மனத்தில் தொடங்கும் புதுவருடப் பயணம் ஒரு நொடி! ஓர் எண்ணின் மாற்றம்! ஒரு புதிய காலண்டர்!
அவ்வளவுதான்
நாம் ‘புது வருடம்’ என்று அழைப்பது. ஆனால், ஓர் எண் மாறுவதால் மட்டும் வாழ்க்கை மாறிவிடுமா? உண்மையில் புதுவருடம் எண்ணத்தில் தொடங்குவதில்லை; அது மாற்றத்தில்தான் தொடங்குகிறது. கடந்த வருடம் நம்மைப் பலவிதமாக மாற்றியிருக்கலாம்; சிலருக்கு அது வளர்ச்சியாக, சிலருக்கு அது வலியாக!
இழப்புகள்,
எதிர்பார்ப்புகள், நிறைவேறாத கனவுகள் இவையெல்லாம் நம்மை உடைக்க அல்ல; நம்மை ஆழப்படுத்தவே! ஆனால், நாம் என்ன செய்கிறோம்? கடந்த வருடத்தின் கசப்புகளை அப்படியே புதிய வருடத்திற்குள் எடுத்து வருகிறோம். பழைய கோபங்கள், பழைய தீர்ப்புகள், பழைய புண்கள்... இவையெல்லாம் புது எண்ணோடு பயணிக்கின்றன. அதனால்தான் புது வருடம் வந்தும் பலருடைய வாழ்க்கை அதேபோலவே இருந்துவிடுகின்றன. புதுவருடம் நம்மிடம் பெரிய சாதனைகளை எதிர்பார்ப்பதில்லை; அது ஒரு சிறிய மாற்றத்தை மட்டுமே எதிர்பார்க்கிறது.
திருவிவிலியம்
மென்மையாக நமக்குச் சொல்கிறது: “உங்கள் மனநிலையைப் புதுப்பித்துக்கொள்ளுங்கள்” (உரோ
12:2). இது ஒரு கட்டளை அன்று; ஓர் அழைப்பு. ‘இந்த வருடம் நீ சற்றேனும் மாற
முயற்சி செய்’ என்று கடவுள் நமக்குக் கூறும் அன்பான குரல். இந்த மாற்றம் பெரியதாக இருக்க வேண்டியதில்லை.
கடுமையாக
இருந்த மனம் சற்று கனிவாக மாறினால் போதும்; அவசரமாக இருந்த வாழ்வு சற்று அமைதியாக மாறினால் போதும். எப்போதும் குறை கூறிய நாவு சில நேரங்களில் நன்றி சொல்லத் தொடங்கினால் போதும். இதுவே புதிய மாற்றம்!
இன்றைய
உலகில் நாம் அதிக வேகமாக வாழ்கிறோம். ஆனால், அதிகமாக மனிதத்தை இழக்கிறோம். போட்டிகள், பதவிகள், பொருளாதார அழுத்தங்கள் இவற்றிற்கிடையில் நம் மனம் மெல்ல கடினமாக மாறிக்கொண்டிருக்கிறது. இந்தக் கடினத் தன்மையை உடைக்கவே புது வருடம் நமக்கு மற்றொரு வாய்ப்பைத் தருகிறது.
திருத்தந்தை
பிரான்சிஸ் கூறுவார்: “உலகம் இன்று அதிகமாகத் தேடுவது வெற்றி பெற்ற மனிதர்களை அன்று; கனிவு கொண்ட மனிதர்களை.” இந்த வருடம் நாம் வெற்றியைச் சேர்க்க முயற்சி செய்வதைவிட, மனிதத்தன்மையைப் பாதுகாக்க முயற்சி செய்வோம்.
ஒரு
குடும்பத்தில் அனைவரும் ஒரே வீட்டில் இருக்கலாம்; ஆனால், ஒருவருக்கொருவர் நேரம் இல்லாமல் இருக்கலாம். இந்த வருடம் நாம் வீட்டிற்குள் ஒரு சிறிய மாற்றத்தைத் தொடங்கலாம். அவசரமில்லாமல் ஒருவரைக் கேட்பது, கோபத்தை உடனே கூறாமல் மௌனமாக்குவது, ஒருநாள் முடிவில் நன்றி சொல்ல நேரம் எடுப்பது... இவை சிறிய மாற்றங்கள். ஆனால், வாழ்க்கையை மெதுவாக மாற்றக்கூடியவை.
புதுவருடம்
அதிசயம் செய்யாது. ஆனால், மாற்றத்திற்கான விதையை விதைக்கிறது. அந்த விதை வளர வேண்டுமென்றால், நம் முயற்சியும் கடவுளின் அருளும் ஒன்றாகச் சேரவேண்டும். இந்த வருடம் எல்லாமே சரியாக நடக்காமலிருக்கலாம்; ஆனால், எதுவாக இருந்தாலும் அதை எதிர்கொள்ளும் நம் மனம் சற்று நல்லதாக மாறட்டும்.
எண்
மாறிவிட்டது. இப்போது மாற்றம் தொடங்க வேண்டிய இடம் நம் உள்ளம். அதுவே, இந்த புதுவருடத்தின் உண்மையான அர்த்தம்.
“எண் மாறும் போது வாழ்க்கை மாறாது; உள்ளம் மாறும் போதுதான் வருடம் புதிதாகிறது.”
‘மரத்தை மறைத்தது மாமத யானை’ என்ற தமிழ்ச் சொல்வழக்கைப் பலரும் கேள்விப்பட்டிருக்கக் கூடும். மரத்தைச் செதுக்கிச் செய்யப்பட்ட யானையின் வடிவத்தால் அல்லது உருவத்தால் மரம் மறைந்து போயிற்று என்பர். மரத்துள் பொதிந்த யானையைச் சமயங்கள் போதிக்கும் சிலை வழிபாட்டை நியாயப்படுத்த எடுத்தாளப்படும் சொல் வழக்கே இது. ‘இச்சொல் வழக்கிற்கும் இக்கட்டுரைக்கும் என்ன தொடர்பு?’ என்ற வினாவொன்றை எழுப்பினால் அதில் தவறில்லையே!
கிறிஸ்து
பிறப்பு எனும் விழா நடந்து முடிந்து போயிற்று. தமிழ்நாட்டு மக்கள் இறைமகன் பிறப்பு விழாவை மகிழ்வோடு கொண்டாடி மகிழ்ந்தனர். ஒரு சமயம் சார்ந்த விழாவைச் சுதந்திரமாகக் கொண்டாடினர்; அச்சமின்றிக் கொண்டாடினர். ‘அச்சமின்றி’ என்ற
சொல்லை உபயோகிக்க வேண்டிய காரணம் என்பது பற்றி மக்கள் அறிவர். இந்தியா முழுமையும் வளர்க்கப்பட்ட பகை அரசியலின் ஆபாச வெளிப்பாடுகளைக் கிறிஸ்துமஸ் விழாக்களில் காண முடிந்தது. இடதுகளின் வலுமிகுந்த அண்டை மாநிலமாம் கேரளமும் தப்பாத நிலையில், தமிழ்நாடு தப்பியது.
‘தமிழ்நாடு தப்பியது’
என்று பெருமைப்பட்டுக்கொள்ள காரணம் உண்டு. ஏற்கெனவே மண்டைக் காட்டைச் சந்தித்த தமிழ்நாடு, அண்மையில் திருப்பரங்குன்றத்தில் ஏற்றப்பட்ட வகுப்புவாதத் தீ எரியூட்டப்பட்ட நிலையிலும்,
தமிழ்நாட்டில் கிறிஸ்து பிறப்பு தரும் அமைதி (Peace) நிலவியது;
தமிழ்நாடு முழுமையாக அமைதிப் பூங்காவாக மாறாத நிலையிலும், மதவாதப் பிரிவினை நோயின் வேகம் கொஞ்சம் தணிந்து வீசுவதற்கு தமிழ்நாட்டின் சூழமைவு ஒரு காரணமாக இருக்கலாம்; ஆளும் அரசின் மதவாத அரசியல் எதிர்ப்பும், மதச்சிறுபான்மையினரின் பாதுகாப்புக்கு அளிக்கப்பட்ட உத்தரவாதமும் காரணமாக இருக்கலாம்.
இந்நிலையில்
கிறித்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் முன்னெடுக்கப்பட்ட கிறிஸ்து பிறப்பு விழா, புதிய உதயமான தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட கிறிஸ்துமஸ் விழாவும் பாராட்டுக்குரியன. இரண்டு விழாக்களிலும் இயேசு கொண்டாடப்பட்டாரோ... என்னவோ, இயேசு எனும் இறை மகன் மதம் கடந்து அறிமுகமானார் என்ற செய்தி மகிழ்வைத் தருவதே.
கிறித்தவ
நல்லெண்ண இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட கிறிஸ்து பிறப்பு விழாவில் தமிழ்நாடு முதல்வர் சிறப்பிக்கப்பட்டார். தமிழ்நாட்டில் வாழும் கிறித்தவர்களின் நலன் கருதி, அவர்தம் உரிமை கருதி முன்னெடுக்கப்பட்ட அரசின் திட்டங்கள் வானளாவப் புகழப்பட்டன.
‘கிறித்தவர்களாகிய மதச் சிறுபான்மையினர் இன்று அச்சமின்றிப் பாதுகாப்போடு வாழ்கின்றமைக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்களின் கருணையே காரணம்’ என்றெல்லாம் புகழப்பட்டார். இப்புகழுரைகள் அனைத்தும் உண்மைக்குச் சான்றுபகரும் உண்மைகளே.
தமிழ்நாட்டின்
அனைத்து எதிர்க்கட்சிகளும் தி.மு.க.வை முதல் எதிரியாகக்
கட்டமைத்து வீழ்த்தி விடத் துடித்துக்கொண்டிருக்கும் சூழலில், துணிவாக எதிர்கொள்ளும் ஸ்டாலின் பாராட்டப்பட வேண்டியவரே! அதுவும் மதவாதக் கட்சியும், அதன் கூட்டணிக் கட்சிகளும் தமிழ்நாட்டு முதல்வரை இந்துகளின் எதிரியென்றும், சிறுபான்மை மக்களை வாக்கு
வங்கியாகப் பயன்படுத்துகிறார் என்றும், மதச் சிறுபான்மையினரைத் திருப்தி செய்வதே முதல்வரின் நோக்கம் என்றும் கொச்சைப்படுத்தி வருகையிலும், தளராமல் ஒரு நிலைப்பாட்டை மேற்கொண்டு வரும் முதல்வர் பாராட்டுக்குரியவரே. இவ்விழாவில்
உரையாற்றிய தமிழ்நாடு ஆயர் பேரவையின் தலைவர் பேராயர் ஜார்ஜ் அந்தோணி சாமி அவர்களின் உரை கொஞ்சம் ஆறுதலைத் தந்தது. இவர் உரையில் கிறித்தவம் தமிழுக்கு, தமிழ் மண்ணிற்கு அளித்த அரிய கொடைகளை எடுத்துக் கூறியமை மகிழ்வைத் தந்தது.
எனினும்,
கூடிய கூட்டத்தினரையும் தாண்டி, ஊடக வழியும் இந்நிகழ்வைப் பார்த்துக் கொண்டிருந்த பொதுவெளி மாந்தருக்குக் கிறித்தவ மதம் சார்ந்து நடத்தப்பட்ட இந்நிகழ்வின் மூலம் கிறித்தவம் எங்குமே முதன்மை பெறவில்லையே! கிறித்தவத்தின் அடிப்படைக் கோட்பாடுகள், இக்காலத்தில் கிறிஸ்து பிறப்பின் ஏற்புடைமை, கிறித்தவம் உலக ஒருமைக்கு, சமயப் பொறைக்கு, சமயங்களின் உரையாடலுக்கு, சமூகங்களின் நல்லிணக்கத்திற்கு ஆற்றிவரும் ஒப்பற்றப் பணியை எங்கேயாவது எடுத்துக் கூறியிருக்க வேண்டாமா?
மேற்கண்ட
உயரிய கொள்கைகளைக் கொண்ட கிறித்தவம், தானாற்றும் ஒப்பற்ற அருள்பணிகளால் உயர்ந்து நிற்கும் கிறித்தவம், கிறிஸ்து காட்டிய அர்ப்பணத்தைக் கருவியாகக் கொண்டுதான் பணியாற்றும். நாட்டின் இறையாண்மையை, ஒருமையை, ஒற்றுமையை, உயிர்க்கொள்கையாம் மதச்சார்பின்மையைக் காக்க தமிழ்நாடு அரசோடு கை கோர்ப்போம் என்று
எடுத்துரைக்க வேண்டாமா?
என்னுடைய
ஆதங்கமெல்லாம் நற்செய்தி அறிவித்தலை மையக்கொள்கையாகக் கொண்ட கிறித்தவம், இக்கொள்கைக்கு முரணான இன்றைய ஆளும் கருத்தியலை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றிப் பேசியிருக்க வேண்டாமா?
த.வெ.க.வின்
கிறிஸ்துமஸ்
விழா
அண்மையில்
உதயமாகி தமிழ்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை உருவாக்கிவரும் விஜய் தலைமையிலான கட்சியும் கிறிஸ்துமஸ் விழாவை நடத்திக்காட்டியது. தமிழ்நாடு ஆயர் பேரவையின் ஆயர்கள் எவரும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளாமைக்கு என்ன காரணம்? அதுவும் மகிழ்ச்சியே.
விழாவில்
இயேசுவின் அன்பு, கருணை பற்றிப் பேசினார் விஜய். திருவிவிலியத்தின் யோசேப்பு கதை பற்றிப் பேசினார். ஆனால், யோசேப்பு வளர்த்த இயேசு பற்றி பேசவில்லை. இயேசு பற்றிப் பேச இவருக்குத் தைரியம் வராது என்பதுதான் உண்மை.
இவரை
விட்டுவிடுங்கள். இவரைத் தொடர்ந்து வந்த துதிபாடிகள் என்ன பேசினர்? துதிபாடிகளில் சிலர் கத்தோலிக்க மறையைச் சார்ந்தவர்களும் உண்டு என்பதுதான் இங்குக் கவனிக்கவேண்டிய ஒன்றாகும். இவர்கள் அனைவரும் கிறிஸ்துவைப் பற்றிப் பேசவில்லை. அரசியல் அதிகாரத்தை, தான் சம்பாதித்த திரைப்புகழ் மூலம் கவர நினைக்கும் ஒரு திரையுலக கதாநாயகரைப் புகழ்வதிலேயே அக்கறை காட்டினர். கிடைத்த ஒரு வாய்ப்பைப் பயன்படுத்தி அரசியல் பேசியிருக்க வேண்டாம்; கிறிஸ்துவை முன்னிறுத்தி சில விழுமியங்களையாவது எடுத்தியம்பியிருக்கலாமே, விழாவில் விஜய் இருந்தார்; இயேசு இல்லை என்பதே உண்மை.
அரசியலாருக்கு
இம்மாதிரி விழாக்களை நடத்துவதிலும் கலந்துகொள்வதிலும் அரசியல் நோக்கமிருக்கலாம். இவ்விழாக்களை முன்னெடுக்கும் கிறித்தவ அமைப்புகள், இவ்விழாக்களை ஆதாயப்படுத்திக்கொள்வது பற்றி யோசிக்க வேண்டாமா? தமிழ்நாட்டை ஆளும் அரசு மதச்சிறுபான்மையினரின் ஆதரவு அரசாக இருக்கலாம். ஆதரவு தராத நிலையிலும் நாம் கட்டிக்காக்க வேண்டிய அரசியல் நிலைப்பாடு என்பது பற்றிய தெளிவான சிந்தனையைத் தெரிவிக்க வேண்டாமா?
1925-ஆம் ஆண்டு
உருவான ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டை எட்டிய நிலையில், ‘நாம்’
(இந்துகள்), ‘அவர்கள்’
(மற்றவர்கள்) என்று மக்களைப் பிளவுபடுத்தி ஒடுக்கும் அரசியலை, ஒதுக்கும் அரசியலை முன்னெடுத்துச் செல்வதில் வெற்றி கண்டு வருதலின்போது, கிறித்தவர்கள் கிறிஸ்து பிறப்பு விழா போன்ற பொதுவெளி நிகழ்ச்சிகளை எப்படிப் பயன்படுத்தப்போகிறோம்?
“ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மக்களிடம் முன்வைக்கும் கருத்தியல் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. இக்கருத்தியல் பிரிவினையை உள்ளடக்கியது. இக்கருத்தியலில் எந்த முற்போக்குக் கொள்கையும் இல்லை. இதே கருத்தியல்தான் காந்தியின் கொலைக்குக் காரணமாயிற்று. இக்கருத்தியல்தான்
அம்பேத்கரைச் சிறுமைப்படுத்தியது. இதே கருத்தியலால் ஈர்க்கப்பட்டோர் நூற்றுக்கும் மேற்பட்ட போராட்டங்களை முன்னெடுத்து, மனுஸ்மிருதியை அரசியல் சாசனமாக அறிவிக்கக் குரல் கொடுத்தனர். கடந்த நூறாண்டுகளாகத் திட்டமிட்டு விதைக்கப்பட்டு மக்கள் நெஞ்சங்களில் ஊடுருவியதன் விளைவே மதம் பற்றிய உச்ச நீதியரசரின் கருத்தின்போது செருப்பைக் கழற்றி எறியச் செய்தது” (Front Line. Dec. 15,
2015).
வகுப்புவாத
நச்சு பற்றி, பா.ச.க.வின் அரசியல் கருத்தாக்கம் பற்றி நம் அமைச்சர்கள் எவ்வளவு தெளிவு பெற்றிருக்கிறார்கள்? தெளிவு இருந்தாலும் வெளிப்படையாகப் பேச முன்வருவார்களா? அமைச்சர்களை விட்டுவிடுங்கள்... நம் மறையாளர்களில், இக்கருத்தியல் பற்றிய தெளிவு எத்தனை பேருக்கு உள்ளது? சனநாயக அரசு மக்களுக்குப் பதில்கூற வேண்டுவது கட்டாயமென்பதுபோல், மதச் சிறுபான்மையோர் மத அடையாளத்தைச் சமரசமின்றிப்
பேணவும், மதங்கடந்து சமூகப் பாதுகாப்பையும் வளர்ச்சி நோக்கில் உத்தரவாதப்படுத்த வேண்டுவதும் கட்டாயமாகும். தமிழ்நாட்டின் மதவாத எதிர்ப்பு அரசியலில் தயக்கமின்றி எழுந்து நிற்போம்.
மெக்காலே பாரதத்தின் பாரம்பரியக் கல்வி அறிவையும் வேதமரபுகளையும் பாழாக்கிவிட்டார், ஆங்கிலத்தைத் திணித்துவிட்டார், குருகுலம் என்ற அற்புதமான கல்வி அமைப்பைச் சிதைத்து அடிமைச் சிந்தனையை விதைத்துவிட்டார் என்பதே மெக்காலேயின்மீது இந்துத்துவக் கருத்தியலாளர்கள் வைக்கும் முக்கியக் குற்றச்சாட்டு. மெக்காலே கல்வியின் நோக்கமே இந்தியர்களை மொழிபெயர்ப்பாளர்களாக உருவாக்கி, சிந்தனை ரீதியான அடிமைகளாக அவர்களை உருவாக்கும் நோக்கம் கொண்டதாகும் என்பதுதான் அவர்கள் தரப்பில் முதன்மையாக முன்வைக்கப்படும் வாதமாகும். அதற்கு ஆதரவாக அவர்கள் காட்டும் மெக்காலேயின் குறிப்புகளில் காணப்படும் மேற்கோள் இதுதான்:
“நாம் ஆண்டு கொண்டிருக்கும் பல கோடி மக்களுக்கும்
நமக்கும் இடையில் மொழிபெயர்ப்பாளராக இருக்கும் ஒரு வகுப்பினரை உருவாக்குவதே இப்போது நம்மால் செய்யக்கூடிய சிறந்த செயலாகும். அவர்கள் இரத்தத்தாலும் நிறத்தாலும் இந்தியர்களாக இருப்பார்கள்; ஆனால், சுவைகளால் அவர்கள் ஆங்கிலேயர்களாக இருக்கவேண்டும்” (We must at present do our best to form a class who may be
interpreters between us and the millions whom we govern, a class of persons
Indian in blood and colour but English in taste).
ஆனால்,
அவர்கள் காட்டும் இந்த மேற்கோள் முழுமையானதல்ல; பாதி உண்மையை மட்டுமே பேசி, முழு உண்மையை மறைக்கும் அவர்கள் அதன்மூலமாக வரலாற்றைச் சிதைக்க நினைக்கிறார்கள். அந்த மேற்கோளில் மீதிப்பாதியையும் நாம் அறியவேண்டும்.
அவர்கள்
சொல்லாமல் மறைத்தது இதுதான்: “இந்த நாட்டுத் தாய்மொழிகளைச் செழுமைப்படுத்தி அவர்களுக்குக் கையளிப்போம். மேல்நாட்டு பெயரிடும் முறைகளிலிருந்து அறிவியல் சொற்களைக் கடன்பெற்று நாம் இம்மக்களுக்கு வழங்கும் போது, அது அவர்களின் மொழிகளில் ஊடக வளமான அறிவைக் கொண்டு சேர்க்கும். அது உறுதியாக மாறும். படிப்படியாக மாபெரும் மக்கள்திரளுக்கு அறிவைக் கொண்டு செலுத்தும் பொருத்தமான வாகனமாக அதை அவர்கள் பயன்படுத்தட்டும்” (To that class we may leave it to
refine the vernacular dialects of our
country to enrich those dialects with the terms of science borrowed from the
Western nomenclature and to render them by degrees fit vehicles for conveying
knowledge to the great mass of the population). அதாவது, இந்திய
மக்களின் தாய்மொழிகளை ஆங்கிலத்தைக் கொண்டு அறிவியல் மொழியாகவும் மேலைநாட்டு அறிவுசெறிந்த மொழியாகவும் மாற்றியமைக்கவேண்டும் என்பதே மெக்காலேயின் விருப்பமாக இருந்துள்ளது.
ஆங்கில
அரசால் கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ள பணத்தில் அனைத்து இந்தியர்களுக்கும் கல்வி அளிப்பதும், ஆங்கிலத்தில் உள்ள நூல்கள் அனைத்தையும் உள்ளூர் மொழிகளில் மொழிபெயர்ப்பதும் கடினமான செயலாக இருந்த காரணத்தினால், ஆங்கிலேயர்களுக்கு இந்திய மொழிகளைப் புரிந்துகொள்ளவும், ஆளும் தங்களின் நோக்கங்களை மக்களிடம் அவர்களது மொழியிலேயே கொண்டு செல்லவும் தகுதியான ஆள்கள் உடனடியாகத் தேவைப்பட்டனர். இதனால் இந்தியாவில் உள்ள ஒருசிலருக்கு முதலில் ஆங்கிலத்தைக் கற்றுக் கொடுத்து, அவர்கள் மூலம் ஆங்கிலத்தில் உள்ள நூல்கள் எல்லாவற்றையும் இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கச் செய்வதும், அவற்றை இந்தியர் அனைவரிடமும் கொண்டுசெல்வதும் மெக்காலேயின் செயல்திட்டமாக இருந்தது என்பதை நாம் உணரவேண்டும். “மெக்காலேதான் இந்திய மொழிகளை அழித்தார். அவர்தான் இந்தியர்களை அடிமைகளாக உருவாக்க முனைந்தார்” என்ற
வாதத்தில் சற்றும் உண்மை இல்லை என்பது மெக்காலே கூறியிருப்பதிலிருந்து புரியும்.
மெக்காலேயின்
கல்விக்கொள்கை இந்தியாவின் பாரம்பரியமான கலாச்சார அறிவைப் பாழாக்கிவிட்டது என்பதுதான் அடுத்து இந்துத்துவச் சக்திகள் முன்வைக்கும் குற்றச்சாட்டு. இதில் உண்மை உள்ளதா? என்பதனைப் பார்க்கவேண்டும். மெக்காலே இந்த மண்ணில் காலெடுத்து வைத்த நாள்களில் இந்தியாவில் இருந்த சமூகச் சூழலை ஓரளவு அறிந்துகொண்டால் அந்த விவாதம் எவ்வளவு தூரம் வலுவற்றது என்பது புரியவரும்.
மெக்காலே
இந்தியாவிற்கு வந்த நாள்கள் இந்தியச் சமூகம் அறிவியலிலும் தொழில்நுட்பங்களிலும் மிகவும் பின்தங்கியிருந்த ஒரு காலகட்டம். பிரிட்டிசார் வழங்கிய நிதி உதவியின் மூலமாக நடத்தப்பட்ட வேதபாடசாலைகளையும் மதரசாக்களையும் பார்த்துவிட்டு மெக்காலே கவர்னர் ஜெனரலுக்கு எழுதிய குறிப்புகளைப் பற்றி நாம் அறிவது அவசியம். அவர் இவ்வாறு எழுதுகிறார்:
“இங்கிலாந்தில் உள்ள ஓர் இலாடக்காரன் கூட ஒப்புக்கொள்ள மறுக்கும் மருத்துவமுறைகளும், இங்கிலாந்தில் உள்ள பாடசாலைகளில் படிக்கும் சின்னஞ்சிறிய சிறுமியருக்கும் நகைப்பை உண்டாக்கும் விபரீதமான வானசாஸ்திரங்களும், முப்பது அடி உயரமுள்ள அரசர்கள் 60,000 ஆண்டுகள் ஆண்ட வரலாறுகளைக் கொண்ட சரித்திரமும், பாற்கடலும் நெய்க்கடலும் கொண்ட பூகோள சாஸ்திரமும் இங்குக் கற்பிக்கப்படுகின்றன. கற்பித்தல் என்பது அரசாங்கத்தின் கடமையாகாது என்றும், ஒரு கழுதையைத் தொட்டுவிட்டால் எத்தனை தரம் குளிக்கவேண்டும், எந்த மந்திரம் சொல்லி புனிதப் படுத்திக்கொள்ளவேண்டும் என்றும், ஓர் ஆட்டைக் கொன்ற பாவத்திற்குப் பரிகாரமாக எந்த வேதத்தை எவ்வளவு பாராயணம் செய்யவேண்டும் என்றும் இந்திய மக்கள் தெரிந்துகொள்வதற்காக நாம் அரசு வரிப்பணத்தில் கலாசாலைகள் நடத்துவது மாணவர்களின் இளமையை வீணாக்கும் நடவடிக்கையாகும். இப்படிப் பலவாறான முரண்பாடுகளுடன் இந்தியாவில் நிலவிவரும் சமஸ்கிருத கல்விமுறை என்பது திட்டமிட்டு, இந்தியாவை இருளில் வைக்க சிறப்பாகத் திட்டமிடப்பட்ட முறையாகும்” (the
Sanskrit system of education would be the best calculated to keep the country
in darkness) என்பதைக்
கவர்னர் ஜெனரல் பார்வைக்குக் கொண்டு சென்றார் மெக்காலே.
கவர்னர்
ஜெனரல் இந்திய மாணவர்களுக்கு வழங்கிய மானியத்தில், மெக்காலே வருவதற்கு முன்னர் இந்திய மாணவர்களுக்கு வழங்கப்படுவதற்காக சமஸ்கிருதத்திலும் அரபியிலும் பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் அச்சிடப்பட்டன. அதனை
மாணவர்கள் யாரும் வாங்க முன்வராததால் அப்புத்தகங்கள் அரசின்
கிட்டங்கிகளில் கரையான் அரித்துக் கேட்பாரற்றுக் கிடந்தன. ஆனால், ஆங்கிலப் பாடப்புத்தகங்கள் சில ஆயிரங்களே அச்சிடப்பட்டிருந்தாலும், அவை அனைத்தையும் மாணவர்கள் விரும்பி வாங்கிச் சென்றதால் உடனடியாக விற்றுத்தீர்ந்தன. அதனால் அரசுக்குச் சில ஆயிரம் ரூபாய்கள் இலாபம் கிடைத்தன. இதை ஆங்கிலேய அரசுக்குச் சுட்டிக்காட்டிய மெக்காலே, ‘அரபியும் சமஸ்கிருதமும் பெரும்பாலான இந்தியர்களுக்கு அந்நிய மொழிகள்தாம்’ என்றும்,
‘அவைகளைப் படிப்பதைவிட ஆங்கிலம் கற்றால் எதிர்காலத்தில் இந்தியா ஓர் அறிவுசார்ந்த நாடாக உருவாகும்’
என்றும் கவர்னர் ஜெனரலிடம் வலியுறுத்தினார்.
ஆங்கிலம்
கற்றதால் இரஷ்யா எப்படி விஞ்ஞானத்தில் வளர்ந்தது? என்று எடுத்துரைத்தார் மெக்காலே. மெக்காலேயின் நிலைப்பாட்டில் இருந்த நியாயங்களை ஏற்றுக்கொண்ட கவர்னர் ஜெனரல், மெக்காலேவை உடனடியாக அரசின் கல்விக் குழுவிற்குத் தலைவராக நியமித்து, அரசின் கல்வி மானியம் முழுவதும் அரசின் பாடத்திட்டங்களைப் பயிற்றுவிக்கும் பள்ளிகளுக்கு மட்டுமே செலவிடப்படும் என்றும், சமஸ்கிருத வேதபாடசாலைகளுக்கும் மதரசாக்களுக்கும் வழங்கப்பட்டு வந்த மானியங்களையும் உடனடியாக நிறுத்தி உத்தரவிட்டார்.
மெக்காலேயின்
இந்த நடவடிக்கைகளை அப்போதிருந்த மதவாதிகள் எதிர்த்தார்கள். தங்களது மதங்களுக்கு எதிராக நடத்தப்படும் சதி என்று கூக்குரலிட்டனர். ஆங்கிலேயர்களும் எதிர்த்தார்கள். இந்தியர்களுக்கு ஆங்கிலம் சொல்லிக்கொடுப்பதால் அவர்கள் உலக அறிவு பெற்றவர்களாக மாறி, ஒரு கட்டத்தில் நம்மையே எதிர்ப்பார்கள் என்று பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் மெக்காலேவுக்குக் கண்டனம் தெரிவித்தனர். அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத மெக்காலே சிறப்பான பாடத்திட்டத்தைத் தயாரித்து, கல்வியை அனைத்துத் தரப்பினருக்கும் கொண்டு சேர்ப்பதில் உறுதியாக இருந்தார். சில கல்வி நிலையங்களில் நடந்த கிறித்தவ மதப் பிரச்சாரங்களைக் கடுமையாகக் கண்டித்து, அக்கல்வி நிறுவனங்களுக்கு அரசு மானியத்தை நிறுத்தினார். இந்திய நீதிமன்றங்களில் நடைமுறையில் இருந்த மனுதர்மம் மற்றும் ஷரியத் சட்டங்களுக்கு மாற்றாக இந்தியக் குற்றவியல் சட்டத்தைத் தயாரித்துக் கொடுத்தார்.
மெக்காலே
அன்று வைத்த புள்ளிகள் இன்று அழகான கோலமாக விரிந்துள்ளது. நமது பிரதமருக்கு இதையெல்லாம் நினைவூட்டும் கடமை நமக்கு உண்டல்லவா!
போர்முனையிலுள்ள இராணுவப் பிரிவு ஒன்றை எதிரி நாட்டினரின் ஏவுகணைகள் துளைக்கும் நிலை; அங்குள்ள இராணுவ வீரர் ஒருவர் தங்கள் கட்டுப்பாட்டு அறைக்கு ரேடியோ மூலம் தகவல் கொடுக்கிறார். சில நொடியில் ஈக்கள் மொய்ப்பது போன்று வெடிகளுடன் சிறிய ட்ரோன்கள் வந்து அங்கிருக்கும் கட்டடங்களைத் துருவி, எதிரிகளிருக்கும் இடத்தைத் தாக்குகின்றன. இது தான் இன்றைய போர்முனை நிலவரம்.
உக்ரைன்
நாட்டின் இராணுவம் இன்று நடந்து கொண்டிருக்கும் இரஷ்யா-உக்ரைன் போரில், இதேபோன்று இரஷ்ய எண்ணெய் கிணறுகளை அங்குச் செல்லாமலே தாக்கியதாகக் கூறப்படுகிறது. உலக
வரலாற்றில் பல போர்கள் நடந்தேறின.
கடந்த நூற்றாண்டில் உலகளாவிய இரண்டு பெரும் போர்கள் நூற்றாண்டின் இறுதியில் வளைகுடா போரும்
சேர்ந்துகொண்டது. இவை மேலோட்டமாக நாடுகளிடையே ஏற்பட்ட மோதல் என்பதாகப் பார்க்கப்பட்டாலும், ஒரு பின்னணியைக் கொண்டில்லாமல் இல்லை. அடுத்துவரும் இருபது ஆண்டுகளில் நாடுகளிடையே ஏற்படும் மோதல்கள் இதுவரை இருந்தது போலவே நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நாட்டின் வளங்கள், பொருளாதார ஏற்றத்தாழ்வு, கொள்கை உடன்பாடின்மை போன்ற காரணங்களுக்காக இருந்தாலும், எவ்வாறு போர்கள் இருக்கப்போகின்றன என்பதைப் புதிய தொழில்நுட்பங்கள், அவைகளை நடைமுறைப்படுத்துதல், புதிய நாடுகள் இத்தொழில்நுட்பங்களில் திறன் பெற்று முந்திக்கொள்ளுதல் போன்றவை தீர்மானிக்கும் என்று கருதப்படுகிறது.
தானியங்கி போர்க்கருவிகள்
ஏ.ஐ. தொழில்நுட்பம் சார்ந்த
போர்க்கருவிகள் காலப்போக்கில் மனிதர்தம் கட்டுப்பாட்டை இயந்திரங்களிடம் விட்டுவிடும் நிலை ஏற்படலாம் என்று அஞ்சப்படுகிறது. போர்க்கருவிகள் ‘தானியங்கிகள்’ (Autonomous) என்ற தர்க்கம் பலர்
மனத்தில் இருந்தது; இப்போது ஏ.ஐ. இயந்திரங்கள்
மனித ஆணையில்லாமலேயே செயலாற்றுபவை என்பதை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டோம். ஒரு கட்டத்தில் இராணுவ அமைப்புகளுக்கு இவ்வகைக் கருவிகள் தங்கள் புழக்கத்தில் வந்துவிட்டால் அதைக் கைவிட இயலாத நிலைக்குள்ளாவார்கள் என்பது நடைமுறை. இதேவேகத்தில் இராணுவப் பயன்பாட்டின் ஏ.ஐ. சமுதாய
சட்டம்-ஒழுங்கிற்கு ஊடுருவி விடலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.
இன்று
ஏ.ஐ. தொழில்நுட்ப மொய்க்கும்
ட்ரோன்கள், ரோபோக்கள் போன்ற தானியங்கிகள் போர்க்களத்தில் மனிதரால் முடியாதவற்றைச் செய்து, போரின் போக்கை மாற்றியமைத்துக் கொண்டிருக்கின்றன. நடந்து கொண்டிருக்கும் இரஷ்யா-உக்ரைன் போர் மட்டுமன்றி (2022) ஏ.ஐ. பொருத்தப்பட்ட
ட்ரோன்கள் வெடிகளைச் சுமந்து சென்று எதிரிகளின் நிலைகளைத் தாக்குவதை சிரியா, ஏமன் நாடுகளில் வான்வெளிப் போரிலும் (2024) நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
மத்தியகிழக்கு,
காசா பகுதிகளில் (2024) இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலில் இதேபோன்ற ஏ.ஐ. வழிமுறைகள்
பயன்படுத்துவது செய்தியாக வந்துகொண்டிருக்கின்றன. பல காலமாகப் புகைந்துகொண்டேயிருந்து,
திடீரென்று வெடித்த இஸ்ரேல்-ஈரான் (2025) மோதல் ஒரு பெரும் போரின் ஆரம்பநிலைதான். பாரம்பரியப் போர் போன்று நாட்டின் எல்லைகளில் இல்லாமல், வான்வழித் தாக்குதலே அதிகமாயிருந்ததைக் கண்டோம். ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பல வல்லரசுகள் இருந்தாலும்,
தீவிர சமரச முயற்சியில் அவை ஈடுபட முடியவில்லை. ஒருபுறம் சுயநலம்; மறுபுறம் போரிடும் நாடுகளை மேம்பட்ட ஆயுதங்கள் வழிநடத்தின என்பதாகவே இருந்தது. இந்நூற்றாண்டின் தொடக்கப்போர்கள் வான்வெளித் தாக்குதலைச் சார்ந்த ட்ரோன்கள், ஏவுகலன்கள், ஏவுகணைகள் போன்றவை சைபர் தாக்குதல் தொழில்நுட்பத் திறனை வெளிப்படுத்தின.
ஏ.ஐ.
போர்
ஆயுதங்களின்
விளைவுகள்
ஏ.ஐ.-யினால் வழிநடத்தப்படும்
ட்ரோன்கள் மனிதரின் கட்டுப்பாடில்லாமலே
தன்னிச்சையாக இயங்கும் நிலையில் சில நேரங்களில் எந்தத் தர்க்க முறையும் இல்லாமல் போர்முனையில் போரை முடுக்கிவிடும் தந்திரங்களைப் பரிந்துரைக்கக்கூடும் என்ற திறன்களையும் பெற்றுள்ளன. இதனால் போரைத் துரிதப்படுத்துவது மட்டுமன்றி, மக்களுக்கும் சூழலுக்கும் கட்டிப்பாடில்லாத, வரையறையற்ற இழப்பும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
ஏ.ஐ. தொழில்நுட்பம் தொடர்ந்து
மேம்படுத்தப்பட்டு வரும் நிலையில், மிஞ்சிய செயலாற்றல் கட்டத்தை அடைந்து, தகாத முறையில் பயன்படுத்த நேரிடுவது அதிகம் என்று கருதப்படுகிறது. ஏற்கெனவே விஞ்ஞான வளர்ச்சி வேகத்தில் ஒரு கட்டத்தில் இயந்திரம், மனிதனை மிஞ்சிவிடலாமென்ற சந்தேகமும், அச்சமும் பலர் மனத்தில் உள்ள நிலையில், ஏ.ஐ. போர்முனைத்
தொழில்நுட்பம் நாடுகளுக்கிடையே மற்றும் சமுதாயத்தினரிடையே உள்ள உறவைப் பெரிதும் பாதிப்படையச் செய்யுமென்றும் கருதப்படுகிறது. 15-20 ஆண்டுகளுக்குப் பின்னான நாள்களை நினைத்துப் பார்ப்போமென்றால் இன்று நாம் அபாயக் கட்டத்தின் விளிம்பில் இருக்கிறோமோ? என்ற பயம் உண்டாகிறது என்று தனியார் அமைப்பான அமெரிக்கப் பாதுகாப்பு ஆய்வு கூடத்தின் உதவித் தலைமை அதிகாரி கூறுகிறார்.
தானியங்கிப் போராயுதங்கள்
- மனித கட்டுப்பாடு?
பல
ஆண்டுகளுக்கு முன்பிருந்தே போர்த் தளவாடங்களில் ஏ.ஐ.-யின்
பயன்பாடு இருந்தாலும், இப்போது வேகமெடுத்து, அதற்கான முதலீடும் அதிகரித்து வருகிறது. ஒரு போராயுதம் தன்னாளுமை படைத்ததா? இல்லையா? என்பது வாதத்திற்குரியதாக இருந்தாலும், இயந்திரம் இன்று மனிதத் தூண்டுதல் இல்லாமலே முடிவெடுக்கும் திறன் பெற்றிருக்கிறது என்பதை மறுக்கமுடியாது. உலகளவில்
ஏ.ஐ. சார்ந்த இராணுவ
ட்ரோன் மற்றும் விமானி இல்லாத போர் விமானங்கள், நீருக்குள் பயணிக்கும் செயலிகள் உற்பத்தியில் நிறுவனங்கள் கழுத்தை நெரிக்கும் போட்டியில் முதலீடு செய்வது, இதன் அபார வளர்ச்சியையும், பெரும் தொழில் தளமாக உருவெடுத்து விட்டதையும் காட்டுகிறது. இந்த முன்னேற்றம் விஞ்ஞான சாதனையாக இருந்தாலும், உலக அமைதிக்குக் கவலையளிப்பதாக உணரப்படுகிறது. இதில் மற்றோர் அனுபவம் என்னவென்றால், அண்மையில் நடந்த போரில் (2024), ஒரு நாடு, மென்பொருள் இயக்கத்தில் 10% பிழை
இருக்கும் என்று தெரிந்தும், ஏ.ஐ. தரவுகளை
நம்பிப் போரில் இலக்குகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
சில
ஏ.ஐ. சாதனங்கள் விளம்பரங்களுக்காகப்
பயன்படுத்துவது இன்று நடைமுறையிலிருப்பதாகவும்
பார்க்கப்படுகிறது. ஏ.ஐ. சார்ந்த
கருவிகளின் தன்மையைப்
பற்றி ஆராயும்போது இன்று கூறப்படுவது: “முடிவெடுப்பதில்
எப்போதும் மனிதத் தலையீடு இருக்கவேண்டும்.” அதாவது இயந்திரத்திற்கு முழு கட்டுப்பாட்டைக் கொடுக்கக்கூடாது என்பது. இந்நிலையில்
ஆராய்ச்சியாளர்கள் ஓர் உதாரணத்தை முன்வைக்கின்றனர்: ஓர் ஓட்டுநர் இல்லாத மோட்டார் வாகனத்தில் ஒரு மனித ஓட்டுநரோடு பயணிக்கும்போது, ஏதாவது நெருக்கடியில் மனித ஓட்டுநர் அந்த வாகனக் கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்வார் என்பது பொதுவான யூகம். ஆனால், ஒருவேளை அந்த வாகனம் தானாகத் தவறும்போது அல்லது ஓட்டுநரை வசப்படுத்திவிட்டால் அந்த நிலைக்கு யார் பொறுப்பேற்பது? அல்லது எதிர்பாராத
விதமாகத் தானியங்கும் மோட்டார் வாகனம் விபத்து நேரும் சடுதியில், அந்த மோட்டார் ஓட்டுநரிடம் தன் கட்டுப்பாட்டைக் கொடுத்து விட்டால் யார் தவறிழைப்பதாகக் கருதுவது? இதற்கு ஆராய்ச்சியாளர்கள் கூறுவது: “ஒரு மனிதர் அந்த இருக்கையில் இருப்பதினால், விபத்து நேரிட்டால் குற்றம் சுமத்த அவர் கிடைப்பாரல்லவா?”
ஏ.ஐ. நடைமுறையில் இன்று
இராணுவத்தில் பல உருவங்களில் இயங்கத்
தொடங்கிவிட்டது. தானியங்கி வாகனங்கள், கப்பல்கள், ட்ரோன்கள், விண்வெளிக் கலங்கள், ஆயுதங்கள், ஏ.ஐ. விமான
ஓட்டி, ஏ.ஐ. விமானக்
கட்டுப்பாட்டு அறை மட்டுமன்றி ஏவுகணைகள், நீர்மூழ்கிக் கப்பல்கள், செயற்கைக்கோள் மேலாண்மை என்று கூறிக்கொண்டேபோகலாம்.
எந்த
நாட்டிலும் இராணுவம் என்பது எப்போதும் தயார் நிலையிலும் புதுப்பித்துக்கொண்டும் இருக்கும் பிரிவு. ஏ.ஐ. - அல்கோரிதம்
அவ்வப்போது ஏற்படும் இயந்திரக் கோளாறுகள் மற்றும் அவை உண்டாகும் பின்னணி குறித்துத் தரவுகள் அடிப்படையில் முன்கூட்டியே பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும் உதவுகிறது.
போர்முனையில்
ட்ரோன்ஸ், இராக்கெட்டுகள் பயன்படுத்துவது சாதாரணமாகிவிட்ட இந்நாள்களில், போர்முனைக்குச் செல்லும் போர் வீரர்களின் எண்ணிக்கை குறைந்தும் வருகிறது என்பதை இப்போது நடக்கும் உச்சகட்ட இஸ்ரேல்-ஈரான் மோதலில் (2024) இந்நாடுகளின் போர் வீரர்கள் எல்லையில் இருப்பதைக்காட்டிலும் உள்நாட்டில் கவனம் செலுத்துவதைப் பார்க்கமுடிந்தது.
இப்படியாக,
இலக்குகளைத் திரும்பத் திரும்பத் தாக்குதல் நடத்துதல் தொடங்கி, சென்ஸார்ஸ் துணையோடு கடினமான தரைப்பகுதிகள் வரை போர்க்களம் புதிய தொழில்நுட்பத்தோடு முன்னெடுப்பதில் ஏ.ஐ. பெரும்
பங்கு வகிக்கிறது.
சைபர் போர்
சைபர்
தாக்குதலிலிருந்து அதிமுக்கிய இரகசிய இராணுவத் தரவுகளைப் பாதுகாப்பது, இராணுவத்தினரை முகஜாடையில் அறிதல், இராணுவப் போர் வீரர்களுக்குத் தடையில்லா அனைத்து ஆயுதம், உணவு, உடை முதலியவைகளைத் தரவுகள் அடிப்படையில் கண்காணிக்க ஏ.ஐ. உதவுகிறது.
தரை, வான், கடல் என்றிருந்த காலம் சென்று, சைபர் முனையிலும் வேகமெடுத்து போர்முனையில், சைபர் தாக்குதல் மூலம் எதிரியின் ஆயுதக் கருவிகளைச் செயலிழக்கச் செய்தல், பலவீனப்படுத்துதல் போன்றவை பயன்பாட்டில் இருக்குமென்பதை இஸ்ரேல்-ஈரான் போர் (2025) உறுதி செய்தது. அண்மையில் இங்கிலாந்து இராணுவத்தினரின் தரவுகள் களவாடப்பட்டதும், அது சீனாவின் கைவரிசையாய் இருக்கலாமென்று இங்கிலாந்து யூகித்தாலும் சீனா மறுத்திருக்கிறது.
ஐ.நா.வின் வரம்புகளைப்
பொருட்படுத்தாமல், அணு ஆயுதச் சோதனையை ஈரான் தொடர்ந்து வரும் நிலையில், ‘ஸ்டக்ஸ்நெட்’ என்ற
உயர்தர கணினி வைரஸ் புரோகிராம் வழியாக ஈரான் நாட்டின் அணு உலை சோதனைச் சாலையில் கண்காணிப்போருக்குத் தெரியாமல் ஊடுருவச் செய்யப்பட்டு, அணு சோதனை சேதம் அடைந்து, இயக்கம் தடைபட்டது. ஈரான் அணு சோதனையை நேரடியாக எதிர்த்த இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இதற்குக் காரணம் என்று கூறப்பட்டாலும், அந்நாடுகள் மறுத்துவிட்டன. இத்தாக்குதல் டிஜிட்டல் கட்டமைப்பு வளர்ச்சியையும், பிற நாட்டின்மீது மறைமுகத்தாக்குதலில் ஈடுபடுவதற்கு நெறிமுறைகள் இல்லை என்பதையும் காட்டுவதோடு, எவ்வாறு சிறிய கோட் (Code) பெரிய
போரை நிறுத்தும் திறன் பெற்றிருக்கிறது என்பதையும் வெளிப்படுத்துகிறது.
விண்ணில் ஆயுதங்கள்
நாடுகளுக்கிடையே
தரை, கடல் வழியாக யுத்தங்கள் நடந்த காலம் சென்று, இப்போது பெரும்பாலும் வானில் மோதல்கள் அதிகரித்து வருகின்றன. போராயுதங்களைக் கண்காணிப்பதில் வான் வழிச் செயற்கைக்கோள்களின் செயலாற்றலும் பெருகிவிட்டன. நாளுக்கு நாள் நாடுகளின் தேவைக்கும், வணிகப் பயன்பாட்டிற்கும் செயற்கைக் கோள்களினால் விண்வெளி சூழப்பட்டு வருகிறது.
2022-ஆம் ஆண்டு
தொடங்கிய இரஷ்யா-உக்ரைன் போரின்போது, இரஷ்ய இராணுவம் தரைமார்க்கத் தாக்குதலைத் தொடுக்க ஒருமணி நேரத்திற்கு முன்னரே, உக்ரைன் நாட்டின் தொழில்நுட்ப மையத்தை முடக்கிவிட்டதை விண்வெளி ஆயுதங்களின் திறனுக்குச் சான்றாகக் கூறப்படுகிறது.
அமெரிக்கா,
இரஷ்யா, சீனா போன்ற நாடுகள் தங்களுக்குத் தற்காப்பு என்று கூறி அதிவேக விண்வெளி ஆயுதப் போட்டியில் இறங்கியிருப்பது விண்வெளியை முற்றிலும் ஆயுதமயமாக்கும் நாள்கள் தொலைவில் இல்லை என்பதையே வெளிப்படுத்துகிறது. இப்போட்டியில் மேலும் பல நாடுகள் வரிசைகட்டிக்
கொண்டிருப்பது வருங்காலங்களில் விண்வெளியில் அதிகளவில் போர் நிகழ வாய்ப்பிருப்பதாகக் கருதப்படுகிறது.
இரஷ்யா
2050-க்குள் 6-வது தலைமுறைப் போர்விமானத்தை உருவாக்கிப் பயன்பாட்டில் கொண்டுவரும் என்று இரஷ்ய செய்திப் பிரிவான ‘டாஸ்’ கூறுகிறது. இது மனிதர் அல்லது மனிதரல்லாத விமானமாயிருக்கும். ஜப்பான், இத்தாலி, பிரிட்டன் போன்ற நாடுகளும் 6-வது தலைமுறை விமானத்தை ‘டெம்பஸ்ட்’
என்ற பெயரில் உருவாக்கவிருக்கின்றன. மற்றொருபுறம் பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் என்ற நாடுகள் தனியாக இதில் இறங்கியுள்ளன.
போர் மூட்டம்
‘வார் க்ளௌட்’ என்பது ‘Dictionary’பொருள்படி
‘சீக்கிரத்தில் போர் மூள்வதற்கான அறிகுறிகள்.’ கணினி வட்டாரத்தில் ‘வார் க்ளவுட்’ என்பது ‘செர்வர்ஸ்’
வலைத்தள உதவியுடன் வகைப்படுத்தப்பட்ட இராணுவத் தரவுகளை இணையதளத்தில் சேமித்து, ஆய்வு செய்வது. இது ‘க்ளௌட்
கம்ப்யுடிங்’ போன்று
வேறு எங்கேயோ ஓரிடத்தில் சேமித்து வைத்திருக்கும் தரவுகளைப் பயன்படுத்தப்படும் வழிமுறை. இத்திறனைக் கொண்டு ஏ.ஐ. அடிப்படையில்
போர்த் திட்டங்கள் வகுக்கலாம்.
‘க்ளவுட்’ உலகளாவிய கட்டமைப்பின் அடிப்படை அங்கம் என்பதால் போர்க்களத்திலிருக்கும் போர்வீரருக்குத் தேவையான இராணுவத் தொழில்நுட்பத் தரவுகளையும் தொழில்நுட்பங்களையும், உதாரணமாக, இராணுவத்தினருக்கு மிக சக்திவாய்ந்த ஏ.ஐ. கணினிகளைக்
கொடுப்பதன் மூலம் போர்க்களத்திலிருப்போர் அவர்களே ஏற்ற திட்டங்களைத் தீட்டவும், வகைப்படுத்தப்பட்ட இராணுவ இரகசியங்களை அறிந்துகொள்ளவும் முடியும். இவ்வழிமுறைகள் கடுமையாக மறைக்கப்பட்ட திரைச் சொற்களால் எதிரிகளின் கையில் விழாதபடி அமைந்திருக்கும்.
அரசியல் கட்சிகள் கொள்கைகள், கோட்பாடுகள், சித்தாந்தங்கள் என்ற அடிப்படையில் செயல்படுபவை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கட்சிகள் இடையே திராவிடம், தமிழ்த்தேசியம் என்ற பொதுப்பிரிவுகள் உள்ளன. த.வெ.க.-வைப் பொறுத்தவரைத் திராவிடமும் தமிழ்த்தேசியமும் எனக் குழப்பநிலை எடுத்தது. த.வெ.க. கட்சி - தி.மு.க. மற்றும் ‘நாம் தமிழர்’ கட்சிகளின் கொள்கைகளை அப்படியே படியெடுத்தது. காங்கிரஸ், பா.ச.க. போன்ற கட்சிகளோ தேசியம் பேசுகின்றன. இதில் இடதுசாரி, வலதுசாரி என்ற அரசியல் தனி.
த.வெ.க. அன்றாடச்
செயல்பாட்டுக் கட்சியாக இல்லை. திருவிழாக் கூட்டமாகக் கூடி கலைகிற கொண்டாட்ட மனநிலையில் தலைவரும் இரசிகர்களும் இருக்கிறார்கள்.
அது தினப்படி நடவடிக்கை கொண்ட அரசியல் கட்சியாக இன்றும் மாறவில்லை.
அது தமிழ்நாட்டு அரசியலின் விளையாட்டுப் பிரிவு அரசியல் கட்சியாக உள்ளது.
நடிகர்
விஜய் இப்படியாக ஓர் ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார்: “சிங்கம் வேட்டைக்கு மட்டுமே வெளியே வரும்; வேடிக்கை பார்க்க எல்லாம் வெளியே வராது.” இதுதான் அவரது பொது அறிவு. எவரையும் சந்திப்பது இல்லை, எதற்கும் கருத்து தெரிவிப்பது இல்லை. பனையூர் பதுங்கு குழியில் படுத்தே விடுகிறார். திருநெல்வேலி ஆணவக் கொலையிலும், திருப்பரங்குன்றம் தீபமேற்றும் சர்ச்சையிலும் த.வெ.க.
அமைதி காக்கிறது. வாக்குவங்கி அரசியல்
நடத்துகிறது. இது குறித்து அக்கட்சியின் பிரச்சாரச் செயலாளர் நாஞ்சில் சம்பத்திடம் கேள்வி கேட்கப்படுகிறது. இன்னோவா புகழ் சம்பத் கூறுகிறார்: “திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய் அமைதி காப்பது நல்லது.” பா.ச.க.
‘இவர்தான் சிறுபான்மை மக்களின் வாக்குகளை வாங்கி, தி.மு.க.வைத் தோற்கடிப்பார்’ எனக்
கனா காண்கிறது.
த.வெ.க.-வைப்
பொறுத்தவரைத் தி.மு.க.
எதிர்ப்பு, ‘நடிகர் விஜய் தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர்’
என்ற அடிப்படையைத் தவிர, வேறு எதிலும் நாட்டம் காட்டுவதில்லை. பாண்டிச்சேரி சென்ற நடிகர் விஜய் அங்கும் தி.மு.க.வைத் தாக்கிக் குரல் கொடுக்கிறார். பா.ச.க.வின் தி.மு.க.
வெறுப்பு அரசியலைத் தன் பங்கிற்குத் தானும் விதைக்கிறார். தமிழ்நாட்டில் விமர்சிப்பது தி.மு.க.
ஆட்சி என்று! அது சரி... ஒன்றிய அரசை விமர்சிப்பதில் மோடி ஆட்சி என்று கூற நடிகர் விஜய் அவர்களுக்கு என்ன தயக்கம்? 12 ஆண்டுகளாக ஒன்றியத்தை ஆளும் பா.ச.க.-மீது தாக்குதல் இல்லை.
பெயருக்கு அவர்கள் ‘கொள்கை எதிரிகள்!’
32 ஆண்டுகளாக
ஆண்ட, ஊழல் குற்றச்சாட் டில் தண்டனை பெற்ற அ.தி.மு.க. குறித்து விமர்சனங்கள்
இல்லை. அவ்வளவுதான் ஆச்சரியக்குறிகளின் அடையாள அரசியல்.
நடிகர்
விஜய் பத்து நிமிடங்கள் தாளைப் பார்த்துப் பேசுவதற்குள் வேர்த்து, விறுவிறுத்துப் போகிறார். இது அவரின் புரிதலற்ற வெற்று அரசியலை வெளிக்காட்டுகிறது. தன் இரசிகர்களை அரசியல்மயப்படுத்தாமல் அவர்களிடம் திரைப்பட வசனங்கள் போல வீரவசனம் பேசுகிறார். அசட்டுச் சவால்களை அடுக்குகிறார். இலகான் கட்டிய குதிரை போல் இருக்கும் அந்த ‘நண்பா-நண்பிகளும்’ பொதுவெளியில்
தன் விஜய் கதாநாயகனின் முதல் நாள், முதல் படக்காட்சிக்கு வந்த இரசிக மனநிலையில் ஆர்ப்பரிக்கிறார்கள். அவர்களும் ஒழுங்குமுறைகளை விரும்புவது இல்லை. எல்லா நேரத்திலும் முட்டல்கள், மோதல்கள், அலறல்கள் என்ற புரிதலற்ற நிலையில் ஒருவிதப் போதையில் மிதக்கிறார்கள். இதன் வெளிப்பாடாக, ‘என் புருசனை விட விஜய்யைதான் ரொம்ப பிடிக்கும்’ என்ற
புதிய தமிழ்க்கலாச்சாரம் பார்த்தோம். ‘குழந்தை முக்கியமல்ல... விஜய்தான் முக்கியம்’
என்று தன் குழந்தையை ஐ.சி.யூ.வில் விட்டு வந்த தாயையும் பார்த்தோம். தன் மகன் இறந்தாலும் பரவாயில்லை, விஜயைப் பக்கத்தில் பார்த்தோம் எனப் பெருமிதப்படும் பெற்றோரையையும் பார்த்தோம். இந்தச் சமூகம் எங்கே போகிறது?
கேரளாவில்
புகழ்பெற்ற நடிகர் ‘விருதுகளின் நாயகன்’ மம்முட்டி பேசுகிறார்: “கேரள மக்கள் திரையரங்குகளில் தங்கள் தலைவர்களைத் தேடுவதில்லை. அவர்கள் தங்கள் ஊரில் நன்கு தெரிந்த, நல்ல திறமை உள்ள மக்களுக்கு நன்மை செய்யும் நபர்களைத் தேர்வு செய்வார்கள். நடிகர்களை நடிகர்களாக மட்டுமே பார்ப்பார்கள். மீறி மக்களை ஏமாற்ற நினைத்தால் (‘நின்ற ஜோலியை நோக்கடா!’) என்று செருப்பைக் கழற்றி அடிக்கவும் தயங்க மாட்டார்கள்” எனப்
பாடம் சொல்கிறார். கேரள மக்கள் கரூர் பெரும் துயர நாள்களில் தமிழரின் இரசிக மனப்பான்மை குறித்துச் சமூக வலைத்தளங்களில் கவலை தெரிவித்தனர்; அங்கலாய்த்தனர். நடிகர்கள் வாக்கிற்காக எப்படியும் மாறுவார்கள்; எந்த அடிப்படை அறமும் இல்லாதவர்கள் என்பது கண்கூடு.
தமிழ்நாடு
அரசின் இலவசங்கள் குறித்து த.வெ.க.வில் சேர்ந்த நாள் முதல் மாமல்லபுரம் சிறப்புப் பொதுக்குழு வரை த.வெ.க.வின் கொள்கை பரப்புப் பொதுச்செயலாளர் அருண்ராஜ் வெளுத்து வாங்கினார். இலவசங்கள் குறித்த த.வெ.க.வின் பார்வை ஓட்டு வங்கி அரசியலுக்கு உதவாது என்று தாமதமாக உணர்ந்த பின்பு பேசுகிறார்கள்.
நவம்பர்-5-ஆம் தேதிக்கும், நவம்பர் 22-ஆம் தேதிக்கும் உள்ள இடைப்பட்ட குறுகிய
காலங்களில் த.வெ.க.வின் முடிவு மாறுகிறது. காஞ்சிபுரம் உள்ளரங்கில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு இயக்கத்தில் விஜய் பேசுகிறார்: ‘த.வெ.க.
ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் வீடு வழங்கப்படும்; கூடவே மோட்டார் சைக்கிளும், காரும் இணைப்பாகத் தரப்படும். 40 இலட்சம் வீடுகளும், 20 இலட்சம் மோட்டார் சைக்கிள்களும் வழங்கப்படும்.’ இதற்கான திட்ட மதிப்பீடு விஜய்க்குத் தெரியாது. கார்கள் கணக்கெடுப்பில் இல்லை. எழுதிக் கொடுத்ததை வாசித்துச் சென்றார். எதையாவது சொல்லி, ஆட்சிக்கு வர வேண்டும் என்ற
சங்கி அரசியலைவிட, மங்கி அரசியல் கேவலமானது. இவர்கள் அரசியல் அடிப்படை தெரியாமல், கற்றுக்கொள்ளக்கூடிய ஆர்வமும் இல்லாமல் த.வெ.க.
என்ற கட்சியாகச் செயல்படுவது, பரபரப்பு செய்வது தமிழ்நாட்டு அரசியல் இதுவரை காணாத ஒன்று.
இணையத்தைத்
திறந்தால் ஆயிரமாயிரம் பொய்கள்! பலநூறு பணியாளர்கள் அவதூறு பரப்ப த.வெ.க.
கட்சி அலுவலகத்திலேயே பணிபுரிகிறார்கள். அதுபோல வடிவமைத்தப் பொய்களை ‘அவுட்-சோர்சிங்’
முறையில் காற்றில் பரவவிட பல இலட்சங்கள் செலவிடப்படுகின்றன.
‘பெய்டு-புரமோசன்’
செய்து ஓடாத படத்தை ஓடியதாகவும், ‘பாக்ஸ்-ஆபிஸ்’ தகவல்களைத் திரித்த நடிகரின் அனுபவம் அரசியலுக்குப் பயன்படுகிறது.
கடந்த
மாதம் முழுவதும் காங்கிரஸ்- த.வெ.க.
கூட்டணி என்ற வதந்தி பரப்பப்பட்டது.
கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை, அரசியலில் போக்கிடம் இல்லாத பழம் பெருச்சாளிகளைக்
கட்சியில் சேர்த்துப் பெருமை பேசுவது எனக் குறுக்கு, மறுக்கு அரசியலையும் புதிதாக த.வெ.க. முன்னெடுக்கிறது.
த.வெ.க.வினர்
சரியான அரசியல் புரிதல் இல்லாமல் சமூக-அரசியல் நிகழ்வுகளை மனம் போனபடி த.வெ.க.விற்கு ஏற்ப கற்பனைகளால் சித்தரிப்பது, தேர்தல் கணிப்புகள் என்ற பெயரில் புரட்டுகளைப் பரப்புகிறார்கள். ஏ.ஐ. தொழில்நுட்பம்
வழி கனவுப் படங்களை வெளியிடுவது என அலைப்பேசியில் அநாகரிக
அரசியல் செய்கிறார்கள். அவர்கள் வீதிகளுக்கு வந்து குடியாட்சித் தத்துவங்களைக் கற்று, தமிழ்நாட் டில் நாகரிக அரசியல் நடத்துவது நலம்.
2026-தமிழ்நாடு தேர்தல்
களத்தில் சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பெறுவதில் த.வெ.க.
எள்முனையளவும் நம்பிக்கை பெறவில்லை. அதற்கு முயற்சிக்கவும் இல்லை என்பதே சத்தியமான வார்த்தைகள்.
சிறுபான்மை
மக்களும் உங்களைப் புறக்கணிப்பார்கள் என்பதைக் காலமே பதிலாகக் காட்டும்.
பூமிப்பந்தில் பூச்சரம் சுற்றியதுபோல், படர்ந்து கிடக்கும் தமிழரெல்லாம் ஒற்றைப்புள்ளியில் ஒன்றிணைந்து கொண்டாடும் உறவுத் திருவிழா தைப்பொங்கல். சார்ந்திருக்கும் சமயம், சேர்ந்திருக்கும் சமூகம் மற்றும் வாழ்ந்துவரும் வட்டாரம் எனும் வரையறைகளைக் கடந்து, தமிழ் எனும் தனிப்பெரும் அடையாளத்தால் தொப்புள் கொடி உறவில் இதயம் பொங்கி மகிழ்ந்திருக்கும் மங்கலத் திருவிழா பொங்கல் என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை.
மறதிக்குப்
பெயர்பெற்ற தமிழினம், மறவாமல் கொண்டிருக்கும் உயர் பண்பு நன்றிமறவாமை. தன்னை வாழவைக்கும் இயற்கைக்கும், இணைந்து இயங்கும் விலங்குகளுக்கும் நன்றிகூறும் தருணமாகப் பொங்கல் பண்டிகையைத் தமிழினம் தகவமைத்துக் கொண்டுள்ளது. அறுவடை முடிந்த கையோடு அதற்குக் காரணமானவர்களை நன்றியோடு நினைவுகூரும் நற்பண்பின் செயல்வடிவமாக, பொங்கல் விழா குதூகலத்தோடு கொண்டாடப்படுகிறது.
போகியிலே
பழையனவற்றைக் களைந்து, செங்கரும்பும் இளமஞ்சளும் கைகோர்த்து, பச்சரிசியுடன் சர்க்கரை கலந்து, சூரியன் முன்னிலையில் நெருப்புச் சுவாலைகளின் அனல் கரங்களால் புதுப்பானையில் பொங்கி வழிய பொங்கலிட்டு, மறு நாள் கால்நடைகளைக் குளிப்பாட்டி கொம்புகளில் மைதீட்டி அலங்கரித்து, கழுத்தில் பூச்சூடி அவைகளையும் தன் இணைப்பணியாளர்களாய் கௌரவித்து, நிறைவாக மானிட முகங்களைத் தரிசித்து, நலம் விசாரித்து, உறவுகளைப் பகிர்ந்திட முகத்திற்கு முகமாய் காணும் திருநாளாய் பொங்கல் விழா நான்கு நாள்களாய் நடைபெறுகிறது.
வருடந்தோறும்
தமிழர் வாழ்வில் விளக்கேற்ற வந்துபோகும் வசந்த விழாவான பொங்கலையும், அதன் பொருளையும் நடந்து வந்த வரலாற்று வழிகளை இளைய தலைமுறைக்கு விளக்கிக் கூறுவதைத் தமிழினம் தவிர்த்தே வருகிறது. விடுமுறை கிடைக்கிறது என்கிற மேலிடும் மகிழ்ச்சியோடு தமிழரின் மரபுவிழா குறிக்கப்பட்டு வருகிறது. வான் புகழ் கொண்ட தமிழரின் வரலாற்றுக் கொண்டாட்டத்தை இன்றைய தலைமுறை பள்ளிக்கு விடுமுறை, புத்தாடைகள், தொலைக்காட்சியில் புதிய திரைப்படம், சுவையான சமையல், வெளியூர் சுற்றுலா என்கிற சுழற்சிக்குள்ளே சுருண்டுவிடுகிறது. வேர்களை விலக்கிவிட்டு, கிளைகளில் மட்டுமே தோரணம் கட்டித் தொங்க விடுகிற இளைய தலைமுறையினர் பொங்கலின் பொருளினை உணர்ந்து பானையில் பொங்கலிட வேண்டும்; அங்ஙனமே பொருளுணர்ந்த தமிழினம் பொங்கி எழுந்திட வேண்டும்.
‘கல்தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி தமிழர்குடி’ எனும்
உன்னதத்தைக் கொண்ட தமிழினம், வெறும் பழம்பெருமை பேசிப் பேசியே பாழாய் போய்க் கொண்டிருக்கிறது. தமிழினம் திட்டமிட்டு அதிகார வர்க்கத்தால் வஞ்சிக்கப்படுகிறது. தமிழின விரோதிகளும் துரோகிகளும் தமிழருக்குப் பாடை கட்டுவதிலே திரைமறைவு வேலைகளைத் திறம்படச் செய்து வருகிறார்கள். வேர்களை விலக்கிவிட்டு மரங்கள் தங்கள் கிளைகளுக்குத் தோரணம் கட்டுவதால் வாழ்ந்து விடமுடியாது. வேரில் வெந்நீரைப் பாய்ச்சுவதும், கிளைகளுக்கு வர்ணம் பூசுவதுமாய் சில தமிழினப் பகைவர்கள் தமிழின கற்பக விருட்சத்தை அழித்துவிட ஆலாபனை செய்துவருகிற அபாயத்தை, தமிழ்த் தலைமுறைகள் அறியாமலே அழிந்து வருகின்றன. இந்நிலையில், விழாவோடு முடித்துக்கொள்ளாமல் தமிழும் தமிழரும் விழாமல் பார்த்துக்கொள்வது தமிழ் மறவர்களின் தற்காலக் கடமையாகும்.
தனக்கெனத்
தன்னிகரற்றத் தன்மைகளைக் கொண்டு தனித்தியங்கும் உயர்தனிச் செம்மொழி எனும் உன்னதத்தைக் கொண்ட தமிழின் ஆண்டு களுக்குச் சமஸ்கிருதத்திலே பெயர்கள் சூட்டி கேவலப்படுத்தும் பழக்கம் வேறு எந்த மொழிகளிலும் இருக்கமுடியாது. அதுவும் புராணங்களின் புனைவுகளிலிருந்து பிழிந்தெடுத்த கற்பனைக் கதைகளிலிருந்து இந்த விச வேர் முளைக்கிறது. நாரத முனிக்கும் பெண் வேடம் பூண்டிருந்த கண்ணனுக்கும் பிறந்த பிள்ளைகள் அறுபது பேராம்! அவர்களின் பெயர்கள் தமிழரின் ஆண்டுகளுக்குச் சூட்டப்பட்டிருக்கின்றன.
சீரிளமைத்
திறம் வியக்கும் அன்னைத் தமிழை ஆரிய அழுக்கு பற்றிக்கொண்டதால் தமிழரின் ஆண்டுக்கு அந்நியர்களின் புராணப் புனுகுகளைக் கடனாக வாங்கி வைத்திருக்கும் இழிவை இந்த இளைய தலைமுறை அறிந்திருக்கவேண்டும். தான் பெற்றெடுத்த குழந்தைக்கு வழிப்போக்கன் பெயர் சூட்டுவதும் அதுவும் அடுத்த வீட்டுக்காரனைத் தகப்பனாக முதலெழுத்தில் குறிப்பதும் எத்தகைய அவமானம் என்று மானத்தை உயிரினும் மேலாய் போற்றுகிற தமிழ்க்குடிகள் உணரவேண்டும்.
‘தை பிறந்தால் வழி
பிறக்கும்’ என்பது
தமிழர் கண்ட வாழ்வியல் நடைமுறை. மரபுகளையும் பண்டையத் தமிழர் இலக்கியத் தரவுகளையும் கொண்டு ஆராய்ந்தால் தமிழராண்டின் தலைமாதம் தை என்பது புலனாகும்.
தமிழ் மாமேதைகள் மறைமலையடிகள், நாவலர் சோமசுந்தர பாரதியார், தமிழ்த் தென்றல் திரு.வி.க. மற்றும்
பாவேந்தர் பாரதிதாசன் உள்ளிட்ட தமிழின அறிஞர்கள் இதனை அறுதியிட்டு உறுதி செய்திருக்கின்றனர்.
தமிழரையும்
தமிழ்நாட்டையும் வஞ்சிப்பதையே நோக்கமாகக் கொண்டு ஒன்றிய அரசுகள் இயங்குவதை வரலாற்றில் பார்த்து வருகிறோம். தமிழரின் வீர விளையாட்டாகவும் காளை இனத்தின் வீரியத்தை வலுப்படுத்தவும் நெடுங்காலமாய் நடத்தப்பட்டு வரும் மஞ்சு விரட்டான ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை முடக்க சதிசெய்தனர். தமிழினத்தின் ஒருமித்த தன்னெழுச்சிப் போராட்டமாகிய மெரினா புரட்சியால் தமிழினப் பகைவர்களின் சதி உடைக்கப்பட்டது. தமிழர் மண்ணில் வாடிவாசல்கள் திறக்கப்பட்டன.
தமிழ்நாட்டின்
வளர்ச்சியை வடநாட்டவர்கள் பொதுவாகப் பொறுத்துக்கொள்வதில்லை. இந்திய ஒன்றியம் பல தேசிய இனங்களின்
கூட்டமைப்பு. இங்கே ஒரே தேசியம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் எனும் போலியான ஒற்றைக் கருத்தியல் நடைமுறைக்கு ஒத்துவராது. தமிழரின் தாய்நாடாம் தமிழ்நாட்டிலும் இன்னும் பிற நாடுகளில் தேசிய மொழியாகவும் கொண்டாடப்படுகிற செந்தமிழை முடக்கும் நோக்கில், இந்திய ஒன்றிய மொழிகளில் ஒன்றான இந்தி மொழியை தமிழர்மீது திணிப்பதும், இந்தியை இந்திய ஒன்றியத்தின் ஒரே தேசிய மொழி எனப் பிழையாகப் பிதற்றி, போலியாகக் கட்டமைப்பதை தமிழர்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள்.
வானொலி
உள்ளிட்ட ஊடகங்களிலும், தொடர் வண்டி போன்ற போக்குவரத்துகளிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் தமிழரின் வரிப்பணம் கலந்தே இருக்கிறது. ஆனால், இங்கெல்லாம் தமிழருக்குப் புரியாத அந்நிய மொழியான இந்தியே வலிந்து திணிக்கப்படுகிறது. தமிழர் தமிழரோடு உரையாட தாய்மொழி தமிழும், உலகோடு உரையாட ஆங்கிலமும் இருக்கும்போது இடைச்செருகலாக இந்தி அறியாத தமிழர்கள்மீது இந்தியைத் திணிப்பது மனித உரிமை மீறலாகும்.
தமிழை
எங்கெல்லாம் ஒழிக்க முடியுமோ அங்கெல்லாம் ஒழிப்பதற்கு அனைத்து அதிகார ஆயுதங்களையும் களத்தில் இறக்கிவிட்டு, மேடைதோறும் இந்திய ஒன்றியத்தின் தலைமை அமைச்சரும், மற்ற வடநாட்டு அமைச்சர்களும் தப்புத்தப்பாய்த் தமிழைப் பேசி தமிழ் ஆர்வலர்களாய் தங்களைக் காட்டிக்கொள்ள முயல்கிறார்கள். கோழியைப் பிடித்து குழம்பு வைக்க முயலுகிறவனும், கோழியின் மொழியிலே அதனைக் கூப்பிடுகிறான்; கொலைகாரன் தனது மொழியைப் பேசுகிறானே என்று கோழி பெருமை பாராட்டிக் கொண்டால், குழம்பில் மிதப்பதைத் தவிர அதற்கு வேறு வழியில்லை.
சங்கம்
வைத்து தமிழை வளர்த்த இம்மண்ணில் ‘காசி தமிழ்ச்சங்கம்’ என்னும்
தமிழுக்குத் தொடர்பில்லாத அமைப்பை மக்களின் வரிப்பணத்தில் அமைப்பதும், அதற்கு தமிழுக்கே தொடர்பில்லாதவர்களை வைத்துக் குடமுழுக்கு நடத்துவதும் தமிழுக்கும் தமிழருக்கும் இழைக்கும் அவமானமாகும். செத்துப்போன சமஸ்கிருதத்தைத் தமிழரின் தலையில் கட்டுவதை மானமிகு தமிழன்னையின் பிள்ளைகள் தலையைக் கொடுத்தாவது தடுத்து நிறுத்துவார்கள். கனகவிசயனின் தலையில் கல்லைச் சுமக்க வைத்து, இமய உச்சியில் சிலையெழுப்பிக் கொடியை நட்ட தமிழ் மரபின் தலைமுறைகள் இந்தக் கொடுமைகள் கண்டு கொதிக்காமல் இருப்பது வியப்பாய் இருக்கிறது.
தமிழுக்கு
எதிரான எல்லா நடவடிக்கைகளிலும் ஒன்றிய அரசுகள் ஈடுபட்டு வருவது வரலாற்றை அறிந்தவர்கள் புரிந்துகொள்வார்கள். தமிழ்நாட்டின் மக்கள்நலத் திட்டங்களுக்கு முட்டுக்கட்டைகள் போட அனைத்து முயற்சிகளிலும் ஒன்றிய அரசு ஈடுபட்டு வருகிறது. ஆனால், இந்திக்கும் இந்துத்துவ அடிப்படைவாதத்திற்கும் முட்டுக் கொடுக்கிறது. தமிழர்களுக்குத் தரவேண்டிய கல்வி நிதியைத் தராமல், புதிய கல்விக் கொள்கை எனும் அறிவியலுக்கு முரணான புராணப் புனைவுகளையும், பகுத்தறிவுக்கு ஒவ்வாத மூடத்தனத்தையும் திணிக்கின்றனர். செயற்கை நுண்ணறிவும், டிஜிட்டல் உபகரணங்களும் அறிவுசார் உலகை வழிநடத்தும்போது புராணங்களையும் கற்பனைக் காப்பியங்களையும் கல்விக் கருவூலமாகப் போதிக்கிறார்கள். பகுத்தறிவுப் பூமியான தமிழ் மண்ணில் மூடத்தனங்களை மூலதனங்களாகக் கொண்டு மக்களிடையே பிற்போக்குத்தனத்தைப் பிரச்சாரம் செய்கிறார்கள்.
அமெரிக்காவின்
ரைட் சகோதரர்கள் விமானத்தைக் கண்டுபிடித்து உலகிற்குத் தந்தனர்; ஆனால், புல்புல் பறவையில் ஆகாயத்தில் மனிதர்கள் பறந்ததாக மக்களின் காதில் பூ சுற்றுவதையும், பொய்களை
விதைப்பதையும் முழுநேர வேலையாக வைத்திருக்கிறார்கள். வரலாறுகளைத் திரித்து, கோவில்களை இடித்து, மசூதிகளையும் கிறித்தவ ஆலயங்களையும் அமைத்தார்கள் என்று வதந்திகளைப் பரப்பி அமைதித் தோட்டமான தமிழ் மண்ணில் மதக் கலவரங்களுக்கு வித்திடுகிறார்கள். தமிழ் மண்ணை ஒருகாலமும் ஆளமுடியாது என்பதால், புறவாசல் வழியே அரசியல் முகவர்களை ஆளுநர்களாய் அனுப்பி மக்களாட்சிக்கு விரோதமாய் மன்னராட்சி நடத்துகின்றனர்.
‘பெற்றோரைச் சுற்றிவருவது பூமியைச் சுற்றுவதற்குச் சமம்’ எனப் புரட்சியான வேதம் கூறிய தமிழ்க் கடவுள் முருகனை வைத்து அரசியல் செய்து, அதிகாரத்தைப் பிடிக்க குறுக்கு வழியில் தமிழ் மக்களைப் பிளவுபடுத்தும் கும்பலை, தன்மானம் கொண்ட தமிழினம் அடையாளம் காணவேண்டும். தமிழரின் இரத்தத்தை எண்ணெய் ஆக்கி, அதிலே குன்றத்து தீபம் ஏற்றி மகிழ்வு காணும் மனநிலை கொண்டவர் அல்லர் முருகப்பெருமான். தமிழரின் வாழ்வில் தீபம் ஏற்றுவதைப் பற்றி சிந்தியாமல் மசூதிக்கு அருகில் உள்ள எல்லைக் கல்லில் தீபம் ஏற்றி அரசியல் இலாபம் தேடும் மதவெறிக் கும்பலுக்குத் தமிழர்கள் இரையாகி விடக்கூடாது.
ஆட்சியில்
இருந்த பாண்டியன் தவறிழைத்ததால், மதுரையை எரித்த வீரத்தமிழச்சி கண்ணகி மரபில் வந்த தமிழ் வேங்கைகள், கடவுளின் பெயர் சொல்லி தமிழரிடையே பிளவுகளையும் மதவெறிகளையும் ஏற்படுத்தும் விஷமத்தனத்தை வேரோடுப் பிடுங்கி நெருப்பில் வீசவேண்டும். இன்று தமிழ் மக்களைப் பிளவுபடுத்தி, மக்கள் நலத்திட்டங்களைப் பின்னுக்குத்தள்ளி மதவெறியூட்டி அதிகாரப் பசியைத் தீர்த்துக்கொள்ள ஆட்சியாளர்கள் முயல்வதும், அதற்குப் புனிதமிக்க நீதித்துறையில் புகுந்துள்ள மதவெறி ஓநாய்கள் ஒத்தாசை புரிவதையும் தமிழ்மக்கள் வேடிக்கை பார்க்கக்கூடாது. வடவர்களின் சூழ்ச்சி எந்த வடிவில் வந்தாலும், தன்மானம் கொண்ட தமிழ்த்தாயின் பிள்ளைகள் அதனைப் பிடுங்கி எறிய போர்க்குணத்தோடு புறப்பட்டு வரவேண்டும்.
பொங்கலுக்கு
முன்னே பழையனவற்றையும் அவசியமற்றதையும் கழிவுகளையும் நெருப்பிலிட்டு எரித்துப் போகி கொண்டாடும் தமிழினம், தமிழருக்கு எதிரான இந்தித் திணிப்பு, இந்துத்துவத்
திணிப்பு, புராணங்களைப் புகுத்துதல், அறிவுக்கு எதிரான மூடத்தனங்களைப் பரப்புதல் என்று நீளும் குப்பைகளைப் பகுத்தறிவுத் தீயில் எரித்துவிட்டு பொங்கலிட புறப்பட வேண்டும்.
தமிழினமே!
இனியும் நீ பொறுத்தது போதும்.
பொங்கல் திருநாளில் தமிழரின் பானைகள் பொங்குவதுபோல, ஒட்டுமொத்தத் தமிழினமும் இத்தமிழர் விரோதப் போக்குகளுக்கு எதிராகப் பொங்கி எழவேண்டும்.
எங்கள் வாழ்வும்
எங்கள்
வளமும்
மங்காத தமிழ்
என்று
சங்கே
முழங்கு!