news
ஞாயிறு தோழன்
ஆண்டின் பொதுக்காலம் 13-ஆம் ஞாயிறு (28-06-2026) 2அர 4:8-11,14-16; உரோ 6:3-4,8-11; மத் 10:37-42

திருப்பலி முன்னுரை

இயேசுவின் சீடர்களாய் வாழ்ந்து நற்செய்தியைப் பறைசாற்ற, ஆண்டின் பொதுக்காலம் 13-ஆம் ஞாயிறு நமக்கு அழைப்புவிடுக்கிறது. திருமுழுக்குப் பெற்ற எல்லாருமே இயேசுவின் சீடத்துவத்தில் பங்குபெறுகிறார்கள். தங்கள் வாழ்வில் எல்லாவற்றையும்விட இயேசுவுக்கும் அவரது மதிப்பீடுகளுக்கும் முன்னுரிமை அளிப்பவர்களே அவரின் உண்மையான சீடராக மாறுகின்றனர். தன்னலத்தை மையப்படுத்தி பணம், பட்டம், பதவி, செல்வத்தில் தங்கள் கவனத்தைக் குவிப்பவர்கள் இயேசுவின் சீடராய் இருக்கமுடியாது.

அன்றாட வாழ்வில் தன்னலத்தைக் கடந்து பிறர் நலம் பேணும் வேள்வித்தீயில் தங்களைத் தியாகம் செய்து, தன்னிடம் உள்ளதைப் பகிர்ந்து, நேர்மைக்கும் உண்மைக்கும் உயிர்கொடுத்து, தீமை செய்பவர்களை மன்னித்து, இல்லாதவர்களோடு தோழமை கொண்டு, மனசாட்சியின் குரலுக்குச் செவிகொடுத்து வாழ இன்று நாம் அழைக்கப்பட்டுள்ளோம். இன்று உறவுக்காய், தோழமைக்காய், ஆறுதலான வார்த்தைக்காய், உடனிருப்பிற்காய் ஆயிரக்கணக்கான மக்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். தேவையில் இருப்போரைத் தேடிச்சென்று நலம் கொடுத்த இயேசுவைப் போன்று, நாமும் தேவையில் உள்ளோரைத் தேடிச் சென்று உதவிடுவோம். உடன்வாழும் இறைவனை நமது நற்செயல்களால் இவ்வுலகிற்கு அறிவித்து, அவரின் அன்புச் சீடராய்  உழைக்க வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசக முன்னுரை

ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடுத்து, அவரது கட்டளைகளுக்குப் பணிந்து, ஆண்டவரின் வாக்குறுதிகளை இவ்வுலகிற்கு எடுத்துக் கூறுபவர்களே இறைவாக்கினர். இறைவனின் பணியை எதற்கும் எவருக்கும் அஞ்சாமல் செய்யும்போது இறைவனே வழிநடத்துவார். செல்லும் இடமெல்லாம் தம்முடைய தூதர்களைக் கொண்டு காப்பார் என்று கூறி, இறைவனின் உடனிருப்பை உணர்ந்து வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் திருமுழுக்கின் ஆழமான அர்த்தத்தை நமக்கு விளக்குகிறார். நாம் திருமுழுக்குப் பெற்றபோது கிறிஸ்துவோடு இணைந்து அவரது சாவில் பங்கேற்றோம். எனவே, அவரோடு இணைந்து புதியதொரு வாழ்வு வாழ நாமும் உயிர்த்தெழுந்துள்ளோம். இனி நாம் பாவத்திற்கு அடிமைகளாக வாழாமல், கிறிஸ்து இயேசுவோடு இணைந்து கடவுளுக்காக வாழ அழைக்கும் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

நம்பிக்கையாளர் மன்றாட்டுகள்

1. அன்பின் இறைவா! திரு அவையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவியர்பொதுநிலையினர் அனைவரும் உமது மதிப்பீடுகளின்படி வாழ்ந்து, வாழ்க்கையால் உம்மை அறிவிக்கவும், இறையொளியின் பாதையில் மக்களை வழிநடத்தவும் தேவையான வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. ஞானத்தின் ஊற்றே எம் இறைவா! எம் நாட்டுத் தலைவர்கள் மக்களின் தேவை அறிந்து செயல்படவும், நாட்டின் ஒற்றுமைக்காக உழைக்கவும், நாட்டு மக்களை வளர்ச்சியின் பாதையில் வழிநடத்தவும் தேவையான ஞானத்தை வழங்கி எம் நாட்டுத் தலைவர்களைக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்

3. நன்மைகளின் நாயகனே எம் இறைவா! திரு இருதய ஆண்டவரின் பக்தி முயற்சிகளை மேற்கொண்டுள்ள இம்மாதத்தில், ஆண்டவர் இயேசு மற்றும் அன்னை மரியா இவர்களின் இதயங்களைப் போல் எங்கள் இதயமும் கனிவும், இரக்கமும் உடையதாக அமைய வரம் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. பாதுகாக்கும் பரம்பொருளே! எம் பங்கிலும் குடும்பத்திலும் உள்ள குழந்தையர் அனைவரும் இளம் வயதிலேயே ஒழுக்கத்திலும், ஆன்மிகச் செயல்களிலும், மனிதநேயத்திலும் சிறந்து விளங்கவும் நாங்கள் அவர்களை இறைஞானத்தில் வளர்க்கவும் தேவையான வரங்களைத் தந்து வழிநடத்தவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
ஆண்டின் பொதுக்காலம் 12-ஆம் ஞாயிறு - எரே 20:10-13; உரோ 5:12-15; மத் 10:26-33 (21-06-2026)

திருப்பலி முன்னுரை:

இன்றைய இறைவார்த்தைகள்இறைவனை நம்புகிறவர் ஒருபோதும் கைவிடப்படமாட்டார்என்ற ஓர் ஆழமான ஆன்மிக உண்மையை எடுத்துரைக்கின்றன. தொடக்கக் காலத்தில் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு வாழ்ந்தவர்களை வேதகலாபனைக்கு ஆளாக்கிக் கொன்றனர். அப்படிப்பட்ட சூழலில் இயேசுவின் வார்த்தைகள் ஆற்றலாக இருந்ததையும் இருப்பதையும் நாம் உணரலாம். “உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்சவேண்டாம்; மாறாக, ஆன்மாவையும் உடலையும் நரகத்திற்குத் தள்ள எல்லாம் வல்ல கடவுளுக்கே அஞ்சுங்கள்என்கிறார் இயேசு.

இந்த உலகில் உண்மையாக வாழ விரும்புகிறவர்களுக்குப் பல சோதனைகள் வரலாம்; நல்லதைச் செய்தாலும் குறைகூறப்படலாம்; நீதிக்காக நின்றாலும் தனிமைப்படுத்தப்படலாம். இறைவாக்கினர் எரேமியா தன் வாழ்வில் பல துன்பங்களையும் எதிர்ப்புகளையும் சந்தித்தார். அவர் வரவிருக்கும் தண்டனையை இஸ்ரயேல் மக்களுக்கு அறிவித்து எச்சரிக்கை தந்ததால் அவரைஅழிவின் இறைவாக்கினர்என்று துன்புறுத்தினார்கள். ஆனால், இறைவனின் அழைப்புக்கு முழுமையாகத் தன்னையே அர்ப்பணித்து இறைவனைச் சார்ந்து வாழ்ந்ததால் இறைவாக்கினர் எரேமியாஆண்டவர் என்னோடு இருக்கிறார்என்ற உறுதியான நம்பிக்கையில் இறைவனுக்காக உயிரையும் கொடுக்கத் துணிந்தார்.

இறைவனின் பிள்ளைகளாகிய நாமும் நாம் வாழும் சமூகத்தில் இறையாட்சின் மதிப்பீடுகளை விதைக்க ஒவ்வொரு நாளும் முயற்சி எடுப்போம். நொடிதோறும் செடி வளர்வதுபோன்று ஒவ்வொரு நிமிடமும் இறையுறவில் வளர்ந்துஇறைவனே எனக்கு நிலையான பலம்என்ற நம்பிக்கையோடு வாழ வரம்வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்

முதல்வாசக முன்னுரை

இறைவாக்கினர் எரேமியா எதிர்ப்புகளும் துன்பங்களும் சூழ்ந்த நிலையிலும் ஆண்டவரை நம்பி நிற்கிறார். மனிதர்கள் தன்னை நிராகரித்தாலும் ஆண்டவர் தன்னோடு இருக்கிறார் என்ற உறுதியை அவர் வெளிப்படுத்துகிறார். ‘படைகளின் ஆண்டவரே! நேர்மையாளர்களைச் சோதித்து அறிபவரும் உள்ளுணர்வுகளையும் இதயச் சிந்தனைகளையும் அறிபவரும் நீரேஎன்று கூறி, உடனிருக்கும் இறைவனை உணர்ந்து வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

ஆதாமின் பாவத்தால் உலகில் பாவமும் மரணமும் வந்ததையும், இயேசு கிறிஸ்துவின் மீட்பின் மூலம் மனிதன் புதிய வாழ்வைப் பெறுகிறான் என்பதையும், குற்றத்தின் தன்மை வேறு, அருள்கொடையின் தன்மை வேறு என்பதை விளக்கிக் கூறி ஞானமுள்ளவர்களாய் வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

நம்பிக்கையாளர் மன்றாட்டுகள்

1. அன்பின் இறைவா! எம் திருத்தந்தை, ஆயர்கள், அருள்பணியாளர்கள் மற்றும் துறவியர் அனைவரும் துன்பங்களிலும் சோதனைகளிலும் மனந்தளராமல் இறைவனின் சாட்சிகளாய் தொடர்ந்து வாழ அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. இரக்கத்தின் இறைவா! உலக நாடுகளை ஆளும் தலைவர்கள் நீதியுடனும் அன்புடனும் மக்களை வழிநடத்தி, அமைதி மற்றும் சகோதரத்துவத்தை மக்களிடையே வளர்க்க அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. நம்பிக்கையின் ஒளியே எம் இறைவா! பயம், துன்பம், நோய் மற்றும் மனவேதனையில் வாழும் மக்கள் அனைவரும்அஞ்சாதீர்என்ற ஆண்டவரின் வார்த்தையில் நம்பிக்கைகொண்டு வாழ தேவையான சக்தியைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. நீதியின் தெய்வமே எம் இறைவா! கிறித்தவர்கள் என்ற முகவரியைப் பெற்ற நாங்கள் அனைவரும் எரேமியா இறைவாக்கினரைப் போல அச்சமின்றி ஆண்டவரைப் பற்றி எடுத்துரைக்கத் தேவையான வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
ஜூன் 14, 2026 ஆண்டின் பொதுக்காலம் 11-ஆம் ஞாயிறு - விப 19:2-6; உரோ 5:6-11; மத் 9:36-10:8

திருப்பலி முன்னுரை

இயேசுவின் சீடர்களாய் இறையாட்சிப் பணியில் நம்மை இணைத்துக்கொள்ள ஆண்டின் பொதுக்காலம் 11-ஆம் ஞாயிறு நமக்கு அழைப்புவிடுக்கிறது. இன்றைய நற்செய்தியில் இயேசு, ‘அறுவடை மிகுதி, வேலையாள்களோ குறைவுஎன்று கூறி, இறையழைத்தலை நமது குடும்பங்களில் ஊக்குவிக்க அழைப்புவிடுக்கிறார்குரலற்றவரின் குரலாக, முகவரி இழந்தவர்களுக்கு முகவரி தருபவராக, பல்வேறு சமூகப் பிரச்சினைகளால் உடல், உள்ளம், மனம் மற்றும் ஆன்ம நோயினால் பாதிக்கப்பட்டு ஆறுதல் பெற ஏங்கித் தவிக்கும் உள்ளங்களின் வாழ்வின் அமைதியைத் தருபவராக வாழ இயேசு நம்மை அழைக்கிறார். அன்பை, அமைதியை, நம்பிக்கையை, சமத்துவத்தை, புத்துணர்வை இம்மண்ணில் உருவாக்க இயேசு நமது ஒத்துழைப்பைக் கேட்கின்றார்.

நமது குடும்பங்களில் உள்ள இளையோரை இறையாட்சிப் பணிக்காகத் தியாகம் செய்ய ஊக்குவிப்போம். நமது அன்பான சேவையால் ஆண்டவரைப் பின்பற்றி திருத்தூதர்கள் வரிசையில் இறையாட்சி மலர உழைக்கும் பேறுபெற்றோர் வரிசையில் இடம்பெறுவோம். அன்போடு செய்யப்படும் ஒவ்வொரு சின்னஞ்சிறிய செயலும் இறையாட்சியின் விதையாக உருவெடுத்து, சமூகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இறையாட்சிப் பணிக்கு இளையோரை அனுப்புவோம். நற்செயல்களால் இறையரசைக் கட்டியெழுப்புவோம் என்ற உறுதியான மன நிலையோடு  இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசக முன்னுரை

இன்றைய முதல் வாசகம் இயேசு தம்முடைய சீடர்களுக்கு உண்மையான அன்பும் பணிவும் எவ்வளவு முக்கியமானவை என்பதையும், கழுகு தன் குஞ்சுகளைச் சுமப்பது போல நானும் உங்களின் பணிவாழ்வில் ஏற்படும் துன்பங்களில் உடனிருப்பேன் என்றும்கிறித்தவ வாழ்வின் மையம் சேவை மனப்பான்மையே என்றும் கூறி கடவுளின் உண்மையான பணியாளர்களாக  வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

நாம் இறைப்பற்று இன்றி வலுவற்று இருந்தபோதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். நாம் கடவுளுக்குப் பகைவர்களாய் இருந்தும் அவருடைய மகன் நமக்காக உயிரைக் கொடுத்ததால் நாம் கடவுளோடு ஒப்புரவாக்கப்பட்டுள்ளோம். அவர் நமது பாவங்களைப் பாராமல் தம்முடைய இரக்கத்தால் ஒவ்வொரு நொடிப்பொழுதும் நம்மைத் தாங்கிக்கொள்வார் என்று கூறி, இறைவனின் பேரிரக்கத்தைச் சிந்திக்க அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

நம்பிக்கையாளர் மன்றாட்டுகள்

1. அழைத்தலின் அர்த்தமே எம் இறைவா! உம் பணி செய்ய உமது அழைப்பைப் பெற்ற திருத்தந்தை, ஆயர், அருள்பணியாளர், துறவியர் மற்றும் பொதுநிலையினர் அனைவருக்கும் ஆசி வழங்கும். தம் பணிவாழ்வில் வரும் எல்லா இடர்களிலும் உம் சிறகின் நிழலில் இவர்களை வைத்துப் பாதுகாக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. நன்மைகளின் நாயகனே எம் இறைவா! நாட்டு மக்களைப் பாதுகாக்க உமது திருவுளப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டுத்தலைவர்களை உம் பாதம் சமர்ப்பிக்கின்றோம். தலைவர்கள் அனைவரும் முப்பொழுதும் மக்களின் நலன்களுக்காய் உழைக்கக் கூடியவர்களாகவும், நாட்டு வளங்களைப் பாதுகாப்பவர்களாகவும், நல்லாட்சி புரிய அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. காக்கும் கடவுளே எம் இறைவா! எம் இளைஞர் தொழில்நுட்ப நுகர்வுக் கலாச்சாரத் தில் வீழ்ந்து கிடக்காமல் தன் அறிவுத்திறனை யும் ஆக்க சக்தியையும்  நாட்டின் வளர்ச்சிக்காய் பயன்படுத்தி சிறந்த இறைப்பற்று மிக்க இளைஞர்-இளம்பெண்களாக வளர அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடு கின்றோம்.

4. அழைத்தலின் நிரந்தரமே எம் இறைவா! திரு அவையை ஆன்மிக வழியிலும் இறைநெறியிலும் வழிநடத்தத் தேவையான இறை அழைத்தலை எம் குடும்பங்களில் இருந்து நீர் தேர்ந்தெடுத்துத் தரவும், எமது குழந்தையருக்கு அழைத்தலின் மகத்துவத்தை நாங்கள் எடுத்துரைக்கவும் தேவையான அருள்வரங்களைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
கிறிஸ்துவின் தூய்மைமிகு திரு உடல் திரு இரத்தப் பெருவிழா (07-06-2026) இச 8:2-3,14-16; 1கொரி 10:16-17; யோவா 6:51-58

திருப்பலி முன்னுரை

அன்பார்ந்த சகோதர-சகோதரிகளே! இன்று நம் கத்தோலிக்கத் திரு அவை, தன் மையமும் ஊற்றுமாக விளங்கும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் திருவுடல், திரு இரத்தப் பெருவிழாவைப் பெருமகிழ்வோடு கொண்டாடுகிறது.

இன்றைய நற்செய்தி இருவகை உணவுகளை நம்முன் வைக்கிறது. பழைய ஏற்பாட்டில் இஸ்ரயேல் மக்களுக்குப் பொழியப்பட்ட மன்னா உணவு இறைப்பராமரிப்பின் அடையாளமாக இருந்தாலும், அது தற்காலிகமானது; நிலைவாழ்வைக் கொடுக்கவில்லை. ஆனால், விண்ணிலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நமக்கு நிலைவாழ்வை அளிக்கிறார். “மானிட மகனுடைய சதையை உண்டு, அவரது இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வடைய மாட்டீர்கள்என்ற இறைவார்த்தையின்படி, நற்கருணை நமக்கு மீட்பையும் பகிர்தலையும் நிலை வாழ்வையும் வழங்கும் அன்பின் அடையாளமாகத் திகழ்கிறது. நற்கருணையில் இயேசு உண்மையாகவே உயிரோடு பிரசன்னமாய் இருக்கிறார் என்பதை உணர்த்தவே பீடத்தின் அருகில் ஒளிரும் விளக்கு எப்போதும் எரிந்துகொண்டிருக்கிறது. அன்று புனிதர்கள் இந்த நற்கருணையை உள்வாங்கி, தாங்களே வாழும் நற்கருணையாய் மாறி இறைவனைப் பிரதிபலித்தார்கள். நாமும் நம் உள்ளமாகிய ஆலயத்தை ஒப்புரவு அருளடையாளத்தால் தூய்மை செய்து, தகுந்த தயாரிப்போடு இயேசுவை உட்கொள்வோம். கத்தோலிக்கக் கிறித்தவர்கள் என்பதில் பெருமைகொண்டு, உயிருள்ள இயேசுவை நம் வாழ்வில் அனுபவித்து ஆசிபெற, இத்திருப்பலியில் பக்தியோடு இணைவோம்!

முதல் வாசக முன்னுரை

இன்றைய முதல் வாசகம் உடலுக்கு வலுவூட்டும் உணவை மட்டுமல்லாமல், ஆன்மாவிற்குத் தேவையான ஆன்மிக உணவைப் பற்றியும் பேசுகிறது. நமது உடல் நலனுக்கு அன்றாட உணவு எவ்வளவு முக்கியமோ, அதைவிட நம் ஆன்மாவின் வளர்ச்சிக்கு இறைவார்த்தை மிகவும் இன்றியமையாதது. எனவே, இறைவார்த்தையை நம் வாழ்வின் உணவாக ஏற்று, அதன் வழிநடக்க அழைப்பு விடுக்கும் இம்முதல் வாசகத்திற்குப் பக்தியோடு செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

இறைவன் நமக்கு இலவசமாகக் கொடுத்த இந்த உன்னத வாழ்வில் பிளவுகள், பிரிவுகள், சுயநலக் குழு மனப்பான்மைகள் மற்றும் வேறுபாடுகள் அனைத்தையும் களைந்தெறிய இன்றைய இரண்டாம் வாசகம் நமக்கு அழைப்பு விடுக்கிறது. நாம் அனைவரும் ஒரே அப்பத்தில் பங்குபெறுவதால், கிறிஸ்துவின் பிள்ளைகளாய் ஒன்றிணைந்து, அவர் விரும்பும் ஒருமைப்பாட்டைக் காத்து, பிறரோடு இணக்கமாக வாழவேண்டும் என்று வலியுறுத்தும் இவ்வார்த்தைகளுக்குச் செவிமடுப்போம்.

நம்பிக்கையாளர் மன்றாட்டுகள்

1. அன்பின் இறைவா! எம் திரு அவைத் தலைவர்கள் அனைவரும் உயிருள்ள உம்மில் ஆழமான நம்பிக்கை கொண்டு வாழவும், தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள மக்களை நற்செய்தி விழுமியங்களின்படி வழிநடத்தத் தேவையான ஞானத்தையும் அருள்வரங்களையும் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. நற்கருணையில் வாழும் ஆண்டவரே! எம் பங்கு மக்கள் அனைவரும் நற்கருணையின் மகத்துவத்தை உணர்ந்து, தகுந்த தயாரிப்போடு உம்மை உட்கொள்ளவும், நற்கருணை நாதரின் உயிருள்ள பிரசன்னத்தை அன்றாட வாழ்வில் கண்டுகொள்ளும் அகவொளியைத் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. நற்கருணை நாதரே! நாங்கள் அனைவரும் இந்த வழிபாட்டின் ஆசிரைப் பெற்று நம்பிக்கையோடு வாழவும், எங்கள் குடும்பங்களில் அன்பும், அமைதியும் என்றும் நிலைத்திருக்க வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. நற்கருணையில் வாழும் நல்லவரே! புற்றுநோய் மற்றும் தீராத வியாதிகளால் அவதியுறும் எம் மக்களுக்குத் தெய்வீகக் குணமளித்துத் தேற்றவும், உயிர்க்கொல்லி நோய்களிலிருந்து எம் மக்களைக் காத்து நலமளிக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
மே 31, 2026 மூவொரு கடவுள் பெருவிழா - விப 34:4-6,8-9; 2கொரி 13:11-13; யோவா 3:16-18

திருப்பலி முன்னுரை

அன்பான இறை மக்களே! இன்று நமது தாயாம் திரு அவை ஒரே சித்தம், ஒரே ஞானம், ஒரே வல்லமை கொண்ட மூவோர் இறைவனின் பெருவிழாவைக் கொண்டாடி, உறவில் நிலைத்திருக்க நமக்கு அழைப்பு விடுக்கிறது. அறிவியல் அறிவுக்கு எட்டாத ஆனால், ஆன்மிகத்தால் உணரக்கூடிய உன்னத மறைபொருள் இந்த மூவோர் இறைவன்.

படைக்கும் தந்தை, திருமகன் வழியாகத் தூய ஆவியின் நிறைவில் இப்பூமியைப் படைத்துப் பராமரித்து வருகிறார். தந்தையின் திருவுளத்திற்குப் பணிந்து மண்ணிற்கு வந்த திருமகன் இயேசு, நமக்காக வாழ்ந்து, துயருற்று, மரித்து மீண்டும் உயிர்த்தெழுந்து, தூய ஆவியானவரின் அருளை நமக்குத் தேடித்தந்தார். தொடக்கம் முதல் அசைவாடிக் கொண்டிருக்கும் அந்தத் தூய ஆவியானவர், திருத்தூதர்களுக்குத் துணையாளராகி, இன்றும் திரு அவையின் உயிராற்றலாக விளங்குகிறார்.

புனித சியன்னா கத்தரின், “முடிவில்லா மூவோர் இறைவா! கடலின் ஆழத்தைப் போல் நீர் புரிந்துகொள்ள இயலா மறைபொருள்என்று வியக்கிறார். ஆம், மூவோர் இறைவனை முழுமையாகப் புரிந்துகொள்ள இயலாவிட்டாலும், அவரின் உடனிருப்பை நம்மால் உணர முடியும். எங்கே ஒற்றுமையும் மன்னிப்பும் இருக்கிறதோ, எங்கே சமத்துவமும் மனத் தூய்மையும் நிலவுகிறதோ, எங்கே உண்மையான அன்பு இருக்கிறதோ அங்கே மூவோர் இறைவன் வாழ்கிறார். நமது உள்ளமும் இல்லமும் மூவோர் இறைவன் தங்கும் ஆலயமாக அமைந்திடவும், இறையுறவிலும் மனித உறவிலும் நாம் நாளும் வளர்ந்திடவும் தேவையான வரம் வேண்டி, இந்தத் திருப்பலியில் பக்தி உணர்வோடு இணைவோம்.

முதல் வாசக முன்னுரை

இறைவன் தம்மையே வெளிப்படுத்தும் உன்னத நிகழ்வை இன்றைய முதல் வாசகம் விவரிக்கிறது. சீனாய் மலையில் மோசேவுக்குத் திருக்காட்சி அளிக்கும் ஆண்டவர் தம்மைஇரக்கமும் கனிவும் கொண்டவர்; சினம் கொள்ளத் தயங்குபவர்; பேரன்பும் உண்மையும் மிக்கவர்என்று அறிமுகப்படுத்துகிறார். இஸ்ரயேல் மக்களைத் தமது உரிமைச் சொத்தாக ஏற்றுக்கொண்ட இறைவனின் அளப்பரிய அன்பைப் பறைசாற்றும் இவ்வாசகத்திற்குப் பக்தி உணர்வோடு செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

புனித பவுலடியார் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்தின் நிறைவுப் பகுதி இன்று நமக்கு வாசிக்கப்படுகிறது. கிறிஸ்துவில் நாம் மகிழ்ச்சியோடு வாழவும், நம்மைச் சீர்படுத்திக்கொண்டு அமைதியையும் ஒற்றுமையையும் வளர்க்கவும் அவர் நமக்கு அழைப்புவிடுக்கிறார். “ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருளும், கடவுளின் அன்பும், தூய ஆவியின் உறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாகஎன்ற உன்னத வாழ்த்தின் வழியாக, மூவோர் இறைவனின் ஆசிரைப் பெற்றுத் தரும் இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

நம்பிக்கையாளர் மன்றாட்டுகள்

1. அன்பின் இறைவா! எம் திருத்தந்தை, ஆயர்கள், பணியாளர்கள் அனைவரும் உம் தெய்வீக ஒன்றிப்பில் நிலைத்திருந்து, மக்களை நற்செய்தி வழியில் வழிநடத்தத் தேவையான வரங்களைத் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. உறவுகளின் ஊற்றே இறைவா! நாங்கள் உலகப் பற்றுகளைவிட உறவுகளுக்கு முதலிடம் கொடுக்க வும், முதியோரைப் போற்றிப் பாதுகாக்கும் நல் மனத்தைப் பெற்றிடவும் வரம் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. அமைதியின் தேவனே! நாடுகளுக்கிடையே நிலவும் போர் மற்றும் வன்முறைகள் ஒழிந்து, மக்கள் சகோதரத்துவத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழ அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. ஞானத்தின் உறைவிடமே! புதிய கல்வியாண்டைத் தொடங்கும் எம் மாணவர்கள் அறிவிலும் ஒழுக்கத்திலும் வளர்ந்து, வாழ்வின் சவால்களில் வெற்றிபெற ஆசியளிக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
மே 24, 2026 தூய ஆவியார் பெருவிழா - திப 2:1-11; 1கொரி 12:3-7,12-13; யோவா 20:19-23

திருப்பலி முன்னுரை

தூய ஆவியார் திருத்தூதர்கள் மேல் இறங்கி வந்ததைப் பெந்தகோஸ்து பெருவிழாவாகக் கொண்டாடுகின்றோம். தூய ஆவியின் வல்லமையைப் பெற்று துணிவோடும் ஞானத்தோடும் நற்செய்தியை அறிவிக்க பெந்தகோஸ்து பெருவிழா நமக்கு அழைப்புவிடுக்கிறது. இன்றைய நாள் ஆண்டவர் இயேசு தம் சீடர்களுக்கு அளித்த வாக்குறுதி நிறைவேறிய நாளாகும்அச்சத்திலும் குழப்பத்திலும் இருந்த திருத்தூதர்கள்மேல் இறங்கிய தூய ஆவியார் அவர்களை உறுதியும் ஞானமும் நிறைந்த சாட்சிகளாக மாற்றினார்.

அதே தூய ஆவி இன்றும் நம்முடைய வாழ்விலும் செயல்பட்டு, அன்பிலும் அமைதியிலும் நம்பிக்கையிலும் நம்மை வளரச் செய்கிறார் என்பதை உணர்வோம். தூய ஆவி நம் மனங்களில் அமைதியை அருள்பவராகவும், துயர நேரங்களில் ஆறுதல் அளிப்பவராகவும், குழப்ப நேரங்களில் ஞானத்தை அருள்பவராகவும், நம்முடைய வாழ்க்கைப் பயணத்தில் சாட்சிய வாழ்வு வாழ துணிவு அளிப்பவராகவும் இருக்கின்றார்

நமது வாழ்வில் அச்சம், கலக்கம், பயம் இவையெல்லாம் நீங்கப்பெற்று உறுதியோடும் துணிவோடும் வாழக்கூடிய அருளைத்தர நெருப்பு நா வடிவில் இறங்கி வரும் தூய ஆவியார் நமக்கு மூச்சுக்காற்றாய் இருந்து நம்மை இயக்குகிறார். இத்தகு மகத்துவமிக்க, வல்லமை நிறைந்த  தூய ஆவியின் குரலுக்குச் செவிகொடுத்து, தூய மக்களாய் வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசக முன்னுரை

சீடர்கள் இயேசு இறந்தபின் அச்சத்தோடும் கலக்கத்தோடும் அன்னை மரியாவோடு மேலறையில் ஒன்றாய் குழுமி இருந்த வேளையில், அவர்கள் அனைவரையும் ஆட்கொண்ட தூய ஆவியார் பல்வேறு மொழிகளில் பேசும் ஆற்றலையும், நற்செய்தியை விளக்கிக் கூறும் ஞானத்தையும், துணிவோடு எடுத்துரைக்கும் வல்லமையையும் வழங்குகிறார். நாமும் தூய ஆவியாரால் ஆட்கொள்ளப்பட்டவர்களாக வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்

இரண்டாம் வாசக முன்னுரை

திருமுழுக்குப் பெற்ற நாம் அனைவரும் தூய ஆவியைப் பெற்றதால்தான்இயேசுவே ஆண்டவர்என வாயார முழக்கமிடுகிறோம், அவரை அறிவிக்கிறோம். தூய ஆவியோ ஒன்றுதான், ஆனால், அதன் கனிகள், கொடைகள் பலவகைப்பட்டவை. தூய ஆவியின் வரங்களைப் பெற்றவர்கள் பொதுநன்மைக்காக உழைக்கவேண்டும் எனும் அழைப்பை விடுக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

நம்பிக்கையாளர் மன்றாட்டுகள்

1. தூய ஆவியை எமக்களித்த இறைவா! திரு அவையின் தலைவர்கள் அனைவரும் தூய ஆவியின் துணையால் தீமைகளை எரித்திடும் சுடராகவும், இருளை அகற்றி ஒளியைக் கொடுக்கும் தீபமாகவும் திகழ்ந்திட அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. வானகக் கொடைகளை வழங்கிவரும் எம் இறைவா! எங்கள் குடும்பங்களில் தூய ஆவியை எழுந்தருளச் செய்து, சமுதாயத்தில் நற்செய்தியின் தூதுவர்களாக வாழத் தேவையான  கொடைகளையும் வரங்களையும் தந்து வழிநடத்த வேண்டுமென்று  இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. அருள்கொடை வள்ளலே எம் இறைவா! புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம் நாட்டுத் தலைவர்கள் நாட்டு மக்களைப் பாதுகாக்கவும், பிளவுகளை அகற்றி சமத்துவத்தை ஏற்படுத்தவும், ஊழலற்ற ஆட்சியை வழங்கிடவும் தேவையான ஞானத்தைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. தூய ஆவியை எமக்களித்த இறைவா! எம் பங்கிலுள்ள இளைஞர், இளம் பெண்களுக்கு ஆசியளியும். அவர்கள் நன்மை தீமைகளைப் பகுத்தறியும் ஆற்றலைப் பெற்றிடவும், உலகப் போக்கின்படி செல்லாமல், உண்மை நெறியில் நடக்கவும் தேவையான வரங்களைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.