் சோர்வடைகிறோம்என்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ் (மூவேளைச் செபவுரை, 27.03.2022). மன்னிப்பு எப்போதுமே நம் வானகத் தந்தையின் இலவசச் செயலாக உள்ளது. ஒப்புரவு அருளடையாளத்தில் நாம் பெறும் இறைவனின் மன்னிப்பு, அவரிடம் நாம் திரும்பி வரவும், அவர் நமக்கு நெருக்கமாக இருப்பதை அனுபவிக்கவும் நமக்கு அழைப்பு விடுக்கின்றது.

நிறைவாக, நம் இதயங்கள் மூடப்பட்டு, மன்னிக்க இயலாமல் இருப்பதுதான் பல உறவுச் சிக்கல்களுக்குக் காரணமாக அமைகிறது. நம் வாழ்வில் மனக்கசப்பு, பழிவாங்குதல், கோபம் ஆகியவை நம் வாழ்வைத் துன்பமாக மாற்றுகின்றன. இன்றைய இரண்டாம் வாசகத்தின் அழைப்பிற்கேற்ப, பாவமறியாத கிறிஸ்து, பாவிகளாகிய நம் அனைவரோடும் தம்மை இணைத்துக் கொண்டு, நமக்காகப் பாவப்பரிகாரப் பலியானதுபோல, நாம் அனைவரும் இயேசுவின் அன்பால் இயக்கப்பட்டு, பிறரோடு ஒப்புரவாகி, அவரைப்போல தியாக வாழ்க்கை வாழமுயல்வோம்.

இறைவன் மட்டுமே நம் பாவங்களை மன்னிக்கிறார். அவரிடமிருந்து மன்னிப்பு உறுதியானது. நம் இறைத்தந்தையைப் போன்று நாமும் இரக்கம்நிறை மனத்துடன் பிறரை நிபந்தனையின்றி மன்னித்து ஏற்றுக்கொள்வோம். பிறரை மன்னிப்பது நமக்குக் கடினமாக இருக்குமேயானால், தூய பிலிப்பு நேரி கூறுவதுபோல, “சிலுவையில் தொங்கும் இயேசுவை உற்றுநோக்குவோம்.” நம் தவறுகளுக்காக மனம் வருந்தி, கடவுளின் இரக்கத்தைப் பெறுவதன் வழியாக அக்களிப்போம். நம் அயலவரை மனத்தில் சுமையின்றி நோக்கும் சக்திபெறுவோம்.

மன்னிப்பதில் ஒருபோதும் சோர்வடையாத இறைத் தந்தையைப்போல மன்னிக்கும் மனமும், இளைய மகனைப்போல மன்னிப்பு வேண்டும் மனமும் பெறுவோம். அதற்கான அருளை ஆண்டவர் இயேசு நமக்கு அருளவேண்டும் என்று இந்நாளில் ஒன்றிணைந்து மன்றாடுவோம்.

news
ஞாயிறு மறையுரை
மார்ச் 23, 2025, தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) விப 3:1-8,13-15; 1கொரி 10:1-6,10-12; லூக் 13:1-9 - அருள் வாழ்வின் அடித்தளம் மனமாற்றம்!

இன்று தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு! இன்றைய வாசகங்கள் அனைத்தும் மனமாற்றத்தை மையமாகக் கொண்டமைகின்றன. மனமாற்றம் என்றதுமே, அது பாவத்திலிருந்து மனம் மாறுதல் என்றும், ‘மனம் மாறுங்கள்என்னும் அழைப்பு பாவிகளுக்கு மட்டும்தான் என்றும் நினைக்கின்றோம். சிந்தனையாலும் சொல்லாலும் செயலாலும் கடமையில் தவறியதாலும் செய்த பாவங்களை அறிக்கையிட்டு, அவற்றிலிருந்து மனமாறுதல் என்று கருதுகின்றோம். இது உண்மை என்றாலும், கிறித்தவ மனமாற்றம் என்பது ஆண்டவரது அளவு கடந்த அன்பால் கவரப்பட்டு, மனத்தின் உள்ஆழத்திலே பாவத்தை வெறுத்து ஒதுக்கி, ஆண்டவர் காட்டும் அன்புப் பாதையில் நடப்பதாகும். இது ஒரு நாள், இரண்டு நாளில் முடிந்துவிடும் ஒன்றன்று; மாறாக, அன்றாடம் வாழ வேண்டிய வாழ்வு நெறியாகும்.

இயேசு கலிலேயாவில் தமது பணியைத் தொடங்கும்போது, “மனம் மாறுங்கள்என்றே முழங்கினார். அவர் விண்ணேற்றம் அடைவதற்கு முன்னர் போதித்த இறுதிப் போதனையும்மனம் மாறுங்கள் (லூக் 24:47) என்பதாகும். திரு அவையின் முதல் திருத்தந்தை புனித பேதுரு பெந்தக்கோஸ்து நாளில் மக்களுக்கு வழங்கிய முதல் அருளுரையும்மனம் மாறுங்கள் (திப 2:38) என்பதுதான்.

முதல் மனிதனாகிய ஆதாமிடம் கடவுள், “நீ எங்கே இருக்கின்றாய்?” (தொநூ 3:9) என்ற கேள்வி தொடங்கி, இறுதி நூலாகிய திருவெளிப்பாட்டில் இயேசு எல்லாரையும் நோக்கி, “தாகமாய் இருப்போர் என்னிடம் வரட்டும்; விருப்பம் உள்ளோர் வாழ்வு தரும் தண்ணீரை இலவசமாய்க் குடிக்கட்டும் (திவெ 22:17) என்ற அழைப்பு முடிய மனிதன் மனம் மாறி புதுவாழ்வு பெறவேண்டும் என்பதுதான் திருவிவிலியத்தின் தொடக்கம் முதல் முடிவு வரை இழைந்தோடும் ஆழமான கருப்பொருள். மனம் மாறுதல் என்பது சுயநலத்திலிருந்தும் கடவுளின் கட்டளைக்கு எதிரான கிளர்ச்சியிலிருந்தும் பாதையை மாற்றுதல் ஆகும். மனமாற்றம் என்பது, கடவுளை நோக்கித் திரும்பி வருவதும் அவரிடம் முழுமையாக நம்பிக்கைகொள்வதும் அவரது மன்னிப்பு, கருணை, வழிகாட்டுதல், திட்டம் யாவற்றையும் நாடிச் செல்வதுமாகும். இது ஒரு மனிதனில் நிகழ்கின்ற முழுமையான, தலைகீழ் மாற்றம் எனலாம். விடுதலை இறையியலில் தந்தை எனப் போற்றப்பெறும் குஸ்தாவோ குத்தியரஸ், “மனமாற்றம் என்பது தீவிரமான உருமாற்றம்என்று குறிப்பிடுவார்.

இன்றைய முதல் வாசகத்தில், பாவத்தின் விளைவாக எகிப்தில் அடிமைகளாக வாழ்ந்து துன்புற்ற இஸ்ரயேல் மக்களுக்கு மனம் மாறுவதற்காக ஒரு வாய்ப்பை வழங்குகிறார் கடவுள். பாவத்தின் காரணமாக மக்கள்அழிந்து போகட்டும்என அவர் விரும்பவில்லை; மாறாக, “வணங்காக் கழுத்துள்ள (தொநூ 33:3) அவர்களை மீட்டு, பாலும் தேனும் பொழியும் வளமான நாட்டிற்கு அழைத்துச் செல்கிறார். இஸ்ரயேல் மக்கள்மீது ஆசையோடு வைத்துள்ள கடவுளின் கனிந்துருகும் செயலை என்னவென்று சொல்வது! முரட்டுப் பிடிவாதம் பிடிக்கும் பிள்ளையை அரவணைக்கும் ஒரு தாயைப்போல, தந்தையைப்போல கடவுள் இங்குச் செயல்படுகிறார். கடவுள் இஸ்ரயேல் மக்கள்மீது கொண்டுள்ள இரக்கச் செயல், அவர்கள் மனம் மாறுவதற்கான ஒரு நல் வாய்ப்பாக அமைகிறது.

இரக்கமும் அருளும் கொண்ட கடவுள் (திபா 103:8) ஒரு தனிமனிதனின், ஒரு சமூகத்தின் விடுதலைக்காக மோசேயைப் பொறுப்பேற்கச் சொல்கிறார். மிதியான் நாட்டில் தன் மாமனார் இத்திரோவின் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த மோசே முதலில் தயக்கம் காட்டினாலும், கடவுள் அவருக்கு நம்பிக்கையைக் கொடுத்து, அவரது தயக்கத்தை நீக்கி, அவர் வழியாகக் கொணர்ந்த விடுதலை, வரலாறானது. இந்த வரலாற்று அனுபவத்தையே தாவீது இன்றைய திருப்பாடலில் பாடலாகப் பாடுகிறார். ‘குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்ற, நோய்களையெல்லாம் குணமாக்குகின்ற கடவுளுடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதேஎன்கிறார் (திபா 103:2,3). பழைய ஏற்பாட்டில் எங்கும் காணமுடியாத அளவுக்கு ஆண்டவரின் அன்பு, கனிவு, பரிவு, இரக்கம் முதலியன இப்பாடலில் வழிந்தோடுவதைக் காணலாம்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுலும் மனம் மாறுவதற்கான ஓர் அழைப்பைக் கொரிந்திய மக்களுக்குக் கொடுக்கிறார். பவுல் காலத் தில் கொரிந்திய நகரம் மிகப்பெரிய ஒரு வணிக நகரமாகவும் உரோமையரின் குடியேற்ற நகரமாகவும் விளங்கியது. இங்குப் பல தெய்வங்களுக்கான கோவில்கள் இருந்தன. கொரிந்தியக் கிறித்தவர்களில் பெரும்பாலோர் பிற இனத்தைச் சார்ந்த புதிய கிறித்தவர்களாக இருந்தனர். இம்மக்களிடத்தில் இஸ்ரயேல் மக்களின் மூதாதையர்களைநம் முன்னோர் (1கொரி 10:1) என்று பவுல் அழைக்கிறார். இதனால் இம்மக்கள் அனைவரும் ஒரே கடவுளின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் எனவும் இஸ்ரயேல் மக்களின் உண்மை வழித்தோன்றல்கள் என்பதையும் பவுல் தெளிவாக்குகிறார். இஸ்ரயேல் மக்கள் செங்கடலைக் கடந்த நிகழ்வையும் பாலைநிலத்தில் மன்னாவை உண்டு, பாறை நீரைப் பருகிய நிகழ்வையும் விளக்குவதன் மூலம் பழைய இஸ்ரயேல் மக்களுக்கும் புதிய இஸ்ரயேல் மக்களுக்கும் இடையே நிலவும் தொடர்பை அவர் எடுத்துக்காட்டுகிறார்.

ஆயிரம் நன்மைகளை அடுத்தடுத்து வழங்கியிருந்தாலும், அந்தப் பராமரிப்பின் கடவுள் ஆற்றிய அருஞ்செயல்களை இஸ்ரயேல் மக்கள் மறந்து போயினர். அவர்கள் கடவுளுக்கு எதிராக முணுமுணுக்கவும், சிலைவழிபாட்டில் ஈடுபடவும் செய்தனர். இதனால், அவர்கள் கடவுளின் கோபத்திற்கும் தண்டனைக்கும் ஆளானார்கள். இந்தத் தீமையிலிருந்து விடுதலை பெற முடியாமலும் விரும்பாமலும் தவித்தவர்கள் அவர்தம் வாரிசுகளான புதிய இஸ்ரயேல் மக்கள். இந்தக் கொரிந்து நகர மக்களும் பவுலின் அறிவுரைகளுக்கு எதிராக முணுமுணுக்கவே செய்தனர். எனவே, நம்பிக்கைகொண்ட கொரிந்து நகர மக்கள்சிலைவழிபாடுஎன்னும் தங்களின் பாவத்திலிருந்து மனமாற்றம் பெற்று, இயேசுவை நோக்கித் திரும்பி வர வேண்டும் என பவுல் அழைப்பு விடுக்கின்றார்.

இன்றைய நற்செய்தியிலும் இயேசு மனமாற்றம் குறித்தே போதிக்கின்றார். இரண்டு வரலாற்று நிகழ்வுகள் இங்கே குறிப்பிடப்படுகின்றன. ஒன்று, கலிலேயரைப் பிலாத்து கொன்ற நிகழ்வு; மற்றொன்று, சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டு பேர் இறந்த நிகழ்வு. வரலாற்றில் இது போன்ற விபத்துகளும் இறப்புகளும் நிகழும்போது அவை பாவத்திற்கான தண்டனை என்றே எண்ணப்பட்டன (யோபு 4:17; எசே 18:26; யோவா 9:2-3). இதற்குக் காரணம், பழைய ஏற்பாட்டில் மறுவாழ்வு பற்றி மக்களுக்குத் தெரியாததால் அவர்கள் இக்காலத் தண்டனை பற்றிய விளக்கத்தையே நம்பி ஏற்றுக்கொண்டனர். இதுவே, இவர்களுக்கு இறைவனது நீதியாகவும் தோன்றியது. ஆனால், இயேசுவோ கடவுள் தண்டனை அளிப்பது பற்றி மக்கள் கொண்டிருந்த எண்ணத்தையே மாற்றுகிறார்.

கோவிலில் பலி செலுத்திக்கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றதால், அவர்கள் இரத்தம் சிந்தப்பட்ட புனித இடம் மாசுபட்டு விட்டது என்று இயேசுவிடம் வந்து சிலர் கூறுகின்றனர். இச்செய்தியைக் கேட்ட இயேசு, சீலோவாமில் கோபுரம் ஒன்று விழுந்ததால் 18 பேர் உயிரிழந்த நிகழ்வையும் இணைத்து, அழிவினால் பாதிக்கப்பட்டோரைக் குறித்து, ‘அவசரத் தீர்ப்புகள் வழங்க வேண்டாம்என்று எச்சரிக்கிறார். பல நேரங்களில் மற்றவர்களைவிட நாம் மேலானவர்கள் என்ற எண்ணத்திற்கு அடிமைகளாகிறோம். எனவே, பிறர்மேல் தண்டனை விழும்போது, துன்பங்கள் வரும்போது, அது நீதிதான் என்று நினைக்கிறோம். அத்துன்பங்களே நம்மை அண்டும்போது, “கடவுளே ஏன் என்னைத் தண்டிக்கிறீர்? நான் என்ன பாவம் செய்தேன்?” என்று கேட்கின்றோம். இவ்வேளையில், இன்றைய நற்செய்தி நமக்குக் கூறுவது: நம் எதிரிகள் செய்யும் தீமைகள், நாம் செய்யும் தீமைகளை விடப் பெரியனவோ அல்லது மோசமானவையோ அல்ல என்பதுதான். மேலும், அனைவரும் மனம் திரும்ப வேண்டும் என்பதே கடவுளின் விருப்பம் என்பதை இங்கே இயேசு குறிப்பிடுகிறார். மேலும், இன்றைய நற்செய்தியின் இறுதியில் காணப்படும் அத்திமர உவமை வாயிலாக இறைவனின் காத்திருப்பும் அவரது பொறுமையும் நாம் மனம் மாற வேண்டும் என்பதற்கான கால அளவாகும்.

நிறைவாக, திருத்தந்தையின் இந்த ஆண்டு தவக்காலச் செய்தியில் முதலாவதாக, மனமாற்றத்திற்கான அழைப்பு என்பதுபயணம் மேற்கொள்வது; அதாவது, இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து வாக்களிக்கப்பட்ட பூமியை நோக்கிப் பயணம் செய்ததுபோல் நம் வாழ்வும் இறைவனை நோக்கிச் செல்லும் பயணமாக இருக்கவேண்டும். இரண்டாவது, மனமாற்றத்திற்கான அழைப்பு என்பதுஒன்றிணைந்து பயணித்தல்ஆகும். இது நாம் கடவுளின் பிள்ளைகள் என்ற பொதுவான மாண்பின் அடித்தளத்தில் ஒருவர் மற்றவருடன் இணைந்து நடப்பதும் எவரையும் தள்ளாமலும் மிதித்து விடாமலும் கோபம் மற்றும் வெளிவேடத்தால் எவரையும் ஒதுக்கி விடாமலும் இருப்பதாகும். மூன்றாவது, மனமாற்றத்திற்கான அழைப்பு என்பதுஎதிர்நோக்குடன் பயணித்தல்ஆகும். அதாவது, கடவுளையும் மீட்பு மற்றும் நிலைவாழ்வு குறித்த அவரது வாக்குறுதியிலும் நம்பிக்கை கொண்டு பயணம் மேற்கொள்வதாகும் (தவக்காலச் செய்தி, 06.02.2025).

எனவே, இந்தத் தவக்காலத்தில் நாம் மனம் மாறுவதற்காக மீண்டும் அவர் பொறுமையோடு காத்திருக்கிறார். மனம் மாற்றம் பெறுவோம், புது வாழ்வு அடைவோம்.

news
ஞாயிறு மறையுரை
மார்ச் 16, 2025, தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) தொநூ 15:5-12,17-18,21; பிலி 3:17-4:1; லூக் 9:28-36 - உடைபட... உயிர் கொடுக்க... உருமாற!

இன்று தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு! இயேசு தோற்ற மாற்றம் பெற்ற நிகழ்வையும் சிந்திக்கும் வாய்ப்பைத் திரு அவை நமக்கு வழங்குகின்றது. இயேசு தோற்ற மாற்ற நிகழ்வை ஏன் தவக்காலத்தில் சிந்திக்க வேண்டும்? இயேசுவின் தோற்ற மாற்றம் அவரின் கல்வாரிப் பயணத்திற்கான ஒரு முன்னோட்டம்; துன்பங்கள் வழியாகப் பெறப்போகும் மாட்சிமைக்கான முன்னடையாளம். கிறித்தவர்களாகிய நாம் சிலுவைகளைச் சுமக்காமல் உயிர்ப்பைக் கொண்டாட முடியாது என்பதை நம் மனத்திலே ஆழப்பதிக்கின்ற ஒரு நிகழ்வு. உடைபட மனமில்லாதவர் உருவாகவும் முடியாது, பிறரை உருவாக்கவும் முடியாது என்ற உண்மையை உணர்த்தும் ஓர் இறை வெளிப்பாடு இது.

இயேசுவின் தோற்ற மாற்றம் பற்றிய நிகழ்வு ஒத்தமைவு நற்செய்திகள் மூன்றிலுமே காணப்படுகிறது (மத் 17:1-9; மாற் 9:2-10; லூக் 9:28-36). “நாங்கள் சூழ்ச்சியாகப் புனைந்த கதைகளை ஆதாரமாகக் கொண்டு பேசவில்லை; நாங்கள் அவரது மாண்பை நேரில் கண்டவர்கள் (2பேது 1:16) என்று பேதுரு எழுதுவது இயேசுவின் தோற்ற மாற்றம் என்பதுபுனையப்பட்ட கதை அல்ல; மாறாக, உண்மையாகவே நிகழ்ந்த ஒன்றுஎன்பதை உறுதிப்படுத்துகிறது.

இன்றைய லூக்கா நற்செய்தியின் அறிமுக வரிகள், “இயேசு இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலைமீது ஏறினார் (9:28) என்கிறது. இங்கே மலையும் செபமும் நம் கவனத்தை ஈர்க்கின்றன. மலை உச்சி இறைவனோடு இணைகின்ற, இறைவன் தம்மை நமக்கு வெளிப்படுத்துகின்ற இடமாக மீட்பின் வரலாற்றிலும், திரு அவையின் படிப்பினையிலும் நாம் காண்கின்றோம். செபம் இறைவனை நோக்கி நம் கண்களைத் திருப்புவதற்கான ஒரு வாய்க்காலாக அமைகிறது. ஆழ்நிலை இறை வேண்டலில் இயேசுவின் முகத் தோற்றம் மட்டுமல்ல, அவர் உடுத்தியிருக்கும் ஆடை கூட  மின்னல் போல ஒளி வீசியது.

காசைப் போட்டால் நாம் விரும்பும் பொருள்களைப் பெறும்வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ள ஓர் இயந்திரத்தைப் போன்றதல்ல செபம். இறை வேண்டல் என்பது தேவைகளை அடுக்கிக் கொண்டே செல்வதுமல்ல; இறைவனின் பேரன்பை எண்ணி நன்றி சொல்வதே செபம். இறைவனின் விருப்பம் நம்மில் நிறைவேற நாம் அளிக்கும் அனுமதியே செபம். இயேசு நீண்ட செபத்தில் இரவெல்லாம் செலவிட்டார் (லூக் 6:12). தம் சீடர்கள் பல வகைகளிலே துன்பப்படுவார்கள், சோதிக்கப்படுவார்கள் என்பதை அறிந்தே செபித்தார் (2:31). தமது செபத்தின் வழியாக, தமது தோற்ற மாற்றத்தின் வழியாக இயேசு சீடர்களுக்கு உறுதியும் வலிமையும் அளித்தார் (யோவா 17:9). இயேசுவின் தோற்ற மாற்ற நிகழ்வு சீடர்கள் இயேசுவின் துன்பங்களையும், சிலுவைச் சாவையும் புரிந்து கொள்ள உதவியது எனலாம்.

இயேசு ஏன் பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகிய மூவரை மட்டும் மலைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்? இயேசு முதன்முறை தம் பாடுகளை அறிவித்த போது, அதை முதலில் எதிர்த்தவர் பேதுரு. இயேசு அவரைக் கடிந்துகொண்ட பாணி, பேதுருவை மட்டுமல்ல, மற்ற சீடர்களையும் பெரும் வருத்தத்தில் ஆழ்த்தியிருக்க வேண்டும். ஏனெனில், சீடர்களின் எதிர்பார்ப்புகள் இயேசுவின் இப்புதிய வெளிப்பாடுகளால் தவிடுபொடியாகி விட்டன. பேதுரு அனைவரின் சார்பாக நின்றுகொண்டு, “நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே; எங்களுக்கு என்ன கிடைக்கும்?” (மத் 19:27) என்று தங்கள் இயலாமைகளை வெளிப்படுத்துகின்றார். செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் தங்கள் தாயின் மூலமாக, “அரியணையின் வலப்புறமும் இடப்புறமும் அமர (மத் 20:21) பரிந்துரை செய்கின்றனர். இந்தச் சூழலில் பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகிய மூவருக்கும் உடனடியாக ஓர்ஆன்மிக அருள்தேவைப்பட்டது.

ஆகவே, சீடர்களின் பலவீனத்தை நன்கு அறிந்தவரான இயேசு, அவர்கள்மீது இரக்கம் கொண்டு தம் பாடுகளுக்கும் இறப்பிற்குப்பின் வரவிருந்த தமது வெற்றியைத் தம் தோற்ற மாற்றத்தின் வழியாக வெளிப்படுத்துகின்றார். இயேசுவின் பாடுகளைப்பற்றிக் கேட்டு நொந்துபோயிருந்த பேதுரு, இப்போது அவரது வெற்றிகரமான தோற்றத்தில் பெருமகிழ்ச்சி கொள்கிறார். இதே தோற்றத்தில் இயேசு நீடித்திருக்க வேண்டும் என்று பெரிதும் விரும்புகிறார். ஆனால், இயேசுவோ சீடர்கள் நம்பிக்கையில் ஆழப்பட வேண்டும், வாழ்வின் உண்மைத்தன்மையை உணர வேண்டும், தமது சிலுவையைச் சுமக்கும் திருத்தூதர்களாக மாற்றம் பெறவேண்டும் எனக் கூறி மலையை விட்டு இறங்கிப் பணிசெய்ய அழைத்து வருகிறார்.

தோற்ற மாற்ற நிகழ்வில் நம் கூடுதல் கவனத்தை ஈர்ப்பவர்கள் மோசேயும் எலியாவும். இஸ்ரயேல் மக்களின் வாழ்வில் மோசேயும் எலியாவும் மிக முக்கியமானவர்கள். மோசே மிகப்பெரிய திருச்சட்ட அறிஞர்; இறைவாக்கினர் எலியா இறைவாக்கினர்களுள் தலைமையானவர். கடவுளைத் தேடக்கூடியவர்கள் வாழ்வில் வரக்கூடிய பல்வேறு போராட்டங்களைச் சந்திக்க வேண்டும் என்பதை நமக்கு உணர்த்துபவர்கள் இவர்கள். மோசே இறைவன் கொடுத்த கட்டளைகளைப் பெற்றுக்கொண்டு அதன்படியே மக்களை வழிநடத்த புறப்பட்டபொழுது, அவர் மக்களால் எதிர்க்கப்பட்டு, பல்வேறு முணுமுணுப்பிற்கு ஆளான சூழலிலும், கடவுளின் பார்வையில் மோசே ஏற்றுக்கொள்ளப்பட்டார். எலியாவும் அன்றைய காலத்தில் போலி பொய்வாக்கினர்களால் எதிர்க்கப்பட்டாலும், கடவுளால் அவர் இறைவாக்கினராக ஏற்றுக்கொள்ளப்பட்டார். எனவே, பாடுகளிலும் போராட்டங்களிலும் எதிர்ப்புகளிலும் இறைவனின் திட்டத்தை நிறைவேற்றும் இயேசுவுடன் கடவுள் உடனிருக்கிறார் என்பதுதான் மோசேயும் எலியாவும் இயேசுவோடு உரையாடிய செய்தி (லூக் 9:31).

கடவுளின் திட்டத்தை நிறைவேற்றும்போது துன்பத்தைத் தவிர்க்க முடியாது. ‘சிலுவையின்றி மீட்பு இல்லை, ‘துன்பமின்றி வெற்றியில்லை.’ சிலுவைக்கு அப்பால் மாட்சி! இறப்பிற்கு அப்பால் உயிர்ப்பு! இதுதான் இயேசுவின் தோற்ற மாற்றம் தரும் மையச் செய்தி.

இயேசுவின் தோற்ற மாற்ற நிகழ்வில் துன்பம் மற்றும் சாவு பற்றி இயேசு கொண்டிருந்த கருத்தைப் புரிந்துகொள்வது நமது சிந்தனையை இன்னும் கூர்மைப்படுத்தும். இயேசு ஏழை எளியவர்களோடும் ஒடுக்கப்பட்டவர்களோடும் தம்மையே ஒன்றுபடுத்திக் கொண்டார். அவர்கள்மேல் பரிவு கொண்டார். இக்காரணத்திற்காகத்தான் அவர் துன்புறுத்தப்படலானார். துன்பத்தை ஒழிப்பதற்கான ஒரே வழி துன்புறத் தயாராக இருப்பது என்பதையே இயேசு வாழ்ந்து காட்டினார். துன்பத்தைப் போக்குவதற்குத் துன்புறுவதே ஒரே வழி என இயேசு தம் சீடர்களுக்குக் கற்றுக்கொடுக்கலானார். துன்புறும் மனிதரைக் கண்டு இரக்கப்படுவது மட்டுமல்ல, அவரோடு நாமும் துன்புற வேண்டும். ஆகவேதான், “தம்மைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும் (9:23)  என்றார். லூக்கா மட்டுமேநாள்தோறும் சிலுவையைத் தூக்கட்டும்எனச் சீடத்துவத்தின் கடினத்தன்மையை விளக்குகிறார்.

சீடத்துவத்தின் உச்சம் இறப்பதற்கும் தயாராக இருக்கவேண்டும் என்பதுதான். ‘என் பொருட்டுத் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக்கொள்வார் (9:24) என்றே இயேசு சீடர்களுக்கு அறிவுரை வழங்கினார். இறையாட்சிக்குச் சான்று பகர வேண்டுமென்றால் தாம் இறக்கவேண்டும் என இயேசு எண்ணினார். தாம் சொன்னபடியே இயேசு அனைத்து மனிதருக்காகவும் தம் உயிரைக் கையளிக்க முன்வந்தார். தம் சொல்லும் செயலும் தம்மை இடர்களுக்கு இட்டுச்செல்லும் என்பதை உறுதியாக உணர்ந்தபோதிலும், மக்களின் நலனுக்காகப் பல நற்செயல்களைப் புரிந்தார். இயேசு மனித குலத்தின் நலனுக்காக இறப்பதற்கு முன்வருவதன் வெள்ளோட்டம்தான் இயேசுவின் தோற்ற மாற்றம். இயேசு தம்முடைய இறையாட்சி இலட்சியத்தை அடைய அவர் கையிலெடுத்த ஒரே ஆயுதம் தந்தையின்மீது கொண்ட நம்பிக்கை.

வார்த்தைகளைவிட செயல்களே வலிமை வாய்ந்தவை என்பார்கள். ஆனால், செயல்களைவிடவும் வலிமை வாய்ந்தவை இறப்பு! இறையாட்சி வர வேண்டும் என்பதற்காக இயேசு இறந்தார்! எனவே, துன்புற, இறக்க எப்போதும் தயாராக இருக்கவேண்டும் என்பதே இயேசுவின் தோற்ற மாற்றம் தரும் அழைப்பு! இயேசுவின் அழைப்பை ஏற்ற திருத்தூதர்கள் இயேசுவுடன் எருசலேம் வரை சென்று இறக்கவும் துணிந்தார்கள்; பலர் மறைச்சாட்சியரானார்கள்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல் உண்மைக் கிறித்தவர்களுக்கும் போலிக் கிறித்தவர்களுக்குமான முரண்பாட்டை விளக்குகிறார். சிலுவையின் பகைவர்களாக இல்லாமல், சிலுவையை அரவணைப்பவர்களாக இருக்கவேண்டும். சிலுவையைத் தூக்கிச் செல்பவர்களே விண்ணகக் குடியுரிமையைப் பெறத் தகுதி உடையவர்கள் என்கிறார். தொடக்க வரியானநீங்கள் அனைவரும் என்னைப்போல் வாழுங்கள் (பிலி 3:17) என்ற அழைப்பு அவரின் கடிதத்தில் பலமுறை இடம் பெற்றுள்ளன (1கொரி 4:16; 11:1; 1தெச 1:6; 2:10; 2தெச 3:7,9). இங்கே அவர் தன்னை முன்னிலைப்படுத்தவில்லை; மாறாக, “இயேசுவினுடைய முன்மாதிரிகையைப் பின்பற்றுகிறவர்களாய் இருங்கள்என்கிறார். ‘கிறிஸ்துவின் மனத்தை (1கொரி 2:16) உள் வாங்கியவர் பவுல். பிலிப்பியருக்கு பவுல் எழுதிய கடிதத் தின் மையச்செய்தியே இவ்வாசகத்தின் இறுதி வரியாக அமைகிறது - “ஆண்டவரோடுள்ள உறவில் நிலைத்திருங்கள் (4:1). 

எனவே, இயேசு சுமக்கும் சிலுவையில் கொஞ்சம் நாமும் தோள் கொடுப்போம். அவரது அன்பில், உறவில் நிலைத்திருப்போம். பிறருக்கென நம்மையே அர்ப்பணிக்க, உடைபட, உயிர்கொடுக்க முன்வருவோம்.

news
ஞாயிறு மறையுரை
மார்ச் 09, 2025, தவக்காலத்தின் முதல் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) இச 26:4-10; உரோ 10:8-13; லூக்கா 4:1-13 (சோதனை நேரங்களில் எங்களோடு இருந்தருளும், ஆண்டவரே!)

இன்று தவக்காலத்தின் முதல் ஞாயிறு. பொதுவாக, தவக்காலம் என்றதுமே சாம்பல், சாக்குத்துணி, நோன்பு, தவம், தர்மம் போன்ற அடையாளங்கள் நம் மனத்தை நிரப்பும். சோகம், துயரம், மனவருத்தம், ஒருவகைக் குற்ற உணர்வு, உடல் ஒறுத்தல் என்ற பாரமான எண்ணங்கள் மேலோங்கும். ஆனால், தவக்காலம் என்பது இறைவனின் இரக்கத்தையும் அருளையும் அன்பையும் மன்னிப்பையும் கொண்டு வரும் வசந்த காலம் என்ற பொருளில் சிந்திப்பது நல்லது.

தவக்காலம், நம்மையே நாம் புடமிட்டுப் பார்க்க வேண்டிய சுயஆய்வுக்கான காலம்; இறைவனின் நிபந்தனையற்ற அன்பினை நினைத்து உள்ளம் உருகி ஒப்புரவாகும் காலம்; குற்றங்களிலிருந்து திருந்தி வரும் காலம்; இறைவன் பக்கம் திரும்பி வரும் காலம்; இறைவனோடு ஒன்றிக்கவும், இலக்கு நோக்கிப் பயணிக்கவும் நமக்கு ஊக்கமளிக்கின்ற, வழிகாட்டுகின்ற காலம்; தீமைகளிலிருந்து விடுபட, தீயோனிடமிருந்து விலகிச் செல்ல ஆற்றல் தரும் காலம்; ஆண்டவனின் அருகில் செல்ல, அலகையின் ஆர்ப்பரிப்பிலிருந்து அகன்று செல்ல இறைவன் நம்மை அழைக்கும் மனமாற்றத்தின் காலம்.

ஒவ்வோர் ஆண்டும் தவக்காலத்தின் முதல் ஞாயிறு, இயேசு சோதனைகளைச் சந்தித்த நிகழ்வைச் சிந்திக்க திரு அவை நம்மை அழைக்கிறது. இன்றைய நாளில் இயேசு சந்தித்த மூன்று சோதனைகளையும், அவற்றை எவ்வாறு இயேசு முறியடித்தார் என்பதையும் சிந்தித்து வாழ்வாக்க முயற்சி செய்வோம்.

சோதனை என்பது என்ன? நம் தீய உணர்வுகளாலும் நாட்டங்களாலும் தீயன செய்வதற்குத் தூண்டப்படும் இயல்பே சோதனை. இச்சோதனைகள் நம் வாழ்விலிருந்து பிரிக்க முடியாத ஒரு முக்கியமான கூறு எனலாம். நம் வாழ்வில் நாம் சந்திக்கும் சோதனைகளை எப்படிப் பார்க்கிறோம்? தப்பித்துக்கொள்ள முடியாத அளவு பெருகிவரும் ஒரு காட்டாற்று வெள்ளத்தில் நாம் அடித்துச் செல்லப்படுவதுபோல நம்மில் பலர் சோதனைகளைப் பார்க்கிறோம். சோதனை நேரங்களில்சோதனை தீரவில்லை, சொல்லி அழ யாருமில்லை - இப்படித்தான் நமது இயலாத் தன்மையை வெளிப்படுத்துகிறோம். ‘மிகப்பெரிய சோதனையில மாட்டிக்கொண்டேன், என்னால எழ முடியல, ‘எல்லாம் என் தலைவிதி, ‘ஒரே சோதனையா இருக்குப்பா, குடும்ப வாழ்க்கையை நடத்தவே முடியல...’ போன்ற உணர்வுகளை நாம் பல நேரங்களில் வெளிப்படுத்துகிறோம்.

சோதனைகளுக்கு, தீய நாட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வாழும்போது, நமது சொந்தச் சக்திக்கு மீறியதாய் சோதனைகள் வரும்போது, மனத்திலே உறுதி குறையலாம், நம்பிக்கை தளரலாம். ‘எதுவும் என்னால் செய்ய இயலாதுஎன்ற மாயை உருவாகலாம். ஆனால், அவற்றை எதிர்த்து நிற்கவும், சோதனைகளோடு போராடி வெற்றிபெறவும் நம்முள் நல்ல எண்ணங்களும் உறுதியான மனமும் உள்ளன என்பதையே இயேசு இன்று நமக்கு உணர்த்துகிறார். இறைவனின் சக்தி நமக்குத் துணை வரும் என்ற நம்பிக்கையும், நம்மைக் காப்பதற்கு இறைவன் எப்போதும் நம்முள் இருக்கிறார் என்ற உணர்வும் நம்மில் உருவாக வேண்டும்.

இயேசுஅலகையினால் சோதிக்கப்பட்டார்(லூக் 4:1) என்று இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது. தூய ஆவியாரால் இயேசுவின் பணியில் தொடங்கப்பட்ட திட்டமானது தீய ஆவியால் தடங்கலுறுகிறது. அவர் தீய நாட்டங்களாலோ உணர்வுகளாலோ சோதனைக்குட்படவில்லை; மாறாக, தம் பணிக்குறிக்கோளிலிருந்து திசைமாற அலகையினால் தூண்டப்படுகிறார். அவர் சோதனைகளைச் சந்தித்து, அலகையின் பிடியில் விழாது, அதைத் துரத்தி மிக எளிதாக வெற்றி கண்டார். எப்படி? அவர் பாலைநிலத்தில் நாற்பது நாள் தம் தந்தையின் கண்களை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தார். தூய்மையான கண்களை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கும்போது எப்படிச் சோதனையில் விழமுடியும்? தந்தையும் தம் மகனை விழவிடவில்லை என்பது இன்றைய நற்செய்தி நமக்குத் தரும் நல்லதொரு பாடம்.

இயேசு அலகையால் மூன்று சோதனைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார். அவை: ) இயேசு தம்முடைய இறையாற்றலைப் பயன்படுத்தித் தம் பசியைத் தீர்த்துக் கொள்ள, அதாவது கல்லை அப்பமாக்கி உண்ண;

) உலக அரசுகள் மேல் அதிகாரம் பெற தன்னைத் தெண்டனிட்டு வணங்க; ) ‘கடவுள் காப்பாற்றுகிறாரா?’ என்பதைச் சோதித்துப் பார்க்க, கோவிலின் உயர்ந்த பகுதியிலிருந்து குதிக்க என்பன.

கல்லை அப்பமாக மாற்றச் சொல்லி முன்வைத்த முதல் சோதனை, நம் பேராசையுடன் தொடர்புடையது. கடவுளின் துணை இன்றியும், கடவுளுக்கு எதிராகச் சென்றும் நாம், வாழ்வில் நிறைவைக் காணமுடியும் என்று பல வேளைகளில் நம்மை நம்பவைக்க அலகை எடுக்கும் முயற்சிகளையே இந்தச் சோதனை குறித்துக் காட்டுகிறது. இரண்டாவது சோதனை, பணம், பதவி, மற்றும் அதிகாரம் என்ற பொய்த் தெய்வங்கள் முன் தலை வணங்குவதைக் குறிக்கின்றது. மூன்றாவது சோதனை, கடவுளை நம் சுய இலாபத்திற்காகப் பயன்படுத்த முனைவதைக் குறித்துக்காட்டுகிறது. இம்மூன்று சோதனைகளையும் 1. பேராசையைத் தூண்டும் சோதனை, 2. அதிகாரத்தின்மீது நாட்டம் கொள்ளும் சோதனை, 3. புகழ் மற்றும் ஆணவத்தின் மீதான ஆசையைத் தூண்டும் சோதனை என வகைப்படுத்தலாம்.

இயேசு எவ்வாறு இச்சோதனைகளை முறியடித்தார்? 1. இயேசு தந்தையின்மீது கொண்ட உறவு (இறைவேண்டல்). 2. உலகப்பொருள்களின்மீது அவருக்கிருந்த பற்றின்மை (இச்சையின்மை). 3. தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றும் மன உறுதிப்பாடு (இறைவார்த்தை). இவை மூன்றும் இயேசுவுக்கு அலகையின் திட்டங்களைப் புறந்தள்ளும் வெற்றிகரமான பாதைகளாக அமைந்தன. இயேசு இறைவார்த்தையைப் பயன்படுத்தி அலகையை வென்றது, கடவுளின் முன் தாழ்ச்சியோடும் மன உறுதியோடும் செயல்பட்டது நம் வாழ்விற்குச் சிறந்ததொரு பாடமாக அமைகிறது.

திருத்தந்தை பிரான்சிஸ் இயேசு எதிர்கொண்ட இந்த மூன்று சோதனைகளையும் குறித்து மக்களுக்குப் போதிக்கும்போது, “ஒரு பொருளை உடைமையாக்குவதில் அல்ல; அதைப் பகிர்வதிலும், பிறர்மீது அதிகாரம் காட்டுவதில் அல்ல; அன்புகூர்வதிலும், புகழ், ஆணவத்தின்மீதும் அல்ல; பணிபுரிவதிலும் நாம் செயல்பட்டால் இயேசுவைப்போல அலகையின் திட்டங்களை முறியடிக்க முடியும்என்கிறார் (மூவேளைச் செபவுரை, மார்ச் 6, 2022).

சோதனைகள் இல்லாத வாழ்க்கை இல்லை. அலகையின் சோதனையில் விழாதவர்கள் எவரும் இல்லை. நாம் யாவருமே வாழ்கையின் வெவ்வேறு கட்டங்களில் சோதனைகளை எதிர்கொள்கிறோம். நாம் எதிர்கொள்ளும் சோதனைகள் பல்வேறு வகைகளில் அமைகின்றன. மனஅழுத்தம், அச்சம், விரக்தி போன்ற உளவியல் சோதனைகள், வேலை இழப்பு, வறுமை, கடன் போன்ற பொருளாதாரச் சோதனைகள், குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பான உறவுசார்ந்த சோதனைகள், நோய், மனநலப் பாதிப்புகள் போன்ற உடல்நலச் சோதனைகள், அநீதி, சாதி, சமய வேறுபாடுகள் போன்ற சமூகச் சோதனைகள் என நாம் எதிர்கொள்பவை கணக்கிலடங்காதவை. துன்பம் அல்லது சோதனைகளுக்குமனிதப் பேராசையும்ஓர் அடிப்படைக் காரணமாக அமைகிறது.

இன்றைய நற்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள சோதனைகளைப் போன்றே பொருள், அதிகாரம் மற்றும் புகழுக்கான சோதனைகள் நம் வாழ்வுப் பயணத்திலும் வருகின்றன. நம் ஒவ்வொருவருடைய வாழ்விலும் உடல் ஆசை, பண ஆசை, பொருளாசை, பதவி ஆசை, புகழாசை என்பவை தீராத ஆசைகளாக இறுதிவரை இருக்கின்றன. ஆசைகள் ஒரு மனிதருக்கு அதிகமாக இருப்பதால்தான் தொடர்ந்து துன்பங்களும் சோதனைகளும் வந்துகொண்டே இருக்கின்றன. ஆசைகள் இல்லை என்றால், துன்பம் இல்லை எனஅவாஅறுத்தல்எனும் அதிகாரத்தில் ஐயன் வள்ளுவர் இவ்வாறு பாடுகிறார்:

அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்

தவாஅது மேன்மேல் வரும் (குறள் 368).

நாம் எப்படிச் சோதனைகளில் வெற்றி காணமுடியும் என்பதற்கு இன்றைய முதல் இரண்டு வாசகங்களிலிருந்து சில பாடங்களைக் கற்றுக்கொள்வோம். இன்றைய முதல் வாசகம் இஸ்ரயேல் மக்களின் மிகப் பழமையானநம்பிக்கை முழக்கம்ஆகும். இவ்வாசகம் இஸ்ரயேல் மக்களின் வாழ்வைச் சுருங்கக் கூறுகிறது. சாதாரண நாடோடி இனமாக இருந்த இஸ்ரயேல் மக்களைக் கடவுள் தெரிந்துகொண்டு, ஓர் இனமாக, நாடாகக் கட்டி எழுப்பினார். பாலும் தேனும் பொழியும் கானான் நாட்டைக் கொடையாக வழங்கி அங்கே அவர்களைக் குடியமர்த்துகிறார். வலிய கரத்தாலும் அஞ்சத்தக்க பேராற்றலாலும் கடவுள் அருஞ்செயல்களை நிகழ்த்தி வழிநடத்தி வந்ததற்காகவும், நாட்டை வழங்கியதற்காகவும், முதற்கனிகளை ஆண்டவருக்குப் படைக்க வந்த இஸ்ரயேல் மக்கள் கடவுள் தந்த உரிமைகளை நினைவுகூர்ந்து நன்றிகூறுகின்றனர். இரண்டாம் வாசகத்தில், ‘இயேசுவே ஆண்டவர்எனவும், ‘அவர் சாவை வென்று உயிர்த்தெழுந்தார் எனவும் நாவால் அறிக்கையிட்டு வாழ்பவரே மீட்பு பெறுவர்எனப் பவுல் அறிக்கையிடுகிறார்.

ஆக, ஒருவர் தான் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்து, அவ்வப்போது தன்னைச் சரிசெய்துகொள்ளும்போதும், உயிருள்ள இறைவனின் வார்த்தையின் மீது ஆழமான நம்பிக்கை கொண்டு வாழும்போதும் சவால்களையும் சோதனைகளையும் எதிர்கொள்ள முடியும் என்கிறது முதல் இரண்டு வாசகங்கள்.

நிறைவாக, நாம் தொடங்கியிருக்கின்ற இத்தவக்காலத்தில், நாம் என்ன செய்யலாம்? முதலில், இடைவிடா இறைவேண்டல் நமக்குத் தேவை. இத்தவக்காலத்தில் அமைதிக்கும் இறைவேண்டலுக்கும் நேரத்தை ஒதுக்கி, நம் இதயங்களைக் குழப்பிக் கொண்டிருக்கும் அலகையின் கவர்ச்சிகரமான சூழ்ச்சிகளை முறியடிப்போம். இரண்டாவது, எவ்வேளையிலும், பாவச்சோதனைகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தாமலும் அலகையோடு உடன்பாடு செய்து கொள்ளாமலும் தீமைகளை எதிர்கொள்ள இறைவார்த்தையின் துணையை நாடுவோம். இறுதியாக, நம் கண்களை இறைவனின் பார்வையோடு பதித்து அவர் திருவுளம் நிறைவேற்ற முன்வருவோம். இன்றைய பதிலுரைப் பாடல் உரைப்பது போன்று, “துன்ப வேளைகளில் எங்களோடு இருந்தருளும், ஆண்டவரேஎன இறைவனை நோக்கி வேண்டிக்கொள்வோம்.