கிறித்தவ வழிபாட்டு ஆண்டின் மிக முக்கியமான வாரமான ‘புனித வாரத்தின்’ தொடக்கமே குருத்து ஞாயிறு. தெருக்களில் குருத்தோலைகளை ஏந்தி ‘ஓசன்னா’ என்று பாடிச் செல்வது வெறும் மதச்சடங்கல்ல; அது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எருசலேம் வீதிகளில் நிகழ்ந்த ஒரு மாபெரும் அரசியல் எழுச்சியின் மறுபதிப்பு. இயேசுவின் எருசலேம் பயணம் என்பது வெறும் ஆன்மிகப் பயணம் மட்டுமல்ல; அது அதிகார மையங்களை நோக்கி விடப்பட்ட நேரடி சவால்! அது எளியவர்களின் அதிகாரம், நீதிக்கான வேட்கை மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக அமைந்த ஓர் ‘அரசியல் முன்னெடுப்பு.’
கழுதை எனும்
குறியீடு...
அக்காலத்து
அரசர்கள் போர்க்குதிரைகளின் மீது அமர்ந்து, ஆயுதப் படைகளுடன் நகருக்குள் நுழைவார்கள். அது அச்சத்தையும் ஆதிக்கத்தையும் பறைசாற்றும் நுழைவு. ஆனால், இயேசு ஒரு கழுதைக் குட்டியைத் தேர்ந்தெடுத்தார். இது ஒரு குறியீடு.
குதிரை
போரின் அடையாளம்; கழுதை அமைதியின் அடையாளம். இயேசுவின் நுழைவு வன்முறைக்கு மாற்றாக அறப்போராட்டத்தை முன் வைத்தது. இது அமைதிக்கான அரசியல். கழுதை என்பது அடித்தட்டு மக்கள் பயன்படுத்தும் விலங்கு. அது எளியவர்களின் அடையாளம். ஓர் அரசன் சாமானியர்களோடு தன்னைப் பொருத்திக்கொள்வது என்பது அன்றைய நிலப்பிரபுத்துவச் சூழலில் ஒரு புரட்சிகரமான அரசியல் செயல். இது ‘முகமற்றவர்களின் முகமாக’ அவர் மாறிய தருணம்.
உண்மைக்கும் நீதிக்குமான
பயணம்...
இயேசு
எருசலேமிற்குள் நுழைந்தது தற்காப்புக்காக அல்ல; உண்மையை உரக்கக் கூறுவதற்காக. எருசலேம் அன்றைய யூதச் சமூகத்தின் மதம் மற்றும் அரசியல் அதிகாரத்தின் மையப்புள்ளி. அங்கு நிலவிய ஊழல்களையும் ஆன்மிகச் சுரண்டல்களையும் கேள்வி கேட்கவே அவர் அங்கு சென்றார்.
இந்தப்
பயணம் நீதிக்கான பயணம். ஆலயத்திற்குள் சென்று வியாபாரிகளை விரட்டியடித்தது ஒரு மதச் சீர்திருத்தம் மட்டுமல்ல; அது ஏழை மக்களின் பொருளாதாரத்தைச் சுரண்டும் அமைப்பிற்கு எதிரான தாக்குதல். ‘குரலற்றவர்களின் குரலாக’ அவர்
ஒலித்தார். அன்றைய உரோமானிய ஆதிக்கத்திற்கும், அவர்களுக்குத் துணை நின்ற மதத் தலைவர்களுக்கும் இந்த நுழைவு ஓர் அச்சுறுத்தலாகத் தெரிந்தது. அதனால்தான் அவர்கள் அவரைக் கொல்லத் திட்டமிட்டனர்.
மனித மாண்பும்
உரிமைகளும்...
சமகால
அரசியல் சூழலில் இயேசுவின் இந்தப் பயணத்தைப் புரிந்துகொள்ள திருத்தந்தை 14-ஆம் லியோ அண்மையில் வெளியிட்ட ‘மக்களின் மாண்பு’ குறித்த செய்தியை நாம் நினைவுபடுத்த வேண்டும்: “ஒவ்வொரு மனிதனும் இறைவனின் சாயலில் படைக்கப்பட்டவன்; எனவே, அவனது உரிமைகளைப் பறிப்பதும், அவனை அடிமைப்படுத்துவதும் இறைவனுக்கு எதிரான செயல். சமூகத்தின் விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதே உண்மையான நற்செய்திப் பணி.” திருத்தந்தையின் இந்த வரிகள் குருத்து ஞாயிறின் அரசியலோடு பொருந்திப் போகின்றன. இயேசுவின் பயணம் மனித மாண்பை நிலைநாட்டும் பயணமாகும். அதிகாரம் என்பது அடக்குமுறைக்கு அல்ல; மாறாக, பலவீனமானவர்களைக் காப்பதற்கே என்பதை அவர் தமது செயல்கள் மூலம் உணர்த்தினார்.
வெறும் பார்வையாளர்களாக
அல்ல;
பங்கேற்பாளர்களாக...
இன்று
நாம் குருத்து ஞாயிறைக் கொண்டாடும்போது, வேடிக்கை பார்க்கும் ஒரு கூட்டமாக இருக்கக்கூடாது. இயேசுவோடு இணைந்து எருசலேம் வீதிகளில் பயணிக்கும் உண்மையான பங்கேற்பாளர்களாக நாம் மாறவேண்டும். இன்றைய சூழலில் எருசலேம் பயணம் என்பது, சமூகத்தில் நிலவும் சாதிய, மதவாதச் சுவர்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பது; எளியவர்களின் நிலங்கள் பறிக்கப்படும்போதும், சுற்றுச்சூழல் சீரழிக்கப்படும்போதும் நீதிக்காகப் போராடுவது; அதிகார வர்க்கத்தின் பொய்களுக்கு எதிராக உண்மையை உரக்கப் பேசுவது.
இயேசுவின்
அரசியல் என்பது ஆசனங்களைப் பிடிப்பதல்ல; மாறாக, கடைசி வரிசையில் இருப்பவனை முதல் வரிசைக்குக் கொண்டு வருவதாகும். அது ‘சகோதரத்துவத்தின்’ அரசியல்.
இன்றைய குருத்து ஞாயிறு, நமது கைகளில் இருக்கும் ஓலைகளைவிட, நமது இதயங்களில் இருக்கும் சமூக நீதி உணர்வை அதிகம் எதிர்பார்க்கிறது.
ஆகவே,
குருத்து ஞாயிறு என்பது ஒரு வெற்றியின் கொண்டாட்டம் மட்டுமல்ல; அது ஒரு தியாகத்தின் தொடக்கம். நீதிக்காகப் பேசுபவன் சிலுவையைச் சுமக்க நேரிடும் என்பதை இயேசு அறிந்திருந்தார். ஆனாலும் அவர் பின்வாங்கவில்லை. நாமும் இன்று குருத்தோலைகளை ஏந்தும்போது, ‘ஓசன்னா’ என்று முழங்கும்போது ‘இயேசுவைப்
போல நானும் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக இருப்பேன்; அநீதியைக் கண்டு அஞ்சமாட்டேன்; உண்மையான சனநாயகத்தையும், சமத்துவத்தையும் நிலைநாட்ட எனது பயணத்தைத் தொடர்வேன்’
என உறுதிமொழி எடுப்போம்.
குருத்து
ஞாயிறு என்பது வெறும் ஒருநாள் நிகழ்வல்ல; அது வாழ்நாள் முழுவதற்குமான ஒரு போராட்டத்தின் அறைகூவல்!
1980-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24-ஆம் நாள். தென் அமெரிக்காவின் எல்சால்வடார் பகுதியில் அமைந்திருந்த டிவைன் பிராவிடன்ஸ் மருத்துவமனை வளாகத்திலுள்ள சிற்றாலயத்தில் திருப்பலி நடந்து கொண்டிருந்த மாலை நேரம். திருப்பலி நிகழ்த்திக் கொண்டிருந்த ஆயர் ஆஸ்கர் ரொமேரோ தன் மறையுரையை முடித்துக் கொண்டிருந்தபோது ஆலயத்திற்கு வெளியே, தெருவில் ஒரு சிவப்புநிற வாகனம் வந்து நின்றது. அதனுள்ளிருந்து கையில் துப்பாக்கியுடன் வெளிப்பட்ட ஒரு மனிதன் ஆலயத்தை நோக்கி நடந்தான்.
துப்பாக்கியுடன்
வந்து ஆலயத்துள் நுழைந்தவன் ரொமேரோவின் மார்பைக் குறிபார்த்தான். ஒருசில நொடிகளில் துப்பாக்கிச் சத்தம் கேட்டது. ரொமேரோ தன் மார்பைப் பிடித்துக்கொண்டு திருப்பலி பீடத்தின் கீழே சாய்ந்தார். கல்வாரிப் பலி நிகழ்ந்து கொண்டிருந்த இடத்தில், துப்பாக்கிச் சூட்டால் ஒரு மனித உயிர் பலியானது.
அவரைச்
சுட்டது துப்பாக்கியா? மனிதனா? இரண்டுமே இல்லை... உண்மை!
உண்மை
சுடுமா? ஆம், அன்று உண்மைதான் சுட்டது. அது என்ன உண்மை?
1917, ஆகஸ்டு 15-ஆம்
நாள் பிறந்த ஆஸ்கர் ரொமேரோ தன் குடும்பத்தில் பெற்றோரின் எட்டுப் பிள்ளைகளில் ஒருவர். பள்ளிப் படிப்போடு தந்தை சாண்டோஸ் ரொமேரோவின் தச்சு வேலைக்குப் பயிற்றுவிக்கப்பட்டார். இளம்வயது பிள்ளையின் திறமையை உணர்ந்த தந்தை, தன் மகனுக்குள் வணிகத்திறனை வளர்க்க எண்ணியபோது, மகன் ரொமேரோ குருத்துவத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார்.
13 வயதில்
சான்மிகுவெல் பகுதியில் இருந்த இளங்குருமடத்தில் ரொமேரோ சேர்ந்தார். தாயார் உடல்நலமின்றிப் போனதால் மூன்று மாதங்களில் மடத்திலிருந்து வீடு திரும்பியவர் தாயின் அதிகப்படியான மருத்துவச் செலவுக்காகத் தன் இரு சகோதரர்களுடன் தங்கச்சுரங்கத்தில் வேலைசெய்து உதவினார். பட்டப்படிப்பையும் அவ்வூரிலேயே முடித்தபின் சான்சால்வடார் குருமடத்தில் சேர்ந்து குருத்துவப் படிப்பைத் தொடர்ந்தார். பின்னர் உரோமை நகரில் கிரகோரியன் பல்கலைக்கழகத்தில் இறையியல் முடித்தவர், 1942-ஆம் ஆண்டு ஏப்ரல் 4 அன்று குருப்பட்டம் பெற்றார். இத்தாலியில் பணி செய்து கொண்டிருந்த ரொமேரோவை, ஆயர் மீண்டும் எல்சால்வடார் திரும்புமாறு பணித்தார்.
குருவானவர்
வள்ளாடர்ஸ் என்ற நண்பரோடு இத்தாலியிலிருந்து சொந்த நாடு திரும்புகையில் இருவரும் ஸ்பெயினில் நிறுத்தப்பட்டனர். அங்கிருந்து மீண்டு வந்தாலும், பாசிச நாடான இத்தாலியிலிருந்து வருவதாக இருவரையும் கியூபாவின் எல்லையில் இராணுவத்தினர் கைது செய்து சிறையிலடைத்தனர். பல மாதங்கள் சிறை
முகாம்களில் இருந்த இருவரின் உடல்நலமும் சீர்கெட்டுப்போக, மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டனர். வெகு விரைவில் கியூபா இராணுவம் அவர்களை விடுவிக்க மெக்சிகோ வழியாக எல்சால்வடார் வந்தடைந்தனர்.
தென்
அமெரிக்காவின் அனமோர்ஸ் என்ற பகுதியில் பங்குத்தந்தையாகப் பணியாற்றிய ரொமேரோ, சான்மிகுவெல் பங்குக்கு மாற்றலாக அங்கே இருபது ஆண்டு காலம் மிகவும் சிறப்பாகப் பணி செய்தார். பல்வேறு திருத்தூதுக் குழுக்களை ஏற்படுத்தினார். சான்மிகுவெல் பகுதியில் பேராலயம் அமைய பாடுபட்டார். ‘அமைதியின் அன்னை’ பக்தியைப் பெரிதும் வளர்த்தார்.
சான்சால்வடார்
மறைமாவட்டக் குருமடத்தின் அதிபராக உயர்த்தப்பட்ட ரொமேரோ, தன் இடைவிடாத பணியால் மனச்சோர்வுக்கு உள்ளாகி ஒரு தியானத்தில் கலந்துகொண்டு மனரீதியாக அமைதி பெற்றார். 1966-இல் ஆயர் பேரவைச் செயலர் ஆனார். கத்தோலிக்கக் கோட்பாடுகளைக் காப்பதற்காக மறைமாவட்டம் வெளியிட்ட ‘ஓரியண்டேஷியன்’ என்ற
பத்திரிகையின் இயக்குநராகவும் பணி செய்தார். 1970-ஆம் ஆண்டில் சான்சால்வடாரின் துணை ஆயராக நியமிக்கப்பட்டார். நான்கே ஆண்டுகளில் மிகவும் நலிந்த, வறிய மக்கள் நிறைந்த சாண்டியாகோ டி மரியா மறைமாவட்டத்தின்
ஆயரானார். 1977-இல் சான்சால்வடார் மறைமாவட்டத்தின் பேராயராக உயர்த்தப்பட்டார்.
ரொமேரோவின்
பேராயர் நியமனத்தை மார்க்சிய அரசாங்கம் வரவேற்றாலும், ஏழைகளுக்கு விடுதலை என்ற முற்போக்குச் சிந்தனைக் கோட்பாட்டால் மார்க்சியம் ரொமேரோவால் தகர்க்கப்படுமோ என்று அது அஞ்சியது. தான் ‘ஏழைகளின் அன்பன்’ என்பதை ரொமேரோ எண்பிக்கும் நிகழ்வு ஒன்றும் நடந்தது. மறைமாவட்ட அளவில் தன்னம்பிக்கைக் குழுக்களை ஏற்படுத்தி ஏழைகளுக்கு உதவிபுரிந்த இயேசு சபைக் குருவானவர் ருடில்லோ கிராண்டே 1977-இல் கொலை செய்யப்பட்டார். இப்படு கொலை குறித்து விசாரணை நடத்தவேண்டும் என்று அரசாங்கத்தை ரொமேரோ கேட்டுக்கொண்ட போதும், அரசு அவர் கோரிக்கையைப் புறக்கணித்தது. பத்திரிகைகளும் மௌனமாயின. தன் நண்பரான குருவானவர் ருடில்லோ கொலை பற்றி ரொமேரோ வெளியிட்ட அறிக்கையில், எந்த நற்செயலுக்காக ருடில்லோ கொல்லப்பட்டாரோ, அதனைத் தான் தொடரப் போவதாகக் குறிப்பிட்டவர், நாட்டிலுள்ள வறுமை, சமூக அநீதி, படுகொலைகள், சித்திரவதைகள் குறித்துத் தன் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்தார்.
மனித
உரிமை மீறல்களுக்கும், இடதுசாரி ஆதரவாளர்கள் எதிர்ப்புக்குமிடையே புரட்சி அரசாங்கம் ஒன்று 1979-இல் ஆட்சியைக் கைப்பற்றியது. கொலைகள், சித்திரவதைகள் என அரசியல் அடக்கு
முறைகள் அதிகரித்தன. இவ்வளவு அக்கிரமங்கள் நடந்தாலும், அந்நாட்டிற்கு அமெரிக்கா இராணுவ உதவி அளிப்பதைக் கண்டு கொதித்த ரொமேரோ, அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டருக்கு எழுதிய கடிதத்தில், “அமெரிக்காவின் இராணுவ உதவியானது அநீதியாலும் அமைதியின்மையாலும் பாதிக்கப்பட்டுள்ள சால்வடார் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்து, அவர்கள்மீது அரசியல் அடக்கு முறையை அதிகரிக்கும்” என்று
எச்சரித்தார். அமெரிக்கா அக்கடிதத்தைப் பொருட்படுத்தாமல் இராணுவ உதவியைத் தொடர்ந்தது.
ரொமேரோவின்
மனிதாபிமான முயற்சிகளின் விளைவாக அவர் உலக அளவில் கவனிக்கப்பட ஆரம்பித்தார். 1980-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் லூவென் கத்தோலிக்கப் பல்கலைக்கழகம் அவருக்குக் கௌரவ முனைவர் பட்டம் வழங்கியது. அப்பட்டத்தைப் பெற ஐரோப்பா சென்ற ரொமேரோ, திருத்தந்தை இரண்டாம் ஜான்பாலைச் சந்தித்து சால்வடாரிலுள்ள அரசப் பயங்கரவாதம் மற்றும் படுகொலைகளைச் சட்டமாக்குவது குறித்துத் தெரிவித்து அந்த அரசுக்கு ஆதரவளிக்கக் கூடாது என்று கேட்டுக்கொண்டார்.
எல்சால்வடார்
ஆலயத்தில் ஒரு வானொலி நிலையத்தை உருவாக்கிய ரொமேரோ, ஞாயிறு தோறும் வானொலி மூலமாக மறையுரைகளை நிகழ்த்தினார். ஏழைகளின் சார்பாகப் பணியாற்றும் கத்தோலிக்கத் திரு அவையின்
உறுப்பினர்களின் துன்புறுத்தல்களுக்கு அரசுக்குப் பகிரங்கமாகவே கண்டனம் தெரிவித்தார்.
மூன்று
ஆண்டுகளுக்குள் ஐம்பதிற்கும் மேற்பட்ட குருக்கள் மிரட்டலுக்கு உள்ளாகி தாக்கப்பட்டனர். ஆறு குருக்கள் கொலையுண்டு மறைச்சாட்சிகளாக உயிர்விட்டனர். ‘திரு அவையின் குருக்களுக்கே இந்த நிலைமை என்றால், சாதாரண மக்களின் நிலை என்ன?’ என்று கேள்வி எழுப்பினார் ரொமேரோ. நாட்டில் எங்குப் பார்த்தாலும் அச்சுறுத்தல்கள், கைதுகள், சித்திரவதைகள், கொலைகள் என்ற அரசப் பயங்கரவாதத்தைக் கண்டித்தார்.
வாரம்
முழுக்க நாட்டில் நடக்கும் அநியாயங்களைப் பட்டியலிட்டு வானொலி மூலம் ஞாயிறு மறையுரைகளில் தெரிவித்தார். அவருடைய மறையுரைகளைப் பெருவாரியான மக்கள் கேட்கலாயினர். அவருடைய வானொலி சொற்பொழிவுகள் உலகப் பிரசித்திப்பெற்றன. அரசாங்கம் வானொலி நிலையத்தை இரகசியமாகக் குண்டு வைத்துத் தகர்த்தது. மறைமாவட்டப் பத்திரிகையான ஓரியண்டேஷியனிலும் இந்த அநியாயங்களின் பட்டியலை ரொமேரோ தொடர்ந்து வெளியிட்டார். உண்மைகள் உலகுக்கு வெளிச்சமாயின. எதிரிகள் கலக்கமாயினர்.
1980, மார்ச் 23 அன்று,
அதாவது ரொமேரோ கொல்லப்படுவதற்கு முன் தினம், அவர் தான் நிகழ்த்திய மறையுரையில் இராணுவ வீரர்களைக் ‘கிறித்தவர்கள்’ என்று
குறிப்பிட்டார். கிறித்தவர்களாகிய அவர்கள் ‘கொலை செய்யாதே’
என்னும் கடவுள் கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் அரசாங்கத்தின் அடக்குமுறைகள், மனித உரிமை மீறல்களுக்குத் துணைபோவதைக் கண்டித்துக் கடவுளின் கோபம் குறித்து எச்சரித்தார்.
ரொமேரோ
இதுவரையில் அரசப் பயங்கரவாதத்தின்மீது முன்வைத்த உண்மைக் குற்றச்சாட்டுகள் சுட்டதைவிட, இந்த உண்மை புரட்சி அரசாங்கத்தைப் பெரிதும் சுட்டது. ‘கிறித்தவர்களே வீரர்களாக உள்ள இராணுவத்தில் மனமாற்றம் ஏற்பட்டுவிட்டால் அரசாங்கத்தின் நிலை என்னவாகும்?’ என்று ஆட்சியாளர்கள் கலங்கினர். ரொமேரோ கூறிய இவ்வுண்மை அவர்களைச் சுட்டது. அவர்களோ உண்மையின் உருவான ரொமேரோவைச் சுட்டுக் கொல்லத் தீர்மானித்தனர். சதித்திட்டம் தீட்டப்பட்டது. ஆலயப்பீடத்தில் வைத்தே குருவானவர் ரொமேரோ கொல்லப்பட்டார். அவரைக் கொன்றது யார்? என்பதை உடனடியாகக் கண்டறிய முடியாத நிலையில், உலக நாடுகள் இப்படுகொலையைக் கண்டனம் செய்தன. இதைவிடக் கொடுமை என்னவென்றால், மக்கள் பெருமளவில் கலந்து கொண்ட இறுதி ஊர்வலத்தைப் படுகொலைக் களமாக்கிய பாவிகளின் செயல்கள்தான்.
1980-ஆம் ஆண்டு
மார்ச் மாதம் 30-ஆம் நாள் சான்சால்வடாரில் நடைபெற்ற பேராயர் ரொமேரோவின் இறுதி ஊர்வலத்தில் உலகெங்கிலுமிருந்து 25,000 மக்கள் கலந்துகொண்டனர். திடீரென பேராலயம் அருகே குண்டுகள் வெடித்தன. கலவரம் உருவாயிற்று. அரசாங்கப் பாதுகாப்புப் படைகள் என்ற பெயரால் பொதுமக்கள் ஏறக்குறைய 50 பேர் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாகினர். கலவரத்திற்கிடையிலே பேராயர் ரொமேரோவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
ஐக்கிய
நாடுகள் சபை மற்றும் உலகளாவிய அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளால் அபுயஸ்சனால் என்ற இராணுவ மேலதிகாரியின் தலைமையில் நான்கு படுகொலையாளர்கள் கொலையில் ஈடுபட்டுள்ளதும், அவர்கள் நிகரகுவா தேசியப் பாதுகாப்புப் படையோடு சேர்ந்து ஆட்சியைக் கவிழ்க்கத் திட்டமிட்டதும் தெரியவந்தது. பின்னர் தேசியவாதக் குடியரசுக் கூட்டணி என்ற பெயரில் ஆட்சிக்கு வந்தாலும், இராணுவ அதிகாரிகளைக் கொண்டு திட்டமிட்டு, மனித உரிமைமீறல்களில் ஈடுபட்டதோடு, கொலைகளையும் செய்தது.
எது
எப்படியோ... அநியாய அரசாங்கத்தின் அவலத்தை, அநீதித்தன்மையை எதிர்த்து உரக்கக் குரல் கொடுத்த பேராயர் ரொமேரோவின் உண்மைகள் படுகொலையாளர்கள் மனங்களைச் சுட்டன. அவர்களைச் சுட்ட உண்மைகள் ரொமேரோவின் உடலைச் சுட்டுப் பழிதீர்த்தன. வெளிப்படுத்தப்படும் உண்மை எப்போதும் அடுத்தவர் மனத்தைச் சுடும். அதற்காகப் பிறர்நலம் கெடுக்கும், தானறிந்த அநீதியை வெளிப்படுத்தாது போனால், தன் மனசாட்சியே ஒரு மனிதனைச் சுடும் அல்லவா!
மார்ச் மாதம் 20-ஆம் தேதி, அகில உலக மகிழ்ச்சி தினமாகக் கொண்டாடப்படுகிறது. இவ்வருடம் ஈரானுக்கும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கும் இடையே கடுமையான போர் நடந்து வருவதை அறிவோம். போரினை நடத்தும் நாடுகளைத் தாண்டி, மத்திய கிழக்கு நாடுகளும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள சூழல் இது. மிகக் குறிப்பாக, நமது நாட்டிலிருந்து பலர் வளைகுடா நாடுகளில் பணிபுரிவதால், போரோடு தொடர்பு அல்லாத நாம் ஒவ்வொருவரும் பயத்திலேயே வாழ வேண்டி உள்ளது.
பிப்ரவரி
மாதம் 28-ஆம் தேதி தெற்கு ஈரானில் மினாப் நகரிலுள்ள மகளிருக்கான தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற தாக்குதலில் மட்டும் 168 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் என்ற செய்தியை வாசித்ததும் நெஞ்சம் பதறுகிறது. இவ்வாறு எங்கும் மரண ஓலம், அழிவு, கோபம், பழிவாங்கல், சுயநலம், ஆதிக்க மனநிலை என எதிர்மறை எதார்த்தங்களின்
தாக்கம் வெகுவாகவே அதிகமாய் உணரப்படும் சூழலில், மகிழ்ச்சியை எப்படிப் புரிந்துகொள்ளப் போகிறோம்? மகிழ்ச்சியின் வகைகள் என்னென்ன? மகிழ்வான வாழ்விற்கான வழிமுறைகள் எதுவாய் இருக்க இயலும்? என அலசிவிட்டு, மகிழ்வான
சூழலை எப்படி உருவாக்குவது? என்பதைக் காண்போம்.
மகிழ்ச்சியை எப்படிப்
புரிந்துகொள்கிறோம்?
மகிழ்ச்சி
என்பது தனிப்பட்ட, உயிரோட்டமுள்ள நேர்மறை உணர்வுகளையும் (மகிழ்வு, நிறைவு), ஒட்டுமொத்த வாழ்வு குறித்தான நிறைவையும் (பொருள், நோக்கம்) தன்னகத்தே கொண்ட மனத்தின் நிலையாகவே (State of mind)
பார்க்கப்படுகிறது. மகிழ்ச்சி என்பதை மனநிலை தொடர்பான தனிநபர் விசயமாகப் பார்ப்பதைவிட, ‘நான் மகிழ்வாக இருக்கும் அதேவேளையில், இச்சமூகத்தின் ஒவ்வொரு தனிநபரின் மகிழ்விற்கும் நான் பொறுப்பு’
என்ற கூட்டுப் பொறுப்புணர்வுடன் மகிழ்வைப் பார்ப்பதே இன்றைய அறைகூவல்.
மகிழ்வின் வகைகள்
வால்டிங்கர்,
ஸ்கல்ஸ் ஆகியோர் இருவகையான மகிழ்வினைக் குறிப்பிடுகிறார்கள். தற்போதைய கணப்பொழுது மகிழ்ச்சியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, நிரந்தரமற்றது எனத் தெரிந்தும் இன்பத்தைக் கைக்கொள்ள நினைக்கும் மனநிலையை ‘Hedonic Happiness’ என்கிறார்கள். தொலைநோக்குப் பார்வையுடன் வாழ்வின் பொருள் மற்றும் நோக்கத்தை மையம் கொண்டு, வாழ்வுக்கான நிறைவைத் தேடும் மனநிலை ‘Eudemonic Happiness’ என வகைப்படுத்தப்படுகிறது.
மகிழ்வான வாழ்விற்கான
வழிமுறைகள்
தத்துவ
மேதை அரிஸ்டாட்டில், “வாழ்வில் மனிதனுக்கு ஒரே ஓர் ஆசைதான் உண்டு; மகிழ்வாக இருப்பதற்கான ஆசை மட்டுமே அது. பிற ஆசைகள் அனைத்தும் மகிழ்வை அடைவதற்கான வழிகள்” என்கிறார். மனிதன்
நான்கு நிலைகளில் மகிழ்வை அடைய முயல்கிறான். அவை: 1. உடனடியாக அடைய முயலுதல்; 2. ஒப்பிடுதல் மற்றும் சாதித்தல் வழி; 3. நேர்மறையான பங்களிப்பைச் சமூகத்திற்குத் தருவதன் மூலம்; 4. எந்நிலையிலும் - எச்சூழலிலும் நிறைவைக் காண்பதன் வழி. மனிதன் மகிழ்வைத் தேடி அலைகிறான். பொன், பொருள், பதவி, அழகு என மனிதன் தேடி
அலைந்து விரக்தியில் தேடல் முடிகிறது. எனவே, உளவியல் அறிஞர் கத்ரீனா ஃப்ளோம், “முன்மொழிவதெல்லாம் மகிழ்ச்சி கண்டெடுக்கப்பட வேண்டியது அல்ல; மாறாக, உருவாக்கப்படவேண்டியது” என்கிறார்.
மகிழ்வான சூழலை
உருவாக்கல்
Lyubomirsky
என்பவர், மகிழ்வைத் தீர்மானிக்கும் காரணிகளாக மரபியல் (Genetics), சிந்தனைகள்
(thoughts), சூழல்கள் (Circumstances) ஆகியவற்றைக்
கண்டறிகிறார். மகிழ்வான வாழ்விற்கு ஒவ்வொரு மனிதனின் மரபியல் கூறுகளும், மனநிலைகளும் முக்கியப் பங்கு வகித்தாலும், இப்போர்க் காலச்சூழல் நமக்கு விடுக்கும் அழைப்பு: தன்னலத்தையும் வன்முறையையும் தாண்டிய அமைதிக்கான சூழலை உருவாக்குவது என்பதை நம்மால் மறுக்க முடியாது.
நேர்மறைச்
சிந்தனை மகிழ்வைக் கொணருமா? அல்லது நேர்மறைச் செயல்பாடுகள் மகிழ்வைத் தருமா? என்ற விவாதம் உளவியல் அறிஞர்களுக்கு மத்தியில் எழுவதுண்டு. நேர்மறைச் சிந்தனைகள் நிலையானவை அல்ல; மாறிக்கொண்டே இருக்கிறது என்பது டேனியல் கில்பர்ட், மேத்யூ கில்லங்ஸ் ஓர்த் இவர்களின் ஆய்வு.
நமது
சிந்தனைகள் நமது கட்டுப்பாட்டில் முழுமையாக இல்லை. எனவே, சிந்தனைகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் மகிழ்வைக் கொணர முடியாது என்பது ஒருசாராரின் வாதம். இவர்களின் முன்மொழிதல் எல்லாம், “நேர்மறை எண்ணங்களைத் தாண்டி, நேர்மறைச் செயல்பாடுகளே மகிழ்வைக் கொணரமுடியும்” என்பதுதான்.
கூர்ந்துநோக்கின், நேர்மறைச் செயல்பாட்டிற்கும் நேர்மறை எண்ணங்களே அடிப்படையாக அமைகின்றன.
எனவே,
நல்லதை எண்ணுவோம், நல்லதைச் செயல்படுத்துவோம். பொறாமை, பழிவாங்கல், துன்புறுத்தி இன்பம் காணும் எதேச்சதிகாரத் தன்னல மனப்பான்மையிலிருந்து விடுபட்டு, பிறரைப் பாராட்டுவதும், துன்பங்களில் உடனிருப்பதும், ஆக்கப்பூர்வமான பிறரன்புப் பணிகளில் ஈடுபடுவதும் மட்டுமே நம் செயல்பாடுகளில் மிளிரட்டும். இதுவே மகிழ்வான உலகைக் கட்டியெழுப்ப நம் அடி நாதமாக அமையட்டும்.
நிறைவாக,
திருப்பாடல் 126:3 எடுத்துரைப்பது போல, “ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால் நாம் மகிழ்ச்சியுறுகிறோம்” என்ற
இறைநம்பிக்கையும் நன்றியுணர்வும் நம்மில் இருக்கும் வரை நம்முள் இருக்கும் மகிழ்வை யாரும் பறித்துவிட முடியாது.
பிரிட்டிஷ் இந்தியாவில் (1908) தமிழ்நாடு வந்து, துறவறப் பயிற்சி பெற்று, 1920-இல் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டு, 1921 முதல் ஆண்டாவூருணியின் பங்குப் பணியாளனாய்ப் பொறுப்பேற்று, 1943-ஆம் ஆண்டுவரை அரும் பணியாற்றி, சுதந்திர இந்தியாவில் (1943-56) இராமநாதபுரம், (1956-73) சருகணி எனப் பயணிக்கிறார். இக்காலகட்டத்தில் தொடர்பு சாதன வசதிகள் மிகக் குறைவு. ஆனால், அனைவரும் கையாண்டது கடிதத் தொடர்புதான்.
தம்
கைப்பட உடன்பிறப்புகள், உறவினர்கள், உபகாரிகள், பங்கு அன்பர்கள் எனப் பல தரப்பினருக்கு இவர்
எழுதத் தவறியதில்லை; அதே நேரத்தில் இவரை நோக்கி அயல்நாட்டிலிருந்தும் உள்நாட்டிலிருந்தும் கடிதங்கள் வந்த வண்ணம் இருந்தன. இவரது தமிழ்க் கடிதங்களை வாசித்துக் காட்டவும், தந்தை சொல்லச் சொல்லப் பதில் எழுதவும் வாய்ப்புப் பெற்ற சிறுவன் நான் (1968-71).
இயேசு
சபையினர் இறந்த பிறகு அவர்களது அரிய பொருள்களை கொடைக்கானல், செண்பகனூரில் உள்ள ஆவணக் காப்பகத்தில் வைப்பர். அவற்றில் கடிதங்கள் பெரும்பங்கு வகிக்கும். அப்படிப்பட்ட கடிதங்கள் பெரும்பாலும் பிறரால் எழுதப்பட்டவையாகவே இருந்ததுண்டு. ஆனால், தந்தை லெவேயைப் பொருத்தவரை பிறர் எழுதிய கடிதங்களோடு, இவர்தம் உறவினர்கள், உடன் பிறப்புகள், உபகாரிகள் எனப் பலருக்கும் தன் கைப்பட எழுதிய கடிதங்களும் காணக் கிடைப்பது வியப்பிலும் வியப்பே!
இவர்
கைப்பட எழுதிய கடிதங்கள் முதன்மைக் குறிப்புகளாகும். எனவேதான் அவற்றைத் தொகுத்து நூல்களாக வெளியிட விரும்பினேன். உண்மைத் தன்மையை நிலைநிறுத்தவும், தலத்திரு அவையில் இளைய தலைமுறையினர் இறை ஊழியரின் மனநிலையைப் புரிந்துகொள்ளவும் விரும்பித் தமிழில் மொழிபெயர்ப்பு செய்ய விழைந்தேன். அதன்படி ஆண்டாவூருணி, பாளையங்கோட்டை, இராமநாதபுரம் பணித்தளங்களில் எழுதிய கடிதங்களைப் பிரித்தெடுத்து ‘இப்படிக்கு லெவே I, II,
III’ என
மூன்று நூல்களாக வெளியிட்டேன்.
தற்போது
தந்தை லெவே ஆன்மிகக் குருவாக அனுப்பப்பட்ட சருகணியில் (1956-73) உள்ள கடிதங்களைக் கண்ணுற்றேன். 1968 முதல் 1971 வரை தந்தையின் பீடச்சிறுவனாயிருந்த எனக்கு அவர் வாழ்வின் இறுதி ஆண்டுகளான 1972-73-இல் எழுதிய 28 கடிதங்களை வாசிக்கும் ஆர்வம் ஏற்பட்டது. அவை என்னால் புரிந்துகொள்ளக்கூடிய, உயிரோட்டமுள்ள அனுபவங்களாக இருந்தன. எனவேதான் அவற்றைத் தொகுத்து ‘இப்படிக்கு லெவே... IV’ (சருகணியின் புனிதம்:
1972-73) என்ற தலைப்பில் எழுத முற்பட்டேன். இதில் 23 கடிதங்கள் 1972-இல் எழுதப்பட்டவை; 5 கடிதங்கள் 1973-இல் எழுதப்பட்டவை. ஜனவரியில் மூன்றும் (8,24,31), பிப்ரவரியில் ஒன்றும் (14), மார்ச்சில் ஒன்றும் (14) என அமைகின்றன. மார்ச்
21-இல் விண்ணகப் பிறப்படைகிறார். எனவே, மார்ச் 14-இல் எழுதிய கடிதமே அவர் வாழ்வின் இறுதிக் கடிதமாகிப் போகிறது.
இங்குப்
பிரெஞ்சு மொழியில் எழுதிய கடிதம் இணைக்கப்பட்டுள்ளது; முதுமையின் காரணமாக முகவரி மட்டும் தந்தை லெவே எழுதியுள்ளார். கடிதத்தை உதவிப் பங்குத் தந்தை அருள்பணி. இராஜசேகரன் சொல்லக்கேட்டு எழுதியிருக்கிறார். கடிதக் கட்டமைப்பில் பெரிய மாற்றம் இல்லை. சாதாரணமாகக் கடித முகப்பில் இடமும், தேதியும் குறிக்கப்பட்டிருக்கும். இங்கு உதவிப் பங்குத் தந்தை அருள்பணி. இராஜசேகரன் ‘புனித சவேரியார் ஆலயம், இராமநாதபுரம் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா’ என எழுதுகிறார்.
• ‘நல்ல மலம்
கழிவதால் உடல் நலனில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது. மருத்துவர் பலமுறை சோதிக்கிறார். இதயத் துடிப்பு சீராக உள்ளது.’
• ‘பழைய துணிகளை
அடுத்த கப்பல் வழியாக அனுப்பும் தேதியைக் குறிப்பிடவும்.
• புதிய மறைமாவட்டம் உதயமாகும் குறிப்பு உள்ளது. இதனடிப்படையில் தற்போதைய இல்லத் தலைவர் அருள்பணி. துரைராஜன் புதிய ஆயரை வரவேற்க முதன்மைக் குருவாக அப்பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
• தன் முயற்சியால் திருமண வாழ்வுக்குத் தயாராகும் இளம் தம்பதியினர் லூயிஸ் பஞ்சவர்ணம் திருமண நாளை தீர்மானம் செய்ய அமலவை அருள்சகோதரி. ஜோசப்பா ஞாயிறன்று அங்கிருந்ததாகக் குறிப்பிடுகிறார்.’
• ‘தற்சமயம் எனக்குப்
பசி எடுப்பதில்லை. உன் போன கடிதத்திற்கு நன்றி. என் இதய ஆழத்திலிருந்து உன்னை ஆசிர்வதிக்கிறேன்.’
அன்புடனும்
நன்றியுடனும் மாமா
லெவே
சே.ச.
என்று
எழுதுகிறார்.
இறுதி
மூச்சுவரை சமூக அக்கறை, அருள்பணியில் ஆர்வம், பாளையங்கோட்டை மறைமாவட்டம் உதயமாவதற்குப் பாராட்டு, உடல் நலன் ஒட்டிய சிந்தனைகள் என இவரின் ஒட்டுமொத்த
ஆளுமையை வெளிக்கொணரும் இக்கடிதம்போல், தான் எழுதிய நூற்றுக்கணக்கான கடிதங்கள் வழியாகப் பலர் வாழ்ந்திருக்கிறார்கள், வளர்ந்திருக்கிறார்கள். இருபாலரும் இறை அழைத்தலை உறுதியோடு ஏற்றிருக்கிறார்கள். இந்த அற்புதமான கடிதங்களுக்காக இறைவனுக்கு நன்றி கூறுவோம். இறை
ஊழியர் விரைவில் புனிதராக உயர்த்தப்பட இறைவனை இறைஞ்சுவோம்.
மனித வாழ்வை மேம்படுத்தும் பணிகளில் தன்னை முழுமையாக அர்ப்பணித்த லெவே அடிகளாரின் வாழ்வில் புனிதம் மிளிர்கின்றது. அவரது வாழ்க்கை ‘அன்பும் சேவையும்’ என்ற இரண்டு தூண்கள் மேல் தழைத்து நின்றது. அடிகளார் கிறிஸ்துவின் போதனையை உள்வாங்கி, தன்னை ‘ஒடுக்கப்பட்டோரின் தோழன்’ எனக் கருதி வாழ்ந்தார். சமத்துவம், அன்பு, கருணை, மனிதநேயம் ஆகியவற்றையே உயர்ந்த மதிப்பீடாகக் கொண்டார்.
சொல்லில் வலிமை, செயலில்
மேன்மை
லெவே
அடிகள் சொல்வது போலவே செயலிலும் மேன்மை விளங்கும். சொல்லால் மட்டுமல்ல; தன் தியாகத்திலும்
அவரின் புனிதம் வெளிப்பட்டது. அவர், தான் கடவுளின் கருவி என்றே வாழ்ந்தவர்; கடமையைத்
தியாகமாக மாற்றியவர். தான் பார்த்த ஒவ்வோர் ஏழையிலும் இயேசுவின் திருமுகத்தைக் கண்டவர்.
பசியோ, நோயோ, துயரோ அனைத்தும் தந்தை அவர்களுக்கு இறைவனின் அழைப்புப் போல இருந்தது.
ஏழைகளோடு பேசுவதால் மட்டுமல்ல; அவர்களின் துயரைத் தன் தோளில் சுமந்ததால் அவரின் சேவை
ஒரு புனித மொழியாக மாறியது.
தந்தை
லெவே மக்களிடம் பெறுவதில் இல்லை; கொடுப்பதில் மகிழ்ச்சி கண்டார். சிறு உதவியிலும் கூட
மிகுந்த மகிழ்ச்சி பெற்றார். ஒரு பசியாளன் வயிறு நிறைந்தால், ஒரு குழந்தை எழுத்து கற்றால்,
ஒரு நோயாளன் குணமானால் அத்தகைய மகிழ்ச்சி அவருடைய கண்களை ஒளிர வைத்தது. யாருக்கும்
தெரியாமல் உதவி செய்யும் பண்புள்ளவர். ஏழை ஒருவர் துன்புற்றால் அது அவருக்குப் பெரிய
அழைப்பு. யாருடைய பாராட்டையும் எதிர்பார்க்கும்
பண்பு அவரிடம் இல்லை. அதுபோல் அவர் செய்த உதவிக்கு எங்கும் அவர் பெயர் எழுதப்படவில்லை.
ஆனால், சென்ற பங்குகளில் மக்களின் வரலாற்றில் அவர் பெயர் நிலைத்திருந்தது.
அன்பில் மலர்ந்த ஆன்மிகம்
தந்தை
லெவேயின் வாழ்க்கையின் மிகப்பெரிய சக்தி சொல்லிலும் இறைவேண்டலிலும் தளராத நம்பிக்கையிலும்தான்
இருந்தது. எந்த ஒரு செயலுக்கு முன்னும் இறைவேண்டல் என்பதே வாழ்வானது. அவருக்குச் செபமே சுவாசமாயிருந்தது; அதுவே மக்களுக்கு
வாசமாயிருந்தது. லெவே தந்தையில் இறைத்தந்தையின், இயேசுவின், தூய ஆவியாரின் உடனிருப்பு
ஒளிர்ந்ததால், இறைவனை முழுமையாக நம்பியதால் மனித முயற்சியைத் தாண்டி அற்புதங்களை நிகழ்த்தும்
சக்தியைக் கொண்டிருந்தார். அவருடைய செபம் காயங்களை ஆற்றும் மருந்தாயிற்று. குறிப்பாக,
1920-ஆம் ஆண்டில் காலரா கொள்ளைநோய் தாக்கியபோது நோயுற்ற பிள்ளைகளைப் பெற்றோரும், தொற்றுப்
பற்றிக்கொண்டோரை அவர்களது உறவினர்களும் கைவிட்டு ஓடிப்போனபோது, லெவே அடிகள் ஊரிலேயே
தங்கி நோயாளிகளைப் பராமரித்து, உதவிகள் செய்தும், இறந்தோரை நல்லடக்கம் செய்தும் அருந்தொண்டாற்றினார்.
தந்தை லெவே விவசாயிகளின் தோழன். கால்நடைகள், ஆடு
மாடுகள் நோயுற்றபோது அவர்கள் தந்தையிடம் ஓட்டிவர, அவர் செபம் செய்து புனித நீரை ஊற்றிட,
கால்நடைகளின் நோய் நீங்கியன. ஒருமுறை மழையில்லாமல் பயிர்கள் கருகிட, தந்தை நடுப்பகலில்
சுட்டெரிக்கும் தரையில் முழந்தாளிட்டு நீண்ட நேரம் கைகளை விரித்து வானை நோக்கிச் செபம்
செய்ய, மக்கள் வியக்கும் வண்ணம் பெருமழை பெய்தது.
விவசாயிகளின் பயிர்களைப் பூச்சிகள் நாசம் செய்யும்போது தந்தையிடம் வர, பனை ஓலையில்
செபத்தை எழுதி அதை வயலின் நடுவில் ஒரு சிலுவையைக் கம்பில் கட்டி வைக்கச் சொல்வார்.
தந்தை மந்தரித்துக் கொடுத்த தீர்த்தத்தை வயலில் தெளிக்கப் பூச்சிகள் ஒழிந்து போனது,
விவசாயம் நல்ல பலனைத் தந்தது.
லெவே
அடிகளாரின் உள்ளம் எப்போதும் குறைவுகளைக் காணாதது. அவர் பார்த்த ஒவ்வொரு மனிதரிடமும்
நல்லதையே கண்டவர். ஒருவர் எவ்வளவு எளியவராக இருந்தாலும், எவ்வளவு வறுமையில் இருந்தாலும்,
எத்தனை குறைகளுடன் வாழ்ந்தாலும், அவர்களிடம் இருக்கும் சிறு நம்பிக்கையையே அவர் பெரிதாகக்
கண்டார்.
அவரின்
அளவில்லாக் கருணை புரிதல் அன்பு! எவரைக் கண்டாலும் அவர்களை முழுமையானவர் போலவே பார்க்கும்
நெறியை உருவாக்கியது. எல்லாரையும் நிறைவான படைப்பாகக் காணும் அந்தத் தூய பார்வையே அவரின்
புனிதத்தை உலகிற்கு உணர்த்தியது. லெவே தந்தையின் உள்ளத்தில் பிறரின் பாதுகாப்பு என்பது
ஒரு பணி அல்ல; ஒரு பொறுப்பு; ஓர் அர்ப்பணிப்பு!
அவர்
இருந்த இடத்தில் யாராவது அபாயத்தில் இருக்கிறார்கள் என்ற செய்தி கேட்டால், அதை அவர்
தனது வலியாக உணர்ந்தார். சருகணியில் ஒருமுறை மழைநீர் பெருகி, பள்ளிக்குச் செல்லும்
சிறுமிகள் பயந்து நின்றனர். நீர் ஆறு போல ஓடியதால் பெற்றோரும் குழந்தைகளை அனுப்பத்
தயங்கினர். அதை அறிந்த லெவே தந்தை, அந்தச் சாலையிலே தானே நின்றார். எதுவும் சாப்பிடாமல்,
மழை நனைத்தாலும் கவலைப்படாமல் அந்தக் குழந்தைகள் ஒவ்வொருவரும் பாதுகாப்பாகக் கடந்து
செல்லும்வரை அவர்களுடன் நடந்தார். அவரை நனைந்த உடையுடன் பார்த்த ஒரு கிராம முதியவர்
கேட்டார்; “தந்தையே! இதை ஏன் நீங்கள் செய்கிறீர்கள்?” அவர் மெதுவாகச் சிரித்துக்கொண்டே,
“அவர்கள் பாதுகாப்பாக இருந்தால், அதுவே எனக்கு உண்மையான ஆசிர்வாதம்.” இந்த நிகழ்வு
கிராமத்தில் யாராலும் மறக்கமுடியாத நினைவாகி, மக்கள் அனைவரின் மனத்திலும் அவரின் கருணை
பசுமரத்து ஆணியைப் போலப் பதிந்தது.
இளையோரும் பெண்ணிய மாண்பும்
லெவே
அடிகள் பணியாற்றிய பகுதிகளில் இளம்பெண்கள் இரவு நேரங்களில் சாலையில் நடந்து செல்ல வேண்டிய
சூழல்கள் இருந்தன. அந்தப் பகுதிகளில் தெரு விளக்குகள் குறைவாக இருந்தன. சில இடங்களில்
குடிபோதையில் நடமாடும் மனிதர்களும் இருந்தனர். பெண்களுக்கு இது பயத்தை உண்டாக்கும்
சூழல். இந்த நிலையை மாற்றவேண்டியதை லெவே அடிகள் ஆழமாக உணர்ந்தார். பாதுகாப்பாக அவர்கள் இரவு திரும்ப பாதை அமைத்தார். அவர் கிராமத்
தலைவர்களையும், ஆலயக் குழுவினர்களையும் அழைத்து, இளம் பெண்கள் பள்ளி அல்லது தையல் பயிற்சி
மையங்களில் இருந்து திரும்பும் நேரத்தில் தன்னார்வப் பாதுகாப்புக் குழு அமைத்தார்.
அதாவது சில நம்பகமான இளைஞர்கள் அவர்களுடன் நடந்து செல்ல ஏற்பாடு. அதற்கு லெவே அடிகள்
வழிகாட்டினார்.
இளைஞர்களைப்
பொறுப்புள்ளவர்களாய் வளர்த்தார். “ஒரு பெண் பயப்படாமல் நடக்க முடிகிறதா? அது உங்கள்
மனிதநேயத்தின் அளவு” என்று அவர் இளைஞர்களிடம் அடிக்கடிக்
கூறுவார். இதனால் அந்தக் கிராமத்தில் இளைஞர்கள் பெண்களை மதிக்கும் மனப்பான்மை வலுவடைந்தது.
மனிதரை
மனிதராகப் பார்க்கின்ற, மதிக்கின்ற மகத்துவத்தில்தான் இறைவனைக் கண்டுகொள்ள முடியும்.
மற்றவர்களின் குறைகளைப் பொறுத்துக்கொள்ளும் கருணை; துயரிலும் கூட மனம் தளராமல் நிற்கச்
செய்யும் நம்பிக்கை இவை அனைத்தும் மனித முயற்சியால் மட்டுமல்ல, இறைவன் தரும் உள்ளார்ந்த
அமைதி என்பதால்தான் வருகிறது.
மனிதரை
மதிக்கும் மனமே, உண்மையான இறை அறிவு. ஒருவன் யார் என்பதைப் பார்த்து அல்ல; இவன் இறைவனின்
படைப்பே என்பதால் தந்தை லெவே அனைவரையும் மதித்தார். இதுதான் ஆன்மிகத்தின் உச்சம். பொறுமை
மனிதனின் மனத்தைத் தெய்வீகமாக்கும்; கனிவு அவரது உள்ளத்தை ஒளியாக்கும். மற்றவரை மதிக்கும்
பண்பு அவரது வாழ்க்கையை இறைவனின் சாயலாக்கியது. தந்தை லெவே வாழ்வில் கிறிஸ்துவின் இதயத்துடிப்புடன்,
கிறிஸ்துவின் கண்களால் உலகைப் பார்த்தார். இதற்கு அவரின் வாழ்க்கையே ஒரு சாட்சி.
மக்களை நேசித்த மகான்
- மனித மனங்களில் என்றுமே வாசம்
மக்களை
நேசித்த தந்தை லெவேயின் வாழ்க்கை மரணத்தால் முடிவடையாது. அவர் உடல் மண்ணில் கலந்தாலும்,
அவர் செய்த எண்ணற்ற நன்மைகளால் மக்களின் நெஞ்சங்களில் நீங்காத நினைவலைகளாய் வலம் வருகிறார்.
அன்பு கொண்டவரின் வாழ்க்கைக்கு முடிவு கிடையாது. பிறர் துயரத்தைத் தன் துயரமாகக் கொண்டு,
அவர் விதைத்த அன்பினால் ஒவ்வொரு நெஞ்சிலும் ஓர் உயிராகவே தொடர்ந்து வாழ்கிறார். செய்த
சேவையை மரணம் அழிக்காது, அழிக்க முடியாது. நோயாளிகளுக்கு மருந்தாகவும், ஏழைகளுக்கு
முதல் நம்பிக்கையாகவும், கல்வியில்லாக் குழந்தைக்குத் தூண்டுதலாகவும் வாழ்ந்தவர். ஒருவர்
தன் உயிரை மட்டும் இழக்கிறார்; ஆனால், அவர்தம் அன்பு பல ஆயிரக்கணக்கான உள்ளங்களில்
பதிந்து விடுகிறது. நினைவாக அல்ல விளக்காக வாழ்கிறார். ‘அவர் இன்றும் நம்மோடு உள்ளார்’ என்று உணர்கிறார்கள். காரணம் அவர் காட்டிய மனிதநேயம் அவர்களை,
அவர்களின் வாழ்வை மாற்றத் துண்டுகிறது.
சிறந்த
வாழ்க்கை மரணத்தை வெல்லும். தந்தை வாழ்வில் தூய்மை, தியாகம், கருணை இவையனைத்தும் காலத்தால்
அழிக்கப்படாத அடையாளங்கள். மண்ணில் கலந்த உடல் மட்டும் மறைந்து போகும். ஆனால், மனிதர்களின்
இதயங்களில் அவர் நிலையாக வாழ்கிறார். அவரின் ஆன்மாவின் ஒளி எண்ணற்ற மனங்களில் தினமும்
ஒளிர்ந்துகொண்டே இருக்கிறது.
லெவே
அடிகளின் வாழ்க்கை என்பது ஒரு மனிதனின் பயணம் அல்ல; ஓர் ஒளியின் பிறப்பு. பேச்சைவிட
செயலின் மேன்மையை உலகிற்கு எடுத்துக்காட்டியவர். ஏழைகள் தன் மக்கள் என்று எண்ணி அவர்களின்
நெஞ்சில் இறைவனைக் கண்டவர். யாரும் பார்க்காத இடத்தில் உதவிபுரிந்து, யாரும் கேட்காதபோதும்
செபித்து, யாரும் துணை நின்றிடா நேரங்களில் ஆதரவாக நின்ற புனித ஆன்மா. பொறுமை, கனிவு,
கருணை, அன்பு இவை அனைத்தையும் கலந்த ஒளிமிகு செயல்களால் மண்ணில் மாய்ந்தாலும் மக்களின்
மனங்களில் மறையாத மகான் அவர்! அன்பை விதைத்து மனிதனை உயர்த்திய லெவே அடிகள் தன் வாழ்வால்
அதைக் கற்றுக் கொடுத்தார்.
இறைவனைக்
காணவேண்டுமெனில் மனிதனை நேசிக்கவேண்டும் என்ற அவரின் செம்மையான சேவையின் ஒளி இன்றும்
எண்ணற்ற உள்ளங்களில் வழிகாட்டும் தீபமாகத் தொடர்ந்து எரிகிறது. தந்தை லெவே அவர்களின்
தாரக மந்திரம், “இயேசுவே அன்பின் அரசே! உமது அன்புள்ள இரக்கத்தை நம்புகிறேன்.” இதையே
அவர் தானும் செபிப்பதோடு மற்றவர்களையும் இச்செபத்தைச் சொல்லி இறை எழுப்புதல் செய்வார்.
லெவே
அடிகள் ஒரு கிறித்தவத் துறவியாக மட்டுமல்ல; ஒரு மனிதநேயப் புனிதராக வாழ்ந்தவர். அவர்
செய்த கல்வி சேவை, மீனவர் நலப்பணி, சமத்துவப் போராட்டம் ஆகியவை இன்றும் சமூகத்தில்
நம்பிக்கை விதையாக உள்ளது. தந்தை லெவே அவரின் வாழ்விலிருந்து அன்புடன் பணிபுரியவும்,
நல்லெண்ணத்துடன், வாழவும் ஒடுக்கப்பட்டோருக்குக்
குரல் கொடுக்கவும் கற்றுக் கொள்வோம்.
அன்று ஊரே பரபரப்பாக இருந்தது. ஞாயிற்றுக் கிழமையென்றாலும், கிழடு கட்டைகளுக்கு அன்று அலுவல் நாள்.
“ஏதோ கட்சி மாநாடாம்! நூறு ரூபாயும் பிரியாணியும் தராங்களாம். திண்ணையில உக்காந்து விட்டத்தை அண்ணாந்து பாத்துக்கிட்டு இருக்கிறதுக்குப் போயிட்டுதான் வாயேன்.”
சுந்தரியின் குடைச்சலைக் காதில் போட்டுக் கொண்டாலும், வாயில் போட்டிருந்த வெற்றிலையை ஐயாகண்ணு இரசித்து மென்றுகொண்டிருந்தார். நீல வானத்தில் வெள்ளைக்கோடு போட்டுக்கொண்டே பாகப்பிரிவினை செய்யும் விமானத்தைப்போல, வறுமையென்னும் சிவப்புக்கோடு சுந்தரியையும் ஐயாகண்ணுவையும் மற்றவர்களிடமிருந்து எப்போதும் பிரித்தே வைத்திருந்தது.
“நல்லது கெட்டதற்குக் கூப்பிடாதவங்க கூட, இந்தக் கட்சி கூட்டத்துக்கு மட்டும் கூப்பிடுறாங்க” என்று சுந்தரி ஐயாகண்ணுவிடம் அடிக்கடி சொல்லி வருத்தப்படுவதுண்டு.
“சேலத்துல ஏதோ கட்சிக் கூட்டமாம். பெரிய சினிமா நடிகர்களெல்லாம் வராங்களாம். வீடு வீடா அந்த ராசாத்தி மகன் அழகேசன் கூப்பாடு போட்டுட்டு இருக்கான்” என்று சுந்தரி சொல்லி முடிப்பதற்கு முன்பாக, “சரி தாயே, நிறுத்து உன் ஒப்பாரியை. நான் சும்மா இருந்தா உனக்கு ஆகாதே. போய் தொலையிறேன்” என்று சொல்லிக்கொண்டு காய்ந்துபோன மரத்தில் ஆடிக்கொண்டிருக்கும் கடைசி இலையைப்போல, கம்பிக்கொடியில் காய்ந்து கொண்டிருந்த சட்டையைப் போட்டுக்கொண்டு வெளியே கிளம்பினார் ஐயாகண்ணு. காரிப்பட்டி கிராமத்திலிருந்து மட்டும் மூன்று பெரிய வண்டி நிறைய சனங்க அந்தக் கட்சிக் கூட்டத்திற்கு வந்திருந்தனர். ஊர்க்காரர்கள் எல்லாம் அங்கு வந்திருந்த நடிகரைப் பார்த்தவுடனே முண்டியடித்துக் கொண்டு மேடையின் பக்கத்திலேயே சென்றுவிட் டனர். ஐயாகண்ணு மட்டும் அந்தப் பெருங்கூட்டத்தில், இரும்புக்கடையில் இனிப்பைத் தேடி அலையும் எறும்பைப்போலத் தனித்து விடப்பட்டிருந்தார். ஐயாகண்ணுக்குக் கொஞ்சம் காது கேட்காது வேறு. தலைவர்கள் கட்சி மேடையில் பேசியதில் பாதிகூட அவர் காதுவரை சென்று சேரவில்லை. அவரின் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தவர்களுக்குத் தமிழ் தெரியாதாம்; ஏதோ இந்திக்காரர்களாம். ஆடலும் பாடலும், அரசியல் பேச்சும் திரைப்பட வசனங்களும் அங்கிருந்த கூட்டத்தையே கட்டிப் போட்டிருந்தது. கூட்டம் குதூகலித்திருந்தபோது, பனை மரம் சரிவதுபோல ஐயாகண்ணு நெஞ்சைப் பிடித்துக்கொண்டு கீழே சரிந்தார். கட்சிக் கூட்டத்திற்குக் கூட்டிக்கொண்டு வந்த ராசாத்தி மகன் அழகேசனும், அவன் கூட்டாளிகளும் வந்து சேருவதற்குள் ஐயா கண்ணுவின் உயிர் போயிருந்தது.
எத்தனையோ ஆயிரம் பேர் கூடியிருக்கும் இடத்தில், ஐயாகண்ணுவின் மரணம் ஒரு சிறு சலசலப்பைக்கூட ஏற்படுத்தவில்லை. அது ஒரு பொருட்டாகவே தெரியவில்லை; யாரையும் திரும்பியும் பார்க்க வைக்கவும் இல்லை. கட்சித் தலைவர்கள் தொடர்ந்து முழக்கமிட்டனர், நடிகர்கள் பாடல் பாடி கூட்டத்தை உசுப்பிவிட்டனர். கூட்டம் ஆர்ப்பரித்தது. குதூகலத்தின் உச்சத்திற்குச் சென்று ஆடிப் பாடியது. காரியப்பட்டி கிராமத்தில் ஐயாகண்ணுவின் மனைவி சுந்தரி, ஐந்நூறு ரூபாயும் பிரியாணியும் எப்போது வீடு வரும் என்ற எண்ணத்தில், வானத்தில் காத்திருக்கும் நிலவு போலத் தூங்காது திண்ணையிலேயே காத்திருந்தாள்.
ஒரு நடிகர் அல்லது அரசியல்வாதியின்மேல் கொண்ட பற்றினால், எப்படி ஒரு பெருங்கூட்டம் அந்த மனிதரையே கடவுளாகப் பார்த்துக் கொண்டிருக்க விரும்புகிறதோ, அதேபோலத் தனக்குப் பிடித்த திரைப்படம் அல்லது தொலைக்காட்சித் தொடரை இடைவிடாமல் பார்த்துக் கொண்டிருப்பதால்தான் அக்கம் பக்கம் என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல் ஏராளமானவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அப்படியென்றால், நம்மை ‘பிஞ்ச்-வாட்சிங் அறிகுறியுள்ளவர்கள்’ எனலாம்.
பிஞ்ச்-வாட்சிங் (Binge-watching) என்பது ஒரு தொலைக்காட்சித் தொடர் அல்லது ஓ.டி.டி. தொடர்களின் எபிசோடுகளை வரிசையாகத் தொடர்ந்து பார்க்கும் செயலாகும். நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், ஜீ5, ஹாட் ஸ்டார் போன்ற ஓ.டி.டி. பிளாட்பார்ம்கள் வந்தபிறகு, இந்தப் பிஞ்ச் வாட்சிங் என்ற ‘தொடர் பார்வை’ முறை அதிகமாகப் பேசப்படுகிறது. அன்றாட சவால்களை எதிர்கொள்ளாமல் எதார்த்த வாழ்விலிருந்து தப்பிச்செல்லவே இன்றைய இளைய தலைமுறையினர் விரும்புகின்றனர். அதற்கு ஒரு வடிகாலாக இந்தப் பிஞ்ச்-வாட்சிங்கைப் பயன்படுத்துகின்றனர். மிகவும் விளையாட்டாகவும் பொழுதுபோக்கிற்காகவும் தொடங்குகின்ற இந்த இடைவிடாத தொடர் பார்வை மெதுவாக அடிக்சனாக, போதையாக மாற வாய்ப்பிருக்கின்றது என்கின்றனர் அறிஞர்கள்.
அண்மையில் உத்தரப் பிரதேசத்தில் ஹாசியாபாத் என்னும் இடத்தில், மூன்று சிறார்கள் அவர்களின் பெற்றோர் அவர்களைக் ‘கொரியன்’ தொடர்கள் பார்க்க அனுமதிக்காததை ஏற்றுக்கொள்ள முடியாமல், அவர்கள் வாழ்ந்த அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டனர் என்ற செய்தி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இணையவழி தொடர்களின் ஒவ்வோர் எபிசோட் முடிவிலும் ஒரு சஸ்பென்ஸ் (Cliffhanger) வைப்பார்கள். அதனால் நாம் நினைத்தாலும் நம்மால் நிறுத்த முடிவதில்லை. இந்தப் பிஞ்ச்-வாட்சிங்கின் தீவிரத்தன்மை என்பது உறவுகளிடமிருந்து அல்லது உறவினர்களிடமிருந்து ஒருவரைத் தனிமைப்படுத்துகின்றது. தூக்கமின்மை, மன அழுத்தம் போன்ற உளவியல் பிரச்சினைகளை வருவிக்கின்றது.
யூடியூப் அல்லது நெட்ஃபிளிக்ஸ் போன்ற தளங்களில் ஒரு வீடியோ முடிந்ததும் அடுத்த வீடியோ தானாகவே தொடங்கும்படி அமைக்கப்பட்டிருக்கும். இதுவே நம்மைத் தூங்கவிடாமல் பார்க்க வைக்கும் முக்கியக் காரணம். எனவே, செட்டிங்ஸில் (Settings) சென்று ‘Autoplay next
video’ என்ற வசதியை நிறுத்தம் செய்யவும்.
மேலும், தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே மொபைலைத் தூரமாக வைப்பது (Digital Detox) மிகவும் நல்லது. ‘இன்னும் ஒரே ஒரு எபிசோட் மட்டும்’ என்று சொல்லிக்கொண்டே இரவு முழுவதும் பார்ப்பதைத் தவிர்க்க சுய கட்டுப்பாடுகளை வகுத்துக்கொள்ள வேண்டும்.
சிறார்கள் இத்தகைய ‘பிஞ்ச் வாட்சிங்’குக்குப் பழகிக்கொண்டிருக்கின்றார்கள் என்றால், அவர்களைப் பெற்றோர் அன்புள்ளத்தோடு ஆற்றுப்படுத்தி வழிநடத்திடவேண்டும். பிஞ்ச் வாட்சிங்குக்கு மாற்றான படைப்பாற்றலோடு கூடிய செயல் பாட்டிற்குச் சிறார்களை ஊக்குவிக்க பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் முன்வரவேண்டும்.