தேர்தல் அரசியலில் ‘கூட்டணி’ என்பதே வெற்றிக்கான அடிப்படைச் சூத்திரம். எந்தக் கட்சி பிற கட்சிகளைக் கவர்கிறதோ, அந்தத் தலைமைக் கட்சி அமைக்கிற கூட்டணியே வெற்றிபெறும். தமிழ்நாட்டில் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பது 2026 - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் பெரும் முடிச்சு; இடியாப்பச் சிக்கல்; தீர்க்க முடியாத பெரும் பிரச்சினை. புதிதாய்ப் பிறந்த குழந்தையான த.வெ.க., ஆடி மாத ஜவுளிக்கடை தள்ளுபடி போல, ‘ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு’ எனக் கூவி அழைத்தது. ‘கடை விரித்தேன், கொள்வாரில்லை’ என்பதைப்போல த.வெ.க. தமிழ்நாடு தேர்தல் களத்தில் தற்போது தனித்து நிற்கிறது.
முன்னொரு
காலத்தில் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர், தனது
மகன் விஜய் அரசியலில் ஈடுபட இரசிகர் மன்றங்களை வலுவாகக் கட்டமைத்தார். கிளிக்கு இறக்கை முளைத்தவுடன் தனியே பறக்க நினைக்குமாம்! கட்சி ஆரம்பித்த தனது தந்தைக்கும் அக்கட்சிக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று
நடிகர் விஜய் அறிவித்தார். பின் தனது முதல் கொள்கை அறிவிப்பு மாநாட்டிற்குத் தனது பெற்றோரை அழைத்துச் சமாதானம் செய்தார். ‘எனது மகனின் அரசியல் கனவுகள் முட்டுச் சந்தில் நிற்கிறதே...’ என இயக்குநர் சந்திரசேகர்
கவலை கொள்கிறார். அவர் பொதுவெளியில் தனது மகனின் த.வெ.க.
கட்சியோடு காங்கிரஸ் கூட்டணி சேரவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். மேலும், ஒரு படி மேலே சென்று, “தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி இழந்த பலத்தை த.வெ.க.
கூட்டணியால் மீண்டும் பெறமுடியும்” என
காங்கிரஸ் கட்சிக்கு ஆசை காட்டினார், வலை விரித்தார்.
த.வெ.க. தலைவர்
நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்து மூன்று ஆண்டுகளாகிய நிலையில், தேர்தல் காலத்தில் கூட தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லவில்லை. தேர்தல் அறிவிப்பு வெளியாகிற காலத்தில்
வாரம் ஒருமுறை மட்டுமே மக்களைச் சந்திக்கிறேன் என்கிறார். தனது மகனின் - நடிகர் விஜய்யின் அடிப்படைக் குறைபாட்டை, இயக்குநர் சந்திரசேகர் உணர மறுக்கிறார். தமிழ்நாட்டின் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சித் தலைவர்கள் கடந்த மூன்று மாதங்களாகச் சட்டமன்றத் தொகுதி வாரியாக மக்களைச் சந்திக்கிறார்கள்; பரபரப்பாகப் பேசுகிறார்கள்; உறக்கம் தொலைக்கிறார்கள்; வெற்றிக்காகப் பாடுபடுகிறார்கள்.
இயக்குநர்
சந்திரசேகருக்கு இராமாயணத்தில் வரும் தூக்க வரம் பெற்ற கும்பகர்ணன் பற்றித் தெரியும். அவராவது ஆறு மாதம் நித்திரையும், ஆறு மாதம் விழித்திருப்பும் பெறுவார். அதுபோலவே, நடிகர் விஜய்யும் தேர்தல் காலத்திலும்கூட களம் காணமாட்டேன் எனத் தூங்கியே அடம்பிடிப்பது அதிர்ச்சி தருவதோடு, அதை அவர் வழக்கமாகவும் கொண்டுள்ளார்.
அவர்
தப்பித் தவறி வெளியே வரும்போது கூட, பெரியாரைக் கொள்கைத் தலைவராகக் கொண்ட த.வெ.க.,
மூடநம்பிக்கைகளில் மூழ்கித் தவிக்கிறது. த.வெ.க.
தலைவரோடு நாள்
குறித்து, திசை சொல்கிற மூடத்தனத்தில்
ஜோதிடர் ஒருவர் சுற்றுப் பயணங்களில் உடனிருக்கிறார். நடிகர் விஜய் தமிழ்ச் சமூகத்தில் நடந்துள்ள சமத்துவ, அடிப்படைச் சமூக சீர்திருத்தங்களை, சமூக நீதிக் கொள்கைகளை அறிந்துள்ளாரா? என்பது பெரும் கேள்வி. அவர், தான் முதல்வராகி விட்டால் அனைத்தையும் ஒரே இரவில் மாற்றிவிடலாம் எனக் கனா காண்கிறார்.
தமிழ்நாட்டை
நசுக்கும் ஒன்றிய டெல்லி ஏகாதிபத்தியம் குறித்த அடிப்படை அறிவைப் பெற்றுள்ளாரா? என்பது ஐயப்பாடாகும். நடிகர்
விஜய் தான் என்ன செய்யப் போகிறேன்? தனது மாற்று அரசியல் எவ்வாறு இருக்கும்? போன்ற செயல்திட்டங்கள் ஏதுமில்லை. சில நிகழ்வுகளில்
த.வெ.க. கட்சிக்குக்
கருத்து இல்லாதபோது, மூத்த இரு நிர்வாகிகள் மாறுபாடான கருத்துகளை வைக்கிறார்கள். இதை நடிகர் விஜய் அறிவாரா? என்பதே தெரியாத அதிர்வாகும்.
தேர்தல்
காலப் பணிகள் - வாக்குச் சாவடி முகவர்கள் என்பதில் த.வெ.க.
68,000 முகவர்களை வைத்துள்ளது. ஆனால், ஆளும் தி.மு.க.வோ இதைவிடப் பத்து
மடங்கு வாக்குச் சாவடி முகவர்களைக் கொண்டுள்ளது. த.வெ.க.வுக்கும் தி.மு.க.வுக்கும்தான் போட்டி
என்கிற விஜய், தேர்தல் களத்தில் பலமற்றத் தன் நிலைக்கு
மாற்று என்ன செய்யப் போகிறார்? எழுதிக் கொடுத்த வசனங்களை ஒரு வாரம் உட்கார்ந்து மனப்பாடம் செய்து, இருபது நிமிடங்கள் பேசுவதல்ல அரசியல். மக்களின் பிரச்சினைகளைக் கண்டுணர்ந்து,
மாற்றுத் தேடப் பாடுபடுவதே அரசியல்.
கரூர்
பெருந்துயரத்திற்குப்
பிறகு 72 நாள்கள் த.வெ.க.வும்,
நடிகர் விஜய் அவர்களும் தலைமறைவானது, பதுங்கியது மக்கள் மனத்தில் வெகுஜன அபிப்பிராயத்தைக் குலைத்து, குற்றுயிராக்கி விட்டது. சமூக ஊடகங்களில் மட்டும் வாழும் த.வெ.க.வினர், கரூர் பெருந்துயர நாள்களில், தங்கள் சமூக ஊடகப் பக்கங்களை மூடிவிட்டு ஓடினர் என்பதும் நடந்த நிகழ்வே. அரசியல் என்பது திரைப்படங்களைப் போலக் கற்பனையில் கோட்டை கட்டுவதல்ல.
திரைப்படக்
கதாநாயகனாக வாழும்போது
‘கேரவனில்’ பதுங்கிக்கொள்ளலாம்;
அரசியல் என்பது பாமர மக்களின் கேள்விகளுக்குப் பதில் கூறவேண்டிய இடமாகும். பல ஊர்களில் பொதுமக்கள்
அரசியல்வாதிகளைப் பார்த்துக் கூறக் கேட்டிருக்கிறேன்: “வா மாப்பிள்ளை, எத்தனை
நாளைக்கு ஓடி ஒளிவே? எலெக்சன் வரட்டும், ஓட்டுக் கேட்க வீதி வீதியாய், வீடு வீடாக வருவாய் அல்லவா... அப்ப வச்சுக்கிறேன்” எனச்
செய்த சம்பவங்களும் உண்டு. நடிகர் விஜய் இவைகளை அறிவாரா? இல்லை, தான் ஒரு கூட்டுப்புழு அரசியல்வாதி, நுனிப்புல் மேய்கிற கருத்தாளன் என்ற நிலையிலே தொடர்வாரா என்பதே பொதுமக்களின் கேள்வியாகும்.
ஒரு
தேர்ந்த அரசியல்வாதி நடப்பு அரசியலை அறிந்தவராக, அது குறித்துச் சக நபர்களிடம் உரையாடுபவராக,
அதில் தேர்ச்சி பெற்றவர்களிடம் ஆலோசனை பெறுபவராக இருப்பார். இதில் எதிலும் பொருந்திப் போகாத அரசியல்வாதியாக நடிகர் விஜய் இருக்கிறார். அவரது வெற்றி-தோல்வியை விட தேர்தல் ஆட்டத்தைக் குலைப்பராக விஜய் இருப்பார் என்பதே அரசியல் வல்லுநர்களின் கணிப்பாக அமைகிறது.
நடிகர்
விஜய் இரசிகர்கள் எந்த அரசியல் தெளிவும், அடிப்படை நாகரிகமும் அறியாத இரசிக வெறியில் மிதக்கிறார்கள். இரசிக மனப்பான்மையில், விஜய்யைத் திட்டிய பொதுக்கூட்டத்தில் திட்டிய பேச்சாளரை அடித்துத் தவறு செய்கிறார்கள். எட்டு இளைஞர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, வாழ்க்கையைத் தொலைத்து நடுத்தெருவில் நிற்கிறார்கள். அவர்களது வெளிநாட்டு வேலைவாய்ப்பு, அரசு வேலைவாய்ப்பு, இராணுவத்தில் சேரும் கனவுகள் கலைந்து கதறுகிறார்கள். நடிகர் பின் செல்லும் இளைஞர்கள் விழிப்புணர்வு பெறவேண்டும். நடிகர் விஜய் அவர்களை அவரது வார்த்தைகள் வழி, இளைஞர்கள் அடையாளம் காணலாம்.
த.வெ.க. கட்சி,
அதன் தலைவர் விஜய் அவர்களின் தமிழ்நாடு முதல்வர் குறித்த விளிப்புகள், தமிழ்நாட்டு மக்களை முகம் சுழிக்க வைக்கிறது. சவால்கள் என்ற பெயரில் ஆணவப் பேச்சு, விஜய்யின் வெறுப்பு அரசியலின்
அவரது உளப்பாங்கை வெளிக்காட்டியது. மக்களின் மரபார்ந்த சனநாயகக் கடமை என்பது மக்கள் நலன் காக்கிற, மதச்சார்பற்றக் கூட்டணியை ஆதரிப்பதாகும்.
சில வாரங்களுக்கு முன் ஓர் அருள்தந்தையுடன் நடந்த ஒரு சிறிய உரையாடல் என் உள்ளத்தில் நீண்ட சிந்தனையின் கதவைத் திறந்தது. அவர் சாதாரணமாக உச்சரித்த இரண்டு ஆங்கிலச் சொற்களான Communication மற்றும் Communion. இந்த இரண்டு வார்த்தைகள் என் மனத்தைத் தொட்ட விதம் வித்தியாசமானது.
சிமியோன்
மரியாவிடம் கூறிய வார்த்தைகள் அவரது இதயத்தை ஊடுருவியதைப்போல, அந்தச் சொற்கள் என் சிந்தனைகளைத் துளைத்தன. ஓடும் நதியில் உருண்டு வரும் கற்கள் காலப்போக்கில் மெருகேறுவது போல, அந்த இரண்டு வார்த்தைகள் என் எண்ணங்களையும் மெதுவாக வடிவமைத்தன.
Communication
- தொடர்பு. Communion - ஒன்றிணைவு, உறவு. உறவிலிருந்துதான் தொடர்பு பிறந்தது. ஆனால், இன்று தொடர்புகள் பெருகி வரும் உலகில் உறவுகள் குறைந்து வருகின்றன. ஒரு காலத்தில் மனிதர்கள் ஒன்றுகூடிப் பேசுவதற்காக நேரத்தைத் தேடினார்கள். இன்று பேசாமல் இருக்க தொழில்நுட்பமே பல காரணங்களை உருவாக்கிவிட்டன.
இன்றைய உலகம் மின்னணு இணையத் தொழில்நுட்பத்தின் வலையில் சுருங்கியிருக்கிறது. சமூக வலைதளங்களில் ஆயிரக்கணக்கான நண்பர்களைக் கொண்ட மனிதன் கூட, தன் வீட்டில் இருக்கும் மனிதர்களுடன் பேச நேரமின்றி வாழ்கிறான். ஒரே வீட்டில், ஒரே மேசையில், ஒரே உணவைப் பகிர்ந்துகொள்ளும் குடும்பம் கூட இன்று அமைதியாக அமர்கிறது. ஆனால், அந்த அமைதியில் அன்பு இல்லை; அது திரை உலகின் அமைதி. ஒவ்வொருவரின் கண்களும் அலைப்பேசி திரையில்! ஒவ்வொருவரின் மனமும் வேறு உலகங்களில்! அப்போது மனத்தில் ஒரு கேள்வி எழுகிறது.
ஊடகம்
உறவுகளை இணைக்கும் பாலமா? அல்லது உறவுகளைப் பிரிக்கும் சுவரா? இந்தக் கேள்வி வெறும் சிந்தனை அல்ல; அது நம் காலத்தின் ஒரு காயம். முதியோர் இல்லங்களின் அமைதியான அறைகளில், அனாதை இல்லங்களின் வெறுமையான வழித்தடங்களில், மறக்கப்பட்ட பெற்றோரின் அமைதியான கண்ணீரில் இந்தக் கேள்வியின் பதில் ஒலிக்கிறது. ஒரு காலத்தில் குழந்தைகள் பெற்றோரின் கைகளைப் பிடித்து நடந்தார்கள். இன்று அவர்கள் மொபைல் போன்களைப் பிடித்தபடி உலகத்தைச் சுற்றுகிறார்கள்.
திரு.
இறையன்பு தனது ‘ஓடும் நதியின் ஓசை’ என்ற நூலில், ஓர் இடத்தில் மனிதநேயம் வற்றிப் போகும் சமுதாயத்தைப் பற்றி வேதனையுடன் எழுதுகிறார். மனிதநேயம் குறைந்தால் சமூகம் உயிரற்ற உடலாக மாறிவிடும் என்று அவர் எச்சரிக்கிறார். ஆனால், இன்று மனிதநேயம் வற்றுவதற்கான காரணங்களில் ஒன்று மனிதனை மனிதனிடமிருந்து பிரிக்கும் டிஜிட்டல் உலகம்.
திருவிவிலியம்
மனித உறவுகளின் ஆழத்தை எளிய வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறது. “இருவர் ஒருவரைவிட மேலானவர்... ஒருவர் விழுந்தால் மற்றவர் தூக்கிவிடுவார்” (சஉ
4:9-10). மனிதன் தனிமைக்காகப் படைக்கப்படவில்லை. அவன் உறவுகளுக்காகப் படைக்கப்பட்டவன். ஒரு மனிதன் விழும்போது அவனைத் தூக்குவதற்காக மற்றொருவர் இருக்கவேண்டும். அதேபோல், நாம் பேசும் வார்த்தைகளின் வலிமையையும் இறைவார்த்தை நினைவூட்டுகிறது: “கெட்ட வார்த்தை எதுவும் உங்கள் வாயினின்று வரலாகாது. கேட்பவர்களுக்கு
அருளை அளிக்கும் வகையில், தேவையறிந்து அவர்களைக் கட்டியெழுப்பத் தகுந்த நல்ல வார்த்தைகளையே பேசுங்கள்”
(எபே 4:29).
ஒரு
வார்த்தை ஒரு மனிதனை உடைக்கவும் முடியும்; அதே வார்த்தை ஒரு மனிதனை உயிர்ப்பிக்கவும் முடியும். அன்பின் உண்மையைத் திருவிவிலியம் இன்னும் தெளிவாகக் கூறுகிறது: “நாம் சொல்லிலும் பேச்சிலும் அல்ல; செயலில் உண்மையாக அன்பு செலுத்தவேண்டும்” (1யோவா
3:18).
சமூக
வலைதளங்களில் ஆயிரம் ‘Likes’கிடைத்தாலும் ஒரு
மனிதனின் உண்மையான அன்பை அது மாற்றமுடியாது. திருத்தந்தை பிரான்சிஸ் ஒருமுறை கூறினார்: “இன்று தகவல் பரிமாற்றம் அதிகமாக இருக்கிறது. ஆனால், உண்மையான உரையாடல் குறைந்து வருகிறது. நாம் திரைகளைப் பார்க்காமல், மனிதர்களின் கண்களைப் பார்க்கக் கற்றுக்கொள்ள வேண்டும். மனித முகங்களை மறந்து திரைகளை மட்டுமே நோக்கும் உலகமாக நாம் மாறிவிடக் கூடாது.”
திருத்தந்தை
புனித இரண்டாம் ஜான்பால் அவர்கள் கூறியது இன்னும் ஆழமானது: “ஊடகங்கள் மனித மாண்பைப் போற்றவேண்டும்; குடும்ப உறவுகளை வலுப்படுத்தவேண்டும்.” ஊடகங்கள் மனிதனை உயர்த்தவேண்டும்; அவரைத் தனிமையில் தள்ளக்கூடாது. தகவல் தொழில்நுட்பம் உலகத்தை நெருக்கமாக்கியது. ஆனால், இதயங்களை அந்நியமாக்கிவிட்டது. தூரத்தில் இருந்தவர்கள் இன்று நெருக்கமாகிவிட்டார்கள். ஆனால், நெருக்கத்தில் இருந்தவர்கள் இன்று தூரமாகி விட்டார்கள். இதுவே ‘டிஜிட்டல் தனிமை.’
சில
நேரங்களில் நாம் திரைகளிலிருந்து நோன்பு ஏற்கவேண்டும். அலைப்பேசியை விட்டு மனிதர்களுடன் பேசவேண்டும். குடும்பத்துடன் சிரிக்கவேண்டும். நண்பர்களுடன் மனத்தைப் பகிரவேண்டும். இணையத்தில் வெறுப்பை விதைப்பதற்குப் பதிலாக அன்பையும் உண்மையையும் விதைக்கவேண்டும்.
ஊடகங்கள்
நம் வாழ்க்கையின் எஜமானர்கள் அல்ல; அவை நம் வாழ்க்கைக்கு உதவும் கருவிகள் மட்டுமே. ஆகையால், ஊடகங்கள் உறவுகளுக்குப் பாலமாக இருக்கட்டும்; ஆனால், அவை உறவுகளைப் பிரிக்கும் சுவராக மாறவிடக்கூடாது.
தொழில்நுட்பம்
வசதிகளைத் தரலாம்; ஆனால், மனிதநேயம் மட்டுமே ஒரு சமூகத்திற்கு உயிர் கொடுக்க முடியும். அதனால்தான் ஒரு சிந்தனையாளர் கூறினார்: “அன்பு என்பது ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருப்பது அல்ல; இருவரும் ஒரே திசையை நோக்கிப் பார்ப்பது.”
உலகில் பனிப்போர் (1991) காலத்திற்குப் பின், மக்களாட்சி அலை பன்மடங்கு அதிகரித்து, பல நாடுகள் மக்கள் அரசியல் அமைப்புகளை ஏற்படுத்தி, அரசியல் கட்சிகளும் வாக்களிப்பு முறை மூலம் தேர்தலைச் சந்தித்து ஆட்சி அமைத்தன. என்றாலும், சர்வாதிகாரத்தின் சாயல் இல்லாத ஆட்சி அமைப்புகள் வெகு சிலவென்றே கூறலாம். மக்களாட்சிக்கும் மக்களாட்சி அல்லாதவைக்கும் உள்ள வேறுபாடின்மை அல்லது தெளிவற்ற நிலைக்கு இந்நூற்றாண்டின் அரசியல் நிகழ்வுகளே சான்று பகர்கின்றன.
சுதந்திரத்தோடு,
வெளிப்படையான தேர்தல்கள், அதற்கு மேலாக மக்கள் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பாக மக்களாட்சி முறையிருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு இருந்தாலும், உலக அளவில் ‘ஹைபிரிட்’
அரசுகளுக்கும்
(Hybrid regime
என்பது - மக்களாட்சி மற்றும் சர்வாதிகார ஆட்சி இரண்டும் கலந்த ஆட்சி முறை சாயல்களைப் பெற்றிருத்தல்) சர்வாதிகார அரசுகளுக்கும் குறைவில்லை என்பதுதான் இன்றைய நிலை. இச்சூழல் உலக அளவில் மக்களாட்சிமுறை (Democracy) பலவீனமான நிலையில் இருப்பதைப் (fragile)
பிரதிபலிக்கிறதென்கிறது
ஓர் ஆய்வு.
மக்களாட்சி என்பது தனிமனிதனின் குரல் அல்லது பெரும்பான்மையோரின் முடிவென்பதில்லை. இது சட்டத்திற்கான ஒழுங்கு முறை, மக்களுக்கான ஆட்சியின் உதாரணம். மனித அதிகார எல்லையின் வரையறை, சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாத்தல் என்பவைகளைப் பிரதிபலிக்கும் அடையாளமாகும். உலகளவில் இன்று மிகப்பெரிய அளவில் உருவெடுத்துள்ள மக்களாட்சி சமுதாயம், அரசியல் தேவைகளான உரையாடல், தகவல் பரிமாற்றம் என்பவைகளுக்கு டிஜிட்டல் முறை, ஏ.ஐ.யின்
தொழில்நுட்பம் போன்றவற்றைச் சார்ந்திருக்கவேண்டிய கட்டாயத்தைத் தவிர்க்க இயலாமலிருக்கிறது.
மக்களாட்சியில்
ஏ.ஐ.யின்
பங்கு
நவீன
அரசியல் உலகில் ஏ.ஐ. மக்களாட்சி
முறை (AI and Democracy) சந்திப்பு
என்பது ஒரு திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. கடந்த 70 ஆண்டுகளின் ஏ.ஐ.யின்
ஆராய்ச்சி, 21-ஆம் நூற்றாண்டில் கற்கும் இயந்திர (Machine Learning)
முறை மூலம் தரவுகள் அடிப்படையில் முன்கணிக்கும் திறனைப்பெற்றது. மேலும் வளர்ந்து, நரம்பு வலை (சூநரசயட நேவறடிசம) தொழில் நுட்பம், அதாவது ஏராளமான தரவுகளைக் கொண்டு பயின்று, கற்கும் முறையான, இயந்திரச் சிந்தனை (Neural network)
நிலையை அடைந்தது. 2017-இல் நரம்பு வலைக்கு ஈடாக ட்ரான்ஸ்ஃபார்மர்களை அறிமுகப்படுத்தியதன் மூலம் இயந்திரச் செயலாற்றலில் இணைச் சொற்கள், வாக்கியங்கள் அமைவது சுலபமும் சாத்தியமுமானது. இதுவே 2022-இல் இன்றைய நவீன மொழி பேசும் இயந்திரங்கள் (LLMs) உருவெடுக்கவும் வழியமைத்தது. இந்த வரலாற்று மைல்கற்களைக் கடந்த ஏ.ஐ. பல
புதுமைகளையும் நன்மைகளையும் உலகிற்கு அளித்தாலும், இதனால் சூழலியல், சமுதாயம் (ecology,
society), இதற்கு
மேல் மக்களாட்சித் தத்துவத்திற்கான விளைவுகளைக் குறித்தும் சிந்திக்க வேண்டியுள்ளது.
மக்களாட்சியும்
மக்களவையும் ஏ.ஐ. பயன்பாட்டினால்
ஏற்படும் நெறிமுறை மற்றும் அரசியல் சவால்களை மேற்கொள்ளும் மக்களாட்சி முறையில் அரசு தலைவரைக் (Presidential) கொண்டுள்ள
நாடுகளைவிட, மிக வலிமையான பாராளுமன்ற-அரசியல் அமைப்பு (Parliamentary) பெற்ற
நாடுகளே ஏ.ஐ.யின்
சவால்களைச் சமாளிக்கும் திறன் பெற்றவைகளாக இருக்கிறதென்பது நடைமுறை.
ஏ.ஐ. ஒரு சிக்கலான
மற்றும் சவால்களைக் கொண்ட தொழில்நுட்பம். இதனைச் சமுதாயம் ஏற்று மாற்றியமைத்துக்கொள்கிறது. இதற்கு
அப்பால் இத்தொழில்நுட்பத்தின் விளைவுகளுக்குப் பொறுப்பேற்றல் (adaptable and accountable) என்ற அனைத்தையும் சமாளிக்கக்கூடிய அமைப்பு மக்களாட்சி முறையான நாடாளுமன்றமாகத்தான் இருக்கும் என்கிறது ஓர் ஆய்வு.
ஒரு
சந்தேகம் எழலாம்; ஏ.ஐ. அல்லது
அரசியல், இதில் எது மக்களாட்சி முறைக்கு ஏற்புடையது அல்லது வசப்படுத்தும் தன்மை வாய்ந்ததென்று, பல நாடுகளில் ஏ.ஐ. மக்களாட்சியின் செயல்பாடுகளைக்
குறித்து ஆய்வும் நடத்தப்பட்டது. அதனடிப்படையில், அரசியலே முக்கியப் பங்கு வைக்கிறதென்று அறியப்பட்டது. இதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன.
ஏ.ஐ. தொழில்நுட்பம் என்பது
கருவி மட்டுமல்ல, நாளுக்கு நாள் புதிய அவதாரமெடுக்கும் திறன் பெற்றதும்கூட. பாராளுமன்ற ஆட்சிமுறையில் அரசு கட்டுப்பாட்டிலுள்ள நிறுவனங்கள் மூலம் பொருளாதாரம் மற்றும் சமுதாயத்தில் ஏற்படும் விளைவுகளை அறியும் வாய்ப்பும் கண்காணிப்பும் உள்ளதென்பதை அறிவோம். இந்நிலையில், ஆட்சி அதிகாரத்திலிருப்போர் அரசியல் அமைப்புகளை மறைமுகமாகக் கண்காணிக்கவும், தரவுகளைச் சேகரிக்கவும் ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப்
பயன்படுத்துவது, குடியாட்சித் தத்துவத்திற்கு எவ்வாறு ஏற்புடையதாயிருக்கும்? என்ற எண்ணம் பரவலாக உள்ளது.
மக்களாட்சியில்
தனிமனிதச் சுதந்திரம் மற்றும் சட்டப் பாதுகாப்பு (civil liberties) என்பவை அடிப்படை உரிமைகள். வலிமையிழந்த பாராளுமன்றங்களைப் பயன்படுத்தி, அதிகாரத்திலிருப்போர் தங்களுக்குச் சாதகமாக ஏ.ஐ.-யை
வளைத்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறதென்பதும் மற்றொரு பார்வை. பொதுவாக, பொருளாதார முன்னேற்றம் (GDP) என்பது,
மக்களாட்சியின் உயர் நிலையைக் காட்டுகிறதென்பதை அறிவோம். ஆனால், வளமான பொருளாதாரம் மட்டுமே மக்களாட்சி முறை அல்லது அதைச் சார்ந்த குடியாட்சி நிறுவனங்களுக்கு ஏ.ஐ.யின்
விளைவுகளிலிருந்து பாதுகாப்பு அளிக்குமா? என்ற கூற்றும் நிலவுகிறது. ஏ.ஐ. ஒவ்வொரு
நாளும் புதிய உருவையும் வலிமையையும் பெற்று வரும் நுட்பமென்பதால், குடியாட்சிக் கண்காணிப்பு நிறுவனங்களின் திறனும் அதற்கு இணையாகவும் இருக்க எதிர்பார்க்கப்படுகிறது.
தகவல் உலகில்
ஏ.ஐ.
நாளுக்கு
நாள் குவிந்து வரும் தரவுகள், இயல்பாக ஏ.ஐ.யின்
பயன்பாட்டிற்குப் பணிக்கப்படுகின்றன. இவ்வாறு, தகவல்கள் ஒரு சிலரிடம் அல்லது அமைப்புகளிடம் சிக்கியிருப்பது மக்களாட்சிக்கு ஆபத்தானதென்பதும், அதிகாரத்தைத் தவறுதலாகப் பயன்படுத்துதலைத் தவிர்க்க தகவல் பரவலாக்கம் அவசியமென்பதும் பொதுவான கருத்து. கடந்த கால ஆட்சி அமைப்புகள் முன்பு சந்தித்த தொழில் புரட்சிகளால், தங்களை மாற்றி அமைத்துப் பயணித்தன என்பது வரலாறு.
இ-(டிஜிட்டல்)
மக்களாட்சி
(Digital Democracy- e Democracy)
மக்களாட்சி
வழியைப் பின்பற்றவும் நடைமுறைப்படுத்தவும் அரசியல் தேவைக்கு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் டிஜிட்டல் ஊடகம் மூலம் தொலைத்தொடர்பைப் பயன்படுத்துவது ‘டிஜிட்டல் மக்களாட்சி முறை’ எனப்படுகிறது. 1980-1990 காலகட்டத்தில் தனி கணினி, இணையதளம் என்பவை ஊடகம் மற்றும் அரசியல் துறைகளை மாற்றியமைத்து, அதற்கு மேலாகச் சமுதாயத்தில் மாற்றங்களையும் விளைவுகளையும் ஏற்படுத்தின. அவ்வாறே, இன்று நாம் காணும் இத்தொழில்நுட்பம் மக்கள் பரவலாக அரசியலில் பங்கேற்க உதவுகிறதென்பதில் ஐயமில்லை.
இ-மக்களாட்சி என்பது ஒரு வழிமுறையாகத்தானிருக்க முடியும். மக்களாட்சி முறை சீர்திருத்தங்களைச் செய்து முடிப்பதாய் இருக்க இயலாது. எனவே, இது நூதன டிஜிட்டல் மக்களாட்சி மாடல்களுக்கு வழிவகுக்காமல், தொழில்நுட்ப மாற்றத்திற்கேற்ப, அடிப்படை மக்களாட்சித் தத்துவங்களுக்கு ஆதாரமாயிருக்கவே எதிர்பார்க்கப்படுகிறது.
நாம்
புதுமையான தொழில் புரட்சியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். சுதந்திரமான மக்களாட்சி முறைகள் நிலவவும், அதனைக் காத்திடவும் வளமான சமுதாயமே பெரிய மூலதானமாக இருக்கமுடியும்.
சென்னை, கலைவாணர் அரங்கில் கடந்த 13.02.2026 அன்று நடைபெற்ற தமிழ்நாடு அரசின் திரைப்பட மற்றும் சின்னத்திரை விருதுகள் வழங்கும் விழாவில், 2022-ஆம் ஆண்டிற்கான ‘சிறந்த சின்னத்திரை பின்னணி இசையமைப்பாளர்’ மாநில விருதினைத் திரு. ஜோ சுகந்த் வென்றுள்ளார். இந்த மகிழ்ச்சியான தருணத்தில், ‘நம் வாழ்வு’ இதழின் துணை ஆசிரியர் ஜெ. ஞானசேகரன் அவர்கள் மேற்கொண்ட சிறப்பு நேர்காணல்:
• சார், வணக்கம்!
முதலாவதாக,
உங்களைப்
பற்றிய
ஓர்
அறிமுகத்தை
‘நம்
வாழ்வு’ வாசகர்களுக்காகப் பகிர்ந்துகொள்ள
முடியுமா?
“வணக்கம்! நான் ஜோ சுகந்த். தற்போது
எனது குடும்பத்துடன் சென்னை சின்மயா நகர் பங்கிற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருகிறேன். எனக்குத் திருமணமாகிவிட்டது. ஒரு தம்பியும், ஓர் அண்ணனும் உள்ளனர். எங்கள் குடும்பத்தைப் பொறுத்தவரை இன்றும் ஒரு கூட்டுக்குடும்பமாகவே வாழ்ந்து வருகிறோம். என் பெற்றோர், உடன்பிறந்தவர்கள், குழந்தைகள் என அனைவரும் ஒரே
கூட்டுக்குடும்பமாக வாழ்கிறோம். இதை நான் பெருமையாகக் கருதுகிறேன். என் பெற்றோர் எப்போதும் ஒரு கருத்தைச் சொல்வார்கள்: ‘நாங்கள் இருக்கும் வரை இந்த வீட்டில் ஒரே அடுப்புதான் எரியவேண்டும்’ என்று.
அந்தப் பாரம்பரியத்தையும் ஒற்றுமையையும் இன்றுவரை சிதையாமல் கட்டிக் காத்து வருகின்றோம். நாங்கள் மகிழ்ச்சியோடும் ஒருமித்த கருத்தோடும் வாழ்வதற்கு அடிப்படையே எங்கள் பெற்றோரின் ஆழ்ந்த இறைப்பற்றுதான். குறிப்பாக, என் தாய் ஒருநாளும் ஆலயம் செல்லாமல் இருந்ததில்லை என்று சொல்லும் அளவிற்கு இறைநம்பிக்கையில் ஊறியவர். அந்த நற்பண்புகளே எங்களையும் வழிநடத்துகின்றன.”
• உங்கள் இசைப்
பயணத்தின்
தொடக்கம்
எப்படி
அமைந்தது?
இசைத்துறையில்
ஆர்வம்
ஏற்படக்
காரணமாக
இருந்த
தருணத்தைப்
பகிர்ந்து
கொள்ளுங்கள்...
“ஆரம்பத்தில் என் தாயார் ஆலயப் பாடகர் குழுவில் (Choir) பாடி
வந்தார். அப்போது எனக்குள் ஓர் அழகான ஆசை இருந்தது. அம்மா பாடும்போது, நான் அவருக்குப் பின்னணியில் கீபோர்டு வாசிக்கவேண்டும் என்பதுதான் அது. ஒருமுறை தற்செயலாக அங்கிருந்த கீபோர்டைத் தொட்டதற்காக, அந்த இசை ஆசிரியர் என்னைக் கடுமையாகக் கண்டித்துவிட்டார். அந்தத் தருணம் எனக்குள் ஒரு பெரிய வைராக்கியத்தை ஏற்படுத்தியது. ‘கண்டிப்பாக இசை பயிலவேண்டும்’ என்ற
வேட்கையை அந்தத் திட்டுதான் எனக்குள் விதைத்தது.
அப்போதுதான்
மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் அவர்களோடு பணியாற்றிய அனுபவம் கொண்ட மூத்த கலைஞர் திரு. அலெக்ஸ் மானுவேல் அவர்கள் எனக்கு அறிமுகமானார். அவரிடம் இசை பயிலத் தொடங்கினேன். ஆச்சரியமாக, ஒரே மாதத்தில் இசையின் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டேன். எந்த இடத்தில் நான் அவமானப்படுத்தப்பட்டு, இசைக்க முடியாமல் நின்றேனோ, அதே இடத்தில் என் தாயார் பாட, நான் கீபோர்டு வாசித்தேன். அது என் வாழ்வின் மறக்க முடியாத தருணம். இன்று நான் இசை பயிற்றுவித்த ஏராளமான குழந்தைகள் பல்வேறு ஆலயங்களில் கீபோர்டு வாசிப்பதைக் காணும்போது, என் மனத்திற்கு மிகுந்த திருப்தியும் மகிழ்ச்சியும் கிடைக்கிறது.”
• உங்கள் திரைத்துறைப்
பயணம்
எப்படி
நிகழ்ந்தது?
உங்களை
இந்தத்
துறைக்கு
அடையாளம்
காட்டி
வழிநடத்தியவர்
யார்?
“ஆலயங்களில் நான் கீபோர்டு வாசிக்கத் தொடங்கிய காலகட்டத்தில், பட்டாபிராம் பங்கைச் சேர்ந்த திரு. கிளமண்ட் அவர்கள் எனது திறமையைக் கவனித்தார். அப்போது அவர் ‘சன்’ தொலைக்காட்சியில் பணியாற்றி வந்தார். தற்போதும் அங்குதான் பணியாற்றி வருகிறார். ‘உன்னால் முடியும்; நீ சின்னத்திரைத் தொடர்களுக்கு
இசையமைக்க முயற்சி செய்’ என்று அவர்தான் என்னை முதன் முதலில் ஊக்கப்படுத்தினார். அவர் விதைத்த அந்த நம்பிக்கையான வார்த்தைகள்தான், இன்று என்னை இந்த உயரத்திற்கு இட்டுச் சென்றிருக்கின்றன என்று துணிந்து சொல்வேன். அன்று தொடங்கிய எனது இசைப் பயணம், இன்று ஏறத்தாழ 10,000 அத்தியாயங்களுக்கு (Episodes) பின்னணி
இசையமைக்கும் அளவிற்கு விரிவடைந்துள்ளது.
சன்
டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என
முன்னணித் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான பல சூப்பர் ஹிட்
தொடர்களுக்கு நான் இசையமைத்துள்ளேன். குறிப்பாக, மகராசி, செவ்வந்தி, பூவே உனக்காக, இலட்சுமி ஸ்டோர்ஸ், அருந்ததி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், பிரியாத வரம் வேண்டும், நாச்சியார்புரம் உள்ளிட்ட ஏராளமான சூப்பர் ஹிட் தொடர்கள் எனது இசையில் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.”
• அண்மையில் நீங்கள்
பெற்ற
உயரிய
மாநில
விருது
பற்றி
உங்கள்
உணர்வுகளைப்
பகிர்ந்துகொள்ள
முடியுமா?
“கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி நடைபெற்ற தமிழ்நாடு அரசின் திரைப்பட மற்றும் சின்னத்திரை விருது வழங்கும் விழாவில், 2022-ஆம் ஆண்டிற்கான ‘சிறந்த சின்னத்திரை பின்னணி இசையமைப்பாளர் விருது’ எனக்கு அறிவிக்கப்பட்டபோது அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. 700-க்கும் மேற்பட்ட கலைஞர்களுக்கு மத்தியில், ‘திருமகள்’
தொடருக்காக இந்த மாநில விருதினைப் பெற்றது எனக்குக் கிடைத்த பெரும் கௌரவம். இந்த வெற்றியை எனது அன்பிற்குரிய தந்தை மற்றும் தாய்க்கு அர்ப்பணிக்கிறேன்.
என்
வாழ்க்கை ஒரு காலத்தில் பெரும் கேள்விக்குறியாகவே இருந்தது. ‘இவன் என்ன செய்துவிடப் போகிறான்?’ என்றுதான் உறவினர்களும் சுற்றத்தாரும் என்னைப் பார்த்தார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடியில் எனக்கு ‘அப்துல் கலாம் விருது’ வழங்கப்பட்டபோது கூட, ‘இந்த விருது வாங்க எவ்வளவு பணம் கொடுத்தாய்?’ என்று என் குடும்பத்தாரிடமே ஏளனமாகப் பேசியவர்கள் உண்டு. ஆனால், இன்று அதே நபர்கள் என் இல்லத்திற்கு நேரில் வந்து, ‘உன்னால் நம் குடும்பத்திற்கே பெருமை’ என்று பாராட்டுகிறார்கள். என் தாயிடம் சென்று, ‘உன் மகனை நினைத்துப் பெருமைப்படுகிறோம்’ என்று
அவர்கள் சொல்லும்போது, என் கண்கள் கலங்கிவிட்டன.
இந்த
நேரத்தில் நான் ஒன்றை மட்டும் உறுதியாகக் கூற விரும்புகிறேன். எனது இசைப் பயணம் இறைவனுக்காகவே தொடங்கியது. ஆலயங்களில் நான் இசை மீட்டியபோது யாரிடமும் கைம்மாறு கருதியது இல்லை. ஒருமுறை வாணுவம்பேட்டை புனித யூதா ததேயு ஆலயத்தில் சிலுவைப் பாதையில் இசை மீட்டியபோது, திரைத்துறையில் நுழைய வேண்டும் என்று அந்தச் சிலுவைநாதரிடம் மனமுருகி வேண்டினேன். ஆச்சரியமாக, நான் கேட்ட ஒரே வாரத்தில் சின்னத்திரையில் பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. இன்று நான் அடைந்துள்ள இந்த வளர்ச்சியும், இந்த மாநில விருதும் முழுமையாக அந்த இறைவனின் அருள்தான்.”
• சின்னத்திரையில் பின்னணி
இசையமைப்பது
என்பது
எளிதான
காரியம்
அல்ல;
இதில்
நீங்கள்
சந்திக்கும்
நடைமுறைச்
சவால்கள்
மற்றும்
சிரமங்கள்
குறித்துப்
பகிருங்களேன்.
“திரைப்படத்திற்கும் சின்னத்திரைக்கும் மிகப் பெரிய வேறுபாடு உண்டு. திரைப்படத்திற்கு ஒரு தெளிவான தொடக்கமும் முடிவும் இருக்கும். ஆனால், சின்னத்திரை என்பது ஒரு நீண்ட நெடும் பயணம். ஒவ்வொரு நாளும் நேயர்களின் வரவேற்பிற்கு ஏற்ப கதையோட்டம் மாறும்; அந்த மாற்றத்திற்கு ஏற்ப, நொடிப்பொழுதில் இசையையும் மாற்றியமைக்க வேண்டியது பெரும் சவால்.
உண்மையைச்
சொல்லப்போனால், ஒரு திரைப்படத்திற்கு இசையமைப்பதைக் காட்டிலும் சின்னத்திரைப் பணி அதிக அழுத்தம் நிறைந்தது. இன்று படமாக்கப்படும் ஒரு காட்சி, நாளை அல்லது அடுத்த சில தினங்களிலேயே ஒளிபரப்பாக வேண்டும். தினமும் 20 முதல் 30 நிமிடக் காட்சிகளுக்குப் பின்னணி இசை (BGM) கோர்க்க
வேண்டியிருக்கும். இதற்காக வாரத்தின் ஏழு நாள்களும் ஓய்வின்றி உழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
ஒரு
தொடர் ஆயிரம் அத்தியாயங்களைக் கடந்து செல்லும்போது, ஒரே மாதிரியான உணர்ச்சிகரமான காட்சிகளுக்குத் திரும்பத் திரும்ப இசையமைப்பது ஒரு கலைஞனுக்குச் சலிப்பைத் தரக் கூடும். ஆனால், நேயர்களுக்கு அந்தச் சலிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் நான் கவனமாக இருப்பேன். சோகம், மகிழ்ச்சி என உணர்வுகள் மாறும்போது,
ஒவ்வொரு முறையும் ஒரு புதுமையைப் புகுத்த வேண்டியிருக்கும். மேலும், ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு பிரத்யேகமான இசை (Character theme)
இருக்கவேண்டும்; அது கதையின் போக்கிற்கு ஏற்ப உருமாறவும் வேண்டும். இவ்வளவு கடின உழைப்பு இருந்தபோதிலும், திரைப்பட இசையமைப்பாளர்களுடன் ஒப்பிடுகையில் சின்னத்திரை கலைஞர்களுக்குக் கிடைக்கும் வருமானம் குறைவுதான் என்பது ஒரு கசப்பான உண்மை.”
• இன்றைய டிஜிட்டல்
உலகில்
ஏ.ஐ.
(Artificial Intelligence) தொழில்நுட்பம் இசைத்துறையில்
பெரும்
தாக்கத்தை
ஏற்படுத்தி
வருகிறது.
சின்னத்திரை
இசையமைப்பாளர்களுக்கு
இது
எந்த
மாதிரியான
சவால்களை
உருவாக்குகிறது?
“நிதர்சனமாகச் சொல்லப்போனால், செயற்கை நுண்ணறிவை (AI) நான்
ஒரு பெரும் அச்சுறுத்தலாகவே பார்க்கிறேன். ஏனெனில், இது பல கலைஞர்களின் வாழ்வாதாரத்தைக்
கேள்விக்குறியாக்கி வருகிறது. மெகா சீரியல்களைப் பொறுத்தவரை, தினமும் 20 நிமிடக் காட்சிகளுக்கு இசையமைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இன்றுள்ள ஏ.ஐ. மென்பொருள்கள்
சோகம், மகிழ்ச்சி அல்லது ‘த்ரில்லர்’
என நாம் கேட்கும் உணர்வுகளுக்கு ஏற்ப, நொடிப்பொழுதில் ஓர் அடிப்படை இசையை உருவாக்கித் தந்துவிடுகின்றன. ஆனால், ஏ.ஐ. உருவாக்கும்
அந்த இசை பெரும்பாலும் இயந்திரத்தனமாகவே இருக்கிறது. ஒரு மெகா சீரியலில் வரும் மிக நுணுக்கமான உணர்ச்சிகளை ஏ.ஐ.-ஆல்
துல்லியமாகப் பிரதிபலிக்க முடியாது. உதாரணமாக, ஒரு தாய்-மகன் பாசம் அல்லது ஒரு துரோகத்தின் வலி போன்ற உணர்ச்சிகளுக்கு உயிரோட்டமான இசை தேவை. இரத்தமும் சதையுமான ஒரு கலைஞன் தனது ஆன்மாவை வருத்தித் தரும் அந்த இசைநயத்தை, எந்தவொரு மென்பொருளாலும் ஒருபோதும் தந்துவிட முடியாது.
இன்று
தயாரிப்பாளர்கள் தங்களின் பட்ஜெட்டைக் குறைப்பதற்காக ஏ.ஐ. தொழில்நுட்பத்தை
நாடத் தொடங்குவது மிகுந்த கவலையளிக்கிறது. மனித உழைப்பைத் தேடாமல், இலவச அல்லது குறைந்த விலை மென்பொருள்களை இயக்குநர்கள் பயன்படுத்த முற்படும்போது, திறமையுள்ள பல இளம் கலைஞர்களின்
வாய்ப்புகள் பறிபோகும் அபாயம் உள்ளது. தொழில்நுட்பம் வளரலாம், ஆனால் அது ஒரு கலைஞனின் இடத்தைப் பிடிப்பது ஆரோக்கியமானதல்ல.”
• நிறைவாக, உங்கள்
எதிர்காலக்
கனவு
என்ன?
இந்தத்
தலைமுறை
இளைஞர்களுக்கு
நீங்கள்
சொல்ல
விரும்புவது
என்ன?
“என்னுடைய மிகப்பெரிய கனவு என்பது வெறும் புகழைத் தேடுவது மட்டுமல்ல; இந்தத் துறையில் நான் ஈட்டும் வருமானத்தைக் கொண்டு, வசதி வாய்ப்பற்ற ஏழை எளிய குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு உதவவேண்டும் என்பதுதான். இசை மீது அதீத ஆர்வம் இருந்தும், ஒரு கீபோர்டு வாங்கக் கூடப் போதிய வசதியில்லாத திறமையான குழந்தைகள் எங்கு இருந்தாலும், அவர்களுக்கு என்னால் இயன்ற உதவிகளைச் செய்ய விரும்புகிறேன். அவர்களைப் பயிற்றுவித்து, இந்தச் சமூகத்தில் ஓர் உயர்ந்த நிலைக்குக் கொண்டு வருவதையே எனது வாழ்நாள் இலட்சியமாகக் கொண்டுள்ளேன்.
இன்றைய
இளைஞர்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான்: ஏதேனும் ஒரு தனித் திறமையை வளர்த்துக்கொள்வதில் உங்கள் முழுக் கவனத்தையும் செலுத்துங்கள். இன்றைய சூழலில் சமூக வலைதளங்கள் (Social Media) போன்ற
கவனச்சிதறல்களில் உங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்காமல், ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபாடு காட்டுங்கள். விடாமுயற்சியும், தணியாத ஆர்வமும் இருந்தால் மட்டுமே வாழ்க்கையில் உங்களால் முன்னேற முடியும்.”
மிக்க நன்றி...
திரு.
ஜோ
சுகந்த்
அவர்களே!
உங்களது
பொன்னான
நேரத்தை
எங்களோடு
பகிர்ந்து
கொண்டதற்கும்,
உங்கள்
வாழ்வின்
வெற்றிப்
பயணத்தைத்
திறந்த
மனத்தோடு
விவரித்ததற்கும்
நன்றியைத்
தெரிவித்துக்
கொள்கிறோம்.
நீங்கள்
இசைத்துறையில்
இன்னும்
பல
சாதனைகளைப்
புரிந்து,
பல
சிகரங்களைத்
தொட
‘நம்
வாழ்வு’ இதழின் சார்பாக
மனமார
வாழ்த்துகிறோம்.
நன்றி!
தமிழ்நாட்டுத் தேர்தல் களப் பெரும்பான்மைக் கருத்துக்கணிப்புகளில் ஆளும் தி.மு.க. அரசு முந்துகிறது. நம்பகத்தன்மை வாய்ந்த அந்தக் கருத்துக்கணிப்புகளே தேர்தல் களத்தை வெப்பமாக்கி உள்ளன.
தி.மு.க. ‘மதச்சார்பற்ற
கூட்டணி’ எனத்
தன்னை அடையாளப்படுத்துகிறது. தி.மு.க.
கூட்டணி 2017 முதல்
14 தொடர் வெற்றிகளில் தலை நிமிர்கிறது. எதிர் உள்ள 16 கட்சிகளைக் கொண்ட தேசியச் சனநாயகக் கூட்டணி
(என்.டி.ஏ.) அ.தி.மு.க.
தலைமையில் உள்ளது. ஆனால், என்.டி.ஏ. கூட்டணி
முடிவுகளை அமித்ஷா எடுக்கிறார். அங்கேயே அது முரண்பட்டு நிற்கிறது. சரி, வாருங்கள்... தமிழ்நாட்டின் இரு பெரும் அணிகளின் நிறை-குறைகளை நோக்குவோம்.
தி.மு.க. கூட்டணிக்
கட்சிகள் அனைத்துமே சமத்துவம், சமதர்மம், சமூகநீதி பேசும் இடதுசாரிக் கட்சிகள். தி.மு.க.
கூட்டணி சிறுபான்மை மக்கள் வாக்கு, தலித் மக்கள் வாக்கு, மகளிர் வாக்கு எனப் பெரும் வாக்கு வங்கியைக் கொண்டது. தி.மு.க.
நலத்திட்டங்கள் என்ற பெயரில் மக்களிடையே அதிக மதிப்பெண் பெறுகிறது. பெண்களைக் குறிவைத்த மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம், புதுமைப் பெண் திட்டம் என வெளுத்து வாங்குகிறது.
‘விடியா அரசு’ என்று விமர்சித்த எதிர்க்கட்சிகளுக்கு ஒரு விடியலில் அதிர்ச்சி தந்தது. பா.ச.க.
மகளிர் உரிமைத் திட்டத்திற்கு தனது அடியாள்கள் வழி இடைக்காலத் தடை வாங்க முயற்சி செய்தது. இதை மோப்பம் பிடித்த தமிழ்நாடு அரசு மத்திய உளவுத்துறையின்
கண்களில் மண் தூவி, மகளிர் உதவி தொகை ரூ. 5000 வழங்கியது.
இளைஞர்களுக்குத்
தமிழ்ப் புதல்வன், ‘நான் முதல்வன்’
என்ற திட்டங்களும் தி.மு.க.வைத் தேர்தல் களத்தில் முன் தள்ளுகிறது. தமிழ்நாடு பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டம் உலக அளவில் கவனம் பெற்றது. இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சி, கல்வி, சுகாதாரம், தொழில் வளர்ச்சியில் திராவிட மாடல் அரசு தேசிய அளவில் முதல் மூன்று இடங்களைத் தொடர்ந்து பிடிக்கிறது. “எங்களுக்குப் போட்டி இந்தியாவில் உள்ள பிற மாநிலங்கள் இல்லை; வளர்ந்த அயல் நாடுகள்” என நெஞ்சு நிமிர்த்துகிறது
தமிழ்நாடு.
தி.மு.க. வலுவான
கட்டமைப்பும் அடித்தளமும் கொண்ட கட்சி என்பதால், தி.மு.க.வின் நுண்நிலை தேர்தல் பணிகள் வியப்பு தருபவை. ஒரு வாக்குச் சாவடிக்கு 350 ஓட்டுகளைப் பெறுவது என்ற இலக்கில் தேர்தல் பணிகள் கடந்த ஆறு மாதங்களாக நடக்கிறது. ஒரு வாக்குச்சாவடிக்கு பத்து தி.மு.க.வினர் வாக்குச்சாவடி முகவர்களாக நியமனம் செய்யப்பட்டு பணிகள் நடக்கின்றன.
முதல்வரின் தேர்தல் பிரச்சாரம், நலத் திட்டங்கள் வழங்குதல் எனக் களத்தில் மேலும் பரபரப்பு கூட்டப்படுகிறது. இடையே தேசிய அளவிலான ‘இந்தியா’ கூட்டணிக்கு ஸ்டாலின் தலைமை தாங்கவேண்டும் என்ற குரல்கள், அவரது தேர்தல் கால உருவத்தை
(இமேஜ்) உயர்த்துகிறது.
மாநில
சுயாட்சி என்ற தி.மு.க.வின் ஐம்பெரும் முழக்கத்தை முதல்வர் ஓங்கி ஒலிக்கிறார். மாநில சுயாட்சி முழக்கம் தேசிய அளவிலும், தமிழ்நாடு தேர்தல் களத்திலும் கவனம் பெறுகிறது. நாற்பது ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள ஈழத் தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்கவேண்டும் என்ற குரல், உலகத் தமிழர் மத்தியில் கவனம் பெறுகிறது. மேலும், ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசு கேட்ட நிதியைத் தருவதில்லை; மாற்றாந்தாய் மனப்பான்மையில் நடக்கிறது எனப் பா.ச.க.
எதிர்ப்புப் பிரச்சாரத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு
உள்ளது.
‘தி.மு.க.
மீது குறைகள் இல்லையா?’ என்ற முணுமுணுப்புகள் கேட்கின்றன. தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை. உட்கட்சிப் பூசல்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பொறுப்பற்ற செயல், அடிப்படை மக்கள் பணிகளைச் செய்யாத செயலற்றத்தன்மை போன்றவை மக்கள் மனத்தில் அதிருப்தியை உருவாக்கியுள்ளன. தி.மு.க.
ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பு வாக்குகள் மூன்றாகப் பிரிகிறது என்பது தி.மு.க.வுக்கு உள்ள சாதகமாகும்.
அ.தி.மு.க.-வுடனான பா.ச.க.
கூட்டணியை ‘எலி-தவளை கூட்டணி’ என்கிறார் தென் சென்னை மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன். இது காரிய கூட்டணி கொள்பவர்கள் என்பதும் உண்மையே. 2021-ஆம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தல் கூட்டணி, சிறு சேதாரம் இருந்தாலும் அப்படியே உள்ளது. இக்கூட்டணி ஆளும் தி.மு.க.
அரசு மீதான வாக்குகளை அறுவடை செய்ய நினைக்கிறது. அதற்கான முழு பிரச்சார வலிமையையும் பயன்படுத்தும். அதில் மோடி, அமித்ஷா, நிர்மலா சீதா ராமன் ஆகியோர் வருவார்கள்.
கடந்த
காலங்களில் 41 முறை மோடி பிரச்சாரத்திற்கு வந்தும் பயன் எதுவும் இல்லை.
“நூறுமுறை மோடி வந்தாலும் எதுவும் நடக்காது”
என்கிறார் தொல். திருமாவளவன். அது உண்மையே! பா.ச.க.வோடு அ.தி.மு.க.வும் வெறுப்பு
பிரச்சாரத்தைத் தேர்தல் களத்தில் கட்டவிழ்த்து விடும். எப்படியாவது முதல்வராகி விடவேண்டும் என்ற எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சு, நடுநிலை வாக்காளர்களை முகம் சுழிக்க வைக்கிறது.
தமிழ்நாட்டில்
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு
ஒரு புளுகு மூட்டையை அவிழ்த்துவிடுகிறது. அதுவே அ.தி.மு.க. கூட்டணியின்
தேர்தல் பிரச்சாரமாக இருக்கிறது. அதற்கேற்பத் தொடர் பிரச்சாரம் நடக்கிறது. தமிழ்நாட்டில் வாரிசு அரசியல், சட்டம்-ஒழுங்கு சரியில்லை; போதைப்பொருள் புழக்கம்; பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை எனக் காரணங்களை அடுக்குகின்றனர். தி.மு.க.வோ பா.ச.க. ஆளும் மாநிலங்களைவிட
குறைவுதான் எனப் பதிலடி தருகிறது.
தி.மு.க. தலைவர்,
“தி.மு.க.வைத்
தவிர யார் ஆட்சி அமைத்தாலும், அது டெல்லி ஆட்சியாக இருக்கும்”
என எச்சரிக்கை தருகிறார். அதற்குப் பதிலடி தந்த அ.தி.மு.க. மேனாள் அமைச்சர்
திண்டுக்கல் சீனிவாசன் கூறுகிறார்: “டெல்லி ஆட்சி தானே, இருந்துட்டுப் போகட்டும்.” அடிமைகளிடம் இதைத் தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும்? இதே மேனாள் அமைச்சர் “மோடிக்காக எங்களுக்கு வாக்களிக்காம விடாதிங்க”
எனக் கெஞ்சுகிறார்.
அ.தி.மு.க.
மேனாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறிய வார்த்தைகள் உண்மையானவை: “நான் சென்னை - இராயபுரம் பகுதியில் முடிசூடா மன்னனாக இருந்தேன்; பா.ச.க.வோடு கூட்டணி சேர்ந்ததால்
தோற்றுப்போனேன்.” இதுதான் தேர்தல் களத்தில் பா.ச.க.வோடு கூட்டணி சேர்ந்தவர்களின் நிலையாகும்.
எடப்பாடி
பழனிச்சாமி தமிழ்நாட்டு மக்களுக்கு எதுவும் செய்யாத ஒன்றிய அரசின் வரவு-செலவு அறிக்கையை வரவேற்றது மக்களிடையே பெரும் கோபத்தை உருவாக்கி உள்ளது. தமிழ்நாட்டுப் பேரிடர் காலத்தில் தமிழ்நாட்டிற்கு வராத, நிதி ஒதுக்காத பா.ச.க.வோடு அ.தி.மு.க. கூட்டணி என்பது மக்கள்
விரோதக் கூட்டணி என மக்களிடையே பேசப்படுகிறது.
இந்திய மக்களைப் பாதிக்கும் உழவர் மசோதா, குடியுரிமை மசோதா, முத்தலாக் எனப் பா.ச.க.வின் அனைத்து அதிகாரச் சட்டங்களுக்கும் அ.தி.மு.க. முட்டுக் கொடுத்தது.
நூறு நாள் வேலைத்திட்டம் மகாத்மா காந்தி பெயர் மாற்றம் குறித்து “காந்தியோ, இராமரோ, பெயரா முக்கியம்?” என்கிறார் அ.தி.மு.க.-வின் மேனாள்
அமைச்சர் சி.வி. சண்முகம்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடையாளங்களை அழிக்கிற பா.ச.க.வுக்குத் துணை போகிறவர்களும் அழிவார்கள் என்பதே தமிழ்நாட்டுத் தேர்தல் களம் கற்றுத் தரும் பாடமாகும்.
இக்கட்டுரையை எழுதுகையில், மாநிலங்கள் அவைக்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் முனைவர் கான்ஸ்டாண்டின் அவர்களுக்கு ஒரு வாழ்த்து சொல்லத் தோன்றியது. கிறித்தவர், மீனவக் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். இவரைச் சரியாக அடையாளங்கண்டு சிறப்பு செய்த தி.மு.க.வின் பொறுப்பாளர்களுக்குச் சிறுபான்மை கிறித்தவர்களின் சார்பில் வாழ்த்தும் பாராட்டும் நன்றியும்!
நெருங்கி
வரும் தேர்தலில் ‘கிறித்தவருக்கென ஒரு நிலைப்பாடு வேண்டுமா?’ என்ற கேள்வி இப்போது மட்டுமல்ல, எப்போதுமே எழக்கூடாது என்பதுதான் உண்மை நிலவரம். இந்தியக் கிறித்தவம் வெறும் வழிபாட்டிற்கு மட்டுமல்ல; இந்தியக் கிறித்தவர்கள் தமக்கென தனித்த அடையாளங்கொண்ட இந்திய நாட்டின் குடிமக்கள்; இக்குடிமக்கள் தமக்கெனவுள்ளத் தெரிவு செய்யும் உரிமையைப் பயன்படுத்தி, தெரிவு செய்த மார்க்கமே கிறித்தவம்.
கிறித்தவ
மறையைத் தெரிவு செய்த மக்கள் எண்ணிக்கையில் குறைவானவர்கள் என்பதால் மதச்சிறுபான்மையினர் இந்தியா எனும் சனநாயக நாட்டின் அரசமைப்புச் சட்டத்தால் பாதுகாக்கப்பட்ட மதச்சிறுபான்மையினர். இவர்கள் மதச்சிறுபான்மையினர்; மதரீதியாக - மதம் ஏற்கும் கொள்கை ரீதியாக வேறுபட்டவர்கள். இவர்கள் வேறுபட்டவர்கள்! ஆம், ஆனால் சமமானவர்கள். இவர்கள் அடையாளத்தால், கொண்ட கொள்கையால் வேறுபட்டவர்கள் என்பதாலேயே இவர்களைப் பாகுபடுத்த எவருக்கும் உரிமையில்லை. இவர்கள் உரிமைக் குடிமக்கள்.
சனநாயகம்
வழங்கியுள்ள இவ்வுரிமைகளைச் சமமாக அனுபவிக்கும் உரிமை பெற்ற இவர்கள், சனநாயகம் அளிக்கும் தெரிவு செய்யும் உரிமையை உத்தரவாதப்படுத்தும் தேர்தல் சனநாயகத்தில் பங்குகொள்ள வேண்டுவது இவர்தம் கடமையும் உரிமையும் ஆகும். ஐந்தாண்டிற்கு ஒருமுறை நடைபெறும் தேர்தல் ஒரு சடங்கல்ல; அது ஒரு வேள்வி.
சனநாயகம்
தந்த உரிமையின் பெயரால், அரசியல் ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட மதச்சிறுபான்மையினராகிய கிறித்தவர்கள் தேர்தல் முறையைச் சாதாரண ஒன்றாக எடுத்துக்கொள்ளக்கூடாது. தேர்தலில் பங்கேற்கும் கட்சிகளின் நிறம் மாறலாம்; கொள்கைகளில் சமரசம் செய்யலாம்; ஆனால், கிறிஸ்து வழிவந்த மதச்சிறுபான்மையினர் மிகத் தெளிவான நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டுவது கடமையாகிறது. கிறித்தவர் சனநாயகத்தை, சமயச்சார்பின்மையை, சமத்துவத்தை, இறையாண்மையை நம்பும் கட்சிகளைத்தான் ஆதரிக்க முடியும்.
விடுதலை
பெற்று 75 ஆண்டுகளுக்குப் பின்பும், வலுவான அரசமைப்புச் சட்டத்தைப் பெற்ற பின்பும், சனநாயகம் எனும் பெருவிழுமியத்தைச் சிதைவுபடாமல் காத்திடும் வகையில் சனநாயக நிறுவனங்கள் உருவான பின்பும், இன்று மத அடிப்படையிலான அரசு
ஒன்று, நம்மை ஆளும் அரசாக இருப்பது
முரணில்லையா?
மதவாதக்
கருத்தியலின் வெற்றி வகுப்புவாதம். அதன் அடிப்படையில் வளர்க்கப்பெறும் மதவாதம் மானுட மாண்பிற்கு, மனித உரிமைகளுக்கு, சமூகங்களின் சமாதான சகவாழ்விற்கு எதிரானது.
ஆக,
எதிர்வரும் தேர்தலில் ‘மதவாதக் கட்சிகளை எதிர்ப்போம்’ என்று
உறுதியேற்போம். மதவாதக் கட்சி ஒன்று எப்படிச் செயல்படும் என்பதை கடந்த பத்து ஆண்டுகளாகக் கண்டு வருகிறோம், அனுபவித்தும் வருகிறோம். நாட்டின் ஒருமைக்கு, தேசிய இனங்களுக்கு, மதச்சிறுபான்மையினருக்கு, இந்தியக் கூட்டாட்சிக்கு என்னென்ன சேதங்களை உருவாக்கி வருகின்றன என்பதையெல்லாம் அறிந்த பின்பும், வெறும் ஆட்சி அதிகாரம் கருதி இம்மதவாதக் கட்சியோடு கூட்டணி கொண்ட கட்சிகளோடு எவ்விதச் சமரசமும் இல்லை என்போம்.
மதவாத
பாரதிய சனதா என்பது வெறும் கட்சியல்ல; பெரும்பான்மைவாதம் பேசும் இக்கட்சியோடு உறவுகொள்ளும் எந்தக் கட்சியும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான கட்சிகளே!
இருவகை
அணிகள் தேர்தலைச் சந்திக்கத் தயார்நிலையில் உள்ளன. இவ்வணிகளில் மதவாதக் கூட்டணிக்கு இப்போதும் எப்போதும் ஆதரவு இல்லையென்பதே நம் நிலைப்பாடு. இவ்வணிக்கு எதிரான ‘இந்தியா’ கூட்டணியே நம் ஆதரவு கூட்டணி. ‘இந்தியா’ கூட்டணியின் அனைத்துக் கட்சிகளும் கறைபடாத தூய கட்சிகளா? உண்மையாக இல்லை. எனினும் பா.ச.க.
எனும் மதவாத, சனநாயகமற்ற, எதேச்சதிகார எதிரியை வீழ்த்த இம்மாதிரி நிலைப்பாடே எடுத்தாகவேண்டும்.
இன்று
தமிழ்நாட்டு வாக்காளர் பெருமக்களைப் பெருங்குழப்பத்தில் வைத்திருக்கும் சக்திகள் இரண்டினைப் பற்றிப் பேசியாகவேண்டும்.
ஒன்று,
தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகள். இவர்கள் நெற்றியில் திருநீறிட்டு முப்பாட்டன் முருகனைத் துதிக்கும் பெரும்பான்மை மத அடையாளத்தைக் கொண்டு
அரசியல் செய்பவர்கள். இன்றும் இந்தியாவில் முழுமையாக வளராத ‘இந்திய தேசியமே’ தமிழ்நாட்டுத் தேசியத்தைக் காக்காத நிலையில், ஒன்றிய அரசை ஆளும் பாரதிய சனதாவின் முதன்மைக் கொள்கையான ‘இந்து தேசியம்’ அல்லது கலாச்சார தேசியத்திலிருந்து எப்படி இவர்கள் நம்மைக் காப்பாற்றப் போகிறார்கள்?
இவர்களின்
பரப்புரைகளால் கவரப்பட்டுத் திசைமாறிப் போகும் தமிழ்நாட்டு இளைஞர்களை குறிப்பாக, கத்தோலிக்க இளைஞர்களை, இளம் அருள்பணியாளர்களை இவர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டுவது கட்டாயமாகிறது. பெரியார் மீதான அவதூறுகளும், தி.மு.க.
மீதான வன்மமும் மட்டுமே இவர்களின் கொள்கையென்பதால், இவர்களிடம் நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
அடுத்து
வரும் நபர் மிக மிக ஆபத்தானவர். இவருக்கு எதுவும் தெரியாது என்பது நம்முடைய பொய்யான நம்பிக்கை. தன் கொள்கை எதிரியாக அறிவிக்கும் பா.ச.க.வின் கொள்கை எதுவுமே இவர் படிக்கும் தாளில் இடம்பெறுவதே இல்லை. ‘தீய சக்தி’ என்று அடையாளம் காட்டப்பெறுவது தி.மு.க.
‘தூய சக்தி’ என்று யாரையாவது சொல்லட்டுமே! ஒரு மனிதன் நடிகன் என்பதாலேயே அவ்வப்போது மக்களுக்குத் தரிசனம் தரும் இவரை நம்பி பின்செல்வது, சனநாயகத்தைக் கேலி செய்வதே.
கொள்கை
பலமோ, அறம் சார்ந்த நிலைப்பாடோ இல்லாமல் மக்களிடம் ஏற்கெனவே இயங்கும் கட்சிகளிடம் வளர்ந்திருக்கின்ற அவநம்பிக்கையை ஆதாயமாக்கி அரசியல் செய்யும் இத்தகையோரின் அரசியலைப் புரிந்துகொள்வோம். இவர்களிடம் மிகுந்த எச்சரிக்கையாக இருப்போம்.