news
ஞாயிறு தோழன்
பொதுக்காலத்தின் 24-ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) (14-09-2025) (திருச்சிலுவையின் மாட்சியின் விழா) - எண் 21:4-9; பிலி 2:6-11; யோவா 3:13-17

திருப்பலி முன்னுரை

திருச்சிலுவையின் மாட்சியைப் பற்றிச் சிந்திக்கத்  திரு அவை நமக்கு அழைப்புவிடுக்கிறது. கத்தோலிக்கக் கிறித்தவர்களின் நம்பிக்கை திருச்சிலுவையாகும். இந்தத் திருச்சிலுவையிலிருந்துதான் நமக்கு மாட்சியும் மகிமையும் கிடைக்கிறது. இந்தத் திருச்சிலுவையிலிருந்துதான் நாம் அன்பையும் அருளையும் இரக்கத்தையும் கருணையையும்  பெறுகிறோம். இந்தத் திருச்சிலுவைதான் மன்னிப்பின் மகத்துவத்தை நமக்குக் கற்றுத் தருகிறது. ஒரு காலத்தில் சிலுவை அவமானத்தின் சின்னமாகக் கருதப்பட்டது. கைதிகளுக்கும் கள்வர்களுக்கும் தண்டனையாய் கொடுக்கப்பட்டது. ஆனால், இயேசு என்று சிலுவையைச் சுமந்தாரோ, அன்றிலிருந்து அது வெற்றியின்  அடையாளமாய் மாறியது. சிலுவையே நமது வல் லமை, சிலுவையே நமது ஞானம், சிலுவையே நமது வாழ்வு. துன்பம், துயரம், வேதனை, சோதனை இவையில்லாமல் வாழ்க்கையே இல்லை. அனைத்து நிலைகளிலும் திருச்சிலுவையை உற்றுநோக்கும்போது நமது வாழ்விற்கு வழி கிடைக்கும். கிறித்தவர்களாகிய நமது வாழ்வின் வெற்றியே சிலுவைதான். இயேசுவின் திருச்சிலுவை மாட்சி விழாவைக் கொண்டாடும் நாம் மகத்துவமிக்க சிலுவையின்முன் மண்டியிட்டுச் செபிப்போம். திருச்சிலுவைக்குரிய மரியாதையைக் கொடுப்போம். சிலுவையைத் துன்பமாகப் பார்க்காமல் வெற்றியின் சின்னமாகப் பார்க்கவும்இயேசுவின் அன்பைச் சுவைத்து வாழவும் வரம்வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

ஆண்டவரின் பாதுகாப்பையும் உடனிருப்பையும் உணராத இஸ்ரயேல் மக்களுக்காக மோசே பரிந்துபேசுகின்றார். ஆண்டவர் கூறியபடி ஒரு வெண்கலப் பாம்பைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்தி, ஆண்டவரின் வார்த்தையின் மீது நம்பிக்கை வைக்க அழைக்கின்றார்; நம்பிக்கை வாழ்வில் தொய்வின்றி வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர். இயேசுவின் பெயர் வல்லமையை, வலிமையை, வாழ்வைத் தரக்கூடியது. இயேசுவையே நமது தலைவராகக் கொண்டுள்ள நாம் எதற்கு முன்பாக, யாருக்கு முன்பாக மண்டியிடுகிறோம்? எவற்றை நோக்கிச் செபிக்கிறோம்? எதன் மீது, எவற்றின்மீது நம்பிக்கை வைத்துள்ளோம்? என்பதைச் சிந்திக்க அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. ‘நானே நல்ல ஆயன்என்று மொழிந்த ஆண்டவரே! உம்மால் தேர்ந்துகொள்ளப்பட்ட திரு அவைத் தலைவர்கள் அனைவரும் உமது பணியை நிறைவாகச் செய்வதற்குத் தேவையான மனப் பலத்தையும் உடல்நலனையும் தந்து காத்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. சிலுவையினால் எமக்கு வாழ்வு கொடுத்த ஆண்டவரே! திருச்சிலுவையின் மாட்சி விழாவைக் கொண்டாடும் நாங்கள் அனைவரும் எங்கள் வாழ்க்கையில் வருகின்ற துன்பங்களை, சோதனைகளை உமது வல்லமையான சிலுவையின்மீது கொண்ட நம்பிக்கையால் முறியடித்து வாழ, தேவையான ஞானத்தை எமக்குத் தந்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. எமக்காக உயிரைக் கொடுத்து எம்மை மீட்ட ஆண்டவரே! உமது பிள்ளைகளாகிய நாங்கள் அனைவரும் வாழ்வையும் வல்லமையையும் கொடுக்கக்கூடிய உமது வார்த்தையின்மீது நம்பிக்கை கொண்டு வாழவும், அவைகூறும் மதிப்பீடுகளின்படி வாழவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. சிலுவையினால் எம்மை மீட்ட ஆண்டவரே! எம் குடும்பங்களில் தீராத நோயினால் துன்பப்படும் அனைவருக்கும் நல்ல சுகத்தைத் தந்து காத்து வழிநடத்தவும், அவர்களுக்கு உதவி செய்வதற்குத் தேவையான நல் மனத்தை எமக்குத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
ஆண்டின் பொதுக்காலம் 23-ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) (07-09-2025) சாஞா 9:13-18; பில 9-10,12-17; லூக் 14:25-33

திருப்பலி முன்னுரை

அனைத்தையும் துறப்பதில்தான் சீடத்துவ வாழ்வின் மகத்துவம் இருக்கிறது என்பதைப் பற்றிச் சிந்திக்க இந்த ஞாயிறு வழிபாடு நமக்கு அழைப்புவிடுக்கிறது. இறைவனை மட்டுமே பற்றிக்கொண்டு உறவில், உயிரில், உடைமையில் பற்றற்று இறைவனை இறுகப் பற்றிக்கொள்வதே சீடத்துவம். உலகச் செல்வங்களான பொன், பொருள், பணம், பதவி, பட்டம் ஆகியவற்றில் ஆசை கொள்ளாமல், ஆன்மிகச் செல்வங்களாகிய அன்பு, அமைதி, நீதி, நேர்மை, உண்மை, சமத்துவம் போன்ற நிலையான செல்வத்தின்மீது பற்று வைத்துப் பயணிப்பதே சீடத்துவம். இயேசுஎன்னிடம் வருபவர் தம் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதர சகோதரிகள் ஆகியோரை மேலாகக் கருதக்கூடாதுஎன்கிறார். தாயை, உறவுகளை வெறுப்பதல்ல துறவு; மாறாக, ‘எல்லாரும் என் தாய், எல்லாரும் என் சகோதர-சகோதரிகள்என்ற உறவின் விரிவே துறவு. அன்பு வற்றிய நிலை அல்ல துறவு; அன்பின் அதிர்வுகளை அகலப்படுத்துவதே துறவு. எல்லாம் இருந்தும், எதுவும் இல்லாமல் இருப்பதே துறவு. எல்லைக்குட்பட்ட அன்பை எல்லை கடந்ததாக்கும் முயற்சியே சீடத்துவம். இயேசுவை வாழ்க்கையால் போதிக்கும் உண்மைச் சீடர்களாய் வாழவும், நமது குடும்பங்களில் இறையழைத்தல் பெருகவும் தேவையான  வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

நமது எண்ணங்கள் கடவுளின் எண்ணங்கள் அல்ல; கடவுளின் திட்டத்தை நம்மால் அறிந்துகொள்ள முடியாது. வாழ்க்கையில் வருகின்ற இன்ப-துன்பங்களில் இறைவனின் உடனிருப்பை உணரவேண்டும். இறைவனின் துணையின்றி இந்த உலகில் எதையும் அறிந்துகொள்ள இயலாது. நிலையானது என்று நினைத்து நாம் திட்டமிடும் அனைத்துமே நிலையற்றவை என்று கூறி, இறையோடு நிறைவாக வாழ  அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

கொலோசை நகரின் மிகப்பெரும் செல்வந்தர் பிலமோன்; அவருடைய அடிமைதான் ஒனேசிமு. ஓர் அடிமை தப்பி ஓடினால் கொலை செய்யப்பட வேண்டும்; ஆனால், தப்பியோடிய ஒனேசிமுவை மீண்டும் பிலமோனிடம் அனுப்புகிறார் பவுல். “என் இதயத்தையே அனுப்புகிறேன்என்று அவரை ஓர் அடிமையாக அல்லாமல், கிறித்தவ நம்பிக்கையில் சகோதரராக ஏற்றுக்கொள்ளும்படி பிலமோனுக்கு எழுதுகிறார். பவுலைப் போன்று வேற்றுமைகள் பாராது, அனைவரும் கடவுளின் பிள்ளைகள் என்று ஏற்று வாழும் உண்மைச் சீடர்களாய் வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. அன்பின் இறைவா! ‘நானே உன்னைத் தேர்ந்துகொண்டேன்என்று கூறி உமது பணிக்காக நீரே தேர்ந்துகொண்ட எமது திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள் அனைவரையும் மகத்துவமான இந்த அழைத்தல் வாழ்வில் சிறப்பாகப் பணிசெய்யவும், ‘அழைத்தவர் என்னோடு இருக்கிறார், அவர் என்னைத் தனியாக விட்டுவிடமாட்டார்என்ற நம்பிக்கையில் தொடர்ந்து பணி செய்வதற்குத் தேவையான திட மனத்தைத் தந்து  வழிநடத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. பாசமுள்ள ஆண்டவரே! நாட்டை ஆளும் தலைவர்கள் தன்னலம் மறந்து, மக்கள் நலனில் அக்கறை கொண்டு வாழவும், அடித்தட்டு மக்களும் தங்களின் வாழ்வாதாரங்களைப் பெறக்கூடிய சட்டங்களைக் கொண்டு வரவும், வேறுபாடுகளைக் களைந்து அனைத்து மக்களையும் இணைக்கும் பாலமாக வாழவும் தேவையான ஞானத்தைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. ‘நீங்கள் என் சாட்சிகள்என்று மொழிந்த ஆண்டவரே! எம் மறைமாவட்டத்திலும், எம் பங்கிலும் உள்ள குடும்பங்களை ஆசிர்வதியும். நாங்கள் அனைவரும் அனைத்து மக்களுடனும் நல்லுறவுடன் வாழவும், உடன் வாழும் சகோதர- சகோதரிகளின் தேவை அறிந்து உதவி செய்து வாழவும், அற்புதமான இந்த வாழ்க்கையில் அனைவரையும் மன்னித்து மகிழ்ச்சியோடு வாழவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. ‘நீயே ஆசிர்வாதமாய் விளங்குவாய்என்று மொழிந்த ஆண்டவரே! எமது குடும்பங்களுக்கு நீர் கொடுத்த எம் குழந்தைகளுக்காய் உமக்கு நன்றி கூறுகின்றோம். அவர்கள் அனைவரும் படிப்பிலும் இறைநம்பிக்கையிலும் நாளும் வளரவும், அருள்பணியாளராக, அருள்சகோதரியாகப் பணி செய்வதில் ஆர்வம் காட்டவும், இறையழைத்தலின் முக்கியத்துவத்தை எம் குழந்தைகளின் மனத்தில் நாங்கள் விதைக்கவும் தேவையான நல்மனதைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
ஆண்டின் பொதுக்காலம் 22 - ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) (31-08-2025) சீஞா 3:17-18, 20,28-29; எபி 12:18-19, 22-24; லூக் 14:1, 7-14

திருப்பலி முன்னுரை

தாழ்ச்சியே மாட்சிஎன்ற தலைப்பில் சிந்திக்க இஞ்ஞாயிறு நமக்கு அழைப்பு விடுக்கிறது. தாழ்ச்சியான உள்ளம் கொண்ட மனிதர்கள் இருப்பதால்தான் இந்த உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. உணர்விலும் ஆன்மிகத்திலும் முதிர்ச்சியடைந்தவர்கள் தங்களை உயர்த்திக்கொள்ள விரும்புவதில்லை. தாழ்ச்சியோடு வாழவே விரும்புவார்கள். தாழ்ச்சி என்ற புண்ணியத்தை அணிகலனாய் கொண்டவர்களின் வாழ்க்கை ஆசிரால் மிளிர்கிறது. தாழ்ச்சி உள்ளவர்களுக்கு மட்டுமே கடவுளின் மறைபொருள் வெளிப்படுத்தப்படுகிறது. தாழ்ச்சி நம்முடைய நன்மதிப்பை உயர்த்துகிறது. தாழ்ச்சி என்பது வீழ்ச்சியல்ல; அது மகிழ்ச்சியான வாழ்வின் திறவுகோல். மதிப்பும் மரியாதையும் நாம் கேட்காமலே கிடைப்பதற்குத் தாழ்ச்சி என்ற பண்பு நமது வாழ்க்கையின் அடித்தளமாக இருக்கவேண்டும். நம்முடைய விருந்துகளில் பணக்காரர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிட, இறைவனின் பிள்ளைகளான ஏழைகள், கைவிடப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழும்போது நாம் பேறுபெற்ற மக்களாக மாறுகிறோம். மனத்தில் எந்தச் சலனமும் இல்லாமல் அனைத்து மக்களோடும் சமத்துவ உறவில் நிலைத்து, ஏழைகளோடு தோழமை கொண்டு வாழ்ந்து, விண்ணகத்தின் முன் சுவையை இம்மண்ணக மக்களும் சுவைக்க உதவுவோம். தாழ்ச்சி என்ற பண்பால் இந்த அகிலத்தையே வென்ற ஆண்டவர் இயேசுவைப் பின்பற்றி, தாழ்ச்சியோடு வாழ்ந்து மாட்சி அடைய வரம் வேண்டி இணைவோம் இத் திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

தாழ்ச்சி உள்ளவர்கள் ஆண்டவரை மாட்சிப்படுத்தும் பேறுபெறுகின்றனர். தன்னைத் தாழ்த்திக் கொள்பவர்களுக்கு இறைவனின் முன்னிலையில் பரிவு கிடைக்கிறது. நாம் செய்வதனைத்தையும் ஆண்டவருக்காகப் பணிவோடு செய்யவேண்டும் என்று முதல் வாசகம் நமக்குக் கூறுகிறது. வீண்பெருமைகளை விடுத்து, நல்ல மனிதர்களாக வாழ அழைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்

இரண்டாம் வாசகம் முன்னுரை

கடவுள் கொடுத்த இந்த அற்புதமான வாழ்வில் எந்தப் பொருளையும் உயிர்களையும் மனிதர்களையும் அற்பமாகப் பார்க்காமல், அற்புதமாகப் பார்க்கும்போது இறைவன் மாட்சி அடைகின்றார். பணத்தையும் பதவியையும் வைத்து மதிப்புக் கொடுக்காமல் ஏழைகள், இல்லாதோர், இயலாதோர் அனைவருக்கும் மதிப்புக் கொடுத்து வாழ்வோம். நமது இதயத்தைத் தூய்மையாக்கிப் புதிய உடன்படிக்கையின் இணைப்பாளராகிய கிறிஸ்துவின் முன்னிலையில் மகிழ்வோடு நிற்க அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. அன்பின் இறைவா! உமது பணியைச் செய்வதற்கு உம்மால் தேர்ந்துகொள்ளப்பட்ட எம் திரு அவைத் தலைவர்களுக்காக உம்மிடம் வேண்டுகின்றோம். உம்மைப் போன்று தாழ்ச்சியும் பரிவும் அன்பும் நிறைந்த தலைவர்களாய் இருந்து மக்களை ஞானத்தோடு வழிநடத்தத் தேவையான அருள் வரங்களைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. ‘நீ செய்வதனைத்தையும் பணிவோடு செய்என்று மொழிந்த ஆண்டவரே! உமது பிள்ளைகளாகிய நாங்கள் அனைவரும் ஆணவத்தை விடுத்து தாழ்ச்சியோடு வாழவும், இவ்வுலகில் உள்ள மனிதர்கள் அனைவரும் மதிப்புக்குரியவர்கள் என்று எண்ணி அனைவரோடும் நல்லுறவுடன் வாழவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. அன்பின் இறைவா! எம் பங்கில் உள்ள குடும்பங்களை ஆசிர்வதியும். ‘நான்தான் பெரியவன், நான் சொல்வதுதான் சரிஎன்று கூறி மகிழ்ச்சியை இழந்து விடாமல், குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மதிப்புக் கொடுத்து வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. பாதுகாக்கும் ஆண்டவரே! இவ்வுலகில் உள்ள இளைஞர்கள் உடலாலும் உள்ளத்தாலும் தூயவர்களாக வாழவும், நாளும் இறைநம்பிக்கையில் வளரவும், இவர்களின் எதிர்காலம் சிறந்து விளங்கவும் தேவையான ஆசிரைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
ஆகஸ்டு 24, 2025-ஆண்டின் பொதுக்காலம் 21-ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) எசா 66:18-21; எபி 12:5-7,11-13; லூக் 13:22-30

திருப்பலி முன்னுரை

இடுக்கமான வாயிலே இறைவாயில்என்பதைப் பற்றிச் சிந்திக்க இஞ்ஞாயிறு நமக்கு அழைப்புவிடுக்கிறது. பிறருக்கு நாம் செய்யும் நற்செயல்கள் அனைத்தும் நிறைவாழ்வின் செல்வங்கள். இடுக்கமான வாயில் வழியே செல்வதே இறைவழி செல்வதாகும். இறையாட்சியின் மதிப்பீடுகளான அன்பு, அமைதி, உண்மை, நீதி, நேர்மை போன்றவற்றின்படி வாழ்வதையேஇடுக்கமான வாயில்என்று இன்றைய நற்செய்தி கூறுகிறது. துன்பத்தை, சோதனையை, ஏளனத்தை, அவமானத்தை, வேதனைகளைத் தரக்கூடிய இடுக்கமான வாயிலான எருசலேம் நோக்கி இயேசு பயணிக்கிறார். துன்பத்தை நோக்கி இயேசு பயணம் செய்கிறார். நமது வாழ்க்கையில் நாம் எப்போதும் மகிழ்ச்சியைக் கொடுக்கக்கூடிய பெத்லகேம் அனுபவத்தையே நாடுகின்றோம். துன்பத்தைத் தந்தாலும் இறுதியில் வெற்றியையும் நிலைவாழ்வையும் கொடுக்கக்கூடிய எருசலேம் அனுபவத்தை நாம் விரும்புவதே இல்லை. எருசலேம் அனுபவம் மீட்பின் அனுபவம். துன்பம்  தேவையற்றது என்று சிந்திப்பதை விட்டு விட்டு, நம்முடைய வாழ்வில் அங்கமாக இருக்கும் துன்பத்திலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ளவும், நாம் அனுபவித்தத் துன்பங்களை நாம் ஒருபோதும் மற்றவருக்குக் கொடுக்காமல் நற்செயல்களின் வழியாக நற்செய்தியை விதைத்திடவும், நம்முடைய அனைத்து நிலைகளிலும் ஆண்டவர் நம்மோடு இருக்கிறார் என்ற நம்பிக்கையில் வாழ்ந்திடவும் வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்

முதல் வாசகம் முன்னுரை

நீதிக்காக, உண்மைக்காக, நேர்மைக்காக நாம் எடுக்கும் செயல்கள் அனைத்திலும் ஆண்டவர் உடனிருப்பார். பிரிவுகள், அடுத்துள்ள மனிதரில் இறைச்சாயலைக் காணும்போது இறைவன் நம்மை மேன்மைப்படுத்துவார். நமது எண்ணங்களையும் சிந்தனைகளையும் அறிந்து, அதன்படி நம்மை வழிநடத்துகின்ற இறைவனின் பாதுகாப்பை உணர்த்தும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

கடவுள் இரக்கமுள்ளவர், பேரன்பு கொண்டவர், அனைத்து நிலைகளிலும் நம் உடன்வருபவர், தேவையானவற்றைத் தக்க நேரத்தில் தரக்கூடியவர். அவரது நன்மைத் தனங்களை மறந்து நம் மனம்போன போக்கில் வாழும்போது நம்மைக் கண்டித்துத் திருத்துகிறார். தாயைப் போன்று அன்பு செய்தும், தந்தையைப் போன்று கண்டித்தும் நம்மைத் தூய வழியில் வழிநடத்தி வரும் இறைவனின் மகிமையை உணர்த்தும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. அன்பின் இறைவா! உமது மீட்புப் பணியை இந்த அகிலத்தில் செய்துகொண்டிருக்கும் எம் திரு அவைத் தலைவர்கள் தங்களது வார்த்தையாலும் வாழ்க்கையாலும் நற்செய்தியைப் போதிக்கவும், மக்களை நிறைவாழ்வை நோக்கி வழிநடத்தவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. அன்பின் இறைவா! நாங்கள் வழிதவறும்போது எங்களை நீர் கண்டித்துத் திருத்துவதை நாங்கள் நல்மனதுடன் ஏற்றுக் கொண்டு நம்பிக்கை வாழ்வில் வேரூன்றவும், தவறு செய்வதிலிருந்து திருந்தி வாழவும் தேவையான மனப்பக்குவத்தை எங்கள் ஒவ்வொருவருக்கும் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. அன்பின் இறைவா! ‘இடுக்கமான வாயிலில் நுழையுங்கள்என்ற உமது அழைப்பினை ஏற்று, எங்கள் வாழ்க்கையில் எத்தகைய சோதனை ஏற்பட்டாலும் உமது மதிப்பீடுகளைக் கைவிடாமல் வாழவும், எங்களது சிந்தனையாலும் சொல்லாலும் செயலாலும் உமக்குச் சான்று பகர்ந்து வாழ்ந்திட வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. அன்பின் இறைவா! உமது பிள்ளைகளாகிய நாங்கள் அனைவரும் எங்கள் குடும்பத்திலும் சமுதாயத்திலும் அன்பை மட்டும் விதைக்கவும், எம் உடன்வாழும் சகோதர-சகோதரிகளுக்கு நடமாடும் நற்செய்தியாக வாழவும், தேவையில் இருப்போரைத் தேடிச்சென்று உதவிடவும் தேவையான நல்மனத்தை எங்கள் அனைவருக்கும் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
ஆண்டின் பொதுக்காலம் 20-ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) (17-08-2025) எரே 38:4-6,8-10; எபி 12:1-4; லூக் 12:49-53

திருப்பலி  முன்னுரை

இயேசு நம் அனைவரையும் ஒன்றிணைக்க வந்தவர் என்பதைப் பற்றிச் சிந்திக்க ஆண்டின் பொதுக்காலம் 20-ஆம் ஞாயிறு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இன்றைய நற்செய்தியில்மண்ணுலகில் தீ மூட்ட வந்தேன்என்று இயேசு கூறுகிறார். தீயின் மூன்று குணங்கள்: 1. அழிப்பது, 2. தூய்மையாக்குவது, 3. புதியதாக மாற்றுவதுஇயேசு சமுதாயத்தில் உள்ள தீவினைகளை அழித்து அன்பை, அமைதியை, மகிழ்ச்சியை, சமத்துவத்தை, நம்பிக்கையை, கருணையைப் பற்றவைத்து இவ்வுலத்தைப் புதியதாக மாற்ற வந்தவர்; இறுதிவரை அப்பணியைச் செய்து மக்கள் ஞானவெளிச்சம் பெற உழைத்து உயிர்விட்டவர். இயேசு தரும் நெருப்பால் புடமிடப்படும் நாம் நம்மிடமுள்ள வேற்றுமைகளை, எதிர்மறை எண்ணங்களை, மனிதத்தைச் சிதைக்கும் செயல்களை விட்டுவிடவேண்டும். இயேசு என்ற தீயால் தூய்மையாக்கப்பட்ட நாம், நமது நம்பிக்கையான வார்த்தைகளால், வாழ்க்கையால், அணுகுமுறையால் அனைவருடைய வாழ்க்கையிலும் ஒளியை ஏற்றுவோம்நமது குடும்பத்தில் பற்றியெரிந்து கொண்டிருக்கின்ற சந்தேகம், ‘நான்என்ற ஆணவம், புரிந்துகொள்ளாமை, ஏற்றுக்கொள்ளாமை போன்றவற்றை அணைத்துவிட்டு அன்பு என்ற ஒளியைப் பற்றவைப்போம். சமுதாயத்தில் உள்ள நல்லவைகளையும் அல்லவைகளையும் பிரித்தறிந்து, நல்லவற்றை வளர்த்தெடுக்க முயற்சி செய்வோம்புறத்தை அழகுப் பொருள்களால் அழகு செய்யும் நாம், அகத்தை இயேசு என்ற ஒளியால் தூய்மை செய்து, ஒளியின் மக்களாக வாழ்வோம்இந்த மண்ணுலகில் இயேசு பற்றவைத்த அன்பு என்ற தீயை அணையவிடாது காக்கவும், அன்பின் தூதுவர்களாக நாம் வாழவும் வரம் வேண்டி  இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

கடவுளின் பணியாளர்களாக விளங்கும் அனைவருக்கும் கிடைப்பது போராட்டமும் துன்பமும் நிறைந்த வாழ்வு! கடவுளின் வாக்கைச் சமரசமின்றி அரசனுக்கு எடுத்துரைத்தவர் எரேமியா. இதன் காரணமாகப் பலமுறை சிறைப்பட்டார்; நாடு கடத்தப்பட்டார்; பாழுங்கிணற்றில் உயிரோடு கட்டி இறக்கப்பட்டார். இறுதிவரை ஆண்டவரின் வாக்கை அறிவித்துக்கொண்டே இருந்தார். இருப்பினும் இறுதிவரை உண்மையில் நிலைத்து வாழ அழைக் கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

இயேசுவின் சீடர்களாகிய நாம் எதிர்ப்புகள், ஏமாற்றங்கள், பிரிவினைகள், பிளவுகள் வரும்போது பின்வாங்கிவிடாமல் தொடர்ந்து முன்னே செல்ல வேண்டும். இயேசுவின் இரத்தத்தால் விலை கொடுத்து மீட்கப்பட்ட நாம், தீவினைகளைக் கண்டு அஞ்சாமல் துணிந்து பயணிக்கவேண்டும். இயேசுவின்மீது  கண்களைப் பதியவைத்து, எந்த நிலையிலும் அவரின் உண்மைச் சீடர்களாக வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. அன்பின் இறைவா! எம் திரு அவைத் தலைவர்கள் அனைவரும் தங்கள் பணிவாழ்வில் தனிமை, சோர்வு, மனக்குழப்பம், இடையூறுகள் ஏற்படும்போதுஅழைத்தவர் கைவிடமாட்டார்என்ற நம்பிக்கையில் இவர்கள் வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. எமக்காக உயிரைக் கொடுத்த ஆண்டவரே! இறை சந்நிதியில் கூடியிருக்கும் நாங்கள் அனைவரும் அன்பு, மகிழ்ச்சிமன்னிப்பு, விட்டுக்கொடுத்தல், நம்பிக்கை போன்ற ஒளியை எமது குடும்பத்திலும் சமுதாயத்திலும் ஒளிர்விக்க வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. எம்மைப் பாதுகாக்கும் ஆண்டவரே! எம் நாட்டுத் தலைவர்கள் ஏழை மக்களின் நலனைக் கண்முன் கொண்டு, சட்டங்கள் இயற்றத் தேவையான ஞானத்தையும் தொலைநோக்குப் பார்வையையும் கொடுத்துக் காத்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. ஞானத்தின் ஊற்றான ஆண்டவரே! எம் பங்கில் உள்ள இளையோர் அனைவருக்கும் நல்ல வேலையையும் வாழ்க்கைத் துணையையும் கொடுத்துக் காத்திடவும், உம்மீது கொண்டுள்ள நம்பிக்கையிலும் அறிவிலும் நாளும் வளரவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
ஆண்டின் பொதுக்காலம் 19-ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) (10-08-2025) சஞா 66:18-21; எபி 11:1-2,8-19; லூக் 12:32-48

திருப்பலி முன்னுரை

நம்பிக்கையோடு நற்செயல்கள் செய்து வாழ ஆண்டின் பொதுக்காலம் 19-ஆம் ஞாயிறு நமக்கு அழைப்புவிடுக்கிறது. நம்பிக்கை செயல்வடிவம் பெறவேண்டும். உயிரோட்டமுள்ள செயல்கள் வழியாக இறைமையை வெளிப்படுத்துவதே உண்மையான உயிருள்ள நம்பிக்கையாகும். நம்பிக்கை கொண்டவர்கள் விழிப்போடு தம்முடைய கடமைகளையும் நற்செயல்களையும் செய்யக் கூடியவர்களாக இருக்கின்றனர். இவர்களையேவிழிப்பாயிருக்கும் பணியாளர்கள்என்று இயேசு குறிப்பிடுகிறார். நாம் இறைவன்மீது கொண்டிருக்கும் நம்பிக்கை உண்மையென்றால், மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்காகவும் நிறைவிற்காகவும் உழைப்பவர்களாக வாழவேண்டும்.

நம் நம்பிக்கை உயிரோட்டமானது என்பதற்கு நாம் புரிகின்ற நற்செயல்களே அடையாளமாக இருக்கின்றன. “உயிர் இல்லாத உடல்போல, செயல்களில்லாத நம்பிக்கையும் செத்ததேஎன்கிறார் புனித யாக்கோபு. நம் வாழ்க்கையில் துன்பமோ, வறுமையோ, ஏழ்மையோ, துயரமோ, கண்ணீரோ, சோதனையோ எது வந்தாலும், கடவுள்மீது கொண்டுள்ள நம்பிக்கையில் தளர்ச்சி அடையாது, ‘ஆண்டவர் பார்த்துக்கொள்வார்என்று வாழும்போது, அவர் நமக்கு முன்னே சென்று அனைத்தையும் ஆசிராக மாற்றுவார்நாம் நம்பிக்கையில் நிலைத்து, மற்றவர்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்கும் மக்களாக வாழவும், நம்முடைய  நற்செயல்கள் வழியாக இவ்வுலகில் இறையாட்சியைக் கட்டியெழுப்பவும் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

நம் கடவுள் நம்பிக்கை உள்ளவர். நாம் கேட்பதற்கு முன்னதாகவே நம் தேவையறிந்து கொடுக்கக்கூடியவர். தமது பாதுகாப்பையும் உடனிருப்பையும் நாளும் கொடுத்துக் காத்து வருபவர். அவர் மீது நம்பிக்கை கொண்டு வாழும் நமக்கு மீட்பையும் நலன்களையும் தந்து மகிழ்ச்சியின் பாதையில் வழிநடத்துவார் என்பதை எடுத்துக்கூறும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

நாம் அனைவரும் கடவுள்மீது நம்பிக்கை கொண்டு வாழ்கிறோம். நம் வாழ்க்கையில் எந்தத் துன்பம் வந்தாலும் இறைவனிடம் நாம் கொண்டுள்ள நம்பிக்கையில் உறுதியாக இருக்கவேண்டும். நம் முன்னோரை வழிநடத்திய வாக்கு மாறாத தேவன், நம்மையும் வழிநடத்துவார் என்ற நம்பிக்கையில் வாழ அழைக்கும் 2-ஆம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. ‘நீயே ஆசியாக விளங்குவாய்என்று மொழிந்த ஆண்டவரே! எம் திரு அவைக்கு நீர் கொடுத்த திரு அவைத் தலைவர்களுக்காய் உமக்கு நன்றிகூறுகின்றோம். காலத்தின் தேவையை அறிந்து, கருத்தாய் செய்யக்கூடிய ஞானத்தை எம் தலைவர்களுக்குத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. பாதுகாக்கும் பரம்பொருளே எம் ஆண்டவரே! உம் பிள்ளைகளாகிய எங்களுக்கு இந்நாள் வரை நீர் செய்த நன்மைகளுக்கு நன்றிகூறுகின்றோம். நாங்கள் வேண்டுவதற்கு மேலாகவே அருள்வரங்களைத் தந்து காத்து வழிநடத்துகின்ற உமது பேரன்பில் நிலைத்து வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. ‘நான் உங்களோடு இருக்கின்றேன்என்று மொழிந்த ஆண்டவரே! உமது உடனிருத்தலை அன்றாட வாழ்வில் நாங்கள் அனுபவிக்கவும், எம்முடன் வாழும் சகோதர-சகோதரிகளின் துன்பத்தில் நாங்கள் உடனிருக்கவும், நம்பிக்கையைக் கொடுக்கக்கூடிய வார்த்தைகளைப் பேசவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. ‘குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள்என்று மொழிந்த ஆண்டவரே! எமது மறைமாவட்டத்திலும் பங்கிலும் எம் குடும்பத்திலும் உள்ள அனைத்துக் குழந்தைகளையும் ஆசிர்வதியும். இந்த அறிவியல் உலகில் உம்மை அறிவதில் ஆர்வம் கொண்டு வாழத் தேவையான ஞானத்தை எமது குழந்தைகளுக்கு  வழங்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.