news
வத்திக்கான் செய்திகள்
“அமைதிக்காக நமது குரல்களை உயர்த்துவோம்”- திருத்தந்தை லியோ

மத்தியக் கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழலைக் குறிப்பிட்டு, அமைதிக்காக உலக நாடுகள் ஒன்றிணையவேண்டும் என்று திருத்தந்தை லியோ அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். தனது இல்லத்திற்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “அமைதிக்காக நாம் அனைவரும் மிக அதிகமாகச் செபிக்கவேண்டும்என்று அழுத்தமாகத் தெரிவித்துள்ளார்.  மத்தியக் கிழக்கில் குறிப்பாக, பாரசீக வளைகுடா பகுதியில் அமெரிக்கப் போர்க்கப்பல்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள பதற்றம் குறித்துத் திருத்தந்தையிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “சாதாரண மக்களாகிய நாம் அமைதிக்காக உரக்கக் குரல் கொடுக்கவேண்டும். எந்தவொரு பிரச்சினைக்கும் வன்முறை தீர்வாகாது; பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணவேண்டும்என்று வலியுறுத்தினார்.

news
வத்திக்கான் செய்திகள்
இறைவனின் திட்டங்களுக்கு உங்களைத் தயார்படுத்துங்கள்!

அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வரும்SEEK 2026’ இளைஞர் மாநாட்டில், காணொளி மூலம் உரையாற்றிய திருத்தந்தை லியோ, இளையோர் இயேசுவுடன் தனிப்பட்ட முறையில் நேரத்தைச் செலவிட வேண்டுமென உருக்கமான அழைப்பு விடுத்துள்ளார். ‘நீங்கள் எதைத் தேடுகிறீர்கள்?என்ற திருவிவிலியக் கேள்வியை அவர் முன்வைத்தார். ‘உயரங்களை நோக்கி என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த 26-வது ஆண்டு மாநாட்டில் கொலம்பஸ், டென்வர் உள்ளிட்ட நகரங்களிலிருந்து சுமார் 25,000-க்கும் மேற்பட்ட இளையோர் பங்கேற்றுள்ளனர்.

news
வத்திக்கான் செய்திகள்
வெனிசுலா பதற்றம்: வன்முறையைத் தவிர்க்க திருத்தந்தை லியோ வேண்டுகோள்!

வெனிசுலா அதிபர் நிக்கோலாஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டுள்ள சூழலில், அங்கு அமைதி நிலவ வேண்டுமெனத் திருத்தந்தை லியோ உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். வெனிசுலாவில் இறையாண்மை மதிக்கப்பட வேண்டும் என்றும், அரசமைப்புச் சட்டத்தின்படி நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ள திருத்தந்தை, “மக்களின் நலனே அனைத்தையும் விட முக்கியமானது; வன்முறையைத் தவிர்த்து, அமைதி மற்றும் ஒத்திசைவான எதிர்காலத்தை உருவாக்க அனைவரும் இணைந்து செயல்படவேண்டும்என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

news
வத்திக்கான் செய்திகள்
வத்திக்கான் யூபிலி நிறைவு விழா: 5,000 தன்னார்வலர்களின் நெகிழ்ச்சியான இறுதிப் பயணம்!

யூபிலி ஆண்டின்  (Jubilee Year) நிறைவை முன்னிட்டு, வத்திக்கான் புனித பேதுரு பேராலயத்தில் 5,000-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்ற புனிதக் கதவு நோக்கிய இறுதிப் பயணம் உணர்ச்சிகரமாக நடைபெற்றது. ஓராண்டு காலமாக 33 மில் லியனுக்கும் அதிகமான புனிதப் பயணிகளுக்குப் பணியாற்றிய தன்னார்வலர்கள், பச்சை நிற மேலங்கி அணிந்து பாடல்கள் மற்றும் செபங்களுடன் புனிதக் கதவைக் கடந்தனர். இந்தச் சேவை பாதுகாப்பான மற்றும் சகோதரத்துவமான சூழலில் நடைபெற்றதாகப் பேராயர் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

திருத்தந்தை லியோ இந்தக் கதவுகளை மூடிய பிறகு, மீண்டும் 2033-ஆம் ஆண்டு மீட்பின் யூபிலிக்காகவே இவை திறக்கப்படும் எனக் கூறப்பட்டது. பேராலயத்தின் மையத்தில் நடைபெற்ற நிறைவு வழிபாட்டில் பேசிய பேராயர், “நம்பிக்கை ஒருபோதும் ஏமாற்றாது; நீங்கள் திரு அவையின் வாழும் கற்களாகத் திகழவேண்டும்எனத் தன்னார்வலர்களை ஊக்கப்படுத்தினார்.

news
வத்திக்கான் செய்திகள்
கொல்கத்தா மறைமாவட்ட இளைஞர் பணிக்குழுவின் முதல் பெண் இயக்குநர்

கொல்கத்தா உயர்மறைமாவட்டத்தின் இளைஞர் பணிக்குழுவின் இயக்குநராக திருமதி. ஆஞ்சலா பெர்ரிஸை நியமிக்கப்பட்டுள்ளார். ஒரு பொதுநிலையினர் அதிலும் குறிப்பாக, ஒரு பொதுநிலைப் பெண், மறைமாவட்ட இளைஞர் பணியை வழிநடத்த நியமிக்கப்பட்டிருப்பது இந்தியாவில் இதுவே முதல் முறையாகும். கொல்கத்தா உயர்மறைமாவட்ட இளைஞர் பணிக்குழுவின் இயக்குநராக கடந்த ஒன்பது ஆண்டுகள் அருள்தந்தை சந்தீப் மைக்கேல் பிஸ்வாஸ் பணியாற்றி வந்தார். அவரின் பணி மாற்றத்தைத் தொடர்ந்து, உயர்மறைமாவட்டப் பேராயர் மேதகு எலியாஸ் ஃபிராங் அவர்கள் இந்தியாவின் முதல் பொதுநிலையினர் பெண் மறைமாவட்ட இளைஞர் இயக்குநராக இவரை நியமித்துள்ளார்.

திருமதி. ஆஞ்சலா பெர்ரிஸ் இந்தியக் கத்தோலிக்க இளைஞர் இயக்கத்தில் (ICYM) நீண்ட காலமாக ஈடுபட்டிருந்தவர். இவருடைய அருள்பணி ரீதியான நுண்ணறிவு, அமைப்பு ரீதியான அனுபவம், மேலும் இளைஞர் உருவாக்கம் மற்றும் தலைமைத்துவத்தில் இவரின் பங்களிப்பு இவற்றால் அனைவராலும் நன்கு அறியப்பட்டவர். கொல்கத்தா உயர்மறைமாவட்டத்தின் இந்த நியமனம், இந்தியாவில் பல்வேறு மறைமாவட்டங்களுக்கும் ஒரு முக்கியமான எடுத்துக்காட்டாக இருக்கும் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கூட்டியக்கப் பண்பைச் (Synodality) செயல்படுத்துவதற்கு இந்நிகழ்வு தூண்டுதலாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.

news
வத்திக்கான் செய்திகள்
“ஏழைகள் வழியாகக் கடவுள் நம்முடன் தொடர்ந்து பேசுகிறார்” - திருத்தந்தை

கிறிஸ்து பிறப்பு விழாக் காலங்களில் ஆண்டுதோறும் வத்திக்கானில் நடைபெறும்  ஏழைகளுடன் இசைஎன்னும் நிகழ்ச்சியின் அமைப்பாளர்கள் மற்றும் கலைஞர்களைத் திருத்தந்தை லியோ அண்மையில் சந்தித்தார். திருத்தந்தை பிரான்சிஸின் காலத்தில் தொடங்கப்பட்ட இந்த முயற்சியைஅழகான பாரம்பரியம்என்று நினைவுகூர்ந்த அவர், கிறிஸ்துவின் மானுடலேற்பு தந்தையாம் கடவுள் நம் ஒவ்வொருவர் மீதும் வைத்திருக்கும் அன்பின் வெளிப்பாடு என்றும் குறிப்பிட்டுள்ளார். “மாண்பினை இழந்து துயருறும் மனிதகுலத்தில் தொலைந்துபோன ஆடுகளைத் தேடிச் செல்லும் கடவுளின் தெய்வீகச் செயல்பாடே, கிறிஸ்துவின் பிறப்பில் வியத்தகு முறையில் பொருள்படுகிறதுஎனும் திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட்டின்  (Deus Caritas Est) கூற்றை மேற்கோள் காட்டிய திருத்தந்தை லியோ, “இது வெறும் இசை நிகழ்வு மட்டுமல்ல; மாறாக, ஏழைகள் மற்றும் மிகவும் தேவையில் இருப்பவர்களில் கிறிஸ்துவை அடையாளம் காணக்கூடியதாக அமையவேண்டும்எனவும்  வலியுறுத்தியுள்ளார்.

அண்மையில் வெளிவந்த தனதுDilexe Te (‘நான் உன்னை அன்பு செய்கிறேன்) என்னும் திருத்தூது ஊக்கவுரையிலிருந்து மேற்கோள் காட்டிய திருத்தந்தை, “இது வெறும் மனிதக் கருணையின் செயல் அல்ல; மாறாக, ஒரு தெய்வீக வெளிப்பாடு. ஏழைகள் வழியாக அவர் தொடர்ந்து நம்மிடம் பேசுகிறார்; ஆகவே, மனித மாண்பு, உடைமைகளைச் சார்ந்தது அல்ல; நாம் வெறும் பொருள்கள் அல்ல; மாறாக, கடவுளால் நேசிக்கப்படும் அன்புக் குழந்தைகள். இந்தப் பார்வையில் இசை நிகழ்ச்சி மிகவும் பின்தங்கிய ஏழை எளிய சகோதர சகோதரிகளுக்கு முன்னுரிமை அளிப்பதாக அமையட்டும்என்று கேட்டுக்கொண்டுள்ளார்.