news
சிறப்புக்கட்டுரை
‘ஒற்றை’ அரசியலும் ஒருமைப்பாடும்

இந்தக் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கின்ற இவ்வேளை, எதிரே இருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியில், தில்லி நாடாளுமன்ற அமர்வு கண்முன்னே காட்சி தருகின்றது.

நாம் வாழும் காலத்தில், இந்திய அரசமைப்புச் சட்டம் உருவாக்கம் பற்றிய விவாதம் (Debute) நடந்த போதும், அரசமைப்புச் சட்ட வரைவு நீண்ட பெரிய விவாதங்களுக்குப் பின் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட போதும், வானொலி மூலம் கேட்டுப் பரவசம் கொண்டோர் பகிர்ந்ததைக் கேட்டு மகிழ்ந்ததுண்டு.

இன்று உலக நிகழ்வுகள் தொலைக்காட்சி மூலம் வீட்டின் அறைகளை ஆக்கிரமித்துள்ள நிலையில், அரசமைப்புச் சட்ட வரைவு ஏற்றுக்கொள்ளப்பட்டபோது மகிழ்வுள்ளதாகக் கூறியவர்கள் இன்று இல்லை; ஆனால், எந்த அரசமைப்புச் சட்டம் உலகின் சனநாயக நாடுகள் தோற்றுவித்த அரசமைப்புச் சட்டங்களுள் மேன்மைமிக்கது என்று பெருமைப்பட்டுக் கொண்டோமோ, அந்த அரசமைப்புச் சட்டம் நம் கண்முன்னே பெரும்பான்மைவாத அரசு ஒன்றினால் சிதைக்கப்படுவதைக் கண்முன்னே காணும் கெடுவாய்ப்பு நமக்குக் கிட்டியுள்ளது.

ஏனிந்த அவசரம்?

தமிழ்நாடு, வங்காளத்தில் வேகமெடுத்துள்ள தேர்தல் களேபரங்களூடே, இவ்வளவு வேகமாகத் தொகுதி வரையறை மசோதா அறிமுகப்படுத்த வேண்டுவதன் அவசியம் என்ன?

ஆர்.எஸ்.எஸ். எனும் மூல அமைப்பு முன்னெடுத்த கொள்கைகள்சித்தாந்தங்கள் பல இந்தியத் தேசியத் தலைவர்களின் சித்தாந்தத் திற்கு எதிரானவை. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூலக்கொள்கைகளை இந்திய தேசிய தலைவர்கள் சாத்தியமற்றவை என்று மட்டுமில்லாமல், அரசியல் அறத்திற்கும், மாந்தர்தம் சமாதான வாழ்விற்கும் எதிரானதென்றே கருதினர். மக்களை மதவாத ரீதியில் பிரித்து, மத அடிப்படைவாத அரசொன்றினை நிறுவும் முயற்சி சனநாயக, சமயச் சார்பற்ற அரசின் கொள்கைகளால் சிதைந்துபோகும் என்று நம்பினர். நம்பிக்கையில் தவறில்லை; ஆனால், நம்பிக்கையில் நடைமுறை சாத்தியம் இல்லையே!

இன்று, ஒரு மதவாதக் கட்சி தானே என்று ஒதுக்கப்பட்ட ஒரு கட்சி, கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேல் இந்தியாவை ஆண்டு வருகின்றது. இப்பிரிவினை அமைப்புப் பேசிய கொள்கைகள் மற்றும் திட்டங்கள் அனைத்துமே சாத்தியமற்றவை என்று உறுதியாக நம்பிவந்த நிலையில், பாரதிய சனதா கட்சிக்கும், அதன் பொறுப்பிலிருக்கும் அரசிற்கும் எல்லாம் சாத்தியமே. எல்லாமே சாத்தியமாயிற்று. இன்றுவரை இவர்களால் சாத்தியமாகாதது எதுவுமில்லை.

இந்து தேசமும் சாத்தியமே!

இன்றையதி இந்துஆங்கில நாளிதழில் (16.01.2026) ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது. மத்தியப் பிரதேசத்தைச் சார்ந்த இந்து மதக்குரு திரேந்திர கிருட்டிண சாஸ்திரி. இவர் நடத்தும் அமைப்பின் பெயர்பகேஷ்வர் டாம் (Bageshwar Dham). இந்த மதரீதியான அமைப்பிற்கு இந்திய உள்துறை அமைப்பு வெளிநாட்டு நிதி உதவியைப் (FCRA) பெறுவதற்கான பதிவை (registration) வழங்கியுள்ளதாம்!

இந்த மதக்குருவின் முக்கியக் கொள்கை என்ன தெரியுமா? இவர் இந்து இராஷ்டிராவை நிர்ணயிப்பதில் உறுதியாக உள்ளாராம்! இந்தியாவில் தேச விரோதச் செயல்களில் ஈடுபட்டிருப்பதாகக் குற்றம்சாட்டி, மக்களுக்காகச் செயல்படும் நியாயமான அமைப்புகளின் உரிமங்கள் பறிக்கப்பட்ட நிலையில், இந்து இராஷ்டிரத்தைக் கட்டமைக்கவிருக்கும் ஒரு மதத் தீவிரவாத அமைப்பிற்கு இந்திய அரசு அந்நிய நிதிபெற அனுமதிக்கிறது. இது என்ன வேடிக்கை! இவ்வளவு அப்பட்டமாகத் தன் உள்ளடக்கத்தை வெளிக்காட்டி வரும் இந்துத்துவர்களின் இறுதி இலக்கு எட்டும் தூரத்தில்தான் உள்ளது.

கொள்கைத் தெளிவு எப்போது?

ஒன்றிய பா... அரசின் மாநிலச் சுயாட்சி பற்றிய நடைமுறைகளை, கூட்டாட்சியை மதிக்காமையை, நிதிப் பங்கீட்டில் காட்டப்பெறும் பாகுபாட்டை... இன்னும் பல நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து சுட்டிக்காட்டி வருவதையும் நாம் தொடர்ந்து கண்டு வருகிறோம். ஒன்றிய அரசிற்கு எதிரான பரப்புரையைத் தொடர்ந்து மேற்கொள்வதையும் பாக்கிறோம். தமிழ்நாடு அரசு முன்னெடுக்கும் இந்த எதிர்ப்பை நாம் மதிக்கிறோம்.

ஒன்றிய அரசு திட்டமிட்ட வலுவான கொள்கையுடையது. அவ்வரசு முன்னெடுக்கும் ஒவ்வொரு திட்டத்திலும் ஏற்கெனவே வகுக்கப்பட்ட வகுப்புவாதக் கருத்தியலின் சாயல் இருக்கும் என்பதை மறந்துவிடக்கூடாது. எடுத்துக்காட்டாக, ஒன்றிய அரசின் மாநில அரசுகள்மீது காட்டப்பெறும் பாகுபாட்டரசியலின் முழுமையான அரசியலை நாம் புரிந்துகொள்ள முனையவேண்டும். இன்றைய ஒன்றிய அரசின் அடிப்படையே சனநாயக மறுப்பு என்பதுதான்! சனநாயகம் குடிமக்களின் மாண்பை மதிப்பது, அதிகாரக் குவியலை மறுப்பது, அதிகாரப் பரவலை ஊக்குவிப்பது. இந்துத்துவம்ஒற்றையை நம்புவது, ஓர்மை மூலம் ஒருமைப்பாட்டைத் திணித்து ஒற்றுமையை உருவாக்க நினைப்பது. இந்துத்துவத்தின் ஒற்றை அரசியலில் மொழிவாரி மாநிலங்கள் என்பதோ, மொழிவழி மாநிலங்கள் (State) உருவானது என்பதோ இவர்களின் கொள்கைத் திட்டத்தில் இல்லை.

பாரதிய சனதாவின் மூத்த தலைவர்களுள் ஒருவரான எல்.கே. அத்வானி, ‘இந்த நாட்டின் அதிகாரம் குடியரசுத் தலைவரின் தலைமையில் அமையவேண்டும்; அமெரிக்க ஐக்கிய நாட்டினைப் போல் இந்தியக் குடியரசுத் தலைவர் மக்களால் தெரிவு செய்யப்படவேண்டும்என்று ஓயாமல் பரப்புரை செய்து வந்தார். ஒரு தலைவரை, குடியரசுத் தலைவரை முன்மொழிதலின் அரசியல் என்ன? ‘ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே சமயம்என்ற முழக்கத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்தியாவில் குடியரசுத் தலைவராகத் தெரிவு செய்யப்படுபவர் யாரால், எந்தக் கூட்டத்தால் தெரிவு செய்யப்பட்டவராக இருப்பார்?

ஏற்கெனவே கூறியது போன்று இந்துத்துவம் இந்தியாவைப் பல மாநிலங்களாகப் பிரித்தமையையும், அதுவும் மாநிலங்கள் மொழிவழி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டமையையும் ஒற்றை இந்தியக் கொள்கைக்கு எதிரானது என்றும், இந்திய ஒருமைக்கு எதிரான நடவடிக்கை என்றும், இப்பிரிவுதான் இந்தியாவின் பல பகுதிகளில் பிரிவினை முழக்கத்திற்கு வழிவகுத்தது எனவும் பேசி வந்தனர் என்பதை இவர்களின் கொள்கை ஏடுகள் மூலம் அறியமுடியும்.

இந்தியக் கூட்டாட்சி முறையை மாற்றி ஒற்றை மய அரசை (Unitary type of govt) உருவாக்கத் துணிச்சலோடு முடிவெடுக்க வேண்டும். இந்த நாடு ஒன்று; இந்நாட்டின் மக்கள் ஒன்று! எனவே, நமக்கு வேண்டுவது ஒரே வகையான அரசாங்கமே. நிர்வாக வசதிக்காக இந்நாட்டினைப் பல்வேறு மண்டலங்களாகத் (Zone) தேவையாயின் பிரித்துக்கொள்ளலாம். இம்மண்டலங்கள் குறைந்த அளவுகளில் அல்லது எண்ணிக்கையிலும் அமையலாம். இதற்கேற்ப அரசமைப்பில் மாற்றம் கொண்டு வரலாம்.”

மாநில அளவிலான நிர்வாக முறைகள் அல்லது பகிர்வுகள் சனநாயக நடைமுறைக்கு உகந்தது என்று சிலர் வாதிடுவது எனக்குப் புரியவில்லை. சனநாயகத்திற்கும், பல்வேறு சட்டமன்றங்களுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை. மத்தியில் அமையும் ஒரே அதிகார மையம் (Legislature) மட்டுமே போதும். பல மொழிகளைக் கொண்ட ஒரு மாநிலம், ஒரே மொழியைக் கொண்ட பல மாநிலங்கள் அமைவதில் தவறில்லை.

எஸ். கோல்வாக்கர், ‘Punch of thought பக். 250, 251.

இன்று இந்திய அரசு முன்னெடுக்கும் தொகுதி வரையறையை மாநிலச் சுயாட்சி என்ற அடிப்படையிலும், தென்னகம் - வட இந்தியா என்ற அடிப்படையிலும் பார்க்கின்ற பார்வையில் உண்மை இருக்கலாம். ஆனால், இன்றைய ஒன்றிய அரசினை வழிநடத்தும்ஒற்றைஎனும் சனநாயக அவமதிப்புக் கொள்கையை மக்களிடம் கொண்டு செல்லவேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.

இந்தியாவின் பெருவாரி மாநிலங்களின் ஆட்சி அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் இன்றைய ஆளும் அரசு, வெறும் எண்ணிக்கையால் மட்டும் பெரும்பான்மை (Majority) அல்ல; கருத்தியல் ரீதியாகவும்  ஒருவகையால் மழுங்கடிக்கப்பட்டவர்கள். இவர்கள் இக்கட்சியைச் சார்ந்த தீவிர உறுப்பினர்கள் மட்டுமல்லர்; அதிகாரப் பசியில் தம்மை இழந்தோரும் உள்ளனர்.

தமிழ்நாடு, தமிழர் மாண்பு, கூட்டாட்சி மறுப்பு என்ற பெயரில் தொகுதி வரையறைக்கு எதிராகப் பெரிய போராட்டம் ஒன்றினை தமிழ்நாடு முன்னெடுத்து வருகையில், இதனை ஒரு தேர்தல் பிரச்சினையாக்கும் முயற்சியில் மேனாள் தமிழ்நாட்டு முதல்வர், இந்திய உள்துறை அமைச்சரிடம் பேசியதாகவும், தமிழ்நாட்டிற்கு எந்தப் பாதிப்பும் இல்லையெனவும் கூறியதாகப் பேசி நிறைவு கொள்ளும் மனிதர்களை என்னவென்பது?

சரியான தருணம்

கண்ணில் தெரியும் இந்து தேசம் எப்படியிருக்கும்? என்பதற்கான அடையாளம் இன்றைய ஒன்றிய அரசின் துரித நடவடிக்கை.

தமிழ்நாடு காட்டும் எதிர்ப்பு, பாராட்டப் பெறவேண்டிய ஒன்று. குடிமக்கள் அனைவரும் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டிய ஒன்று. இப்பிரச்சினையை ஒரு தேர்தல்காலப் பிரச்சினையாக எடுத்துக்கொள்ளாமல், இந்துத்துவர்கள் முன்னெடுக்கும் இந்து தேசக் கட்டமைப்புக்கான தொடக்கப்பணி என்பதை நினைவில் கொள்வோம்.

இந்துத்துவர்களும், இந்துத்துவக் கருத்தியலாளரும் தேவைக்கேற்ப பயப்படுவதுபோலக் காட்டிக்கொள்வர் அல்லது தற்காலிகமாகப் பின்வாங்குவர். ஆனால், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிறுவுநர் டாக்டர் ஹெட்கேவரும், தொடர்ந்து வந்த குருஜி கோல்வாக்கரும் சிந்தையில் மொழிந்த எதனையும் இவர்தம் கொள்கையைக் காக்க உருவான இந்திய ஒன்றிய அரசும், அதன் ஏவல் நிறுவனங்களும் வழுவாமல் காத்து நிற்கும் என்பதே உண்மை.

news
சிறப்புக்கட்டுரை
கூண்டுக்கிளி (வலையும் வாழ்வும் – 43)

அந்தி சாயும் பொழுதில் வெண்மேகத்திற்குள் ஒளிந்து கொள்ளும் சிவப்பேறிய கதிரவன் போலப் பிரமிக்கத்தக்கதாய் இருந்தது சாந்தா பாட்டியின் பட்டையடிக்கப்பட்டிருந்த நெற்றியில் சிறிது கலைந்திருக்கும் சிவப்புநிற குங்குமப் பொட்டைப் பார்க்கும்போது.

சாந்தா பாட்டி படிப்பறிவில்லாதவள். அவளுக்கு ஊர் சென்னை-கரிமேடு குப்பம் என்றாலும் அவளின் பேச்சுத்திறனும் சாதுரியமான பதிலும் பலருக்கும் வியப்பாகவே இருக்கும். ‘பாட்டி நீயெல்லாம் அமெரிக்காவில் பிறக்கவேண்டிய ஆளாக்கும்; தெரியாம இங்க வந்து பிறந்திட்டியேஎன்று எட்டாம் வகுப்பு படிக்கும் சாந்தா பாட்டியின் பேரன் சிவக்குமார் எப்போதும் அவளைக் கிண்டலடிப்பான்.

சாந்தா பாட்டி எப்போதும் வீட்டிலிருப்பதில்லை. காலையிலேயே எழுந்து விபூதி, குங்குமம் சாத்திக்கொண்டு சுவரில் தொங்கிக்கொண்டிருக்கும் மஞ்சப் பையையும் கூண்டுக்கிளியையும் எடுத்துக் கொண்டு கிளம்பி விடுவாள்.

கிளி ஜோசியம் பார்ப்பது சாந்தா பாட்டி குடும்பத்தின் பாரம்பரியக் குடும்பத்தொழில். “டேய், நான் செத்துப்போயிட்டேனா நம்ம பாரம்பரியமும் செத்துப் போயிடும். நீயாவது கொஞ்சம் இத கத்துக்கடேஎன்று எப்போதும் பேரன் சிவக்குமாரிடம் சொல்லிக் கொண்டே இருப்பாள் சாந்தா.

சிவக்குமார் விளையாட்டுப் பையன். அவனுக்குத் தெரு கிரிக்கெட்டும், வீதிக்கடைப் பரோட்டாவும்தான் முக்கியம். குறும்புத்தனமாக எப்போதும் சாந்தா பாட்டியை வம்பிழுத்துக்கொண்டே இருப்பான்.

சிவக்குமாரைக் குற்றம் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ‘காலம் கெட்டுப்போச்சு; அதான் நீயும் கெட்டுக்கிடக்கஎன்று சாந்தா பாட்டி பேரனை வையாது, அப்படியே கடந்துபோய்விடுவாள்.

சென்னை மெரினா கடற்கரையோரம் வரிசையாக அமர்ந்து கூறுவைத்து மீன் விற்கும் பெண்களைப்போல கூண்டுக்கிளி வைத்துக்கொண்டு எதிர்காலத்தை விற்றுக்கொண்டிருந்த சோசியக்காரர்களோடு சேர்ந்து எதிர்காலத்தை விற்றுக்கொண்டிருந்தாள் சாந்தா பாட்டி.

அன்று என்னவோ வழக்கம்போலக் கூட்டம் கூடவில்லை. மெரினா பீச் அலைகளும் சோம்பல் முறித்துக்கொண்டிருந்தன. எதிர்காலம் பற்றிய வியாபாரம் போணியாகவில்லை. கூண்டுக்கிளிகளும் தோகையினை விரித்து வைத்துக்கொண்டு கூந்தல் காய்ந்துகொண்டிருந்தன.

வெள்ளைக்காரன் ஒருவன் கூண்டுக்கிளியையும், கூன்விழுந்த பாட்டிகளையும் பார்த்து ஆச்சரியப்பட்டுக் கொண்டு சாந்தா பாட்டிக்கு முன்பாக வந்து உட்கார்ந்து கொண்டான்.

வாட் இஸ் திஸ்?” என்று கேட்டான்.

ஜோசியம்என்றாள்.

ஜீசஸ்என்றான் அவன்.

ஜீசஸ் நோ... ஜோசியம்என்றாள் சாந்தா பாட்டி.

ஏதேதோ கையிலும் வாயிலும் சொல்லிப் பார்த்தாள் பாட்டி. அந்த வெள்ளைக்காரனுக்கு ஒன்றும் புரியவில்லை. சிறிது நேரப் போராட்டத்திற்குப் பிறகு அலையில் அடித்துவரப்பட்ட ஒற்றைக்கால் செருப்புபோல பேரன் சிவக்குமார் அங்கு வந்து சேர்ந்தான். விடுமுறையென்பதால் பாட்டிக்கு மதிய உணவு கொண்டு வந்திருந்தான்சிவக்குமாருக்குத் தெரிந்திருந்த கொஞ்சநஞ்ச இங்கிலீஸ் சாந்தா பாட்டிக்கு உதவியாக இருந்தது. பல நேரக் காத்திருப்பிற்குப் பிறகு கூண்டுக்கிளி முதன்முறையாகத் திருமணமாகி வீட்டைவிட்டு வெளியே வரும் புதுமணப் பெண்ணைப் போல நாணத்தோடு வெளியே வந்தது. அதன் முன் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்ற அட்டைகளில் ஒன்றை எடுத்து சாந்தா பாட்டியின் பக்கம் வீசி விட்டு, அதே நாணத்தோடும் நளினத்தோடும் கூடு புகுந்தது.

பெரும் ஆவலோடு வெள்ளைக்காரன் விழிப் பிதுங்கிப் பார்த்துக்கொண்டிருந்தான். அட்டைக்குள் இருக்கும் படத்தை சாந்தா பாட்டி இலாவகமாகக் குங்குமச் சிமிழைத் திறப்பதுபோலத் திறந்துகாட்டினாள். உள்ளே ஒன்றுமில்லாமல் வெறுமையாக இருந்தது. சாந்தா பாட்டி அட்டையைக் குலுக்கி குலுக்கிப் பார்த்தாள். ஆனாலும், அவள் எதிர்பார்த்த படம் அந்த அட்டை கூட்டிற்குள் இல்லை.

சாந்தா பாட்டியால் ஓரளவிற்கு என்ன நடந்திருக்கும் என்பதை யூகிக்க முடிந்தது. அருகில் அமர்ந்திருந்த தன் பேரன் சிவக்குமாரை வெறித்துப் பார்த்தாள். அவன் ஒன்றும் தெரியாததுபோலக் குறும்புத்தனமாக அலைகளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

சாந்தா பாட்டியின் சிவப்புப் பொட்டு வியர்வையில் நனைந்து கலைந்திருந்தது. அவளுடைய பார்வையிலும் கொஞ்சம் கூன் விழுந்திருந்தது. வெள்ளைக்காரனுக்கு எதிர்காலத்தைச் சொல்ல விரும்பியவள் வெற்று அட்டையைக் கண்டு திகைத்துப்போய் இருந்தாள். ஆனாலும், ஏதாவது சொல்லவேண்டும் என்பது சோதிடத்தின் சம்பிரதாயமாம்!

ஒரு பெரும் மூச்சை இழுத்துவிட்ட சாந்தா பாட்டி வெள்ளைக்காரனின் பழுப்பு நிறக் கண்களை உற்றுப்பார்த்துச் சொன்னாள்:

உங்க கலரைப்போல உங்க மனசும் வெள்ள சாமி. வெற்று அட்டை உங்க வாழ்க்கைய சொல்லுது சாமி. உங்களுக்கென்று யாரும் இல்ல சாமி. நீங்க தனிக்கட்ட சாமி. கொஞ்ச காலம் நீங்க ஒவ்வோர் இடமா சுத்திக்கிட்டே இருப்பீங்க சாமி. இது கொஞ்ச காலம்தான்; அதுக்கப்புறம் நீங்க மகாராஜனா வாழுவீங்கஎன்று சொல்லச் சொல்ல பேரன் சிவக்குமார் தனக்குத் தெரிந்த இங்கிலீசில் வெள்ளைக்காரனுக்கு மொழிபெயர்த்துச் சொல்லிக்கொண்டிருந்தான்

வெள்ளைக்காரன் மிரண்டு போனான். ‘எப்படி இந்தப் பாட்டிக்கு இதெல்லாம் தெரிந்தது?’ என்பதை அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை.

தன் பர்சிலிருந்து ஐந்நூறு ரூபாய் தாள் ஒன்றை எடுத்துக்கொடுத்துவிட்டு மனநிறைவாகச் சென்றான் அந்த வெள்ளைக்காரன்.

சாந்தா பாட்டி தனக்குக் கிடைத்த ஐந்நூறு ரூபாயைக் கண்களில் ஒற்றிக்கொண்டாள். தன் பேரனைஅட நாயே! எத்தனை வாட்டி சொல்லிருக்கேன். அந்த இயேசு நாதர் படத்தை அந்த அட்டையில இருந்து எடுக்காதணுஎன்று சொல்லிக் கொண்டே தன் கையில் இருந்த கட்டையால் அவன் தலையில் ஓங்கி ஓர் அடி வைத்தாள் சாந்தா பாட்டி. வலியைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் பாட்டியைத் திட்டிக்கொண்டே அந்த இடத்தை விட்டு ஓடி மறைந்தான் சிவக்குமார்.

கிறிஸ்மசுக்காக அந்த இயேசுநாதர் படத்திற்குப் பின்னால்ஹாப்பி கிறிஸ்மஸ்என்று கலர் பென்சிலால் எழுதி தன் வகுப்புத் தோழன் பிரான்சிஸ்சுக்கு கொடுத்திருந்தது அவனுக்கு மட்டும்தான் தெரியும்.

இந்தியாவில் சுமார் 83% மக்கள் நல்ல நேரத்தைப் பார்த்த பிறகே ஒரு நல்ல காரியத்தைச் செய்கின்றனர். ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த நல்ல நேரம் பார்க்கும் முறை அல்லது சோதிடம் பார்க்கும் முறை மாறிக்கொண்டே வருகின்றது. அதன் அடிப்படையில் இன்றைய வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகில் இணைய சோதிடமும் சமூக ஊடகச் சோதிடர்களும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றனர். ‘Global Astrology Market Report - 2023’ என்னும் ஆய்வின்படி 2021 - ஆம் ஆண்டு வரையில் இணையவழி சோதிடம் 12.8 மில்லியன் டாலர் சந்தை மதிப்பை எட்டியுள்ளது என்றும், இதுவே 2031-ஆம் ஆண்டிற்குள் 22.8 பில்லியன் டாலர் சந்தை மதிப்பை எட்டும் என்கிறது.

அஸ்ட்றோ டாக், அஸ்ட்டோ குரு, அஸ்ட்ரோ யோகி, அஸ்ட்றோ சேஜ், இன்ஸ்டா அஸ்ட்றோ போன்ற சமூக ஊடகப் பக்கங்கள் இன்று இளையோரிடம் கூட மிகப் பிரபலமாக உள்ளன. டிஜிட்டல் உலகில் சோதிடம் ஒரு வணிகமாக மாற்றப்படுவதால் பல்வேறு மோசடிகள் நிகழ்வதோடு, பயனர்களின் தனிப்பட்ட தரவுகளும் களவாடப்படுகின்றன. பயனர்களைக் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள சோதிடச் செயலிகளின் நவீன வடிவமைப்பு இளையோரை மட்டுமல்லாமல், குழந்தைகளையும் வெகுவாக ஈர்க்கின்றன.

செயற்கை நுண்ணறிவு மற்றும் அல்காரிதப் புரிதல்களோடு குறிப்பிட்ட பயனர்களுக்கு ஏற்ப வழங்கப்படும் அறிவுரைகளும், எதிர்கால முன்னறிவிப்புகளும் தொழில்நுட்ப உலகில் வியப்பை ஏற்படுத்தினாலும், சோதிடச் சேவைகளின் உண்மைத்தன்மை கேள்விக்குட்படுத்தப்படுவது அவசியம்.

news
சிறப்புக்கட்டுரை
பென்னிக்ஸ் - ஜெயராஜ் கொலைக்கு நீதி! ‘வானளாவிய அதிகாரம்’ வழிக்கு வந்தது!

திருவாளர்கள் பென்னிக்ஸ், ஜெயராஜ் வழக்கில் கடந்த 06.04.2026 அன்று வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பு தமிழ்நாடு காவல்துறையின் அடக்குமுறையின் கோரத்தையும், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி எந்த எல்லைக்கும் போக முடியும் என்ற குரூர / மனப்பிறழ்வான எண்ணத்தையும் அடித்து நொறுக்கித் தகுந்த பாடம் புகட்டியுள்ளது.

எங்கிருந்து தொடங்குவது?

பென்னிக்ஸ் - ஜெயராஜ் கடை நடத்திய இடத்தில் அவர்களுக்கும் காவல்துறையினருக்கும் நடந்த வாக்குவாதத்தில் இருந்து தொடங்குவதா? அல்லது அவர்களது கொடூர மரணத்திலிருந்து தொடங்குவதா? அல்லது இதையெல்லாம் பெரிதுபடுத்தாத அரசியல் தலைமை மற்றும் அதிகாரிகளின் கையாலாகாத்தனத்திலிருந்து தொடங்குவதா? என்றால்... சற்றே குழப்பம் ஏற்படுகிறது. இங்கே சற்றுத் தடிமனான வார்த்தைகளை நான் பயன்படுத்துவதைத்  தவிர்க்க முடியவில்லை. ஏனென்றால், அத்தகைய கொலை பாதகச்செயலைச் சாதாரண வார்த்தைகளால் விவரித்தால் அது சரிவராது. என்னைப் பொறுத்தருள்க!

மனிதர்களின் சமூக நிகழ்வுகள் பற்றிய நினைவு பொதுவாகச் சிறிது காலமே என்பதை ஏற்றுக்கொண்டாலும், நீதி நின்று நிலைக்கும் என்பதைத்தான் ஏறக்குறைய ஆறு வருடங்களுக்குப் பின் கிடைத்த நீதிபதி முத்துக் குமரனின் நீதிமன்றத் தீர்ப்பானது நமக்கு நிரூபித்துள்ளது.

2020-ஆம் ஆண்டில் கோவிட்-19 பேரிடர் பெருந்தொற்றால் உலகமே சின்னாபின்னமாகிச் செய்வதறியாமல் தவித்துக் கொண்டிருந்த வேளையில், கடையை மூடவேண்டிய விதிமுறைகளைச் சரியாகக் கடைப்பிடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டோடு இவர்களுடன் ஆரம்பித்த இந்தச் சண்டையானது ஒரு வன்முறை வெறியாட்டமாகி, கொடூரமான முறையில் அவர்கள் அடித்துக் கொல்லப்பட்டதும், மதுபாட்டில்கள் உடலில் சொருகப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்ட இரத்தக் காட்டேரித்தனமான இந்தக் காவல்நிலையக் கொலையானது இப்பொழுது நினைத்துப் பார்த்தாலும் நம்மால் செரிக்க முடியாத ஒன்று.

மேற்கூறியவை நாகரிகம் கருதி சொல்லப்பட்ட ஒரு சுருக்கமான பதிவு மட்டுமே. குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்ட பத்துப் பேர்களில் ஒருவர் இறந்து போய்விட, மற்ற ஒன்பது பேருக்கும் இரட்டை மரண தண்டனை தீர்ப்பும், மூன்றரைக் கோடிக்கு நெருங்கிய குற்றவாளிகளின் ஒட்டுமொத்த அபராதத் தொகையும், 21 ஆண்டுகள் தொடங்கி 8 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும் இந்திய வரலாற்றிலேயே நீதிமன்றத் தீர்ப்புக்கென ஒரு புதிய அத்தியாயத்தைப் பிறப்பித்துள்ளது.

இது ஒருபுறமிருக்க, தமிழ்நாட்டில் காவல்துறையின் மதிப்பினை முழுக்க முழுக்கக் குறைத்து மதிப்பிட முடியாது என்பதையும் இவ்வேளையில்  நினைவிற்கொள்ளவேண்டும். அவர்களது தொடர்பணி மட்டுமே சமூகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்ட முடியும் என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஒருபுறம், வேலைப்பளுவின் அழுத்தம் அவர்களைத் தொடர்ந்து வாட்டிக் கொண்டிருக்க, குடும்ப உறவுகளுக்குச் சரியாக நேரம் ஒதுக்க முடியாமல் எந்நேரமும் கடமையாற்றக் கூடிய சூழல்கள் அவ்வப்போது பெருகிக்கொண்டிருக்க, இதைக் குறித்த ஒரு சமூகநல வழக்கு (Pil) தொடரப்பட்டு, நீதிமன்றம் காவல்துறைக்கான சிறப்பு வழிகாட்டி நெறிமுறைகளை வகுத்துத் தந்து அதை அனைத்துக் காவல்நிலையங்களிலும் அறிவிக்கையாக ஒட்டப்பட்டு மக்கள் பார்வையில் வைக்கப்பட வேண்டும் என்பதும் அவசியமானது.

அந்த அறிவிக்கையில் குற்றவாளியெனக் கருதப்படும் ஒவ்வொரு குடிமகனுக்குமான உரிமைகள் என்னென்ன என்பதையும், அதை மீறும் வேளையில் காவல்துறையின் மேல் நடவடிக்கை எடுக்க முடியும் என்பது பற்றிய சட்டவிதிகளையும் எழுதி வைக்கும் வேளையில், காவல்துறையினரின் எதேச்சதிகாரப் போக்கு கட்டுக்குள் கொண்டுவரப்படும். ஒவ்வொரு மருத்துவமனையிலும் நோயாளர்களுக்கான உரிமைகளும், மருத்துவமனை மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கான பாதுகாப்பும் தவறாமல் அறிவிக்கையாகப் பொருத்தப்பட்டுள்ளதை இதற்கான எடுத்துக்காட்டாகக் கொள்வோம்.

மேற்கூறியவை எல்லாம் மிகவும் அவசியமானவை என்பதை வளரும் சமூகம் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளும் வேளையில், காவல்துறையினருக்கான தமிழ்நாட்டின் மொத்த நிதிநிலை (Budget) 2025-26 என்பது 12,714 கோடி எனத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் இரண்டு விழுக்காட்டிற்கும் குறைவாகவே கடந்த ஆண்டுகளில் அவர்களது பயிற்சிக்கென ஒதுக்கப்பட்டுள்ளது எனும்போது, அவர்களது பயிற்சிகளை இன்னும் ஆழப்படுத்தவும், அவர்களுக்கான மென்திறன் பயிற்சி (Soft skills training) மற்றும் உணர்ச்சி நுண்ணறிவு (Emotional Intelligence) வளப்படுத்தவும் மிக மிக அவசியம் என இந்த வேளையில் நாம் கருத வேண்டியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் வண்டலூரில் அமைந்துள்ள காவல்துறை பயிற்சிக் கல்வியகத்தில் உளவியல் தொடர்பான மேற்குறிப்பிட்ட பயிற்சிகளைக் கொடுக்கக்கூடிய வாய்ப்பைப் பெற்றவன் என்ற முறையில், குறிப்பிட்ட இரண்டு பயிற்சிகளையும் பாசறை தொடர் பயிற்சியாகவும், பணியிடைப் பயிற்சியாகவும் காவல்துறையினருக்குத் தருவதை தமிழ்நாடு கருத்தில்கொள்ள வேண்டுமென முன்வைக்கிறேன்.

தகவல் தொடர்புத் திறன் (Communication Skills)

ஒருவர் எப்படிப் பேசவேண்டும்? எதைப் பேசக்கூடாது? எதைத் தவிர்க்கவேண்டும்? தனி நபரோடும் குழுக்களோடும், சமூகத்தின் பல்வேறு அமைப்புகளோடும், ஏன் அதிகாரிகளோடும் கூட எப்படிக் கருத்துகளை உரையாடலில் முன்வைக்க வேண்டும்? என்றும், உரையாடல் வழி தீர்வுகளை நோக்கி நகரும் நற்பயிற்சியைப் பெற்றுகொள்வது இதில் மிகவும் தலையானது என்பது கேட்பார்திறன் (listening skills).

உணர்ச்சி நுண்ணறிவு (Emotional Intelligence)

இதில் தன்மேலாண்மை (Self management), தன் விழிப்புணர்வு (self awareness), சமூக விழிப்புணர்வு (Social Awareness) மற்றும் உறவு மேலாண்மை (Relationship Management) வலியுறுத்தப்படவேண்டும்மேற்குறிப்பிட்ட இரண்டு பயிற்சிகள் மட்டுமே எல்லாப் பிரச்சினைகளுக்குமான தீர்வு என்று இங்கே முன்வைக்க வரவில்லை. ஒருவரின் குடும்ப வளர்ப்பு, இளமைக்காலம், குழந்தைப்பருவ பெற்றோர் / காப்பாளர்களின் மதிப்பீடுகள், சந்திக்கக்கூடிய பேரிழப்புகள், குடும்ப வன்முறை போன்ற ஒரு தனிமனிதரின் வாழ்வில் மறையாத - அழிந்திடாத வடுவாக இருக்கும் வேளையில், இப்பயிற்சிகள் சற்றேனும் அவர்களது வாழ்வை மாற்றிக்கொள்ளும் வழியாக அமையக்கூடும் என்பதைச் சிறிதளவேனும் நம்பலாம் அன்றோ!

முடிவாக, பென்னிக்ஸ் - ஜெயராஜ் காவல் நிலைய மரண வழக்கில் தமிழ்நாடு காவல்துறைக்கு ஏற்பட்டுள்ள இந்தக் களங்கத்தைப் போக்கக்கூடிய அளவில், இனி தொடரும் எவ்வித வழக்குகள் ஆனாலும் அதில் கைது செய்யப்படும் குற்றவாளிகளை மனிதாபிமானத்தோடு நடத்தவும், அவர்களது தனிநபர் உரிமைகளை மதிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டியதை, தமிழ்நாடு காவல்துறை பொறுப்புணர்வோடு நடந்துகொள்ள வேண்டும் என்பதை, இந்தச் சமூகம் மிகுந்த அக்கறையுடன் பார்க்கிறது.

news
சிறப்புக்கட்டுரை
மயக்கமும் கலக்கமும்

சமூக ஊடகங்கள் எளிய மனிதர்களின் கருத்தையும், கருத்துச் சுதந்திரத்தையும் குடியாட்சி மாண்பாகப் பிரதிபலிக்கின்றன. தமிழ்நாட்டில்விர்ச்சுவல் வாரியர்என்ற பெயரில் சிலர் மின்னணுத் தளத்தில் தெருச் சண்டை போடுகிறார்கள். ‘தாய்மொழியான தமிழில் இவ்வளவு அருவருக்கத்தக்க வார்த்தைகளா?’ என  அதிர்ச்சி  அளிக்கிறது.

இவர்கள் பதிவிடும் தகாத வார்த்தைகள் ஒட்டுமொத்த சமூகத்தையே முகம் சுளிக்கச் செய்கிறது. ஒரு காலத்தில் குழாயடிச் சண்டைகள் என்ற பெயரில் நடந்த ஆபாச வார்த்தைகள், உறவு முரண்களை இவர்கள் இணையத்தில் சில்லறைகளாய் சிதற விடுகிறார்கள்ஐந்து விழுக்காடாக இருந்த இந்தக் கேவலங்கள் இன்று இவர்களால் 95 விழுக்காடாக உயர்ந்துவிட்டது.

இரசிகர்கள் தங்கள் தலைவருக்குப் போட்டியாகக் கருதும் ரஜினி, அஜித், சீமான் எனத் தொடங்கி  தமிழ்நாட்டு முதல்வர் வரை வசை பாடுகிறார்கள். இந்த அமைப்பின் இவர்களது தேர்தல் பிரிவுச் செயலாளர் உச்சபட்சமாக முதல்வரைமுட்டாள்எனத் திட்டுகிறார். முதல்வரது அரசியல் வாழ்க்கையின் அனுபவத்தின் நிகர், இவர் எவருக்கும் வயதோ, தகுதியோ, பொது வாழ்வோ கிடையாது. ஒருவர் விடாமல் அத்தனை பேரையும் குறிவைக்கும் இவர்கள், சூப்பர் ஸ்டார் ரஜினியையும் சீண்டினார்கள். ரஜினிகாந்த்  அழகாக அவரது வழியில் பதில் சொன்னார்: ‘காலம் பேசாது; காத்திருந்து பதில் சொல்லும்.’

சமூக ஊடகங்களில் பிம்ப அரசியல் குறித்து அக்கறை  கொள்ளும் ஒருவர் ஒரு கருத்தைப் பதிவு செய்கிறார். அடுத்த நொடி முதல் இந்தக் கூட்டம் கூடு கலைந்த தேனீக்களாய் மாறி வெறிக்கொண்டு தகாத வார்த்தைகளை வாரி இறைக்கிறது. இது சாதாரண குடிமகன்

முதல் பெரிய பிரபலங்கள் வரை எல்லாருக்கும் நடக்கும். அவர்களின் ஒரே நோக்கம் மீண்டும் அக்கருத்தாளர் சமூக ஊடகப் பக்கம் வந்து, அவர்களைப் பற்றி விமர்சனங்கள் செய்யக்கூடாது என்பதாகும். இதை அவர்கள் தலைமை இரசிக்கிறது. இதுவரை கண்டிக்கவும் கட்டுப்படுத்தவும் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. ‘வார் ரூம்என்ற பெயரில் உள்ளடக்கங்கள், கற்பனைவாதக் கருத்தாக்கங்கள் தலைமை சக்தியிடமிருந்து பகிரப்படுகிறது.

அரசியல் கட்சிகளில் கண்ணியமில்லாத பேச்சு, தரக்குறைவான தாக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும். ஆபாசம், என்று கவனம் விமர்சனம் பெறுகிறதோ அது கண்டிக்கப்படும். வழக்குப் பதிவு செய்யப்படும். அரசியல் கட்சியிலிருந்து நீக்கப்படுவர். ஆனால், இந்தக் குறிப்பிட்ட கட்சியால் மட்டுமே தலைவரால், தலைமையால் கண்டிக்கப்படாது இரசிக்கப்படும். கரூர் பெருந்துயரச் சம்பவத்தின் போது ஒரு பதினைந்து வயது சிறுவன் கூறுகிறான்: “எங்கள் தலைவர் மீது கை வைத்தால், தமிழ்நாடே பிளாஸ்ட் ஆகிடும், போலீஸ் ஸ்டேசனே இருக்காது.”

இவர்களுக்குச் சட்டம்-ஒழுங்கு குறித்து எந்த விழிப்புணர்வும் இல்லை. இவர்கள் தங்கள் தலைவரைப் போலவே கற்பனை உலகில் வாழ்கிறார்கள். இந்த வாரியர்ஸின் மறுபக்கம் வன்முறையைத் தூண்டும் வகையில் வீடியோ போடுவதில் போட்டி நடக்கிறது.

இரு இளைஞர்கள் கையில் அரிவாள் வீசிப் பேசுகிறார்கள்: “அறுத்திருவோம், மொத்த இரசிகர் கூட்டமும் சேர்ந்து வந்தால் நீங்க ஒருத்தனும் இருக்க மாட்டீங்கஎன்கிறார்கள். “ரெட் அன் பிளாக்கை அடித்து நொறுக்கிடுவோம்என வேறொருவன் வீடியோ போடுகிறான். மற்றொரு சமூக ஊடகக் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர் இந்த இரசிகர்களைத் தினமும் ஒரு வீடியோ போட்டு வம்புக்கு இழுத்தார்; இவர்கள் கட்சியில் ஆண், பெண் பட்டாளம் அவரைத் திட்டியது சொல்ல முடியாத, நாம் முதன் முதல் கேட்கும், புதிய கண்டுபிடிப்பு வார்த்தைகள்தாம்.

நாம் நாகரிகச் சமூகத்தில் வாழ்கிறோமோ அல்லது கற்காலத்திற்குத் திரும்புகிறோமோ என்ற அச்சம் எழுகிறது. இவர்கள் வெட்டரிவாள், பட்டா கத்தியோடு கோபமாகப் பேசுகிறார்கள். “டி.ஜி.பி., டி..ஜி., முதல்வர் எவர் எங்கள் தலைவரைப் பேசினாலும், மூஞ்சி கிழிந்துவிடும்எனச் சவால் விடுகிறார்கள்.

கரூர் பெருந்துயர நிகழ்வின்போது சவால் விட்டவர்களைக் காவல்துறை மடக்கிப் பிடித்தது. வழக்குகளைத் தொடுத்தபோது இந்தக் கூட்டம் அவர்கள் தலைவரைப் போல் தங்கள் சமூக ஊடகக் கணக்குகளை மூடிவிட்டு அலைப்பேசிகளை வீசி விட்டு, பதுங்கு குழிகளில் பதுங்கிக் கொண்டார்கள். நடுநிலை  விமர்சகர்கள், “இந்தச் சாக்கடைகள் மீது கல்லெறிந்து நாமும் நாற்றப்படவேண்டுமா?” எனக் கேட்கிறார்கள்.     

சமூக ஊடகங்களில் மோசமாக நடக்கும் இவர்களைப் பாதிக்கப்பட்ட  பொதுமக்கள் வெளிப்படுத்த வேண்டும். கொலைமிரட்டல் விடுகிறவர்கள் சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட, காவல்துறையில் வழக்குகள் பதிவு செய்யப்படவேண்டும்.

எதிர்க்கட்சியாக இல்லாமல், எந்த ஓர் ஆட்சி அதிகாரமும் இல்லாதபோது இவர்கள் தாங்கள் வைத்ததுதான் சட்டம் என ஆடுகிறார்கள். ஒரு வேளை இவர்கள் ஆட்சி அதிகாரம் பெற்றால், சமூக ஊடகங்களில் பொதுமக்களின் குரல்வளைகளை நசுக்கிவிடுவார்கள். இவர்களை  எதிர்த்து எவரும் பேச முடியாத அச்ச உணர்வு தமிழ்நாட்டில் ஏற்படும். இவர்களது வன்முறை வெறி, நாளைய நாள்களில் தமிழ்நாட்டை ஒரு பீகார், உத்தரப்பிரதேசம் போல் மாற்றிவிடும் என்பதே கவலைக்குரிய ஒன்றாகும்.

பொதுமக்களில் சிலர்மாற்றம்என்ற பெயரில் இந்த அருவெறுக்கத்தக்க வன்முறைக் கூட்டத்திற்கு ஆதரவு அளிப்பது, நாளைய நாள்களின் சமூக அமைதிக்கு விடுகிற பெரும் சவால் எனலாம். ஆட்சி அதிகாரம் நோக்கிய இவர்களது பயண காலமே, பொதுமக்களைப் பயப்படுத்துகிறது.

அண்மையில் வங்கதேச உதாரணம் ஒன்றைப் பார்ப்போம். வங்க தேசத்தில் ஜமாத்--இஸ்லாமி கட்சி இளைஞர்களால் பரபரப்பு செய்யப்பட்டது. அவர்களின்அடாவடித்தனம்வெகுவாகப் பேசப்பட்டது. அடுத்த ஆட்சி இவர்களது எனத் தொலைக்காட்சிகள், அச்சு, சமூக ஊடகங்கள்மக்களை  மூளைச் சலவை செய்தன. இந்த இளைஞர்களால் வங்கதேசம் சுபிட்சம் பெறும் என இளைஞர் கூட்டத்தைத் தலைக்கு மேல் தூக்கி வைத்துக் கொண்டாடித் தீர்த்தார்கள். ஓநாய் கூட்டம் என மக்களிடம் வெறுப்பு பெற்ற  ஜமாத்--இஸ்லாமி கட்சி, வங்க தேசத் தேர்தலில் படுதோல்வி அடைந்தது.

சிறுபிள்ளைத்தனமான இந்த வாரியர்ஸ்க்கு  அடிப்படை விமர்சனங்களைத் தாங்கும் பொறுமை இல்லை. இவர்களால் கட்சித் தலைவருக்கு, கட்சிக்கு மக்களிடம் உள்ள புகழ் வெளிச்சம் பாதிக்கப்படுகிறது என்ற கவலையும் இல்லை. ரீல்ஸ்-ரீச் என்பதில் படம் காட்டுகிறார்கள். அவரது தலைவரை நேரில் காணும்போது, கும்பிடத் தோன்றாமல் அலைப்பேசி பிரேமுக்குள் அடக்கும் ஆர்வமும் வெறியும் வெளியாகிறது. இவர்கள் அலைப்பேசியே உலகம் என வாழ்கிறார்கள்.

எங்கள் பகுதியில் இவர்கள் வாக்கு கேட்டு வந்தார்கள்.  ‘ஏன் இவ்வளவு அவசரமாக வந்தார்கள்?’ என்றபோது சொல்கிறார்கள்: “இன்ஸ்டா மற்றும் பேஸ்புக்கில் போடத்தான்எனப் பொதுமக்களே விளக்குகிறார்கள்.

மாற்றம்என்ற பெயரில் மூளைச்சலவை செய்து, வாக்கு மாற்ற முயற்சி நடக்கிறது. சினிமா மோகம் என்ற புதைகுழியில் விழாதீர்கள். மாற்றம் என்ற பெயரில் நாற்றத்தைப் பூசிக்கொள்ளாதீர்கள். எந்த ஒரு கொள்கைப் பிடிப்பும், மக்கள் சேவை என்ற மாண்பும் கொள்ளாமல், முதல்வர் பதவி என்று அதிகார ஆசை கொண்டால், சமூக ஊடகங்களில் பொங்கலாம். அது பாலாக இருந்தால், நன்றாகப்  பொங்கும். இது பச்சைத் தண்ணீர்! எப்படிப் பொங்கும்?

news
சிறப்புக்கட்டுரை
விழித்தோமெனில் பிழைப்போம்!

இது என்ன தலைப்பு? யார் விழித்துக் கொள்ளவேண்டும்? ஏன் விழித்துக் கொள்ளவேண்டும்? யாரை எச்சரிக்க இக்கோரிக்கை?

இன்றைக்கு  இந்துத்துவக் கொள்கை மீது அரசியல் செய்துவரும் இந்துத்துவர்கள் முன் வைத்து நடத்தும் தேசியம் (Nationalism) பற்றி நம்மவர் எத்தனை பேர் தெளிவு பெற்றுள்ளனர்? ஆயிரக்கணக்கான இளைஞர்களை இறையியல் பயிற்சியென்றும், இன்னும் பல்வேறு பயிற்சிகள் மூலம் நாடெங்கும் பயிற்றுவிக்கப்பெறும் இளம் மாணவர்கள், இளம் குருமட மாணவர்கள், பொதுநிலையினரை முன்னிறுத்தி நடத்தப்பெறும் பணிக் குழுக்கள்... இவற்றிலெல்லாம் இக்கருத்தியல் பற்றிப் பேசுகின்றோமா?

தமிழ்நாட்டில் தேர்தல்சூடு வேகமெடுத்துள்ளது. தேர்தல் வெற்றிக்கு மிகப்பெரிய பரப்புரைகளை முன்னெடுத்துவரும் கட்சிகள் கடுமையான வெப்பத்தையும் கண்டுகொள்ளாது பணியாற்றி வருவது கண்டு, நம் போன்ற மதச்சிறுபான்மையினருக்கு ஒரு பாடத்தைத் தந்திருக்க வேண்டுமே!

இக்கட்டுரையில் மதச்சிறுபான்மையினரின் நிலைப்பாடு பற்றியே கவலைகொள்ள வேண்டிய அவசியம் நோக்கி எச்சரிக்கும் வகையில் இக்கட்டுரை எழுதப்படுகிறது.

அனல் பறக்க நடத்தப்பெறும் பரப்புரைகளின் வேகம் கிறித்தவர்களின் மீதும் சில தாக்கங்களை உருவாக்கி வரும் என்பதும் உண்மையே. அண்மையில் ஊடகங்களின் செயற்பாட்டு வழி நம்மவர்களும் புதிய செய்திகளை அறிந்திருப்பர்; ஒருவகை நிலைப்பாட்டை எடுத்திருப்பர்.

திரு அவைதேர்தல் நிலைப்பாடுஒன்றை முன்னெடுத்து மக்களுக்குத் தந்தாலும் கிறித்தவருள் பெரும்பான்மையோர் உறுதியாக மோடியை உள்ளடக்கிய பாரதிய சனதா கட்சிக்கு உறுதியாக வாக்களிக்க மாட்டார்கள் என்பது உறுதி. தமிழ்நாட்டில் வாழும் இசுலாமியர் கட்சி ரீதியாக அல்லது அமைப்பு ரீதியாகப் பிளவுபட்டுக் கிடப்பினும் பாரதிய சனதா எனும் மதவாத கட்சியினை எதிர்ப்பது என்பதில் மிகத் தெளிவோடு செயல்படுவர் என்பதே உண்மை. கிறித்தவர்கள் அரசியல் மயப்படுத்தப்படவில்லையெனினும், கிறித்தவர் அனைவரையும் உள்ளடக்கிய வகையில் கட்சிகளோடு அமைப்புகளோ உருவாகவில்லையெனினும், இசுலாமியரைப் போன்று பெரும்பான்மைவாதம் பேசும் பாரதிய சனாதன எதிர்ப்பிற்குக் கிறித்தவருக்கு யாரும் பாடம் நடத்த வேண்டுவதில்லை என்பதே உண்மை.

தமிழ்நாட்டில் பாரதிய சனதா கட்சி வேரூன்றாமைக்கும், ஆட்சியைப் பிடிக்க முடியாமைக்கும், மதச்சார்பற்றக் கட்சிகளின் தேர்தல் வெற்றிக்கும் மதச் சிறுபான்மையினரின் தேர்தல் நிலைப்பாடு ஒரு காரணம் என மதச்சார்பற்ற கட்சிகள் ஏற்றுக்கொண்டிருக்கின்றன. மேனாள்  .தி.மு.. அமைச்சர்கள் இருவர் தம் தோல்விக்கு, .தி.மு.. பாரதிய சனதாவோடு கொண்ட தேர்தல் உடன்பாடே காரணம் என்று வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருந்தமை இங்கு நினைவுகூரத்தக்கது.

கற்க வேண்டிய பாடம்

மண்டைக்காட்டைக் கலவர பூமியாக்கி நடத்தப்பட்ட கலவரத்தால், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தமிழ்நாட்டுக் கிளையான இந்து முன்னணி முன்னெடுத்த வகுப்புவாத நச்சினால் குமரி மாவட்டம் மதரீதியாகப் பிளவுபடுத்தப்பட்டது. குமரி மாவட்ட மக்கள் எப்போதும் மதரீதியாகத் தம் வாக்குகளைச் செலுத்தாத நிலையில், 80-கள் தொடங்கி குமரி மாவட்டம் மதத்தை அடிப்படையாகக்கொள்ளத் தொடங்கியது. மதரீதியாகப் பிளவுபட்ட குமரிச் சமூகம், பிரிவினைவாத அரசியலுக்கு ஆட்பட்டது.

குமரி மாவட்டக் கிறித்தவம் மதம் மறந்து, தாம் விரும்பிய கட்சிகளின் அடிப்படையில் தம் தேர்வை அல்லது தெரிவை எப்போதெல்லாம் செலுத்தியதோ, அப்போதெல்லாம் மதவாத பாரதிய சனதாவின் வேட்பாளர் வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற இவர் கடுமையான கிறித்தவ எதிர்ப்பாளர். கிறித்தவர்கள் கட்சி ரீதியாகப் பிளவுபட்டு மதவாதக் கட்சிக்கு வெற்றிக்கனியைத் தந்ததால், ஒன்றிய அரசியல் அமைச்சரும் ஆனார். மதச்சிறுபான்மையினர் சம அளவிற்கும் மேலான எண்ணிக்கையினராக இருந்தும் மதவாத எதிர்ப்பு, மதச்சார்பின்மைக்கு ஆதரவு, வகுப்புவாத எதிர்ப்பு என்ற அளவில் கிறித்தவர்கள் அணிதிரளாமல் அல்லது அணி திரட்டப்படாமல் விட்டதன் விளைவைக் கிறித்தவர்கள் இப்போதும் புரிந்துகொண்டார்களா? என்பது தெரியவில்லை. குமரிமுனையில் நடந்தேறிய அரசியல், தேர்தல் களத்தில் கிறித்தவர்கள் முன்னெடுக்க வேண்டிய யுக்திகளை அறிய வேண்டியுள்ளது.

குமரி மாவட்டத்தில் தேர்தல் காலத்து குமரிக் கிறித்தவர்கள் தம் பேதம் மறந்து கிறித்தவர்களாக ஒன்றுபட்ட போதெல்லாம் வெற்றி கண்டனர். தமிழ் நாட்டுத் தேர்தலில் நாம் கிறித்தவர்களாக ஒன்றுபடுவது மிக அவசியமாகிறது.

குமரிக் கிறித்தவர் சாதிபேதம் மறந்து, மதத்தால் ஒன்றுபட்டமையால் மதச்சார்பற்ற கட்சிகள் வெற்றி பெற்றன. இதுபோன்று தமிழ்நாட்டுக் கிறித்தவர் ஒன்றுபடுவரா? கிறித்தவத்துள் புரையோடிப் போன சாதிப்பிரிவு இதனை ஏற்குமா? சாதியைக் கடந்தும், நாம் ஏற்றிருக்கும் கிறித்தவ அடையாளத்தை ஆதாயமாக்கி வெற்றியைக் கவர நினைக்கும் நபர்களை எப்படிப் புறந்தள்ளப் போகிறோம்?

தமிழ்நாடு முழுவதும் எட்டும் அளவிலான இளைஞர் படையோடு வலம் வரும் ஒரு நடிகர், தி.மு.. எனும் கட்சியைப் பெரிய தீய சக்தியாகச் சுட்டிக்காட்டி பரப்புரை நிகழ்த்துகிறார். தன் வாழ்வின் எப்பகுதியிலும் கிறித்தவச் சாயலே இல்லாத இவர், இவர் அறியாக் குழந்தைப் பருவத்தில்ஜோசப்என்ற பெயரைச் சூட்டியமையால் கிறித்தவராகிவிட்டாராம்! ‘ஜோசப்என்ற பெயர் திருச்சியின் ஒரு தொகுதியில் விலைபோகும் என்பதை அறிந்து கொண்ட இவரும் களம் காண்கிறார். ‘ஜோசப்எனும் பெயரைக் கொண்டாடுகின்ற கிறித்தவர் அரசியல் ரீதியாக ஒதுக்கப்பட்டு, ஒடுக்கப்படுகின்றபோது காதடைந்துபோன இம்மனிதர், திருச்சி கிழக்குத் தொகுதியிலிருந்து சில கல் தொலைவு அருகிலிருக்கும் விரகாலூர் என்ற சிற்றூரைச் சார்ந்த அருள்பணியாளர் ஸ்டான் சாமி பற்றி அறிவாரா? நுனி நாக்கில் கூட உச்சரிக்க மறுக்கும் மதவாத பாரதிய சனதாவின் கொடுங்கோல் சட்டத்தினால் மரணித்தார் என்பது இவர் அறிவாரா? மூன்றாண்டுகளுக்குமுன் இறந்து போன இந்த அருள்பணியாளருக்கு, விரகாலூரில் கடந்த சூலை மாதம் சிலை வைக்கப்பட்டிருக்கிறது.

ஜோசப்எனும் அடையாளத்தைத் தேர்தல் விலைபொருளாக மாற்றத்துடிக்கும் இவர், இவ்வருள்பணியாளருக்கு அஞ்சலி செலுத்துவாரா? கிறித்தவர்களுக்குக்கிறித்தவர்என்ற அடையாளம் கட்டிக்காக்கப் பெறவேண்டிய ஓர் உன்னத அடையாளம். இவ்வுண்மை அடையாளத்தைச் சுய ஆதாய நோக்கில் எவரேனும் சுரண்ட இடம் கொடுக்கக் கூடாது என்பதை வலியுறுத்துவதே நம் நோக்கம்.

நாம் மதவாதிகளல்லர்...

நாம் கிறித்தவர்களாக ஓர் அரசியல் நிலைப்பாடு ஒன்றினை முன்னெடுக்கவேண்டும் என்ற கோரிக்கையானது, நாம் மதரீதியாக ஒன்றிணைய வேண்டும் என்பதற்காக அல்ல; ஏனெனில், பெரும்பான்மை மதவாதத்தை எதிர்க்க ஒருங்கிணையவேண்டிய நாம், மதரீதியாக ஓர் அமைப்பை உருவாக்கி, மதவாதத்தை எதிர்த்திட முடியாது. வகுப்புவாதக் கருத்தியலை அடிநாதமாகக்கொண்டு இயங்கும் பெரும்பான்மை மதவாதத்தைச் சிறுபான்மை மதவாதத்தால் (Minority Communalism) எதிர்க்கவும் முடியாது.

பெரும்பான்மை மதவாதம், சிறுபான்மை மதவாதம் இரண்டும் மக்களின் சமத்துவத்திற்கு அறிவுப்பூர்வப் பார்வைக்கு எதிரானதுதான். மதரீதியாக ஒருங்கிணைக்கப்பட்ட பெரும்பான்மைவாதம் சனநாயகத்திற்கு, சமயச்சார்பின்மைக்கு எதிரானது என்பதில் தெளிவு ஏற்படுமானால்இன்று வளர்ந்து நிற்கும் மதப்பெரும்பான்மைவாதத்தை எதிர்த்து நிற்கும் ஆற்றல், மதச்சார்பின்மை எனும் உயிர்க்கொல்லிக்கும், சனநாயகம் எனும் உயர்மாந்த மதிப்பீட்டிற்கும் உண்டு என்பதால், நாம் மதம் காக்கும் மனிதர்களாக, குழுக்களாக மாற வேண்டுவதில்லை என்பதனைப் புரிந்து கொள்வோம்.

மதவாதம், மத அடிப்படைவாதம், வகுப்புவாதம், மதவாதத் தேசியம் என்பனவெல்லாம், இன்று மிகப் பெரிய சிந்தனைக்குரிய செய்திகளாக (Discourse) மாறவேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. மத உணர்வைத் தூக்கிப்பிடித்து, மக்களை மடையர் களாக்கும் மதவாத அரசியலை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

தமிழ்நாடு திரு அவை என்பது வெறும் நகரங்களில் செயல்படுகின்ற அமைப்பல்ல; நம் திரு அவை வெறும் திருக்கோவில்களோடு நின்று விடும் அமைப்பும் அல்ல. திரு அவை இந்நாட்டில் கால்கோள் கொண்ட காலத்திலிருந்து எங்கெல்லாம் வழிபாட்டுத் தலங்களை நிறுவியதோ, அங்கெல்லாம் சென்றடைந்த மக்களின் முழுவளர்ச்சியையும் கருத்தில் கொண்டு, வளர்ச்சித் திட்டங்களையும் முன்னெடுத்தத்  திரு அவை என்பதனை வரலாறு அறியும். இந்த உண்மையை  எத்தனை பேருக்குக் கொண்டு சென்றிருக்கிறோம்?

இந்திய நாட்டில் வளர்ந்திருக்கிற இந்திய மதப்பெரும்பான்மைவாதம் வரலாற்றைத் திரிக்கிறது. இல்லையெனில், வரலாற்று உண்மைகளைக் கொச்சைப்படுத்துகிறது. வெறும் புராணக் காலத்துப் புனைவுகளை உண்மையெனத் திணிக்க முயற்சிக்கிறது. நாடு முழுவதும் நடத்தப்பெறும் நம் கல்வி நிறுவனங்கள் மூலம் இப்புனைவுகளை உடைக்கவும் தகர்க்கவும் என்ன செய்துவருகிறோம்?

இந்தியாஎன்ற நாட்டிற்குபாரதம்எனும் புதுப் பெயரிட்டு, இத்தேசத்தைஇந்துநாடென்று கூறிஇந்நாட்டில் இயங்கும் மதச்சார்பின்மைக்கு எதிராகச் செயல்பட்டுவரும் அமைப்பை நாம் புரிந்து கொண்டிருக்கின்றோமா?

இந்திய சனநாயகத்தையும், சனநாயகத்தின் உள்ளீடான சமயச்சார்பின்மையையும் போற்றும் தேசத்தில்தான், மதச்சார்பின்மையும் மதச்சார்பின்மையின் உள்ளீடான சமத்துவமும் பேணப்பெறும் என்பதில் மதச்சிறுபான்மையினர் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளனர்.

மதவாதம் எனும் பிரிவினைக் கொள்கைஇந்தியாஎனும் அடிப்படைக் கொள்கைக்கு (Idea of India) எதிரானது என்பதில் உறுதியாக இருக்கிறோம். நாங்கள் வாழும் நாட்டை நேசிக்கிறோம். நாட்டின் ஒற்றுமையை, ஒருமைப்பாட்டைக் காப்பதில் உறுதியாக இருக்கிறோம்.

மதரீதியாக மக்களை ஒருங்கிணைத்து (Polarize) மதச் சிறுபான்மையினரை அந்நியராக்கி, எதேச்சதிகார அரசு ஒன்றினை உருவாக்கும் முயற்சியினை, ‘வாக்குஎனும் அதிகாரத்தால் முறியடிப்போம் என்று உறுதியேற்போம்.

news
சிறப்புக்கட்டுரை
Ai உலகில் மக்களாட்சி (உலகம் உன் கையில்! – 20)

ஒரு கணிப்பு என்னவென்றால், 2030-க்குள், ஏறக்குறைய 75% மக்கள், சீனாவில் தயாரித்து உலகெங்கிலும் வினியோகிக்கப்பட்டு வரும் .. கண்காணிப்பு அமைப்புக்கு (Surveillance) அடிமைகளாகிவிடுவர் என்பது. இக்கருவி உலகின் ஒவ்வொரு குடிமகனின் அனைத்து அசைவுகளையும் 24 மணி நேரமும் கண்காணிக்கும் திறன் பெற்றது. இதற்குடிஜிட்டல் சர்வாதிகாரம்  (Digital Authoritarianism)  என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பொதுவாக, தொழில்நுட்பம் என்பது அதனை எவ்வாறு பயன்படுத்துகிறோம் மற்றும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறோம் என்பதில்தான் இருக்கிறது. இது ஒன்றை மேம்படுத்தவும் அல்லது பலவீனப்படுத்தவும் கூடிய திறனையும் கொண்ட தொழில்நுட்பம், மக்களாட்சி முறைக்கு எவ்வாறு ஏற்புடையதாய் இருக்கிறதென்பதைச் சற்று ஆராய்வோம்.

ஆட்சியும் - அதிகாரக் குவியலும்

அனைத்து மக்களும் வெளிப்படையாகச் செய்திகளைப் பெறுவதும் பகிர்வதுமே மக்களாட்சி முறைக்கு அடித்தளமாக அமைகிறது. சமூக ஊடகங்கள் தவறான செய்திகளைப் பெரிய அளவில் (Mass) அவிழ்த்து விடுவதென்பது இதன் அடித்தளத்தை அசைக்குமென்பதும், நம்பத்தகுந்த செய்திகளை மக்கள் எளிதில் பெற இயலாமையும் மக்களாட்சி முறைக்கு ஆபத்தாக அமையும் என்கிறார் ஓர் ஆய்வாளார்.

சுதந்திரமும் நியாயமான (Free and Fair) தேர்தல்களை நடத்துவதாகக் காணப்பட்டாலும் வாக்காளர்கள் அரசு இயந்திரங்களுடன் போட்டியிட இயலாமலாகிவிடுவது நடைமுறை. ஆட்சி முறையில், அரசு இயந்திரங்கள் மூலம் கண்காணிப்பு நடைமுறையிலிருக்கும் நிலையில், தனிமனித உரிமை, சிறுபான்மையினரின் கருத்துச் சுதந்திரம் என்பவைகளுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் நடு நிலை வகிக்க இயலுமா? என்கிற அச்சமும் உள்ளது.

சமூக ஊடகங்களும் - அரசியலும்

இன்று உலகளவில் வெகுசிலரே தொழில்நுட்பத்தை வழிநடத்துகின்றனரென்ற நிலை கேட்பதற்கு வியப்பாக இருக்கலாம். கூகுள், முகநூல், அமேசான் மற்றும் சில தொழில்நுட்ப நிறுவனங்கள் இன்று வியப்பூட்டும்-மேட்டுக்குடியினருக்கான பரப்புரை (elite-propaganda) மற்றும் ஏற்க இயலாத செய்திகள் மூலம் கலாச்சாரத்தைச் சுற்றி வளைத்துக் குடியாட்சிமுறை தளர்விற்குப் பங்களிப்பதாகப் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ..யின்போலியின் போலி காணொளிகள்  (Deep Fake-videos) மேலும் வலுசேர்த்து நாளுக்கு நாள் அதிகரித்தும் வருகின்றன.

யூடியூப்மற்றும்டுவிட்டர்போன்ற வலையமைப்புகளும் தங்கள் வருவாய்த் திரட்டும் போட்டியில் சளைக்காமல் ஓடும் நிலையில், அரசியல்வாதிகள் தங்கள் விளம்பரத்திற்கும் பிரபலமாவதற்கும் பக்கபலமாக விளங்கும் இவற்றைக் குறித்துக் கண்டும் காணாமலிருப்பது, இதற்கான ஒழுங்கு வரையறைபின் வரிசையிலிருப்பதாகவே பார்க்கப்படுகிறது. பொதுவாக ..யும், இயந்திரச் செயலாற்றல் சார்ந்த தொழில்நுட்பக் கட்டுப்பாடும், முழுமையாக அவற்றை உருவாக்கியவர்களிடமே இருப்பதாலும், இவை முழுமையான வெளிப்படைத்தன்மை பெற்றவையென்று கூறமுடியாது. தொழில்நுட்ப வளங்களை உடையவர்கள் மக்களை வசப்படுத்தும் திறனையும் பெறுகிறார்கள் என்பது இயல்பு. முன்பு ஒருநாள், குடியாட்சி முறைக்குத் தூண்களென்று கருதப்பட்ட ஒருசில நாடுகளை இன்று டிஜிட்டல் தொழில்நுட்பம் அசைக்கும் நிலையிலிருப்பதையும் பார்க்கிறோம்.

மக்களாட்சியும் புதிய தொழில்நுட்பங்களும்

தொழில்நுட்பம் பல தடைகளைத் தகர்த்து மக்களாட்சி அமைப்புகளையும் வழிமுறைகளையும் மேம்படுத்த உதவுகிறதென்றாலும், இவைகளின் இயல்பான வடிவமைப்புகள், அதாவது .தணிக்கை, கண்காணிப்பு போன்றவை சுதந்திர மக்களாட்சி முறைக்கு எதிர்மறையாகவே பார்க்கப்படுகின்றன. இதனால் மக்களாட்சி முறைகளை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்கள் மீதான நம்பகத்தன்மையை இழக்கும் நிலையும் உருவாகிறது. உலகளவில் இன்று தரவுகள் எப்போதையும் விட வலிமை பெற்றிருக்கும் நிலையில், இதனைச் சேகரிப்பதில் நிலவும் உலகளவிலானஎலிப் பந்தயம் (rat race) அனைத்து உரிமைகளையும் ஒடுக்கும் கருவியாக உருவெடுக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

முதலாளித்துவமும் மக்களாட்சியும்

உலகளவிலான ஆட்சியமைப்புகள் வலிமையான முதலாளித்துவம்தளர்ந்த குடியாட்சிமுறையைச் சார்ந்தே உள்ளதென்பதை இன்று தொழில்நுட்பத்தின் பின்னால் மனிதன் செல்வதிலிருந்தே அறிந்துகொள்கிறோம். ஆனால், தளர்ந்த முதலாளித்துவம் - வலிமையான குடியாட்சி என்று ஒரு வேளை உருவாகும் தொழில்நுட்பமுமே குடியாட்சிக்கு ஏற்புடையதாயிருக்கும் என்று கருதப்படுகிறது. இன்று நடைமுறையிலிருக்கும் பெரும்பாலான தொழில் அமைப்புகள் பல நூற்றாண்டுகளுக்கு முன் வலிமையான முதலாளித்துவ நோக்கில் உருவாக்கி இயக்கப்பட்டு வரும் மாடலமைப்பைச் சார்ந்தும், தொடர்ந்து வளர்ச்சியடைந்தும் வருகின்றன. இது மேலும் விரிவடைதல் எவ்விதத்தில் மக்களாட்சிக்கு ஏற்ப அமையும்? என்று சிந்திக்க வேண்டியுள்ளது.

தனிமனிதச் சுதந்திரமும் மக்களாட்சியும்

இன்று உலகம் தொழில்நுட்ப முதலாளித்துவத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஒருநாள் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள்மீது மட்டுமன்றி, திரளான வாடிக்கையாளர் சமூகத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்தும் நிலையில், எல்லையில்லாக் கண்காணிப்பு என்பது இயல்பாகிவிடும். எனவே, தொழில்நுட்ப அடையாளப்படுத்துதல், கண்காணிப்பு அதிகரிப்பு என்பவை சமுதாயத்தில் தனிமனிதச் சுதந்திரத்திற்கான இடத்தைக் சுருக்கிவிடுவதாகப் பார்க்கப்படுகிறது.

நாம் இணையதளத்தையோ அல்லது கணினி தன்னியக்கத் தொழில்நுட்பத்தையோ அல்லது ..யோ குறைகூற முடியாது; ஆனால், இத்தொழில்நுட்பங்களைத் தங்கள் சுயநலத்திற்குச் சாதகமாக அமைத்துக்கொள்பவர்களே சமத்துவ மற்றும் சம மக்களாட்சிக் கொள்கைகளுக்கு ஆதரவாய் இல்லாமல் இருக்கிறார்கள் என்கிறார் ஓர் ஆய்வாளர்.