news
தமிழக செய்திகள்
‘50 ஆண்டுகாலக் கனவு நனவாகிறது!’

நம் வாழ்வுவெளியீட்டுச் சங்கத் தலைவர் மேதகு ஆயர் ஆனந்தம் அவர்களின் வாழ்த்து!

என் நெஞ்சுக்கு நெருக்கமான நம் வாழ்வின் வாசகப் பெருமக்களே! 50 ஆண்டுகால நமது கனவு நனவாகும் நன்னாள் இன்று! 50 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு ஆயர் பேரவையின் பெரும் முயற்சியால் பிறப்பெடுத்தநம் வாழ்வுஒரு நாளிதழாக மலரவேண்டும் என்று யாவரும் எதிர்பார்த்திருந்த சூழலில், காலத்தின் தேவை அறிந்து, அதன் அருங்குறிகளுக்கு ஏற்ப (Signs of the Times), நவீனத் தொழில்நுட்ப உலகின் சூழலுக்கு ஏற்றவாறுநம் வாழ்வுஎண்ணிமத் தொழில்நுட்ப உலகில் மின்னஞ்சல் நாளிதழாக (E-Newspaper) மலர்வது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது.

திரு அவைசமூகம்சிறுபான்மையினரின் அரசியல் பயணம், நாம் முன்வைக்கும் கோரிக்கைகள், உரிமைக்கான குரல் எனப் பல தளங்களில் செய்திகளைக் கிறித்தவ இறைச் சமூகத்திற்கும் இன்றைய இளையோருக்கும் சமூக வலைத்தளம் மூலம் உடனுக்குடன் வழங்க இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதுடன், அதன் உண்மைத்தன்மையை அசை போட்டு, வீரியமிக்க செயல்பாடுகளை முன்னெடுத்து, திரு அவையையும் உலகையும் நாட்டையும் புதுப் படைப்பாக்கும் முயற்சியில் யாவரும் ஒன்றிணைய வாழ்த்துகிறேன்! ‘நம் வாழ்வின்இப்பயணம் தொடர ஆசி வழங்குகிறேன்.

news
தமிழக செய்திகள்
எண்ணிமத் தொழில்நுட்பத்தில் சிறுபான்மையினரின் உரிமைக் குரல்!

தமிழ்நாடு ஆயர் பேரவைத் தலைவர், சென்னை - மயிலை உயர் மறைமாவட்டப் பேராயர் மேதகு ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்களின் வாழ்த்துரை

அன்புக்குரியவர்களே! தமிழ்நாடு ஆயர் பேரவையின் சமூக ஊடகப் பணிக்குழுவின் ஒரு கிளையாகச் செயல்படும் அச்சு ஊடகப் பணிக்குழு, ‘நம் வாழ்வுஎன்னும் வார இதழை, மிகச் சிறப்பாக வெளிக்கொணர்ந்து அனைவருடைய பாராட்டையும் பெற்று வருவதை நாம் அறிவோம்! சமூக-ஆன்மிக-அரசியல்-வாழ்வியல் வழிகாட்டியாக, தமிழ்நாடு திரு அவையின் தனிப்பெரும் வார இதழாக வெளிவரும் இவ்விதழ், இன்றைய சமூக அரசியல் சூழலில், நமது கத்தோலிக்க இறைச்சமூகத்தின் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்திய-தமிழ்நாடு சூழலில் சிறுபான்மையினராகிய நமது உரிமைக்கான குரலாகப் பொதுத்தளத்தில் சிறப்பாகத் தனது கருத்துகளைப் பதிவு செய்து வரும் இவ்விதழ், தனது பொன்விழா ஆண்டில் காலத்தின் அறிகுறிகளை அறிந்து, எண்ணிமத் தொழில்நுட்பத்தில் தடம் பதிக்கும் வண்ணம் மின்னஞ்சல் நாளிதழை (E - Newspaper) வெளிக்கொணர்வது மிகவும் பாராட்டத்தக்கது.

இம்முயற்சியை முன்னெடுக்க ஒத்துழைப்பு நல்கிய அனைத்து நல்ல உள்ளங்களையும் சிறப்பாக, தமிழ்நாடு ஆயர் பெருமக்களையும், இப்பணிக் குழுவின் தலைவர் மேதகு ஆயர் லூர்து ஆனந்தம் அவர்களையும், இப்பணியை அன்றாடம் முன்னெடுக்கவிருக்கும்நம் வாழ்வுவார இதழின் முதன்மை ஆசிரியர், அச்சு ஊடகப் பணியகத்தின் இயக்குநர் அருள்முனைவர்  இராஜசேகரன் அவர்களையும், அவர்களோடு உடன் பணியாற்றும் ஏனைய உதவி ஆசிரியர்களையும், அலுவலகப் பணியாளர்களையும் மனதார வாழ்த்துகிறேன்! அவர்களின் பணி சிறக்க ஆசி கூறுகிறேன்!

இம்முயற்சியை மேற்கொள்வதன் நோக்கம், இளையோரை வாசிப்புத்தளத்தில் உற்சாகப்படுத்தவும் திரு அவை, சமூக - அரசியல் செயல்பாடுகளில் அவர்கள் தெளிவு பெறவுமேஉலகம், ஆசியா, இந்தியா, தமிழ்நாடு நமது மறைமாவட்டங்கள் எனப் பல தலங்களில் செய்திகளை உடனுக்குடன் தாங்கி  வரவிருக்கும் இந்த மின்னஞ்சல் நாளிதழிலிருந்து இளையோர் செய்திகளின் உண்மைத்தன்மையை அறிந்து, நேர்மையான வழிமுறைகளை முன்னெடுத்து, சமூக மாற்றத்திற்கு முனைப்புடன் செயல்பட வாழ்த்துகிறேன். இந்த மின்னஞ்சல் நாளிதழ் அதற்குத் துணைபுரியும் என நம்புகிறேன். கத்தோலிக்க இறைச்சமூகம் இதனை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள தமிழ்நாடு ஆயர்கள் அனைவரும் இம்முயற்சியைப் பாராட்டி, பேராதரவு தந்திட அன்போடு வேண்டுகிறேன்!

news
தமிழக செய்திகள்
சாதி மற்றும் ஆணவப் படுகொலைக்கு எதிராக உறுதிமொழி!

கோட்டாறு மறைமாவட்டத்தின் தமிழ்நாடு கத்தோலிக்க இளைஞர் இயக்கத்தினர் சாதியை மறுத்தும், ஆணவப் படுகொலைகளைத் தடுக்க வலியுறுத்தியும் பெரியார், அம்பேத்கர் ஆகிய தலைவர்களின் முகமூடிகள் அணிந்து உறுதிமொழி எடுத்தனர். இதில் கோட்டாறு மறைமாவட்ட இளைஞர் பணிக்குழுவின் பொதுக்குழு கூட்டம் கோட்டாறு ஆயர் இல்ல வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு கத்தோலிக்க இளைஞர் இயக்க இயக்குநர் பணி. எடிசன் கலந்துகொண்டு, ‘ஆணவப் படுகொலைகளும் சாதிய மனநிலைகளும் - இளைஞரின் பதிலிறுப்புஎன்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார்.

news
தமிழக செய்திகள்
தமிழ்நாடு-பாண்டிச்சேரி அருள்பணிப் பேரவை ஆண்டுக் கூட்டம்!

தமிழ்நாடு-பாண்டிச்சேரி அருள்பணிப் பேரவை ஆண்டுக் கூட்டம், பூண்டியில் அமைந்துள்ள பூண்டி மாதா தியான இல்லத்தில் ஜூலை 6, 2025 அன்று தமிழ்நாடு ஆயர் பேரவையின் ஆண்டுக் கூட்டத்தின் முதல் நாளில்கூட்டொருங்கியக்கத் திரு அவையில் பெண்களின் பங்கேற்பும் பங்களிப்பும்என்னும் தலைப்பில் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு ஆயர் பேரவையின் தலைவர் மேதகு பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்ற இக்கூட்டத்தில், திருச்சி மறைமாவட்டத்தைச் சேர்ந்த திருமதி. தனசீலி திவ்யநாதன் அவர்கள் சிறப்புக் கருத்தூட்டாளராக அழைக்கப்பட்டிருந்தார். பெண்களின் தலைமைத்துவம், சமஉரிமை, முடிவெடுப்பதில் பங்கேற்பு, திரு அவையில் மேற்கொள்ளப்பட வேண்டிய அமைப்புசார் சீர்திருத்தங்கள், விரிவான பங்கேற்பு, முழுமையான பங்களிப்பு என்னும் தலைப்புகளில் சிந்தனைகள் வழங்கப்பட்டன. மேலும், 16-வது ஆயர் மாமன்றத்தின் பொது அமர்வு அறிக்கையின் வழி நின்று, திரு அவையில் நிகழ்ந்திருக்கும் பெண்களுக்கான பல பங்கேற்பையும் தலைமைத்துவ பணி நியமனத்தையும் சுட்டிக்காட்டிய கருத்தூட்டாளர், திரு அவையில் பெண்கள் சந்திக்கும் சவால்களையும், கூட்டொருங்கியக்கத் திரு அவையாக இணைந்து பயணிக்க மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெடுப்புகளையும், அடுத்து இரண்டு, ஐந்து, ஏழு ஆண்டுகளுக்கான குறுகிய மற்றும் நீண்டகாலப் பணித் திட்டங்களையும் முன்னிறுத்திக் கருத்துகளை வழங்கினார். கூட்டத்தில் தமிழ்நாடு அனைத்து ஆயர்களும், தமிழ்நாடு ஆயர் பேரவையின் அனைத்துப் பணிக்குழுச் செயலர்களும். தமிழ்நாடு-பாண்டிச் சேரி மறைமாவட்டங்களின் மேய்ப்புப்பணி நிலைய இயக்குநர்களும், ஏறக்குறைய 300-க்கும் மேற்பட்ட அருள்பணிப் பேரவைப் பிரதிநிதிகளும், பொதுநிலையினர் பணிக்குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

news
தமிழக செய்திகள்
‘The Face of the Faceless’ திரைப்பட வெளியீட்டு விழா

2025, ஜூலை 8 அன்று, வரலாற்றுச் சிறப்புமிக்க பூண்டி மாதா பேராலயத்தில், தமிழ்நாடு ஆயர் பேரவை (TNBC), தமிழ்நாடு துறவிகள் கூட்டமைப்பு (TNCRI) உறுப்பினர்கள் கலந்துகொண்ட விழாவில், 107-க்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளை வென்றதும், ஆஸ்கர் விருதுக்குத் தகுதி பெற்றதுமான இயக்குநர் டாக்டர் ஷெய்சன் பி. ஊசூப் மற்றும் தயாரிப்பாளர் டாக்டர் சாண்ட்ரா டிசூசா இராணா அவர்களின் பெருமுயற்சியோடு உருவாக்கப்பட்ட சமூக நீதிக்காகத் தன்னை அர்ப்பணித்த அருளாளர் இராணி மரியாவின் வாழ்வை உணர்ச்சி பொங்கச் சித்தரிக்கும்The Face of the Facelessதிரைப்படத்தின் தமிழ் பதிப்பு வெளியிடப்பட்டது.

இப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்புகளை உருவாக்க உதவிய அருள்தந்தை டேவிட் ஆரோக்கியம் அவர்களுக்கும், மாதா டிவி குழுவினருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டதுஆசிர்வதிக்கப்பட்ட இராணி மரியாவின் வாழ்க்கை மற்றும் தியாகத்தை நினைவூட்டும் இத்திரைப்படம் மன்னிப்பு, நம்பிக்கை மற்றும் சமூகநீதி போன்ற கிறித்தவ மதிப்பீடுகளை மக்களிடையே பரப்புகிறது. இந்தச் சிறப்பு மிக்க நிகழ்வில் ஆயர்கள், குருக்கள், துறவிகள் மற்றும் இறைமக்கள் பெரும்பாலானோர் கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.

news
தமிழக செய்திகள்
மதுரை உயர் மறைமாவட்டத்திற்குப் புதிய பேராயர் நியமனம்

1960-ஆம் ஆண்டு டிசம்பர் 8 அன்று, தமிழ்நாட்டின் தூத்துக்குடி மறைமாவட்டத்தில் உள்ள வடக்கு வண்டானத்தில் பிறந்த பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் முனைவர் அந்தோனிசாமி சவரிமுத்து அவர்கள் 2024-ஆம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் மதுரை உயர் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க நிர்வாகியாக நியமிக்கப்பட்டார். தற்போது திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களால் மதுரை உயர் மறைமாவட்டப் பேராயராக நியமிக்கப்பட்டுள்ளார்.