கடந்த அக்டோபர் மாதம் 6-ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றத்தில் நடந்த ஓர் அநாகரிகச் செயல் இந்திய சனநாயகம், சட்டத்தின் ஆட்சி, நீதித்துறையின் சுதந்திரமான செயல்பாடு, சமூகநீதி ஆகியவற்றின் எதிர்காலத்தைப் பற்றிய அச்சங்களை நம் மனத்தில் ஏற்படுத்துவதைத் தவிர்க்க இயலவில்லை.
70 வயதுக்கு
மேற்பட்ட வழக்குரைஞர் ராகேஷ் கிஷோர், “சனாதனத்தை அவமதிப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாது”
என்று கூச்சலிட்டுக் கொண்டே தன்
காலில் போட்டிருந்த செருப்பை எடுத்து உச்ச நீதிமன்றத்தின் தலைமை ஆசனத்தில் அமர்ந்து நீதிபரிபாலனம் செய்துகொண்டிருந்த தலைமை நீதியரசர் கவாய் அவர்களை நோக்கி எறிந்ததை ஒரு சாதாரண நீதிமன்ற அவமதிப்பு நிகழ்வாகக் கருதிக் கடந்துசெல்ல முடியாது.
நமது
கலாச்சாரப்படி செருப்பைக் கழற்றி ஒருவரை அடிப்பது அல்லது ஒருவர்மேல் எறிவது என்பது ஒரு தனிமனிதருக்கு நாம் செய்யும் உச்சபட்சமான அவமானம். அந்தத் தாக்குதலின் நோக்கம் ஒருவரை உடல்ரீதியாகக் காயப்படுத்துவதற்காக அல்ல; மாறாக, அது ஒரு தனிமனிதரின் சுயமரியாதையைக் கொச்சைப்படுத்துவதற்காகத் தாக்கப்பட்ட நபர் தனது சுயகௌரவத்தை இழந்து சமூகத்தின் முன் அவமானப்பட்டு, வெட்கத்தால் தலைகுனிந்து நிற்கவேண்டும் என்பதே அந்தத் தாக்குதலின் நோக்கம்.
பொதுவாக,
தன் தகுதியை மறந்து, மனத்தாலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு கொடுமையான இழிச்செயலைச் செய்தவர்களுக்குத்தான் நமது முன்னோர்கள் ‘செருப்படி’
என்ற இந்தத் தண்டனையைப் பயன்படுத்தினார்கள். இந்தத் தண்டனையையும் யாரும் ‘மேல் சாதிக்காரர்களுக்கு’ கொடுப்பதில்லை.
‘கீழ்சாதிக்காரர்களுக்கு’ மட்டுமே
பெரும்பாலும் இந்தத் தண்டனை விதிக்கப்பட்டது என்பதையும் நாம் மனத்தில் கொள்ளவேண்டும்.
நாம்
இன்று ‘வரலாற்று நாயகர்கள்’
என்று கொண்டாடுகின்ற நம் தேசத்தின் தந்தை மகாத்மாவும், தந்தை பெரியாரும்கூட ஆதிக்கச் சக்திகளால் இப்படிப்பட்ட தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டார்கள் என்பதையும் நாம் மறக்கவில்லை. அந்த நேரங்களில் நம் மாபெரும் தலைவர்கள் அந்தத் தரங்கெட்டவர்களின் தாக்குதலை எவ்வாறு எதிர்கொண்டனரோ, அதே வழியில் நமது தலைமை நீதிபதியும் தனது சித்தம் கலங்காமல், அவர் வகிக்கின்ற பொறுப்பின் மாட்சிமையும் கண்ணியமும் குறைந்துவிடாமல் இந்தச் சம்பவத்தைக் கடந்து சென்றார் என்பதும் நமக்கெல்லாம் பெருமை. ஆனால், நமது சமூகம் அந்தச் சம்பவத்தை அப்படிக் கடந்துபோக முடியாது.
நீதியரசர்
கவாய் சுதந்திர இந்தியாவின் முக்கால் நூற்றாண்டுகால வரலாற்றில் தலித்
சமூகத்திலிருந்து வருகின்ற இரண்டாவது தலைமை நீதிபதி. அம்பேத்கர் சிந்தனை மற்றும் சமூகக் கண்ணோட் டத்தைத் தங்களது மரபணுக்களில் கொண்டிருக்கும் பாரம்பரியமான குடும்ப மரபில் வந்தவர். அவரது தந்தை இராமகிருஷ்ண சூரியபான் கவாய், பாபா சாஹேப் டாக்டர் அம்பேத்கரின் நெருங்கிய தோழர். பல போராட்டக் களங்களில்
அம்பேத்கரோடு தோளோடு தோள் இணைந்து நின்று போராடியவர். 1956-ஆம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் நாக்பூரில் பௌத்த
மதத்தைத் தழுவியபோது, அவரோடு சேர்ந்து பௌத்த மதத்தைத் தழுவியவர். அந்த வகையில் நீதியரசர் கவாய் பௌத்த மதத்தைச் சார்ந்த முதல் தலைமை நீதிபதி எனும் பெருமையைப் பெற்றுள்ளார்.
“சனாதனத்தை இழிவுபடுத்தியதால், இறைவன் எனக்கு ஆணை தந்ததால் தலைமை நீதிபதியை நோக்கிச் செருப்பினை எறிந்தேன். இதில் வருத்தப்படுவதற்கோ, மன்னிப்புக் கேட்பதற்கோ எதுவும் இல்லை” என்று அடாவடியாக கிஷோர் பேசுவதால், தலைமை நீதிபதியின் சமூகப் பின்னணி முக்கியத்துவம் பெறுகிறது. அவர் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்று முதன்முறையாக அவரது சொந்த மாநிலமான மகராஷ்டிராவுக்குச் சென்றபோது, மாநில அரசின் சார்பாக இந்தியத் தலைமை நீதிபதியை வரவேற்க ஒருவரும் வரவில்லை என்பது அந்த மாநில அரசின் தலித் எதிர்ப்பு மனநிலையைக் காண்பிக்கிறது என்று அன்றைய தினம் ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டது.
“இந்தியாவில் நடப்பது சட்டத்தின் ஆட்சிதான். புல்டோசர் ஆட்சி அல்ல; அதனை ஒருநாளும் அனுமதிக்கமாட்டேன்” என்று
ஆணித்தரமாகத் தீர்ப்பினைத் தந்து புல்டோசர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தவர் நீதியரசர் கவாய். தனது பதவிக் காலம் முடிந்தபின்னர் வேறு எந்த அரசுப் பொறுப்பினையும் பெற்றுக்கொள்ளமாட்டேன் என்று
பகிரங்கமாக அறிவித்த மானஸ்தர். ஆர்.எஸ். எஸ். அமைப்பின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்று எவ்வளவோ வற்புறுத்தியும், அதில் கலந்துகொள்ள மறுத்துவிட்டார் தலைமை நீதிபதியின் தாயார்.
இந்தப்
பின்னணியில் சில நாள்களுக்கு முன்பு மத்தியப்பிரதேசத்தில் இருக்கின்ற புராதன ஜாவேரி இந்து ஆலயத்தில் சிதிலமடைந்து இருக்கும் விஷ்ணுவின் சிலையை மீண்டும் சரிசெய்து தர வேண்டும் என்று
தொடரப்பட்ட வழக்கில் நீதியரசர் கவாய் கூறிய சில வார்த்தைகள் இந்துகளின் மனத்தைப் புண்படுத்திவிட்டது என்று வலதுசாரி சமூக ஊடகங்கள் கடுமையாக அவரை விமர்சனம் செய்தன. “உச்ச நீதிமன்றத்திற்குள் சென்று தலைமை நீதிபதி ஆசனத்தில் அவர் அமர்ந்திருக்கும்போது, அவரது தலையினை உடைக்க வேண்டும்; அந்த உணர்வு எந்த இந்து வழக்குரைஞருக்காவது உள்ளதா என்று பார்க்க வேண்டும்; அப்படி யாராவது செய்தால் அவர்களை விட வீரர்கள் யாரும் இல்லை” என்றெல்லாம் வலதுசாரி மதவெறியர்கள் சமூக ஊடகங்களில் தொடர்ந்து பதிவிட்டு வந்தனர். இப்படி வன்முறையைத் தூண்டும் வகையில் பதிவிட்ட நூற்றுக்கணக்கானோர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது, இந்த வன்முறையாளர்களுக்கு ஒன்றிய அரசின் ஆதரவு இருக்கிறதோ என்ற நியாயமான சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
தனது
வார்த்தைகளுக்குத் தவறான உள்நோக்கங்களைச் சிலர் சமூக ஊடகங்களில் பதிவிடுவதாக வும், தான் அனைத்து மதங்களையும் மதிப்பவர் எனவும் தலைமை நீதிபதி, நீதிமன்றத்திலேயே விளக்கம் கொடுத்தார்.
சம்பந்தப்பட்ட
வழக்கில் தலைமை நீதிபதி எதுவும் தவறாகப் பேசியதாகத் தெரியவில்லை. சம்பந்தப்பட்ட ஆலயம் மிகப் பழமையான ஒன்று. தொல்பொருள்துறை கட்டுப்பாட்டிலும், ஐக்கிய நாடுகள் சபையின் ‘யுனிசெப்’
மேற்பார்வையிலும்
இருக்கிறது. அவர்களது அனுமதி இல்லாது எவ்விதப் பணிகளையும் அந்த ஆலயத்திற்குள் செய்ய முடியாது. “நீதிமன்றத்தால் எதுவும் செய்ய வழியில்லை. அந்தத் தெய்வத்திடம் சென்று சொல்லுங்கள். அவரால்தான் அது முடியும்”
என்ற வகையில் பேசி அந்த வழக்கினை தலைமை நீதிபதி முடித்துவைத்தார். இதனைத்தான் வழக்குரைஞர் கிஷோர் ‘சனாதனத்தை நீதிபதி அவமதித்துவிட்டார்’ என்றும்,
அதற்கான பரிகாரத்தை அந்தத் தெய்வம் கூறியபடி தான் நிறைவேற்றியிருப்பதாகவும் கூறுகிறார்.
“இறைவன் சொன்னார்; நான் செய்தேன்”
என்று கிஷோர் கூறும்போது, மேனாள் தலைமை நீதிபதி சந்திரசூட் அயோத்தி இராமர் கோவில் வழக்கில், “இறைவன் இரவில் சொன்னார்; அதனை அப்படியே தீர்ப்பாக எழுதிவிட்டேன்” என்று
கூறியது என் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. அதைப்போல நமது பிரதமரும் இந்த நாட்டை வழிநடத்துவதற்கு இறைவனே தன்னைத் தேர்ந்தெடுத்து அனுப்பினார் என்று
கூறினார். குறிப்பிட்ட நீதிபதிகளுக்கும், குறிப்பிட்ட வழக்குரைஞர்களுக்கும், நமது பிரதமரைப் போன்றவர்களுக்கு மட்டும் நேரிடையாக வந்து கூறுகின்ற இறைவன், வறுமையிலும் ஏழ்மையிலும் உழலும் சாதாரண பொதுமக்களிடம் ஏன் பேசுவது இல்லை? என்பது எனக்கு விளங்கவில்லை.
ஆனால்,
ஒன்று மட்டும் புரிகிறது. தங்களது செயலுக்கு எவ்விதமான நியாயத்தையும் தர முடியவில்லையென்றால், ஆண்டவன் மேல்
பாரத்தைப் போடுவதுதான் பொறுப்பிலிருந்து தப்பிப்பதற்கான ஒரேவழி என்பது மட்டும் தெரிகிறது. ‘அருணாச்சலம்’ திரைப்படத்தில்
ரஜினி சொல்வாரல்லவா! “ஆண்டவன் சொல்றான். அருணாச்சலம் செய்றான்”
என்று. அது திரைப்படத்திற்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம். உலகின் மிகப்பெரும் சனநாயக நாட்டின் தலைமை நீதிபதியை நீதிமன்றத்திலேயே செருப்பால் தாக்க முயற்சித்துவிட்டு, ‘ஆண்டவன் சொன்னான். நான் செய்தேன்’
என்று கூறினால் அதனை அப்படியே விட்டுவிட முடியுமா? அப்படி விட்டுவிட்டால் நமது சனநாயகமும், சட்டத்தின் ஆட்சியும் என்னவாகும்?
தலைமை
நீதிபதியைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்த அநாகரிகத் தாக்குதலைவிட, இந்த மாதிரியான ஓர் அநாகரிகத் தாக்குதலைச் செய்ய வேண்டும் என்ற மனநிலையும், விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் அந்த அசிங்கத்தைச் செய்யும் துணிவும் எப்படி வந்தது என்பதுமே முக்கியமானது.
மகாத்மாவின்
படுகொலைக்குப் பின்னர் அந்தச் சம்பவத்தின் பின்னணி பற்றிப் பேசிய அன்றைய உள்துறை அமைச்சர் சர்தார் பட்டேல் அவர்கள் சொன்ன கருத்துகளை இங்கே நினைவுகூர்வது பொருத்தமானது. காந்தியடிகளின் படுகொலையில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்கு நேரிடையான தொடர்பு உண்டா என்பதை நிரூபிப்பதற்குத் தற்சமயம் போதுமான ஆதாரம் இல்லையென்றாலும், இதைப் போன்ற மாபாதகம் நடப்பதற்கு அந்த இயக்கத்தின் நடவடிக்கைகளும் பிரச்சாரங்களும், அவர்கள் முன்னெடுத்த வெறுப்பு அரசியலும் முக்கியக் காரணம் என்பதைத் தன்னால் உறுதியாகச் சொல்லமுடியும் என்று தெரிவித்தார்.
இன்று
நாடு முழுவதும் பா.ச.க., ஆர்.எஸ்.எஸ், விஸ்வஹிந்து பரிஷத், பஜ்ரங் தள், ஹிந்து மகா சபா போன்ற வலதுசாரி மதவாத அமைப்புகள் விதைத்து வரும் துவேஷமும் வெறுப்பும், மதநல்லிணக்கத்தையும் சமூக ஒற்றுமையையும் அடியோடு அழிக்கும் ஊழித் தீயாகப் பரவி வருகின்றன. சிறுபான்மையினர், பட்டியலின மக்கள், இடதுசாரிச் சிந்தனையாளர்கள், சமூக நீதியினை வலியுறுத்தும் முற்போக்காளர்கள், பெண் உரிமைப் போராளிகள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் வலதுசாரி மதவெறி அரசியலை எதிர்க்கும் அனைவரையும் ‘தேச விரோதிகள்’
என்றும், ‘இந்து மத எதிர்ப்பாளர்கள்’ என்றும் தவறாகச் சித்தரித்து, வாய்ப்புகள் கிடைக்கும்போதெல்லாம் அவர்கள்மீது வன்முறையினை வரைமுறையின்றி ஏவிவிடுவதும், அத்தகைய வன்முறையாளர்களைப் போற்றிப் புகழ்ந்து அவர்களை அமைச்சர்களாக, நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்களாக அமரவைத்து அழகு பார்ப்பதும் கடந்த பத்தாண்டுகளாக நாட்டின் அரசியலாக மாறிப்போனதுதான் இன்று உச்ச நீதிமன்றத்திற்குள்ளேயும் எதிரொலித்துள்ளது.
தங்களுக்கு எதிரான கருத்தியல் கொண்டவர்களை ‘சனாதனத்தின் எதிரி’ என்றும்,
‘இந்து மதத்தின் எதிரி’ என்றும் தங்களது
ஆதரவு ஊடகங்களில் பிரகடனம் செய்து, அந்தக் கருத்தியலாளர்களை மிரட்டிச் செயல்படவிடாமல் முடக்குவதுதான் அவர்களுடைய திட்டம். கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக அவர்கள் இந்தச் சதிவேலையைத் தொடர்ந்து செய்துவந்தாலும், தற்போது அவர்களுக்குக் கிடைத்துள்ள அரசியல் அதிகாரமும், அவர்கள் கைகளில் இருக்கின்ற அரசு நிர்வாகமும் எதை வேண்டுமானாலும் செய்யலாம், தங்களைக் கேட்க ஆளில்லை என்ற ஆணவத்தையும் அதிகாரத் திமிரையும் துணிவையும் தந்துள்ளது.
இந்தச்
சம்பவத்தை எதிர்க்கட்சியினர் கடுமையாகக் கண்டித்தனர். பிரதமர் ஒரு நீண்ட மௌனத்திற்குப்பின் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து வார்த்தைகளில் தனது கண்டனத்தைப் பதிவு செய்தார். ஒன்றிய அரசின் சட்ட அமைச்சகம் இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவித்ததாக நான் பார்க்கவில்லை. இப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்கும்போது, பிரதமரே தலைமை நீதிபதியின் வீட்டுக்குச் சென்று அரசின் ஆதரவையும், தனது உடனிருப்பையும் தெரிவித்திருக்கவேண்டும் அல்லது சட்ட அமைச்சரையாவது அரசின் சார்பாக, தலைமை நீதிபதிக்கு ஆறுதல் கூற அனுப்பியிருக்க வேண்டும்.
நாடாளுமன்ற
உறுப்பினர் ஓவைசி கூறிய ஒரு கருத்தினை ஒதுக்கிவிட முடியாது. இந்தச் சம்பவத்தை ஒரு முஸ்லிம் வழக்குரைஞர் செய்திருந்தால் இதற்குள் நாடே ரணகளமாக மாறியிருக்கும். அந்த நபரின் வீட்டை புல்டோசர் இடித்துத் தள்ளியிருக்கும். அவரைத் தேசிய புலனாய்வு முகமையினர் தங்களது விசாரணை வளையத்திற்குள் உட்படுத்தியிருப்பார்கள். தேசிய ஊடகங்களிலே இடைவிடாத நேர்காணல்களும் விவாதங்களும் குறைந்தது ஒரு வாரத்திற்கு இடைவிடாமல் தொடர்ந்திருக்கும். சொல்லி வைத்தாற்போல பா.ச.க.
தலைவர்கள், அமைச்சர்கள், செய்தித் தொடர்பாளர்கள், பெரும்பாலான பா.ச.க.
கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் இவ்வேளையில் அமைதி காத்தது நமக்குப் பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன.
சம்பவம்
நடந்த மறுநாள் வழக்குரைஞர் கிஷோர் பா.ச.க.வின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் ஒருவரோடு நீண்ட நேரம் இருந்த செய்தியும் வீடியோ பதிவும் சமூக ஊடகங்களில் வெளிவந்தன. நம்மைப் பொறுத்தவரை கிஷோர் என்பவர் எய்யப்பட்ட அம்பு மட்டுமே. அவரை எய்திய சதிக் கும்பல் எது என்பதுதான் முக்கியம். அந்தச் சதி மிகவும் கவனமாகத் திட்டமிடப்பட்டது என்பதில் நமக்கு ஐயமில்லை. ஒரு தலித் நீதியரசர்மீது செருப்பினை எறிய அதே சமூகத்தைச் சார்ந்த ஒரு தலித் வழக்குரைஞரைத் தயார் செய்ததுதான் ‘அவர்களது’
சாமர்த்தியம்.
இது
அவர்களுக்கு ஒன்றும் புதிதல்ல. தென் மாவட்டங்களில் தங்களது மார்புகளை மறைக்கும் உரிமைகள் மறுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமூகத்துப் பெண்கள் தோள் சீலைப் போராட்டத்தை நடத்தினர். அவர்கள் இரவிக்கை அணிந்து பொது இடங்களுக்குப் போவதென்று முடிவெடுத்து இரவிக்கை அணிந்தபோது அதே சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்கள்தாம் அப்பெண்களின் இரவிக்கைகளைத் தொரட்டி கம்பு கொண்டு கிழித்தார்கள். ஆலயப் பிரவேச அனுமதி மறுக்கப்பட்ட சமூகங்களைச் சார்ந்தவர்களை, சீர்திருத்தவாதிகள் ஆலயங்களுக்குள் அழைத்துச் சென்றபோது அந்தச் சமூகங்களைச் சார்ந்தவர்களே சீர்திருத்தவாதிகளைத் தாக்கினர். தேவதாசி முறையினை ஒழிக்க வேண்டும் என்று முத்துலெட்சுமி ரெட்டி அம்மையார் இயக்கம் நடத்தியபோது, அவரைத் தாக்கியவர்களும் தேவதாசி சமூகத்துப் பெண்களே. வீரர்களும் துரோகிகளும் ஒரே வீட்டில் பிறப்பது ஆச்சரியமும் இல்ல! அதிசயமும் அல்ல! வரலாற்றின் வழிநெடுகிலும் அதற்கு உதாரணங்கள் ஏராளம் உள்ளன.
நாம்
கவலைப்படுவதெல்லாம், அரசியல் சாசன சட்டத்தின் காவல் அரணாகவும், அத்துமீறல்களைத் தடுத்து நிறுத்துகின்ற அதிகாரம் பெற்ற அமைப்பாகவும் இருக்கின்ற உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு, உச்ச நீதிமன்றத்தின் வளாகத்திற்குள்ளேயே இந்த நிலை என்றால், இந்த நாட்டின் எதிர்காலம் என்னவாகும் என்பதே!
‘தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும்; மீண்டும் தர்மமே வெல்லும்’
என்பதை மட்டும் இப்போது மனத்தில் வைப்போம்.
இந்தியா, இரஷ்யாவிலிருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அதன் நன்மை சாதாரண மக்களுக்கு எட்டவில்லை. 2014-ஆம் ஆண்டு கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 110 அமெரிக்க டாலராக இருந்தபோதும், சென்னையில் பெட்ரோல் விலை வெறும் 76 ரூபாய்தான். ஆனால், இன்று கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 69 அமெரிக்க டாலருக்குக் குறைந்தும், சென்னையில் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டியுள்ளது.
இதன்
பின்னணி, தனியார் எண்ணெய் நிறுவனங்கள் அசாதாரண இலாபம் குவிப்பதில்தான் உள்ளன. இந்த
அநியாய இலாபத்திற்கு அசாதாரண இலாப வரிவிதித்து, அந்த வருவாயை ஏற்றுமதி சார்ந்த சிறு
மற்றும் நடுத்தரத் தொழில்களைக் காப்பாற்றப் பயன்படுத்தவேண்டும் என்பது பொருளாதார வல்லுநர்களின்
கருத்து. மேனாள் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் இரகுராம் இராஜன்கூட இதை எச்சரிக்கை மணியாகக்
குறிப்பிடுகிறார்.
இந்நிலையில்,
அமெரிக்கா இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கு 50 விழுக்காடு வரை
வரிவிதித்துள்ளது. இதில் பாதி பதிலடி வரி, மீதிப்பகுதி தண்டனை வரி எனப் பிரிக்கப்பட்டுள்ளது.
காரணம், இந்தியா, இரஷ்ய எண்ணெயை மலிவு விலையில் வாங்கி, அதன் மூலம் தனியார் நிறுவனங்கள்
பெரும் இலாபம் அடைந்ததுதான். ஆனால், இதன் தாக்கம் நேரடியாக தமிழ்நாடு தொழில்களையே சிதைக்கின்றன.
திருப்பூரில் மட்டும் 3,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஆடைகள் ஏற்றுமதிப் பாதிப்புக்கு
உள்ளாகின்றன. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், பெரும்பாலும் கிராமப்புறப் பெண்களும்
ஏழைக் குடும்பங்களும் வேலை இழக்க நேரிடும் அபாயத்தில் உள்ளனர்.
இறால்
வளர்ப்புத் துறையில் சுமார் 20 இலட்சம் பேர் வேலை செய்து வருகிறார்கள்; இவர்களில் பாதியளவுக்குமேல்
வாழ்க்கை நெருக்கடியில் சிக்கக்கூடும். நகை மற்றும் இரத்தினத் துறையில் தமிழ்நாட்டில்
ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்வாதாரம் இழக்க நேரிடும். சேலம், வேலூர், சென்னை போன்ற
இடங்களில் தோல் மற்றும் உதிரிப்பாகத் தொழில்களும் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன.
இவை
அனைத்தும் சமூகத்திலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பெண்கள் வேலை இழப்பது குடும்பங்களின்
கல்வி, சுகாதாரம், உணவுத் தேவைகளுக்கு நேரடியான பாதிப்பை உண்டாக்கும். வேலை இழந்தவர்கள்
நகரங்களுக்கு இடம் பெயர்வதால் குடிசைப்பகுதிகள் பெருகும். ஏற்கெனவே காணப்படும் சமூக
அசமத்துவம் மேலும் வலுவாகி, ஒருபுறம் பணக்காரர்களின் செல்வம் குவியும் நிலையில், மறுபுறம்
ஏழைகளின் அடிப்படை வாழ்வாதாரமே சிதைந்து போகும் அபாயம் உள்ளது.
இதனால்
அரசியல் கேள்விகளும் எழுகின்றன. மேனாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் கேள்வியெழுப்பியபடி,
அமெரிக்கா 50 விழுக்காடு வரி விதித்த சூழ்நிலையில் மத்திய அரசு ஜி.எஸ்.டி.யைக் குறைத்துள்ளது.
இருப்பினும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள்
இழக்கப்படலாம் என்று கவலை தெரிவித்துள்ளார். இந்நிலையில் மத்திய அரசு தனியார் எண்ணெய்
நிறுவனங்களின் இலாபத்தையே காப்பாற்றப் போகிறதா? அல்லது தொழிலாளர்களின் உயிர் வாழ்வையே
காப்பாற்றப் போகிறதா? என்ற அடிப்படைக் கேள்வி எழுகிறது.
மேலும் கவனிக்க வேண்டிய
சில முக்கிய அம்சங்கள்...
• இந்தியாவில் எரிபொருள் விலைகளை மத்திய
அரசு இன்னும் முழுமையாகக் கட்டுப்படுத்த வில்லை. உலகச் சந்தை விலை குறைந்தபோதும், பொதுமக்களுக்கு
அதற்கான நன்மை வழங்கப்படவில்லை.
• தனியார் எண்ணெய் நிறுவனங்களின் இலாபத்தை
அதிகரிக்க அரசின் மௌனம், ‘சந்தை சுதந்திரம்’ என்ற
பெயரில் அரசின் பொறுப்பை விலக்குகிறது.
• அநியாய இலாப வருவாய் பொதுமக்களுக்குத்
திரும்பாத சூழலில், வேலைவாய்ப்பு நெருக்கடி அதிகரித்து வருகிறது.
• தமிழ்நாட்டின் ஏற்றுமதி சார்ந்த தொழில்கள்
பெரிதும் பாதிக்கப்படுவது, இந்தியப் பொருளாதாரத்தை நேரடியாகப் பலவீனப்படுத்தும்.
இந்தச்
சிக்கல்களிலிருந்து வெளியேற அரசின் பொருளாதார முடிவுகள் பொதுமக்களின் பக்கம் திரும்ப
வேண்டும். எண்ணெய் நிறுவனங்களின் அநியாய இலாபத்திற்கு அசாதாரண இலாப வரி விதித்து, அந்த
வருவாயைச் சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் காப்புநிதியாக மாற்றவேண்டும். ஏற்றுமதி
சார்ந்த தொழில்களுக்கு வரிச்சலுகை, வட்டி குறைப்பு, புதிய சந்தைத் திறப்புகள் மற்றும்
அரசின் நேரடி ஆதரவு தேவை. தமிழ்நாடு அரசும் தனியே ‘ஏற்றுமதி பாதுகாப்பு நிதி’ அமைத்துத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வேண்டும்.
இந்தியப்
பொருளாதாரம் இன்று ஒரு முக்கியச் சந்திப்பில் நிற்கிறது. தவறான முடிவுகள் எடுக்கப்பட்டால்
வேலைவாய்ப்பு இழப்பு என்ற புள்ளிவிவரம் மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வருமானம்
பாதிக்கப்படும்.
ஆகவே,
தனியார் இலாபத்தைவிட, தொழிலாளர்களின் கண்ணீரை முதலில் துடைப்பதே அரசின் அடிப்படை கடமை.
இங்கிலாந்தின் தொழிற்புரட்சிக்குப் பின்னர், 1850-1900 ஆண்டுகளிலிருந்து உலக வெப்பத்தின் அளவு கணக்கிட்டு வரப்படுகிறது.
ஆரம்ப
காலத்தில், உலக சராசரி வெப்பம் ஏறக்குறைய 13.9 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது. தொழிற்புரட்சி
காலத்திற்குப்பின் 150-175 ஆண்டுகளைக் கடந்து வந்திருக்கிறோம்.
ஏன்,
தொழிற்புரட்சியை மைல்கல்லாகப் பார்க்கிறோம்? உலக வரலாற்றில் தொழிற்புரட்சியின் காலத்திலிருந்துதான்
மனிதரின் உடலுழைப்பு செயலாற்றல் இயந்திரமயமாக்கப்படுவது ஆரம்பமானது. இதனைத் தொடர்ந்து
நிலக்கரி, எரி எண்ணெய், எரிவாயு என்பனவற்றின் பயன்பாடு அதிகரித்தது. இன்றுவரை இயந்திரங்களும்,
அதைச் சார்ந்த செயற்கை உபகரணங்களின் பயன்பாட்டின் வேகமும் குறையவில்லை.
2016-ஆம்
ஆண்டில் உலக சராசரி வெப்பம் 14.85 டிகிரி செல்சியஸ் என்று கணக்கிடப்பட்டது. 2023-ஆம்
ஆண்டு இது மேலும் அதிகரித்து 14.98 டிகிரி செல்சியஸ் ஆக, அதாவது தொழிற்புரட்சி காலம்
தொடங்கி 1 டிகிரி செல்சியஸ் வெப்பம் கூடிவிட்டது.
2024-ஆம்
ஆண்டின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் எட்டிவிட்டது என்கிறது ஓர் ஆய்வறிக்கை. எனவே,
கடந்த 150 ஆண்டுகளில் மிகுந்த வெப்ப ஆண்டாக 2024 அறியப்படுகிறது. இதன் விளைவையும் நாம்
நேரடியாகக் காண்கிறோம். பூமி மட்டுமன்றி, கடலும் சேர்ந்து வெப்பமடைந்து, அதிக நீராவியினால்
அதிக அளவில் மழையும் வெள்ளமும் உலகளவில் பல இடங்களில் உருவாவதைக் காண்கிறோம். காலநிலை
விஞ்ஞானிகள், 2050-க்குள் எப்படியாவது வெப்பநிலை உயர்வை அதிகபட்சமாக 1.5 டிகிரி செல்சியசுக்குள்
கட்டுப்படுத்த வேண்டுமென்கின்றனர் (Global
warming of 1.5 degree Celsius above pre industrial levels).
ஆராய்ச்சிக்
கணக்கீட்டின்படி, உச்சகட்ட வெப்பமான 20 வருடங்களை 1981-க்குப் பிறகு சந்தித்திருக்கிறோம்.
இதில் 2015-க்குப் பிறகு தொடர்ந்து வெப்பநிலை உயர்ந்து, எல்லைக்கோடாக வைத்த 2050-ஆம்
ஆண்டின் அளவான 1.5 டிகிரி செல்சியஸை 2024-ஆம் ஆண்டிலேயே அடைந்துவிட்டோம்.
வெப்பநிலையும் இயற்கை
மாற்றங்களும்
அண்மையில்
மிச்சிகன் மற்றும் ஓரிகன் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் குழு நடத்திய ஆய்வு உலக வெப்பமயமாதலுக்கும்,
பறவை இனப் பாதிப்பிற்கும் தொடர்பு இருப்பதாகக் கூறுகிறது. ‘விஞ்ஞானம் முன்னேறுகிறது’ (Science Advances) என்ற பத்திரிகையில் வெளிவந்த செய்தி
இவ்வாறு விவரிக்கிறது: ‘நாளுக்குநாள் மக்கள்தொகை பெருகுவது பொதுவாக, விலங்குகள் இனம்
குறைவிற்குக் காரணமாயிருக்கிறது. இந்நிலையில் பறவை இனம் வேகமாக மறைந்து வருகிறது. அமேசான்,
பிரேசில் போன்ற பகுதிகளில் இம்மாற்றம் அதிகம் காணப்படுகிறது. பறவைகள் தங்கள் இனப்பெருக்கத்திற்குக்
கூடுகட்டுதல், முட்டையிடுதல், குஞ்சு பொரித்தல், இரை தேடுதல் என்பவையெல்லாம் காலநிலையையும்
வெப்பத்தையும் சார்ந்திருப்பதால், சிறிய வெப்ப மாற்றமும் பறவைகள் வாழ்வைப் பாதிக்கிறது.
இந்த இனப்பெருக்கச் சுற்றில், பறவை தன் குஞ்சுகளுக்கு இரை தேடச் செல்லும்போது வெப்பமயமாதலால்
வழக்கமான உணவின் ஆதாரங்கள் இல்லாமல் போவது பறவைகளின் எதிர்காலத்திற்குக் கேள்விக்குறியாக
உள்ளதென்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.’
அளவுக்கு
அதிகமாகப் புவி வெப்பமயமாகிறது என்பதை இயற்கையில் ஏற்படும் அசாதாரண சில மாற்றங்களைக்
கொண்டே அறிந்துகொள்ளலாம். அதில் ஒன்று உயிரினங்களில் ஏற்படும் மாற்றம். புவியெங்கும்
வாழும் சிறிய உயிரினமான பட்டாம் பூச்சி, சுற்றுச்சூழலின் மாற்றத்தை அடையாளப்படுத்தும்
கருவியாகவும் விளங்குகிறது.
அதிவேக
உலக வாழ்வில் நாம் கண்டும் காணாதிருக்கும் இப்பட்டாம்பூச்சியின் நிறமாற்றம் வெப்பமயமாதலை
வெளிப்படுத்துமென்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்
அமெரிக்க
மீன் - வனவிலங்கு கழகம் நடத்திய ஆய்வில், மோனார்க் பட்டாம்பூச்சியை (Monarch. Butterfly) உலக வெப்பமயமாதலால் பாதிப்படையும் (threatened species) உயிரினம் என்று வரிசைப்படுத்தியுள்ளனர். ஏனென்றால், இவ்வினத்தின்
எண்ணிக்கை பல்வேறு காரணங்களிருந்தாலும், உலக வெப்பமயமாதலால் குறைந்தும் பாதிப்படைந்தும்
வருகிறதென்று கூறுகின்றனர்.
இது
ஒருவேளை சிறிய எச்சரிக்கையாக இருக்கலாம். நாம் பாதுகாப்பான இயற்கைச் சூழலில் வாழ்கிறோமென்றால்
பட்டாம்பூச்சிகள் நிறம் மாறாமலிருக்க வேண்டும். இந்தச் சிறிய உயிரினம் நம் முன்னோர்களின்
முதுமொழியான ‘வாழு, வாழவிடு’ என்பதை நினைவுபடுத்துவதாகவும் உள்ளது.
உலகளாவிய இரட்டை வேடம் (Double standard)
இன்று
நாம் பாதுகப்பாக இருப்பதாக நினைத்துக்கொள்ளும் மந்தநிலை, வெப்பநிலை உயர்விற்கு மறைமுகமாகக் காரணமாயிருப்பதும், அதற்குப் பரிகாரம் காண்பதென்ற
தோற்றமுமான இரட்டை வேடம் நம் அனைவருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்கிறோம்.
‘புலி வருகிறது’ என்று கூறி, ஒருநாள் உண்மையில் நம்
வாசற்கதவு முன் நிற்பதுபோன்று இருப்பதாகிவிடும்.
இப்போது
உலகில் பல இடங்களில் அசாதாரணமான, சடுதியில் நிகழும் இயற்கை மாற்றங்களையும் அழிவுகளையும்
காண்கிறோம். இவை புவி வெப்பமயமாதலின் விளைவு என்று பேசப்படுவதையும் கேட்கிறோம்.
நாம்
இப்போது காணும் இயற்கை அழிவுகள் ஒரு பெரிய பனிப்பாறை கடலில் மிதந்துவரும்போது அதன்
நுனிப்பகுதிதான் கடல்மட்டத்திற்கு மேல் தெரியும் (tip of the ice berg) என்பதைப் போன்றதே. ஒருவேளை, நாம்
பல எச்சரிக்கைகளைப் பொருட்படுத்தாமல் போனால் முழுமையான புவி வெப்பமயமாதலின் விளைவுகளிலிருந்து தப்பிக்க முடியாமல் போகும் நிலை
ஏற்படலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
வெப்பமயமாதலின் காரணங்கள்
பூமியிலிருந்து
வெளியாகும் வெப்பக் கதிர்வீச்சு (Radiation) வெளிமண்டலத்திற்கு விலகிவிடுவது இயற்கை.
இப்போது வெளிமண்டலத்திற்குத் தப்பிச் செல்ல முடியாத சூழல் நிலவுகிறது. இதற்குக் காரணம்,
பூமியிலிருந்து மனிதரால் வெளிப்படுத்தப்படும் கார்பன்-டை-ஆக்சைடு (Co2), மீத்தேன் மற்றும் பிற கழிவு வாயுக்கள்
அளவுக்கதிகமாகப் பூமியிலிருந்து வெளியாவதோடு நிற்காமல், பூமியைச் சுற்றிப் படலமாக இப்போது
படிந்துவருகின்றன. இந்த வாயுக்கள் வெளியாவதற்கு ஆதாரமாக விளங்குவது, நிலத்தடி (fossil) எரிபொருள்களான நிலக்கரி, எரி எண்ணெய்,
எரிவாயு என்பவைகளின் பயன்பாடு அதிகரிப்பினால் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாயுக்கள்
பூமியிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சை இடைமறித்துப் பூமியிலிருந்து வெப்பம் வெளியாகாமல்
(No exit) தடையாய் உருவெடுத்துள்ளன. இதனால்
பூமி நாளுக்கு நாள் வெப்பமடையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இவ்வகை வாயுக்கள் பல வருடங்களோ,
பலநூறு ஆண்டுகளோ விலகாமல் இருக்கும் நிலையில் பூமியின் வெப்பநிலை மேலும் உயர வாய்ப்பிருக்கிறது.
இந்தக் கேடு உண்டாக்கும் வாயுக்கள் ‘கிரீன் ஹவுஸ் வாயுக்கள்’ (Green house gases)
எனப்படுகின்றன.
நாம்
வாழும் பூமி பகலில் சூரியக் கதிர்களால் வெப்பமடைகிறது. இரவில் குளிர்ந்து வெப்பத்தை
வெளிப்படுத்துகிறது. ஆனால், சில வாயுக்கள் இவ்வெப்பத்தைப் பசுமை வீட்டிலிருந்து (green house-Earth) செல்லவிடாமல் கண்ணாடிச் சுவர் போன்று
வெளிமண்டலத்தில் (atmosphere) படிந்து தடையாயிருப்பதால் ‘கிரீன்
ஹவுஸ் வாயுக்கள்’ (Green
House Gases) என்று அழைக்கப்படுகின்றன.
பூமியின்
வரலாற்றில் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இவ்வாறான வெப்பநிலை ஏற்றம் இயல்பாக ஏற்பட்டிருக்கிறது.
அப்போது கார்பன் (CO2) அளவு 2-3 டிகிரி செல்சியஸ் தொட்டதென்றும்,
கடல் மட்டம் 10-20 மீட்டர் வரை உயர்ந்து இருந்ததென்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இந்த இயற்கைச் சீற்றங்களைச் சந்திப்பதற்கு ஏற்றவாறு இயற்கை அமைந்திருந்தது என்பது வரலாற்றின்
ஒரு பகுதி.
இப்போது
ஏற்பட்டிருப்பதோ மனிதனால் செயற்கையாக உருவெடுத்ததாகும். உலக வானிலைக் கழகம் (WMO), அக்டோபர்
2024 ஆய்வு, இப்போதைய கார்பன் வெளியேற்றத்தின் வேகம், நாம் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள்
3 டிகிரி செல்சியஸைத் தொட்டுவிடும் நிலையில் உள்ளதாகக் கூறுகிறது.
(தொடரும்)
“கலைப் படைப்புகள் மக்களைப் பகுத்தறிவு பாதையிலிருந்து மடைமாற்றி மடையர்களாக மாற்றுகின்றன” (The Republic) என்ற பிளேட்டோவின் வலிமையான வார்த்தைகளின் வலியை தமிழ்நாடு இன்று உணர்ந்து கொண்டிருக்கின்றது. தற்சமயம் தமிழ்நாட்டின் பேசுபொருளாக இருக்கும் கரூர் சம்பவம் நமக்கு வலிகளோடு சேர்ந்து சில கசப்பான உண்மைகளையும் கற்றுத் தந்திருக்கின்றன.
‘அறிவுடையார் எல்லாமுடையார்’ (குறள்
430) என்ற புரட்சிக் கோட்பாட்டை இவ்வுலகிற்குக் கற்பித்த தமிழர்களின் பகுத்தறியும் தன்மையை எண்ணி இவ்வுலகமே இன்று எள்ளி நகையாடுகின்றது. ஏனெனில், கரூரில் ஏற்பட்ட 41 நபர்களின் இறப்புக்கு அரசியல் வட்டாரத்தில் பல காரணங்கள் எடுத்துரைக்கப்பட்டாலும்,
முதன்மையான காரணம் தமிழரின் சினிமா மோகமாகும். பலரின் சினிமா மோகமும் சிலரின் அரசியல் ஆசைகளும் 41 உயிர்களைப் பலி வாங்கியுள்ளது. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தமிழ்ச்சங்கம், நடிகர் சங்கங்களில் மாட்டித் தவிக்கின்றது. இந்நிலை மாறவேண்டும். கரூரில் கூட்ட நெரிசலால் ஏற்பட்ட இறப்பானது திரைக் கவர்ச்சியால் ஏற்பட்ட முதல் இழப்பல்ல; ஆனால், இதுவே இறுதி இழப்பாக இருக்க வேண்டும்.
தமிழ்நாட்டின்
மக்களும் அரசியலும் இன்று திரைத்துறை வசம் கட்டுப்பட்டுக் கிடக்கின்றன. ஆனால், ஆரம்பத்தில் சினிமா என்பது தலைவர்களின் அரசியல் கோட்பாடுகளை எளிய மக்களிடத்திலும் கொண்டு சேர்ப்பதற்கான ஒரு கருவியாக இருந்தது. சினிமாவின் முந்தைய வடிவமான மேடை
நாடகங்கள் சமுதாய விழிப்புணர்வின் ஆயுதமாகக் கருதப்பட்டது. எழுத, படிக்கத் தெரியாத எளியவர்களிடத்திலும் புரட்சிகர கருத்துகள் சென்றடைவதற்கான சிறந்த வழியாக இருந்தது. பக்தியையும் அரசியலையும் புரட்சியையும் கொண்டு சேர்த்த நாடகங்கள் அத்துடன் சேர்ந்து அதில் நடிக்கும் நடிகர்களின் மீதான ஈர்ப்பையும் காலப்போக்கில் கொண்டு சேர்க்க ஆரம்பித்தது.
சினிமா
பெரும் பொருளாதார வர்த்தகமாக மாறிய பின்பு சினிமாவின் போக்கும் மாறியது. இன்றைய சினிமாவில் பெரும் நடிகர்கள் நடிக்கும் திரைப்படங்களில் கதாநாயகர்களை முன்னிலைப்படுத்துவதற்காகக்
கருத்துகளைத் தவிர்த்து, கவர்ச்சிகளை அதிகமாக்கிவிட்டனர். இந்தக் கவர்ச்சிகள் கலைஞர்களின் மீதான ஈர்ப்பை மென்மேலும் அதிகரிக்கச் செய்கின்றது. இதை மையமாகக் கொண்டு, ஒவ்வொரு நடிகரும் தங்களுக்கென இரசிகர் மன்றங்களைத் தொடங்குகிறார்கள். இதன்மூலம் சினிமாத்துறையின் வளர்ச்சியும், தனிப்பட்ட கலைஞர்களின் வருவாயும் பன்மடங்கு பெருகியது. இதன் காரணமாகவே, உடல் வருத்தி உழைக்கும் உழைப்பாளிகளின் ஊதியம் நூறுகளில் இருக்க, பாடல் வரிகளுக்கு வாயசைக்கும் நடிகர்களின் ஊதியம் பல கோடிகளில் உள்ளது.
இந்த
உழைப்புக்கு மிகுதியான ஊதியத்தைத் தக்கவைத்துக்கொள்ள திரைப்படங்களின் கதாநாயகர்கள் மேற்குறிப்பிட்டதைப்போல இரசிகர் சங்கங்கள், இசை வெளியீட்டு விழாவின் அதிரடி வசனங்கள் போன்ற பல உத்திகளை மேற்கொள்கின்றனர்.
நாளடைவில் ஒரு நடிகரின் மீதான ஈர்ப்பு, மற்ற நடிகர்கள் மற்றும் நபர்களின் மீதான வெறுப்புக்குக் காரணமாகின்றது. இதன் காரணமாகவே, அரசியலில் ஈடுபடும் நடிகர்களின் இரசிகர்கள், அவர்களுடைய நாயகனுக்கு எதிராக, கண்ணியமான முறையில் அரசியல் விமர்சனம் வைப்பவர்களைக் கூட மிகத் தரக்குறைவான வகையில்
சமூக ஊடகங்களில் கேலி செய்கின்றனர். திரையின் கதாநாயகர்களை, நிஜ வாழ்விலும் கதாநாயகர்களாகக் கருதுகின்றனர்.
சமூக
ஊடகங்களின் மாபெரும் வளர்ச்சி இந்நிலையை மேலும் மோசமடையச் செய்துவிட்டன. பல கோடிகளைச் சம்பளமாக
ஈட்டி, வரிகட்டாமல் ஏய்க்கும் நடிகர்களுக்காக இரசிகர்கள் சமூக ஊடகங்களில சண்டையிட்டுக் கொள்கின்றனர். இதன் காரணமாக, சமூகத்தின் முக்கியமான அனைத்துப் பிரச்சினைகளும் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன. சினிமாவின் வர்த்தக அரசியலின் வலையில் வீழ்ந்து கிடக்கும் இரசிகர்களும் மக்களும் தங்களின் வாழ்க்கைத் தேவையை மறந்து திரைப்
பிரபலங்களின் பட வெற்றியைப் பெரிதாகப்
பார்க்கின்றனர்.
இப்படிச்
சினிமாத்துறையே மக்களுடைய வாழ்வின் பெரும் பகுதியை அபகரித்துவிட்டதால், இரசிகர்கள் மட்டுமில்லாமல், பெரும்பாலும் மக்களும் நடிகர்களை நேரில் பார்க்கவேண்டும் என்று ஏங்குகின்றார்கள். அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள தங்கள் உயிரையும் பணயம் வைக்கின்றனர்.
மறுபுறம்,
நடிகர்கள் சினிமாவின் மூலம் தங்களுக்குக் கிடைத்த பெரும் இரசிகர் கூட்டத்தையும், மக்களிடத்தில் உள்ள திரை வெளிச்சத்தையும் கருத்தில் கொண்டு நேரடியாகப் பதவிக்குச் செல்ல வேண்டும் என்ற முனைப்புடன் தங்களுடைய இரசிகர் சங்கத்தைக் கட்சியாக மாற்றுகின்றனர். இரசிகர்
சங்கத்தைக் கட்சியாக மாற்றும் நடிகர்கள், தங்களுடைய இரசிகர்களைத் தொண்டர்களாக மாற்றுவதில்லை; அவர்களை அரசியல்படுத்துவதில்லை; அவர்களை இரசிகர்களாக ஒரு மாய உலகில் தொடர்ந்து வைத்திருக்கின்றனர். இதை அறியா இரசிகர்கள் தங்கள் தலைவர் அவருடைய வாழ்வையே தங்களுக்காகத் தியாகம் செய்துவிட்டு வந்துவிட்டதாக நினைத்து, தங்கள் தலைவரைத் தலையில் வைத்துக் கொண்டாடுகின்றனர்.
இந்த
நடிகர்களுக்குத் தெளிவான கொள்கை என்று எதுவும் இருப்பதில்லை. தங்கள் மீதான கவர்ச்சியைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள திரைப்படங்களில் எப்படி வசனங்களால் தங்கள் இரசிகர்களைத் திருப்திப்படுத்துகின்றார்களோ
அதேபோல் அரசியல் மேடைகளிலும் தன்னைத் தவிர அனைத்துத் தலைவர்களையும் திறனற்றவர்களாகவும்
நேர்மையற்றவர்களாகவும்
உருவகப்படுத்துகின்றார்கள்.
குறிப்பிட்ட சில நேரங்களில் மட்டும் மக்களிடையே தோன்றி, நடிகரைப் பார்க்க வேண்டுமென்ற ஆவலைச் செயற்கையாகத் தூண்டி மக்களை அரசியல் சதுரங்கத்தின் காய்களைப்போல் பயன்படுத்துகின்றார்கள். தரம் குறைந்த வசனங்களைப் பயன்படுத்தி மக்கள்
முன்னிலையில் கொள்கை முனைப்புடன் செயல்படும் பிற தலைவர்களின் அரசியல் அனுபவத்தைக் கேலிக்கூத்தாக்குகின்றார்கள். இதனால்
கொள்கை சார்ந்த அரசியலை மென்மேலும் பல வீனமடையச் செய்கின்றனர்.
கொள்கை என்பது வளர்ச்சியை நோக்கி மட்டுமல்ல, அது முழு மனிதச் சுதந்திரத்திற்கானதாக இருக்க வேண்டுமென்று பொருளாதார நோபல் பரிசு பெற்ற அமர்த்தியாசென் கூறுகின்றார். நாம் செயல்படுத்தும் கொள்கைகளால்தான் நம் உயர்வும் தாழ்வும் தீர்மானிக்கப்படுகிறது என்று முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா கூறுகின்றார். ஒரு கட்சி கொள்கையை மையமாக வைத்துச் செயல்பட வேண்டும். அப்பொழுதுதான், வியாபார அரசியல் குறைந்து மக்கள் நலன் மீதான அக்கறை கொண்ட அரசு அமையும்.
கொள்கையற்ற
அரசியல் செய்யும் நடிகர்கள் மக்களின் பிரச்சினைகளான பொருளாதாரச் சிக்கல்கள், ஊழலின் பாரம், வேலையில்லாத் திண்டாட்டம், தரமற்றக் கல்வி போன்றவைகளைப் பின்னுக்குத் தள்ளுகின்றனர். இவற்றைத் தங்கள் பேச்சுகளில் பெயரளவிற்குச் சேர்த்துக்கொண்டு தங்களைக் கதாநாயகர்களாக முன்னிலைப்படுத்திக் குறுக்கு வழிகளில் அரியணை ஏற முயற்சிக்கின்றனர்.
பொருளாதாரத்
தளமே ஒரு சமூகத்தின் அடிப்படைக் கட்டமைப்பு. அந்த அடிப்படைக் கட்டமைப்பின் மீதே கலை, பொழுதுபோக்கு, மதம் என்ற பிற தளங்கள் அமைய வேண்டும் என்று காரல் மார்க்ஸ் கூறுகின்றார். ஆனால், மக்களின் பொருளாதார வாழ்வானது சினிமா மோகத்தை மையமாக வைத்துக் கட்டியெழுப்புவது என்பது மிகவும் பேராபத்தானது. மக்களின் வலிகளை உணரச் செய்து தனிமனித ஒழுக்கத்தையும் அரசின் படிநிலைகளையும் சரிவரப் பொருத்தினால் மட்டுமே இங்கு வலிமையான சமுதாயத்தைக் கட்டியெழுப்ப முடியும். ஆனால், நடிகர்கள் மற்றும் பெரும்பாலும் அரசியல்வாதிகள் இதைச் செய்வதில்லை; ஏனெனில், மக்களை விழிப்படையாமல் வைத்துக்கொள்வதே அவர்களுடைய முதன்மையான பணியாகும். முதலில், மக்கள் அனைவரும் நடிகர்களைத் தங்களைப் போன்ற சாதாரண மனிதர்களாகக் கருதவேண்டும். அதற்கு மதிப்பெண் அடிப்படையிலான கல்வி மட்டும் போதுமானதல்ல; பகுத்தறிவுச் சிந்தனையை ஊட்டும் தலைவர்களின் சிந்தனைகளைத் தெரிந்துகொண்டு அதைச் செயல்படுத்த வேண்டும். தேர்தல் அரசியலில் ஈடுபடாத பொதுநலக்கட்சிகள் இன்னும் அதிகமாகத் தோன்றி, மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு அளிக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக நாம் ஒவ்வொருவரும் நம்முடைய சுய பகுத்தறிவுச் சிந்தனைகளுக்குச் செவிகொடுக்க வேண்டும்.
இங்குப்
புரட்சியென்பது நடிகர்களிடமிருந்தோ, தலைவர்களிடமிருந்தோ பிறக்கப் போவதில்லை. ஏனெனில், அவர்கள் ஊழலால் சுரண்டப்படுவதில்லை, வீதிகளில் உறங்கியதில்லை, ஊதியத்தின் பாதியை வரியாகக் கட்டியதில்லை. இவை அத்தனையையும் அனுபவிப்பவர்கள் மக்களே. எனவே, புரட்சி என்பது அவர்களிடமிருந்துதான் பிறக்கவேண்டும்.
நடிகர்கள்
மதம், இன மற்றும் சாதிவெறி
கொண்ட கும்பல்களின்மீது நாம் பெரிதும் நம்முடைய அக்கறையைச் செலுத்துவதால் மக்கள் அரசியல் செய்யும் தலைவர்கள் காணாமல் போகின்றார்கள். அவர்களை மக்கள் மிளரச் செய்தால் மட்டுமே தமிழ்நாடு மிளிரும். இல்லையேல்...?
நவம்பர் மாதம் என்பது நம் திரு அவையின் பாரம்பரியப்படி, இறந்து போன நம் அன்புக்குரியவர்களின் ஆன்மாக்களை நாம் நினைவுகூர்வதற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஓர் அழகான மாதம். இம்மாதத்தில் இறந்தவர்களுக்காகத் திருப்பலி ஒப்புக்கொடுப்பதும், இறந்தோரின் கல்லறைகளுக்குச் சென்று இறைவேண்டல் செய்வதும் பலரது வழக்கம். இந்நாள்களில், நமக்கு முன்னால் கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டு இறந்தவர்களை இறைவன் இறுக அணைத்துக்கொண்டார் என்ற உறுதிப்பாட்டோடு தொடர்ந்து அவர்களுக்காக இறைவேண்டல் செய்வது நம் கடமை. இறந்த அனைத்து நம்பிக்கையாளர்களின் நினைவை நாம் கொண்டாடக் கொடுக்கப்பட்டிருக்கிற ஓர் அற்புதமான தினம்தான் நவம்பர் 2.
அண்மையில்
நடந்த ஒரு கருத்தரங்கில் இறந்தோருக்காக இறைவேண்டல் செய்வது மற்றும் அவர்களுக்காகத் திருப்பலி ஒப்புக்கொடுப்பது ஆகியவற்றின் பின்னணியில் இருக்கிற காரணம் குறித்து ஒரு நபர் கேள்வி எழுப்பினார். எனவே, இன்று இந்தச் செபங்களைக் குறித்து அறிந்துகொள்வதும், அதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வதும் இறந்தோருக்காக ஒப்புக்கொடுக்கப்படுகிற திருப்பலியின் அளப்பரிய பலன்களை உணர்ந்துகொள்வதும், பாவங்களைப் போக்குகிற தூய்மை பெறும் நிலை அல்லது கழுவாய் நிலை (உத்தரிக்கிற ஸ்தலம்) இருக்கிற ஆன்மாக்களுக்காக இறைவேண்டல் செய்ய வேண்டியதன் அவசியத்தைத் தெரிந்துகொள்வதும் அவசியமாகிறது.
இறந்தோருக்காகத்
திருப்பலி ஒப்புக்கொடுக்கிற வழக்கமானது பாவங்களைப் போக்குகிற தூய்மை பெறும் நிலை அல்லது கழுவாய் நிலைமீது நாம் கொண்டிருக்கிற நம்பிக்கையோடு நெருங்கிய தொடர்புடையது. ஒரு நபர் இறைவன்மீது நம்பிக்கை கொண்டவராக இறந்திருந்தாலும், அவர் அற்பப் பாவங்களோடு இறந்திருப்பின் கடவுளின் அன்பாலும் இரக்கத்தாலும் தூய்மையாக்கப்படுவார் என்பது நமது நம்பிக்கை. இப்படித் தூய்மையாக்கப்பட்ட ஆன்மா விண்ணகத்தில் இறைவனை முகமுகமாய் காணத் தகுதியான புனித நிலையை அடையும். ஆனால், பாவங்களைப் போக்குகிற தூய்மை பெறும் நிலை அல்லது கழுவாய் நிலையில் இருக்கிற ஆன்மாக்களைப் பொறுத்தவரை அவர்கள் இத்தகைய எந்த ஒரு பலனையும் நேரடியாக அடைய முடியாது, ஏனெனில், அந்த ஆன்மாக்கள் மெச்சத்தக்க எந்த ஒரு செயலையும் செய்யக்கூடிய தகுதியோடு இல்லை. இந்த ஆன்மாக்கள் மீட்கப்பட்டிருந்தாலும், அவற்றால் புனிதத்தில் உயர முடியாது. மாறாக, மாட்சி பொருந்திய நிலையை அடைய தடையாய் இருக்கிற குறைகளைக் களைய மட்டுமே முடியும்.
இறந்தவர்களுக்காகத்
திருப்பலி ஒப்புக்கொடுக்கிற வழக்கம் ஒன்றும் புதிது இல்லை. திரு அவையின் மறைக்கல்வி நூல் எண் 1032 இதைப் பின்வருமாறு உறுதிப்படுத்துகிறது: ‘தொடக்கக் காலத்தில் இருந்தே திரு அவை இறந்தோரின் நினைவைக் கொண்டாடியிருக்கின்றது, அவர்களுக்காக இறைவேண்டல்களை ஏறெடுத்திருக்கின்றது. எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்கள் தூய்மையாக்கப்பட்டு இறைவனை முக முகமாய் காணும் பேற்றினைப் பெற திருப்பலி ஒப்புக்கொடுத்திருக்கிறது.’ இது
பழைய ஏற்பாட்டில் வேரூன்றி வளர்ந்த ஒரு பாரம்பரியம். திருச்சட்டம் தடைசெய்திருந்த வேற்றுத் தெய்வங்களின் அடையாளங்களை அணிந்து, இறந்திருந்த யூத படைவீரர்களுக்காக யூதா மக்கபே செபங்களையும் பலிகளையும் ஒப்புக்கொடுத்தார். இதையே மக்கபேயர் இரண்டாம் புத்தகத்தில் பின்வருமாறு வாசிக்கின்றோம்: “அந்தப் பாவத்தை முற்றிலும் துடைத்தழிக்குமாறு வேண்டியவண்ணம் மன்றாட்டில் ஈடுபட்டார்கள்” (12:42); “ஆகவே
இறந்தவர்கள் தங்கள் பாவத்தினின்று விடுதலை பெறும்படி அவர் (யூத மக்கபே) அவர்களுக்காகப் பாவம் போக்கும் பலி ஒப்புக்கொடுத்தார்” (12:45).
தொடக்கத்
திரு அவையின் வரலாற்றிலும் இறந்தோருக்காக இறைவேண்டல் ஒப்புக்கொடுக்கப்பட்டதற்கான
வலுவான ஆதாரங்களை நாம் காண முடிகின்றது. இது இறந்தவர்களை நினைவுகூர்வது மற்றும் அவர்களுக்காக இறைவேண்டல் பரிந்துரை செய்வது ஆகியவற்றில் திரு அவை கொண்டிருந்த ஆழமான நம்பிக்கையை நமக்கு அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த உரோமை நிலத்தடிக் கல்லறைகளின் மீது கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் இதற்கு ஆதாரமாகத் திகழ்கின்றன. கல்லறைமீது காணப்பட்ட கல்வெட்டில் ஃபிரிஜியாவில் உள்ள ஹைரோபோலிஸினுடைய ஆயர் அவர்கள், புனித அபேர்சியுஸ் அவர்களுடைய ஆன்ம இளைப்பாற்றிக்காகச் செபிக்க வேண்டுகோள் விடுத்தது பொறிக்கப்பட்டிருக்கின்றது
(கி.பி. 180). கி.பி. 211-இல்
புனித தெர்த்துலியன் மரித்தவர்களின் ஆண்டு நினைவானது செபங்களோடு அனுசரிக்கப்பட்டதற்குச் சான்றளித்து இருக்கின்றார். ஹிப்போலிட்டஸ் வகுத்து வழங்கிய சட்டநெறிமுறைகளும் திருப்பலியின் போது இறந்தவர்களுக்காக இறைவேண்டல் ஒப்புக்கொடுப்பதை வலியுறுத்துகின்றன (கி.பி. 235).
திரு
அவைத் தந்தையர்களின் சாட்சியங்களும் இந்த அழகான நம்பிக்கைக்கு ஆதரவு அளிக்கும் விதத்தில் அமைகின்றன. ஜெருசலேம் நகர் சிரில் அவர்கள் திருப்பலியில் எவ்வாறு உயிரோடு இருப்போரும் இறந்தோரும் நினைவுகூரப்படுகின்றார்கள்?
என்றும், எவ்வாறு இந்தத் திருவிருந்து உயிரோடு இருக்கிற அல்லது பாவத்தோடு இறந்த மனிதர்களுக்குப் பலன்தரக் கூடியதாக அமைகின்றது? என்பதைக் குறித்தும் தனது மறைக்கல்வி போதனையில் விளக்கமளித்திருக்கின்றார்.
கி.பி. 397-இல் புனித அம்புரோஸ் பின்வருமாறு போதிக்கின்றார்: “அவர்கள் வாழ்ந்தபோது அவர்களை நேசித்த நாம், அவர்கள் இறந்த பிறகு நம் செபங்களின் வழியாய் அவர்களை விண்ணக வீட்டில் சென்று சேர்க்கும் வரை அவர்களைக் கைவிட்டுவிடக் கூடாது.”
புனித
மோனிகா தன் மகனான புனித அகுஸ்தினிடம் தன் இறப்பிற்குப் பிறகு திருப்பீடத்தில் தன்னை எப்போதும் நினைவுகூரும்படி கேட்டுக் கொண்டார். கி.பி. 407-இல்
புனித ஜான் கிறிஸ்தோஸ்தம் பின்வருமாறு கேள்வி எழுப்புகின்றார்: “அவர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்கு உதவி புரிவோம். யோபுவினுடைய பிள்ளைகள் அவர்களுடைய தந்தை செலுத்திய பலியால் தூய்மையாக்கப்பட்டார்கள் என்றால், இறந்தவர்களுக்காக நாம் ஒப்புக்கொடுக்கிற திருப்பலியும் இறைவேண்டல்களும் அவர்களுக்குத் தேற்றரவாக அமைவதைக் குறித்து நாம் ஏன் சந்தேகிக்கவேண்டும்?”
திருத்தந்தை
புனித கிரகோரி பின்வருமாறு கூறுகின்றார்: “இறந்தவர்களுக்கு உதவி செய்ய, அவர்களுக்காக இறைவேண்டல் செய்ய, திருப்பலி ஒப்புக்கொடுக்க நாம் எப்போதும் தயங்கக்கூடாது.”
‘Mirae Caritatis’ என்ற தனது சுற்றுமடலில் திருத்தந்தை 13-ஆம் லியோ, “அற்புதமான திருப்பலி இறைவனுக்கு மட்டுமே ஒப்புக்கொடுக்கப்படவேண்டும்
என்று நம் நம்பிக்கையின் படிப்பினைகள் நமக்கு எடுத்துக் கூறினாலும், நம் பரிந்துரைகளைப் பெற்றுத்தரும் விதத்திலும் மேலும் திருத்தூதர்கள் மரபுப்படி கிறிஸ்துவில் இறந்திருந்தும் இன்னும் தூய்மையாக்கப்படாமல் இருக்கும் சகோதர, சகோதரிகளின் பாவக்கறைகளை அகற்றும் விதத்திலும் இறைவனால் முடிசூட்டப்பட்டிருக்கிற புனிதர்களின் நினைவாகவும் இதை நாம் கொண்டாடலாம்” என்கிறார்.
இரண்டாம்
வத்திக்கான் திருச்சங்கத்தின் ‘Lumen Gentium’ எனும் ‘உலகின் ஒளி’ என்கிற திரு அவை கொள்கை ஏடு பின்வருமாறு கூறுகின்றது: ‘விண்ணகத்தில் இருப்போர் மற்றும் இறந்து கழுவாய் நிலையில் தூய்மையாக்கப்படாமல் இருப்போர் ஆகியோருக்கும் நமக்கும் இருக்கிற உறவு ஒன்றிப்பின்மீது நம் முன்னோர் கொண்டிருந்த போற்றுதற்குரிய நம்பிக்கையை இந்தத் திருச்சங்கம் பற்றுறுதியோடு ஏற்றுக்கொள்கின்றது.’
நம்பிக்கையாளர்கள்
இறந்து கழுவாய்நிலையில் இருக்கிற ஆன்மாக்களுக்குத் தங்களது இறைவேண்டல்கள், பரிகாரங்கள், எல்லாவற்றுக்கும் மேலாக, திருப்பலியின் வழியாக அவர்கள் தூய்மையாக்கப்பட உதவி செய்யலாம். ஒவ்வொரு திருப்பலியும் காலம், இடம் போன்ற விசயங்களைக் கடந்து விண்ணகம்-மண்ணகம் மற்றும் கழுவாய்நிலையில் இருக்கிற நம்பிக்கையாளர்கள் யாவரையும் ஒரு புனிதம் மிக்க ஒன்றிப்பில் இணையச் செய்கின்றது. மேலும், நற்கருணை நம் அற்பப் பாவங்களைப் போக்கி, சாவான பாவங்களிலிருந்து நம்மைக் காத்து கிறிஸ்துவோடு நமக்கு இருக்கிற ஒன்றிப்பை இன்னும் அதிகப்படுத்துகின்றது (கத்தோலிக்கத் திரு அவையின் மறைக்கல்வி எண். 1391-1396). எனவே, இறந்த நம்பிக்கையாளர்களின் ஆன்மாவிற்காக நாம் ஒப்புக்கொடுக்கிற திருப்பலி, இறைவேண்டல்கள் மற்றும் பரிகாரங்கள் யாவும் சரியான மற்றும் தூய செயல்கள் ஆகும்.
(தொடரும்)
1925-ஆம் ஆண்டு நாக்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு டாக்டர் ஹெக்டேவார் தலைமையில் உருவாக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பு, இந்த ஆண்டு விஜயதசமியன்று அதன் நூற்றாண்டு நிறைவைக் கொண்டாடியது. தேசப்பற்றின் முழு அவதாரமாகக் கருதப்படும் இவ்வமைப்பின் முழுநேரப் பணியாளராக இருந்த மோடி இன்று இந்தியப் பிரதமரான நிலையில், இந்நூற்றாண்டு விழாவையொட்டி நினைவுத் தபால் தலையோடு, நூற்றாண்டு நினைவு நாணயமும் வெளியிட்டுத் தன் நன்றிக்கடனைத் தீர்த்து வைத்தார்.
சங்கப் பரிவாரங்களின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.-இன் (இராஷ்டிரிய சுயம் சேவக்) நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின்போது, இவ்வமைப்பின் தலைவர் மோகன் பகவத் அவர்கள் அருளின உரைச் சுருக்கத்தினை ஊடகங்கள் தாராளமாகவே வெளியிட்டிருந்தன. நூற்றாண்டு கண்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்குப் புகழாரம் சூட்டியவர்களின் செய்தியின் உள்ளடக்கம் என்னவாயிருந்தது? “நாட்டிற்கான தொண்டு (discipline), மக்களின் தேவையின் அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் செய்யும் மனிதாபிமானப் பணி (Humanitarian) இரண்டும் போற்றுதற்குரியன” என்று புகழ்ந்து வாழ்த்தும் சந்திரபாபு நாயுடு, இவரையொட்டி ஆந்திரப் பிரதேசத்தின் பவன் கல்யாண் அவர்கள், “ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் காட்டும் ஒழுக்கம், தொண்டு மனப்பான்மை, தேசத்தின் மீதான அர்ப்பண உணர்வு வியப்பானது” என்றெல்லாம் புகழும் பவன் கல்யாண் மேலும் கூறுகிறார்: “இவ்வமைப்பு இந்திய விடுதலைப் போராட்டத்தின்போது ஆரவாரமில்லாமல் காட்டிய ஆதரவு புகழ்வதற்குரியது.”
“தேசாபிமானம், பாரம்பரியம் காக்கும் ஒழுங்கு, சுய ஒழுக்கம், சமூக விழிப்புணர்வு இவையெல்லாம் நெகிழவைக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உயர் பண்புகள்” என்று வியந்து பாராட்டுகிறார் மராட்டியத்தின் மேனாள் முதல்வரின் மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே. இந்த ஆர்.எஸ்.எஸ். பற்றிய புகழ் குறிப்புகள் அனைத்தும் ‘இந்து’ நாளேட்டில் (அக் 13, 2025) இடம்பெற்றவை.
தேசப்பற்று, ஒழுக்கம், மனிதாபிமானம், தேசியம் எனும் அனைத்துப் பண்புகளுக்கும் கொள்கலனாகும் ஆர்.எஸ்.எஸ். இந்திய அரசால், அரசின் தலைமை அமைச்சர்களால் கொண்டாடப்படுவது அவர்களைப் பொறுத்தவகையில் சரிதான்! இதே நாளிட்ட ‘இந்து’ நாளிதழில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இன்றைய தலைவர் மோகன் பகவத் அவர்களின் உரையும் வெளியாகியுள்ளது. அவர் என்ன கூறுகிறார்: “கடந்த ஆயிரம் ஆண்டுகளில் இந்நாட்டிற்குள் குடியேறிய அந்நிய நாட்டினர் பலர் இந்நாட்டை விட்டு வெளியேறியபோது சிலரை இந்நாட்டிலேயே விட்டுச்சென்றனர். பாரதக் கலாச்சாரம் கற்பிப்பதற்கு ஏற்ப அந்த அந்நியர்களை நாம் பெருந்தன்மையோடு ஏற்றுக்கொண்டோம். அவர்களை அந்நியராக நாம் கருதவில்லை. ஆனால், வேறுபட்ட அடையாளங்களுடைய இவர்கள், இந்நாட்டில் பிரிவினைக்கு (Division) காரணமாய் அமைதல் கூடாது” (இந்து, அக்.5, 2025).
ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் செதுக்கப்பட்டு, இந்தியத் தலைமை அமைச்சராகும் அளவிற்கு வளர்ந்த மோடி அவர்கள், இந்தியாவின் விடுதலைப் பெருவிழா மேடையில் இந்திய ஒருமைக்கும் ஒற்றுமைக்கும் உருவகமாக ஆர்.எஸ்.எஸ். செயல்படுவதாகவும், இந்திய எழுச்சிக்கும் ஒற்றுமைக்கும் ஆதாரமாக நின்று செயலாற்றி வருவதாகவும் பாராட்டிய மோடி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு கொண்டாட்டத்திற்கு வாழ்த்தும் கூறினார்.
இன்றைய இந்தியா அன்று காலனி ஆதிக்கத்தை எதிர்த்துத் தேசிய இயக்கம் கண்டபோது, துரும்பளவு பங்குகூட இடம்பெறா ஓரமைப்புக்கு விடுதலை நாள் மேடையில் இப்படிப் புகழாரங்கள்!
இந்தியா விடுதலை பெறுகின்றபோது, மதம் சார்ந்த நாடாக உருவாகவேண்டும் என்ற இந்தியத் தேசியர்களின் கனவைத் தகர்க்கும் வகையில், இந்து மகாசபையும், ஆர்.எஸ்.எஸ்.-சும் செயல்பட்டு வந்த தன் உச்சம்தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கோட்சே, காந்தியின் மார்பு நோக்கி நீட்டிய துப்பாக்கி என்பதெல்லாம் கூறும் செய்தியென்ன?
ஆர்.எஸ்.எஸ். எனும் மத அடிப்படைவாத அமைப்பின் நூறாமாண்டு நாளில் இவ்வமைப்பின் உள்ளடக்கச் சிறப்பாகச் சொல்லப்பட்ட பண்புகளாகத் தேசக்கட்டுமானம், பாரம்பரியப் பாதுகாப்பு, சுயநலமின்மை, ஒழுங்கு, ஒழுக்கம், ஒருமை, ஒற்றுமை என்பன பற்றியெல்லாம் மீளாய்வு செய்யப் பெற வேண்டிய காலம் வந்தாகிவிட்டது. இவ்வமைப்பு நாடெங்கும் நடத்தும் ‘ஷாகா’ (Shaka) மூலம் நாட்டுப்பற்று வளர்க்கப்படுகிறது. உடற்பயிற்சி மூலம் இந்தியாவிற்கான உடற்கட்டுடன் கூடிய இளைஞர்கள் உருவாக்கப்படுகின்றனர் என்ற கட்டுக்கதைகளை அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனோநிலையிலிருந்து இந்தியக் குடிமக்களை மீட்டெடுக்க வேண்டிய காலம் உருவாகியுள்ளது.
இவ்வமைப்பு பேசும் ஒருமை, ஒற்றுமையின் பொருள் என்ன? தேசக்கட்டுமானம் என்றால் என்ன? ஆர்.எஸ்.எஸ். எதனை ஒழுக்கம் என்கிறது? ஒழுங்கு என்பதன் வரையறை என்ன?
மோகன் பகவத் தன் உரையில் பல ஆயிரமாண்டுகளுக்குமுன் இந்தியாவில் குடிபுகுந்தோரைப் பாரதக் கலாச்சாரம் தழுவி ஏற்றுக் கொண்டதாம். இந்நாட்டிற்குள் குடிபுகுந்து எஞ்சியிருப்போர் பலர் நம் அடையாளத்தை (Identity) இன்னும் பேணுவது சரியில்லையாம்?
இந்நாட்டில் குடிபுகுந்தோர் யார்? குடிபுகுந்தோர் யாரின் தயவில் குடிகளாக ஏற்கப்பட்டனர்? இம்மாதிரி கேள்விகளில் தொக்கி நிற்கும் அரசியல் என்ன? சனநாயக நாட்டில் யார் தயவில் யார் வாழ்வது? இந்நாட்டில் குடிபுகுந்தவர் யார்? என்ற தொல் ஆய்வுக்கு இடமில்லை என்றாலும், மதவாத ஆர்.எஸ்.எஸ். முன்வைக்கும் ‘இந்நாட்டின் முதன்மைக் குடிகள் எது?’ என்ற கேள்விக்கு விடைகாண முயன்றால், அடையாளத்தை இழக்க வேண்டிய நிலையிலிருப்போர் யாராயிருப்பர்?
வேற்று நாட்டிலிருந்து இந்தியாவில் குடிபுகுந்தோர் தம் அடையாளத்தை நிறுவக் கூடாதாம். இந்தப் பகைப் பேச்சை இந்தியப் பிரதமர் ஏற்கிறார், பாராட்டுகிறார். ஒற்றை அடையாளத்தை நாளும் நிஜமாக்கி வரும் இந்திய ஆளும் கட்சி இதனைத்தானே செய்துவருகிறது!
இந்திய நாட்டில் வாழ்வோர் இந்துக் கலாச்சாரத்தை ஏற்க வேண்டும்; இந்துமதத் தலைவர்களைப் போற்ற வேண்டும். இதனை ஏற்றுக்கொள்ளாதோர் இந்தியாவிலிருந்து எந்தச் சலுகையும் (Previllages) பெறத் தகுதியற்றவர்கள். இவர்கள் எவ்வித உரிமைகளையும் கோருவதற்கு (Chims) உரிமை இல்லை. ஏன் குடியுரிமைக்குக் (Citizen ship) கூடத் தகுதியில்லை; அந்நியர்கள் (Giliens) - ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கோல்வால்கர் முன்மொழிந்த கட்டளை இது. இந்த முன்மொழிவைக் கோல்வால்கர் முன்வைத்தார்; மோகன் பகவத் வழிமொழிந்தார்; மோடி நெகிழ்ந்துபோனார்.
ஏற்கெனவே கோல்வால்கர் முன்மொழிந்த இந்தியாவின் எதிரிகள் பட்டியலில் இசுலாமியரும் கிறித்தவரும் பொதுவுடமை இயக்கமும் இருப்பதை அறிவோமல்லவா? இம்மூன்று தரப்பினரையும் எதிரிகளாக அடையாளப்படுத்துவதற்கான காரணம் என்ன?
இந்திய மக்களை இந்து தேசியம் (Cultural nationalism) எனும் பிரிவினைவாதக் கோட்பாட்டினை முன்வைத்த ஆர்.எஸ்.எஸ். பரந்து விரிந்த நாட்டின் பன்மைத்தன்மையை அழித்து ஒற்றைப் பண்பைத் திணிக்கும் விதை கண்ட ஆர்.எஸ்.எஸ். மானுடத்தின் உயர் மாண்பினைச் சிதைக்கும் வண்ணம் ‘நாம்’ (We) - ‘அவர்கள்’ (they) என்ற பேதத்தினை வகுப்புவாதக் கருத்தியலின் அடிப்படையில் கட்டமைத்து, சிறுபான்மையினரின் மத அடையாளங்களைப் பகை அடையாளமாகத் திட்டமிட்டு, அதில் வெற்றியும் கண்ட வகுப்புவாத ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, கொண்டாடப்பட வேண்டிய அமைப்பா?
நூறாண்டு வளர்ச்சியின் அடையாளம் ஒன்றியத்தில் இன்று ஆட்சிப் பொறுப்பு! ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இன்று 36 கிளை அமைப்புகளைக் கொண்டு செயல்படுகிறது. விசுவ இந்து பரிஷத், பஜ்ரங் தள், இந்து முன்னணி, பாரதிய சனதா கட்சி என்ற பல்வேறு அமைப்புகளைக் கொண்டு செயல்படுகிறது. தமிழ்நாட்டின் இந்து முன்னணியாயினும், இந்து சாமியார்களை மூலவர்களாகக் கொண்டு இயங்கும் விசுவ இந்து பரிஷத் ஆயினும் பெயர்கள் தாம் வெவ்வேறே தவிர, இலக்கும் இயக்கமும் ஒன்றே. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூத்த தொண் டர் பேசும் மொழியும், கடைக்கோடி இந்துத்துவ உறுப்பினர் பேசும் மொழியிலும்-கருத்தியலிலும் எந்தவிதக் குழப்பமும் காண இயலாது. காலந்தோறும், இடம்தோறும் மாறுபட்டுப் பேசும் முறை இவர்களிடம் இல்லை.
ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான சங்கப்பரிவாரங்கள், எவையெல்லாம் இந்தியாவுக்கான கொள்கை, முதன்மை (Priority) என்று கூறிவந்ததோ, நடைமுறைக்குச் சாத்தியமற்றவை என்று மறுக்கப்பட்டும்-ஏளனப்படுத்தப்பட்டும் வந்தனவோ... அவையெல்லாம் படிப்படியாகச் சாத்தியமாகியே வருகின்றன. அயோத்தியில் இராமருக்கான ஆலயம், காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து பறிப்பு, பொதுச் சிவில் சட்டம், வக்பு உரிமை மறுப்பு, மதமாற்றத் தடைச்சட்டம், இந்தியைத் தேசிய மொழியாக அறிவிக்கத் துடிக்கும் போக்கு, மாநில உரிமைகளைப் பறித்தல் என்பனவெல்லாம் ஏற்கெனவே ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உறுதிமொழிகள். இவற்றில் பெரும்பான்மையும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
‘சாத்தியமற்றவை’ எனக் கருதப்பெறும் கொள்கைகள் பல சாத்தியமாகி வருதலை நாம் காண தவறிவிடக்கூடாது. மதரீதியாகக் குடிமக்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, தேர்தல் சனநாயகம் முழுமையாகத் திருடப்பட்டு, மத அடிப்படையிலான பெரும்பான்மை உருவாகும் நிலையில் பெரும்பான்மை வாதம் ஆட்சியேற்கும். பெரும்பான்மைவாதம் மத ரீதியான பெரும்பான்மையாக இருக்கும் நிலையில், மதச் சிறுபான்மையினர் நிலை அப்போது என்னவாகும்? தனித்த இயல்புடைய தேசிய இனங்களின் கதி என்னவாகும்? பெருமுயற்சியோடும் பெருங் கனவோடும் நம்பிக்கை தரும் வகையில் தரப்பட்ட அரசமைப்புச் சட்டமும் சனநாயகமும் என்னவாகும்?
உச்ச நீதிமன்ற நீதியரசர் மீது ‘சனாதனத்தை இகழ்ந்தார்’ என்ற பெயரில் வழக்குரைஞர் ஒருவர் செருப்பைத் தூக்கி எறிகிறார்! சனாதனமும் சனநாயகமும் இணைந்து செல்லமுடியாது என்பதே உண்மையாயிருக்க, சனநாயகம் தரும் உரிமைவழி உருவாக்கப்பட்ட நீதி பரிபாலன அமைப்பின் வழக்குரைஞர் உயர்வு பெற்ற ஒருவர், சனாதனக் கோட்பாட்டை இகழ்ந்தார் என்ற பெயரில் நீதிமன்றத் தலைமை நீதிபதியை எப்படி அவமானப்படுத்த முடியும்?
‘இந்து’ ஆங்கில நாளேட்டில் (அக்டோபர் 6) உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த ஒரு கேவலமான நிகழ்வொன்று நடந்துள்ளதைச் செய்தியாக அறிவித்தது. ‘கருவுற்ற முஸ்லிம் பெண்ணிற்குப் பிரசவம் பார்க்க இந்து டாக்டர் மறுப்பு’, ‘மதத்தின் அடிப்படையில் மருத்துவ மறுப்பை அனுமதித்த கொடுமை.’ இந்நிகழ்வு பற்றி அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மசூத், “இந்நிகழ்வுகள் அடங்கிய பாகுபாடும் சமூகத்தை மதவாரியாகப் பிரித்துப் பிரிவினைவாத அரசியல் நடத்தும்போக்கும் ஆளும் பாரதிய சனதாவின் கை வந்த கலை” என்கிறார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டில் இயங்கும் இனப்படுகொலைக்கெதிரான அமைப்பின் இயக்குநர் கிரகோரி ஸ்டார்டன் அவர்கள், “உலக வரலாற்றில் இந்தியா மிகப்பெரிய இனப்படுகொலை (Genocide) நாடாக மாறும் நிலை உருவாகி வருகிறது” என்கிறார். இதுபோன்ற கணிப்புகள் வெறும் கற்பனைகள் அல்ல; இந்திய விடுதலைக்கு முன்பும் பின்பும் இந்தியாவில் நடந்தேறிய மதக்கலவரங்களால் ஏற்பட்ட மனித இழப்புகள் அனைத்திலும் சங்கப் பரிவாரங்கள் பெரும்பங்கு வகித்தன என்பதைப் பல விசாரணைக் குழுக்களின் அறிக்கைகள் தந்துள்ளன.
“நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண் டிய உண்மை என்னவென்றால், ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பு பாசிச மனப்பான்மையை (Mentality) உள்வாங்கிய ஒன்று என்பது. இவ்வமைப்பை ‘பாசிசம்’ என்றே அழைப்பேன். இவ்வமைப்பின் பாதையைப் புரிந்துகொண்டோர் ஹிட்லரின் பாசிசம் ஐரோப்பாவில் என்ன கோரத்தை நிகழ்த்தியது என்பதை அறிவர். இந்திய நாடு ஹிட்லர் காட்டிய வழியைப் பின்பற்றாது என்பதை நம்புவோம்” -ஜவஹர்லால் நேரு (Nehru’s India, Aditya Mukherjee, பக். 83).
பாசிசத்தை எப்போது, எப்படிப் புரிந்துகொள்ளப் போகிறோம்?