திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (21.12.2025)
ஒருமுறை நண்பன் ஒருவனோடு உரையாடிக் கொண்டிருக்கும்போது, “உனக்கு உடல் நிலை சரியில்லை என்றால் என்ன செய்வாய்?” என்று கேட்டேன். “மருத்துவரைச் சந்திப்பேன்” எனப் பதிலளித்தான். “சரி, மனம் சரியில்லை என்றால்?” என்றேன்.
அமைதியாய்
என்னை வெறித்துப் பார்த்தான்.
உடல்நிலை
சரியில்லை என்றால், மருந்து கொடுத்து, மருத்துவரிடம் அழைத்துச் சென்று நம்மை வளர்த்தவர்கள், மனம் சரியில்லை என்றால், என்ன செய்வது என நமக்குச் சொல்லித்
தரவே இல்லை. அத்தகைய சூழல்களில், நம்மில் பலர் நண்பர்களிடம் பகிர்வோம் அல்லது அமைதியை விரும்புவோம் அல்லது வாழ்வின் ஓட்டத்தில் நம் மனம் இருக்கும் நிலையைக் கூட பொருள்படுத்தும் சொகுசு நம்மில் பலருக்கு அமைவதில்லை. ஆனால், மீண்டும் அதே மனநிலை என்றோ உருவாகும்; மீண்டும் அதே சுழற்சி. நாம் தொடர்ந்த அதே ஓட்டத்தில் ஓடிக்கொண்டே இருப்போம். பல நேரங்களில் நிம்மதியின்றி
வாழ்வதுதான் மனித வாழ்வின் இயல்பு என நம்மை நாமே
தேற்றிக் கொண்டு மனசஞ்சலங்களோடு வாழ்ந்துகொண்டு இருக்கின்றோம்.
மனிதர்: பன்முகப்
பார்வை
ஒரு
தனிமனிதரை மூன்று முக்கியக் கூறுகளாகப் பிரிக்கலாம்: 1. உடல், 2. மனம், 3. ஆன்மா. உடல்நலனில் ஏதேனும் மாற்றம் ஏற்படும்போது, அதைக் கவனிக்க சிறுவயது முதலே நாம் பயிற்றுவிக்கப்படுகின்றோம்.
மருத்துவம் அதற்கு உதவுகிறது. ஆன்ம நலனைப் பேண, பல நேரங்களில் நாம்
பின்பற்றும் மதங்கள் நமக்கு வழி கூறுகின்றன. சமய நம்பிக்கையற்றவர்களுக்கும் கூட அவர்கள் தாங்கி நிற்கும் கொள்கைகள் உதவுகின்றன. ஆனால், மனநலனைப் பற்றி மிக அரிதாகவே நாம் அறிந்திருக்கின்றோம். இன்றைய காலகட்டத்தில் சிறு குழந்தைகள் கூட மன அழுத்தத்தைப் (Stress)
பற்றிப் பேசுகின்றனர். மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.
பல நேரங்களில் மன நலனை, நாம் மனநலம் குன்றியவர்களோடு மட்டும் தொடர்புபடுத்தத் தொடங்கிவிடுகின்றோம். ஆனால், மனநலம் என்பது, மனிதனாய் பிறந்த எவருக்கும் உரியது.
வாழ்வுமுறை மாற்றமும்
மனநலமும்
மனநலம்
பற்றிய நமது புரிதல் மிகவும் குறைவுதான். முந்தைய தலைமுறைக்கு அதைப் பற்றிய அறிவு ஒரு தேவையாகவே இருந்ததில்லை. ஆனால், இன்று அது ஓர் அவசியத் தேவை. அன்றைய வாழ்வுமுறை மனநலனைப் பேணுவதற்கான அனைத்துக் காரணிகளையும் உள்ளடக்கியிருந்தது. பள்ளி முடித்து வீடு திரும்பும் குழந்தைகள் பெரும்பாலும் நடந்தோ, மிதிவண்டியிலோ பயணித்தனர். நண்பர்களோடு இணைந்த அந்தப் பயணம், மாலை நேர விளையாட்டு எனப் பல்வேறு காரணிகள் குழந்தைகளின் மன அழுத்தத்தைப் போக்கும்
இயற்கைக் காரணிகளாய் அமைந்திருந்தன. பெரியவர்களும், தங்கள் நிலம் சார்ந்த, இயற்கை சார்ந்த பணிகளையே செய்து வந்தனர். குடும்பங்கள், கூட்டுக் குடும்பங்களாக, குறைந்தது தாத்தா, பாட்டியுடன் கூடிய குடும்பங்களாக இருந்தன. அங்குப் பணிப்பகிர்வு அதிகம் இருந்தது. அதோடு அன்றைய கிராம அமைப்பு, உறவுப் பரிமாற்றம், முறையான உறக்கச் சுழற்சி (Sleep Cycle), விழாக்கள்,
வழிபாடுகள் எனப் பல கூறுகள் ஒரு
மனிதனின் மனநலனைப் பேணுவதில் முக்கியப் பங்காற்றின. ஆனால், இன்றைய காட்சி அதிலிருந்து முற்றும் மாறுபட்டது.
மன
அழுத்தம் மனிதருக்குத் தொன்றுதொட்டு இருந்துவருகிறது. ஆனால், அன்றைய வாழ்வியல், அந்த மன அழுத்தத்தை இயல்பாக
வெளியேற்றும் வாய்ப்புகளைக் கொண்டிருந்தது. காலை எழுந்தவுடனேயே அன்றைய நாளுக்கான தயாரிப்பு, நாள் முழுவதும் கல்வி அல்லது பணி, மீண்டும் வீட்டிற்கு வந்தபின் பகல் முழுவதும் செய்த பணியின் தொடர்ச்சி... இந்த ஓட்டத்தில் நம்மில் இருக்கும் மன அழுத்தத்தை வெளியேற்ற
வாய்ப்பு முற்றிலும் இல்லாமல் போகின்றது. பணி செய்யும் பெண்களின் நிலை இன்னும் கவலைக்கிடம். அவர்களின் அன்றாடப் பணிச்சுமையோடு, குடும்பப் பொறுப்பு அவர்களை மேலும் மன அழுத்தத்திற்கு உட்படுத்துகிறது.
ஆழ்மனத்தில் சேரும் அழுத்தம் எல்லாம் ஒன்று சேர்ந்து நம் இயக்க ஆற்றலை முடக்குகின்றது.
காலத்தின் அறிகுறி
மீண்டும்
பழைய வாழ்க்கைமுறைக்குத் திரும்புவது மட்டுமே, நல்ல மனநலத்துடன் கூடிய வாழ்வுக்கு ஒரே வழியா? “நாங்க அந்தக் காலத்தில...” எனப் பழைய காலத்தை வளமைப்படுத்தி, துக்கம் கொண்டாடுவது எந்த விதத்திலும் நமக்குப் பயன்தரப் போவதில்லை. ஆனால், காலத்தின் அறிகுறிகளுக்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக்கொள்வதில் மனிதனுக்கு இணை மனிதன் மட்டுமே. அறிவியல் வளர்ச்சியும் விஞ்ஞான சாதனைகளும் அதற்குச் சான்று பகரும். ஏன், ஆன்மிகத்தில் கூட காலத்தின் அறிகுறிகளுக்கு ஏற்ப தங்கள் சித்தாந்தங்களை மாற்ற மனித இனம் தயாராகவே இருக்கின்றது.
உடல்நலனில்
தொய்வு ஏற்படும்போது மருத்துவரைச் சந்திப்பதில் அக்கறை காட்டும் நாம், மனநலனில் தொய்வு ஏற்படும்போது மனநல மருத்துவரையோ, மனநல ஆலோசகரையோ சந்திப்பது நம்மிடையே அதிகம் விரும்பப்படாத ஒன்றாகவே இருக்கின்றது. ‘ஆண் அழக்கூடாது’ எனக்
கூறியே வளர்த்த நாம், அவன் அழுவதற்கான காரணம் என்ன எனக் கேட்கத் தயாராகவே இல்லை. அதைப்போன்றே, ஒரு மனிதனின் மன அழுத்தத்திற்குக் காரணமும் நமக்குத்
தெரிவதில்லை.
மனநலத்திற்கான
கசாயம்
தலைவலிக்கு
ஒரு குவளை கசாயமோ, தேநீரோ உதவுவது போல, உளவியலாளர் வில்லியம் கிளாசர் விவரித்த ஒரு வழியைச் சுருக்கமாகக் கூற விழைகின்றேன். கிளாசரின் புரிதலின்படி, எல்லா மனநலன் சார்ந்த பிரச்சினைகளும் அடிப்படையில் உறவுச் சிக்கல்களே! மனிதன் ஐந்து முக்கியத் தேவைகளால் உந்தப்படுகின்றான்: 1. இருப்பு (Survival), 2. அன்பு
மற்றும் சார்ந்திருப்பது (Love & belonging),
3. சக்தி (Power), 4. சுதந்திரம்
(Freedom), 5. மகிழ்ச்சி
(Fun). இவற்றுள்
அன்பு மற்றும் சார்ந்திருப்பதை முதன்மையாகக் கருதுகிறார். ஒருவருக்கு ஓர் ஆழம் மற்றும் அடர்த்தி நிறைந்த உறவு இருக்குமாயின், மற்ற எல்லாச் சவால்களையும் அவரால் எதிர்கொள்ள முடியும். நமக்கு அப்படிப்பட்ட உறவுகள் அல்லது உறவு உண்டா?
இந்தத்
தேவைகள் ஒவ்வொருவருக்கும் மாறுபடுகின்றன. இந்தத் தேவைகள் நிறைவு பெறாதபோது ஒரு மனிதன் சலனமடைகிறான். இதற்கு அவர் பரிந்துரைக்கும் கசாயம், தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் (Choice).
மனிதனுக்கு
எல்லாச் சூழலிலும் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் இருக்கிறது. அவன் எத்தகைய வாய்ப்பைத் தேர்ந்தெடுக்கின்றான் என்பதைப் பொறுத்தே அவனது செயல்பாடு அமைகிறது. கோபத்தில் கத்தித் தீர்ப்போரைப் பார்த்திருப்போம். அதேநேரத்தில் நிதானமாய் பதிலிருப்புத் தருவோரையும் பார்த்திருப்போம். இருவருமே கோபத்தில் இருந்தாலும், அந்தச் சூழலுக்கு அவர்கள் தரும் பதில் வெவ்வேறு. அவர்களைக் கோபமூட்டிய சூழலை அவர்களால் மாற்ற முடியாவிட்டாலும், அந்தச் சூழலுக்கான அவர்களின் பதிலிருப்பு அவர்களின் விருப்பமே!
அக்கறையோடு பயணிப்போம்
வேகமாய்
இயங்கிக் கொண்டிருக்கும் நம் அன்றாட வாழ்வில், நம்மை அழுத்தத்திற்கு உட்படுத்தும் சூழலை மாற்ற முடியவில்லை என்றாலும், அந்தச் சூழலுக்கான நமது பதிலைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் நமது கைகளில் மட்டுமே!
மனநலனின்
முக்கியத்துவத்தை உணர்ந்த ஐக்கிய நாடுகள் சபை அக்டோபர் 10-ஆம் தேதியை அகில உலக மனநல நாளாக அறிவித்திருக்கின்றது. இந்த நாளைச் சிறப்பிக்கின்ற இந்தத் தருணத்தில், நமது மனநலனில் அக்கறை கொள்வதோடு, பிறர் மனநலனிலும் அக்கறை கொள்ள உறுதி ஏற்போம்! உள்மன அமைதி நிறைந்த சமூகத்தைக் கட்டமைப்போம்.
உலகப் பார்வையில் பிரான்சிஸ்-பிறைடா தம்பதியினர் பணக்காரர்கள்தான். அப்பார்ட்மெண்ட் வாழ்க்கை, சொகுசுக்கார், ஆடம்பர உடை, ஆபரணங்கள் எல்லாம் அவர்களைப் பணக்காரர்கள் என்றுதான் எல்லாருக்கும் காட்டியது. தெளிந்த குட்டையின் ஆழத்தில் சகதியும் நெகிழியுமாகக் காணப்படுவதுபோல, இந்தப் பணக்கார அடையாளத்தின் ஆழத்தில் வறுமையும் வெறுமையும் மிகுந்து கிடந்தது யாருக்கும் தெரியாது.
அடுத்தவேளை
உணவிற்குக்கூட கஷ்டப்பட வேண்டிய சூழல். திடீரெனப் பறிபோன ஐ.டி. வேலை,
வீட்டு வாடகைப் பாக்கி, நகைகளையும் சொகுசுக் காரையும் விற்றுவிட்ட போதிலும், கழுத்தை நெரிக்கும் இ.எம்.ஐ.
பிரச்சினைகள், வெளியே தலைகாட்ட முடியாத அவல நிலை... என்று பிரான்சிஸ்-பிறைடா குடும்பம் கோடைக்கால சுழல்காற்றில் சிக்கிச்சுழலும் சருகைப் போலானது.
வீட்டிலிருந்த
அனைத்தையும் விற்றாகி விட்டது. கொஞ்ச நாளாகவே ஆன்லைன் ‘சொமாட்டோ’
சாப்பாடுதான்.
அதற்கும் இனி வழியில்லை என்ற நிலை வரும்போது தற்கொலைதான் ஒரே வழி என்ற முடிவை எடுத்தது அந்தக் குடும்பம்.
இன்று
மாலை சாவதற்கான நல்ல நேரம். விஷம் அருந்திச் சாகத்திட்டம் ஒன்று உருவானது.
திருமணமாகி
ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று காலை தான் கருவுற்றிருப்பதை அறிந்தாள் பிறைடா. சாக முடிவெடுத்த நிலையில் ஒரு புதிய உயிர்! நல்ல செய்திதான். ஆனால், ‘இரண்டு வயிற்றுக்குச் சாப்பாடு போதாதபோது, மூன்றாவது வயிறு தேவைதானா?’ என்ற கேள்வி அவளைப் பசி என்னும் ஆயுதம் கொண்டு தாக்கியது.
மதிய
வேளையாகப் போகிறது. இன்னும் படுக்கையிலிருந்து எழும்பாத தன் கணவன் பிரான்சிசின் அருகில் படுத்துக்கொண்டாள் அவள். தான் கருவுற்றிருப்பதைக் கூறமுடியாமல் முண்டியடித்து வந்த தன் கண்ணீரை அடக்கிக்கொண்டாள். யாரும் இன்னும் காலை உணவு உண்ணவில்லை. காரணம், வீட்டில் உணவு இல்லை. இருந்த உணவுப் பொருள்கள் எல்லாம் காலியானது. யாரிடமும் தன் வறுமையைக் கூறி யாசிக்க அவர்கள் மனம் விரும்பவில்லை.
கண்களைக்
கசக்கிக்கொண்டே புரண்டு படுத்த பிரான்சிஸ் ‘இன்னைக்கு நீ ரொம்ப அழகா
இருக்க’ என்று
கூறிக்கொண்டே பிறைடாவின் நெற்றியிலே முத்தமிட்டான். இருவரும் ஒருவர் மற்றவர் அணைப்பில் படுத்திருந்தபோது பக்கத்து வீட்டிலிருந்து பிரியாணி வாசம் அவர்களைத் தாலாட்டியது.
தங்கள்
வீட்டில் சாப்பிட ஒரு பாட்டில் விஷம் மட்டும்தான் இருக்கிறது என்ற நிலையில், பிரான்சிஸ்-பிறைடா தம்பதியினர் தங்கள் தற்கொலை முடிவு என்னவாகப் போகிறது என்பதைத் தங்கள் பார்வையினாலேயே பேசிக்கொண்டனர்.
பிறைடா
கனத்த உள்ளத்தோடு ‘நான் பிரெக்னன்ட்டா இருக்கேன்’
என்று பிரான்சிஸின் காதிலே மெதுவாகக் கூறினாள். பிரான்சிஸ் என்ன சொல்வது என்று தெரியாமல், அவள் கண்களையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.
பக்கத்து வீட்டுப் பிரியாணி வாசம் அதிகமாக அதிகமாக அவர்களுக்கு அன்று என்றுமில்லாத வகையில் அதிகமாகவே பசித்தது. ‘காலிங்’ பெல் சத்தம் கேட்டது. பிறைடா கதவைத் திறக்க எழுந்து சென்றாள். “புதுசா பக்கத்து வீட்டுல குடிவந்திருக்கோம். அதான் பிரியாணி கொடுத்துட்டுப் போகலாமுணு வந்தேன்” என்று நடுத்தர வயதுகொண்ட பெண் ஒருவர் சிரித்த முகத்துடன் சில பிரியாணி பார்சல்களைக் கொடுத்துவிட்டுச் சென்றாள். அந்தப் பிரியாணி பொட்டலங்கள் அன்றைய நாளுக்கான அவர்களின் பசியை ஆற்றியது.
மாலை
தற்கொலை செய்துகொள்வதற்கான நேரம் வந்தது. ‘காலிங்’ பெல் சத்தம் மீண்டும் கேட்டது. கதவைத் திறக்க எழுந்து சென்றாள் பிறைடா. ஒவ்வோர் அலையும் ஏதாவது ஒன்றை நமக்காகவே கரைசேர்க்கிறது.
மனிதகுலம்
எவ்வளவுதான் துயரப்பட்டாலும் எல்லாக் காலகட்டத்திலும் ஏதாவது ஒரு கண்டுபிடிப்பு அத்துயரத்திலிருந்து அவர்களைக் காப்பாற்றியிருக்கிறது. அப்படியான மனிதகுலத்தின் அதி நவீனக் கண்டுபிடிப்பை இக்காலகட்டத்தில் ‘செயற்கை நுண்ணறிவு’
என்கிறோம். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் பல்வேறு வகைகளும் பயன்களும் உண்டு. பெரும்பாலும் செயற்கை நுண்ணறிவை உரை (text), இசை
(music), காணொளி
(video), குறியீட்டு
மொழி (codes) மற்றும் பட (images) உருவாக்கத்திற்குப்
பயன்படுத்துகின்றனர்.
இவ்வகை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ‘ஜெனரேட்டிவ் ஏ.ஐ.’ (Generative
AI) என்று அழைக்கிறோம். இத்தகைய தொழில்நுட்பப் படைப்புகளே இன்று இணையதள உலகில் குவிந்து மலிந்து கிடக்கின்றன.
‘ஜெனரேட்டிவ் ஏ.ஐ.’ தன்
ஆதிக்கத்தை முழுமையாக நிலைநாட்டுவதற்கு முன்பாகவே செயற்கை நுண்ணறிவின் அடுத்தகட்டப் பரிணாமம் நம் கண்முன்பாக உலா வருகிறது. இதனை ‘ஏஜென்டிக் ஏ.ஐ.’ (Agentic A.I)
என்று அழைக்கின்றனர். ஒரு நிறுவனத்தின் இலக்கை அடைவதற்கு அந்நிறுவனத்தின் பல்வேறு துறைகளில் வேலை செய்யும் அனைத்து முகவர்களும் (Agents) இணைந்து
உழைக்க வேண்டியுள்ளதை நாம் அறிவோம். அதேபோல ஒரு நிறுவனத்தின் வெற்றிக்காகச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, அந்நிறுவனத்தின் பணிகளைச் சரியாகச் செய்து முடிக்க உதவும் தொழில்நுட்பத்தையே ‘ஏஜென்டிக் ஏ.ஐ.’ என்கிறோம்.
இன்று இவ்வகை தொழில்நுட்பம் மருத்துவம், கல்வி, வியாபாரம், பொருளாதாரம், கட்டுமானம் என்று எல்லாத் துறைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
‘ஏஜென்டிக் ஏ.ஐ.’ செயற்கை
முகவர்களைப் (Agentic A.I) பணியமர்த்தி,
சரியான நேரத்தில் சரியான முடிவைத் தன்னிச்சையாக (autonomous) எடுத்துச் செயல்படும் ஆற்றல் கொண்டது. ஜெனரேட்டிவ் ஏ.ஐ. எதிர்வினை
(reactive) ஆற்றும் பண்புகொண்டது. கேட்பதைக் கொடுப்பதோடு தன் இயக்கத்தை நிறுத்திக்கொள்ளும். ஆனால், ஏஜென்டிக் ஏ.ஐ. எதிர்வினை
ஆற்றாமல் (pro active) சிந்தித்துச் சரியான
முடிவை எடுக்கவல்லது. இவ்வாறு தன்னிச்சையாகச் செயல்படும் ஏ.ஐ. முகவர்
(Agentic Automation) குறிப்பிட்ட
அலுவலின் நோக்கத்தை ஆய்ந்து அறிந்துகொண்டு அதற்கேற்றார் போன்ற பாணியைக் கையாண்டு நோக்கத்தைத் துல்லியமாக நிறைவேற்றித் தருகின்றது.
எடுத்துக்காட்டாக,
ஒரு மனிதர் வெளிநாட்டிற்குப் பயணம் செல்லவேண்டுமெனில், அவர் சில முகவர்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருக்கும். ஆனால், ஏஜென்டிக் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில்
அமெரிக்கா செல்லவேண்டும் என்ற கட்டளைப் பிறப்பிக்கப்பட்டவுடன், ஏ.ஐ. அந்தக்
கட்டளையைப் புரிந்துகொண்டு பிளைட் டிக்கெட் புக் செய்வதிலிருந்து மின்னஞ்சலுக்கு ஒவ்வோர் அப்டேட்டையும் அனுப்புவதுவரை எல்லா வேலைகளையும் ஏ.ஐ. முகவர்களே
பார்த்துக்கொள்கின்றனர்.
இதனால் நேர விரயம் தவிர்க்கப்படுவதோடு, மிக நேர்த்தியாக வேலையும் செய்து முடிக்கப்படுகிறது என்கின்றனர் ஏ.ஐ. நிபுணர்கள்.
மனிதர்களின்
வேலையை ஏ.ஐ. முகவர்கள்
செய்து முடிக்கின்றார்கள் எனில், மனிதர்கள் இனி என்னதான் செய்வார்கள்?
நாகரிகச் சமூகம் தன் துறையில் பெயர்பெற்ற தனிமனிதர்களைக் கொண்டாடுகிறது. காலத்தே துறைகள் மாறுகிறது. சமூகம் வேட்டை வீரர்களை, போர்வீரர்களை, விளையாட்டு வீரர்களை, கவிஞர்களை, கதாசிரியர்களைக் கொண்டாடி மகிழ்ந்தது. 19-ஆம் நூற்றாண்டில் நாடக நடிகர்கள், திரைப்படக் கலைஞர்கள் எனப் புதுமாற்றம் உருவானது. விளையாட்டில் கிரிக்கெட், கால்பந்து எனவும் விரிவு பெற்றது. நம் நாட்டில் கொண்டாடப்பட்ட ஹாக்கி விளையாட்டு கிரிக்கெட்டால் மெல்ல மெல்ல அழிகிறது.
இந்தியத்
திரை வரலாற்றில் முதல் ஓர் இலட்சம் ஊதியம்
பெற்ற முதல் கதாநாயகி ‘கொடுமுடி கோகிலம்’ என்று அழைக்கப்பட்ட கே.பி. சுந்தராம்பாள்.
இவர் கதர் இயக்கம், தீண்டாமை ஒழிப்பு, வெள்ளை ஏகாதிபத்திய எதிர்ப்பு என, தேச விடுதலைப் போரில் ‘கணீர்’ குரலில் மக்களிடையே பாடியவர். காங்கிரஸ் சார்பாக 1951-இல் அன்றைய சென்னை மாகாண சட்ட சபையில் நுழைகிறார். இந்திய அரசியல் வரலாற்றில் திரைக்கலைஞர் ஒருவர் ஆட்சி மன்றத்தில் முதல் முறையாகப் பதவி பெற்ற நிகழ்வு, துவக்கப்புள்ளி அதுதான். அந்நாள் முதல் இன்றுவரை வரலாறு தொடர்கிறது.
திராவிட
இயக்க வரலாற்றில் ‘நடிப்பிசைப் புலவர்’ எனப்படும் கே.ஆர். இராமசாமி
பேரறிஞர் அண்ணாவின் நெருங்கிய கூட்டாளி. தனது நாடகங்கள்வழி தொடக்ககாலத் தி.மு.க.விற்கு நிதி திரட்டிக் கொடுத்த வள்ளல். தி.மு.க.வின் முதல் இராயபுரம் அலுவலகத்திற்கு நாடகம் மூலமும் சொந்தப் பணத்திலும் 25,000 ரூபாய் வழங்கிய பெருந்தகை. 1960-ஆம் ஆண்டில் இவர் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு பெற்றார்.
அன்று
திராவிட இயக்கத்தில் சிவாஜி கணேசன், எஸ்.எஸ். இராஜேந்திரன் என்போர் குணச்சித்திர நடிகர்களாக மிளிர்ந்தனர். எம்.ஜி. இராமச்சந்திரன் தொடக்க காலங்களில் காங்கிரஸ் பேரியக்க அனுதாபியாக அடையாளம் காணப்பட்டார். காலம் நடிகர் திலகம் சிவாஜியைக் காங்கிரஸ் கட்சிக்கும், புரட்சி நடிகர் எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்களைத் தி.மு.க.விற்கும் நகர்த்தியது.
திரைக்கலைஞர்களில்
அரசியலில் வெற்றி கண்டவர் இருவர். ஒருவர் எம்.ஜி. இராமச்சந்திரன். மற்றொருவர் ஆந்திராவின் என்.டி.ஆர். என
அழைக்கப்படும் என்.டி. இராமராவ். இவர் சைதன்யா ரத யாத்திரை மூலம்
ஆந்திரா முழுவதும் 75,000 கிலோ மீட்டர் வேன் வழிப் பயணம் செய்து, 1983-இல் ஆந்திர ஆட்சியைப் பிடித்தார்.
அண்மையில்
கேரளாவில் பா.ச.க.வுக்காக முதல்
முறையாக திருச்சூர் நாடாளுமன்றத் தொகுதியில் வென்றார் சுரேஷ் கோபி. மத்திய இணை அமைச்சராகவும் பா.ச.க.வில் பதவி பெற்றார். இவர் தனது அமைச்சர் பதவியிலும் அரசியலிலும் விருப்பமில்லாமல் இருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. சில நாள்கள் இவரைக் காணவில்லை எனவும் பரபரப்பாகப் பேசப்பட்டன. இதுதான் நடிகர்களின் நடப்பு அரசியல். தமிழ்நாடு அரசியலில் திராவிடக் கட்சிகளின் தாக்கங்கள் திரை உலகில் இருந்தே உருப்பெறுகிறது.
எம்.ஜி. இராமச்சந்திரன் அண்ணா மற்றும் கலைஞரின் திரைக்கதை, வசனங்களால் திரைப்படங்களில் தொடர்
வெற்றி முத்திரை பதித்தார். தி.மு.க.வும் தன் தேர்தல் வெற்றிக்கு எம்.ஜி.ஆர். என்ற
தம் துருப்புச் சீட்டை வைத்து தமிழ்நாட்டு அரசியலில் ஆட்டம் காட்டியது. நடிகர் அரசியலுக்கு வரலாம், வெற்றி பெறலாம் என எம்.ஜி.ஆர். வழிகாட்டினார். அவருக்குப் பின்பு செல்வி ஜெ. ஜெயலலிதாவும் அரசியலில் தடம் பதித்தார். வெற்றியோடு கடும் விமர்சனங்களையும் நெருக்கடிகளையும் சந்தித்தார்.
எம்.ஜி.ஆர்.-ஐ
தொடர்ந்து நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களும் 1988-ஆம் ஆண்டு ‘தமிழக முன்னேற்ற முன்னணி’ எனத் தனிக்கட்சி கண்டார். அன்றைய பிளவுபட்ட அ.தி.மு.க.வின் ஓர்
அணியான ஜானகி அம்மையார் அணியோடு கூட்டணி கண்டு, 1989 - சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்தார். திருவையாறு தொகுதியில் நடிகர் சிவாஜி கணேசன் குறைந்த வாக்குகள் பெற்று வெற்றியைப் பறி கொடுத்தார். வி.என். ஜானகி
அம்மாவும் திரைத்துறை கதாநாயகியே.
நடிகர்களின்
அரசியல் என்பது தனித்துவமான கதாநாயகப் பிம்ப அரசியலை முன்னெடுப்பதாகும். நடிகர் விஜய்காந்த் தன் கல்யாண மண்டபம் முன் பகுதி இடிப்பிற்குப் பின் தி.மு.க.மீது கொண்ட பகையையும், அதற்கு முன்னான கலைஞர் கருணாநிதி பாசத்தையும் ‘தங்கத் தலைவனுக்கு விழா’ என்பதே சான்று உரைப்பதாகும். திரை நாயகர்கள் திரையில் மட்டுமல்ல, வாழ்விலும் அரசியலிலும் தங்களை ‘கதாநாயகன்’
என்ற மாயத்திலே வாழ்வது, எதார்த்தம் மறப்பது, சுற்றியுள்ள காக்காபிடிக் கும்பலின் மயக்க வார்த்தைகளை நம்புவது, கற்பனைக் கோட்டைகளில் வசிப்பது என நாட்டு நிலவரம்
அறியாமல் அரசியலில் குதிக்கிறார்கள்; கட்சி ஆரம்பிக்கிறார்கள்.
எம்.ஜி.ஆர். தனது
அரசியல் வாரிசு என அறிவித்த நடிகர்
பாக்கியராஜ் கட்சி ஆரம்பித்துச் சோபிக்கவில்லை. பல்துறை வித்தகர் எனப்படும் நடிகர் டி. இராஜேந்தர் காட்டிய அரசியல் கட்சி என்ற வித்தை பலிக்கவில்லை. நடிகர் சரத்குமார் போட்ட பல்டிகள் பா.ச.க.வோடு முடிந்துவிட்டது. நடிகர் கமலஹாசன் ஆளும் தி.மு.க.வின் பிரச்சார அணியாகத் தன் மக்கள்நீதி மையத்தை மடைமாற்றி விட்டார். நடிகர்
கருணாஸ் தனக்கு ஒரு சீட் வேண்டும் எனத் தி.மு.க. கூட்டணியில்
சீட் போடுகிறார்.
இராமராஜன்,
எஸ்.எஸ். சந்திரன், எஸ்.வி. சேகர், வாகை சந்திரசேகர், தியாகு, நெப்போலியன், குஷ்பு, கஸ்தூரி, கௌதமி, விந்தியா என்ற நடிகர் பட்டாளமும் தமிழ்நாடு அரசியலின் வண்ணமிகு பக்கங்கள். ஏன் கட்சி ஆரம்பித்தோம்? எதற்குப் பிரச்சாரம் செய்கிறோம்? யாரோடு கூட்டணி? இது பகலா? இரவா? என அறியாமல் கட்சி
ஆரம்பித்தவர் பழம்பெரும் நடிகர் முத்துராமனின் மகன் கார்த்திக். இவருக்கெனச் சாதி இளைஞர் பட்டாளம் இருந்தது என்பது வரலாறு. நடிகை ரோஜா பரபரப்பு அரசியலில் ஆந்திர அரசியலைக் கலக்குவது கலகல பக்கம்.
ஒருகாலத்தில்
தமிழ்நாடு திரையுலகில் பரபரப்பாகப் பேசப்பட்டவர் என்.எஸ். கிருஷ்ணன். மூட நம்பிக்கை ஒழிப்பு, தேசபக்தி, நன்கொடைத் தன்மையால் வள்ளல் எனப் புகழப்பட்டவர் என்.எஸ். கிருஷ்ணன். இவர் மட்டுமே திராவிட அரசியலில் இருந்தும், அரசியலில் இல்லாத கதாநாயகர்கள் என்று கலைஞர் கருணாநிதியால் பாராட்டப்பெற்ற விதிவிலக்கு நடிகர். நடப்பு அரசியலில் தாங்கள் நடித்த இரண்டு திரைப்படங்கள் வெற்றி பெற்றால், தமிழ்நாடு முதல்வராகும் கனவு நடிகர்களுக்கு முளைக்கிறது. அவர்கள் தமிழ்நாட்டின் வரலாறு, நிலப்பரப்பு குறித்த அடிப்படை அறிவு இல்லாதவர்கள். குக்கிராம, கிராம, நகர, மாநகரத் தெருக்களின் நீள அகலங்கள் தெரியாதவர்கள். மக்களின் வசிப்பிடங்கள், தொழில், பொருளாதாரம், வருமானம் குறித்து அறியாதவர்கள். சமூக, கலாச்சார, பண்பாட்டு, வழிபாட்டுச் சூழல்களைப் புரியாதவர்கள், மக்களின் மன ஓட்டங்கள், ஒவ்வொரு
குடும்பத்தின் நிலை காணாதவர்கள், யாரோ சொல்ல ஏதோ புரிந்த அளவு செயல்படுபவர்கள்.
இவர்கள்
மக்களைக் காப்பாற்றுவார்களா? ஒரு நடிகர் மத்திய அரசு அதிகாரத்திற்கும், மாநில அரசு அதிகாரத்திற்கும் வேறுபாடு அறியாமல் தபால் கார்டு விலையைக் குறைப்பேன் என்று கூறினார். இதிலும், தன் கட்சிக் கொள்கை குறித்த பத்திரிகையாளரின் கேள்விக்குப் பதில் கூறாமல், ஏதேதோ பிதற்றினார்.
இப்பொழுதும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் இதேபோன்ற கேள்விக்கு
“நான் அதிகம் படித்தவன் இல்லை” என
ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டார். மற்றொரு நடிகர் பத்திரிகையாளர் சந்திப்பு என்றாலே ஏதோ தெரு சண்டை அளவு இழுத்துவிட்டார். பொதுவாழ்வு என்பது போராட்டம் என்பதைப் புரிந்து நடிகர் ரஜினிகாந்த் ‘இந்தப் பழம் புளிக்கும்’ என அரசியலில்
இருந்து ஒதுங்கிக்கொண்டார்.
நடிகர்கள்
அரசியலுக்கு வருமுன் தமிழ்நாட்டில் உள்ள பட்டிகள், பாளையங்கள், மங்கலங்கள், குப்பங்கள், மடங்கள், குளங்கள், கோவில்கள், பேட்டை, கோட்டை என்றுள்ள ஊர்ப்பெயர்களை அறிந்து, அதன் அடிப்படைகளை, சமயங்களை, சாதிகளை, தொழில்களை, வாழ்வாதாரங்களை, மக்களின் அடிப்படைத் தேவைகளை அறிந்து வரட்டும்.
எல்லாத்
தொழில் செய்வோரும் அரசியலுக்கு வரலாம் என்பதே இந்தியச் சனநாயகம்.
இந்து தேசியர்களின் கனவு மிக அகலமானது. இந்தியா பல தேசங்களை உள்ளடக்கிய ஒரு நாடு என்பதை மறுத்து, இந்தியாவை ஒரு தேசமாகவே கட்டமைக்கும் இந்து தேசியவாதிகளைப் புரிந்துகொள்வோம்.
‘கலாச்சாரத் தேசியம்’ என்ற பெயரில் பன்மைக் கலாச்சாரத்தை அழித்து, ஒற்றைப் பண்பைத் திணித்து, எதேச்சதிகாரப் பாணியில் ஆட்சி நடத்தி வருதலையும் நாம் அறிவோம். திராவிடம் என்பது கால்டுவெல் மூலம் இந்நாட்டைப் பிளக்க அந்நியர் உருவாக்கிய சதி என்றும், இந்தியா ஒரு தேசம்; இத்தேசத்தின் உள்ளடக்கம் ஒரே மொழி, ஒரே இனம், ஒரே கலாச்சாரம் என்றிருக்க, இந்நாட்டின் எதிரிகள் இந்நாட்டை ஒரு துணைக் கண்டம் (Sub continent)
என்றும் முத்திரையிட்டு உண்மையை மறைக்கும் இழிசெயலைச் செய்கின்றனர் என்றும் இந்துத்துவர்கள் வசைபாடுவதோடு நின்றிடவில்லை. இந்தியாவில் இன்று ஆட்சியைக் கைப்பற்றி ஆளும் உரிமையைப் பெற்றிருக்கும் கட்சியின் பூர்வீக அமைப்பாம் ஆர்.எஸ்.எஸ். மற்றும் சவார்க்கரின் ‘இந்து மகா சபா’ என்பனவெல்லாம் இன்று நாம் காணும் நிலப்பரப்பைக் கொண்டுள்ள இந்தியாவை இவர்கள் கனவு காணும் நாடாக ஏற்கவில்லை.
இன்று
நாம் ஆளும் இந்திய நிலப்பரப்பு குறைபட்ட ஒன்று. இந்தியா விடுதலை பெற்ற நாளில், இந்திய நிலப்பரப்பினுள் பாகிஸ்தானை இழந்தோம்; ஏற்கெனவே ஆப்கானில்தான் பறிபோயிற்று; தென் இலங்கை கைமாறியது என்றெல்லாம் அகண்ட பாரதம் சுருங்கிப் போய்விட்டதாகக் கலங்கும் இந்துத்துவர்களைப் பற்றி நாம் அறிய வேண்டுவது, இன்றும் இந்துத்துவத் தலைவர்களின் ‘அகண்ட பாரதக் கனவு’ அப்படியேதான் உள்ளது.
அகண்ட
பாரதத்தின் உறுப்பு நாடுகளாக இவர்கள் கருதிய தேசங்கள் இன்று தன்னாட்சியும் இறையாண்மையும் பெற்ற நாடுகளாகவே திகழ்கின்றன. இந்தியாவில் இந்துத் தேசியர்களின் ஆட்சி மலர்ந்திருக்கும் காலத்தில் ‘சார்க்’
(SAARC) என்ற
அமைப்பு ஏனில்லை? ‘ஏசியன்’
(Asian) தெற்காசியக்
கூட்டமைப்பு எங்கே? உலகின் ஒரே இந்து நாடு என்று இங்குள்ள இந்துத்துவர்களால் பாராட்டப்பட்ட நேபாளம் இந்தியாவின் கவனத்துள் இல்லை. சனநாயக ஆட்சிக்கு முந்தைய முடியாட்சி இந்துத்துவர்களின் விருப்பமான ஆட்சியாக இருந்திருக்க, சனநாயக நேபாளம், சீனா பக்கம் திரும்பியுள்ளதே... ஏன்?
இந்துத்துவக்
கனவு என்பது ஒரு சனநாயகக் கனவல்ல; தேசிய இனங்களை அங்கீகரித்து, அவைகளின் தனித்துவத்தை மதிப்பதோ ஏற்பதோ அல்ல; இந்துத்துவர்களின் கனவு நவீன ஏகாதிபத்தியக் கனவு. ஏகாதிபத்தியத்தின் எல்லையோ பெரிது. ஏகாதிபத்தியம் என்பது விழுங்கும் இயல்பினைக் கொண்டது. ஏகாதிபத்தியத்தின் அரசியல் கொடுமையானது. இன்றைய மோடி அரசின் கொள்கை ஏகாதிபத்தியச் சாயலைக் கொண்டது. உலகில் நாம் இன்று சந்திக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப், உருசிய
அதிபர் புதின், பாலஸ்தீனத்தில் நாளும் கொலை பாதகம் நடத்திவரும் இஸ்ரேல் பிரதமர் என்போரெல்லாம் ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதிகளே.
வெவ்வேறு
நாடுகளைக் காலனிகளாக மாற்றி, அந்நாடுகளின் வளத்தைச் சுரண்டி அடிமைப்படுத்துவது மட்டுமல்ல ஏகாதிபத்தியம்; சுயாட்சி பெற்ற நாட்டில் இயங்கும் அரசுகூட ஏகாதிபத்தியச் சிந்தனையோடு, ஏகாதிபத்தியம் உருவாக்கும் எதேச்சதிகார வடிவத்தைக் கொண்டிருக்கலாம்.
இன்றைய
இந்துத்துவ மதவாத அரசு மத அடிப்படைவாதத்தைக் கொள்கையாகக் கொண்டிருப்பதால்,
இவ்வரசில் சனநாயகப் பண்பு இல்லை. ஆனாலும், சனநாயகத்தின் மிகப்பெரிய மதிக்கப்பெறும் தேர்தல் முறை, இந்துத்துவ மதவாத சனநாயக எதிர்ப்பாளர்களால் ஏன் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது
என்பதை அரசியல் அறிவுள்ளோர் புரிந்துகொள்வர். குடிமக்களின் சமத்துவத்தை, குடிமக்களின் தெரிவு செய்யும் உரிமையை, குடிமக்களின் மனித உரிமைகளை மத ரீதியாக அணுகிப்
பாகுபடுத்தும் ஓர் அரசு, ஏகாதிபத்திய ஏதேச்சதிகார அரசாகத்தான் இருக்க முடியும். சனநாயகத்தை நம்பாத ஓர் அரசு, சனநாயகம் தரும் தேர்தல் சனநாயகத்தை (Electrical Democracy) ஏற்பதாக
நடித்து, அம்முறையில் ஆட்சி அதிகாரத்தையும் கைப்பற்றிவிடுகிறது.
சாதி,
மதம், இனம், மொழி ரீதியாக எவரும் பாகுபடுத்தப்படக்கூடாது என்று பகரும் அரசமைப்புச் சட்ட உரிமைகள் மிகக் கேவலமாக மீறப்பட்டு, மத ரீதியாக மக்களைத்
துருவப்படுத்தி, தேர்தலில் பெறுகின்ற பெரும்பான்மை, உண்மையான பெரும்பான்மை அல்ல என்பதையும், மத ஒருங்கிணைப்பு மூலம்
பெற்றுவரும் பெரும்பான்மை, பெரும்பான்மைவாத அரசியலுக்கே இட்டுச்செல்லும் என்பதை அறிந்திருந்தும், ஒரு மதப்பெரும்பான்மைவாத அரசின் ஆட்சியின் போக்கை 140 கோடி மக்கள் மௌனமாகத் தரிசித்து, சகித்து வருகின்றனர்.
மௌனம்
எப்போதுமே ஒடுக்கலையே ஊக்குவிக்கும் (Silence nourishes
supressure). இந்தியக் குடிமக்கள் மௌனிக்கின்றனரா? இக்கூற்றில் உண்மை இல்லை என்பதும் உண்மையே. விரும்பி ஏற்கும் மௌனம் வேறு; மௌனிக்க வைத்தல் வேறு. இன்றைய இந்தியாவில் வகுப்புவாதக் கருத்தியலின் வளர்ச்சி பற்றி ஆய்வு செய்வோர் எளிதில் ஒன்றைப் புரிந்துகொள்ள முடியும். வகுப்புவாதக் கருத்தியல் பிரிவினையை உள்ளடக்கமாகக் கொண்டது; முடங்கும் சமூக அமைப்பை நியாயப்படுத்துவது; எதேச்சதிகார விதை இதன் உள்ளடக்கம்; எனவே, இக்கருத்தியல் பாசிசத்தின் விளை நிலம் என்றெல்லாம் தொடர்ந்து கூறப்பட்டு வரும் நிலையிலும், ‘இந்தியத் தாய்’ இதை உவந்து ஏற்றுக்கொண்டிருப்பது எப்படி?
இந்தியா கற்றுக்கொள்ளுமா?
அகண்ட
பாரதப் பெருங்கனவுக்குள் சிக்கிக்கொள்ளாமல், இறையாண்மை மிக்கதாயும், சனநாயக நாடாகவும் தம்மை அறிவித்துக் கொண்ட நம் அண்டை நாடுகளின் நிலை என்ன? தென் இலங்கையிலும், இந்தியா உதவியோடு உருவாக்கப்பட்ட வங்காளதேசத்திலும், ‘உலகின் ஒரே இந்து நாடு’ என்று நம்மில் பெரும்பான்மைவாதிகளால் போற்றிப் புகழப்பட்ட நேபாளத்திலும் இன்று நடப்பது என்ன?
இம்மூன்று
நாடுகளின் இளைஞர் கூட்டம் உயிரைத் துச்சமென வைத்துத் தெருவிற்கு வந்துள்ளது. இந்நாடுகள் அனைத்தும் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றவை. வங்காளதேசமும் பாகிஸ்தானும் மத அடிப்படையில் உருவாக்கப்பட்டவை
என்றாலும், மதம் என்ற பண்பாட்டு அடையாளம் ஒற்றைத் தேசத்தை உருவாக்கும் கருவியாக முடியாது என்பதை நிரூபித்து, இரு நாடுகளாக இவை உருவான வரலாற்றை நாம் அறிவோம்.
நம்
அண்டையிலிருக்கும் இவ்விரு நாடுகளின் பிரிவினை, இந்தியாவின் மதப்பெரும்பான்மைவாதிகளின் மதரீதியான தேசியத்தை வேரோடு அழித்தது. 1971-ஆம் ஆண்டு பொய்யான ‘தேசியம்’ என்ற கற்பனைக் கருத்தியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு வங்காளதேசம் உருவான நிலையிலும், இந்தியாவின் மதப்பெரும்பான்மைவாதம் இன்னும் அதே பொய்மையை இங்கு வளர்த்து, அதை நம்பச் செய்து ஆட்சிக் கட்டிலிலும் ஏறி, மேலும் வேகமாக வளர்த்து வருகிறது.
இங்கு
நாம் சிந்திக்க வேண்டியது, ‘மதத்தால்’
என்ற சித்தாந்த அடிப்படையில் மக்கள் அணி திரட்டப்பட்டு உருவான பாகிஸ்தான் இரண்டாகப் பிரிந்தது எப்படி? அந்நியரிடமிருந்து விடுதலை பெற்ற இந்தியத் துணைக்கண்டம், இருபெரும் நாடுகளாகத் துண்டிக்கப்படும் முன், பல இலட்சம் மக்களை
மதவெறிக்குப் பலியாக்கியிருந்தது. சாத்விகத்தையும் அகிம்சையையும் போதித்த காந்தி பிறந்த மண்ணில் மனித இரத்தம் நதியெனப் பாய்ந்தது. மத ரீதியில் மக்களை
வெறியூட்டி உருவான பாகிஸ்தான் ஒரே ஓர் ஆண்டு மட்டுமே ஜின்னா அவர்களின் வேண்டுகோளின் பெயரில் - சமய வேண்டுகோளின் பெயரில் ‘சமயச் சார்பற்றக் குடியரசு’
என அறிவிக்கப்பட்டது. ஜின்னாவின் மறைவிற்குப் பின் பாகிஸ்தான் இசுலாமியக் குடியரசாக உருமாறிப் போனது. மத ரீதியாக மக்களை
ஒருங்கிணைத்து உருவான நாடு, சனநாயகக் குடியரசாக மாறும் என்பது பொய்யான ஒரு நம்பிக்கை என்பதை பாகிஸ்தான் இவ்விதம் நிரூபித்தது.
இந்தியாவில்
காந்தி மற்றும் நேரு தலைமையில் வளர்க்கப்பட்ட இந்தியத் தேசியம் வலுப்பெற்றிருந்த காலத்தில், மதவாத தேசியம் தன்னை நிலைநிறுத்தத் துடித்துக் கொண்டிருந்தது. பெரும்பான்மைவாதிகளுடன் நிகழ்ந்த சித்தாந்தப் போரில் காந்தியைக் கூட இழந்துவிட்டிருந்தாலும், இந்தியா சனநாயகக் குடியரசாக அறிவிக்கப்பட்டது. இன்று என்ன? வராது போல் வந்த மாமணியைக் காக்கத் தவறிவிட்ட அவலச் சூழலில் உள்ளோம். சனநாயகம் காக்கும் வேள்வியில் எந்தப் பங்கும் பெறாத ஒரு ‘பெரும்பான்மைவாத அமைப்பு’,
கடந்த பதினோர் ஆண்டுகளாக ஆண்டு கொண்டிருக்க, வராது போல் வந்து மாமணியாம் சனநாயகத்தைக் காவு கொடுத்துக் கொண்டிருக்கிறோம் நாம். சனநாயகமும், சனநாயகப் பாதுகாப்புக்கென உருவாக்கப்பட்ட சனநாயக நிறுவனங்களும், இந்திய அரசமைப்புச் சட்டங்களும் நாளும் குடிமக்களின் கண்முன்னே நசுக்கப்பட்டு வரும் நிதர்சனத்தை மௌனமாய் தரிசிக்கிறோம். ஏற்றுக்கொள்ளப் பழகிக் கொண்டோம். அநீதியைக் கைகூப்பி ஏற்றுக்கொள்ளும் இம்மனநிலையை ‘இந்தியப் பண்பாடு’ என்று நியாயப்படுத்துகிறோம்.
“மோடியின் ஆட்சியில் கேள்வி கேட்பது தேசத் துரோகம்; கேள்வி துறந்து மௌனிப்பது தேசப்பற்று; உண்மையான இந்திய அடையாள அட்டை (badge) என்பது அஞ்சி நடுங்குவோருக்கும் பார்வையற்றோருக்கும் முதுகெலும்பு இல்லாதோருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன” என்கிறார்
காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால்.
“மோடி அரசு மறுத்தல் (being), திசை திருப்பல் (distract), பொய்யுரைத்தல் (Lie), நியாயப்படுத்தல்
(Justify) போன்ற
கொள்கைகளின் பின் நின்று உண்மையை மறைத்து வருகிறது”
என்கிறார் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ்.
மேலே
தரப்பெற்ற இருவரின் கூற்றுகளும், இக் கூற்றுகளில் உள்ளடங்கும் அவல அடையாளங்களும் ஒரு பாசிச அரசின் நிலைப்பாடுகளே. இந்த நிலைப்பாடுகளை எவ்வளவு காலம் தாங்கிக் கொண்டு நாம் வாழப்போகிறோம்? ‘அகண்ட பாரதத்தின் அண்டை நாடுகள்’ காட்டும் வழியை எப்போது கண்டு கொள்ளப்போகிறோம்?
ஈழப்போரில்
வெற்றிகண்டதாகவும், ஈழப்புலிகளை அழித்துவிட்டதாகவும், சிங்கள மக்களை ஒருங்கிணைத்துப் பேரினவாதப் பெருமை பேசிய இராசபக்சேக்கள் தூக்கி எறியப்பட்டது எப்படி?
கார்கிலைக்
காட்டி, புல்வர்மாவைப் பொய்யாகச் சித்தரித்து, பெகல்காமில் நடத்தப்பட்ட கொலைகளை ‘சிந்தூர்’
எனும் பெயரில் மக்கள் உணர்வைத் தூண்டி, மோடி சாம்ராஜ்யம் வெற்றி பெறுவது எப்படி?
இலங்கையில்
சிங்களப் பேரினவாதம் தந்த வெற்றி தகர்ந்தது. ‘ஒரே இந்து நாடு’ என்று பெருமைப்படுத்திய நேபாளமும் தகர்ந்தது. முடியாட்சியைத் தகர்த்துக் குடியாட்சி கண்டவர்கள், அக்குடியாட்சியின் அனைத்து மகத்துவங்களும் தகர்ந்துபோனது கண்ட இளைஞர்கள் கொஞ்சமும் காலந்தாழ்த்தாது வெடித்தெழுந்தது எப்படிச் சாத்தியமாயிற்று?
சனநாயக
அரசின் நம்பகத்தன்மை இழந்துபோன நிலையில், ஆளும் அரசுகளின் தவறான ஆளுகை, மக்களுக்குப் பதில் சொல்லும் கடமையை மறுத்தல், மனித உரிமை மீறல்கள், சுரண்டல், ஊழல் எனும் கொடுமைகளைக் கண்டும், கேட்டும் பழகிப்போய்விட்ட பாரத நாட்டுக் குடிமக்களைப் போலல்லாமல், இராசபக்சே
துரத்தப்படுகிறார்; வங்கதேசத்து அசீனா ஓட்டம் பிடிக்கிறார்; நோபாளத் தலைவர்கள் காணாமற் போகின்றனர்! இத்தனை எழுச்சிகளுக்கும் காரணகர்த்தர்கள், இந்நாடுகளின் இராணுவப் பலத்தையும் எதிர்த்து, உயிரை மாய்த்து மாற்று அரசுக்கு வழிகண்ட இளைஞர் கூட்டம். இக்கூட்டம் உலக நாடுகளுக்கு குறிப்பாக, நமக்குப் பாடம் கற்றுத்தருகிறது. இவ்வேளை, ஒரு வெற்றுத் தலைவர் பெயரில் கூடும் ஒரு கூட்டம், அக்கூட்டத்தின் வெற்றுக் குரல், வெற்றுக் கூச்சலையும் நாம் மறந்திடல் கூடாது.
குழந்தை தெரேசா குழந்தை பருவத்திலிருந்தே மிகுந்த செல்வச் செழிப்போடு வாழ்ந்தவர். ஆனால், குறைகளே இல்லாமல் வாழ்ந்தவர் அல்லர்; கொடுமையிலும் கொடுமை தாயை இழப்பது. இந்த மாபெரும் கொடுமை நான்கு வயதில் நடந்தது. ஆம்! தன் தாயை இழந்து சொல்லெண்ணாத் துயர் அடைந்தார். இந்த இழப்பு அவரை மனதளவில் மிகவும் பாதித்தது. பின் தன் சகோதரிகளில் ஒருவரான பவுலினைத் தன் தாயாக நினைத்து வாழ்ந்து வந்த சூழலில், அவரும் குழந்தை தெரேசாவிற்கு ஒன்பது வயது இருக்கும்போது பவுலின் கார்மேல் மடத்திற்குச் சென்றார். மற்றோர் இடியாகத் தனக்குக் கிடைத்த இரண்டாம் தாயையும் இழந்து தவித்தார். இப்படிக் குழந்தை பருவத்தின் பாதிப்பு குழந்தை தெரேசாவிற்கு அதிகமாகவே இருந்தது.
‘ஃபிராய்டு அட்லர்’ போன்ற மனோதத்துவ நிபுணர்கள், ‘ஒருவர் குழந்தையாக இருக்கும்போது ஏற்படுகின்ற காயங்களும் வேதனைகளும் ஒருவரை மீண்டும் எழுந்துவர முடியாத அளவிற்குப் பாதிக்கும்’ என்கிறார்கள்.
ஆனால், இந்தத் தத்துவத்தைக் குழந்தை தெரேசா இறைவன் அருளால் சுக்குநூறாக உடைத்து, இறைஉறவில் வளர்ந்து இறைவனையே தன் தாயாக, தந்தையாக மாற்றிக்கொண்டார்.
சிறுமலர் பேரிலும்
ஆன்மிகத்திலும்
எளிமை
குழந்தை
தெரேசா சிறுவயதிலிருந்தே மலர்களை இரசிக்கும் குணம் கொண்டவர். காடுகளிலே காண்பாரற்றுக் கிடக்கின்ற எளிய வகை மலர்தான் கார்ன்காக்கில். இந்தச் சிறிய வகை எளிய மலர்களோடுதான் தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டார்.
பெரிய பெரிய வண்ண வண்ண மலர்களும், நறுமணம் வீசும் மலர்களும் மட்டுமல்ல, இச்சிறுவகை மலர்கள்கூட இறைவனை மகிமைப்படுத்துகின்றன. எனவேதான் தன்னை ஒரு சிறுமலராக இணைத்துக்கொண்டார்.
சிறுமலர்
தெரேசாவிடத்தில் முதலில் ஆன்மிகக் குழந்தைத்தனம் இருந்தது. மிகுந்த அடம்பிடிக்கின்ற, உணர்ச்சிவசப்படுகின்ற நபராக இருந்தார். சிறு தவறுகள் கூட கடவுளின் அன்பை முற்றிலும் இழக்கச் செய்யும் என்றிருந்தார். பின்பு அதையே ஓர் ஆன்மிகமாக அமைத்து, குழந்தைத்தனத்திலிருந்து குழந்தை மனம் கொண்ட ஆன்மிகமாக மாற்றி, தன்னைக் கடவுளிடம் ஒப்படைத்து நமக்குச் சிறுவழி ஆன்மிகம் தந்திருக்கிறார்.
இறைவனிடத்தில்
குழந்தைபோல்
நம்பிக்கை
வைப்பது
குழந்தைகளிடத்தில்
பகைமையின்றி அன்பிருக்கும், எதிர்மறை எண்ணமின்றி நேர்மறை குணம் இருக்கும், பாகுபாடின்றி எல்லாரையும் ஏற்கும் மனமிருக்கும், உள்ளத்தில் தூய்மை, வாழ்வில் எளிமை இவைகளே குழந்தையின் அணிகலன்கள். இவைகளையே குழந்தை தெரேசா தன் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்தார். ‘நான் பெரிய காரியங்களைச் செய்ய முடியாது. ஆனால், சிறிய காரியங்களில் நான் அன்புடன் செய்ய விரும்புகிறேன்’ என்று
சிறுவழி ஆன்மிகத்தை நமக்குக் கொடுத்திருக்கிறார்.
சிறுமலர் தெரேசாவின்
உச்சக்கட்ட
ஆன்மிகம்
குழந்தை
தெரேசா தனது சுயசரிதையில் (ஓர் ஆன்மாவின் வரலாறு) எவ்வாறு நாம் அன்பு செய்ய வேண்டுமென்று விளக்குகிறார். இயேசு பத்துக் கட்டளைகளைச் சுருக்கி, இரண்டு கட்டளைகளாகக் கொடுத்தார். கடவுளை அன்பு செய்வது முதல் கட்டளையாகவும், தன்னை நேசிப்பதுபோல் பிறரையும் நேசிப்பதை இரண்டாம் கட்டளையாகவும் கொடுத்தார். இந்த இரண்டாம் கட்டளையில் உள்ள சிக்கல் என்னவென்றால், நான் என்னை அன்பு செய்வது போன்று, பிறரையும் அன்பு செய்வது என்பது சிக்கல் நிறைந்த ஒன்றாக இருப்பதை குழந்தை தெரேசா உணர்ந்தார். “நான் என்னை எவ்வளவு அன்பு செய்கின்றேன்? ஒருவேளை கால்வாசி, அரைவாசி என்று அன்பு செய்தால் பிறரை அதே அளவு அன்பு செய்தால் போதுமா?” இதுபோன்ற கேள்விகள் குழந்தை தெரேசா மனத்தில் உதயமாயின. அதற்கு அவர் கண்ட விடைதான் “நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்” (யோவா
13:34). ஆகவே, நான் என்னை அன்பு செய்வது போன்று மட்டுமல்ல, இயேசு என்னை அன்பு செய்வது போன்று பிறரை அன்பு செய்ய வேண்டுமென்று கண்டுணர்ந்தார். அன்றிலிருந்து இயேசு எவ்வாறு தன்னோடு பேசுவாரோ, அவ்வாறே பிறரோடு பேச ஆரம்பித்தார். இயேசு எவ்வாறு தனக்கு உதவி செய்தாரோ, அவ்வாறே பிறருக்கும் உதவி செய்தார். இயேசு எவ்வாறு தனக்குச் செவிமடுத்தாரோ அவ்வாறே பிறருக்கும் செவிமடுத்தார்.
இப்படி
அவர் மூச்சிலும் பேச்சிலும் செயலிலும் நம்பிக்கையிலும் இயேசுவை மையமாகக் கொண்டார். இதை
அவர் எவ்வாறு செய்தாரென்றால் ‘இயேசுவே, நான் என்னை அன்பு செய்ததுபோல பிறரை அன்பு செய்ய முடியாத நிலையில் உள்ளேன். நீரே என்னில் வந்து என் வழியாகப் பிறரை அன்பு செய்யும்’
என்று தன்னையே இயேசுவுக்கு முழுமையாக ஒரு குழந்தையைப்போல் ஒப்புக் கொடுத்து விட்டார். இயேசுவும் குழந்தை தெரேசாவோடு இரண்டறக் கலந்து, இன்றும் குழந்தை தெரேசாவின் வழியாக நம்மை அன்புசெய்து வருகிறார். நாமும் இப்படி ஒரு வாழ்வு வாழ அழைக்கின்றார். சிறுவழி ஆன்மிகத்தைச் செயல்வழி ஆன்மிகமாக மாற்றி வாழ முயற்சிப்போம்.
“தங்கள் பணியில் இறைவாக்கினர்களாக வாழ்ந்து, தங்களுடைய தனித்துவமிக்க வாழ்க்கையாலும் அர்ப்பணமிக்க செயல்களாலும் கிறிஸ்துவுக்கு உண்மையான சான்றாகத் திகழ்வதும், தங்களது உடனிருப்பாலும் பணிகளாலும் உலகை விழித்தெழச் செய்தவர்களே துறவியர்” என மேனாள் திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிடுகிறார். இத்தகைய நோக்கத்தோடு திரு அவையின் வரலாற்றில் காலச்சூழலுக்கேற்ப, இறைவனின் குரலுக்குப் பதில் கொடுத்துப் பணியாற்றிய பல பேராளுமைகளும் துறவு சபைகளும் அவ்வப்போது தோன்றி வளர்ந்தது நமக்குச் சான்றாகும். அத்தகைய ஒரு பின்னணியும் தாக்கமும் தெரேசாவின் வாழ்விலும் இருந்ததை அறியமுடிகிறது.
பிரான்ஸ்
நாட்டில் ஏற்பட்ட பிரெஞ்சுப் புரட்சி முடியாட்சியை வீழ்த்தி, அடிமைத்தனங்களை அகற்றி, அனைத்து மக்களுக்கும் சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் என்று விடுதலை விழுமியங்களை உலகுக்குப் பறைசாற்றி, அதனடிப்படையில் ஒரு மாற்றுச்சமூகத்தை நிறுவுவதற்கான முயற்சியாக அமைந்தது. பிரெஞ்சுப்
புரட்சியால் திரு அவை அதன் அதிகாரத்தை இழந்து நின்றது. பல
துறவற சபைகளும் முடக்கப்பட்டிருந்தன. தெரேசாவின்
காலத்தில் திரு அவை பல்வேறு அழுத்தங்களிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டெழுந்து கொண்டிருந்தது. இக்காலகட்டத்தில், ஐரோப்பாவில் பகுத்தறிவுச் சிந்தனைகளும் நேர்மறைச் செயல்பாடுகளும் பொருளாதார வளர்ச்சியும் சமயத்தைப் பற்றிய விமர்சனங்களும் வளர்ந்து, அனைத்தையும் அறிவுப்பூர்வமாக அணுகும்போக்கு உருவானது. இத்தகைய சிந்தனையின் தாக்கம் தெரேசாவின் வாழ்விலும் பார்வையிலும் வெளிப்பட்டதை அவருடைய துறவு வாழ்வின் பயணத்தில் நம்மால் உணர முடிகிறது.
கடுமையான
சட்டங்களையும் விதிமுறைகளையும் கடைப்பிடிப்பதே புனிதம் எனக் கருதுபவர்களும், பொறுமையோடு இருப்பது இறைவனுக்கு ஏற்புடையது என நினைப்பவர்களும் அன்றும் இன்றும்
உள்ளனர். ஆனால், தெரேசாவும் அவருடைய தந்தையும் அந்தச் சட்டங்கள், ஒழுங்குகளை மேற்கொள்வதற்கு எடுத்தத் தொடர் முயற்சிகளும், அதன்மூலம் பெற்ற வெற்றிகளும் நம்மை வியக்க வைக்கின்றன. இதன்மூலம் கண்மூடித்தனமாக ஒழுங்குகளைப் பின்பற்றுவதும், அவைகளுக்காக அடங்கிப் போவதும் ஆன்மிகமல்ல; மாறாக, இறை விருப்பத்தைத் தேர்ந்து தெளிவதே சிறந்தது என்பதை நமக்குச் சுட்டிக்காட்டுகிறார்கள்.
உலகை
உருமாற்றும் உன்னதமான பணியை ஆற்ற அழைக்கப்பட்டிருக்கும் துறவியர், இன்றைய காலகட்டத்தில் அப்பணியை ஆற்றுவதற்குச் சிறந்த அமைப்பு, வாழ்க்கைமுறை எது என்பதைத் தேர்ந்து தெளிந்து, அதற்குப் பயன் தராத அமைப்புகளையும் பாரம்பரியங்களையும் புறந்தள்ளி, சரியான இலட்சியங்களை அடைவதற்கான முயற்சிகளை இடைவிடாமல் முன்னெடுக்க நமக்குக் கற்றுத் தருகிறார் தெரேசா.
விவிலிய மையவாழ்வு
கார்மேல்
சபையின் மரபுகளையும், தூயவர்களான அவிலா தெரேசா, சிலுவை யோவான் இவர்களது ஆன்மிகத்தையும், அடைபட்ட கார்மேலில் வாழத்துவங்கிய தெரேசா, திருவிவிலியம் பரவலாக்கப்படாத அக்காலத்திலும் இறைவார்த்தை மீது தீவிர ஆர்வம் கொண்டு இறைவேண்டல் சமயங்களிலும் தியானங்களிலும், ஆன்மிக வாசிப்பு வேளைகளிலும் இறைவார்த்தையை வாசித்து, சிந்தித்துத் தியானித்தார். அதன் விளைவாக, இயேசுவின் வாழ்வும் செயல்பாடுகளும் அவர் வாழ்ந்த சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம் மற்றும் ஏழையர், துன்புறுவோர், கரிசனைக்குரியோர், ஒடுக்கப்பட்டோர் ஆகியோருக்கு இயேசு காட்டிய அன்பு, பரிவு புதிய வெளிச்சங்களையும் விளக்கங்களையும் கொடுத்தன. அதன் மூலமாகப் பல்வேறு வடிவங்களில் சிதறிக்கிடந்த அவருடைய பார்வை கூர்மையாக்கப்பட்டு, தனது வாழ்வைச் சிறந்த முறையில் ஒருங்கிணைக்கப் பெரிதும் துணைபுரிந்தது. அதன்
மூலமாக இறைவார்த்தையை மையப்படுத்திய புதிய பார்வையையும் புதிய வாழ்வையும் தான் பெற்று வாழ்ந்ததோடு, அதனை அன்பின் பாதையாக உலகிற்கும் வழங்கினார்; எனவேதான் தெரேசாவைத் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்கள், ‘அன்பின் அறிவியல் நிபுணர்’ என்கிறார்.
கார்மேலில் தெரேசாவின்
மாதிரி
‘சிறுமலர்’
என உலகமே செல்லமாகக் கொண்டாடும் குழந்தை இயேசுவின் தெரேசா இன்று நாம் வாழும் நவீன உலகத்தின் சவால்களுக்கு அர்த்தமுள்ள, பொருளுள்ள வாழ்வு வாழ இன்றைய துறவிகளுக்கு முன்மாதிரியாக மின்னித் துலங்குகிறார் என்பதை, கார்மேலில் அவர் வாழ்ந்த வாழ்வு நமக்குப் பறைசாற்றுகின்றது.
வெற்றி,
புகழ், பெருமை, சாதனை, பணம் இவற்றின் சோதனைகள் இறையாட்சிப் பணியாளர்களை ஆக்கிரமிக்கும் சமகாலத்தில், அன்பு, எளிமை மற்றும் மாற்றத்திற்குப் பயன்படாத மரபுகளையும் அமைப்புகளையும் சட்டங்களையும் கடந்து செல்லும் தெரேசாவின் துணிவும் மனபலமும் நமக்கெல்லாம் இன்று உந்துசக்தியாகவே உள்ளது.
தான்
வாழும் சூழலில் தன்னோடு துறவு இல்லத்தில் வாழும் தேவையிலிருக்கும் மனிதருக்கு அன்புப் பணியாற்றுவதையே தனது நம்பிக்கை வாழ்வாக ஆக்கிக்கொண்டார் தெரேசா.
குழுமத்தில்
நோயாளர்களைப் பேணும் பணியினைப் பரிவோடும் கனிவோடும் செய்து, அவர்களோடு உரையாடுவதையும் உதவுவதையும் இன்முகத்தோடு விரும்பிச் செய்தார்.
குழுமத்தில்
அவருக்கு ஏற்பட்ட இடையூறுகளையும் கசப்பான துன்பங்களையும் புரிந்துகொள்ளாமையையும் குறைசொற்களையும் குழும மகிழ்வுக்காகப் புன்முறுவலோடு ஏற்றுக்கொண்டு அவற்றை அர்ப்பணித்து, துறவு வாழ்வுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தவர் தூய குழந்தை இயேசுவின் தெரேசா.
குழும
வாழ்வில் உறவுச் சிக்கல்களும் உணர்வுப் பிறழ்வுகளும் சகோதரத் தோழமையும் சுயநலமும் தனிநபர் ஆதிக்கமும் கோலோச்சும் இன்றைய சூழலில், தெரேசா அனைவரையும் அவரவர் இருக்கும் நிலையிலேயே ஏற்று அன்பு செய்து, துன்பம் கொடுத்தவர்களுக்கும் நன்மை செய்து வாழ்ந்த மனநிலை இன்றைய நமது வாழ்வுக்கு உந்துதல். ஏழைகள்
மிகுந்து வாழும் நமது நாட்டுச் சூழலில் துறவு வாழ்வு இன்று பெரும்பாலும் அதற்கு எதிர் சாட்சியாகத் திகழ்கிறது. இந்நிலையில் தெரேசா எளிய வாழ்வும், நலிவுற்றவர்பால் பரிவும், தேவையில் இருப்போருக்கு உதவியும் புரிதலே உண்மையான துறவு எனத் தனது வாழ்வால் உரக்கக் கூறுகிறார்.
நான்கு
சுவர்களுக்குள் அடைபட்டிருந்தாலும், அவரது மனம் தொலைதூரத்தில் இருக்கும் மறைபரப்பு நாடுகளிலேயே நிலைகொண்டிருந்தது. உலக நடப்புகளையும் மறைபரப்புப் பணியாளர்களின் வாழ்வுமுறைகளையும் அறிந்துகொள்வதிலும், அவர்களுடைய தேவைகள், பணிகளின் போக்கு இவைகளைப் பற்றி அறிந்து, கடிதத்தொடர்பு மூலம் உற்சாகப்படுத்துவதும் இறைவேண்டல் செய்வதும் அவருடைய பணி ஆர்வத்தை வெளிப்படுத்தின.
மனிதநேயம்
கொண்ட ஒரு சமூகத்தை வென்றெடுப்பதற்கு தெரேசாவின் மனம் எப்போதும் துடித்துக் கொண்டேயிருந்தது. அதனைச்
செயல்படுத்த தனது பார்வையை விசாலமாக்கி, உலக நாடுகளை உற்றுநோக்கி, தேவையிலிருப்போருக்காக இறைவேண்டல் மற்றும் தோழமை உணர்வை வெளிப்படுத்துதல் போன்ற செயல்பாடுகளால் துறவுக்குப் பொருள் கண்டார்.
மரபுகளையும்
அமைப்புகளையும் சட்டங்களையும் கூர்ந்துநோக்கி காலத்தின் தேவைக்கேற்ப தனது துறவு வாழ்வால் புதிய பார்வையைக் கொடுத்து, அன்பு
வாழ்வுக்கு நமக்கெல்லாம் முன்மாதிரியாக விளங்குகிறார் தெரேசா!