news
உலக செய்திகள்
விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்குத் திருத்தந்தையின் இரங்கல்

அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து 242 பேருடன் இலண்டன் புறப்பட்ட ஏர் விமானம் சிறிது நேரத்திலேயே விமான நிலையத்திற்கு அருகில் உள்ள குடியிருப்புப் பகுதியில் அரசு நடத்தும் மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதி விபத்துக்குள்ளான நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தனது மனமார்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்த திருத்தந்தை 14-ஆம் லியோ, பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும், மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்காகவும் தான் பிரார்த்தனை செய்வதாகவும், இறந்தவர்களின் ஆன்மாக்களை இறைவனின் இரக்கத்திற்கு ஒப்புக்கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

news
உலக செய்திகள்
உலக அமைதிக்கான திருத்தந்தையின் வேண்டுகோள்!

ஈரான் மற்றும் இஸ்ரயேலில் அண்மையில் நடக்கும் போர் குறித்துப் பேசிய திருத்தந்தை, அணுசக்தி அச்சுறுத்தலிலிருந்து விடுபட்ட ஒரு பாதுகாப்பான உலகத்தை உருவாக்குவதற்கான உறுதிப்பாட்டை மரியாதையுள்ள சந்திப்புகள் மற்றும் நேர்மையான உரையாடல்கள் வழியாகத் தொடர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். நீதி, உடன்பிறந்த உணர்வு, பொது நன்மை ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு நீடித்த அமைதியைக் கட்டியெழுப்ப வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள திருத்தந்தை, அமைதிக்கான காரணத்தை ஆதரித்தல், நல்லிணக்கப் பாதைகளைத் தொடங்குதல், அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் மாண்பை உறுதி செய்யும் தீர்வுகளை ஊக்குவித்தல் போன்றவை அனைத்து நாடுகளின் கடமை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

news
உலக செய்திகள்
போரில் உயிர் இழக்கும் அப்பாவிக் குழந்தைகள்!

கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி தொடங்கி இன்றுவரை உக்ரைன்மீது இரஷ்யா நடத்திய தாக்குதலால் 27,000-க்கும் மேற்பட்ட அப்பாவிக் குழந்தைகளும், 45,000-க்கும் மேற்பட்ட பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர். 31,867 பேர் காயம் அடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தகவலைத் தனதுXதளப் பக்கத்தில் வெளியிட்ட ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகம், ‘மேலும் இன்னும் எத்தனை இளம் உயிர்கள் சிதைக்கப்பட வேண்டும்? இன்னும் எத்தனை எதிர்காலங்கள் திருடப்பட வேண்டும்?’ என்ற கேள்விகளையும், ‘குழந்தைகளுக்கு நிபந்தனையற்ற மற்றும் நீடித்த அமைதி வேண்டும்என்றும் வலியுறுத்தியுள்ளது.

news
உலக செய்திகள்
நெருக்கடியிலும் நம்பிக்கை தளராத பாகிஸ்தான் கிறித்தவர்கள்!

பாகிஸ்தானில் மிகவும் இறுக்கமான, இழிவான காலச்சூழலில் வாழ்ந்து வருகின்ற கிறித்தவர்கள் பொருளாதாரம், வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்புகள் கேள்விகளுக்கு உள்ளாகும் நிலையில் மக்கள் இடம்பெயர்வது கட்டாயத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. மே 31 அன்று இஸ்லாமாபாத் - இராவல் பிண்டி மறைமாவட்டத்தின் தலைமைப் பொறுப்பாளர் மற்றும் பாகிஸ்தானிலுள்ள திருத்தந்தையின் மறைபரப்புப் பணிகளுக்கான தேசிய இயக்குநர் அருள்தந்தை ஆசிப் ஜான் கோகர், யூபிலி ஆண்டை முன்னிட்டுப் பேசுகையில், திருத்தந்தை 14-ஆம் லியோ நீதி, அமைதி, உண்மை ஆகிய மூன்று வார்த்தைகளை அழுத்தமாகக் கோடிட்டுக்காட்டும் மறையுரைகளை, பாகிஸ்தானிய நம்பிக்கையாளர்கள் வாழ்வாக்குவார்கள். நம்பிக்கையில் தளரா மனத்துடன் முன்னோக்கி, இணைந்த திரு அவையாக அவர்கள் பயணிக்கிறார்கள் என்றும் பதிவுசெய்துள்ளார்.

news
உலக செய்திகள்
மனித உரிமை மீறல்கள் அவமானத்தின் அடையாளம்

மே 22 அன்று அமெரிக்க ஐக்கிய நாடுகளின் நியூயார்க்கில் நடைபெற்ற ஆயுத மோதலில் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்த கருத்தமர்வில் .நா.விற்கான திருப்பீடப் பிரதிநிதி பேராயர் கபிரியேலே காச்சா, “மிகவும் பலவீனமான மனிதர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள், பெண்கள், குழந்தைகள், மனிதாபிமான பணியாளர்கள் உள்பட பொதுமக்களை வேண்டுமென்றே குறிவைத்துத் தாக்குதல் நடத்துதல், மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத்தலங்கள் போன்ற அடிப்படை உள்கட்டமைப்பை அழித்தல், அவசரத் தேவையில் உள்ளவர்களுக்கு மனிதாபிமான அணுகல் மறுக்கப்படுதல் ஆகியவை மனிதகுலத்திற்கான துயரமாக இருக்கின்றனஎன எடுத்துரைத்தார்.

news
உலக செய்திகள்
உணவுப் பாதுகாப்பின்மையை ஏற்படுத்தும் மோதல்கள்!

மே 16, வெள்ளிக்கிழமை .நா. பொதுச்செயலாளர் அந்தோணியோ குத்தேரசு அவர்கள் உணவுப் பாதுகாப்பின்மையை ஏற்படுத்தும் மோதல்கள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பன்னாட்டு அமைப்புகளின் அறிக்கையில் போர், மோதல்கள், அதிர்ச்சி தரும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், தீவிர வானிலை மாற்றங்கள், கட்டாய இடப்பெயர்வுகள் ஆகியவை உலகளவில் உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டைத் தொடர்ந்து தூண்டி வருகின்றன என்று எடுத்துரைத்துள்ளார். மேலும் அவர் வெளியிட்ட அறிக்கையில், 2024-ஆம் ஆண்டில் 53 நாடுகள் மற்றும் நிலப்பகுதிகளில் 29,50,00,000-க்கும் அதிகமான மக்கள் கடுமையான பசியை அனுபவித்தனர்; இது கடந்த 2023-ஆம் ஆண்டில் பாதிக்கப்பட்ட 13,70,00,000 மக்கள் எண்ணிக்கையைவிட அதிகம் என்றும் தெரிவித்துள்ளார். உலகளாவிய உணவு நெருக்கடி குறித்த அறிக்கையானது, உலகு ஆபத்தான பாதையை நோக்கிச் செல்கின்றது; எனவே, மக்களின் உணவுத் தேவைகளை உடனடியாகப் பூர்த்தி செய்ய வேண்டிய தேவையில் நாம் இருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார் அந்தோணியோ குத்தேரசு.