news
உலக செய்திகள்
“உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கில் அமைதி நிலவட்டும்” - திருத்தந்தை லியோ

ஆப்பிரிக்கத் திருத்தூதுப் பயணத்தின் ஒரு பகுதியாக அங்கோலாவிற்கு வருகை தந்துள்ள திருத்தந்தை லியோ, உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச்சூழலை முடிவுக்குக் கொண்டுவர உலக நாடுகளுக்கு அறைகூவல் விடுத்துள்ளார். அங்கோலாவின் லுவாண்டா நகரில் நடைபெற்ற திருப்பலிக்குப் பிறகுரெஜினா செலி (Regina Coeli) உரையாற்றிய அவர், உலக நாடுகள் அமைதிக்கான முயற்சிகளை முன்னெடுக்கவேண்டுமென வலியுறுத்தியுள்ளார். உக்ரைன் மீது அண்மையில் தீவிரப்படுத்தப்பட்டுள்ள தாக்குதல்கள் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்தத் திருத்தந்தை, “ஆயுதங்கள் மௌனமாகட்டும், பேச்சு வார்த்தைக்கான பாதைகள் திறக்கப்படட்டும்என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இஸ்ரேல், லெபனான் இடையே எட்டப்பட்டுள்ள 10 நாள் போர்நிறுத்த ஒப்பந்தத்தைநம்பிக்கையின் அடையாளம்என்று அவர் வர்ணித்துள்ளார். “துன்பப்படுபவர்களின் அழுகுரலை நாம் அலட்சியப்படுத்தக்கூடாது; நம்பிக்கையின் ஒளி அனைவரின் வாழ்விலும் வீசவேண்டும்என்றும் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

news
உலக செய்திகள்
“நான் அரசியல்வாதி அல்ல; நற்செய்தியைப் பேசுபவன்”- அமெரிக்க அதிபருக்குத் திருத்தந்தை பதிலடி!

ஆப்பிரிக்க நாடுகளுக்கான தனது திருத்தூதுப் பயணத்தின் ஒரு பகுதியாக அல்ஜீரியா நாட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருத்தந்தை லியோ, உலக அரசியல் மற்றும் அமைதி குறித்துத் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் தனக்கு எதிராக வெளியிட்ட கருத்துகள் குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த திருத்தந்தை, “நான் ஓர் அரசியல்வாதி அல்ல; அவருடன் விவாதத்தில் ஈடுபட நான் விரும்பவில்லை. போருக்கு எதிராக வலுவாகப் பேசுவதும், அமைதி, உரையாடல் மற்றும் நாடுகளுக்கிடையிலான நல்லுறவை மேம்படுத்துவதுமே எனது பணிஎன்று கூறினார்.

அமெரிக்க அதிபர் நிர்வாகத்தைக் கண்டு தனக்கு அச்சமில்லை என்று குறிப்பிட்ட திருத்தந்தை, திரு அவை எப்போதுமே அமைதியை ஏற்படுத்துபவர்களின் பக்கமே நிற்கும் என்றார்.

news
உலக செய்திகள்
“ஈரான் மக்கள் மீதான அச்சுறுத்தல் ஏற்க முடியாது” - திருத்தந்தை லியோ

ஈரான் மீதான போர் மற்றும் ஒட்டுமொத்த ஈரான் நகரத்தையே அழிப்போம்என்ற அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்குத் திருத்தந்தை லியோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காஸ்டல் காண்டால்ஃபோவில் உள்ள தனது இல்லத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய திருத்தந்தை, “ஈரான் மக்கள் மீதான அச்சுறுத்தல் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாததுஎன்று சாடியுள்ளார். ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பாக அமெரிக்கா விதித்த காலக்கெடுவும், அதைத் தொடர்ந்து விடுக்கப்பட்ட போர் மிரட்டல்களும் பெரும் கவலையளிப்பதாக அவர் தெரிவித்தார். “மீண்டும் பேச்சுவார்த்தை அமர்வுக்குத் திரும்புங்கள்; அமைதியான முறையில் தீர்வுகளைத் தேடுங்கள்என்று உலகத் தலைவர்களுக்கு அவர் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த மோதலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய பொருளாதார மற்றும் எரிசக்தி நெருக்கடி வெறுப்பை மட்டுமே வளர்ப்பதாக அவர் எச்சரித்தார்.

news
உலக செய்திகள்
“நோயாளியின் நலனே உங்கள் வழிகாட்டும் நெறிமுறையாக இருக்கட்டும்”

இத்தாலியில் உள்ள தேசிய உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையத்தின் உறுப்பினர்களைச் சந்தித்த திருத்தந்தை லியோ, “நோயாளியின் நலனை எப்போதும் உங்களது முதன்மையான வழிகாட்டும் நெறிமுறையாகக் கொள்ளுங்கள்என்று வலியுறுத்தியுள்ளார். இத்தாலியின் முதல் உறுப்பு தானம் நிகழ்ந்து 70 ஆண்டுகள் நிறைவடைவதைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, அருளாளர் டான் கார்லோ கனோச்சி தனது இறப்பிற்குப் பின் தனது விழி வெண்படலத்தைத் தானம் செய்து இரு இளைஞர்களுக்குப் பார்வையளித்த உன்னதச் செயலை நினைவுகூர்ந்தார். “மனித உடலை வணிக மயமாக்குவதைத் தவிர்க்கவும், உறுப்பு மாற்றுச் செயல்பாடுகளில் வெளிப்படையான மற்றும் நீதியான அளவுகோல்கள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யவும் தொடர் விழிப்புணர்வு அவசியம். எல்லாவற்றையும் விலை மற்றும் இலாப நோக்கில் பார்க்கும் இக்காலத்தில், உறுப்பு தானம் என்பது கைம்மாறு கருதாத, சகோதரத்துவத்தின் அடையாளமாகத் திகழ வேண்டும்என்று திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

news
உலக செய்திகள்
“விமானங்கள் அமைதியைக் கொண்டுவரட்டும்” - திருத்தந்தை

இத்தாலியின்.டி.. ஏர்வேஸ் (ITA Airways) நிறுவனத்தின் நிர்வாகிகளைச் சந்தித்த திருத்தந்தை லியோ, தனது திருத்தூதுப் பயணங்களுக்கு உதவும் அந்நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்தார். அப்போது, நவீன உலகில் விமானங்கள் மரணத்தையும் அழிவையும் சுமந்து செல்லும் கருவிகளாக மாற்றப்படுவது குறித்து மிகுந்த வேதனையைப் பதிவுசெய்தார். “விமானங்கள் எப்போதும் அமைதியின் தூதுவர்களாகவும், உரையாடல் மற்றும் சகோதரத்துவத்தை இணைக்கும் பாலங்களாகவுமே இருக்க வேண்டும்; அவை ஒருபோதும் போருக்கானதாக இருக்கக்கூடாது. இருபதாம் நூற்றாண்டின் உலகப் போர்களில் நிகழ்ந்த வான்வழிக் குண்டுவீச்சுகள் இனியாவது முடிவுக்கு வந்திருக்கவேண்டும்என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “தொழில்நுட்ப வளர்ச்சியைப் போருக்காகப் பயன்படுத்தப்படுவது என்பது முன்னேற்றம் அல்ல; மாறாக, அது ஒரு பின்னோக்கிய நகர்வுஎன்று தெரிவித்துள்ளார்.

news
உலக செய்திகள்
திருத்தந்தை லியோவுக்கு ‘லிபர்ட்டி மெடல்’ விருது!

உலகளவில் மதச்சுதந்திரம், மனசாட்சி மற்றும் கருத்துச் சுதந்திரத்தை மேம்படுத்தியதற்காகத் திருத்தந்தை 14-ஆம் லியோவுக்கு 38-வது ஆண்டுலிபர்ட்டி மெடல் (Liberty Medal) விருது வழங்கப்படும் என அமெரிக்காவின் தேசிய அரசமைப்பு மையம் (NCC) அறிவித்துள்ளது. அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, 2026 ஜூலை 3-ஆம் தேதி பிலடெல்பியாவில் நடைபெறவுள்ள விழாவில் இந்த விருது வழங்கப்படவுள்ளது. அமெரிக்க அரசமைப்பின் முதல் திருத்தத்தில் உள்ள அடிப்படை விழுமியங்களை உலகிற்குத் தனது வாழ்நாள் பணியின் மூலம் திருத்தந்தை கொண்டு சென்றதை இந்த விருது அங்கீகரிக்கிறது. 2025, மே மாதம் திருத்தந்தையாகப் பொறுப்பேற்றது முதல் யூத, இசுலாமிய மற்றும் பிற சமயத் தலைவர்களுடன் உரையாடலை ஏற்படுத்தி, அமைதியான சகவாழ்வை முன்னிறுத்துவதை அவர் தனது முன்னுரிமைப் பணியாகக் கொண்டுள்ளார். இந்தக் கௌரவத்திற்காகத் திருத்தந்தை தனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளதாக வத்திக்கான் செய்தித் தொடர்பாளர் மேட்டியோ புரூனி கூறியுள்ளார்.