news
வத்திக்கான் செய்திகள்
திருத்தந்தையின் புதிய நூல்!

திருத்தந்தை லியோ, புனித அகுஸ்தின் சபையின் தலைவராகப் (2001-2013) பணியாற்றிய காலத்தில் எழுதிய தொகுப்புகளின் முதல் இத்தாலியப் பதிப்பு அவரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. ‘Free Under Graceஎன்று பெயரிடப்பட்டுள்ள இந்நூலை, வத்திக்கான் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. மே 4 முதல் விற்பனைக்கு வந்துள்ள இந்நூலின் முதல் பிரதியை புனித அகுஸ்தின் சபையின் தற்போதைய தலைவர் தந்தை ஜோசப் ஃபாரல் திருத்தந்தையிடம் வழங்கினார். வத்திக்கான் ஆவணக்காப்பகத்தின் பொறுப்பாளர் தந்தை ரோக்கோ ரொன்சானி மற்றும் வத்திக்கான் பதிப்பக இயக்குநர் லோரென்சோ ஃபாசினி ஆகியோர் உடனிருந்தனர்.

இந்நூல் திருத்தந்தை லியோவின் ஆன்மிகச் சிந்தனைகள், உரைகள் மற்றும் கடிதங்களின் தொகுப்பாகும். அக்டோபர் 2025-இல் பிராங்பேர்ட் புத்தகக் கண்காட்சியில் அறிவிக்கப்பட்டப்படி, இது தற்போது உலகின் 30 நாடுகளில் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது. மே 6 அன்று உரோமையில் நடைபெற்ற விழாவில், வத்திக்கான் வெளியுறவுத்துறைச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் முன்னிலையில் இந்நூல் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.

news
வத்திக்கான் செய்திகள்
“ஏழைகளைப் பராமரிப்பது கிறித்தவ வாழ்வின் ஒருங்கிணைந்த பகுதி” - திருத்தந்தை லியோ

அமெரிக்காவின் கத்தோலிக்க அறக்கட்டளை (Catholic Charities USA) உறுப்பினர்களைச் சந்தித்தபோது, “ஏழைகள் மற்றும் தேவையிலுள்ளோர் மீது காட்டும் அக்கறை, உண்மையான கிறித்தவ வாழ்வின் ஒரு முக்கியப் பகுதிஎன்று திருத்தந்தை லியோ தெரிவித்துள்ளார்.  சவால்கள் நிறைந்த சூழலிலும் மனம் சோர்ந்து போகாமல் நற்செய்திப் பணியைத் தொடரவேண்டும் என்று திருத்தந்தை அவர்களை ஊக்குவித்தார். போதிய நிதி ஆதாரங்கள் கிடைப்பதில் உள்ள சிக்கல்கள் மற்றும் சிலருக்கு நாம் விரும்பியபடி உதவ முடியாமல் போகும் தருணங்களில் ஏற்படும் ஏமாற்றங்கள் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, “நானே எந்நாளும் உங்களுடன் இருக்கிறேன்என்ற இயேசுவின் வாக்குறுதியை நினைவுகூரவேண்டும் என்றார். மியாமி உயர் மறைமாவட்டத்தின்பெட்ரோ பான்திட்டத்திற்கான நிதியை அமெரிக்க அரசு நிறுத்திய சூழலில் திருத்தந்தையின் இந்த உரை முக்கியத்துவம் பெறுகிறது. துன்பப்படும் குடும்பங்களின் சுமையைக் குறைப்பதிலும், மனிதாபிமானமற்ற சூழல்களுக்குத் தீர்வு காண்பதிலும் கத்தோலிக்க நிறுவனங்களின் பணி பாராட்டுக்குரியது என அவர் புகழ்ந்தார்.

news
வத்திக்கான் செய்திகள்
“மோதல்களைத் தவிர்த்து ஒற்றுமையைத் தேடுங்கள்”

ஐரோப்பிய மக்கள் கட்சியின் (EPP) நாடாளுமன்ற உறுப்பினர்களை வத்திக்கானில் சந்தித்த திருத்தந்தை லியோ, சித்தாந்தங்களைக் கடந்து பொதுநலன் சார்ந்த அரசியலை முன்னெடுக்குமாறு வலியுறுத்தினார். இரண்டாம் உலகப் போரின் சாம்பலிலிருந்து உருவான ஐரோப்பிய ஒன்றியம், பல நூற்றாண்டுகாலப் பிரிவினைகளை முறியடித்து, ஒத்துழைப்பை வளர்ப்பதற்காகவே தோற்றுவிக்கப்பட்டது என்பதை அவர் நினைவுகூர்ந்தார். ‘ஒற்றுமை என்பது மோதல்களைவிட மேலானதுஎன்று குறிப்பிட்ட திருத்தந்தை, ‘அதிகாரத்தைப் பிடிக்கும் மோதல்கள் இறுதியில் அழிவுக்கே வழிவகுக்கும்என்று எச்சரித்தார். ‘அரசியல் என்பது தர்மத்தின் உயரிய வடிவம்என்று குறிப்பிட்ட அவர், ‘எதார்த்தத்தைச் சிதைக்கும் சித்தாந்தங்களுக்குப் பின்னால் செல்லாமல், மக்களின் உண்மையான தேவைகளை நிறைவேற்றும் இலட்சியக் கனவுகளைக் கொண்டிருக்கவேண்டும்என்றார். மேலும், ‘மக்களுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடையே குறைந்து வரும் நல்லிணக்கத்தைச் சுட்டிக்காட்டிய அவர், டிஜிட்டல் யுகத்திலும் மக்களுடன் நேரடித் தொடர்பைப் பேணுவதே மக்கள் அரசியலுக்குச் சிறந்த மருந்தாகும்என்றார். கண்ணியமான வேலைவாய்ப்பு, குடும்பம் தொடங்குவதில் உள்ள அச்சத்தைப் போக்குதல் மற்றும் செயற்கை நுண்ணறிவின் சவால்கள் குறித்துத் திறந்த மனத்துடன் செயல்படவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

news
வத்திக்கான் செய்திகள்
கல்தேய மறைமுதுவருக்குத் திருத்தந்தை முழுமையான திரு அவை உறவை வழங்கினார்!

ஏப்ரல் 12, 2026 அன்று, உரோமையில் கூடிய கல்தேய ஆயர் மன்றத்தினால் மேதகு போலிஸ் III நோனா முறைப்படி புதிய பாக்தாத் மறைமுதுவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, அவர் விடுத்த கோரிக்கையை ஏற்று, திருத்தூதரகப் பீடத்துடனான முழுமையான பிணைப்பின் அடையாளமாகதிரு அவை உறவு (Ecclesiastical Communion) எனும்  அங்கீகாரத்தைத் திருத்தந்தை வழங்கியுள்ளார். இது குறித்து திருத்தந்தை எழுதிய கடிதத்தில், ‘கிறிஸ்துவின் இதயத்திற்கு ஏற்ப இறைமக்களை வழிநடத்தவும், நம்பிக்கை மற்றும் அன்பில் அவர்களை உறுதிப்படுத்தவும் உமது மேய்ப்புப்பணி அமையட்டும்என வாழ்த்தியுள்ளார். பண்டைய நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் மறைச்சாட்சிகளின் தியாகத்தால் நிரம்பியுள்ள கல்தேயத் திரு அவை, நற்செய்திப் பணியில் தொடர்ந்து கனிகொடுக்கவேண்டும் எனத் திருத்தந்தை கேட்டுக்கொண்டார். புனித தோமா உயிர்த்த ஆண்டவரைச் சந்தித்த நாளில் இந்தத் தேர்வு நடைபெற்றது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு எனத் திருத்தந்தை நினைவுகூர்ந்தார்.

news
வத்திக்கான் செய்திகள்
“அமைதி மற்றும் நீதியின் தூதுவர்களாகத் திகழுங்கள்”- திருத்தந்தை

வத்திக்கான் தூதரகக் கல்விக் கழகத்தின் 325-ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு அங்கு வருகை புரிந்த திருத்தந்தை லியோ, திரு அவைத் தூதரக அதிகாரிகளின் சிறப்பான பணிகளைப் பாராட்டினார். அவர்களிடம், “தூதரகப் பணியில் ஈடுபடும் குருக்கள், வெறும் கத்தோலிக்கச் சமூகத்திற்காக மட்டும் உழைக்காமல், ஒட்டுமொத்த மனிதக் குடும்பத்தின் அமைதி, உண்மை மற்றும் நீதிக்காகக் குரல் கொடுக்கவேண்டும்என்று வலியுறுத்தினார். “வரலாற்றின் சுவடுகளுக்குள் இறைவனின் அருளைக் கொண்டு செல்லும் பாலங்களாகவும், கால்வாய்களாகவும் நீங்கள் இருக்கவேண்டும்என்று குறிப்பிட்ட திருத்தந்தை, “உலகளாவிய  உறவுகளில் மொழியறிவு மற்றும் அரசியல் ஞானத்தை விடமனமாற்றம்மற்றும் எளிமை மிக முக்கியம்என்றார்.

news
வத்திக்கான் செய்திகள்
“மதத்தை அரசியலாக்குபவர்களுக்கு ஐயோ கேடு!”

கேமரூன் நாட்டின் வடமேற்குப் பகுதியில் உள்ள ஆங்கிலம் பேசும் நகரமான பாமெண்டாவிற்குத் திருத்தந்தை லியோ  வருகை புரிந்தபோது, அங்கு நடைபெற்ற அமைதி சந்திப்பில் உரையாற்றிய அவர், அரசியல் மற்றும் இராணுவ ஆதாயங்களுக்காக மதத்தைப் பயன்படுத்துபவர்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்தார் திருத்தந்தை லியோ. தொடர்ந்து பத்து ஆண்டுகளாக உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டுள்ள இப்பகுதி மக்களின் துயரங்களைக் கேட்டறிந்த திருத்தந்தை, “அழிப்பதற்கு ஒரு நிமிடம் போதும்; ஆனால், கட்டியெழுப்ப ஒரு வாழ்நாளே போதாது என்பதையுத்தப் பிரபுக்கள்உணர மறுக்கின்றனர்என்று சாடினார். ஆயுதங்களுக்காகப் பில்லியன் கணக்கான டாலர்களைச் செலவிடும் நாடுகள், மக்களின் காயங்களைக் குணப்படுத்தவும், கல்விக்கும் நிதி ஒதுக்க மறுப்பதைக் கண்டு தனது வேதனையைத் தெரிவித்தார்.