ஓசோன் என்பது ஒரு கிரேக்கச் சொல். இதற்கு ‘நாற்றம் கொண்டது’ என்பது பொருள். ஓசோன் படலத்தை பிரான்சு நாட்டைச் சார்ந்த இயற்பியலாளர்கள் சார்லஸ் ஃபாப்ரி மற்றும் ஹென்றி புயிசன் என்பவர்கள் 1913-ஆம் ஆண்டு கண்டுபிடித்தனர். ஓசோனை அளவிடப் பயன்படுத்தும் கருவியின் பெயர் ‘ஸ்பெக்ட்ரோ போட்டோ மீட்டர்’(Spectro photometer). இதைக் கண்டுபிடித்தவர் இங்கிலாந்து வானியல் ஆய்வாளர் டோப்சன் என்பவராவார்.
ஓசோன்
படலம் படை மண்டலத்தில் பூமியின் மேற்பரப்பிலிருந்து 15-35 கி.மீ. தூரத்தில்
பூமியை இளம் நீலநிற குடைபோல் அல்லது ஒரு வலைபோல் சூழ்ந்து நின்று காப்பாற்றுகிறது. எனவேதான், ஐ.நா. சபை
ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 16-ஆம் நாளை அகில உலக ஓசோன் படல நாளாகக் கொண்டாடுகிறது.
ஓசோன்
படலம் வளிமண்டலத்திலுள்ள படை மண்டலத்தில் (Stratosphere) உருவாகிறது.
படை மண்டலம் பூமியின் மேற்பரப்பிலிருந்து ஏறத்தாழ 10-50 கி.மீ. தூரத்திலுள்ளது.
ஓசோன் மூன்று ஆக்ஸிஜன் அணுக்கள் (O3)
சேர்ந்த கலவை ஆகும். இது கதிரவனின் ஒளியிலிருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்களைத் (UV) தடுத்து
நிறுத்தி, பூமியில் உள்ள உயிரினங்கள் நோயின்றி வாழத் துணைபுரிகிறது.
ஓசோன் ஓட்டை
என்றால்
என்ன?
உண்மையில்
ஓசோன் படலத்தில் ஓட்டையோ அல்லது துளையோ ஏற்படுவது இல்லை. ஓசோன் படலத்தின் தடிமன் குறைந்து மெலிந்து போவதைத்தான் ‘ஓசோன் ஓட்டை’ என்று அழைக்கிறார்கள். குளோரோ ஃப்ளோரோ கார்பன் (CFC) வளிமண்டலத்திலுள்ள
படை மண்டலத்தைச் சென்றடைகிறது. இது அங்கேயுள்ள புற ஊதாக்கதிர்களால் தாக்கப்படுகிறது. இதனால் மிக அதிகமாகக் குளோரின் வாயுவும், வேறு ஒரு சில வாயுக்களும் உற்பத்தியாகின்றன. இந்தக் குளோரின் வாயு ஓசோன் படலத்தைத் தாக்குவதால், ஓசோன் படலம் தனது இயல்பான தடிமனை இழந்து மெலிந்துவிடுகிறது. இதனைத்தான் ஓசோன் ஓட்டை அல்லது துளை (Ozone depletion)
என்கிறோம். இவ்வாறு மெலிந்து போவதால் ஓசோன் படலத்தால் புற ஊதாக்கதிர்களை முழுமையாகத் தடுக்கவோ அல்லது உறிஞ்சவோ முடிவதில்லை. புற ஊதாக்கதிர்கள் பூமியை அடைந்து உயிரினங்களுக்கும் தாவரங்களுக்கும் பல தீமைகளை விளைவிக்கின்றன.
இதில் ஒரு விந்தை என்னவென்றால், குளோரோ ஃப்ளோரோ கார்பனை மரங்களும் தாவரங்களும் சுவாசிப்பதில்லை; மாறாக, மனிதர்கள் சுவாசிக்கின்றார்கள்; விலங்குகளும் சுவாசிக்கின்றன. மேலும், இந்த வாயு தோலில் உள்ள துளைகள் வழியாகவும் உடலுக்குள் நுழைந்து விடுகிறது. இதனால் நரம்பு மண்டலப் பாதிப்பு, இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படுகின்றன.
புற ஊதாக்கதிர்களால்
ஏற்படும்
தீமைகள்
தோல்
புற்றுநோய், தோல் வறட்சி, தோல் சுருக்கம், வியர்க்குரு ஏற்படுதல், கண்பார்வை மங்குதல், கண் எரிச்சல், கண்ணில் புரை ஏறுதல், கண்ணில் நீர் வறட்சி போன்றவை ஏற்படுகின்றன. புற ஊதாக்கதிர்களின் தாக்குதலால் கடல்வாழ் உயிரினங்கள், கடலின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகின்றன. பூமியில் வாழும் விலங்குகள், மரங்கள், செடி-கொடிகள் அனைத்துமே பாதிக்கப்படுகின்றன. பூமியின் வெப்பம் அதிகரிக்கின்றது. இத்தனை தீமைகளையும் தவிர்க்க வேண்டுமென்றால், ஓசோனில் ஏற்படும் பாதிப்பைச் சரிசெய்ய வேண்டும்.
மாண்ட்ரீல் ஒப்பந்தம்
குளிர்சாதனப்பெட்டிகள்,
குளிரூட்டிகள், ஆழ் உறைப்பெட்டிகள், ஹேர் ஸ்பிரே கேன்கள், தொழிற்சாலைகள் போன்றவைகளிலிருந்து வெளியாகும் குளோரோ ஃப்ளோரோ கார்பன் என்ற வாயுதான் ஓசோன் படலத்தை வலுவிழக்கச் செய்கின்றன என்பதை அறிவியலாளர்கள் கண்டுபிடித்தனர். ஆகவே, ஓசோன் படலப் பாதிப்பை ஏற்படுத்தும் பொருள்களை நீக்குவதற்கான அனைத்துலக உடன்படிக்கை 1987-ஆம் ஆண்டு செப்டம்பர் 16-ஆம் நாள் ஆஸ்திரேலியாவிலுள்ள மாண்ட்ரீல் நகரில் ஏற்படுத்தப்பட்டது. எனவேதான், செப்டம்பர் 16-ஆம் நாள் அனைத்துலக ஓசோன் படல நாளாக நினைவுகூரப்படுகிறது. இந்த உடன்படிக்கையால் குளோரோ ஃப்ளோரோ கார்பன் உற்பத்தி 15 ஆண்டுகளுக்குள் முழுமையாக நிறுத்தப்பட்டது. புதிய தொழில்நுட்பம் கொண்ட குளர்சாதனப் பெட்டிகள் தயாரிக்கப்பட்டன. எனினும், ஏற்கெனவே ஓசோன் படலத்தில் தங்கியிருக்கும் குளோரோ ஃப்ளோரோ கார்பன் முற்றிலும் அகற்றப்பட 2066-ஆம் ஆண்டுவரை ஆகலாம். ஆதலால், புதிய விடியல் வரும்வரை காத்திருப் போம்! இனிமேலும் குளோரோ ஃப்ளோரோ கார்பன் உற்பத்தி ஆகாமலிருக்க விழித்திருப்போம்!
2026 - தமிழ்நாடு தேர்தல் களம் எப்படி இருக்க வேண்டும்? சமூக நீதியா? மனு நீதியா? சமத்துவமா? சனாதனமா? மதச்சார்பின்மையா? மதவெறியா? வெறுப்பு அரசியலா? சகிப்பு அரசியலா? மக்களா? மதமா? எப்படி இருக்கவேண்டும்?
மையக்கரு
மறைந்துபோனது. தமிழ்நாடு அரசியல் களம் மக்களை மறந்து, ‘யார் முதல்வர்?’ என்ற வாக்கு அரசியல், முதல்வர் பதவி எனும் வெறி அரசியல் நடக்கிறது. ஒரு புதிய கட்சி ‘மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர்’
என முழக்கமிடுகிறது. காமெடி நடிகர் கவுண்டமணி கூறுவதுபோல ‘அந்தப் பெட்ரோமாக்ஸ் லைட்டை’ மட்டுமே கேட்கிறது. அந்த நான்காவது அணி ஆட்சியில், அதிகாரத்தில் பங்கு என ஆடித் தள்ளுபடி
ஆஃபர் கொடுத்தும், லெட்டர்பேடு கட்சிகள்கூட அவர்களை நோக்கி நகரவில்லை. தோற்றுத் தோற்றுப் பயிற்சி எடுக்கும் மூன்றாவது அணியின் முதல்வர் கனவு வேட்பாளரும் பேசிப் பேசியே மக்களை ஈர்க்கிறார். நேருக்கு நேர் போட்டியிடும் முதல் இரண்டு அணிகளை மட்டுமே இங்கு
நாம் பார்ப்போம். ஆட்டத்தில் இல்லாதவர்கள் குறித்து நமக்கு என்ன கவலை?
ஆளும்
தி.மு.க. முழுவதும்
மக்கள் ஆதரவைத் தக்க வைத்துள்ளதா? இல்லை! 2021 - தி.மு.க.
தேர்தல் வாக்குறுதிகளில் சிலவற்றைச் செய்யவில்லை என்பதே உண்மை. தமிழ்நாடு அரசு அதிகாரத்தில் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் அதிகம் என்பதால் அவர்கள் அரசுக்குக் கெட்ட பெயர் வர என்ன செய்ய
வேண்டுமோ, அனைத்தையும் செய்து விட்டார்கள். முதல்வர் இதை உணரும்போது தலைக்கு மேல் வெள்ளம்
போய்விட்டது. ‘சாட்டையைச் சுழற்றுவாரா முதல்வர்?’ என ‘நம் வாழ்வு’ இதழில் அட்டைப்படக் கட்டுரையும் வெளியிட்டிருந்தோம்.
‘உங்களுடன் ஸ்டாலின்’
என அரசுத் துறைகள் மக்கள் வாழ்விடங்களில் முகாமிட்டு, ஆட்சியின் இறுதிநேர மக்கள்
நலப்பணிகள், அடிப்படைத் தேவைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. திட்டப் பணிகளை மாவட்டந்தோறும் முதல்வரே நேரில் சென்று விரைவுபடுத்துகிறார். இடையே அப்பகுதியில் ‘ஓரணியில் தமிழ்நாடு’
என மக்களைச் சந்தித்து ‘ரோடு ஷோ’ நடத்துகிறார். ஆளும் கட்சி என்பதால் உள்கட்சி பூசல்கள்
அதிகம்; அதைக் கட்டுப்படுத்த தி.மு.க.
நிர்வாகிகளை முகத்திற்கு முகம் பார்க்கும் பணியும் தேர்தல் பணியில் உள்ளடக்கம்.
ஓராண்டுக்கு
முன்பே மாவட்டப் பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு வாக்குச் சாவடி முகவர்கள் என ஆளுங்கட்சி
தேர்தலுக்குப்
பரபரப்பாகி விட்டது. சில முக்கிய நிர்வாகிகளுக்கு ‘நீங்கள் தான் தொகுதி வேட்பாளர், தொகுதியில் பணியைப் பாருங்கள்’
என அறிவுறுத்தல் தரப்பட்டுள்ளன. அவ்வேட்பாளர்கள் இப்போதே களத்தில் உள்ளனர்.
தமிழ்நாட்டில்
‘இந்தியா’ கூட்டணி
கட்டமைப்பாக இருக்க முதல்வர் ஸ்டாலின் பல சமரசங்களுக்கு உட்படுகிறார்;
கூட்டணி கட்சிகளின் குரல்களுக்குக் காதுகொடுக்கிறார். முதல்வர் ஸ்டாலினை ஜூலை
கடைசி வாரம், ஆகஸ்டு முதல் வாரங்களில் சந்தித்த தே.மு.தி.க. பிரேமலதா, முன்னாள்
முதல்வர் பன்னீர்செல்வம், தொலைப்பேசியில் பேசிய மருத்துவர் இராமதாஸ் என வரிசை நீள்கிறது.
ஸ்டாலின் அ.தி.மு.க, பா.ச.க, த.வெ.க. தவிர்த்த அனைவரோடும்
இணக்கம் காட்டுகிறார். 2026 - சட்டசபை சீட்டுகளோடு, 2026 - மாநிலங்களவைச் சீட்டுகளையும் பகிர்ந்து அளித்து, புதிய கட்சிகளையும் அரவணைப்பார் என்பது நடப்பு அரசியல்.
கிராமங்களில்
‘அவர் பெரிய தலைக்கட்டு’ என
அசைக்கமுடியாத பெரும் மனிதர்களைச் சிலாகிப்பார்கள். தமிழ்நாடு அரசியலில் ஸ்டாலின் பெரிய தலைக்கட்டு என்பது தொடர்ந்து உறுதியாகிறது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஒரு நேர்காணலில் கூறுகிறார்: “ஆளுங்கட்சியின் அதிகாரப் பலம், பணபலத்தை எதிர்த்து ஒரு வலுவான கூட்டணி அமைப்பது பெரும் சவாலாக உள்ளது.” உண்மை நிலையும் அவ்வாறே உள்ளது. அ.தி.மு.க.-வை நோக்கி லெட்டர் பேடு கட்சிகள் கூட நகரவில்லை.
எடப்பாடி
பழனிசாமி அவர்களைப் பொறுத்தவரை இது ‘வாழ்வா? சாவா?’ என்ற நிலைத் தேர்தல். வென்றாக வேண்டிய கட்டாயம் உள்ளது. பா.ச.க.-வைப் பொறுத்தவரை 2026-இல் தமிழ்நாட்டில் தேசிய சனநாயகக் கூட்டணி வெல்லாவிடிலும் சரி, அ.தி.மு.க. தோற்கவேண்டும். தொடர்ந்து
தோற்றால் அ.தி.மு.க. தலைவர்களை ஒவ்வொருவராக
இழுத்து அ.தி.மு.க.வை அழிக்கவேண்டும்.
பா.ச.க. கட்சி
அ.தி. மு.க.வுக்கு
மாற்றாக, தமிழ்நாட்டில் தாமரையாக மலர வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செயல்திட்டம்.
அ.தி.மு.க.
கட்சி புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களாலும்,
புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்களாலும் அசைக்க முடியாத சக்தியாகத் திகழ்ந்தது. அது மேற்கு மண்டலக் கட்சியாகவும், தன் சாதிக் கட்சியாகவும் மாற்றியதே பத்து தோல்வி பழனிசாமியின் ஒரே வாழ்நாள் சாதனை. எடப்பாடி பழனிசாமி புரட்சித்தமிழரின் எழுச்சிப் பயணம் எனப் பேருந்தில் மக்கள் சந்திப்புப் பயணம் நடத்துகிறார். 2 கோடி மதிப்புள்ள அந்த உல்லாசப் பேருந்தைச் ‘சுந்தரா டிராவல்ஸ்’
எனக் கிண்டலடிக்கும் தி.மு.க.வின் விமர்சனம் தவறானது; கண்டிக்கத்தக்கது.
எடப்பாடியாரின்
பிரச்சாரத்தில் தடித்த வார்த்தைகள், முதல்வரை ஒருமையில் பேசுவது, ஆதாரமற்றுப் பேசுவது, முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவது எனக் களமே அதகளமானது. தினமலர், தந்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றி, சாணக்யா சேனல் வழி, ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரம் செய்யும் ரங்க ராஜ் பாண்டே “வெகுமக்கள் இரசிக்கக்கூடியதாக உள்ளது” என்கிறார். அதில் சில சான்றுகளைப் பார்ப்போம்.
எடப்பாடியாரின்
முதல்கட்டப் பிரச்சாரம் மேட்டுப்பாளையத்தில் தொடங்கியது. அங்குப் பேசுகிறார்: “பொதுவுடைமைக் கட்சிகள் அழிந்து விட்டன.” பிரச்சாரத்தின் நடுவே சிதம்பரத்தில் பேசிய பழனிசாமி, “பொதுவுடைமைக் கட்சிகளை இரத்தினக் கம்பளம் விரித்துக் கூட்டணிக்கு அழைக்கிறேன்” என்றார்.
அடிப்படை அரசியல் அறனுடைய பொதுவுடமைக் கட்சிகள் மதவாத சக்திகள் இருக்கும் இடத்தில், எங்களுக்கு வேலை இல்லை என எடப்பாடியாரின் அழைப்பை
ஏற்க மறுத்தன.
திருவாரூரில்
பேசிய எடப்பாடி “பொதுவுடைமைக் கட்சிகள் தி.மு.க.விடம் காசு வாங்கிக் கொண்டு பேசுகிறார்கள்” என,
தான் சுட்ட தோசையைத் தானே கருகத் திருப்பிப் போட்டார். பா.ம.க.வைக் கூட்டணிக்கு அழைத்தார். அன்புமணி இராமதாஸ் அவர்கள் “ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்றால் கூட்டணி பேசலாம்” என்றார். எடப்பாடியார், “ஏங்க, எப்ப பா.ம.க.வைக் கூட்டணிக்குக் கூப்பிட்டேன்?” என்று ஜகா
வாங்கினார். எடப்பாடியாரிடமும், தன் தந்தை இராமதாஸ் அவர்களிடமும் கோபித்துக்கொண்டு, அன்புமணி இராமதாஸ், சௌமியா மேடமைக் கூட்டிக்கொண்டு ‘உரிமை மீட்க, தலைமுறை காக்க...’ சுற்றுப்பயணம் புறப்பட்டுவிட்டார்.
“ஒரு பிரமாண்ட கட்சி எங்கள் கூட்டணிக்கு வரும்” என்றார் எடப்பாடி பழனிசாமி. “த.வெ. க.வா?” என்றால், “பொறுத்துப் பாருங்கள்”
என்றார். அதற்குத் த.வெ.க.வின் தேர்தல் பிரச்சார மேலாண்மைச் செயலாளர் ஆதவ் அர்ச்சுனா அழகாய் பதில் கூறினார்: “அ.தி.மு.க. தொண்டர்கள் த.வெ.க.வுக்கு
வந்துவிட்டார்கள்; ஆகவே, கூட்டணி வைக்க வேண்டிய அவசியமே இல்லை.” இப்படியே எல்லாக் கதவுகளும் பூட்டப்பட்டதால் தட்ட இடமின்றிப் பயணிக்கும் நிலைக்கு எடப்பாடி பழனிசாமி தள்ளப்பட்டுள்ளார். பா.ச.க.
எனும் கூடா நட்பு கேடாய் முடிந்துள்ளது.
2024 - மக்களவைத் தேர்தலில்
இருந்த எஸ்.டி.பி.ஐ.
மற்றும் தே.மு.தி.க. கட்சிகள் தற்போது
அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் இல்லை
என்கிறார்கள். தே.மு.தி.க . பிரேமலதா, ‘உள்ளம் தேடி, இல்லம் நாடி’ என்ற பிரச்சாரத்தில் தேர்தல் களம் காண்கிறார். ‘தே.மு.தி.க. கூட்டணி பற்றி
சனவரி 2026-இல் அறிவிப்போம்’ எனக்
கூறி தன் பேர வலிமையை அதிகப்படுத்துகிறார்.
2026-ஆம் ஆண்டு
தொடங்கியபின் புதிய கூட்டணிகள் உருவாகும். திரைமறைவு அரசியல்கள் வெளிச்சமாகும். சாதிவாரி, மதவாரி, மொழிவாரி வாக்குகளைக் குறிவைத்த வாக்கு அரசியலில் மக்களுக்கான அரசியலை அடையாளம் காண்பதே சிறுபான்மை மக்களின் அதிகாரமாகும்.
விண்வெளிக் காலம் (Space Age)
விண்வெளிக்
காலம் அதன் கால்பதிப்பை ஏற்படுத்தி, மெல்ல உறுதி செய்து வருகிறதை கடந்த 75 ஆண்டுகளின் நிகழ்வுகளிலிருந்தே தெரிந்துகொள்ளலாம். பூமியிலிருந்து செயற்கைக்கோள்கள் பல காரணங்களுக்காகச் செலுத்தப்படுகின்றன. ஆனால், அவை
அனைத்தும் செயலிலிருப்பதில்லை. சில அதன் ஆயுள் காலத்தைக் கடந்தவையாகவும், வேறு சில காரணங்களினால் முழுமையாகவோ, உடைப்பட்டோ, உதிரிப்பாகங்களாகவோ ஒரு வளையம் போன்று பூமியைச் சுற்றிப் படர்ந்து வருகிறது; நாளுக்கு நாள் அதிகரித்தும் வருகிறது.
இது
பூமியின் காலநிலை, ஓசோன் படலம் மற்றும் பூமியில் வாழ்வதற்கான சூழல் என்பவைகளுக்கு ஏற்புடைய ஸ்டராடோஸ்பியரைப் பாதிப்படையச் செய்கிறது. இப்போது விண்வெளிக்குச் செலுத்தப்படும் செயற்கைக்கோள்கள், விண்வெளி ஊர்திகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. காற்றில் இயல்பாக ஏரோசோல் என்ற மாசு திடமாகவோ அல்லது திரவமாகவோ கலந்திருக்கிறது.
பூமியிலிருந்து 10 கி.மீ. உயரத்தில்
பறந்த ஒரு விமானத்தின் முன்பகுதியை ஆராய்ந்து பார்த்ததில் கணிசமான அளவு இப்படலம் கலந்திருப்பது கண்டறியப்பட்டது. இதனை மேலும் ஆராய்ந்தபோது, இவை விண்வெளி ஊர்திகளின் உலோகம் என்றும் தெரியவந்தது.
ஸ்டராடோஸ்பியரில்,
அதாவது முதல் மண்டலத்தில் எப்போதாவதுதான் விமானங்கள் செல்ல நேரிடும். இந்த உலோக ஊடுருவல் இதில் இவ்வளவு என்றால், இன்னும் மேலே உள்ள அடுக்குகளின் நிலையைப் பற்றி விஞ்ஞானிகள் சிந்திக்கின்றனர். 2023-ஆம் ஆண்டு மட்டும் ஏறக்குறைய 2900 செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டன. இதனையும் சேர்த்து 14,000 செயற்கைக்கோள்கள் பூமியைச் சுற்றிவருகின்றன. இவைகளில் 80% செய்தித் தொடர்புக்கோள்கள் என்றும், இவைகளில் பெரும்பாலானவை வணிகம் சம்பந்தப்பட்ட கோள்கள் என்றும் கூறப்படுகிறது.
மற்றொரு
செய்தி என்னவென்றால், 3,500 கோள்கள் செயலிழந்தவைகளாகவும், ஏற்கெனவே நெருக்கமாகச் சுற்றிக்கொண்டிருக்கும் கோள்களோடு மோதல், தானாக வெடித்தல், காலாவதியானவை என்று 120 மில்லியன் உடைச்சல்கள் வலம் வந்துகொண்டிருக்கின்றன. இதற்கான தற்காப்பு வேண்டுமென்றால், கோள்கள் பின்னணியை நாடுகள் பகிர்ந்துகொள்ள வேண்டுமென்கிறது ஐ.நா. சபை.
பூமிக்கு அருகில் (Low Earth Orbit - LEO) உள்ள
கீழ் சுற்றுப் பகுதியில் ஆயிரக்கணக்கில் (85%) செயலிழந்த செயற்கைக்கோள்கள்
இருக்கின்றன.
ஏறக்குறைய
22,000 மைல்கள் பூமிக்கு மேலே (Geosynchronous Orbit) உள்ள
சுற்றில் செய்தித்தொடர்பு, காலநிலை இராணுவத் (Missile Defence) தேவைகளுக்குச்
சில செயற்கைக்கோள்கள் சுற்றி வருகின்றன என்றும் கூறப்படுகிறது. செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை அதிகரிப்பும், அவைகளின் சுற்றும், இவைகளுக்கிடையே ஏற்படும் மோதல்களும் விண்வெளிக் கழிவுகளை உருவாக்கி வருகின்றன என்பதில் சந்தேகம் இல்லை. இந்நிலையில், 2030-க்குள் 50,000 செயற்கைக்கோள்கள் விண்வெளிச் சுற்றில் சேர்ந்துகொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வளிமண்டல குப்பைகளைச்
சேர்ப்பது
யார்?
(Space Debris)
பூமியைச்
சுற்றி ஆயிரக்கணக்கில் செயற்கைக்கோள்கள் வலம் வந்துகொண்டிருப்பதாலும், உலகின் பல நாடுகள் தொடர்ந்து
செயற்கைக்கோள்களைச் செலுத்துவதாலும் நாளுக்குநாள் இவைகளின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே போகிறது. பொதுவாக, செயற்கைக்கோள்களில் சில செயலிழந்தவைகளாக உள்ளன (Malfunctioning). சில
கொடிய காரணங்களுக்கான (nefarious)
பின்னணி கொண்டும் உள்ளன. இவைகளினால் மற்ற கோள்களுக்குத் தீங்கு உண்டாவது மட்டுமன்றி, ஒன்றோடொன்று மோதி அவைகளின் உடைப்புகள் வானில் சுற்றும் நிலையும் ஏற்படுகிறது. சில வழிதப்பி பூமியின் ஈர்ப்புச் சுற்றில் வருவது இயல்பு.
ஐரோப்பிய
விண்வெளி ஆய்வு மையத்தின் அறிக்கைப்படி, இன்றளவில் 40,000-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள் உதிரிகள் (4” மேல்), கட்டுப்பாடில்லாமல் விண்வெளியில் சுற்றி வருகின்றன என்று கூறுகிறது. சில விண்ணில் எரிந்து பூமியில் விழும்போது ஓசோன் மண்டலத்தைத் தாக்கும் அலுமினியம் ஆக்சைட் என்ற இரசாயனப் பொருளை உருவாக்குகிறது.
15 ஆண்டுகளுக்குமுன்
சில ஆயிரம் செயற்கைக்கோள்கள் என்பதாக இருந்த எண்ணிக்கை, இன்று பலமடங்கு அதிகரித்துவிட்டதாக ஓர் ஆய்வு கூறுகிறது. ஆயிரக்கணக்கான சிறிய செயற்கைக்கோள்கள் இன்று இணையதளத் தேவைக்குச் செலுத்தப்பட்டு வருவதால் இதன் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் வளர்ந்துகொண்டே இருக்கிறது. இவைகளின் ஆயுள் காலம் முடிந்தபின் செயலிழந்துதானே சுற்றி வருவதைத் தவிர வேறு வழியில்லை.
எவ்வாறு
கார்பன் வெளியேற்றம் இன்று உலகிற்குத் தீங்கு விளைவிக்கும் சக்தியாக மாறியிருக்கிறதோ, அப்படி வருங்காலத்தில் செயற்கைக்கோள்களின் உதிரிப்பாகங்கள் பூமிக்கு ஒரு தீய சக்தியாக மாறிட வாய்ப்பிருக்கிறது.
விண்வெளி ஆராய்ச்சியில்
ஏ.ஐ.-யின்
பங்கு
ஏ.ஐ. மனித அறிவாற்றலைக்
கற்கும் இயந்திரம் (Machine Learning - ML) வழியாகத்
தரவுகளைத் தன்னிச்சையாக, சுயமாக ஆய்ந்து நகலி செய்யும் திறன்பெற்றது. இயந்திரங்கள் தானாகப் பயின்றுகொள்ள அல்கோரிதம் வழிமுறை மூலம் கற்கும் இயந்திரம் பயிற்சி அளிக்கிறது. அல்கோரிதம் ஏராளமானத் தரவுகளை உள்வாங்கி, மேம்படுத்திக் கொள்கிறது.
இத்தொழில்நுட்பத்தைப்
பயன்படுத்தி ஓட்டு நரில்லா மோட்டார் முதல் பூமியைச் சுற்றித் தானாக இயங்கிக்கொள்ளும் வானூர்தி வரை ஏ.ஐ. செயலாற்றுகிறது.
துல்லியமாக ஏற்புடையதை மட்டும் இலக்காகக் கொண்டு செயலாற்றுவதால் நேரத்தையும் செலவீனத்தையும் வெகுவாகக் குறைக்கிறது. இத்தொழில்நுட்பம் செயற்கைக்கோள்களைக் கண்காணிப்பது, கட்டுப்படுத்துவது போன்ற பணிகளில் ஏ.ஐ. உதவியாக
உள்ளது. அது மட்டுமன்றி, வானூர்திகள் தானாக இயங்க விண்பாதையில் தடைகளைத் தவிர்த்துத் தன்னிச்சையாகப் பயணிப்பது என்ற இயக்கங்களிலும் பங்காற்றுகிறது.
ஏவுகணை
தொழில்நுட்பத்தில் குறிப்பாக, ஏவுகணை எரிபொருள் நிரப்பும் முறையிலும் ஏ.ஐ. பயன்பாட்டிலுள்ளது.
இப்போதிருக்கும் நெருக்கமான செயற்கைக்கோள்கள் வட்டச்சுற்றில் இன்னும் பல கோள்களை அமர்த்த
கையாளும் திறன் மற்றும் இதுவரை கண்டறியப்படாத கிரகங்களை அடையாளப்படுத்துதல், விண்வெளி மண்டலங்களைப் படம் (Galaxy mapping)
பிடித்தல் போன்ற பிரிவுகளிலும் ஏ.ஐ.யின்
செயலாற்றல் வியக்கும்படியாக உள்ளது.
(தொடரும்....)
செந்தில்நாதன் அவன் பெயர். அவன் ஓர் ஆட்டு இடையன். அவனை எல்லாரும் ‘செந்தில்’ என்றே அழைப்பர். செந்தில் அந்தக் கறுப்பு நிற ஆட்டுக்குட்டியை விட்டு எப்போதும் பிரிவதேயில்லை. எப்போதும் அதைத் தன் மார்பிலும் மடியிலும் சுமந்து திரிந்தான். எத்தனையோ ஆடுகளை அவன் ஓட்டிச்சென்றாலும், அந்த ஆட்டுக்குட்டி மட்டும் அவன் கண்பார்வையிலேயே இருக்கும். சில மனிதர்களை நமக்கு ஏன் பிடிக்கும் என்று நாம் சொல்ல முடியாததுபோல, அந்த ஆட்டுக்குட்டி ஏன் அவனுக்குப் பிடித்துப்போனது என்று அவனால் சொல்ல முடியவில்லை. அதற்கு ‘அம்மூ’ என்று பெயரிட்டான்.
அந்தக்
கூட்டத்திலிருந்த நாற்பத்திரெண்டு ஆடுகளில் வேறு எந்த ஆட்டிற்கும் அவன் பெயர் வைத்ததில்லை. செந்திலுக்குப் பல ஆண்டுகளாக ஓர்
ஆட்டுக்குட்டி சொந்தமாக வளர்க்கவேண்டும் என்ற ஆசை இருந்தது. ‘இந்தமுறை வூடுப் போகும்போது எப்படியாவது எசமானிடம் சொல்லி இந்த அம்மூவ வீட்டுக்கு இட்டுச் செல்லணும். அத புள்ள மாதிரி
வளக்கணும்’ என்று
செந்தில் எண்ணிக் கொண்டான்.
செந்தில்
ஒரு மேய்ப்பன் அவ்வளவுதான்; அந்த நாற்பத்திரெண்டு ஆடுகளின் உரிமையாளன் அல்ல. பரம்பரைப் பரம்பரையாக ஆடு மேய்ப்பது அவன் தொழில் என்றாகிப்போனதால், வேறு எந்தத் தொழிலையும் பற்றி அவன் சிந்தித்ததே இல்லை.
மூன்று
ஆண்டுகளுக்கு முன்பு தேவநேசன் என்பவரின் செம்மறி ஆட்டு மந்தையை மேய்த்து வந்தான். இப்போது கவுண்டமணி என்பவரின் வெள்ளாடுகளை மேய்த்து வருகிறான். வாரத்திற்கு ஒரு முறை தன் முதலாளியிடம் எல்லா ஆடுகளையும் ஓட்டிச்சென்று எண்ணிக்கை சரியாக இருக்கிறதா? என்பதை உறுதி செய்யவேண்டும். முதலாளி கவுண்டமணி மிகவும் கோபக்காரர். ஆடுகளின் எண்ணிக்கை குறைந்தால் அவ்வளவுதான். ஏற்கெனவே கவுண்டமணியிடம் வேலை பார்த்த பொத்தன் என்பவன் ஆடு ஒன்றைக் களவாடிவிட்டு ‘ஆடு வழி தவறிடிச்சு’ என்று
நாடகமாடி கையும் களவுமாகப் பிடிபட்டதும், முதலாளியின் செருப்பு பிய்ந்து பொத்தனின் கன்னம் பழுத்தக் கதையைப் பலர் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறான் செந்தில். அதனால் ‘இந்தக் குட்டி ஆடு அம்மூவைக் கூலியாக எப்படிக் கேட்பது? இல்லை அம்மூவை ஒளித்து வைத்துவிட்டு தொலைந்து போனது என்று சொல்லிவிடலாமா?’ பயம் ஒருபுறமும், தயக்கம் மறுபுறமும் ஆட்டின் இரண்டு கூரியக் கொம்பாக மார்பில் பாய்ந்து செந்திலின் இதயத் துடிப்பை அதிகரித்தது.
கவுண்டமணி
ஐயா கைலி ஒன்றைக் கட்டிக் கொண்டு திறந்த மேனியாய் அந்த மச்சு வீட்டின் வெளியே வந்தார். ‘என்னடே செந்தில், ஆடுகளெல்லாம் நோஞ்சானாய் போச்சு? புல்லு, தண்ணி காட்டுறியாடே?’ என்று கேட்டபடி மடியில் மடித்து வைக்கப்பட்டிருந்த மூக்குப்பொடி டப்பாவைக் கையில் எடுத்தார். மூக்குப்பொடியை மூக்கில் வைத்து வேகமாக உறிஞ்சிக்கொண்டே ஆடுகளை எண்ண, அதனருகிலே வந்தார். எப்படியாவது அம்மூவைக் கேட்டு வாங்கிடவேண்டும் என்ற எண்ணத்தில் சரியான வார்த்தைக்காகத் திணறினான்.
‘ஐயா!’ என்று தொடங்கும்போது வாய்க்கு வந்த அந்த வார்த்தை வெளியே வராமல் தொண்டைக் குழிக்குள்ளேயே வழுக்கி விழுந்தது. பலமுறை தனியாக இருக்கும்போதெல்லாம் எப்படி ஆட்டுக்குட்டி அம்மூவை முதலாளியிடம் பேசிப்பெறுவது என்பதைப் பல கோணத்தில் பேசி
பயிற்சி எடுத்திருந்தும், அவர் முன்னால் அவனுக்கு வார்த்தைகள் வசப்படவில்லை. ஆடு மேய்ப்பவன் அத மேய்க்கணுமே தவிர,
சொந்தம் கொண்டாடக்கூடாது என்பது வைக்கப்படாத விதி போலும்.
தைரியத்தை
வரவழைத்துக் கொண்டு ‘ஐயா’ என்று தொடங்கும்போதே, “டேய் செந்திலு! என்னடா இந்த ஆட்டுக்குட்டி மட்டும் வடிவா சதையா இருக்கு?”
“ஐயா! இது புதுகுட்டிங்க. கொஞ்சம் நோய்ங்க. முரட்டு வேறு பிடிக்குதுங்க. நான் வேணும்ணா அத எடுத்துக்கட்டுமா?’ என்று தயக்கத்தோடு
மூஞ்சில் வெளிப்பட்ட வேர்வையைத் துடைத்துக்கொண்டே சொல்ல நினைக்கும்போதே, “என் மவளும் அவ பிள்ளையளும் டவுணுலயிருந்து
லீவுக்கு வாராங்க, அவங்களுக்குக் கறி சமச்சிப்போடணும். இந்த ஆட்ட மட்டும் விட்டுட்டு மத்தத ஓட்டிக்கிட்டுப்போடே” என்றார்
கவுண்டமணி ஐயா.
செந்திலுக்குத்
தூக்கிவாரிப்போட்டது.
‘எப்படியாவது இந்த வருசமாவது ஐயாகிட்டப்பேசி. ஓர் ஆட்ட வூட்ல வைச்சி புள்ளையா வளக்கலாமுணு பார்த்தா... இப்படி ஆயிடுச்சே’
என்று எண்ணி வருத்தத்தோடே நாற்பத்தியொரு ஆடுகளோடு அடுத்த வார மேய்ச்சலுக்குத் தயாரானான் செந்தில்.
இரண்டு
மாதங்கள் கழித்து, தன் கிடையிலிருந்த சினையாட்டில் ஒன்று ஒரே ஒரு குட்டி ஈன்றது. இந்தத் தடவையாவது இந்த ஆட்டுக்குட்டிய முதலாளியிடம் சொல்லி நம்ம வூட்டுக்குக் கொணர்ந்திடணும்’ என்ற
எண்ணத்தோடே அந்த ஆட்டுக்குட்டியை எடுத்து தன் மடியில் வைத்து அதற்கு ‘அம்மூ’ என்று பெயரிட்டான். இது இந்த மூன்று ஆண்டுகளில் ‘அம்மூ’ என்று பெயர் பெறும் ஐந்தாவது ஆட்டுக்குட்டி.
எந்தவகை
ஆடுகள் கொடுக்கப்பட்டாலும், அவ்வகை ஆடுகளைக் கேள்வி கேட்காமல் மேய்த்துத் தரும் செந்திலைப்போல, கேள்வி கேட்காமல் இக்காலகட்டத்தில் அதிகமாக நுகரப்படுவது ‘OTT’ (Over-The-Top) தளங்கள் எனலாம். இன்றைய காலத்தில் இணைய உலகில் அதிகமாகப் பேசு பொருளாக மாறியிருப்பது நெட்ஃப்ளிக்ஸ் (Netflix), அமேசான்
பிரைம் வீடியோ (Amazon Prime viedo), டிஸ்னி
பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney +Hotstar) போன்ற
OTT தளங்களே
ஆகும். உலகத் திரைப்படங்களிலிருந்து இணையத் தொடர்கள் (Web-series)
மற்றும் பல்சுவை நிகழ்ச்சிகள் வரை அனைத்தையும் விரும்பிப் பார்க்கும் தளமாக அது விளங்குகிறது. பல ஆண்டுகளாகக் கேபிள்
டிவி பார்த்துக் கொண்டிருந்தவர்கள் குறிப்பாக, இளைய தலைமுறையினர் இந்தத் தளங்களையே விரும்புகின்றனர்.
செயற்கைக்கோள்
ஒளிபரப்பு (satellite
transmission) மற்றும் கேபிள் வழி ஒளிபரப்பு (cable
transmission) முறைமைகள் இன்று மாற்றம் கண்டுள்ளதை, ‘காரட் கட்டிங்’ (Cord-cutting)
என்கின்றனர். புற்றீசல்போல அதிகரிக்கும் O.T.T. தளங்கள்
ஒரு தனிமனித விருப்பத்திற்கேற்ப (Personalized Viewing Experience) வடிவமைக்கப்பட்டிருக்கிறது. யார், எதை, எப்போது பார்க்க விரும்புகின்றார்களோ, அதை அவர் அப்போது பார்க்க முடியும். பல்வேறு மொழிபேசும் பயனர்களுக்கு அவர்களின் மொழியிலேயே காணொளிகளைத் தயாரித்துக்கொடுக்க முடிகிறது. இதனால் பல்வேறு மக்களின் கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் நமக்கு அறிமுகமாகின்றன. நமது பழக்கவழக்கங்கள் மற்றும் கலாச்சாரச் செழுமைகள் உலகத்தின் பார்வைக்கு வைக்கப்படுகின்றன.
O.T.T. தளங்களைக்
காலத்தின் கொடை என நம்பி அப்படியே
ஏற்றுக்கொள்வதிலும் சிக்கல் இருக்கின்றது. மொழி, கலாச்சார, பண்பாட்டுத் திணிப்பு, வேறு எதைப்பற்றியும் சிந்திக்க விடாமல் பல மணி நேரமாகத்
தொடர்ந்து பார்க்க வைப்பது (Binge-watching),
தணிக்கையற்ற வெளியீடுகள் (lack
of regulations), குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறைக் காட்சிகள் போன்ற கூறுகள் OTT தளங்களை ஆய்வுக் கண்ணோட்டத்தோடும் விமர்சன அணுகுமுறையோடும் பார்க்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது.
ஒவ்வொரு
மக்கள் தொடர்பு ஊடகத்திலும் நன்மையும் தீமையும் புதைந்திருப்பதுபோல, இணையதள OTT தளங்களிலும் அவை காணக்கிடக் கின்றன. OTT தளங்கள் மனித மாண்பைப் போற்றுவதிலும், சமூக நீதியை நிலைநாட்டுவதிலும், ஒற்றுமை மற்றும் சமத்துவத்தை மையப்படுத்துவதிலும் கருத்தாய் இருந்தால், அதுவே வளங்குன்றா வளர்ச்சியை (sustaina
bility of life) நோக்கி மனிதனை அழைத்துச்செல்ல உதவும் மிகச்சிறந்த தொடர்புக் கருவியாக இருக்கும்.
‘வேகம் நல்ல அடிமை;
ஆனால்,
மோசமான எஜமானன்.’
நம்
வாழ்க்கையின் ஒவ்வொரு மூலையும் இன்று ‘வேகம்’ என்ற சொல்லால் நிரம்பி வழிகிறது. மொபைலைத் திறந்தால் ‘10 நிமிடத்தில் டெலிவரி’,
பேருந்து ஏறினால் ‘கொஞ்சம் சீக்கிரமா போங்க டிரைவர்’,
அலுவலகத்தில் ‘இப்போதே முடிவு தெரிய வேண்டும்’
என்று மேலாளர் - இப்படி நாம் வாழ்வது அல்ல, ஓடிக்கொண்டிருப்பதுபோலத் தோன்றுகிறது. ஆனால், ஓர் உண்மை என்னவென்றால், மலர்
மலர வேகம் இல்லை; ஆனால், மலர்ந்ததும் மணம் என்றும் நிலைக்கும். விதை முளைக்கப் பொறுமை தேவை; ஆனால், அது முளைத்தால் வாழ்க்கையைத் தாங்கும். அதுபோல, நம் வாழ்க்கைக்கும் வேகத்திற்கும் பொறுமைக்கும் சமநிலை தேவை.
வேகக் கலாச்சாரத்தின்
முகங்கள்
1. சாலைகளில்:
சிக்னலை மதிக்காமல் பாயும் வாகனங்கள். ‘ஐந்து நிமிடம்தானே தாமதம்?’ என்று சிந்திக்காமல், பல உயிர்களை ஆபத்துக்குள்ளாக்கும்
ஓட்டங்கள்.
2. பணியிடங்களில்:
உடனடி இலாபம், உடனடி முடிவு - மனிதர்களின் உழைப்பை ‘வேக இயந்திரம்’
போலப் பயன்படுத்தும் அழுத்தம்.
3. கல்வியில்:
‘இன்னும் வேகமாப் படி, இன்னும் அதிகமா ரிசல்ட் எடு’ என்று குழந்தைகளின் சிறு வயதையே பறிக்கும் சூழல்.
4. சமூகத்தில்:
பொறுமையில்லாப் பேச்சு, அவசர முடிவுகள் - உறவுகளையே உடைக்கும் நிலை.
வேகம் - நன்மையும்
தீமையும்
•
வேகம் நம்மைக் கட்டுப்பாட்டுடன் முன்னேற்றும்போது அது வளர்ச்சி.
• வேகம் நம்மை அவசரத்தில் இழுக்கும்போது அது அழிவு.
“ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரமுண்டு. உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு காலமுண்டு” (சஉ 3:1).
வேகக் கலாச்சாரத்தின்
ஆபத்துகள்
1. விபத்துகள்
- தினமும் சாலையில் உயிர்கள் பறிபோகின்றன.
2. மன
அழுத்தம் - ‘வேகமா முடிக்கணும்’ என்ற
அழுத்தம் மனநோயை உண்டாக்குகிறது.
3. குடும்பத்
தகராறு - அவசரத்தில் பேசிய வார்த்தைகள் உறவுகளை உடைக்கிறது.
4. சுற்றுச்சூழல்
சீர்குலைவு - வேகத்தில் வளர்ச்சி தேடி இயற்கையை அழிக்கும் உலகம்.
வேகம்
ஒரு தீப்பொறி!
வாழ்க்கையை
ஒளிரச் செய்யும்!
ஆனால்,
அதையே தவறாகப் பயன்படுத்தினால்,
அது
வீட்டையே எரித்துவிடும்.
பொறுமை
ஒரு மழை!
மெல்ல
மெல்ல விழுந்தாலும்,
வேர்களை
ஆழமாக வலுப்படுத்தும்.
அதனால்,
வேகத்திலும் பொறுமையிலும்
இணக்கத்தைக்
கற்றுக்கொள்வோம்.
நாம்
என்ன செய்ய வேண்டும்?
• சாலைகளில்: விதிகளை மதித்து, மற்றவர்களின் உயிரை மதிப்பது.
•
வாழ்க்கையில்:
சிறிது தாமதம் பரவாயில்லை என்று மனத்தை வளர்த்துக்கொள்வது.
•
குடும்பத்தில்:
குழந்தைகளுக்கு ஓடாமல், வளரும் இடத்தை வழங்குவது.
•
சமூகத்தில்: வேகத்துக்குப் பதிலாகத் தரமும் அமைதியும் முன்னிலைப்படுத்துவது.
இன்றைய
மனிதன் ‘சில நிமிடம் கூட காத்திருக்க முடியாது’
என்ற நிலைக்கு வந்துவிட்டான். ஆனால், உண்மையில் நேரம் குறைவதில்லை; பொறுமை குறைகிறது. வேகக் கலாச்சாரம் வாழ்வை வசதியாக்கலாம்;
ஆனால், நம் மனத்தையும், நம் உறவுகளையும், நம் உயிரையும் சிதைக்கக்கூடியது.
அன்புள்ளோர்களே....
வேகமும் பொறுமையும் இணைந்தால்தான் வாழ்க்கை அழகாக மலரும். பொறுமையைக் கற்றுக்கொண்டால்தான் வாழ்வு நிலைத்திருக்கும். “அறிவெல்லாம் கடந்த இறை அமைதி கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள உங்கள் உள்ளத்தையும் மனத்தையும் பாதுகாக்கும்” (பிலி
4:7).
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தனித்த கிளை; அது தன் பிள்ளைகளை அதிகமாகப் பெற்றெடுக்கும். அவ்வாறான நூற்றுக்கணக்கான அமைப்புகள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் குடையின் கீழ் கிளை துணை அமைப்பாகச் செயல்படும். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ‘முஸ்லிம் இராஷ்ட்ரிய மன்ஞ்’ என்ற அமைப்பை உருவாக்கி இஸ்லாமியரையும் விடவில்லை. தன் அடிப்படை அமைப்புகளுக்குக் குறிப்பிட்ட வேலைகளை மட்டுமே தரும். விசுவ இந்து பரிசத் என்ற அமைப்பு கோவில்களை மட்டுமே கவனித்துக் கொள்கிற அருமையான வேலை. இரத யாத்திரை தொடங்கி, பாபர் மசூதி இடிப்பு வரை வி.எச்.பி. வழி ஆர்.எஸ்.எஸ். தன் கைவன்மையைக் காட்டியது. கடந்த மாதங்களில் வி.எச்.பி. அமைப்பு ‘அவுரங்சீப் கல்லறை’ என்ற பெயரில் மகாராஷ்டிரா மாநிலத்தையே கலவர பூமியாக்கியது.
வி.எச்.பி. அமைப்பு
இராம ஜென்ம பூமி பிரச்சினை
முடிந்தவுடன் கிருஷ்ண
ஜென்ம பூமி பிரச்சினையைக்
கையில் எடுத்தது. வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி, மதுராவில் உள்ள ஹாஜி இத்கா மசூதி, பதானிலுள்ள ஷம்சி ஜனா மசூதிகளில் வி.எச்.பி.
அமைப்பு பிரச்சினை செய்கிறது. வி.எச்.பி.
அமைப்பு இதுகுறித்த முன்னெடுப்புகளுக்கு முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஓய்வு பெற்ற உயர் மத்திய அரசு அதிகாரிகளை அழைத்து ஓர் ஆலோசனைக் கூட்டமும் நடத்தியது.
வி.எச்.பி. அமைப்பு தன் எதிர்காலச் செயல்திட்டம் குறித்த ஒரு பெரும் அறிக்கையைத் தயாரித்து, ஆர்.எஸ்.எஸ். தலைமையிடம் ஒப்புதல் வாங்கிவிட்டது. அவ்வறிக்கை இந்தியா முழுவதும் உள்ள இந்து கோவில்கள் புதிதாக உருவாக்கப்பட்டு சுதந்திரமான தன்னாட்சி கொண்ட ஒரு வாரியத்திடம் ஒப்படைக்கப்படும்; அவ்வாரியம் ஆலயங்களில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம்களை நடத்திக் கொள்ளலாம், ஆகமக் கல்வியைப் போதிக்கலாம்,
வேதகல்வி என்ற பெயரில் வேதங்கள், இதிகாசங்கள், சோதிடம், வாஸ்து, ஆயுர் வேதம் கற்றுத்தரலாம். உச்சபட்சமாகச் சமஸ்கிருதம் ‘மொழி கற்பித்தல்’ என்ற
வடிவில் சேர்க்கப்பட்டுள்ளது. இலட்சம்-கோடிகளிலுள்ள கோவில் சொத்துகளை உயர்சாதி பூசாரிகள் கொள்ளையடிக்கச் சட்டப்பூர்வ அங்கீகாரம் இவ்வாறு வழங்கப்படும்.
வி.எச்.பி. அமைப்பு ‘சன ஜாக்குருதி சமிதி’ என்ற
ஒரு துணை அமைப்பை உலகெங்கும் தன் செயல் துணையாக வைத்துள்ளது. தமிழ்நாட்டில் இந்து முன்னணி என்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கிளை அமைப்பு கோவில் கலவர வேலைகளைச் செய்கிறது. மதுரையில் நடைபெற்ற முருகன் மாநாட்டு காணொளிக் காட்சியில் அவர்கள் தங்களை இப்படியே அடையாளப்படுத்தினர். தமிழ்நாட்டில் இந்து மக்கள் கட்சியும், அதன் தலைவர் அர்ஜூன் சம்பத் போன்றோரும் இக்குழுவைச் சார்ந்தவர்கள்தாம். சாந்தோம் பேராலயத்தில் நுழைந்து அர்ஜூன் சம்பத் சத்தமிட்டது இன்றும் காமெடியாகப் பேசப்படுகிறது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தன் கருத்துருவாக்கப் பணியைச் செய்ய வலதுசாரிகளுடன் கார்ப்பரேட் சாமியார் ஜக்கி வாசுதேவ், அர்ஜூன் முர்த்தி, இரவீந்திரன் துரைசாமி போன்றோரைக் களம் இறக்கியுள்ளது. ‘தினமலர்’ பத்திரிகையும் ஆர்.எஸ். எஸ். அமைப்பின் செயல்திட்டங்களை மக்களிடம் பூசி மெழுகிக் கொண்டு செல்கிறது.
தமிழ்நாட்டில்
1925-இல் நீதிக்கட்சி ஆட்சியில் கோவில் கொள்ளைகளைத் தடுக்க தமிழ்நாடு கோவில் வருமானங்கள் பக்தர்களுக்கும் பொது மக்களுக்கும் பயனுள்ளதாகச் செலவிட ‘இந்து சமய அறநிலையத் துறை’ உருவாக்கப்பட்டது. தமிழ்நாட்டில் நான்கு இலட்சம் ஏக்கர் நிலம் குத்தகைக்கு விடப்பட்டு, பயனுள்ள காரியங்களான பள்ளிகள், கல்லூரிகள், வருவாய் இல்லாத கோவில்களுக்கு நிதி பகிர்வு செய்ததால் அடிப்படைக் காரியங்கள் நடக்கின்றன.
கோவில்
சொத்தைக் கொள்ளை அடிப்பாரும் இல்லை, நகை திருடுபவர்களும் இல்லை. உபயோகப்படுத்தாத நகைகள் உருக்கப்பட்டு அந்தப் பெருந்தொகைகள்
வங்கி வைப்பு நிதியாகி வருவாய் பெருகுகிறது. இவ்வாறான தமிழ்நாடு இந்து கோவில்களை என்ன செய்வது? தமிழ்நாடு இந்து அறநிலையத் துறையை என்ன செய்வது? மதுரையில் ‘ஆன்மிக மாநாடு’ என்ற பெயரில் நடந்த மாநாட்டுத் தீர்மானங்கள் தமிழ்நாட்டில் ஆர்.எஸ். எஸ். செயல்திட்டத்தைப் பொதுவெளியில் வெளிச்சம் போடுகிறது.
மாநாடு
தீர்மானம் 1-இன்படி திருப்பரங்குன்றம் மலைமீது கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும். தீர்மானம் 2 - திருப்பரங்குன்றம் குமரனுக்கே சொந்தம்; தீர்மானம் 3 - தமிழ்நாடு கோவில்களிலிருந்து இந்து சமய அறநிலையத் துறை வெளியேற வேண்டும். இவ்வாறாக, அவாள் மடியிலிருந்து பூனைக் குட்டி வெளியே வந்து விட்டது.
இவர்கள்
சனாதனத் தர்மப்படி அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராகப் பணிபுரிவதை எதிர்ப்பவர்கள்; தமிழில் அர்ச்சனை வழிபாட்டு முறையை எதிர்ப்பவர்கள்; தமிழ்க் கடவுள் பெயரில் மாநாடு நடத்தி, தமிழ் பக்தர்களுக்கு எள்முனையளவும் முருகன் மாநாட்டில் அசைக்கவில்லை. இவர்கள் சனாதனத்தை எதிர்த்த வள்ளலாரையும் வைகுண்டரையும் ‘சனாதனவாதிகள்’ எனப்
பொய் உரைத்தவர்கள். திருவள்ளுவர், பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோர்
சிலைகளுக்குக் காவித் துண்டு, காவிச்சாயம் பூசி மக்களிடம் அவமானம் அடைந்தவர்கள். அவர்களுக்கு உள்ளூர் முகமூடி தேவைப்படுகிறது. அதனால் அ.தி.மு.க.வைத் துணைக்கு
அழைத்து வருகிறார்கள்.
‘திராவிடத்தை வீழ்த்த வேல் கொண்டு வா’ என்ற மாநாட்டுச் சுவரொட்டிகளைப் படிக்கத் தெரியாமல் முருகன் மாநாட்டிற்கு உள்ளே சென்ற நான்கு முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்கள் வசமாக
மாட்டிக் கொண்டார்கள். உள்ளூர் செய்தியாளர்கள் தென் மாவட்ட முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்கள்தான் முருகன் மாநாட்டிற்கு
ஆள்பிடித்துக் கொடுத்தார்கள் எனப் பின்னணியை வெளியே போட்டு
உடைத்தார்கள். முருகன் மாநாட்டில் ‘மதமாற்றத் தடுப்பு’ என்ற பெயரில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. அ.தி.மு.க. இன்றுவரை மதமாற்றம்
குறித்து, அந்த உறுதிமொழி குறித்து வாய்திறக்க மறுக்கிறது. ‘மதமாற்றத் தடைச்சட்டம்’ என்ற
பெயரால் செல்வி ஜெயலலிதா காலத்தில் அ.தி.மு.க. ஆட்சி இழந்த
வரலாறு மறந்திருக்கலாம். அ.தி.மு.க.விற்கு உள்ள
மென்மையான இந்து மதப்போக்கு வெளிவந்தது. 2025, ஜூன் 23 அன்று பேளூர் ஆதீன விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்துடன் கலந்துகொண்ட அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்
வேலுமணி செய்தியாளர்களின் கிடுக்கிப்பிடி கேள்விகளால் ‘ஜகா’ வாங்கினார்.
02.12.2022-இல் ஐந்து மசூதிகள் குறித்து வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் வழிபாட்டுத்தலங்களில் 1947-ஆம் ஆண்டின் நிலையே தொடரவேண்டும். அதன் அடிப்படையில் மதுரை மாநாட்டுத் தீர்மானங்கள் ஒன்று மற்றும் மூன்று அடிப்படை இல்லாதவை, வெற்றி கொள்ளாதவை என்பதே கற்றறிந்தோரின் இறுதி முடிவாகும். தமிழ்நாட்டில் ஏன் பா.ச.க.
அல்லது அவர்களின் அடிமைகள் ஆட்சி வரக் கூடாது? என்பதற்கு ஒரே பதில், இந்து சமய அறநிலையத் துறையைக் கலைப்பது ஓர் ஆதிக்கச் சாதியின் சனாதனத்திற்கு உள்பட்ட வருணாசிரம தர்மத்திற்குக் கோவில்கள் வழி மீண்டும் புத்துயிர் அளிப்பதாகும்.
காவி
அரசியல் தமிழ்நாட்டில் கண்டறியப்படும்.
தமிழ்நாடு மக்கள் என்றும் மதநல்லிணக்கத்தில் நம்பிக்கை கொண்டவர்கள். சமத்துவம், சகோதரத்துவம் பேணுபவர்கள். தமிழர்கள் தங்கள் வாக்குகள்
வழி தம் இன ஒற்றுமையை உலகறியச்
செய்வார்கள்.