news
சிறப்புக்கட்டுரை
உலகெங்கும் சென்று...

உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள் (மாற் 16:15) என்ற இயேசுவின் கட்டளையைக் கடைப்பிடித்து, உலகின் ஒருமுனை முதல் மறுமுனை வரை மறைபரப்புப் பணியாளர்கள் பல்வேறு காலகட்டங்களில் பணிபுரிந்து வந்துள்ளார்கள் என்பது வரலாறு. 19-ஆம் நூற்றாண்டு வரை மேற்கத்திய நாடுகளிலிருந்து அருள்பணியாளர்கள், துறவியர், பொதுநிலையினரும் கிழக்கு நோக்கி வந்தார்கள். ஆனால், 20-ஆம் நூற்றாண்டில் கிழக்கத்திய நாடுகளிலிருந்து ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா போன்ற நாடுகளுக்குப் புதிய மறைபரப்புப் பணியாற்ற பணியாளர்கள் அதிகம் தேவைப்பட்டார்கள்.

அதன்படியே, கனடா நாட்டின் ஆதிப் பழங்குடி மக்களிடையே 18 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அருள்பணியாளர் சூசை ஜேசு, மத்திய கனடாவில் சஸ்காட்செவன் மற்றும் மணிடோபாவின் வடக்குப் பகுதிகளை உள்ளடக்கிய சுமார் 7,25,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட ஒரு பெரிய மறைமாவட்டமான கீவாடின்-லெ பாவின் புதிய பேராயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி இந்தியாவிலும் குறிப்பாக, தமிழ்நாட்டிலும் இலங்கையிலும், ஏன் கனடா நாட்டிலும் ஆச்சரியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ‘மூன்றாம் உலக நாடாகக் கருதப்படும் இந்தியாவிலிருந்து ஒருவர் மேற்குலமாகக் கருதப்படும் கனடா நாட்டில் எப்படி ஆயர் ஆனார்? கனடா நாட்டு வெள்ளையின அருள்பணியாளர்கள் இவரை ஏற்றுக்கொள்வார்களா?’ என்ற கேள்விகள் கேட்கப்படுகின்றன.

2025, நவம்பர் 17, திங்கள் அன்று திருத்தந்தை லியோ 54 வயதான அருள்தந்தை சூசை ஜேசு அவர்களை இப்பணிக்கு நியமித்தார். 2007 முதல் கனடாவில் பணியாற்றி வரும் அமலமரி தியாகிகள் (Oblates of Mary Immaculate, OMI) சபையைச் சார்ந்த இவர், கனடியத் திரு அவைக்கும் பழங்குடிச் சமூகங்களுக்கும் இடையிலான ஒப்புரவு மற்றும் நல்லிணக்கத்தின் தொடர்ச்சியான செயல்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கிறார்.

2022-ஆம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க வருகைக்கு வழிவகுத்த - வத்திக்கானில் நடந்த ஆரம்பக் கூட்டத்திற்கு, பூர்வீக மக்கள் குழுவுடன் அருள்தந்தை சூசை ஜேசு முன்பு சென்றிருந்தார். 2022-ஆம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆல்பெர்ட்டா மாநிலத்தில் எட்மண்டன் நகருக்கு வருகை தந்தபோது அருள்தந்தை சூசை ஜேசு அவர்கள் பணியாற்றிய பழங்குடியின மக்களின் மறைத்தளமான திரு இருதய ஆலயத்திற்கும், தற்போது பணிபுரியும் ஆல்பெர்ட்டா ஏரியில் அமைந்துள்ள புனித அன்னாள் திருத்தலத்திற்கும் சென்று பழங்குடியின மக்களைச் சந்தித்து, அவர்களின் ஆண்டாண்டு கால வரலாற்றுக் குறைகளைக் கேட்டறிந்து ஆறுதல் தந்த நிகழ்வுகளில் அருள்தந்தை சூசை ஜேசு அவர்களின் பங்களிப்பு மிகப் பெரியது.

அருள்தந்தை சூசை ஜேசு, இந்தியாவின் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டம். பரமக்குடி அருகேயுள்ள புஷ்பவனத்தில் 1971, மே 17 அன்று பிறந்தார். சிறு வயதிலிருந்தே இறைவாழ்வில் பெற்றோரால் வளர்க்கப்பட்ட இவர், அமல மரி தியாகிகள் சபையில் சேர்ந்து, இலங்கையில் நவசந்நியாசப் பயிற்சியையும், பெங்களூரு தர்மாவரத்தில் தத்துவயியலும், வட இந்தியாவில் உள்ள அஸ்டா என்ற இடத்தில் இறையியலும் கற்று 27-07-2000 அன்று காஞ்சிபுரத்தில் குருவாக, சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத் துணை ஆயர் இலாரன்ஸ் பயஸ் அவர்களால் திருநிலைப்படுத்தப்பட்டார்.

2000 முதல் 2007-ஆம் ஆண்டு வரை வட இந்தியாவின் பலகாட், சுரலா கப்பா என்ற இடங்களிலும், தமிழ்நாட்டில் கொம்படி மதுரை பங்குத்தளத்திலும் பணியாற்றினார். 2007-ஆம் ஆண்டு கனடா வந்து கீவாடின் லெ பா என்ற உயர்மறைமாவட்டத்தில் பெலிக்கன் நேரோஸ் மற்றும் சண்டி பே என்ற இடங்களில் பங்குப் பணியாற்றினார்.

தாய்மொழியான தமிழ் மற்றும் ஆங்கிலம், வட இந்திய பணித்தளங்களில் இந்தி கற்று சரளமாகப் பேசக்கூடிய அருள்தந்தை சூசை, க்ரீ என்ற கனேடியப் பழங்குடியினரின் மொழியையும் சிறப்புடன் கற்று, அம்மொழியிலேயே திருப்பலி நிறைவேற்றி, மறையுரையாற்றி, பாடல்கள் பாடி, மக்களுடன் அளவளாவி, தனது மேய்ப்புப்பணியை கனடா நாட்டில் மேற்கொண்டார். இந்தியாவில் உளவியலில் முதுகலைப்பட்டத்தையும், ஒட்டாவாவில் உள்ள செயிண்ட் பால் பல்கலைக்கழகத்தில் உளவியல் ஆலோசகர் மற்றும் ஆற்றுப்படுத்துநர் பட்டத்தையும் பெற்றுள்ளார்.

கனேடிய குடிமகனான இவர், பழங்குடிச் சமூகங்கள் மற்றும் நகர்ப்புற ஏழைகளின் அர்ப்பணிப்புள்ள அருள்பணியாளராகப் பணியாற்றுகிறார். நகர்ப்புற வீடற்ற மனிதர்களுக்கு மதிய உணவுத் திட்டங்கள், உணவு வங்கி, குளிர்கால ஆடை விநியோகம் மற்றும் கனடா பழங்குடியின மக்களின் சமூக-பொருளாதார-கலாச்சார மேம்பாடு, பிற சமூகங்களிடையே நல்லுறவு மற்றும் ஒப்புரவு உள்ளிட்ட பல முயற்சிகளை இவர் வழிநடத்தி ஆதரித்துள்ளார். இவர் தனது இரக்கம், கலாச்சார உணர்திறன் மற்றும் நல்லிணக்கம், சமூகக் கட்டமைப்பு மற்றும் மிகவும் பின்தங்கிய மக்களை ஆதரிப்பதில் அசைக்க இயலாத அர்ப்பணிப்புக்காக அறியப்படுகிறார்.

அவர் மேய்ப்புப் பணியை ஏற்றுக்கொள்ளும் விதத்தில் நான் எப்போதும் அவரிடம் ஒரு சிறப்புப் பண்பைக் கண்டிருக்கிறேன்என்று தனது மாமாவின் முன்மாதிரியால் ஈர்க்கப்பட்டு, அவர் சார்ந்த அமல மரி தியாகிகள் சபைக் குருவாக உருவாகியுள்ள இவரது மருமகன் அருள்பணியாளர் கிறிஸ்டோபர் கூறுகிறார். மேலும், “அவர் மக்களுடன், குறிப்பாக ஏழைகளுடன் எப்படிப் பழகினார் என்பதை நான் பலமுறை அவதானித்துள்ளேன். அவர் எங்கு சேவை செய்தாலும், சமூகத்துடன் ஒன்றறக் கலந்து, போதிக்கும் கடவுளின் வார்த்தையின் மீதான அவரது அன்பு, என்னை உட்பட பலரை ஊக்கப்படுத்தியது. ஏழைகள் மீதான அவரது நட்பும் அன்பும் எனது பணியில் மிகுந்த உற்சாகத்துடனும் அர்ப்பணிப்புடனும் நான் தொடர்ந்து பணியாற்ற என்னை ஊக்குவிக்கின்றனஎன்கிறார்.

எட்மண்டன் உயர்மறைமாவட்டப் பரிபாலகர் பேரருள்திரு. பால் காவனா அவர்கள் மறைமாவட்ட மக்கள் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளையும் செபங்களையும் தெரிவித்தார். அவர் கூறியது: “அருள்தந்தை சூசை, கடவுள் மற்றும் திரு அவை மீது கொண்ட ஆழ்ந்த அவரது அன்பினால் அவர் செய்கிற பணியின் நிமித்தம் பலரின் நன்மதிப்பையும் மரியாதையையும் பெற்றிருக்கிறார். எட்மண்டனில் உள்ள பழங்குடியினருக்கான திரு இருதயப் பங்கிலும், அண்மையில் புனித அன்னாள் ஏரியில் அமைந்துள்ள திருத்தலத்திலும், ஈனாக்கு என்ற இடத்தில் அமைந்துள்ள இரக்கமிகு கன்னி மரியா ஆலயத்திலும், அலெக்சிஸ் பழங்குடியினர் பகுதியிலும் அன்பு, நம்பிக்கை மற்றும் ஆற்றுப்படுத்துதலின் உண்மையுள்ள சாட்சியாகப் பேரருள்தந்தையின் பணி அமைந்துள்ளது.”

அமல மரி தியாகிகள் துறவற சபையின் கனடா லெக்கொம்ப் மாநிலத் தலைவர் அருள்தந்தை கென்தோர்சன் பின்வருமாறு பகிர்ந்துகொண்டார்: “சகோதரர் சூசையுடன் பல்வேறு தருணங்களில் பணிபுரியும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. மேலும் அவர் இந்தியாவில் தனது பணியிலிருந்து கொண்டு வந்த பண்புகளான பூர்வீக மொழி மீதான பற்று, கலாச்சாரம் மற்றும் சமூகத்தின் மீதான அவரது ஆழ்ந்த மரியாதையை நேரில் கண்டிருக்கிறேன். கனடாவில் உண்மையுடனும் நேர்மையுடனும் வாழ்ந்தவர். இவரது வலுவான பணி நெறிமுறை, ஆழமான பக்தி, துறவு வாழ்வில் பற்று, எம் சபையில் அர்ப்பணிப்பு மற்றும் திரு அவை மற்றும் அவரது குடும்பத்தினரின் மீதான அவரது அன்பு அனைத்தும் அவர் சேவை செய்யும் விதத்தில் பெரும் பங்காற்றியுள்ளன. எங்கள் சபையில் ஒரு நல்ல அருள்பணியாளரை நாங்கள் இழக்க நேரிடும். ஆனால், அதேவேளையில், கீவாடின்-லெ பா உயர்மறைமாவட்ட மக்களுக்கும், அவர் தனது தாயகமாகக் கருதும் பரந்த வடக்குச் சமூகங்களுக்கும் இவர் ஓர் ஆசிர்வாதமாக இருப்பார் என்று நான் நம்புகிறேன்.”

2024, டிசம்பர் 30 முதல் கீவாடின் லெ பா உயர்மறைமாவட்ட அப்போஸ்தலிக்கப் பரிபாலகராகப் பணியாற்றி வரும் வின்னிபெக் பேராயர் மேதகு முர்ரே சாட்லைன் அவர்களும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்: “அருள்பணியாளர் சூசை இங்கு ஏழு ஆண்டுகள் பணியாற்றினார். மேலும் எங்கள் சமூகங்களை நன்கு அறிவார். பழங்குடியின மக்களின் பங்காகிய திரு இருதய ஆலயத்திலிருந்து நேரடி ஒளிபரப்புச் செய்த திருப்பலிகள் மூலம் குறிப்பாக, ‘கோவிட்காலத்திலிருந்து அவரைப் பின்தொடர்ந்து வந்துள்ளனர்என்கிறார்.

கனடாவில் வாழும் அனைத்து மக்களுக்கும் தமிழ்மொழி பேசும் அனைத்து மக்களுக்கும் பேரருள்தந்தை சூசையின் ஆயர் பணி இறையாசிரையும் அருளையும் நிறைவாகப் பெற்றுத்தந்து இறைவழியில் வழிநடத்தும் என்று நம்புவோம். தொடர்ந்து அமல அன்னை பரிந்துரையை நாடுவோம்.

news
சிறப்புக்கட்டுரை
இறைநம்பிக்கையின் தூதன்!

உலகமெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள் (மாற் 16:15) என்ற இறைமைந்தன் இயேசுவின் வார்த்தைகளை வாழ்க்கையாக ஏற்று, நம் இந்தியத் திருமண்ணில் நம்பிக்கை வேர்விட, மேற்கத்திய நாடுகளிலிருந்து வந்து உழைத்த எண்ணற்ற மறைப்பணியாளர்களைப் பற்றிய வரலாறு நாம் அறிந்த ஒன்று. ஆனால், காலச்சுழற்சியில் இன்று நிலை தலைகீழாக மாறி, இருக்கின்றது. எங்கிருந்தோ இங்கு வந்து மறைப்பணியாளர்கள் இறைப்பணியாற்றிய நிலைமாறி இன்று நம் இந்திய மண்ணிலிருந்து மேற்கத்திய நாடுகளில் இறைப்பணியாற்றும் அருள்பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.  அந்த வகையில், நம் தமிழ் மண்ணில் பிறந்து, இறைநம்பிக்கையில் வளர்ந்து, இறையழைப்பை உணர்ந்து, அமலமரி தியாகிகள் சபையில் இணைந்து குருவாகி, இன்று கனடாவில் இருக்கும் மக்களுக்கு அருள்பணி. சூசை ஜேசு அவர்கள் ஆற்றிவரும் பணிகள் போற்றுதற்குரியது.

2007-ஆம் ஆண்டு ஓர் இளம் துறவியாக கனடா நாட்டிற்குச் சென்று, அங்கிருக்கும் கீவாடின் லெ பா (Keewatin-Le Pas) என்ற மறைமாவட்டத்தில் வசிக்கும் பூர்வக்குடிமக்கள் மத்தியில் தன் பணி வாழ்வைத் தொடங்கினார். வெறுமனே திருப்பலி நிறைவேற்றுவது மற்றும் அருளடையாளங்களை வழங்குவது என்று தன் பணி வாழ்வை ஓர் எல்லைக்குள் சுருக்கிக்கொள்ளாமல், மக்களோடு மக்களாகத் தன்னை இணைத்துக் கொண்டு, கற்பதற்குக் கடினமான அவர்களின தாய்மொழியாகியக்ரீஎன்ற மொழியைப் பயின்று அவர் ஆற்றிய அரும்பணிகளால் இன்றும் அவர்களின் இதயங்களில் நீங்காமல் நிறைந்திருக்கிறார். இப்படித்தான் சென்ற இடங்களில் எல்லாம் நிலவிய கடினமான சூழல்களையும் சவால்களையும் இன்முகத்தோடு எதிர்கொண்டு, தளராது இறைப்பணியாற்றுவதுதான் இவரது சிறப்பியல்பு.

தனிப்பட்ட விதத்தில் பெலிக்கன் நேரோஸ் (Pelican narrows) மற்றும் சாண்டி பே (Sandy Bay) ஆகிய பங்குத்தளங்களில் மக்களுக்கு மத்தியில் இவர் ஆற்றிய பணிகளை நானே கண்ணாரக் கண்டு வியந்திருக்கிறேன். அம்மக்களின் கலாச்சாரம், பண்பாடு, வாழ்வுமுறை ஆகியவற்றோடு தன்னையே ஐக்கியப்படுத்திக்கொண்டு, ஒரு சிறந்த மறைப்பணியாளராகத் தன்னைத் தகவமைத்துக் கொண்டார். இது எல்லாராலும் இயலும் என்று கூறமுடியாது. அம்மக்களில் பெரும்பாலானோர், முறையாகக் கல்வி பயில இயலாமல் ஏழ்மையில் இருப்பவர்கள். அவர்கள்மீது தனிக் கவனம் செலுத்தி கனடா நாட்டின் பிற பகுதிகளிலிருந்து நிதிதிரட்டி, அவர்களது ஏழ்மையைப் போக்கி, கல்வியில் உயர பல்வேறு முன்னெடுப்புகளை இவர் மேற்கொண்டார்.

துறவற வாழ்வின் வாக்குறுதிகளை வாழ்வாக்குவதில் இவர் காட்டுகிற உறுதியும், பணிவாழ்வில் இவர் காட்டுகிற சுறுசுறுப்பும் இவரிடமிருந்து எல்லாரும் கற்கவேண்டிய பாடம்! கனடாவில் வசிக்கும் தமிழ் மக்களுக்கு மத்தியிலும், மிகுந்த நேசத்திற்குரிய அருள்பணியாளராக இவர் திகழ்கிறார்.

இவர் ஆற்றும் மக்கள் பணிகளை இன்னும் மகத்தானதாக்கும் விதமாக, மேய்ப்புப்பணி ஆற்றுப்படுத்துதல் (Pastoral Coun selling) பிரிவில் முதுகலைப்பட்டம் பெற்ற இவர், இதன் வழியாகவும் மக்களைச் சிறப்பாக வழிநடத்திக் கொண்டிருக்கிறார். தற்போது, எட்மண்டன் மறைமாவட்டத்தில் உள்ள அம்மண்ணின் பூர்வக்குடிமக்களுக்கான திரு இருதயத் தேசியத் திருத்தலத்தில் தொடர்ந்து தன் வாழ்வாலும் வார்த்தைகளாலும் மக்களை இறைநம்பிக்கையில் வளர்த்து வருகின்றார்.

எது நடந்தாலும், அது இறைவனின் சித்தம்என்று அடிக்கடி இவர் உதிர்க்கின்ற வார்த்தைகள், இறைப்பராமரிப்பில் இவர் கொண்டிருக்கிற அளப்பரிய நம்பிக்கையின் வெளிப்பாடு. இறைவன் தொடர்ந்து இவரைத் தம் பராமரிப்பில் வைத்துக் காக்கவும், இவர் வழியாக இன்னும் பலர் இறைநம்பிக்கையில் வளரவும் இவருக்காகச் செபிக்கிறேன், வாழ்த்துகிறேன்!

news
சிறப்புக்கட்டுரை
‘ஓர் எளிய மேய்ப்பனின் இறைப்பயணம்’- புதிய பேராயருடன் நேர்காணல்:

அன்புப் பேராயர் அவர்களே, தமிழ்நாடு ஆயர் பேரவையின் அச்சு ஊடகப் பணியகம் வெளிக்கொணரும்நம் வாழ்வுகத்தோலிக்க வார இதழ் நிர்வாகத்தினர், ஆசிரியர் குழு மற்றும் வாசகர்கள் சார்பாக உங்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களுடைய குடும்பம் மற்றும் இறையழைத்தல் பற்றிக் கூறுங்களேன்....

தமிழ்நாட்டில் புஷ்பவனம் கிராமத்தில், உழவுத் தொழில் செய்த திரு. ஜேசு - திருமதி. ஜெயசீலி தம்பதியரின் எளிய குடும்பத்தில் பிறந்தவன் நான். குடும்பத்தில் முதல் பட்டதாரி.

என் ஆன்மிக வாழ்விற்கு வித்திட்டவர் என் தாயார். அதிகாலை 4.30 மணிக்கே என்னை எழுப்பி செபத்திலும் திருப்பலியிலும் பங்கேற்கச் செய்தார். ஆலயத்தில் வழிபாட்டுத் தலைவராகவும், பாடகர் குழுத் தலைவராகவும் பணியாற்றிய சிறுவயது அனு பவங்கள் என் தலைமைப் பண்பை வளர்த்தன.

மேலும், ‘மக்களோடு தங்கி அவர்களுக்காக நேரத்தைச் செலவிடும் நல்ல மேய்ப்பனாக இருக்க வேண்டும் என்ற ஆழ்ந்த உந்துதல் மற்றும் சகோதரியின் வழிகாட்டுதலால் அமலமரி தியாகிகள் (OMI) சபையில் இணைந்தேன்.”

உங்கள் இறைப்பணி அனுபவங்கள் குறித்துப் பகிர்ந்து கொள்ளுங்களேன்...

வட இந்தியாவில் ஐந்து ஆண்டுகள் பழங்குடியின மக்களுடன் பணியாற்றினேன். 2007 முதல் கனடாவில் பூர்வக்குடி (First Nations) மக்களிடையே 19 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வருகிறேன். நீண்ட காலம் தமிழ்நாட்டிற்கு வெளியே இருந்ததால் தமிழில் உரையாற்றுவது இன்று எனக்குச் சவாலாக இருக்கிறது. அதை நேர்மையுடன் ஏற்கிறேன். Sacred Heart தேவாலயத்தில் தெருவோர மக்கள், வீடற்றவர்கள், போதைப்பொருளால் பாதிப்புக்குள்ளானவர்களுடன் இருந்தேன். அன்னை தெரேசாவின் முன் மாதிரியில், மக்களின் கோபமும் வலியும் புரிந்து பணிவிடை செய்தேன். உடல்-மனம்-உள்ளம்-ஆன்மிகம் என்ற நான்கையும் சமநிலையில் பேணுவது அதன் மையம். இயேசு கிறிஸ்து இந்த நான்கு நிலைகளிலும் முழுமையான சமநிலையுடன் வாழ்ந்தவர்; அதையே மக்களுக்கு எடுத்துரைத்தேன்.”

நீங்கள் பணிசெய்ய இருக்கும் கீவாடின் லெ பா உயர்மறைமாவட்டம் பற்றிக் கூறுங்களேன்...

கீவாடின் லெ பா உயர்மறைமாவட்டம் கலாச்சார ரீதியாக மிகவும் வேறுபட்டது. பல்வேறு மொழிகள் பேசும் பல பழங்குடியின மக்களான மேத்திஸ், க்ரீ, ஒஜி-க்ரீ, டெனே மற்றும் பழங்குடியினர் அல்லாத மக்களின் தாயகமாக அது விளங்குகிறது. மத்திய கனடா பகுதியில் ஜேம்ஸ் விரிகுடாவின் மேற்கே உள்ள பகுதி நீண்ட காலமாகவடக்குக் காற்றுஎன்று பொருள்படும்கீவாடின்என்று அழைக்கப்படுகிறது.

கனடா நாட்டில் சஸ்காட்செவன் மாநிலத்தில் உள்ள பெலிகன் நரோஸ் மற்றும் சாண்டி பேயில் உள்ள பழங்குடிச் சமூகங்களுடன்க்ரீமொழியைக் கற்றுக்கொண்டதிலும், அவர்களுடன் பழகி வந்ததிலும் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். பின்னர் எட்மண்டனில் உள்ள பழங்குடியின மக்களின் பங்காகிய இயேசுவின் திரு இருதய ஆலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வரவேற்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. எனது ஆர்வம் ஏழை மக்களை இயேசுவிடம் கொண்டு வந்து, அவர்களுக்கு நற்செய்தி அறிவிப்பதாகும். இது எங்கள் சபையை நிறுவிய புனித யூஜின் மசினோட் அவர்களின் எண்ணத்தை நிறைவேற்றுகிறது. இப்போது கீவாடின்-லெ பா உயர்மறைமாவட்டத்தின் அருள்பணியாளர்களுடன் ஒன்றிணைந்து பணியாற்றுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

மக்களின் ஆயராகப் பணியாற்ற கடவுளின் அழைப்பைப் பெறுவது ஒரு தாழ்மையான அனுபவம். பலவீனமானவர்களை நம்பிக்கையிலும் அன்பிலும் பலப்படுத்தக் கடவுள் தேர்ந்தெடுக்கிறார் என்பதை நான் உண்மையிலேயே உணர்கிறேன். என் இதயம் நன்றியுணர்வு மற்றும் மகிழ்ச்சியால் நிறைந்துள்ளது. மேலும், திருத்தந்தையின் இந்த நியமனம் எனது குருத்துவ வெள்ளி விழாவைக் கொண்டாடும் இத்தருணத்தில் வருவது இரட்டிப்பு மகிழ்ச்சியை எனக்குத் தருவதாக அமைகிறது.

இந்த மறக்கமுடியாத தருணத்தில் என் உணர்வுகளைப் பற்றி நான் சிந்திக்கும்போது, அன்னை கன்னி மரியாவின் வார்த்தைகள் என் நினைவுக்கு வருகின்றன: ‘ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது; என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்; பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார்.’ என் பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கும் குறிப்பாக, எனது மறைந்த தாயாருக்கும், நான் ஒரு குருவாக வேண்டும் என்ற அவர்களின் விருப்பம் மற்றும் தொடர்ச்சியான மன்றாட்டுகள் இப்போது நிறைவேறியுள்ளன.

கனடாவில் உள்ள பழங்குடியின மக்களுக்குப் பணியாற்ற இந்தியாவிலிருந்து என்னை அழைத்த மேனாள் பேராயர் சில்வைன் லாவோய் OMI அவர்களுக்கும், இந்த நாட்டிற்கு ஓர் இளம் அருள்பணியாளரை அழைத்து வந்து பல்வேறு பொறுப்புகளை நம்பிக்கையோடு தந்த, நான் சார்ந்துள்ள அமலமரி தியாகிகள் சபைக்கும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். கனடாவில் நான் பணிபுரிவதற்குத் தேவையான வழிகாட்டுதலையும், மனநல ஆலோசனை மற்றும் ஆற்றுப்படுத்துதல் கல்வியையும் எனக்குத் தந்தார்கள். மேலும், கடந்த ஒன்பது ஆண்டுகளாக நான் பணிபுரிந்த எட்மண்டன் உயர்மறைமாவட்டத்திற்கும், அதிலும் குறிப்பாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 2022-ஆம் ஆண்டு வருகையின்போது என்னை வழிநடத்தி ஆதரவு தந்த மேனாள் பேராயர் ரிச்சர்ட் ஸ்மித் அவர்களுக்கும் நான் நன்றி கூறுகிறேன்.”

பேராயராக, உங்கள் பணித்தளத்திற்கு உள்ள முன்னுரிமைகள் என்னென்ன?

கீவாடின் லெ பா உயர்மறைமாவட்டத்தில் உறவுகளைச் சீரமைத்தல், பொதுநிலைத் தலைமைத்துவத்தை (Lay Leadership) வளர்த்தல், உள்ளூர் மொழிகளில் பணியாற்றுவதற்குத் திருத்தொண்டர்களை உருவாக்குதல் போன்றவை என் முன்னுரிமைகள். இந்தப் பணிகள் உன்னதமும் பொறுப்புகளும் நிறைந்தவை. புவியியல் சவால்கள் அதிகம். உங்கள் செபம் எனக்கு மிக அவசியம். உங்கள் செபங்களில் என்னை நினைவு கூருங்கள்.”

நம் வாழ்வுவாசகர்களுக்கு உங்கள் செய்தி..

நம் வாழ்வுநெடுங்காலமாய் வெளிவரும் நல்லதொரு வார இதழ் என்பதை நான் அறிவேன். இந்தியாவில் இருந்தபோது நான் அடிக்கடி வாசிப்பதுண்டு. அண்மைக்காலமாக டிஜிட்டல் தரப்பிலும் வருவதை அறிவேன். இவ்விதழ் இன்னும் வளர, நிறைய வாசகர்கள் உருவாக மனதார வாழ்த்துகிறேன். எனது இந்த ஆயர் பணியேற்பு நினைவாகச் சிறப்பிதழ் வெளிக்கொணரும்நம் வாழ்வுநிர்வாகத்திற்குச் சிறப்பாக எனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் பணி சிறக்க எமது வாழ்த்துகளும் செபங்களும்!

news
சிறப்புக்கட்டுரை
மாண்பு கண்டது மறைத்தூதுப் பணி!

தந்தை பெயரால் மைந்தனின் பெயரினால்

   தழைக்கும் தூய ஆவியின் பெயரினால்

வந்த பேர்க்கு ஞான ஸ்நானமும்

   வாழு கின்ற நல்வழிக் கோலமும்

தந்து நீங்கள் போதனை செய்குவீர்

   தழுவி எந்தன் மொழிகளைச் சொல்லுவீர்!

   எந்த நாளும் யானுமே உம்முடன்

ஏகு வீர்எனக் கூறினார் நாதனே!’

                               (இயேசு காவியம்)

என்ற இயேசுவின் இறுதி கட்டளையானஉலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள் (மாற் 16:15) என்னும் இறைவாக்கை ஒரு மறைப்பணியாளனாக வாழ்ந்து, இன்று அதையே தன் ஆயர் பணிவாழ்வின் மறைவாக்காகக் கொண்டு, பணிசெய்யப் புறப்படும் அருள்பணியாளர் சூசை ஜேசு OMI அவர்களைநம் வாழ்வுவாசகர்கள் சார்பாக அன்போடு வாழ்த்துகிறேன்.

பிறர் நலம் பேணுவதே ஒரு மனித வாழ்வின் ஆகச்சிறந்த அறம். இந்த உயரியத் தத்துவத்திற்கு மிகச்சிறந்த உதாரணமாகத் திகழ்வதுமறைப்பணிஆர்வமும் (Missionary Spirit), அதில் முழுமையாக ஈடுபடுவதுமாகும். எல்லைகளைக் கடந்த அன்பும் அர்ப்பணிப்பும் முழு ஈடுபாடும் தன்னலமற்ற வாழ்வும், கைம்மாறு கருதாத பணியுமே ஒரு மறைப்பணியாளரின் அடையாளங்களாகத் திகழ்கின்றன.

மறைப்பணி என்பது வெறும் மதம் சார்ந்த போதனை மட்டுமல்ல; அது ஒடுக்கப்பட்டோரின் கண்ணீரைத் துடைப்பதும், வறுமையில் வாடுவோருக்கு வாழ்வாதாரம் வழங்குவதும், கல்வி எட்டாத இடங்களுக்கு அறிவொளியைக் கொண்டு செல்வதுமாகும். ஒரு மறைப்பணியாளர் தனக்கான வசதியான வாழ்வைத் துறந்து, அறிமுகமில்லாத மனிதர்களுக்காகத் தன்னை அர்ப்பணிக்கிறார். அவர்கள் காட்டும் இந்தத் துணிச்சல் மிகுந்த அன்புதான், உலகெங்கும் உள்ள விளிம்புநிலை மக்களின் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது; இன்றும் ஏற்படுத்தி வருகிறது.

நவீன உலகில் சுயநலம் மேலோங்கி நிற்கும் சூழலில், எளியவர்களின் குரலாக ஒலிக்கும் மறைப்பணி ஆன்மா பாராட்டுக்குரியது. மதம், இனம், மொழி என்ற எல்லைகளைத் தாண்டி, மனிதநேயத்தைப் பகிரும் ஒவ்வொரு மறைப்பணியாளரும் இவ்வுலகில் அமைதியின் தூதுவர்களே! அவர்களின் அர்ப்பணிப்பும் விடாமுயற்சியும் தியாகமும் வரும் தலைமுறைக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக அமையும்.

அத்தகைய வழியில், இந்திய மண்ணிலும் இன்று கனடா நாட்டிலும் விளிம்பு நிலை மக்களுடன், பூர்வக்குடிகளுடன், முகவரி இழந்தவர்களுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட ஒரு மாபெரும் மறைப்பணியாளர்தான் புதிய பேராயர் சூசை ஜேசு அவர்கள். தான் பணிசெய்த மக்களோடு மக்களாக உறவாடினார்; அவர்களின் கலாச்சார விழுமியங்களை உள் வாங்கினார்; அம்மக்களின் மொழிகளிலே உரையாடினார்; அவர்களில் ஒருவராக வாழ்ந்து வந்தார். இறைவன் அம்மக்களின் முகவரியை இன்று உலகறியச் செய்துள்ளார்.

இந்திய மண்ணில், தமிழ்நாடு திரு அவையில், சிவகங்கை மறைத்தளத்தில் விதை கண்ட இளந்தளிர், கனடா மண்ணில் செழித்தோங்குவது நம் மண்ணுக்குப் பெருமை, இம்மறைக்குப் பெருமை; அதுவே மறைத்தூதுப்பணிக்கு மகிமை! பேராயரின் பணிசிறக்கநம் வாழ்வுவாழ்த்தி மகிழ்கிறது.

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்

news
சிறப்புக்கட்டுரை
மதவாத அரசியலுக்கு மாற்று எங்கே?

பா... முன்னெடுத்து வரும் மத அடிப்படையிலான அரசியலுக்கு எதிராக, ஒரு வலுவான மற்றும் நம்பகமான மாற்று அரசியல் கட்டமைப்பை காங்கிரஸ் கட்சி இதுவரை உருவாக்கத் தவறியிருப்பதே இந்திய அரசியலின் முக்கியக் குறைபாடு.

மேனாள் பிரதமர் திரு. மன்மோகன் சிங் தலைமையிலான பத்து ஆண்டு கால ஆட்சி (2004-2014) பொருளாதார ரீதியாகவும், ஜனநாயக மரபுகளைப் பாதுகாப்பதிலும் ஒப்பீட்டளவில் சிறப்பாகவே செயல்பட்டது. ஆனால், அந்த ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்பட்ட ‘2ஜிஉள்ளிட்ட ஊழல் புகார்கள், எதிர்க்கட்சிகளாலும் ஊழலுக்கு எதிரான இயக்கங்களாலும் பெரிதுபடுத்தப்பட்டன. இது காங்கிரஸ் ஆட்சிக்கு எதிரான ஒரு பெரும் அரசியல் அதிர்வலையை மக்கள் மத்தியில் உருவாக்கியது.

அதேநேரத்தில், ‘குஜராத் வளர்ச்சி மாதிரி (Gujarat Model) என்ற அரசியல் பிரச்சாரம் முன்னிலைப்படுத்தப்பட்டு, 2014-ஆம் ஆண்டு இந்திய அரசியலில் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. அதன் பின்னர் திரு. மோடி தலைமையில் அமைந்த பா... அரசு, மன் மோகன் சிங் காலத்தில் உருவாக்கப்பட்ட வலுவான பொருளாதார அடித்தளம், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி, மென்பொருள் துறை மற்றும் உயர்கல்வி விரிவாக்கம் போன்ற காரணங்களால் பொருளாதார வளர்ச்சியை ஓரளவுக்குத் தக்கவைத்துக்கொண்டது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், இதே காலகட்டத்தில் இந்த ஆட்சி தெளிவான முதலாளித்துவ ஆதரவு கொண்ட ஒன்றாக மாறியது. அம்பானி, அதானி போன்ற சில பெரு நிறுவனங்கள் அபார வளர்ச்சியடைந்த நிலையில், நாட்டின் செல்வம் ஒருசிலரின் கைகளில் மட்டுமே குவியும் சூழல் உருவானது. சிறு தொழிலாளர்கள், விவசாயிகள், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் ஏழை மக்கள் கடுமையான பொருளாதார அழுத்தங்களுக்கு ஆளாகினர். நடைமுறையில், ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினருக்கு மட்டுமே நன்மை பயக்கும் அரசியலாக இது மாறிவிட்டது.

இதனுடன் சேர்ந்து பா... ஆளும் பல மாநிலங்களில் சிறுபான்மைச் சமூகங்களுக்கு எதிரான போக்குகள் வெளிப்படையாகத் தெரிந்தன. மதச்சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் மற்றும் அரசமைப்பு உறுதி செய்துள்ள சமத்துவம் ஆகியவை கேள்விக்குறியாகின. அண்மைக்காலமாக, இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் கிறிஸ்துமஸ் போன்ற சிறுபான்மையினரின் விழாக்கள் மதவாதக் கும்பல்களால் தாக்கப்படுவது ஓர் அசாதாரணமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இது இந்திய சனநாயகத்தின் ஆன்மாவிற்கே விடுக்கப்பட்ட சவாலாகும்.

இத்தகைய சூழலில், மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிக்கும் போது, பா... சனநாயகமற்ற முறைகளைக் கையாள்கிறது. எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குதல், பதவி ஆசை காட்டி இழுத்தல் போன்ற செயல்களின் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளைத் திட்டமிட்டு வீழ்த்துகிறது. மத்தியப்பிரதேசம், அருணாச் சலப்பிரதேசம், கோவா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்கள் இந்திய சனநாயக வரலாற்றில் கரும்புள்ளிகளாகவே கருதப்படவேண்டும். அது மட்டுமல்லாது, அண்மையில் கேரள மாநிலம் மட்டத்தூரில் நடைபெற்ற பஞ்சாயத்துத் தேர்தலில், இடதுசாரி கட்சிக்கு எதிராக பா... ஆதரவு பெற்ற வேட்பாளரைக் காங்கிரஸ் உறுப்பினர்களே ஆதரித்த சம்பவம், அக்கட்சிக்குள் நிலவும் கொள்கைத் தெளிவின்மையை அம்பலப்படுத்துகிறது.

மதச்சார்பற்ற இந்திய அரசியல் என்பதில் திரு. இராகுல் காந்தி உறுதியாகத் தோன்றினாலும், காங்கிரஸ் கட்சிக்குள் கொள்கையற்றத் தலைவர்கள், பதவி ஆசை கொண்டவர்கள் மற்றும் ஊழல் புகார்களில் சிக்கியவர்கள் இன்னும் நீடிப்பது கட்சியின் பலவீனமாக உள்ளது. பல மாநிலங்களில் கட்சியின் அடிப்படைக் கட்டமைப்பு (Grassroot level) செயலற்றுப் போயுள்ளது.

இந்த உள்நிலை பலவீனங்களைச் சரிசெய்யாமல், தேர்தல் காலங்களில் மட்டும் செயல்பட்டுவிட்டு, மற்ற நேரங்களில் அமைதியாக இருந்தால் பா...-வின் மதவாத அரசியலுக்கு காங்கிரசால் ஒருபோதும் மாற்றாக முடியாது. தேர்தல் அரசியலைத் தாண்டி தினசரி அரசியல் தலையீடு, தொடர்ச்சியான மக்கள் இயக்கங்கள், மதவாதத்திற்கும் கட்டுப்பாடற்ற முதலாளித்துவத்திற்கும் எதிரான தெளிவான செயல்திட்டங்கள் காங்கிரசுக்கு அவசியமானவை.

மேலும், காங்கிரஸ் தென் மாநிலங்களை மட்டுமே நம்பியிருக்காமல், வட இந்திய அரசியலில் தீவிரக் கவனம் செலுத்தவேண்டும். அங்குள்ள ஏழைகள், விவசாயிகள், தலித் மற்றும் பழங்குடியினரின் பிரச்சினைகளை நேரடியாகக் களத்தில் நின்று பேசவேண்டும். அரசமைப்பைப் பாதுகாத்தல், மதச்சுதந்திரத்தை உறுதி செய்தல் மற்றும் சமூக நீதியை நிலைநாட்டுதல் ஆகியவற்றைத் தனது முதன்மை அரசியல் அடையாளமாகக் காங்கிரஸ் மீண்டும் கட்டமைக்கவேண்டும்.

இறுதியாக, இந்திய சனநாயகம் என்பது வெறும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான விளையாட்டு அல்ல; மாறாக, அது நீதி, சமத்துவம், கண்ணியம் மற்றும் ஒற்றுமை ஆகியவற்றின் மீது கட்டப்பட்ட ஒரு சமூக ஒப்பந்தமாகும். அந்த அறநெறி அரசியலை மீண்டும் மைய நீரோட்டத்திற்குக் கொண்டு வர முடியுமா? என்பதே வருங்கால இந்தியாவின் மிக முக்கியமான கேள்வி.

news
சிறப்புக்கட்டுரை
கிழவனும் கிழவியும் (வலையும் வாழ்வும் – 36)

பேரன் விடுமுறைக்கு வருகிறான் என்ற செய்தி அறிந்ததிலிருந்து சிங்கராயன் மிகவும் பரபரப்பாகவே இருந்தார். மாப்பிள்ளைக்குத் துபாயில் வேலை கிடைத்தபிறகு மகள், பேரன் என்று குடும்பமே அங்கே சென்று செட்டிலாகிவிட்டது. ஒவ்வோர் ஆண்டும் விடுமுறைக்காக அவர்கள் ஊர் வருவதுண்டு.

இப்போ வினோ என் தோளுக்கு மேலே வளர்ந்திருப்பான்ல. அவனுக்கு மாம்பழம்னா ரொம்பப் பிடிக்கும். இராயப்பன் கிட்டச் சொல்லி மாங்கா பறிச்சி பழுக்க வைக்கணும்என்று தன் மனைவி சிறியபுஷ்பத்திடம் வீட்டுத்திண்ணையில் அமர்ந்துகொண்டு கூறிக்கொண்டிருந்தார் சிங்கராயன்.

பிள்ளைங்களுக்கு அங்க அப்படி என்ன சாப்பிடக் கிடைக்குதோ? வீட்டை விட்டு நம்ம ஊர் மாதிரி வெளியே வரமுடியுமா? வினோவிற்குச் சைக்கிள் ஓட்டத் தெரியுமோ... தெரியலையோ? போன வருசமே அவனுக்குச் சொல்லிக் கொடுக்கணும்னு நினைச்சேன். அவனை நம்ம செட்டிக்குளத்துக்குக் கூட்டிட்டுப்போய் நீச்சல் சொல்லிக்கொடுக்கணும்; சில்லிக்குளத்துல தூண்டில் போட வச்சி விரால் மீன்பிடிச்சிக் கொடுக்கணும்; தென்னந் தோப்புக்குக் கூட்டிக்கிட்டுப்போய் இளநீர் வெட்டி கொடுக்கணும்என்று கூறிக்கொண்டே போகையில், சிறியபுஷ்பம் குறுக்கிட்டு, “கொஞ்சம் வம்பளக்காம இருங்க. எப்பப் பாத்தாலும் ஓயாம பேரன் புராணமே பேசிக்கிட்டு இருக்கிறது...” என்று வாய்க்காலில் புரண்டோடும் வெள்ளத்தைக் கரை மண்ணெடுத்து அடைப்பது போல கிழவனின் வாயடைத்தாள் கிழவி.

இதுவே பழைய சிங்கராயன் என்றால் சிறியபுஷ்பத்தின் இந்தப் பேச்சுக்கு இந்நேரத்திற்கு அவள் கன்னத்தைப் பழுக்கவைத்திருப்பார். வயதான பிறகுதான் சிறியபுஷ்பத்தால் இப்படியேனும் அவரிடம் பேசமுடிகிறது.

சிங்கராயனுக்குக் கொஞ்ச நாளாகவே தன் பேரனுக்குத் தன் சிறுவயது விளையாட்டுகளையும் பழக்கவழக்கங்களையும் சொல்லித்தர வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தார். சிறியபுஷ்பமும் தன் பங்கிற்கு அச்சுமுறுக்கு, சுத்துமுறுக்கு, அதிரசம், முந்திரிக்கொத்து என்று பண்டங்கள், பலகாரங்கள் செய்து டின் டப்பாவிலே அடைக்கத் தயாராகிக் கொண்டிருந்தாள்.

திருவிழாவை முன்னிட்டு வீட்டிற்கு முன்பாக வரும் மரியம்மாவின் தேருக்காகக் காத்திருப்பது போல வீட்டிற்கு முன்பாக கிழவனும் கிழவியும் தன் பேரனுக்காகக் காத்திருந்தார்கள்.

கார் ஒன்று வீட்டிற்கு முன்பாக வந்து நின்றது. பேரன் சிங்கராயன் எண்ணியதுபோல தன் உயரத்திற்கு வளர்ந்திருந்தான். சிறிதாக அரும்பு மீசையும் வளர்ந்திருந்தது. புட்டிக் கண்ணாடி, டி-சர்ட், ஜூன்ஸ் என்று வெளிநாட்டுப் பிள்ளைப்போல இருந்தான் அவன்.

ஹாய் தாத்தா! ஹவ்வார் யூ?” என்று ஆங்கிலத்தில் பேசியது சிங்கராயனுக்கு அடிவயிற்றைக் கலக்கியது.

இவனுக்கு இன்னும் தமிழ் ஒழுங்கா பேசத் தெரியலைப்பா. ஸ்கூல்ல கூட பிரெஞ்சுதான் செக்கண்ட் லாங்குவேஜ். நாங்க வீட்லேயும் தமிழ்ல பேசுறதில்லையா... அதான்என்றாள் மகள். குளத்து மீன்கள் தண்ணீர் மேல்பரப்புக்கு வந்து காற்றோடு ஏதோ இரகசியம் பேசிவிட்டு, ‘சட்டென்று உள்ளே செல்வதுபோல தன் தந்தையிடம் இவற்றைச் சொல்லிவிட்டு தன் சூட்கேசைத் தூக்கிக்கொண்டு வீட்டிற்குள் சென்றாள் மகள்.

சிங்கராயனால் தன் பேரனிடம் நினைத்தது போல இம்முறையும் ஒட்டி உறவாட முடியவில்லை. செல்போனில் விளையாடிக் கொண்டிருக்கும் அவனையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருப்பார். அவன் ஏதேதோ பேஸ் டைம், வாட்ஸ்அப், ஸ்நாப் சாட், ஆர்டிபிசியல் இண்டலிஜன்ஸ்... என்றெல்லாம் கூறுவான். ஆனால், இவருக்குத் தன் பேரன் வேற்றுக்கிரகத்திலிருந்து வந்திருக்கிறானோ என்று எண்ணத்தோன்றும்.

சில நேரம் பேரன் தன்னிடம் வந்து ஏதேதோ பேசுவான்; ஆனால், அவருக்கு ஒன்றும் புரியாது. சில நேரம் தன் பேரனிடம் குளம், கோயில், வயல், தோப்பு என்றெல்லாம் பேசவேண்டும் என்று எதிர்பார்ப்பார். ஆனால், அவனுக்கு இதிலெல்லாம் ஆர்வம் இருப்பதாகத் தெரியவில்லை. இம்முறை அவன் அறையிலிருந்து வெளியே வருவதே அரிதாக இருந்தது. வந்தாலும் தன் போனில் ஏதோ செய்துக் கொண்டிருப்பான் அல்லது ஆங்கிலத்தில் யாரிடமோ அரட்டையடித்துக் கொண்டிருப்பான். சில நேரம் அவன் வீட்டில் இருக்கிறானா? என்ற சந்தேகமே வந்துவிடும். தன் மகளிடம், ‘வினோ என்ன செய்கிறான்?’ என்று கேட்டால், ‘அப்பா, அவனுக்கு ஆன்லைன் கிளாஸ் போயிட்டு இருக்குப்பா. அவன டிஸ்டர்ப் பண்ணாதீங்கஎன்று பதில் வரும்.

வினோவின் செய்கை சிங்கராயனுக்குச் சில நேரம், ‘இவர்கள் இதற்காக இவ்வளவு தூரம்  வந்தார்கள்; இங்கு வராமலேயே இருந்திருக்கலாம்என்று நினைக்கத்தோன்றும். ‘அவன் உலகத்திற்குள் நம்மால் நுழையவே முடியாது போலும்என்று அவராக நினைத்துக்கொண்டு தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்வார்.

இருபது நாள்கள் விடுமுறை இமைமூடித் திறக்கும் நேரத்தில் முடிந்துவிட்டது. அப்பா, அம்மாவைப் பார்க்கவேண்டும் என்ற சம்பிரதாயச் சந்திப்பு நிறைவடைந்தது. கொண்டு வந்த சூட்கேசுகள் திறக்கப்படாமலேயே காரில் ஏற்றப்படுகின்றனவோ... என்னவோ?

கொடியசைத்து அனுப்பப்படுகின்ற சிறப்பு இரயிலைப்போல அவர்களுக்கு வழக்கம்போல கையசைத்து வழியனுப்பி வைத்தார்கள் அந்தக் கிழவனும் கிழவியும். குளம், வயல், தோப்பு, மீன், மாம்பழம் என்ற சிங்கராயனின் திட்டங்கள் ஒன்றும் இம்முறையும் ஒத்துவரவில்லை. சுத்துமுறுக்கும் அச்சுமுறுக்கும் வழக்கம்போல டப்பாவிலேயே அடைபட்டுக்கிடந்தது.

சிங்கராயனும் சிறியபுஷ்பமும் வீட்டுத் திண்ணையில் அமர்ந்துகொண்டு அடுத்த ஆண்டு வரவிருக்கும் தன் மகளுக்காகவும் தன் பேரனுக்காகவும் இப்போதே திட்டமிடத் தொடங்கிவிட்டனர்.  

நம்மைச் சுற்றி நடக்கும் விசயங்களில் நமக்கு ஏதாவது தெரியாமல் போய்விடுமோ? அல்லது நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளில் நம் பங்கு இல்லாமல் போய்விடுமோ? என நமக்குள் ஏற்படும் ஒருவித பய உணர்வுதான்போமோ - FOMO (Fear of Missing Out) எனலாம். 2004-இல் ஆக்ஸ்போர்டு அகராதியில்தான் முதல்முறையாக இவ்வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களின் தாக்கத்தினால் இத்தகைய மனப்பிறழ்வு அதிகமாகிக் கொண்டிருக்கின்றன என்கின்றனர் மனநல மருத்துவர்கள்.

அண்மையில் சமூக ஊடகங்களில்டிரெண்டாகும்காரியங்கள், சுவாரசியமான செய்திகள் அல்லது வைரல் காணொளிகளைத் தவறவிடாமல் இருக்க ஆன்லைன் தளங்களைத் தொடர்ந்து சரிபார்க்க வேண்டிய அவசியத்தை இது உணர்த்துகின்றது.

எடுத்துக்காட்டாக, தன் நண்பன் ஒரு சுற்றுலாதலத்திற்குச் சென்றுவிட்டு அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களைத் தன் சமூக ஊடகப் பக்கங்களில் பகிர்ந்திருந்தால், தானும் அந்த இடத்திற்குப் போயிருக்கலாமே என்று எண்ணுவது மற்றும் போக முடியாமல் போனதை எண்ணி மனவருத்தம் அடைவதை போமோஅறிகுறி எனலாம்.

போமோபோன்ற ஆபத்துகளிலிருந்து நம்மை மீட்டெடுக்கச் சில வழிமுறைகளை நாம் கையாள வேண்டும். முதலாவதாக, சமூக ஊடகங்களை அளவிற்கு அதிகமாகப் பயன்படுத்துவதிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ளவேண்டும். நமக்குக் கிடைக்காத அனுபவங்களை எண்ணிப் புலம்புவதைக் கைவிட்டுவிட்டு, நமக்குக் கிடைத்த வேறு தனிப்பட்ட நல்ல அனுபவங்களை எண்ணி மன நிறைவடையவேண்டும்.

பிறருக்கு எது முக்கியமும் முதன்மையுமோ அது நமக்கும் முக்கியமாகவும் முதன்மையாகவும் இருக்க வேண்டிய அவசியமில்லை. நமது முதன்மைகளை நாமே வடிவமைத்துக்கொள்வோம். சில வேளைகளில் சிலவற்றைத் தவறவிடுவதும் கூட நம் வாழ்க்கைக்கு நல்லது பயக்கும் என்ற உணர்வுநிலையைப் பெறுவோம். இதனைஜோமோ - JOMO (Joy of Missing Out) என்கின்றனர்.           

(தொடரும்)