news
வத்திக்கான் செய்திகள்
‘அமோரிஸ் லெதீசியா’ குறித்த அக்டோபர் மாநாட்டிற்கான ஆயத்த ஆவணம் வெளியீடு

குடும்பங்கள் குறித்து மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியஅமோரிஸ் லெதீசியா (அன்பின் மகிழ்ச்சி) எனும் திருத்தூது மடல் வெளியாகிப் பத்தாண்டுகள் நிறைவடைவதையொட்டி, வரும் அக்டோபர் 2026-இல் நடைபெறவுள்ள மாநாட்டிற்கான ஆயத்த ஆவணத்தை வத்திக்கான் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. திருத்தந்தை லியோ அவர்களால் கூட்டப்பட்டுள்ள இம்மாநாடு, வரும் அக்டோபர் 7 முதல் 14 வரை வத்திக்கானில் நடைபெறவுள்ளது. இதில் உலகெங்கிலும் உள்ள கீழைநாட்டுக் கத்தோலிக்கத் திரு அவைகளின் தலைவர்களும், ஆயர் பேரவைகளின் தலைவர்களும் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மாநாட்டில் பல குடும்பங்கள் நேரடியாகப் பங்கேற்றுத் தங்களின் வாழ்வியல் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளவிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

news
வத்திக்கான் செய்திகள்
“இறைவனின் இரக்கத்தால் மட்டுமே இதயங்களில் உண்மையான சகோதரத்துவத்தை வளர்க்க முடியும்”

இத்தாலியின் லோடி (Lodi) மறைமாவட்டத்தில் நடைபெற்ற 27-வதுகொலம்பனஸ் தினம் (Columbanus Day) விழாவை முன்னிட்டு அம்மறைமாவட்ட ஆயர் மவுரிசியோ மல்வெஸ்டிட்டிக்கு, வத்திக்கான் வெளியுறவுச் செயலர் கர்தினால் பியெட்ரோ பரோலின் வழியாகத் திருத்தந்தை லியோ அனுப்பிய கடிதத்தில், “பரஸ்பர குற்றச்சாட்டுகள் மற்றும் போர்களின் பேரழிவுகளுக்கு மத்தியில், மனித இதயங்களில் உண்மையான மனிதாபிமானத்தை விதைக்க இறைவனின் இரக்கம் மட்டுமே ஒரே வழிஎன்று வலியுறுத்தியுள்ளார். ஐரோப்பாவில் கிறித்தவப் பாரம்பரிய விழுமியங்களை மீண்டும் கண்டறியவும், தற்காலச் சவால்களை எதிர்கொள்ளவும் தூய கொலம்பனஸின் ஆன்மிக மரபு பெரிதும் உதவுகிறது என்று பாராட்டிய திருத்தந்தை, “போர் மற்றும் பிளவுகளின் உன்னதத் தீர்வாகமன்னிக்கும் மனப்பான்மைஇருக்க வேண்டும்எனக் குறிப்பிட்டுள்ளார்.

news
வத்திக்கான் செய்திகள்
திரு அவையின் அறப்பணி ஆணையத்தின் புதிய செயலாளராக பேரருள்பணி. லூசியோ ரூயிஸ் நியமனம்!

வத்திக்கான் ஊடகப்பணி ஆணையத்தின் செயலாளராகப் பணியாற்றி வந்த அர்ஜென்டினா நாட்டு அருள்பணியாளர் லூசியோ ரூயிஸ், திரு அவையின் அறப் பணி ஆணையத்தின் (Dicastery for the Service of Charity) புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இத்துறை திருத்தந்தையின் தொண்டு மற்றும் மனிதாபிமானத் திட்டங்களுக்குப் பொறுப்பானதாகும். இப்புதிய நியமனம் வரும் செப்டம்பர் 1, 2026 முதல் நடைமுறைக்கு வரும் எனத் திருப்பீடம் அறிவித்தது. இதன் மூலம், மார்ச் மாதம் முதல் இத்துறையின் தலைவராக இருக்கும் ஸ்பெயின் நாட்டின் ஆகஸ்தீனிய ஆயர் லூயிஸ் மரின் டி சான் மார்ட்டினுடன் இணைந்து தந்தை ரூயிஸ் பணியாற்றுவார். இத்துறையின் தற்போதைய அதிகாரியான மாசிமோ ரால்லி, புதிய துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இலத்தீன் அமெரிக்காவின் தகவல் ஊடகத் துறையில் நீண்ட அனுபவம் வாய்ந்த தந்தை ரூயிஸ், 2015 முதல் வத்திக்கான் ஊடகத்துறையில் முக்கியப் பங்காற்றி வந்துள்ளார். இந்த அறிவிப்பிற்குப் பிறகு சக பணியாளர்களிடம் பேசிய அவர், “இறைவன் என்னை அழைக்கும் இடத்திற்கு மகிழ்ச்சியோடு செல்வேன்  எனக் கூறித் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

news
வத்திக்கான் செய்திகள்
வத்திக்கானில் ‘பால்லியம்’ அணிவிக்கும் திருச்சடங்கு: திருத்தந்தையிடம் பெற்றுக்கொண்ட இரண்டு இந்தியப் பேராயர்கள்!

புனிதர்கள் பேதுரு மற்றும் பவுல் பெருவிழாவை முன்னிட்டு, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் நடைபெற்ற திருப்பலியில், கொல்கத்தா பேராயர் மேதகு எலியாஸ் பிராங்க் மற்றும் மதுரை பேராயர் மேதகு அந்தோணிசாமி சவரிமுத்து ஆகியோருக்குத் திருத்தந்தை 14-ஆம் லியோபேராயர் திருநேரியல் (Pallium) அணிவித்துச் சிறப்பித்தார்.

புதிதாக நியமிக்கப்பட்ட பேராயர்களின் ஆயர் பணிப் பொறுப்பையும், உரோமைத் தலைமைப் பீடத்துடனான ஒற்றுமையையும் குறிக்கும் இந்த வெள்ளைக் கம்பளி ஆடை, கத்தோலிக்கத் திரு அவையின் மிக உயரிய அடையாளமாகும். கடந்த 2025 செப்டம்பரில் கொல்கத்தா பேராயராகப் பொறுப்பேற்ற பேராயர் எலியாஸ் பிராங்க், கர்நாடகாவைச் சேர்ந்தவர். இவர் திரு அவை சட்டவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். அதுபோல, ஜூலை 2025-இல் மதுரைப் பேராயராகப் பொறுப்பேற்ற பேராயர் அந்தோணிசாமி சவரிமுத்து, பிரான்ஸ் நாட்டில் திரு அவை சட்டவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். இவ்விரு இந்தியப் பேராயர்களும் திருத்தந்தையின் கைகளால் பால்லியம் பெற்றுக்கொண்ட நிகழ்வு, இந்தியக் கத்தோலிக்கத் திரு அவைக்கு குறிப்பாக, மதுரை மற்றும் கொல்கத்தா உயர்மறைமாவட்ட இறைமக்களுக்குப் பெரும் மகிழ்ச்சியையும், ஆன்மிக எழுச்சியையும் தந்துள்ளதுஉலகெங்குமுள்ள கத்தோலிக்கர் தங்களின் புதிய பேராயர்களுக்காக இறைவேண்டலில் ஈடுபட்டனர்.

news
வத்திக்கான் செய்திகள்
திருப்பலியில் பொதுநிலையினர் மறையுரை ஆற்ற முடியாது!

கத்தோலிக்கத் திருப்பலியில் பொதுநிலையினர் மறையுரை ஆற்றுவதற்கு அனுமதி கோரி ஜெர்மனி ஆயர் பேரவை அனுப்பிய விண்ணப்பத்தை வத்திக்கான் நிராகரித்துள்ளது. இது தொடர்பாக வத்திக்கானின் வழிபாட்டு முறை மற்றும் அருளடையாளங்களுக்கான ஒழுங்குமுறை பேராயம், ஜெர்மனி ஆயர் பேரவையின் தலைவர் ஆயர் ஹைனர் வில்மருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. விதிவிலக்கான சூழ்நிலைகளில் கூட, திருப்பலியின்போது தகுதியான பொதுநிலையினர் மறையுரை ஆற்ற அனுமதிக்கும்படி ஜெர்மனி ஆயர்கள் கோரியிருந்தனர்.

ஆயர்களின் அக்கறையைப் பாராட்டிய வத்திக்கான், திருப்பலியில் மறையுரை ஆற்றுவது என்பது வெறும் ஒழுங்குமுறை விதி அல்ல; அது வழிபாட்டு முறையின் இயல்போடு இணைந்தது என்று விளக்கியுள்ளது. குருத்துவ அருளடையாளம்  வழியே ஆயர்கள், குருக்கள் மற்றும் திருத்தொண்டர்களுக்கு மட்டுமே இந்தப் போதிக்கும் பணி (Munus Docendi) ஒப்படைக்கப்பட்டுள் ளது. எனினும், திரு அவை சட்டங்களின்படி திருப்பலிக்கு வெளியேயும், பிற வழிபாட்டு நிகழ்வுகளிலும் பொதுநிலையினர் நற்செய்தி அறிவிப்பதற்கும் போதிப்பதற்கும் ஏற்கெனவே பல வழிமுறைகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வத்திக்கான் சுட்டிக்காட்டியுள்ளது.

news
வத்திக்கான் செய்திகள்
இராஞ்சி உயர்மறைமாவட்டத்திற்கு புதிய துணை ஆயர் நியமனம்!

இராஞ்சி உயர்மறைமாவட்டத்தின் முதன்மை அருள்பணியாளரும், தூய மரியன்னை பேராலயத்தின் பங்குத்தந்தையுமான அருள்பணி. ஆனந்த் டேவிட் சல்சோ அவர்களை இராஞ்சி உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயராகத் திருத்தந்தை லியோ நியமித்துள்ளார்.

1975-இல் மாந்தூரில் பிறந்த இவர், இராஞ்சி மற்றும் கொல்கத்தாவில் பள்ளி, கல்லூரி மற்றும் குருத்துவக் கல்வியை முடித்தார். 2006, மே 15 அன்று அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். மறைந்த கர்தினால் டோப்போவின் தனிச் செயலாளர். மங்களூரில் மருத்துவமனை நிர்வாகத்தில் முதுகலைப் படிப்பு, சி.பி.சி.. பொதுச்செயலாளரின் செயலர் எனப் பல முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். மேலும், மக்கள்தொடர்பு அலுவலராகவும், இராஞ்சி பேராயர் இல்லத்தின் நிர்வாகியாகவும், சமூக மேம்பாட்டு மையத்தின் இயக்குநராகவும், குருமாணவர் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். புதிய ஆயரின் வழிகாட்டுதலில் இராஞ்சி உயர்மறைமாவட்டம் ஆன்மிக வளர்ச்சியை எட்டும் என வாழ்த்துவோம்.